Tuesday, November 15, 2011

Lesson 160: Time and place does not matter (Brahmasutram 1.4.11)


பாடம் 160: இடமும் காலமும் அமைதிக்கு தடையல்ல
பாடல் 488 (IV.1.11)

தியானம் செய்ய எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி அமரவேண்டும் மற்றும் எந்த நேரத்தில் தியானம் செய்யவேண்டும் என்ற கேள்விக்கு இடம், திசை, நேரம் ஆகியவற்றால் நம் அமைதியை பாதிக்கமுடியாது என்றும் ஏனெனில் இவை அனைத்தும் மாயை என்றும் இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.

உலகில் இன்பம் இல்லை என்று அதை ஒதுக்கிவிட்டு வேதம் படித்து இந்த உலகம் என்னால் எனக்காக படைக்கப்பட்டு என்னை ஆதாரமாக கொண்டு இயங்குவது என்று அறிந்து கொண்டதும் உலகை தவிர்க்கவேண்டிய அவசியம் இருப்பதில்லை. மன அமைதிக்காக எதையும் நாடி ஓட வேண்டாம். எதைக்கண்டும் அஞ்சி அகல வேண்டாம்.

நண்பர்களைத்தேடி அவர்கள் வீட்டுக்கு செல்லமாட்டோம் என்றோ அங்கு நமக்கு பிடிக்காதவர்கள் இருந்தால் வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றோ இதற்கு பொருள் அல்ல. கனவில் தோன்றும் அனைத்துக்காட்சிகளும் தானாக நடப்பவை. அதுபோல இவ்வுலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தானாக நிகழ்பவை. கனவில் என் செயல்பாடுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியாதோ அதேபோல் இவ்வாழ்விலும் நான் எதையும் செய்வதில்லை. நாடி ஓடுவதோ அஞ்சி அகலுவதோ வெறும் காட்சிப்பிழைகள். இவற்றுடன் எவ்வித உறவும் இல்லாமல் என்றும் அமைதியுடனும் ஆனந்தத்துடனும் இருப்பவன் நான்.

என்னால் எவ்வித செயலையும் செய்யமுடியாது. என் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை என்னால் எப்படி தீர்மானிக்கமுடியாதோ அதே போல் அவற்றில் எந்த எண்ணம் செயலாக மாறப்போகிறது என்பதுவும் என் கையில் இல்லை.   ஒரு காரியத்தை செய்யலாமா வேண்டாமா அல்லது எப்படி செய்வது என்பது போன்ற எண்ணங்கள் எவ்வளவு காலம் என் மனதில் அலைபாயும் என்று என்னால் தீர்மானிக்க முடியாது. அதேபோல் எப்பொழுது ஒரு தீர்மானத்திற்கு வந்து என்ன செயலை எப்படி செய்வேன் என்றும் எனக்குத்தெரியாது.

உன்னால் முடியும் என்று பற்றுடையோர்களை ஊக்குவிக்கும் வேதம் நான் என்ற அகங்காரம் நம் மனதில் தோன்றும் வெறும் எண்ணம் என்பதால் நாம் எந்த செயலையும் செய்யமுடியாது என்று முக்திவிழைவோர்களுக்கு போதிக்கிறது.

நான் எதையும் செய்வதில்லை

நம் கனவில் ஒருவர் முட்டாள்தனமாக நடந்துகொண்டால் அதற்கு நாம் எப்படி பொறுப்பேற்றுக்கொள்வதில்லையோ அது போல நிஜவாழ்வில் நம் செயல்களுக்கு நாம் காரணமல்ல. ஏனெனில் நம்மால் எதையும் செய்யமுடியாது. செய்வதாக நினைத்துக்கொள்ளும் அகங்காரம் நம் மனதில் தோன்றும் ஒரு எண்ணம்.

அகங்காரம் என்ற எண்ணம் இல்லாமல் எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் இயங்கி வருகின்றன. மனிதன் மட்டும்தான் தான் இயற்கையிலிருந்து வேறுபட்டு இருப்பதாக தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறான். இல்லாத உலகத்தை இருப்பது போல் காட்டும் ஒரு ஒளி-ஒலிகாட்சியில் நமது எண்ணங்கள் வெறும் ஒலிவடிவம். எனவே அகங்காரம் தான் செயல் செய்வதாக நினைப்பது அறிவீனம்.

கனவில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு நொடியில் செல்லமுடிவதற்கு காரணம் இடமும் காலமும் நமது கற்பனை என்பதுதான். இதே உண்மையை அறிவியலின் அடிப்படையில் ஐன்ஸ்டீன் நிரூபித்துள்ளார். எனவே இவ்வுலகில் நாம் காண்பதாக நினைக்கும் இடமும் காலமும் உண்மையில் இல்லை என்பதை உணர்ந்தால் நம்மால் எதையும் செய்யமுடியாது என்பது தெளிவாகும். கனவில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றது எப்படி உண்மையில்லையோ அதுபோல் இந்த உலகமும் நமது மாயாசக்தியால் உருவான கனவு என்பதால் நாம் அதில் எவ்வித செயலையும் செய்ய முடியாது.


நான் பரமன் என்ற அறிவு நிலைபெற்றபின்தான் என்னால் கவலைப்படாமல் இருக்க முடியும் என்பது தவறு. ஏனெனில் எதையுமே செய்ய இயலாத என்னால் அறிவை நிலைபெறச்செய்ய முயற்சிக்க முடியாது. இறந்துபோன ஒருவரை கனவில் சந்தித்து அவரிடம் நீங்கள் எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டால் அவர் நான் உன் மனதினால் உருவாக்கப்பட்ட கற்பனை உருவம் என்று பதில் சொல்வதுபோல் நான் யார் என்பதை நமக்கு அறிவிக்கும் நமது குருவும் நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வடிவமே. இதனாலேயே உலகம் உருவானபொழுதே வேதமும் உடன் தோன்றியது என்று கூறப்படுகிறது. என்னால் படைக்கப்பட்ட பல்வேறு மனிதர்களுடன் உறவாடும்பொழுது நான் அவர்களிடமிருந்து வேறுபட்டவன் என்ற எண்ணம் எப்படி தானாக நம் மனதில் தோன்றியதோ அது போல மனம் பண்பட்டபின் என் எதிரில் குரு தோன்றி நான் யார் என்று எனக்கு அறிவித்தபின் தானாக அந்த எண்ணம் மனதில் நிலைபெறும். 

முக்தி என்பதன் பொருள்

எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும் மற்றும் சிறிது நேரம் கூட துன்பத்தை அனுபவிக்ககூடாது என்பதுதான் அனைத்து உயிரினங்களின் ஒரே ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள உலகில் உள்ள பொருள்களை நாடி ஓடுபவன் பற்றுடையோன். அது முடியாது என்பதை புரிந்துகொண்டதும் வேதம் படித்து ஆனந்த மயமான பரமன் நான் என்ற அறிவில் நிலைபெற முயற்சி செய்பவன் முக்திவிழைவோன். யாரும் எதையும் செய்வதில்லை என்று அறிந்துகொண்டதால்  அந்த ஆசையே மனதிலிருந்து அகன்று முக்தியடைந்தவன் முற்றுணர்ந்தோன்.

இயற்கையும் செயற்கையும்

கனவில் தென்படும் ஆறு இயற்கையென்றும் அதன்மேல் கட்டப்பட்டிருக்கும் பாலம் செயற்கையென்றும் தரம் பிரிக்க முடியாது. ஏனெனில் அனைத்தையும் உருவாக்கியது நமது எண்ணங்கள். அதேபோல் ஒளிகதிர்களால் உருவான பொருள்களை மட்டுமே கொண்டது இவ்வுலகம். காடு இயற்கை நாடு செயற்கை என்பது தவறு. மனிதனால் எதையும் செய்யமுடியாது என்பதால் அவனால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அனைத்தும் இயற்கையை சேர்ந்தவை.

மனிதனால் மட்டும்தான் முக்தியடையமுடியும் என்று வேதம் சொல்வதற்கு காரணம் மனிதனுக்கு மட்டுமே முக்தியடையவேண்டிய தேவை இருப்பதால்தான். மற்ற உயிரினங்களோ ஜடப்பொருள்களோ  தங்களுக்கு செயல்படும் சுதந்திரம் இருப்பதாகவோ செயல்படுவதாகவோ தவறாக எண்ணிக்கொள்வதில்லை. எனவே மாறும் உலகின் மாற்றத்தின் ஒருபகுதியாக மனதில் ஏற்படும் மாற்றங்களை வேண்டியது வேண்டாதது என்று வகைபிரிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு   நடக்கும் ஒலி-ஒளி காட்சியை நிம்மதியாக பார்ப்பவன் முக்தியடைகிறான். அவன் மனதில் எவ்வித தேடலும் இல்லாததால் துன்பம் கலவா இன்பத்துடன் இருப்பான்.

சரியும் தவறும்

கனவில் நிகழும் நிகழ்வுகளை சரி தவறு என்று பாகுபடுத்தமுடியாது. அதுபோல இவ்வுலகத்தின் இயக்கம் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இணைந்த ஒன்றுபட்ட நடனம். இந்த ஒளி-ஒலி காட்சியில் எதுவும் தவறாக நடக்க வாய்ப்பேயில்லை என்பதால் எதையும் போற்றவோ இகழவோ தேவையில்லை. முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக்குஞ்சை பருந்து தன் அலகால் குத்தி கொல்வது தவறு அல்ல.

பள்ளி செல்லும் அப்பாவிகுழந்தையை ஒருவன் கடத்திச்சென்று கொன்றுவிட்டான் என்பதும் இயற்கையாக நிகழும் நிகழ்வு. அந்த குற்றவாளியை தூக்கில் போட்டு தண்டிப்பது அந்த காட்சியின் தொடர்ச்சி. இந்த குற்றத்திற்கு தூக்குதண்டனை சரியா தவறா என்று நம் மனதில் நிகழும் பட்டிமன்றம் அந்த காட்சியின் வர்ணனை.

செயல்களில் அகங்காரத்தின் பங்கு

நாம் செய்யும் அனைத்து செயல்களும் இயற்கையில் நிகழ்பவை. செயல்கள் செய்யாமல் நம்மால் இருக்கவே முடியாது. எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும் பொழுதும் உடலுக்கு வயதாகிக்கொண்டிருப்பது போல மனதிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. மாறும் எண்ண ஓட்டங்களில் நம் மனதில் தோன்றும் அகங்காரமும் ஒன்று. மாற்றங்களுக்கு நிகழ்வுகள் என்று பெயரிட்டு ‘நான் சும்மா இருக்கிறேன்’ என்று வர்ணனை செய்வதன் மூலம் ஏதோ செயல் செய்துவிட்டதாக அகங்காரம் கற்பனை செய்துகொள்கிறது.

கால்பந்தாட்டத்தில் பந்தின்பின் ஓடும் விளையாட்டுவீரனின் மனதில் அகங்காரம் முழுவதுமாக ஒடுங்கியிருக்கும். இயற்கையோடு முழுவதும் ஒன்றி பந்தை அடித்து அது கோலில் விழுந்தவுடன் வர்ணணையாளர் அந்த காட்சியை விவரிப்பதுபோல் அகங்காரம் தான் ஏதோ சாதித்துவிட்டது போன்று உணர்வதும் உடல் துள்ளி குதித்து அங்குமிங்கும் ஆடி கொண்டாடுவதும் இயற்கைகாட்சியின் ஒரு பகுதியே.

கோல்போடுவதற்குமுன் நான் இப்படி நினைத்தேன் என்று கடந்தகாலத்தையும் இதுபோல் விளையாடி அடுத்த கோலைப்போடப்போவதாக எதிர்காலத்தையும் கற்பனையில் உருவாக்கிகொள்ளும் அகங்காரத்திற்கு நிகழ்காலத்திற்குள் எட்டிப் பார்க்கும் சக்திகிடையாது. கோல் போடும் தருணத்தில் காணாமல் போயிருந்த அகங்காரம் தான்தான்  கோல்போட்டவன் என்று தவறாக நம்பிவிடுகிறது.

அதுபோல் நாம் செய்யும் வேலைகளில் ஒன்றி செயல்படும்பொழுது நான் இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறேன் என்று அகங்காரம் வர்ணனை செய்யாது. ஒரு செயலை செய்வதற்கு முன்னும் பின்னும் இருக்கும் ஓய்வு நேரங்களில் மனதில் எண்ணங்கள் தோன்றுவது இயற்கையானது. பொம்மையில் உள்ள விசைவில்லை சாவிகொடுத்து முறுக்கேற்றியபின்தான் அதை இயங்கவைக்க இயலுவதைப்போல் உயிரினங்கள் இயங்க அவற்றின் மனதில் எண்ணங்கள் உருவாவது அவசியம். எனவே அகங்காரத்தை அகற்ற வேண்டும் என்ற முயற்சி வெற்றிபெறாது.          

அகங்காரம் தரும் நேர்முக வர்ணனை

இடமும் காலமும் நமது மாயாசக்தியின் கற்பனையான வெளிப்பாடு. கடந்த காலம் என்பது நிகழ்காலத்தில் தொடர்ந்து நடக்கும் நாட்டியத்தை மனம் வர்ணிப்பதால் கற்பனையாக உருவாக்கப்பட்டது. கற்பனைக்கதைகளுக்கும் சரித்திரத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. ஏனெனில் இருப்பது நிகழ்காலம் மட்டும்தான்.

மாயா சக்தியின் ஒளி-ஒலி காட்சியில் ஒளியில் ஏற்படும் மாறுதல்கள் பிரபஞ்சத்தின் தோற்றமாக தெரிகிறது. தனிப்பட்ட பொருள்கள் என்று எதுவும் இல்லாமல் அதே சமயத்தில் அவை இருப்பதுபோல் காட்டும் ஒளி காட்சியை நம் மனம் ஒலி வடிவில் வர்ணனையாக பதிவுசெய்துகொள்கிறது. ஒலி ஒளியை விட மெதுவாகத்தான் பயணம் செய்யும் என்பதால் ஒலிவடிவான எண்ணங்களால் நிகழ்காலத்தில் செயல்பட முடியாது. நேற்று இரவில் நிலவைப்பார்த்தேன் என்பது நிகழ்காலத்தில் மனதினுள் ஏற்படும் ஒலி வர்ணனை. இது போன்ற ஒலிவர்ணனைகள் அனைவரது மனதிலும் ஏற்படுவதால் அதற்கு ஒரு உண்மைத்துவம் வந்துவிடுகிறது.

கனவில் நமக்கு எதிரே வரும் அழகான பெண்ணை எல்லோரும் கவனிப்பதால் அவள் உண்மையில் உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணாக மாறிவிடமாட்டாள். பிறந்த தேதி, வளர்ந்த இடம் என்பதுபோன்ற சரித்திரம் கனவில் வரும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். ஆனாலும் அவை யாவும் கற்பனையே. அது போல வாழ்வில் நிகழும் நிகழ்வுகளையும் சந்திக்கும் மனிதர்களையும் உண்மையற்றவை என்று அறிபவன் முற்றுணர்ந்தோன்.

ஞானம் நிலைபெற்ற பின் தான் இதுபோன்ற உறுதியான எண்ணம் ஏற்படும் என்று நினைத்து ‘நான் பரமன்’ என்ற தியானத்தில் மூழ்கி உலகை தவிர்ப்பதனால் எவ்விதபயனும் ஏற்படாது. நடந்தால் பூதம் போல் தென்படும் நிழல் நம்மை துரத்தி பயமுறுத்துகிறது என்பதற்காக எங்கும் செல்லாமல் வீட்டில் படுத்துக்கொண்டு நிழலை அழிக்க வேண்டிய அவசியமில்லை. நிழல் பூதமல்ல என்ற அறிந்து கொண்டால் மட்டும்போதும். அதுபோல் துன்பம் தரும் எண்ணங்கள் மனதில் ஏற்படுவதை தவிர்க்க செயல்களை தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. துன்பம் தரும் நிகழ்வுகளை படம் பிடித்துக்காட்டும் எண்ணங்கள் மனதில் ஏற்பட்டாலும் காலம் என்பதே நமது கற்பனை என்பதால் நிம்மதியாக இருக்கலாம். எண்ணங்கள் என்னும் ஒலிவடிவமான சக்தி நிகழ்கால மாற்றங்களை கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்று இரண்டு கூறுபோடுகிறது. நிகழ்காலம் துன்பம் கலவா இன்பம்.

காலம் நமது கற்பனை

மாறும் உலகை மாயை என்று புரிந்து கொள்ளாமல் மாற்றங்களை முன் பின்  என்று வரிசைப்படுத்தி மூன்று காலங்களை கற்பனை செய்ததன் மூலம் அதற்கு ஒரு உண்மைத்துவத்தை ஏற்படுத்திகொடுத்திருப்பது நமது மனம். நாம் அறியாத ஒன்று நம் கனவில் இருக்க முடியாது. இருத்தல் என்பதற்கு அறிதல்தான் ஆதாரம் என்று வேதம் கூறும் உண்மையை அணுவை ஆராயும் அறிவியல் அறிஞர்கள் நிரூபணம் செய்துள்ளார்கள். எனவே கனவை உருவாக்குவதுபோல்தான் இந்த உலகத்தையும் நாம் பார்ப்பதனாலேயே உருவாக்கியுள்ளோம். இல்லாத இவ்வுலகத்திற்கு இடம், பொருள், காலம் என்ற பரிமாணங்களை கொடுத்து உண்மையாக இருப்பது போல் கற்பனை செய்துகொண்டு அதில் சிக்கிதவிப்பது நமது அகங்காரம்.

ஒருபொருளுக்கும் மற்றொருபொருளுக்கும் இடையே இடைவெளி இருப்பதாக நாம் நினைப்பதும் ஒரு கற்பனையே. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் ஒரு எலக்டரான் கூட உலகில் இல்லை என்று அறிவியலின் அடிப்படையில் நாம் அறியும் உண்மை நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒலிவர்ணனையுடன் கூடிய மாயாசக்தியின் ஒளிநடனத்திற்கு உலகம் என்று பெயரிட்டு அதன் மாற்றங்களுக்கு கற்பனையான காலத்தால் இடம் கொடுத்து கனவை நனவாக நம்பி துன்பப்படுவது நமது அகங்காரம்.

துன்பத்தை தவிர்க்க உலகத்தை மாற்றியமைக்க முயலுபவன் பற்றுடையோன். துன்பத்தை தவிர்க்க தன் மனதை மாற்ற முயற்சிப்பவன் முக்திவிழைவோன். துன்பம் வெறும் கற்பனை என்பதால் அதை தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தவன் முற்றுணர்ந்தோன். இன்பத்தை பெறுவதற்காக துன்பத்தை அனுபவிப்பவன் பற்றுடையோன். துன்பத்தை தவிர்ப்பதற்காக இன்பத்தை துறக்க தயாராய் இருப்பவன் முக்திவிழைவோன். இன்ப அனுபவமும் துன்ப அனுபவமும் தனது மாயாசக்தியால் உருவான கனவு என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோன் இது வேண்டும் அது வேண்டாம் என்ற பாகுபாடு எதையும் செய்யாமல் நடக்கும் ஒளி நடனத்தையும் ஒலி வர்ணணையையும் ஒருங்கே அனுபவிப்பான்.

இப்படி இருந்தால்தான் சரி என்ற எதிர்பார்ப்பு எதுவும் இல்லாததால் ஒளி நடனத்தின் வடிவமாற்றங்களையும் அவற்றிற்கு அகங்காரம் கற்பிக்கும் பெயர் மாற்றங்களையும் எவ்வித மறுப்போ தடங்கலோ இல்லாமல் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் முற்றுணர்ந்தோன்  நிரந்தரமான அமைதியை அனுபவிப்பான்.   

காரண காரியம் நமது கற்பனை

அஜீரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து தரம் குறைந்த சாலையோர உணவகத்தில் உணவு உண்டது என்று கண்டுபிடித்துவிட்டோமானால் ஒரு குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். எந்த ஒரு காரணமும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் நாம் நம்மை  நிரபராதி என்று எண்ணிக்கொண்டு செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பதுபோல் உடல்நிலைக்குறைவை ஏற்றுக்கொள்வோம். அஜீரணம் என்பது எல்லோருக்கும் எப்பொழுதாவது ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து மாறும் உடலில் இது போன்ற துன்பங்கள் ஏற்படுவது இயற்கை. தினம் உண்ணும் உணவை செரிப்பதற்கு நாம் காரணம் இல்லை. அதுபோல் அவ்வப்பொழுது ஏற்படும் அஜீரணத்திற்கும் நாம் காரணம் அல்ல.

உடலைப்போல் மனதும் தொடர்ந்த மாறுதலுக்கு உட்பட்டது. மனதில் ஏற்படும் எண்ணங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாற்றம் நிச்சயம். உலகில் ஏற்படும் மாறுதலுக்கு ஏட்ப மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு நாம் பொறுப்பு அல்ல. கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள் திடீரென ஏற்பட்டால் அதற்கு காரணத்தை ஆராய்ந்து தான்தான் குற்றவாளி என்று தீர்ப்பு எழுதுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. கோல் போட தவறியதை வர்ணிக்கும் வர்ணனையாளர் மீது கோபப்படுவது நியாயமல்ல. உலக ஒளி நடனத்தை ஒலியாக வர்ணனை செய்யும் மனதின் இயல்பை மாற்ற முடியாது என்பதால் அகங்காரம் தன்னைத்தானே நொந்துகொள்வதில் பயன் இல்லை.

முடிவுரை :

இங்கிருந்து அங்கே போகவேண்டுமானால் காலமும் முயற்சியும் அவசியம். இங்கு அங்கு என்பதெல்லாம் வெறும் கற்பனை என்று அறிவியல் நமக்கு அறிவிக்கிறது. எனவே இந்த மாய உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த நாம் எவ்வித முயற்சியும் செய்ய வேண்டாம். செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இப்படி இருக்கும் நான் அப்படி ஆகவேண்டும் என்பது இல்லாததை இருப்பதாக நினைக்கும் அகங்காரத்தின் ஆசை. இடம், பொருள், காலம் மற்றும் காரணகாரியம் போன்றவற்றை உண்மை என்று நம்பும் அறியாமை உள்ளவரை படிப்பறிவில்லாத ஏழைமக்களை ஏமாற்றும் அரசியல்வாதி போல் அகங்காரம் மனதை ஆட்டுவிக்கும்.  

எப்பொழுதுமே எவ்வித வேலையும் செய்யாமல் அனைத்தையும் சாதித்தது நான் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும் அகங்காரத்தின் பிடியிலிருந்து விடுபட இடம், பொருள், காலம் போன்ற அனைத்தும் நம் கற்பனை என்ற உறுதியான அறிவு நமக்கு ஏற்படவேண்டும். அகங்காரத்தின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மனம் விடுதலையடைந்தபின் அதை நாடுகடத்தவேண்டிய அவசியமில்லை.

முப்பரிமாணத்தை காட்டும் கண்ணாடியை அணிந்து திரைப்படத்தை பார்த்தால் அதில் தோன்றும் புலி நம் அருகில் வந்து பயமுறுத்துகிறது என்று கண்ணாடியை கழற்றவேண்டிய அவசியமில்லை. அகங்காரம் அனைத்து வேலைகளையும் செய்வது போல் தோன்றுவது வெறும் காட்சிபிழை என்பதை புரிந்துகொண்ட பின் அதன் விருப்பத்திற்கு ஆடவிட்டு அதன் ஆட்டத்தை ரசிக்கலாம்.

பற்றுடையோர்கள் மனம் பண்படாத மனம் என்பதால் அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையும் செய்யக்கூடாத செயல்களையும் பட்டியலிட்டு கொடுக்கும் வேதம் மனம் பண்பட்டபின் அறிவை அடையும் முக்திவிழைவோர்களுக்கு உண்மை எது பொய் எது என்று விளக்குகிறது. அகங்காரம் எவ்வித செயலையும் செய்வதில்லை என்ற உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோர்கள் மனம் போனபடி வாழ்வார்கள்.

பயிற்சிக்காக :

1. முக்தி என்றால் என்ன?

2. இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

3. ஒளி எது, ஒலி எது?

4. செயல்களில் அகங்காரத்தின் பங்கு என்ன?

5. அகங்காரத்தால் ஏன் நிகழ்காலத்திற்குள் வரமுடியாது?

சுயசிந்தனைக்காக :

1. முக்திவிழைவோருக்கும் பற்றுடையோருக்கும் வேதம் கற்றுதரும் ஏன் வேறுபடுகிறது?

2. ஒளி-ஒலி யைத்தவிர உலகில் வேறு எதுவுமேயில்லையா?

Ref: The Quantum Apocalypse of The Holographic Universe at http://www.youtube.com/watch?v=4dpRPTwsKJs

Friday, November 4, 2011

Lesson 159: Restful among restless (Brahma Sutram 4.1.7-10)


பாடம் 159: அலைபாயும் அமைதி
பாடல் 484 – 487 (IV.1.7-10)

தியானம் என்பது மனதை அமைதிப்படுத்த மனதால் மட்டுமே செய்யப்படும் வேலை என்பதால் உடல் ஓய்வுநிலையில் இருப்பது அவசியமா என்ற கேள்விக்கு பதில் நம் நோக்கத்தைப்பொறுத்து மாறும் என்று இந்த பாடம் பதிலளிக்கிறது.

உடல் இயங்கிக்கொண்டிருக்கும்பொழுது மனதை அமைதிப்படுத்த முடியாது. நடப்பது, ஓடுவது, ஆடுவது போன்ற காரியங்களை செய்யும்பொழுது மனம் அமைதியில்லாமல் அலைபாய்ந்து கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. எனவே செயல்கள் எதையும் செய்யாமல் உடலை அமைதிப்படுத்தினால்தான் மனதை அடக்க முயற்சிச்செய்ய முடியும். அதே சமயம் எவ்வித வேலையும் செய்யாமல் உயிர் வாழவோ உலகவாழ்வை அனுபவிக்கவோ முடியாது.

பணம் சம்பாதிப்பது முக்கியமா செலவழிப்பது முக்கியமா என்ற கேள்விக்கு பதில் செலவழிப்பதற்காகத்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்வது போல் ஞானம் பெறும் வரை உடலை கட்டுப்படுத்தி தியானம் செய்யவேண்டும் என்றும் ஞானம் பெறுவது உலக சுகங்களை துன்பம் கலக்காமல் அனுபவிப்பதற்காகத்தான் என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஊர் சுற்றி உலக இன்பங்களை அனுபவிக்கத்துடிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக தங்கள் மனதின் தேடல்களை கட்டுப்படுத்தி பாடத்தில் கவனம் செலுத்துவதன் ஒரே நோக்கம் நல்ல மதிப்பெண்களுடன் தேறினால்தான் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். மாணவப்பருவம் முடிந்து வேலை பார்க்கத்துவங்கியவுடன் எவ்வித கட்டுப்பாடும் இன்றி மனம் போன போக்கில் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும் இளைஞர்கள் போல மனதை கட்டுப்படுத்தி வேதம் படிப்பதன் ஒரே நோக்கம் ஞானம் பெற்றதும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இன்பமாக வாழலாம் என்பதுதான்.

பணம் உலக சுகங்களையும் ஞானம் குறையாத இன்பத்தையும் தரவல்லவை. பெற்ற ஞானம் அழியாது. உலகப்பொருள்களை அனுபவிக்க ஒரு எல்லையில்லை. எனவே ஞானம் பெற்றபின் உடல் மற்றும் மனதில் திறமை இருக்கும்வரை தொடர்ந்து முயற்சி செய்து நிறைய பணம் சேர்த்து வாழ்க்கைத்தரத்தை அதிகரித்துக்கொள்ளுவதன் மூலம் மனம் விரும்பியபடி வாழ்வை அனுபவிக்கலாம்.

உலகப்பொருள்கள் செய்யும் மூன்று செயல்கள்

அறியாத பொருள் மேல் ஆசை வைக்க முடியாது. இன்பம் என்றால் என்ன என்று அறியாதவர்களால் எப்பொழுதும் இன்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைபட முடியாது. இந்த ஆசை எல்லோருக்கும் இருப்பதால் அனைவரும் தங்கள் வாழ்வில் இன்பத்தை அவ்வப்பொழுது அனுபவிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. உலகில் உள்ள பொருள்கள்தான் மக்களுக்கு இன்ப அனுபவத்தை பெறும் வாய்ப்பை கொடுத்துள்ளன. உலகப்பொருள்கள் இல்லாவிட்டால் இன்பம் என்பது என்ன என்பதை அறியாதவர்களாகத்தான் எல்லோரும் இருந்திருப்பார்கள்.

சிறுவயதில் முதன் முதலாக விளையாட்டுப்பொம்மைகள் மூலம் இன்பத்தை அனுபவித்ததால் பொருள்களில்தான் இன்பம் இருக்கிறது என்ற தவறான அறிவு அனைத்து மனிதர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏற்பட்டுவிடுகிறது. ஆயினும் இன்பம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதைவிட தவறான அறிவுடன் இன்பத்தை அனுபவிப்பது மேல்.

தாஜ்மஹாலைப்பார்க்க ஆக்ரா செல்லவேண்டும் என்று சரியான அறிவுரை சொல்பவர் தவறான பாதையை காண்பிப்பதுபோல வாழ்வின் குறிக்கோள் இன்பமாக இருப்பதுதான் என்று சரியாக சொல்லிக்கொடுத்த உலகப்பொருள்கள் இன்பத்தை அடைய தவறான பாதையை காட்டிக்கொடுக்கின்றன. எனவேதான் இன்பமாக இருக்க பணம் தேவை என்ற தவறான அறிவுடன் இன்பத்தை தியாகம் செய்து பணம் சம்பாதிக்கும் செயல்களில் பலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இருப்பது நான் மட்டும்தான். என் மனமும் இவ்வுலகப்பொருள்களைப்போல் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை அறியாத பற்றுடையோர்கள் பிரியம், மோதம் மற்றும் பிரமோதம் ஆகிய இன்பங்களை அனுபவிக்கும்பொழுது அவை உலகத்திலிருந்து கிடைக்கின்றன என்று நினைப்பார்கள். இது தவறான அறிவு என்று உணரும்பொழுது அவர்கள் முக்திவிழைவோர்களாகிறார்கள். இதுபோல் அவர்களின் முன்னேற்றத்திற்கும் வழி வகுப்பதும் உலகத்தில் உள்ள பொருள்களே. எனவே இன்பம்தான் வாழ்வின் குறிக்கோள் என்று மனிதர்களுக்கு உணர்த்தி அவர்களை இன்பத்தை பெற பொருள்களை நாடும்படி செய்து அந்த தேடலில் அவர்கள் தோற்கும்பொழுது ஏற்படும் மனப்பக்குவத்தின் காரணமாக இன்பத்தின் சரியான இருப்பிடத்தை தேட அவர்களை வேதத்தை படிக்க வைப்பது ஆகிய மூன்று செயல்களையும் உலகப்பொருள்கள் செய்கின்றன.

உலகப்பொருள்கள் படைக்கப்பட்டதன் நோக்கம்

எல்லையில்லா ஆனந்தங்களை உள்ளடக்கிய இந்த உலகம் படைக்கப்பட்டதன் ஒரே நோக்கம் நாம் அதில் எல்லா சுகங்களையும் அனுபவித்து துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழவேண்டும் என்பதுதான்.

முதன்முதலில் சைக்கிள் ஓட்டும்பொழுது கீழே விழுந்து முட்டியில் காயம் படும் என்பதால் சைக்கிள் வாங்க கூடாது என்று முடிவெடுப்பது முட்டாள்தனம். காயம் படாமல் ஓட்ட கற்றுக்கொள்ளவேண்டும். அது போல் துன்பங்களுக்கு காரணம் உலகத்தில் உள்ள பொருள்கள் என்று நினைப்பது அறியாமை. இன்பமாக வாழ தேவையான அறிவை பெற்றால் துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழலாம்.

சைக்கிள் ஓட்டுவதை கற்றுக்கோள்ள சைக்கிளின் உதவி தேவை. அதுபோல் இன்பமாக வாழ தேவையான அறிவைப்பெற மேற்குறிப்பிட்ட மூன்று செயல்கள் மூலம் உலகப்பொருள்கள் நமக்கு உதவுகின்றன. எனவேதான் இவ்வுலகம் கர்மபூமி என்றும் முக்தியடைய வழிவகுக்கும் ஒரே இடம் என்றும் வேதம் கூறுகிறது. சுவர்க்கம் முதலிய பல உலகங்களை வேதம் வர்ணித்தாலும் அவை தற்காலிகமானவை என்ற காரணத்தால் நிரந்தரமான இன்பத்தை தரக்கூடிய ஒரே வழி பூமியில் மனிதனாகப்பிறப்பது மட்டுமே என்றும் அரிதாக கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்றும் வேதம் எடுத்துரைக்கிறது.

சைக்கிள் ஓட்டத்தெரிந்தவுடன் நடந்து செல்வது நின்றுவிடும். சைக்கிள் இல்லாமல் எங்கும் செல்வது முடியாதகாரியம் என்று தோன்ற ஆரம்பித்துவிடும். சிறிது காலத்தில் சைக்கிளை விட்டுவிட்டு மோட்டர் சைக்கிள் வாங்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். அதன் பின் உடன் செல்ல ஒரு துணை மீது நாட்டம் ஏற்படும். இது போல் ஒரு முடிவேயில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக உலக சுகங்களை அனுபவிக்கும் ஆசையையும் வாய்ப்பையும் தரும் வண்ணம் எண்ணற்ற பொருள்கள் இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ளன. முடிந்தவரை அனைத்தையும் அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை நியாயமானது. முற்றுணர்ந்தோர்கள் இது போன்ற ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்யும்பொழுதும் இன்பமாக செயல்படுவார்கள். மேலும் முயற்சி செய்த பின்னும் இந்த ஆசைகள் நிறைவேறாவிட்டால் அதைகுறித்து வருத்தமடைய மாட்டார்கள். துன்பம் கலவா இன்பத்துடன் மென்மேலும் உலக சுகங்களை அனுபவிப்பதற்காகவே உலகில் உள்ள அனைத்து பொருள்களும் படைக்கப்பட்டுள்ளன.

உலகப்பொருள்களை படைத்தவன்

உலகைப்படைத்தவன் ஆண்டவன் என்று நம்புபவன் பற்றுடையோன். பரமனின் மாயாசக்தி உலகமாக பரிணமித்துள்ளது என்று நினைப்பவன் முக்திவிழைவோன். இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தவன் தான் தான் என்ற உண்மையை அறிந்தவன் முற்றுணர்ந்தோன்.

இது என்று சுட்டிக்காட்டகூடிய உடல் மனம் உள்ளடங்கிய உலகப்பொருள்கள் அனைத்தையும் அறிபவன் அவற்றை படைத்தவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதை தர்க்கத்தின் துணையுடன் நிருபிக்கலாம். இதுவும் அதுவும் ஒன்று என்பது உண்மையாக இருக்கவேண்டுமானால் இது அது என இருபொருள்கள் இருக்கவே முடியாது. ஒரே மனிதரை வேறு ஒருவர் என்று தவறாக நினைக்கும்பொழுதுதான் அவர்தான் இவர் என்ற சரியான அறிவைப்பெற முடியும். அதுபோல் இவ்வுலகம் உண்மை என்ற தவறான அறிவை சரிசெய்தால் உண்மையில் இருக்கும் ஒரே பொருளான நான்தான் இவ்வுலகை படைத்தவன் என்பது தெளிவாகும்.  

இடம், பொருள், காலம் ஆகிய மூன்றும் இருப்பது போல் தோன்றும் மாயை என்பதால் இவற்றின் ஆதாரமாக இருக்கும் உண்மை என்னைத்தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. ஏனெனில் எவ்வித மாற்றமுமில்லாமல் எப்பொழுதும் இருக்கும் என்னைத்தவிர வேறு எதுவும் கிடையாது என்பதால் இவ்வுலகை படைத்தவன் நானே. மேலும் ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்டது என்று முடிவு செய்ய   இரண்டிற்கும் இடையே இடம், வடிவம், காலம் என்ற அடிப்படையில் ஏதேனும் வேற்றுமை இருக்கவேண்டும். எதனுடனும் சம்பந்தப்படாமல் எவ்வித குணங்களும் இல்லாமல் என்றும் இருக்கும் நான், ஒருவனே என்பதால் என்னால் அறியப்படும் உலகை படைத்தவன் நான்தான் என்பது உறுதியாகிறது. 

என்னால் படைக்கப்பட்ட உலகில் நான் எப்படி துன்பப்பட முடியும் என்ற கேள்விக்கு நாம் காணும் கனவுலகை நனவுலகுடன் ஒப்பிட்டு விடைகாணலாம்.

முதல் கட்டம்: படைத்தல்

கனவில் தோன்றும் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்துப்பொருள்கள், பொருள்களை அனுபவிக்கும் உடல் மற்றும் அந்த உடலில் அமர்ந்து செயல்படும் மனம் ஆகிய மூன்றும் என்னால் என்னை ஆதாரமாக கொண்டு எனக்குள் உருவாக்கப்பட்டவை. எனக்கு அந்நியமான எதுவும் கனவுலகில் இல்லை.  

இரண்டாம் கட்டம்: கனவினுள் புகுதல்

கனவுலக காட்சிகளை காணும் நான் என்னால் உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட உடலுக்குள் புகுந்து அந்த மனதுடன் என்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு கனவை அனுபவிக்க ஆரம்பிக்கிறேன்.

மூன்றாம் கட்டம்: உண்மையை மறத்தல்

கனவுலகை படைத்தவன் என்ற நிலையில் இருந்து இறங்கி படைக்கப்பட்ட ஒரு பாத்திரம்தான் நான் என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறேன். கனவுலகம் இருப்பதற்கே நான்தான் ஆதாரம் என்பது கனவு ஆரம்பித்தவுடன் மறந்துவிடுகிறது. அனைத்து பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் ஓரங்க நாடகத்தின் நாயகனாக இல்லாமல் ஒரு பாத்திரத்தோடு ஒன்றி நடித்து அந்த பாத்திரமாகவே மாறிவிடுகிறேன்.

நான்காம் கட்டம்: பொய்யை உண்மை என்று நினைத்தல்

இல்லாத உலகம் இருப்பதுபோல் தோன்றி அதில் கிடைக்கும் அனுபவங்களை பெற ஆரம்பித்ததும் அதை உண்மை உலகமாக  பார்க்கத்தொடங்கிவிடுகிறேன். கனவு காணும்பொழுது அது கனவு என்று தெரியாமல் உண்மை என்று நம்பி அதில் நிகழும் நிகழ்வுகள் நிஜமாக நடப்பவை என்று ஏற்றுக்கொள்கிறேன்.

இதற்குப்பிறகு நான் படைத்த கனவுலகிற்கு என்னை துன்புறுத்தும் சக்தி கிடைத்து விடுகிறது. கனவுலகில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப நான் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே அலைக்களிக்கப்படுகிறேன். இருப்பது நான் மட்டும்தான் என்பதை மறந்து இல்லாத கனவுலகத்தை உண்மையில் இருப்பதாக நினைப்பதால் துன்பத்திலிருந்து விடுதலையடைய பற்பல செயல்களை கனவுலகில் செய்ய முயன்று தோல்வியை சந்திக்கிறோம். விழித்துக்கொள்வது மட்டுமே கனவுலக துன்பங்களிலிருந்து விடுதலைபெற நாம் செய்யவேண்டிய ஒரே செயல் என்பது விழித்த பிறகே தெளிவாகிறது.

கனவுலகைப்படைத்து அதில் இன்ப துன்பங்களை அனுபவிப்பதுபோல்தான் நனவுலகை படைத்து அதில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். கனவில் தோன்றும் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியானவர்கள் என்பது எப்படி உண்மையில்லையோ அதுபோல நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களும் என்னால் உருவாக்கப்பட்டு எனக்குள் செயல்படுபவர்கள் என்பதை அறிந்தவன் முற்றுணர்ந்தோன்.

விபத்தில் அடிபட்டு வலியுடன் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு நாம் உதவி செய்வதுபோல் கனவு காணும்பொழுது அவனுடைய வலியை நாம் அனுபவிப்பது இல்லை. அவன் நம் கற்பனையில் உருவானவன் என்பதால் அவனுக்கு உதவாமல் அவனை சாகடிப்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அந்த மனிதன் நம்முடைய நெருங்கிய நண்பன் என்றாலும் அவனுக்கு உதவ வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவனை அப்படியே விட்டுவிட்டு நம் வேலையை நாம் கவனித்தால் அதில் தவறு ஏதுமில்லை. ஆனால் நம் மனம் பதறி எப்படியாவது அவனை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவதற்கு காண்பது கனவு என்ற அறிவு இல்லாதது மட்டுமே காரணம்.  விபத்து, அந்த மனிதன், அவனது வலி ஆகிய அனைத்தும் நமது கற்பனை என்பது கனவு முடிந்து விழித்தபிறகே நமக்கு புரிகிறது. கனவுகாணும்பொழுதே இவை பொய்யான தோற்றம் என்பது தெரிந்திருந்தால் நம்மால் முடிந்தவரை அவனுக்கு உதவி செய்ய முற்பட்டாலும் மனம் அளவுக்கு மீறி பதற்றமடையாது.

இந்த உலக அனுபவங்களும் இது போன்ற ஒரு கனவுதான் என்பது பின்வரும் மூன்று உண்மைகளை ஆராய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. காலம் நமது கற்பனை: நடக்கும் நிகழ்வுகளை மனதில் பதித்துவைத்து அதில் ஒரு கோர்வையை கண்டுபிடுத்து நேற்று, இன்று, நாளை ஆகியவற்றை கற்பனை செய்வதால் உலகம் நம்மிலிருந்து வேறுபட்டு இருப்பதாக தோன்றுகிறது.

2.காரண காரியம் நமது கற்பனை: இதனால்தான் இது நடந்தது என்று ஓரிரு படிகளை மட்டும் ஆராய்ந்து எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு காரணம் இருப்பதாக தவறான முடிவெடுக்கிறோம். நான் எப்படி இந்த உலகிற்குள் வந்தேன் என்ற கேள்விக்கு விடையை கண்டுபிடிக்க முடியாது என்பதால் இது ஒரு கனவு என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

3.மாற்றமடையாதது எதுவுமில்லை: கனவில் யானை தீடீரென்று பூனையாக மாறிவிடுவதைப்போல்தான் உலகில் உள்ள அனைத்து பொருள்களும் தொடர்ந்து மாறிக்கொண்டு வருகின்றன. அறிவியல் சோதனைகள் மூலம் திடப்பொருள்கள் என்று எதுவுமில்லை என்றும் எல்லாம் மாயா சக்தியின் நடனம் என்றும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் நம் மனம் இன்றிருப்பார் நாளையிங்கே இருப்பதென்ன உண்மை என்பதை வாயளவில் ஏற்றுக்கொண்டு உண்மையில் நிலையான உலகில் வாழ்வதாகவே நம்பிக்கொண்டிருக்கிறோம்.

இடம்,பொருள், காலம் ஆகிய மூன்றுமே மாயை என்பதால் இவை உலகம் உண்மையில் இருப்பதாக கூறும் சாட்சி பொய்சாட்சியாகும். கனவை உண்மையென நம்பி இவ்வுலகில் வாழ்பவர்கள் பற்றுடையோர்கள். இந்த வாழ்வு வெறும் கனவு என்று வேதம் கூறுவதை அறிந்தபின்னும் உலகின் பிடியிலிருந்து விடுபட முயன்றுகொண்டிருப்பவர்கள் முக்திவிழைவோர்கள். உலகம் தன்னை ஆதாரமாக கொண்டு படைக்கப்பட்டு தன்னுள் இயங்கும் ஒரு கனவு என்பதை உணர்ந்து விழித்துக்கொண்டவர்கள் முற்றுணர்ந்தோர்கள்.

உலகப்பொருள்களின் தன்மை

நம்முடைய ஜடசக்தியால் கனவுகளைப்படைப்பதுபோல் நம் மாயா சக்தியால் உலகை படைத்துள்ளோம். இருத்தல், அறிதல் மற்றும் ஆனந்தம் என்ற மூன்றும் நம் இயல்பு. இந்த இயல்பை ஆதாரமாக கொண்டு உருவான மாயா சக்தியால் இந்த உலகை உருவாக்கியுள்ளோம்.

நெருப்பின் சூடும் தன்மையை மட்டுமே தண்ணீரால் ஏற்றுக்கொள்ளமுடியும். அது போல இருத்தல் என்ற நம் ஒரு தன்மையை மட்டும் பிரதிபலிக்கும் பொருள்கள் ஜடப்பொருள்கள். சுடும் தன்மை மற்றும் ஒளிரும் தன்மை ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கும் இரும்புகுண்டைப்போல் இருத்தல் மற்றும் உணர்தல் ஆகிய இரு தன்மைகளையும் பிரதிபலிப்பவை உயிரினங்களாக காட்சியளிக்கின்றன. நெருப்புடன் ஒன்றாக கலந்து தன்னைமட்டுமல்லாமல் மற்ற பொருள்களையும் ஒளிரவைக்கும் சக்தி மரக்குச்சிக்கு மட்டும் இருப்பது போல்  இன்பம் என்ற நம் மூன்றாவது தன்மையையும் ஏற்கும் சக்தியுள்ளவர்கள் மனிதர்களாக தென்படுகிறார்கள்.

மனிதர்களின் மனம், உடல் உள்ளிட்ட அனைத்து உலகப்பொருள்களும் இதுபோல் நம் மாயாசக்தியான ஜடம், சக்தி மற்றும் ஒளி என்ற மூன்று தனிமங்களின் கலவை என்பதால் அவை தோற்றம், மாற்றம், மறைவு என்ற விதிக்கு கட்டுப்பட்டுவை. நிலையாக மாறாமல் இருக்கும் என்னை ஆதாரமாக கொண்டு தொடர்ந்த மாற்றங்களுக்குட்பட்ட உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை நம் மனதிற்கு புரியும்பொழுது நாம் இந்த கனவிலிருந்து விழித்துக்கொள்கிறோம்.

இதுபோல் விழிப்படைய நம் மனம் பண்பட வேண்டும். எனவே உலகப்பொருள்களுள் ஒன்றான நம் மனம் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.

மனதின் தன்மை

ஈரமான மரக்குச்சியால் முழுவதும் எரிந்து நெருப்புடன் ஒன்றாக முடியாது. அது போல் உலகப்பொருள்களிலிருந்து இன்பம் கிடைப்பதாக நினைக்கும்வரை துன்பம் கலக்காத இன்பத்தை அனுபவிக்க முடியாது. மரக்குச்சியை வெயிலில் உலர்த்தி காயவைப்பது போல் மனிதர்கள் சில காலம் உலக இன்பத்திலிருந்து பெறும் இன்பத்தை தவிர்த்து மனதை குவிக்கும் சக்திபெற்றவுடன் வேதத்தை படித்து தான் நிலையானவன் என்றும் மாறும் மனம் உலகப்பொருள்களில் ஒன்று என்றும் அறிந்து கொள்ள முடியும்.

தண்ணீர் திடம், திரவம், வாயு என்ற மூன்று நிலைகளில் இருப்பதுபோல் மனதும் ஆழ்ந்த உறக்கம், கனவு, நினைவு என்ற மூன்று நிலைகளில் அனுபவங்களை பெறுகிறது. நீராவி கட்டுக்கடங்காமல் எல்லா இடங்களிலும் வியாபிப்பதுபோல் மனம் வெளியுலகில் சஞ்சரித்து இவ்வுலக அனுபவங்களையும், திரவநிலையில் தண்ணீர் தான் இருக்குமிடத்திற்குள் அலைபாய்வதுபோல் மனம் தன்னில் அடங்கி கனவுலக அனுபவங்களையும், முழுவதும் உறைந்த பனிக்கட்டியின் நிலை போல தான் முழுவதும் அடங்கிய அனுபவத்தை ஆழ்ந்தஉறக்கத்திலும் மனம் பெறுகிறது. மனம் அனுபவிக்கும் இந்த மூன்று நிலைகளிலும் அனுபவங்களின் ஆதாரமாக இருப்பவன் நான் என்று முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே அறிவார்கள்.

உலகம் என்று ஒன்று இருக்கிறது என்று நமக்கு காட்டிக்கொடுப்பவை நமது ஐந்து புலன்கள் மட்டுமே. இவை இல்லாவிட்டால் உலகம் அந்தக்கணமே மறைந்து விடும். உறங்கும்பொழுது உலகம் மறைந்துவிடுகிறது. நமது புலன்களுக்கு உலகை அறியும் திறனைக்கொடுப்பது மனம். வகுப்பில் அமர்ந்து பாடம் கேட்கும்பொழுது மனம் ஊர்சுற்றிக்கொண்டிருந்தால் ஆசிரியர் பேசுவது காதில் விழாது. மனம் ஒரு ஜடப்பொருள். ஐந்து புலன்களுக்கு உலகை உணரும் சக்தியை கொடுக்க அது என்னைச்சார்ந்துள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் கடன் வாங்கிய இந்த சக்தியை அது இழந்து விடுவதால் உலகம் இல்லாமல் போய்விடுகிறது.

உலகம் பார்க்கப்படும் பொருள். ஐந்து புலன்களும் மனமும் உலகைப்பார்க்க உபயோகப்படும் கருவிகள். பார்ப்பவன் நான். என்னால் மனதின் துணையின்றி உலகை அனுபவிக்கமுடியாது. தான் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு பொய்யான ஜடப்பொருள் என்பதையும் தான் செயல்பட ஆதாரமாக இருக்கும் உணர்வு மாறாமல் என்றும் இருக்கும் உண்மை என்பதையும் மனம் அறிவதில்லை.

முடிவுரை :

உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. இருத்தல் என்பது மாறாத நான். மாறுகின்ற பொருள்களுக்கு தனித்தனிப்பெயரிட்டு நிலையான உலகை கற்பனை செய்து அதை உண்மை என்று நினைப்புடன் வாழ்வது அறியாமை. இந்த அறியாமையை அகற்ற மனதின் கவனத்தை மாறும் உலகிலிருந்து திருப்பி மாறாத இருத்தலின் மேல் செலுத்தவேண்டும்.

அலை மேல் தோன்றும் நீர் குமிழிபோன்ற கனவையும் வந்துபோகும் அலைகள் போன்ற வாழ்வையும் அறியும் நான் இவ்விரண்டிற்கும் ஆதாரமான நீர் போன்று நிலையானவன்.

நிலையாக இருக்கும் நான் தான் மாறும் உலகமாக தோற்றமளிக்கிறேன் என்ற அறிவு நம் மனதில் ஏற்பட்டதும் ஆனந்தத்தைத்தேடி அலையும் ஏக்கம் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும் மற்றும் சிறிது நேரம் கூட துன்பத்தை அனுபவிக்ககூடாது என்பதுதான் அனைத்து உயிரினங்களின் ஒரே ஆசை. இந்த ஆசை முடிவுக்கு வருவதுதான் முக்தி. 

நான் அறிவுருவாக என்றும் இருப்பவன் என்ற ஞானம் மனதில் நிலைபெறும்வரை உலகுடன் உறவாடுவதை கட்டுப்படுத்தி மனதை அமைதி படுத்தவேண்டும். அதற்குப்பின் எவ்வளவு செயல்கள் செய்து கொண்டிருந்தாலும் அலைபாயும் மனதின் ஆதாரம் ஆனந்தமயமான நான் என்ற அறிவு நிலையான அமைதியை கொடுக்கும். தொடர்ந்து ஆட்டம் போடும் அலைகளால் ஆழ்கடலின் அமைதியை கெடுக்கமுடியாது. அதுபோல இவ்வுலகின் நிரந்தர மாற்றங்கள் மனதில் ஏற்படுத்தும் ஏற்ற இறக்கங்கள் முற்றுணர்ந்தோனின் நிம்மதியை பாதிக்கும் சக்தியற்றவை.

தூங்கப்போகும்பொழுது கனவு ஏற்படலாம் என்று நாம் அறிந்திருந்தாலும் கனவு காணும்பொழுது விழித்தெழுவோம் என்று எதிர்பார்ப்பதில்லை. ஏனெனில் கனவு நிஜமாக காட்சியளிப்பதால் விழிக்கவேண்டும் என்று முயற்சி செய்வதில்லை. அது போல இந்த வாழ்க்கை என்பது வெறும் கனவு என்பதை நம்பாமல் இருப்பதால் வேதம் நம்மை விழிக்கவைக்க செய்யும் முயற்சிகள் எளிதாக பலிப்பதில்லை. இந்த வாழ்வு ஒரு கனவு அல்ல என்பதை நிரூபிக்கவே முடியாது என்ற உண்மையை ஆராயும் மனப்பக்குவம் ஏற்பட்டதும் முக்தியடையும் வாய்ப்பு கிடைக்கும்.

பயிற்சிக்காக :

1. முக்தி என்றால் என்ன?

2. உலகப்பொருள்கள் செய்யும் மூன்று செயல்கள் யாவை?

3. உலகம் படைக்கப்பட்டதன் காரணம் என்ன?

4. அறிபவன் படைத்தவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதை தர்க்கம் மூலம் நிரூபிக்கவும்.

5. கனவு பற்றி விளக்கப்பட்ட நான்கு கட்டங்கள் யாவை?

6. உலகம் உண்மையாக இருக்கிறது என்று நாம் நம்ப எவை காரணம்?

7. உலகப்பொருள்களின் தன்மை என்ன?

8. மனம் எந்த மூன்று நிலைகளில் அனுபவங்களைப்பெறுகிறது?

9.  நீர்க்குமிழி, அலை, நீர் ஆகிய மூன்றினால் விளக்கப்பட்டவை யாவை?

சுயசிந்தனைக்காக :

1. மனதை அமைதிப்படுத்த உடலை ஓய்வு நிலையில் வைத்திருப்பது அவசியமா?

2. முக்தி அடைவது எப்படி என்ற கேள்விக்கு சென்ற பாடத்தில் கூறப்பட்ட பதிலுக்கும் இந்தப்பாடத்தில் இடம் பெற்ற பதிலுக்கும் உள்ள வேறுபாட்டை ஆய்க.

3. உலகத்தை படைத்தது யார்?

4. மற்ற மனிதர்கள் என்னை அறிவதனால் நான் எப்படி இந்த உலகை படைத்தவனாக இருக்க முடியும்?

5. மனதின் தன்மை எப்படியிருந்தால் முக்தியடைய முடியும்?

6. மனதின் தன்மையை மாற்ற என்ன செய்யவேண்டும்?

7. பார்ப்பவை, பார்க்கப்படுபவை பற்றி குறிப்பிட்ட நான்கு பொருள்களை முறைப்படி வரிசைப்படுத்தவும். (திருக்-திருஷ்ய விவேகம் என்ற நூலை படிக்கவும்)

Monday, October 24, 2011

Lesson 158: Joyful Living as a result of knowledge (Brahmasutram 4.1.6)


பாடம் 158: ஞானத்தினால் விளையும் முக்தியனுபவம்
பாடல் 483 (IV.1.6)

தன்னை பரமன் என்று அறிந்து கொள்வதற்காக மட்டுமே தியானத்தினால் மனதை பண்படுத்தவேண்டும் என்ற கருத்தை வலியுருத்தும் வகையில் முக்தியனுபவம் பெற ஞானம் மட்டும்போதும் என்ற விளக்கத்தை இந்த பாடம் தருகிறது.

எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும் மற்றும் சிறிது நேரம் கூட துன்பத்தை அனுபவிக்ககூடாது என்பதுதான் அனைத்து உயிரினங்களின் ஒரே ஆசை. இந்த ஆசை நிறைவேறுவதுதான் முக்தி. கர்மகாண்டம் மற்றும் ஞான காண்டம் என்ற இருபிரிவுகளின் மூலம் முக்தியடைய இருக்கும் ஒரே வழியை வேதம் காட்டுகிறது.

கர்மகாண்டம்

முக்தியடையும் தகுதியை பெற மனிதன் உடலாலும் மனதாலும் செய்யவேண்டிய செயல்களை வேதத்தின் கர்மகாண்டம் முதலில் விவரிக்கிறது. மேலும் மனதில் வளர்த்திக்கொள்ளவேண்டிய நற்சிந்தனைகளையும் சரியான பாவனைகளையும் இது போதிக்கிறது. உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் அவர்களது ஆளுமையின் அடிப்படையில் நான்கு பிரிவாக பிரித்து மேலும் அவர்கள் வாழ்வையும் நான்கு கட்டங்களாக பிரித்து ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு கட்டத்தில் செய்யவேண்டிய செயல்களை தர்மம் என்றும் செய்யக்கூடாத செயல்களை அதர்மம் என்றும் வேதத்தின் கர்மகாண்டம் விளக்கியுள்ளது.

தெரிந்தோ தெரியாமலோ அதர்மத்தை தவிர்த்து தர்மமாக வாழ்பவர்களுக்கு இவ்வுலக சுகத்தையும் மரணத்திற்குபின் சொர்க்கம் செல்லும் வாய்ப்பையும் வழங்குவதாக வேதம் உறுதிமொழி அளிக்கிறது. மேலும் ஞானகாண்டத்திற்கு செல்ல தேவையான மனப்பக்குவத்தையும் புத்திகூர்மையையும் தர்மப்படி வாழ்பவர்கள் மட்டுமே பெறுவார்கள் என்ற உண்மையையும் கூறுகிறது.

ஞானகாண்டம்

செயல்கள் செய்வதால் முக்தியடைய முடியாது என்று அறிந்தவர்களுக்கு நான் பரமன் என்ற உண்மையை ஞானகாண்டம் போதிக்கிறது. இந்த உண்மையை புரிந்துகொண்டவர்கள் முக்தியடைகிறார்கள். அதன்பின் அவர்களை கர்மகாண்டம் கட்டுப்படுத்தாது என்றாலும் அவர்கள் தொடர்ந்து தர்மமாகவே வாழ்வார்கள்.

வேதம் காட்டும் பாதை

முக்தி என்பதன் பொருள் பலகோடி வருடங்கள் கழிந்தாலும் மாறாது என்பதால் முக்தியடைய இருக்கும் ஒரேவழியை காட்டும் வேதம் நித்தியமானது. மேலும் அறிவு மற்றும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒரு குழந்தையின் மழலை சொற்களின் பொருளை அதன் தாய் புரிந்துகொள்வதுபோல மனிதர்களின் திக்கற்ற தேடலின் நோக்கத்தை அறிந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேதம் உதவுகிறது. எவ்வளவுதான் உதவினாலும் அந்த உதவியை ஏற்றுக்கொள்ளும் தகுதி தர்க்கத்தின் துணையுடன் வேதத்தின் சாரத்தை ஜீரணிக்கும் திறன்படைத்த ஒருசிலருக்கே வாய்க்கிறது. மற்றவர்கள் நான் பரமன் என்ற ஞானம் எனக்கு முக்தியை கொடுக்கவில்லை என்றும் விருப்புவெறுப்புகளை அகற்றி மனதின் எண்ணங்களை அழித்து சமாதி நிலையில் கிடைப்பதுதான் உண்மையான முக்தியனுபவம் என்றும் தேடலில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

ஞானத்தினால் ஏற்படும் முக்தியனுபவத்தின் தரம் மனதின் தன்மையைபொறுத்து மாறுபடுமென்றாலும் ஞானம் ஏற்பட்டவுடன் முக்தியடைந்துவிடுவதால் அதன்பின் மனதை ஒடுக்கவோ விருப்புவெறுப்புகளை அகற்றவோ அவசியமில்லை. உடலில் வயிற்று வலி இல்லை என்று அனைத்து மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளும் காட்டினாலும் வயிற்றுவலியால் துடிப்பவன் நிம்மதியடையமாட்டான். அதுபோல நான் ஆனந்தமயமான பரமன் என்பதை அறிவுபூர்வமாக உணர்ந்தாலும் மனதின் அலைபாயும்தன்மை மாறாத காரணத்தால் பலர் முக்தியடைந்தபின்னும் தங்கள் தேடலை நிறுத்திக்கொள்வதில்லை. இதுபோன்றவர்களுக்கும் உதவிசெய்யும் நோக்குடன் வேதம் பின்வரும் கருத்துக்களை உபதேசித்துள்ளது.

1. சுற்றியுள்ள பொருள்களை கண்ணாடி பிரதிபலிப்பது போல் உலகைப்பற்றிய எண்ணங்கள் மனதில் ஏற்படுவது அதன் இயற்கை. எண்ணங்களின் சேர்க்கை உணர்வுகள். அறிவின் அடிப்படையில் நாம் உணர்வுகளை வேண்டியது மற்றும் வேண்டாதது என்று பாகுபாடு செய்கிறோம். வேண்டாத உணர்வுகளுக்கு துன்பம் என்று பெயர். நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டதும் துன்பங்கள் முழுமையாக மறைந்துவிடும். ஏனெனில் முற்றுணர்ந்தோன் வேண்டாத உணர்வுகள் என்று எதற்கும் பெயரிடுவதில்லை. கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள் சிலசமயம் அவர்கள் மனதில் தோன்றினாலும் அவை வந்தசுவடு தெரியாமல் மறைந்துவிடும். எனவே அவை ஞானியின் மனதில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

2. சாப்பிடும்பொழுது நாக்கை கடித்துவிட்டதால் ஏற்படும் வலியில் நம்மை மறந்து பற்களை கண்டிப்பதோ அல்லது நீ ஏன் பற்களின் நடுவே சென்றாய் என்று நாக்கை திட்டுவதோ தவறில்லை. நம்முடன் பழகும் அனைத்து மனிதர்களும் நான் என்று அறிந்திருந்தாலும் அவர்களில் சிலர் மேல் கோபபடுவதில் தவறில்லை. ஆனால் அவர்களை வருத்தப்படவைக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது. பல் செய்த தவறுக்கு அதை சுத்தியலால் அடிக்கவேண்டும் என்று தோன்றுவதில்லை.

3. யாருக்கும் எவ்வித துன்பமும் கொடுக்கும் எண்ணத்தை தவிர்த்து தர்மமாக வாழ மனக்கட்டுப்பாடு மிக அவசியம். தர்மமாக வாழ வேண்டும் என்று கர்மகாண்டம் விதித்திருப்பதற்கு ஒரே காரணம் இந்த மனக்கட்டுப்பாட்டை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதுதான். தர்மமாக வாழ தேவையான அளவு மனக்கட்டுப்பாட்டை கடவுள் பக்தி கொடுக்கும். அதன் பின்தான் அவர்கள் ஞானம் பெற தகுதியடைவார்கள். எனவே நான் பரமன் என்ற ஞானத்தை பெற்ற அனைவருக்கும் தேவையான மன கட்டுப்பாடு ஏற்கனவே இருக்கும் காரணத்தால் கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளை தவிர்க்க எவ்வித முயற்சியும் செய்யவேண்டிய அவசியமில்லை.

4. வாகனத்தை சுத்தமாக நல்ல நிலையில் பராமரிப்பது அவசியம் என்றாலும் எந்த இடத்திற்கும் போகாமல் அதை கொட்டகையில் அடைத்து வைத்திருக்க கூடாது. வெளியில் எடுத்துச்சென்றால் அது அழுக்காவதையும் பழுதடைவதையும் தவிர்க்க முடியாது. அதுபோல கோபம், எரிச்சல், ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க யாருடனும் பேசாமல் கண்ணை மூடி தவம் செய்து வாழ்நாட்களை வீணடிக்க கூடாது. நான் பரமன் என்பதை புரிந்துகொள்வது எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் எல்லா உலக இன்பங்களையும் அனுபவிப்பதற்காக மட்டுமே என்பதை மறக்க கூடாது.

5. கால்பந்தாட்டத்தில் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை ஒரே அணி தொடர்ந்து கோல் போட்டுக்கொண்டிருந்தால் எவ்வித சுவாரசியமும் இருக்காது. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி ஏற்பட்டு நம்முடைய அணி வெற்றிபெறவேண்டுமே என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் நம் மனதில் ஏற்பட்டால்தான் முடிவில் கிடைக்கும் வெற்றி சுவையாய் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் நம் அணி தோற்றால் ஏற்படும் ஏமாற்றத்தையும்  வருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளவும் தயாராய் இருக்க வேண்டும். வெற்றி தோல்வி மாறிமாறி ஏற்பட்டால்தான் வாழ்வு சுவைக்கும். தோல்விக்கு பயந்து எந்த அணியின் கட்சியிலும் சேராமல் இருப்பதுபோல் கோபம் எரிச்சல் போன்ற உணர்வுகளுக்கு பயந்து வாழ்க்கையை தவறவிட்டுவிடக்கூடாது.  

6. கால்பந்தாட்ட ரசிகர்களில் பலர் அதை ஒரு விளையாட்டு என்று அறியாமல் தவறாக ஆடியவனை கொலை செய்யும் வெறியுடன் இருப்பார்கள். இதனால் அணிகளின் வெற்றிதோல்வி ரசிகர்களிடையே மோதல்கள் மற்றும் உயிர்சேதம் ஏற்பட காரணமாய் அமையும். வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்றும் அதில் வெற்றி தோல்வி ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளவை என்றும் உணர்ந்த முற்றுணந்தோர்கள் துன்பம் கலவா இன்பத்தை எப்பொழுதும் அனுபவிப்பார்கள்.

7. வாழ்வில் ஏற்படும் வெற்றி-தோல்வி, வரவு-செலவு போன்ற இருமைகள் மனதில் ஏற்படுத்தும் ஏற்றஇறக்கங்கள் அனைத்தையும் துன்பம்கலவா இன்பம் என்று அறிபவன் முற்றுணர்ந்தோன். வாழ்வில் தோல்வியே ஏற்படக்கூடாது என்று எதிர்பார்க்கும் பற்றுடையோர்கள் தொடர்ந்து தர்மமாக வாழ்ந்து மனதை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். வேதம் படிக்கும் முக்திவிழைவோர்கள் இருமை கலந்த உலகம், அதை பிரதிபலிக்கும் மனது, இன்பம், துன்பம் போன்றவற்றின் சரியான பொருளை புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.

8. அதர்மமாக வாழ்ந்தால் அதற்கான தண்டனயை நிச்சயம் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று ஆரம்பகாலத்தில் வேதத்திலிருந்து பெற்ற அறிவின் உண்மைப்பொருளை உணரவேண்டும். நாம் நம் கடமையை சரியாக செய்யாமல் இருப்பது, மற்றவர்களுக்கு துன்பம் தர ஆசைப்படுவது போன்ற செயல்கள் நம் மனதின் நிம்மதிக்கு தடைகற்கள். நமக்கு எதிரிகள் என்று யாரேனும் இருந்தால் அவர்கள் எப்பொழுது நம்மைத்தாக்குவார்கள் என்ற பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். நாம் யாரையாவது ஏமாற்றினால் அந்த உண்மை வெளிப்பட்டுவிடுமோ என்ற எண்ணம் நம்மை தொடர்ந்து வாட்டும். எனவேதான் தர்மமாக வாழ வேதம் கட்டளையிட்டுள்ளது. இதையறிந்த முற்றுணர்ந்தோர்கள் பாவபுண்ணியங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே அவர்கள் தங்கள் செயல்களால் மற்றவர்கள் துன்பம் அடைய நேரிட்டது குறித்து  கவலைப்படமாட்டார்கள்.        

9. உலகத்துடன் உறவாடுவதால் மட்டுமே நம்முடைய இயல்பான இன்பத்தை அனுபவிக்கமுடியும். மேலும் ஒரே எண்ணம் தொடர்ந்து நம் மனதில் இருக்கவும் முடியாது. எனவே வாழ்வில் ஏற்படும் அனைத்து அனுபவங்களையும் இன்பம் துன்பம் என்று வகைப்படுத்தாமல் அப்படியே ஏற்றுக்கொண்டால் முக்திக்காக உலகை நாடி ஓடவோ அதிலிருந்து விலகியிருக்க முயல்வதோ தேவையில்லை.

10. உலகத்தின் மீது பற்றுடையோர்கள் மட்டுமே துன்பத்தை அனுபவிப்பார்கள். எதன் மீதும் பற்றுவைக்காததால் ஒரு சுவர் எவ்வித துன்பத்தையும் அனுபவிப்பது கிடையாது. ஆனால் சுவராக இருப்பதைக்காட்டிலும் பற்றுடன் துன்பபடுவது மேல் என்று சுவாமி விவேகானந்தர் சுட்டிக்காட்டுகிறார். துன்பத்தை தவிர்க்க நான் மட்டுமே இன்பத்தின் ஒரே இருப்பிடம் என்ற அறிவு அவசியம். இந்த அறிவு ஏற்பட்டவுடன் பற்றுவைத்தபொருள் கிடைக்காமல் போனால் இன்பம் பறிபோய் விட்டது என்று பதறவேண்டிய நிலை ஏற்படாது. வேறு ஒருபொருள் மேல் பற்று கொண்டு நம்மிலிருந்து கிடைக்கும் இன்பத்தை தொடர்ந்து அனுபவிக்கலாம்.

11. பற்றிலிருந்து விடுதலையடையும் சக்தியில்லாதவர்கள் பற்றுடையோர்கள். உலகப்பொருள்களின் மேல் உள்ள பற்றை தற்காலிகமாக குறைத்துக்கொண்டு வேதம் படிப்பவர்கள் முக்திவிழைவோர்கள். உலகப்பொருள்களுக்கு நம்மை பாதிக்கும் சக்தியில்லை என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோர்கள் உலகத்துடன் கொள்ளும் பற்றிலிருந்து வேண்டும்பொழுது விடுதலைபெறும் சக்தியுள்ளவர்கள்.

12. நான் ஆனந்தமயமான பரமன் என்ற அறிவு எவ்வித ஆனந்தத்தையும் கொடுக்காது. உலகுடன் உறவாடுவதால் மட்டுமே ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். மனதில் பல எண்ணங்கள் மாறிமாறி ஏற்பட்டுக்கொண்டிருந்தால் அது இல்லாத உலகத்திற்கு ஒரு இருப்பை கற்பித்து இருக்கும் ஆனந்தத்தை அனுபவிக்க விடுவதில்லை. நாம் விரும்பும் ஒரு பொருளைப்பார்த்ததும் அதைப்பற்றிய எண்ணம் மட்டும் மனதை ஆக்ரமிக்கும்பொழுது பிரியம் என்ற முதல்நிலை இன்பம் நமக்கு கிடைக்கிறது. அந்தப்பொருளை நாம் அடைந்தபின் அடுத்த நிலையான மோதம் பிறக்கிறது. அதை அனுபவிக்கும்பொழுது அதனுடன் ஐக்கியமாகி உலகை மறந்து பிரமோதம் என்ற உயர்ந்த நிலை இன்பத்தை அனுபவிக்கிறோம்.

13. பிரியம், மோதம், பிரமோதம் ஆகிய மூன்று வகை இன்பங்களும் உலக பொருள்களிலிருந்து கிடைப்பதாக நினைப்பவன் பற்றுடையோன். இது தவறு என்ற அறிவுடன் உலக உறவை குறைத்துக்கொண்டு பரமனை நாடுபவன் முக்திவிழைவோன். பரமன்தான் உலகமாக காட்சியளிக்கிறான் என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோன் எவ்வித தடையுமில்லாமல் உலகுடன் உறவாடுவான்.

14. மனதில் தோன்றும் எந்த ஒரு எண்ணமும் நிலைத்து நிற்காது. மாறுவது  மனம். காதலில் மூழ்கி காலம் முழுவதையும் கழித்துவிடமுடியாது. மோதல் கலந்த காதல், உடல் கலந்த கூடல் என்பது போன்ற மாற்றங்கள்தான் தடைபடாத இன்பம்.  

15.  இருமைகளிடையே ஊசலாடும் மனதின் நிலைக்கேற்ப இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையே ஊசலாடுபவன் பற்றுடையோன். வெளியுலக தொடர்பை தவிர்த்து பரமனை அறிவதன் மூலம் துன்பம் கலக்காத இன்பத்தை பெறலாம் என்று நினைப்பவன் முக்திவிழைவோன். தன் உண்மை இயல்பான இன்பத்தை மனதில் தோன்றும் எண்ணங்களால் மாற்ற முடியாது என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோன் உலகில் கிடைக்கும் பிரிய, மோத, பிரமோத சுகங்களை தடையில்லாமல் அனுபவிப்பான்.

16. விடுமுறை நாட்களில் வெகு வேகமாக பணம், நேரம், முயற்சி ஆகியவற்றை செலவிட்டு எங்காவது சுற்றுப்பயணம் செய்து இன்பத்தை தேடுபவர்கள் பற்றுடையோர்கள். கோவிலுக்கு சென்று உபன்யாசம் கேட்டல் அல்லது புத்தங்கள் படித்தல் போன்ற செயல்களினால் நிம்மதியை தேடுபவர்கள் முக்திவிழைவோர்கள்.  இன்பமும் நிம்மதியும் தன்னிடம் எப்பொழுதும் இருப்பவை என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோர்கள் தங்களது ஆளுமைக்கும் பணவசதிக்கும் ஏற்றபடி உலகை வலம் வந்து தன் இயல்பான இன்பத்தை உலக சுகங்களாக அனுபவிப்பார்கள்.

17. கயிற்றின் மீது ஏறி மலையின் சிகரத்தை எட்டிப்பிடித்ததும் ஏற்படும் இன்பம் எவ்வளவு சிரமத்துக்கு ஆளானோம் என்பதை பொறுத்து மாறுபடும். இது போன்ற சாதனைகளை செய்வதால் மனதின் எண்ணங்கள் அகன்று நமது இயல்பான இன்பத்தை வெளிக்காட்டுகிறது என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் உலக மக்களுக்கு நன்மையேற்படும் செயல்களில் இன்பமடைவார்களே தவிர தனது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய செயல்களை செய்யமாட்டார்கள். தங்கள் சக்திக்கு மீறிய சமூகப்பணிகளை ஏற்றுக்கொண்டு அவற்றை வெற்றிகரமாக நடத்த முயல்வதால் கிடைக்கும் வெற்றி தோல்விகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.  

18. பிரியம், மோதம், பிரமோதம் ஆகிய இன்ப அனுபவங்கள் நிலையானவை அல்ல. மனதின் எண்ணங்கள் ஒடுங்கிய நிலையில் தன் உண்மை உருவான ஆனந்தம் வெளிப்படுவதை அறியாதவர்கள் இன்னும் இன்னும் என்ற வெறியுடன் அதிகப்படியான புலன் இன்பங்களை தேடுவதிலும் புதிய புதிய பொருள்களையும் உறவுகளையும் அடைவதிலும் தங்கள் கவனத்தை செலுத்தி துன்புறுவார்கள். இன்பத்தின் வற்றாத ஊற்று தன்னிடம் உள்ளதை அறிந்தவர்கள் புதிய பிரிய, மோத, பிரமோதங்களை பெற எவ்வித துன்பத்தையும் அனுபவிப்பதில்லை.  

19. இன்பத்தைத்தேடி உல்லாசப்பயணம் செல்பவனின் வாகனம் பாதிவழியில் பழுதடைந்து வேறுவழியில்லாமல் மாட்டுவண்டியில் பயணம் செய்ய நேரிட்டால் மிகுந்த வருத்தமடைவான். தன் சுய இன்பத்தை பிரிய,மோத, பிரமோதங்களாக அனுபவிக்க உல்லாசப்பயணம் செல்பவன் மாட்டுவண்டியில் செல்லும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்வான்.

20. தான் குறைவுள்ளவன் என்றும் தன் குறையை நிறைக்கும் சக்தி இந்த உலகத்திற்கு இருக்கிறது என்றும் எண்ணுபவன் பற்றுடையோன். தன் குறையை நிறைக்க வேதம் பயிலவேண்டும் என்று முயலுபவன் முக்திவிழைவோன். தான் நிறைவுடையவன் என்றும் இந்த உலகமே தன்னை ஆதாரமாகக்கொண்டுதான் சுழல்கிறது என்றும் உணர்ந்த முற்றுணர்ந்தோன் தன் உடலையும் மனதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொண்டு உலக இன்பங்களை அனுபவிப்பான்.   

21. தான் உடல் அல்ல என்று தெரிந்திருந்தாலும் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாகவும் திடமாகவும் வைத்திருப்பது போல தியானம் செய்து மனதை ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைக்க தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். கத்தியை தீட்டுவதற்கு எவ்வளவு முயற்சி செய்யவேண்டுமென்பது அதை எப்படி பயன்படுத்தபோகிறோம் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படவேண்டும். அது போல் உடலையும் மனதையும் எப்படி உபயோகப்படுத்தப்போகிறோம் என்பதை பொறுத்து அவற்றை சரியாக பராமரிக்கவேண்டும். யாருடனும் பேசாமல் தனியே வாழ்வைக்கழிப்பதாயிருந்தால் தியானம் செய்யவேண்டிய அவசியமேயில்லை.

22.  தர்மமாக வாழ்வதன் மூலம் ஞானம் பெறத்தேவையான மன உறுதியையும் மனப்பக்குவத்தையும் பற்றுள்ளோர்கள் பெறவேண்டும். தியானம் செய்வதன் மூலம் முக்திவிழைவோன் நான் பரமன் என்ற அறிவை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். முற்றுணர்ந்தோன் தன் வாழ்நாள் முழுவதும் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான பயிற்சிகளை மட்டும் செய்வான்.

23. எவ்வளவுதான் முயன்றாலும் உடலின் எடை குறையவில்லையென்றால் அதை குறித்து கவலைப்பட்டு பயன் இல்லை. அதுபோல் எவ்வளவுதான் முயன்றாலும் அவ்வப்பொழுது மனதில் கோபம் எட்டிப்பார்ப்பதை தவிர்க்கமுடியவில்லை என்று முற்றுணர்ந்தோன் வருத்தப்படமாட்டான். மேலும் எடை கூடாமல் இருக்க முயற்சி செய்வது போல் அவ்வப்பொழுது ஏற்படும் கோபம் அதிகரிக்காமல் இருக்க அவன் முயற்சிப்பான். அவ்வாறு செய்யாவிடிலும் அவன் முற்றுணர்ந்தோனே.

24. தேவைகளும் போகங்களும் அவரவரரின் அறிவுக்கேற்றபடி மாறும். அனைத்து போகங்களையும் தேவைகளாக மாற்றுபவன் பற்றுடையோன். தேவைகளை குறைத்துக்கொண்டு போகங்களை தவிர்த்து வேதம் பயில நேரம் ஒதுக்குபவன் முக்திவிழைவோன். அனைத்து தேவைகளையும் போகங்கள் என்றுணர்ந்த முற்றுணர்ந்தோன் எத்தனை கோடி இன்பம் தந்தாய் என்ற மனப்பாங்குடன் கைகால்கள் சரிவர இயங்குவதற்கும் சூரியன் கிழேக்கே உதித்து மேற்கே மறைவதற்கும் கடவுளுக்கு நன்றி செலுத்துவான். அதே சமயம் தன் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும்பொருட்டு செய்யும் வேலைகளின் உபபயனாக கிடைக்கும் வசதிகளையும் அவன் அனுபவிப்பான்.  

25. ஞானிகள் தாங்களறிந்த முக்திநிலையை எடுத்துக்கூறினால் அனைவராலும் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் புரியாமல் பேசினால்தான் ஞானி என்று பொருள்ளல்ல. கனவில் நடந்த நிகழ்வுகளைப்பற்றி பேசுவது போல் ஞானி உலக நிகழ்வுகளை பற்றி மற்றவர்களுடன் உரையாடலாம். இதுபோன்ற சமயங்களில் அவரது பேச்சு பற்றுடையோர்களைப்போல் இருப்பதைவைத்து அவர் முற்றுணர்ந்தோன் அல்ல என்று முடிவெடுப்பது தவறு. முற்றுணர்ந்தோன் என்பதற்கு மூன்று காலங்களையும் அறிந்தவன் என்றோ தூரதேசத்தில் நடப்பதை பார்க்கும் சக்தி கொண்டவன் என்றோ பொருள் அல்ல. வாழ்வில் நடப்பது அனைத்தும் தான் காணும் கனவு என்பதை அறிந்தவர்கள் மட்டுமே முற்றுணர்ந்த ஞானிகள்.   

26. வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல் வெளி உலகில் இன்பத்தை தேடுபவன் பற்றுடையோன். வெண்ணைக்குள் நெய்யை தேடுவது போல் பக்தி மற்றும் தியானம் மூலம் அகவுலகில் இன்பத்தைத்தேடுபவன் முக்திவிழைவோன். வெண்ணையை உருக்கி நெய்யை பெறுவதுபோல் ஞானத்தை உருக்கி மனதுக்குள் கரைத்த முற்றுணர்ந்தோன் தானே இன்பமயமானவன் என்றும் தன்னை ஆதாரமாகக்கொண்டு உருவான இவ்வுலகும் மனமும் இன்பத்தை அனுபவிக்க கிடைத்துள்ள கருவிகள் என்றும் அறிவான்.

27.  இவ்வுலக அனுபவம் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். கனவுகள் தொடர்வதோ முடிவதோ நம் வாழ்வை பாதிக்காது. அது போல நித்தியமாய் இருப்பவன் நான் என்று உணர்ந்த  முற்றுணர்ந்தோன் தன் உடல் மற்றும் மனதின் மூலம் அனுபவிக்கும் இந்த வாழ்வு தொடரவோ முடியவோ ஆசைப்படுவதில்லை.

முடிவுரை :

உலகின் இருமைகளுக்கிடையே ஊசலாடும் மனது வேதம் படிக்க தயார் நிலையில் இருக்காது. சூழ்நிலையை கட்டுப்படுத்தி துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழலாம் என்ற முயற்சி தொடர்ந்து தோல்வியை மட்டுமே தருகிறது என்று புரிய ஆரம்பிக்கும்பொழுது வெளியுலகுடன் நடக்கும் போராட்டம் குறையும். வேதம் கூறும் கருத்துக்கள் புரிய ஆரம்பிக்கும். பின் தீவிரமான தியானத்தால் மனதை செம்மைப்படுத்தி நான் பரமன் என்ற உண்மையை ஆழ்மனதில் புதைத்தபின் மேற்கொண்டு மனதை அடக்க எவ்வித செயலையும் செய்யவேண்டியதில்லை.

தன் மனமும் உலகின் இருமைகளின் பிரதிபலிப்பாக அதில் தெரியும் ஏற்ற இறக்கங்களும் தன்னுடைய இயல்பான இன்பத்தை இம்மியளவும் குறைக்க முடியாது என்பதை உணர்ந்தபின் வாழ்வில் துன்பம் கலவா இன்பம் பிறக்கும்.

பயிற்சிக்காக :

1. முக்தி என்றால் என்ன?

2. முக்தியடைய கர்மகாண்டம் எவ்வாறு உதவுகிறது?

3. பிரியம், மோதம் மற்றும் பிரமோதம் என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. குணம் எனும் குன்றேறி நின்றார் கோபம் கணமேனும் காத்தல் அரிது என்ற திருக்குறளின் பொருளை ஆய்க.

2. முக்தியடைந்தபின் மனதின் அலைபாயும் தன்மை மாறிவிடுமா?

3. பேசும் சொற்கள் மற்றும் செய்யும் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை முக்தியடைந்தவர் என்று அடையாளம் காண முடியுமா?