Wednesday, December 22, 2010

Lesson 144: Duties are to be performed even if liberation is not desired (Brahma Sutra 3.4.32-35)

பாடம் 144: முக்தி வேண்டாதவர்களுக்கும் கட்டுப்பாடுகள் அவசியம்
பாடல் 457- 460 (III.4.32-35)

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் செய்யவேண்டிய கடமைகளை வேதம் பட்டியலிட்டுத்தந்துள்ளது. முக்திவேண்டுபவர்கள் இவற்றை பின்பற்றவேண்டும் என்று சென்ற பாடத்தில் கூறப்பட்ட கருத்து முக்தியை விரும்பாதவர்கள் இவற்றை கடைபிடிக்க வேண்டாம் என்ற தவறான செய்தியை கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பாடம் அனைவரும் தங்கள் வாழ்க்கையை வேதம் வகுத்த பாதையில் நடத்தவேண்டிய அவசியத்தை விளக்குகிறது.

நமது விருப்பபடி நம் பாவபுண்ணியங்களுக்கேற்ப கடவுள் படைத்த உலகில் வாழாமல் நாம் ஒவ்வொருவரும் அதில் பல மாற்றங்களை செய்து நமக்கென்று ஒரு உலகை நாமே படைத்து அதில் வாழ்கிறோம். கடவுள் படைத்த உலகம் ஜடப்பொருள்களாலானது. இவற்றை ஆதாரமாக கொண்டு நாம் ஒவ்வொருவரும் நம் உலகை எண்ணங்களால் உருவாக்கிக்கொண்டுள்ளோம்.

கடல், மலை போன்றவை மட்டுமல்லாமல் கார், வீடு போன்ற மனிதன் உருவாக்கியதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் அனைத்துப்பொருள்களும் கடவுளின் படைப்பில் அடங்கும். உதாரணமாக ஒரு வீடு கட்ட தேவைப்படும் கல், மண் போன்ற மூலப்பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியவன் கடவுள்தான். வீடு கட்ட மனிதனின் உழைப்பு அவசியம் என்றாலும் அதற்கு தேவையான சக்தியை மனிதன் கடவுள் கொடுத்த உணவிலிருந்துதான் பெறுகிறான். எனவே இவ்வுலகில் உள்ள அனைத்து பொருள்களும் கடவுளின் படைப்பு. மனிதன் ‘நான் உருவாக்கியது’ என்று சொந்தம் கொண்டாட இருக்கும் ஒன்றே ஒன்று அவன் மனதில் அவனால் உருவாக்கப்பட்ட எண்ண உலகம் மட்டும்தான்.

இது என்னுடைய நிலம் என்று கடவுளின் பொருளை தன்னுடையது என்றும் தான் உருவாக்கிய துன்பம் நிறைந்த வாழ்வுக்கு கடவுளை காரணம் காட்டுவதும் மனிதனின் அறியாமை. கடவுள் படைத்த உலகில் நன்மை-தீமை, வறுமை-வளமை, காதல்-மோதல், வெற்றி-தோல்வி என்பது போன்ற பாகுபாடுகள் இல்லை. இவை மனிதனின் எண்ண உலகில் மட்டுமே இருக்கின்றன. எனவே முக்தி வேண்டாதவர்கள் உட்பட்ட அனைவரும் வேதம் காட்டும் வழியில் நடந்தால்தான் அவரவர்களின் எண்ண உலகங்களை சரியானபடி அமைத்துக்கொள்ள முடியும்.

எண்ணத்தால் செய்யப்பட்ட உலகம்

இது என்று சுட்டிக்காட்ட ஏதுவாக இருக்கும் அனைத்தும் கடவுளின் படைப்பு. தொடர்ந்து மாறிக்கொண்டு இருக்கும் இவ்வுலகை மனிதன் தன் எண்ணங்களாக படம் பிடித்து தனக்கென ஒரு தனிப்பட்ட எண்ண உலகை உருவாக்கியுள்ளான். மனிதன் வாழும் எண்ண உலகம் கடவுள் படைத்த உலகத்திலிருந்து வேறுபட்டது. மேலும் அது மற்ற மனிதர்களின் எண்ண உலகத்திலிருந்தும் வேறுபட்டது.

கடவுளின் உலகில் இருப்பவை  கடல், ஆறு, நிலம் போன்றவை. மனிதன் தன் எண்ண உலகில் கடவுள் படைத்த உலகை கூறு போட்டு வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு போன்ற பாகுபாடுகளை செய்துள்ளான். மேலும் இந்தியா என்ற மனிதனின்படைப்பு அனைத்து மனிதர்களின் மனதிலும் ஒரே எல்லைகளை கொண்டதாக இருப்பதில்லை. அண்டை நாடுகளில் உள்ளவர்கள் இதன் ஒரு பகுதியை தங்கள் நாடு என்று சொந்தம் கொண்டாடுவதற்கு காரணம் அவர்களின் மனதில் வேறு மாதிரி ஒரு எண்ண உலகை உருவாக்கிக்கொண்டிருப்பதுதான்.

எண்ண உலகை எற்படுத்திக்கொள்ளாமல் மனிதனால் கடவுள் படைத்த உலகில் வாழவே முடியாது. பானை என்ற பொருள் கடவுள் படைத்தது. அதைப்பார்க்கும் மனிதன் பானை என்ற எண்ணத்தால் செய்யப்பட்ட பொருளை தன் மனதில் உருவாக்கியபின்தான் பானையை அறிந்தவனாகிறான். இவ்வாறு எண்ணத்தால் ஒரு உலகை அமைப்பது தவிர்க்கமுடியாதது. அதில் தவறில்லை. ஆனால் நாம் வாழ்வது நமது எண்ண உலகில்தான் என்பதை நாம் அறிவதில்லை.

நாய் என்பதை அறிவீர்களா என்று கேட்டால் அனைத்து மனிதர்களும் அறிவேன் என்றுதான் பதில் கூறுவார்கள். அவர்கள் அறிந்தது அவர்களது எண்ணத்தால் உருவான நாய். அதுபோல் கடவுள் எதையும் படைக்கவில்லை. வேறுபட்ட பல விலங்குகளில் ஒருசிலவற்றிக்கு நாய் என்ற பெயர் சூட்டி எண்ணத்தால் மட்டுமே செய்யப்பட்ட ஒரு பொருளை தங்கள் மனதில் மனிதர்கள் வைத்திருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு மனிதனும் நாய் பற்றிய தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் அது அன்பானது அல்லது அருவருப்பானது என்ற வேறுபட்ட உருவங்களை நாய் என்ற பெயரில் தங்கள் மனதில் சித்தரித்துள்ளார்கள். இது போல் கடவுள் படைத்த மனிதர்களை தாய், தந்தை, மகன், மகள் என்று பலவாறு உருவகப்படுத்தி தான் ஏற்படுத்திய சிலந்திவலையில் தானே மாட்டிக்கொண்டு மனிதன் அவதிபடுகிறான். மனிதன் இவ்வாறு தன் எண்ண உலகில் மட்டுமே வாழ்கிறான்.

எண்ண உலகம் கடவுளின் உலகை ஆதாரமாக கொண்டது

மனிதனின் ஐந்து புலன்கள் கடவுள்படைத்த உலகை வலம் வந்து அவற்றின் ஒளி, ஒலி, சுவை, மணம், தொட்டுணர்வு ஆகிய ஐந்து தன்மைகளை எண்ணங்களாக மனதுக்குள் பிரதிபலிக்கின்றன. மனம் இந்த எண்ணங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவற்றிற்கு விருப்பு வெறுப்பு என்ற சாயங்களை பூசி ஒரு தனிப்பட்ட உலகத்தை நிர்மாணித்துக்கொள்கிறது. இந்த எண்ண உலகம் கடவுளின் படைப்பை ஒத்திருப்பதில்லை. உதாரணமாக முள்ளுடன் கூடிய  ரோஜா மலர் கடவுளின் படைப்பு. அழகிய ரோஜாவும் கொடிய முள்ளும் மனிதனின் எண்ண உலகில் உள்ள கற்பனைப்பொருள்கள்.

அச்சிலிருந்து செய்யப்படும் பொம்மைகளின் வடிவம் அச்சின் உட்புற வடிவமைப்பை பொறுத்து மாறும். களிமண் ஒன்றாயிருந்தாலும் ஒரு அச்சிலிருந்து பிள்ளையார் பொம்மையும் மற்றதிலிருந்து குரங்கு பொம்மையும் வெளிவருவது போல கடவுள் படைத்த ஒரே பொருள் ஒவ்வொரு மனிதரின் மன அச்சில் புகுந்து எண்ணங்களாக மாறும்பொழுது பல்வேறு உலகங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.

மிக அழகாக இருக்கிறது என்று ஒருவரால் வர்ணிக்கப்பட்ட புடவையை மற்றவர் பார்க்க சகிக்கவில்லை என்று கூறுவதிலிருந்து கடவுளால் படைக்கப்பட்ட புடவை ஒன்றாக இருந்தாலும் மனிதர்கள் தங்கள் மனதில் வெவ்வேறு புடவைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இதுபோல் அவரவர்களின் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட வெவ்வேறான உலகில்தான் அனைத்து மனிதர்களும் வாழ்கிறார்கள். கடவுள் படைத்த உலகில் யாரும் வாழ்வதில்லை.

சிகப்பு நிற புடவை என்பதன் பொருள் ஆளுக்குஆள் மாறுபடும். கடவுள் படைத்த வண்ணங்களுக்கும் வடிவங்களுக்கும் பெயர் சூட்டும் மனிதர்கள் மாறுபடுவதால் எது உண்மையில் சிகப்பு நிறம் என்பது கடவுளுக்குகூட தெரியாது. இதுபோல் ஒவ்வொருவரும் தங்களுக்குமட்டும் என ஒரு தனிப்பட்ட உலகத்தை உருவாக்கிக்கொண்டு அதில் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்ற கற்பனையுடன் வாழ்கிறார்கள். உண்மையில் மனிதன் உருவாக்கிய எண்ண உலகத்தில் வாழ்வது அவன் மட்டும்தான். எண்ண உலகங்களை அமைக்க கடவுளின் உலகம்தான் ஆதாரம் என்பதால் உலகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு மனிதன் கடவுளை காரணமாக காட்டுகிறான். ஆனால் மனிதன் தன் எண்ண உலகங்களை சரியாக உருவாக்கவில்லை என்பதுதான் பிரச்சனைகளுக்கு உண்மையான காரணம்.

எண்ண உலகங்கள் சரியாக அமைக்கப்படாததற்கு காரணங்கள்

இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மற்ற உயிரினங்கள் மனிதனைப்போல் துன்பத்தில் ஆழ்வதில்லை. உதாரணமாக முதுமையை ஏற்றுக்கொள்ளாமல் அதை ஒரு பிரச்சனையாக மாற்றி என்றும் இளமையுடன் இருக்க முயன்று தோல்வி அடைந்து அதனால் துன்பப்படுவது மனிதன் மட்டுமே.

கடவுளின் படைப்பு ஒரு குறிப்பிட்ட அளவுடையது. ஒவ்வொரு மனிதனின் எண்ண உலகத்தின் அளவு அவனது அறிவின் தரத்தையும் அனுபவத்தையும் பொறுத்து மாறுபடும். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி போன்றவை இல்லாமல் வீட்டினுள் வளையவரும் மூதாட்டியின் உலகம் பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக வேலை செய்யும் ஒருவரது உலகத்தைவிட மிகவும் சிறியதாக இருக்கும்.

கடவுள் படைத்த பல்வேறு உணவுப்பொருட்களில் ஒரு சிலவற்றை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து இவை எனக்கு பிடித்தவை என்றும் மற்ற சிலவற்றை பிடிக்காதவை என்றும் நம் எண்ண உலகை வடிவமைக்கிறோம். இந்தப்பாகுபாடு இறைவன் செய்ததில்லை.

உலக நிகழ்வுகள் அனைத்தையும் அவரவர் தங்களுடைய அறிவு, மனப்பக்குவம், மனப்பான்மை, விருப்பு-வெறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து நல்லது-கெட்டது என்று தீர்மானம் செய்வதால் எண்ண உலகம் கடவுள் செய்த உலகத்திலிருந்து வேறுபடுகிறது.

ஒவ்வொருவரும் இது போல் உருவாக்கிய எண்ண உலகம் கடவுள் படைத்த உலகத்திலிருந்து வேறுபட்டிருப்பதால் இவற்றுள் எது சரி எது தவறு என்ற விவாதம் அனாவசியம். அனைவரும் வெவ்வேறு வண்ணக்கண்ணாடி வழியாக பார்ப்பதால் பொருளின் சரியான வண்ணம் யாருக்கும் தெரியாது. மேலும் கண்ணாடியை கழட்டிவிட்டு நேரடியாகப்பார்க்கும் சக்தியும் மனிதர்களுக்கு கிடையாது. ஏனெனில் கடவுள் திடமான பொருள் எதையும் படைக்கவேயில்லை. கடவுளின் மாயாசக்தி பொருள்களாக நம் புலன்களுக்கு தென்படுகின்றன. நம் ஒவ்வொருவருவது புலன்களின் தன்மையும் மனதின் பக்குவமும் மாறுபடுவதால் நாம் உருவாக்கும் எண்ண உலகம் வேறுபட்டுத்தான் இருக்கும். இல்லாத உலகை இருப்பதாக கற்பனை செய்துகொண்டிருக்கும் காரணத்தால் எது சரியான கற்பனை என்ற கேள்வியை கேட்க முடியாது. துன்பமில்லாத உலகம்தான் சரியானது.

துன்பங்களுக்கு காரணம் எண்ண உலகம்

மனிதர்களின் துன்பங்களுக்கு அவரவர் எண்ண உலகம் மட்டுமே காரணமே தவிர கடவுளின் உலகம் அவற்றிற்கு பொறுப்பல்ல. கடவுள் படைத்த உலகில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு நம்மை துன்புறுத்தும் சக்திகிடையாது.  

தேர்வு முடிவுகளை சரியாகப்பார்க்காமல் தான் தோல்வியடைந்து விட்டதாக நினைக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காரணம் உலகில் நிகழ்ந்த நிகழ்வு அல்ல. உண்மையில் தேறியிருந்தாலும் தேறவில்லை என்ற அறிவு அவன் செயலுக்கு காரணம். ஒருவேளை அவன் உண்மையிலேயே தேர்வில் தோல்வியடைந்திருந்தாலும் அது அவனை எவ்விதத்திலும் பாதிக்கும் சக்தியற்றது. தேர்வில் தோல்வியடைந்த அனைவரும் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் எண்ண உலகை எவ்விதம் உருவாக்கியுள்ளார்களோ அதன்படிதான் அவர்களது செயல்கள் அமையும். தேர்வில் தோற்ற ஒருவன் போனால் போகட்டும் என்று சிறிதுகூட கவலைப்படாமல் அடுத்த தேர்வில் தேர்ச்சிபெற வேண்டிய முயற்சியில் ஈடுபடுவான். மற்றவன் தனக்கு படிப்பு ஏறாது என்று முடிவு செய்து வேலை தேட ஆரம்பிப்பான். இவர்களைப்போலில்லாமல் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தவனின் செயலுக்கு அவனது எண்ணங்கள் மட்டுமே காரணம். தேர்வில் தோல்வியடைந்தது காரணமல்ல.

ஆழ்ந்த உறக்கம், தியானம் மூலம் அடையும் சமாதி, எண்ணங்கள் எதுவுமின்றி ஒரு காரியத்தில் முழு ஈடுபாடுடன் இருத்தல் ஆகிய நேரங்களில் நாம் துன்பம் கலவா இன்பத்தை அனுபவிக்கிறோம். ஏனெனில் இம்மாதிரி சமயங்களில் நாம் கடவுள் படைத்த உலகில் மட்டும் வாழ்கிறோம். போர்க்களத்தில் குண்டு பாய்ந்து இரத்தம் வீணாவதைகூட உணராமல் தொடர்ந்து சண்டையிடும் போர்வீரர்கள் நம் எண்ணங்கள் மட்டுமே நமது துன்பத்திற்கு காரணம் என்று நிரூபிக்கிறார்கள்.

நடந்து முடிந்த அல்லது நடக்கவிருக்கின்ற நிகழ்வுகள் மட்டுமே நம் துன்பத்திற்கு காரணம். இவ்விரண்டும் நம் எண்ண உலகைச்சேர்ந்தவை. கடவுள் படைத்த உலகம் நிகழ்காலத்தில் மட்டுமே இருந்து வருகிறது. இதை ஆதாரமாகக்கொண்டு நாம் உருவாக்கிய எண்ண உலகில் கடந்த காலம் மற்றும்  எதிர்காலம் மட்டுமே இருக்கிறது. நம் துன்பங்களுக்கு கடவுள் படைத்த உலகை காரணமாக காட்டுவது நம்முடைய பொறுப்பை தட்டிகழிக்கும் செயல். உலகில் ஏற்படும் நிகழ்வுகளை துன்பம் தரும் நிகழ்வுகளாக மாற்றுவது நாம்தான். கடவுளல்ல.

மேலும் நமக்கு பிடித்த மனிதர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து இவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று தீர்மானிக்கிறோம். இதற்கும் கடவுள் பொறுப்பல்ல. உலகப்பொருள்களின் மேல் நாம் கொள்ளும் பற்று நம்முடைய படைப்பு. இந்த பற்றுதல்தான் நமது அனைத்து துன்பங்களுக்கும் காரணம்.

கடவுள் படைத்த மாயையான உலகம் துன்ப கலப்பில்லாதது. மாற்றம் மற்றும் மறைதல் இல்லாமல் படைத்தல் இருக்க முடியாது. எனவே இளமை இனியது முதுமை கொடியது என்ற மனிதனின் எண்ணம் தவறு. துன்பம் கலவா இன்பத்துடன் வாழ வேண்டும் என்றால் நம்முடைய எண்ண உலகை சரிவர நிர்மாணித்தால் மட்டும் போதும்.

எண்ண உலகை சரியாக அமைப்பதன் அவசியம்

எண்ண உலகம்தான் நம் இன்பதுன்பங்களை தீர்மானிக்கிறது என்பதால் அதை சரியானபடி உருவாக்குவது அவசியம். இதற்கு அடிப்படைத்தேவை அறிவியல் அறிவு. இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்ற வேதம் கூறும் உண்மையை அறிவியல் கண்டுபிடுப்புகள் சந்தேகமற நிரூபித்துள்ளன. மேலும் நம் கற்பனையென்பதால் நமது எண்ணங்களும் மாயை. எனவே நம் எண்ணங்கள் மாயையான உலகில் தோன்றும் நிகழ்கால நிகழ்வுகளை மட்டும் பிரதிபலிக்கும்படி செய்தால் நம் எண்ண உலகம் சரியானபடி அமையும்.

கூட்டம் அதிகமிருக்கும் திருமணகூடங்களில் மணமக்களை நேரடியாக பார்க்க பல இடங்களில் மிகப்பெரிய திரை வைத்திருப்பார்கள். திரையில் பார்க்கும் காட்சி ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டு ஒளிபரப்பபடுகிறதா அல்லது தற்பொழுது மணமேடையில் நடப்பதை அப்படியே காட்டுகிறார்களா என்பதை படத்தை மட்டும் பார்த்து பார்வையாளர்களால் கண்டுபிடிக்கவே முடியாது. அதுபோல் மனதில் ஏற்படும் எண்ணங்களை மட்டும் வைத்துக்கொண்டு அது கடவுள் படைத்த பொருளால் ஏற்படுத்தப்பட்டதா அல்லது நாமாக உருவாக்கியதா என்று அறிய முடியாது. நிகழ்கால நிகழ்வுகள் நினைவுகளாக மாறாமல் நாம் வாழவேண்டும்.

பத்து வருடங்களுக்கு முன் நம்மை ஒருவர் அவமானபடுத்தியது இன்று அவர் பெயரை கேட்டதும் நினைவுக்கு வந்து மறுபடியும் சிலகணம் நாம் துன்பத்தில் ஆழ்வதற்கு அவரோ கடவுளோ காரணமல்ல. நாம் நம் எண்ணங்களுக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதுதான் நம் துன்பத்திற்கு காரணம்.

உதாரணமாக நான்கு நண்பர்கள் நடந்து செல்லும்பொழுது சாலையில் கிடக்கும் ஒரு தங்க நாணையத்தை பார்த்தால் அவர்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களின் அடிப்படையாக அந்த நாணயம் இருந்தாலும் யார் அதை எடுத்துக்கொள்கிறானோ அவன் மனதில் இன்பமான எண்ணமும், அதை நான் முதலில் எடுக்கவில்லையே என்று ஏங்குபவனின் மனதில் பொறாமையும், தான்தான் அதை முதலில் பார்த்தவன் என்று அதை சொந்தம் கொண்டாடுபவனின் மனதில் துவேஷமும், அதன் மீது விருப்பம் இல்லாதவன் மனதில் நண்பர்களின் நடத்தையை பாதிக்கும் தங்க நாணயத்தின் சக்தியை பற்றிய வியப்பும் ஏற்படும். இதுபோல் ஏற்படும் விதவிதமான எண்ணங்கள் அனைத்தும் கடவுள் படைத்த நாணையத்தினாலேயே ஏற்பட்டது என்றாலும் வேறுபட்ட உணர்வுகளுக்கு நாணயம் காரணமல்ல.

இலையில் பரிமாறப்பட்ட கல்யாண சாப்பாடு கடவுளின் படைப்பு. பத்து நாட்கள் சரியான உணவுகிடைக்காமல் தவிக்கும் பிச்சைக்காரன் மனதில் அது ஏற்படுத்தும் எண்ணம் ஒரு பணக்காரன் மனதில் ஏற்படுத்தும் எண்ணத்திலிருந்து வேறுபட்டது. உருவம், எடை, விலை ஆகியவை ஒன்றாக இருந்தாலும் போட்டியின் வெற்றிப்பரிசாக இருக்கும் கோப்பை அதை வென்றவன் மனதிலும் தோற்றவன் மனதிலும் வெவ்வேறான எண்ணங்களை ஏற்படுத்தும்.

ஜடப்பொருள்களுக்கு ஒவ்வொரு மனிதனின் மனதிலும் இதுபோன்ற வேறுபட்ட எண்ணங்களை ஏற்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தும் சக்தி கிடையாது என்பதால் மனதில் ஏற்படும் எண்ணங்களை கடவுள் படைத்த உலகம் தீர்மானிப்பதில்லை என்பது தெளிவாகிறது. நம் மனதில் ஏற்படும் எண்ணங்களை மற்றவர்கள் முடிவுசெய்ய அனுமதிப்பது நமது அறிவீனம். கண் காது போன்ற நம் புலன்களை பயன்படுத்தி நாம்தான் மற்றவர்களின் செயல்களை எண்ணங்களாக மாற்றுகிறோமே தவிர யாராலும் நமது மனதை திறந்து அதற்குள் தங்கள் விருப்பபடி எண்ணங்களை நிரப்பமுடியாது. சுயமாக சிந்தித்து தெளிவாக இருக்கும் மனிதர்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக எல்லோரையும் நம்பிவிட மாட்டார்கள். அப்படி ஒருவரை நம்பி அவர் நம் மனதில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தினார் என்றாலும் அவ்வாறு செய்ய அவரை அனுமதித்த குற்றம் நம்முடையதுதானே தவிர அவரை குறைசொல்லி பயனில்லை. ஆகவே மனிதன் உட்பட்ட மற்ற உயிரினங்களால் நமது மனதில் ஏற்படும் எண்ணங்களை தீர்மானிக்க முடியாது என்ற உண்மையை நாம் உணர்ந்து நமது மனதில் ஏற்படும் எண்ணங்களை நாம்தான் சரியானபடி அமைத்துக்கொள்ள வேண்டும்.

எண்ண உலகை சரியாக அமைக்கும் விதம்

உலகில் இன்பம் இல்லை என்பதை உறுதியாக அறியும்வரை எண்ண உலகை சரியாக அமைக்க முடியாது. இன்பமாக இருக்க பணம் அவசியம் என நினைக்கும் வரை விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில்தான் எண்ண உலகம் அமையும். எனவே வேதத்தை முறையாக படித்து ஆனந்தமயமான பரமன் நான் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின் கடவுள் படைத்த உலகத்தை மாற்றங்கள் ஏதுமின்றி ஏற்றுக்கொண்டு சரியான எண்ண உலகை அமைத்துக் கொள்ளலாம்.

நேரம், காலம் போன்றவை மனித கற்பனைகளே தவிர கடவுளால் படைக்கபட்ட உலகத்தைச்சேர்ந்ததல்ல. கடவுளின் படைப்பில் இருப்பது நிகழ்காலம் மட்டுமே. அதுவும் இந்தக்கணம் என்று நாம் சுட்டிக்காட்டும்பொழுது இறந்தகாலமாகிவிடும். உண்மையில் கடவுளின் படைப்பான நிகழ்காலத்தில் மட்டும் நாம் வாழ்ந்தால் இன்பமாகமட்டும்தான் நாம் இருப்போம். காதலெனும் உறவினிலே கடிகார நேரம் கிடையாது. காதலில்நாம் இன்பமாக இருக்கும் பொழுது நேரம் போவதே தெரிவதில்லை. ஏனெனில் நேரம் என்று ஒன்று இல்லவேயில்லை. காதல் முடிந்து கடவுளின் உலகிலிருந்து விலகி எண்ண உலகில் நுழைந்தபின்தான் நேரமாகிறது என்ற எண்ணம் ஏற்படும். நான் இப்பொழுது கோபமாக இருக்கிறேன் என்று ஒருவர் கூறினால் அவரது கோபம் முடிந்துவிட்டது என்று பொருள். காதல், கோபம் போன்ற உணர்வுகளில் மூழ்கியிருக்கும்பொழுது நாம் கடவுளின் உலகில் மட்டும் வசிக்கிறோம். எப்பொழுதுமே இதுபோல் எண்ண உலகில் நுழையாமல் நிகழ்காலத்தில் மட்டும் வாழ்ந்தால் அதுதான் துன்பம் கலவா இன்ப வாழ்வு. காதல் இனிமையானது கோபம் தவறானது என்று தரம் பிரித்து இது வேண்டும் அது வேண்டாம் என்ற எண்ண உலகைச்சேர்ந்த எதிர்பார்ப்புதான் துன்பம். இறந்தகால நினைவுகள் எதிர்கால எதிர்பார்ப்புகள் ஆகியவை எண்ண உலகில் மட்டும்தான்  இருக்கின்றன என்பதை புரிந்துகொள்வது சரியாக எண்ண உலகை அமைக்க உதவும்.

பெண் என்பவள் கடவுளின் படைப்பு. தாய், தங்கை, தாரம் போன்றவை மனிதனின் படைப்பு. இவ்வாறு உறவு முறைகளை ஏற்படுத்திக்கொள்ள கூடாது என்று இங்கு கூறப்படவில்லை. ஒவ்வொருவரும் கடவுளின் ஒரே படைப்பை வெவ்வேறு விதமாக பார்க்கிறோம் என்று அறிந்து கொண்டால் போதும்.

நாம் எவ்விதமான எண்ண உலகை உருவாக்கிக்கொள்கிறோம் என்பது நம் மனம் எவ்வளவு தூரம் செம்மையடைந்துள்ளது என்பதைப்பொறுத்தது. உலகில் இன்பம் இல்லை என்ற மனப்பக்குவம், வேதத்தை படித்து நான் பரமன் என்பதை அறிந்து கொள்ளும் புத்திகூர்மை, மாற்றங்கள் இல்லாமல் படைப்பு இல்லை என்பதை உணரும் அனுபவ அறிவு ஆகியவை நம் எண்ண உலகின் தன்மையை தீர்மானிக்கின்றன. எனவே எண்ண உலகை சீரமைக்க நம் மனதை செம்மை படுத்திக்கொள்ளவேண்டும்.

தீவிரவாதி அப்பாவியான மக்களை சுட்டுக்கொன்றான், மக்களின் வரிப்பணத்தை அமைச்சர் கையாடினார் என்பது போன்ற கடவுளின் உலகில் நடைபெறும் நிகழ்வுகளை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு நடப்பவை நல்லவையாகவே நடக்கின்றன என்று ஏற்றுக்கொண்டால் எண்ண உலகம் சரியாக உருவாக்கப்படும்.

சுட்டுக்கொல்லப்பட்ட மக்கள் அப்பாவிகள் அல்ல என்ற ஞானமும் முக்கியம். கர்ம வினைகளின் பயன்களை அனுபவிப்பதை யாராலும் தவிர்க்கவே முடியாது. தீவிரவாதி கடவுளின் கட்டளையை நிறைவேற்றவே துப்பாக்கியை எடுக்கிறான் என்பது வேதம் கூறும் உண்மை. எனவே கடவுளின் உலகில் எவ்வித தவறும் நடப்பதில்லை. தவறு என்று நாம் நினைப்பதுதான் தவறு. அந்த தவறுக்கு தண்டனைதான் நாம் அனுபவிக்கும் துன்பம்.

மாறும் உலகை புகைப்படம் மூலம் மட்டும் பார்ப்பதைப்போல் கடவுளின் உலகம் இப்படித்தான் இருக்கிறது என்று மாறாத எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்வது தவறு. தொடர்ந்து மாறும் ஒரு மனிதரை நல்லவர், வல்லவர், அழகானவர் என்று நாம் நினைப்பது உண்மையல்ல என்பதை உணர்ந்தால் எண்ண உலகை சரியாக கட்டிக்கொண்டிருக்கிறோம் என்று பொருள்.

எல்லா புகழும் இறைவனுக்கே என்பது புரிந்தால் யாரையும் புகழவோ இகழவோ தேவையில்லை. நடப்பது அனைத்தும் நடராஜனின் நடனம் என்று தெரிந்து கொண்டால் உலக நிகழ்வுகள் அனைத்தையும் ரசிக்கலாம்.

மேஜை மேல் வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் செயற்கையானவை என்று தெரிந்து கொண்டால் அவற்றை சாப்பிடவேண்டும் என்ற ஆசை வராது. அதே நேரத்தில் அவை எவ்வளவு நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன என்று பாரட்டவும் முடியும்.

முடிவுரை :

கடவுள் படைத்த மாயையான உலகில் வாழ்வதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட எண்ண உலகை படைக்கவேண்டும். நம் எண்ண உலகில் மட்டும்தான் நாம் வாழ்கிறோம் என்பதால் கடவுள் படைத்த உலகை மாற்றும் முயற்சியை கைவிட்டுவிட்டு நம்முடைய எண்ண உலகை ஒழுங்குபடுத்தினால் துன்பம் கலவா இன்பத்தை நம்மால் அனுபவிக்க முடியும்.

முக்தி என்ற  இலக்கை அடைய வேதம் என்ற வழிகாட்டி புத்தகத்தின் துணை அவசியம். வாழ்வின் இலக்கு முக்தியல்ல என்றாலும் கூட வேதம் காட்டும் வழியில் தான் வாழவேண்டும். நடப்பதற்கே குருடர்களுக்கு கோலின் துணை அவசியம். அது போல எண்ண உலகம் கடவுள் படைத்த உலகத்திலிருந்து வேறுபட்டு இருக்கிறது என்பதாலும் மனிதன் படைத்த எண்ண உலகில் அவன் மட்டும் தனித்து வாழ்கிறான் என்பதாலும் வேதத்தின் துணை அவசியம்.


பயிற்சிக்காக :

1. முக்தி வேண்டாதவர்கள் வேதத்தின் துணையை நாடவேண்டிய அவசியமென்ன?

2. நாய் கடவுளால் படைக்கப்படவில்லையா?

3. உண்மையில் எது சிகப்பு நிறம்?

4. எண்ண உலகின் அளவு என்ன?

5. மனிதன் உருவாக்கும் எண்ண உலகம் கடவுள் உருவாக்கிய உலகத்திலிருந்தும் மற்ற மனிதர்கள் உருவாக்கிக்கொண்டுள்ள எண்ண உலகங்களிலிருந்தும்  வேறுபடுவதற்கு காரணங்கள் யாவை?

6. மனிதனின் துன்பங்களுக்கு அவன் படைத்த எண்ண உலகம் மட்டும்தான் காரணம் என்பதை நிரூபிக்கவும்.

7. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் ஒருசிலர் தற்கொலை செய்துகொள்வதற்கு அவர்கள் தேர்வில் தோல்வியடைந்ததுதான் காரணம் என்பது சரியா?

8. எண்ண உலகை சரியாக அமைத்துக்கொள்ளவேண்டியதன் அவசியமென்ன?

9. எண்ண உலகை சரியாக அமைத்துக்கொள்வது எப்படி?

10. எண்ண உலகின் தன்மையை தீர்மானிப்பவை எவை?

சுயசிந்தனைக்காக :

1. வேதம் வாழ்வை எந்த நான்கு கட்டங்களாக பிரித்து அவற்றில் வாழும் வழிமுறைகளை விவரித்துள்ளது?

2. வேதம் சமுதாயத்தை எந்த நான்கு பிரிவுகளாக பிரித்து அவர்கள் செய்யவேண்டிய கடமைகளை வகுத்துள்ளது?

3. பார்லிமென்ட் என்ற கட்டிடத்தை உருவாக்கியது கடவுள்தான் என்றாலும் ஜனநாயகம் என்ற ஆட்சிமுறையை ஏற்படுத்தியது மனிதன்தானே?

Sunday, December 12, 2010

Lesson 143: No food restrictions when life is in danger (Brahma Sutra 3.4.28-31)

பாடம் 143: உயிர் வாழ உணவு
பாடல் 453- 456 (III.4.28-31)

சாந்தோக்ய மந்திரம் (5.2.1) ஒன்று ‘இதை அறிந்தவனுக்கு எது வேண்டுமானாலும் உணவாகலாம்’ என்று கூறுகிறது. நான் பரமன் என்பதை அறிந்தவன் மரணத்தை வென்றுவிடுவதால் உயிர் வாழ அவனுக்கு எவ்வித உணவுக்கட்டுப்பாடும் கிடையாது என்பதை புரிந்துகொள்ள உதவும் விதத்தில் ‘உணவை உண்பவன் என்று யாருமே கிடையாது’ என்ற உண்மையை இந்தப்பாடம் விவரிக்கிறது.

உண்பவன் இல்லை

எது இருக்கிறதோ அதை இல்லை என்று சொல்ல முடியாது. எது இல்லையோ அதை இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. உண்பவன் இல்லை என்று வேதம் கூறுவதிலிருந்து எதை நாம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அது உண்மையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அனுபவத்திலும் அனுபவிப்பவர் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் என்ற ஆகிய இரண்டும் இருக்கும். அனுபவிக்கும் பொருள்கள் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தாலும் அனுபவிப்பவர் மாறுவதேயில்லை. நம் கவனம் எப்பொழுதும் அனுபவிக்கப்படும் பொருள்களின் மேல் மட்டுமே இருப்பதால்தான் அனுபவங்கள் நிறைவை  தருவதில்லை. எனவே அனுபவிப்பவரை ஆராய்ந்து அப்படியொருவர் இல்லை என்ற தெளிவை அடைவது அவசியம்.

அனுபவிப்பவர் உணர்வுடன் கூடியவர்

‘கண்ணன் வெண்ணை உண்டான்’ என்பது ஒரு அனுபவம். ‘வெண்ணைப்பானை உரியில் தொங்குகிறது’ என்பது ஒரு அனுபவம் அல்ல. ஏனெனில் இதில் சம்பந்தப்பட்ட இரண்டும் ஜடப்பொருள்கள். ‘கண்ணன் ராதையை முத்தமிட்டான்’. இதில் இரு அனுபவங்களும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஒரு அனுபவிப்பவர் மற்றும் ஒரு அனுபவிக்கப்படும் பொருளும் இருக்கிறது. அனுபவத்தின் தன்மையை தீர்மானிப்பது அனுபவிப்பவரே தவிர அனுபவிக்கப்படும் பொருள் அல்ல. மேலும் ஒருவருடைய அனுபவம் மற்றவரது அனுபவத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. எனவே அனுபவிக்கப்படும் பொருள் உயிருள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சி அனாவசியம். அனுபவிப்பவர் மட்டும் உயிருள்ளவராய் இருக்கவேண்டும்.

அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர் முக்கியமானவர்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனுபவிக்கப்படும் பொருள்கள். ஒவ்வொரு பொருளிலிருந்தும் நாம் பெறும் அனுபவங்கள் வேறுபடுவதால் சிலவற்றை விரும்பி அடையவும் வேறு சிலவற்றை வெறுத்து ஒதுக்கியும் பொருள்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து அனுபவங்களை அனுபவிக்கும் அனுபவிப்பவர்தான் அனுபவிக்கும் அனைத்து பொருள்களை விட முக்கியமானவர். ஏனெனில் அனுபவம் ஏற்பட இந்த குறிப்பிட்ட பொருள்தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் பொருள்களுக்கு அனுபவத்தை கொடுக்கும் சக்தியும் கிடையாது. 

உதாரணமாக எவ்வளவு அழகாக வரையப்பட்ட ஓவியம் என்றாலும் அதை பார்ப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் சக்தியும் அது அழகானதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சுதந்திரமும் அனுபவிப்பவருக்கு மட்டும்தான் இருக்கிறது. உயிருள்ள பொருள்களுக்கும் இதே நிலைதான். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்பதை அவரைப்பார்ப்பவர்தான் தீர்மானிக்கிறாரே தவிர அவளுக்கு தான் மற்றவருக்கு கொடுக்கும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி கிடையாது.

திருமணம் செய்துகொள்வதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவேண்டும் என்று பெரும்பாலோர் நினைப்பதற்கு முக்கிய காரணம் திருமணத்திற்குபின் தான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற சுயநலம்தான். யாராலும் நமக்கு இன்பத்தை கொடுக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட பின்தான்  அடுத்தவரை அறிந்துகொள்ளுவதைவிட தன்னையறிந்து கொள்வது முக்கியம் என்பது புரியும். 

அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர்தான் முக்கியமானவர் என்பதை உணரும்பொழுது அனுபவிப்பவர் யார் என்பதை அறியவும் ஆராயவும் ஆவல் பிறக்கும்.

அனுபவிப்பவர் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்க முடியாது

அனுபவிப்பவர் யார் என்பதை அறியுமுன் அனுபவிக்கப்படும் பொருள் அனுபவிப்பவராக இருக்க முடியாது என்ற தெளிவு அவசியம். முற்றிலும் இருட்டான அறையில் இருக்கும் பொருள்களைப்பார்க்க நமக்கு ஒரு விளக்கின் துணை தேவை. நாற்காலி, புத்தகம் போன்ற அறையில் இருக்கும் பொருள்களின் இருப்பை நமக்கு காட்டித்தருவது விளக்கு. அந்த விளக்கின் இருப்பை காட்டுவது எது? நாற்காலி என்பது தவறான விடை என்பதில் நமக்கு ஒரு தெளிவு அவசியம்.

அது போல நம்முடைய உடல் மற்றும் மனம் போன்றவற்றின் இருப்பை நாம் உணர்வதால் அவை அனுபவிப்பவராக இருக்க முடியாது. எனவே அனுபவிப்பவர் யார் என்ற கேள்விக்கு நம் உடலையும் மனதையும் தவிர்த்த வேறு ஒரு பதிலைத்தான் நம் ஆராய்ச்சியின் முடிவு காட்டவேண்டும்.

அனுபவிப்பவர் ஆத்மாவா அகம்பாவமா?

மனதில் தோன்றும் நான் அல்லது எனது என்ற எண்ணங்களின் தொகுப்பான அகங்காரம் ஜடம் என்பதால் அது அனுபவிப்பவராக இருக்க முடியாது. எனவே உணர்வுமயமான பரமன் அல்லது பரமனின் நிழலுருவான அகம்பாவம் ஆகிய இரண்டையும் ஆராய்வதன் மூலம் அனுபவிப்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள முயலலாம்.

எவ்வித மாற்றத்திற்கும் உட்படாத பரமன் இவ்வுலகுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் அதே சமயத்தில் அதன் இருப்புக்கு ஆதாரமாக இருப்பவன். என் உடலுக்கும் மனதிற்கும் ஆதாரமான பரமனை ஆத்மா என்று அழைக்கலாம்.

அகம்பாவம் என்பது நம் மனதில் தோன்றும் ஆத்மாவின் பிரதிபிம்பம். ஆத்மா மட்டுமே உணர்வுமயமானது. இவ்வுணர்வை நம் மனம் பிரதிபலிக்கும்பொழுது தோன்றும் அகம்பாவம் நம் உடலுக்கு உயிர்கொடுக்கிறது. நம் உடலும் மனமும் ஜடப்பொருள்களாய் இருந்தாலும் அகம்பாவம் என்ற உணர்வின் பிரதிபிம்பம் இவற்றிற்கு இவ்வுலகப்பொருள்களை அனுபவிக்கும் திறனை கொடுக்கிறது.

பௌர்ணமி இரவில் தோன்றும் நிலவு தானே ஒளியை கொடுக்கும் சக்தியற்றது என்றாலும் சூரியனின் ஒளியை பிரதிபலித்து அதன் மூலம் உலகத்தை பிரகாசிக்க வைப்பதைப்போல உணர்வற்ற மனம் என்ற ஜடப்பொருள் உணர்வுமயமான ஆத்மாவின் பிரதிபிம்பமான அகம்பாவத்தின் துணையுடன் உலகப்பொருள்களை அனுபவிக்கிறது. நிலவு என்ற ஜடப்பொருளை மனம் என்ற ஜடப்பொருளுக்கும், சூரியனின் ஒளியை ஆத்மாவுக்கும் நிலவின் ஒளியை அகம்பாவத்துடனும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் உண்மையில் இரவை பகலாக்குவது சூரிய ஒளி என்று தீர்மானிப்பது போல உண்மையில் உலகப்பொருள்களை அனுபவிப்பவன் ஆத்மா என்று முடிவுசெய்யவேண்டிவரும். ஆனால் அனுபவிக்கும் பொருளுக்கும் ஆத்மாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் அனுபவம் ஆத்மாவில் மாற்றம் எதையும் ஏற்படுத்துவதில்லை. எனவே நம் ஆராய்ச்சி தொடர்கிறது.

ஆத்மாவும் அகம்பாவமும்

ஆத்மாவையும் அகம்பாவத்தையும் ஒப்பிட்டு அவற்றின் தன்மையை தனித்தனியாக புரிந்து கொள்வது அவசியம். இதை வித்யாரண்ய சுவாமிகள் பின்வரும் உதாரணம் மூலம் விளக்குகிறார்.

உதாரணம்: சிறுவர்கள் தங்கள் கைகளில் உள்ள ஒரு சிறு கண்ணாடித்துண்டின் மூலம் சூரிய ஒளியை பிரதிபலித்து எதிரில் இருக்கும் சுவரில் சிறு சிறு வட்ட ஒளியை ஏற்படுத்தி அதை இங்குமங்கும் நகர்த்தி விளையாடுகிறார்கள்.

சுவர் – உலகம்
கண்ணாடி – மனம்
சூரிய ஒளி – ஆத்மா அல்லது பரமன்
பிரதிபலிக்கப்பட்ட ஒளி – அகம்பாவம்
சுவற்றில் தோன்றும் ஒளிவட்டங்கள் – பருவுடல்

1. சுவரின் மீது இரு வேறு ஒளி படுகிறது. சூரிய ஒளி முழு சுவரையும் வெளிச்சப்படுத்துகிறது. பிரதிபலிக்கப்பட்ட ஒளி சுவரின்மீது தோன்றும் சிறு சிறு வட்டங்களை ஒளிர்விக்கின்றன.

உலகத்தையும் இருவேறு பொருள்கள் இயக்குகின்றன. உலகம் முழுவதையும் வியாபித்து அதன் இருப்பிற்கு ஆதாரமாய் இருப்பது பரமன். ஒவ்வொரு உயிரையும் உயிரினமாய் காண்பித்து செயல்படுத்துவது அகம்பாவம்.

2. ஒளியூட்டப்பட்ட சுவற்றில் இங்குமங்கும் ஓடும் ஒளிவட்டங்களை இயக்கும் சிறுவர்கள் இது நான், என்னைப்பிடி பார்க்கலாம் என்று கூறி தங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துடன் ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள்.

நம் பருவுடல் ஜடமான உலகின் ஒருபகுதி. அகம்பாவம் இருப்பதால் அது உயிருடன் இருப்பதுபோல தோற்றமளிக்கிறது. நான்தான் இந்த அகம்பாவத்துடன் கூடிய உடல் என்றும் நான் உலகிலிருந்து வேறுபட்டவன் என்றும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ‘இது நான்’ என்று ஒரு ஒளிவட்டத்தை காட்டும் சிறுவனுக்காவது அது வெறும் விளையாட்டுதான் என்ற அறிவு இருக்கிறது. ஆனால் நான் என்ற சொல் இந்த உடலை குறிப்பதாக உண்மையிலேயே நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

3. உண்மையில் இருப்பது சூரிய ஒளி மட்டுமே. ஆனல் சுவற்றில் இருவேறு வகை ஒளிகள் தென்படுவதால் நாம் அவற்றை தனிப்படுத்தி பேசவேண்டிய அவசியம் நேருகிறது. ஆயினும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்படுவதும் சூரிய ஒளிதான் என்பதால் அனைத்தும் ஒன்றே என்பதை மறந்து விடக்கூடாது.

உணர்வு மயமாக இருப்பது பரமன் ஒருவனே. அகம்பாவம் என்பது பரமனின் பிரதிபலிப்பு என்பதால் அதற்கு ஒரு தனிப்பட்ட உண்மைத்துவம் கிடையாது. எனவே நான் என்ற சொல்லுக்கு உணர்வு மயமான ஆத்மா என்று மட்டும்தான் பொருள். உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களின் ஆதாரமாக இருப்பது நான் என்னும் ஒரே ஆத்மா என்றாலும் விளையாட்டுக்காக ஒவ்வொருவரையும் வெவ்வேறாக கருதி உறவாடுவதில் தவறில்லை. விளையாட்டு என்பதை மறந்து பக்கத்துவீட்டுக்காரர் உண்மையிலேயே நம்மிடமிருந்து வேறான ஒருவர் என்று நினைத்துவிடுவதால்தான் விளையாட்டு வினையாகிறது.

4. முழுசுவரும் சூரியனின் நேரடி ஒளியால் பிரகாசப்படுத்தப்பட்டு இருந்தாலும் கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட சூரியஒளி ஏற்படுத்தும் சிறு வட்டங்கள்தான் அனைவரது கவனத்தையும் கவருகின்றன. இந்த வட்ட ஒளி எஞ்சிய சுவற்றை விட அதிகபிரகாசமாயும் குறிப்பிட்ட வடிவத்துடனும் இருப்பதே இதற்கு காரணம்.

வட்டமான ஒளி சுவற்றை நேரடியாக ஒளிர்விக்கும் சூரிய ஒளியை மறைப்பது போல நம் இருப்புக்கு ஆதாரமான ஆத்மாவை நம் மனதில் பிரதிபலிக்கப்பட்ட அகம்பாவம் மறைத்துவிடுகிறது.  எனவேதான் நான் ஆத்மா என்ற உண்மைக்கு பதில் நான் உயிருடனிருக்கும் உடல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

5. சூரிய ஒளி இல்லாவிட்டால் சிறுவர்கள் விளையாடவே முடியாது என்றாலும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கும் ஒளிக்கு முக்கியத்துவம் கொடுத்து சூரிய ஒளியை அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை. சூரிய ஒளியின் அவசியத்தையும் அது தங்கள் விளையாட்டுக்கு உதவும் விதத்தையும் அவர்கள் அறிவதில்லை.

பரமன்தான் உலகின் ஆதாரம் என்றாலும் அகம்பாவத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து ஆத்மாவை பொருட்படுத்துவதேயில்லை. அகம்பாவம் நம் உடலுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருப்பதால் உலகில் இயங்க ஆத்மாவின் அவசியத்தை நாம் உணர்வதில்லை. உண்மையில் ஆத்மாதான் நம் உடல் உட்பட்ட உலகில் உள்ள அனைத்து பொருள்களுமாக தோன்றிக்கொண்டிருக்கிறது.

6. சூரிய ஒளி அவசியம். கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஆடம்பரம். அவசியத்தை விட ஆடம்பரம் முக்கியமானது என்று நினைப்பது அறியாமை.

மனிதர்கள் ஆத்மாவை விட்டு விலகி இருக்கமுடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் அகம்பாவம் இருப்பதில்லை. தன்னை மறந்து ஒரு காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் பொழுதும் அகம்பாவம் ஆத்மாவுடன் ஒன்றிவிடுகிறது. எனவே நம்மிடம் இருக்கும் நம் உடல், மனம், அதில் பிரதிபலிக்கும் அகம்பாவம் ஆகியவை ஆடம்பரப்பொருள்கள் என்பதை உணர்ந்தால் உலகில் உள்ள வேறு எந்த பொருள்களும் அவசியமானவை என்று தோன்றாது.

7. சூரிய ஒளி நிரந்தரமானது. பிரதிபலிக்கபட்ட ஒளி தற்காலிகமானது.

ஆத்மா நிரந்தரமானது. அகம்பாவம் பிறப்பு-இறப்பு என்ற சுழலுக்கு உட்பட்டது.

8. சூரிய ஒளி எல்லா இடத்திலும் பரவியிருப்பது. கண்ணாடியின் ஒளி ஒரு சிறு வட்டத்திற்குள் அடங்கியது.

ஆத்மா அளவற்றது. அகம்பாவம் ஒரு உடல், மனம் என்ற சிறிய அளவுக்குள் கட்டுப்பட்டது.

9. சிறுவர்கள் விளையாடாதபொழுதும் சுவற்றை ஒளிர்விப்பது சூரிய ஒளி. மேலும் அவர்கள் விளையாடும்பொழுது சுவரில் தோன்றும் ஒளிவட்டங்களிடையே இருக்கும் சுவரை ஒளிப்படுத்துவதும் சூரிய ஒளியே. கண்ணாடியிலிருந்து பிரதிபலிப்பதும் சூரிய ஒளியே. எனவே அனைத்திற்கும் அடிப்படை சூரிய ஒளி மட்டுமே.

பிரபஞ்சம் அழிந்தபின்னும் இருப்பவன் பரமன். பிரபஞ்சம் இருக்கும்பொழுது ஜடப்பொருள்களின் ஆதாரமான பரமன்தான் அகம்பாவம் என்ற பிரதிபிம்பத்தை ஏற்படுத்தி உயிரினங்களுக்கும் ஆதாரமாயிருக்கிறான்.

10. ஒளி என்ற சொல்லுக்கு ஒரே பொருள் சூரிய ஒளி மட்டுமே.

உணர்வு என்ற சொல்லுக்கு ஒரே பொருள் ஆத்மா மட்டுமே.

ஆத்மாவிற்கும் அகம்பாவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்த பின் அனுபவிப்பவர் ஒவ்வொரு அனுபவத்தையும் அனுபவிக்க இவ்விரண்டின் பங்கு என்ன என்பதை அறிய நம் எண்ணங்களை ஆராய வேண்டும்.

இரு வகை எண்ணங்கள்

எண்ணப்படும் பொருள்களின் அடிப்படையில் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்புற எண்ணங்கள் மற்றும் உட்புற எண்ணங்கள் என இருவகையாக பிரிக்கலாம். உலகில் உள்ள பொருள்களைப்பற்றிய எண்ணம் வெளிப்புற எண்ணங்கள். வெளிப்புற எண்ணங்களைப்பற்றிய எண்ணம் உட்புற எண்ணம்.

மல்லிகையின் மணத்தை நுகரும்பொழுது மனதில் ஏற்படும் எண்ணம் வெளியுலகில் இருக்கும் பூவைப்பற்றியது என்பதால் அது வெளிப்புற எண்ணம். எனக்கு மல்லிகையின் மணம் மிகவும் பிடிக்கும் என்ற எண்ணம் இந்த வெளிப்புற எண்ணத்தைப்பற்றியது என்பதால் அது உட்புற எண்ணம்.

கோபம், சலிப்பு, அன்பு, ஆவல் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் (emotions) உட்புற எண்ணங்களே. கண் காது போன்ற ஐந்து புலன்களையும் செயல்படுத்தாமல் தியானம் செய்ய அமர்ந்திருக்கும்பொழுது மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் உட்புற எண்ணங்கள்தாம். 

நேரடியாக அனுபவிக்காத பொருளைப்பற்றிய எண்ணம் படிப்பது அல்லது கேட்பதன் மூலம் ஏற்பட்டாலும் அது வெளிப்புற எண்ணமே. எனவே தெரியாத பொருளைப்பற்றிய வெளிப்புற எண்ணம் ஏற்படலாம். ஆனால் உட்புற எண்ணம் இதுபோல தெரியாதபடி இருக்கமுடியாது.  வெளிப்புற எண்ணங்களைப்பற்றிய எண்ணங்கள்தான் உட்புற எண்ணங்கள். எனவே ஒரு வெளிப்புற எண்ணம் இல்லாமல் அதைப்பற்றிய உட்புற எண்ணம் ஏற்பட வாய்ப்பில்லை.

நேரடியாக பார்க்காவிட்டாலும் கடிதம் மூலம் காதலிக்கும் மனிதரைப்பற்றிய எண்ணம் வெளிப்புற எண்ணம். அந்த மனிதரை காதலராக மாற்றியது உட்புற எண்ணம். காதல் ஒரு அனுபவம். இதுபோல் எந்த அனுபவத்தை பெற வேண்டும் என்றாலும் அதற்கு அடிப்படையாக சில எண்ணங்கள் ஏற்படவேண்டும். ஒருவரைப்பற்றிய எவ்வித எண்ணமும் இல்லாமல் அவரைக்காதலிக்க முடியாது. எனவே முதலில் வெளிப்புற எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்றும் அதன் பின் அவை எவ்வாறு உட்புற எண்ணங்களான அனுபவங்களுக்கு ஆதாரமாய் இருக்கின்றன என்பதையும் ஆராய வேண்டும். அனுபவங்கள் ஏற்பட ஐந்து புலன்கள் மூலம் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு ஒரு பொருளைப்பற்றிய அறிவு அல்லது எண்ணத்தை பெறவேண்டும்.

வெளிப்புற எண்ணங்கள் ஏற்படும் விதம்

நான் (அறிபவன்) என் எண்ணங்களை கண்கள் (புலன்) மூலம் அறியப்படும் பொருளிடம் அனுப்பி அதைப் போன்ற ஒரு வடிவத்தை எண்ணமாக என் மனதில் திரும்பப்பெற்று அந்தப்பொருள் பானை என்பதை அறிகிறேன்.

அந்தப்பொருளைப்பார்ப்பதற்கு முன் அது என்ன என்பதை நான் அறியாதவன். அதை பார்த்தபின் அதை அறிந்தவன். என் கண்கள், மனம், எண்ணங்கள் ஆகியவை பானையைப்போல் ஜடப்பொருள்கள். ஜடப்பொருள்கள் ஒன்றுடன் ஒன்று உறவாடுவதால் எவ்வித அனுபவமோ அறிவோ ஏற்படாது. எனவே நான்  அறியாதவன் என்ற நிலையில் இருந்து அறிந்தவன் என்ற நிலைக்கு மாற எனக்கு அகம்பாவத்தின் துணை தேவை.

என் எண்ணங்கள் பானையை நோக்கிப்பயணிக்கும்பொழுது அதனை முன்னடத்தி செல்வது அகம்பாவம். ஈட்டியின் முனையில் கூரான இரும்பு இல்லாவிட்டால் அது இலக்கைத்துளைக்காது. அது போல நான் என்ற உணர்வுடன் செல்லாவிட்டால் நம் எண்ணங்களால் எவ்வித பொருளையும் அறியமுடியாது. உதாரணமாக அருகில் உள்ள ‘கடிகாரத்தில் எவ்வளவு எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன’ என்ற கேள்விக்கு பதில் தெரியவேண்டுமானால் நான் என்ற உணர்வுடன் நம் எண்ணங்கள் செயல்பட்டு கடிகாரத்தை கவனமாகப்பார்க்க வேண்டும். அதன்பின்  ‘நேரம் என்ன’ என்ற கேள்வியை கேட்டால் நாம் மறுபடியும் கடிகாரத்தை பார்க்க வேண்டியிருக்கும். ஏற்கனவே பார்த்தபோது அது காட்டும் நேரம் கண்ணில் தெரிந்திருந்தாலும் அது மனதில் பதியாததற்குக்காரணம் ஈட்டிமுனையில் கூரான இரும்பு இல்லாததுபோல் நம் எண்ணங்களின் முன் அகம்பாவம் இல்லாததுதான். எனவே அறியாதவனை அறிந்தவனாக மாற்ற அகம்பாவத்தின் உதவி அவசியம். நம் கண், மனம், பானை போன்ற ஜடப்பொருள்கள் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பது ஆத்மா.

ஒரு பொருளை அறிகிறோம் அல்லது அறியவில்லை என்பதை அறிவது ஆத்மா. அறியாத பொருளை அறிந்த பொருளாக மாற்றுவது அகம்பாவம். எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் எதனுடனும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஆத்மா அறியாதவனை அறிந்தவனாக மாற்றும் செயலை செய்யும் சக்தியற்றது. எனவே பானையை நாம் அறிந்து கொள்ள அகம்பாவத்தின் துணை அவசியம்.

கம்புயூட்டர் இயங்க ஆதாரமாக இருக்கும் மின்சாரம் கணக்கு போடும் திறன் இல்லாதது. அதுபோல அனைத்து வேலைகளையும் அகம்பாவம் செய்வதற்கு ஆதாரமாக மட்டும் இருப்பது ஆத்மா.

ஒரு பொருளைப்பற்றிய அறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை அகம்பாவத்தால் தீர்மானிக்கமுடியாது. ஏனெனில் அகம்பாவம் தொடர்ந்து மாற்றமடையும் தன்மையுள்ளது. பானையை அறியாத அகம்பாவம் பானையை அறிந்த அகம்பாவமாக மாறிவிடுவதால் இந்த மாற்றத்தை அறிய மாறாத ஆத்மா அவசியம். மேலும் அகம்பாவம் வந்து போகும் தன்மையுடையது. ஆழ்ந்த உறக்கம், சமாதி நிலை மற்றும் தன்னை மறந்து நாம் ஒரு வேலையை செய்யும்நேரம் ஆகிய சமயங்களில் அகம்பாவம் இருப்பதில்லை. ஆத்மா நிலையானது.

ஜடப்பொருள்களான நம் மனம் மற்றும் உடல் ஆகியவை இடைவிடாமல் ஏதேனும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் உயிருள்ளவைகளாக இருப்பதற்கு அகம்பாவம் அவசியம். எவ்வித செயலிலும் ஈடுபடாமல் எதனுடனும் தொடர்பு கொள்ளாமல் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பது ஆத்மா.

இது பானை என்று அறிந்து கொள்ள மாற்றமடையும், நிலையில்லாமல் தொடர்ந்து செயல்புரியும் அகம்பாவம் அவசியம். நான் பானையை அறியவில்லை அல்லது அறிகிறேன் என்பதை அறிந்து கொள்ள மாறாத, நிலையான, எவ்வித செயலிலும் ஈடுபடாத ஆத்மா அவசியம்.

உட்புற எண்ணங்கள் ஏற்படும் விதம்

விலங்குகளுக்கு உட்புற எண்ணங்கள் ஏற்படுவதில்லை. பசிக்கும்பொழுது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது வெளிப்புற எண்ணம். எந்த உணவை சாப்பிடலாம் என்று யோசிப்பது உட்புற எண்ணம். நிகழ்காலத்தில் ஏற்படும் வெளிப்புற எண்ணங்களை அடிப்படையாகக்கொண்டு இது இப்படி நடந்திருக்க கூடாது என்று கடந்தகால நிகழ்வுகளைப்பற்றியும் நாளை என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்காலத்தைப்பற்றியும் நமது மனதில் உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன. மனிதனின் மனம் மட்டுமே பரமனின் மூன்று தன்மைகளையும் முழுமையாக பிரதிபலிப்பதால் அறிந்து கொள்ளவும், அறிந்ததை அடையவும், அடைந்ததை அனுபவிக்கவும் தேவையான உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன. இவ்வெண்ணங்களை அடையாளம் காட்டுவது அகம்பாவம்.

பானையை ஒரு அட்டை பெட்டியினுள் வைத்து மூடி இதனுள் என்ன இருக்கிறது என்று கேட்டால் அதனுள் ஒரு பொருள் இருக்கிறது என்று மட்டும் தெரியவருமே தவிர அது என்ன பொருள் என்று தெரியாது. வெளிப்புற எண்ணத்திற்குண்டான பொருள் தெரியாத ஒன்றாக இருக்கலாம். இதுபோல் பொருள் தெரியாத உட்புற எண்ணங்கள் இருக்கமுடியாது. ஏனெனில் நம் எண்ணங்களை அடிப்படையாக கொண்டு தோன்றுவதுதான் உட்புற எண்ணங்கள் என்பதால் இவற்றின் தோற்றம், மறைவு ஆகியவற்றை தெளிவாக நாம் அறிவோம். உதாரணமாக மனதில் கோபம் ஏற்பட்டால் அது நமக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

வெளிப்புற எண்ணத்தை ஒளிர்விப்பது ஆத்மா மட்டுமே. உட்புற எண்ணத்தை அகம்பாவமும் சேர்ந்து ஒளிர்விக்கிறது. சுவரில் தோன்றும் ஒளிவட்டங்கள் எஞ்சிய சுவற்றைவிட பிரகாசம் கூடியதாக இருப்பதற்கு அந்த இடங்களில் சூரிய ஒளி மற்றும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஆகிய இரு ஒளிகள் இருப்பதுதான் காரணம். அதுபோல உட்புற எண்ணங்கள் ஆத்மா மற்றும் அகம்பாவம் ஆகிய இரண்டின் மூலமும் பிரகாசப்படுவதால் நமக்கு நம் கோபம், கருணை போன்ற உணர்வுகள் ஏற்படுவது தெளிவாகத்தெரிகிறது.

நெருப்பு ஒரு இரும்புத்துண்டு முழுதும் பரவி அதை ஒளிர்விக்கும். ஒளிர்விக்கப்பட்ட இரும்புத்துண்டு மற்ற பொருள்களை விளக்கும் அளவுக்கு ஒளிராது. அதுபோல அகம்பாவம் நம் மனதில் தோன்றும் உணர்வுகளை மிகத்தெளிவாக காட்டுவதுபோல் உலகத்தில் உள்ள மற்ற பொருள்களை ஒளிர்விக்க முடியாது. அகம்பாவம் ஒரே ஒரு உடலை மட்டும் உயிருடன் காட்டும்.

ஆத்மா நம் மனம் முழுவதும் பரவி அதை அகம்பாவமாக ஒளிர்விக்கும். அதுமட்டுமல்லாமல் ஆத்மா உலகத்தில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பதுடன் அவற்றில் சிலவற்றை அகம்பாவமாக மாற்றி அவை உயிரினங்களாக செயல்படச்செய்யும் சக்தியும் கொண்டது.

எனவேதான் ஆத்மாவை விட்டுவிட்டு அகம்பாவத்தை நான் என்பதற்கு பொருளாக கொண்டால் ஒரு குறிப்பிட்ட உடல் மற்றும் மனதின் கட்டுப்பாட்டுக்குள் நாம் அடைபட வேண்டும். அகம்பாவம் வெறும் நிழலுருவம் என்பதால் நம் உண்மை உருவான ஆத்மாவை நான் என்று அறிந்து கொண்டால் இவ்வுலகின் ஆதாரம் நான் என்றும் அனைத்து உயிரினங்களும் உயிருடன் இருப்பது என்னால்தான் என்றும் தெரியவரும்.

ஆழ்ந்த உறக்கத்தில் அகம்பாவம் மறைந்துவிடும். ஆனாலும் விழித்தெழிந்தவுடன் உறங்கும்பொழுது எதையும் அறியவில்லை என்பதை அறிந்திருக்கிறோம். இதற்கு காரணம் எவ்வித எண்ணங்களும் மனதில் இல்லை என்பதை அறியும் ஆத்மா.

அனுபவிப்பவர் யார்?

உடலும் மனமும் ஜடப்பொருள்கள் என்பதால் அவை அனுபவிப்பவன் அல்ல. ஆத்மா எவ்வித செயலும் செய்ய இயலாதது என்பதால் அனுபவிப்பவன் ஆத்மாவும் அல்ல. எஞ்சியிருப்பது அகம்பாவம் மட்டுமே. அகம்பாவம் நிழலுருவம் என்பதால் அனுபவிப்பவன் என்பது ஒரு கற்பனை. காந்தி நம்மை நேருக்கு நேர் பார்த்து புன்னகைப்பதுபோல் ஒரு புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தால் ‘என்னைப்பார்ப்பது யார்’ என்ற கேள்விக்கு காந்தி என்று பதில் சொல்ல முடியாது. அது போல் அனுபவிப்பவன் என்பது ஒரு பொய்யான தோற்றம். நான் யார் என்ற அறிவு இல்லாத அஞ்ஞான நேரத்தில் நான்தான் அனுபவிப்பவன் என்று உரிமைபாராட்டி அதனால் துன்பத்துக்கு ஆளாவதை தவிர்க்க நான் யார் என்ற ஆராய்ச்சி மூலம் அறியாமையை அகற்றி முக்தி பெறவேண்டும்.

அனுபவிப்பவன் யார் என்ற ஆராய்ச்சி முக்திபெறுவதற்காகவேதவிர உண்மையில் அனுபவிப்பவன் யார் என்று கண்டுபிடிப்பதற்காக அல்ல. கயிற்றை பாம்பு என்று தவறாக நினைத்துவிட்டோம் என்பது புரிந்தபின் அந்தப்பாம்பு எப்பொழுது உருவானது, அது விஷமுள்ளதா என்பது போன்ற ஆராய்ச்சி அனாவசியம்.

முக்தி பெறுவது எப்படி?

அகம்பாவத்தால் உயிரூட்டப்பட்ட உட்புறஎண்ணங்கள் மனதை ஆக்ரமிக்கின்றன என்பதை புரிந்துகொண்டு அவற்றை பொருட்படுத்தாமல் நான் ஆத்மா என்பதை உணர்வது முக்தி. எனவே முக்தி நமக்கு அன்னியமானது அல்ல. ‘நீ இப்பொழுது என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்’ என்று யாரைப்பார்த்துக் கேட்டாலும் கிடைக்கும் பதில் ‘ஒன்றுமில்லை’ என்பதுதான். எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் நம் மனதில் தோன்றுகின்றன. எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நாம் பொதுவாக கவனிப்பதே இல்லை. இதுபோல் திடீரென ஒரு கேள்வியை எதிர்கொள்ளும்பொழுது இந்த இடைவெளியை நாம் கவனிக்கிறோம். எனவேதான் ‘ஒன்றுமில்லை’ என்று பதில் சொல்கிறோம். ஒன்றுமில்லாமல் என்றுமிருப்பதுதான் ஆத்மா என்கிற நான் என்று அறிவதுதான் முக்தி.

அதேபோல் ‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு நன்றாக இருக்கிறேன் என்பதுதான் உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் பதிலும். இதற்கும் காரணம் அது உண்மை என்பதுதான். நான் என்பதன் பொருள் ஆனந்தமயமாக என்றும் இருக்கும் ஆத்மா. இரு எண்ணங்களுக்கு இடையே ஏற்படும் இடைவெளியில் தன்னை காட்டிக்கொள்வது ஆத்மா. அகம்பாவத்தால் எண்ணங்களை மட்டுமே அறிய முடியும். எண்ணங்கள் இல்லாத ஜடமான மனதினிடம் நான் இந்த உடல் அல்லது மனம் என்ற அறிவு இருப்பதில்லை. எனவே நம் உண்மை உருவான ஆத்மாவின் நிலையை ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்ற பதிலாக கொடுத்துவிட்ட அடுத்த நிமிடம் கால் முட்டிவலி பற்றிய எண்ணத்தை அகம்பாவம் காட்டிக்கொடுக்க ‘ஆனால் முட்டிவலிதான் தாங்கமுடியவில்லை’ என்பதை பதிலுடன் சேர்த்துக்கொள்கிறோம். கேள்விகேட்டவர் அங்கிருந்து இன்னும் நகராவிட்டால் அகம்பாவம் தொடர்ந்து வேலை செய்து எப்படி மகன் சரியாகபடிப்பதில்லை, வேலையில் பதவிஉயர்வு கிடைக்கவில்லை என்பது போன்ற பல பிரச்சனைகளுடன் நான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று முதலில் கூறிய பதிலுக்கு முற்றிலும் எதிர்மாறான பதிலை சொல்லிக்கொண்டிருப்போம்.

மகனின் மதிப்பெண்களை பார்க்கும்பொழுது ஏற்பட்ட எண்ணம் வெளிப்புற எண்ணம். அதை அடிப்படையாக கொண்டு அவன் சரியாகப்படிப்பதேயில்லை என்று முடிவு செய்து சோகத்தில் ஆழ்வதற்கு காரணம் நாமே உருவாக்கிய உட்புற எண்ணம்.

எவ்விதமான உணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன என்பதைப்பொறுத்துதான் வாழ்க்கையின் தரம் நிர்ணயிக்கிப்படுகிறது. எவ்வித உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை உலகம் தீர்மானிப்பதில்லை. வெளிப்புற எண்ணங்களை மட்டுமே உலகம் தீர்மானிக்கிறது. அவற்றை அடிப்படையாக கொண்டு எவ்வித உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன என்பது நம் அறிவை மட்டும் பொருத்தது.

எனவே முக்தியை பெறுவதற்கு நாம் எவ்வித செயலையும் செய்ய வேண்டாம். அனுபவிப்பர் நான் அல்ல என்றும் உலகில் உள்ள ஜடப்பொருள்களின் தொடர்ந்த இயக்கத்தில் அகம்பாவத்தால் ஒளிர்விக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட உடலை என்னுடையது என்று நினைப்பது அறியாமை என்றும் அறிந்தால் நாம் முக்தியடைந்துவிடுவோம்.

வாழ்வின் பிரச்சனைகளுக்கு காரணம்

தானே உருவாக்கிக்கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே இல்லை. சும்மா இருப்பது சொர்க்கம். சும்மா இருந்தால் போர் அடிக்கிறது என்று நினைப்பதற்கு காரணம் ஆனந்தம் உலகில் இருக்கிறது என்று நினைக்கும் அறியாமையே.  தொலைக்காட்சியில் தொடர்களைப்பார்ப்பது, கிரிகட் கால்பந்து போன்ற விளையாட்டுக்களை பின்பற்றுவது, விலையுயர்ந்த வாகனம் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குதல்  போன்ற செயல்களால் மனதில் கற்பனையான ஒரு ஆவலை ஏற்படுத்திக்கொண்டு அது நிறைவேறியதும் தற்காலிகமாக ஏற்படும் நிம்மதி மற்றும் மகிழ்ச்சிதான் உண்மையானது என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.

அமைதியாக இருக்கும் மனதை அலைபாயவிட்டு அதன் பின் அமைதிபடுத்தும் செயல் கை சுத்தமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க சாக்கடையில் கைவிட்டு கையை  அசிங்கப்படுத்திவிட்டு அதன்பின் சுத்தமான நீரில் கழுவுவது போன்றது.

வாழ்வில் பிரச்சனைகள் மேலோங்கியிருக்கும்பொழுது பணம் இருந்தாலும் யாரும் ஆடம்பரச்செலவு செய்வதோ உல்லாசப்பயணம் செல்வதோ இல்லை. ஏனெனில் மனதில் அலைபாயும் எண்ணங்கள் ஏற்கனவே இருப்பதால் பிரச்சனைகளை ஒரு தீர்வுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு மனதில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியை அவர்கள் ஏற்கனவே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனம் ஏற்கனவே அழுக்காக இருக்கிறது என்றும் அதை சுத்தம் செய்தால்தான் அமைதி கிடைக்கும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மனதில் எண்ணங்கள் இருப்பது முக்திக்கு தடையல்ல. எண்ணங்கள் மாயையான உலகைச்சுட்டிக்காட்டும் வெறும் பெயர்பலகைகள் என்பதை உணர்ந்தால் அவற்றின் நடனத்தை என்றும் அமைதியுடன் இரசிக்கமுடியும். ஏனெனில் தொடர்ந்து மாறுவதுதான் உலகின் இயல்பு. அந்த மாற்றத்தை பிரதிபலிப்பதுதான் மனதின் வேலை. பிரச்சனைகள் வெளியுலகில் இல்லை. தொடர்ந்து மாறும் உலகில் ஒருசில மாற்றங்களுக்கு பிரச்சனை என்று பெயரிடுவது நமது அறியாமை. பிரச்சனைகள் ஏற்பட்டு அவை தீர்ந்தால்தான் அமைதி வரும் என்ற தவறான அறிவால் அவற்றை நாமே உருவாக்குகிறோம். மாற்றங்களின் இடையே மட்டும் இருப்பதல்ல அமைதியும் ஆனந்தமும். அவை என்றும் நம்முடன் இருக்கும் நமது சுபாவம் என்பதை அறியாததுதான் நம் பிரச்சனைகளுக்கு காரணம்.

பிரச்சனைகளை தீர்த்து அமைதியுடன் இருப்பது எப்படி?

நம் உடல் ஜடம் என்பதை மயக்கமருந்தின் (local anesthesia) மூலம் கைகால்கள் மரத்துப்போன நிலையில் அறியலாம். நம் மனமும் ஜடம் என்பதை சமாதி நிலையில் மட்டுமே உணரமுடியும். ஏனெனில் நாம் விழித்திருக்கும் நேரங்களில் அது எண்ணங்களுடன் இருப்பதால் அதை ஜடம் என்று புரிந்து கொள்வது கடினம். முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்கும்பொழுதெல்லாம் அதில் நம் முகம் தெரிகிறது என்பதால் அதற்கு உயிர் இருக்கிறது என்று நினைப்பதில்லை. ஆனால் ஆத்மாவை பிரதிபலிக்கும் மனம் நாம் விழித்திருக்கும் பொழுதெல்லாம் செயல் செய்து கொண்டிருப்பதால் அதை ஜடம் என்று அறிய வேதத்தின் துணை தேவை படுகிறது. ‘நீதான் அது’ என்ற வேதத்தின் உபதேசத்தை புரிந்துகொண்டால் மாறும் மனம் நான் அல்ல என்று தெரியும். அதன் பின் உலகின் நிகழ்வுகளுக்கு பிரச்சனைகள் என்று பெயரிடாமல் அவற்றை அமைதியுடன் இரசிக்கலாம்.

தியானம் செய்வதன் மூலம் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தையும் அகற்றி அகம்பாவத்தை ஆத்மாவுடன் ஐக்கியமாக்கினால் சமாதி நிலையை அடையலாம். மிகுந்த சாதனை இதற்கு வேண்டுமென்றாலும் இதை செய்யகூடியவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்களது சமாதி அனுபவத்தில் ஆழ்ந்த உறக்க நிலையைப்போல மனம் முற்றிலும் மறைந்திருக்கும். எவ்வித எண்ணங்களும் இல்லாவிட்டாலும் சமாதி நிலை முடிந்தவுடன் இவ்வளவு நேரம் சமாதியில் இருந்தேன் என்று அறியமுடிவதற்கு காரணம் அகம்பாவம்தான். தூக்கத்தில் இல்லாத அகம்பாவம் சமாதி நிலையில் தொடர்ந்து ஆத்மாவுடன் ஒன்றி இருக்கிறது.

விழித்திருக்கும்பொழுது மனதில் உணர்வுகளை உருவாக்கும் அகம்பாவம் ஆழ்ந்த உறக்கத்தில் அழிந்து விடுவதால் நம்மால் நிம்மதியாக தூங்கமுடிகிறது. காலையில் விழிக்கும்பொழுது எண்ணங்கள் ஒவ்வொன்றாக மனதில் தோன்ற ஆரம்பிக்கின்றன. வாழ்வில் நாம் எவ்வளவு செயல்களைச்செய்கிறோம் எவ்வளவு மனிதர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதைப்பொறுத்து வெகு சீக்கிரம் மனதில் எண்ணங்கள் நிறைய ஆரம்பித்துவிடுகின்றன. மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகள் வெறும் எண்ணக்குவியல்களே.

எனவே மனம் அமைதியாயிருக்க தியானம் செய்து சமாதியை அடையவேண்டும் என்றோ ஊரைவிட்டு ஓடிப்போய் காட்டில் வசிக்கவேண்டும் என்றோ அர்த்தமல்ல.

முக்தியை அனுபவிக்க மனம் அவசியம்

ஆழ்ந்த உறக்கத்தில் மறந்திருந்த எல்லா எண்ணங்களும் மறுபடியும் நம் மனதை ஆக்ரமித்து இரு எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இல்லாதது போல் செய்துவிடுகின்றன. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று நிம்மதியை அது இல்லாத இடத்தில் தேட ஆரம்பிக்கிறோம். இரு எண்ணங்களுக்கு இடையே இருப்பதுதான் நிம்மதி.

சப்தம் செய்யப்படவேண்டும். நிசப்தம் என்றுமிருப்பது. அதை செய்யமுடியாது. வேண்டுவதை பெற ஏதாவது செய்யவேண்டும் என்று பழகிப்போயிருப்பதால்தான் அமைதியாய் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது. அமைதியாய் இருக்க எதுவும் செய்யவேண்டாம். அமைதியில்லாமல் எதையும் செய்யவும் முடியாது.

வெள்ளைக்காகிதத்தில் பேனாவை உபயோகித்து எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுதும்பொழுது எழுத்துக்களின் இடையே இடைவெளியை நாம் எழுதுவதில்லை. அந்த இடைவெளி இல்லாமல் எழுத்துக்கள் இருக்கமுடியாது. அதுபோல நம் மனதில் ஏற்படும் எண்ணங்களின் இடையே இருப்பதுதான் அமைதி. அந்த அமைதிதான் ஆத்மா. அது இல்லாமல் எண்ணங்களே இல்லை. சுவரில் தோன்றும் ஒளிவட்டங்களுக்கு இடைப்பட்ட இடம் இல்லாமல் ஒளிவட்டங்கள் இருக்க முடியாது. மேலும் ஒளிவட்டங்கள் இருக்கும் இடமும் சூரியனால் ஒளிர்விக்கப்பட்ட சுவர்தான். காகிதத்தில் உள்ள வெற்றிடத்தில்தான் எழுத்துக்கள் தோன்றுகின்றன. மனதில் உள்ள அமைதியின் மீதுதான் எண்ணங்கள் தோன்றுகின்றன. நிர்மலமான திரையின் மீதுதான் திரைப்படம் தெரிகிறது. திரையை பார்க்க திரைப்படத்தை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் திரைப்படத்தை பார்க்கும்பொழுது திரையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதுபோல அமைதியாய் இருக்க எண்ண ஓட்டத்தை நிறுத்தவேண்டிய அவசியமில்லை. அமைதியின் மீதுதான் எண்ணங்கள் ஏற்படுகின்றன என்றும் எண்ணங்களின் இடைவெளியில் தொடர்ந்து அமைதி இருந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிந்து கொண்டால் போதும். திரைப்படத்தையாவது எளிதில் நிறுத்தி வெண்திரையை பார்த்துவிடலாம். ஆனால் எண்ணங்களை நிறுத்தி அமைதியாய் இருக்க அஷ்டாங்க யோகத்தை முழுமையாக செய்து சமாதி நிலையை அடையவேண்டும். இது அனாவசியம். ஏனெனில் திரைப்படம் ஓடாமல் திரைமட்டும் இருப்பதால் எவ்வித பயனும் இல்லை. கடிதங்கள் எழுதாமல் காகிதத்தை வெள்ளையாகவே வைத்திருப்பதற்கு காகிதமே தேவையில்லை. உலகை அனுபவிக்க எண்ணங்கள் அவசியம். நான் அமைதியாய் இருக்கிறேன் என்பதை அறியக்கூட எண்ணங்கள் வேண்டும்.

எதனுடனும் சம்பந்தப்படாமல், எவ்வித மாற்றமும் அடையாமல், தோற்றம்-மறைவு என்ற விதிக்கு கட்டுப்படாமல், துன்பம் கலவா ஆனந்தமயமாக அறிவுருவாக என்றும் இருக்கும் ஆத்மா எவ்வித சுவாரசியமுமற்றது. அதனால் எதையும் செய்ய முடியாது. அதனாலேயே அது பற்பல அகம்பாவங்களாக காட்சியளிக்கிறது.

அகம்பாவம் மாற்றத்திற்குரியது. வந்து போகும் தன்மையுடையது. தொடர்ந்து செயல் செய்து கொண்டிருப்பது. அகம்பாவமில்லாமல் நாம் உயிருடன் இந்த உலகை அனுபவிக்க முடியாது. நான் ஆத்மா என்றாலும் அகம்பாவம் இல்லாமல் வாழ்வு என்னும் உல்லாசப்பயணத்தை மகிழ்வுடன் அனுபவிக்க முடியாது.

முடிவுரை :

உயிர் வாழவதற்காக எவ்வித உணவையும் உண்ணலாம் என்ற வேதவாக்கியத்தின் பொருளைப்புரிந்துகொள்ள உயிர்வாழ வேண்டியதன் அவசியத்தைத்தெரிந்து கொள்ளவேண்டும். ஆனந்த மயமான பரமன் நான் என்பது உண்மையென்றாலும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க உயிர்வாழ்வது அவசியம்.

பரமனால் எவ்வித செயலையும் செய்ய முடியாது. உடல் இருக்கும் வரைதான் அறிவது, ஆசைப்படுவது, அடைவது போன்ற பரமனால் செய்யமுடியாத காரியங்களை செய்து இவ்வுலகை அனுபவிக்க  முடியும். இதற்காகத்தான் நமக்கு இவ்வுடல் கிடைத்திருக்கிறது. எனவே உயிரைப்பாதுகாக்கும்பொருட்டு வேதம் விதித்துள்ள உணவுக்கட்டுப்பாடுகளை மதிக்கவேண்டியதில்லை என்று வேதமே அனுமதி கொடுக்கிறது.  

எவ்வித உணவு உட்கொள்ளவேண்டும், என்ன வேலைகள் செய்யவேண்டும் என்று வாழ்வில் செய்யவேண்டிய செயல்கள் அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்று வேதம் வகுத்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளின்படி நடந்தால் வேதத்தின் மையக்கருத்தான நான் பரமன் என்பதை அறிந்து கொள்ளலாம். அதன்பின் வேதத்தின் கட்டுப்பாடுகள் எவையும் தேவையில்லை.

நான் பரமன் என்பதை அறிய தியானம் ஒரு படியாக அமைகிறது. ஓம் ஓம் என்ற மந்திர ஜபம்  இரண்டு மந்திரங்களுக்கிடையே உள்ள அமைதியை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. தொடர்ந்த அமைதியின் நடுவே பிரணவ மந்திரம் தோன்றி மறைவதுபோல் நிரந்தர அமைதியின் நடுவே பிரபஞ்சம் தோன்றி மறைகிறது. இந்த இடைவிடாத இயக்கம் நம் மனமெனும் கண்ணாடியிலும் பிரதிபலிக்கிறது. வந்துபோகும் எண்ணங்கள் நமது கவனத்தை கவர்ந்து எண்ணங்கள் எழும் அடித்தளமான அமைதியை மறைத்துவிடுகிறது.

வேதாந்தத்தின் ஒரே நோக்கம் இந்த அமைதியை நமக்கு அறிமுகப்படுத்தி ‘நீயே அது’ என்று சுட்டிக்காட்டுவதுதான். இதை அறிந்துகொண்டால் தனியாக தியானம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் வாழ்க்கையே தியானமாக நிரந்தர அமைதியை அனுபவிக்கலாம்.


பயிற்சிக்காக :

1. உண்பவன் இல்லை என்று வேதம் கூறுவதன் நோக்கம் என்ன?

2. அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர்தான் முக்கியமானவர் என்பதை நிரூபிக்கவும்.

3. அனுபவிக்கப்படும் பொருள் ஏன் அனுபவிப்பவராக இருக்க முடியாது?

4. அனுபவிப்பவர் ஆத்மா அல்ல என்பதை நிரூபிக்கவும்.

5. ஆத்மாவுக்கும் அகம்பாவத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கும் சுவர் – ஒளிவட்டங்கள் உதாரணத்தில் கூறப்பட்ட பத்து கருத்துக்களை ஆராய்க.

6. இருவகை எண்ணங்களுக்கிடையே உள்ள முக்கியமான ஒற்றுமை என்ன? வேற்றுமை என்ன?

7. அனுபவிப்பவர் யார் என்ற கேள்வியின் முடிவான பதில் என்ன?

8. முக்தி அடைவது எப்படி?

9. வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

10. பிரச்சனைகளை தீர்த்து அமைதியுடன் இருப்பது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. இருவருக்கிடையே ஏற்படும் ஒரு அனுபவத்தில் இரு அறிபவர்கள் இருக்கிறார்களே?

2. ஆத்மாவுக்கும் அகம்பாவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

3. வெளிப்புற எண்ணங்கள் ஏற்பட அகம்பாவம் மற்றும் ஆத்மாவின் பங்கு என்ன?

4. உட்புற எண்ணங்கள் ஏற்பட அகம்பாவம் மற்றும் ஆத்மாவின் பங்கு என்ன?

5. காதலித்து கல்யாணம் செய்து கொள்வது, டேட்டிங்க் (dating) செய்து வாழ்க்கைத்துணைவரை தேர்ந்தெடுப்பது, பெற்றோர் தேர்ந்தெடுத்தவரை திருமணம் செய்துகொள்வது – இவற்றில் எது சிறந்தது? மற்றவற்றில் என்ன குறை? முக்தியடைந்தவர்கள் எந்த வகையில் திருமணம் செய்துகொள்வார்கள்?

6. மற்றவருக்கு நாம் கொடுக்கும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நமக்கு கிடையாது என்று கூறப்பட்டிருப்பது உண்மையா?

7. அனுபவிப்பவர் என்று ஒருவர் இல்லாவிட்டால் முக்தியடைவது யார்?