Tuesday, October 30, 2012

Lesson 178: The knower of Saguna Brahman travels to Brahmaloka (Brahmasutra 4.2.20-21)


பாடம் 178: பயணம் நிச்சயம்
பாடல் 516-517 (IV.2.20-21)

உலகம் என்ற விளையாட்டுத்திடலில் மாயையால் வடிவமைக்கப்பட்ட புதையல் வேட்டையே (Tresure Hunt) வாழ்க்கை. அனைத்து மக்களும் பிறந்தது முதல் இறக்கும் வரை பங்குபெறும் இந்தப் போட்டியில் மாயையால் மறைத்து வைக்கப்பட்ட புதையலை கண்டுபிடித்தவர்களே வெற்றிபெற்றவர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட ஒரு புதையல் இருக்கும் காரணத்தால் அனைவரும் வெற்றியடைவது சாத்தியமே. எனினும் பெரும்பாலோர் வாழ்வு முழுவதும் தேடிவிட்டு மரணத்துக்கு பிறகாவது புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் கடைசி காலத்தை கழிக்கிறார்கள். போட்டியில் வெற்றிபெற்ற முற்றுணர்ந்தோர்கள், ‘நான் பலவாக ஆகுவேனாகஎன்ற பரமனின் சங்கல்பத்தின் விளைவான இந்த விளையாட்டை இன்பமாக விளையாடுவார்கள். மற்றவர்கள் புதையலை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதன் காரணங்களை இந்தப்பாடம் விவரிக்கிறது.

விளையாட்டின் அமைப்பு

வெளிப்பார்வைக்கு மிகவும் சிக்கலானதாகத் தெரியும் இந்த விளையாட்டு உண்மையில் மிக எளிமையானது. ஏழுகடலைத்தாண்டி எரிமைலைக்குள் புகுந்து பாதாள பைரவியுடன் போராடும் சிந்துபாதின் சாகசங்களை நாம் செய்யத் தேவையில்லை. அவரவர்களின் முதுகில் கட்டப்பட்டிருக்கும் புதையலை எடுத்துக் கொள்வதுதான் விளையாட்டின் நோக்கம். இவ்வளவு எளிதானது என்பதை அறியாமல் புதையலைத் தேடி மற்றவர்களின் பின்னால் மக்கள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

வாழ்க்கையை ஒரு போராட்டமாக பார்க்கும் மக்கள் இது இவ்வளவு எளிதான விளையாட்டாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதில்லை. எனவே இந்த எளிமையான அமைப்பே விளையாட்டின் வெற்றிக்கு தடையாக இருக்கிறது. இந்தப் போட்டியில்  வெல்ல அனாவசியமாக போராடியதை நினைத்து முற்றுணர்ந்தோர்கள் வெட்கப் படுவார்களே தவிர அதை அவர்கள் ஒரு சாதனையாக கருதுவதில்லை.
விளையாட்டின் நோக்கம்

எது புதையல்?’, ‘அந்த புதையலை அடைவதால் என்ன பலன்?’, ‘புதையலை கண்டுபிடிக்காவிட்டால் என்ன ஆகும்? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில் மக்களிடம் இருந்து மறைத்து வைக்கப்படவில்லை. அனைவருக்கும் புதையல் என்பது இன்பம் என்று சந்தேகம் இல்லாமல் தெரியும். மேலும் இன்பம் என்பது என்ன என்று தெரியாதவர்கள் யாரும் இல்லை. அனைவரும் அவ்வப்போது இன்பமாக இருந்து அதன் அருமையை அறிந்தவர்களே.

ஆனால் விளையாட்டுப்போட்டியின் ஆரம்பத்தில் விசில் சத்தம் கேட்டதும் ஓட ஆரம்பித்த காரணத்தால் நடப்பது ஓட்டப்பந்தையம் அல்ல என்று இவர்களுக்குத் தெரிவதில்லை. சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஓடுவதால், இது என்ன விளையாட்டு என்று விசாரித்து அறிய யாருக்கும் நேரம் இருப்பதில்லை.

எனவே புதையல் வேட்டை என்ற விளையாட்டுக்குப் பதில் ஓட்டப்பந்தையம் என்ற விளையாட்டை எல்லோரும் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். பந்தையத்தில் வெற்றி பெற்றுவிட்டால் புதையல் கிடைத்துவிடும் என்ற அனுமானத்துடன் ஓடுபவர்களுக்கு மைதானத்தில் வெற்றிக்கோடு வரையப்படவே இல்லை என்று தெரிவதில்லை. எனவே பெரும்பாலோர் சோர்வு அடையும் வரை ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் மட்டுமே சிறிது காலம் ஓடிவிட்டு இதன் வெற்றிக்கோடு எங்கே இருக்கிறது?, வெற்றி பெற்றால் புதையலை பரிசாக பெறலாம் என்ற அனுமானம் உண்மையா? என்பது போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பிப்பார்கள்.

புதையலை கண்டுபிடிக்கத் தேவையான புத்திக்கூர்மையும் விடாமுயற்சியும் உள்ளவர்கள் மட்டுமே ஓட்டப்பந்தையத்திற்கு பதில் புதையல் வேட்டை என்ற விளையாட்டை விளையாட ஆரம்பிப்பார்கள். சரியான விளையாட்டை விளையாடாத காரணத்தால் பெரும்பாலோர் விளையாட்டில் வெற்றி பெறுவதில்லை.

விளையாட்டில் உதவி

ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு புதையல் இருப்பது உண்மை என்றாலும் அதை அடைய போட்டியில் வெற்றிபெற்றவருடைய உதவி அனைவருக்கும் தேவை. ஆனால் பெரும்பான்மையானவர்கள் யாருடைய உதவியையும் கோருவதில்லை. வாழ்வில் அனைவரும் வெற்றியடையலாம் என்பதை அறியாத காரணத்தால் இவர்கள் மற்றவர்களை சகபோட்டியாளர்களாக கருதுவார்கள். மேலும் வெற்றி பெற்றவர்களை அடையாளம் காண்பதும் கடினம். எனவே முற்றுணர்ந்தோர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் உதவியை பெற்று வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னேறுபவர்கள் மிகச்சிலரே.

கருத்தரங்குகளில் பங்கேற்று தனது அறிவை மேலும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மனிதனின் துணைக்குறிக்கோள்களை நிறைவேற்ற மட்டுமே உதவும். எப்போதும் இன்பமாக இருப்பது எப்படி என்று முற்றுணர்ந்தோர்கள் காட்டும் வழிமுறைகளை நன்றாகப் படித்து அறிவை அதிகப்படுத்திக்கொள்வதால் வாழ்வின் முதன்மை குறிக்கோளை அடைந்துவிட முடியாது. அடுத்த வருடம் முக்தி அடைந்து விடலாம் என்ற எண்ணம் இப்போது அடைய வேண்டிய வெற்றியை தடை செய்து விடுகிறது. எனவே முற்றுணர்ந்தோர்களும் தீர்க்கதரிசிகளும் செய்யும் உதவி பெரும்பான்மையான மக்களுக்கு பயன் அளிப்பதில்லை.

விளையாட்டில் எதிரி

போட்டியில் வெற்றி அடைவதை தடுக்கும் ஒரே எதிரி அவரவர்கள் மனதில் உருவாகியிருக்கும் ‘நான்’ என்ற கற்பனைக்கதையே. தங்களின் துன்பத்துக்கு காரணம் வெளி உலகில் இருக்கிறது என்றும் உலகை மாற்றி அமைத்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்ற கட்டுக்கதை இந்த கற்பனையில் அடக்கம்.

தனது எதிரி தனக்குள்ளேயே இருப்பதை அறியாத காரணத்தால் பலர் தொடர்ந்து வெளி உலகில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த எதிரியை அடையாளம்  காட்டுவதற்க்குத்தான் வாழ்வில் வெற்றிபெற்றவரின் உதவி தேவை. ஆனால் அனைத்து பிரச்சனைகளையும் கூடிய விரைவில் தீர்த்து இன்பத்தை பெற்றுத்தருவேன் என்ற எதிரியின் உறுதிமொழியை நம்பி பலர் வாழ்வு முழுவதும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வெற்றிக்குத் தடை

இன்பம் வேண்டும்என்ற முயற்சிதான் வெற்றிக்குத் தடை. இருப்பது இன்பம் மட்டும்தான். அது அடையப்பட  வேண்டிய ஒன்று என்பது நமது கற்பனை. நாம் நம்மையே தேடிக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற இந்த போட்டியில் அங்கும் இங்கும் ஓடி உலகப் பொருள்களில் இன்பத்தை தேடுவதில் பயன் இருக்காது. வேதங்களைப்படித்து அதன் உபதேசங்களை பின்பற்றுவதாலும் பயன் இல்லை. எப்போது தேட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணருகிறோமோ அப்போதுதான் புதையல் நமக்கு கிடைக்கும்.

தான் இன்பமாக இல்லை என்ற கற்பனை நான் என்ற உணர்வின் அடிப்படையில் இயங்க நம்மை அனுமதிப்பதில்லை. நான் ஆனந்த மயமான பரமன் என்ற உண்மையை அறியவிடாமல் நான் என்ற கற்பனைக் கதை மனதில் நிறைந்து இருப்பதால் இந்த விளையாட்டு பலகாலம் தொடர்ந்து நடக்கிறது.

வாழ்வில் பிரச்சனைகளை தீர்த்துவிட்டால் இன்பம் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் போராடிக்கொண்டு இருப்பார்கள். ஒரு பிரச்சனை தீர்ந்தால் மற்றொரு பிரச்சனை உருவாகும் காரணத்தால் இவர்களின் போராட்டம் முடிவதில்லை.

நிகழ்காலத்தில் பிரச்சனைகள் என்று எதுவும் கிடையாது. எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற கற்பனையும் கடந்த காலத்தில் நினைத்தது நடக்கவில்லையே என்ற ஏக்கமும்தான் பிரச்சனைகள். காலம் என்பதே கற்பனை என்பதால் வாழ்வில் பிரச்சனைகள் ஏதும் கிடையாது. எல்லோரும் எல்லாமும் பெற்று இன்பமுடன் வாழ்வதற்கு தடையாய் இருப்பது மக்களின் மனமே.

பிரச்சனைகளை உருவாக்குவதே ஒவ்வொருவரின் மனதில் இருக்கும் நான் என்ற கற்பனைக்கதைதான். பிரச்சனைகள் ஏதும் இல்லாவிட்டால் அது மறைந்து விடும்.

உதாரணமாக காதல் வயப்பட்டு ஈருடல் ஓர் உயிராக வாழும் இருவர், ன்னை மறந்து எப்போதும் இன்பமாக இருப்பார்கள். ஆனால் இது வெகுநாட்களுக்கு தொடர்வது இல்லை. இதற்கு காரணம் அவர்களின் மனம்.

உலகையே மறந்து காதலில் மூழ்கி இருப்பவர்கள்கூட அலுவலகம் செல்வது, தினசரி வேலைகளை செய்வது போன்ற செயல்களை ஒழுங்காகச் செய்வார்கள். வாழ்வு முழுவதும் இதுபோல் இன்பமாக இயங்குவது அனைவருக்கும் சாத்தியமே. போட்டியில் பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்வதை தடை செய்வது அவர்கள் மனதில் வளர்ந்திருக்கும் நான் என்ற கற்பனைக்கதை.

காதலர்களின் இன்பத்துக்கு காரணம் அவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வதுதான். மனதால் நிகழ்காலத்துக்குள் நுழையவே முடியாது. இன்பமாக இருக்கும் வரைஇப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்என்ற எண்ணம் மனதில் தோன்றாது. இன்பம் நீடித்தால் நான் என்ற கற்பனைக்கதை வெறும் கற்பனை என்பது தெரிந்துவிடும்.  எனவே இன்ப அனுபவம் ஏற்படுத்திய மாறுதல்களை மட்டுமே அறியும் மனம் தன் இருப்பை நிலை நாட்ட பிரச்சனைகளை உருவாக்குகிறது.

இன்ப அனுபவத்தை கொடுக்கும் காதலரைத் தன்னுடன் வாழ்நாள் முழுவதும் இருத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்ற பிரச்சனையை உருவாக்கி இன்ப அனுபவத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது நான் என்ற கற்பனைக் கதை.

கனவில் ஏற்படும் துன்ப அனுபவங்கள் சுகமாக மெத்தையில் தூங்கும் இன்ப அனுபவத்தை மறைத்துவிடுகின்றன. அதேபோலஇன்று என்னுடன் இனிமையாக இருப்பவரை என்றும் இப்படியே என்னுடன் இருத்திக்கொள்ள வேண்டும்என்ற எண்ணம், இன்று இருக்கும் இன்பத்தை தடுத்துவிடுகிறது.

மனிதர்கள் நீடித்த இன்ப அனுபவம் பெறுவது காதலில் மூழ்கி இருக்கும் காலத்தில் மட்டும்தான். தேடியது கிடைத்தவுடன் ஏற்படும் மற்ற இன்ப அனுபவங்களை வெகு சீக்கிரம் நான் என்ற கற்பனைக்கதை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.

இப்போது கிடைத்த இன்பத்தை எப்போதும் கிடைக்க முயற்சி செய்கிறேன் என்று பிரச்சனைகளை உருவாக்கி, நிகழ்காலத்தை மறுத்து இல்லாத எதிர்காலத்துக்கு நம்மை இழுத்துச் செல்வது நான் என்ற கற்பனைக்கதையே.

பிரச்சனைகள் எதுவும் இல்லாவிட்டால், ‘போர் அடிக்கிறது’ என்ற வடிவில் ஒரு பிரச்சனையை உருவாக்கி நிகழ் காலத்தில் இன்பமாக வாழ்வதை இந்த கற்பனைக் கதை தடை செய்துவிடும். பிரச்சனைகள்தான் நான் என்ற கற்பனைக்கதையின் உயிர்நாடி. பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் நிகழ்காலத்தில் நிம்மதியாக வாழ ஆரம்பித்துவிட்டால் நான் என்ற கற்பனைக்கதை முடிவுக்கு வந்துவிடும். எனவேதான் தன்னிடம் இருக்கும் குறையை சுற்றியிருக்கும் உலகத்தின் மீது ஏற்றி வைத்து உலகத்தை மாற்றி அமைத்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்று இது நம்மை ஏமாற்றுகிறது.

உலகத்தை மாற்ற வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கமும் அந்த ஆசை நிறைவேறினால் நான் உலகத்தில் இருந்து வேறுபட்டவன் அல்ல என்பது தெரிந்துவிடும் என்ற பயம் மறுபக்கமும் தொடர்ந்து மனிதர்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றன.

முற்றுணர்ந்தோர்கள் இந்த எதிரியிடம் இருந்து நம்மை காப்பாற்ற வழி கூறினால் அதையும் ஒரு பிரச்சனையாக மாற்றி எதிர்காலத்தில் தான் நிச்சயம் முக்தி அடைந்து விடுவேன் என்று நம் கவனத்தை திசை திருப்பி நான் என்பதன் உண்மைப்பொருளை உணரவிடாமல் தடுப்பது இந்தக் கற்பனைக் கதைதான்.

தான் வேறு உலகம் வேறு என்ற பொய்யை உண்மை என்று நம்மை நம்பவைக்க இப்போது இருக்கும் அனைத்தையும் மறுத்து இல்லாத எதிர்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்வதாக தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்கும் இந்தக் கற்பனைக் கதைதான் இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதை தடுக்கும் ஒரே தடை.

வெற்றிக்கு வழி

துன்பத்துக்கு காரணம் அறியாமை என்பதை விட அறியாமைதான் துன்பம் என்று நாம் உணர்ந்து கொண்டால் வெற்றி நிச்சயம். நான் என்ற கற்பனைக்கதை, ‘நான் குறை உள்ளவன்என்ற பொய்யை கூறி, குறையை நிறை செய்ய நேரம் வேண்டும் என்று எதிர்கால கற்பனையை உருவாக்கி, நாம் நிகழ்காலத்தில் அனுபவிக்கும் இன்பத்திலிருந்து நமது கவனத்தை திசைத் திருப்புகிறது.

நாம் நாமாக இருக்க எதுவும் செய்யத்தேவையில்லை. மாறாமல் காலத்தைக் கடந்து எப்போதும் இருப்பதை எதிர்காலத்தில் தேடினால் கிடைக்காது. தேடுவதை நிறுத்தினாலே இப்போது இன்பமாக இருக்கிறோம் என்பதை நாம் உணர்வோம்.

ஆனால் அப்படி நிகழ்ந்துவிடாமல் நம்மை தடுப்பது நான் என்ற கற்பனைக்கதை. இப்போது அது குறையுடன் இருப்பதால் நாம் உடனே எதிர்காலத்துக்கு விரைந்து செல்ல வேண்டும் என்று அது நம்மை வற்புறுத்தும். இந்த வற்புறுத்தலுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்காமல் நிம்மதியாக நாம் இருக்கலாம்.

இருப்பதை ஏற்றுக்கொள்வதை கற்பனைக்கதை அனுமதிப்பதில்லை. எவ்வித முயற்சியும் இல்லாமல் அனைத்தையும் ஏற்றுக்கொள்வது தோல்வியில் முடியும் என்று அது கதை கட்டிவிடும். எனவே பல துணைக்குறிக்கோள்களை முன்வைத்து அவற்றை அடைய நாம் விரைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுருத்தும்.

ஆனால் நிகழ்வுகள் நிகழ மனம் அவசியமில்லை. இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தில் நமது மனதில் ஏற்படும் எண்ணங்களும் உடல் அளவில் செய்யப்படும் செயல்களும் ஒரு பகுதியாகும். நான் செய்கிறேன் என்ற கற்பனையை கற்பனை என்று உணர்ந்தவுடன் விளையாட்டில் வெற்றி கிடைத்துவிடும்.

இந்த விளையாட்டின் அமைப்பு, நோக்கம், எதிரி ஆகியவற்றை பற்றிய அறிவை பெறுவதுடன் இந்த உண்மைகளை உணர்ந்து கொள்வதே வெற்றிக்கு வழி. உணர்வது என்பதுஇது வேண்டும், அது வேண்டாம்என்று பாகுபாடு செய்யாமல் இருக்கும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வது. ‘இது தவறு. இன்பத்தை அடைய நாம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்என்று நான் என்னும் கற்பனைக் கதை உரத்த குரலில் கூவினாலும் அதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் வெற்றியின் ரகசியம். மனதில் நடமாடும் அனைத்து எண்ணங்களையும் உலகில் நடக்கும் அனைத்து இயக்கங்களையும் இது இப்படி இருக்க வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்பவர்களே இந்தப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.

பார்வை ஒன்றே போதும்

விருப்பு வெறுப்பற்ற பார்வை என்பது நான் பரமன் என்ற நிலையில் இருந்து ஏற்படுவது. இந்தப்பார்வையை எப்படிப்பெறுவது என்ற கேள்வியை நான் என்ற கற்பனைக்கதை எழுப்பி நமது கவனத்தை திசைத்திருப்ப முயலும். ஆனால் அந்த எண்ணத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு அதை மாற்ற முயலாமல் இருந்தால் புதையல் நமக்கு கிடைத்துவிடும்.

புதையல் கிடைப்பது என்பது மற்ற விளையாட்டுகளில் கிடைக்கும் வெற்றியைப் போலத்தான் நமக்கு இன்பத்தைத் தரும். ஆனால் எப்போதும் ஆனந்தமாக இருக்கும் வழி புதையல் கிடைத்தவுடன் நமக்கு புரிபட்டுவிடும்.  நான் என்ற கற்பனைக்கதையின் ஆரவாரத்துக்கு முக்கியத்துவம் எதுவும் கொடுக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள நாம் கற்றுக்கொள்வோம். அடிப்படையில் எவ்வித மாற்றமும் இல்லாத நாம் மேலெழுந்தவாரியாகத் தெரியும் மாற்றங்களை வேண்டும் வேண்டாம் என்று இனம் பிரிக்காமல் ஏற்றுக்கொள்வதும் அவற்றுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இன்பமாக இருப்பவன் நான் என்பதை உணர்வதும்தான் வாழ்க்கைப்போட்டியில் நாம் பெறும் வெற்றி.

வெற்றி பெற்றவுடன் இயக்கங்கள் நின்றுவிடாது.

அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது முயற்சியின்மை அல்லது சோம்பேறித்தனத்தை குறிக்காது. வாழ்வில் துணைக்குறிக்கோள்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அடுத்தவாரம் அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று திட்டம் இடுவதும் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடக்கும். ஆனால் நினைத்தது நடந்தால்தான் இன்பம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்காது. ஏனெனில் என்றும் இருக்கும் இன்பம் தான் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரம் என்ற அறிவு மனதில் நிலைத்து இருக்கும். மேலும் மனதில் அவ்வப்போது நடமாடும் நான் என்ற கற்பனைக்கதை காணாமல் போய்விடாது. ஆனால் அதன் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுதலைப்பெற்று இருப்போம்.

நான் ஆனந்தமான பரமன் என்ற உணர்வுடன் நாம் செயலாற்றும்போது நான் என்ற கற்பனைக்கதையின்நான் குறையுள்ளவன்என்ற கூப்பாடு எடுபடாது.

முடிவுரை :

உலகம் என்ற விளையாட்டுத்திடலில் இன்பம் என்ற புதையலை விரைவில் அடைந்து வாழ்வு முழுவதும் மக்கள் இன்பமாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமையங்களின் நோக்கம். மனதை சமைத்து மக்கள் உண்மையை உணர ஒவ்வொரு மதமும் வெவ்வேறு வழிமுறைகளை வகுத்து இருப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அவை அனைத்தும் நான் என்ற கற்பனைக்கதை உலகத்தின் இயக்கத்திற்கு காரணம் இல்லை என்பதைத்தான் போதிக்கின்றன.

வெளியுலகில் வேகமாக தேடலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் மனதில் அலைபாயும் எண்ணங்களின் வேகத்தை குறைத்து அமைதிப்படுத்துவதே அனைத்து வழிபாட்டு முறைகளின் அடிப்படை நோக்கம். தியானம் என்ற பயிற்சி மூலம் நான் என்ற கற்பனைக்கதை மனதில் வளர்ந்திருப்பதை சுட்டிக்காட்ட அவை முயன்ற போதும் பெரும்பான்மை மக்கள் மந்திரங்களின் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்து மந்திரங்களுக்கு நடுவே இருக்கும் அமைதியை கவனிப்பதில்லை.

இறைவனிடம் தன்னை ஒப்புக்கொடுப்பது, நான் என்ற கற்பனைக்கதையின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகவே என்பதை அறியாமல் அந்த கற்பனையை மேலும் மக்கள் வளர்த்திக்கொள்கிறார்கள். என்றும் இருக்கும் இறைவனின் அருளைப் பெற்று மரணத்துக்குப்பின் அவனது சாம்ராஜ்ஜியத்தில் நுழைய வேண்டும் என்ற கற்பனை அவர்களை ஆட்கொள்ளுகிறது.

எனவே, முக்தியை இப்போதே அடையாமல் அதை நோக்கிப் பயணம் செய்வதுதான் இவர்களின் வாழ்க்கையாக அமையும்.  இந்த விளையாட்டை அதில் வெற்றிபெற்றவர்கள் மட்டும் இன்பமாக அனுபவிப்பார்கள்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. உலகத்தின் இயக்கத்தை பரமனின் லீலையாகப் பார்த்து முற்றுணர்ந்தோர்கள் அனுபவிக்கும் இன்பத்தை விவரித்த நான்காவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி, இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. புதையல் வேட்டை உவமை மூலம் இந்தப்பாடம் கூறிய கருத்து என்ன?

2. விளையாட்டின் அமைப்பு யாது?

3. விளையாட்டின் நோக்கம் எது?

4. விளையாட்டில் உதவி அவசியமா?

5. விளையாட்டின் எதிரி யார்?

6. வெற்றிக்குத் தடையாய் இருப்பது எது?

7. வெற்றி பெறும் வழி யாது?

8. வெற்றி பெற்றபின் விளையாட்டு தொடருமா?

சுயசிந்தனைக்காக :

1. முக்திவேண்டும் என்று தீவிர ஆசை உள்ளவர்கள் முக்தி அடைவார்களா?

2. அறிவை அடையாமல் முக்தி பெற முடியுமா?


Friday, October 19, 2012

Lesson 177: The soul of the one who knows Saguna Brahman follows the rays of the sun and goes to Brahmaloka (Brahma Sutram - 4.2.18-19)


பாடம் 177: பிரம்மலோகத்துக்கு பயணம்
பாடல் 514-515 (IV.2.18-19)

இவ்வுலகில் இப்போது இன்பமாக இருக்க செய்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால், மரணத்துக்கு பின் பிரம்மலோகம் சென்று, அங்கேயாவது முக்தி அடையலாம் என்று நினைப்பவர்கள் உபாசகர்கள். இந்த நிலமைக்கு காரணம் என்ன என்பதை முற்றுணர்ந்தோர்களின் பார்வையில் இந்தப்பாடம் ஆராய்கிறது.

முதன்மை குறிக்கோளும் துணை குறிக்கோள்களும்

நடனக் காட்சியில் கதாநாயகியுடன் ஏராளமான துணை நடிகையர்கள் இருப்பது போல ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு முதன்மை குறிக்கோளும் பற்பல துணை குறிக்கோள்களும் இருக்கும். துணை நடிகைகள் கதாநாயகியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில்தான் நடனமிடுவார்கள். ஆனால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வில் துணை குறிக்கோள்களின் ஆதிக்கம் முதன்மை குறிக்கோளின் இருப்பையே மறைத்து விடுகிறது.

இன்பம் என்பதே வாழ்வின் முதன்மை குறிக்கோள். வீடு கட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும், உலகில் யுத்தங்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தப்படவேண்டும் என்பது போன்ற ஏராளமான துணைக் குறிக்கோள்கள் மக்களின் வாழ்வில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த துணைக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற முயற்சியில் பெரும்பான்மையான மனிதர்கள் தங்கள் முதன்மை குறிக்கோளையே மறந்து விடுகிறார்கள்.

துணைக் குறிக்கோள்கள் முக்கியமானவை அல்ல என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தக் காரணங்களை அறிந்து கொள்ள அவகாசம் இல்லாமல் வாழ்வு முழுவதும் துணைக் குறிக்கோள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அடைய போராடிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு முக்தி கிடைப்பதில்லை.

முதலாம் காரணம்: முகமற்ற உருவங்கள்

துணை நடிகையர்களில் ஒரு சிலர் கதாநாயகியின் அருகில் நடனமாடினாலும் அவர்களும் மற்றவர்களைப்போல் முகமற்ற உருவங்களே. அதுபோல வெவ்வேறு துணைக் குறிக்கோள்களில் ஒரு சில அவ்வப்போது நமக்கு இன்பத்தை தருவது போல தோன்றினாலும் அவை அனைத்தும் முக்கியமற்றவையே.

துணை நடிகையர்கள் இல்லாமல் கதாநாயகியால் தனித்து இயங்க முடியும். ஆனால் கதாநாயகி இல்லாமல் துணை நடிகைகளுக்கு திரைப்படத்தில் இடம் இல்லை. அதுபோல இன்பத்தைக்காரணம் காட்டியே அனைத்து துணை குறிக்கோள்களும் இருக்கின்றன.

துணைக் குறிக்கோள்கள் மாறிக்கொண்டே இருக்கும். இன்று முக்கியமானதாக தோன்றும் குறிக்கோள் நாளை மறக்கப்பட்டுவிடும். வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருக்கும் ஒரே குறிக்கோள் இன்பம் மட்டுமே. எனவே மற்றவை அனைத்தும் எவ்வித முக்கியத்துவமும் அற்றவை.  

இரண்டாம் காரணம்: எதிர்காலக் கனவு

துணைக்குறிக்கோள்கள் அனைத்தும் எதிர்காலத்தில் அடையப்படவேண்டியவை. ஆனால் எதிர்காலம் என்பது நமது கற்பனை. எனவே நிகழ்காலத்தில் இந்த குறிக்கோள்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடையாது. துணை நடிகையாய் அறிமுகமாகும் ஒவ்வொருவருக்கும் என்றாவது கதாநாயகியாக ஆகிவிடவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதே போல் உலகத்தை சொர்க்கமாக மாற்றிவிட்டால் அனைவரும் எப்போதும் இன்பமாக இருக்கலாம் என்பது போன்ற எதாவது ஒரு கனவு எல்லோர் மனதிலும் இருக்கும்.

சேர்ந்து நடனம் ஆடும் பல நடிகைகளில் ஒருவருக்கு கூட திரைக்கதையில் கதாநாயகியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இருக்கவே இருக்காது. அது போல துணைக் குறிக்கோள்களுக்கும் முதன்மை குறிக்கோளுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

மூன்றாம் காரணம்: அவசியமற்ற அலங்காரம்

துணை நடிகையர் நிறைய பேர் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் திரைக்கதைக்கு இருப்பதில்லை. ஆனாலும் மக்கள் மனதில் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்த இது போன்ற பாடல் காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறும். அது போல உலகில் தொடர்ந்து நிகழும் மாற்றங்களுக்கு துணைக்குறிக்கோள்கள் அவசியம் இல்லை. எனினும் மக்களை தன் கட்டுக்குள் வைத்திருக்க மாயை அவற்றை மக்கள் மனதில் உண்டாக்குகிறது.

ஒர் வீடு கட்டப்படுவதற்கு முன் அந்த வீட்டைப்பற்றிய நினைவு அலைகள் மனதில் தோன்றும். மனிதனால் உருவாக்கப்படும் அனைத்துப்பொருள்களும் பௌதீக உலகில் நுழைவதற்கு முன் மனித மனத்தினுள் எண்ணங்களாக தோன்றுகின்றன. இது, இந்த உலகம் என்னும் ஒளி-ஒலிக்காட்சி செயல்படும் விதம். எண்ணங்கள் தோன்றியபின் பொருள்கள் தோன்றுவதால் ‘செய்ய வேண்டும்’ என்பது போன்ற துணைக் குறிக்கோள்கள் மிக முக்கியமானதாக தோற்றம் அளிக்கின்றன.

நடக்கும் நாடகத்தை உண்மை என நம்ப வைப்பதற்காகவே, வெளி உலகில் நடக்கும் செயல்களுக்கும் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் இது போன்ற ஒரு காரண காரிய உறவு இருப்பது போல தோன்றுகிறது. துணைக் குறிக்கோள்கள் இல்லாமலேயே நடக்க வேண்டியவை நடந்து கொண்டே இருக்கும்.

வீடு கட்டவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு தோன்றினாலும் ஒரு சிலரின் எண்ணங்கள் மட்டுமே செயலாக மாறுகின்றன. மேலும் வீடு கட்டுவேன் என்று நினைக்கவே இல்லை. எப்படியோ எல்லாம் கூடி வந்து,  இது நடந்து விட்டது.’ என்பது போன்ற அனுபவங்கள் ஒரு சிலருக்கு ஏற்படுகின்றன. இது போன்ற நிகழ்வுகளை ஆராய்ந்தால், தான் திட்டமிட்டு செயல் செய்வதால்தான் உலகம் இயங்குகிறது என்று மனிதன் நினைப்பது வெறும் பிரம்மை என்பது புரியும். வாழ்வில் குறிக்கோள்கள் அவசியமற்ற அலங்காரங்கள். மனிதர்கள் இந்த அலங்காரத்தில் மயங்கி முதன்மை குறிக்கோளை மறந்து விடுகிறார்கள். எதிர்கால குறிக்கோளுக்காக நிகழ்கால இன்பத்தை இவர்கள் தியாகம் செய்து விடுகிறார்கள்.

நான்காம் காரணம்: தொடர் ஓட்டப்பந்தையம்

தண்ணீர் குடிக்கும் செயல் தாகத்தை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செய்யப்படுகிறது. இதுபோல மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் ஏதாவது ஒரு குறிக்கோளை அடைவதற்காகவே செய்கிறார்கள். எனவே வாழ்வில் குறிக்கோள்கள் முக்கியமானவையாக தோன்றுகின்றன.  

குறிக்கோள் என்பது எதிர்காலத்தில் அடையப்பட வேண்டியது. எதிர்காலம் நமது கற்பனை. வாழ்வு நிகழ்வது நிகழ்காலத்தில் மட்டுமே. நிகழ்காலமாக என்றும் இருப்பது இன்பம். குறிக்கோள்கள் மனிதனின் கவனத்தை எதிர்காலத்துக்கு திருப்பி நிகழ்கால இன்பத்தை அனுபவிக்க விடாமல் தடுக்கின்றன.

இந்த தொடர் ஓட்டத்திலிருந்து மக்களை விடுவிக்கவேபலனில் பற்று வைக்காதேஎன்று பகவான் கிருஷ்ணன் கீதையில் உபதேசம் செய்தான். இதை பின்பற்றினால் குறிக்கோள்களின் அவசியம் குறையும். ‘பலனில் பற்று வைக்காமல் செயல்களை ஒழுங்காகச் செய்கிறேன்’ என்ற எண்ணமும் பலனைக் கொடுக்காது.

தாகம் தீர வேண்டும் என்ற நோக்கத்தில் கவனம் செலுத்தாமல் தண்ணீர் குடிக்கும் செயலைச் செய்தாலும் நான் இப்போது தண்ணீரை எடுக்கிறேன்என்பது போன்ற வர்ணனைகள் நம்மை நிகழ்காலத்துக்குள் நுழையவிடுவதில்லை.

சிகரத்தின் மீது கொடியை ஏற்ற மலை மீது ஏறுபவர்கள், தொடர்ந்து ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்கள் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வார்கள். சரியாக காலை கயிற்றின் மீது வைக்காவிட்டால் கீழே விழுந்து உயிர் போய்விடும் என்ற எண்ணம் கூட அவர்கள் மனதில் ஏற்படாது. மலை ஏறும் செயல் மட்டும் நடக்கும்.

நிகழ்காலத்தில் மட்டுமே இருந்த இன்ப அனுபவத்தை சிகரத்தை அடைந்ததும் மனம் அசைபோடுகிறது. இந்த இன்ப அனுபவம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று இன்னும் அதிக ஆபத்தான மலை மேல் ஏற ஆசை ஏற்படுகிறது. ஒரு சிறிய குன்றின் மேல் ஏறுவது எளிதாக இருக்கும் காரணத்தால் அதில் ஏறும்போது மனதில் வெவ்வேறு எண்ணங்கள் தோன்றும். எனவே மனம் நிகழ்காலத்தின் இன்பத்தை அனுபவிப்பதில்லை.

இதுபோல வாழ்விலும் முந்தையதை விட அதிக சிரமமான குறிக்கோளை கற்பித்துக் கொண்டு அதை அடைய வேண்டும் என்று மக்கள் தொடர் ஓட்டம் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

கேமராவின் முன் நடனமாடும் துணை நடிகைகள் சிறிது விலகும்போது கதாநாயகியின் முகம் சில நொடிகள் தென்படுவதைப்போல குறிக்கோள்கள் ஏற்படுத்தும் நெருக்கடி நம்மை சிறிது காலத்துக்கு நிகழ்கால இன்ப அனுபவத்தைப் பெற்றுத் தருகின்றன. எனவே குறிக்கோள்கள் முக்கியமானவை என்று நாம் தவறாக எண்ணிவிடுகிறோம். கேமராவை மறைக்கும் துணை நடிகைகள் இல்லாவிட்டால் கதாநாயகியின் முகம் மறையாது. அது போல் குறிக்கோள்கள் எதுவும் இல்லாவிட்டால் நாம் நிகழ்காலத்தில் தொடர்ந்து நாம் இன்பமாக இருக்கலாம்.

அனைவரும் தொடர்ந்து நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறார்கள். ஆனால் அவசியமில்லாத குறிக்கோள்கள் இந்த உண்மையை மக்களிடமிருந்து மறைத்து விட்டு அவ்வப்போது இன்ப அனுபவங்களை மக்களுக்கு தந்து கொண்டு இருக்கிறது. இன்னும் அதிக இன்பம் வேண்டும் என்று மேலும் கடினமான குறிக்கோளை முன்வைத்து அனைத்து மக்களும் தொடர் ஓட்டம் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.  

ஐந்தாம் காரணம்: போதை மருந்து

திரைப்படங்களில் வரும் பாடல் காட்சிகளில் மனதை பறிக்கொடுப்பதன் மூலம் தங்கள் கவலைகளை மறந்து மக்கள் சிறிது நேரம் இன்பமாக இருக்கிறார்கள். இன்பம் எப்போதும் இருப்பது என்பதை அறியாமல் வாழ்க்கையில் அவ்வப்போது அதை அனுபவிக்கிறார்கள்.

வாழ்வின் முதன்மை குறிக்கோளான இன்பத்தை அடைய நாம் நிகழ்காலத்தில் மட்டும் வாழ்ந்தால் போதும். நிகழ்காலத்தில் வாழ்வது என்பது கடினமான காரியம் அல்ல. நம்மைச்சுற்றி நிகழும் அத்தனை நிகழ்வுகளையும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது மனதில் தோன்றும் எண்ணங்கள் வேறு மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. சொல்லாலும் செயலாலும் எண்ணத்தாலும் நமது உடலும் மனமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும். அந்த இயக்கம் மாயா சக்தியின் இயக்கத்தில் ஒரு சிறிய பகுதி. எனவே, ‘இவை என் செயல்கள் அல்லது என் எண்ணங்கள்’ என்று சொந்தம் கொண்டாடி அவை எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானம் செய்யாமல் இருந்தாலே போதும்.

சுருக்கமாக சொல்வதென்றால் குறிக்கோள்கள் முக்கியமற்றவை என்பதை புரிந்து கொண்டாலே என்றும் நிகழ்காலத்தில் இருக்கலாம்.

இப்போது இருப்பதை மாற்றி அனைத்தும் நமக்கு விருப்பமான விதத்தில் அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் குறிக்கோள்கள் இருக்கும். இவற்றில் சில அவ்வப்போது நிறைவேறும்போது சிறிது நேரம் இன்பம் ஏற்படும். போதை மருந்துக்கு அடிமை ஆவதைப்போல மக்கள் அனைவரும் தொடர்ந்து துணைக் குறிக்கோள்களை அடைய முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள்.

நிலையான இன்பத்தின் இருப்பை நிகழ்காலத்தில் அறியாமல் ‘எனக்கு மிட்டாய் வேண்டும்’ என்பதுபோன்ற குழந்தைத்தனமான குறிக்கோள்களை மனதில் வளர்த்துக்கொண்டு, அவை நிறைவேறும்போதுமட்டும் இன்ப அனுபவத்தை மக்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதிகமாக இன்பம் வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை.

குறிக்கோள்கள் என்ற போதைப்பொருளில் இருந்து விடுதலை பெற்றவர்களுக்கு மட்டுமே நிலையான இன்பம் கிடைக்கும்.

ஆறாம் காரணம்: துணை செய்வது

துணைக் குறிக்கோள்களை முதன்மை குறிக்கோளாக நினைப்பது மட்டுமே தவறு. வாழ்வில் துணைக்குறிக்கோள்களின் பங்கை அறிந்து அவற்றை உபயோகம் செய்ய வேண்டும். எதிர்காலம் என்பது கற்பனை என்பதால் அடுத்த வருடம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று திட்டமிடுவது தவறு அல்ல. தொடர்ந்து நிகழும் மாற்றங்களின் ஒரு பகுதியாக நமது மனதிலும் பற்பல குறிக்கோள்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். அவற்றை துணைக் குறிக்கோள்கள் என்பதையும் அவற்றால் நமக்கு எவ்வித இன்பத்தையோ மன நிம்மதியையோ பெற்றுத்தர முடியாது என்பதையும் நாம் அறிந்து கொண்டால் போதும். இது போன்ற குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டாலும் அடைய முடியாவிட்டால் எவ்வித துக்கமோ ஏமாற்றமோ ஏற்படாது. ஒரு துணை நடிகை வேலைக்கு வரவில்லை என்பதால் இயக்குனர் வருத்தப்படப் போவதில்லை. ஒரு துணைக் குறிக்கோள் தோல்வி அடைந்துவிட்டால் மற்றொரு குறிக்கோளை முன் வைத்து செயல்களை தொடர்ந்து செய்யலாம். வெற்றி அடைந்தால் கூட வேறு ஒரு குறிக்கோளுக்காக வேலை செய்வது நின்று விடப் போவதில்லை. வாழ்நாள் முழுவதும் ஏதாவது செயல்கள் செய்து கொண்டுதான் இருப்போம். அந்த செயல்களை செய்வதற்கு ஏதாவது குறிக்கோள்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். அவை எந்த வித முக்கியத்துவமும் அற்றவை.

ஏழாம் காரணம்: இருந்துவிட்டு போகட்டும்

திரைக்கதையை புரிந்து கொள்ள பாடல் காட்சிகளை மறக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. அதுபோல இன்பமாக நிகழ்காலத்தில் வாழ துணைக் குறிக்கோள்களை மறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. துணைக் குறிக்கோள்கள் முக்கியமற்றவை என்பதையும் அவற்றால் நம் இன்பம் பாதிக்கப் படுவதில்லை என்பதையும் புரிந்து கொண்டால் போதும்.

மாணவப்பருவம் முடியும்போது பற்பல கனவுகளுடன் வாழ்வைத் துவங்கினோம். நிறைவேறாத கனவுகளை நினைத்து ஏங்குவதில் பயனில்லை. ஏனெனில் அவை நிறைவேறியிருந்தாலும் நமது தற்போதைய நிலையில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஏனெனில் மனம் என்பது முழுமை அடைய வாய்ப்பே இல்லை. மரணம் வரை உடலும் மனமும் தொடர்ந்து மாறிக்கொண்டுதான் இருக்கும். அந்த மாற்றங்களில் குறிக்கோள்கள் என்பவை இயற்கையாக இணைந்து இருப்பவை. அவை நமது இன்பத்திற்கு காரணம் என்று நினைப்பது மட்டும்தான் தவறு.

எட்டாம் காரணம்: சமத்துவம்

துணைக் குறிக்கோள்களுக்குள் ஏற்றத் தாழ்வு கிடையாது. பொது நலத்துக்காக உழைப்பது சுயநலத்துக்காக உழைப்பதை விட மேலானது அல்ல. வெளி உலகை மாற்ற வேண்டும் என்று நினைப்பது மனதை மாற்ற வேண்டும் என்று முயல்வதை விட தாழ்ந்தது அல்ல. பணம் வேண்டும் என்று பாடுபடுவதும் பிரம்மலோகம் செல்ல வேண்டும் என்று உபாசனை செய்வதும் ஒன்றுதான்.

நிகழ்காலத்தில் மாறாமல் இருப்பது இன்பம். இப்போது இருக்கும் இருப்புக்கு மாற்றாக வேறு ஏதோ ஒன்று வேண்டும் என்று அனைத்து குறிக்கோள்களும் தவறாக அறிவுறுத்துவதால் அவை அனைத்தும் தவறானவை. அவற்றுள் ஏற்றத் தாழ்வு எதுவும் கிடையாது. ‘குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல் நிகழ்காலத்தில் இருக்க முயற்சி செய்ய வேண்டும்என்ற குறிக்கோளும் முக்கியமற்றதே.  

ஒன்பதாம் காரணம்: இயற்கையின் செயல்பாடு

மொட்டு மலர்ந்து காய் தோன்றி பிறகு கனியாக மாறுவது இயற்கை. கனியாக மாறவேண்டும் என்ற குறிக்கோளோடு மொட்டு மலர்வதில்லை. பற்றுடையோன் முக்திவிழைவோனாக மாறி முற்றுணர்ந்தோனாக மாறுவதும் இயற்கை. சிலர் உபாசகர்களாக பிரம்மலோகம் செல்லவேண்டும் என்று ஆசைப்படுவதும் வேறு சிலர் இப்போதே இங்கேயே முக்தி அடைய வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்வதும் இயற்கையான மாற்றங்களில் அடங்கும். என்றும் மாறாமல் இருக்கும் இன்பம் இந்த மாற்றங்களின் ஆதாரம்.

பத்தாம் காரணம்: பொழுதுபோக்கு சாதனம்

திரைக்கதைக்கு அவசியம் இல்லாவிட்டாலும் ஒரு இனிமையான பொழுதுபோக்கு அம்சமாக துணை நடிகையர் சேர்ந்து நடனமாடும் ஒரு பாடல் படத்தில் சேர்க்கப் படும். அதுபோல வாழ்க்கைக்கு குறிக்கோள்கள் அவசியமில்லை என்றாலும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வாழ்க்கை சுவையாக இருக்க குறிக்கோள்கள் உதவுகின்றன. இதைச்செய்யப்போகிறேன் என்று தீர்மானம் செய்து செயல் செய்வது இன்றைய இன்பத்தை அனுபவிக்க நமக்கு உதவுகிறது.

முடிவுரை :

‘நான் யார்?’ என்ற கேள்விக்கான பதிலாக ஒரு கற்பனைக்கதை அனைவரது மனதிலும் இருக்கும். இந்த கதை முழுமை அடையவே அடையாது. கூடிய விரைவில் விரும்பியதை அடைந்து திருப்தியுடன் வாழலாம் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரது வாழ்வும் மரணம் வரை துன்பத்துடன் கூடியதாகவே இருக்கும். இந்த துன்பத்தில் இருந்து விடுதலை பெற பிரம்மலோகம் செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் மனிதர்களின் எதிர்பார்ப்பு தொடரும்.

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்போதும் இன்பமாக முற்றுணர்ந்தோர்கள் வாழ்வார்கள். இவர்கள் மனதில் இருக்கும் கற்பனைக்கதையும் முழுமை அடையாது. எனவே துணைக் குறிக்கோள்களை முன் வைத்து எதிர்காலத்தை நோக்கிய பயணமாகத்தான் முற்றுணர்ந்தோர்களின் வாழ்வும் அமையும். ஆனால் மற்றவர்களைப்போல் அல்லாமல் முற்றுணர்ந்தோர்கள் என்றும் இன்பமாக வாழ்வர். இதற்கு காரணம் மாயை செயல்படும் முறையை இவர்கள் அறிந்து இருப்பதுதான். ‘நான் பரமன்என்பதை அறிந்த இவர்கள் தங்கள் மனமும் உடலும் மாயை என்பதையும் அறிவார்கள். எனவே மனதில் தோன்றும் குறையுடன் கூடிய கற்பனைக்கதை, அதை நிறைவு செய்ய முயலும் துணைக் குறிக்கோள்கள், குறிக்கோள்களை அடைய செய்யப்படும் செயல்கள் ஆகியவை நடத்தும் நாடகத்தை மாறாத இன்பத்துடன் இவர்கள் அனுபவிப்பார்கள்.

பயிற்சிக்காக :

1. முதன்மை குறிக்கோள் எது?

2. துணைக் குறிக்கோள்கள் ஏன் முக்கியத்துவம் அற்றவை?

3. துணைக் குறிக்கோள்கள் முக்கியம் அற்றவை என்பதை அறிந்து கொள்வதால் என்ன பயன்?

சுயசிந்தனைக்காக :

1. குறிக்கோள்கள் இல்லாவிட்டால் செயல்கள் நின்றுவிடாதா?

2. மலை ஏறுபவர்கள் சில மணி நேரம் நிகழ்காலத்தில் இருந்து அனுபவிக்கும் இன்பமும் முற்றுணர்ந்தோர்கள் வாழ்வு முழுவதும் அனுபவிக்கும் இன்பமும் ஒன்றா?

Friday, October 12, 2012

Lesson 176:The soul of the knower of Saguna Brahman goes out through the Sushumna Nadi (Brahma Sutra 4.2.17)


பாடம் 176: சுஷும்னா நாடி வழியே உயிர் பிரியும்
பாடல் 513 (IV.2.17)

உபாசகர்கள் மரணமடையும்போது சுஷும்னா நாடி வழியே அவர்களது உயிர் உடலை விட்டுப்பிரியும் என்ற கருத்தை முக்தியடைந்தவர்களின் பார்வையில் ஆராய்ந்து அவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை இந்தப்பாடம் எடுத்துரைக்கிறது.

அனைத்து உயிரினங்களும் தனது வெவ்வேறு வடிவங்கள் என்பதை அறிந்தவர்கள், இந்த உண்மையை எல்லோரும் அறியவேண்டும் என்று ஆசைப்படுவது இயற்கை. முற்றுணர்ந்தோர்களின் நியாயமான இந்த ஆசையை நிறைவேற்ற, ‘காலம்' என்ற மாயை அனுமதி தருவதில்லை. ‘எதிர்காலத்தில் நிச்சயம் முக்தி அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் செயல்படும் மக்களுக்கு காலம் வெறும் கற்பனை என்று முற்றுணர்ந்தோர்கள் கூறுவது புரிவதில்லை.

தண்ணீரில் தெரியும் நிலவை பிடிக்க முயலும் அறியா பாலகனின் தவிப்பை பெற்றோர்களால் இரசிக்க மட்டுமே முடியும். நிலவைப் பிடிக்க அவனுக்கு உதவுவதோ அல்லது அதைப்பிடிக்க முடியாது என்று அவனுக்கு புரியவைக்கவோ இயலாது. வேண்டுமென்றால் நிலவை பிடிக்க அவனுக்கு உதவுவது போல பாவனை செய்யலாம். அப்படிச்செய்தால், சீக்கிரம் நிலவைப் பிடித்துவிடலாம் என்ற குழந்தையின் நம்பிக்கை அதிகமாகி, பின் ஏமாற்றமும் அதிகமாகும்.

சுஷும்னா நாடிவழியே உயிர் பிரியும் என்று எதிர்பார்க்கும் உபாசகர்கள், கூடிய விரைவில் முக்தி கிடைத்துவிடும் என்று நம்பும் முக்திவிழைவோர்கள், நிறைய சம்பாதித்தவுடன் நிம்மதியாக வாழலாம் என கனவு காணும் பற்றுடையோர்கள் ஆகிய அனைவரும் எதிர்காலம் என்ற கற்பனையை நோக்கி ஓடிக்கொண்டு இன்றைய வாழ்வின் இன்பத்தை அனுபவிப்பதில்லை. வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் இவர்களது நிலை பரிதாபத்துக்கு உரியது. எனினும் முற்றுணர்ந்தோர்களால் இவர்களின் தேடலை அன்புடன் இரசிக்க மட்டுமே முடியும். உதவ முடியாது. இவர்களது அறியாமை ஆரம்பம் முதல் ஆழமாக வளர்ந்திருப்பதை முற்றுணர்ந்தோர்கள் அறிவார்கள்.

அறியாமையின் ஆரம்பம்

‘குழந்தை பிறந்திருக்கிறது’ என்ற செய்தியை கேட்டவுடன் எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்வி ‘ஆணா பெண்ணா?’ என்பதுதான். இதுபோல, பிறந்தது முதல் நிறம், பால், குலம், இனம், மதம், சாதி, மொழி, நாடு, வகுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அடையாளத்தை இந்த சமூகம் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. தான் யார் என்பதை அறியாத குழந்தையும் இந்த முத்திரைகளை உண்மை என நம்பி ஏற்றுக்கொள்கிறது.

அறியாமையால் சமூகம் செய்யும் இந்தக் கொடுமையின் தொடர்ச்சியாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை தங்களை அறியாமல் ஏற்படுத்துகிறார்கள். ‘உனக்கு இது போதாது, நீ வாழ்க்கையில் முன்னேற இன்னும் அதிகம் படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும்’ என்பது போன்ற தவறான போதனைகளை மூலம் ‘நான் குறையுள்ளவன்’ என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் பதியவைக்கிறார்கள். 

பெரியவர்கள், சாதனையாளர்கள் ஆகியோரை முன்மாதிரியாக வைத்து என்றேனும் ஒருநாள் நான் அவர் போல ஆகிவிடவேண்டும் என்ற ஆசையுடன் அனைத்து குழந்தைகளும் வளருகிறார்கள். பள்ளித்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கினால்தான் வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்ற சூழ்நிலையில் தன்னைவிட அதிக மதிப்பெண்கள் வாங்குபவர்கள் மீது பொறாமை ஏற்படுகிறது. மூன்று வயதில் ஆரம்பிக்கும் இந்த ஓட்டப்பந்தயம் மரணம் வரைத் தொடரும் என்று மாணவர்களுக்கு தெரிவதில்லை.

எவ்வளவுதான் முயன்றாலும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாது என்பதை மறைமுகமாக உணர்ந்தவுடன் பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் அவர்களை எதிர்த்துப் பேசும் பருவத்தை அடைகிறார்கள். பருவ உணர்ச்சிகளின் தாக்கம் அதிகமானவுடன், ‘என் வாழ்க்கையை உங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் வாழ முடியாது. எனக்கு ஆத்மதிருப்தியை தரும் வேலைகளை மட்டும்தான் நான் செய்வேன்’ என்ற பாணியில் அவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.

தங்களால் பெற முடியாத வெற்றியை தங்களது பிள்ளைகளாவது பெற்றுத் தருவார்கள் என்று காத்திருந்த பெற்றோர்களுக்கு, ‘கிளிக்கு இறக்கை முளைத்து விட்டது. வீட்டைவிட்டு பறந்து போகிறது’, என்று தங்கள் ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை.

மற்றவர்கள் நினைப்பது போல அல்லாமல் தான் மாறுபட்டவன் என்பது மட்டும் இளைஞர்களுக்கு புரியுமே தவிர எந்த விதத்தில் தான் மாறுபட்டவன் என்பதை இவர்கள் அறிவதில்லை. தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை உலகுக்கு காட்ட அரைகுறையாக ஆடைகள் அணிந்து பெரியவர்களுக்கு புரியாத மொழியில் பேச ஆரம்பிப்பார்கள். இந்த நிலையில் ‘நான் யார்? என் ஆத்ம திருப்தி என்றால் என்ன? எதைச்செய்தால் நான் திருப்தியடைவேன்?’ என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்கள் மனதில் தொடரும்.
கற்பனைக்கதை

சிறு வயது முதல் பெற்றோர்களும் மற்றவர்களும் தன் மீது குத்திய முத்திரைகளில் சிலவற்றை ஏற்றும், பலவற்றை மறுத்தும் தான் யார் என்ற கற்பனைக்கதை ஒன்று இவர்கள் மனதில் இவர்களை அறியாமலேயே உருவாகி இருக்கும்பிடித்தவை, பிடிக்காதவை, தெரிந்தவை, தெரியாதவை, இருக்கும் குணங்கள், கிடைத்த பட்டம், பதவி போன்றவைகளை சேர்த்துக்கொண்டு இந்த கற்பனைக் கதை மேலும் வலுவாக வளரும்.

தன்னைப்பற்றி அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் நேரும்போது தன்னை ஒரு தனித்தன்மை உள்ளவராக காட்டிக்கொள்ளவே அனைவரும் முயல்வர். மேலும் தனக்கே திருப்தியில்லாத தன் கதையை எப்படியாவது மெருகேற்றி கேட்பவரை கவர்ந்து விட வேண்டும் என்ற முயற்சியும் தொடர்ந்து நடக்கும். ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் இந்த கற்பனைக்கதையை மற்றவர்கள் அறிய வாய்ப்பு இல்லை. எனவே அனைவரது கதைகளின் தன்மையும் அடிப்படையில் ஒன்றுதான் என்பது யாருக்கும் தெரிவதில்லை.

நான் யார்?’ என்ற கற்பனைக்கதையின் தன்மைகள்

முதலாம் தன்மை: ‘கடந்த கால நிகழ்வுகள்என்று மனதில் பதிவான தனிப்பட்ட நினைவுகளின் அடிப்படையில், தான் யார் என்ற கற்பனைக்கதையை அனைத்து மனிதர்களும் தங்கள் மனதில் வளர்த்துக்கொண்டு இருப்பார்கள்.  இதற்கு விதிவிலக்கே கிடையாது.

பற்றுடையோர்கள் இந்தக் கற்பனைக்கதையை உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். முக்திவிழைவோர்களுக்கு இது கற்பனைக்கதை என்று தெரிந்து இருந்தாலும் அதன் பிடியிலிருந்து தப்ப இயலாமல் தவித்துக்கொண்டு இருப்பார்கள். முற்றுணர்ந்தோர்கள் மனதில் கூட இந்தக்கற்பனைக்கதை இருக்கும் என்றாலும் அதை அவர்கள் உலகுடன் உறவாட மட்டும் பயன்படுத்துவார்கள்.

இரண்டாம் தன்மை: புத்தகங்களில் பதிவான கதைகளைப்போல அன்றி தான் யார் என்ற கற்பனைக்கதை அவரவர் மனதில் எண்ணக்குவியல்களாக இருக்கும். எனவே ஒவ்வொரு நொடியும் இந்த எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன் நம்மைபற்றி நாம் எழுதிய நாட்குறிப்பை படித்தால் இந்த கற்பனைக்கதை எவ்வளவு தூரம் மாறியிருக்கிறது என்பதை உணரலாம்.

மூன்றாம் தன்மை: இந்தக் கற்பனைக் கதையை உற்றுக்கவனித்தால் அது உருத்தெரியாமல் மறைந்துவிடும். நீர்வீழ்ச்சி, ஒரு பெரிய தூண் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, அதில் தொடர்ந்து நீர் விழுந்து கொண்டிருக்க வேண்டும். ஆறு வற்றிவிட்டால் நீர்வீழ்ச்சி மறைந்து விடும். அதுபோல நமது எண்ண ஓட்டங்கள் நின்றுவிட்டால் நான்என்ற கற்பனைக்கதை மறைந்துவிடும். எனவே, ‘நான்மடிந்துவிடாமல் இருக்க மனதில் எப்போதும் எதைப்பற்றியாவது சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் இருக்கும். இதனாலேயே யாராலும் சும்மா இருக்க முடிவதில்லை.

நான்காம் தன்மை: நான் இந்த உலகத்தில் இருந்து வேறுபட்டவன் என்ற தவறான அறிவுதான்நான்என்ற கற்பனைக்கதைக்கு ஆதாரம். எனவே நாம் சந்திக்கும் அனைத்து மனிதர்களைப் பற்றிய கதைகளையும் சித்தரிக்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒவ்வொரு மனிதரும் தன் ஐந்து புலன்களின் அனுபவத்துக்குள் வரும் அனைத்தையும் தனது சிற்றறிவினால் ஆராய்ந்து, தரம் பிரித்துஇது நல்லது’, ‘அவர் கெட்டவர்என்பது போன்ற முத்திரைகளைப்பதித்து உலகம் என்ற கற்பனைக்கதையையும் தொடர்ந்து வளர்த்து வருவார்கள்.

ஐந்தாம் தன்மை: ‘நான் யார்?’ என்ற அனைவரது கற்பனைக்கதையும் குறையுடன் கூடியதாகவே இருக்கும். விரும்பியவரை மணம் செய்துகொள்ள வாய்த்தால்தான் தன் சுயபுராணம்சுபம்என்று நிறைவு பெறும் என்பது போன்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். ‘சுபம்என்று கதை முடிவது திரைப்படங்களில் மட்டும்தான் என்பதை யாரும் அறிவதில்லை. குறையுடன் கூடிய தன் கற்பனைக் கதை நிச்சயம் எதிர்காலத்தில் நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் வாழ்க்கையில் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பார்கள். இதற்கு விதிவிலக்கு முற்றுணர்ந்தோர்கள் மட்டும்தான்.
நிறைய பணம் கிடைத்தால் தனது கற்பனைக்கதை முற்றுப்பெறும் என்று போராடுபவர்கள் பற்றுடையோர்கள். முக்தி அடைந்தால் இந்தப்போராட்டம் முடியும் என்று தவிப்பவர்கள் முக்திவிழைவோர்.

முற்றுணர்ந்தோர்களின் கற்பனைக்கதை கூட குறையுடன்தான் இருக்கும். மற்றவர்களைப்போல அவர்களும் இந்த குறையை நிறைவு செய்யும் நோக்கத்துடன் தான் செயல்படுவார்கள். ஆனால், தன் மாயா சக்தியின் வெளிப்பாடுதான் இந்தக்கதை என்பதையும் அது எப்போதும் நிறைவு அடையாது என்பதையும் அறிந்த காரணத்தால் அவர்களது வாழ்வு ஒரு போராட்டமாக இல்லாமல் விளையாட்டாக இருக்கும்.


நான் யார்?’ என்ற கற்பனைக்கதையின் செயல்கள்

முதலாம் செயல்: நிகழ்காலத்தை மறுத்தல்

நான் முழுமையானவனாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்கள் செய்வதால் நிகழ்காலம் என்பது எதிர்காலத்துக்கு செல்ல உதவும் ஒரு படிக்கட்டாக மட்டுமே அனைவராலும் கருதப்படுகிறது.

அனுபவங்களை அனுபவிக்காமல் அவை எவ்வளவு தூரம் தனது கற்பனைக் கதையை மெருகேற்றும் என்பதை மட்டும் கவனிப்பதால் பெரும்பாலும் நிகழ்காலத்தில் யாரும் வாழ்வதில்லை. தேடியது கிடைத்தபின் ஏற்படும் மகிழ்ச்சி ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்கும். அதற்குள், இந்த வெற்றி எவ்வளவு தூரம் தன் கதையின் சுப முடிவை நோக்கிச் செல்ல உதவுகிறது, இதை ஆதாராமாகக் கொண்டு எந்த விதத்தில் நாம் இன்னும் முன்னேறலாம், இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற எண்ணங்கள் நிகழ்கால இன்பத்தை தடை செய்துவிடும்.

இரண்டாம் செயல்: காலப்பயணம் (Time Travel)

நேற்று கோபமாக பேசியவன் இன்று ஏன் புன்னகைக்கிறான், ஒருவேளை நமக்கு எதிராக ஏதாவது செய்யப்போகிறானோ?’ என்பது போன்ற எண்ணங்கள் நம்மை தொடர்ந்து கடந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே பயணம் செய்ய வைக்கும்.  எதை வெட்டலாம் அல்லது எதை ஒட்டலாம் என்று ஆராய்வதிலேயே கவனம் இருப்பதால், திரைப்படத் தொகுப்பாளர்கள் படத்தில் வரும் காட்சிகளை அனுபவிப்பதில்லை. அதுபோல நமது மனம் நிகழ்வுகளை தொடர்ந்து விமரிசனம் மட்டுமே செய்துவரும். தன்னை மறந்து நிகழ்வுகளுடன் ஒன்றுவது எப்போதாவது நடக்கும். அதுவும் வெகுநேரம் தொடர்வதில்லை.

மூன்றாம் செயல்: ஆட்சேபம்

உலகம் என்ற கற்பனைக்கதை நான் யார் என்ற கற்பனையின் முழுமைக்கு உதவும் வகையில் அமையவில்லை என்றால் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

நான்காம் செயல்: எதிர்காலத்தை நோக்கிய ஓட்டம்

நிகழ்காலத்தில் திருப்தியடையாமல் எதிர்காலத்தில் முழுமை அடையலாம் என்று ஏங்கும் மக்கள், எதையும் நிறுத்தி நிதானமாகச் செய்வதில்லை. காலம் போனால் வராது என்ற எண்ணத்துடன் எப்போதும் ஏதையாவது வேகமாக செய்து கொண்டு இருப்பார்கள். பயணம் செய்யும்போது தொலைபேசியில் பேசுவது, கணிணியில் வேலை செய்வது அல்லது குறைந்தபட்சம் செய்தித்தாள்களை வாசிப்பது என்று எப்படியாவது குறைந்த நேரத்தில் நிறைய வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவார்கள்.

ஐந்தாம் செயல்: தவறான அறிவு

உள்ளதை உள்ளபடி பார்க்கும் சக்தி பெரும்பாலான மக்களுக்கு இருப்பதில்லை. இதனால் தனக்கு எந்த வகையில் நன்மை ஏற்படும் என்ற குறுகிய நோக்கில்தான் உலகை இவர்கள் பார்ப்பார்கள். செடியில் பூத்திருக்கும் மலர் அழகாக இருப்பதை பொதுவாக கவனிப்பதில்லை. அப்படியே கவனித்தாலும் அதை பறித்து வீட்டை அலங்கரிக்கலாம் என்ற எண்ணம் உடனே ஏற்படும். எனவே ஒவ்வொருவர்க்கு உள்ளும் இருக்கும் இந்த கற்பனைக்கதை உலகை சரியான பார்வையுடன் பார்க்கும் சக்தியை மறைத்துவிடுகிறது.


நான் யார்?’ என்ற கற்பனைக்கதையின் விளைவுகள்

முதலாம் விளைவு: ஆசை

தனது திருப்தியின்மையை அகற்ற உலகில் உள்ள பொருள்கள் கிடைக்க வேண்டும் என்றோ அல்லது இறைவனின் கருணை வேண்டும் என்றோ ஏதோ ஒரு ஆசை எல்லோருக்கும் இருக்கும். பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விட்டால் பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்ற ஆசை நமது கற்பனைக்கதையின் விளைவு.  

குறை நிறையவே நிறையாது என்பதால் ஆசைகள் அடங்குவதே இல்லை. இதனால் தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கி ஓடும் ஓட்டப்பந்தயம் வாழ்வின் இறுதிவரை தொடரும்.

இரண்டாம் விளைவு: பயம்

ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயமும் நிறைவேறிய பின் ஏற்படும் திருப்தி நிலைக்க வேண்டுமே என்ற ஏக்கமும் வாழ்வில் இருந்து கொண்டே இருக்கும். ஆசைகள் முடிவதில்லை என்பதால் அதனால் ஏற்படும் பயமும் ஒரு நாளும் முடிவுக்கு வராது.

மூன்றாம் விளைவு: துக்கம்

ஆசையும் பயமும் தொடர்ந்து மக்களை துன்பக்கடலில் ஆழ்த்திவிடும். நான் என்ற கற்பனைக்கதை மக்களின் வாழ்வுக்கு பொறுப்பு ஏற்று நடத்தும் வரை துன்பத்தை தவிர்க்க முடியாது.

நான்காம் விளைவு: இன்பமின்மை

இன்பம் என்பது நிகழ்காலத்தில் மட்டுமே இருப்பது. மனதில் தோன்றும் எண்ணங்கள் மக்களை இன்பமாக இருக்கவிடுவதில்லை.

ஐந்தாம் விளைவு: உலகின் மேல் நம்பிக்கையின்மை

தன் முன்னேற்றத்துக்கு தன்னை சுற்றியிருப்பவர்கள் தடையாய் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் அனைவரும் செயல்படுவார்கள். இதனாலேயே வாழ்க்கையை ஒரு போரட்டமாக தெரியும். உலகத்தை மாற்றினால்தான் தன் கதை சுபமாக முடியும் என்ற எண்ணத்துடன் நிகழ்காலத்தில் இருக்கும் நிலையை எப்படியாவது மாற்றிவிட இவர்கள் தொடர்ந்து முயல்வார்கள். இந்த முயற்சி பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை என்ற காரணத்தால் இவர்களுக்கு உலகின் மேல் இருக்கும் நம்பிக்கை வயதாக வயதாக குறைந்து, கடைசிகாலத்தில் இந்த உலகை விட்டு சொர்க்கத்துக்கு போக வேண்டும் என்ற ஏக்கம் ஏற்படும்.

முடிவுரை :

‘நான் பரமன்’, என்பதை அறியாத காரணத்தால் ஒவ்வொருவர் மனதிலும் நான்’ என்பதன் விளக்கமாக ஒரு கற்பனைக்கதை உருவாகி இருக்கும். கற்பனைகள் ஆளுக்குஆள் வேறுபட்டாலும் அடிப்படையில் யாருடைய கதையும் திருப்திகரமாக இருப்பதில்லை. தனது குறையை நிறைக்கும் பொருள் வெளி உலகில் இருக்கிறது என்ற நம்பிக்கையில் அனைவரும் தொடர்ந்து போராடிக்கொண்டு இருப்பார்கள். அவ்வப்போது கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளின் போது  அனுபவிக்கும் இன்பம் உலகிலிருந்து கிடைப்பதாக நினைத்து மேலும் வேகமாக நிலையான இன்பத்தை தேடி ஓடுவார்கள். இவ்வாறு வாழ்நாள் முழுவதும் தேடிவிட்டு வாழ்வின் இறுதி கட்டத்தில் சுஷும்னா நாடி வழியே தங்கள் உயிர்பிரியவேண்டும் என்று இறைவனை உபாசிப்பார்கள்.

ஓய்வைத்தேடி வேகமாக ஓடுபவனைப்போல நிகழ்காலத்தில் இருக்கும் இன்பத்தை தேடி எதிர்காலத்துக்கு ஓடும் மனிதர்களின் வாழ்க்கையை முற்றுணர்ந்தோர்களால் பார்த்து இரசிக்க முடியுமே தவிர உதவ முடியாது. ஓடுவதை நிறுத்தினாலே தேடுவதை பெற்று விடலாம் என்று அவர்கள் உபதேசம் கூறினாலும், ஓடுவதை நிறுத்துவது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும்என்ற பாணியில் மக்களின் தேடல் தொடரும்.

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முயன்று ஏமாறுவதைப் போல நிம்மதியும் மகிழ்வும் பொங்கித்ததும்பும் நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலம் என்ற கற்பனையை நோக்கி ஓடுவதே பெரும்பாலோரின் வாழ்க்கையாக அமைகிறது.

அனைவரும் முக்தி பெற்று இன்பமாக வாழும் உலகம் ஒன்றை ஏற்படுத்த முடியாது என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்கள், நடக்கும் நாடகத்தில் தங்கள் பங்கை இன்பமாகச் செய்வார்கள்.


பயிற்சிக்காக :

1. கற்பனைக்கதை என்று குறிப்பிடப்படுவது எது?

2. இந்தக் கற்பனைக்கதை உருவாக காரணம் என்ன?

3. அதன் தன்மைகள் யாவை?

4. அதன் செயல்கள் யாவை?

5. அதன் விளைவுகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. கற்பனைக்கதையை உருவாக்காமல் இருக்க முடியுமா?

2.உண்மையல்ல, வெறும் கற்பனைஎன்று தெரிந்த பின்னும் ஏன் துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ முடியவில்லை?

3. முக்திவிழைவோர்கள் முற்றுணர்ந்தோர்களாக மாற காலம் தேவையில்லையா?