Sunday, February 27, 2011

Lesson 149: Priest and the sacrificer (Brahma Sutra 3.4.44-46)

பாடம் 149: பலவிதமான மக்கள்
பாடல் 469 – 471 (III.4.44-46)

பூஜாரி யாகங்களை நடத்திக்கொடுப்பதற்கான பணத்தை பெற்றுக்கொள்வதால் யாகத்தின் பலன்கள் யஜமானனைச்சேரும் என்ற கருத்தை கூறுவதன் மூலம் முக்தியடைய முயலும் மக்கள் தங்கள் முயற்சி சரியான பலனை தருகிறதா என்பதை ஆராயவேண்டியதன் அவசியத்தை இந்தப்பாடம் விளக்குகிறது.

முகம் பார்க்கும் கண்ணாடி

புகைப்படத்தை பார்த்தோ மற்றவர்களின் அபிப்பிராயத்தை கேட்டோ நம் முகம் எப்படியிருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ளவே முடியாது. கண்ணாடி மட்டும்தான் நம் முகத்தை நமக்கு காட்டவல்லது. கண்ணாடியை சரிபார்க்க அதன் வழியாக வேறு ஒரு பொருளின் பிம்பம் சரியாகத்தெரிகிறதா என்று சோதிக்க வேண்டும்.  

சுய அறிவினால் யோசித்தோ மற்றவர்களின் அபிப்பிராயத்தை கேட்டோ நான் யார் என்பதை தெரிந்து கொள்ளவே முடியாது. வேதம் மட்டும்தான் நாம் யார் என்பதை நமக்கு காட்டிக்கொடுக்கும் கண்ணாடி. வேதம் குற்றமற்றது என்று உணர்ந்துகொள்ள உலகத்தைப்பற்றி வேதம் கூறும் கருத்துக்களை நம் அனுபவத்தோடு ஒப்பிட்டு சரிபார்க்கவேண்டும். 

வேதத்தை பிரமாணமாக ஏற்றுக்கொண்டவர்களிடையேகூட அதன் அடிப்படை கருத்து என்ன என்பது பற்றி அபிப்பிராய பேதம் உள்ளது. நான் பரமன், நான் கடவுளின் ஒரு பகுதி, நான் கடவுளின் அடிமை என்று ஒன்றுக்கொன்று முரணான முடிவுகளை வேதம் கூறுவதாக தோன்றினால் நாம் வேதத்தின் மீது சந்தேகம் கொள்ள கூடாது.

நமது பார்வை சரியாக இல்லாவிட்டால் கண்ணாடி சரியாக இருந்தும் அதில் தெரியும் நமது முகத்தை சரியாகபார்க்க முடியாது. எனவே கண்ணாடியை சந்தேகிக்காமல் நமது பார்வையை சோதிக்க வேண்டும். அதுபோல வேதம் கூறும் உண்மையை சரியாக புரிந்துகொள்ள நமது அறிவு கூர்மையாக இருக்க வேண்டும். மக்களின் அறிவுத்திறன் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபடுவதால்தான் வேதம் கூறும் ஒரே உண்மையை அடிப்படையாக கொண்டு பல்வேறு மதங்கள் நிலவி வருகின்றன. நான் யார் என்ற கேள்விக்கு வேதம் கூறும் ஒரே பதிலை சரியாக புரிந்து கொண்டேனா என்பதை தெரிந்து கொள்ள பின்வரும் ஆராய்ச்சி உதவும்.

செவ்வக ஆராய்ச்சி

காகிதத்தில் ஒரு செவ்வகத்தை வரைந்து அதன் நடுவில் குறுக்கேயும் நெடுக்கேயும் இருநேர்கோடுகள் வரைந்து அதை நான்கு பகுதிகளாக பிரித்து ‘இதில் எத்தனை செவ்வகங்கள் இருக்கின்றன’ என்ற கேள்வியை கேட்டால் பல்வேறு பதில்கள் கிடைக்கும். ஒரு சிலர் நான்கு என்றும் மற்றும் சிலர் ஐந்து என்றும் பதிலளிப்பர். எது சரியான விடை என்பதை அறிய யார் அதிக எண்ணிக்கையை சொல்கிறாரோ அவரிடம் விளக்கம் கேட்கவேண்டும். ‘ஐந்து’ என்பவர், ‘எப்படி நான்கு?’ என்பதையும் விளக்கும் அறிவு பெற்றிருப்பார். நான்குதான் முடிவான விடை என்று பிடிவாதம் பிடிப்பவர் ஐந்து என்பவரை குருவாக ஏற்றுக்கொள்ளாதவரை கேள்விக்கு சரியான பதிலை தெரிந்து கொள்ள முடியாது.

கூடியிருக்கும் அனைவரும் ஐந்து என்ற பதிலை ஏற்றுக்கொண்டால் கூட அதுதான் சரியான விடை என்பது நிரூபணமாகாது. ஏனெனில் சரியான விடை ஒன்பது. நான்கிலிருந்து ஐந்து என்று கற்றுத்தேறியவர்களில் அறிவுத்திறன் குறைந்தவர்கள் தாங்கள் கண்டுகொண்டதுதான் முடிவான உண்மை என்ற முடிவோடு எப்படி ஒன்பது சரியான விடையாக இருக்க முடியும் என்பதை ஆராயமாட்டார்கள். மற்றவர்களின் விடை வேறாக இருப்பதன் காரணத்தை ஆய்ந்து சரியான பதிலைத்தெரிந்துகொள்ளும் ஆவலும் அறிவு கூர்மையும் இருப்பவர்கள் மட்டுமே இந்த கேள்வியின் இறுதியான பதிலை தெரிந்து கொள்ளவார்கள்.

ஒன்பது செவ்வகங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டபின்னும் அதற்கு மேல் இருக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகத்துடன் இருப்பவர்கள் முடிவான பதிலை தெரிந்து கொண்டவர்கள் அல்ல. ஒன்பதுதான் சரியான விடை என்பதில் உறுதியாக இருப்பவர்கள் மற்ற அனைவரும் ஏன் தவறான பதிலை கூறுகிறார்கள் என்று அறிவார்கள். மேலும் நான்குதான் சரியான விடை என்று பிடிவாதம் பிடிப்பவர்களைப்போலன்றி ஒன்பதுதான் சரியான விடை என்பதில் அறிவுபூர்வமான உறுதியுடன் இருப்பார்கள்.

நான்கு, ஐந்து போன்ற பதில்கள் ஒன்பது என்பதில் அடங்கியிருப்பதைப்போல வேதத்தின் முடிவான பதில் மற்ற அனைத்து பதில்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். எனவே நிலையான முக்தியடைய உலகத்தில் உள்ள அனைத்து  மதங்களின் கொள்கைகளைப்பற்றியும் மற்றவர்கள் ஏன் தவறான அறிவுடன் இருக்கிறார்கள் என்பதைப்பற்றியும் தெளிவாகத்தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிவுத்திறன்

சென்றபிறவிகளில் சேர்த்து வைத்த அறிவுத்திறனுடன்தான் குழந்தைகள் பிறக்கின்றன. உடல் மற்றும் மூளை வளர்ச்சி ஏற்கனவே உள்ளிருக்கும் அறிவை வெளிப்படுத்த உதவுமே தவிர புதிதாக அறிவை உண்டுபண்ணுவதில்லை. உண்ணும் உணவு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறமை மற்றும் சுற்றுபுற சூழலின் தாக்கம் ஆகியவற்றால் அறிவின் அளவை தீர்மானிக்க முடியாது. கற்பதனால் மட்டுமே அறிவு வளரும். எனவே மக்கள் கல்வி கற்க எடுத்துக்கொண்ட முயற்சி வேறுபடுவதனால் மட்டுமே அவர்களின் அறிவுத்திறன் வேறுபடுகிறது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அதிக அறிவுத்திறனுடன் பிறந்தவர்கள் வேகமாக கற்று தங்கள் அறிவை மற்றவர்களைவிட மேலும் அதிகபடுத்திக்கொள்ளும் சக்தியுடையவர்கள். ஆனால் யாராலும் தீடீரென்று அறிவாளியாக மாறிவிடமுடியாது. பள்ளி இறுதித்தேர்வில் மிகக்குறைவான மதிப்பெண் பெற்ற மாணவனால் கல்லூரிப்படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்க முடியாது. பலபிறவிகளில் சேர்த்த அறிவு அழியாது. அளவுக்கு அதிகமாக அதை வளர்க்கவும் முடியாது. எனவே தற்பொழுது நமக்கு இருக்கும் அறிவை ஒரளவு வளர்த்துக்கொள்ள முடியுமே தவிர ஒரேயடியாக வளர்த்து ஐன்ஸ்டீனாக மாற முடியாது. ஐந்தில் வராத கணக்கு ஐம்பதிலும் வராது.

செவ்வக ஆராய்ச்சியில் ஒன்பது என்ற சரியான விடையை உறுதியுடன் தெரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவுத்திறன் உள்ளவர்களால் மட்டுமே வேதத்தின் சாரத்தை புரிந்து கொண்டு முக்தியடைய முடியும். சொல்லிக்கொடுத்தபின்னும் ஒன்பது செவ்வகங்களை பார்க்கத்தெரியாதவர்கள் தங்கள் வாழ்வின் துன்பங்களை முற்றிலுமாக கடக்க தேவையான அறிவுத்திறன் இல்லாதவர்கள்.

அறிவுத்திறனை ஒருவர் எப்படி உபயோகப்படுத்துகிறார் என்பது அவரது விருப்பு வெறுப்புகளை பொறுத்து அமையும். கடவுள், வேதம் போன்ற ஆன்மீக விஷயங்களில் விருப்பமில்லாதவர்கள் தங்கள் அறிவை வேதம் படிக்க செலவிட மாட்டார்கள். இவர்கள் நான் யார் என்ற கேள்வியின் பதிலை அறிந்து கொள்வது அவசியம் என்றும், அந்த அறிவு வேதத்திலிருந்து மட்டுமே கிடைக்கும் என்றும் வேதத்தை படித்து புரிந்து கொள்ள ஆசிரியரின் துணை தேவை என்றும் அறியமாட்டார்கள். எனவே போதிய அறிவுத்திறன் மற்றும் வேதத்தின் மேல் நாட்டம் ஆகிய இரு தகுதிகள் இருப்பவர்களால் மட்டுமே முக்தியடைய முடியும்.

பல்வேறு மதங்கள் காட்டும் ஒரே உண்மை

தூய்மையாக துடைக்கப்பட்ட கண்ணாடிதான் முகத்தை சரியாக காட்டும். அது போல அறிவின் துணையால் வேதத்தை தீவிரமாக ஆய்ந்தால்தான் நான் யார் என்பதை உறுதியாக உணர முடியும். முகத்தைப்பார்ப்பதற்காகவே கண்ணாடியை பார்க்கிறோம். அதுபோல் வேதம் படிப்பதன் ஒரே நோக்கம் நான் யார் என்பதை தெரிந்துகொள்வதற்காக என்ற தெளிவுடன் வேதத்தை ஆசிரியரின் துணையுடன் படிப்பவர்கள் உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒரே கருத்தைத்தான் கூறுகின்றன என்ற உண்மையை முடிவில் உணர்வார்கள்.

மனிதர்களின் அறிவுத்திறன் மாறுபடுவதால்தான் மதங்களிடையே வேறுபாடுகள் இருப்பதுபோல தோன்றுகிறது. செவ்வக ஆராய்ச்சியில் நான்கு அல்லது ஐந்து என்று விடையளிப்பவர்களை தவறு என்று தள்ளிவிடமுடியாது. ஏனெனில் அவர்களது அறிவுக்கேற்ற சரியான விடையை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அதுபோல வெவ்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் முடிவான உண்மை அனைத்து மதங்களுக்கும் பொதுவானது என்பதை அறியாதவர்கள். ஆயினும் அவர்களது அறிவின் தரத்துக்கு ஏற்றவாறு அவர்கள் புரிந்து கொண்ட மதக்கொள்கைகள் தவறு அல்ல. நான்கு என்பவனுக்கு ஐந்தாவது செவ்வகத்தை அடையாளம் காட்டி அவனை முன்னேற உதவாமல் அவன் விடை தவறு என்று அவனை மட்டம் தட்டி ஏளனம் செய்வது சிறுபிள்ளைத்தனம்.

மருத்துவர்கள் அனைவரும் அனைத்து வித நோய்களை குணப்படுத்தும் அறிவைக்கொண்டிருந்தாலும் அவர்களிடம் செல்லும் நோயாளிகளின் அடிப்படையில் இவர் காசநோய் மருத்துவர், இவர் குழந்தை மருத்துவர் என்று தரம் பிரிப்பதுபோல மதங்கள் அவற்றை பின்பற்றுபவர்களின் அறிவுத்திறனின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. 

பரலோகத்திலிருந்து இரட்சிப்பவன் கடவுள் என்று நம்புபவனின் மதம் நானும் கடவுள் என்று கூறுபவனின் மதத்திலிருந்து வேறுபட்டதாக காட்சியளிக்கிறது. தேவையான அறிவுத்திறனும் கடவுள் யார் என்பதை அறியும் அடங்கா ஆவலும் கொண்டவன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்றாலும் முடிவான உண்மையை அறிந்துகொள்வான். கேட்பவர்களுக்கு புரியும் விதத்தில் ஆசிரியர் முதலில் நான்கு பின் ஐந்து என்று படிப்படியாக முன்னேறி முடிவில் ஒன்பதை காட்டிகொடுப்பது போல் அனைத்து மதங்களும் நான் பரமன் என்ற முடிவான உண்மையை மட்டும்தான் படிப்படியாக போதிக்கின்றன.

வேதம் ஒன்றே

அனைத்து மதங்களும் முழுமுதல் கடவுள் ஒருவனே என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்கின்றன. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் தர்க்க அறிவிற்கு ஏற்புடையதாக இல்லை. கடவுள் ஒருவன் என்பதால் கடவுளின் உபதேசங்களான வேதம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். கடவுள் பொய்பேச மாட்டார்.  

வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதால் ஒரே உண்மை பலதரப்பட்ட மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.

வேதத்தில் கூறும் முடிவான கருத்தை புரிந்து கொண்டுவிட்டேன் என்றுதான் அனைவரும் நம்பிக்கொண்டிருப்பார்கள். அனைத்து நம்பிக்கைகளும் சரியானவை என்பதால் யாரிடமும் அவர்களின் நம்பிக்கைத்தவறு என்று சுட்டிக்காட்டக்கூடாது. ஐந்து செவ்வகங்களை கண்டவன் நான்கு என்று கூறுபவனை ஏளனமாக பார்க்க கூடாது. மேலும் அவனது அறிவுத்திறன் அவனது  சொந்த முயற்சியால் வளரும் வரை நான்குதான் முடிவான பதில் என்ற நிலையிலிருந்து அவர்கள் முன்னேற மாட்டார்கள். எனவே தான் ஐந்து என்று நினைத்துக்கொண்டிருப்பது சரிதானா என்று ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கையை மட்டும் சோதிக்கவேண்டுமே தவிர மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

எவ்வளவுதான் முயன்றாலும் வேதத்தின் நான் பரமன் என்கிற முடிவான அறிவை அனைவரும் புரிந்து கொள்ளும்படி செய்ய முடியாது. கூரிய அறிவுத்திறன், மனப்பக்குவம், அடங்கா ஆவல், வேதத்தை முறையுடன் படிக்கும் வாய்ப்பு ஆகிய அனைத்தும் ஒருசிலருக்கே உள்ளது என்பதால் சரியான பதில் தெரிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். ஒருவேளை பெரும்பான்மை மக்களின் கருத்து நம்முடன் ஒத்துப்போனால் அது தவறான கருத்தாக இருக்க வாய்ப்பு மிக அதிகம். ஐந்து தான் சரியான விடை என்று அறிந்தவர்களின் எண்ணிக்கை நான்கு என்ற பதிலை சொல்பவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும். மிகச்சொற்பமானவர்களே ஒன்பது என்ற சரியான பதிலை அறிந்திருப்பார்கள்.

என்னுடைய மதம் மட்டும்தான் சரியானது அல்லது எனது கடவுள் மட்டும்தான் ஒரே கடவுள் என்று போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். அவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்துகொண்டபின் தங்களுடைய நம்பிக்கை சரிதானா என்று சோதனை செய்தால் மட்டுமே முடிவில் முக்தியடைவார்கள்.

சத்திய சோதனை

நாம் அறிந்ததுதான் வேதத்தின் முடிவான உண்மையா என்று நமது அறிவை நாமே சோதனை செய்துகொள்ள பின்வரும் உபாயங்கள் உதவும்.

முதல் சோதனை: உலகத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை

முற்றுணர்ந்தோனின் பார்வையில் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் மிகச்சரியாக நடப்பதாகவே தெரியும். கலிகாலம் முற்றிவிட்டது என்று இவன் புலம்பமாட்டான். ஆட்சியை மாற்றவேண்டும், சமூகத்தை முன்னேற்ற வேண்டும், இளஞர்களை திருத்த வேண்டும், வறுமையை ஒழிக்கவேண்டும் என்பது போன்ற எவ்வித குறிக்கோள்களும் இவனுக்கு இருக்காது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்பது போன்ற தினசரி செய்திகள் இவனை எவ்விதத்திலும் பாதிக்காது.

இரண்டாம் சோதனை: சரியான விளக்கம்

நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சரியான காரணங்கள் இவனுக்கு தெரிந்து இருக்கும். எதையறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை இவன் தெரிந்து கொண்டுவிட்டதால் ‘இது ஏன் இப்படி நடக்கிறது’ என்ற கேள்வி இவன் மனதில் எழவே எழாது. விபத்து, இயற்கையின் சீற்றம், தற்செயல் என்பதுபோன்ற தர்க்கத்துக்கு ஒவ்வாத காரணங்களை இவன் ஏற்றுக்கொள்வதில்லை.  கடவுள் யார், அவர் ஏன் இவ்வுலகை இவ்வாறு உருவாக்கினார் என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்கள் இவனுக்கு தெரியும் என்பதால் இவற்றை மற்றவர்களுக்கு புரியவைக்கும் திறமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவனது அமைதி எப்பொழுதும் குறையாது.

மூன்றாம் சோதனை: மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே

ஒவ்வொருவரும் ஒரு விதம் என்று இவன் அறிந்திருப்பதால் யாரையும் தவறு என்று விமரிசிக்கமாட்டான். யாரையும் யாரும் மாற்றமுடியாது என்பது இவனுக்குத் தெரியும். எனவே தன் வாழ்வில் தன்னோடு உறவாட வாய்ப்பவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வான். தன்னைத்தானே மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கு முடிந்த உதவியை செய்வான். இராவணன் சீதையை கடத்திச்சென்றாலும் அவன் இராமாயணத்திற்கு அவசியம். அது போல கெட்டவர்கள் படைப்பின் முக்கியமான அங்கம் என்று அறிந்த முற்றுணர்ந்தோன் யாரையும் வெறுக்க மாட்டான்.  

நான்காம் சோதனை: கருத்துப்பரிமாற்றம்

வாதம், விவாதம், சொற்பழிவு, கருத்தரங்கம் போன்றவற்றில் பங்கேற்க வேண்டிய அவசியம் இவனுக்கு இல்லை. முடிவான உண்மையை இவன் அறிந்து கொண்டுவிட்டதால் மற்றவர்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு இவன் எவ்வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

உதாரணமாக மறுபிறவி என்பது உண்மையா பொய்யா என்ற விவாதம் அனாவசியம் என்று அவனுக்குத்தெரியும். அவரவர் தன்னுடைய மதகுருமார்களின் வார்த்தைகளை முதலில் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு வேதம் கூறும் முடிவான உண்மையை ஆய்ந்து அறிந்து கொள்ளவேண்டும். அதன்பின் ஏன் மறுபிறவியை பற்றி விவாதிக்க கூடாது என்பதும் எவ்வாறு வெவ்வேறு வழிகளில் போதிக்கும் மதங்கள் ஒரே இறுதிகருத்தைத்தான் கூறுகின்றன என்பதும் புரியவரும்.

இவன் தானறிந்த உண்மையை மற்றவர்களுக்கு பரப்பவேண்டும் என்ற ஆவலுடன் செயலாற்றுவதில்லை. ஏனெனில் பெரும்பாலோருக்கு அது புரியாது என்பதை இவன் அறிவான். எது முடிவான உண்மை என்பது ஜனநாயக முறையில் தெரிவு செய்ய முடியாது என்பதை அறியாதவர்கள் தங்களது கொள்கைகளை ஆதரிக்கும் கும்பலை அதிகப்படுத்த முயன்றுகொண்டிருப்பார்கள். தன்னால் அவர்களது கொள்கை முடிவான உண்மையல்ல என்று தர்க்கத்தின் அடிப்படையில் நிரூபிக்க முடியுமென்றாலும் தன்னை குருவாக ஏற்று தன்னிடம் பாடம் கேட்கும் சீடர்களுக்கு மட்டுமே இவன் தன் கருத்துக்களை எடுத்துரைப்பான்.

மறுபிறவி உண்டா இல்லையா என்று யாரேனும் இவனிடம் நேரடியாக கேட்டால் கேட்பவனின் தராதரத்தைப்பொறுத்து ஆம், இல்லை, தெரியாது என்று வெவ்வேறு பதில்களை கொடுப்பான். அறிவுத்திறன் ஆளுக்காள் மாறுபடுவதால் அவரவரின் ஜீரணசக்திக்கு ஏற்புடைய பதிலை அவன் கொடுப்பான்.

ஐந்தாம் சோதனை: கடவுளை அறிதல்

பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தனக்கு அன்னியமாக பார்ப்பவர்கள் நிறைந்த இவ்வுலகில் மற்றவர்களுக்காக கோவிலுக்கு செல்வது கடவுளை உபாசித்து உலக நலனுக்காக பிரார்த்தனைகள் செய்தாலும் ‘எனக்கு இது வேண்டும்’ என்று கடவுளிடம் எதுவும் எப்பொழுதும் கேட்கமாட்டான்.

ஆறாம் சோதனை: மக்களை அறிதல்

மரணமில்லா பெருவாழ்வு, என்றும் ஆனந்தம் மற்றும் அறியும் ஆவல் ஆகிய மூன்று அடிப்படை ஆசைகளால் உந்தப்பட்டு அனைத்து மக்களும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் அறிவுத்திறன் வேறுபடுவதால் இந்த மூன்று ஆசைகளை பூர்த்திசெய்துகொண்டு முக்தியடைய அவர்களால் முடிவதில்லை.

சுற்றியுள்ள மனிதர்களையும் சூழலையும் மாற்றி அமைத்தால் இந்த மூன்று ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து உழைப்பவர்கள்  உலகத்தைச்சார்ந்து இருப்பவர்கள். இவர்கள் முதல் நிலையில் உள்ள மனிதர்கள்.

கடவுளை சரணடைந்தால் மட்டும்தான் இந்த மூன்று வரங்களையும் பெற முடியும் என்ற நம்பிக்கையில்  இறைதிருப்பணிகளில் ஈடுபட்டு இறைவனைச்சார்ந்து இருப்பவர்கள் இரண்டாம் நிலையில் உள்ள மனிதர்கள். 

உலகத்தை மாற்ற உழைத்தும் கடவுளிடம் சரணடைந்து செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்தும் மனம் பக்குவபட்டபின் இவர்கள் உலகப்பள்ளியின் இறுதித்தேர்வை எழுத தகுதி பெறுவார்கள். நான் யார் அல்லது கடவுள் யார் என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே இந்த மூன்று ஆசைகளை முழுதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற தெளிவோடு இவர்கள் செய்யும் முயற்சி வெற்றிபெற்றால் முற்றுணர்ந்தோன் என்ற பட்டம் பெற்று பிறப்பு-இறப்பு சுழலிலிருந்து விடுதலையடைந்து மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள்.

இந்த நிலையை அடையும்வரை அனைத்து மக்களுக்கும் என்னவென்று தெளிவாக சொல்லத்தெரியாத ஒரு குறை அல்லது ஒரு ஏக்கம் இருந்துகொண்டேயிருக்கும். ஏனெனில் மரணமில்லா பெருவாழ்வு என்பதற்கு என்ன அர்த்தம் என்பது அந்த குறிக்கோளை அடைந்த பின்தான் தெளிவாகத்தெரியவரும். எனவே அதுவரை வார்த்தைகளால் விளக்கமுடியாத ஏக்கம் மட்டும்தான் இருக்கும்.

மூன்று ஆசைகளின் இருப்பிடம் தான்தான் என்ற அறிவு அவர்களிடம் இல்லை என்பதை முற்றுணர்ந்தோன் மட்டுமே உணர்வான்.   பள்ளி இறுதித்தேர்வில் தேறியவன் மற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற தன்னால் ஆன உதவியை செய்வது போல முக்தியடைந்தவன் தான் பயணித்த பாதை மற்றும் அதில் இருந்த தடைகளை கடக்கும் விதம் ஆகியவற்றை தன்னை குருவாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு தெளிவாக காட்டிக்கொடுப்பான்.

ஏழாம் சோதனை: வாழ்க்கைப்பயணத்தை அறிதல்

எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கும் விளக்கமுடியாத குறையை நிறைசெய்ய முதலில் மக்கள் விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் செயல்கள் செய்வார்கள். சரி-தவறு என்ற அடிப்படையில் தர்மமான காரியங்களை செய்தும் அதர்மங்களை தவிர்த்தும் வாழ்ந்தால் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுதலைபெற்று குருவிடம் சரணடையும் மனப்பக்குவத்தை பெறுவார்கள். அதன்பின் அவர்களின் ஆன்மீகப்பயணம் வெகு வேகமாக நடந்து சரி-தவறு என்பதைவிட உண்மை-பொய் என்பதன் அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை அமையும். பரமன் மட்டுமே உண்மை என்றும் இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதும் புரிந்து விட்டால் குறைவில்லா இன்பத்தை அடைவார்கள்.

பிறவிகள்தோறும் சேர்த்து வைத்துள்ள பாவ-புண்ணியம், விருப்பு-வெறுப்பு மற்றும் அறிவுத்திறன் ஆகியவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிக்கிறது. ஒருவன் வாழ்வில் சந்திக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாவ-புண்ணியங்கள் மட்டுமே காரணம். அந்த நிகழ்வுகளை அவன் எதிர்கொள்ளும் விதம் அவனது விருப்பு-வெறுப்புகளையும் அறிவுத்திறனையும் பொறுத்தது. தொடர்ந்து வாழ்வு எனும் செயல் வழி கல்வியை பயில்வதால் மட்டுமே அவனது அறிவுத்திறன் அதிகமாகும். அறிவுத்திறன் அதிகமானால்தான் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டு மனப்பக்குவத்தை பெறமுடியும். அதன் பின்தான் சரி-தவறு என்ற அடிப்படையில் வாழ்ந்து உண்மை-பொய் என்ற விவேகத்தை பெறுவது சாத்தியமாகும்.

அனைத்து மக்களின் வாழ்வும் இது போல் அவரவரின் நிலைக்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பதுதான் படைப்பின் இரகசியம். இந்த இரகசியத்தை அறிந்தவன் யாருடைய வாழ்க்கைப்பயணத்தையும் தவறு என்று சுட்டிக்காட்டமாட்டான். யாரேனும் தங்கள் குறையை நிறைவு செய்ய அவனது உதவியை நாடினால் அவர்களது தற்போதைய நிலைக்கேற்ற சரியான பாதையை காட்டிக்கொடுப்பான்.  

எட்டாம் சோதனை: தன்னை அறிதல்

தான் உலகத்திலிருந்து வேறுபட்டவன் என்ற நினைவில்லாமல் இயற்கையுடன் ஒன்றி வாழும் மக்கள் துன்பபடுவதில்லை. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலை ஏதுமின்றி இவர்கள் என்றும் இன்பமுடன் வாழ்வார்கள்.

தான் இறைவனின் அடிமையென்று தன்னை முழுமையாக இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தவர்களும் துன்பத்திற்கு ஆளாவதில்லை. நடக்கும் நிகழ்வுகள் யாவும் ஆண்டவனின் சித்தத்தின் படிதான் நடக்கின்றன என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருப்பவர்களின் வாழ்வில் துன்பகரமான நிகழ்வுகள் எது நடந்தாலும் அவற்றை கடவுளின் அனுக்கிரகம் என்று ஏற்றுக்கொண்டு எவ்வித முணுமுணுப்போ சலிப்போ இல்லாமல் இறைவனுக்கு தொடர்ந்து செய்து வாழ்வை இனிமையாக கழிப்பார்கள்.

தான் பரமன் என்று உணர்ந்தவர்கள் தங்கள் உடலும் மனமும் கடவுளின் மாயா சக்தியின் வெளிப்பாடு என்பதை முறைப்படி கற்றுத்தேர்ந்ததால் உலகில் நடக்கும் மாற்றங்களை தொடர்ந்து இனிமையுடன் அனுபவிப்பார்கள்.

‘உன்னால் முடியும்’ என்று அறிவியல் அறிவு கொடுத்த தைரியத்தில் தான் யார் என்பதை அறியாமல் தன்னை உலகிலிருந்தும் கடவுளிலிருந்தும் வேறுபட்டவன் என்ற நினைவில் வாழ்வை ஒரு போராட்டமாக நடத்திக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே துன்பத்திற்கு ஆளாவார்கள். அறிவுத்திறன் இருந்தாலும் அதை பரமனை அறிந்துகொள்ள பயன்படுத்த வேண்டும் என்ற மனப்பக்குவம் வரும்வரை இவர்கள் தொடர்ந்து பணம், பதவி, புகழ் ஆகியவற்றை நாடி செயல் செய்வதை தவிர்க்கமுடியாது. இவர்கள் செல்லும் பாதைதவறானதல்ல. தான் யார் என்று புரிந்துகொள்ள தேவையான மனப்பக்குவத்தை தங்கள் செயல்கள் மூலம் இவர்கள் தங்களை அறியாமலேயே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தான் யார் என்று தெளிவாக அறிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள்.

முடிவுரை :

தான் யார், கடவுள் யார், இவ்வுலகத்தின் இயல்பு என்ன, படைப்புக்கு என்ன காரணம், வாழ்வின் நோக்கம் என்ன, பல்வேறு மதங்கள் போதிக்கும் வேறுபட்ட கருத்துக்களில் எது சரியானது என்பது போன்ற அனைத்துக்கேள்விகளுக்கும் தெளிவான பதில் தெரிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள். ஒன்பது செவ்வகங்களை தெளிவாக கண்டறிந்த இவர்கள் மற்றவர்களால் ஏன் முடிவான உண்மையை உணர முடிவதில்லை என்பதையும் அறிந்தவர்கள். எனவே இவர்களால் தங்கள் வாழ்க்கையை மட்டுமின்றி தன்னைச்சார்ந்த அனைவரது வாழ்வையும் துன்பம் கலவா இன்பமயமாக்கும் சக்தி உள்ளது.

பயிற்சிக்காக :

1. முகம் பார்க்கும் கண்ணாடியை வேதத்துடன் ஒப்பிடுக.

2. செவ்வக ஆராய்ச்சியின் மூலம் தெரிந்து கொண்ட கருத்து என்ன?

3. அறிவுத்திறனை அதிகபடுத்திக்கொள்ள மக்களுக்கு இருக்கும் ஒரே வழி என்ன?

4. மக்களிடையே அறிவுத்திறன் வேறுபடுவதற்கு காரணம் என்ன?

5. முரண்பட்ட கொள்கைகளை கொண்ட பல்வேறு மதங்கள் உலகில் இருப்பதற்கு என்ன காரணம்?

6. சத்திய சோதனை செய்யவேண்டியதன் அவசியமென்ன?

சுயசிந்தனைக்காக :

1. சரியான சுற்றுச்சூழல், திறமையான ஆசிரியர்கள், அதிநூதன கல்விச்சாதனங்கள் மற்றும் சீரமைக்கப்பட்ட கல்விமுறை போன்றவற்றின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சிறுவர்களையும் அறிஞர்களாக மாற்ற முடியுமா?

2. சச்சிதானந்தம் என்ற பெயர்காரணத்தை ஆராய்ந்து மனிதர்களின் மூன்று அடிப்படை ஆசைகளின் இருப்பிடத்தை அறிக.

3. இந்தப்பாடத்தில் உள்ள எட்டு சத்தியசோதனைகளில் ஒவ்வொன்றிலும் எவ்வளவு மதிப்பெண்கள் பெற நமக்கு தகுதியிருக்கிறது என்று சுயமதிப்பீடு செய்து கொள்க.

4. முற்றுணர்ந்தோனாக மாற அடுத்து செய்யவேண்டிய செயல்களை ஆசிரியரின் துணையுடன் ஆலோசிக்கவும்.

Tuesday, February 15, 2011

Lesson 148: Status of those with desires (Brahma Sutra 3.4.43)

பாடம் 148: ஆசைப்படுபவர்களின் கதி
பாடல் 468 (III.4.43)

அனைத்து செயல்களும் ஆசைகளின் அடிப்படையில்தான் பிறக்கின்றன. மேலும் செயல் செய்யாமல் யாராலும் இருக்க முடியாது. எனவே உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆசைகள் இருந்தேதீரும். ஞானிகளுக்கு ஆசைகள் இருப்பினும் அவர்கள் துன்பப்படுவதில்லை. மற்றவர்களின் ஆசைகளுடன் ஒப்பிடும்பொழுது ஞானிகளின் ஆசைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்ற விளக்கங்களை கொடுப்பதன் மூலம் துன்பத்தை தவிர்க்கும் வழியை இந்த பாடம் தருகிறது.

முதல் வேறுபாடு: ஆசைகளின் ஆரம்பம்

நான் ஆசைப்படுகிறேன் என்பதற்கும் என் மனதில் ஆசை தோன்றுகிறது என்று சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஞானிக்கு தான் ஆத்மா என்றும் தன் மனம் மாயை என்றும் தெரிந்திருப்பதால் மனதின் ஆசைகளை தனதாக ஏற்றுக்கொள்ள மாட்டார். பக்கத்து வீட்டுக்காரனின் ஆசை நிறைவேறாவிட்டால் நாம் எப்படி வருத்தப்பட மாட்டோமோ அது போல தன் மனதின் ஏமாற்றங்களை ஞானி பொருட்படுத்துவதில்லை.

இரண்டாம் வேறுபாடு: ஆசைகளின் தன்மை

ஞானிகளின் ஆசைகள் பந்தப்படுத்தாத ஆசைகள். தேடியது கிடைக்காவிட்டால் மற்றவர்கள் துன்பப்படுவதுபோல் ஞானி துன்பப்பட மாட்டான்.

பார்ப்பதற்கு விதை போலிருந்தாலும் வறுக்கப்பட்ட வேர்கடலையை விதைத்தால் அது முளைவிடாது. அதுபோல் ஞானிகளுக்கு ஏற்படும் ஆசை துன்பத்தை தராது. வறுக்கப்பட்டதால் சுவையாக இருக்கும் வேர்க்கடலையைப்போல ஆனந்தத்தின் விளைவான ஞானிகளின் ஆசை அனைவருக்கும் நன்மை தரும்.

மாலையில் பூங்காவில் உலாவரலாம் என்ற ஆசை மழை பெய்ய ஆரம்பித்ததால் நிறைவேறாமல் போனாலும் அது குறித்து நாம் துன்பபடுவதில்லை. அது போல  முற்றும் துறந்து இமயமலையடிவாரத்திற்கு சென்று சமஸ்க்ருத மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தக்கொண்டிருந்த வேதஞானத்தை நகரத்தில் வாழ்பவர்களுக்கு கொண்டுதரவேண்டும் என்ற சுவாமி சின்மயானந்தாவின் ஆசை நிறைவேறியிருக்காவிட்டாலும் அவர் துன்பபட்டிருக்க மாட்டார்.

மூன்றாம் வேறுபாடு: ஆசைகளின் நோக்கம்

தம்மிடம் இருக்கும் நிரம்பிவழியும் அமுதசுரபியை கொண்டு மற்றவர்களுக்கு உதவ  நினைப்பவனின் ஆசை, காலிப்பாத்திரத்தை காட்டி பிச்சையெடுப்பவனின் ஆசையிலிருந்து வேறுபட்டது. அதுபோல ஞானிகள் தங்களிடம் ஆனந்தம் பொங்கி வழிவதால் அதை மற்றவர்களுக்கு தந்து உதவ வேண்டும் என்று ஆசை படுவதற்கும் தேடியது கிடைத்தால் ஆனந்தம் அடையலாம் என்று மற்றவர்கள் உலகப்பொருள்கள் மேல் ஆசைகொள்வதற்கும் வேற்றுமை அதிகம்.  

நான்காம் வேறுபாடு: செயல்களின் நோக்கம்

தினமும் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடும் ஞானி விருந்தினர்களுக்காக அறுசுவை உணவை சமைத்து அவர்களுடன் அமர்ந்து தானும் சாப்பிடலாம். விதவிதமாக ருசிக்கவேண்டும் என்ற நாக்கின் தூண்டுதலுக்காக இல்லாமல் மற்றவர்களின் திருப்திக்காகவே அவர் விருந்து சமைக்கும் செயலில் ஈடுபடுவார். அதுபோல மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற காரணத்திற்காக மட்டுமே அவர் பணம் சம்பாதிக்க கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வார். தனக்கென அவருக்கு இருக்கும் தேவைகள் மிகவும் குறைந்தவை. இன்பத்தை தேடியலைய வேண்டிய அவசியம் அவருக்கில்லை.

ஐந்தாம் வேறுபாடு: பந்தப்பட்டிருந்த அனுபவம்

சக்கரவர்த்தியுடன் போர் புரிந்து தோல்வியடைந்த அரசன் பலகாலம் சிறைவாசம் அனுபவித்து விடுதலை செய்யப்பட்டபின் ஒரு சிறிய கிராமத்துக்கு அரசனாக வாய்ப்புகிடைத்தாலும் மிகவும் மகிழ்வான். வெற்றி பெற்று தன் சாம்ராஜயத்தை விரிவடையசெய்த சக்ரவர்த்திக்கு கூட இவனைப்போன்ற திருப்தி ஏற்படாது. ஏனெனில் பந்தப்பட்டு சிறையில் வாடிய அனுபவம் சுதந்திரமாக வெளியே இருப்பதே போதும் என்ற மனநிலையை கொடுத்திருக்கும். அதற்குமேல் ஒரு குக்கிராமத்துக்கு அரசனாகும் வாய்ப்பு ஒரு மிகப்பெரியவரப்பிரசாதமாக அவனால் கருதப்படும். சக்ரவர்த்திக்கு நாட்டையிழந்து சிறையில் வாடிய அனுபவம் இல்லாததால் அவருக்கு சுதந்திரத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை.

ஆசை நிறைவேறியதால் மற்றவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தைவிட ஆசைகளிடமிருந்து முழுவதுமாக விடுதலை பெற்ற ஞானி இனிமேல் துன்பப்பட வேண்டிய அவசியமில்லை என்று அதிக சந்தோஷம் அடைவான்.

ஆறாம் வேறுபாடு: பொருள்கள் பற்றிய அறிவு

மனதின் நிறைவின்மையால் தோன்றிய ஆசை தள்ளுபடியில் விற்பனை என்ற அறிவிப்பை கேட்டதும் அது என்ன பொருள் என்று கூட விசாரிக்காமல் முட்டிமோதி கடைக்குள் நுழையவைக்கும். ஆனால் ஞானிகளின் மனம் தான் ஆனந்தத்தின் இருப்பிடம் என்ற அறிவால் நிறைந்திருப்பதால் யாராவது ஏதாவது தருவார்களா என்ற ஏக்கம் எப்பொழுதும் அதில் ஏற்படாது.

சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கிறது என்று தெரியவந்தால் பசியோடு இருக்கும் ஒருவனே அதைத்தொடமாட்டான். அப்படியிருக்க அப்பொழுதுதான் விருந்து சாப்பாட்டை வயிறு நிரம்ப சாப்பிட்டு முடித்தவனுக்கு விஷம் கலந்த சாப்பாட்டில் ஆசை ஏற்பட வாய்ப்பேயில்லை. அது போல உலகப்பொருள்களில் துன்பம் கலந்திருக்கிறது என்று அறிந்தவர்களுக்கு அவற்றின்மேல்ஆசை ஏற்படாது.

ஞானி பொருள்களை தள்ளுபடிவிலையில் வாங்கமாட்டான் என்பது இங்கு பொருள்ளல்ல. தேவைகளை பூர்த்திசெய்ய அவசியமான பொருள்களை குறைந்த விலையில் வாங்கவேண்டுமென்ற ஆசை ஞானிக்கும் ஏற்படலாம். ஆனால் பணத்திற்கும் இன்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஞானி உணர்ந்திருப்பதால் ஆசைகள் நிறைவேறாவிட்டால் மற்றவர்களைப்போல் கோபம், எரிச்சல், ஏமாற்றம் போன்ற உணர்வுகளால் அவர் பாதிக்கப்படமாட்டார்.

இன்னும் வேண்டும் என்று ஆசைகொள்பவர்களைப்போலல்லாமல் இருப்பதும் வேண்டாம் என்று ஞானி துறந்து விடுவான். மூட்டை நிறைய கிடைத்த ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்று அறிந்ததும் அதை கூடியவிரைவில் தொலைத்துவிட முயற்சிப்பதுபோல் ஞானிகள் பொருள்களின் குறைகளை அறிந்திருப்பதால் தினமும் உபயோகிக்கும் அவசியத்தேவைகளைத்தவிர பிற்பாடு தேவைப்படும் என்று எந்தப்பொருளையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

என்னுடையது என்று எவ்வளவு பொருள்களை வைத்திருக்கிறோம் என்பது மனதில் தோன்றும் சலனங்களின் அளவை தீர்மானிக்கும். தேவைக்கு அதிகமான பொருள்களை வைத்திருப்பதால் எவ்வித பயனும் இருக்காது. அதேநேரத்தில் அவற்றால் ஏற்படும் மன சலனங்கள் அதிகமாகும்.

கடைகளில் உள்ள பொருள்களை பார்வையிட நேர்ந்தால் தனக்கு தேவையில்லாத பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை நினைத்து ஞானி மகிழ்வான்.

திருடும்பொழுது கையும் களவுமாக பிடிபட்ட வேலைக்காரனை வேலையிலிருந்து நிறுத்தாமல் தொடர்ந்து வேலை செய்ய அனுமதித்தால் அவன் நன்றியுடனும் மறுபடியும் திருடாமலும் இருப்பான். அதுபோல பொருள்களுக்கு துன்பம் தரும் சக்தியில்லை என்பதை ஞானி தெளிவாகத்தெரிந்து கொண்டு அதன் பின் எவ்வளவு சுகபோகங்களை அனுபவித்தாலும் அவனுக்கு துன்பம் ஏற்படாது. ஞானி தான் உயிருக்கு உயிராக காதலித்தவர் தன்னை கைவிட்டுவிட்டு மற்றொருவரை மணந்து கொண்டாலோ அல்லது மரணமடைந்து விட்டலோ வருத்தப்படமாட்டார். ஏனெனில் எள்ளளவு ஆனந்தத்தைகூட தனக்கு யாராலும் தரமுடியாது என்பதை ஞானி அறிந்திருப்பதால் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு வாழ்வில் எதிர்படும் மற்றொருவரை மணந்துகொள்ள தயங்கமாட்டார்.

தசரதன் தனக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்ததை கேட்ட இராமனின் மனநிலை காட்டுக்கு போ என்ற கட்டளையை கேட்டபொழுது மாறவில்லை. நாட்டை ஆளுவதும் காட்டில் வாழ்வதும் சுற்றுப்புற சூழலில் மாற்றங்கள் ஏற்படுத்துமே தவிர ஆனந்தத்தை மாற்றாது என்பதை இராமன் அறிந்திருந்ததே இதற்கு காரணம்.

ஏழாம் வேறுபாடு: ஆசைகள் பற்றிய அறிவு

நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க முடியாது. அது போல அனுபவிப்பதன் மூலம் ஆசைகளை தீர்த்துக்கொள்ள முடியாது. யயாதி தன் மகனின் இளமையை கடன் வாங்கிய கதையை படித்து இந்த உண்மையை தெரிந்து கொள்ளா விட்டாலும் நம் அனுபவங்களை ஆராய்வதன் மூலம் இதை தெரிந்து கொண்டால் உலகத்தில் உள்ள பொருள்கள் மீது வைராக்கியம் ஏற்பட்டு அவற்றின் மீது ஆசை ஏற்படாது.

எண்ணையிருக்கும் வரை விளக்கில் நெருப்பு எரியும். அதுபோல மனதில் நான் மற்றும் எனது என்ற எண்ணங்கள் இருக்கும்வரை உலகப்பொருள்களின் மீது ஏற்படும் பற்றுதலை தவிர்க்கமுடியாது. எனக்கு இது வேண்டும் என்ற ஆசை ஏற்பட இந்த அகங்காரமே காரணம். ஆசை நிறைவேறினாலும் பசுத்தோல் போத்திய புலி போல இன்பம் என்ற பெயரில் துன்பம்தான் நம்மை வந்து சேரும். நான்தான் ஆனந்தத்தின் உண்மையான இருப்பிடம் என்பதை ஞானிகள் அறிந்து இருப்பதால் ஆசைகள் இல்லாமல் எது கிடைத்தாலும் ஆனந்தமாயிருப்பார்கள்.

எட்டாம் வேறுபாடு: உலகைப்பற்றிய அறிவு

மாற்றம் என்பது மாற்றமுடியாத ஒன்று. தோன்றும் அனைத்தும் மறைவுக்கு உட்பட்டவை. இந்த உலக நியதிகளை ஞானி சரியாக அறிந்திருப்பதால் உலகில் உள்ள பொருள்களில் மாற்றமேற்படாது என்று அவன் எதிர்பார்ப்பதில்லை. வயது ஆக ஆக உடலின் அழகும் ஆரோக்கியமும் குறைகிறதே என்று அவன் வருத்தப்படுவதில்லை.  

மாயாவி ஒருவன் இந்திரஜாலகாட்சியில் இருப்பது போல் காண்பிக்கும் பொருள் மீது ஆசைப்படமாட்டோம். அதுபோல உலகே மாயை என்று ஞானி உணர்ந்திருப்பதால் அதிலுள்ள பொருள்களின் மேல் ஆசைபடமாட்டான்.

ஒன்பதாம் வேறுபாடு: வாழ்வைப்பற்றிய அறிவு

கனவில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை நாம் பொருட்படுத்துவதுகிடையாது. இன்றைக்கு தூங்கும்பொழுது நேற்று வந்த இனிமையான கனவு தொடரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டாலும் அது நிறைவேறாவிட்டால் தரையில் விழுந்து அழுது புரள மாட்டோம். ஏனெனில் கனவு நிலையாதது என்று தெளிவாக நமக்கு தெரியும். ஞானிகள் வாழ்வே ஒரு கனவு என்பதை உணர்ந்தவர்கள். எனவே இன்றிருப்போர் நாளை இல்லாமல் போய்விட்டால் அவர்கள் ஏமாற்றமடைவதில்லை. கனவில் நடக்கும் நிகழ்வுகள் நம்முடைய ஆணைக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. அதே நிலை விழித்தபின்னும் தொடர்கிறது என்பதை ஞானி அறிவான்.

முள் காலில் குத்திவிட்டது என்று நாம் செய்த தவறுக்கு அப்பாவியான முள்ளின் மீது பழிபோடுவது போல வாழ்வு என்பது என்ன என்று நாம் சரியாக புரிந்துகொள்ளாமல் அதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைசொல்வது நம் தவறு.

ஒளி பொருள்களின் இருப்பையும் இல்லாமையையும் நமக்கு அறிவிக்கும். அதற்கு புதிதாக பொருள்களை உற்பத்தி செய்யவோ இருக்கும் பொருளை அழிக்கவோ சக்தி கிடையாது. அதுபோல வாழ்வைப்பற்றிய சரியான அறிவு அதன் இயல்பை நமக்கு அறிவிக்குமே தவிர நடக்கும் நிகழ்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது. உதாரணமாக தொழிலில் லாப நஷ்டங்கள் மாறி மாறி வரும் என்ற அறிவு நஷ்டத்தை தவிர்க்க உதவாது.  மாறும் தன்மையை அறிந்து கொண்டதால் மாற்றம் ஏற்படும்பொழுது துன்பம் ஏற்படாது.

பத்தாம் வேறுபாடு: மனம் பற்றிய அறிவு

பிறவிகள்தோறும் செய்யும் செயல்களால் உருவாகிய விருப்பு-வெறுப்புகளை மனதிலிருந்து நீக்க முடியாது. மேலும் உலகின் நிகழ்வுகள் வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்பது போன்ற இருமைகளுக்கிடையே தொடர்ந்து ஊசலாடும் தன்மையுடையது. எனவே உலகின் நிகழ்வுகளை பிடித்தது-பிடிக்காதது என்று வகைப்படுத்தி பிடித்தவற்றை பெறவும் பிடிக்காதவற்றை தவிர்க்கவும் மனம் ஆசைப்படுவதை தவிர்க்க முடியாது. வைத்திருக்கும் பாத்திரத்தின் ஆட்டத்திற்கு ஏற்றாற்போல் ஆடுவது தண்ணீரின் இயல்பு. அது போல் உலகில் இயக்கதிற்கு ஏற்றாற்போல் ஆசைப்படுவது மனதின் இயல்பு. இவற்றைத்தெளிவாக உணர்ந்த ஞானிகள் மனதில் தோன்றும் ஆசைகளால் பாதிக்கப்படுவதில்லை.

முடிவுரை :

தோசை கருகி சாம்பலாகிவிட்டது என்றால் அது சமையல்காரரின் குற்றமே தவிர நெருப்பின் தவறல்ல. கையை சுட்டுவிட்டது என்று இனி நெருப்பின் பக்கமே போகக்கூடாது என்று தீர்மானிப்பது தவறு. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. நெருப்பு உண்டாகும் விதம், அதன் தன்மைகள் மற்றும் அதை கையாளும் விதம் ஆகியவற்றை சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே சுவையான சமையல் செய்ய முடியும். அது போல ஆசை உண்டாகும் விதம், அதன் தன்மை, பொருள்கள் பற்றிய அறிவு போன்றவற்றை சரிவர கற்றுத்தேர்ந்தபின் எவ்வித துன்பமும் இல்லாமல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள செயல்கள் செய்யலாம்.

வேதம் தரும் இந்த அறிவை பெறாமல் ஆசைகளுடன் செயல்படுபவர்கள் படுக்கையறைக்குள் பட்டாசுகளை கொளுத்தி விளையாடுபவர்களின் கதிக்கு ஆளாவார்கள்.


பயிற்சிக்காக :

1. வறுபட்ட விதை உதாரணம் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?

2. ஆசை, பொருள்கள், உலகம், வாழ்வு, மனம் ஆகியவை பற்றி பெறவேண்டிய அறிவு என்னென்ன?

3. ஞானிகளின் ஆசைகளுக்கும் செயல்களுக்கும் நோக்கங்கள் என்னென்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஆசை பட்டது கிடைக்காவிட்டால் ஞானியின் மனம் அலைபாயும் என்றால் ஞானத்தின் பலன் என்ன?.

2. ஞானிகளுக்கு அளவு கடந்த ஆசைகள் இருக்கலாமா?

3. ஞானம் பெற்றவுடன் பணம் சம்பாதிக்கும் ஆசை குறைந்துவிடுமா?

Thursday, February 10, 2011

Lesson 147: Renounced will not revert back to desires (Brahma Sutra 3.4.41-42)

பாடம் 147: துறந்தவர்கள் மீண்டும் ஆசைப்படமாட்டார்கள்
பாடல் 466-467 (III.4.41-42)

ஆசையே துன்பத்திற்கு காரணம். எனவே ஆசைகளை தவிர்க்க ஆசைபட வேண்டும். பற்றை துறந்தவர்கள் மனதில் ஏன் ஆசைகள் ஏற்படாது என்றும் ஆசைகள் இல்லாமல் அவர்கள் எவ்வாறு செயலாற்றுகிறார்கள் என்றும் விளக்கம் தருவதுடன் உலகே மாயை என்ற கருத்தையும் இந்த பாடம் விவரிக்கிறது.

ஒளி-ஒலி காட்சி

நான் பரமன் என்பதை சரியாக புரிந்து கொண்ட ஞானிகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஒளி-ஒலி காட்சி என்பதை உணர்வார்கள். இந்த தொடர்ந்த இயக்கத்தில் செயல்கள் என்று எதுவும் கிடையாது. எனக்கு தாகம் எடுத்ததால் எழுந்து சமையலறைக்கு நடந்து போய் பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்தேன் என்பது நமது கற்பனையே தவிர உண்மையல்ல. ஒளிக்கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை மனதில் ‘நான் செய்தேன்’ என்ற ஒலியாக பதிவு செய்யும் மாயையின் பிடியில் இருக்கும்வரை நமக்கு உண்மை விளங்காது.

வாழ்க்கையை வாழ மனம் தேவையில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டவர்கள்தான் ஞானிகள். மனதில் ஏற்படும் எண்ணங்கள் ஒலிக்கதிர்களால் ஆனவை. ஒலி ஒளியைவிட மெதுவாக பயணிப்பது என்பதால் வாழ்வு என்னும் ஒளிக்காட்சியின் தாமதமான வர்ணணையை கொடுத்துக்கொண்டிருப்பதுதான் மனதின் வேலை. நான் நேற்று இதை செய்தேன், நாளை அதை செய்வேன் என்று மனதில் தோன்றும் எண்ணங்கள் நாம்தான் வாழ்வை வாழ்வதாக ஒரு கற்பனையை உருவாக்கியுள்ளன. ஒரு காரியத்தை செய்வதற்குமுன் அதை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுகூட இந்த கற்பனையின் ஒரு பகுதிதான் என்பதை ஞானிகள் அறிவார்கள். உடல் என்னும் ஒளிவடிவம் தண்ணீர் குடிப்பதுபோல் தோன்றும் காட்சி மனதில் ஒலியாக பதிவாவதை உணராதவர்கள் ‘நான் தண்ணீர் குடித்தேன்’ என்ற அறியாமையுடன் வாழ்கிறார்கள்.

இந்த அறியாமை மற்றும் ஞானம் ஆகிய இரண்டும் மனதில் உள்ள எண்ணங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் இரண்டுமே மாயை. முதலில் புரியாமல் இருந்தது இப்பொழுது புரிந்து விட்டது என்பதும் மாயை. எவ்வித மாற்றமும் இல்லாமல் ஆனந்தமயமாக உணர்வு உருவாக என்றும் இருக்கும் நான் மட்டும்தான் உண்மை.

பரமனை உண்மையில் அறிந்தவர்கள் ‘நான் பரமன்’ என்பது மனதில் தோன்றும் எண்ணம் என்றும் மனம், உடல் உள்ளிட்ட இந்த பிரபஞ்சம் முழுவதும் மாயை என்றும் அறிந்திருப்பார்கள். எனவே வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சியில் தாங்கள் எவ்வித செயல்களை செய்வதாகவோ செய்ய ஆசைப்படுவதாகவோ ஞானிகள் எண்ணிக்கொள்வதில்லை. எனவே ஞானிகளின் ஆசை என்பதும் அவர்களின் செயல்கள் என்பதும் அஞ்ஞானிகளின் விவாதத்திற்கு மட்டுமே உரியவை.

எண்ணங்கள் ஆசைகளாக மாறி மனிதனை செயல் செய்யத்தூண்டுகிறது என்று வேதாந்தத்தின் ஆரம்பபாடங்களில் படித்த அறிவை உதறித்தள்ளி நாம் ஆசை கொள்வதுமில்லை, செயல்கள் செய்வதுமில்லை என்ற உண்மையை உணர வேண்டும். ஏற்கனவே குடித்த தண்ணீர் வயிற்றுக்குள் அடையும் மாற்றங்களுக்கும் அது வியர்வையாக வெளியேறுவதற்கும் நாம் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. தாகம் ஏற்பட்டதால் கால்கள் பானையிடம் சென்று கைகள் தண்ணீரை வாய்க்குள் செலுத்தும் காட்சியை மட்டும் நான் செய்தேன் என்று எண்ணுவது தவறு. இந்த உண்மையை உணரும்வரை மக்கள் தன்னைப்பற்றிய அறியாமையுடனும் உலகப்பொருள்களின் தன்மையை பற்றிய தவறான அறிவுடனும் இருப்பதால் பொருள்கள் மீது ஆசை கொண்டு தொடர்ந்து துன்பமடைவார்கள்.

அனைவரும் பிறக்கும்பொழுது அறியாமையுடன்தான் பிறக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் கல்வி, பொதுஜனத்தில் முகம் தெரியாமல் இருந்தவனுக்கு மருத்துவன், பொறியாளன், வக்கீல் என்பது போன்ற தனியான அடையாளத்தை ஏற்படுத்தி தான் இவ்வுலகிலிருந்து வேறுபட்டவன் என்ற அகங்காரத்தை ஏற்படுத்துகிறது. தான் யார் என்ற அறிவைத்தரும் வேதபாடங்களை பயிலாமல் வாழ்க்கையின் அனுபவங்களை எதிர்கொள்வதால் ‘நான் செயல்களை செய்பவன் மற்றும் செயல்களின் பலன்களை அனுபவிப்பவன்’ என்ற அறியாமை தொடர்கிறது.

தோற்றம், மாற்றம் மற்றும் மறைவு என்ற கட்டுக்குட்பட்ட உடலையும் தொடர்ந்து மாறும் மனதையும் நான் என்ற சொல்லுக்கு பொருளாக கொள்வதால் நிரந்தரமான அமைதியும், குறையாத இன்பமும் உலகத்தில் செயலாற்றுவதன் மூலம் கிடைக்கும் என்று தான் செயல்களை செய்வதாக நினைப்பதற்கு மனிதன் ஒரு காரணத்தை கற்பித்துகொள்கிறான். குறைகள், அவற்றை நிறை செய்ய ஆசைகள், ஆசைகளை பூர்த்தி செய்ய செயல்கள் என்று அறியாமை மக்கள் மனதில் உறுதியாகிறது.

வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சி பின்வரும் படிக்கட்டுக்கள் வழியே வழிநடத்தி இறுதியில் செயல்கள் என்று எதுவுமில்லை என்று அவர்களுக்கு உணரவைக்கும்.

முதல் படி: உலகில் ஆனந்தம் இருக்கிறது

இரண்டு வயதில் பலூன் வேண்டும் என்று அடம்பிடித்து அது கிடைத்ததும் ஏற்பட்ட ஆனந்தம் அடுத்து அடுத்து அது வேண்டும் இது வேண்டும் என்று மக்களை கேட்க தூண்டுகிறது. ஒவ்வொருமுறையும் கேட்டது கிடைத்ததும் இன்பம் கிடைத்ததால் உலகத்தில் உள்ள பொருள்களில் ஆனந்தம் இருக்கிறது என்கிற தவறான அறிவு உறுதியாகிறது. எனவே இருபது வயதானதும் இவர் கிடைத்தால் வாழ்வு இன்பமயமாக இருக்கும் என்ற ஆசை உண்டாகிறது. அந்த ஆசை நிறைவேறிய சில வருடங்களுக்குள் அவரை விவாகரத்து செய்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்று தோன்றும்பொழுது உலகப்பொருள்களில் உண்மையில் இன்பம் இருக்கிறதா என்று ஆராய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அனுபவங்களை ஆய்ந்தறியும் அறிவாற்றல் ஒரு சிலருக்கே வாய்க்கிறது. இவர்கள் மட்டுமே அடுத்த படிக்கு முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் மனதில் உலகில் ஆனந்தம் இருக்கிறது என்ற தவறான எண்ணம் மரணம் வரை தொடர்கிறது.  

இரண்டாம் படி: உலகில் ஆனந்தம் இல்லை

தேடிய பொருள்களை பெறுவதனால் கிடைக்கும் இன்பம் நிலைப்பதில்லை. தன் கையில் இருப்பதைவிட அடுத்தவருக்கு கிடைத்தது சிறப்பானதாக தோன்றுகிறது. எனவே போதுமென்ற நிறைவு ஏற்படுவதேயில்லை. கிடைத்த பொருளை பேணிபோற்ற எவ்வளவு முயற்சித்தாலும் அது மாறி மறைந்து போகிறது. இது போன்ற துன்பம் கலந்த இன்பம்தான் பொருள்களிலிருந்து கிடைக்கிறது என்ற அறிவு ஏற்பட்டவுடன் அவற்றின் மீது ஆசை ஏற்படுவது குறையும்.

பணம், பதவி, புகழ், நண்பர்கள், குடும்பம் உள்ளிட்ட உலகத்தைச்சேர்ந்த எந்த பொருளிலும் இன்பம் சிறுதுகூட இல்லை. ஆனால் இவற்றில் இன்பம் இருக்கிறது என்று நினைத்து மக்கள் இவற்றை அடைய தொடர்ந்து உழைக்கிறார்கள். இந்த உழைப்பு நாளடைவில் அவர்களுக்கு இவற்றில் உண்மையில் இன்பம் இல்லை என்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்தும். இந்த மனப்பக்குவம் வந்தவுடன் உலகால் தர முடியாத நிறைவையும் இன்பத்தையும் கடவுளிடமிருந்து பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இவர்கள் அடுத்த படிக்கு முன்னேறுவார்கள்.

மூன்றாம் படி: நான்தான் ஆனந்தத்தின் ஒரே இருப்பிடம்

பணம் இன்பத்தை கொடுப்பதில்லை என்ற அறிவு கிடைக்க வெகுகாலம் ஆனது போல மதங்கள் கூறும் சடங்குகளைப்பின்பற்றி கடவுளின் கருணையால் முக்தி கிடைக்கும் என்று பலகாலம் முயன்றபின் ஒருசிலருக்கு வேதாந்தத்தை முறையாக படிக்க வாய்ப்பு கிடைத்து ஆனந்தத்தின் இருப்பிடம் தெரியவரும்.

எலும்புத்துண்டு வாயில் குத்தி வெளிவந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக நினைத்து மேலும் அதை கடிக்கும் நாய் சிறிது நேரத்தில் உண்மையை உணர்ந்து அதை துப்பிவிட்டு செல்வது போல தன் இயல்பான ஆனந்தத்தை உலகத்திலிருந்து பெறுவதாக நினைத்து அதன் பின் ஓடுவது சிறிது காலத்தில் குறைந்து பரமனைப்பற்றிய முழு அறிவை வேதம் படிப்பதன்மூலம் பெறுவார்கள்.

ஆனந்தமயமாகவும் அறிவுறுவாகவும் என்றும் இருப்பவன் பரமன்.

நெருப்பு தான் ஒளிர்வதுடன் மற்ற பொருள்களையும் ஒளிர்வித்து அவற்றை உஷ்ணப்படுத்தும் தன்மையை உடையது.  நீர் நெருப்பின் வெப்பத்தை மட்டும் எடுத்துகொள்ளுமே தவிர ஒளியை ஏற்றுக்கொள்ளாது. இரும்புத்துண்டு வெப்பத்துடன் தன்னை ஒளிர்வித்துக்கொள்ளும் தன்மையையும் நெருப்பிலிருந்து பெற்றுக்கொள்ளும். மரத்துண்டு நெருப்புடன் சேர்ந்து நெருப்பாகவே மாறி அதன் மூன்று குணங்களையும் முழுமையாக பெற்றுக்கொள்ளும். அது போல பரமனிடம் இருக்கும் இருத்தல்-உணர்தல்-ஆனந்தம் ஆகிய மூன்று தன்மைகளையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு பரமனாகவே மாறும் சக்தி மனிதனுக்கு மட்டுமே உள்ளது.

ஜடப்பொருள்கள் இருத்தலையும் மற்ற உயிரினங்கள் இருத்தல் உணர்தல் ஆகிய இரு தன்மைகளையும் பெற்று இவ்வுலகமாக நமக்கு காட்சியளிக்கின்றன. எனவே ஆனந்தம் உலகில் இல்லை என்றும் அதன் இருப்பிடமான பரமன் நான் என்றும் வேதாந்தத்தை முறையாக படித்தால் தெரியவரும்.

ஆனந்தம் நான் என்றாலும் அதை அனுபவிக்க ஒரு உடலும் மனமும் வேண்டும். அந்த உடலும் மனமும் இருக்க ஒரு உலகம் வேண்டும். எனவே பிரபஞ்சம் என்ற ஒளி-ஒலி காட்சி நம் அனுபவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதன் ஒரு பகுதிதான் நம் உடலும் மனமும் என்ற அறிவும் இந்தப்படியில் கிடைக்கப் பெற்றவர்கள் அடுத்தப்படிக்கு முன்னேறுகிறார்கள்.

நான்காம் படி: உலகம் மாயை

எவ்வித அனுபவமும் இல்லாமல் உறங்கும் ஆழ்ந்த உறக்கத்தின் நடுவே கனவு உலகம் ஒன்றை உருவாக்கி அதில் பற்பல அனுபவங்களை நாம் பெறுவதுபோல் ஒன்றான பரமன் பலவாக ஆகுவேனாக என்று சங்கல்பம் செய்ததால் ஏற்பட்ட உலகம்தான் நாம் கண்விழித்து காணும் சொப்பனம்.

எதிலிருந்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாதவண்ணம் சுவையான தின்பண்டத்தை சமைத்த கைதேர்ந்த சமையற்காரரை போல பரமனிடமிருந்து உருவாக்கப்பட்டது என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாமல் இனிமையான இவ்வுலகை இறைவன் சமைத்துள்ளான். கேசரியை உப்புமா என்று நினைத்து அதனுடன் தயிரையும் ஊறுகாயையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டு நன்றாகவில்லை என்று சமையற்காரரை குறைகூறுவது தவறு. பரமன்தான் உலகமாக தென்படுகிறான் என்ற அறிவு ஏற்பட்டவுடன் அனைத்தையும் சரியான பார்வையில் பார்க்க முடியும். இன்பமாயிருக்க இந்த குறிப்பிட்ட பொருள்தான் வேண்டும் என்று ஆசைப்பட அவசியமில்லாமல் எது கிடைத்தோ அதில் ஆனந்தத்தை அனுபவிக்கமுடியும்.

இந்த அறிவை அடைந்தவர்கள் உலகம் ஒரு மாயை என்பதை புரிந்து கொண்டு தன் இயல்பான ஆனந்தத்தை அனுபவிப்பதற்காக தன்னால் தோற்றுவிக்கப்பட்ட உலகம் ஆனந்தமயமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அடுத்த படியில் அறிந்து கொள்ள தயாராகிறார்கள்.

ஐந்தாம் படி: உலகம் ஆனந்தமயமானது

படைப்பு என்பது வேறுபாடு. அனைத்தும் ஒன்றுபோல இருந்தால் அதில் ஒரு சுவாரசியம் இருக்காது. ஒன்றான பரமன் வேறுபட்ட பல உருவங்களாக காட்சியளிப்பதுதான் உலகம். உடலின் உறுப்புகளில் காணப்படும் ஒருசில வேறுபாடுகள்தான் ஆண்-பெண் என்ற இருபாலரை உருவாக்குகின்றன. மேடு-பள்ளம், உயர்வு-தாழ்வு என்று இதுபோல் வேறுபட்டு இருப்பதுதான் உலகம் என்று இந்த கடைசிபடியில் உணர்ந்தபின் துன்பக்கலப்பில்லாத இன்பத்தை அனுபவிக்கலாம். மாற்றங்கள் இல்லாமல் இருப்பது பரமன் மட்டுமே. எனவே கோடையோ குளிரோ ஏற்படும் மாற்றங்களை ஆனந்தத்துடன் ஏற்றுக்கொண்டு எப்பொழுதும் இன்பமாக வாழ்பவர்கள் முற்றுணர்ந்தோர்.

பொய்யை உண்மையாக்க கூறப்படும் கதை

உண்மை பரமன் மட்டும்தான். இந்த பிரபஞ்சம் இருப்பதுபோல் தோன்றும் மாயை. பிரபஞ்சம் உருவான பொழுது அதனுடன் உருவாக்கப்பட்ட வேதம் அது இயங்கும் விதத்தை எவ்வித முரண்பாடும் இல்லாத தத்துவங்ளை கொடுத்து விளக்குகிறது.

முதலாம் விளக்கம்: பதிவுகள்

நாம் தொடர்ந்து செய்யும் செயல்கள் நம் மனதில் விருப்பு வெறுப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த விருப்பு வெறுப்புகள் மட்டுமே ஆசைகள் தோன்ற காரணமாகும். நமக்கு எந்த பொருளின் மேல் ஆசை ஏற்படுகிறது என்பதை பொருள்கள் தீர்மானிப்பதில்லை. நமது புலன்கள் எந்தெந்த பொருள்களை அனுபவித்து பழகியிருக்கின்றனவோ அவற்றின் மீது ஆசைகள் ஏற்படுகின்றன.

பொருள்களில் ஆனந்தம் இல்லையென்று அறிந்தவுடன் மனதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பட்டியல் அழிக்கப்பட்டுவிடாது. விரும்பி சாப்பிடுவது சப்பாத்தியா சாதமா என்பது வடஇந்தியரா தென்னிந்தியரா என்பதை பொறுத்து தொடர்ந்து மாறுபடும். நான் பரமன் என்ற ஞானம் உறுதியான பின் கூட தயிர் சாதம் வேண்டும் என்று ஆசைபடுவது இயற்கை.

இரண்டாம் விளக்கம்: மறுபிறப்பு

விருப்பு வெறுப்புகள் பிறவிகள்தோறும் நம்முடன் தொடர்ந்து வருபவை. மேலும் நம் நிறைவேறாத தீவிர ஆசைகள் மறுபிறவியில் நாம் செய்யும் செயல்களை தீர்மானிக்கின்றன. அவற்றில் சில ஞானிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு  வலிவு பெற்றிருக்கலாம்.

கடற்கரையில் மணல் வீடு கட்டும் சிறுவர்களிடம் ‘போதும், வீடு திரும்ப நேரமாகிவிட்டது’ என்று கூறினால் அவர்கள் நம் பேச்சை கேட்பார்களா மாட்டார்களா என்பது எவ்வளவு தூரம் மணல்வீடு கட்டப்பட்டுள்ளது என்பதை பொறுத்தது. அப்பொழுதுதான் கட்ட ஆரம்பித்திருந்தால் அதை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் வந்து விடுவார்கள். ஆனால் அது கட்டிமுடிக்கப்படும் தருவாயில் இருந்தால் இன்னும் ஒரு நிமிடத்தில் வருகிறோம் என்று பதிலளித்துவிட்டு அரைமணிநேரம் செலவளித்து தொடங்கிய வேலையை முடித்துவிட்டுத்தான் அவர்கள் வீடுதிரும்புவார்கள்.

இந்த அனுபவம் நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் பொருந்தும். ஆரம்ப கட்டத்தில் வேலையில் இருக்கும் பிடிப்பு தொடர்ந்து அதிகமாகி இறுதியில் அதை செய்து முடிக்க வேண்டுமென்ற தீவிர ஆசை உண்டாகும். இந்த ஆசைகள் பிறவிகள்தோறும் தொடரும். சாதாரணமாக நமக்கு தெரியாத பொருள்களின் மீது ஆசை ஏற்படாது. ஆனால் சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசைகளும் செய்து முடிக்காத வேலைகள் மீதுள்ள பற்றும் இந்தப்பிறவியில் நம் ஆசைகளை தீர்மானிக்கும். நம்மையறியாமலேயே ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிக்க ஆரம்பிப்போம். ஆதி சங்கரருக்கு சிறுவயதில் சன்யாசம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதற்கும் புத்தர் தன் குடும்பத்தை துறந்து காட்டுக்கு சென்றதற்கும் இது போல் பிறவிகள்தோறும் தொடரும் ஆசைகளே காரணம். ஞானம் ஏற்பட்டபின்னும் ஞானிகளின் செயல்பாடுகள் இதுபோன்ற ஆசைகளின் அடிப்படையிலேயே அமையும். பகவான் ரமண மஹரிஷி திருவண்ணாமலையின் எல்லைக்குளேயே தன் வாழ்நாழ் முழுவதையும் கழித்தார். ஆனால் விவேகானந்தர் உலகை வலம் வந்து மக்களின் அறிவுக்கண்களை திறந்தார். இதுபோல் ஞானிகளின் செயல்களும் அவர்களது ஆசைகளின் அடிப்படையிலேயே அமையும்.

மூன்றாம் விளக்கம்: ஒளி-சக்தி-ஜடத்தனிமங்கள்

அறிவு என்பது மனதில் தோன்றும் எண்ணங்கள். மனம் என்பது ஒளி, சக்தி மற்றும் ஜடம் என்ற கலவையினால் செய்யப்பட்டு அதன் தன்மை தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதால் மாலையில் அழகாகத்தோன்றும் புகைப்படம் காலையில் அசிங்கமாகத்தெரிய வாய்ப்புள்ளது. மனதின் இந்த மாற்றத்தை புரிந்து கொண்டால் மனதால் அறியப்படும் பொருளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவேண்டியதில்லை. சாக்கடையில் உள்ள அழுக்கு சூரியனை கறைபடுத்தாது. மனதின் மாற்றங்கள் பரமனின் இன்பத்தை மாசுபடுத்தாது. எனவே மாறாத இன்பம்தான் தன் இயல்பு என்று அறிந்துகொண்டபின் உலகின் மாற்றங்களும் மனதின் மாற்றங்களும் ஆனந்தத்திற்கு எவ்வித தடையையும் ஏற்படுத்துவதில்லை. இதை அறியாதவர்கள் தண்ணீரில் தெரியும் தன்னுடைய பிம்பத்தை வேறொரு மிருகம் என்று நினைத்து கிணத்துக்குள் குதித்த சிங்கம் போல உலகப்பொருள்களில் தென்படுவது தன்னுடைய இயல்பான ஆனந்தம் என்று அறியாமல் அவற்றின் மீது ஆசைபட்டு அவற்றை நாடி ஓடுவர். கண்ணாடியில் தோன்றும் அழகான முகம் தன் கழுத்தில் மேல் உள்ளது என்று உணர்ந்தவர்கள் கண்ணாடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  

நான்காம் விளக்கம்: கர்மவினைகள்

வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் ப்ராரப்தத்தின் அடிப்படையிலேயே நடக்கும். இந்த விதி ஞானிகளுக்கும் பொருந்தும். ஞானி மற்றவர்களைப்போல் துன்பம் வரும்போது துவளாமலும் இன்பம் வரும்போது துள்ளாமலும் இருப்பார்.

அரசனின் பல்லக்கு தூக்குபவர்களில் ஒருவன் சோர்ந்து விழுந்துவிட்டால் வழியில் போகும் குடிமகன் ஒருவன் அந்த வேலைக்கு அமர்த்தப்படுவான். அவனுக்கு கூலி கிடைக்காது என்று தெரிந்தாலும் போனால் போகிறது என்று அந்த வேலையை செய்வது போல ஞானி தன் உடல் உழைப்பினால் எவ்வித பலனும் கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட தன் வழியே வந்த வேலைகளை செய்து முடிப்பான். செய்த வேலைக்கு பலன் கிடைத்தால் அதை அனுபவிப்பான். கிடைக்காவிட்டால் அதை ஒரு குறையாக நினைக்க மாட்டான்.

‘என் தலைவிதி’, என்று நொந்துகொள்வதற்காக வேதம் விதியைப்பற்றி விளக்க முற்படவில்லை. விதி என்பதை புரிந்துகொண்டால் ஏன் இப்படி நிகழ்கிறது என்று எவ்வித கேள்விகளும் கேட்காமல் அனைத்து நிகழ்வுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு ஏற்படும்.


ஐந்தாம் விளக்கம்: சம்சாரமும் முக்தியும்

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் பரமனின் வெளிப்பாடுகள். ஆனால் இதை அறியாமல் உலகில் இன்பத்தை தேடி அதனால் பொருள்கள் மேல் பற்றுகொண்டு பந்தப்பட்டிருப்பார்கள். இந்த பந்தம்தான் அவர்களது துன்பத்திற்கு காரணம் என்ற அறிவு ஏற்படும்பொழுதுதான் இவர்களுக்கு முக்தியடையும் வாய்ப்பு கிடைக்கும்.

மக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் இந்தியா அடிமைபட்டுள்ளது என்ற உண்மையை உணரவேண்டியிருந்தது. பிரிட்டீஷ் ஆட்சி நல்லது என்று நினைப்பது தவறு என்று புரிந்தபின்தான் விடுதலை போராட்டம் தொடங்கியது. அது போல பொருள்களினால் ஏற்படும் பந்தத்திலிருந்து விடுபட முதல் படியாக பொருள்களில் இன்பம் இல்லை என்றும் அவை நம்மை பந்தப்படுத்துகின்றன என்றும் உணர வேண்டும். அதன் பின் தான் ஆனந்தத்தின் இருப்பிடம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி முக்தியடையும் வாய்ப்பு ஏற்படும்.

ஆறாம் விளக்கம்: கடவுள்

கண்ணுக்குத்தெரியும் உலகை இல்லை என்று மறுப்பதற்கு கண்ணுக்குத்தெரியாத கடவுளை வேதம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. உலகில் இன்பத்தைத்தேடி அலுத்துபோனபின் கடவுளின் சாம்ராஜ்யத்தில் வாழும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் மனிதன் மதங்கள் கூறும் சடங்குகளை பின்பற்றி கடவுளை திருப்தி செய்ய முயற்சிக்கிறான்.

அதர்மத்தை முழுவதும் தவிர்த்து தர்மமான முறையில் வாழ்ந்தால்தான் கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் என்ற போதனையை பின்பற்றி வாழத்தொடங்கும் மனிதன் படிப்படியாக முன்னேறி கடவுள் யார் என்பதை அறிந்து கொண்டு ஞானியாகிறான்.

அதன் பின் உலக நன்மையை கருதி இறைவனின் எழுதுகோலாக செயல்பட ஆரம்பித்து விடுவதால் செயல்களை செய்ய அவனை தூண்டும் எண்ணங்களை ஆசை என்ற பெயரில் அழைக்க முடியாது. என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன அவை எப்படி செயலாக மாறுகின்றன என்ற அனைத்தும் ஆண்டவனின் திருவிளையாடல் என்பது ஞானிக்குத்தெரிந்திருப்பதால் செயல்களின் விளைவு எப்படியிருக்கும் என்ற கவலையின்றி தொடந்து இன்பமாக செயலாற்றுவான்.

முடிவுரை :

பக்கத்து ஊருக்கு நடந்து செல்ல கால்கள் மட்டும் போதும். சாலையின் ஓரத்தில் ஊன்றப்பட்டிருக்கும் மைல் கற்கள் நம் பயணத்திற்கு நேரடியாக உதவுவதில்லை. அவை இல்லாவிட்டாலும் ஊர் போய் சேர்ந்துவிடலாம். ஆயினும் ஆறு மைல்கள் நடந்து விட்டோம், இன்னும் இரண்டு மைல்கள் நடந்தால் ஊர் போய் சேர்ந்து விடலாம் என்று மனதிற்கு ஒரு ஊக்கம் கொடுக்க மைல் கற்கள் உதவுகின்றன.

கடவுள், மறுபிறவி, பாவபுண்ணியங்கள், பதிவுகள் போன்ற விளக்கங்கள் இல்லாவிட்டாலும் பிறப்பிலிருந்து இறப்புவரையான வாழ்க்கைப்பயணம் எவ்வித தடையுமில்லாமல் தொடர்ந்து நடந்துவிடும். ஆனால் துன்பம் கலந்த இன்பத்துடன் வாழாமல் குறையாத இன்பத்துடனும், நிரந்தர அமைதியுடனும், தடையில்லாத பாதுகாப்புடனும் வாழும் வாய்ப்பு வேதம் கூறும் இந்த விளக்கங்களை சரியாக படித்து புரிந்துகொண்டு முக்தியடைந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

பயிற்சிக்காக :

1. கல்வியின் விளைவு என்ன?

2. வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சியின் ஐந்து படிகள் யாவை?

3. வாழ்வின் நிகழ்வுகளுக்கு வேதம் கூறும் ஆறு விளக்கங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. கடவுள் இருக்கின்றானா?

2. மறுபிறவி உண்மையா?

3. வேதம் பொய் சொல்லாது என்பதை விளக்கவும்.