Thursday, February 25, 2010

Lesson 96: The nature of Swoon ( பிரம்ம சூத்திரம் 3.2.10 )

பாடம் 96: மயக்கமா கலக்கமா?
பாடல் 328 (III.2.10)

மனதில் உள்ள குழப்பங்களுக்கு காரணம் நம்மை சுற்றியுள்ள நிகழ்வுகள் என்று நாம் நினைப்பது தவறு என்றும் நமது எண்ணங்களை சரியாக புரிந்துகொண்டால் நிம்மதியாக வாழலாம் என்றும் இந்த பாடம் விளக்கம் தருகிறது.

மறைந்திருக்கும் மர்மம்

வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையை நாம் எதிர்கொண்டாலும் அந்த பிரச்சனையை திறம்பட சமாளிக்க நமது மனதினுள் மறைந்திருக்கும் ஒரு எதிரியை நாம் அடையாளம் கண்டு அழிப்பது அவசியம். எல்லாமும் எப்பொழுதும் நம் விருப்பபடிதான் நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் இந்த எதிரி.

பத்து வருடங்களாக குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு பெரிய வீட்டிற்கு குடிபெயர்ந்தால் முதல் சில நாட்களுக்கு நிறைய சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆறுமாதம் ஆனபின் கூட பழைய வீட்டில் இருந்த ஏதோ ஒரு வசதி இங்கு குறைவாய் இருப்பது போல தோன்றிக்கொண்டே இருக்கும். இதற்கு காரணம் மனதின் பழகிப்போகும் தன்மைதான். சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி முதலில் மிகவும் கஷ்டப்பட்டாலும் நாளடைவில் சிறை வாழ்க்கைக்கு  பழகிவிடுவான். பல வருடங்கள் சிறையில் இருந்தபின் விடுதலை பெற்று வீடு திரும்பினால் சிறையிலேயே இருந்திருக்கலாமா என்ற எண்ணம் அவனுக்கு வராமல் இருக்காது.

நாம் எல்லோரும் அவரவரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பழக்கங்களை வளர்த்து கொள்கிறோம். அதனுடன் நில்லாமல் நம்மை சுற்றியுள்ள பழக்கமான உலகம் மாறாமல் நமக்கு சாதகமாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்  எல்லோரிடமும் உள்ளது. இந்த எதிர்பார்ப்புதான் நம் மனதில் ஏற்படும் மயக்கங்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமே தவிர வெளியுலகில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அல்ல.

எதிர்பார்ப்பினால் ஏற்படும் பிரச்சனைகள்

வெளியுலகில் நடக்கும் நிகழ்வுகளையும், ஏற்படும் சூழ்நிலைகளையும், மற்ற மனிதர்களின் செயல்பாடுகளையும் பிரச்சனைகளாக மாற்றுவதே நம் தவறான எதிர்பார்ப்புகள்தான்.

விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும்பொழுது ஒலிபெருக்கியில் இரண்டு மணிநேரம் தாமதம்என்ற அறிவுப்பை கேட்கிறோம். இது ஒரு நிகழ்வா அல்லது பிரச்சனையா? நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விமானத்தை பற்றிய அறிவுப்பு என்றால் அது தினமும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் அதுவே நாம் பயணம் செய்ய வேண்டிய விமானம் என்றால் மிகப்பெரிய பிரச்சனை. அது எப்படி எப்பொழுதும் சரியான நேரத்தில் பயணிக்கும் விமானம் இன்று தாமதாமாக கூடும், இருக்காது. நம்ப முடியவில்லை. இது உண்மையாக இருக்க கூடாது. இவ்வாறு ஒரு நிகழ்வை பிரச்சனையாக உருமாற்றும் வேலையை செய்வது நமது எதிர்பார்ப்பு மட்டுமே.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 1- பூதக்கண்ணாடி

விமான நிலையத்திற்கு வந்தபின் முடிக்கவேண்டிய பாதுகாப்பு சோதனை போன்ற கடமைகளை செய்துவிட்டு விமானத்திற்குள் ஏறும் அழைப்பை எதிர்பார்த்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் பொழுது அது இன்னும் இரண்டு மணிநேரம் தாமதமாக கிளம்பும் என்றால் அந்த இரண்டு மணிநேரத்தை எப்படி உபயோகமாக செலவிடலாம் என்று சாவகாசமாக ஒரு இடத்தில் அமர்ந்து யோசிக்க துவங்கலாம். அதை விடுத்து ஏன் இவ்வாறு நடக்கிறது, இரண்டு மணிநேரம் என்பது நான்கு மணிநேரமாக மாறினால் என்ன செய்வது, இன்று நிச்சயம் விமானம் இங்கிருந்து கிளம்புமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது போன்ற எண்ணங்கள் இரண்டு மணி நேரம் தாமதம் என்ற உண்மை நிகழ்வை பெரிதாக்கி இல்லாத பிரச்சனையை இருப்பது போல் காட்டும். விமானம் தாமதமாக கிளம்புவதால் நமது வாழ்நாழில் இரண்டு மணிநேரம் குறைந்து விடாது.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 2- தடை

நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் நம் விருப்பப்படிதான் எப்பொழுதும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரச்சனையை சரியான முறையில் எதிர்கொள்ளும் நமது திறமையை பெரிதளவும் குறைத்து விடும். உதாரணமாக விமானம் தாமதமாக கிளம்ப வாய்ப்புக்கள் உள்ளன என்ற உண்மையை மறுக்காமல் இருந்தோமானால் அது தாமதமாக கிளம்பும் என்ற அறிவுப்பு நம் நிதானத்தை குறைக்காது. அமைதியாக இப்பொழுது இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்க்கமாக யோசித்து அவற்றை பதட்டமில்லாமல் செயல்படுத்தலாம். அப்படியில்லாமல் ஏன் விமானம் தாமதமாகிறது என்பது போன்ற தேவையற்ற எண்ணங்கள் நம் இரத்த கொதிப்பை அதிகபடுத்தி  கவலையையும் எரிச்சலையும் உண்டாக்கி நமது சிந்திக்கும் திறனை பெருமளவு குறைத்து செய்ய வேண்டிய செயல்களை முறையாக செய்யவிடாமல் தடுக்கும்.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 3- துன்பம்

தானே வரவழைத்து கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே இல்லை. எல்லாம் திட்டமிட்டபடிதான் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதேனும் விரும்பத்தகாத மாற்றங்களை எதிர்கொள்ளும்பொழுது நம்மை மிகவும் துன்புறுத்தும். ஏற்கனவே நாம் செய்த செயல்கள் அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து இந்த விமானத்தில் டிக்கெட் வாங்கியிருக்க கூடாது, நேற்றிரவே ரயிலில் பயணித்திருந்திருக்க வேண்டும் என்பது போன்ற அனாவசியமான குற்றச்சாட்டுக்களை நம்மீது சாற்றி நாம் ஒரு கடைந்தெடுத்த முட்டாள் என்ற எண்ணத்தை நமக்குத்தரும். மேலும் நம்மை சுற்றியுள்ள அனைவரையும் நாம்செய்ததவறுக்கு காரணகர்த்தாக்களாக குற்றவாளி கூண்டில் ஏற்றிஎல்லாம் உன்னால்தான் இப்படி நடந்ததுஎன்று சண்டை போட வைத்து இருக்கும் உறவை கெடுத்து  மேலும் பல பிரச்சனைகளை நாம் உருவாக்கும்.

இரண்டு மணிநேர தாமதத்தினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை கற்பனை செய்துகொண்டு எதுவும் நடக்காதபோதே அவை நடந்துவிட்டது போன்ற அனுபவங்களை நமக்கு கொடுத்து நம்மை வாட்டி எடுக்கும். மேலும் இல்லாத பிரச்சனைகள் பலவற்றை உருவாக்கி புதை மணலில் மாட்டிக்கொண்டவன் போல் பிரச்சனையிலிருந்து வெளிவர நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் இன்னும் அழமாக துன்பத்திற்குள் நம்மை ஆழ்த்தும்.

இதுபோன்ற தவறான எதிர்பார்ப்பு ஏதுமில்லாதவர்கள் நடப்பது நல்லதாகவே நடக்கிறது என்று வெகு நாட்களாக ஒத்திப்போட்டுக்கொண்டிருந்த ஒரு காரியத்தை செய்யத்துவங்குவார்கள். உதாரணமாக  படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை படிக்க கிடைத்த அவகாசத்தை பயன்படுத்தி இன்பமாக இருப்பார்கள்.

அறியும் ஆவல்

விமானம் தாமதம் என்றால் ஏன் தாமதம் என்று அறிந்து கொள்ள பெரும்பாலானவர்கள் ஆவலாய் இருப்பார்கள். தாமத அறிவிப்பு தாமதத்திற்கான காரணத்தை சொல்லாவிடில் அலுவலகத்திற்கு சென்று விசாரித்து காரணத்தை அறிந்து கொள்ள துடிப்பார்கள். இன்ஜினில் கோளாறு என்றோ பைலட் இன்னும் வரவில்லை என்றோ ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். விமானத்தை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்பது விமான நிறுவனத்தின் பொறுப்பு. காரணத்தை நாம் தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன லாபம். அதிகமான விஷயங்களை தெரிந்து கொள்வதால் நமது கவலை அதிகரிக்குமே தவிர குறையாது.

எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எதையும் அறிந்து கொள்வது அவசியமில்லை என்பது இதன் கருத்தல்ல. நாம் நம் கடமைகளை சரிவர செய்ய தேவையானவற்றை மட்டும் தெரிந்துகொண்டு அதிகப்படியான தகவல்களை தவிர்க்க வேண்டும்.

ஏன், எதற்காக, எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு இறுதியான பதிலை யாராலும் சொல்ல முடியாது. நம் வாழ்வில் நடந்த எந்த ஒரு நிகழ்வையும் எடுத்துக்கொண்டு அது ஏன் அவ்விதம் நடந்தது என்று தொடர் கேள்விகள் கேட்டுக்கொண்டே சென்றோமானால் முடிவில்அது அப்படி நடக்க வேண்டும் என்பது விதிஎன்ற பதில்தான் கிடைக்கும். எனவே அந்த பதிலை முதலிலேயே ஏற்றுக்கொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிகழ்வுகளை எதிர்கொள்வது புத்திசாலித்தனம்.

கடவுள் பக்தி

மனதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க கடவுள் பக்தி மிக அவசியம். இவ்வுலகை படைத்த கடவுள் முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை. அதே போல் உலகை படைத்துவிட்டு ஏதோ ஒரு லோகத்தில் கடவுள் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கவில்லை. நமது அனைத்து செயல்களையும் சூழ்நிலைகளையும் கட்டுபடுத்தி நம்மை வழிநடத்தி செல்பவன் இறைவன். எனவே பின்வரும் இரண்டு உண்மைகளை ஞாபகப்படுத்திக்கொள்வது அவசியம்.

1. கடவுள்தான் அனைத்துக்கும் காரணம் : நம் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் கடவுள்தான் காரணம். எனவே பிரச்சனை என்று நாம் நினைக்கும் நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது அவன் சித்தம். எனவே ஏன், எதற்கு என்று கேளாமல் அந்த சூழலில் நாம் என்ன செய்யமுடியுமோ அதை மட்டும் செய்துவிட்டு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும்.

2. உலகத்தை மாற்ற முயல்வதை விட மனதை திருத்திக்கொள்வது அவசியம்: கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற மனபக்குவம் நமக்கு தேவை. இல்லையெனில் காலுக்கு செருப்பு போட்டுகொள்ளலாம். அதை விடுத்து பாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரிக்க முயற்சிப்பது அறியாமை.

வெட்ட வெட்ட மீண்டும் எழும் ஜராசந்தன் போல் வாழ்வில் பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும். இதுபோல் தொடர்ந்து பிரச்சனைகளை கடவுள் நமக்கு அளிப்பதன் ஒரே நோக்கம் நாம் நம் மனதை பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. மனதிற்கு சரியான அறிவையும் பயிற்சியையும் கொடுப்பதை ஒத்திப்போட்டுவிட்டு வெளி உலகை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பது அலைகள் ஓய்ந்த பின் குளிப்பதற்கு காத்திருப்பது போலாகும்.

முடிவுரை :

குழப்பம் நம் இயற்கையான சுபாவம் அல்ல. என்றும் நிம்மதியாக இருப்பதுதான் நமது இயற்கைத்தன்மை. எனவேதான் நம் மனதில் கலக்கமோ குழப்பமோ ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட துடிக்கிறோம்.
 
நிறைய பணம் சம்பாதித்து சமூகத்தில் ஒரு பெரிய மனிதர் என்ற பெயர் பெற்றுவிட்டால் நமக்கு வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளித்துவிடலாம் என்பது பகல் கனவு. ஏழைக்கு ஏற்படும் பிரச்சனைகளை விட பணக்காரனுக்கு ஏற்படும் பிரச்சனைகளே அதிகம். எனவே பொருளாதார ரீதியில் வளர வளர நமக்கு ஏற்படும் பிரச்சனைகளும் வளர்ந்து கொண்டே வரும்.

பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்கு வெளி உலகில் எவ்வளவு முயற்சி செய்கிறோமோ அதே அளவு நமது மனதை தீட்டிக்கொள்ளவும் நாம் முயற்சி செய்யவேண்டும். எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நிம்மதியாக இருக்கும் வரத்தை தா என்று கடவுளிடம் பிரார்த்திப்பதை தவிர்த்து எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் மன உறுதியை தருமாறு கேட்டுகொள்ள வேண்டும். வேதத்தை முறையாக ஆசிரியரின் கீழ் படித்து மனதை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும்.

மனம் செம்மையானால் வாழ்வில் பிரச்சனைகளே ஏற்படாது. ஏனெனில் எதுவும் பிரச்சனைகளாகவே தெரியாது. விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் என்பது நல்ல செய்தியாக மாறிவிடும்.  

பயிற்சிக்காக :

1. மனதில் ஏற்படும் குழப்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன?

2.எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு காரணம் என்ன?

3.எதிர்பார்த்தலின் மூன்று விளைவுகள் என்னென்ன?

4.மன குழப்பத்தை தவிர்க்க கடவுள் பக்தி எவ்விதத்தில் உதவுகிறது?

5.எப்பொழுதும் நிம்மதியாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. அனைத்தையும் அறிந்து கொண்டால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் அதிகரிக்காதா?

2. எல்லா மனிதர்களும் அவரவர் கடமைகளை ஒழுங்காக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

3.உலகத்தை திருத்தவே முடியாதா?

Tuesday, February 23, 2010

Lesson 95: Same happiness returns ( பிரம்ம சூத்திரம் 3.2.9 )

பாடம் 95: விழித்த பின்னும் அதே ஆனந்தம்
பாடல் 327 (III.2.9)

ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவித்த அதே ஆனந்தம்தான் விழித்த பின்னும் தொடருகிறது என்றும் அந்த ஆனந்தம் எப்பொழுதும் குறையாத வண்ணம் வாழ்வை அனுபவிக்க நாம் அகங்காரத்தின் செயல்பாட்டையும் ஆசையின் தன்மையையும் அறிந்து கொண்டு பந்தபடுத்தாத ஆசைகளை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த பாடம் நமக்கு சொல்லித்தருகிறது.

உறங்கும் பொழுதுநான்

விழித்திருக்கும் சமயங்களில் மனதில் தோன்றும் நான், எனது மற்றும் என்னுடையது என்னும் எண்ணங்களின் தொகுப்பு அகங்காரம் எனப்படும். விஞ்ஞான மயகோசம் அதன் பொதுவான இருப்பிடம். நாம் படுக்கைக்கு சென்ற சிறிது நேரத்தில் விஞ்ஞானமயகோசம் அகலும்பொழுது அது மனோன்மய கோசத்திற்கு குடிபோய் அங்கிருந்து கனவுகளை அனுபவிக்கிறது. மனமும் ஓய்வெடுக்க ஆரம்பித்தவுடன் அகங்காரம் இருக்க இடம் இல்லாமல் மறைந்து போகிறது. எனவேதான் நாம் தூங்க ஆரம்பிக்கும் நேரங்களில் யாரேனும் நம் பெயர் சொல்லி கூப்பிடுவது தெரிந்தாலும் ஏன் என்று பதில் குரல் கொடுக்க முடிவதில்லை. அதேபோல் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து நம்மை யாரேனும் திடீரென்று விழிக்க வைத்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம் அல்லது என்ன பேசுகிறோம் என்பது நமக்கே தெரியாது. ஏனெனில் அந்த சமயங்களில் நான் எனும் அகங்காரம் முழுதாக உருவாவதில்லை.

என் இன்பத்திற்கு நான்தான் தடை

ஆழ்ந்த உறக்கத்தில் எப்பொழுதும் இருக்கும் ஆனந்தம் அகங்காரம் உருவானதும் எப்பொழுதோ ஒருமுறைதான் வருகைதருகிறது.

அகங்காரம் இல்லாத ஒரு வயது குழந்தை எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கிறது. மேலும் எப்பொழுதெல்லாம் தன்னை மறந்து நாம் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் இன்பமாயிருக்கிறோம்.

எனவே குறையாத இன்பம் நம்மிடம் எந்நாளும் நிலையாக இருக்க தடையாய் இருப்பது அகங்காரம்தான் என்ற உண்மை தெளிவாகிறது.

அகங்காரத்தை ஒழிப்பது எப்படி?

நெருப்பு நல்லதா கெட்டதா? ஊரை கொளுத்தினால் அது கெட்டது. உணவை சமைக்க உதவினால் அது நல்லது. அதுபோல அகங்காரம் நம் ஆனந்தத்திற்கு தடை என்று அதை முழுதும் அழித்துவிட்டால் அன்றாட வாழ்வின் அத்தியாவசிய செயல்களை கூட நம்மால் செய்ய முடியாது. எனவே அகங்காரத்தின் எந்த செயல் ஆனந்தத்திற்கு தடையாக இருக்கிறது என்பதை ஆய்ந்து அறிந்து அதை மட்டும் மாற்ற வேண்டும்.

இது என் அலுவலகம்’. ‘இது நான் வீடு திரும்பும் வழி’. இது போன்று அகங்காரத்தின் அடிப்படையில் அமைந்த எண்ணங்கள் தினசரி வாழ்விற்கு மிக அவசியம். மேலும் இவற்றால் நம் ஆனந்தத்திற்கு எவ்வித தடையும் இல்லை.

இது நன்றாக இருக்கிறதுஎன்ற எண்ணத்தை இது எனக்கு வேண்டும்என்ற ஆசையாக மாற்றுவதும் அகங்காரத்தின் செயல். ஆசைகளை உருவாக்கும் அகங்காரத்தின் இந்த ஒரு செயல்தான் நம் இன்பத்திற்கு தடையாய் இருப்பது. எனவே அழிக்க வேண்டியது அகங்காரத்தை அல்ல. அது ஆசையை உருவாக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை செய்வதன் மூலம் நாம் நம் இயல்பான ஆனந்தத்தை எப்பொழுதும் அனுபவிக்கலாம். அகங்காரத்தை அழிக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே அடுத்த கட்டமாக ஆசைகளை ஆராயவேண்டும்.

ஆசைகள் உருவாக காரணம் என்ன?

ஆனந்தம் நம்முடைய இயல்பான சொரூபம் என்பதை அறியாமல் உலகத்தில் உள்ள பொருள்கள்தான் நமக்கு இன்பத்தை தருகின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதால்தான் ஆசைகள் ஏற்படுகின்றன.

நம்முடைய தற்போதைய நிறைவேறாத ஆசை ஒன்றை எடுத்து ஆராய்ந்தால் உலகம் எவ்வித இன்பத்தையும் தருவதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்தை முதல் காட்சியில் நாம் பார்க்கவிரும்புவதாக வைத்துக்கொள்வோம். திரைப்படத்தை முதல் காட்சியில் பார்ப்பது இன்பம் அளிக்கும் அனுபவம் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பதுதான் இந்த ஆசைக்கு காரணம்எவ்வளவோ முயன்றும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் இருக்கும்பொழுது நம் நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு டிக்கெட் அதிகமாக இருக்கிறது, நீ என்னுடன் வருகிறாயாஎன்று கேட்டால் நமக்கு ஏற்படும் இன்பத்திற்கு அளவே இல்லை. திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதற்குள் எப்படி நமக்கு இன்பம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தோமானால்  ‘டிக்கெட் கிடைக்கவில்லை, கிடைத்தால் நன்றாக இருக்கும், ப்ளாக்கில் டிக்கெட் வாங்குவது எப்படிஎன்பது போன்ற எண்ணங்கள் நமது மனதை ஆக்ரமித்திருந்ததால் மனம் நம் இயற்கையான ஆனந்தத்தை பிரதிபலிக்காமல் நம்மை சோகத்தினுள் ஆழ்த்தியிருந்தது என்றும் டிக்கெட் தருகிறேன்என்று நண்பர் சொன்னதும் கவலை தந்துகொண்டிருந்த அனைத்து எண்ணங்களும் ஒரு நொடியில் நம் மனதிலிருந்து மறைந்து விட இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க துவங்கிவிட்டோம் என்றும் நமக்கு தெரியவரும்.

இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் திரைப்படத்தை பார்ப்பதுதான் நமக்கு இன்பத்தை தரும் என்று நாம் தவறாக நினைத்துகொண்டிருந்தோம். எனவே ஆசைகள் உருவாவதற்கு காரணம் அறியாமை மட்டுமே.

சரியான மாற்றம்

உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. இதில் நிலையானவை என்று எதுவுமில்லை. இந்த நிலையில்லாத உலகை நிலையானது என்று ஒருநாளும் நம் புலன்கள் நம்மிடம் சொல்வதில்லை. ‘இது ஒரு மலர்என்று பொருளின் தற்போதைய நிலையை மட்டும்தான் கண் நமக்கு தெரிவிக்கும். சற்று முன் வரை அது ஒரு மொட்டாக இருந்தது என்பதையோ இன்னும் சில நொடிகளில் அது கசக்கப்பட்டு குப்பையாக மாறிவிடும் என்பதையோ புரிந்து கொள்ளவேண்டிய வேலை நமது புத்தியை சேர்ந்தது.

இந்த இடத்தில்தான் பெரும்பான்மையான மக்கள் தவறு செய்து தங்கள் வாழ்க்கையை தாங்களே நரகமாக்கிகொண்டிருக்கிறார்கள். ஒன்று, மாறுவதை புரிந்து கொள்வதில்லை. அல்லது, மாறுவது தங்களின் விருப்பபடிதான் மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு எப்பொழுதும் நிறைவேறுவதில்லை. ஒவ்வொரு நாள் முடிவடையும் பொழுதும் நம் வயது ஒரு நாள் அதிகரிக்கிறது என்று தெரிந்தாலும் என்றும் இளமையுடன் இருக்கும் ஆசை நம்மை விட்டுபோவதில்லை. இது இவ்வாறு இல்லாமல் வேறு மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பந்தபடுத்தும் ஆசையாக மாறி நம்மை நம் இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க தடையாய் உள்ளது.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். எதுவும் வேறுமாதிரி இருக்க வேண்டிய அவசியமேயில்லை. நமக்கு பிடித்தபடி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாம் முயற்சி எடுக்கலாமே தவிர முடிவு செய்யும் அதிகாரம் கடவுளிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் துன்பபடாமல் என்றும் இன்பமாக இருக்கலாம்.


முடிவுரை :

ஆழ்ந்த உறக்கத்தில் இந்த உலகத்துடன் எவ்வகையிலும் உறவு கொள்ளாமலேயே நாம் இன்பமாக இருக்க முடிவதால் விழித்தெழுந்த பின்னும் உலகத்துடன் பல விவகாரங்களில் ஈடுபடும் காலங்களில் கூட நம்மால் அதே இன்பத்தை தொடர்ந்து வாழ முடியவேண்டும். ஆனால் வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது என்று நம் அனுபவம் சொல்கிறது. இதற்கு காரணம் நம்மை பந்தபடுத்தும் ஆசைகள்தான்.

பின்வரும் செயல்களை செய்வதன் மூலம் நாம் என்றும் குறைவில்லாத இன்பத்துடன் வாழலாம்.

1. ஆனந்தம் நமது இயல்பான நிலை, வந்து போகும் உணர்ச்சி அல்ல என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

2. மனிதர்கள், மற்ற உயிரினங்கள், பொருள்கள், நிகழ்வுகள் ஆகிய எவற்றிற்கும் நமக்கு இன்பம் தரும் சக்தியில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

3. மேற்கூறப்பட்ட இரு தகவல்களை நமது அறிவாக மாற்றிக்கொள்ள வேதாந்தத்தை முறையாக படித்த ஆசிரியர் ஒருவரிடம் சரணடைந்து உபநிஷதங்களையும் கீதையையும் முறையாக படிக்கவேண்டும்.

4. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை படுவதில் தவறில்லை. ஆனால் பணத்துக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து கொண்ட பின் பணம் சம்பாதிக்க தேவையான செயல்களில் ஈடுபடவேண்டும்.

5. உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும். வாழ்வின் நிகழ்வுகளை நம் விருப்பபடி மாற்ற நம்மாலான அனைத்து முயற்சிகளையும் தர்மமான முறையில் செய்வதில் தவறில்லை.       

6. முயற்சி செய்வது மட்டும்தான் நம் கையில் இருக்கிறதே தவிர பலன் கொடுப்பது இறைவனின் வேலை என்பதை உணர்ந்து நாம் செய்யும் அனைத்து செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து பலன் கிடைக்கும்பொழுது அதை கடவுளின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

7. ஒரு செயலை செய்யும் பொழுது முழுமனதின் ஈடுபாட்டுடன் தன்னை மறந்து ஆனந்தமாக வேலை செய்ய வேண்டும். நான் விரும்பிய வகையில் பலன் கிடைத்த பின்தான் மகிழ்ச்சி, அதுவரை உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கஷ்டப்பட்டு உழைக்கிறேன் என்பது தவறு. இன்பமாக வேலை செய்ய முடிந்தால் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வேலையை செய்வதால் எவ்வித பலனும் இருக்காது.

8. ஆசை நம் செயல்களுக்கு ஆதாரம். ஆசையில்லாமல் எவ்வித வேலையையும் நாம்மால் செய்ய முடியாது. ஆனால் ஆசைக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து கொள்வது அவசியம். பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம், குடும்ப வாழ்வில் செழிப்பு, உறுதியான உறவுமுறைகள் ஆகியவை வேண்டும் என்ற ஆசையுடன் நாம் செயலில் ஈடுபடலாம். இது போன்ற ஆசைகள் நிறைவேறுவதால் சுகமான வாழ்வும் நல்ல நண்பர்களும் கிடைக்குமே தவிர ஆனந்தம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறு.    

9. ஆசை நிறைவேறினால்தான் மகிழ்ச்சி என்ற அறியாமைதான் ஆசை துன்பத்திற்கு காரணம் என்ற தவறான செய்திக்கு அடிப்படை காரணம். ஆசை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் என்னுடைய இயல்பான ஆனந்தம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என்ற அறிவு ஏற்பட்டுவிட்டால் நம் அனைத்து ஆசைகளும் பந்தபடுத்தாத ஆசைகளாக மாறும். இது போன்ற ஆசைகளால் நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மாறாக இவை நமக்கும் நம்மை சுற்றியிருப்போருக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.

பயிற்சிக்காக :

1. அகங்காரத்தின் இருப்பிடம் எவை?

2. அகங்காரத்திற்கும் ஆசைக்கும் என்ன உறவு?

3. ஆசை எப்படி ஆனந்தத்திற்கு தடையாய் உள்ளது?

4. உலகப்பொருள்களில் இன்பம் இல்லை என்பதை உதாரணம் கொடுத்து விளக்கவும்?

5. ஆசைகள் உருவாவதற்கு காரணம் என்ன?

6. எப்பொழுதும் ஆனந்தமாயிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. நல்லவிதமான எதிர்பார்த்தல் (positive thinking) நல்ல விளைவுகளை ஏற்படுத்தாதா ?

2. ஆனந்தம் உலகில் இல்லை என்றால் இந்த படைப்பின் அவசியமென்ன?

3. எல்லோரும் எப்பொழுதும் ஆனந்தமாக இருந்தால் இவ்வுலகில் சண்டை, சச்சரவு, பொறாமை, போட்டி ஆகிய எதுவும் இருக்காதா?

Friday, February 19, 2010

Lesson 94: Deep sleep experience ( பிரம்ம சூத்திரம் 3.2.7-8 )

பாடம் 94: ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தம்
பாடல் 325-326 (III.2.7-8)

ஆசைகளுக்கும் ஆனந்தத்திற்கும் உள்ள உறவை விளக்க ஆழ்ந்த உறக்க அனுபவத்தின் தனித்தன்மையை உதாரணமாக கொடுத்து உலகத்தில் உள்ள உறவுகளில் நமக்கு இருக்கும் ஆசையை படிப்படியாக குறைத்து நிலையான ஆனந்தத்தை தரும் பரமனை அறியும் ஆசையை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வேதம் இந்த பாடத்தில் கூறுகிறது.

ஆழ்ந்த உறக்கம் என்றால் என்ன?

தினசரி வாழ்வில் எப்பொழுதெல்லாம் இந்த உடலையும் மனதையும் நம்மிடமிருந்து அகற்றி வைக்கிறோமோ அந்த சமயங்களில் நாம் ஆழ்ந்த உறக்கம் என்ற நிலையில் இருக்கிறோம்.  ஆழ்ந்த உறக்கத்திற்கும் இறத்தலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் மறுபடி விழிக்கும்பொழுது வயதான உடலில் இருக்கிறோமா அல்லது மீண்டும் பிறந்திருக்கிறோமா என்பது மட்டும்தான்.

அலுவலகம் சென்று திரும்பியவுடன் ஒவ்வொன்றாக உடைகளை களைவது போல படுக்க சென்றதும் ஒவ்வொரு கோசமாக களைய ஆரம்பிக்கிறோம். முதலில் அன்னமய கோசமான பருவுடலுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை துறக்கிறோம். கனவு உலகத்தை உருவாக்கியபின் நுண்ணிய உடலை நேரடையாக உபயோகித்து நிஜ உலகத்தில் செயலாற்றியது போலவே கனவிலும் வாழ்ந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சமயங்களில் நமது பிராண மயகோசமும் விஞ்ஞானமய கோசமும் ஒன்றன் பின் ஒன்றாக கழன்று விடுகின்றன. புத்திக்கு மனதின் மீதுள்ள கட்டுப்பாடு படிப்படியாக குறைந்து முடிவில் இல்லாமல் போய்விடுகிறது. அதே போல் கனவு நிலை முடியும் நேரத்தில் மனோன்மய கோசமும் கழன்று விடுகிறது. இந்த நான்கு கோசங்களையும் அகற்றி ஆனந்தமயக்கோசத்தில் மட்டும் இருக்கும் காலத்தை ஆழ்ந்த உறக்கம் என்கிறோம்.

ஆழ்ந்த உறக்கத்தில் இயற்கை எய்துகிறோம்

பருவுடல் மற்றும் நுண்ணிய உடல் ஆகிய இரண்டையும் அகற்றிவிட்டு காரண உடலில் மட்டும் ஒன்றியிருக்கும் மரண அனுபவம் நமக்கு தினம் தினம் இரவில் தூங்கும்பொழுது கிடைக்கிறது.

இருத்தல், ஆனந்தம் மற்றும் உணர்வு ஆகிய மூன்று மட்டும்தான் நம் இயற்கை தன்மைகள். காரண உடலில் மட்டும் குடியிருக்கும் பொழுது நாம் ஆனந்தமாக அறிவுருவாக காலத்தை கடந்து நித்தியமாய் இருக்கிறோம் என்பதை நம் அனுபவத்தில் நிரூபிப்பதன் மூலம் வேதம் நமது இயல்பை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. மேலும் நமது உண்மை நிலையை தினந்தோறும் நமக்கு நினைவுபடுத்துவதன் மூலம் எப்பொழுதும் இன்பமாக இருப்பது என்ற வாழ்வின் முடிவான நோக்கத்தை அடைய நம்மை தூண்டுகிறது. இதை அடையும் வரை எல்லோருக்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். 

மூன்று நிரூபணங்கள்

உடலளவிலும் மனதளவிலும் நமக்கு ஏற்படும் அனைத்து துன்பங்களும் ஆழ்ந்த உறக்கத்தில் முழுதும் மறைந்து நாம் இன்பமாக தூங்குவது என்பது ஆனந்தம் நமது இயற்கை நிலையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

ஆழ்ந்த உறக்கத்தில் நம் மனம் முற்றிலும் செயல்படுவதில்லை. அப்படியிருக்கும் பொழுது விழித்தபின்நான் நன்றாக தூங்கினேன்என்று எவ்வாறு கூறமுடிகிறது? அறிவு (awareness) என்பது நமது இயற்கை நிலையாய் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

உறங்கி எழுந்தவுடன் எவ்வளவு நேரம் உறங்கினோம் என்பது கடிகாரத்தை பார்த்து கூட்டி கழித்தால் மட்டுமே நமக்கு தெரியவரும். ஏனெனில் ஆழ்ந்த உறக்க நிலையில் நாம் நேரம், காலம், இடம் என்ற வரைமுறைகளுக்கு கட்டுப்படாமல் அனந்தமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

மூன்று ஆசைகள்

எப்பொழுதும் இருக்க வேண்டும். எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க வேண்டும். அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். இவை மூன்றும் மனிதனின் அடிப்படை ஆசைகள். ஆனால் இம்மூன்றும் இயற்கையிலேயே நமது உண்மை சொரூபம் என்பதை யாரும் அறிவதில்லை. அனைத்து மனிதர்களுக்கும் எல்லா காலங்களிலும் தோன்றும் அனைத்து ஆசைகளையும் ஆராய்ந்தால் அவற்றின் அடிப்படை இந்த மூன்று ஆசைகள் மட்டுமே என்பது தெரியவரும். இந்த மூன்று ஆசைகளைத்தவிர வேறு ஒரு ஆசையும் மனிதனுக்கு இருக்கவே முடியாது.

ஆசைகளும் ஆனந்தமும்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆனந்தம் விழித்தவுடன் நம்மை விட்டு சென்றுவிடுவதற்கு நமது ஆசைகளே காரணம். ஆசை என்பது நம் மனதில் தோன்றும் எண்ணம். எனவே மனம் இல்லாதபொழுது இருந்த ஆனந்தம் மனம் வந்தவுடன் இல்லாமல் போய்விட்டது. இதிலிருந்து நம் மனம்தான் நமது துன்பங்களுக்கு காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தலைவலி போகவேண்டுமென்பதற்காக தலையை வெட்டிக்கொள்ள கூடாது. அதுபோல மனதை ஒடுக்கி இன்பம் அடையலாம் என்று பின்வரும் முயற்சிகளில் இறங்க கூடாது.

1.தூங்குவது:  விழித்திருந்தால்தானே நமது இயற்கை நிலையான ஆனந்தத்தை இழக்க நேரிடுகிறது என்று கும்பகர்ணன் போல் தூங்கிகொண்டே இருக்க கூடாது. எவ்வளவு நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் செலவிடுகிறோம் என்பது நம் கர்ம வினைகளின் பலன்களால் தீர்மானிக்கபடுகின்றன என்பதால் நம்மால் தூங்கிகொண்டே இருக்க முடியாது. மேலும் இன்பமாய் இருந்தேன் என்பது தூங்கி விழித்தபின்தான் நமக்கு தெரிகிறதே தவிர தூங்கும்பொழுது தெரிவதில்லை.

2.குழந்தையாய் இருப்பது: பிறந்த குழந்தைக்கு பசி தீரவேண்டும் என்ற ஆசையை தவிர வேறு ஆசைகள் கிடையாது. எனவே அந்த ஆசை நிறைவேறியவுடன் ஆனந்த மயமாக இருக்கிறது என்பதை குழந்தையின் முகத்தை பார்த்தே நாம் அறிந்து கொள்ளலாம். அதற்காக வளராமல் குழந்தையாகவே இருப்பதும் முடியாது. உடலளவில் வளர்ந்து மனதளவில் வளராமல் இருப்பதும் முடியாது. ஏனெனில்அறிந்து கொள்ள வேண்டும்என்ற அடிப்படை ஆசை ஐந்து புலன்களையும் செயல்படுத்தி குழந்தை பருவத்திலிருந்து தொடர்ந்து நம் அறிவை அதிகப்படுத்துகிறது. முதுமை வந்தவுடன் இந்த அறிய வேண்டும் என்ற ஆசை குறைந்துவிடும். இதற்கு காரணம் அறிந்தவற்றையே அடைய முடியவில்லை என்ற இயலாமை. மேலும் அறிந்துகொண்டால் அனாவசியமாக ஆசை மட்டும் அதிகரித்து அனுபவிக்கும் திறன் இல்லாமல் துன்பபட வேண்டாம் என்ற எண்ணத்தில் ஒரு சிலர் தெரிந்து கொள்ளும் ஆசையை துறக்கிறார்கள்.

3.சன்யாசம் பெறுவது: உலக வாழ்வில் உழன்றால் மட்டுமே ஆசைகள் அதிகமாகி பரமானந்தத்தை அனுபவிக்க முடியாது என்று நினைத்து சன்யாசம் பெறுவது தவறு. உயிர்வாழ நிச்சயம் நாம் உலகை சார்ந்திருக்க வேண்டும். எனவே ஆசைகளை தவிர்க்க முடியாது. காட்டுக்குள் தனியாக வாழ்ந்தாலும் உணவு கிடைக்க வேண்டுமே என்ற ஆவலும் பாம்பு கடித்துவிட்டால் என்ன ஆகும் என்ற பயமும் நம்மை நிம்மதியாக இருக்க விடாது.

4.போதை பொருள்களை உபயோகிப்பது: மதுபானங்களை அருந்தியோ, போதை பொருள்களை உட்கொண்டோ மனதை உலகத்தின் பிடியிலிருந்து மீட்டு ஆசைகள் ஏற்படாமல் ஆனந்தமாய் இருக்கலாம் என்பது தவறான முடிவு. இது போன்ற செயல்களின் பக்க விளைவுகள் நம் உடலையும் மனதையும் அழித்துவிடும் என்பதால் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

5.தற்காலிக ஓய்வெடுப்பது: ஆசைகள் தொடர்ந்து மனதை ஆக்ரமித்து நம்மை ஆனந்தமாக இருக்க அனுமதிப்பதில்லை என்ற காரணத்தால் அவ்வப்பொழுது ஆசைகளை மறந்து இன்பத்தை அனுபவிப்பது முற்றிலும் தவறல்ல என்றாலும் இது போன்ற செயல்கள் குறையாத ஆனந்தம் என்ற இலக்கை நாம் அடைய எடுத்துக்கொள்ளும் காலத்தை அதிகப்படுத்தும்.

உதாரணமாக வாரம் முழுவதும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உழைத்துவிட்டு வார இறுதியில் சினிமா, நாடகம், நாட்டியம், உபன்யாசம், பஜன் போன்றவற்றில் தன்னை மறந்து ஈடுபடுவதால் இதுதான் ஆனந்தமான வாழ்க்கை என்ற ஒரு பிரமையை நம்மிடம் ஏற்படுத்திவிடும். ஐந்து நாட்கள் கஷ்டபட்டுவிட்டு உழைப்பதன் பலனாக ஒரு நாள் ஓய்வெடுக்கமுடிகிறது, மற்றும் ஒரு நாள் உல்லாசமாக ஆசைகளை மறந்துவிட்டு ஆனந்தமாக இருக்கமுடிகிறது, இது போதும் என்ற மனப்பான்மையை நம்மிடம் ஏற்படுத்திவிடும். எப்பொழுதும் ஆனந்தமாயிருக்க வேண்டும் என்ற நம் அடிப்படை ஆசையை நிறைவேற்றிக்கொள்ள செய்ய வேண்டிய முயற்சிகளை செய்யவிடாமல் இது போன்ற பொழுதுபோக்குகள் நம் கவனத்தை திசைதிருப்பிவிடுகின்றன.

இருப்பது எடுக்க எடுக்க குறையாத அட்சய பாத்திரம். அதிலிருந்து பிச்சையெடுத்து சாப்பிடுவது போல் 24/7 அலுவலகங்களில் உழைக்கும் பலர் தம் இயல்பான ஆனந்தத்தை மறுத்துவிட்டு அதே ஆனந்தத்தின் ஒரு பகுதியை பணம் கொடுத்து வாரக்கடைசியில் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆசைகள் நிறைவேற பணம் வேண்டும் என்று அறியாமை காரணமாக நினைப்பது தவறில்லை. ஆனால் அந்த பணத்தை பெற நமக்கு பிடிக்காத வேலைகளை செய்வதுதான் தவறு. எந்த வேலை நம் இயல்புக்கு பொருந்தி அதை செய்யும் பொழுது சிறிதளவும் மனதளர்ச்சியோ சோர்வோ ஏற்படாமல் இருக்கிறதோ அது போன்ற வேலைகளை மட்டுமே செய்து பணம் சம்பாதிக்க வேண்டும். அதை விடுத்து பணம் கிடைக்கிறதே என்ற நினைப்பில் கூலிக்கு மாரடித்தால் அனாவசியமாக நம் உடல் நலத்தையும் மன நலத்தையும் துறந்து கண்களை விற்று சித்திரம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்போம்.

முடிவுரை :

எல்லோரும் எல்லா சமயங்களிலும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தமாக இருப்பதால் ஆனந்தம் என்பது நம் இயற்கையான தன்மை. ஆனால் இந்த அறிவு யாருக்கும் இயற்கையாக இருப்பதில்லை. எனவே ஆனந்தமாக இருப்பதற்கு பணம் வேண்டும் புகழ் வேண்டும் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் அனைவரும் வெவ்வேறு குறிக்கோள்களை அடைய செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் இந்த ஆசைகளே நம் இயற்கையான ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு தடையாக இருக்கிறது.

உடலும் மனமும் ஜடப்பொருள்கள். உடலைப்போலன்றி மனம் பரமனின் அறிவு, ஆனந்தம் மற்றும் தூய இருத்தல் ஆகிய மூன்று இயல்புகளையும் பிரதிபலிக்கும் சக்தி கொண்டது. மனம் ஆசைகள் ஏதுமின்றி நிர்மலமாக இருக்கும்பொழுது இந்த பிரதிபலிப்பு நம் இயற்கையான ஆனந்தத்தை முழுமையாக பிரதிபலிப்பதால் நாம் எந்த ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாலும் நிறைந்த மனதுடன் ஆனந்தமாக இருப்போம். ஆனால் வாழ்வின் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற ஆசை மனதை ஆக்ரமித்துக்கொண்டு ஆனந்தத்தின்  பிரதிபலிப்பை தடை செய்வதால் ஆசைகள் நிறைவேறும்பொழுதோ அல்லது தற்காலிகமாக அவை மறக்கப்பட்ட சமயங்களிலோ மட்டும் மனம் நிர்மலம் அடைந்து நமது இயல்பான ஆனந்தத்தை நமக்கு தருகிறது. இதனால் ஆசைகள்தான் ஆனந்தத்தை தருகின்றன என்ற அஞ்ஞானம் அதிகமாகி அதன் விளைவாக ஆசைகளின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றை நிறைவேற்ற மற்றும் மறக்க வைக்கும் முயற்சிகளும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.

இயற்கையான இன்பத்துடன் செய்யும் செயல்களை அனுபவிப்பதை விடுத்து துன்பத்துடன் செயல்களை செய்து நிலையில்லாத ஆனந்தத்தை அவ்வப்பொழுது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

மனதை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மயங்கவைக்கும் முயற்சி அது பக்குவபடும் காலத்தை அதிகரிக்கிறது. நான் பரமன் என்ற உண்மையை அறிந்து கொண்டு நம் இயல்பான குறையில்லா ஆனந்தத்தை அனுபவிக்க நமக்கு புத்திக்கூர்மையும் மனமுதிர்ச்சியும் அவசியம். எனவே நாம் ஆசைகளை மறக்க முயலாமல் மனதுக்கு பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். உதாரணமாக அலுவலகத்திலிருந்து வந்தவுடன் ஓவியம் வரைவது இசைக்கருவிகளை வாசிப்பது புத்தியை தீட்டும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டுமே தவிர தொலைகாட்சியை பார்ப்பது போன்றவற்றின் மூலம் மனதை அமைதிபடுத்த முயலக்கூடாது.  

பயிற்சிக்காக :

1. ஆழ்ந்த உறக்கம் என்றால் என்ன?

2. ஆழ்ந்த உறக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

3. ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் எந்த மூன்று உண்மைகள் நிரூபிக்கப்படுகின்றன?

4. மனிதனின் ஆசைகளுக்கு அடிப்படை காரணம் என்ன?

5.மனதை அமைதிப்படுத்த உதவாத ஐந்து செயல்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஆசைகள் துன்பத்திற்கு காரணமா?

2. வாழ்க்கையில் குறிக்கோள்களுக்கு அவசியமென்ன?

3.ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்யவேண்டுமா?

Tuesday, February 16, 2010

Lesson 93: Lessons from dreams ( பிரம்ம சூத்திரம் 3.2.1-6 )

பாடம் 93: கனவு உலக ஆசைகள்
பாடல் 319-324 (III.2.1-6)

உணர்ச்சிகள் உண்மையாக இருந்தாலும் அவற்றிற்கு அடிப்படையான உறவுகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை கனவு உலகில் நாம் சிருஷ்டிக்கும் பொருள்கள் மற்றும் நபர்கள் மூலம் நாம் பெறும் அனுபவங்களை ஆதாரமாக காட்டி நிலையாதவை மீது ஆசையை தவிர்க்க வேண்டும் என்று இந்த பாடம் வலியுறுத்துகிறது.

ஆசைகளும் அனுபவங்களும்

நாம் நமது ஐந்து புலன்களின் மூலம் இவ்வுலகில் உள்ள பொருள்களுடனும் மனிதர்களுடனும் தொடர்பு கொள்வதனால் பல்வேறுபட்ட அனுபவங்களை பெறுகிறோம். அனுபவங்களிலிருந்துதான் இன்பத்தை பெறுவதாக நாம் நினைத்துக்கொண்டிருப்பதால் சுகமான அனுபவங்களை நாடி செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். தேடியது கிடைத்துவிட்டால் இனிமையான அனுபவமும் கிடைக்காவிட்டால் ஏமாற்றம், சோகம், வருத்தம் போன்ற கசப்பான அனுபவங்களும் ஏற்படுகின்றன.

அனுபவங்கள் மேலும் ஆசையை வளர்க்கின்றன. எனவே ஆசை பட்ட பொருள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாம் தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டு அனுபவங்களை பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

கனவுகள் ஏற்படுவதன் காரணம்

அன்றாடம் காலையிலிருந்து இரவுவரை ஆசைபடுதல், செயல்படுதல், அனுபவங்களை பெறுதல் என்று தொடர்ந்து வேலை செய்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக மனம் உறக்கத்தில் ஆழ்கிறது. விழிப்பு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வதற்கு முன்னும் பிறகு மறுபடியும் விழிப்பதற்கு முன்னும் கனவுகள் ஏற்படுகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழுவதுமாக செயல்படுவதில்லை.

மின்னோட்டத்தை நிறுத்திய பின் வேகமாக சுழன்றுகொண்டிருந்த மின்விசிறி, படிப்படியாக வேகம் குறைந்து முழுவதும் நிற்பது போல வேகமாக செயல்பட்டுக்கொண்டிருந்த மனது முழுவதும் நிற்பதற்கு முன்னால் ஏற்படுவது கனவு. அதேபோல் விழித்து முழு வேகத்தில் செயல் படுவதற்கு முன் கனவில் மெதுவாக மனம் செயல் பட ஆரம்பிக்கிறது. இதுதான் கனவு ஏற்படும் காரணம் பற்றிய அறிவியல் உலகத்தின் கணிப்பு. கனவுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதற்குத்தான் இது பதில். கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்ற கேள்விக்கு அறிவியலால் எப்பொழுதும் பதில் சொல்லமுடியாது.

மின்னோட்டத்தை நிறுத்தியவுடன் மின்விளக்கு அணைந்து போவது போல் ஏன் தூங்க சென்றவுடன் மனம் கனவுகள் ஏதுமில்லாமல் நேரடியாக ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல கூடாது? கனவுகளின் அவசியமென்ன?

வாழ்வின் உண்மை தன்மையை பற்றி மக்கள் சரியான அறிவை பெற கனவு அனுபவம் மிக அவசியம். இதுவே கனவுகள் ஏற்படுவதற்கான ஒரே காரணம். கனவுகள் மூலம் நாம் பின்வரும் மூன்று உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம்.

கனவு தரும் உண்மை1: அனுபவங்களின் தன்மை

பெரும்பாலும் நமது வாழ்வில் நிகழ்வது போன்ற நிகழ்வுகளே கனவிலும் ஏற்படுகின்றன. நமது விருப்பு-வெறுப்புகள் கனவுலகிலும் நம்மை ஆட்டுவிக்கின்றன. அதே போல் கனவு எப்பொழுதும் இனிமையான அனுபவங்களை மட்டும் தருவதில்லை. நிஜ வாழ்வில் நிகழ்வது போல பல கசப்பான அனுபவங்களும் கனவுகளில் ஏற்படுகின்றன.

நிஜ வாழ்வில் ஏற்படும் அனுபவங்களுக்கும் கனவில் நமக்கு ஏற்படும் அனுபவங்களுக்கும் இடையே அனுபவம் என்ற அடிப்படையில் எவ்வித வேற்றுமையும் இல்லை.

உதாரணமாக பதவி உயர்வு வேண்டும் என்று நிஜ வாழ்வில் ஆசை பட்டுகொண்டிருந்தால் மேலாளர் நமது வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது போலவும் அதனால் பதவி உயர்வுக்கு பதில் வேலையிலிருந்து நீக்கப்படுவது போலவும் கனவு வரலாம். உண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டால் எப்படி வருத்தம் ஏற்படுமோ அதில் இம்மியளவும் குறையாத அளவு நாம் கனவில் துன்பப்படுவோம். ஆனால் கனவிலிருந்து விழித்தபின், அப்பாடி கனவுதான், நிஜமாக ஒன்றும் நடக்கவில்லை என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொண்டு நிம்மதியடைவோம். மேலும் பதவி உயர்வு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு குறைந்து வேலை போகாமல் இருந்தால் போதும் என்ற எண்ணம் கூட ஏற்படலாம்.

இதிலிருந்து கனவில் ஏற்படும் அனுபவம் கூட எவ்வளவு தூரம் நம்மை பாதிக்கிறது என்றும் அனுபவங்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தருணங்களில் நம்முடைய உணர்ச்சிகளும் எண்ண ஓட்டங்களும் கனவு என்பதால் வேறு விதமாக இருப்பதில்லை என்றும் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும் அனுபவங்கள் ஏற்பட நிகழ்வுகள் உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.

நிஜமான அனுபவங்களுக்கு அனாவசியமாக ஒரு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை கனவுலக அனுபவங்களிலிருந்து வேறுபடுத்துவது நாம்தான். இது தவறு.
 
கனவு தரும் உண்மை2: செயல்களின் தன்மை

கனவில் இது போன்ற வேண்டாத நிகழ்வுகள் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடிவதில்லை. கனவு காண்பது நாம்தானே. அப்படியிருக்க சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி நிறய லாபத்துடன் வாழ்க்கையை அனுபவிப்பது போல் ஏன் கனவு காணக்கூடாது? ஏனெனில் நாம் நிஜவாழ்வில் செய்யும் செயல்களின் பலன்தான் நமது நிஜமான அனுபவங்களை மட்டுமின்றி கனவுலக அனுபவங்களையும் தீர்மானிக்கின்றன. எனவேதான் கத்தியுடன் துரத்தும் கொலைகாரனிடமிருந்து தப்பிக்க எவ்வளவு வேகமாக ஓடினாலும் இருக்கும் இடத்தைவிட்டு நகர முடிவதில்லை.

கனவில் மட்டும்தான் இதுபோன்ற கையாலாகாத்தானம் நமக்கு ஏற்படும் என்பது தவறான எண்ணம். நிஜவாழ்வில் நமக்கு ஏற்படும் நிகழ்வுகளைக்கூட நம்மால் மாற்றமுடியாது. நமது கடந்த கால செயல்களின் விளைவாக ஏற்படும் பலனை நாம் அனுபவிக்காமல் தவிர்க்க முடியாது.
    
கனவு தரும் உண்மை3: அனுபவிப்பவனின் தன்மை

நம் அனுபவங்களை அனுபவிப்பது யார் என்ற கேள்விக்குநான்என்ற தவறான பதிலை தயங்காமல் சொல்வோம். நம் கனவு உலகை சிறிது ஆராய்ந்தால் இந்த பதில் ஏன் தவறு என்பதை அறிந்து கொள்ளலாம்.

சுவையான பச்சைபருப்பு பாயசத்தைஆஹா, தேவாமிர்தமாக இருக்கிறதுஎன்று ரசித்து சாப்பிட்டது கனவில் இருந்த என்னைப்போல் ஒருவன். அவனை நான் என்று கனவு காணும்பொழுது தவறாக நினைத்துக்கொண்டிருந்தேன். விழித்தவுடன்தான் இந்த தவறு எனக்கு புரிந்தது. இதே தவறை நாம் வாழ்விலும் செய்து கொண்டிருக்கிறோம். தட்டில் வைக்கப்பட்டிருக்கும் தோசையும் என் உடலும் ஒரே ஜடப்பொருளால் ஆனவை. தோசை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் சென்று மறைந்து விட்டது. இப்பொழுது நான் சாப்பிட்டேன்என்ற எண்ணம் நம் மனதில் தோன்றுகிறது. இது கனவில் பாயசம் சாப்பிட்ட அனுபவத்திலிருந்து வேறுபட்டதல்ல.

தோசை சாப்பிட்டதால் பசி நீங்கியது, எனவே இது கனவில் பாயசம் சாப்பிட்டதை விட நிஜமானது என்பதும் தவறான எண்ணம். கனவில் சாப்பிட்டது கனவு பசியை நீக்கியது. இப்பொழுது சாப்பிட்டாலும் இன்னும் சில நேரத்தில் மீண்டும் பசிக்கும். எனவே அனுபவங்கள் தொடரும். எனவே இது நிஜம் என்று நாம் எதை எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதுவும் கனவுதான். நிரந்தரமான நான் அனுபவிப்பவன் அல்ல என்ற உண்மையை வேதம் நமக்கு சொல்லித்தருகிறது.

முடிவுரை :

ஆசைகள், செயல்கள் மற்றும் அவற்றின் விளைவான அனுபவங்கள் ஆகிய மூன்றின் மொத்த தொகுப்புதான் வாழ்க்கை. இவற்றிற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்தே நம் வாழ்வின் தரம் அமைகிறது.

பொருளாதார தேக்கத்தினால் ஏற்றுமதி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிற வீட்டை விற்று வாடகை வீட்டுக்கு குடிபோன விஷயத்தை ஒரு கதை சொல்வது போல சொல்வதோ இல்லை குடிமுழுகி போய்விட்டது என்று தூக்கில் தொங்குவதோ உலக அனுபவங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்தது.

அனுபவங்களை கனவு போல எண்ணி அவ்வப்பொழுது மறந்துபோய் இன்று புதிதாய் பிறந்தோம் என்று வாழத்துவங்கினால் என்றும் இன்பம் நம் வாழ்வில் நிறைந்திருக்கும்.

நாம் படைத்த கனவு உலகம் தொடர்ந்து மாறுவதைப்போல கடவுள் அமைத்த உலகிலும் நிரந்தரமின்மை மட்டும்தான் உண்மை. கனவிலும் நினைவிலும் மாறாமல் நிரந்தரமாக இருக்கும் ஒரே உண்மை நான் மட்டும்தான்.

உலக சம்பந்தமான ஆசை நம்மை தொடர்ந்து செயலில் ஈடுபடுத்தும். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை எப்பொழுது புரிந்து கொள்கிறோமோ அப்பொழுது கடவுள் யார், அவன் ஏன் இது போன்ற மாறும் உலகை படைத்தான், மாறாமல் இருக்கும் நான் யார் போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள ஆசை வரும்.

நிலையாதவற்றின் மீது ஆசை வைக்காமல் நிலையானவை மீது ஆசைவைத்தால் மட்டுமே நாம் முக்தியடைவோம். நிலையானவன் பரமன். பரமன் யார் என்று அறிந்து கொண்டால் நம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.


பயிற்சிக்காக :

1. ஆசைகளுக்கும் அனுபவங்களுக்கும் உள்ள உறவு என்ன?

2. கனவுகள் எப்படி ஏற்படுகின்றன?

3. கனவுகள் ஏன் ஏற்படுகின்றன?

4. கனவுகள் நமக்கு காட்டும் மூன்று உண்மைகள் யாவை?

5. இந்த பாடத்தின் மைய கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா?

2. கெட்ட அனுபவங்களை மட்டும்தானே மறக்கவேண்டும். நல்ல அனுபவங்களை மீண்டும் மீண்டும் நினைத்து பார்ப்பதுதானே மகிழ்ச்சி?

3. அன்றாட அனுபவங்களை கனவுபோல மறந்துவிட்டால் மன வளர்ச்சி அடையாமல் பின்தங்கி விடமாட்டோமா?