Tuesday, February 23, 2010

Lesson 95: Same happiness returns ( பிரம்ம சூத்திரம் 3.2.9 )

பாடம் 95: விழித்த பின்னும் அதே ஆனந்தம்
பாடல் 327 (III.2.9)

ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவித்த அதே ஆனந்தம்தான் விழித்த பின்னும் தொடருகிறது என்றும் அந்த ஆனந்தம் எப்பொழுதும் குறையாத வண்ணம் வாழ்வை அனுபவிக்க நாம் அகங்காரத்தின் செயல்பாட்டையும் ஆசையின் தன்மையையும் அறிந்து கொண்டு பந்தபடுத்தாத ஆசைகளை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த பாடம் நமக்கு சொல்லித்தருகிறது.

உறங்கும் பொழுதுநான்

விழித்திருக்கும் சமயங்களில் மனதில் தோன்றும் நான், எனது மற்றும் என்னுடையது என்னும் எண்ணங்களின் தொகுப்பு அகங்காரம் எனப்படும். விஞ்ஞான மயகோசம் அதன் பொதுவான இருப்பிடம். நாம் படுக்கைக்கு சென்ற சிறிது நேரத்தில் விஞ்ஞானமயகோசம் அகலும்பொழுது அது மனோன்மய கோசத்திற்கு குடிபோய் அங்கிருந்து கனவுகளை அனுபவிக்கிறது. மனமும் ஓய்வெடுக்க ஆரம்பித்தவுடன் அகங்காரம் இருக்க இடம் இல்லாமல் மறைந்து போகிறது. எனவேதான் நாம் தூங்க ஆரம்பிக்கும் நேரங்களில் யாரேனும் நம் பெயர் சொல்லி கூப்பிடுவது தெரிந்தாலும் ஏன் என்று பதில் குரல் கொடுக்க முடிவதில்லை. அதேபோல் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து நம்மை யாரேனும் திடீரென்று விழிக்க வைத்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம் அல்லது என்ன பேசுகிறோம் என்பது நமக்கே தெரியாது. ஏனெனில் அந்த சமயங்களில் நான் எனும் அகங்காரம் முழுதாக உருவாவதில்லை.

என் இன்பத்திற்கு நான்தான் தடை

ஆழ்ந்த உறக்கத்தில் எப்பொழுதும் இருக்கும் ஆனந்தம் அகங்காரம் உருவானதும் எப்பொழுதோ ஒருமுறைதான் வருகைதருகிறது.

அகங்காரம் இல்லாத ஒரு வயது குழந்தை எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கிறது. மேலும் எப்பொழுதெல்லாம் தன்னை மறந்து நாம் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் இன்பமாயிருக்கிறோம்.

எனவே குறையாத இன்பம் நம்மிடம் எந்நாளும் நிலையாக இருக்க தடையாய் இருப்பது அகங்காரம்தான் என்ற உண்மை தெளிவாகிறது.

அகங்காரத்தை ஒழிப்பது எப்படி?

நெருப்பு நல்லதா கெட்டதா? ஊரை கொளுத்தினால் அது கெட்டது. உணவை சமைக்க உதவினால் அது நல்லது. அதுபோல அகங்காரம் நம் ஆனந்தத்திற்கு தடை என்று அதை முழுதும் அழித்துவிட்டால் அன்றாட வாழ்வின் அத்தியாவசிய செயல்களை கூட நம்மால் செய்ய முடியாது. எனவே அகங்காரத்தின் எந்த செயல் ஆனந்தத்திற்கு தடையாக இருக்கிறது என்பதை ஆய்ந்து அறிந்து அதை மட்டும் மாற்ற வேண்டும்.

இது என் அலுவலகம்’. ‘இது நான் வீடு திரும்பும் வழி’. இது போன்று அகங்காரத்தின் அடிப்படையில் அமைந்த எண்ணங்கள் தினசரி வாழ்விற்கு மிக அவசியம். மேலும் இவற்றால் நம் ஆனந்தத்திற்கு எவ்வித தடையும் இல்லை.

இது நன்றாக இருக்கிறதுஎன்ற எண்ணத்தை இது எனக்கு வேண்டும்என்ற ஆசையாக மாற்றுவதும் அகங்காரத்தின் செயல். ஆசைகளை உருவாக்கும் அகங்காரத்தின் இந்த ஒரு செயல்தான் நம் இன்பத்திற்கு தடையாய் இருப்பது. எனவே அழிக்க வேண்டியது அகங்காரத்தை அல்ல. அது ஆசையை உருவாக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை செய்வதன் மூலம் நாம் நம் இயல்பான ஆனந்தத்தை எப்பொழுதும் அனுபவிக்கலாம். அகங்காரத்தை அழிக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே அடுத்த கட்டமாக ஆசைகளை ஆராயவேண்டும்.

ஆசைகள் உருவாக காரணம் என்ன?

ஆனந்தம் நம்முடைய இயல்பான சொரூபம் என்பதை அறியாமல் உலகத்தில் உள்ள பொருள்கள்தான் நமக்கு இன்பத்தை தருகின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதால்தான் ஆசைகள் ஏற்படுகின்றன.

நம்முடைய தற்போதைய நிறைவேறாத ஆசை ஒன்றை எடுத்து ஆராய்ந்தால் உலகம் எவ்வித இன்பத்தையும் தருவதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்தை முதல் காட்சியில் நாம் பார்க்கவிரும்புவதாக வைத்துக்கொள்வோம். திரைப்படத்தை முதல் காட்சியில் பார்ப்பது இன்பம் அளிக்கும் அனுபவம் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பதுதான் இந்த ஆசைக்கு காரணம்எவ்வளவோ முயன்றும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் இருக்கும்பொழுது நம் நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு டிக்கெட் அதிகமாக இருக்கிறது, நீ என்னுடன் வருகிறாயாஎன்று கேட்டால் நமக்கு ஏற்படும் இன்பத்திற்கு அளவே இல்லை. திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதற்குள் எப்படி நமக்கு இன்பம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தோமானால்  ‘டிக்கெட் கிடைக்கவில்லை, கிடைத்தால் நன்றாக இருக்கும், ப்ளாக்கில் டிக்கெட் வாங்குவது எப்படிஎன்பது போன்ற எண்ணங்கள் நமது மனதை ஆக்ரமித்திருந்ததால் மனம் நம் இயற்கையான ஆனந்தத்தை பிரதிபலிக்காமல் நம்மை சோகத்தினுள் ஆழ்த்தியிருந்தது என்றும் டிக்கெட் தருகிறேன்என்று நண்பர் சொன்னதும் கவலை தந்துகொண்டிருந்த அனைத்து எண்ணங்களும் ஒரு நொடியில் நம் மனதிலிருந்து மறைந்து விட இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க துவங்கிவிட்டோம் என்றும் நமக்கு தெரியவரும்.

இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் திரைப்படத்தை பார்ப்பதுதான் நமக்கு இன்பத்தை தரும் என்று நாம் தவறாக நினைத்துகொண்டிருந்தோம். எனவே ஆசைகள் உருவாவதற்கு காரணம் அறியாமை மட்டுமே.

சரியான மாற்றம்

உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. இதில் நிலையானவை என்று எதுவுமில்லை. இந்த நிலையில்லாத உலகை நிலையானது என்று ஒருநாளும் நம் புலன்கள் நம்மிடம் சொல்வதில்லை. ‘இது ஒரு மலர்என்று பொருளின் தற்போதைய நிலையை மட்டும்தான் கண் நமக்கு தெரிவிக்கும். சற்று முன் வரை அது ஒரு மொட்டாக இருந்தது என்பதையோ இன்னும் சில நொடிகளில் அது கசக்கப்பட்டு குப்பையாக மாறிவிடும் என்பதையோ புரிந்து கொள்ளவேண்டிய வேலை நமது புத்தியை சேர்ந்தது.

இந்த இடத்தில்தான் பெரும்பான்மையான மக்கள் தவறு செய்து தங்கள் வாழ்க்கையை தாங்களே நரகமாக்கிகொண்டிருக்கிறார்கள். ஒன்று, மாறுவதை புரிந்து கொள்வதில்லை. அல்லது, மாறுவது தங்களின் விருப்பபடிதான் மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு எப்பொழுதும் நிறைவேறுவதில்லை. ஒவ்வொரு நாள் முடிவடையும் பொழுதும் நம் வயது ஒரு நாள் அதிகரிக்கிறது என்று தெரிந்தாலும் என்றும் இளமையுடன் இருக்கும் ஆசை நம்மை விட்டுபோவதில்லை. இது இவ்வாறு இல்லாமல் வேறு மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பந்தபடுத்தும் ஆசையாக மாறி நம்மை நம் இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க தடையாய் உள்ளது.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். எதுவும் வேறுமாதிரி இருக்க வேண்டிய அவசியமேயில்லை. நமக்கு பிடித்தபடி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாம் முயற்சி எடுக்கலாமே தவிர முடிவு செய்யும் அதிகாரம் கடவுளிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் துன்பபடாமல் என்றும் இன்பமாக இருக்கலாம்.


முடிவுரை :

ஆழ்ந்த உறக்கத்தில் இந்த உலகத்துடன் எவ்வகையிலும் உறவு கொள்ளாமலேயே நாம் இன்பமாக இருக்க முடிவதால் விழித்தெழுந்த பின்னும் உலகத்துடன் பல விவகாரங்களில் ஈடுபடும் காலங்களில் கூட நம்மால் அதே இன்பத்தை தொடர்ந்து வாழ முடியவேண்டும். ஆனால் வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது என்று நம் அனுபவம் சொல்கிறது. இதற்கு காரணம் நம்மை பந்தபடுத்தும் ஆசைகள்தான்.

பின்வரும் செயல்களை செய்வதன் மூலம் நாம் என்றும் குறைவில்லாத இன்பத்துடன் வாழலாம்.

1. ஆனந்தம் நமது இயல்பான நிலை, வந்து போகும் உணர்ச்சி அல்ல என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

2. மனிதர்கள், மற்ற உயிரினங்கள், பொருள்கள், நிகழ்வுகள் ஆகிய எவற்றிற்கும் நமக்கு இன்பம் தரும் சக்தியில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

3. மேற்கூறப்பட்ட இரு தகவல்களை நமது அறிவாக மாற்றிக்கொள்ள வேதாந்தத்தை முறையாக படித்த ஆசிரியர் ஒருவரிடம் சரணடைந்து உபநிஷதங்களையும் கீதையையும் முறையாக படிக்கவேண்டும்.

4. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை படுவதில் தவறில்லை. ஆனால் பணத்துக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து கொண்ட பின் பணம் சம்பாதிக்க தேவையான செயல்களில் ஈடுபடவேண்டும்.

5. உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும். வாழ்வின் நிகழ்வுகளை நம் விருப்பபடி மாற்ற நம்மாலான அனைத்து முயற்சிகளையும் தர்மமான முறையில் செய்வதில் தவறில்லை.       

6. முயற்சி செய்வது மட்டும்தான் நம் கையில் இருக்கிறதே தவிர பலன் கொடுப்பது இறைவனின் வேலை என்பதை உணர்ந்து நாம் செய்யும் அனைத்து செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து பலன் கிடைக்கும்பொழுது அதை கடவுளின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

7. ஒரு செயலை செய்யும் பொழுது முழுமனதின் ஈடுபாட்டுடன் தன்னை மறந்து ஆனந்தமாக வேலை செய்ய வேண்டும். நான் விரும்பிய வகையில் பலன் கிடைத்த பின்தான் மகிழ்ச்சி, அதுவரை உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கஷ்டப்பட்டு உழைக்கிறேன் என்பது தவறு. இன்பமாக வேலை செய்ய முடிந்தால் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வேலையை செய்வதால் எவ்வித பலனும் இருக்காது.

8. ஆசை நம் செயல்களுக்கு ஆதாரம். ஆசையில்லாமல் எவ்வித வேலையையும் நாம்மால் செய்ய முடியாது. ஆனால் ஆசைக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து கொள்வது அவசியம். பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம், குடும்ப வாழ்வில் செழிப்பு, உறுதியான உறவுமுறைகள் ஆகியவை வேண்டும் என்ற ஆசையுடன் நாம் செயலில் ஈடுபடலாம். இது போன்ற ஆசைகள் நிறைவேறுவதால் சுகமான வாழ்வும் நல்ல நண்பர்களும் கிடைக்குமே தவிர ஆனந்தம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறு.    

9. ஆசை நிறைவேறினால்தான் மகிழ்ச்சி என்ற அறியாமைதான் ஆசை துன்பத்திற்கு காரணம் என்ற தவறான செய்திக்கு அடிப்படை காரணம். ஆசை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் என்னுடைய இயல்பான ஆனந்தம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என்ற அறிவு ஏற்பட்டுவிட்டால் நம் அனைத்து ஆசைகளும் பந்தபடுத்தாத ஆசைகளாக மாறும். இது போன்ற ஆசைகளால் நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மாறாக இவை நமக்கும் நம்மை சுற்றியிருப்போருக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.

பயிற்சிக்காக :

1. அகங்காரத்தின் இருப்பிடம் எவை?

2. அகங்காரத்திற்கும் ஆசைக்கும் என்ன உறவு?

3. ஆசை எப்படி ஆனந்தத்திற்கு தடையாய் உள்ளது?

4. உலகப்பொருள்களில் இன்பம் இல்லை என்பதை உதாரணம் கொடுத்து விளக்கவும்?

5. ஆசைகள் உருவாவதற்கு காரணம் என்ன?

6. எப்பொழுதும் ஆனந்தமாயிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. நல்லவிதமான எதிர்பார்த்தல் (positive thinking) நல்ல விளைவுகளை ஏற்படுத்தாதா ?

2. ஆனந்தம் உலகில் இல்லை என்றால் இந்த படைப்பின் அவசியமென்ன?

3. எல்லோரும் எப்பொழுதும் ஆனந்தமாக இருந்தால் இவ்வுலகில் சண்டை, சச்சரவு, பொறாமை, போட்டி ஆகிய எதுவும் இருக்காதா?