Wednesday, April 28, 2010

Lesson 118: Equal opportunity for all ( பிரம்ம சூத்திரம் 3.3.31 )


பாடம் 118: அனைவருக்கும் சமவாய்ப்பு
பாடல் 390 (III.3.31)

மக்கள் ஒருவருக்கொருவர் வெகுவாய் வேறுபட்டாலும் அனைவரும் இன்பமாக வாழ வழி வகுக்கும் வகையில் நான்கு பிரிவுகள் கொண்ட சமுதாய அமைப்பையும் நான்கு கட்டங்கள் கொண்ட வாழ்வு அட்டவணையையும் வேதம் அருளியுள்ளது என்ற கருத்தை கூறி நாம் அனைவரும் வேதம் கூறும் வழியில் நடந்து கூடியவிரைவில் முக்தியடைய முயல வேண்டும் என இந்த பாடம் கூறுகிறது.

மனிதன் மூன்று தனிமங்களின் கலவை

ஒளி (சத்வம்), சக்தி (ரஜஸ்), ஜடம் (தமஸ்) ஆகிய மூன்று தனிமங்களின் கலவையாகத்தான் அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டுள்ளன. இந்த தனிமங்களின் விகிதம் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். மேலும் ஒரு நாளில் நேரத்தை பொறுத்து விடியற்காலையில் ஒளியின் அளவு அதிகமாகவும் முற்பகலில் சக்தியின் அளவு அதிகமாகவும் இரவில் ஜடத்தின் அளவு அதிகமாகவும் இந்த விகிதம் ஒரே மனிதனுக்குள் தொடர்ந்து மாறுபட்டுகொண்டிருக்கும்.

எந்த ஒரு தனிமமும் தனித்து இருக்காது. எப்பொழுதும் மூன்று தனிமங்களும் சேர்ந்து ஒரு கலவையாகவே இயங்கும். ஒளி மற்ற இரு தனிமங்களைவிட சிறந்தது. ஜடம் நமக்கு அவசியமான ஒரு தனிமம் என்றாலும் இதன் அளவை நாம் முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்வின் தரம் இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தாலேயே தீர்மானிக்கபடும். ஒளியின் அளவு அதிகமானால் நம் வாழ்வு அதிக நிம்மதியாகவும் இன்பமாகவும் இருக்கும். இதனாலேயே புத்தர், ஏசு போன்ற முக்தியடைந்த மனிதர்களின் தலையை சுற்றி ஒரு ஒளிவட்டம் வரையும் பழக்கம் ஏற்பட்டது.  நாம் நம் ஒளியின் அளவை கிரில்லியன் புகைப்படம் எடுத்து அறிந்து கொள்ளலாம். இது (Aura imaging) நம்மிடம் உள்ள ஒளியின் அளவை அளக்க மட்டுமே உதவும். வேதம் கூறும் பாதையில் நடந்து நமது சுயமுயற்சியால்தான் ஒளியின் அளவை அதிகபடுத்திக்கொள்ள முடியும்.

சமுதாய பிரிவில் தமக்கேற்ற சரியான பிரிவை தேர்ந்தெடுத்து வாழ்வு அட்டவணையில் கூறப்பட்ட கடமைகளை முறையாக செய்து அனைத்து மனிதர்களும் இந்த விகிதத்தை தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டு கடைசியில் இந்த மூன்று தனிமங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும்.

நான்கு வகை மனிதர்கள்

தங்கத்துடன் கலக்கபட்டுள்ள மற்ற உலோகங்களின் அளவை வைத்து நகைகளை தரம் பிரிப்பது போல ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்கள் கலக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் மனிதர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.
வகை/ தனிமம்
ஒளி
சக்தி
ஜடம்
பிராமணர்கள்
60
30
10
சத்திரியர்கள்
30
60
10
வைசியர்கள்
10
60
30
சூத்திரர்கள்
5
25
70

மேலே குறிப்பிட்ட விகித அளவுகள் எந்த வகை மனிதர்களிடம் எந்த தனிமம் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் என்பதை விளக்குவதற்காக கொடுக்கபட்டவை. ஓய்வெடுக்கும்பொழுது இருக்கும் இரத்த அழுத்தம் வேலை செய்யும்பொழுது அதிகரிப்பது போல இந்த அளவுகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். எனவே நகைகளில் இருக்கும் உலோக கலவைகளின் விகிதத்தை நிர்ணயிப்பதுபோல் ஒரு மனிதனுக்குள் இருக்கும் இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தை எண்கள் மூலமாக நிர்ணயிக்க முடியாது.

மூன்று தனிமங்களும் மனிதனை ஏதாவது ஒரு வகையில் பந்தபடுத்தி இன்பமும் துன்பமும் கலந்த வாழ்வை வாழும்படி செய்யும் குணம் உள்ளவை. என்றும் குறையாத இன்பத்துடன் வாழவேண்டுமென்றால் இந்த மூன்று தனிமங்களின் பிடியிலிருந்தும் நாம் முழுதாக விடுபடவேண்டும். படிப்படியாக இந்த மூன்று தனிமங்களின் விகிதத்தை மாற்றி பிராமணனாக மாறி பரமனை அறிந்து கொண்டால் பிறகு வீடுபேறு பெற்று இன்பமாக வாழலாம்.

மனிதனின் முன்னேற்றம்

ஒளித்தனிமத்தின் விகிதத்தை அதிகரித்து பிராமணனாக மாற ஒவ்வொரு மனிதரும் தங்கள் தற்போதைய நிலைக்கேற்றவாறு முயற்சி செய்ய வேண்டும். உண்ணும் உணவு, செய்யும் செயல்கள், பழகும் மனிதர்கள் மற்றும் படிக்கும் நூல்கள் இவற்றை சரியானபடி மாற்றினால் அனைவரும் முன்னேறி முக்தி அடையலாம்.  

சூத்திரர்கள் செய்யவேண்டிய செயல்கள்

தாங்களாக முயன்று முன்னேறும் திறனோ அறிவோ சூத்திரர்களுக்கு கிடையாது. எனவே ஜடத்தின் வீரியத்தை குறைத்து சக்தி தனிமத்தின் விகிதத்தை அதிகபடுத்தி இவர்களை வைசியர்களாக மாற்ற இவர்களது நண்பர்களோ குடும்பத்தை சேர்ந்த மற்ற பிரிவினரோ இவர்களை பின்வரும் செயல்களை செய்விக்க வேண்டும்.

1. ஜடத்தனிம ஆகாரத்தை குறைத்து சக்தி தனிமம் அதிகமுள்ள உணவை உண்ண வேண்டும்.

2. மது அருந்துதல் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை மெதுமெதுவாக விட்டுவிட வேண்டும்.

3. முடிந்தவரை சூத்திரர்களுடன் பழகாமல் வைசியர்களுடன் மட்டுமே பழகவேண்டும். உதாரணமாக தம் குடும்பத்தில் யார் உழைத்து பணம் சம்பாதிக்கிறார்களோ அவர்களுடன் மட்டும் பழகவேண்டும். யார் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாக இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து நேரத்தை வீணடிக்க கூடாது.

4. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச கதைகளை கேட்கவேண்டும்.

5. உழைப்பின் மூலம் ஏழை பணக்காரானாக உயருதல், காசேதான் கடவுள் போன்ற கருத்துக்களை தரும் திரைப்படங்களை பார்க்கவேண்டும்.

6. தினமும் நிறைய நேரம் எதாவது வேலை செய்ய வேண்டும்.

வசதியாக வாழவேண்டும் என்ற ஆசையை அதிகபடுத்தி அதற்காக உழைக்க ஆரம்பித்தால் விரைவில் வைசியனாக மாறிவிடலாம்.

வைசியர்கள் செய்யவேண்டிய செயல்கள்

இவர்களிடம் சத்திரியர்களுக்கு சமமான சக்தியிருந்தாலும் போதிய ஒளிதனிமத்தின் துணையில்லாததால் சுயநலத்திற்காகவே இவர்கள் செயல் செய்கிறார்கள். ஜடத்தின் அளவை குறைத்து ஒளியின் அளவை அதிகரித்து கூடிய விரைவில் சத்திரியர்களாக மாற இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.

1. சூத்திரர்கள் போல வேலை செய்யக்கூடாது. வசியர்களின் வேலைகளை விட்டு சத்திரியர்கள் செய்யும் வேலைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.

2. அதிக நேரத்தை இறைவனுக்காக செலவிட வேண்டும். தனக்கு என்ற பார்வையிலிருந்து விலகி இறைவனுக்கு என்று முன்னேறி பின் பொதுநலம் என்ற சத்திரியர்களின் குறிக்கோளை எட்ட வேண்டும்.

3. ஜடத்தனிம ஆகாரத்தை தவிர்த்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.

4. காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து ஆன்மிக நூல்களை படிக்க வேண்டும்.

5. வைசியர்களுடன் பழகுவதை குறைத்துக்கொண்டு சத்திரியர்களிடம் நெருங்கி பழக ஆரம்பிக்க வேண்டும்.

6. புலன் இன்பங்களை அனுபவிப்பதை குறைத்துக்கொண்டு கர்னாடக இசை கேட்டல், சிறுகதை அல்லது நாவல்களை படித்தல், ஓவியம் வரைதல் போன்ற மனம் தொடர்புள்ள பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடலாம்.

7. அதர்மத்தையும் முற்றிலும் தவிர்த்து விருப்பு வெறுப்புகளுக்கு வசப்படாமல் கடமைகளை தர்மமான முறையில் நிறைவேற்ற வேண்டும்.

சூத்திரர்கள் வேலை செய்ய ஆரம்பித்து வைசியர்களாக வளர்ந்த பின் சுயநலத்திற்காக அல்லாமல் பொதுநலத்திற்காக உழைக்கும் சத்திரியர்களாக உயர தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இதற்காக செயல்களை சுயநலம் இல்லாமல் செய்வதுபோல பாசாங்கு செய்தாலும் பரவாயில்லை. நாளடைவில் இந்த பாசாங்கு  இயல்பாக மாறி வைசியனை உண்மையிலேயே சத்திரியனாக மாற்றிவிடும்.    

சத்திரியர்கள் செய்யவேண்டிய செயல்கள்

தன் குடும்பம், நண்பர்கள், சுற்றத்தார்கள், சமுதாயம் ஆகிய அனைத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைப்பவர்கள் சத்திரியர்கள். உலகத்தை மாற்ற வேண்டும் என்ற தவறான அறிவிலிருந்து தன்னை மாற்ற வேண்டும் என்ற சரியான அறிவை பெற்று பிராமணனாக மாற இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.

1. வைசியர்கள் போல் வேலை செய்வதை தவிர்த்து சத்திரியர்களின் வேலைகளை குறைத்துக்கொண்டு பிராமணர்கள் செய்யும் வேலைகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.

2. இறைவனை வழிபடும் நேரத்தை குறைத்துக்கொண்டு தான் யார், இறைவன் யார் என்பதை அறிந்து கொள்ளும் முயற்சியை அதிகரிக்க வேண்டும்.

3. சக்திதனிம ஆகாரத்தை குறைத்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.

4. சத்திரியர்களுடன் பழகுவதை குறைத்துக்கொண்டு பிராமணர்களிடம் நெருங்கி பழக ஆரம்பிக்க வேண்டும்.

5. அறிஞர்களின் எண்ணங்கள், சுயமுன்னேற்றம் பற்றி சமயங்கள் கூறும் கருத்து ஆகியவற்றை விளக்கும் புத்தகங்களை படிக்கவேண்டும்

6. மனம் தொடர்புள்ள பொழுதுபோக்கு செயல்களை குறைத்துக்கொண்டு அறிவு சம்பந்தபட்ட தத்துவ நூல்களை படிப்பதிலும் வானவியல், ஜோதிடம், போன்ற அறிவியல் துறைகளில் ஈடுபாடு கொள்ளவேண்டும்.

7. புலன்கள் மனதின் கட்டுப்பாட்டிலும் மனம் புத்தியின் கட்டுப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும்.

வைசியர்களாக பணம் சம்பாதித்தபின்னும் சத்திரியர்களாக பதவி, புகழ் ஆகியவற்றை அடைந்த பின்னும் நிரந்தரமான அமைதி கிடைக்காததால் அதை மேலும் வெளி உலகத்தில் தேடி பயன் இல்லை என்பதை உணர்ந்தால் அடுத்த நிலையான பிராமணனாக உயர்ந்து வேதத்தை பயில துவங்கலாம்.

பிராமணர்கள் செய்யவேண்டிய செயல்கள்

ஒளித்தனிமம் முதலிடத்திலும் சக்தி தனிமம் இரண்டாம் இடத்திலும் பெரும்பாலான நேரங்களில் இருந்தால் அவர்கள் பிராமணர்கள். இவர்களும் ஏற்ற தாழ்வு, புகழ்ச்சி இகழ்ச்சி ஆகிய வாழ்வின் இருமைகளிடையே சிக்கி தவிப்பவர்கள்தான். முக்தியடையவேண்டுமானால் மூன்று தனிமங்களின் பிடிப்பிலிருந்தும் விடுபடும் ஞானத்தை அடையவேண்டும். இதற்காக இவர்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும்.

1. செயல்களை குறைத்துக்கொண்டு வேதம் படிப்பதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டும். வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள அவசியமான வேலைகளை மட்டும் செய்யலாம்.

2. ஆத்மஞானத்தை அடைவது என்பதை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக கொண்டு குரு காட்டும் பாதையில் கடுமையாக உழைக்க வேண்டும்.

3. சக்தி தனிம ஆகாரத்தை தவிர்த்து ஒளி தனிமம் அதிகமாயுள்ள உணவை உண்ண வேண்டும்.

4. தர்ம அதர்ம பாகுபாடுகளை கடந்து பரமன் மட்டும் உண்மை இந்த உலகம் பொய் என்ற விவேகத்தை அடையவேண்டும்.

5. வேதம், ஆசிரியர், இறை வழிபாடு, தியானம் போன்றவை பரமனை அறிந்து கொள்ள தேவையான சாதனங்கள். இவற்றின் மீது பற்றுகொண்டு தொடர்ந்து வேதத்தை படிப்பதனாலோ இறைவழிபாட்டில் ஈடுபடுவதாலோ சடங்குகளை பின்பற்றுவதாலோ முக்தியடைய முடியாது.

6. செயல்களின் மீதுள்ள பற்றை சத்திரியன் துறந்து அறிவின் மீது பற்று கொண்டு பிராமணான பின் அறிவின் மீதுள்ள பற்றையும் துறந்து முக்தி அடையவேண்டும்.

இறுதித்தேர்வில் தேறாவிட்டால் பன்னிரண்டு வருடம் பள்ளியில் படித்ததன் பலன் கிடைக்காது. அது போல வைசியன், சத்திரியன் என்று படிப்படியாக வளர்ந்து பிராமணனான பின் முக்தி பெறாவிடில் அது வரை செய்த முயற்சி வீணாகிவிடும்.

எனவே அனைத்து பிராமணர்களும் விரைவில் முக்திபெற முழு முயற்சியுடன் முயல வேண்டும்.

முடிவுரை :

பிறப்பின் அடிப்படையில் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அனைவரும் இந்த பிறவியிலேயே முக்தி அடைவதற்கு சம வாய்ப்பு வேதத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜாதியின் அடிப்படையில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு செய்ய முடியாது. அனைவரும் வாழ்வு அட்டவணையின் மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை ஆகிய நான்கு கட்டங்களில் விதிக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்து தங்களை படிப்படியாக பிராமணனாக உயர்த்திக்கொள்ள வேண்டும். பின் வாழ்வின் குறிக்கோளான முக்தியை அடைவது எளிது.

மூன்று தனிமங்களின் பிடிப்பிலிருந்து விடுதலை பெற்று முக்தியடைந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது. இறக்கும்பொழுது இன்னும் நிறைய பொருள் சம்பாதிக்க வேண்டுமென்று வைசியர்களும் உலகத்தை திருத்த இன்னும் உழைக்க வேண்டும் என்று சத்திரியர்களும் வேதத்தை இன்னும் ஆழமாக படிக்கவேண்டும் என்று பிராமணர்களும் ஆசை கொண்டிருந்தார்களேயானால் மறுபடியும் பிறந்து இவர்கள் அனைவரும் தங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சியை தொடர்வர். வேதத்தில் பரமன் யார் என்று விளக்கப்பட்ட உண்மையை அறிந்து ஞானம் பெற்று இந்தப்பிறவியிலேயே பிறவிச்சுழலிலிருந்து விடுதலை பெற நாம் அனைவரும் முயல வேண்டும்.

நாம் எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் எந்த ஜாதியினரின் வேலையை செய்பவராக இருந்தாலும் குணத்தின் அடிப்படையில் நாம் இப்பொழுது வைசியனாகவோ சத்திரியனாகவோ இருந்தாலும் நம் சுயமுயற்சியால் வேதம் வகுத்த பாதையில் பயணித்து பிராமணனாக மாறி இந்த பிறவியிலேயே முக்தியடைந்து விடலாம்.


பயிற்சிக்காக :

1.  மனிதர்கள் எதன் அடிப்படையில் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்?

2. சூத்திரர்கள் வைசியர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?

3. வைசியர்கள் சத்திரியர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?

4. சத்திரியர்கள் பிராமணர்களாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?

5. பிராமணர்கள் முக்தியடைய செய்யவேண்டிய செயல்கள் யாவை?

6.மனிதர்களின் முன்னேற்றத்திற்கு செய்யவேண்டிய செயல்களின் அடிப்படையாக கூறப்பட்ட நான்கு செயல்கள் யாவை?


சுயசிந்தனைக்காக :

1. பிராமணர்களைத்தவிர வேறு யாரும் முக்தியடைய முடியாதா?

2. அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற பாடத்தின் தலைப்பிற்கு என்ன பொருள்?

3. அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா என்று மனைவி கணவனை அதிக பணம் சம்பாதிக்கும்படி தொடர்ந்து தூண்டுவது சரியா?

4. தீவிரவாதம், அரசியலில் ஊழல் புரிதல், திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த பிரிவினை சேர்ந்தவர்கள்? இவர்கள் முக்தியடைய வாய்ப்பு உள்ளதா?

5. செயல்களை குறைத்து வாழ்வின் அடிப்படை தேவைகளுக்காக உழைக்கும் பிராமணனுக்கும் தேவைகளை அதிகபடுத்திக்கொள்ளாமல் சோம்பியிருக்கும் சூத்திரனுக்கும் என்ன வித்தியாசம்?

Thursday, April 22, 2010

Lesson 117: Four divisions of the society ( பிரம்ம சூத்திரம் 3.3.29-30 )

பாடம் 117: சமூகத்தின் நான்கு பிரிவுகள்
பாடல் 388-389 (III.3.29-30)

தனிமனிதனின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் வாழ்வை நான்கு பகுதிகளாக பிரித்து வழிகாட்டிய வேதம் சமூக முன்னேற்றத்திற்காக சமுதாயத்தில் உள்ள மக்களை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளது என்னும் கருத்தை இந்த பாடம் தருகிறது.

நான்கு பிரிவுகள்

ஒரு தனிமனிதனால் தான் சுகமாக வாழ தேவையான அனைத்து பொருள்களையும் சூழலையும் தானாக அமைத்துக்கொள்ள முடியாது. மற்றவர்களுடன் சேர்ந்து வேலையை பகிர்ந்து கொண்டால்தான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும். எனவே பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என நான்கு பிரிவாக மக்களை பிரித்து அவரவர் செய்யவேண்டிய கடமைகளை வேதம் விவரித்துள்ளது.

பிரிவின் அடிப்படை

மக்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை தீர்மானிக்க மூன்று அடிப்படைகள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை குணம், தொழில் மற்றும் பிறப்பு ஆகியவை. பிராமணர் குலத்தில் பிறந்தவர் பிறப்பின் அடிப்படையில் பிராமணர். அவர் அரசியலில் சேர்ந்து அரசாங்கத்தில் மந்திரியாக பணியாற்றினால் தொழில் அடிப்படையில் அவரே சத்திரியர். மந்திரியாக வேலை செய்யும்பொழுது பொதுமக்களுக்காக உழைக்காமல் தனக்கு எவ்வளவு சொத்து சேர்த்துக்கொள்ள முடியும் என்பதிலேயே கவனம் கொண்டிருந்தாரானால் குணத்தின் அடிப்படையில் அவரே வைசியர். மூளையை பயன்படுத்தாமல் மேலிடத்தின் ஆணைபடி சட்டசபையில் கைதூக்கும் வேலையை மட்டும் செய்தாரானால் அவரே சூத்திரர். எனவே ஒருவர் பிராமணரா, சக்திரியரா, வைசியரா அல்லது சூத்திரரா என்ற கேள்விக்கு பதில் அடிப்படையை பொறுத்து மாறும்.

சமுதாயம் வேகமாக வளர அவசியமான அனைத்து வேலைகளையும் நான்காக பிரித்து அவ்வேலைகளை செய்ய தகுதியானவரா என்பதை அறிய மக்களை அவர்களின் குணத்தில் அடிப்படையில் நான்காக பிரித்து அவரவர் தங்களுக்கு ஏற்ற வேலையை செய்யவேண்டும் என்று வேதம் விதித்துள்ளது.

பிராமணர்கள்: சொல்லித்தருதல், எழுதுதல், அலோசனை வழங்குதல், திட்டமிடுதல் போன்ற புத்தியை பிரதானமாக உபயோகித்து செய்ய வேண்டிய வேலைகளை பொறுமையும், நிதானமும், தன்னலம் கருதாமல் பிறருக்காக அயராது உழைக்கும் மனோபாவமும் கொண்டவர்கள் செய்ய வேண்டும்.

சத்திரியர்கள்:ஆட்சிபுரிதல், கட்டுப்படுத்துதல், அனைவரையும் தூண்டிவிட்டு உற்சாகபடுத்தி இலக்கை எட்டுதல் போன்ற புத்தியுடன் உடல் உழைப்பையும் உபயோகித்து செய்ய வேண்டிய வேலைகளை ஆற்றலும், விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னலம் கருதாமல் பிறருக்காக அயராது உழைக்கும் மனோபாவமும் கொண்டவர்கள் செய்ய வேண்டும்.

வைசியிர்கள்:வணிகம் மற்றும் தொழில் செய்தல், விவசாயம் மற்றும் பண்ணைகளை நடத்துதல், சமூகத்தின் வளர்ச்சி மற்றும் கேளிக்கை தேவைகளை நிறைவேற்றும் துறைகளில் உழைத்தல் போன்ற உடல் உழைப்பை பிரதானமாகவும் புத்திகூர்மையை ஆதாரமாகவும் கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை அதிக வருமானம் கிடைக்கும் என்று சுயநலத்துக்காக அயராது உழைக்கும் தன்மை கொண்டவர்கள் செய்ய வேண்டும்.

சூத்திரர்கள்:கூலிவேலை செய்தல், துப்புரவு வேலை போன்ற உடல் உழைப்பை மட்டுமே பிரதானமாக கொண்டு செய்யப்படும் வேலைகளை சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தகுதி இல்லாதவர்களும், புத்திகூர்மையற்றவர்களும் செய்ய வேண்டும்.

வேலைகளை மாற்றிக்கொள்வதன் மூலமும் குணத்தை மாற்றிக்கொள்வதன் மூலமும் யார்வேண்டுமானாலும் ஒரு பிரிவிலிருந்து மற்றதற்கு மாறிக்கொள்ளலாம்.

குணமும் தொழிலும்

சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் நான்காக பிரித்து அவற்றை செய்யவேண்டிய மனிதர்களின் குணத்தையும் நான்காக பிரித்து வேதம் வகுத்தவிதத்தில் அவரவர்கள் தங்கள் குணத்திற்கேற்ற வேலையை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். இது எல்லா காலங்களுக்கும் பொருந்தும்.     

உதாரணமாக அமைதி மற்றும் பாதுகாப்பு இல்லாத இடத்தில் யாராலும் நிம்மதியாக வாழ முடியாது. எனவே கள்ளர்களிடமிருந்தும் அயல்நாட்டு படையெடுப்பிலிருந்தும் மக்களை காப்பாற்ற மக்களில் ஒருசிலர் நிலையான அரசாங்கம் அமைப்பது அவசியம். இது சத்திரியர்களுடைய வேலை. தன்னலமற்ற சத்திரிய குணமுள்ளவர்களுக்கு பதில் சுயநலத்துடன் வேலைசெய்யும் வைசிய குணமுள்ளவர்கள் அரசியலில் ஈடுபட்டால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்.

பிறப்பின் அடிப்படையில் ஒருவர் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பது பெரும்பாலும் தேவையற்ற ஒரு ஆராய்ச்சி. பெற்றோர்களின் குணம்தான் பிள்ளைக்கு இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் கலப்புத்திருமணங்கள் காரணமாக யாரையும் பிறப்பின் அடிப்படையில் பிரிப்பது எளிதான காரியமல்ல.

உயர்வு தாழ்வு

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்கள். வேதம் சமூகத்தை நான்கு பிரிவாக பிரித்தன் நோக்கம் பிறப்பின் அடிப்படையில் யாரையும் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று பாகுபடுத்துவது அல்ல.

செய்யும் வேலைகளின் அடிப்படையில் அனைத்து பிரிவினரும் சமமான அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எந்த ஒரு வேலை சரியாக செய்யப்படாவிட்டாலும் சமுதாயத்தின் முன்னேற்றம் தடைபடும். எனவே நான்கு பிரிவினரும் செய்யும் வேலையின் அடிப்படையில் சமமானவர்களே. ஆனால் பெரும்பாலோர் காசேதான் கடவுளடா என்ற கொள்கையுடன் இருப்பதால் எந்த வேலை அதிகபணம் சம்பாதிக்கும் வாய்ப்பை கொடுக்கிறதோ அது உயர்ந்ததாக கருதப்படுகிறது.

குணத்தின் அடிப்படையில் பிராமணன் மற்ற மூன்று பிரிவினரைவிட மேலானவன். ஏனெனில் உலக பொருள்களில் பற்றுதல் இல்லாமல் முக்திக்காக உழைப்பவன் பிராமணன் ஒருவனே. பொதுநலத்திற்காக உழைப்பவன் என்ற காரணத்தால் சத்திரியன் இரண்டாவது இடம். சோம்பேறியாக இல்லாமல் கடினமாக உழைப்பவன் என்ற காரணத்தால் வைசியன் மூன்றாவது இடம். புத்திகூர்மையும் உழைக்கும் ஆவலும் இல்லாத சூத்திரர்கள் நான்காவது இடம்.

வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும் யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அது போல வைசியன் தன்னலத்தை துறந்து சத்திரியனாக உயரந்தால் அவன் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் வாழும் பிராமணனை விட சிறந்தவனாக வேதத்தின் பார்வையில் கருதப்படுவான்.      

முடிவுரை :

வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது. மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எது நல்லது என்றும் எது கெட்டது என்றும் தெரியும். எனவே எல்லோரும் தங்கள் சுபாவத்திற்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுத்து அதை திறமையாக செய்வதன் மூலமும் வேதம் படித்த பண்டிதரின் உபதேசத்தை கேட்டு அதன்படி நடப்பதனாலும் தங்கள் தற்போதைய நிலமையிலிருந்து முன்னேறலாம். சூத்திரன், வைசியனாகி, வைசியன் சத்திரியனாகி, சத்திரியன் பிராமணனாகி, பிராமணன் முக்தியடைந்தவனாக மாறவேண்டும். மேலும் அனைத்து வேலைகளையும் அவற்றிற்கு ஏற்ற திறமை படைத்தவர் செய்தால்தான் சமூகம் வளர்ச்சி பெறும்.

தனிமனித முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றம் ஆகிய இரு நோக்கங்களையும் நிறைவேற்ற சமூகத்தை நான்காக பிரித்து அவரவரின் குணத்துக்கு ஏற்ற வேலையை செய்யவேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது.

பயிற்சிக்காக :

1. சமூகத்தை எந்த நான்கு பிரிவாக வேதம் பிரித்துள்ளது ?

2. இந்த நான்கு பிரிவுகள் எந்த மூன்று அடிப்படையில் பிரிக்கபட்டுள்ளன?

3. நான்கு பிரிவுகளை தாழ்ந்த பிரிவிலிருந்து உயர்ந்த பிரிவு வரை வரிசைபடுத்துக.

4.வேதம் இந்த பிரிவுகளை ஏற்படுத்த காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. எந்த வேலையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற அடிப்படையில் வேலையை தேர்ந்தெடுத்தால் என்ன தவறு?

2. குணத்தின் அடிப்படையில் நாம் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

3. பிறப்பினால் ஒத்த பிரிவை உடையவர்கள்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா?

4.வீட்டு வேலை செய்யும் பெண்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள்?

Wednesday, April 21, 2010

Lesson 116: Freedom to man of knowledge ( பிரம்ம சூத்திரம் 3.3.27-28 )

பாடம் 116: ஞானிகளின் துறவு
பாடல் 386-387 (III.3.27-28)

முக்தியடைந்த மனிதர்களின் நிலையை சித்தரித்து அவர்களின் செயல்களால் ஏற்படும் பாபபுண்ணியங்கள் அவர்களை பந்தபடுத்தாமல் மற்றவர்களிடம் போய் சேரும் என்ற கருத்தை இந்த பாடம் விளக்குகிறது.

பாதையும் சேருமிடமும்

மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற பாதையில் பயணித்து வாழ்க்கையின் குறிக்கோளான முக்தி நிலை என்ற சேருமிடத்தை அடையும் விதத்தை வேதம் விளக்கியது. அனைத்து மக்களும் இந்த பாதையில் பிறவிகள்தோறும் பயணம் செய்து இறுதியில் முக்தியடைகிறார்கள். சென்ற பிறவிகளில் செய்த முயற்சியின் விளைவாக ஒரு சிலர் மாணவப்பருவத்திலேயே முக்தியடைந்து விடலாம். அல்லது நேரடியாக துறவு நிலைக்கு சென்று அங்கிருந்து முக்தியடையலாம். இன்னும் சிலர் இல்வாழ் பருவத்தில் இருக்கும்பொழுது மனதளவில் உலகத்தை துறந்து வேதம் பயில நேரத்தை ஒதுக்கி முக்தியடையலாம். எஞ்சிய பலர் தங்கள் விருப்பமின்றியே ஓய்வு நிலைக்கு தள்ளப்பட்டு பின் துறவு நிலைக்கு பயணிக்கிறார்கள். இவர்களில் சிலர் துறவியாக வாழ்ந்து முக்தியடைகிறார்கள். மற்றவர்கள் மறுபிறப்பில் பயணத்தை தொடர்கிறார்கள்.

ஞானமும் முக்தியும்

பரமரகசியத்தை தெரிந்து கொண்ட மனிதர்கள் முக்தியடைகிறார்கள். துன்பங்களுக்கு காரணம் உலகப்பொருள்கள் மீது இருக்கும் பற்று. இந்த பற்று ஏற்பட காரணம் நான் யார் என்பதை அறியாமை. ஆக துன்பங்களை நீக்க, அடிப்படை காரணமான அறியாமையை நீக்கவேண்டும். ஞானத்தால் மட்டுமே அறியாமையை நீக்க முடியும். எனவே முக்தியடைய சரியான ஆசிரியரிடம் சரணடைந்து முறையாகவும் தொடர்ந்தும் வேதத்தை படிப்பது அவசியம்.

துறவு நிலையும் முக்தியும்     

வாழ்வு அட்டவணையும் கடைசி கட்டமான துறவு நிலை முக்தி பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. துறவு நிலையில் வாழ்பவர்கள் பரமனை போல வாழ்ந்தால் பரமனை பற்றி வேதம் சொல்லும் கருத்துக்களை எளிதில் புரிந்து கொண்டு பரமனாகவே ஆகிவிடும் வாய்ப்பு மிக அதிகம்.

துறவியும் பரமனும்ஒற்றுமை 1 : கடமைகளற்றவன்

பரமனுக்கும் துறவிக்கும் எவ்வித கடமைகளும் கிடையாது. துறவிநான் செய்கிறேன்என்ற நினைவுடன் எவ்வித செயல்களையும் செய்வது கிடையாது.

துறவியும் பரமனும்ஒற்றுமை 2 : தொடர்பற்றவன்

பரமனும் துறவியும் உலகத்துடன் எவ்வித சம்பந்தமோ தொடர்போ இல்லாதவர்கள்.

துறவியும் பரமனும்ஒற்றுமை 3 : ஆதாரமானவன்

இவ்வுலகத்தின் இருப்புக்கு பரமன் ஆதாரம். அதுபோல் சமூக அமைப்புக்கு ஆதாரமாக இருப்பவன் துறவி.    

துறவியும் பரமனும்ஒற்றுமை 4 : எல்லோருக்கும் சொந்தமானவன்

தனிபட்ட எந்த மனிதரும் பரமனையும் துறவியையும் சொந்தம்கொண்டாட முடியாதென்றாலும் இருவரும் அனைவருக்கும் சொந்தமானவர்கள்.

துறவியும் பரமனும்ஒற்றுமை 5 : எதுவும் இல்லாமல் அனைத்தையும் உடையவர்.

தனக்கென்று எந்த பொருளையும் வைத்துக்கொள்ளாவிட்டாலும் பிரபஞ்சம் முழுவதும் தன்னுடையது என்ற உண்மை, துறவி பரமன் ஆகிய இருவருக்கும் பொருந்தும்.

துறவியும் பரமனும்ஒற்றுமை 6 :  சுதந்திரமானவன்.

குறையாத இன்பம், நிலையான பாதுகாப்பு, தடைபடாத அமைதி இவை மூன்றையும் பெற உலகம் முழுவதும் ஞானியின் மேல் சார்ந்திருந்தாலும் ஞானி பரமனைப்போல் உலகத்தை சார்ந்து இருப்பதில்லை.

உலகத்தை துறந்து வாழ்வது துறவு நிலை. இது ஞானத்தை பெற்று பரமனை பற்றிக்கொள்ள உதவும். நிலையாதவற்றின் மீது இருந்த பற்றை அகற்றி நிலையான பரமனை பற்றிக்கொள்வது துன்பம் கலவா இன்பத்தை தரும்.

ஞானியின் செயல்கள்

ஞானத்தை பெற்றபின் ஒருவருக்கு பெறவேண்டிய பொருள் என்று ஒன்று உலகத்தில் இல்லை. அடையவேண்டிய புகழ் அல்லது பெருமை போன்றவை ஏதுமில்லை. வீடுபேற்றை பெற்ற ஞானிக்கு செல்லவேண்டிய இடம் எதுவும் இல்லை. எனவே ஞானியின் செயல்களுக்கு ஒரு நோக்கம் இருப்பதில்லை. ஆகவே ஞானியின் செயல்களினால் ஏற்படும் பாவபுண்ணியங்கள் அவனை பந்தபடுத்தாது.

ஞானம் பெற்ற மறுகணமே சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மங்கள் முழுவதும் அழிந்துவிடும். பிராரப்த கர்மம் மற்றும் ஆகாமி கர்மங்களின் பலனை அனுபவித்தது போக மரணத்தின்போது எஞ்சியுள்ள கர்ம பலன்கள் ஞானியை சேர்ந்தவர்களை சென்றடையும்.

கௌஷிடகி உபநிஷத மந்திரம் ஒன்று ஞானி மறையும்பொழுது அவன் தன் பாவபுண்ணியங்களை உதிர்த்துவிட்டு போகிறான் என்றும் அவனின் பாவங்கள் அவனை தூற்றுவோர்களையும், புண்ணியங்கள் அவனை போற்றுபவர்களையும் சென்றடையும் என்றும் கூறுகிறது.  

எனவே முக்தியடைந்த ஞானி இறந்தவுடன் மறுபிறப்பு எடுப்பதில்லை. பிறப்பு-இறப்பு மீண்டும் பிறப்பு என்ற சம்சார சுழலிலிருந்து விடுதலை பெற்று அவன் இறைவனுடன் ஒன்று சேர்கிறான்.

முடிவுரை :

வாழ்வு அட்டவணையின் கடைசி கட்டமான துறவு நிலையில் வாழ்பவர்கள் உலகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல், யாரையும் சார்ந்து இருக்காமல் பரமனைப்போல் வாழ்ந்து வேதம் படித்து ஞானம் அடைந்தபின் பரமனாகவே மாறிவிடுவார்கள். இந்த முக்தியடைந்த மனிதர்களின் செயல்கள் இவர்களை பந்தபடுத்தாது. மரணத்தின்பொழுது எஞ்சியுள்ள பாபபுண்ணியங்களை உதிர்த்துவிட்டு இவர்கள் கடவுளுடன் ஒன்றிவிடுவார்கள்.

பயிற்சிக்காக :

1. முக்தியடைய வாழ்வில் கடக்கவேண்டிய பாதை யாது?

2.முக்தியடைவது என்றால் என்ன?

3.பரமனுக்கும் ஞானிக்கும் உள்ள ஆறு ஒற்றுமைகள் யாவை?

4.முக்தியடைந்தவுடன் கர்மபலன்கள் என்னவாகும்?

சுயசிந்தனைக்காக :

1. முக்தியடைந்தவர்கள் தவறு செய்யமாட்டார்களா?

2. ஞானிகள் சோம்பலாக இருப்பார்களா அல்லது சுறுசுறுப்பாக செயல் புரிவார்களா?

3. ஒரு துறவி ஞானம் பெற்றவரா அல்லது ஞானம் பெறுவதற்காக துறவு மேற்கொண்டுள்ளவரா என்பது  எப்படி தெரியும்?

4. ஞானம் பெறாத துறவி மரணமடைந்தால் அவருக்கு மறுபிறவி உண்டா?