Thursday, August 23, 2012

Lesson 174: The Pranas of knower of Nirguna Brahman merges with it on death (Brahma Sutram 4.2.15)


பாடம் 174: உபாசகனின் பிராணன் கடவுளுடன் கலந்து விடும்
பாடல் 511 (IV.2.15)

பரமனை அறிந்ததால் ஞானிக்கும் கடவுளிடம் சரணடைந்ததால் உபாசகனுக்கும் கிடைக்கும் பலன்களை ஆராய்ந்து ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்ற உண்மையை இந்தப் பாடம் வலியுருத்துகிறது.

கனவில் காணும் மரம் கனவு முடிந்ததும் கனவுலக பூமிக்குள் ஒடுங்கிவிடும் என நினைப்பவன் இன்னும் விழிக்கவில்லை. அதுபோல மரணத்திற்குப்பின் தனது பிராணன் கடவுளுடன் கலந்துவிடும் என்று நம்பும் உபாசகன் மாயையின் பிடியிலிருந்து இன்னும் விடுபடவில்ல. கனவுலகமே பொய்யென்று அறிந்தவன் கனவில் காணும் மரம் என்னவாகும் என்று ஆராயமாட்டான். ஞானம் பெற்றவுடன் மரணத்தை வென்றுவிடும் காரணத்தால் மரணத்திற்குப்பின் பிராணனது நிலை பற்றிய கேள்விகள் அவன் மனதில் எழுவதில்லை.  

பிரஸ்ன உபநிடத்தின் மந்திரம் ஒன்று (6.5)அனைத்து நதிகளும் கடலை நோக்கி ஒடி முடிவில் அதனுடன் கலந்தபின் தங்களது தனித்தனியான பெயர்களையும் வடிவங்களையும் இழந்துகடல்என்ற ஒரே பெயரால் வழங்கப்படுவது போல தனிமனிதர்களும் ஆத்மாவை தேடி ஓடி அதில் கலந்தபின் தங்கள் தனித்தன்மையை இழந்து பகுதிகளும் மரணமும் இல்லாத பரமன் என்ற நிலையை அடைகிறார்கள்என்ற கருத்தை கூறுகிறது. இந்த நிலையை ஞானம் பெற்றவுடன் அடைய முடியும் என்று உணராத  உபாசகர்கள் மரணம் வரை முக்திவிழைபவர்களாகவே வாழ்வர்.

கடவுள் தன்னிலிருந்து வேறுபட்டவன் என்று நம்புபவர்களால் மட்டுமே கடவுளை உபாசிக்க முடியும். தான் வேறு கடவுள் வேறு அல்ல என்று அறிந்தவர்கள் கடவுள் பக்தி அவசியமில்லை’ என்று மற்றவர்கள் முடிவுசெய்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே உபாசனை செய்வார்கள். கோவிலுக்கு செல்வது, பிரார்த்திப்பது போன்ற ஒரு சில செயல்களை மட்டும் உபாசனை என்று கருதாமல் தான் செய்யும் அனைத்து செயல்களையும் கடவுளின் செயலாக செய்பவன் முற்றுணர்ந்தோன்.

பற்றுடையோர் தாங்கள் செய்யும் செயல்களின் பலன் சாதகமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடவுளை பிரார்த்திப்பர். பலன் பாதகமாக இருந்தாலும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வேண்டுமென்று முக்திவிழைவோர் பிரார்த்திப்பர். தன்னை செயலில் ஈடுபடுத்துவதும் பலனை அனுபவிக்கச்செய்வதும் கடவுள்தான் என்று நம்பும் உபாசகர்கள் எவ்வித குறிப்பிட்ட கோரிக்கையையும் கடவுள் முன் வைப்பதில்லை. அதேபோல் கடவுளிடமிருந்து தான் வேறுபட்டவனல்ல என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களும் எதையும் வேண்டி பிரார்த்திப்பதில்லை.

அதிகமாக பணம் சம்பாதிப்பதன் மூலம் வாழ்வில் துன்பத்தை பெருமளவில் தவிர்த்துவிடலாம் என்று முயல்பவர்கள் பற்றுடையோர். துன்பத்தை தவிர்க்க  பரமனை அடையவேண்டும் என்று முயற்சிசெய்பவர்கள் முக்திவிழைவோர்கள். உலகவாழ்வில் துன்பத்தை தவிர்க்கவே முடியாது என்ற உண்மையை உணர்ந்த உபாசகர்கள் மரணத்திற்குப்பின் பரவுலகில் துன்பம் கலவா இன்பம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் இவ்வாழ்வை கழிப்பர். வாழ்வின் தவிர்க்கமுடியாத ஏற்ற இறக்கங்களை இன்பம்-துன்பம் என பாகுபாடுசெய்வது அறியாமை என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர் மட்டுமே துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வர்.

இன்பம் உலகில் இருக்கிறது என்று அதை தேடி அலைபவன் பற்றுடையோன். இறைவனிடம் இன்பத்தை தேடுபவன் முக்திவிழைவோன். இறைவனின் உண்மை உருவத்தை அறிந்தவன் முற்றுணர்ந்தோன். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று உறுதியாக நம்பிஎனக்கென்ன மனக்கவலை, எந்தாய்க்கன்றோ தினம் தினம் என் கவலைஎன்று துயரங்கள் அனைத்தையும் இஷ்டதெய்வத்தின் மேல் ஏற்றி வைத்துவிட்டு உபாசகர்களும் நிம்மதியாக வாழ்வர்துன்பங்கள் தொடர்ந்து நீடித்தால் அதுவும் கடவுளின் சித்தம் என்று மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள். இதுபோல் உபாசகர்களின் மனநிலை சற்றேறக்குறைய முற்றுணர்ந்தோர்களின் மன நிம்மதியை ஒத்துஇருப்பதுபோல் தோன்றினாலும் நம்பிக்கைக்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாடு உபாசகர்களை முக்தி அடையவிடுவதில்லை.


கடவுள் நம்பிக்கையும் கடவுளை அறிதலும்

கடவுளை படைத்தவன் மனிதனல்ல. துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழ்வது எப்படி என்று மனிதனுக்கு கற்றுத்தர முதல்படியாக வேதம் கடவுளை மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. வேதம் காட்டும் வழியை பின்பற்றுபவர்களில் யாருக்கு கூரிய அறிவுடன் முக்திவேண்டும் என்ற தீவிர ஆசையும் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே முக்தியடைகிறார்கள். மற்றவர்கள் உபாசகர்களாகவே இருப்பார்கள்.

பணம் பதவி போன்றவற்றைத்தேடி உலகத்தில் உழைப்பதால் துன்பத்தை தவிர்க்க முடியாது என்றும் நீடித்த இன்பத்தை தரவல்லவர் கடவுள் மட்டுமே என்றும் வேதம் மனிதனுக்கு முதலில் சொல்லித்தருகிறது. கடவுள் இருக்கிறார் என்ற வேதத்தின் வார்த்தையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு கடவுளை உபாசனை செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் கடவுள் யார் என்பதை வேதம் காட்டும் பாதையில் தொடர்ந்து பயணித்து ஆராய்ந்து அறிய கூரிய அறிவு தேவை. மேலும் கடவுளை பற்றிய முழுமையான அறிவு பெற்று உடனே முக்தியடைய வேண்டும் என்ற தீவிர ஆசை உள்ளவர்களுக்கு மட்டுமே கடவுள் நம்பிக்கையை அறிவாக மாற்றிக்கொள்ளும் திறன் இருக்கும். நீரில் மூழ்கி மூச்சு திணறுபவன் மேலே வரவேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு துன்பக்கடலில் மூழ்கி இருப்பவர்கள் இப்பொழுதே முக்திவேண்டும் என்று ஆசைபட்டால்தான் கடவுளை அறிய முடியும். அதைவிடுத்துபிறவா வரம் தாரும். மீண்டும் பிறந்தால் திருவடி  மறவா வரம் தாரும்என்று பாடிக்கொண்டிருந்தால் முக்தி கிடைக்காது. இறைவன் நேரடியாக காட்சியளிக்க வேண்டும் என்று உபாசனை செய்து ஏங்குபவர்கள் காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை காணத்தேவையான மூன்றாவது கண் என்னும் அறிவுக்கண்ணை பெற தவறிவிடுகிறார்கள்.  

நேரான குச்சி நீரில் வளைந்து இருப்பதுபோல் காணப்படும். குச்சி நேராகத்தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க அதை நீரிலிருந்து வெளியே எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் ஆனந்தமே உருவான பரமன் நான் என்ற அறிவு  ஏற்பட்டால் உலகவாழ்வில் உழலும்பொழுதே முக்தியடையலாம்.


அறிவின் பயன்கள்

பூலோக சுவர்க்கம்: வாழும் நாட்கள் அனைத்தையும் ஆனந்தமாக அனுபவிக்க இறைவன் யார் என்ற அறிவு உதவும். உலக வாழ்க்கை துன்பமயமானது என்றும் இறைவனடி சேர்வதுதான் இன்பம் என்றும் நினைக்கும் உபாசகர்கள் இந்த இன்ப அனுபவங்களை தவறவிடுகிறார்கள்.

எதிர்பார்ப்பு இன்மை: உலகைத்தன் உருவாக கொண்டு காட்சியளிக்கும் இறைவனை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் உபாசிப்பவர்கள் மரணத்திற்குப்பின் தங்களுக்கு முக்திகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். ஏற்கனவே முக்தியடைந்துவிட்டதால் முற்றுணர்ந்தோர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

அச்சம் இன்மை: கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை வீண் செய்யக்கூடாது என்பதற்கு தவறாக பொருள் செய்துகொண்டு வாழ்வில் பெரும்பகுதியை இறை உபாசனையில் செலவிடுபவர்கள் மனதில் தாங்கள் செய்வது சரிதானா என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். உபாசனை செய்யும் விதம் பற்றி வேதம் கூறும் சட்ட திட்டங்களை முறையாக கடைபிடிப்பதில் கவனத்துடன் இருந்தாலும் மற்றவர்கள் வேறுமாதிரி உபாசனை செய்வதை பார்க்கும்பொழுது மனம் சலனப்படும். இறக்கும் தருவாயில் கடவுளை நினைக்கவில்லையென்றால் முக்திகிடைக்காது என்பது போன்ற நிபந்தனைகள் உபாசனை செய்பவர்களை முழுநிம்மதியுடன் இருக்கவிடுவதில்லை.

முழுதிருப்தி: தொடக்கத்தில் இன்பத்தை உலகில் தேடி உழைத்ததற்கு ஈடாக தற்பொழுது இறை உபாசனையில் நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டிய அவசியம் உபாசகர்களுக்கு இருக்கும். இனி எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை என்ற மன திருப்தி ஞானிகளுக்கு மட்டுமே இருக்கும்.

நிம்மதி: இறைவனிடம் சரணடைந்தபின் உபாசகர்களுக்கு ஏற்படும் நிம்மதி பயணச்சீட்டு உறுதிசெய்யப்பட்டபின் ஏற்படும் நிம்மதியைப்போன்றது. ஞானிகளின் நிம்மதி பயணம் செய்து முடித்தபின் ஏற்படும் நிம்மதியைப் போன்றது.   

மரணமில்லா பெருவாழ்வு: மரணமடைந்தவுடன் முக்தி கிடைக்கும் என்ற நிலை இல்லாமல் நான் என்றுமிருக்கும் பரமன் என்று உணர்ந்தபின் இந்த உலகம் அழிந்தாலும் நான் அழியமாட்டேன் என்ற அறிவுடன் ஞானிகள் வாழ்வார்கள்.

விதிகளிடமிருந்து விடுதலை: உபாசகர்கள் வாழ்வு முழுவதும் நல்லது-கெட்டது, சரி-தவறு, தர்மம்-அதர்மம், ஒழுக்கம்-ஒழுக்கமின்மை, பொதுநலம்-சுயநலம் போன்ற விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். முற்றுணர்ந்தோர்களும் இவற்றை பின்பற்றுவார்கள் என்றாலும் இவர்களை எந்த விதிகளும் கட்டுப்படுத்த மாட்டா. காவலாட்கள் புடைசூழ செல்லும் கைதியை போன்றவன் உபாசகன். அதே காவலாட்கள் புடைசூழ செல்லும் ஜனாதிபதியை போன்றவன் முற்றுணர்ந்தோன்.

துறவு: உபாசகர்கள் பெரும்பாலும் உலக இன்பங்களை துறந்து இறைப்பணிக்கு தங்களை அர்பணித்து வாழ்நாளை கழிப்பர். ஆனால் உலகப்பொருட்கள் மீது இருக்கும் பற்றுதலை முழுவதும் துறந்துவிட்ட காரணத்தால் முற்றுணர்ந்தோர்கள் தொடர்ந்து வசதியான வீடு, குளிரூட்டப்பட்ட வாகனம், சொகுசு கப்பலில் உல்லாசப்பயணம் என உலக இன்பங்களை தொடர்ந்து அனுபவிப்பார்கள்.

சுயக்கட்டுப்பாடு: புலன் இன்பங்களை கட்டுப்படுத்தி இறை உபாசனை செய்ய வேண்டிய கட்டாயம் முற்றுணர்ந்தோர்களுக்கு இல்லை என்பதால் தங்கள் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் செயல்களை செய்வார்கள். மேலும் கடவுளைப்பற்றிய எண்ணங்களை தொடர்ந்து மனதில் இருத்திக்கொள்ள வேண்டும் என்ற உபாசகர்களின் நிர்ப்பந்தம் ஞானிக்கு இல்லை.

மதச்சார்பின்மை: கடவுளை மறுக்கும் நாத்தீகர்கள், வேறுபட்ட கொள்கைகள் கொண்ட மற்ற மதத்தினர் மற்றும் அறிவியல் அறிஞர்கள் ஆகிய அனைவருடனும் ஒத்துப்போவது முற்றுணர்ந்த ஞானிகளால் மட்டுமே முடியும். உபாசகர்களால் மற்றவர்களது கொள்கைகளையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியாது.

முடிவுரை :

ஆசிரியரின் துணையுடன் ஒவ்வொருவரும் தன் சுயமுயற்சியால் மட்டுமே அறிவை பெறமுடியும். ‘நல்ல புத்தி கொடுஎன்று கடவுளை பிரார்த்திப்பதில் தவறு இல்லை. ஆனால் எதிர்பாராமல் பணம் கிடைப்பது போல் அறிவும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு தவறு. கடவுள் யார் என்ற கேள்விக்கு விடைகாண உபாசகர்கள் முறையாக வேதம் பயின்ற ஆசிரியரின் உதவியை நாட வேண்டும்.

கடவுள் யார் என்பதை அறிந்து கொள்ள மனப்பக்குவம் அவசியம். உபாசனை செய்வதன் மூலம் தேவையான மனப்பக்குவத்தை பெறலாம். மனப்பக்குவத்தை பெற்றதற்குப்பின்னும் தொடர்ந்து உபாசனை செய்வதில் பயன் இல்லை.

மனப்பக்குவம் என்பது இரண்டு நிலைகளில் ஏற்படும். பணம், பதவி, புகழ் போன்றவை நீடித்த இன்பத்தை தராது என்பதை அறிய சிலகாலம் இவற்றைத்தேடி உலகில் உழைத்ததும் முதல் நிலை மனப்பக்குவம் ஏற்படும். அதன்பின் உபாசனை செய்து கடவுள் யார் என்ற ஞானத்தை பெற்றால் மட்டுமே முக்தியடைய முடியும் என்ற உண்மையை அறியும்பொழுது இரண்டாம் நிலை மனப்பக்குவம் ஏற்படும்.

இந்த நிலையை அடைந்தபின் உபாசனை செய்வதை குறைத்துக்கொண்டு கடவுள் பற்றிய முழு அறிவை அடைய சரியான ஆசிரியரை சரணடைந்து அவரிடம் வேதத்தை முறையாக பயில்வதில் நேரத்தை செலவிடவேண்டும்.  

இப்பொழுதே முக்தி வேண்டும் என்ற தீவிர ஆசையும் கூரிய அறிவும் கொண்ட உபாசகர்கள் வெகு விரைவில் அறிவுக்கண்ணைப்பெற்று கடவுளை நேரடியாக காண்பார்கள்.  மற்றவர்கள் மரணத்திற்குப்பின் கடவுளுடன் கலந்துவிடும் நம்பிக்கையுடன் மரணம் வரை உபாசனையை தொடர்வார்கள். ஞானிகள் ஞானம் பெற்ற அன்றே கடவுளுடன் ஒன்றாகிவிடுவதால் அவர்களே உண்மையில் முக்தியடைந்தவர்கள்.

பயிற்சிக்காக :

1. ஞானிக்கும் உபாசகனுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன?

2. ஞானிக்கும் உபாசகனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்னென்ன?

3. ஞானத்தால் ஏற்படும் பலன்களாக இங்கு கூறப்பட்ட கருத்துக்கள் யாவை?

4. ஞானம் பெறாமல் முக்தியடைய முடியாது என்பது உண்மையா?

5. ஞானம் பெற நமக்கு இருக்கும் ஒரேவழி யாது?

6. கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை எதற்காக பயன்படுத்தவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. ஒரு சில அறிவாளிகளும் சிந்தனையாளர்களும் உபாசகர்களாகவே கடைசிவரை வாழ்வது ஏன்?

2. உபாசகர்களின் நம்பிக்கை உண்மையாகவும் ஞானிகளின் அறிவு பொய்யாகவும் இருக்க வாய்ப்பு உண்டா?

3. ஞானிகளும் மரணகாலத்தில் உபாசகர்களாக மாறுவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா?

4. உபாசகர்கள் முக்தியடைய முடியாதா?

Wednesday, August 15, 2012

Lesson 173: The Pranas of the knower of Brahman do not depart at the time of death (Brahmasutra 4.2.12-14)

பாடம் 173: ஞானியின் பிராணன் மரணத்தில் பிரிவதில்லை
பாடல் 508-510 (IV.2.12-14)

எவன் ஆசைகளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்றுவிடுகிறானோ அவனது பிராணன் பிரிவதில்லை என்ற பிரஹதாரண்ய மந்திரத்தின் (4.4.6) பொருளை ஞானியின் செயல்களின் அடிப்படையில் இந்தப் பாடம் ஆராய்கிறது.

ஞானியும் மரணமடைவான் என்றாலும் ஞானம் பெற்றவுடனேயே அவனது பிராணன் தனது தனித்தன்மையை இழந்து இறைவனது இயக்கத்துடன் ஒன்றிவிடுவதால் மரணத்தின்பொழுது அது பிரிவதில்லை. பிரஸ்ன உபநிடதத்தில் எல்லாம் எங்கிருந்து வந்தன?’ என்ற கபந்தியின் கேள்விக்கு பிப்பலாத முனிவர் கூறிய பதிலிலிருந்து பிராணன் பற்றிய பின்வரும் விளக்கங்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆகாயம் மற்றும் பிராணன் ஆகிய இரண்டிலிருந்தே பிரபஞ்சம் முழுவதும் தோற்றுவிக்கப்பட்டது. ஆகாயத்திலிருந்து காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய பஞ்சபூதங்களும் அவற்றிலிருந்து ஜடப்பொருள்களும் உருவாக்கப்பட்டன. அந்த கலவையில் பிராணன் சேர்ந்தவுடன் இயக்கம் பிறந்தது. புவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி போன்றவையும் உயிரினங்களின் செயல்களுக்கும் பிராணனே ஆதாரம். ஆக பூமியின் சுழற்சி முதல் தனி மனித உடலின் இயக்கம், இரத்த ஓட்டம் மற்றும் எண்ணங்களின் ஓட்டம் வரை அனைத்தும் பிராணனின் வெவ்வேறு நிலைகள் என்று விவேகானந்தர் விளக்கம் அளிக்கிறார். [ஞானதீபம் (2.31-32)].

பிராணன் வெளியேறிவிட்டால் பிரபஞ்சத்தின் இயக்கம் நின்றுவிடும் என்ற உண்மையை ஒரு கதைவடிவில் பிப்பலாத முனிவர் பார்க்கவனின் இரண்டாவது கேள்விக்கு பதிலாக கூறினார். இத்தகைய புகழ்வாய்ந்த பிராணன் எவ்வாறு செயல்படுகிறது என்ற கௌசல்யனின் மூன்றாவது கேள்விக்கு மனிதனும் அவனது நிழலும் போன்று ஆன்மாவின் நிழலாக பிராணன் செயல்படுகிறது என்று பிப்பலாத முனிவர் பதிலளித்தார். எனவே தனி மனிதனின் செயல்கள் உட்பட்ட பிரபஞ்ச இயக்கம் முழுவதற்கும் பரமனின் நிழலான பிராணனே காரணம்

எப்படி ஒரு மன்னன் அலுவலர்களை நியமித்துஇந்த இந்த கிராமங்களை ஆளுங்கள்என்று கூறுகிறானோ அது போல மனம் மற்றும் ஐந்து இந்திரியங்கள் மூலம் பிராணன் உடலை இயக்குகிறது. ஞான சக்தி, இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி என்ற மூன்று சக்திகளின் வடிவில் பிராணன் மனிதனின் அனைத்து செயல்களுக்கும் காரணமாக அமைகிறது.

ஞான சக்தி வெளியுலகப்பொருள்களை பற்றிய அறிவை புலன்கள் மூலம் மனதில் ஏற்படுத்துகிறது. இச்சா சக்தி அறிந்த பொருள்களில் சிலவற்றில் ஆசைவைக்க தூண்டுகிறது. ஆசை பட்டதை அடைய கிரியா சக்தி இந்திரியங்கள் மூலம் உடலை இயக்குகிறது. அனைத்து எண்ணங்களும் பிராணனின் வெளிப்பாடு என்ற உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோர்களின் மனதில்நான் செயல் செய்கிறேன்என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. அனைத்து செயல்களுக்கும் ஆதாரமான பிராணன் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் ஒரு சிறுபகுதியாக தனது உடலையும் இயக்குகிறது என்ற அறிவு ஏற்பட்டதும் முக்திவிழைவோனின் இதயத்தில் இருந்த ஆசைகளின் முடிச்சு அவிழ்ந்து அவன் முக்தி பெறுகிறான்.    

பிராணனின் தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயலகங்கள், தூல வெளிப்பாடு ஆகியவற்றை உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்என்ற பிரஸ்ன உபநிடதத்தின் பன்னிரண்டாம் மந்திரம் கூறும் அதே கருத்தைஇருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரமபுருஷனை அறிந்துகொள்வதை தவிர மரணத்தை வெல்ல வேறு வழியே இல்லைஎன்று சுவேதாஸ்வதர உபநிடதத்தின் மந்திரமும் (3.8) கூறுகிறது. அகிலத்தை ஆட்டுவிக்கும் பிராணனே தன் செயல்கள் அனைத்திற்கும் ஆதாரம் என்பதை ஐயமின்றி அறிந்துகொண்ட அக்கணமே ஆசைகள் அகன்றுவிடுவதால் முற்றுணர்ந்தோர்கள் மரணமடையும்பொழுது அவர்களிடமிருந்து பிரிவதற்கு தனிப்பட்ட பிராணன் இருப்பதில்லை. எனவேதான் ஆசைகளிலிருந்து விடுதலை பெற்றவனின் பிராணன் மரணத்தில் பிரிவதில்லை என்ற கருத்து கூறப்பட்டது.

செயல்களின் ஒப்பீடு

பரமனை அறிந்த ஞானிகளை மட்டுமின்றி அனைத்து மக்களையும் அழியாத அமரத்துவத்தின் புத்திரர்கள் என்று சுவேதாஸ்வதர மந்திரம் வர்ணிக்கின்றது (2.5). இந்த உண்மையை உணரும் வரை வெளிப்பார்வைக்கு ஒன்றுபோல் தெரிந்தாலும் மனிதர்களின் செயல்கள் பின்வரும் விதங்களில் வேறுபடும்.

செயல்களின் நோக்கம்: பணம், புகழ், பதவி என்பது போன்ற சுயநல ஆசைகளையும் வறுமை ஒழிப்பு, ஊழலை எதிர்த்தல் என்பது போன்ற பொதுநல ஆசைகளயும் நிறைவேற்றும் நோக்கத்துடன் பற்றுடையோர் செயல்படுவர். இந்த ஆசைகளுக்கு ஒரு முடிவேயில்லை என்பதை அறிந்த முக்திவிழைவோர்கள் தங்கள் மனம் பக்குவப்பட்டு பரமனை அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்களை செய்வர். முற்றுணர்ந்தோர்களுக்கு அடையவேண்டியது என்று எந்த ஆசையும் கிடையாது. எனவே மற்றவர்கள் ஒரு நோக்கத்தை கற்பித்தாலும் உண்மையில் இவர்களது செயல்களுக்கு எவ்வித நோக்கமும் கிடையாது.

திட்டமிடுதல்: அடுத்த ஐந்து வருடங்களுக்குள் வருமானம் ஒரு கோடியை தாண்ட வேண்டும் என்பது போன்ற குறிக்கோள்களை நிறைவேற்ற இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுபவர்கள் பற்றுடையோர்கள். ஆன்மீக பயணத்தில் தாங்கள் அடையவேண்டிய முன்னேற்றத்திற்கு தேவையான செயல்களை திட்டமிடுபவர்கள் முக்திவிழைவோர்கள். முற்றுணர்ந்தோர்கள் செயல் பற்றி மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு திட்டம் என்ற பெயரை கொடுத்தாலும் நிகழும் மாற்றங்களுக்கு திட்டங்கள் காரணம் இல்லை என்பதை அறிவர். அடுத்த நாள் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு சரியான பதில்தெரியாதுஎன்பதுதான் என்றாலும் அவர்களும் மற்றவர்களைப்போல் நாட்காட்டியில் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை குறித்துவைத்திருப்பார்கள். கடந்தகாலம், எதிர்காலம் ஆகிய இரண்டும் மனித மனதின் கற்பனை என்று அறிந்து நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர்கள் மட்டுமேகாலத்தை வென்றவன்என்ற பட்டத்திற்கு உரியவர்கள்.    

விருப்பு வெறுப்புகள்: எதிர்காலத்தில் விரும்பிய செயல்களை மட்டுமே செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையுடன் நிகழ்காலத்தில் விரும்பாத செயல்களை செய்பவர்கள் பற்றுடையோர்கள். விருப்பு வெறுப்புகள் தங்கள் செயல்களை பாதிக்க கூடாது என்ற கவனத்துடன் செயல்படுபவர்கள் முக்திவிழைவோர்கள். மனதில் தோன்றும் விருப்பு வெறுப்பு ஆகியவையும் பிரபஞ்சத்தை இயக்கும் பிராணனின் வெளிப்பாடு என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களின் செயல்கள் பெரும்பாலும் அவர்களின் விருப்பத்துடன் ஒன்றியே இருக்கும்.

ஆளுமையின் தன்மை: ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய தனிமங்களின் கலப்புவிகிதம் மாறுபடுவதால் அனைவரது செயல்பாடுகளும் இவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். முற்றுணர்ந்தோர்களுக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால் பற்றுடையோர்கள் சக்தி தனிமத்தின் அளவு அதிகமாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் முக்திவிழைவோர்கள் ஒளி தனிமத்தின் அளவு அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் செயல்படுவதுபோல முற்றுணர்ந்தோர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை.

அறிவின் தன்மை: பலனில் பற்றுவைப்பதால் எந்தப்பயனும் இல்லை என்ற அறிவு பற்றுடையோர்களுக்கு ஏற்பட்டதும் அவர்கள் செயலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் முக்திவிழைவோர்களாக மாறுவார்கள். செயல்களும் தங்களால் செய்யப்படுவதில்லை என்ற அறிவு அவர்களை முற்றுணர்ந்தோர்களாக்கும்.

இன்பதுன்பம்: செயல் செய்யும் துன்பத்தை அதன் பலன் மூலம் கிடைக்கும் இன்பத்துடன் கலந்து அனுபவிப்பவர்கள் பற்றுடையோர். பலனை எதிர்பாராமல் செயல் செய்யும் முக்திவிழைவோர்கள் துன்பத்தை தவிர்த்த பின்னும் இன்பத்தை முழுமையாக பெறுவதில்லை. எனவே உலகில் எந்த பிடிப்பும் இல்லாமல் விரக்தியுடன் இவர்கள் இருப்பார்கள். தான் இன்பமாக இருக்க படைக்கப்பட்ட உலகம் இது என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் செயல்கள் செய்யும்பொழுதும் பலன்களை அனுபவிக்கும்பொழுது துன்பம் கலவா இன்பத்துடன் இருப்பார்கள்.

முடிவுரை :

மனதை மயக்கும் ஆசைகளை மன்மதனாக உருவகப்படுத்தி அறிவுக்கண் என்ற சிவபெருமானின் மூன்றாவது கண்ணால் அவன் எரிக்கப்பட்டதாக கூறும் புராணக் கதைகள் ஆசையை ஞானத்தால் மட்டுமே அகற்ற முடியும் என்ற உண்மையை மறைமுகமாக தெரிவிக்கின்றன.

பூமி தேராகவும், சூரிய சந்திரர்கள் தேர்ச்சக்கரங்களாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும் பிரம்மாவை சாரதியாகவும் இமயமலை வில்லாகவும் ஆதிசேஷன் நாணாகவும் விஷ்ணு அம்பாகவும் உருமாறி சிவபெருமானுக்கு துணை செய்ய தயாராக இருந்தபோது எவ்வித உதவியையும் ஏற்றுக்கொள்ளாமல் தன் நெற்றிக்கண்ணை திறந்து முப்புரத்தை எரித்த வரலாறு ஞானத்தால் மட்டுமே ஆசைகளை அகற்ற முடியும் என்று சுட்டிக்காட்டுகிறது.

பூமி தேர், சூரியசந்திரர்கள் சக்கரங்கள் என்பது போன்ற நடக்கமுடியாத உதாரணங்கள் செயற்கரிய செயல் எதை செய்தாலும் ஆசை அடங்காது என்று எடுத்துரைக்கின்றன. நான்தான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டதும் பருவுடல், நுண்ணிய உடல், காரண உடல் ஆகிய மூன்று உடல்கள், ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்கள் சஞ்சிதம்,ஆகாமி, பிரார்ப்தம் ஆகிய மூன்று கர்மங்கள் போன்ற அனைத்தும் மாயையாக மறைந்துவிடுவதால் முற்றுணர்ந்தோர்களின் செயல்கள் பிராணனின் வெளிப்பாடாக மட்டுமே அமைகின்றன.

இவ்வாறு இவர்களது செயல்கள் அமைவதால் தடைபடாத அமைதியுடனும் குறையாத இன்பத்துடனும் இவர்கள் செயல்படுவார்கள்.

தொடர்ந்து நிகழும் அனைத்து மாற்றங்களுக்கும் காரணமான பிராணன் பரமனின் மாயா சக்தியின் வடிவம். மரணம் என்பதும் இந்த மாயையில் ஒரு காட்சி. எனவே ஞானி மரணமடையும்பொழுது பிராணன் பிரிவதில்லை என்ற கருத்து கூறப்பட்டது.


பயிற்சிக்காக :

1. பிரஸ்ன உபநிடதத்தின் மூன்று கேள்விகளின் பதில்கள் மூலம் நிறுவப்பட்ட கருத்து என்ன?

2. பிராணன் எந்த மூன்று சக்திகள் மூலம் உடலை ஆள்கிறது?

3. மரணத்தை வெல்லும் வழி யாது?

4. ஆசைகளிலிருந்து விடுபட்டவனின் பிராணன் மரணத்தில் பிரிவதில்லை என்று கூறப்பட்டதற்கு காரணம் என்ன?

5. மக்களின் செயல்கள் எந்த எந்த அடிப்படைகளில் ஆராயப்பட்டன?

சுயசிந்தனைக்காக :

1.  ‘காலத்தை வென்றவன் நீஎன்ற புகழ் மொழிக்கு தகுதியானவர்கள் யார்?

2. ஞானிகள் விரும்பிய செயல்களை மட்டுமே செய்வார்களா?