Wednesday, October 20, 2010

Lesson 139: Not for praising alone (Brahma Sutra 3.4.21-22)

பாடம் 139: தியானத்திற்கு பின் ஞானம்
பாடல் 446 – 447 (III.4.21-22)

ஓம் எனும் மந்திரத்தை தியானம் செய்து மனப்பக்குவத்தை பெற்றவுடன் அதன் உட்பொருளான பரமனைப்பற்றிய நிச்சயமான ஞானத்தை பெற உதவும் வகையில் இந்தப்பாடம் அமைந்துள்ளது.

ஒன்றா பலவா?

இடம், பொருள், காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இருக்கும் பரமன் ஒருவன்தான் ‘நான் பலவாக ஆகுவேனாக’ என்ற சங்கல்பத்தின் விளைவாக நாம் காணும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாக வியாபித்துள்ளான்.

ஒருபொருள் மற்றொன்றிலிருந்து வேறுபட ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும்.  காகிதம் கண்ணாடியிலிருந்து வேறுபட்டபொருள் என்பது தெரிந்ததே. எல்லா விதத்திலும் ஒரே மாதிரியிருக்கும் இரு நாற்காலிகள் கூட ஒரே இடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடத்தில் இருப்பதால் இருவேறு பொருள்கள் ஆகும்.

உடலாலும் மனதாலும் ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபட்டவர் என்றாலும் இரு மனிதர்களை செயல்படுத்தும் ஆத்மா ஒன்றே ஒன்றுதான். ஏனெனில் ஒரு ஆத்மா மற்றதிலிருந்து வேறுபட்டது என்று நிரூபிக்க அவற்றினிடையே ஏதாவது ஒரு வித்தியாசமாவது இருக்கவேண்டும். எவ்வித வித்தியாசமும் இல்லாததால் ஆத்மா பரமன் என்ற ஒன்றேயாகும்.

ஒன்றிலிருந்து வேறாக இருப்பதுபோல காட்சியளிக்கும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களும் உண்மையில் ஒரே சக்தியின் வெளிப்பாடு என்பதை அறிவியல் ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியுள்ளன. எனவே தோன்றி, தொடர்ந்து மாறி, இறுதியில் மறையும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு பொருள்களும் உண்மையில் ஒன்றாக இருக்கும் பரமனின் மாயாசக்தியின் வெளிப்பாடு.

ஒன்றா பலவா என்ற கேள்வியின் பதில் பார்வையாளரை பொறுத்து மாறும். நகை வாங்க கடைக்குள் வருபவர் அங்கு பல்வேறு பொருள்களை காண்பார். இரவில் அவற்றை கொள்ளையிட உள்ளே நுழையும் திருடன் அங்கு தங்கம் என்ற ஒரே ஒரு பொருள் இருப்பதாக காண்பான். வடிவத்திற்கும் பெயருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தால் தங்கம் என்ற ஒன்று பலவாகத்தென்படும்.

அதுபோல் பரமனை அறிந்தவர்களின் கண்களுக்கு கடவுளைத்தவிர வேறு ஒன்றும் தெரிவதில்லை. இல்லாத வடிவத்திற்கும் பெயருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பாமர மக்களின் பார்வையில் நல்லவர்கள், கெட்டவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், மிருகங்கள், பறவைகள், தாவரம், மலை, நதி என பல வேறுபட்டப்பொருள்கள் இவ்வுலகில் இருப்பது போல் தெரியும்.

அறிபவன் ஒருவனா?

நான் என் எதிரிலிருக்கும் புத்தகத்தை பார்க்கிறேன். அமெரிக்காவில் உள்ள என் நண்பன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்கிறான். இவ்விரு பொருள்களை அறிபவன் எப்படி ஒருவனாக இருக்க முடியும்? பொருள்கள் வேறுபடுவதால் அவை நம் மனதில் வெவ்வேறு எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. அதே போல் மனங்கள் வேறுபடுவதால் அனுபவங்கள் மட்டும் வேறுபடுகின்றன. மனங்களை செயல்படுத்தும் உணர்வு வேறுபடுவதில்லை. உணர்ச்சிகள் வேறுபட்டாலும் அவற்றிற்கு ஆதாரமான உணர்வு அனைவருக்கும் ஒன்றுதான். ஒரே மின்சாரம் பல்வேறு சாதனங்களை செயல் படுத்துவது போல உணர்வுமயமான ஒரே பரமன் அனைத்து உயிரினங்களையும் செயல்படுத்துகின்றான். ஜடப்பொருள்களால் பெற முடியாத அறிவை நாம் பெறுவதற்கு காரணமான இந்த உணர்வுதான் அறிபவன்.

எனவே அனுபவங்கள் மனங்களை மட்டும் பாதிக்கின்றவே தவிர அவற்றின் செயல்பாட்டிற்கு ஆதாரமான பரமனை பாதிப்பதில்லை.

அறிபவனை அறிய முடியுமா?

நம் மனம் உள்ளிட்ட அனைத்தும் உணர்வற்ற ஜடப்பொருள்களாகும். எனவே இவற்றால் பரமனை அறிந்து கொள்ள முடியாது. நெருப்பை எரிக்க முடியாது என்பதைப்போல அறிபவனை அறிய முடியாது. மேலும் இருப்பது அறியும் உணர்வு ஒன்றுதான். அறிவை தன்னுள் சேகரித்து வைக்கும் மனது கணிணியைப்போல் ஒரு ஜடப்பொருள். உணர்வுடன் கூடிய ஒரே பொருள் பரமன் மட்டுமே. எனவே அறிபவனை அறிய வேறுயாரும் இல்லை.

ஆகவே அறிபவனை நேரடியாக அறியமுடியாது. பானையொன்றை பார்த்தால் அதை செய்த குயவன் ஒருவன் இருக்கவேண்டும் என்று அறிவது போல உலகத்தில் உள்ள பொருள்கள் அறியப்படுவதால் அறிபவன் என்று ஒருவன் இருக்க வேண்டும் என்று யூகித்து அறியலாம்.

அறிபவன் யார்?

பொருள்கள் வேறானவையென்றும் பரமன் ஒன்று என்றும் இந்த பாடத்தில் கூறப்படும் கருத்துக்களை அறிந்து கொள்பவன் பரமனா அல்லது பாமரனா?

புத்தகம், கைகடிகாரம் போன்ற ஜடப்பொருள்களை அறியும் மனமும்  கம்புயூட்டரைப்போன்ற ஒரு ஜடப்பொருள். கணிணி தன் செயல்பாட்டுக்கு மின்சாரத்தை சார்ந்திருப்பது போல மனம் செயல் பட பரமனைச்சார்ந்திருக்கிறது. கணக்கு போடுவது கணிணியா மின்சாரமா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது? மனம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நாம் அறிவதால் மனம் அறியப்படும் ஒரு ஜடப்பொருளேயன்றி அறிபவன் அல்ல.

எதிரிலிருக்கும் பொருள்களை பிரதிபலிக்கும் கண்ணாடியைப்போல ஐந்து புலன்கள் மூலம் புலப்படும் பொருள்களை பற்றிய எண்ணம் மனதில் ஏற்படுகிறது. உதாரணமாக உயரமான ஒரு மரத்தைப்பார்த்ததும் தென்னை மரம் என்ற எண்ணம் மனதில் ஏற்படுகிறது. பார்ப்பது யார் என்ற கேள்விக்கு நான் பார்க்கிறேன் என்ற பதில் கிடைக்கிறது. நான் என்ற எண்ணத்தின் பொருள் என்ன?

தென்னை மரம் என்ற எண்ணத்திற்குண்டான பொருள் தோட்டத்தில் இருக்கிறது. நான் என்ற எண்ணத்தின் பொருள் பரமன் என்றால் பரமனும் மரத்தைப்போல் ஒரு பொருள் என்றாகிவிடும். எனவேதான் பரமன் என்பவன் வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவன் என்றும் பரமனை அறிந்தவன் பரமனாகவே மாறிவிடுகிறான் என்றும் வேதம் கூறுகிறது. 
மனம் என்னும் ஜடப்பொருளில் ஏற்படும் எண்ணங்களில் நான் அல்லது எனது என்கிற எண்ணமும் ஒன்று. அந்த நான் என்கிற எண்ணம் மனதின் உரிமையாளன் அல்ல. “நான் அந்த உயர்ந்த மரத்தை பார்த்ததும் என்னுடைய மனதில் தென்னை மரம் என்கிற எண்ணம் ஏற்பட்டது” என்ற வாக்கியத்தில் இரண்டு பொருள்கள் மட்டுமே உள்ளன. ஒன்று மனம். மற்றது தென்னை மரம்.

உணர்வற்ற ஜடப்பொருளான மனதில் எண்ணங்கள் ஏற்பட காரணமாயிருக்கும் உணர்வே பரமன். நீதான் அது என்று வேதம் குறிப்பிடுவது இந்த உணர்வைத்தான். ஆக நான் உணர்வு என்ற ஞானம் ஏற்பட்டவுடன் அறிபவன் யார் என்பது தெளிவாகிவிடும்.

அறிபவன் ஒருவனே. அறியப்படும் பொருள் பல. அறிபவனுக்குள் எவ்வித வேற்றுமையும் இல்லை. அறியப்படும் மனம் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. என் மனம் என் நண்பனின் மனதிலிருந்து வேறுபட்டது. ஆனால் அறிபவன் பரமன் என்ற ஒருவனே. நான் என்ற சொல்லின் பொருள் அகங்காரம் என்ற தவறான அறிவை நீக்கி உணர்வு மயமான பரமன் என்ற சரியான அறிவு நம் மனதில் ஏற்பட்டால் நாம் முக்தியடைகிறோம்.

அறிபவன் மாற்றமில்லாதவன்

அறியப்படும் பொருள்கள் மாறிக்கொண்டேயிருப்பதை அறிய அறிபவன் மாறாமல் நிரந்தரமானவனாக இருக்கவேண்டும். ஏனெனில் அறிபவன் மாறிவிட்டால் அறியப்படும் பொருள்கள் மாறுகின்றன என்பதை அறியமுடியாது.

பல மணிகளை சேர்த்து கோர்க்க தொடர்ச்சியான ஒரே நூல் தேவை. துண்டு துண்டான நூலினால் மாலை செய்ய முடியாது. அதேபோல் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள், கிரகங்கள், வெளி ஆகிய வெவ்வேறான தனிப்பட்ட பொருள்கள் ஒன்றாக இருக்க இவற்றின் ஆதாரமாக வேறுபடாமல் தொடர்ச்சியாக இருப்பது அறிபவன்.

“காலையில் என் மனம் கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தது, மதியம்தான் சிறிது அமைதியடைந்தது” என்று மாலையில் சொல்வதற்கு நான் எனும் உணர்வு காலையிலிருந்து மாலை வரை மாறாமல் தொடர்ந்து இருக்க வேண்டும்.

அறிபவன் இருக்கிறான்

நான் இருக்கிறேன் என்பதற்கு எவ்வித நிரூபணமும் தேவையில்லை. இவ்வுலகம் இருப்பது போல் காட்சியளிக்கும் மாயை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஒரு உண்மையை அடிப்படையாய் கொள்ளாமல் ஒரு பொய்யை சொல்ல முடியாது. எனவே இருத்தல் என்பது அறிபவனான எனது இயற்கை தன்மை என்றும் நான் மட்டும்தான்  இருக்கிறேன் என்றும் நிரூபணமாகிறது.

அறிபவன் எவ்வித குணங்களற்றவன்

நீளம், அகலம் போன்ற வடிவங்கள், கருப்பு, வெள்ளை போன்ற வண்ணங்கள், நல்லவர், கெட்டவர் போன்ற குணங்கள் அறியப்படும் பொருள்களைச்சேர்ந்தவை.  இந்த குணங்களை அறிபவனுக்கு எவ்வித குணங்களும் இருக்க முடியாது.

அறிபவன் பாகங்களற்றவன்

எவற்றிற்கு பாகங்களும் பகுதிகளும் இருக்கின்றனவோ அவை நிரந்தரமாக இருக்க முடியாது. ஏனெனில் பாகங்கள் இருக்கின்றன என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருப்பதாகவும் அவை மாற்றத்திற்கு உட்பட்டவை என்றும் ஆகிறது. அறிபவன் ஒருவனே என்பதாலும் அவன் மாறாமல் இருப்பவன் என்பதாலும் அவன் பாகங்களற்றவன் என்பது தெளிவாகிறது.

அறிபவன் நித்யமானவன்

பரமன் ஒருவனே என்பதாலும் அவன் மாற்றத்திற்கு உட்படாதவன் என்பதாலும் அவன் நித்யமானவனாகத்தான் இருக்க வேண்டும். பிறப்பும் இறப்பும் அவனுக்கு இருந்தால் அவற்றை அறிய வேறு ஒருவன் இருக்கவேண்டும். பக்கத்து வீட்டில் கணவனும் மனைவியும் சண்டை போடுவது போல் காணும் கனவில் நாம் நடுவில் புகுந்து எந்த சமாதானம் செய்யாவிடிலும் கனவின் ஆரம்பத்திலிருந்து நாம் தொடர்ந்து இருக்கிறோம். நாம் பங்கு பெறும் காட்சி கனவில் இடம் பெறாவிட்டாலும் நாம் கனவில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் அறிந்திருக்கிறோம். அதுபோல் உணர்வுடன் கூடிய உயிரினங்கள் இவ்வுலகில் உலாவருவதற்கு முன்பிருந்தே உணர்வு வடிவமான பரமன் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறான்.

அறிபவன் சத்யமானவன்

எது நித்யமானதோ அது மட்டுமே சத்யமானது. இன்றிருப்போர் நாளையிங்கே இல்லாமல் போகும் சிறப்புடைய உலகம் உண்மையாக இருக்க முடியாது. எனவே இந்த மாயையான உலகின் ஆதாரமாக என்றும் இருக்கும் அறிபவன் மட்டுமே உண்மையானவன்.

அனந்தமானவனே ஆனந்தமானவன்

இடம், பொருள் மற்றும் காலம் என்ற மூன்று கட்டுப்பாடுகளையும் கடந்து நித்யமாகவும் சத்தியமாகவும் இருக்கும் ஒருவனே ஆனந்தமானவனாக இருக்க முடியும். ஏனெனில் எவ்வளவு பொருள் இருந்தாலும் போதும் என்ற மனம் ஏற்படாது. அனைத்து பொருள்களின் ஆதாரமாக இருப்பவன் மட்டுமே இனி வேண்டும் என்ற ஆசையின்றி குறையாத ஆனந்தத்துடன் இருப்பான்.

வாழ்வில் எவ்வளவு சாதித்தாலும் முதுமையும் மரணமும் தன்னை வென்றுவிடும் என்ற பயம் இருக்கும்வரையில் யாராலும் முழுநிம்மதியுடன் இருக்கமுடியாது. காலத்தைக் கடந்து நித்தியமாய் இருப்பவன் மட்டுமே தடைபடாத நிம்மதியுடன் இருப்பான்.

மாறும் உலகின் இருமைகளால் அலைக்களிக்கப்படும் மனம் நிரந்தரமான அமைதியை அடையமுடியாது. மாயையான உலகில் உண்மையாக இருப்பவனால் மட்டும்தான் நிரந்தரமான அமைதியுடன் இருக்க முடியும்.

முடிவுரை :

அறியப்படும் பொருள்களான மனம் மற்றும் உடலை அறிவதால் அவைகளிலிருந்து வேறுபட்ட நான் அறிபவன் ஆவேன். வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் சாட்சியாக இருக்கிறேனே தவிர செயல்களை செய்பவனோ அவற்றின் விளைவுகளை அனுபவிப்பவனோ நான் அல்ல. அனுபவங்கள் மனதில் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் என்னை பாதிப்பதில்லை. ஏனெனில் அனுபவங்கள் ஏற்பட காரணமான பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு நான்தான் ஆதாரமானவன். மாறும் உணர்ச்சிகள் மனதைச்சேர்ந்தவை. மனதை இயக்கும் மாறாத உணர்வு நான். அறிந்தது அறியாதது ஆகிய அனைத்தையும் அறியும் பேரறிவாகிய நான், மனதின் அறிவு மற்றும் அறியாமையை பொருட்படுத்துவதில்லை.  

என் உடலும் மனமும் தொடர்ந்து மாறுபவை. நான் மாறாதவன். என் உடல் ஒரு நாள் அழிந்துவிடும். நான் அழியாதவன். என் உடல் மட்டும்தான் நான் என்ற வரையரைக்கு உட்படாமல் அனைத்து உயிரினங்களை செயல்படுத்தும் உணர்வாகவும் அனைத்து ஜடப்பொருள்களின் இருப்புக்கு ஆதாரமாகவும் இருப்பவன் நான். பெயர், வடிவம், குணம் ஆகியவற்றுடன் கூடிய படைக்கப்பட்ட பொருள்கள் இருப்பது போல் தோற்றமளிக்கும் மாயை. நான் எவ்வித குணங்களும் இல்லாமல் உலகின் ஆதாரமாக இருக்கும் உண்மைப்பொருள். உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களும் இருப்பதாக தோற்றமளிப்பதற்கு என்னைச் சார்ந்துள்ளன. நான் எதன்மீதும் சாராமல் என்றும் இருக்கும் சுதந்திர தத்துவம். பிரளயத்தில் பிரபஞ்சமே அழிந்தாலும் நிரந்தரமாக இருக்கும் நான் நேற்று, இன்று என்ற காலக்கட்டுப்பாட்டிற்கும் அங்கு இங்கு என்ற இடக்கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டு எங்கும் எப்பொழுதும் இருக்கும் அனந்தமானவன்.

இருமைகளை எதிர்கொள்ளும் மனம் கவலைகள் நிரம்பியிருக்கும்பொழுது என் இயல்பான ஆனந்தத்தை அனுபவிப்பதில்லை. கவலைகள் மாறி மனதின் எண்ணங்களின் அலைபாயும் தன்மை குறைந்ததும் மனம் என் ஆனந்தத்தை பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. தினசரி வாழ்வில் நடக்கும் இந்த ஊசலாட்டத்தை புரிந்து கொண்டால் குறையாத ஆனந்தம் நான் என்பதும் ஆனந்தத்தை அனுபவிக்க உலகம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை என்பதும் புரிபடும்.

கர்ம யோகம், உபாசன யோகம் ஆகியவற்றால் மனம் பண்பட்டபின் இந்த உண்மைகள் புரிய ஆரம்பிக்கும். இன்பம் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்தது ஒரு முடிவுக்கு வரும்.

பலூனை மேலும் கீழும் உதைத்து விளையாடும் குழந்தையின் கும்மாளத்தை பார்க்கும் பெற்றோர் பலூன் உடைந்தபின் குழந்தை அழுவதையும் ஒரு இனிமையான நிகழ்ச்சியாக ரசிப்பது போல் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றாற்போல் தொடர்ந்து மாறும் தங்கள் மனதின் நடனத்தை, இது வேண்டும் அது வேண்டாம் என்ற பாகுபாடின்றி அனுபவிப்போர்கள் முற்றுணர்ந்தோர்கள்.

நம் இயல்பான ஆனந்தத்தை நாம் அனுபவிக்க ஒரு மனமும் பொருள்களும் தேவைப்படுவதால்தான் பிரபஞ்சம் என்கிற மாயை படைக்கப்பட்டுள்ளது. படைப்பு என்றால் ஒன்றிலிருந்து வேறுபட்ட மாற்றமடையும் பொருள்கள் என்று பொருள். பலூன் உடையாவிட்டால் குழந்தை விளையாட்டில் சலிப்படைந்து விடுவதைப்போல் மனம் மாறாமல் இருந்துவிட்டால் வாழ்வில் சுவையிருக்காது.

என்றும் இருக்கும் அறிபவனான நான் என் இயல்பான ஆனந்தத்தை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட பல்வேறு மனிதர்கள், பொருள்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும்பொழுது மாறும் மனதின் மூலம் அனுபவிக்கிறேன். மாறுவது உலகின் இயல்பு என்பதால் என் ஆனந்தம் என்றும் குறைவதில்லை. உலகை மாற்றுவது என் வேலையல்ல. எல்லாமும் எல்லோரும் எப்பொழுதும் நன்றாக இருக்க தேவையான மாற்றத்தை என்னால் செய்யவும் முடியாது அதற்கு அவசியமும் இல்லை. எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது என்பதை அறிந்தால் என்றும் ஆனந்தம் குறைவதில்லை.

பயிற்சிக்காக :

1. பின் வரும் கருத்துக்களை நிரூபிக்கவும்.
- நான் பரமன்
- நான் அறிபவன்
- நான் ஆனந்தமயமானவன்
- நான் நிரந்தரமானவன், அழிவதில்லை
- உலகம் மாயை

2. அறிபவனை அறிய முடியுமா? 

சுயசிந்தனைக்காக :

1. அறிபவன் நான் என்பது புரிந்து விட்டால் அடுத்த பாடத்தை படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா?

2. ‘நான் பலவாக ஆகுவேனாக’ என்ற சங்கல்பத்தின் அவசியமென்ன?

3. அறிபவனுக்கும் அறிபவனை அறிந்தவனுக்கும் என்ன வேறுபாடு?

4. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஆத்மா ஏன் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாக இருக்க முடியாது?

Monday, October 11, 2010

Lesson 138: Renouncing for happiness (Brahma Sutra 3.4.18-20)

பாடம் 138: சன்யாசம் அவசியம்
பாடல் 443 – 445 (III.4.18-20)

வேதம் படிப்பது முற்றும் துறந்த சன்யாசிகளின் வேலை என்ற தவறான கருத்தை நீக்கி வாழ்வின் இன்பங்களை துன்ப கலப்பில்லாமல் அனுபவிக்க வேண்டுமானால் பற்றுதலை துறப்பது அனைவருக்கும் அவசியம் என்ற கருத்தை கூறி அதற்கான வழி வகைகளை இந்த பாடம் தெளிவாக்குகிறது.

யார் துறவி?

என்றும் நிலைத்திருக்கும் சிற்றின்பமே பேரின்பம் என்பதால் பேரின்பத்திற்காக சிற்றின்பத்தை துறக்கமுடியாது. உலகம் நம் அனுபவத்திற்காக படைக்கப்பட்டது. எனவே அதை துறக்க முயல்வது தவறு. மேலும் ஐந்து புலன்கள் மூலம் உலக அனுபவங்களை பெறுவதை முற்றிலுமாக யாராலும் தவிர்க்க முடியாது.

அனுபவங்கள் உலகத்தின் மீது ஒரு பற்றுதலை ஏற்படுத்தும். அனைத்து துன்பங்களுக்கும் காரணமான இந்த பற்றுதலை துறந்தவர்களே உண்மையான துறவிகள் ஆவார்கள்.

பற்றுதலை துறக்க வேண்டுமென்றால் வேதாந்தத்தை படித்து ஞானம் பெறுவது அவசியம். ஞானத்தை பெறுவதற்காக தற்காலிகமாக புலன் இன்பங்களை துறப்பது என்பது தேர்வு நாட்களில் சினிமாவுக்கு செல்வதை தவிர்க்கும் மாணவனது புத்திசாலித்தனத்திற்கு ஒப்பாகும். துன்பத்தை தவிர்க்க உலகத்தையே துறக்க முடிவு செய்வது அறிவீனம்.

அனைவரும் உலகத்தை பற்றிய சரியான ஞானத்தை பெற்று பற்றுதலை துறந்த துறவிகள் ஆகவேண்டும் என்பதற்காக மனித வாழ்வை நான்கு பருவங்காளாக வேதம் பிரிக்கிறது. கர்மங்களை செய்து மனப்பக்குவம் பெற உதவும் இல்வாழ் பருவத்திற்கு மாணவப்பருவம் ஒரு படிக்கட்டு. அதன்பின் ஓய்வு நிலை என்ற வாழ்வின் நான்காம் பருவம் பொறுப்புக்களை குறைத்துக்கொண்டு வேதத்தை முறையாக படித்து ஞானத்தை பெற்று பற்றுதலை துறந்த சன்யாசியாக வாழ வழிவகுக்கிறது.

பற்றுதலை துறந்தவர்கள் மட்டுமே முக்தியடைந்தவர்கள் ஆவார்கள்.

பற்றுதலை துறப்பது எப்படி?

உலக அனுபவங்களை நாம் பெறும்விதம் பற்றிய தெளிவு ஏற்பட்டால் பற்றுதல் மறைந்துவிடும். வித்யாரண்ய சுவாமிகளின் பஞ்சதசியில் கொடுக்கப்பட்டுள்ள நடன மங்கை உதாரணத்தை ஆராய்வதன் மூலம் இந்த தெளிவை நாம் பெறலாம்.

நடன அரங்கம் பிரபஞ்சம்/ உலகம்.
அரங்கத்தில் உள்ள ஒளி - பரமன்
மேடை அமைப்பு நம் பருவுடல்
பக்கவாத்தியங்கள் நமது கோளகங்கள்
பக்கவாத்தியக்காரர்கள் நமது புலன்கள்
நடனமங்கை நம் மனது
நடனமங்கையின் அங்க அசைவுகள் நம் எண்ணங்கள்
நடனமங்கையின் மனது நம் புத்தி
நடனத்தின் இயக்குனர் நம் அகங்காரம்
நடனம் நம் வாழ்க்கை
பார்வையாளர்கள் உலகத்தில் உள்ள பொருள்கள் (இவ்விடத்தில் பொருள்கள் என்ற சொல் மனிதர்கள், உயிரினங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றையும் குறிக்கும்)

பார்வையாளர்கள் உள்ளிட்ட அரங்கம் முழுவதும் பரவி நடனம் நடைபெற ஆதாரமாக இருக்கும் ஒளியைப்போல இவ்வுலகில் உள்ள அனைத்தும் இயங்க ஆதாரமாய் இருப்பது பரமன். உலகம் என்னும் நாடகமேடையில் நடைபெறும் நாட்டிய நாடகம் நமது வாழ்க்கை. நடனமங்கை திரைக்குப்பின் சென்று வேறு உடை அணிந்து வந்து அடுத்த நாட்டியத்தை தொடர்வதுபோல மரணத்திற்கு பின் மறுபடி பிறந்து நம் வாழ்க்கை தொடர்கிறது.

தெளிவு 1: பொருள்கள் - அனுபவங்கள்

துவக்கத்தில் தாளத்திற்கு ஏற்றாற்போல் தொடங்கிய நடனம் சிறிது நேரத்தில் பார்வையாளர்களின் ரசனைக்கேற்றாற்போல் மாறிவிடுவதைப்போல நம் எண்ணங்கள் முதலில் நம் புலன்களின் செயல்பாடுகளை பொறுத்து அமைந்தாலும் நாளடைவில் புலன் இன்பங்களைத்தரும் பல்வேறு பொருள்கள் நம் எண்ணங்களை தீர்மானிக்க தொடங்கிவிடுகின்றன.

ஆரம்பத்தில் பார்ப்பது, கேட்பது போன்ற புலன் அனுபவங்கள் பொருள்களைவிட முக்கியத்துவம் பெற்றிருந்தன. உதாரணமாக ஏதாவது ஒலியை எழுப்பினால் குழந்தை அதனால் கவரப்படும். என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது அது இனிமையானதா என்பது போன்ற பாகுபாடுகளை குழந்தை பொருட்படுத்துவது கிடையாது. இதுதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல் எது கிடைத்தாலும் அதில் இன்பம் காணும் தன்மை அதனிடம் இருந்தது. ஆனால் வளர வளர பொருட்களின் முக்கியத்துவம் அதிகரித்து அவற்றிலிருந்து பெறும் அனுபவங்களை நாம் பொருட்படுத்துவதில்லை.

நடனமங்கையின் அங்க அசைவுகளை பார்வையாளர்கள் தீர்மானிக்க ஆரம்பித்தவுடன் அதற்கேற்றவாறு ஒத்து ஊதுவது பக்கவாத்தியக்காரர்களின் பழக்கமாகிவிட்டது. உலகில் உள்ள பொருள்கள் நம் எண்ணங்களை தீர்மானிப்பதால் அவற்றின்பின் ஓடுவதே புலன்களின் வேலையாகிவிட்டது. பணம் சம்பாதிப்பதில் முழுஈடுபாட்டுடன் இருப்பதால் கிடைக்கும் வசதிகளை அனுபவிக்க கூட நேரம் கிடைப்பதில்லை.

சாலையோர உணவுவிடுதியில் வாய்க்கு ருசியாக வகை வகையாக சாப்பிடுபவர்கள் உப்புசப்பில்லாத ரொட்டித்துண்டை நட்சத்திர உணவகத்தில் அமர்ந்து சாப்பிடுபவர்களை பார்த்து பொறாமை படுவது வழக்கமாகிவிட்டது.

இளமைப்பருவத்தில், பொருள்களைவிட அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் அந்தப்பருவம்தான் தம் வாழ்வில் இன்பமாக இருந்த காலமாக அனைவரும் உணர்கிறார்கள். தற்பொழுதும் அதே இன்பத்தை அடைய இளமை திரும்பிவர வேண்டுமென்ற அவசியமில்லை. பொருள்களை விட அனுபவங்கள் முக்கியமானவை என்ற தெளிவு நம் மனதில் ஏற்பட்டால் மட்டும் போதும்.

எந்த வயதானாலும் அனுபவங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டு இருப்பது ஒரு முடிவுக்கு வருவதில்லை. காலையில் கஞ்சியை சுவைத்து சாப்பிடாமல் மசால்தோசையை ஏக்கத்துடன் பார்ப்பது இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். கிடைக்கும் அனுபவங்களை உளகிளர்ச்சியுடன் அனுபவிக்காமல் கிடைக்காத பொருள்கள் நம் எண்ண ஓட்டத்தை ஆக்ரமித்துக்கொண்டிருப்பதை அனுமதிக்கும் வரை அந்த நாளும் வந்திடாதோ என்று பாடி இந்த நாளை அனுபவிக்காமல் ஏமாற வேண்டியதுதான்.

வயதானபின் பொருள்களை துறக்க முயல்வது எட்டாத பழம் புளிக்கும் என்ற நரியின் செயலுக்கு ஒப்பாகும். பொருள்களை துறக்க வேண்டிய அவசியமில்லை. பொருள்களைவிட அனுபவங்கள்தான் முக்கியம் என்ற தெளிவுதான் வேண்டும்.

தெளிவு 2: புத்தி - மனம்

நடனமங்கை பார்வையாளர்களின் பாராட்டை பெறுவதற்காக மட்டுமே நாட்டியம் ஆடுகிறாள். அவளுக்கு வேண்டிய பணம், புகழ், பதவி போன்ற அனைத்து சிறப்புகளும் பார்வையாளர்களின் தயவினால் மட்டுமே அவளுக்கு கிடைக்கும் என்று அவள் நினைத்துக்கொண்டிருப்பதால் அவள் அவர்களை திருப்தி செய்யும் வகையில் நடனமாடுவதில் எந்த தவறும் இல்லை.

உலகம் நமக்கு இன்பம் தரும் என்பது நமது கருத்து என்றால் நம் மனம் பொருள்களின் பின்னால் செல்வதை தடுக்க முடியாது. வீட்டு மொட்டைமாடியில் இலவசமாக வீசும் தென்றல் காற்று கொடுக்கும் சுகமான அனுபவத்தைவிட குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து தொலைகாட்சிப்பெட்டியில் காட்டப்படும் வானத்தைப்பார்ப்பது எவ்விதத்தில் சிறந்தது என்பதை யோசிக்க வேண்டும்.

மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மட்டும்தான் மணம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு கையில் இருப்பதை அனுபவிக்காமல் இல்லாததை தேடி எங்கெங்கோ அலைபாயும் மனம் தேடியது கிடைத்தபின்னும் திருப்தி அடைவதில்லை என்ற உண்மை புத்திக்கு புரிய சிலகாலம் ஆகும். அதன் பின்தான் நாம் அனுபவிக்கும் இன்பம் பொருள்களிலிருந்து உற்பத்தியாவது இல்லை என்ற தெளிவு புத்திக்கு ஏற்படும்.

தெளிவு 3: எண்ணங்கள் - பொருள்கள்

நாட்டிய சாஸ்திரத்தின் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு முறைப்படி நடனம் ஆடுவதுதான் நடனமங்கையின் கடமை. அதை விடுத்து பார்வையாளர்களை திருப்தி செய்ய ஆட ஆரம்பித்தால் அது பரதநாட்டியமாய் அமையாது. நாளுக்கு நாள் தரம் குறைந்து கேளிக்கைவிடுதியில் இரவுநடனம் ஆடும் நிலைக்கு அவள் தள்ளப்படுவாள்.  

உலக வாழ்வை புலன்களின் துணையுடன் அனுபவிக்க ஆரம்பித்த மனம், நாளடைவில் பொருள்களுக்கு அடிமையாய் மாறினால் நம் நிலையும் அதுதான்.

எது சரி எது தவறு என்ற கட்டுக்கோப்புக்கும் எது உண்மை எது பொய்மை என்ற விவேகத்துக்கும் உட்பட்டு செயல்படாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்வதன் ஒரேவிளைவு மீளாத்துயர் மட்டுமே.

நாட்டியகலைக்கு தன்னை அர்ப்பணம் செய்து பார்வையாளர்களின் கைதட்டலை எதிர்பார்த்து கவனம் கலையாமல் முறைப்படி ஆடினால் மட்டுமே நடனமங்கை உயர்வு பெறுவாள். அதுபோல வேதம் கூறிய வழியில் வாழ்ந்து உலக இன்பங்களை முறைப்படி அனுபவித்தால் மட்டுமே மனம் நிறைவு பெற்று நிம்மதியை அடையும் வழி பிறக்கும்.

நடனம் ஆட ஆட எப்படி திறமை அதிகரிக்குமோ அதுபோல பிறவிகள்தோறும் வாழ்ந்து வாழ்ந்து மனதிற்கு அனுபவம் அதிகரிக்கிறது. பார்வையாளர்கள் கேட்கிறார்களே என்பதற்காக தரம் குறைந்த அங்க அசைவுகளை செய்யாமல் சாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு ஆடும் பக்குவம் நடனமங்கைக்கு ஏற்படுவதுபோல் பொருள்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வேதம் வகுத்த பாதையில் பயணம் செய்யும் மனப்பக்குவம் மனிதனுக்கு பல பிறவிகளின் பின் ஏற்படுகிறது.

தெளிவு 4: அகம்பாவமும் - எண்ணங்களும்

நடன இயக்குனர் அரங்கத்தின் திரைமறைவில் அமர்ந்துகொண்டு நடனத்தை பார்ப்பதுபோல நான் என்ற அகம்பாவம் மனதின் செயல்களை கண்காணித்துக்கொண்டிருக்கிறது.

நடனமங்கை நளினம், நாணம், புன்னகை ஆகியவற்றுடன் நாட்டியவிதிகளுக்கு உட்பட்டு ஆடும்பொழுது பெருமையுடன் தனக்குதானே பாராட்டு தெரிவித்துக்கொள்ளும் இயக்குனர், அவள் பார்வையாளர்களின் மட்டமான தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் முறைதவறி ஆடும்பொழுது குற்ற உணர்வுடன் வருத்தம் அடைவது போல நல்ல இனிமையான எண்ணங்கள் மனதில் ஏற்படும்பொழுது பெருமிதம் கொள்வதும் பொறாமை, கோபம் போன்ற கெட்ட எண்ணங்கள் மனதில் ஏற்படும்பொழுது துன்பமடைவதும் அகங்காரத்தின் வேலை.

நடன நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே இயக்குனரின் ஆணைப்படி ஆட நடனமங்கை உடன்பட்டதில்லை. இயக்குனர் என்ற பதவியை தானே தனக்கு சூட்டிக்கொண்டு பார்வையாளர்களை பார்த்தபடி ஆடும் நடனமங்கையின் கவனம் ஒருபொழுதும் தன் பக்கம் திரும்புவதில்லை என்பதை உணராமல் நடனத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் தான்தான் போறுப்பு என்று அசட்டுத்தனமாய் நம்பிக்கொண்டிருக்கும் நடன இயக்குனரின் நிலைதான் நம் அகம்பாவத்திற்கும். நம் மனம் ஒருபோதும் அகங்காரத்தின் விருப்பபடி செயல் படுவது கிடையாது.

உதாரணமாக நம்மில் பெரும்பாலோர் நான் யோசிக்கிறேன் என்று சொல்லி மனதின் செயல்பாட்டிற்கு உரிமை கொண்டாடுகிறோம். இது தவறு. நம்மால் யோசிக்கவே முடியாது. மனதில் எண்ணங்கள் தானாக தோன்றுகின்றன. என்ன எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்கவே முடியாது. அது முடிந்தால் ஏதாவது ஒரு பொருளை பற்றிய எண்ணங்கள் மட்டும்தான் மனதில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யும் திறன் நமக்கு இருக்கவேண்டும் அல்லது எதைபற்றிய எண்ணமும் ஏற்படாமல் மனதை காலியாக வைத்திருக்க முடிய வேண்டும். இவை நம் சக்திக்கு அப்பாற்பட்டவை என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆக மனதில் ஏற்படும் எந்த எண்ணங்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இது என் நாடு என்று உரிமை கொண்டாடுவது நாட்டு மன்னரின் தனிஉரிமை. ஒவ்வொரு குடிமகனும் இது என் நாடு என்று ஒரு பேச்சுக்கு சொல்லிக்கொள்ளலாமே தவிர உண்மையில் ஆட்சி புரிவது அவர்கள் அல்ல. அதுபோல இது என் உடல், இது என் மனம் என்று ஒரு பேச்சுக்கு நாம் சொல்லிக்கொள்ளலாமே தவிர இவ்வுலகத்தில் உள்ள பொருள்களுடன் தானாக உறவாடும் உடல் மற்றும் மனதின் செயல்பாட்டுக்கு நாம் எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல.

இருப்பதைத்தான் துறக்க முடியும். இல்லாததை இல்லை என்று புரிந்து கொண்டால் போதும். தினமும் தெருவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்துவதால் அந்த இடம் நமக்கு சொந்தமாகி விடாது. ஒரு நாள் அந்த இடத்தில் பக்கத்துவீட்டுக்காரர் அவரது காரை நிறுத்திவிட்டால் அவருடன் சண்டை போடாமல் அந்த இடத்தை மனதளவில் துறப்பதுதான் புத்திசாலித்தனம். 

தெளிவு 5: நான் யார்?

எதனுடனும் சம்பந்தப்படாமல் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கும் பரமன்தான் நான். நடனமங்கை எப்படி ஆடினாலும் அரங்கத்தில் உள்ள ஒளி பாதிக்கபடுவதில்லை. அதேசமயம் ஒளியில்லாமல் நடனம் இல்லை. அதுபோல நான் என்ற உணர்வுமயமான பரமனின் அருள் இல்லாமல் மனம் செயல்படாது. அனைத்து உயிரினங்களின் செயல்பாட்டுக்கு அடித்தளமாய் இருக்கும் பரமன் மட்டும்தான் என்றும் நிலைத்திருக்கும் உண்மை. இவ்வுலகம் முழுவதும் இன்றிருப்பது போல் நாளை இருக்காது. ஒரு நாள் இல்லாமலேயே போய்விடும் நிலையற்ற தன்மை உடையது.

நான் இருக்கிறேன் என்பதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இருப்பது உண்மையென்றால் நான் யார் என்ற கேள்விக்கு பதில் தெரியவேண்டும். அறியும் பொருள்களிலிருந்து அறிபவனான நான் வேறுபட்டவன் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என் மனதையும் உடலையும் நான் அறிகிறேன் என்பதால் அவை நானாக இருக்க முடியாது.

இருப்பது இரண்டு பொருள்கள்தான். ஒன்று என் உடல் மனம் உள்ளிட்ட இந்த பிரபஞ்சம். இரண்டாவது நான் என்ற உணர்வு. இவ்விரண்டும் அல்லாத அகங்காரம் நம் மனதில் ஏற்படும் நான் என்ற எண்ணம்.

நம் மனதில் ஏற்படும் அனைத்து எண்ணங்களுக்கும் உண்டான பொருள்கள் வெளிஉலகில் இருக்கின்றன. நான், என், எனது போன்ற எண்ணங்களின் பொருள் பரமன். உணர்வுமயமான பரமன்தான் நான் என்ற தெளிவு ஏற்பட்டுவிட்டால் அதன்பின் உலகில் இருப்பதாகத்தோன்றும் அனைத்து இன்பங்களும் என்னிடம் இருந்துதான் உற்பத்தியாகின்றன என்ற உண்மை தெரியவரும். இந்த அறிவு நம் புத்திக்கு ஏற்பட்டபின்தான் நம் உலகில் உள்ள பொருள்களின் மேல் உள்ள பற்றுதல் மறையும்.

தெளிவு 6: நானும் என் மனமும்

உலகத்தில் உள்ள பொருள்களுடன் உறவுகொள்வதை தவிர்க்க முடியாது என்பதால் எதிர்கொள்ளும் பொருள்களுக்கேற்றபடி மாறவேண்டியது மனதின் கடமை. உலகில் ஏற்படும் மாற்றங்களை மனதின் உதவியில்லாமல் நம்மால் அறிந்து கொள்ள முடியாது.

சுடும் நீரை ஊற்றினால் சூடாக இருப்பதும் பனிக்கட்டியை நிரப்பினால் ஜில்லென்று இருப்பதும் பாத்திரத்தின் இயல்பு. அதே போல் இருமைகளிடையே தொடர்ந்து ஊசலாடும் உலக நிகழ்வுகளை அனுபவிக்கும் மனம் நிகழ்வுகளுக்கேற்ப அலைபாய்வதை தவிர்க்க முடியாது.

உலகத்தை திருத்தி எப்பொழுதும் ஒரேமாதிரி இருக்க வைக்க நம்மால் முடியாது. அதேபோல் மனதை அலைபாயாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும் நாம் முயற்சி செய்வதில் எவ்வித பயனும் இல்லை. நில் என்றால் மனம் நிற்கப்போவதில்லை.

மனம் என்னுடையதல்ல என்று அதை துறந்துவிடுவதுதான் நிம்மதியாய் இருக்க நமக்கு இருக்கும் ஒரேவழி. உலகத்தில் உள்ள பொருள்களைப்போல மனமும் பரமனின் மாயாசக்தியின் வெளிப்பாடு. மனதை என் மனது என்று சொந்தம் கொண்டாடுவதே தவறு. இல்லாதததை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. மனம் நம்முடைய மனம் அல்ல என்று புரிந்து கொண்டால் மட்டும் போதும்.

உலக அனுபவங்களை பெறுவது நான் என்ற அறியாமையே நம் துன்பங்களுக்கு காரணம். அனுபவங்களுக்கு ஆதாரம் மட்டுமே நான் என்ற தெளிவு ஏற்பட்டுவிட்டால் அவற்றால் நாம் என்றுமே பாதிக்கப்படுவதில்லை என்ற உண்மை புலனாகும்.

தெளிவு 7: படைப்பின் இரகசியம்

நமது ஐந்து புலன்கள் மூலம் நமக்கு கிடைக்கும் செய்திகள் மட்டுமே உண்மையில் இல்லாத உலகை இருப்பதாக நம் மனதை நம்பவைத்துகொண்டிருக்கின்றன என்பது அணுவை பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சி செய்த பௌதீகத்துறை அறிஞர்களின் முடிவான கண்டுபிடிப்பு.

வேதமும் இதேகருத்தைத்தான் சொல்கிறது.

நடன அரங்கம், பார்வையாளர்கள், மேடை அமைப்பு, பக்கவாத்தியங்கள், பக்கவாத்தியக்காரர்கள், நடனமங்கை, அவளது அங்க அசைவுகள் போன்ற அனைத்தும் பரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடு. இருப்பது போன்று காட்சியளிக்கும் இவ்வுலகம் உண்மையில் இல்லை.

இருப்பது பரமன் மட்டும்தான். நான் இருக்கிறேன் என்பது நமக்கு உறுதியாக தெரிவதால் நான்தான் பரமன் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். இந்த அறிவை தர்க்கமும் அறிவியலின் கண்டுபிடிப்புகளும் உறுதி செய்கின்றன.

இந்த ஒளி-ஒலி காட்சியில் இடம்பெறும் ஒரு சிறிய அங்கம்தான் நம் வாழ்க்கை. இதில் எந்த ஒரு நடனத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் நிகழ்ச்சியை அனுபவிப்பது மட்டுமே நமது வேலை.

உலகில் பல பொருள்கள் இருக்கின்றன. நமது கர்மவினைகளின் பலனாக அவற்றில் குறிப்பிட்ட சில பொருள்களுடன் உறவாட நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அவ்வாறு உறவு ஏற்படும்போழுது அந்த பொருள்களின் அனுபவங்களை புலன்கள் வழியாக மனம் பெறுகிறது. புத்தியில் உள்ள அறிவுக்கு ஏற்றபடி மனம் பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றின்பின் செல்ல ஆரம்பிக்கிறது. பலபிறவிகளில் இதுபோன்ற அனுபவங்களை பெற்று பொருள்களில் இன்பம் இல்லை என்ற பக்குவம் ஏற்பட்டபின் மனம் வேதம் கூறும் பாதைக்கு திரும்புகிறது.

ஆரம்பம் முதல் கடைசிவரை இதில் நான் என்ற அகங்காரத்திற்கு எவ்வித பங்கும் இல்லை என்பது புரிந்தவுடன் நமக்கு முக்தி கிடைக்கிறது.

முடிவுரை :

உலகில் உள்ள மற்ற பொருள்கள் மாறிக்கொண்டிருப்பவை என்பதாலும், இன்பத்தின் உண்மையான ஊற்று நான் என்பதாலும் பொருள்களின் மீது பற்றை துறப்பது மிகவும் எளிதான காரியம்.

பற்றை துறந்த துறவிகள் உலகத்தின் பொருள்களை எவ்வித தடையுமில்லாமல் அனுபவிக்கலாம். ஏனெனில் இன்பமாயிருக்க அவர்கள் உலகத்தில் உள்ள எந்த பொருள்கள் மீதும் சார்ந்திருப்பதில்லை. இன்பம் தன்னுடைய சுயரூபம் என்பது அவர்களுக்கு தெரிந்திருப்பதால் கிடைத்த பொருள்களை அனுபவித்து உலகவாழ்வை இனிமையாக கழிக்கிறார்கள்.




பயிற்சிக்காக :

1. யார் துறவி?

2. அனுபவங்கள் மற்றும் பொருள்கள். இவ்விரண்டில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

3. மனத்தின் செயல்பாடு எதன் அடிப்படையில் அமைகிறது?

4. நடன மங்கை நாட்டிய சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டு நாட்டியம் ஆடவேண்டும் என்று சொல்வது எதை குறிக்கிறது.

5. நடன இயக்குனரின் பங்கு என்ன?

6. நான் யார்?

7. படைப்பின் இரகசியம் என்ன? 

சுயசிந்தனைக்காக :

1. உலக அனுபவங்களை பெறுவது யார்?

2. முக்தி கிடைப்பது யாருக்கு?

3.முற்றும் துறந்த சன்யாசிக்கும் பற்றுதலை மட்டும் துறந்த சன்யாசிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

4. பக்க வாத்தியங்கள் என்ற ஜடப்பொருள்களை கோளகங்களாகவும் வாத்தியக் காரரகளை புலன்களுக்கும் ஒப்பிடுவதன் உள்ளர்த்தம் என்ன?

5.அகம்பாவம் உண்மையல்ல என்றால் முக்தி பெறுவது யார்?

6. பரமன் என்கிற ஒருவன்தான் இவ்வுலகில் உள்ள அனைத்து பொருள்களுமாக காட்சியளிக்கிறான் என்றால் பொருள்களை நாடி அனுபவிப்பதில் என்ன தவறு?

Friday, October 8, 2010

Lesson 137: Self-knowledge alone leads to liberation (Brahma Sutra 3.4.1-17)

பாடம் 137: ஞானத்தினால் மட்டுமே முக்தி
பாடல் 426 – 442 (III.4.1-17)

கர்மகாண்டத்தை கடந்து ஞானகாண்டத்தினுள் அடியெடுத்து வைத்தவுடன் ஞானத்தினால் மட்டுமே முக்தியடைய முடியும் என்ற முக்கியமான கருத்தை வேதம் நம் முன்வைக்கிறது.

வேதாந்தத்தில் விளக்கப்பட்ட நான் பரமன் என்ற கருத்தை புரிந்துகொள்ளாமல் வேறு எவ்விதத்திலும் முக்தியடைய முடியாது என்பதை பிரம்மசூத்திரத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் மற்ற அனைத்து மதங்களையும் ஒவ்வொன்றாக மறுத்து விளக்கியபின் இந்த மூன்றாவது அத்தியாயத்தின் இறுதிபகுதி ஞானத்தினால் மட்டுமே முக்தி என்று உறுதியாக கூறுவதன் காரணங்களை வரிசைப்படுத்தும் இந்த பாடத்துடன் தொடங்குகிறது.

முதல் காரணம்: வேதவாக்கியங்கள்

ஆத்மாவை அறிந்தவன் அவலத்திற்கு ஆட்படுவதில்லை (சாந்தோக்கியம் 3.4.1), பரமனை அறிந்தவன் பரமனாகவே ஆகிறான் (முண்டகம் 3.2.9), பரமனை அறிபவன் அனைத்தையும் அடைந்தவனாகிறான் (தைத்திரியம் 2.1) போன்ற வேத வாக்கியங்கள் ஆத்மா அல்லது பரமனை பற்றிய ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பதை தெளிவாக்குகின்றன.

இரண்டாம் காரணம்: மரணத்திற்கு பின் முக்தி கிடைக்கும் விதம்

விதேஹ முக்தி என்றும் ஜீவன் முக்தி என்றும் வேதத்தில் இரு விதங்களில் முக்தியடைய முடியும் என்று குறிப்பிட்டிருந்தாலும் ஞானத்தினால் மட்டுமே முக்தி என்ற முடிவில் மாற்றமில்லை. ஏனெனில் மரணத்திற்குபின் பிரம்மதேவனிடம் நேரடையாக வேதாந்தத்தை படித்து நான் பரமன் என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே விதேஹ முக்தி கிடைக்கும் என்பதை வேதம் தெளிவாக கூறுகிறது.

மூன்றாம் காரணம்: மறுபிறவியின் தன்மை

நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணம் நாம் முன் ஜென்மங்களில் செய்த தீவினை என்று வேதம் சமாதானம் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்வது கடினமாய் இருக்கிறது. ஏனெனில் முன் பிறவிகளில் பாவம் செய்தது நான் என்பது நம் நினைவில் இல்லை. அதேபோல் இந்த பிறவியில் கர்ம காண்டத்தை பின்பற்றி நற்செயல்கள் செய்ததன் பலன் இப்பொழுதே கிடைத்தால்தான் அதை நாம் அனுபவிக்கமுடியும். இல்லையெனில் நம் உழைப்பின் பலன் நாம் அறியாத ஒருவருக்கு வரும் பிறவிகளில் கிடைக்கும். எனவே நம்மை பொறுத்தவரை ஜீவன்முக்தி ஒன்றுதான் உண்மையான முக்தி.

நான்காம் காரணம்:  கர்மகாண்டத்தின் தன்மை

செயல்களுக்கு ஒரு முடிவில்லை. எனவே எவ்வளவு செயல்கள் செய்தாலும் பூரணத்துவம் கிடைக்காது. தொடர்ந்து செயல்கள் செய்து அதன் மூலம் குறையாத இன்பத்தை அடையவே முடியாது. வேதம் கர்மம் மற்றும் ஞானம் ஆகிய இரண்டை மட்டும்தான் போதிக்கிறது. எனவே கர்மத்தால் முக்தி கிடைக்காது என்று உறுதியாக தெரிந்தால் ஞானத்தால் மட்டும்தான் முக்தி என்பது தெளிவாகும்.

ஐந்தாம் காரணம்: கர்மபலன்களின் முடிவு

செய்த வினைகளுக்கு ஏற்ற பலன்களை அனுபவிக்காமல் நம் பிறவிச்சுழல் ஒரு முடிவுக்கு வராது என்றும் பலன்களை அனுபவித்து தீர்க்க முடியாத அளவுக்கு நாம் ஒவ்வொருவரும் சஞ்சித கர்மாவை சேர்த்து வைத்துள்ளோம் என்றும் வேதம் கூறுகிறது. அதேபோல் மேற்கொண்டு கர்மங்கள் செய்யாமல் இருந்து ஆகாமி கர்மத்தை சேர்க்காமல் இருக்கவும் முடியாது என்றும் வேதம் கூறுகிறது.

சஞ்சித கர்மத்தையும் ஆகாமி கர்மத்தையும் முற்றிலும் அழிக்கும் சக்தி ஞானத்திற்கு மட்டும்தான் உண்டு என்று வேதம் கூறுவதால் ஞானத்தினால் மட்டுமே முக்தி என்பது தெளிவாகிறது.

ஆறாம் காரணம்: அறியும் ஆவல்

மனிதனின் அறிவுப்பசிக்கு ஒரு முடிவேயில்லை. இவ்வுலகம் எதற்காக படைக்கப்பட்டது, கடவுள் இருக்கின்றானா, சுவர்க்கம் இருப்பது உண்மையா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் முக்தியடைய முடியாது. வேதாந்தத்தின் சாரத்தை முறையாக படித்து புரிந்துகொண்டால் மட்டுமே இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரியவரும்.


ஏழாம் காரணம்: மரணமில்லா பெருவாழ்வு

முக்தி என்பதற்கு மரணமில்லா பெருவாழ்வு என்று ஒரு பொருள். மரணத்திற்கு பிறகு நாம் வாழமுடியாது என்பதால் மரணமடைவதற்கு முன் கிடைப்பதே முக்தியாகும். நாம் நிரந்தரமான இறை அனுபவத்திற்காக ஏங்கும் மனிதபிறவிகள் என்று நினைப்பது தவறு. மனித அனுபவத்தை சிறிதுகாலம் பெற்றுக்கொண்டிருக்கும் நிரந்தரமான தெய்வப்பிறவிகள் நாம் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை தெரிந்துகொள்வதுதான் முக்தி.

எட்டாம் காரணம்: நிலையான ஆனந்தம்

எது வருமோ அது போய்விடும். எனவே நிலையான இன்பம் என்பது அடையப்படவேண்டிய ஒன்று அல்ல. அது  அறியப்படவேண்டியது. நான் ஆனந்தசொரூபமான பரமன் என்று தெரிந்து கொள்வதால் மட்டுமே நிலையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.  

ஒன்பதாம் காரணம்: கடவுள் நம்பிக்கை ஒரு படிகட்டு

மரணத்திற்கு பின் கடவுளின் இராஜ்யத்தில் அவனுக்கு நேரடியாக தொண்டு செய்து என்னாளும் சுகித்து இருப்பது என்ற நம்பிக்கை கர்மகாண்டத்தை கடப்பதற்கு பயன்படும் ஒரு படிக்கட்டு. இடமும் காலமும் பிரிக்கமுடியாத ஒரே தத்துவம். இங்கே இல்லாத கடவுளின் இராஜ்யம் என்றும் சாசுவதமாக இருக்க வாய்ப்பேயில்லை. கடவுள் நம்பிக்கையுடன் வேதத்தைபின்பற்றி கடவுள் வேறு நான் வேறு அல்ல என்ற ஞானத்தை பெறுவதுதான் முக்தி. 

பத்தாம் காரணம்: முக்தியடைந்தோர்களின் அனுபவம்

அறியாமை இருளிலிருந்து ஞானவெளிச்சத்திற்கு வந்ததன் மூலம் மரணத்திலிருந்து விடுதலை பெற்ற முக்தியடைந்த முற்றுணர்ந்தோர் பலர் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பதுதான் இவர்களின் ஒருமித்த கருத்து.

ஞானத்தை பெறாமல் முக்தியடையலாம் என்று சொல்வற்கு  எவ்வித ஆதரமோ சாட்சியோ எள்ளளவும் இல்லை.   


முடிவுரை :

பரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடான நிலையற்ற இவ்வுலகத்தில் தற்காலிக மனித அனுபவத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் நான் நிரந்தமாக என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன் என்ற ஞானம் மட்டுமே முக்தியை கொடுக்கும்.

 பயிற்சிக்காக :

1. ஞானத்தினால் மட்டும்தான் முக்தி என்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. கணக்கில் புலி என்றும் நீ ஒரு மகாராஜா என்றும் தாய் தன் மகனை ஒரு புகழ்ச்சிக்காக உரைப்பதை எப்படி அப்படியே உண்மை என எடுத்துக்கொள்ள கூடாதோ அதுபோல் நீ பரமன் என்று கூறும் வேதவாக்கியங்களை ஒரு புகழ்ச்சியுரையாக எடுத்துகொள்ள வேண்டுமே தவிர உண்மை என எடுத்துக்கொள்ள கூடாது என்பது சரியா?

2. நான் நிலையான பரமன் மற்றும் இந்த உலகம் நிலையற்ற மாயை என்று புரிந்துகொண்ட பின்னும் முக்தி கிடைத்தமாதிரி தெரியவில்லையே?

3. இராமகிருஷ்ண பரமஹம்சர் தொட்டவுடன் விவேகானந்தருக்கு அருள் கிடைத்ததாக சொல்லப்படுவதன் அர்த்தம் என்ன?

4. ஞானம் பெறாமல் வேறு எவ்வழியில் முக்தி கிடைக்கமுடியும்?

5. ஞானத்தை பெற்றபின்னும் கூட ஜனகர், அஸ்வபதி போன்றவர்கள் தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றியதன் காரணம் என்ன?