Wednesday, July 21, 2010

Lesson 131: All rituals are valid ( பிரம்ம சூத்திரம் 3.3.55-56 )

பாடம் 131: சடங்குகளின் அவசியம்
பாடல் 414 - 415 (III.3.55-56)

காலை எழுந்தவுடன் வாசல் தெளித்து கோலம் போடவேண்டும் என்று ஆரம்பித்து வாரம் ஒரு பொழுது உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்பது வரை வழக்கில் இருந்து வரும் பல்வேறு சடங்குகளின் அவசியத்தை இந்த பாடம் விளக்குக்கிறது.

சடங்குகள் (rituals) என்றால் என்ன?

ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு அர்த்தம் தெரியாமல் பெரியவர்கள் நம் நல்லதிற்காக ஏற்படுத்தியுள்ள வழக்கம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யப்படும் அனைத்துச்செயல்களும் சடங்குகள் ஆகும். சடங்குகள் நமது நல்லதிற்காக என்பது உண்மையென்றாலும் அவை எவ்வாறு நமக்கு நன்மை பயக்கும் என்பதை பெரும்பாலோர் தெரிந்து கொள்வதில்லை. செய்யாவிட்டால் கடவுள் தண்டனை கொடுப்பார் என்ற தவறான பயத்தினால் இனம், மதம், நாடு என்ற பேதங்களை கடந்து உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆதிகாலம் முதல் இன்று வரை பல்வேறு  சடங்குகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.

சடங்குகளின் அவசியம்

இது இதனால் நடக்கும் என்ற காரண காரிய அறிவை ஆதாரமாக கொண்டு மனிதன் பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறான். பல சமயங்களில் செயல்களின் பலன்கள் அவன் எதிர்பார்த்தது போல் அமைவதில்லை. மேலும் பொருளாதார அடிப்படையில் எவ்வளவு சாதித்தாலும் நிரந்தரமான அமைதி மனதுக்கு கிடைப்பதில்லை. எனவே சடங்குகள் செய்வதன் மூலம் கடவுளர்களை திருப்தி செய்து தம் சொந்த முயற்சியால் அடையமுடியாத நிம்மதியான வாழ்வை அடையலாம் என்ற எண்ணம்தான் சடங்குகள் தொடர்வதற்கு காரணம்.  

சடங்குகளிடையே வேறுபாடு

உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு சடங்குகள் இருந்து வருகின்றன. கடவுளை காரணம் காட்டித்தான் சடங்குகள் தொடங்கப்பட்டிருந்தாலும் யாரும் நேரடியாக கடவுளின் செய்தியை படித்து சடங்குகள் செய்யும் விதத்தை தெரிந்து கொள்வதில்லை. வழிவழியாக குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்களது அறிவுக்கு எட்டியபடி சடங்குகளை தங்கள் சந்ததியருக்கு கற்றுகொடுப்பதனால் காலம் மாறும்பொழுது தொடர்ந்து சடங்குகளும் மாறிக்கொண்டேவருகின்றன.

காரணம் தெரியாமல் செய்வதுதான் சடங்கு என்பதால் எல்லோரும் ஒரேமாதிரி அவற்றை செய்யவேண்டிய அவசியமில்லை. அவரவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள வழக்கங்களை (tradition) பின்பற்றுவதுதான் சரி. தாங்கள் செய்வதைபோல் அல்லாமல் வேறுமாதிரி செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக எந்த ஒரு சடங்கையும் தவறு என்று முடிவுசெய்ய முடியாது. தனக்கு சரியாக வழிகாட்ட குடும்பத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் வேதத்தை படித்து புரிந்து கொண்டவர்களை அணுகி சடங்குகளை செய்யும் விதத்தை கற்று அறியலாம்.

எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம், என்ன உணவு உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம், உறவுகளை எவ்விதம் வளர்த்துக்கொள்ளலாம் என்பதுபோன்ற உலக விஷயங்களில் கூட எவ்வித ஒற்றுமையுமில்லாதபோது காரணம் தெரியாமல் செய்யும் சடங்குகள் வேறுபடுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

சடங்குகள் செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனப்பான்மை

இயந்திரங்கள் போல ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக சடங்குகளை பின்பற்றுபவர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை. முன்னோர்களால் விதிக்கப்பட்டது என்ற பயபக்தியுடன் செய்பவர்கள் மட்டுமே காலப்போக்கில் சடங்குகள் செய்வதன் பலனை அடைவார்கள்.

சடங்குகளின் பலன்

அறிவியலின் அடிப்படையில் சடங்குகள் செய்வதன் பலனை ஆராய்வது மிகவும் தவறு. கோலம் போடுவதனால் கால்முட்டி மடங்கி நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது என்பதும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பதும் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் இந்த காரணங்களுக்காக சடங்குகளை செய்யகூடாது. காரணம் தெரிந்துவிட்டால் சடங்குகள் சடங்குகளாக இருக்காது. ஆரோக்கியமாக இருக்கவும் வாழ்வில் வளம்பெறவும் சடங்குகளைச்சார்ந்திருக்காமல் அறிவியலின் அடிப்படையில் முயற்சிசெய்வதுதான் புத்திசாலித்தனம்.

காரணம் தெரியாமல் கடவுளுக்காக செய்யப்படும் சடங்குகள் மட்டுமே முக்தி என்னும் சரியான பலனை மக்களுக்கு கொடுக்கும்.

இருவகை மனிதர்கள்

சடங்குகள் செய்வதன் இறுதியான காரணத்தை அறிந்து கொள்ளத்தேவையான புத்திகூர்மை உள்ளவர்கள் வேதத்தை முறைப்படி ஆசிரியரிடம் பயின்றால் ஏன் சடங்குகளை செய்யவேண்டும் என்பதற்கு பதில் தெரிந்துவிடும். கேள்விகேட்டு பதிலை புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் இல்லாதவர்கள் தொடர்ந்து பயபக்தியுடன் சடங்குகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் மனம் பண்பட்டு செய்த நல்ல காரியங்களின் பலனாக நல்லாசிரியரைப்பெற்று வேதத்தை படித்து புரிந்துகொள்ளும் தகுதியை அவர்களும் பெற்றுவிடுவார்கள்.

ஆக கேள்வி கேட்கும் திறன் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் ஆகிய இருவகை மனிதர்களும் சடங்குகள் செய்வதன் இறுதிப்பலனான முக்தியை பெற்றுவிடுவார்கள். அனைத்து மக்களும் வாழ்வில் சரியான பாதையில் பயணிக்க வழிவகுக்கும்வகையில்தான் வேதம் சடங்குகளை ஏற்படுத்தியுள்ளது.

சடங்குகள் சமயத்தின் அடிப்படையில் உண்டாக்கப்பட்டவை. எனவே அதற்கு உண்டான விளக்கங்களை அறிவியலின் அடிப்படையில் தேடக்கூடாது. ஒன்றா சடங்குகளை கேள்விகள் கேட்காமல் பின்பற்றவேண்டும். இல்லையெனில் வேதத்தை படித்து சடங்குகள் செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். வேதம் இரு பகுதிகள் கொண்டது. வேத பூர்வம் என்கிற முதல் பாகம் கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டிய சடங்குகளை விவரிக்கும் பகுதி. வேதத்தின் இரண்டாம் பகுதி உபநிஷதங்களை உள்ளடக்கிய வேதாந்தம். இது ‘முடிவான அறிவு’ அல்லது ‘அறிவின் முடிவு’ ஆகிய இருவேறு பொருள்களை கொண்டது. கேள்வி கேட்டு பதிலை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனுடைய மக்கள் படிக்கவேண்டிய பகுதி இந்த வேதாந்தம் மட்டும்தான்.

வேதாந்தத்தை படிக்காமல் இருப்பவர்கள் சடங்குகளை பின்பற்றுவது மிக அவசியம். முறைப்படி வேதாந்தத்தை ஆசிரியரிடம் பயிலுபவர்கள் எவ்வித சடங்குகளையும் செய்யாமல் இருப்பதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் படித்து முடித்தவுடன் சடங்குகளின் அவசியத்தை தெரிந்து கொண்டு அவர்கள் அனைத்தையும் முறையாக பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

அர்த்தமுள்ள சடங்குகள்

தர்மம் தலைகாக்கும் என்ற தொடருக்கு முடிந்தவரை யாரையும் துன்புறுத்தாமல் மற்றவர்களுக்கு நன்மை தரும் செயல்களை செய்பவர்கள், தங்கள் புண்ணியத்தின் பலனாக சரியான ஆசிரியரை பெற்று மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள் என்பது பொருள். மக்களை தர்மமான முறையில் வாழத்தூண்டுவதால் சடங்குகள் அர்த்தமுள்ளவை. குடும்ப வழக்கில் உள்ள அனைத்து சடங்குகளையும் முறையாக செய்பவர்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கடவுள் யார் என்று காட்டிகொடுத்து முக்தியடையச்செய்ய சடங்குகள் உதவுகின்றன.

சடங்குகள் என்பது உடலினால் செய்யப்படும் உபாசனயோகம். மனதில் கடவுளின் நாமத்தையோ புகழையோ ஜெபிப்பது உபாசனயோகம். அவ்வாறு மனதில் தொடர்ந்து கடவுளை உபாசனை செய்யும் திறன் இல்லாதவர்களுக்கு சடங்குகள்  கடவுளிடம் பக்திசெலுத்த துணை செய்கின்றன.

இராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு நாட்டுப்பற்று அவசியம். நாட்டிடம் பற்றை வளர்த்துக்கொள்ள அவர்களும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்துதல் என்பது போன்ற பல சடங்குகளை தொடர்ந்து செய்கிறார்கள். இப்படித்தான் நிற்க வேண்டும் அல்லது நடக்க வேண்டும் என்பது போன்ற இராணுவத்தின் சடங்குகளை அவர்கள் கடைபிடிப்பதற்கு அறிவியலின் அடிப்படையில் எவ்வித காரணமும் கிடையாது. உடல் மண்ணுக்கு உயிர் நாட்டுக்கு என்று வாயளவில் அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை இது போன்ற சடங்குகளை பின்பற்றி மனதில் ஆழமாக பதியவைத்துக்கொள்கிறார்கள்.

இதேபோல்தான் மனதில் கடவுள் பக்தியை வளர்த்துக்கொள்ள உடலளவில் சடங்குகள் செய்வது பலருக்கு மிக அவசியமாக இருக்கிறது. எனவே சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்று நினைப்பதோ அவற்றை பின்பற்றுபவர்களை ஏளனமாக பார்ப்பதோ முட்டாள்தனம். குடியரசுதினத்தை கொண்டாடுவதை விட கடவுளின் பெயரால் வழக்கத்தில் இருந்து வரும் ஆடி அமாவாசை, தைப்பூசம், இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களை கொண்டாடுவது மிக அவசியமானது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவப்பது, திருமண ஆண்டுநிறைவை நினைவுபடுத்த ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்துக்கொள்வது என்பது போன்ற சடங்குகள் மனிதர்களுக்கிடையே உள்ள உறவை பலபடுத்த உதவுவது போல பொங்கல், தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் பின்பற்றும் சடங்குகள் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை பலபடுத்த உதவுகின்றன.

முடிவுரை :

எப்பொழுதும் பணம், புகழ், பதவி என்று வெளியுலகில் உழைத்துகொண்டிருக்கும் மனிதனுக்கு கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்துவது சடங்குகள் ஆகும். சடங்குகளை செய்வதனால் வெளியுலகில் சஞ்சரிக்கும் மனது உள்நோக்கி திரும்பும். முதலில் உடலளவில் கடவுளுக்காக சடங்குகள் செய்ய ஆரம்பித்து நாளடைவில் மனதளவில் உபாசன யோகம் செய்யும் தகுதியை அடைந்து கடைசியாக வேதத்தை படித்து கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை சடங்குகளை பின்பற்றுவதன் மூலம் மனிதன் பெறுகிறான்.

எனவே முக்தியடைய முதல் படியாக சடங்குகளை பின்பற்றுவது, கேள்விகள் கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களுக்கு அவசியமாகிறது. முதல்படியை கடந்து முடிவான முக்தியை அடைந்தவர்களும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டும்பொருட்டு சடங்குகளை பின்பற்றுவார்கள். எனவேதான் எவ்வளவுதான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னும்கூட சடங்குகள் தொடர்ந்து உலகில்  பரவலாக வழக்கில் இருந்து வருகின்றன.

பயிற்சிக்காக :

1. சடங்குகள் என்றால் என்ன?

2. சடங்குகளின் அவசியம் என்ன?

3. சரியான முறையில் சடங்குகளை பின்பற்றுவது எப்படி?

4. சடங்குகள் செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனோபாவம் என்ன?

5. சடங்குகளின் இறுதிப்பயன் என்ன?

6. இருவகை மனிதர்கள் யார் யார்?

சுயசிந்தனைக்காக :

1. வேதத்தில் கூறியபடியல்லாமல் வேறுமாதிரி சடங்குகளை செய்வதால் பாவம் ஏற்படுமா?

2. சடங்குகளை பின்பற்றாதவர்களின் நிலை என்ன?

3. தர்மம் எவ்வாறு தலையைக்காக்கும்?

4. வேதாந்தம் என்ற சொல்லின் இருபொருள்களுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன?

Thursday, July 1, 2010

Lesson 130: Atman is an entity distinct from the body ( பிரம்ம சூத்திரம் 3.3.53-54 )

பாடம் 130: ஆத்மா உடல் அல்ல
பாடல் 412 - 413 (III.3.53-54)

ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டது என்ற உண்மையை உணர மனிதன் பயணிக்கும் பாதையை நான்காக பிரித்து இந்த பாடம் விளக்கம் தருகிறது.

முதல் பகுதி : சூத்திரன்

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் பிறக்கும்பொழுது சூத்திரர்களாகத்தான் பிறக்கிறார்கள். மனம் போனபடி செயல்படுவது, வாய்க்கு வந்ததை உளறுவது, கைக்கு கிடைத்ததையெல்லாம் வாயில் போட்டு சுவைப்பது, எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்தபடி வாழ்வது, எது சரி எது தவறு என்று ஆராயாமல் யார் எது சொன்னாலும் நம்பிவிடுவது, எதிர்காலத்தை பற்றி எவ்வித சிந்தனையுமின்றி தற்பொழுதைய சூழலை பொறுத்து சிரிப்பது அல்லது அழுவது போன்றவை சூத்திரர்களின் வாழ்க்கை முறை. அனைத்து குழந்தைகளும் சூத்திரர்களாகத்தான் வாழத்துவங்குவர். ஆனால் இது நல்லதல்ல. எனவேதான் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நல்வளர்ச்சிக்கும் தாய் பொறுப்பேற்றுக்கொள்கிறாள். குழந்தையின் அறிவற்ற செயல்பாடுகள் அதை பாதிக்காமல் பேணுகிறாள். ஆபத்து தரக்கூடிய பொருள்களை குழந்தை அணுகாமல் அதை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுகிறாள். 

மனிதர்கள் இதுபோல் சூத்திரர்களாக வாழ்வதை ஒரு குறிப்பிட்ட வயது வரை வேதம் அனுமதிக்கிறது. குழந்தை வளர்ந்து தாயின் சொல்லுக்கு கட்டுப்பட மறுக்கும்பொழுது இந்த முதல் கட்டம் முடிவடைகிறது. ஆயினும் சுயமாக சிந்தித்து செயல்படும் அளவுக்கு அதற்கு அறிவு வளர்ந்திருக்காது.  எனவே தொடர்ந்து சூத்திரனாக வாழாமல் குழந்தையை கட்டுபடுத்தும் பொறுப்பு  தந்தைக்கு மாற்றப்படுகிறது.

இரண்டாம் பிறவி: அடிமை

தாயின் பொறுப்பிலிருந்து தந்தையின் கட்டுப்பாட்டுக்கு மாற்றபட்டதும் ஏன், எதற்காக என்று கேள்விகள் எதுவும் கேட்காமல் சொன்னதை செய்யும் அடிமையாக இந்த இரண்டாம் கட்டத்தில் மனிதன் வாழ ஆரம்பிக்கிறான். மனம் போனபடி வாழாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வேதம் விதித்துள்ள விதிகளின் அடிப்படையில் உருவான சம்பிரதாயங்களும் சமூக பழக்க வழக்கங்களும் இதுபோல்தான் உடை அணியவேண்டும், இந்த நேரத்தில் இதைத்தான் சாப்பிடவேண்டும், விளையாடுவதற்கு இவ்வளவு நேரம், படிப்பதற்கு மற்ற நேரம் என்று மனிதனின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன.

பக்கத்துவீட்டு பையனுடன் பேசக்கூடாது என்று தந்தை இட்ட கட்டளையை ஏன் என்று எதிர்த்து கேட்க பொதுவாக பெண்ணுக்கு தைரியம் இருக்காது. அப்படியே கேட்டாலும் அது அப்படித்தான் என்பதற்கு மேல் பதில் சொல்லும் திறன் தந்தைக்கு இருக்காது. இது சரியான கட்டளை என்று அறிவுபூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டாலும் அதை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனும் புத்திகூர்மையும் பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்காது.

சுயமாக சிந்தித்து தமக்கு எது நல்லது எது கெட்டது என்று ஆய்ந்து அறியும் திறன் வரும் வரை இந்த இரண்டாம் கட்டத்தில் பெற்றோருக்கு அடிமையாகவே பிள்ளைகள் வளரவேண்டும். தங்களுக்கு இன்பமான வாழ்வை எப்படி அமைத்துக்கொள்வது என்பது தெரியாவிட்டாலும்கூட சமைய நம்பிக்கையுடன் வேத விதிகளை பின்பற்றும் கலாச்சாரத்தின்படி வாழ்பவர்கள் தங்களை அறியாமல் சரியான பாதையில் பயணம் செய்வார்கள். வேதம் படித்த ஆசிரியர்களை சரணடைந்து  முறையாக படித்தால் மட்டுமே தர்மமாகவும்  ஒழுக்கமாகவும் ஏன் வாழவேண்டும் என்ற கேள்விக்கு பதில் தெரியவரும்.

மூன்றாம் பகுதி: மாணவன்

வாலிபபருவத்தை அடைந்த பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு அடிமையாக வாழ்வது பிடிப்பதில்லை. சுதந்திரபறவைகளாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக யாரையும் சார்ந்திருக்காமல் வாழ தேவையான பணம் சம்பாதிப்பது எப்படி என்பதில் அவர்கள் கவனத்தை செலுத்துகிறார்கள். பெற்றோர்களும் ‘இப்பொழுது கஷ்டபட்டு நன்றாக படித்தால்தான் பின்னால் சந்தோஷமாக வாழமுடியும்’ என்று பிள்ளைகளின் விடுதலை முயற்சிக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள்.

பணத்திற்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் எல்லோரும் பணம் சம்பாதிப்பதற்காகவே படிக்கிறார்கள். வேதத்தை படித்தால் மட்டுமே இன்பமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள முடியும். எப்பொழுதும் இன்பமாக வாழ்வதற்கு வேறு வழியேயில்லை. ஆயினும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது தெரியாத காரணத்தால் தாங்கள் செய்த அதே தவறை தங்கள் பிள்ளைகளையும் செய்யத்தூண்டி அவர்களையும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக வாழ வழிகோலுகிறார்கள்.

மனிதவாழ்வின் இந்த மூன்றாம் பகுதியான இந்த மாணவப்பகுதி மிக முக்கியமானது. பணம், புகழ், பதவி போன்றவை வாழ்வின் மிக முக்கியமான அங்கங்கள். இவற்றை சம்பாதிக்க உதவும் கல்வியை கற்று தேறுவது அனைவருக்கும் அவசியம். வேதம் படிப்பதால் பணம் கிடைக்காது. ஆனால் இன்பமாக வாழவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளலாம்.

ஏழையாக என்றும் இன்பத்துடன் வாழ்வதா அல்லது பணக்காரனாக இன்ப துன்பங்கள் கலந்த வாழ்க்கை வாழ்வதா என்று ஆலோசிக்க அவசியமில்லை. தொழில் கல்வி மற்றும் வேதபாடம் ஆகிய இரண்டையும் கற்கலாம்.

செல்வசெழிப்புடன் என்றும் இன்பமாகவாழும் வழிமுறைகளையும் கற்றுத்தேறும் வாய்ப்பு இந்த மாணவப்பருவத்தில் மனிதர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலோர் பணம் கிடைத்தால் இன்பம் கிடைக்கும் என்ற தவறான அறிவுடன் தொழில் கல்வியை மட்டும் கற்று பணத்தில் மட்டும் குறியாய் இருக்கிறார்கள்.

பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தொடர்ந்து பெற்றோரின் சொல்படி நடக்க அவசியமில்லாததால் ‘விடுதலை விடுதலை’ என்று மனதுக்குள் முழங்கிகொண்டு பழையபடி சூத்திரர்களாக வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள்.

மக்களின் அறிவுத்திறனும் உழைப்புத்திறனும் ஒருவருக்கொருவர் வெகுவாக மாறுகிறது. எனவே அவரவர்களின் வாழ்க்கைதரமும் மாறுபடுகிறது. இன்றைய பொழுதை எப்படி இன்பமாக கழிப்பது என்பது கடைநிலை உழியனின் குறிக்கோளாக இருக்கிறது. மேற்படிப்பு படித்து உயர்ந்த உத்தியோகத்தில் நிறைய பணம் சம்பாதிப்பவர்கள் கடைசிவரை இன்பமாக இருப்பது எப்படி என்று திட்டமிடுகிறார்கள். ஆயினும் இவர்கள் அனைவரும் தங்கள் உடலும் மனமும் மட்டும்தான் ‘நான்’ என்ற நினைவில் மனம்போனபடி வாழும் சூத்திரர்களே.

நான் என்ற சொல்லுக்கு ஆத்மா என்பது பொருள் என்றும் அது தங்கள் உடல் மற்றும் மனதிலிருந்து வேறுபட்டது என்றும் உணர்ந்திருப்பவர்கள் மரணத்திற்கு பின் தனக்கு என்ன நேரும் என்பதிலும் கவனத்தை செலுத்துகிறார்கள். இவர்கள் மதகுருக்களை சரணடைந்து வேதத்தின் முற்பகுதியில் கூறப்பட்ட சடங்குகளை பயபக்தியுடன் செய்கிறார்கள். ஏன், எதற்கு என்ற கேள்விகள் கேட்காமல் மதகோட்பாடுகளை பின்பற்றும் இவர்கள் அனைவரும் அடிமைகளே.

சூத்திரர்களாக வாழ்வதைவிட இது போல் அடிமைகளாக வாழ்வது சிறந்தது. ஆயினும் சுதந்திரமில்லாமல் ஏன், எதற்காக என்று தெரியாமல் தொடர்ந்து அடிமைகளாக வாழ்வது அறிவுடையோருக்கு ஏற்புடையதல்ல.

இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு. அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு. இதுதான் அனைத்து மனிதர்களின் வாழ்க்கையின் குறிக்கோள். சூத்திரர்களாக நிறையபணம் சம்பாதித்து வாழ்பவர்களால் அவ்வப்பொழுது வாழ்வில் ஏற்படும் துன்பங்களை தவிர்க்க முடிவதில்லை. மதச்சடங்குகளை முறையாக பின்பற்றுபவர்களாக வாழ்பவர்களாலும் என்றும் இன்பமாக வாழ முடிவதில்லை.  இந்த உண்மைகளை உணர்ந்தவர்கள் தொழில்கல்வி கொடுக்கும் பணம் மட்டும் போதாது என்று முடிவெடுத்து வேதம் பயில ஆரம்பிக்கிறார்கள்.

எப்பொழுது வேதம் படித்து முடிக்கிறார்களோ அப்பொழுது இந்த மாணவப்பருவத்தை கடந்து செல்ல இவர்கள் தகுதி பெறுகிறார்கள்.

நான்காம் பகுதி: பிராமணன்

மனம் போனபடி சூத்திரனாக வாழாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வேதம் வகுத்த சடங்குகளை அடிமையாக பின்பற்றாமல் என்றும் இன்பமாக வாழும் வழியை அறிந்து ஒழுக்கமாக வாழ்பவன் பிராமணன். நிலையில்லாத உடலும் மனதும் நான் அல்ல என்றும் நான் ஆத்மா என்றும் அறிந்து கொண்டு எவ்வித கட்டுப்பாடும் இல்லாத சுதந்திரத்துடனுடனும் ஒழுக்க நெறியுடனும் துன்பகலப்பில்லாத இன்பவாழ்வை வாழத்துவங்குபவன் பிராமணன்.

இன்பத்தின் இருப்பிடம் எது என்று இவனுக்கு தெளிவாகத்தெரிந்திருப்பதால் சுற்றி உள்ள மனிதர்கள் அனைவரும் தவறான இடத்தில் இன்பத்தை தேடுவதால் மனம் மாறி அவர்களுடன் சேர்ந்து தேடும் அவசியம் இவனுக்கில்லை. அதே சமயம் தொடர்ந்து பணம் சம்பாதித்து தர்மமாக செல்வழித்து உல்லாசமாக வாழவும் அவன் தயங்குவதில்லை.
வேதம் கூறும் சடங்குகளை செய்யவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்காக இவன் அவற்றை செய்யலாம்.

முடிவுரை :

ஆத்மா உடலிலிருந்து வேறானது என்பதை உணராதவர்கள் மனம் போனபடி வாழ்வதுதான் இன்பம் என்று நினைத்து அவ்வாறு வாழ தேவையான பணம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள். எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் மனத்தின் தேவைகளை  இவர்களால் பூர்த்தி செய்யவே முடிவதில்லை. ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் அறிவுத்திறன் குறைந்தவர்கள் கேளிக்கை விடுதி, போதை மருந்து, ஓரினச்சேர்க்கை, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற தவறான வழிகளில் இன்பத்தை தேடத்துவங்குவர். இதனால் இவர்களின் வாழ்வே நரகமாகிவிடும். இதுபோன்றவர்களுக்கு கடவுளைத்தொழவோ வேதத்தை கேட்கவோ தகுதியில்லை. சமூக கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நீதி நெறிகளை பின்பற்றி ஒழுக்கமாக வாழ ஆரம்பிக்கும்வரை இவர்களுக்கு விடிவுகாலம் இல்லை.

அறிவுத்திறன் உள்ளவர்கள், ஏன் எவ்வளவோ முயற்சி செய்தும் மனம் நிறைவடைவதில்லை என்பதை ஆராயத்துவங்குவார்கள். பணம் இன்பத்தை கொடுக்கும், உலகத்தை சீர்திருத்திவிட்டால் எல்லோரும் இன்பமாக இருக்கலாம் என்பது போன்ற தவறான கருத்துக்களுடன் சூத்திரர்களாக வாழ்பவர்களின் கவனத்தை திருப்பவே பல்வேறு சடங்குகளை செய்ய வேண்டும் என்று வேதம் விதித்துள்ளது. இவற்றை பின்பற்றி உடல் ஆத்மா அல்ல என்பதையும் இன்பத்தின் இருப்பிடத்தையும் ஆசிரியரின் துணைபெற்று அறிந்து கொள்வார்கள். அதன் பின் இவர்கள் மனம் போனபடி சூத்திரர்களாக வாழாமல் தர்மத்தை தன் இயல்பாக கொண்டு பிராமணனாக வாழ்வார்கள்.

இவ்வாறு வாழ்பவர்களுக்கு மட்டுமே முக்தி கிடைக்கும்.


பயிற்சிக்காக :

1. மனித வாழ்வை நான்காக வேதம் பிரித்துள்ளதின் நோக்கம் என்ன?

2. இந்த நான்கு பிரிவுகள் யாவை?

3. மதச்சடங்குகளை பின்பற்றவேண்டிய அவசியம் என்ன?

4. மாணவனாக கற்க வேண்டிய இருவகை கல்விகள் யாவை? அவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. மேற்கத்திய நாட்டு மக்களில் பெரும்பாலோர் சூத்திரர்களாகவும் கீழ் நாட்டு மக்களில் பலர் மதச்சடங்குகளின் அடிமைகளாகவும் வாழ்வதன் காரணம் என்ன?

2. பிராமணனைத்தவிர வேறுயாருக்கும் முக்திகிடைக்காது என்பது உண்மையா?

3. வாலிபபருவத்தில் ஆண்களும் பெண்களும் எவ்விதகட்டுப்பாடும் இல்லாமல் ஒருவருடன் ஒருவர் பழகுவது ஏன் தவறு?

4. நான் ஆத்மா என்று தெரிந்துகொள்வதால் என்ன பலன்?