Sunday, April 28, 2013

Lesson 185:List of differences in libarated souls (Brahmasutra 4.4.1-3)


பாடம் 185: ஞானியின் தன்மைகள்
பாடல்: 534-536 (IV.4.1-3)

ஞானம் ஏற்பட்டவுடன் தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் எதுவும் தோன்றாது. ஆனாலும் மற்றவர்களை ஒப்பிடும்போது ஞானி வேறுபட்டிருப்பான். ஞானியின் இந்த தனித்தன்மைகளின் பட்டியலை இந்தப்பாடம் தருகிறது.

சாந்தோக்கிய உபநிஷத மந்திரம் (7.12.3) ‘இந்த மேலான ஞானத்தை அடைந்த பின் இந்த உடலை உதறிவிட்டு தன் சுய உருவான அமைதியும் ஆனந்தத்தையும் அவன் வெளிப்படுத்துவான்என்று கூறுகிறது. இந்த சுய உருவத்தின் முழுமையான வர்ணணைகளை பகவத்கீதையின் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குத் தந்துள்ளார்.

ஞானம் என்பது மனதில் ஏற்படுவது. வெளித்தோற்றத்தை வைத்து மனதின் நிலையை ஓரளவுதான் அறிய முடியுமே தவிர தீர்மானமாகச் சொல்லமுடியாது. மேலும் ஞானம் பெறாத ஒரு சிலரின் செயலும் ஞானியின் செயல்பாடுகளை ஒத்து இருக்கலாம். எனவே  ஞானி தனது தனித்தன்மைகளை வெளிப்படுத்தினாலும் மற்றவர்களால் அவனை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

ஞானிகள் அனைவருக்கும் மாணவர்களை சரியான வழியில் வழிநடத்தும் திறன் இருக்காது. ஞானம் பெறாதவர்கள் கூட நல்ல ஆசிரியர்களாக இருக்கலாம். எனவே,  மற்றவர்கள் ஞானியா இல்லையா என்பதை அறிந்து கொள்வதால் நமக்கு எந்தப் பயனும் இல்லை
நான் ஞானம் பெறவேண்டும்என்ற முயற்சிக்கு இந்த வர்ணணைகள் ஒரு தூண்டுகோலாக அமையும். மேலும் ஞானம் பெற்றபின் அதன் முழுப்பயன்களையும் அடைந்துள்ளோமா என்ற தற்சோதனைக்கும் கீதையில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியல் உதவி செய்யும்.

2.55 எவன் ஒருவன் மனதின் ஆசைகளினால் உந்தப்பட்ட அனைத்து செயல்களையும் துறந்து தன்னிறைவுடன் இருக்கின்றானோ அவனே ஞானத்தில் நிலை பெற்றவன்.

2.56 புலன் இன்பங்களுக்காக ஏங்காமல், பிரச்சனைகளினால் கலக்கம் அடையாமல், பற்று, பயம், கோபம் முதலியவற்றில் இருந்து விடுபட்டு இருப்பவன் ஞானி.

2.57 இன்பத்தில் துள்ளாமலும் துன்பத்தில் துவளாமலும் அவன் ஞானத்தில் நிலை பெற்று இருப்பான்.

2.58   அபாயம் ஏற்பட்டால் ஆமை தனது அவையங்களை உள்ளிழுத்து கொள்வது போல தேவையானால் தன் ஐந்து புலன்களையும் அடக்கிக்கொள்ளும் சக்திபடைத்தவன் உண்மையான ஞானத்தில் நிலைபெற்றவன்.

2.59 புலன் இன்பங்களை அவன் தொடர்ந்து அனுபவித்தாலும் இன்பமாக இருக்க உலகைச்சார்ந்து இல்லாமல் தன் சுய உருவில் நிலைபெற்று இருப்பான்.

2.60-61 புலன் இன்பங்களின் கவர்ச்சி, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துடன் முயலும் விவேகியின் புத்தியைக் கூட கடத்தி செல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை.  மனதைநான் பரமன்என்ற அறிவில் நிலைபெறச் செய்வதன் மூலம் புலன்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துபவன், திடமான ஞானம் உடையவன்.

2.64-65 தவிர்க்க முடியாத சூழ்நிலையில் போகப்பொருள்களை அனுபவித்தாலும் விருப்பு-வெறுப்புகளின் பிடியில் அகப்படாமல், நிலையான அமைதியை அவன் அனுபவிப்பான். அந்த அமைதியில் அனைத்து துன்பங்களும் அழிந்துபோகும். இத்தகைய மனிதன் உறுதியான ஞானம் உடையவன் ஆவான்.

2.69  ‘நான் நிரந்தரமானவன்என்றும் இந்த உலகம் என்னை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறதுஎன்றும் அறிபவன் ஞானி.

2.70 பல நதிகள் தன்னிடம் வந்து கலந்தாலும் கலக்கம் அடையாமல் நிலையாக இருக்கும் நிரம்பிய கடல் போல, பல்வேறு போகப்பொருள்களை அனுபவிக்கும் பொழுதும் அவற்றால் பாதிக்கப்படாமல் தன்நிறைவுடன் இருப்பவன் அவன்.  பொருள்களை தேடி அலையாமல் என்றும் நிம்மதியாக வாழ்பவன் அவன்.

2.71 ஆசைகள் எதுவும் இல்லாமல், ‘நான் செயல்களைச் செய்பவன்’ என்ற எண்ணத்தையும், ‘அனுபவிக்கும் பொருள்கள் என்னுடையது’ என்ற எண்ணத்தையும் துறந்த ஞானி நிம்மதியாக வாழ்வான்.

2.72 இதுதான் ‘நான் பரமன்’ என்ற அறிவில் நிலைபெற்றவன் வாழும் விதம். இந்த நிலையை அடைந்தபின்னர் அவனுக்கு தான் உலகில் இருந்து வேறுபட்ட ஒரு தனி மனிதன் என்ற எண்ணம் இருக்காது. எனவே அவன் பிறப்பு-இறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலை பெறுகிறான்.   

4.18 செயல்களில் செயலற்ற தன்மையையும், செயலற்றவற்றில் செயலையும் பார்க்கும் திறன் உள்ளவன் ஞானி. அவன் எந்தச் செயல்களைச் செய்தாலும் அவற்றால் பந்தப்பட மாட்டான்.

4.20 செயலின் பலனில் எவ்வித பற்றும் இன்றி, நிலைத்த திருப்தி உடையவனாக, இன்பத்துக்காக எதையும் சாராதவனாக இருக்கின்ற ஞானி, எப்போதும் ஏதாவது செயல்கள் செய்துகொண்டு இருந்தாலும் எந்தச் செயலையும் செய்தவன் ஆகமாட்டான். 

4.22 எதேச்சையாக கிடைத்ததில் மகிழ்பவன், இருமைகளைக் கடந்தவன், பொறாமை இல்லாதவன், வெற்றி தோல்விகளில் சமமாக இருப்பவன்இத்தகையவன் செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றால் கட்டுப்படுவதில்லை.

12.13-14 எவன் ஒருவன் பொறாமை இன்றி, அனைத்து உயிரினங்களிடமும் கருணையுடன் பழகுகிறானோ அவன் ஞானி. அகங்காரம் போலியானது என்பதை அவன் அறிவதால் அவன் தன்னை யாருக்கும் முதலாளியாக கருதுவதில்லை.

12.15  எவரையும் துன்புறுத்தாமல், எதிர்காலத்தைப்பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், நிலையான இன்பத்துடன் இருப்பவன் ஞானி.

12.16 எதிர்காலத்தில் ஏதேனும் சாதனைகள் நிகழ்த்தவேண்டும் என்ற குறிக்கோள் ஏதும் இன்றி, செய்யும் செயல்களுக்கு விரும்பிய பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்றி, துன்பங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலை அடைந்தவன் ஞானி.

12.17 ஞானிக்கு தன் மனம் எப்போதும் இன்ப உணர்விலேயே மூழ்கி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்காது. அதேபோல, துன்ப உணர்வுகளும் நிரந்தரம் அல்ல என்று அவன் அறிவதால் சோகத்தில் புலம்பமாட்டான். புனித காரியங்களை செய்ய வேண்டிய கட்டாயம் அவனுக்கு இல்லை. தவறான காரியங்களை அவன் செய்ய நேரிட்டால் அதுகுறித்த வருத்தமும் அவனுக்கு கிடையாது.

12.18-19 தானே அனைத்து உருவங்களின் ஆதாரம் என்பதை அறிந்த காரணத்தால் நண்பர்களையும் எதிரிகளையும் ஞானி சமமாகப் பார்ப்பான். ஏற்ற இறக்கங்கள் உலகின் இயல்பு என்பதை அறிந்த காரணத்தால் அவன் புகழ்-இகழ், வெயில்-குளிர்ச்சி, இன்பம்-துன்பம், மதிப்பு-அவமானம் ஆகிய இருமைகளின் இடையே சமநிலையில் வாழ்வான். எதனாலும் பாதிக்கப்படாமல், எப்போதும் அமைதியாக,  கிடைத்ததில் திருப்தி அடைந்து, தனக்கு என்று சொத்துக்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை சிறிதும் இல்லாமல், ‘நான் பரமன்என்ற ஞானத்தில் நிலைபெற்று உடலும் மனதும் நிகழ்த்தும் செயல் என்ற நாடகத்தில் பங்கேற்காமல் வெறும் சாட்சியாக அதைப் பார்த்துக்கொண்டு இருப்பவன் ஞானி.

12.20 உலகத்தின் தொடர்ந்த இயக்கம் இறைவனின் நடனம் என்பதை அறிந்த ஞானி, நாட்டியத்தில் தனது பங்கை முழுஈடுபாட்டுடன் செய்வான். நடனமே ஆனந்தத்தின் வெளிப்பாடு என்பதால் அனைத்து மாற்றங்களின் நடுவிலும் ஆனந்தமாக இருப்பான்.     

14.22-25 இன்பம், பற்றுதல், குழப்பம் ஆகியவை இருக்கும்போது அவற்றை வெறுக்காமலும் இல்லாதபோது அவற்றுக்காக ஏங்காமலும் இருப்பவன் ஞானி. தன் உடல், மனம் உட்பட்ட உலகம் தன் வசம் இன்றி தொடர்ந்து மாறுபடும் என்பதை அறிந்ததால் அந்த மாற்றங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் இருப்பவன் அவன். புலன்களும் அவைகளால் அனுபவிக்கப்படும் பொருள்களும் இந்த தொடர்ந்த மாற்றத்தின் ஒரு பகுதி என்பதால் அவன் எதன்மீதும் அக்கறை இல்லாதவன் போல் இருப்பான். தான் இந்த மாற்றங்களுக்கு ஆதாரமாக மட்டும் இருப்பவன் என்று அறிந்த காரணத்தால் அவன் ஒரு குறிப்பிட்ட பலனைக் கருதி செயல் செய்வதில்லை.

14.26 ‘நான் பரமன்என்ற அறிவில் நிலைத்து நின்ற போதிலும் தனது உடலும் மனமும் மாயாசக்தியின் வெளிப்பாடுகள் என்று அறிந்த காரணத்தால், ஞானி தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பான். அவன் செயல்களின் பலனால் பாதிக்கப்படுவதில்லை.

14.27 மாற்றத்துக்கும் அழிவுக்கும் உட்படாமல் என்றும் இருக்கும் உண்மையான ஆனந்தம் நான் என்ற அறிவில் ஞானி நிலைத்து நிற்பதால் அவன் பரமனாகவே மாறிவிடுவான்

முடிவுரை :

ஞானியின் சுய உருவத்துக்கும் மற்றவர்களின் சுய உருவத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. ‘நான் பரமன்என்ற வேதவாக்கியம் அனைவருக்கும் பொருந்தும். இருப்பது ஒரே பரமன். அந்த பரமன்தான் உலகமாகவும் அதில் வாழும் பல்வேறு உயிரின்ங்களாகவும் காட்சி அளிக்கிறான். எனவே ஞானியின் சுய உருவம் தனிப்பட்ட தன்மை உடையது அல்ல.

முக்தி என்பது புதிதாகப் பெறப்பட்ட ஒரு நிலை அல்ல. ‘இப்போது நான் பிறப்பு-இறப்பு என்ற சுழலில் சிக்கி துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். வேதம் படித்தால் இந்த துன்பத்தில் இருந்து விடுதலை பெற்று முக்தி அடைவேன்என்ற எதிர்பார்ப்பு முக்திவிழைவோரிடம் இருக்கும். ‘முக்தி அடைந்த பின்னும் நீ மாறாமல் அப்படியேதான் இருப்பாய்என்ற உண்மையை பொதுவாக ஆசிரியர் சொல்வதில்லை. ஏனெனில் முக்தி என்பது ஒரு புதிய நிலை அல்ல என்ற உண்மையை முக்தி அடைந்த பின்தான் உணர்ந்துகொள்ள முடியும்.

எது அடையப்பட்டதோ அது நிலையானது அல்ல. இப்போது இல்லாத முக்தி எதிர்காலத்தில் கிடைப்பதாக இருந்தால் அது நிச்சயம் காலத்தைக் கடந்ததாக இருக்க முடியாது. எனவே, ‘முக்தியை அடைவதுஎன்று வழக்கத்தில் கூறினாலும் எப்போதும் முக்தியடைந்தவனாக இருப்பவன்தான் நான் என்பதை அறிந்து கொள்வதே முக்தி.

நான் பரமன்என்பதை அறிந்து கொண்டவர்கள் முக்தி அடைந்தவர்கள். இதை அறியாதவர்கள் பற்றுடையோர்.  எனவே, மற்றவர்களை ஒப்பிடும்போது ஞானிக்குதான் யார்என்பது பற்றிய சரியான அறிவு இருக்கிறது என்பதுதான் ஞானிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள ஒரே வேற்றுமை.

உன்னை அறிந்தால் நீ உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்என்ற பாடல் வரிகளின் சரியான பொருளை மக்கள் உணர்வதில்லை.

நான் பரமன்என்பது ஞானியின் கற்பனை அல்ல. அதுதான் உண்மை என்று அறிவியல் தெள்ளத்தெளிவாக நிரூபித்து உள்ளது. ஆனால் முறையாக வேதம் படித்தவர்களால் மட்டுமே இந்த அறிவை அடைய முடியும்.

இந்த அறிவை அடைந்த பின்னர் தான் இந்த உடல் என்ற எண்ணம் மறைந்து விடுவதால் பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியில் இருந்து அவன் விடுபடுகிறான். வாழ்வில் துன்பம் என்பது உடலுக்கும் மனதுக்கும் மட்டுமே ஏற்படுவது. எனவேதான் தன்னை உடல் என்று நினைப்பவர்களால் துன்பத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற முடியாது.

கயிற்றை பாம்பாக பார்த்து பயப்படுவது துன்பம். பரமனை உடலாக நினைத்து வாழ்வது துன்பம். கயிறு எப்போதும் கயிறாகத்தான் இருக்கிறது. நான் எப்போதும் பரமனாகத்தான் இருக்கிறேன். கயிற்றுக்கும் பாம்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பரமனுக்கும் இந்த வாழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் பாம்பு என்ற ஒன்றை பார்ப்பதற்கு கயிறு ஆதாரமாக இருக்கிறது. உலகமும் அதில் உயிரினங்களும் இருப்பதாக தென்படுவதற்கு பரமன்தான் ஆதாரம். உலகம் இருப்பதாக காட்சி அளிக்கும் மாயை என்பதை அணு ஆராய்ச்சி அறிஞர்கள் அறிவர். இந்த பொய்யான தோற்றத்துக்கு உண்மையான ஆதாரமாக இருப்பவன் நான் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் ஞானிகள்.

இந்த உண்மையை உணர்ந்த காரணத்தால் அவர்கள் துன்பப்படுவதில்லை. சுற்றி நிகழும் நிகழ்வுகளை சரியாகப் பார்க்கும் காரணத்தால் இவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும். பாம்பு என்று பயந்து பத்து அடி தள்ளி நடக்காமல் கயிறு என்று அறிந்ததால் அதன் பக்கத்திலேயே நடக்கும் காரணத்தால் மற்றவர்களின் பார்வைக்கு அவன் வேறு பட்டவனாகத் தென்படுவான்.

இதுபோன்ற வேற்றுமைகளையே, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் தொகுத்துக் கொடுத்து இருக்கிறார். இந்த அனைத்து வேற்றுமைகளின் சாராம்சம்ஞானிகள் துன்பம் கலக்காத இன்பவாழ்வு வாழ்வார்கள்என்பதே.       
   

பயிற்சிக்காக :

1. மற்றவர்கள் ஞானியா இல்லையா என்பதை நாம் அறிந்துகொள்வது ஏன் அனாவசியம்?
2. ஞானி மற்றவர்களிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகிறான் என்ற பட்டியலைப் படிப்பதால் என்ன பயன்?
3. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கொடுத்த பட்டியலின் சாராம்சம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. முக்தி என்பது மரணத்துக்குப் பின்னர் அடையப்படுவதுஎன்பதைத்தான்உடலை உதறிவிட்டு சுய உருவத்தை வெளிப்படுத்துவான்என்ற உபநிஷத மந்திரத்தின் மூலம் சொல்கிறதா?
2. ஞானிக்கும் மற்றவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா? இல்லையா?
3.உலகில் உள்ள மதங்களின் இறுதிக் குறிக்கோள் என்ன?


Wednesday, April 17, 2013

Lesson 184: Benefits of the knowledge (Brahmasutra 4.3.15-16)


பாடம் 184: ஞானத்தின் பலன்கள்
பாடல்: 532-533 (IV.3.15-16)

ஞானிகள் மட்டுமே  இந்த உலகத்தை சரியாக பார்க்கிறார்கள் என்பதை விஞ்ஞானிகளின் பார்வை உறுதி செய்வதைச் சுட்டிக்காட்டி இந்தச் சரியான ஞானம் தரும் பலன்களை இந்தப்பாடம் பட்டியலிடுகிறது.

அணுவை ஆராய்ந்து, ‘இந்தப் பிரபஞ்சம் ஒரு மாயைஎன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.  ஆனால், அடுத்த படியானஇந்த மாயையின் ஆதாரம் எது?’ என்பதை அவர்கள் அறியவில்லை. ‘நான் இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தில் ஒரு சிறு புள்ளியாக சிறிதுகாலம் வாழ்பவன்என்ற தவறான அறிவுடன் எவ்வளவு தீவிரமாக ஆராய்ச்சி செய்தாலும், ‘நான்தான் பிரபஞ்சமாக காட்சி அளிக்கிறேன்என்ற உண்மையை அவர்களால் அறியமுடியாது. ‘அனைத்தும் ஒன்றுதான்என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தாலும் அந்த ஒன்று நான் என்பதை அறிய வேதம் பயில்வது அவசியம்.

ஞானம் என்ற சொல்லுக்கு அறிவு என்று பொருள். அறிபவனுக்கும் அறியப்படும் பொருளுக்கும் உள்ள தொடர்புதான் அறிவு. அறியப்படும் பொருளும் அறிபவனும் ஒன்றுதான் என்ற ஞானத்தைத் தருவது வேதம் மட்டுமே. இந்த அறிவு இல்லாத காரணத்தால் விஞ்ஞானிகளால் ஞானிகள் அனுபவிக்கும் பலன்களை அனுபவிக்க முடிவதில்லை

நான் வெறும் உடல் அல்ல. எவ்வித எல்லையும் இல்லாமல் காலத்தைக்கடந்து இருப்பவன் நான் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் தீர்க்கதரிசிகள். இந்த அனுபவம் அவர்களுக்கு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அறிவியலின் அடிப்படையில் டாக்டர் ஜில் டெய்லர் விளக்கியுள்ளார்.

முண்டக உபநிஷத மந்திரம் (3.1) ‘இணைபிரியாத, ஒரே போன்ற இரு பறவைகள் ஒரே மரத்தில் அமர்ந்து இருக்கின்றன. அவற்றுள் ஒன்று பழத்தை ருசித்துத் தின்கிறது. மற்றது தின்னாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறதுஎன்று கூறுகிறது. இந்த இரு பறவைகளின் உதாரணம் நமது மூளையின் இரு பகுதிகளுக்கு பொருந்தும். மூளையின் இடது பகுதி ஐந்து புலன்களின் மூலம் உலகத்தை அனுபவிக்கிறது என்றும் வலது பகுதி எதனுடனும் சம்பந்தப்படாமல் எல்லாவற்றையும் ஒன்றாக பார்ப்பதாகவும் டாக்டர் ஜில் கூறுகிறார்.

அதே உபநிஷதத்தின் அடுத்த மந்திரம்ஜீவனும் ஆன்மாவும் ஒரே உடம்பினுள் உள்ளனர். ஜீவன் அதாவது மனிதன் அறியாமையில் மூழ்கி, மோக வசப்பட்டு வருந்துகிறான். வழிபாட்டுக்குரிய தன் ஆன்மாவையும் அதன் மகிமையையும் அவன் எப்போது பார்க்கின்றானோ அப்போது அவன் கவலைகளில் இருந்து விடுபடுகின்றான்என்று கூறுகிறது. டாக்டர் ஜில் இது முற்றிலும் உண்மைதான் என்பதை தன் சொந்த அனுபவம் மற்றும் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கிறார்

இருப்பதுபோல் தோற்றம் அளிக்கும் இந்த உலகம் உண்மையில் என்னை ஆதாரமாகக் கொண்டுதான் இயங்குகிறது என்பதை மூளையின் வலதுபுறம் தெளிவாக காட்டுகிறது. ஆனால் மூளையில் இடதுபுறத்தில் குடியிருக்கும் நான் என்ற கற்பனைக்கதை இந்த உண்மையை நாம் அறியவிடாமல் தடுக்கிறது. இல்லாத பொருள்களுக்கு ஒரு பெயரை இடுவதன் மூலம் அதை இருப்பதாக நம்பும் இது, தொடர்ந்து நமக்கும் உலகத்துக்கும் இடையே ஒரு  இடைவெளியை வளர்த்து வருகிறது.

பார்ப்பவரும் பார்க்கப்படும் பொருளும் ஒன்றுதான் என்ற அறிவுடன் பார்ப்பதுதான் சரியான பார்வை. இந்த சரியான அறிவைப் பெற்றவர்கள் பின்வரும் பலன்களை அனுபவிப்பார்கள்

1.    திருப்தி
நான் பரமன் என்ற ஞானத்தை அடையும்வரை அனைத்து மனிதர்களும் வாழ்வில் எதையோ தேடிக்கொண்டே இருப்பார்கள். எதை அடைந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் திருப்தி நிலைக்காது. குறை ஒன்றும் இல்லை என்ற மன நிறைவை வேதம் தரும் ஞானம் கொடுக்கும்.
2.    பயமின்மை
எதிர்காலத்தில் என்ன நிகழுமோ என்ற அச்சத்தை இந்த ஞானம் அழித்து விடும். அனைத்தும் மாயை என்பதையும் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது நான் என்பதையும் உணர்ந்தவர்கள் மாற்றத்தைக்கண்டு பயப்படுவது இல்லை.
3.    மரணமின்மை
உடலும் மனமும் மாயை என்பதால் அவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவம் கூட நிலை அற்றது. அனுபவங்கள் மாறினாலும் அனுபவிப்பவன் மாறுவதில்லை. காலத்தையும் தேசத்தையும் கடந்து இருப்பவன் நான் என்று உணர்ந்தவர்கள் மரணத்தை வென்றவர்கள்.
4.    குறையில்லா இன்பம்
உலகில் உள்ள எந்தப் பொருளுக்கும் இன்பத்தைத்தரும் சக்தி கிடையாது என்பதை அறிந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் அனைத்து அனுபவங்களையும் ஆனந்தமாக அனுபவிப்பர்.
5.    தடையில்லா நிம்மதி
வாழ்வின் ஏற்ற இறக்கங்களின் ஆதாரமாக, என்றும் இருப்பவன் நான் என்ற ஞானம் கலையாத நிம்மதியைத் தரும்.
6.    துன்பங்களிலிருந்து விடுதலை
அவமானம், அதிருப்தி, எரிச்சல், ஏக்கம், ஏமாற்றம், கவலை, காழ்ப்புணர்ச்சி, கோபம், குரோதம், குற்ற உணர்வு, குழப்பம், சலிப்பு, சந்தேகம், தவிப்பு, திருப்தியின்மை, பழிவாங்கும் உணர்ச்சி, பயம், போட்டி, பொறாமை, வருத்தம், விரக்தி, வெறுப்பு போன்ற உணர்வுகளால் மனம் தொடர்ந்து பாதிக்கப்படாது.
7.    மனதின் சலனங்களிலிருந்து விடுதலை
உலகம் மாறும்பொழுது அதற்கேற்ப மனதும் மாறும். இவ்வாறு சலனப்படுவதுதான் மனதின் இயல்பு.  எனவே, மனம் நான் அல்ல என்ற அறிவு, என் மனம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்து விடுதலை அளிக்கும்.
8.    செயலில் சுதந்திரம்
நான் எந்தச் செயலும் செய்வதில்லை என்ற அறிவும் என் உடலும் மனமும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்ற அறிவும் செயல்படுவதில் முழுச்சுதந்திரத்தை அளிக்கும். இன்பத்திற்காக செயல்படாமல் இன்பமாக இருப்பதால் செயல்படுவது இந்த ஞானம் இருப்பவர்களுக்கே சாத்தியம்.
9.    இலட்சியங்களிலிருந்து விடுதலை
பட்டம், பணம், பதவி, பொன், பொருள், புகழ், பெயர், பெருமை, செல்வாக்கு, சொத்து, குடும்பம், நட்பு, சுற்றம், வேலை, அன்பு, ஆரோக்கியம் முதலிய அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டு இருப்பவை. நான் மாறாத பரமன் என்ற அறிவு ஏற்பட்டபின், ஒரு குறிப்பிட்ட மாற்றம் வேண்டும் என்ற இலட்சியங்கள் அர்த்தமற்றவையாகிவிடும். அடைந்தது எதுவும் நிலைக்காது என்ற அறிவு இருப்பதால் எதையும் அடையவேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை.
10. தவறுகளிலிருந்து விடுதலை
நடப்பவைகள் அனைத்தும் சரியாகவே நடக்கின்றன என்ற அறிவு இருப்பவர்கள் தான் எந்த தவறையும் செய்வதாக நினைப்பது கிடையாது. அதேபோல், மற்றவர்கள் வேறு மாதிரி செயல்பட்டிருக்கலாம் என்ற எண்ணமும் இவர்களுக்கு தோன்றாது. யாராலும் எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால்தவறான செயல்என்று எதுவும் இல்லை.
11. எதிர்பார்த்தல் இன்மை
மாற்றம்என்ற சொல்லின் சரியான பொருள் அறிந்தவர்களுக்கு மாறும் உலகத்தின் மாற்றம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்த்தல் இருக்காது. எதிர்பார்த்தது நடந்துவிட்டாலும் அது நிலைக்காது என்பதை இவர்கள் அறிவார்கள்.
12. தெளிவான முடிவு
செயலின் விளைவு இப்படி இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் வரை எந்தச்செயலை எப்படிச்செய்வது என்ற குழப்பம் மனதில் இருக்கும். மனதில் ஏற்படும் எண்ணங்களே நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்தவர்களின் மனதில் முரண்பாடுகளற்ற முடிவுகள் தோன்றும்.  
13. பிரச்சனைகளிலிருந்து விடுதலை
நிகழ்வுகளுக்கு பிரச்சனை என்ற பெயர்சூட்டுதல் நமது அறியாமை. புகழ்-இகழ், வெற்றி-தோல்வி, வளமை-வருமை, லாபம்-நஷ்டம், ஏற்றம்-தாழ்ச்சி, சுகம்-துக்கம், நட்பு-பகை, சண்டை-சமாதானம், ஊடல்-கூடல், நன்மை-தீமை, இளமை-முதுமை முதலிய இருமைகள் படைப்பின் இலக்கணம். ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல இவை சேர்ந்தே இருப்பவை. ஒன்றை அனுபவிக்கும்பொழுது மற்றொன்று அதன்பின் காத்துக்கொண்டு இருக்கும். எனவே, இது வேண்டும் அது வேண்டாம் என்று பாகுபாடு செய்வதில் அர்த்தம் இல்லை. படைப்பின் இந்த இரகசியத்தை அறிந்தவர்கள் வாழ்வின் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுதலைப் பெற்றவர்கள் ஆவர்.  
14. எதுவும் முக்கியமல்ல
உலகமே அதிசயம் என்று உணர்ந்தவர்களுக்கு உலகத்தின் ஏழு அதிசயங்கள் எந்த முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. இருக்கும் இடமே சுவர்க்கம் என்று அறிந்தவர்களுக்கு எந்த ஒரு இடத்தை பார்ப்பதற்காக பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, மனிதர்களில் சாதனையாளர், சரித்திரத்தின் முக்கியமான நிகழ்வு, பிறந்த நாள், இனிமையான பாடல், சிறந்த திரைப்படம் அல்லது உணவு விடுதி போன்று எதையும் இவர்கள் தனிப்படுத்தி பார்ப்பதில்லை.
15. துறவில் ஆனந்தம்
உலகமே என்னை ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது என்பதை அறிந்தவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பொருள் மீதும் பற்று வைப்பதில்லை.
16. துன்பமற்ற இன்பம்
பற்று இல்லாத காரணத்தால் அளவற்ற செல்வங்களை சம்பாதித்து புலன் இன்பங்களை முழுமையாக அனுபவிக்க இவர்களால் முடியும். இருப்பது இல்லாமல் போனால் இவர்கள் துன்பப்படுவதில்லை.
17. உண்மையான அன்பு
இந்த உலகில் வேறு யாரும் இல்லை. இருப்பவர்கள் அனைவரும் எனது வெவ்வேறு வடிவங்களே என்று அறிந்தவர்களால் மட்டுமே உண்மையாக அன்பு செலுத்த முடியும். நான் வேறு, மற்றவர்கள் வேறு என்ற அறிவுடன் இருப்பவர்களின் அன்பு சுயநலம் கலந்ததாக இருக்கும்.
18. பாசத்தில் இருந்து விடுதலை
காண்பது கனவு என்று அறிந்தவுடன் பந்தப்படுத்தும் பாசக்கயிறு அறுந்து விடும். அனைவர் மீதும் எவ்வித நிபந்தனையும் இன்றி அன்பு செலுத்தும் காரணத்தால் யாருடன் உறவாட வாய்க்கிறதோ அவருடன் இன்பமாக வாழும் வழியை இவர்கள் அறிவார்கள்.
19. அனைவரிடமும் சமமான அன்பு செலுத்துதல்
ஞானிகள் உயர்ந்தவர்-தாழ்ந்தவர், வேண்டியவர்-வேண்டாதவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரிடமும் அன்பு செலுத்துவர். ஆனாலும் மற்றவர்கள் ஞானியை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். எனவே, வெளிப்பார்வைக்கு அவர்களின் அன்பில் பாகுபாடு தெரியலாம்.
20. யாரையும் நம்பவேண்டிய அவசியமின்மை
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத காரணத்தால் எந்த ஒரு குறிப்பிட்ட உறவுக்காக ஏங்க வேண்டிய அவசியமோ இருக்கும் உறவை துறக்க வேண்டிய அவசியமோ ஞானிகளுக்கு இல்லை.
21. விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுதலை
மற்றவர்களைப்போல விருப்பு-வெறுப்புகளுடன் வாழ்ந்தாலும் அவற்றால் ஞானிகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை. கிடைப்பவற்றில், வெறுப்பதைத் தவிர்த்து விரும்பியதை ஏற்று இவர்கள் வாழ்ந்தாலும், விரும்பியது கிடைத்தால்தான் இன்பம் என்ற நிலையோ வெறுப்பதை அனுபவிக்க நேர்ந்தால் துன்பமோ இவர்களுக்கு கிடையாது.
22. உணர்வுகளில் சுதந்திரம்
உயிருடன் வாழ உலகைச் சார்ந்து வாழ்ந்தாலும் இன்பமாக வாழ இவர்கள் எதையும் சார்ந்து இருப்பதில்லை.
23. தொல்லைதரும் உணர்வுகளிலிருந்து விடுதலை
உலகே மாயை என்ற அறிவு இருந்தாலும் அடிபட்டால் உடல் வலிக்கத்தான் செய்யும். அதேபோல் சுற்றி நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்ப ஞானியின் மனதிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால், துன்ப உணர்வுகள் ஞானியின் மனதை நீடித்து பாதிப்பது இல்லை. ஞானியின் தவ வலிமையைப் பொறுத்து பாதிப்பின் ஆழமும் நீடிப்பும் குறைவாகவே இருக்கும்.
24. விவேகம்
உலகத்தை சரியாகப் புரிந்து கொண்டிருக்கும் காரணத்தால் அனைத்தையும் சரியான பார்வையில் ஞானியால் பார்க்க முடியும். எனவே, இவர்களால்சரி-தவறு’, ‘உண்மை–பொய்’, ‘இயற்கை–செயற்கை’, ‘மாறாதது–மாறுவது’, ‘அளவற்றது–அளவுக்குட்பட்டது’, ‘காரணம்–காரியம்’, ‘தன்னலம்–பொதுநலம்ஆகியவற்றை பிரித்துப்பார்க்கும் விவேகம் இருக்கும்.
25. வாதம் புரியவேண்டிய அவசியமின்மை
முழுமையான ஞானத்தை அடையும் வரை கருத்து வேறுபாடுகளை அகற்றும் முயற்சியில் மற்றவர்களுடன் வாதம் புரிவது அவசியமாகலாம். படைப்பின் இரகசியத்தைத் தெரிந்து கொள்ளும்பொழுது கருத்துக்கள் வேறுபட்டுத்தான் இருக்கும் என்ற அறிவு ஏற்படும். எனவே, அரைகுறை அறிவுடன் இருப்பவர்களின் விவாதத்தில் முழுமையான அறிவு பெற்ற ஞானிகள் பங்கேற்பதில்லை. நான் பரமன் என்ற அறிவு ஏற்படும் வரை அனைத்து அறிவும் அரைகுறை அறிவுதான்.
26. பணம்
என்னிடம் இருப்பது எனது தேவையை விட அதிகமானது என்று உணர்பவர்கள் ஞானிகள். இந்த ஞானம் ஏற்படும்வரை எவ்வளவு இருந்தாலும் பற்றாக்குறையும் தொடர்ந்து இருக்கும்.
27. முழுமையான அறிவு
நான் பரமன் என்ற ஞானம் ஏற்படும்வரை, கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு. எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்தது ஆகுமோ அதை அறிந்தவர்கள் ஞானிகள். உலகம், கடவுள், மனிதர்கள், வாழ்க்கை, துன்பத்திற்கு காரணம், இன்பமாக வாழும் வழி ஆகிய அனைத்தைப் பற்றிய தெளிவான அறிவு இவர்களுக்கு இருக்கும்.

முடிவுரை :

உலகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை சரியாக அறிந்தால் துன்பக் கலப்பு இல்லாத இன்பவாழ்வை வாழலாம். ஆனால், விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிக்கும் இன்பத்துக்கும் உள்ள தொடர்பை அறிவதில்லை. எனவே, தங்கள் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த உலகத்தை சுவர்க்கமாக மாற்றி அதன் பின் அதில் இன்பமாக வாழலாம் என்று அவர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்

நான் யார்?’ என்ற கேள்விக்கு அறிவியலின் அடிப்படையில் ஆராய்ந்து பொருள் கண்டுபிடிக்க முடியாது. எனவேதான் விஞ்ஞானிகளின் தேடல் முடிவுக்கு வருவதில்லை. இந்த அறிவைப்பெற்ற ஞானிகளும் தீர்க்கதரிசிகளும் பல்வேறு பலன்களைப்பெற்று, பூலோகம் என்ற சுவர்க்கத்தில் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. 'பரமன்தான் இவ்வுலகமாக காட்சியளிக்கிறான்' என்ற ஞானியின் பார்வை, விஞ்ஞானிகளின் பார்வையுடன் ஒத்துப்போகிறது என்ற விளக்கத்தையும் ஞானிகள் அனுபவிக்கும் பலன்களின் பட்டியலையும் கொடுத்த நான்காம் அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.
       
பயிற்சிக்காக :

1. வேதம் தரும் ஞானத்தை அடைந்தவர்கள் அனுபவிக்கும் பலன்கள் யாவை?
2. விஞ்ஞானிகளால் ஏன் ஞானிகளைப்போல் இன்பமாக வாழ முடிவதில்லை?
3. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதன் நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :
1.John Hagelin என்ற விஞ்ஞானி வேதம் கூறும் உண்மைகளைப்பற்றி தரும் விளக்கங்களைப் பார்க்கவும். (https://www.youtube.com/watch?v=Fqdcdky9wR4 )
2. We are all one (https://www.youtube.com/watch?v=pIJHJzDQcRM) என்ற விளக்கத்தைப் பார்க்கவும்.

3. ‘Jill Bolte Taylor's stroke of insight’ என்ற TED பேச்சை (http://www.ted.com/talks/jill_bolte_taylor_s_powerful_stroke_of_insight.html?utm_source=email&source=email&utm_medium=social&utm_campaign=ios-share) கேட்கவும்.

4. சரியான ஞானத்தைப் பெற்ற அனைவருக்கும் இந்த பாடத்தில் பட்டியலிடப்பட்ட அனைத்து பலன்களும் சமமான அளவு கிடைக்குமா?