Tuesday, December 25, 2012

Lesson 181: World is God (Brahma Sutra 4.3.3)


பாடம் 181: ஞானியின் பார்வை ஓஷோ ரஜனீஷ்.
பாடல்: 520 (IV.3.3)

தத்துவ இயலில் முதுகலை பட்டம் பெற்று, கல்லூரியில் பேராசிரியராக வாழ்வைத் துவங்கிய ஓஷோ ரஜனீஷ் அவர்களின் பார்வையில் மனித வாழ்வைச் சித்தரிக்கும் வண்ணம் இந்தப் பாடம் அமைந்துள்ளது.

உலகம் ஒரு கண்ணாடி. கண்ணாடி முன் நின்று பார்த்தால் அவரவரின் முகம்தான் தெரியும். அது அழகாக இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்ணாடி தீர்மானம் செய்வதில்லை. வெளி உலகம் மனிதனுக்கு இன்பத்தையோ துன்பத்தையோ தருவதில்லை. மனிதனின் மனம் எப்படி இருக்கிறதோ அதைத்தான் உலகம் பிரதிபலிக்கும். உதாரணமாக கோபமாக இருப்பவனின் கண்ணுக்கு அழகான மலர் தென்படாது. ஆனால் அவன் காதலில் மூழ்கி இருந்தால் கள்ளிச்செடிக் கூட கவர்ச்சியாக காட்சி அளிக்கும். பார்க்கப்படும் பொருளை விட பார்ப்பவனின் மனநிலை முக்கியமானது. துன்பங்களுக்குத் தீர்வு வெளி உலகில் இல்லை. உள்ளே இருப்பதை வெளியே காட்டும் கண்ணாடியை மாற்ற முயற்சிப்பது வீண்.

தன்னைத்தானே மாற்றிக்கொள்வதும் முடியாது. இடது கைக்கும் வலது கைக்கும் நடக்கும் போராட்டம் முழுமையான வெற்றி அல்லது முழுமையான தோல்வியில் முடிவதில்லை. ஏனெனில் இருப்பது ஒரே ஆள். தன்னுடன் தானே சண்டை செய்தால் மனக்கொதிப்பு, கோபம், சோகம், களைப்பு போன்ற வேண்டாத விளைவுகள் மட்டுமே ஏற்படும். வெற்றி கிடைக்காது. மனதை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்வது யார்? இப்படி இருக்கும் நான் அப்படி ஆக வேண்டும் என்று முயற்சி செய்வது இரண்டு கைகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் போன்றது.

சரியான அறிவை அடைவதன் மூலம் நாம் நம் மனதை சரி செய்து கொள்ளலாம். அதன் பின் வாழ்வே ஒரு கொண்டாட்டமாக மாறிவிடும். புத்தர், மாகாவீரர் போன்ற மகான்கள் காட்டும் வழி இதுவே.

அறிவும் துன்பமும்

வாழ்வில் துன்பத்தை அகற்றி இன்பமாக இருக்க சரியான அறிவை அடைய வேண்டும். ஆனால் அறிவு அதிகமாக அதிகமாக துன்பங்கள் அதிகமாவதைத்தான் நாம் அனுபவத்தில் பார்க்கிறோம்.

பையில் வைத்திருந்த பணம் காணாமல் போனால் வருத்தம் ஏற்படுவது இயற்கை. பணம் ஏன் தொலைந்து போனது என்ற ஆராய்ச்சியால் ஏற்படும் துன்பம் செயற்கை. பணத்தை தேடித் திரும்பப்பெற முயற்சி செய்வதில் தவறு இல்லை. ஆனால் அது கிடைக்குமா என்ற தவிப்பு அனாவசியம். பணம் தொலைந்து போனதற்கு எப்படி எவ்வித காரணமும் கிடையாதோ அது போல் அதை திரும்பப் பெறுவதற்கும் நமது முயற்சி காரணமாக இருக்காது. ‘என்ன செய்ய வேண்டும் அல்லது எப்படிச் செய்ய வேண்டும்?’ என்பது போன்ற கேள்விகளுக்கு அறிவாளி அதிக பதில்களை கொடுப்பான். எனவே அவனது துன்பமும் அதிகமாக இருக்கும். அவ்வளவு தூரம் யோசிக்காதவர்கள் ஏதோ என் விதிஎன்று இயற்கையாக ஏற்படும் துன்பத்தை மட்டுமே அனுபவிப்பார்கள். ‘இது ஏன் நடந்தது?’, ‘நான் இதைச் செய்து இருக்க கூடாதுஎன்பது போன்ற செயற்கைத் துன்பங்கள் இவர்களை பாதிக்காது. மேலும் உலக அறிவு அதிகமாக இருந்தால் நிம்மதியாக இருக்க முடியாது. எதிர்காலம் பற்றி ஏதாவது அச்சம் இருந்து கொண்டே இருக்கும்.

இது போல், அதிக அறிவு அதிக கலக்கத்தையே கொடுக்கும். நிம்மதியைக் கொடுக்காது. நான் வேறு. இந்த உலகம் வேறுஎன்று நாம் நினைத்துக் கொண்டு இருப்பதுதான் இதற்குக் காரணம். எல்லாவற்றையும் ஆராய்ந்து, காரண காரியங்களை கண்டுபிடுத்து, எல்லைக்கோட்டை வரையும் இந்த அரைகுறை அறிவு துன்பத்தை மட்டுமே தரும். அனைத்தும் ஒன்றுதான் என்பது முழுமையான அறிவு. இந்த அறிவை பெற்றவர்களை செயற்கைத் துன்பம் அணுகாது. உலகின் தன்மையைப் பற்றிய இந்தச் சரியான அறிவுதான் இன்ப வாழ்வுக்கு வழிவகுக்கும்.

இருமைகள் இயற்கையானவை

இயற்கையாக ஏற்படும் துன்பங்கள் வாழ்வில் அவசியமானவை. இன்பம் என்ற வார்த்தைக்கு துன்பம் என்ற வார்த்தைதான் பொருளைத்தருகிறது. அதுபோல் இந்த உலகில் உள்ள அனைத்தும் எதிர்ப்பதங்களுடன் கூடிய வார்த்தைகளால் மட்டுமே உருவாகியுள்ளன. மேடு இல்லாவிட்டால் பள்ளம் இல்லை. இதுதான் படைப்பின் இரகசியம்.

கடிகாரத்தின் பெண்டுலம் இடது பக்கம் சென்றால்தான் வலது பக்கம் செல்ல முடியும். வலது பக்கம் செல்வதும் இடது பக்கத்திற்குத் திரும்புவதற்காகவே. இரண்டும் ஒன்றுதான். இதுபோல் வாழ்க்கையில் இருக்கும் இன்பம்-துன்பம், புகழ்-இகழ், வறுமை-வளமை ஆகிய அனைத்து இருமைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. ஒன்று இல்லாவிட்டால் மற்றது இல்லை. இது புரிந்துவிட்டால், ‘இது வேண்டும் அது வேண்டாம்என்று தேர்வு செய்வது அனாவசியம் என்ற அறிவு ஏற்படும். வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அதில் பங்கேற்காத சாட்சியாக பார்த்து அனுபவிக்க முடியும்.

இந்த அறிவு ஏற்படும் வரை, மனிதன் செயற்கையான துன்பத்தை தொடர்ந்து அனுபவிப்பான். இன்பத்தை மட்டும் தரும் இடமாக உலகை மாற்றிவிடலாம் என்று அவன் செய்யும் முயற்சிகள், இரு கைகளின் போராட்டத்தைப் போல் தோல்வியிலேயே முடியும். இதனால் இயற்கையாக ஏற்படும் துன்பத்தைவிட பன்மடங்கு செயற்கைத் துன்பத்தை மனிதன் அனுபவிக்கிறான்.

தானும் மற்றவர்களும் ஒன்றுதான் என்ற அறிவு ஏற்பட்டவுடன் அனைவர் மீதும் இயற்கையாக அன்பு ஏற்பட்டுவிடும். யாரையும் வெறுக்க முடியாது. யார் மீதும் பொறாமை கொள்ள முடியாது. போராட்டம் ஏதும் இன்றி வாழ்வில் வெற்றி அடையும் வழி இது ஒன்றுதான்.

இன்பத்தை அடையும் வழி

கைகள் நிரம்ப வைத்திருக்கும் கற்களை கீழே போட்டால்தான் வைரங்களை எடுக்க முடியும். துன்பத்தை துறந்தால்தான் இன்பத்தை அனுபவிக்க முடியும்.

தூணைக் கட்டிபிடுத்துக்கொண்டு என்னை அவிழ்த்து விடுங்கள் என்று கூப்பாடு போடுபவனைப்போல பிரச்சனைகளை பிடித்து வைத்துக்கொண்டு அவதிப் படும் மனிதர்களால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.

துன்பம் வெளியே இருப்பது. இன்பம் நமக்குள் இருப்பது. துன்பத்தை அடக்கி வைத்தால் அதிகமாகும். வெளிப்படுத்தினால் குறையும். இன்பத்தை அடக்கி வைத்தால் குறையும். வெளிப்படுத்தினால் அதிகரிக்கும். துன்பத்தை வெளிப்படுத்த தனிமை அவசியம். இன்பத்தை மட்டுமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். துன்பம் நம்முடன் தொடர்பற்றது என்பதை அறிந்தால் அவை தானாக நம்மைவிட்டுப் போய்விடும்.

ஒவ்வொரு மனிதனிடமும் முக்தி அடையும் திறன் ஒளிந்து உள்ளது. வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புதான் முக்தியை தடை செய்கிறது. இதை அறியாமல், எவ்வளவு முயன்றாலும் வெற்றியை தரக்கூடிய சரியான பாதையை மனிதனால் கண்டுபிடிக்க முடியாது. தான் யார் என்பதை அறிந்தவர்கள் எந்தப் பாதையில் பயணம் செய்தாலும் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.

தான் யார் என்பது பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதையும் தன் உலக அறிவு, முட்டாள்தனத்தின் மற்றொரு பெயர் என்பதையும் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். துன்ப கலப்பற்ற இன்பத்தைப் பெற கடவுளை நாடி கோவிலுக்குச் செல்லாமல் கடவுளை நேரடியாக அறிந்த ஞானிகளின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

புகழ் பெற்ற மனிதர்களை முன்மாதிரியாகக் கொண்டு தானும் அவர்களைப்போல் ஆகவேண்டும் என்பது தவறான ஆசை. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். உன்னைப்போல் ஒருவன் இதுவரை இந்த உலகில் பிறந்ததும் இல்லை; இனிப் பிறக்கப் போவதும் இல்லை. பூத்துக்குலுங்கும் நந்தவனத்தில் ஒரு மலரைப்போல இன்னொரு மலர் இருப்பதில்லை. ஒவ்வொரு மலரும் முழுமையாக பூத்து இருக்கிறதா என்பதுதான் முக்கியமே தவிர, சம்பங்கிப்பூ ரோஜா மலரைப்போல மாற வேண்டும் என்பது அவசியமில்லை. அதுபோல நான் நானாக முழுமை அடைய, வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற முயற்சியை கைவிட வேண்டும். மற்றவர்களை ஒப்பிடுவதனால் மட்டுமே முன்னேற்றம் என்ற வார்த்தைக்கு பொருள் கிடைக்கும். முழுமை அடைய தன்னை யாருடனும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வேறு யாரைப்போலவும் இல்லாமல் தனித் தன்மையுடன் கூடிய தன் உடலையும் மனதையும் போற்றி ஏற்றுக்கொண்டால் வாழ்வில் வெற்றி பெற்று விடலாம்.
வானவெளியில் தென்படும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவு ஒளியைச் சிந்தி அதனதன் பாதையில் வலம் வருகின்றன. முன்-பின், உயர்வு-தாழ்வு, வேகமானது-மெதுவானது என்பது போன்ற பாகுபாடுகளைச் செய்யாமல் அனைத்து நட்சத்திரங்களையும் அப்படியே நாம் ஏற்றுக்கொள்வது போல் நம்மையும் மற்றவர்களையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நிழலிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று ஓடாமல், நிழல் வெறும் தோற்றம் என்பதை அறிந்து கொள்வதால் மட்டுமே நிம்மதி கிடைக்கும். அதுபோல வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பை நிறுத்தினால் மட்டுமே துன்பம் கலப்பில்லாத இன்பம் நமக்கு கிடைக்கும்.

பிச்சைபாத்திரத்தை கையில் ஏந்தி தெருத்தெருவாய் அலைந்து கொண்டிருந்த புத்தர்தான் உண்மையில் சக்ரவர்த்தி. ஏனெனில் அவருக்கு வேண்டியது என்று எதுவுமில்லை. மேலும், துன்பத்தைப் போக்கும் வழியை நாடி, மக்கள் அவரிடம் யாசித்துக் கொண்டு இருந்தார்கள். இன்னும் வேண்டும் என்று அலையும் மக்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்கள் ஏழைகளே.

துன்பங்களுக்குக் காரணம் ஆசை. ஆசைப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இந்த உலகமும் நானும் ஒன்றுதான் என்ற அறிவும் உலகில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையன என்ற அறிவும் ஏற்பட்டால் செயற்கையான துன்பத்தைத் தரும் ஆசைகள் ஏற்படாது. பிடித்துக்கொண்டிருக்கும் தூணை விட்டுவிட்டு துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற்றுவிடலாம்.

பொதுவாக துன்பத்திலிருந்து விடுதலைப் பெற்றவுடன் இன்பத்தை அனுபவிக்க ஆரம்பித்து விடலாம். ஆனால், நம்முள் இருக்கும் இன்பத்தை அனுபவிக்கத் தேவையான  ‘புலன்களின் கூர்ந்து உணரும் திறனை’ (sensitivity) அதிகப்படுத்திக் கொள்ள சில காலம் ஆகும்.
   
கடவுளைச் சுவைக்க வேண்டும்.

உலகை அனுபவிப்பதைவிட அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் மக்களிடம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டுப் பயணிகள் நம் நாட்டை பார்த்து அனுபவிக்க இங்கே வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அவர்கள் நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இருப்பதை அனுபவிக்காமல் இல்லாததை அடையவேண்டும் என்ற ஆர்வம்தான் இதற்குக் காரணம்.

பொருள்களுக்கும் நமது ஐந்து புலன்களுக்கும் ஏற்படும் தொடர்பால் விளைவது அனுபவம். இன்னும் வேண்டும் என்ற ஆர்வம் நமது புலன்களை மரத்துப்போக வைக்கின்றது. இதனால் சுற்றி இருக்கும் உலகை அனுபவிக்க முடியாமல் புதிதாக ஏதேனும் வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.

கடவுள்தான் உலகம். நமது ஐந்து புலன்களால் அனுபவிக்கும் அனைத்தும் கடவுளைத் தவிர வேறு எதுவும் இல்லை. தண்ணீர் குடிக்கும்போது கடவுளைத்தான்  சுவைக்கிறோம். ஆனல் பழச்சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை பருகி பழகிப்போன நாக்கு, வெறும் தண்ணீரின் சுவையை அறிவதில்லை. உலகில் உயிர்வாழ ஒரு கைபிடியளவு அரிசியும் குடிக்கத் தண்ணீர் மட்டும் போதும். இந்த நிறைவோடு நீரைக் குடித்தால் கடவுளின் சுவைத் தெரியும்.

கடலில் வாழும் மீன் கடல் நீரை அனுபவிப்பது இல்லை. அதை பிடித்து மணலில் போட்டு சிறிது நேரம் தவிக்கவிட்டு அதன்பின் கடலில் விட்டால் அது கடல் நீரை அனுபவிக்க ஆரம்பிக்கும். முக்தி அடைவது இதுபோல்தான். பரமன் என்ற வார்த்தைக்கு எங்கும் பரவியிருக்கும் அளவற்ற பெருமாள் என்று பொருள். இங்கே இப்போது நாம் அனுபவிப்பதுதான் கடவுள் என்பதை அறிய நமது புலன்கள் உணர்ச்சி உள்ளதாக இருக்கவேண்டும். ஆர்வமுடன் தேடி அலைவதைவிட அனுபவிப்பதுதான் முக்கியம் என்று உணர ஆரம்பித்தால் புலன்களின் கூர்ந்து உணரும் திறன் அதிகமாகும். அதன்பின், சுவாசிப்பது, நடப்பது, சுற்றியிருப்பதை பார்ப்பது என்பது போன்ற செயல்களிலேயே நாம் முழுமையான திருப்தியை அடைவோம். இன்பத்தைத் தேடி நண்பர்களுடன் உல்லாசப் பயணம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முக்தி என்பது முயற்சி செய்து எதிர்காலத்தில் அடைய வேண்டிய ஒன்று அல்ல. இங்கே, இப்போதே நாம் பெறும் அனுபவங்கள்தான் முடிவான ஆனந்தம் என்பதை அறிந்துக்கொள்வதுதான் முக்தி.

அறிவும் அனுபவமும்

சரியான அறிவுதான் நீடித்த இன்பத்திற்கு காரணம் என்றாலும் அறிவு நேரடியாக இன்பத்தைக் கொடுத்துவிடாது. சரியான அறிவுடன் புலன்களின் மூலம் உலகப்பொருள்களை அனுபவிப்பதாலேயே இன்பம் கிடைக்கும்.

உலக அறிவு இன்பத்தைக் கொடுக்காது என்பதால் வேதம் கூறும் அறிவை அடைய முயலும் முக்திவிழைவோர்களில் பலர் முக்தி அடைவதில்லை. வேதம் தரும் அறிவு கூட உலக அறிவைப்போல மனதளவில் ஏற்படுவதுதான். வாழ்வைப்பற்றிய வர்ணனையை மட்டுமே மனம் செய்து வருகிறது. முக்தி அடைய இந்த வர்ணனைதான் தடையாய் இருக்கிறது.

கணக்கை முறையாகப் போடாமல் புத்தகத்தின் இறுதியில் இருக்கும் விடைகளைப் பார்த்து எழுதுபவர்களைப் போல உலகை அனுபவிக்காமல், ‘நான் பரமன் என்று வேதம் கூறுகிறது’ என்று புத்தக அறிவைப் பெறுபவர்கள் இன்பம் அடைவது இல்லை. கைகளால் தொடும் அனைத்துப் பொருள்களையும் கடவுளாக அனுபவிப்பவர்கள்தான் வாழ்க்கை என்ற புதிரின் விடையை கண்டு பிடித்தவர்கள். இவர்களின் விடையை சரிபார்க்க மட்டுமே வேதங்களின் இறுதிக் கருத்து உதவும்.

முடிவுரை :

வாழ்வு என்பது ஒரு புதிர் அல்ல. அது ஒரு ஆத்ம அனுபவம். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்ற கேள்விக்கு மதகுருமார்கள், தத்துவ ஞானிகள், அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுனர்கள் போன்றவர்கள் பலவிதமான பதில்களை கொடுத்து இருக்கிறார்கள். மனித இனத்தின் வரலாற்றைப் பார்த்தால் இந்த பதில்கள் ஒவ்வொன்றும் பல கேள்விகளை உருவாக்கி, மனித வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்றியிருப்பது தெரியவரும்.

வாழ்க்கை மனம் சம்பந்தப்பட்டது அன்று. அது மனதிற்கு அப்பாற்பட்டது. வாழ்வு என்றால் என்ன என்பதை மனதால் புரிந்து கொள்ளவே முடியாது. புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் இன்பமாக வாழ்வதற்கு மனம் நமக்குத் தேவையில்லை.

ஞானம் (wisdom) என்பது புதிதாக ஒன்றைத் தெரிந்து கொள்வது அல்ல. அது எந்தக் கேள்விக்கான பதிலும் இல்லை. கேள்விகள் எதுவும் இல்லாமல் ஆனந்தமாக இருக்கும் நிலையே ஞானம். வாழ்வில் அது ஒரு நிகழ்வு அல்ல. வாழ்வு முழுவதும் தொடரும் ஒரு ஆனந்த அனுபவம் அது.

இதைச்செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பது போன்று எந்த வித கட்டாயமும் இல்லாமல் சுதந்திரமாக இந்தக் கணம் நமக்கு ஏற்படுத்தும் அனைத்து அனுபவங்களையும் இனிமையாக அனுபவிப்பது மட்டுமே வாழ்வின் நோக்கம்.

மனிதன் நன்றிகெட்டவன். அவனது இனிய அனுபவத்திற்காக மட்டுமே இந்த பரந்த பிரபஞ்சம் காத்திருக்கிறது. உதிக்கும் சூரியனையோ, மலரும் மலரையோ, பறக்கும் பறவைகளையோ அவன் கவனிப்பதே கிடையாது. எங்கோ இருக்கும் சுவர்க்கத்திற்கு போகவேண்டும் என்ற ஆசை, எதிரே இருக்கும் உலகை அவன் கண்களில் இருந்து மறைத்து விடுகிறது. இந்த பிரம்மாண்டமான கனவு உலகில் இன்பமாக வாழ முதலில் விழிப்பு ஏற்படவேண்டும். இந்தக் கணத்தில் நமக்கு ஏற்படும் அனுபவங்களை முழுமையாக ஏற்று மகிழ்வதைத்தவிர வாழ்வில் வேறு நோக்கம் எதுவும் இல்லை. இந்த அறிவு மனதில் நிலைபெற்றபின்தான் அவனுக்கு நன்றியுணர்வு ஏற்படும்.

பறக்கும் பட்டாம்பூச்சியைத் துரத்தி ஓடும் குழந்தையைப் பார்த்து ‘நீ எதற்காக ஓடுகிறாய்?’ என்று கேட்டால் அது நம்மை பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல் பார்க்குமே தவிர பதில் சொல்லாது. வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்று நினைப்பவர்கள் பைத்தியக்காரர்கள்தான்.

நீ என்னை எதற்காக காதலிக்கிறாய் என்றக் கேள்விக்கு பதில் சொல்ல முடிந்தால் அது காதல் அல்ல. அதுபோல் ஒரு குறிக்கோளை நோக்கி வாழ்பவர்கள் வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள். காதலிப்பதுதான் குறிக்கோள். இந்தப் படைப்பு முழுவதையும் காதலிப்பதுதான் வாழ்க்கை.

ஆனந்தம் என்பது அடையப்பட வேண்டிய ஒன்று அல்ல. வாழ்வே ஆனந்தம். ஒவ்வொருக் கணமும் நமக்கு அளிக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கவிடாமல் தடை செய்வது நமது குறிக்கோள்கள். இறைவனின் ஆனந்தத் தாண்டவம் நம்மைச் சுற்றி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அந்த ஆனந்த மழையில் நனைய நாம் குழந்தையைப் போல எவ்வித குறிக்கோளும் இல்லாமல் விளையாட்டுத் தனமாய் இருக்க வேண்டும்.


பயிற்சிக்காக :

1.உலகம் துன்பம் தருவதாகத் தோன்றுவதற்குக் காரணம் என்ன?

2. இயற்கைத் துன்பம் செயற்கைத் துன்பத்திலிருந்து எந்த வகையில் வேறு படுகிறது?

3.இன்பத்தை அடையும் வழி யாது?

4.கடவுளைச் சுவைக்க முடியுமா?

5. செயற்க்கையான துன்பத்தைத் தரும் ஆசையைத் தவிர்க்க நாம் பெற வேண்டிய இரு அறிவுகள் எவை?

சுயசிந்தனைக்காக :

1. “Vedanta: Seven steps to Samadhi”, “The voice of silence” என்ற ஓஷோவின் புத்தகங்களைப் படிக்கவும்.

2.இரு கைகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் என்ற உதாரணத்தின் மூலம் கூறப்பட்ட இரண்டு கருத்துக்கள் யாவை?

3.குறிக்கோள்கள் இல்லாமல் பொருளாதார முன்னேற்றம் எப்படி ஏற்படும்?

4. பெருமாள் என்ற பெயரின் பெயற்காரணத்தை ஆராய்க.

Friday, December 7, 2012

Lesson 180: Word is God (Brahmasutram 4.3.2)


பாடம் 180: ஞானியின் பார்வை Dr. விஜய் S சங்கர் MD PhD.
பாடல்: 519 (IV.3.2)

வார்த்தையில் இருந்தே உலகம் உருவானது என்ற உண்மையை “அனைத்தும் ஆத்மாவின் பெயர்கள் மட்டுமே” என்ற மந்திரத்தின் மூலம் ஐதரேய உபநிஷதம் (3.2) கூறுகிறது. மாயையான இந்த உலகத்தை ஒரு ஒளி-ஒலி காட்சி என்று வர்ணிக்கும் டாக்டர் விஜய் சங்கரின் கருத்துக்களை இந்தப்பாடம் தருகிறது.

மனிதனின் துன்பத்துக்கு காரணம்

தான் செயல்களை செய்பவன் என்ற எண்ணம் மனிதனுக்கு இருப்பதால் மட்டுமே அவன் துன்பம் அடைகிறான். மனதில் என்ன எண்ணங்கள் எப்போது தோன்றும் என்பதும் அதில் எந்த எண்ணங்கள் செயலாக மாறும் என்பதும் அவனது கட்டுப்பாட்டில் இல்லை.  ‘செயல்’ என்பதே மனித மனத்தின் கற்பனை.


இல்லாத உலகம்

உலகம் என்ற ஒளி-ஒலி காட்சி, வெள்ளித்திரைமேல் காட்டப்படும் திரைப்படம் போல் தொடர்ந்து மாற்றம் அடைந்து கொண்டு இருக்கிறது. திரைப்படத்தில் ஒளி, ஒலி தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒளியையும் ஒலியையும் ஒன்று சேர்த்து இடம், காலம், உருவங்கள், எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவற்றை கற்பனை செய்து கொண்டு உணர்ச்சிகளை மனித மனம் உருவாக்குகிறது. வில்லன் கதாநாயகியை கொலை செய்யப் போகிறான் என்பது வெறும் கற்பனை மட்டுமே. ஏனெனில் உண்மையில் இருப்பது ஒளி-ஒலி மட்டுமே.

இந்தத் திரைப்பட உவமை வாழ்வுக்கு முற்றிலும் பொருந்தும். திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள் தான் செயல்களை செய்வதாக எண்ணுவதுபோல் தன் வசமின்றி இயங்கும் உடலின் (ஒளி) மாற்றங்களையும் மனதின் (ஒலி) மாற்றங்களையும் தனது செயல்களாக மனிதன் நினைக்கிறான். தோன்றுவதும் மறைவதும் தன் கையில் இல்லாத போது இடைப்பட்ட வாழ்வு மட்டும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைப்பது அறியாமை. நினைவு தெரிந்த நாள் முதல் மரணம் வரை இந்த அறியாமை தொடர்வதால் மனிதன் தன் சுயமுயற்சியால் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்ற கற்பனை, உண்மை போல் காட்சி அளிக்கிறது.

நீள அகலம் மட்டுமே உடைய திரையில் உலகம் முப்பரிமாணத்துடன் தெரிவது போல ஒருங்கிணைந்த மாற்றத்தை (singular movement) நாம் பிரபஞ்சமாக பார்க்கிறோம். ஒலிபெருக்கியிலிருந்து வரும் சப்தத்தை திரையில் தோன்றும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் பேசுவதுபோல நாம் பார்க்கிறோம். அதுபோல வெவ்வேறு அலைவரிசைகளில் நடக்கும் ஒருங்கிணைந்த மாற்றத்தை நாம் வார்த்தைகளாகவும் எண்ணங்களாகவும் அறிகிறோம்.

காட்டப்படும் திரைப்படத்தில் ஒன்றி அந்தக் கதையை உண்மையான வாழ்க்கை எண்ணுவதுபோல ஒருங்கிணைந்த மாற்றத்தை நாம் உலகமாக பார்க்கிறோம்.


கற்பனையான வாழ்வு    

வாழ்க்கை என்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிறது என்பது நமது கற்பனையே. நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களும் தொடர்ந்து மாறுகின்றன. இந்த மாற்றம் நாம் பிறப்பதற்கு முன்பும் இருந்தது; இறந்த பின்னும் தொடரும். ஆதி அந்தம் இல்லாத ஒரு மாற்றத்தில் தொடக்கம்-முடிவு என்பதை வரையறுக்க முடியாது.

சுழலும் சக்கரத்தில் எந்த வித நியாயமும் இன்றி ஏதோ ஒரு புள்ளியை ஆரம்பம்  என்று கற்பனை செய்து அதன் பின் சக்கரத்தின் சுழற்சியை கணக்கிடுவது போல நாம் நம் வயதை கணக்கிடுகின்றோம். அனைவரது விடையும் ஒத்து இருப்பதால் பொய் உண்மை ஆகிவிடாது. உலகம் என்ற ஒளி ஒலி காட்சியில் தனி மனிதர்கள் என்று யாரும் இல்லை.


அனைத்தும் மாயை

இருப்பது ஒருங்கிணைந்த மாற்றம் அல்லது மாயா சக்தியுடன் கூடிய பரமன் மட்டுமே. இருக்கும் அந்த ஒன்றை நாம் உலகமாகவும் வாழ்க்கையாகவும் தவறாக அறிகிறோம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் வெவ்வேறு அலைவரிசையில் (frequency) வெவ்வேறு அழுத்தத்துடன் (intensity) வெளியாகும் ஒளி-ஒலிகளின் தொகுப்பே. திடமான பொருள் என்று எதுவும் கிடையாது. போட்டான் (photon) என்ற ஒரே ஒரு ஒளித்துகளை மட்டுமே நம் கண்ணால் ஒரு கணத்தில் பார்க்க முடியும். தொடர்ந்து தென்படும் இந்த ஒளித்துகள்களை ஒன்றாக கோர்த்து வெவ்வேறு உருவங்களை மனம் கற்பனை செய்துகொள்கிறது.

இதுபோல் கற்பனை செய்வதற்கு ஒலி அவசியம். ஒலியில் இரண்டு வகை உண்டு. காதினால் கேட்கப்படகூடிய ஒலி; கேட்கமுடியாத ஒலி. எண்ணங்கள் என்பவை கேட்க முடியாத ஒலி வகையை சாரும். இவ்விரண்டு வகை ஒலிகளுக்கும் பொருள் கிடையாது. பொருளை கற்பனை செய்துகொள்வது மனித மனமே.

எவ்வளவுதான் முயன்றாலும் நம்மால் நாம் ஆறு மாத குழந்தையாய் இருந்த போது நடந்த நிகழ்வுகளை நினைவுகூற முடியாது. ஏனெனில் நிகழ்வுகள் என்று எதுவுமே இல்லை. நிகழ்வுகள் இருப்பதாக கற்பனை செய்து கொள்வது குழந்தைக்கு சாத்தியம் இல்லை. ஏனெனில் அர்த்தம் இல்லாதஅம்மாஎன்ற ஒரு ஒலியை பிரிக்கமுடியாத ஒளித்தொகுப்பில் ஒரு குறிப்பிட்ட உருவத்துடன் சம்பந்தப் படுத்தி இவள் தன் தாயார் என்ற கற்பனையை வளர்த்திக்கொள்ள எண்ணங்கள் முதிர்ச்சி (sophistication) அடைவது அவசியம்.

இதனாலேயே வார்த்தையிலிருந்து உலகம் பிறந்தது என்று கூறப்படுகிறது. அம்மா என்ற வார்த்தையின் ஒலியை ஒரு குறிப்பிட்ட உருவத்துடன் ஒன்றுபடுத்தி அம்மா என்ற எண்ணம் உருவாகும் பொழுதுதான் உலகம் உருவாக ஆரம்பிக்கிறது. இது போல எவ்வித உறவும் இல்லாத ஒளி-ஒலி தொகுப்பை ஒன்றுடன் ஒன்றை சம்பந்தப்படுத்தி, எண்ணங்களால் அதாவது வார்த்தைகளால்ஆன ஒரு உலகை மனித மனம் சிருஷ்டிக்கிறது.

கண்ணுக்குத் தெரிவதை நாம் பார்ப்பதில்லை. மனதுக்குத் தோன்றுவதைத்தான் நாம் பார்க்கிறோம். நம் கண்ணுக்குத் தெரிவது ஒரே ஒரு ஒளித்துகள் மட்டுமே. அவற்றை ஒவ்வொன்றாக கோர்த்து ஒரு பொருளை பார்ப்பதற்கு எண்ணங்கள் அவசியம். மரம், வீடு, மனிதன் என்று வெவ்வேறு பெயர்களை கற்பனை செய்து மனதில் சேர்த்து வைத்து இருப்பதால் பார்க்கும் ஒளித்துகள்களை சிரமமின்றி கோர்த்து வெவ்வேறு பொருள்களாக நாம் பார்க்கிறோம். உண்மையில் இருப்பது பிரிக்கமுடியாத இடைவெளி இல்லாத ஒரே ஒளி-ஒலி தொகுப்பு மட்டுமே.

கேட்கும் ஒலி இடைவெளி என்று ஒன்று இருப்பதாக நம்மை நம்பவைக்கிறது. வெளியில் இருந்து ஒலி உருவானதாக வேதம் கூறுவதை ஒலியில் இருந்து வெளி உருவானதாக கூட எடுத்துக்கொள்ளலாம். காரண காரியம் என்பதே நமது கற்பனை. இரு காதுகள் மூலம் பதிவாகும் ஒலி வெவ்வேறு இடங்களில் இருந்து வருவதாக நினைப்பது மனம். இவ்வாறு வெளி என்பது உருவாகும்பொழுது அதனுடன் காலம் என்பதும் உருவாகிறது.
காலம் இருப்பதற்கு வெளி அவசியம். வெளியை உணருவதற்கு காலம் அவசியம். இருப்பது இந்தக்கணத்தில் தோன்றும் ஒளி-ஒலி மட்டும்தான். இதை இடம், காலம், பொருள் என்று பிரிவினை செய்வது மனித மனம். மனித மனதில் தோன்றும் எண்ணங்களாலேயே இந்த உலகம் இருப்பது போல தென்படுகிறது. ஆனால் இதுபோல் உலகத்தை உருவாக்குவது கூட மனிதனின் செயல் அல்ல. ஏனெனில் செயல் என்று எதுவுமே இல்லை. காரண காரியங்களும் இல்லை. எண்ணங்கள் என்பவையும் ஒலியின் வடிவங்களே. எனவே இல்லாத உலகம் இருப்பதாக மனித மனம் நம்புவதும் மாயையே. எனவே, துன்பத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணமும், அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டதாக ஏற்படும் எண்ணமும் இந்த ஒளி-ஒலிகாட்சியின் ஒரு பகுதியே.

ஆக, பார்க்கப்படும் பொருள், பார்ப்பவன், பார்வை ஆகிய மூன்றும் ஒன்றே. பெயரில்லாத அந்த ஒன்றை பரமன் என்று பெயரிட்டு பரமனை அறிய முயலும் முக்திவிழைவோர்களும் தாங்கள் உருவாக்கிய மாயையின் பிடியிலேயே இருக்கிறார்கள். மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் தனக்கும் எவ்வித உறவும் இல்லை என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் துன்பம் அடைவது இல்லை.

நான் என்ற கற்பனைக்கதையின் பிடியில் செயல் படும் பற்றுடையோர்கள் தனக்கும் தான் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதை அறிவதில்லை. திரையில் தெரியும் திரைப்படத்தைப் போல, இருப்பது பிளவுபடாத ஒரே ஒளி-ஒலி காட்சி. உலகம் என்பது ஒரு கற்பனை.


காலமும் வெளியும் மனதின் கற்பனை

பிரபஞ்சத்தின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது முழுவதும் இருப்பது இந்தக்கணத்தில் மட்டும்தான். காலம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் அதன் ஓட்டம் முழுவதும் நடப்பது இந்தக்கணத்தில் மட்டும்தான்.

திரையில் தோன்றும் திரைப்படத்துடன் உலகை ஒப்பிடும்போது அனைத்தும் ஒரே ஒளி-ஒலி தொகுப்பு என்ற கருத்தை புரிந்து கொள்ளலாம். ஆனாலும் அந்தத் திரை நீள அகலங்களுடன் இருப்பதாலும் படம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி ஓரிரு மணி நேரத்தில் முடிந்துவிடும் என்பதாலும் காலம்-வெளி ஆகிய இரண்டும் கற்பனை என்ற கருத்து புரிவதில்லை. அடுத்தடுத்து தென்படும் எவ்வித அசைவும் இல்லாத நிழல் படங்களின் தொகுப்புதான் திரைப்படம். வேகமாக மாறும் நிழல் படங்களை பார்க்கும் திறன் கண்ணுக்கு இல்லாததால் அவற்றை ஒரு திரைப்படமாக நாம் பார்க்கிறோம். அது போல இருப்பது இந்தக் கணம் மட்டும் தான். கணம் என்பது நிமிடம், வினாடி என்பதுபோன்ற கற்பனையான  காலத்தின் அளவு அல்ல. ஒளி-ஒலியுடன் கூடிய ஒரு கணம், முழுமையானது. காலத்துக்கு அப்பாற்பட்ட இந்த கணத்தை,  மாயையுடன் கூடிய பரமன் என்றும் கூறலாம்.

வார்த்தைக்கும் மனதுக்கும் எட்டாதவன் பரமன் என்று கேன உபநிஷத மந்திரம் (1.3) கூறுகிறது. வார்த்தை என்பதும் எண்ணம் என்பதும் வெவ்வேறு ஒலி வடிவங்கள். பொருள் இல்லாத ஒளியுடன் அர்த்தம் இல்லாத ஒலியை சம்பந்தப்படுத்தி கற்பனையான ஒரு உலகத்தை வார்த்தைகளால் உருவாக்கி அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் என்ற கற்பனை கதையால் இந்தக்கணத்தினுள் எட்டிப் பார்க்க முடியாது.

திரைப்படம் பார்க்கும் உவமையே கால தேசத்திற்குள் அடங்கியது. படத்தில் தெரியும் காட்சி மனதில் பதிவாகி உணர்வுகளை உண்டாக்க சிறிது நேரம் ஆகும். அதுபோல் பிளவுபடாத ஒளித்தொகுப்பின் மாற்றங்களை ஒலியுடன் சேர்த்து இல்லாத பொருளை உண்டாக்க நம் மனதுக்கு சிறிது நேரம் ஆகும். அதாவது நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் நடந்து முடிந்த ஒளி மாற்றங்களின் வர்ணனை. நிகழ்காலத்தில் நடைபெறும் வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சியில் அதைபற்றி நம் மனதில் தோன்றும் வர்ணனையும் ஒரு பகுதி.

கடந்தகாலத்தை பார்க்க முடியாது. ஆனாலும் நாம் பார்க்கும் நட்சத்திரம் நான்கு வருடங்களுக்கு முந்தையது என்றும் அது இப்போது அழிந்து போனால் நான்கு வருடங்களுக்கு பிறகுதான் நமக்குத் தெரியவரும் என்றும் வானவியல் அறிஞர்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் இது போன்ற பொய்களை உண்மை என்று ஏற்காவிடில் நாம் நம் கற்பனையால் உருவாக்கிய மாயமான உலகம் உடைந்து போய்விடும்.


மனம் தேவையில்லை

வாழ்க்கையை வாழ மனம் தேவை இல்லை. மனதில் தோன்றும் எண்ணங்கள்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பது மூடநம்பிக்கை. தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் தோன்றியபின் தண்ணீர் குடிக்கும் செயலை நாம் செய்கிறோம் என்பதனால் மனம் உடலை ஆட்சி செய்கிறது என்று முடிவு செய்யக்கூடாது. ஒளி மாற்றங்களுக்கு முன்போ பின்போ அதை பற்றிய எண்ணங்கள் மனதில் ஏற்படுவது மாயையின் செயல். நாம் நம் வாழ்க்கையை நமது முயற்சியால் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தது நடப்பதுபோன்ற நாடகம் நடக்கிறது.

அனைத்து மாற்றங்களும் இந்தக்கணத்தில் மட்டுமே இருக்கின்றன. மனதில் ஏற்படும் எண்ணங்கள் அனைத்தும் இந்தக்கணத்திலேயே ஏற்படுகின்றன. காலம் என்பதை உண்மை என்று நினைக்கும் பற்றுடையோர்கள் ஒளிமாற்றங்களுக்கு செயல்கள் என்று பெயரிட்டு, நான் இந்த செயலை செய்தேன் என்ற எண்ணத்துடன் வாழ்வார்கள். காலம் என்பதை கற்பனை என்று கூடிய விரைவில் புரிந்துகொள்வேன் என்ற எண்ணத்தை மனதில் தோற்றுவிற்பதன் மூலம் முக்திவிழைவோர்களை தொடர்ந்து மாயை தன் பிடியில் வைத்திருக்கும். காலத்தை வென்ற முற்றுணர்ந்தோர்கள் காலனின் பிடியில் இருந்து தப்பித்து மரணமில்லா பெருவாழ்வை வாழ்வதும் மாயையின் விளையாட்டே.


மனிதன் எதையும் செய்வதில்லை.

ஆரம்பமும் முடிவும் இல்லாத இயக்கத்தில் செயல் என்பதே கிடையாது. காலை எழுந்ததும்பல் தேய்ப்பதுஎன்பது ஒரு செயல் அல்ல. மனம் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்குபல் தேய்த்தல்என்ற பெயரை வைப்பது (labeling) மட்டும்தான் நிகழ்கிறது. பெயர் வைத்துவிட்டதால் அதற்கு தான் உரிமையாளன் என்ற நினைவு மனிதனின் துன்பத்துக்கு காரணமாகிறது. செயல் என்பது வெளி உலகில் இல்லை. நம் மனதில் மட்டுமே இருக்கிறது. நடந்து முடிந்ததைப் பற்றி நினைப்பது செயல் அல்ல. அதேபோல் ஒரு செயலை செய்யலாமா வேண்டாமா என்ற எண்ணம் மனதில் தோன்றுவதால் ‘செயல்களை செய்பவன்’ என்ற பொறுப்பு நமக்கு ஏற்பட்டுவிடாது. எவ்வித அர்த்தமும் இல்லாத ஒலி வர்ணனை நம் மனதில் ஓயாது கேட்டுக்கொண்டு இருப்பது மாயையின் விளையாட்டு. இந்த வர்ணனையின் அடிப்படையில் நாம் செயல்படுவதில்லை. உடல் என்னும் ஒளி நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்போது ‘நான் நடக்கிறேன்’ என்ற நினைவு நமது மனதில் தோன்றுகிறது. நடந்து செல்வதும். நான் நடக்கிறேன் என்று எண்ணம் ஏற்படுவதுவும் நம் வசமின்றி தானாக ஏற்படும் ஒளி-ஒலி மாற்றங்கள்.

ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழுவதும் அடங்கி இருப்பதால் நம் உடலின் இயக்கத்திற்கு அது பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. தூக்கத்தில் பேசுவதும் நடப்பதும் ஒரு அசாதரணமான நிகழ்வுகள் என்று கருதப்படுகிறது. ஆனால் விழித்திருக்கும் பொழுதுகூட மனம் நம் உடலை கட்டுப்படுத்துவதில்லை. காலையில் விழித்ததும் மனதில் ஏற்படும் எண்ணங்களில் நான் என்ற எண்ணமும் ஒன்று. அதனால் எதையும் செய்ய இயலாது. கேட்பது, பேசுவது, சுவைப்பது, நுகருவது ஆகிய அனைத்தும் மனிதனின் அகங்காரத்தின் துணை இன்றி தானே நடக்கும். ஏற்படும் அனுபவங்களுக்கு அனாவசியமாக பொறுப்பேற்றுக் கொள்வதினாலேயே மனிதன் துயரப்படுகிறான்.


அடையாளம் காண்பது புரிந்து கொள்வது அல்ல

ஒளியையும் ஒலியையும் ஒன்றுபடுத்தி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து இருப்பதால் மனிதர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் என்ற பிரம்மையில் வாழ்கிறார்கள். இது ஒரு நாற்காலி என்பது வெறும் அடையாளம் காணும் திறன். நாற்காலியை வெறும் வார்த்தை என்றும் அங்கு உண்மையில் எந்தப்பொருளும் இல்லை என்று அறிவதும்தான் உண்மையான அறிவு.

இல்லாத உலகை இருப்பதாக அனைவரும் நம்புவதற்கு தனி மனிதனின் இந்த அடையாளம் காட்டும் திறன் மட்டுமே ஆதாரமாக இருக்கிறது. இது அம்மா, இது அப்பா என்று அர்த்தம் அற்ற வார்த்தைகளுக்கு இல்லாத மனிதர்களை அடையாளம் காட்ட குழந்தைக்கு சொல்லித்தருவது இந்த அடையாளம் காட்டும் திறனை வலுப்படுத்தும் விதம் ஆகும்.

மனம் சுற்றியுள்ள பொருள்களை அடையாளம் காட்டுவதனால் மட்டுமேஉண்மையானஒரு உலகம் இருக்கிறது. எனவே ஒருங்கிணைந்த ஒளித்தொகுப்பில் தான் ஒரு தனி மனிதன் என்ற எண்ணம் மனதில் ஏற்படுவதன் மூலம் இல்லாத உலகம் இருப்பதுபோல் தோன்றுகிறது. எண்ணங்கள் ஏதும் இல்லாவிட்டால் உலகம் இல்லை. சிறுகுழந்தை மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய இரு நிலைகளில் எண்ணங்கள் ஏதும் இல்லை என்பதால் உலகம் இருப்பதில்லை.

உலகம் இல்லை என்பதால் செயல்கள் ஏதும் இல்லை. எனவே வாழ்வில் துன்பம் என்பதுவும் இல்லை. நடக்கவேண்டியவை அனைத்தும் மிகச்சரியாக நம்முடைய முயற்சியோ அனுமதியோ இல்லாமல் நடப்பதால் நாம் இன்பமாக இருக்கலாம்.

முடிவுரை :

நட்சத்திரங்கள், கிரகங்கள், ஜடப்பொருள்கள், உயிரினங்கள் ஆகிய அனைத்தும் ஒரு கணத்தில் தோன்றும் ஒளி-ஒலி காட்சி. இந்த காட்சியின் அடிப்படையில் காலம், தேசம், பொருள், காரண-காரியம் ஆகிய நான்கையும் கற்பனை செய்து தான் சுதந்திரத்துடன் செயல்படும் ஒரு தனி மனிதன் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாழ்வது இந்த ஒளி-ஒலி காட்சியின் ஒரு பகுதி. அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு அநேகர் மனதில் எழுவதும் புதிரை விடுவிக்க ஆண்டவன் என்ற கற்பனையை உருவாக்குவதும் இந்த நாடகத்தில் ஒரு அங்கமே.

இந்த பிரபஞ்சத்தில் நாம ரூபங்களைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற அறிவு ஒரு சில மனிதர்களுக்கு ஏற்பட்டவுடன் அவர்களுக்கு மனிதனால் எதையும் செய்ய முடியாது என்பது புரியும். இந்த அறிவைப்பெற யாராலும் எந்த முயற்சியையும் செய்ய முடியாது. ஏனெனில் செயல் என்பதே மனதின் கற்பனை.

ஒரு சிலர் எப்போதும் ஆரோக்கியம் குறையாமல் வலுவான உடலுடன் இருப்பார்கள். மற்றும் சிலர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். எஞ்சியவர்கள் இந்த இரு எதிர்முனைகளுக்கு இடையே ஏதாவது  ஒரு நிலையில் இருப்பார்கள். எடை கூட வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள், எடை குறைய வேண்டும் என்று முயற்சி செய்பவர்களைப்போல ஏமாற்றமே அடைவார்கள். உடல் நிலை அவரவர் கட்டுப்பாட்டில் இல்லை. அது போல மனதின் நிலையும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு சிலருக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் தொடர்ந்து துன்பத்தில் ஆழ்ந்து இருப்பர். அதேபோல் வேறு சிலர் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் நிம்மதியாக இருப்பார்கள். எஞ்சியவர்கள் இந்த இரு எதிர்முனைகளுக்கு நடுவே ஏதாவது ஒரு நிலையில் இருப்பார்கள். துன்பத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்று பற்றுடையோர்கள் செய்யும் முயற்சி நீடித்த இன்பம் வேண்டும் என்று முக்திவிழைவோர்களின் முயற்சியைப்போல தோல்வியிலேயே முடியும். தன்னால் எதையும் செய்ய முடியாது என்ற எண்ணம் மனதில் நிலைபெறும்போது ‘முயற்சி செய்வது’ முடிவுக்கு வந்துவிடும். அதன் பின் உலகம் என்னும் நாடகமேடையில் தன் உடலும் மனமும் ஆடும் ஆட்டத்தை இன்பமாக அனுபவிக்கலாம்.

பயிற்சிக்காக :

1.மனிதனின் துன்பத்துக்கு காரணம் என்ன?

2. எண்ணங்கள் முதிர்ச்சி (sophistication) அடைவது என்றால் என்ன?

3.அடையாளம் காண்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

4.வாழ்க்கையை வாழ மனம் தேவையில்லை என்பதை விளக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1. சங்கர் அவர்களின் Non-Duality Life as it is குறும்படத்தை பார்க்கவும் (http://www.acadun.com/en/)?

2. நட்சத்திரங்களின் ஒளி நம்மை வந்து சேர குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் ஆகும் என்பது உண்மையா?

3. முற்றுணர்ந்தோனாக என்ன செய்ய வேண்டும்?

Monday, November 26, 2012

Lesson 179: Light is the only path to Brahmaloka (Brahma Sutra 4.3.1)


பாடம் 179: ஞானியின் பார்வை ஏசு கிருஸ்து
பாடல் 518 (IV.3.1)

“கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும்” என்று கூறிய ஏசு கிருஸ்துவின் பார்வையில், உலகம், கடவுள், மனிதன், துன்பத்திற்கு காரணம், துன்பத்திலிருந்து விடுதலை அடையும் வழி,  விடுதலை அடைந்தபின் அமையும் வாழ்வு ஆகிய ஆறு கருத்துக்களை இந்தப்பாடம் தருகிறது.

சூரியனை நோக்கிப்பயணம் செய்யும் ஒரு விண்வெளிக்கலத்தில் இருந்து ஒரு கோடி கிலோமீட்டருக்கு ஒரு தடவை சூரியனைப் புகைப்படம் எடுத்துப் பார்த்தால் சூரியனின் அளவு வேறுபட்டிருக்கும். தூரத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தில் இருக்கும் சூரியன் அருகில் இருந்து எடுத்த படத்தில் இருப்பதை விட மிகச்சிறிய அளவில் இருக்கும். ஆனால் அனைத்துப்படங்களும் காண்பிப்பது சூரியனையே.

அதுபோல ஆன்மிகப்பயணத்தின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் காணும் கடவுள், பயணத்தை முடித்த ஞானிகள் காணும் கடவுளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தாலும் அனைவரின் பார்வையில் தென்படுவதும் கடவுளே. புகைப்படத்தில் இருப்பதுதான் சூரியன் என்ற அறிவுடன் இருப்பவர்கள் எது சரியான புகைப்படம் என்று விவாதிப்பதுப்போல் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கடவுள்தான் உண்மையானவர் என்று சாதிப்பார்கள். சரியான அறிவை அடையும் தகுதி அனைவருக்கும் இருப்பதில்லை. உண்மையான கடவுளை மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க முயன்ற ஏசுவை பெரும்பான்மையான மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

தான் முழுவதுமாக அறிந்த கடவுளை ஏசு, மற்றவர்களுக்கு அவரவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ற வகையில் அறிமுகம் செய்துவைத்தார். கடவுள் சுவர்க்கத்தில் இருப்பதாகவும் அவரைத் துதித்தால் ஆனந்த வாழ்வை அடையலாம் என்றும் அவர் பற்றுடையோர்களுக்கு கூறினார்.  உனக்குள் இருக்கும் கடவுளே உன்னை வழிநடத்துகிறார் என்று அவர் கடவுளை அறிந்து கொள்ளும் தகுதியை அடைந்த முக்திவிழைவோர்களுக்கு கூறினார்.  இந்த உண்மைப்புரியாமல் முன்னுக்குப்பின் முரணாக பேசி கடவுளை அவமதிக்கிறார் என்ற குற்றத்தை அவர் மேல் அரசு சுமத்தியது.
உலகம்

உலகம் என்பது என்ன என்ற கேள்விக்கு ஒவ்வொரு மனிதனின் பதிலும் வேறுபடும். ஒவ்வொருவரும் தங்கள் ஐந்து புலன்கள் மூலம் சேகரிக்கும் வேறுபட்ட தகவல்களை அறிவின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு விதத்தில் பாகுபாடு செய்து புரிந்துகொள்வதுதான் இதற்குக் காரணம். தான் புரிந்துகொண்ட கருத்துதான் உண்மை என்ற பிடிவாதத்துடன் இருக்காமல் ஏசுநாதர் காட்டிய பாதையில் பயணித்து அவரின் வாய்மொழிகளின் முடிவான அறிவைப் பெற்ற பின்புதான் உலகத்தைப் பற்றிய சரியான அறிவு ஏற்படும்.

புலன்களின் மூலம் பெறும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே அனைத்து அறிவும் ஏற்படும். அனுமானம் (புகையைப் பார்த்து நெருப்பை அறிவது), உபமானம் (தெரிந்த பசுவை வைத்து தெரியாத குதிரையை அறிவது), அர்த்தாபத்தி (ஈரமான சாலையைப் பார்த்து மழை பெய்திருக்க வேண்டும் என்று அறிவது), அனுபலப்தி (காலியான பெட்டியைப் பார்த்து பணம் காணாமல் போனதை அறிவது), சப்தம்   (படித்து அல்லது கேட்டு அறிவது) ஆகிய ஐந்து விதங்களில் நேரடியாக அனுபவித்து அறிய இயலாத பொருட்களைப்பற்றிய அறிவு ஏற்படும். இவையும் ஆளுக்கு ஆள் வேறுபடும்.

தான் அறிவது மட்டும்தான் சரி என்பது பற்றுடையோர்களின் அறிவு. இருக்கும் ஒரே உலகம் வேறுபட்டு காணப்படுகிறது என்ற அறிவு முக்தி விழைவோர்களுக்கு இருக்கும். தனது கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காமல் தனது பாதையில் முன்னேறினால் உலகம் ஒரு மாயை என்று அறியலாம். முடிவான உண்மை ஒன்றுதான் என்பதால் அதை அறிந்தபின் எவ்வித மாறுபாடோ முரண்பாடோ இவ்வுலகில் தென்படாது. வெறும் வார்த்தைகளால் உலகம் உருவானது என்ற கருத்தைத்தான் ஆதியாகமத்திலே யோவான் 1:1 வசனம் ‘ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது’ குறிக்கிறது. மாயா சக்தியுடன் கூடிய பரமன் என்ற இறைவன்தான் இந்த உலகமாக நமக்கு காட்சி அளிக்கிறான். இதை அறிந்தவர்கள் முற்றுணர்ந்தோர். 

கடவுள்

நானும் கடவுளும் ஒன்றுதான் என்பதை யோவான் வசனம் 10:30 கூறுகிறது. இது ஏசு நாதருக்கு மட்டுமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும். முதலில் ஏசு நாதரை மட்டும் கடவுளாக வழிபட்டு மனப்பக்குவம் பெற்றபின்தான் இந்த உண்மையை அறிய முடியும் என்பதை  நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருப்பதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்என்ற யோவான் வசனம் 14:20 கூறுகிறது. மேலும் மத்தேயு வசனம் 5:8 ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்என்று கூறுகிறது.

மிக அதிக பக்கங்கள் உடைய ஒரு புத்தகத்தை படித்து அதன் மையக்கருத்தை ஓரிரு வாக்கியங்களில் அறிந்து கொள்ள பின்வரும் ஆறு சோதனைகளை செய்ய வேண்டும். முகவுரையும் முடிவுரையும் அந்த கருத்தை நிச்சயம் விளக்கியிருக்க வேண்டும். புத்தகம் முழுவதும் அந்த கருத்து அடிக்கடி சொல்லப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கருத்தை உண்மை என்று நிறுவ நிறைய முயற்சிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கருத்தை அறிந்துகொள்வதனால் ஏற்படும் பலன்களின் பட்டியல் தரப்பட்டிருக்க வேண்டும். அந்தக்கருத்து தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். கடைசியில் அந்தக்கருத்து மற்றவற்றை விட உயர்ந்தது என்று புகழப்பட்டிருக்க வேண்டும்.

ஏசுவின் போதனைகள் அவரால் எழுதப்பட்ட ஒரே புத்தகமாக இல்லாமல் அவரது சீடர்களின் குறிப்புகளின் தொகுப்பாக அமைந்திருப்பதால் பரமன் ஒருவனே இவ்வுலகமாக காட்சி அளிக்கிறான் என்ற மையக்கருத்து மற்ற கருத்துக்களுடன் கலந்துவிட்டது. ஐந்து புலன்களுக்கு மட்டுமே தென்படும் இந்த உலகம் ஒரு ஒளி-ஒலி காட்சி. இந்த காட்சிக்கு ஆதாரமாக இருக்கும் பரிசுத்த ஆவியை அறிந்து கொண்டால் உலகமே கடவுள் என்ற உண்மை புலப்படும். நாம் வாழ்வில் எப்போதும் கடவுளையே அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.
மனிதன்

உலகமே கடவுள் என்பதால் பரமன் என்கிற பரிசுத்த ஆவியை அறிய உலகப் பயணம் மேற்கொள்ளத் தேவை இல்லை. தான் யார் என்று அறிந்தாலே போதும். இறைவனை பிதாவாகவும் மனிதனை பிள்ளையாகவும் சித்தரித்து, இந்த உருவங்களுக்கு ஆதாரமாக இருப்பது பரிசுத்த ஆவி மட்டுமே என்று ஏசுநாதர் விளக்கியுள்ளார். இந்த உண்மையை அறியாமல் தான் உலகில் இருந்து வேறுபட்ட ஒரு தனி மனிதன் என்ற கற்பனை கதையை பாவி என்று ஏசு குறிப்பிடுகிறார்.

மனிதனின் வாழ்க்கை

தேன் எடுக்க மரத்தின் மீது ஏறிய மனிதன் புலியிடம் இருந்து தப்ப கீழே இருந்த பாழுங்கிணறு ஒன்றில் குதித்தான். அவன் பற்றிக்கொண்டிருந்த வேரை ஒரு எலி கடித்து அறுத்துக்கொண்டிருந்தது. அந்த எலியை நோக்கி நகரும் பாம்பு இவன் கை அருகே இருந்தது. மேலே ஏறினால் புலி காத்துக்கொண்டிருக்கிறது. கீழே விழுந்தால் பாறைகளில் அடிபட்டு இறப்பது உறுதி. தேன் கூட்டை கலைத்து விட்டிருந்ததால் தேனீக்கள் அவனை கொட்டத்துவங்கின. இந்த நிலையில் ஒரு துளி தேன் மேலிருந்து தற்செயலாக அவன் வாய்க்குள் விழுந்தது

பாழுங்கிணற்றில் உயிருக்கு உசலாடும் மனிதன் தன் நாக்கில் விழுந்த ஒரு துளி தேனை இரசித்து சுவைப்பது போல் நான் என்ற கற்பனைக்கதையின் பிடியில் வாழ்க்கை முழுவதும் துன்பப்படும் மனிதர்கள் எப்போதேனும் தன்னை மறந்த நிலையில் மட்டும் சிலக்கணங்கள் ஆனந்த அனுபவங்களை பெறுகிறார்கள். நான் என்ற கற்பனைக்கதையை ஆதாரமாக நினைத்து வாழ்வது துன்பம். பாவியாக இருக்கும் வரை இந்த துன்பத்தை மாற்றமுடியாது. தான் கடவுள் என்று அறியாத அனைவரும் பாவிகள்தான் என்பதையும் பாவத்தின் சம்பளம் மரணம் என்பதையும் ஏசு எடுத்துகூறினார். இந்த உலகம் வெறும் வார்த்தையால் ஆனது என்பதை அறிந்தவர்கள் உடலை தான் என்று நினைப்பதில்லை என்பதால் அவர்கள் அனைவரும் மரணத்தை வெல்வார்கள். (யோவான் 1:12-13)      

துன்பங்களுக்கு காரணம்

பாவியாக இருப்பது மட்டுமே துன்பங்களுக்கு காரணம். எவ்வித செயலையும் செய்ய இயலாத இந்த நான் என்ற கற்பனைக்கதை உலக பாரம் அனைத்தையும் சுமப்பதாக நினைப்பது அறியாமை. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் என்று ஏசு அழைக்கிறார். அனைவரது துன்பங்களையும் தான் சிலுவையை தூக்கி ஏற்றுக்கொண்டு விட்டதால் மக்கள் நிம்மதியாகவும் ஆனந்தமாகவும் வாழலாம் என்று அவர் கூறுகிறார்.

துன்பங்களை நீக்க வழி

நான் என்ற கற்பனைக்கதையை உண்மை என்று நம்பும் பாவியாக இல்லாமல் இறைவனிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதன் மூலம் துன்பங்களிலிருந்து முழுதாக நாம் விடுதலை பெறலாம். யோவான் வசனம் 8:32 ‘சத்தியத்தை அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்என்று கூறுகிறது.

உன்னுடையது என்று இருக்கும் அனைத்தையும் துறந்து என்னை பின்பற்று. நான் உனக்கு சுவர்க்கத்தைக் காட்டுகிறேன் என்றார் ஏசு (மத்தேயு 19:21). இருப்பதனைத்தும் இறைவனது என்பதை அறியாமல் உனது எனது என்று சொந்தம் கொண்டாடும் வரை துன்பத்தை அகற்ற முடியாது.

அருந்ததி நட்சத்திரத்தை சுட்டிக்காட்ட, அதன் பக்கத்தில் இருக்கும் சற்று அதிக ஒளியுள்ள ஒரு நட்சத்திரத்தைக் காட்டி, அதைப்பார்க்கும் அளவுக்கு கண் பார்வை குவிந்த பின் அருந்ததியை காட்டித்தருவது போல கண்ணுக்குத்தெரியாத கடவுளைக் காட்டித் தர அருகில் இருக்கும் தன்னைக் காட்டி தன்னை கடவுளின் மகனாக அறிமுகம் செய்துகொண்டார். அதன்பின் அனைவரும் தனது சகோதரர்கள் (எபிரேயர் 2.11) என்பதனால் கடவுளின் உருவமே என்பதை ஏசு எடுத்துரைத்தார். தான் பாவி என்பதை முதலில் ஏற்றுக்கொண்டு அதன் பின் ஏன் நான் பாவியாக இருக்கிறேன் என்பதை அறிய ஆசை படுபவர்கள் மட்டுமே உண்மையை அறியும் தகுதி உடையவர்கள்.

பாவி எனப்படுபவன் தன் மனதினுள் உருவாகியிருக்கும் கற்பனைக்கதை என்பதை அறிந்தவுடன் உள்ளே இருந்து அனைவரையும் உயிர்ப்பிக்கும் பரிசுத்த ஆவி நிரந்தரமானது என்பதை அறியமுடியும். மாறும் தன்மையுள்ள உடலையும் மனதையும் நான் என்று அறிபவர்கள் இந்த வாழ்வை தொலைத்து விடுவது உறுதி. இவற்றை விடுத்து இறைவனைச் சரணடைபவர்கள் மரணத்தை வென்று நிரந்தரமாக வாழ்வார்கள் என்ற கருத்தைத்தான்யாரெல்லாம் தங்கள் வாழ்வை எனக்கு அர்ப்பணம் செய்கிறார்களோ அவர்கள் நிரந்தரமான வாழ்வை அடைவார்கள் என்ற வசனம் (மத்தேயு 16:25) குறிப்பிடுகிறது. மேலும் இந்த உலக வாழ்க்கையைத்தான் சுவர்க்க வாழ்வாக மாற்றிக்கொள்ள வேண்டுமே அன்றி வேறு ஒரு சுவர்க்கம் இல்லை என்பதை ஏசு எடுத்துக்கூறுகிறார். லூக்கா 17.20-21 வசனங்களில் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குளே இருக்கிறதே என்ற உண்மையை அவர் தருகிறார்.

நாள் முழுவதும் வானத்தின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தாலும் அதன் ஆதாரமான ஆகாயம் வண்ணம் ஏதும் இன்றி மாறாமல் தொடர்ந்து இருப்பது போல் தொடர்ந்து மாறும் உடல்களின் ஆதாரமாக மாறாமல் இருப்பது பரிசுத்த ஆவிநான் என்ற கற்பனைக்கதையின் பிடியில் இருந்து விடுபட்டு பரிசுத்த ஆவி நான் என்று உணர்ந்தால் அனைத்து துன்பங்களில் இருந்தும் உடனடியாக விடுதலை கிடைக்கும். பாவிகளின் எண்ணங்கள் தான் ஒரு தனி மனிதன் என்ற கற்பனையின் அடிப்படையில் உருவானது என்பதால் துன்பங்களுக்கு வழிவகுக்கும். அவ்வாறில்லாமல் ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்கு உரியவைகளை சிந்திக்கிறார்கள் (ரோமர் 8.5).

கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர். உண்மையை அறிந்தவர்கள் ஒன்றான இறைவனை பிளவு செய்வதில்லை. நீ வேறு நான் வேறு என்று பேதம் செய்பவர்கள் உண்மையை அறியாதவர்கள். துன்பங்களுக்கு காரணமான அறியாமையை அகற்றி உள்ளதை உள்ளவாறு அறியும் அறிவுத்திறனை அடைவது மட்டுமே துன்பங்களை நீக்கும் வழி.

இன்பவாழ்வு

பரமனை அறிவதே நித்ய ஜீவன்(யோவான் 17.3). பாவியான கற்பனைக்கதை நான் அல்ல என்று உணர்ந்த அதேக் கணத்தில் நாம் மரணத்தை வென்று விடுவோம். (கொரிந்தியர் 15.51-57, யோவான் 11.26).

வாழ்வில் துன்பங்கள் என்பது கற்பனையே. அந்த கற்பனையை நான் என்று நினைத்து பாரம் சுமந்து கொண்டிருந்த நாம் நமக்காக அனைத்து செயல்களையும் செய்யும் கர்த்தரை அறிந்து கொண்டவுடன் பாவங்களில் இருந்து விடுபட்டு இன்ப வாழ்வை நித்தியமாய் அனுபவிப்போம்.  

முடிவுரை :

கல்லைக்கண்டால் நாயைக்காணோம். நாயைக்கண்டால் கல்லைக்காணோம். கல்லினால் செய்யப்பட்ட நாயின் சிலையைப் பார்ப்பவர்களின் நிலை இதுதான். இதுபோல உலகத்தைமட்டும் பார்ப்பவர்கள் கண்களுக்கு உலகமாக காட்சி அளிக்கும் கடவுள் தென்படுவதில்லை.

உண்மையை எடுத்து உரைத்த ஏசுவின் வார்த்தைகளை அவரவர்கள் தங்கள் அறிவுத்திறத்துக்கு ஏற்றாற்போல் புரிந்து கொள்வதால் அனைவராலும் உண்மையை முழுமையாக உணர முடிவதில்லை. ஆனாலும் ஏசு காண்பித்த வழியில் பயணம் செய்பவர்கள் கூடியவிரைவில் மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள்.

பயிற்சிக்காக :

1. மக்களுக்கு அறிவு ஏற்படுவது எப்படி?

2. ஒரு புத்தகத்தின் மையக்கருத்தை அறிந்து கொள்ள நாம் செய்ய வேண்டிய ஐந்து சோதனைகள் யாவை?

3. பரிசுத்த ஆவி, தந்தை, மகன் ஆகிய மூவருக்கிடையே உள்ள உறவு என்ன?

4. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பதற்கு பொருள் என்ன?

5. கல்லைக்கண்டால் நாயைக் காணோம் என்பதற்கு பொருள் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஐந்து புலன்களை உபயோகிக்காமல், பாடத்தில் விவரிக்கப்பட்ட ஐந்து வழிகளில் மட்டுமே ஏதேனும் அறிவைப் பெற முடியுமா?

2. பைபிள் என்ற நூலை ஆதாரமாக கொண்டு பல மதப்பிரிவுகள் இருப்பதற்கு காரணம் என்ன?

3. விவேகானந்தர் ஏசு கிருஸ்துவைப்பற்றி எழுதிய கருத்துக்களை படிக்கவும்.


4. பைபிள் வசனங்களை http://www.wordproject.org/tm/index.htm ல் படிக்கவும்.