Tuesday, March 30, 2010

Lesson 109: Purity in action ( பிரம்ம சூத்திரம் 3.3.18 )

பாடம் 109: வேலையின் நோக்கம் மனத்தூய்மை
பாடல் 377 (III.3.18)

வேலை செய்வதன் உள்நோக்கம் நமது மனதை தூய்மை படுத்துவது என்ற கருத்தை விளக்கி வேலை செய்யும் பொழுது அவசரம் இருக்க கூடாது என்று இந்த பாடம் உபதேசிக்கிறது.

மனதில் உள்ள அழுக்கு

அழுக்காறு, அகந்தை,அதிருப்தி, அருவருப்பு, அசூயைஆணவம், ஆத்திரம், இறுமாப்பு, எரிச்சல், ஏக்கம், ஏமாற்றம், கவலை,  கலக்கம், கர்வம்,கோபம்குரோதம்குற்ற உணர்வுசந்தேகம்சஞ்சலம்தவிப்பு, தற்பெருமை, துன்பம், துக்கம், துயரம்,  பயம், பகைமை, பழிவாங்கும் உணர்வு, பொறாமை, பேராசை, வருத்தம், விரக்தி, விரோதம், வெட்கம் போன்றவை மனதில் உள்ள அழுக்குகள். இந்த அழுக்குகளுக்கு அடிப்படை காரணம் நமது ஆசைகள். நமக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தால் மேற்குறிப்பிட்ட எந்த அழுக்குகளும் மனதில் தோன்றாது.

ஆனால் மனதில் தோன்றும் ஆசைகளை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆசைகள் தோன்ற காரணமான விருப்பு வெறுப்புகளின் பிடியிலிருந்து முதலில் நமது மனதை விடுவிக்க வேண்டும்.

சாதரணமாக நம் செயல்கள் அனைத்தும் நமது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தான் அமைகிறது. எனக்கு இது பிடித்திருக்கிறது, எனவே செய்கிறேன். எனக்கு அது பிடிக்கவில்லை அதனால் செய்யவில்லை. இதுபோல் விருப்பு வெறுப்புகளின் பிடியில் தொடர்ந்து செயல் பட்டால் அவை மேலும் பலம் பெற்று நம்மை அடிமைபடுத்திவிடும். முதல் சிகரெட்டை பிடிக்கலாம் அல்லது பிடிக்காமலும் இருக்கலாம் என்று இளைஞனுக்கு இருந்த சுதந்திரம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டதும் பறிபோய்விடும்.

மனதில் உள்ள அழுக்குகளை தூய்மை படுத்த வேலை செய்வது அவசியம்.  

வேலைக்கும் மனத்தூய்மைக்கும் உள்ள உறவு

ஒரு வேலையை இப்படித்தான் செய்யவேண்டும் என்று ஒரு முறை இருக்கும். நம் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் அந்த முறையை பின்பற்றினால் நாளடைவில் மனம் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபடும். இதனால் நமக்கு எது பிடிக்குமோ அதில் ஆசை கொள்ளாமல் எது நல்லதோ அதில் ஆசைகொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தெருவில் குப்பை போடக்கூடாதுஎன்று சொன்னால் யாரும் அதற்கு மறுப்பு சொல்ல மாட்டார்கள். ஆனால் ஏன் தெருவில் குப்பை போடகூடாது என்ற கேள்விக்கு சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து கொள்ள வேண்டும் என்று வாயளவில் பதில் சொன்னாலும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் எல்லா இடமும் தூய்மையாய் இருப்பதால் அங்கு குப்பை போடகூடாது என்று சொன்னால் நியாயமிருக்கிறது, இங்கு ஏற்கனவே குப்பைத்தொட்டி போல் இருக்கும் தெருவில் நான் ஒரு காகிதத்தை தூக்கி போட்டால் என்ன என்று மனதளவில் நினைத்துக்கொண்டு யாரும் பார்க்காதபோது தொடர்ந்து குப்பைகளை பொது இடங்களில் தூக்கி எறிந்து கொண்டுதான் இருப்பார்கள்.

ஏன் தெருவில் குப்பை போடக்கூடாது என்பதற்குமனதை தூய்மைபடுத்தஎன்பதுதான் சரியான பதில். தெருவில் நாம் குப்பை போட்டாலும் போடாவிட்டாலும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் தெருவில் குப்பை போடக்கூடாது என்ற சுயகட்டுபாடு நமது மனதை தூய்மை படுத்த பெரிதும் உதவும்.

இதுபோல எல்லா செயல்களையும்  செய்ய வேண்டிய முறைப்படி செய்வது நம் மனதை விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுவிக்கும். அவ்வாறில்லாமல் மனம் போனபடி நடப்பது நமக்கு மட்டும்தான் நஷ்டம். அதனால் மற்றவர்களுக்கோ சூழ்நிலைக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை.

வேலையில் வேகம்

சுறுசுறுப்பாக வேலை செய்வது மிக முக்கியம். ஆனால் அவசரமாக வேலை செய்வது தவறு. ஒரு வேலையை முறைப்படி திருத்தமாக செய்ய ஆகும் நேரத்தை செலவிட்டு கவனமாக வேலையில் ஈடுபாட்டுடன் செயல்களை செய்யவேண்டும். வேலையை அனுபவித்து செய்வது வேலை செய்து முடிப்பதை விட முக்கியமானது.

ஆனால் எல்லோரும் வேலையை முடித்து விட்டு வீடு திரும்ப வேண்டும் என்பதில் தான் குறியாய் இருப்பார்கள். இதற்கு இரண்டு காரணங்கள்.

முதல் காரணம்: படித்து முடித்தால் விளையாடப்போகலாம் என்று மனதில் விளையாட்டை பற்றி நினைத்துக்கொண்டு கையில் உள்ள புத்தகத்தின் பக்கங்களை வேகமாக புரட்டிகொண்டிருக்கும் சிறுவனைப்போல பணம் சம்பாதிப்பதற்காக பலரும் வேலை செய்து கொண்டிருத்தல்.

இரண்டாம் காரணம்: பணத்தை கொடுத்து நிம்மதியை வாங்க முடியாது என்ற உண்மையை உணராமல் பணம் சம்பாதிப்பதற்காக வேலை செய்தல்.

வேலை செய்வதன் முக்கிய நோக்கம் மனத்தூய்மை என்பதையும் பணம், புகழ் போன்றவை வேலை செய்வதால் கிடைக்கும் துணை பொருள்கள் (by-products) என்பதையும் புரிந்து கொண்டவர்கள் அவசரம் ஏதுமில்லாமல் அதே சமயத்தில் துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் திறம்பட வேலை செய்வார்கள்.

வேலை செய்வதன் முதல் காரணம்: அக சீர்திருத்தம்

சுறுசுறுப்பாகவும், முழு திறமையை உபயோகித்தும், ஈடுபாட்டுடனும் வேலையை செய்யவேண்டிய முறைப்படி சரியாக செய்வதன் மூலம் நமது மனதில் உள்ள அழுக்குகளை படிப்படியாக நீக்கி மனத்தூய்மை பெறலாம். இதுதான் வேலை செய்வதன் முக்கியமான நோக்கம் என்பது புரிந்தால் வேலை செய்யும்பொழுது பொதுவாக காணப்படும் அவசரம் மறையும்.

வேலை செய்வதன் உப காரணம்புற உலக சீர்திருத்தம்

வேலை செய்வதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால் வாழ்வில் வசதிகள் கூடுகின்றன. வேகமாக வேலை செய்தால் முன்னேற்றங்கள் விரைவில் ஏற்படும் என்பது உண்மை. ஆனால் உண்மையிலேயே இது முன்னேற்றமா என்பது சிந்திக்கப்படவேண்டிய விஷயம்.

காந்தி காலத்தில் இங்கிலாந்திற்கு செல்ல பதினைந்து நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுது பதினைந்து மணிநேரத்தில் லண்டன் சென்று விடலாம். இந்த முன்னேற்றத்தினால் யாருக்கும் எவ்வித பயனும் இருப்பதாக தெரியவில்லை. பொழுதுபோக்கிற்காக சுற்றுலா செல்பவர்கள் கூட நேரம் போதவில்லை என்று அவசர அவசரமாக அருங்காட்சியகத்துக்குள் நடக்கிறார்கள்.

ஆறு மாதங்களில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை ஒரே வாரத்தில் கட்டுவது மற்றும் பத்து பேர் செய்யும் வேலையை கணிப்பொறி உதவியுடன் ஒரே ஆள் செய்வது  போன்ற மாற்றங்கள் புறவுலகை வேகமாக மாற்றி வருகின்றன. ஆனால் அதனால் மக்களுக்கு ஏற்படும் பயன் அதே விகிதத்தில் அதிகரிப்பதில்லை (Law of diminishing returns).  சொல்லப்போனால் ஒவ்வொரு முன்னற்றமும் வாழ்வில் நெருக்கடியையும் மனஉளைச்சலையும் அதிக படுத்துகின்றன. பேருந்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்வதற்கு பதில் இருசக்கர வாகனம் வாங்கி இருபது நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்தாலும் முன்னை விட தற்பொழுது நேரம் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது. மாட்டு வண்டி வேகத்தில் வாழ்க்கை நகர்ந்தபோது ஓய்வெடுக்க கிடைத்த நேரம் மோட்டர் கார் யுகத்தில் கிடைப்பதில்லை.

காலம் பொன் போன்றது என்றால் நமக்கு கிடைத்த வாழ்நாட்களை இன்பமாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்று பொருள். ஆனால் காலத்தை விரயம் செய்யாமல் நிறைய உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இதை தவறாக புரிந்து கொண்டு மக்கள் ஓயாமல் பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

மரத்தினடியே நிம்மதியாக உட்கார்ந்திருந்த விவசாயியிடம் நீ ஏன் இன்னொரு போகம் விளைவிக்க கூடாது என்று கேட்டதற்கு அவன் இருக்கும் உணவு எனக்கு போதும் இன்னும் விளைத்து என்ன செய்ய என்று பதிலளித்தான். இன்னும் விளைத்து அதிகப்படியாக கிடைத்த நெல்லை விற்று பணமாக்கி சேர்த்து வைத்து இன்னும் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி பெரிய பணக்காரனாகி பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்று அவனுக்கு உபதேசம் செய்தால் அவன் நான் இப்பொழுதே நிம்மதியாகத்தான் இருக்கிறேன், எதற்கு இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று பதில் கேள்வி கேட்டால் நம்மால் எவ்வித மறுமொழியும் சொல்ல முடியாது.

விரைவில் வேலைகளை செய்து முடிப்பதால் எவ்வித பயனும் இல்லை.

புற உலக முன்னேற்றமும்  அக உலக சீர்திருத்தமும்

வேலை செய்வதால் நமது மனம் செம்மையாகிறது. இரண்டு அடி குழி வெட்டிய பின் அதை பழையபடி மூடு என்று சொன்னால் உழைப்பை வீணடிப்பதுபோல் தோன்றும். உண்மையில் மனதை தூய்மை படுத்தவே வேலை செய்கிறோம். வேலை செய்வதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று கவனிப்பது அனாவசியம். ஏனெனில் அந்த முன்னேற்றம் நம் நிம்மதிக்கும் இன்பத்திற்கும் எவ்வகையிலும் துணை செய்வதில்லை.

கிடைத்த ஒரே ஊசிப்பட்டாசை ஒரேயடியாக கொளுத்தாமல் அதை பிரித்து ஒவ்வொரு வெடியையும் தனித்தனியாக கையில் பிடித்து கொளுத்தி தீபாவளியை கொண்டாடும் ஏழை சிறுவனையும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கின பட்டாசுகளை பத்து நிமிடத்தில் கொளுத்தி முடித்துவிட்டு நாள் முழுவதும்போர் அடிக்கிறதுஎன்று புகார் செய்யும் பணக்கார சிறுவனையும் ஒப்பிட்டால் அவசரபடும் தவறை நாம் செய்யமாட்டோம்.

பூமியை நாம் காப்பாற்ற வேண்டிய தாயாக கருதாமல் கொள்ளையடிக்கபட வேண்டிய பகைவனின் சொத்தாக கருதி இயற்கை வளங்களை தொடர்ந்து சூறையாடி வருவதன் காரணம் நாம் எதற்கு வேலை செய்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதுதான் காரணம்.   

பத்து பேர் செய்யும் வேலையை ஒருவன் செய்வதால் உற்பத்தி திறன் மிக அதிகமாகிவிட்டது என்று மகிழும் அதே நேரத்தில் பத்து பேருக்கு பதில் ஒரே ஒருவனின் மனம் மட்டும்தான் தூய்மையடைய வாய்ப்பு கிடைத்தது என்ற உண்மையையும் உணர வேண்டும்.

வேலை செய்து அதன் பலனை அனுபவிப்பதற்கு பதில் வேலை செய்வதையே இனிமையான அனுபவமாக செய்தால் மனம் தூய்மைப்படும் அதே நேரத்தில் வாழ்க்கைத்தரமும் தேவையான அளவு உயரும். இதனால்தான் நெசவாலைகளுக்கு பதில் கைத்தறி ஆடைகளை பிரபலபடுத்தவேண்டும் என்று காந்தி மகான் முயன்றார். தொழில் துறையில் உண்மையான முன்னேற்றம் அவரவர்களால் தங்கள் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டு வாழ்வதற்கு துணை செய்வதாய் இருக்க வேண்டும். உதாரணமாக கைத்தறியில் உருவாகும் துணியின் தரம் ஆலைகளில் செய்யப்படும் துணியின் தரத்தைவிட நன்றாக இருக்கும் வகையில் கைத்தறியை வடிவமைப்பதுதான் உண்மையான விஞ்ஞான முன்னேற்றம்.

முடிவுரை :

அவசரமில்லாமல் சுறுசுறுப்பாக ஒரு வேலையை செய்வது அவசியம். போக வேண்டிய இடத்தை சீக்கிரம் சென்றடைய வேண்டும் என்று காரை வேகமாக ஒட்டுவது அவசரம். ‘நான் ஒரு ரவுண்டு போய்வருகிறேன்என்று தந்தையின் காரை மகன் எடுத்துக்கொண்டு அவரைவிட வேகமாக கார் ஓட்டினாலும் அதில் அவசரம் எதுவும் இல்லை. கார் செல்லும் வேகத்தை அனுபவிப்பவனுக்கு சீக்கிரம் போய் சேர்ந்து விடுவோமே என்ற வருத்தம் கூட இருக்கும். அதுபோல வேலையை எப்பொழுது முடிப்போம் என்று நினைத்து செய்தால் அது அவசரம். வெகுவேகமாக வேலையை அனுபவித்து செய்தால் அது சுறுசுறுப்பு.

கஷ்டபட்டு வேலை செய்வது பிறகு சந்தோஷமாய் இருப்பதற்காக என்ற எண்ணம் தவறானது. நம் வாழ்வில் பெரும்பகுதியை வேலை செய்வதற்காகத்தான் செலவிடுகிறோம். எனவே சந்தோஷமாக வேலை செய்தாலே போதும்.

பயிற்சிக்காக :

1. மனதில் உள்ள அழுக்குகளாக குறிப்பிடப்பட்டவை யாவை?

2.விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட நாம் என்ன செய்யவேண்டும்?

3.ஏன் தெருவில் குப்பை போடக்கூடாது?

4.சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கும் அவசரமாக செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

5.வேலையில் வேகமிருந்தால் அதன் விளைவுகள் யாவை?

6.உண்மையான விஞ்ஞான முன்னேற்றம் யாது?

7.இந்த பாடத்திலிருந்து கிடைத்த முக்கியமான கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. விருப்பமானதை செய்தால்தானே சந்தோஷம்? வெறுக்கும் வேலைகளை செய்வதால் என்ன பலன்?

2. ஹோமம் வளர்க்கும்பொழுது நெய் ஊற்றுவதற்கு பதில் டால்டா ஊற்றலாமா?

3.ஒரு பூஜை செய்யும்பொழுது இப்படித்தான் செய்யவேண்டும் என்று வெவ்வேறு சம்பிரதாயங்கள் இருந்தால் எதை பின்பற்றுவது?

4. சிங்கபூர் போன்ற நகரங்களில் எல்லோரும் நகரை சுத்தமாக வைத்திருப்பதால் அவர்கள் மனமும் தூய்மையாகிவிட்டதா?

5. பொருளாதார முன்னேற்றம் அவசியம் இல்லையா?

Friday, March 26, 2010

Lesson 108: Self is Brahman ( பிரம்ம சூத்திரம் 3.3.16-17 )

பாடம் 108: நீயே அது
பாடல் 375-376 (III.3.16-17)

அயித்ரேய உபநிஷதம் உன்னைத்தவிர வேறு ஒன்றுமில்லைஎன்ற மந்திரத்துடன் ஆரம்பிக்கிறது.  அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறிய அதே வேதம் உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு என்று கூறுவது முன்னுக்கு பின் முரணாக தெரிந்தாலும் இவ்விரு வாக்கியங்களும் எவ்வாறு ஒரே சமயத்தில் உண்மையாக இருக்க முடியும் என்பதை இந்த பாடம் விளக்கி நம்மை செயல் செய்ய தூண்டுகிறது.

விதியை மதியால் வெல்லலாம்

நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு நாம் செய்த பாவ புண்ணியங்கள் மட்டுமே காரணம் என்றும் கடவுளாலோ ஜோதிடர்கள் போன்ற வல்லுனர்களாலோ இதை மாற்றியமைக்க முடியாது என்றும் படித்தோம். இது உண்மையானால் விதியை மதியால் வெல்லலாம் என்ற கூற்று பொய்யாய் இருக்க வேண்டும். ஆனால் அதுவும் உண்மையே.
நமது பாவ புண்ணியங்களுக்கு நாம் எவ்வித மனிதர்களையும் சூழ்நிலைகளையும் சந்திக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் சக்தி மட்டும்தான் இருக்கிறது. வாழ்வில் நிகழும் நிகழ்வுகளால் நாம் இன்பமடைகிறோமா அல்லது துன்பமடைகிறோமா என்பது நம் அறிவின் முதிர்ச்சியை பொருத்து நிர்ணயம் செய்யப்படும்.

உதாரணமாக நாம் ஒரு பணக்காரவீட்டில் பிறந்ததற்கு காரணம் நாம் செய்த புண்ணியம். ஆனால் பணம் இருப்பதால் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயமில்லாமல் வேண்டாத கெட்ட பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு துன்பபடுவது நமது அறிவின் குறைவால் ஏற்படும் விளைவு. புண்ணியத்திற்கு நம்மை இன்பத்தில் ஆழ்த்தும் சக்தி கிடையாது. அதே போல் நாம் செய்த பாவம் நமது வேலையை பறிக்கலாமே தவிர அதனால் நாம் துன்பபடவேண்டும் என்று நம்மை கட்டாயபடுத்த முடியாது.

ஒரு நிகழ்ச்சியை நாம் எப்படி பார்க்கிறோம் என்பது நமது அறிவின் திறத்தை பொருத்தது. அறிவில் குறைந்தவர்கள் அதிகமாக துன்பபடுவர். அறிவு அதிகமாக அதிகமாக துன்பம் தரும் நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றை வெற்றியின் படிக்கட்டுகளாக ஏற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேற முடியும். வேதம் கூறும் பரமனை பற்றிய அறிவை பெற்று விட்டால் நமது விதிவசத்தால் வாழ்வில் நேரும் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாமல் வாழ்நாழ் முழுவதும் இன்பமாக இருக்கலாம். எனவே விதியை மதியால் வெல்லலாம் என்பது முற்றிலும் உண்மை.

பிரம்மன் என் தலையில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழுதியதை அழிக்கவே முடியாது என்பது உண்மை. ஆனால் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானித்தது பிரம்மன் அல்ல, நாம்தான். எனவே நமது எதிர்காலத்தில் நடக்கப்போகிற நிகழ்வுகள் எப்படியிருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்றவாறு நமது விதியை பொறுப்பாக நாம் எழுதவேண்டும். அதே சமயத்தில் தொடர்ந்து செயல்கள் செய்வதன் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டு பரமனை அறிந்து கொண்டால் அனைத்து கர்ம வினைகளையும் அழித்துவிட்டு இனி பிறவா வரத்தை பெறலாம்.
எனவே நம் எதிர்காலத்துக்கு நாம் மட்டும்தான் பொறுப்பு.

எல்லாம் அவன் செயல் என்பதன் பொருள் என்ன?

செய்யும் செயல்களுக்கு நான் காரணமா அல்லது கடவுள் காரணமா என்ற கேள்விக்கு பதில் அவரவரின் அறியும் திறனை பொருத்து மாறும். உதாரணமாக பௌர்ணமி இரவில் பூமிக்கு வெளிச்சம் சந்திரனிடமிருந்து வருகிறதா அல்லது சூரியனிடமிருந்து வருகிறதா என்று கேட்டால் அதற்கு பதில் யார் இந்த கேள்வியை கேட்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடும். இருப்பது சூரிய வெளிச்சம் ஒன்றுதான். அதுதான் நிலவில் பிரதிபலிக்கப்பட்டு பௌர்ணமி இரவை பிரகாசபடுத்துகிறது. ஆனால் இரவில் இருக்கும் வெளிச்சம் சூரியனின் வெளிச்சம் என்று கூறி சிறுவர்களை குழப்பக்கூடாது.

முதல் நிலைநீ மட்டும்தான் காரணம்

எல்லாம் என்னால்தான் என்ற மனநிலை ஆரம்பத்தில் இல்லாவிட்டால் மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று உணவுகிடைக்கும்பொழுது உண்டு வேலை செய்ய யாரேனும் கட்டாயபடுத்தினால் வேண்டா வெறுப்பாக வேலை செய்து விட்டு மற்ற நேரங்களில் தூங்கும் சர்க்கஸில் இருக்கும் மிருகங்கள் போல் மனிதர்கள் வாழ்வார்கள்.

தன் கையே தனக்கு உதவி என்று நம்பி இவர்கள் தானாக வேலைகளை எடுத்துக்கொண்டு செய்யாவிட்டால் இவர்களுக்கு விமோசனமே கிடையாது. தொடர்ந்து வேலை செய்வதன் மூலம் தான் இவர்களது அறிவுத்திறன் வளரும். வேலை செய்யாமல் எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்று சோம்பித்திரிந்தால் வாழ்வில் மாறி மாறி ஏற்படும் இன்ப துன்பங்களில் அலைக்கழிக்கப்பட்டு வாழ்வே இவர்களுக்கு ஒரு சுமையாக மாறிவிடும்.

எனவே இவர்களை பொருத்தவரைஉன் வாழ்வுக்கு நீ மட்டும் தான் பொறுப்புஎன்பது மட்டுமே சரியான பதில்.

இரண்டாம் நிலைகடவுள் மட்டும்தான் காரணம்

முதல் நிலையை கடந்து எப்பொழுதும் எறும்பு போல் சுறுசுறுப்பாக உழைத்து நாளில் உள்ள இருபத்திநாலு மணி நேரம் போதவில்லை என்பவர்களுக்கு வேதம் சொல்லும் உண்மை உன்னால் ஒன்றும் செய்துவிடமுடியாது. அனைத்தும் அவன் செயல் என்பது இவர்களுக்கு தரவேண்டிய சரியான பதில்.

ஏதோ ஒரு ஐந்து நிமிடம் தாமதாமாகிவிட்டால் உலகம் நின்றுபோய்விடும் என்று கால் தரையில் படாமல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு ஓயாமல் காதில் ஒட்டிக்கொண்டிருக்கும் தொலைபேசி கருவியில் பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு தாம் எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க நேரம் இருக்காது. இவர்கள் தாங்கள் என்றும் இன்பமாக இருக்கவே வேலை செய்ய ஆரம்பித்தோம் என்பதை சுத்தமாக மறந்திருப்பார்கள்.

இவர்களுக்கு அனைத்து செயல்களும் அவன் அருளால் மட்டுமே நிகழ்கிறது என்று கடவுளை வேதம் அறிமுக படுத்துகிறது. எப்பொழுது இயந்திர மயமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வேதத்தின் இந்த அறிவுரையை மக்கள் கேட்கிறார்களோ அப்பொழுது பொருள் சம்பாதிக்கும் வேகத்தை சற்று குறைத்துக் கொண்டு வேதம் படிக்க சில நேரத்தை ஒதுக்குவார்கள்.

மூன்றாம் நிலைநீயே அது

வேதத்தை குருவிடம் முறையாக கற்றுத்தேர்ந்தவர்கள் வெளிச்சம் சூரியனிடமிருந்து வருகிறதா சந்திரனிடமிருந்து வருகிறதா என்ற பட்டி மன்றத்தில் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறார்கள் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் கடவுள் யார் மனிதன் யார் என்பதன் அடிப்படைகளை கற்றுத்தேர்ந்ததால் இரண்டும் ஒன்று என்பதை இவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

நான் வேறு என் உடைமைகள் வேறு என்பது இவர்களுக்கு தெரியும். உடைமைகள் என்றும் மாறிக்கொண்டே இருக்கும். மாறத நான் என்றும் இருக்கும் இன்ப மயமான பரமன் என்பதை இவர்கள் உணர்வார்கள். கடவுள் என்பவன் பிரபஞ்சமுழுவதையும் தன் உடலாக கொண்டிருப்பவன்.கடவுளின் உடைமைகளை களைந்தால் அவனும் பரமனிடமிருந்து வேறுபட்டவனல்ல என்பதால் நீயே அது என்று வேதம் சொல்லும் உண்மையை புரிந்து கொள்ள முடியும்.

முடிவுரை :

செயல் தவிர்க்கப்பட முடியாதது. அறிவின் திறன் எப்படியிருந்தாலும் யார் எந்த நிலையில் இருந்தாலும் அனைவரும் எப்பொழுதும் ஏதாவது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். என்ன வேலை செய்கிறார்கள் என்பதும் அதை எப்படி செய்கிறார்கள் என்பதும் அவரவரின் அறிவின் தரத்தை பொருத்து அமையும்.

முதல் நிலையில் இருப்பவர்கள் என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று அதிகமாக உழைக்க வேண்டும்.

இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் தங்களின் நேரத்தில் ஒரு பகுதியை கடவுளை பற்றி வேதம் கூறும் உண்மைகளை அறிந்து கொள்ள செலவிடவேண்டும்.

மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் காற்று நுழைந்து கானமாக வெளிவரும் புல்லாங்குழல் போல இறைவனின் கையில் உள்ள உபகரணங்களாக கடவுளின் செயல்களை செய்து கொண்டிருப்பார்கள்.

பயிற்சிக்காக :

1. விதியை மதியால் வெல்லலாம் என்பதன் பொருள் என்ன?

2. மீண்டும் பிறவா வரத்தை பெறுவது எப்படி?

3. செயல் செய்வது மனிதனா கடவுளா என்பதற்கு மூன்று நிலைகளில் பதில் அளிக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1.நாம் செய்யும் செயல்களை எவ்வாறு கடவுள் செய்யும் செயலாக சொல்ல முடியும்? நான் கத்தியை எடுத்து பக்கத்துவீட்டுக்காரனை குத்தினால் அதற்கு கடவுள் எப்படி காரணமாவார்?

2. உற்பத்தி திறனை அதிகபடுத்தி செய்யும் அனைத்து செயல்களையும் வேகமாக செய்ய வேண்டும் என்று வாழ்வில் முன்னேற உழைக்கும் அனைவரிடமும் உள்ள துடிப்பு தவறானதா?

3. சூரியன் சந்திரன் என்று இரண்டு பொருள்கள் இருக்கும்பொழுது சூரியனே சந்திரன் என்று எப்படி கூற முடியாதோ அதுபோல கடவுள் மனிதன் என்று இருவர் இருக்கும்பொழுது நீயே அதுஎன்று எப்படி கூற முடியும்

Thursday, March 25, 2010

Lesson 107: Self is higher than anything else ( பிரம்ம சூத்திரம் 3.3.14-15 )

பாடம் 107: உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு
பாடல் 373-374 (III.3.14-15)

கதோபநிஷத மந்திரம் ஒன்று தன்னை சரியாக அறிந்து கொண்டவன் மரணத்தை வெல்லுவான் என்று கூறுகிறது. நம்முடைய உடைமைகளை விவரித்து அவற்றின் தரத்திற்கு நாம் மட்டும்தான் பொறுப்பு என்ற வேதத்தின் கருத்தை விளக்குவதன் மூலம் நமது பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை இந்த பாடம் அறிவுறுத்துகிறது.

நம்முடைய உடைமைகள் யாவை?

உடல், மனம், ஐந்து புலன்கள், ஐந்து கரணங்கள், சேர்த்து வைத்துள்ள பாவ புண்ணியங்கள், பல பிறவிகளில் உழைத்து அதன் மூலம் சேர்த்த அறியும் திறன், விருப்பு வெறுப்புகள், பிறந்தது முதல் செயல்களை செய்து சேர்த்அறிவு மற்றும் செயல்படும் திறன் உள்ளிட்ட நமது ஆளுமை (personality) ஆகியவை நம்முடைய நிரந்தர உடைமைகள். இவையனைத்தும் பிறவிகள்தோறும் நம்முடன் வரும். இவற்றை மூலதனமாக வைத்து இந்த பிறவியில் நாம் சம்பாதித்த பணம், பொருள், புகழ் போன்றவை நமது தற்கால உடைமைகள்.

நம் உடல் பிறந்ததிலிருந்து தொடர்ந்து வளர்ந்து மூப்படையும் தன்மையுடையது என்பதால் உடலைச்சார்ந்துள்ள வலிமை, திறமை ஆகியவை வயதானவுடன் குறையத்துவங்கும். எனவே மரணத்தில் இவ்வுடலை விட்டுவிட்டு அடுத்த பிறவிக்கு உண்டான உடலை நமது புண்ணியத்தின் அடிப்படையில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எந்த பேற்றோருக்கு பிறப்போம் என்பதும் எவ்வளவு ஆரோக்கியத்துடனும் பிறப்போம் என்பதும் நமது பாவ புண்ணியத்தால் மட்டுமே தீர்மானிக்கபடுகிறது. விருப்பு வெறுப்புகளுடன் கூடிய மனம், அறிவுடன் கூடிய புத்தி, திறனுடன் கூடிய ஐந்து புலன்கள் மற்றும் ஆற்றலுடன் கூடிய ஐந்து கரணங்கள் ஆகியவையும் பிறவிகள் தோறும் நம்முடன் வருகின்றன.

எனவே நமது நிரந்தர உடைமைகளின் தற்போதைய நிலைமைக்கு நாம் மட்டுமே காரணம். என் சக்கரை வியாதிக்கு அப்பாவும் முன்கோபத்திற்கு அம்மாவும் காரணம் என்று நம்முடைய நிலைக்கு யாரையும் பழிசொல்ல கூடாது. எது எப்படி இருக்கிறதோ அதற்கு நாம் மட்டுமே காரணம்.

நமது தற்கால உடைமைகள் அனைத்தும் இந்த பிறவியில் நமது செயல்பாட்டால் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. இவற்றிற்கும் வேறு யாரும் காரணமல்ல.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 1 : பெற்றோர்கள் காரணமல்ல

நம் பெற்றோரை தேர்ந்தெடுத்ததே நாம்தான் என்பதால் நம் உடலில் உள்ள நிறை குறைகளுக்கு மரபணுக்கள் (genetics) காரணம் என்று நமது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் செய்த பாவ புண்ணியங்களுக்கு பொறுப்பேற்று கொண்டு இந்த பிறவியில் முடிந்த அளவு தர்மகாரியங்கள் செய்து மற்றவர்களை சொல்லாலும் செயலாலும் துன்புறுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 2 : வளர்க்கப்பட்ட விதம் காரணமல்ல

பெற்றோர்கள் நமது ஆளுமைக்கு காரணம் என்றால் நம்முடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பதற்கு காரணம் என்ன? அதே பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளிடையே இருக்கும் ஏறுக்கு மாறான முரண்பாடுகள் நாம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு நமது பெற்றோர்கள் துளியளவு கூட பொறுப்பல்ல என்பதை தெள்ளத்தெளிவாக காண்பிக்கின்றன.

சிறு வயதில் என் தந்தை கூறிய இந்த வாசகம்தான் என் வெற்றிக்கு காரணம் என்று வாழ்வில் வெற்றியடைந்த ஒரு சிலர் கூறுவதை கேட்டிருக்கலாம். இது முற்றிலும் தவறான  கருத்து. ஒரு தந்தையோ தாயோ தம் மக்களின் நல்வாழ்விற்காக ஆயிரம் உபதேசங்கள் செய்திருப்பார்கள். அவற்றில் ஏதோ ஒன்றிரண்டை மனதில் பதிய வைத்து பின்பற்ற முடிவு செய்தது நாம்தான். எனவே பெற்றோர்கள் வளர்ப்பு எப்படியிருந்தாலும் அது ஒருவரது வாழ்வை எவ்விதத்திலும் பாதிப்பது இல்லை என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 3 : ஆசிரியர் காரணமல்ல

உலகத்தில் உள்ள எந்த ஆசிரியருக்கும் அறிவை வழங்கும் திறன் கிடையவே கிடையாது. ஒரு வேளை ஒரு ஆசிரியருக்கு இந்த திறமை இருக்குமேயானால் அவர் விரும்பியவர்களுக்கெல்லாம் அவரால் அறிவை கொடுக்க முடிந்திருக்கும். நாற்பது மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் பாடம் நடத்த மட்டுமே அவரால் முடியும். அவரின் வார்த்தைகளை அறிவாக மாற்றும் திறன் மாணவர்களுக்கு மட்டும்தான் உண்டு. படகிற்கு யாரையும் கரைசேர்க்கும் திறமை கிடையாது. படகை பயன் படுத்தி யார் வேண்டுமானாலும் நதியை கடக்கலாம். அது போல ஆசிரியரை பயன்படுத்தி அறிவை அடைவது நம் கையில் மட்டுமே இருக்கிறது.

இந்த ஆசிரியர் மிகத்திறமையாக சொல்லிக்கொடுக்கிறார் என்று கூட சொல்ல முடியாது. எப்படி சொல்லிக்கொடுத்தால் புரியும் என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் வேறுபடும். ஆசிரியரும் ஒரு மனிதர்தான். அவர் தனக்கு தெரிந்த வகையில் சொல்லிக்கொடுக்கிறார். அந்த முறை ஒரு குறிப்பிட்ட மாணவனுக்கு ஏற்புடைய விதத்தில் இருந்தால் அவன் புரிந்து கொள்கிறான். எனவே  நன்றாக சொல்லிக்கொடுப்பது என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது புரிந்து கொள்ளும் மாணவன் மட்டுமே.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 4 : நண்பர்கள் காரணமல்ல

உன் நண்பர்களை பற்றிச்சொல், நான் உன்னை பற்றி சொல்கிறேன்என்ற கூற்று மிகவும் உண்மை. ஏனெனில் நமது நண்பர்களை நாம்தான் தீர்மானிக்கிறோம். இனம் இனத்தோடுதான் சேரும் என்பது போல் நாம் இப்படியிருப்பதால் இது போன்ற நண்பர்கள் நம்மை சூழ்ந்து இருக்கிறார்களே தவிர நண்பர்கள் நம் நிலமைக்கு காரணம் அல்ல. நமது விருப்பு வெறுப்புகள் நம்முடன் பிறந்தவை. எனவே நமக்கு பிடித்தவர்களை நண்பர்களாக நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து வளர்த்து கொண்ட பழக்கவழக்கங்கள் நண்பர்களை சார்ந்து இருப்பதில்லை.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 5 : பெரியவர்கள் காரணமல்ல

அலுவலகத்தில் உடன் உழைப்பவர்களோ அல்லது நமது முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களோ நமது நிலைக்கு காரணம் அல்ல. நமது திறமை மற்றும் நமது பாவ புண்ணியங்கள் மட்டுமே நமது பொருளாதார வளர்ச்சிக்கு காரணம்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 6 : கிரகங்கள் காரணமல்ல

நான் இப்பொழுது கஷ்டபடுவதற்கு சனி கிரகம் காரணம் என்றோ பண வரவுக்கு குரு பெயர்ச்சி காரணம் என்றோ கூறுவது முட்டாள்தனம். ஆறு மணிக்கு சூரியன் அஸ்தமனமாகும் என்றால் சூரியன் எப்பொழுது மறையும் என்பதை கடிகாரம் முடிவுசெய்வதாக அர்த்தம் செய்து கொள்ள கூடாது. ஜாதகம், ஜோசியம், எண் சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் இவை அனைத்தும் கடிகாரத்தைப்போல நமக்கு நன்மை தீமைகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டும் கருவிகளே தவிர நமது நிலையை தீர்மானிப்பவை அல்ல. நமக்கு நல்ல காலமா அல்லது கெட்டகாலமா என்பதை முடிவு செய்வது நமது செயல்களால் விளைந்த பாவ புண்ணியங்கள் மட்டுமே.

ஜோதிடர் நமக்கு கஷ்டகாலம் என்பதை ஜாதகத்தை பார்த்து சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கஷ்டகாலம் என்பதால்தான் நாம் அவரிடம் செல்கிறோம். அவர் நமது கஷ்டகாலத்தை நீக்குவதற்காக மூன்று சினிமா பார், ஊட்டிக்கு உல்லாச பயணம் சென்று வா என்பது போன்ற இன்பகரமான பரிகாரங்களை சொல்வதில்லை. ஏற்கனவே படும் கஷ்டம் போதாதென்று அவர் கூறும் பரிகாரங்களை வேறு செய்யவேண்டும். மூன்று நாட்களில் ஜலதோஷம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது மருத்துவர் கொடுத்த மருந்தினாலா அல்லது அதை சாப்பிடாமல் விட்டிருந்தாலும் சரியாகியிருக்குமா என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்க முடியாதோ அது போல நம் கஷ்டகாலம் முடிந்ததற்கு பரிகாரம் செய்ததுதான் காரணம் என்று  சொல்லவே முடியாது. பரிகாரம் செய்ததே நமது கஷ்டகாலத்தின் ஒரு பகுதிதான்.  எனவே நமது கஷ்டகாலத்துக்கு கிரகங்களை குறை சொல்வது பொறுப்பற்ற தன்மை.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 7 : கடவுள் காரணமல்ல

கடவுளுக்கு நமது கஷ்டத்தை போக்கும் சக்தி கிடையாது. சம்பளத்தை பட்டுவாடா செய்யும் கணக்கருக்கு ஊதிய உயர்வு வழங்கும் அதிகாரம் கிடையாது. அது போல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றிக்கு சேரவேண்டிய பாவ புண்ணியங்களின் விளைவுகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும் வேலையை செய்யும் கடவுளுக்கு பாரபட்சத்துடன் செயல்படும் அதிகாரம் கிடையாது.

இதனால் கடவுளை பிரார்த்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூற முடியாது. நாம் அனுபவிக்க வேண்டிய துன்பம் எவ்விதத்திலும் குறையாவிட்டாலும் கோவிலுக்கு சென்று தெய்வத்திடம் முறையிடுவதால் நமது மனதின் பாரம் குறைந்து சிறிது அமைதி ஏற்பட்டு துன்பத்தை எதிர்நோக்கும் சக்தி அதிகரிக்கும்.

எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் மற்றவர்களை ஒப்பிடும்பொழுது துன்பங்களை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும். இப்பொழுது நமக்கு நடப்பது நல்ல காலமா அல்லது கெட்ட காலமா என்பதை தீர்மானிப்பது நமது முந்தய செயல்கள். அவற்றை எப்படி எதிர்கொண்டு வாழ்வில் முன்னேறுகிறோம் என்பது நமது மனத்திண்மையையும் திறமையையும் பொறுத்து உள்ளது. எனவே நமது தற்போதைய நிலைக்கு நாம் மட்டுமே காரணமே தவிர கடவுள் காரணமல்ல.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 8 : சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமல்ல

தற்செயலாக நடந்தது என்றோ விபத்து என்றோ நம் வாழ்வில் எதுவும் எப்பொழுதும் நடப்பதில்லை. அறியாமை காரணமாக நாம் இது போன்று நமது பொறுப்பை தட்டிக்கழிக்கிறோம். நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் நாம்தான். அதன் மூலம் அதிக அறிவை பெற்று வாழ்வில் முன்னேறுவதும் நாம்தான்.

நம் வாழ்வுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.

முடிவுரை :

நம் வாழ்வுக்கு நாம் முழுப்பொறுப்பேற்று கொள்வது அவசியம்.  அதாவது நாம் இன்று இந்த நிலையில் இருக்க நூறு சதவிகிதம் நாம் மட்டுமே காரணம் என்றும் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், கடவுள் போன்றோரின் பங்கு பூஜ்யம் என்றும் உணர்ந்து கொண்டால்தான் இனி நம் வாழ்வு இன்பமாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை நாம் முறையாக செய்வோம். இல்லையெனில் கிரகங்களின் போக்கு சரியாக இருக்கிறதா என்று பார்த்து காலத்தை விரயம் செய்து கொண்டு இருப்போம்.

தம் வாழ்வுக்கு முழுப்பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தொடர்ந்து உழைத்து தங்கள் அறிவுத்திறனை வளர்த்துகொண்டு தகுந்த ஆசிரியரின் துணையுடன் நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை அறிந்து கொண்டு மரணத்தை வெல்லுவார்கள்.

பயிற்சிக்காக :

1. நம் உடைமைகள் எந்த அடிப்படையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

2.மற்றவர்கள் என் வாழ்வுக்கு பொறுப்பல்ல என்பதை விவரித்த எட்டு தலைப்புகள் யாவை?

3. நம் உடைமைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1.மரணத்தை எப்படி வெல்ல முடியும்?

2.என்றும் இன்பமாக இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த பகுதியில் கொடுக்கபட்ட பாடங்களில் இருந்து ஒரு பட்டியல் தயாரிக்கவும்.

Wednesday, March 24, 2010

Lesson 106: Three attributes of Brahman are combined in work ( பிரம்ம சூத்திரம் 3.3.11-13 )

பாடம் 106: செய்யும் தொழிலே தெய்வம்
பாடல் 370-372 (III.3.11-13)

மனிதர்கள் பலவிதம். அவர்களின் அறியும் திறன் வேறுபட்டது. அனைவரும் புரிந்து கொண்டு நடைமுறையில் பின்பற்றும் விதத்தில்செய்யும் தொழிலே தெய்வம்என்ற கருத்தை ஐந்து நிலைகளில் இந்த பாடம் விளக்குகிறது.

நிலை 1 : உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து உயிர்வாழ்வது

உயிர் வாழ்வதற்கு அவசியமான உணவு எப்படியாவது கிடைத்துவிடும். அதற்காக அதிகம் உழைக்க வேண்டிய அவசியமில்லை. தாங்க முடியாத குளிர் மற்றும் பனி பொழியும் இடங்களில் வாழும் மக்கள் கூட விலங்குகளின் தோலை ஆடையாகவும் இக்ளு பனிவீடுகளை கட்டிக்கொண்டும் மிகக்குறைந்த வேலைகள் செய்து வாழ்நாளை கழித்து விடலாம். ஆனால் இம்மாதிரி விலங்குகளை போல வாழ்வது மனிதனுக்கு தகாது. எனவே செய்யும் தொழிலே தெய்வம்என்று வேதம் உபதேசித்து மக்களை அதிக வேலையில் ஈடு பட தூண்டுகிறது.

இந்த நிலையில் இருக்கும் மக்கள் முதலில் கல்வி பெற வேண்டும். பொதுஜனம் என்ற போர்வையில் எவ்வித தனித்தன்மையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளத்தை ஏற்படுத்தி கொடுப்பது கல்வி. கல்வி பெற்ற பின் எதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு தனக்கென்று வாழ்வில் ஒரு குறிக்கோளை வகுத்துக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும். பெரும்பான்மையான மக்கள் குழந்தைகள் நன்றாக படித்து நிறைய பொருள் சம்பாதிக்க கூடிய நிலைக்கு வரவேண்டும் என்பதை தங்கள் குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். இதை தவிர தங்கள் வாழ்வில் தனக்காகவென்று ஒரு குறிக்கோளை முன்வைத்து அதற்காக உழைப்பது அவசியம்.

கல்வி மற்றும் வாழ்வில் ஒரு குறிக்கோளுடன் உழைப்பது ஆகிய இரண்டு அம்சங்கள் ஒரு மனிதனை இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர்த்திவிடும்.

நிலை 2 : இன்பத்திற்கு உலகத்தை சார்ந்து இருத்தல்

அடிப்படைத்தேவைகளை தாண்டி ஒரு குறிக்கோளை அடைய உழைக்கும் பொழுது பணவரவு அதிகமாகும். சில மனிதர்கள் பணம் வர ஆரம்பித்தவுடன் குறிக்கோளை மறந்து விட்டு மனம் போன போக்கில் பணத்தை செலவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இந்த போக்கை தடுக்க கூட்டுக்குடும்பம், பெரியவர்களின் கண்காணிப்பு அல்லது சான்றோர்களின் அறிவுரை அவசியம். பணத்தை சம்பாதிப்பது எப்படி என்பதை விட எப்படி செலவு செய்யகூடாது என்பதை முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

வேண்டிய அளவு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வசதிகளை அதிகபடுத்திக்கொண்டு  இன்னும் பணம் வேண்டும் என்ற ஏக்கம் பொதுவாக தொடரும். கார் ஆடம்பரம் என்ற காலம் போய் இரண்டு கார்கள் அத்தியாவசியம் என்று எல்லா ஆடம்பரங்களையும் அத்தியாவசிய பொருள்களாக தொடர்ந்து மாற்றி காசேதான் கடவுளடா என்ற மனநிலை அனைவருக்கும் வந்துவிடும்.

போதிய அளவு பணம் சம்பாதிக்க முடியவில்லை என்பது இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர ஒரு தடையாய் இருக்காது. தொடர்ந்து உழைத்து அறிவு மற்றும் எதையும் தாங்கும் இதயம் ஆகியவற்றை பெறுவது மட்டுமே இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர தேவையான அம்சங்கள்.

நிலை 3 : நிம்மதிக்கும் இன்பத்திற்கும் கடவுளை சார்ந்து இருத்தல்

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் போதும்என்ற நிலையை அடையவே முடியாது என்பது புரிந்தவுடன் முந்தைய நிலையிலிருந்து மக்கள் இந்த நிலைக்கு உயர்வார்கள். இதுவரை கடவுளிடம் எனக்கு இந்த பிரச்சனை தீரவேண்டும் என்று மட்டுமே பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது கடவுளிடம் எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளும் உறுதியான மனம் வேண்டும் என கேட்பார்கள். இன்னும் பணம் வேண்டும் என்று கேட்பதற்கு பதில் நல்ல புத்தியை கொடுக்கும் ஆசிரியரை தர வேண்டும் என பிரார்த்திப்பார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் பொருள் இந்த நிலையில் உள்ளவர்களுக்கு பின்வருமாறு புரிய ஆரம்பிக்கும். செய்யும் அனைத்து செயல்களையும் ஆண்டவனுக்கு அர்ப்பணமாக செய்யவேண்டும் என்றும் செய்த வேலைக்கு வரும் பலன் எப்படியிருந்தாலும் அதை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் புரிந்து கொண்டு அதன்படி தொடர்ந்து உழைப்பார்கள்.

வெற்றி தோல்வி ஆகிய இரண்டையும் கடவுளின் கிருபையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்ததும் இவர்கள் அடுத்த நிலைக்கு தயாராவார்கள்.

நிலை 4 : இன்பமாக இருப்பதற்கு தன்னை மட்டும் சார்ந்து இருத்தல்

என்றும் குறையாத இன்பத்துடனும் தடையில்லாத நிம்மதியுடனும் என் வாழ்வை வாழ்வது என் கையில்தான் இருக்கிறது என்ற உறுதி ஏற்பட்டவுடன் மக்கள் இந்த நிலைக்கு முன்னேறுவார்கள். செய்த புண்ணியத்தாலும் கடவுளின் அருளாலும் தகுந்த ஆசிரியரை பெற்று இவர்கள் வேதத்தை முறையாக பயின்று கடவுளை அறிந்து கொள்ள முயல்வார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பது இவர்களுக்கு ஒரு புதிய பொருளைத்தரும். அதுவரை இன்னும் பணம் சம்பாதித்து வீடு வாகனம் என்று வாங்கி சமூகத்தில் ஒரு மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக உழைத்தவர்கள் இந்த நிலைக்கு வந்த பின் செய்யும் தொழிலை கடவுளின் செயலாக கருதி சுயநலம் ஏதுமின்றி சேவை மனப்பான்மையுடன் உழைப்பார்கள்.

தொடர்ந்து கர்மயோகம் செய்து மனதை செம்மை படுத்திக்கொள்ளும் அதே வேளையில் முறையாக வேதத்தை தகுந்த ஆசிரியரிடம் பயிலுவது இந்த நிலையில் இருப்பவர்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும். உலகம் நிலையான இன்பத்தை தர சக்தியற்றது என்பதை இவர்கள் புரிந்து கொண்டதால் செய்யும் தொழிலை தெய்வத்தின் செயலாக செய்வதுடன் தங்களின் முக்கிய குறிக்கோளான வேதம் பயிலுவதற்கு இவர்கள் வேண்டிய நேரத்தை செலவிடுவார்கள்.

நிலை 5 : யாரையும் சார்ந்திராமல் எப்பொழுதும் இன்பமாக இருப்பவர்கள்

வேதத்தை முறையாக கற்றுத்தேர்ந்தவுடன் ஆனந்தத்தை எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை என்று இவர்கள் உணர்ந்து கொண்டு என்றும் நிம்மதியாக இருப்பார்கள். மற்றவர்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உழைப்பார்கள். ஆனால் இவர்களோ ஆனந்தமாக இருப்பதால் உழைப்பார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற தொடரின் இறுதியான பொருள் இவர்களுக்கு மட்டும்தான் புரியும். இருப்பது பரமன் மட்டும்தான். பரமனின் மாயா சக்தி என்றும் மாற்றமடையும் இவ்வுலகமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து நிகழும் மாற்றத்தின் ஒரு சில பகுதிகளை தொழில் என்ற பெயரில் மக்கள் வழங்கி வருகிறார்கள். உண்மையில் தொழில்தான் தெய்வம். பரமன் மற்றும் பரமனின் சக்தியான மாயை இவ்விரண்டின் சேர்க்கைதான் கடவுள். எனவே நாம் அனைவர் செய்யும் தொழிலும் அதன் ஆதாரமான பரமனையும் சேர்த்து செய்யும் தொழிலே தெய்வம் என்று கடவுளின் உண்மை சொரூபத்தை வேதம் நமக்கு காட்டி கொடுக்கிறது.

முடிவுரை :

செய்யும் தொழிலே தெய்வம். எனவே நான் வேலை செய்தால் மட்டும் போதும், கடவுளை தொழ வேண்டிய அவசியமில்லை என்று ஒரு தவறான எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. கடவுள் யார் என்பதை அறிந்து கொள்ளாமல் யாராலும் தங்கள் இறுதிக்குறிக்கோளான நிலையான இன்பத்தை அடையவே முடியாது. எனவே கடவுளை அறிந்து கொள்ள தொழில் செய்வது ஒரு ஏணிப்படி என்ற உண்மையை உணர்வது அவசியம்.

செய்யும் தொழிலை தெய்வமாக கருதி வேலை செய்ய ஆரம்பித்து, பின் செய்யும் தொழிலை தெய்வத்துக்காக செய்து அதற்கு பின் செய்யும் தொழிலை தெய்வத்தின் தொழிலாக செய்து கடைசியாக செய்யும் தொழிலே தெய்வம் என்பதை புரிந்து கொண்டு அனைவரும் என்றும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதுதான் வேதத்தின் குறிக்கோள்.

பரமனை ஆதாரமாக கொண்டு இவ்வுலகம் இயங்கி வருவதால் இதில் நடக்கும் அனைத்து தொழில்களிலும்  இருத்தல், அறிதல் மற்றும் ஆனந்தம் ஆகிய பரமனின் மூன்று தன்மைகளும் பிரதிபலிக்கும். தொழில் செய்பவரை செய்விப்பவர் நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமேஎன்று பாடும் கடவுள். ஒவ்வொரு தொழிலும் தொழில் செய்பவரின் அறிவை தொடர்ந்து அதிகபடுத்திநான்தான் அறிவுருவான பரமன்என்ற அறிவு ஏற்படும்வரை அவருக்கு உதவுகிறது. இந்த அறிவை அடைந்தவர்கள் செய்யும் தொழிலை ஆனந்தமாக செய்வர்.

மற்றவர்கள் இந்த அறிவை அடையும் வரை செய்யும் தொழில் தெய்வம் என்பதால் அதை ஆனந்தமாக செய்யவேண்டும்.

பயிற்சிக்காக :

1.மக்களை ஐந்து நிலைகளில் இருப்பவர்களாக பிரிப்பதன் அடிப்படை என்ன?

2. இந்த ஐந்து நிலைகள் என்னென்ன? ஒவ்வொரு நிலையிலிருந்தும் அடுத்த நிலைக்கு செல்ல செய்ய வேண்டியவை என்ன என்பதை பட்டியலிடவும்.

3. செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு எவ்வாறு பொருள் கொள்ள கூடாது?

4. செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் பொருளை ஐந்து நிலைகளில் உள்ள மனிதர்களின் நோக்கில் விளக்குக.

5. பரமனின் மூன்று தன்மைகள் எவ்வாறு தொழிலில் பிரதிபலிக்கின்றன.

சுயசிந்தனைக்காக :

1. ‘நான் என்ன நிலையில் இருக்கிறேன்?’ என்பதை சுய ஆய்வு செய்க.

2. முதல் நிலையிலிருந்து தொடங்கி இடைப்பட்ட அனைத்து நிலைகளையும் கடந்து கடைசி நிலைக்கு செல்ல எவ்வளவு காலம் பிடிக்கும்?