Thursday, March 31, 2011

Lesson 153: Enlightenment is only one (Brahma Sutra 3.4.52)

பாடம் 153: ஞானம் ஒன்றுதான்
பாடல் 477 (III.4.52)

மனித மனங்கள் மாறுபடுவதால் தீவிர முயற்சி செய்தால்கூட ஞானம் பெற ஆகும் காலத்தை அறுதியிட்டு கூறமுடியாது என்பதை விளக்கியபின் ஞானம் ஏற்பட்டால் உடனே முக்தியடைவோம் என்ற முக்கியமான கருத்தை இந்தப்பாடம் தருகிறது.

காரண காரியம்

விதை விதைத்தவுடன் பழம் கிடைக்காது. வேதம் படித்து முடித்தபின் அதன் பலனான ஞானத்தைப்பெற சிறிது காலமாகலாம். ஆனால் ஞானம் பெறுவதற்கும் முக்தியடைவதற்கும் இடையே எவ்வித காலதாமதமும் கிடையாது. மின்சாரம் தடைபட்டதால் முழு இருளில் மூழ்கியிருக்கும்பொழுது தீக்குச்சியை உரசி தீயை பற்றவைக்க நேரமாகலாம். ஆனால் குச்சியில் நெருப்பு தோன்றிய அதே நொடியில் இருள் அகன்று அறையில் ஒளியேற்படும். அதுபோல அறியாமை என்ற இருளை நீக்கி ஞானத்தைப்பெற செய்யும் முயற்சிகள் பலன் தர சில காலமாகலாம். ஆனால் ஞானம் ஏற்பட்டவுடனேயே அனைத்து துன்பங்களும் அகன்று முக்தியடைவோம்.

ஞானமும் முக்தியும்

ஞானத்தால் மட்டுமே முக்தியடைய முடியும் என்பது வேதாந்தத்தின் ஆரம்ப பாடம். ஞானமே முக்தியென்பதுதான் உண்மை. நான் மனிதன் என்ற அறியாமைதான் நம் துன்பங்கள் அனைத்திற்கும் அடிப்படைக்காரணம். நான் பரமன் என்னும் ஞானம் ஏற்பட்ட அதே நொடியில் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். ஏனெனில் ஆனந்தமயமான பரமன் துன்பப்படுவதற்கு வாய்ப்பேயில்லை.

இப்பொழுது மனிதனாக இருக்கும் நான் முயற்சி செய்தால் பரமனாக மாறலாம் என்பது வேதத்தின் மையக்கருத்தாக இருக்குமானால் இந்த அறிவு ஏற்பட்டவுடன் அதை செயல்படுத்தி பரமனாக மாற வெகுகாலம் ஆகலாம். என்றுமிருக்கும் பரமன் நீதான் என்ற அறிவு ஏற்படுவதற்கும் முக்தியடைவதற்கும் காலதாமதம் இருக்க முடியாது. ஏனெனில் முக்தியடைவது ஒரு நிகழ்வு அல்ல. உண்மை நிலையை உணர்தலே முக்தியடைவது. எனவேதான் நான் பரமன் என்ற பரமரகசியத்தை கேட்டபின் அதை புரிந்துகொள்ள பல காலம் முயற்சி செய்ததன் பலனாக ஞானம் ஏற்படும். ஞானம் ஏற்பட்ட அதேகணத்தில் முக்தியடைவோம்.  

ஞானம் ஒன்றே

பரமன் ஒருவனே. எனவே நான் பரமன் என்கிற ஞானமும் ஒன்றுதான். மனங்கள் வேறுபடுவதால் ஞானம் பெற செய்யவேண்டிய முயற்சி மற்றும் ஆக வேண்டிய காலம் ஆகியவை வேறுபடலாமேதவிர ஞானத்தில் வேறுபாடு ஏதுவும் இருக்க முடியாது. கணிதம், அறிவியல் போன்ற துறைகளில் ஒருவரின் அறிவு மற்றவரின் அறிவை விட உயர்ந்தோ தாழ்ந்தோ இருக்கலாம். அது போல் வேதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை போன்ற ஆன்மீக நூல்களை பற்றிய அறிவு கூட வேறுபடும். ஆனால் சொல்லுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்ட பரமன் நான் என்பது சாதாரண புத்தகஅறிவு அல்ல. வேதம் முழுவதையும் அர்த்தம் புரிந்து மனப்பாடம் செய்தால் கூட ஞானம் ஏற்படாமல் இருக்கலாம். ஞானம் என்பது திடீரென உதிப்பது. அது பலருக்கு முறையாக வேதத்தை படிக்கும்பொழுது ஏற்படும். ஒரு சிலருக்கு எவ்வித முயற்சியுமின்றி தானாக ஞானம் ஏற்படலாம். பரமன் எவ்வித குணங்களும் அற்றவன் என்பதால் நான் பரமன் என்று உணர்ந்து கொண்ட இருவரின் ஞானத்தில் எவ்வித வித்தியாசமும் இருக்க முடியாது. இடம், காலம், காரணம், பொருள், கர்மம், கர்மபலன், பிறவிச்சுழல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட பரமன் ஒருவனே. எனவே நான் பரமன் என்ற ஞானம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

முக்தி ஒன்றே

இவ்வுலகம் மாயை என்ற ஞானம் அனைத்து துன்பங்களையும் ஒரே கணத்தில் பொய்யாக்கிவிடுவதால் முக்தியும் ஒன்றே. நான் பரமன் என்பதை அறிந்தாலும் எனது வைரமோதிரம் தொலைந்தால் துக்கப்படாமல் இருக்க முடியாது என்பவர் ஞானம் பெற இன்னும் பல காலம் ஆகலாம். இந்த உலகம் இயங்குவதற்கே நான்தான் ஆதாரம் என்று உணர்ந்த ஞானி ஒரு மனதின் மாறுதல்களை குறித்து வருத்தப்படுவதில்லை. நான் பரமன் என்பது ஏதோ ஒரு மாதிரி புரிந்திருப்பதால் துக்கம் சிறிது குறைவாக இருக்கிறது என்றோ போகப்போக நான் பரமன் என்பதை முழுமையாக புரிந்துகொண்டவுடன் துக்கம் முழுவதும் மறைந்துவிடும் என்றோ கூறுவது தவறு. நான் பரமன் என்பது புரிந்தவர்கள் ஞானிகள். புரியாதவர்கள் அஞ்ஞானிகள். அரைகுறை ஞானிகள் என்று யாரும் கிடையாது. ஞானிகள் அனைவரும் முழுமையாக துன்பத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள்.

படிப்படியாக அதிகமாகும் அறிவு ஞானமாக மலரும் அதே கணத்தில் முழுமையான முக்தி ஏற்படும். எனவே ஞானத்திலும் முக்தியிலும் எவ்வித பாகுபாடும் கிடையாது.

ஞானிகளில் வேறுபாடு

ஞானம் ஒன்று என்பதால் ஞானத்தின் அடிப்படையில் ஞானிகளுக்கிடையே எந்த வேறுபாடும் கிடையாது. மனித மனங்கள் வேறுபடும் என்பதால் அறிவுத்திறன் மற்றும் செயல்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஞானிகளிடையே வேறுபாடு இருக்கலாம். ஏசு கிருஸ்து, சத்யசாய்பாபா, இரமண மஹரிஷி, ஓஷோ, நிசார்கதத்த மஹராஜ், இராமகிருஷ்ணர், கிருஷணமூர்த்தி ஆகிய அனைவரும் ஞானிகளே. புகழ், பணம், அறிவுத்திறன் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைவிட சிறந்தவரா என்ற ஆராய்ச்சியில் எவ்வித அர்த்தமும் இல்லை.

பொதுவாக நம்மிடையே வாழ்ந்துவரும் மனிதர்களை ஞானிகளாக அடையாளம் கண்டுகொள்வதில்லை. மரணமடைந்த பின்தான் ஒருசில ஞானிகள் சரித்திரபாட புத்தகத்தில் இடம்பிடிக்கிறார்கள். புத்தர், விவேகானந்தர், இரமணமஹரிஷி போன்றவர்களுக்கு இணையான ஞானிகள் இன்றுபலர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். ஞானத்தில் வேறுபாடு ஏதும் இல்லை என்பதால் வேதம் படிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் தினமும் ஒருசிலராவது ஞானம் பெற வாய்ப்பு இருக்கிறது என்ற உண்மையை பொதுமக்கள் புரிந்து கொள்வதில்லை.

அதிசய சம்பவங்கள் நிகழ்வது அல்லது நிகழ்த்துவது, அசாதாரணமான முறையில் பிறப்பது, மந்திரத்தால் நோய்களை குணப்படுத்துவது ஆகியவற்றிற்கும் ஞானம் பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஞானி என்ற பட்டத்தை பெற குறைந்தது தியானம் செய்ய தெரிந்தவராய் இருக்கவேண்டும் என்ற அவசியம் கூடகிடையாது. மந்திர தந்திரங்கள் செய்பவர்கள் எல்லோரும் ஞானிகள் அல்ல. ஞானிகள் எல்லோரும் அசாதாரண மனிதர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. நான் பரமன் என்ற ஞானத்தை பெற்று வாழ்வின் அனைத்து துன்பத்திலிருந்தும் விடுதலை பெற்ற அனைவரும் ஞானிகளே.

ஒருவர் உண்மையில் ஞானியா என்று மற்றவர்களை பற்றி ஆராய்பவர் ஞானியாக வாய்ப்பு மிகவும் குறைவு. தவறாகவே இருந்தாலும் உயிருடன் இருப்பவர்களை ஞானிகள் என்று சுட்டிக்காட்டினால் நாமும் ஞானம் பெறலாம் என்று நம்பிக்கை வளரும். புத்தருக்கு சமமான பத்து ஞானிகள் ஒவ்வொரு ஊரிலும்  தற்பொழுது வாழ்ந்துகொண்டிருப்பது சாத்தியம் என்ற உண்மையை உணர்பவர்கள் மட்டுமே ஞானம் பெறுவார்கள். உல்லாசப்பயணம் செல்பவர், திரைப்படம் பார்ப்பவர் போன்றவர்கள் ஞானிகளாக இருக்க முடியாது என்பது தவறான கருத்து.

ஞானியும் மற்ற அறிஞர்களும்

கணிதம், அறிவியல் போன்ற மற்ற துறையினைச்சேர்ந்த அறிஞர்களைப்போல வேதத்தின் சாரத்தை அறிந்து தெளிந்த ஞானியும் ஒரு சாதாரண மனிதனே. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கறுப்பு உடையும் சதுரதொப்பியும் அணிந்து கொண்டதால் மனிதர்கள் மாறிவிடமாட்டார்கள். அது போல நான் பரமன் என்பது புரிந்தவுடன் ஞானியின் தலையின் பின் ஒரு ஒளிவட்டம் தோன்றிவிடாது. தீவிர சிந்தனையால் அவர் மனம் பண்பட்டிருந்த காரணத்தாலேயே குளியலறையில் திடீரென்று ஆர்க்கிமிடீஸ் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். பலகாலம் தொடர்ந்து முயற்சிசெய்ததாலேயே திடீரென்று புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் உதித்தது. நான் பரமன் என்பதன் பொருளை தீவிரமாக ஆய்ந்தால் யார் வேண்டுமானாலும் ஞானிகளாகி முக்தியடையலாம்.

எவனொருவன் பரமனை அறிகிறானோ அவன் பரமனாகவே மாறிவிடுகிறான் என்றும் பந்தப்படுத்தும் இருதையமுடிச்சுக்கள் அவனுக்கு கழன்றுவிடுவதால் அவனுக்கு சாகாவரம் கிடைக்கிறது என்றும் முண்டக உபநிஷத் மந்திரம் (3.2.9) கூறுகிறது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணர்வு இருக்கிறது என்பது தவறான அறிவு. உணர்வு என்னும் ஒரே பரமன் பல உடல்களுடன் இருக்கிறான் என்பதே சரியான ஞானம். உடல் அமைப்பின் அடிப்படையில் உயிரினங்களை பறவை, மிருகம் என்று பிரிக்கலாம். மனிதன் என்ற உயிரினம் ஒன்றுக்குத்தான் தான் பரமன் என்பதை அறிந்துகொள்ளும் திறன் உள்ளது. அனைத்து மக்களுக்கும் இந்த திறன் இருப்பினும் ஒருசிலர் மட்டுமே அந்த ஞானத்தை அடைகிறார்கள். நான் பரமன் என்னும் இந்த பரமரகசியம் புதிதாக எதையும் உண்டாக்குவதோ அல்லது எதையும் மாற்றுவதோ கிடையாது. அனைத்து உயிரினங்களும் பரமனே என்பதால் எவன் இந்த உண்மையை அறிந்துகொள்கிறானோ அவன் ஞானி.

இராமன், கிருஷ்ணன், புத்தர், ஏசு, இரமணர் ஆகியோர் சாதாரண மனிதர்களே. மிருகம் போல் இருக்கும் மனிதன் கடவுளாக மாறவேண்டும் என்பது வேதத்தின் ஆரம்பபாடம். மிருகம் உட்பட அனைத்தும் கடவுளே. ஒன்றாக இருக்கும் பரமன் பலவாக தோன்றும் இந்த உண்மையை அறிந்து கொண்டால் யாரும் யாராகவும் மாற வேண்டிய அவசியமில்லை என்று புரியும். என் உடலும் மனதும் மாயையின் ஒரு பகுதி என்றும் நான் பரமன் என்றும் உணர்ந்த ஞானிகள் முக்தியடைந்தவர்கள்.


ஜடமான உடல் நான் அல்ல என்பது வேதாந்தத்தின் ஆரம்ப பாடம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களும் நான்தான் என்று அறிந்துகொள்வது இறுதிப்பாடம். பார்ப்பவனும் பார்க்கப்படுபவையும் ஒன்றே. நான் பரமன் என்பது உண்மையில் புரியும் பொழுது என்னைத்தவிர வேறு எதுவுமில்லை என்பதும் புரிந்துவிடும். நான் அனந்தமானவன், ஆனந்தமானவன், உணர்வு மயமானவன், இவ்வுலகம் என்னும் மாயா நாடகம் நடைபெற ஆதாரமாக இருப்பவன் என்ற ஞானம் பெற்றவர்கள் முக்தியடைந்தவர்கள். 

முடிவுரை :

ஆனந்தம் உலகில் இருக்கிறது என்ற அஞ்ஞானத்துடன் பணம், பதவி, பொருள், புகழ் போன்றவற்றை அடையும் ஆசைகளினால் உந்தப்பட்டு செயல்படும் மனிதன் புதை மணலில் சிக்கியவன் போல தொடர்ந்து வாழ்வில் போராடுகிறான். அவனை திசைத்திருப்பி துன்பகரமான வாழ்விலிருந்து விடுதலைபெற்று இன்பமுடன் வாழ இறைவனை சரணடைய வேண்டும் என்று வேதம்  முதலில் உபதேசிக்கிறது. முக்தி வேண்டும் என்று கடவுளின் துணையை நாடும் மனிதனுக்கு படிப்படியாக வேதம் உண்மையை போதிக்கிறது. கடைசியில் நாம் என்றும் இருக்கும் ஆனந்த மயமான பரமன் என்றும் நம்மை மனிதன் என்று நினைத்துக்கொண்டிருப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டி பிறவிச்சுழலிலிருந்து நம்மை விடுதலை செய்கிறது. கயிற்றால் கை கட்டப்பட்டிருப்பது போல கனவுகண்டு அழும் குழந்தையின் துன்பத்தை தீர்க்க கயிறை அவிழ்ப்பதுபோல பாவனை செய்யும் தாய் போல உலக பந்தங்களில் கட்டுப்பட்டு துன்பமடைவதாக நினைக்கும் மனிதனுக்கு பிரார்த்தனை செய்வதன் மூலம் துன்பத்தை முழுவதுமாக அகற்றலாம் என்று வேதம் வழிகாட்டுகிறது. வேதம் காட்டிய வழியில் பயணம் செய்ய ஆரம்பித்தவர்களுக்கு படிப்படியாக மனம் செம்மையடைகிறது. அதன் பின் ஆனந்தமயமான பரமனை உடலின் மரணம் பாதிக்காது என்ற அறிவை கொடுத்து வேதம் துன்பங்களிலிருந்து நமக்கு முக்தி கொடுக்கிறது.

உலகில் வாழும் அனைத்து மக்களும் முக்தியடைந்தவர்களே என்றாலும் அவர்களில் ஒரு சிலருக்குத்தான் இந்த இரகசியம் தெரியும். நான் பரமன் என்ற பரமரகசியத்தை அறிந்தவர்கள் ஞானிகள். உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் எவ்வித பந்தத்திலும் கட்டுப்படாது முக்தியடைந்தவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் அறிவார்கள். மற்றவர்கள் இந்த உண்மையை அறிந்துகொள்ளாமல் இந்த உலகம் துன்பத்தைத்தருவது என்ற தவறான எண்ணத்துடன் எனக்கு பிறவா வரம் வேண்டும் என்று ஆண்டவனிடம் மன்றாடி கொண்டிருக்கிறார்கள். இந்த அறியாமை ஞானம் பெற்றால்தான் நீங்கும். பலகாலம் முயன்றாலும் இந்த ஞானத்தை அடைய முடியாமல் போகலாம். ஆனால் நான் பரமன் என்ற ஞானம் இல்லாவிட்டாலும் அனைத்து மக்களும் என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன் என்ற உண்மை மாறிவிடாது. எனவே இந்த உண்மையை உணர்ந்த அனைவரும் உடனே முக்தியடைகிறார்கள்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. அறிவின் முடிவான வேதாந்தம் தரும் ஞானம் பற்றிய இறுதிக்கருத்துக்களை விளக்கிய இந்தப்பாடத்துடன் மூன்றாம் அத்தியாயம் முற்றுப்பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. ஞானம் பெறுவதற்கும் முக்தியடைவதற்கும் என்ன வித்தியாசம்?

2. ஞானத்திற்கும் முக்திக்கும் என்ன வித்தியாசம்?

3. ஞானம் ஒன்றே என்பதை நிரூபிக்கவும்.

4. முக்தி ஒன்றே என்பதை நிரூபிக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1. முக்தியடைந்த மக்கள் எல்லோரும் ஞானம் பெற்றவர்களா?

2. நான் ஞானம் பெற்றால் விவேகானந்தருக்கு சமமானவன் ஆகிவிடுவேனா?

3. எனக்கு பரமரகசியம் தெரியும். ஆனாலும் அடிக்கடி துன்பத்திற்கு ஆளாவதற்கு காரணம் என்ன?

4. வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத பரமனை மனதின் துணையின்றி எப்படி அறிந்து கொள்ள முடியும்?

5. நான் மாணவன் என்று சொல்வதற்கும் நான் பரமன் என்பதற்கும் என்ன வேறுபாடு?

Saturday, March 26, 2011

Lesson 152: Time taken for enlightenment (Brahma Sutra 3.4.51)

பாடம் 152: ஞானம் பெற தேவையான காலம்
பாடல் 476 (III.4.51)

ஞானம் பெற இருக்க வேண்டிய தகுதி, செய்ய வேண்டிய முயற்சிகள், நீக்க வேண்டிய தடைகள் ஆகியவற்றை விளக்கி ஞானம் பெற எவ்வளவு காலம் ஆகும் என்ற தகவலை இந்தப்பாடம் கொடுக்கிறது.

ஞானம் பெறுவது என்றால் என்ன?

வரைபடத்தில் தென்படும் மூதாட்டியின் முகத்தை வேறு ஒரு கோணத்தில் இளம் பெண்ணாக பார்க்கலாம் என்று கூறிய நண்பனின் வார்த்தையை நம்பி முயற்சி செய்தபின்கூட மூதாட்டி மறைந்து இளம்பெண் தென்படவில்லை என்பவரின் நிலைதான் நீ உன்னை பரமனாக அறியவேண்டும் என்ற குருவின் உபதேசத்தை ஏற்று ஞானம் பெற முயல்பவரின் நிலையும். மூதாட்டியின் கண்ணை இளம் பெண்ணின் காதாக நினைத்து படத்தைப்பார் என்ற நண்பனின் யோசனையை ஏற்று படத்தை ஆராய்வது போல் ஆசிரியரின் அறிவுரைகளின் படி நான் யார் என்று ஆராய்ந்தால் எந்த தருணத்திலும் பரமனாக மாறிவிடலாம்.

மூதாட்டி ஒரு இளம்பெண் என்ற தகவலை அறிந்த பின் படத்தில் இளம்பெண்ணை பார்க்க முடிவதுபோல் நீ பரமன் என்ற ஆசிரியரின் உபதேசத்தை ஆராய்ந்து நம்மை நாம் பரமன் என்று உணர்வதுதான் ஞானம் பெறுவதாகும்.

இளம்பெண்ணை பார்த்தபின் கூட மறுபடியும் அவள் மறைந்து மூதாட்டி மட்டுமே நம் கண்களுக்கு தென்படலாம். அதுபோல நான் பரமன் என்ற ஞானத்தைப்பெற்ற பின் கூட நம்மை நாம் ஒரு அற்பமனிதனாக பார்க்க நேரலாம். அதில் தவறில்லை. பெற்ற ஞானம் மறைந்துவிடாது. ஒருமுறை இளம்பெண்ணை பார்த்தபின் மூதாட்டியின் முகத்தை இளம்பெண்ணாக மாற்றிப்பார்க்க வெகுநேரம் ஆகாது. அது போல மனிதன் என்ற நிலையிலிருந்து பரமனாக மாற வெகுநேரம் ஆகாது. ஆனால் ஒருமுறையாவது இவ்வுலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்றும் உண்மையில் இருப்பது உணர்வாகிய நான்மட்டும்தான் என்றும் உணர்வதுதான் ஞானம் பெறுவது. ஞானம் பெற்றபின் அனைத்து கேள்விகளும் மறைந்துவிடும். இளம்பெண்ணின் கழுத்து எங்கேயிருக்கிறது என்று கேட்டால் நண்பனைத்தேடி ஓடாமல் நம்மாலேயே காட்டிக்கொடுக்க முடிவது போல் கடவுளை காட்ட முடியுமா என்று யாரேனும் கேட்டால் குருவை தேட வேண்டிய அவசியம் இருக்காது.

ஞானம் பெறுவது எளிது

வேண்டிய தகுதிகளுடன் முறையாக வேதத்தைப்படித்தால் ஞானம் பெறாமல் இருக்க முடியாது. ஞானம் பெற்றபின் இதைப்புரிந்துகொள்வதற்கு இவ்வளவு நாள் எடுத்துக்கொண்டோமே என்ற வெட்கம் ஏற்படும். இவ்வளவுதானா இல்லை இதற்குமேல் ஏதாவது செய்யவேண்டுமோ என்ற சந்தேகம்கூட ஏற்படலாம். ஞானம் பெறுவது மிகவும் எளிதான காரியம் என்பது ஞானத்தைப்பெற்ற பின்தான் தெரியவரும். ஆகவே ஞானத்தை பெற முயல்பவர்களின் பார்வையில் அது பல பிறவிகளில் முயற்சி செய்யவேண்டிய கடினமான காரியம் என்றுதான் தோன்றும்.

பரமனைப்பற்றி கேள்விப்படவே பலருக்கு வாய்ப்பதில்லை. கேள்விப்பட்டாலும் புரிந்துகொள்ள மிகப்பலரால் முடிவதில்லை. தானும் புரிந்துகொண்டு மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி திறமையுடன்  சொல்லிக்கொடுக்ககூடிய ஆசிரியன் வெகு அபூர்வம். சொல்வதை கேட்டு பரமனாகவே மாறிவிடும் மாணவனும் அபூர்வம் என்று கதாஉபநிஷத் மந்திரம் ஒன்று (1.2.7) கூறுகிறது.

எனவே ஞானம் பெறுவது எளிதா அல்லது கடினமா என்பது மாணவன் மற்றும் அவனது ஆசிரியர் ஆகிய இருவரது திறமையை பொறுத்து தீர்மானிக்கப்படும். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பட்டபடிப்பை முடிப்பது கடினம். மழலையர் பள்ளியில் வேலைசெய்யும் தகுதி மட்டும் இருக்கும் ஆசிரியர் அவனுக்கு அமைந்தால் அவனால் பத்தாம் வகுப்பையே தாண்ட முடியாமல் போகலாம்.

கணிதம், பௌதீகம் போன்ற உலகவியல் தொடர்பான அறிவைப்பெறுவதில் கூட மாணவன் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரின் தகுதிகள் முக்கியம் என்றாலும் வேதம் கூறும் ஞானம் இவற்றிலிருந்து வேறுபட்டது. உலகில் உள்ள அனைத்து புத்தகங்களும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் கருத்தை மாணவர்களுக்கு அறிவிக்க உதவும் கருவிகள் மட்டுமே. அறிவை ஆசிரியர்களோ புத்தகங்களோ புதிதாக உற்பத்தி செய்வதில்லை. புவியீர்ப்பு சக்தியை பற்றிய அனைத்து அறிவும் அழிந்து விட்டாலும் கூட நாளை மீண்டும் ஒரு மாம்பழம் கீழே விழ ஒரு மாதவன் அதைப்பார்த்து அதே அறிவை மீண்டும் உலகுக்கு அளிக்கலாம். மனித அறிவுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை தரும் வேதமும் அதை சொல்லித்தரக்கூடிய ஆசிரியர்களும் இல்லையென்றால் யாராலும் ஞானத்தை அடைந்து முக்தியடைய முடியாது. எனவே வேதம் பயின்ற ஆசிரியரின் உதவி ஞானம் பெற மிக அவசியம்.

உலகில் உள்ள பொருள்களை ஆய்ந்து அறிவதை அறிவு என்றும் அறிபவனை அறிந்துகொள்வதை ஞானம் என்றும் வகைப்படுத்தியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அறிவு முடிவில்லாதது. எந்த ஒரு துறையிலும் அறியவேண்டிய அனைத்தையும் அறிந்து இனி அறியவேண்டியது எதுவுமில்லை என்ற நிலைக்கு யாராலும் வரமுடியாது. ஆனால் ஞானம் என்பது இறுதியானது. பரமனை முழுவதும் அறிந்தவர்கள் இனி அறியவேண்டியது எதுவும் இல்லை. எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை அறியவேண்டும் என்று சாந்தோகிய மந்திரம் 6.1 கூறுகிறது.  அப்படிப்பட்ட முடிவான அறிவை ஞானம் என்று குறிப்பிடுகிறோம். இந்த ஒரு சிறப்பைத்தவிர ஞானத்திற்கும் அறிவிற்கும் வேறு எந்த வேற்றுமையும் கிடையாது. ஞானம் என்றால் தியானம் செய்வதன் மூலம் வரும் அல்லது குருவின் அருள்பார்வை நம் மீது விழுந்தால் வரும் என்பது போன்ற தவறான கருத்துக்கள் மாணவனை திசைதிருப்பக்கூடும். வார்த்தைகளால் விளக்கப்படமுடியாத பரமனை அறிந்துகொள்வது ஆசிரியர் விளக்கிய எளிதான கணக்கின் அடிப்படையில் கடினமான வீட்டுப்பாடத்தை செய்வதுபோல்தான். வகுப்பில் நடத்தும் பாடம் புரியவில்லையென்றால் தனியாக ஆசிரியரின் வீட்டிற்கு சென்று சிறப்பு பயிற்சியின் மூலம் புரிந்து கொள்ள முயலலாமே தவிர பூஜை அறையில் அமர்ந்து தியானம் செய்வதால் அறிவு ஏற்பட்டுவிடாது. பரமன் யார் என்கிற ஞானமும் மற்ற அறிவைப்போல நமது ஐம்புலன்கள் மூலம் தகவல்களை திரட்டி மனதுக்குள் அவற்றை ஆராய்வதன் மூலம் மட்டுமே ஏற்படும்.

மற்றபாடங்களையாவது ஆசிரியரின் துணையில்லாமல் தானே படித்து அறிந்து கொள்ளலாம். ஆனால் நான் யார் என்ற ஞானத்தை சுயமுயற்சியால் மட்டும் அடையவே முடியாது. காட்டுப்பாதையில் பறவைகளின் இனிமையான கானத்தை கேட்டபடி பயணம் செய்யும்பொழுது யாரேனும் நைட்டிங்கேல் பறவையின் குரலை கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் அது எப்படி கத்தும் என்பது நமக்குத்தெரியாத காரணத்தால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். அந்தப்பறவை கத்தும்பொழுது இதுதான் நைட்டிங்கேலின் ஒலி என்று சொல்லி கொடுத்தால்மட்டுமே அதை நாம் ஏற்கனவே கேட்டிருக்கிறோம் என்பதை உணர்வோம். அதுபோல நான் பரமன் என்ற அனுபவம் எப்பொழுதும் நம்முடன் இருந்தாலும் அதுதான் பரமன் என்று காட்டிக்கொடுக்க ஒரு ஆசிரியரின் துணை நிச்சயம் தேவை. எனவே ஆசிரியரின் துணையுடன் ஞானம் ஏற்படும் விதம் பற்றி அறிந்தவர்கள் தீவிர முயற்சி செய்தால் ஞானம் எளிதில் ஏற்படும்.

மூன்று வகை ஆசிரியர்கள்

தன் ஆசிரியர்களிடமிருந்து முறையாக வேதத்தை பயின்றதன் மூலம் ஞானத்தை பெற்றவர்களால் மட்டுமே மற்றவர்களுக்கு சரியான வழியை காட்டமுடியும். இந்த உயர்வகை ஆசிரியரை அடைந்தவர்கள் விரைவில் ஞானம் பெற்றுவிடுவார்கள்.

வேதத்தை சரியாக கற்றபின்னும் ஞானம் அடையாமல் தான் கற்றதை சரியாக மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத்தெரிந்த ஆசிரியர்கள் இரண்டாவது வகை. இவர்களிடம் பயிலும் மாணவர்கள் ஞானத்தை அடைவது சிறிது கடினம் என்றாலும் முடியாத காரியமல்ல.

ஒரு மன்னன் காட்டுக்கு வேட்டையாட சென்றபொழுது சுவையான உணவை உண்டு இனிமையாக அரண்மனையில் வாழும் தன் கூண்டுக்கிளியை பற்றி அவன் அங்கிருந்த கிளிகளுக்கு பெருமையுடன் விளக்கினான். அதைக்கேட்டவுடன் மரத்தில் அமர்ந்திருந்த கிளிகளில் ஒன்று இறந்து கீழே விழுந்தது. ஒன்றும் புரியாமல் அரண்மணைக்குத்திரும்பிய அரசன் தன் கூண்டுக்கிளியிடம் நடந்ததை நடந்தபடி கூறினான். அதைக்கேட்டவுடன் அந்தக்கிளியும் செத்து கீழே விழுந்தது. மன்னன் மிகுந்த சோகத்துடன் கூண்டைத்திறந்து கிளியை வெளியே எடுத்தவுடன் அது பறந்து விட்டது. மன்னனுக்கு புரியாவிட்டாலும் துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழியை தெளிவாக அவன் வாயால் கேட்ட புத்திசாலியான கிளி விடுதலை அடைந்தது போல வாழ்க்கைத்துன்பத்திலிருந்து விடுதலைபெறும் விதம் வேதத்தில் கூறப்பட்டபடி ஆசிரியரிடம் கேட்கும் புத்திசாலி மாணவனால் முக்திபெறமுடியும். ஆனால் ஏதேனும் சந்தேகம் கேட்டால் தப்பிப்பது கடினம்தான். எனவே இந்த வகை ஆசிரியர்கள் தன்னால் வெல்ல முடியாத பரிசுகோப்பையை தன் மகனை பயிற்றுவித்து அவனை வெற்றிபெற வைக்க முயலும் தந்தையைப்போன்றவர்கள்.

முன்பிறவியில் செய்த முயற்சியால் ஆசிரியரிடம் வேதத்தைப்படிக்காமலேயே முக்திபெற்ற ஞானிகள் வழிதெரியாமல் பாதைகளில் தடுமாறும் அனுபவமில்லாமல் விமானம் மூலம் வீடுபோய் சேர்ந்தவர்கள். இவர்களை நாடுபவர்களுக்கு இவர் ஆசீர்வாதம் செய்யலாமேதவிர அறிவை வழங்கமுடியாது. அவர் வாயிலிருந்து வரும் அத்தனை வாக்கியங்களும் முழுமையான ஞானத்துடன் முக்தியடைந்தவர் என்பதை காட்டிக்கொடுத்தாலும் அவற்றைக்கேட்டு யாராலும் ஞானம் பெற முடியாது. எனவே இந்த மூன்றாவது வகை ஆசிரியரின் உபதேசங்கள் பெற்ற ஞானத்தில் நிலைபெற உதவுமேதவிர ஞானம் பெற உதவாது.

ஆசிரியர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும்  மரணமடைந்தபின் அவரால் யாருக்கும் ஞானம் வழங்கமுடியாது. மேலும் மற்ற பாடங்களில் வகுப்பில் இருக்கும் முப்பது மாணவர்களும் ஒரே சமயத்தில் ஆசிரியரிடமிருந்து அறிவைப்பெறுவது போல் ஞானத்தைப்பெற முடியாது. தனியாக ஆசிரியரிடம் தன் சந்தேகங்களை கேட்டு அவர் தனக்குமட்டும் கேட்கும்படி சொல்லும் பதில் மூலம்தான் ஞானம் பெற முடியும். ஏனெனில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்கள் ஒரே மாதிரி இருக்காது. ஒருவருக்கு தரும் பதில் மற்றவரின் முயற்சிக்கு தடையாய் இருக்கும் என்பதால் ஆசிரியரை தனிமையில் அணுகினால்தான் சரியான பதில் கிடைக்கும்.

திறமையான ஆசிரியரால் கூட தன் சொந்த புத்தியை மட்டும் உபயோகித்து யாருக்கும் முக்தியளிக்க முடியாது. வேதத்தை முறையாக படிப்பது மிக அவசியம். விளம்பரத்தில் நடிக்கும் நடிகை பார்வையாளர்களின் கவனத்தை விற்கவேண்டிய பொருளின் பக்கம் திருப்பாமல் தன்னிடம் ஈர்ப்பது போல் தவறான குரு சீடர்களின் கவனத்தை வேதத்தின் பக்கம் திருப்பாமல் அவர்களை தன்னை பின்பற்றும்படி செய்வார். சரியான ஆசிரியர்கள் இந்த தவறை செய்யாவிட்டாலும் அவர்களின் சீடர்கள் வேதத்தை படிக்காமல் குருவின் புகழை பரப்புவதில் நேரத்தை வீணடித்தால் அவர்கள் முக்தியடையும் வாய்ப்பு மிகவும் குறையும்.

இறுதித்தேர்வில் தோல்வியடைந்து மறுபடியும் அதே வகுப்பில் படிக்க வரும் மாணவர்களின் கூட்டம் அதிகமானால் ஆசிரியரின் திறமையை சந்தேகிக்க நேரும். அதுபோல் பல வருடங்கள் தொடர்ந்து சீடர்களாய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குருவின் போதனை பயனளிக்கவில்லை என்று பொருள். அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் தங்கள் பள்ளி ஆசிரியரிடம் நன்றியுணர்வுடன் இருந்தாலும் தங்கள் வேலையை விட்டுவிட்டு தினமும் ஆசிரியரிடம் போய் ஆசீர்வாதம் பெறுவதில்லை. ஞானம் பெற்றவுடன் குருவை சந்திக்கவேண்டிய அவசியமேயில்லை.

அறிவை கொடுத்து அறியாமை இருளை நீக்காமல் ஆசிர்வாதம் மட்டும் அளிப்பவர் குரு அல்ல. வாழ்வில் துன்பத்தை முழுவதுமாக அகற்றுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வாழ்நாள் முழுவதையும் செலவு செய்வதில் பயனில்லை. எனவே ஞானம் கிடைக்க தான் செய்யும் முயற்சிகள் சரியானவையா என்பதை குருவிடம் கலந்தாலோசனை செய்தும் தன் குருவின் சகமாணவர்களின் உபதேசங்களை கேட்டும் விரைவில் ஞானம் பெறும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.  

ஞானம் பெற தேவையான தகுதிகள்

விதையின் தரம் நன்றாக இருந்தாலும் அது தரிசு நிலத்தில் விளையாது. அதுபோல வேதத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் தகுதியில்லாத மாணவனுக்கு அறிவை கொடுக்க முடியாது.

ஆசிரியர் முழுதுமாக ஒரு கருத்தை சொல்லித்தரும் வரை அவரிடம் கேள்விகள் எதையும் கேட்ககூடாது. கேட்ட கருத்தை மனதில் ஆய்ந்து அது புரியவில்லை என்றால் அதற்கு காரணம் தன் அறிவின் குறைபாடே தவிர ஆசிரியர் அல்ல என்ற பாவத்துடன் அவரை அணுகி கேள்வி கேட்கவேண்டும். ஆசிரியர் கூறுவது தவறு என்று நிரூபிக்கும் நோக்குடன் கேள்விகேட்பவர்கள் ஞானம் பெறமாட்டார்கள். பொழுதுபோக்கிற்காகவோ புகழுக்காகவோ வேதம் பயின்றால் பயனிருக்காது. துன்பத்தை அகற்றி முக்தியடைய வேண்டும் என்ற தாகத்துடன் ஆசிரியரை அணுகி தனக்கு சொல்லித்தருமாறு கேட்டு அவரிடம் முறையாக பயில்பவர்கள் மட்டுமே ஞானம் பெறுவார்கள்.

அரசன் காட்டுக்குசென்ற தன் நெருங்கிய நண்பரான மந்திரி திரும்பவில்லை என்று சோகத்தில் ஆழ்ந்திருந்தான். அவருக்கு வேண்டாதவர்கள் மந்திரி காட்டில் இறந்து விட்டதாகவும் பேயாக அங்கு உலாவுவதாகவும் கதைக்கட்டி விட்டார்கள். இதை முழுவதுமாக நம்பிவிட்ட அரசனின் முன் மந்திரி எதிர்பட்டால் பேயை கண்ட பயம் ஏற்படுமே தவிர நண்பரை சந்தித்த மகிழ்ச்சி ஏற்படாது. அது போல தனக்கு ஞானம் கிடைக்காது என்று உறுதியாக நம்புபவர்களுக்கு ஞானம் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

ஞானம் படிப்படியாக ஏற்படாது. அறிவு படிப்படியாக வளந்து ஞானமாக மலரும். நான் பரமன் மற்றும் உலகே மாயை என்ற தொடர்களை வேதம் படிக்கத்துவங்கிய காலத்திலிருந்து கேட்டுகொண்டிருந்தாலும் அதன் உண்மையான பொருள் ஒரு நொடியில் தெரியவரும். மூதாட்டியின் முகத்தில் இளம்பெண்ணின் உருவத்தை தேடும்பொழுது அது கண், காது, கழுத்து என படிப்படியாக நம் கண்களில் தென்படுவதில்லை. பல நேரம் முயற்சிசெய்தவுடன் திடீரென்று அது தெரிவது போல ஞானம் திடீரென்றுதான் உதயமாகும். அந்த ஞானப்பார்வையுடன் உலகை பார்க்கும்பொழுது வேதம் கூறிய அனைத்து கருத்துக்களின் உண்மைத்துவத்தை நேரடியாக அறிவோம். உதாரணமாக ஞானம் பெற்றபின் மறுபிறவியில்லை என்று நமக்கே உறுதியாக தெரிந்து விடும். அதன்பின் வேதம் நமக்கு அவசியமில்லை.

ஞானம் பெற தடைகளாய் இருப்பவை

இவ்வுலகில் இன்பமாக வாழ்வது எப்படி என்பதன் வழிமுறைகளை கடவுள் நமக்கு வேதத்தின் மூலம் தந்திருக்கிறார் என்பதை நம்பாமல் மற்ற புத்தகங்களைப்போல் அதுவும் ஒரு கருத்தை நமக்குத்தருகிறது என்று நினைப்பது ஞானம் பெறுவதற்கு தடை. வேதம் உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் அன்று. ஃபிலாசபி என்ற ஆங்கில வார்த்தையை தத்துவம் என்று மொழிபெயர்ப்பது தவறு. ஏனெனில் தத்துவம் என்ற வார்த்தைக்கு உண்மை என்று பொருள். எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஒரு தனிமனிதன் தனக்கு தோன்றிய எண்ணங்களை கோர்வையாக வெளியிடும் கருத்துதான் ஃபிலாசபி. கருத்துக்கள் வேறுபடும் தன்மை உடையன என்பதால் காலம் என்றால் என்ன, அன்பு என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு முடிவான பதில் இதுதான் என்று அறுதியிட்டு தத்துவஞானிகளால் கூறவே முடியாது. வேதம் இதுபோல கருத்துக்களை கொண்டது அல்ல. அதில் கூறப்பட்ட அனைத்தும் உண்மைகள் என்பதை உணராமல் நான் பரமன் என்பது வேதத்தின் கருத்து என்ற நோக்கில் படிப்பவர்கள் ஞானம் பெற மாட்டார்கள்.

நான் யார் என்பதை அறிய உள்நோக்கி பயணம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் தியானம், உள்ளுணர்வு ஆகியவற்றின் மூலம் ஞானம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். கண்களால் நம் முகத்தை நேரடியாக பார்க்க கண்ணாடி அவசியம். கண்ணாடியை பார்க்கும்பொழுது  கண்கள் நம்முடைய முகத்தைத்தான் பார்க்கின்றனவே தவிர கண்ணாடியை பார்ப்பதில்லை. அதுபோல் வேதம் நான் யார் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும் கண்ணாடி. அதை படிக்கும்பொழுது நாம் யார் என்பதைத்தான் ஆராய்ந்து அறிய முயல்கிறோம் என்பதை அறியாமல் வேதம் படிப்பவர்கள் ஞானம் பெறுவதில்லை.

வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதால் ஒரு தனி மனிதனுக்கு தேவையான பகுதிகளை சுட்டிக்காட்ட ஆசிரியரின் உதவி தேவை. வேதத்தை முறையாக பயின்ற ஆசிரியரால் கூட  மாணவனின் நிலையை அறிந்து கொள்ளாமல் அவனுக்கு உதவி செய்ய முடியாது. மாணவன் கேட்கும் கேள்விகள் மூலமாகத்தான் ஆசிரியர் அவனைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். எனவே ஏகலைவன் போல ஆசிரியரிடம் நேரடியாக கேள்விகேட்காமல் படித்தால் ஞானம் பெறமுடியாது. தேவைப்படும்பொழுதெல்லாம் ஆசிரியரிடம் தன் சந்தேகங்களை தெளிவு செய்துகொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்களால் முக்தியடைய முடியாது.

நமது ஐந்து புலன்கள் நம்மைச்சுற்றி ஒரு உலகம் உண்மையில் இருப்பதாக நமக்கு தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருப்பதால் அது மாயை என்ற ஞானம் ஏற்படுவது தடைபடுகிறது. உலகம் இருப்பதுபோல் காட்சியளிக்கும் மாயை என்ற வேதம் கூறும் உண்மையை அறிவியல் அறிஞர்கள் நிரூபித்தபின்னும் அனைவரும் உலகம் உண்மை என்ற அடிப்படையில்தான் அனுபவங்களைப்பெறுகிறார்கள்.

தடைகளை நீக்கும் விதம்

உலகம் மாயை என்றும் ஆனந்தமயமான நான் மட்டுமே உண்மை என்றும் வேதம் கூறும் கருத்தின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். புலன்கள் அறிவிக்கும் செய்திகளை வேதம் கூறும் உண்மையுடன் ஒப்பிட்டு இது பொய் என்று நமக்கு நாமே கூறிக்கொள்வது அவசியம். முடிந்தவரை நம்முடைய செயல்கள், உறவுகள், உடைமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை குறைத்துக்கொண்டால் உலகம் உண்மை என்ற தவறான அறிவு மறைந்து ஞானம் தோன்ற வாய்ப்பு அதிகமாகும்.

முடிவுரை :

பசியை தீர்க்க உணவு உண்ண ஆரம்பித்தபின் எப்பொழுது பசி தீரும் என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. உண்பது ஒரு இனிமையான அனுபவமாய் இருப்பதுதான் இதற்கு காரணம். அதுபோல் ஞானத்தைப்பெற வேதம் படிக்க ஆரம்பித்தவர்கள் எப்பொழுது ஞானம் வரும் என்ற கேள்வியை பொதுவாக கேட்க மாட்டார்கள். வேதம் படிப்பது ஒரு இனிமையான அனுபவமாய் இருப்பதுதான் இதற்கு காரணம்.

உணவு சுவையாக இருக்கிறது என்று பசி தீர்ந்தபின்னும் தொடர்ந்து சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும். அதுபோல இனிமையான அனுபவம் என்று வேதத்தை படித்துக்கொண்டே இருக்ககூடாது. ஆனந்தமயமான பரமன் மட்டுமே உண்மை, மற்றதெல்லாம் மாயை என்ற வேதத்தில் கூறப்பட்ட ஒரே கருத்தை திரும்பத்திரும்ப படிப்பதில் பயனில்லை. வெவ்வேறு ஆசிரியர்கள் வேதத்தின் அடிப்படையில் உபதேசிக்கும் உண்மைகளை வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டு கூடிய விரைவில் ஞானம் பெற முயல வேண்டும்.

நூற்றியெட்டு உபநிடதங்களை உள்ளடக்கிய நான்கு வேதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை மற்றும் இவற்றை ஆதாராமாக கொண்டு எழுதப்பட்ட நூல்கள் என ஆன்மீக நூல்கள் ஏராளமாக உள்ளன. இவையனைத்தையும் படித்து முடிப்பது நமது குறிக்கோள் அல்ல. ஞானம் பெறுவது மட்டும்தான் நம் நோக்கம்.

வித்யாரண்ய சுவாமிகள் ஞானம் பெற ஐந்து கோசங்களை ஆராயச்சொல்கிறார். தேங்காயின் மட்டை, ஒடு ஆகியவற்றை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுப்பது போல் உடல், மனம், பிராணன் என்று ஒவ்வொரு கோசத்தையும் ஆராய்ந்து இது நான் அல்ல என்று ஒதுக்கித்தள்ளி நான் பரமன் என்ற ஞானத்தைப்பெறவேண்டும். இதை செய்துமுடித்த பின்கூட என்னைக்கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுபவன் எனக்கு நாக்கு இல்லை என்று உரக்க கத்துபவனை போன்று பரிதாபத்துக்குரியவன் என்கிறார் வித்யாரண்யர்.

வேதத்தை படித்து தேற ஓரிரு வருடங்கள் ஓயாமல் உழைத்தபின்னும் ஞானம் ஏற்படவில்லையென்றால் தொடர்ந்து தர்ம காரியங்கள் செய்வது, கடவுளை பிரார்த்திப்பது, வேதம் படித்து படித்ததை ஆராய்வது என்பது போன்ற ஆன்மீக செயல்களுக்காக அதிக நேரம் செலவழிக்ககூடாது. மாணவப்பருவத்தில் இருப்பவர்கள் தங்கள் முயற்சியை பகுதிநேர வேலையாக மாற்றிக்கொண்டு இல்வாழ்வை துவங்க வேண்டும். இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்ய அதிக நேரம் செலவிட்டு ஞானம் பெற செய்யும் செயல்களை குறைத்துக்கொள்ள வேண்டும். மனம் பக்குவப்பட்டபின் ஏற்கனவே செய்த முயற்சிகளின் பலனாக விரைவில் ஞானம் ஏற்படும்.

மனித மனங்கள் வேறுபடுவதால் ஞானம் கிடைக்க எவ்வளவு காலமாகும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. உயர்வகை ஆசிரியரின் துணையுடன் வேதம் படிக்க வாய்த்தவர்கள் ஆசிரியரிடம் முழுமையாக சரணடைந்து அவர் காட்டும் வழியில் பயணித்தால் மனம் தகுதி பெற்றபின் தானாக ஞானம் ஏற்படும்.


பயிற்சிக்காக :

1. ஞானம் பெறுவது என்றால் என்ன?

2. ஞானம் பெறுவது எளிதா அல்லது கடினமா?

3. மற்ற புத்தகங்களுக்கும் வேதத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

4. ஞானத்திற்கும் அறிவிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன?

5. ஞானம் பெற ஆசிரியரின் உதவி தேவை என்பதை விளக்குக.

6. மூன்று வகை ஆசிரியர்கள் யார்?

7. ஞானம் பெற ஆசிரியரை தனியாக அணுக வேண்டிய காரணம் என்ன?

8. விரைவில் ஞானம் பெறுன் வாய்ப்பை அதிகரிக்க செய்ய வேண்டிய இரு செயல்கள் என்ன?

9. ஞானம் பெற தேவையான தகுதிகள் யாவை?

10. ஞானம் பெற தடைகளாக இருப்பவை எவை?

11. தடைகளை நீக்க என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. ஆசிரியர் மற்றும் வேதம், இவ்விரண்டில் எது மிகவும் முக்கியம்?

2. ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இருக்க வேண்டிய உறவை ஆராய்க.

3. மாணவன் ஆசிரியரிடம் கேள்வி கேட்க வேண்டிய அவசியத்தையும் கேள்வி கேட்கவேண்டிய விதத்தையும் ஆராய்க.

4. ஞானம் பெற்றுவிட்டோம் என்று நமக்கு எப்படித்தெரியும்?

5. அத்வைதம், துவைதம் போன்றவை ஃபிலாசபிகளா?

6. மற்ற துறையில் உள்ள ஆசிரியர்களுக்கும் வேதம் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

Wednesday, March 16, 2011

Lesson 151: Child-like does not mean childish (Brahmasutra 3.4.50)

பாடம் 151: குழந்தையை போல என்றால் குழந்தைத்தனம் அல்ல
பாடல் 475 (III.4.50)

ஞானி குழந்தையைப்போல எப்பொழுதும் இன்பமாக வாழ்வான் என்பதற்கு அவன் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் குழந்தைத்தனமாய் நடந்துகொள்வான் என்பது பொருள் அல்ல என்ற கருத்தை விளக்கி ஞானியின் பார்வையில் உலகம், ஏற்றத்தாழ்வுகளை இருந்தாலும் அவன் துன்பம் கலவா இன்பத்துடன் வாழும் விதம் என்பது போன்ற விளக்கங்களை இந்த பாடம் தருகிறது.

ஞானியின் பார்வையில் உலகம்

வானத்தில் உயரே பறந்துகொண்டிருக்கும் விமானம் அளவில் மிகப்பெரியது என்று அறிந்துகொண்டபின்னும் அது மிகச்சிறியதாகத்தான் கண்ணுக்குத்தெரியும். அணுக்கூட்டங்களின் தொடர்ந்த அதிர்வே திடப்பொருள்ளாக காட்சியளிக்கிறது என்ற அறிவியல் அறிவு ஏற்பட்டபின்கூட வாசல் வழியாகத்தான் வீட்டை விட்டு போகமுடியுமேதவிர சுவர்வழியே வெளியே போக முடியாது. சுவர் உண்மையில் ஒரு திடப்பொருள் இல்லை என்ற அறிவு நமது அனுபவத்தை மாற்றிவிடாது.

அதுபோல உலகே மாயை என்று தெரிந்தவுடன் இந்த உலகம் நம் கண்ணில் இருந்து மறைந்துவிடாது.  உலகம் உண்மை என்று எண்ணிக்கொண்டிருக்கும் மற்றவர்களைப்போலவே ஞானியும் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து எதிர்கொள்வான். முக்தியடைந்தபின் உலகம் சுவர்க்கமாக மாறிவிடாது.

திரைப்படத்தில் காட்டப்படும் நிகழ்வுகள் உண்மையல்ல என்று தெரிந்திருந்தாலும் பார்வையாளர்கள் சோககாட்சிகளில் கண்ணீர்சிந்துவதைப்போல நடப்பது நாடகம் என்று அறிந்திருந்தாலும் ஞானிகள் தங்கள் வாழ்வில் நடக்கும் சோக நிகழ்வுகளின் பொழுது அழுவதில் தவறில்லை. சாவுவீட்டில் அறியாபாலகன் சிரிப்பது போல ஞானி குழந்தைத்தனமாக ஆத்மாவுக்கு அழிவில்லை என்ற தத்துவத்தை பேசிக்கொண்டிருக்க மாட்டான். மற்றவர்களுடன் சேர்ந்து அவர்களது துன்பத்தில் பங்கேற்பான். ஞானி குழந்தைப்போல எப்பொழுதும் இன்பமாக இருப்பான் என்பதற்கு சாவு வீட்டில் சிரிப்பான் என்று பொருள்ளல்ல. சோகமான படத்தில் அழுதாலும் அது நல்ல படம் என்று இரசிப்பதுபோல சிரிப்பு அழுகை என மாறிமாறி வருவதுதான் வாழ்க்கையென அறிந்த ஞானி தான் எதிர்கொள்ளும் நிகழ்வுகளுக்கேற்ப செயலாற்றி என்றும் இன்பமாக வாழ்வான்.

மற்றவர்கள் உண்மை என்று நினைக்கும் வாழ்வை மாயை என்று அறிந்த ஞானி முறையாக வேதம் படித்தால் மட்டுமே இந்த அறிவை பெற முடியும் என்றும் அறிந்திருப்பதால் தான் அறிந்த உண்மைகளை தன்னை குருவாக ஏற்று கேட்பவர்களைத்தவிர மற்றவர்களுக்கு எடுத்துகூறமாட்டான். அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து அவர்களில் ஒருவனாகவே வாழ்வான்.

அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிபவர் ஒரு பள்ளிச்சிறுவனுடன் அளவளாவ நேரிட்டால் தனது வேலையை பற்றி பேசாமல் பள்ளிப்பாடங்களைப்பற்றி பேசுவார். இதற்கு காரணம் சிறுவனுக்கு அலுவலக வேலை நுட்பங்கள் புரியாது என்று அவருக்கு தெரியும். அதேபோல் இரண்டு வயது சிறுமியுடன் விளையாடும் பெரியவர்கள் அவளது நிலைக்கு இறங்கிவந்து அவளின் பொம்மையை தனக்கு வேண்டுமென்று கேட்டு அவள் தராவிட்டால் சோகமாக முகத்தை வைத்துக் கொள்வார்கள். அதைபார்க்கும் சிறுமி அவர்கள் உண்மையிலேயே அழுகிறார்கள் என்று நினைத்தாலும் பெரியவர்களை பொறுத்தவரை அது வெறும் விளையாட்டு. ஆனால் பெரியவர்கள் சிறுமியிடம் நடித்து அவளை ஏமாற்றுகிறார்கள் என்று கூறமுடியாது. ஏனெனில் அதிக அறிவு உடையவர்கள் மற்றவர்களின் நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே அவர்களுடன் உறவாடமுடியும். வேலைக்காரனை திட்டுபவர் ஆசிரியரிடம் பணிவாக நடந்துகொள்வது நடிப்பல்ல. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைக்கேற்றவாறு செயலாற்றுவதுதான் வாழ்க்கை. ஞானி இந்த வழக்கத்திற்கு விதிவிலக்கல்ல. நான் பரமன் என்பதை உணர்ந்த ஞானி மற்றவர்களின் நிலைக்கு இறங்கிவந்து ஒரு சராசரி மனிதனாகவே வாழ்வான். எனவே சாவு வீட்டில் அவன் அழுவது நடிப்பல்ல.

மற்றவர்களைப்போல் ஞானியும் துக்க நிகழ்வுகளில் உண்மையான சோகத்துடன் இருப்பான் என்றால் ஞானத்தால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். கனவில் ஏற்படும் நிகழ்வுகளுக்கேற்றாற்போல் இன்பதுன்பங்களுக்கிடையே அலை பாயும் மனம் கனவிலிருந்து விழித்தவுடன் நிம்மதியடையும். கனவு காணும்பொழுதே காண்பது கனவு என்ற அறிவு இருந்தால் சோகநிகழ்வுகளின்பொழுது அழுதாலும் ஆழ்மனதில் இது வெறும் கனவுதான் என்ற நிம்மதியிருப்பதுபோல ஞானியின் வாழ்வில் அவன் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும்பொழுது அவனது மனம் அலைபாய்ந்தாலும் ஆழ்மனதில் இது மாயை என்ற அறிவு இருப்பதால் அவனால் தொடர்ந்து தடைபடாத இன்பத்துடன் இருக்கமுடியும். எனவே வாழ்வின் நிகழ்வுகள் எப்படி அமைந்தாலும் ஞானி தொடர்ந்து அமைதியாகவே இருப்பான்.

துன்பம் கலவா இன்பம்

நான் பரமன் என்ற அறிவை அடைந்தால் துன்பம் கலவா இன்ப வாழ்வை என்றும் வாழலாம் என்று வேதம் கூறுவது பொய்யல்ல. பரமன் ஆனந்தமயமாக என்றும் இருப்பவன். மனம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் மாயையின் ஒரு சிறு பகுதி. நான் மனம் என்ற அறியாமையுடன் இருக்கும்வரை துன்பத்தை தவிர்க்கமுடியாது. நான் பரமன் என்பதை உணர்ந்த ஞானி தன் மனதின் நிலையை தன் நிலையாக கருத மாட்டான் என்பதால் அவனால் துன்பம் கலவா இன்பத்துடன் வாழமுடியும்.

ஞானி மட்டும்தான் துன்பம் கலவா இன்பவாழ்வை பெறமுடியுமென்றாலும் ஞானம் அடைந்தால் மட்டும்தான் துன்பத்தை தவிர்க்க முடியும் என்று வேதம் கூறவில்லை. அவரவர்களின் அறிவுத்திறனுக்கும் முயற்சிக்கும் ஏற்ற விகிதத்தில் வாழ்வில் துன்பங்களை குறைத்து இன்பங்களை அதிகரித்துக்கொள்ளலாம்.

முதல் படி: தர்மமான வாழ்க்கை

துன்பம் தரும் சூழ்நிலைகள் தாம் செய்த பாவங்களின் விளைவு என்பதை உணர்ந்தவர்கள் தங்கள் துன்பங்களுக்கு மற்றவர்கள் காரணம் என்று நினைக்க மாட்டார்கள். எனவே இவர்கள் மனதில் சந்தேகம், சஞ்சலம், கவலை, கலக்கம், பகைமை, பழிவாங்கும் உணர்வு, விரோதம், வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏற்படாது.  

இரண்டாம்படி: ஆசைகளை குறைத்துக்கொண்டவர்கள்

ஆசைதான் பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம் என்பதை உணர்ந்தவர்கள் அதிருப்தி, எரிச்சல், ஏக்கம், ஏமாற்றம், தவிப்பு, பொறாமை, பேராசை, விரக்தி போன்ற உணர்வுகளால் துன்பபடுவதில்லை.   

மூன்றாம் படி: இறைவனிடம் சரணடைந்தவர்கள்

அனைத்தும் ஆண்டவனின் ஆணைப்படிதான் நடக்கிறது என்று நம்புபவர்கள் அசூயை, அகந்தை, ஆணவம், ஆத்திரம், இறுமாப்பு, கர்வம்,  தற்பெருமை, குரோதம், வெட்கம், விரக்தி போன்றவற்றால் வருந்துவதில்லை.

ஞானிகள் இந்த மூன்றுபடிகளையும் கடந்தவர்கள் என்பதால் ஞானம் பெறுவதற்கு முன்பேயே இதுபோன்ற தீய உணர்வுகளிலிருந்து விடுதலையடைந்திருப்பார்கள்.

நான்காம் படி: குழந்தைகள் மற்றும் ஞானம் பெற்றவர்கள்

குழந்தை எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருப்பதில்லை. பசித்தால் அழும். எனவே குழந்தையைப்போல ஞானியும் துன்பம் கலவா இன்ப வாழ்வை வாழ்வான் என்றால் அவன் எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருப்பான் என்று பொருள் அல்ல. அது முடியவும் முடியாது. நகைச்சுவைகாட்சி ஒன்றை பார்த்து வாய்விட்டு சிரிப்பவர்கள் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு மேல் சிரித்துக்கொண்டேயிருக்க முடியாது. போதும், இனிமேல் சிரிக்க முடியாது என்று வேறு வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதுபோல் எந்த ஒரு உணர்ச்சியாலும் தொடர்ந்து நமது மனதை ஆக்ரமிக்க முடியாது. சாவுவீட்டில் கூட விட்டுவிட்டுத்தான் அழுவார்கள். இதற்கு காரணம் மனதில் தோன்றும் எண்ணங்கள் மாறிக்கொண்டேயிருக்கும் என்பதுதான். இதுபோல் மனம் மாறுவதை யாராலும் தடுக்கமுடியாது. மேலும் ஒரே மாதிரி எண்ணங்கள் ஒன்றுமாற்றி ஒன்று வந்தால்கூட போர் அடித்துவிடும். எனவேதான் மக்கள் ஏதாவது ஒரு பொருள்மேல் ஆசைப்பட்டு அது நிறைவேறும் வரை ஏக்கம் என்ற உணர்ச்சியுடன் இருந்து அது நிறைவேறியபின் ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். இதில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால் எவ்வளவு இன்பம் அனுபவிக்கிறோம் என்பது எவ்வளவு துன்பத்தை அனுபவித்தோம் என்பதை பொறுத்து மாறும். அதிககாலம் ஏக்கத்தோடு காத்திருந்த பொருள் கிடைத்தால் அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனவே கூட்டி கழித்தால் இன்பமும் துன்பமும் வாழ்வில் சமமாகவேயிருக்கிறது என்று தெரியவரும்.

இன்பமும் இன்பஉணர்வும்

நான் பரமன் என்பதால் என் இயற்கையான நிலை ஆனந்தம். நான் ஆனந்தமாய் இருக்கிறேன் என்பது ஒரு எண்ணம். நான் ஒரு மனிதன் என்ற எண்ணம்  மனதில் தோன்ற சாதாரண மக்களுக்கு எவ்வித அவசியமும் இல்லை. அதுபோல நான் ஆனந்தமயமானவன் என்ற எண்ணம் ஞானிக்கு தோன்ற அவசியமேயில்லை. மற்றவர்கள் தான் மரணத்திற்குட்பட்ட மனிதன் என்பதில் உறுதியாய் இருப்பது போல் ஞானி தான் பரமன் என்பதில் தெளிவாய் இருப்பதால் நான் ஆனந்தமாய் இருக்கிறேன் என்று தனக்குத்தானே நினைவுபடுத்திகொள்ள தேவையில்லை. தன்னை மறந்த நிலையில் மட்டும்தான் மற்றவர்கள் தங்களது இயல்பு நிலையான ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். தன்னை மறக்கச்செய்த நகைச்சுவைபடம் கொடுத்தது இன்ப உணர்வு. இன்ப உணர்வு வந்து போகும் தன்மையுடையது.

இன்பம் என்றுமிருப்பது. இதையறிந்த ஞானிகள் வந்து போகும் உணர்வுகளை தரம் பிரிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இன்ப உணர்வை தேடி  துன்பப்படுவதில்லை. சூழலுக்கு ஏற்ப வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து உணர்வுகளையும் அனுபவித்து தன்னை மறந்து இருப்பதால் குழந்தையைப்போல ஞானிகளும் துன்பம் கலவா இன்பத்துடன் எப்பொழுதும் இருப்பார்கள்.

நான் யார் என்று தெரியாத அறியாமையுடன் இருக்கும்வரை கிடைத்ததில் திருப்தியடைந்து வாழ்ந்த குழந்தை வளர வளர விரும்பும் பொருள் வேண்டுமென்று ஆசைபட ஆரம்பிக்கும். இதற்கு காரணம் தன்னை பற்றிய அரைகுறை அறிவு. தான் யார் என்ற முழுமையான அறிவை பெறாதவர்கள் வாழ்வு முழுவதும் குழந்தைத்தனமாக புலன்கள் தரும் இன்ப உணர்வுகளின் பின் அலைவார்கள். தான் பரமன் என்பதை உணர்ந்தபின் மறுபடியும் குழந்தைபோல கிடைத்ததில் திருப்தியடைந்து வாழமுடியும்.

நிகழ்காலத்தில் வாழ்தல்

நாளை என்ன நடக்குமோ என்ற பயம், எனக்கு ஏன் இதுபோல் நடந்தது என்ற வருத்தம், நான் ஏன் இப்படி செய்தேன் என்ற குற்றவுணர்வு, எனக்கு வேண்டியது கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற கவலை ஆகிய உணர்வுகள் இல்லாமல் குழந்தைகளும் ஞானிகளும் நிகழ்காலத்தில் வாழ்வார்கள். அவ்வப்பொழுது நிகழும் ஏற்றஇறக்கங்களுடன் கூடிய மாறுதல்களை அப்படியே ஏற்றுக்கொள்வதால் பயம், வருத்தம், குற்றவுணர்வு, கவலை ஆகிய நான்கு தீயவுணர்வுகள் ஏற்படுவதில்லை. குழந்தை முழு அறியாமையுடன் இருப்பதால் இவ்வாறு கவலையில்லாமல் இருக்கிறது. ஞானி படைப்பு என்றால் மாறும் ஏற்ற இறக்கங்கள் என்பதை புரிந்து கொண்டதால் நிகழ்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறான்.
காரண காரியங்களை ஆராய்தல்

ஏதோ உள்நோக்கம் இருப்பதால்தான் இவர் என்னை புகழ்கிறார் என்று எந்த குழந்தையும் நினைப்பதில்லை. மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையும் குழந்தைக்கு இருப்பதில்லை. எது நடந்தாலும் இதற்கு காரணம் என்னவாயிருக்கும் ஆராய்வதில் தவறில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சியை முழுவதும் செய்யாமல் கிடைத்த நொண்டிச்சமாதனத்தை ஏற்றுக்கொள்வதுதான் தவறு. நிகழ்வுகளுக்கு எவ்வித காரணமும் கிடையாது என்பதை ஞானி உணர்வார்.

பரமன் பற்றிய உண்மைகள்

பரமன் ஆனந்தமயமானவன் என்று வேதம் கூறினாலும் நான் பரமன் என்று தெரிந்தவுடன் ஆனந்தத்தில் திளைப்பது போன்ற அனுபவம் ஏற்படுவதில்லை. எனவே தியானம் செய்து மனதை நிர்மலமாக்கி சமாதி அடைதல் அல்லது கண்களை மூடி வண்ணகலவைகளை பார்த்தல் என்பது போன்ற அசாதாரணமான முயற்சிகள் மூலம் கிடைப்பதுதான் முக்தியா என்ற சந்தேகம் தவறு. பரமன் ஆனந்தமானவன் என்ற வேதம் கூறும் உண்மையை அறிவுபூர்வமாக அறிந்துகொள்வதை தவிர அனுபவத்தின் மூலமாகவும் நாம் அறிந்திருக்கிறோம்.

பரமன் ஆனந்த மயமானவன் என்பதை ஆழ்ந்த உறக்க அனுபவத்தை ஆராய்வதன் மூலம் அறியலாம். உடல் மற்றும் மனம் துன்பத்தில் ஆழ்ந்திருந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் அவையனைத்தையும் மறந்து இன்பமாக தூங்க முடிகிறது. துன்பபடுபவர்கள் மட்டுமின்றி இன்பமாக இருப்பவர்கள் கூட நிம்மதியாக உறங்க ஆசைப்படுகிறார்கள். மேலும் உறக்கம் ஆனந்தமாக அமைய வேண்டுமானால் தூங்கப்போகுமுன் இனிமையான அனுபவங்களை நினைவுகூரவேண்டும் என்று எவ்வித கட்டாயமுமில்லை. இந்த மூன்று காரணங்களால் ஆனந்தம் நம் இயல்பான அனுபவம் என்பது தெளிவாகிறது.

நம் இயல்பான  ஆனந்தத்தை ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பதை உணர மனம் இருப்பதில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் அடங்கியிருக்கும் மனதில் எண்ணங்கள் தோன்றும்பொழுது முதலில் அதை கனவு என்றும் பின் நனவு என்றும் குறிப்பிடுகிறோம். எரிச்சல், ஏக்கம் போன்ற எண்ணங்கள் தோன்றினால் அதை கெட்ட கனவு அல்லது நிகழ்வு என்று வகைபடுத்தும் நாம் நமக்கு பிடித்தமான எண்ணங்கள் தோன்றினால்தான் இன்பம் என்று நினைக்கிறோம். இதுபோன்ற உணர்வுகளை அனுபவிக்க மனம், அது இருந்து செயல்பட ஐம்புலன்களோடு கூடிய உடல் மற்றும் புலன்களால் அறியப்படும் உலகம் ஆகிய மூன்றும் தேவை. இம்மூன்றும் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்துதான் ஆகவேண்டும். இதுதான் ஆனந்தமான பரமனின் விளையாட்டு.

படைப்பின் இந்த இரகசியத்தை அறிந்த ஞானிகள் இன்ப உணர்வு மட்டும்தான் எப்பொழுதும் மாறாமல் இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதில்லை. இசைக்கு ஏற்றபடி ஏறிஇறங்கியாடும் நீரூற்றைப்போல் (musical fountain) உலகநிகழ்வுகளுக்கேற்ப மாறும் உணர்வுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.  

மனம் பற்றிய உண்மைகள்

ஞானம் பெற்றபின் அதன் பலனான முக்தியை முழுமையாக அனுபவிக்க மனதின் தன்மைகள் பற்றிய தெளிவான அறிவு அவசியம். 

முதலாம் உண்மை – மனம் ஒரு கண்ணாடி

சுற்றியிருக்கும் பொருள்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போல சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுவதுதான் மனதின் இயல்பு. போற்றலையும் தூற்றலையும் ஞானி ஒரேமாதிரி ஏற்றுக்கொள்வான் என்பதற்கு இவ்விரண்டும் வேறுபட்டது என்பதை அவன் அறியமாட்டான் என்று பொருளல்ல. நல்ல வார்த்தைகளை கேட்டால் மகிழ்வதும் தீய வார்த்தைகள் காதில் விழுந்தால் கலங்குவதும் மனம் என்கிற கண்ணாடியின் இயல்பு. தன்னை ஒருவர்  திட்டினால் அதைகேட்டு சந்தோஷபட வேண்டும் என்ற கட்டாயம் ஞானிக்கு கிடையாது. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று உணர்ந்த ஞானி தான் திட்டு வாங்குவதும் இறைவனின் விளையாட்டு என்று அறிந்திருப்பதால் சூழ்நிலைக்குத்தக்கவாறு செயல்படுவான்.

வாழ்க்கை எப்பொழுதும் வெற்றி-தோல்வி, உயர்வு-தாழ்வு என்பது போன்ற இருமைகளிடையே ஊசலாடிக்கொண்டுதான் இருக்கும் என்பதால் மனம் அதற்கேற்றாற்போல் சலனப்பட்டுக்கொண்டு இருப்பதை தவிர்க்கவே முடியாது.  

இரண்டாம் உண்மை – மனம் தண்ணீர் போன்றது

பாத்திரத்தை ஆட்டிவிட்டுவிட்டு அதனுள் இருக்கும் தண்ணீர் ஆடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். உலக நிகழ்வுகள் ஐந்து புலன்கள் மூலம் மனதை சென்றடைந்தபின் நிகழ்வுகளுக்கேற்ற மாற்றம் மனதில் ஏற்படத்தான் செய்யும். பாத்திரத்தின் ஆட்டம் நின்றபின்னும் தண்ணீர் ஆடாமல் அமைதியடைய சிறிதுகாலமாகும். அதுபோல விரும்பத்தகாத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட ஞானியின் மனம் அமைதியடைய சிறிதுகாலம் ஆகும். சிறிது காலம் என்பது ஓரிரு மணித்துளிகளா அல்லது ஒரு சில நாட்களா என்பது ஞானத்தின் உறுதியைப்பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும்.

நாவினால் சுட்ட வடு மறையாது என்பது ஞானிகளுக்கு பொருந்தாது. மற்றவர்கள் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை நினைத்து வாழ்நாழ் முழுவதும் துன்பபடுவதுபோல் ஞானி துன்பபடமாட்டான்.

மூன்றாம் உண்மை – மனம் ஒரு உபயோகிக்கப்பட்ட குடுவை

வெகுகாலம் ஊறுகாய் வைத்திருந்த குடுவையை காலிசெய்தாலும் அதன் வாசனை அகல பல காலமாகும். பல்வேறு பிறவிகள்தோறும் சேர்த்துவைத்த விருப்பு வெறுப்புகள் ஞானம் ஏற்பட்டவுடன் மறைந்துவிடுவதில்லை. முன்கோபம், எதிர்காலத்தைப்பற்றிய பயம் போன்றவை பலகாலம் மனதை ஆட்டுவித்த காரணத்தால் ஞானம் பெற்றபின் கூட இவை அவ்வப்பொழுது வெளிப்படலாம். படிப்படியாகத்தான் இவற்றிலிருந்து ஞானிக்கு முழு விடுதலை கிடைக்கும். 

நான்காம் உண்மை – மனம் ஒரு ஊசிப்பட்டாசு

படபடவென்று தொடர்ந்து வெடிக்கும் ஊசிப்பட்டாசு வெடித்து முடித்தபின்னும் திடீரென்று ஓரிரு வெடிகள் வெடிப்பதுபோல ஞானியின் மனதில் கோபம், பயம் போன்ற உணர்வுகள் படிப்படியாக குறைந்து முழுவதும் தீர்ந்துவிட்டது என்று தோன்றினாலும் திடீரென்று ஒரு நாள் முன்போல கோபம் வெடித்து சிதறலாம்.  

ஐந்தாம் உண்மை – மனம் வெய்யிலுடன் சேர்ந்த மழை

பொதுவாக மழை பெய்யும்பொழுது வெய்யில் இருக்காது. ஆனால் ஒரு சில நாட்களில் இவை இரண்டும் சேர்ந்து வருவதுபோல ஞானியின் மனதில் அமைதி மற்றும் கலக்கம் ஆகிய இரண்டும் சேர்ந்து வரலாம். நான் பரமன் என்ற அறிவு ஒருபக்கம் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் எனக்கு இம்மாதிரி நேர்ந்துவிட்டதே என்ற கலக்கமும் மனதை வாட்டலாம்.

ஞானத்தின் நோக்கம்

ஞானம் பெற முயலும் மாணவர்களின் மனம் படிப்படியாக அமைதியை அடைந்து துன்பம் தரும் உணர்வுகளால் பாதிக்கப்படாது என்பது உண்மையென்றாலும் மனதை அமைதிபடுத்துவது ஞானத்தின் நோக்கமல்ல. உண்மையில் நான் யார் என்ற சரியான அறிவை நமக்கு கொடுப்பதுதான் வேதத்தின் நோக்கம். நான் பரமன் என்று தெரிந்து கொண்டால் நான் மனம் அல்ல என்பதும் புரிந்துவிடும். எனவே மனதின் மாறுதல்களை ஞானி அப்படியே ஏற்றுக்கொள்வான். நாடகத்தின் சூத்திரதாரி தன்னை உள்ளேயிருந்து இயக்குகிறான் என்று அறிந்த ஞானி ‘நான் ஏன் கோபப்பட்டேன்’ என்று அவன் தன்னைத்தானே நொந்துகொள்ள மாட்டான். கோபப்பட்டதால் தான் உண்மையிலேயே ஞானியா என்று சந்தேகப்படமாட்டான்.

ஞானத்தின் முடிவு

முழுமையான ஞானம் பெற்றவன் தன் மனதில் நிலைபெற்றிருக்கும் உண்மைகளை பின்வருமாறு வெளியிடுவதாக ஆதி சங்கரரின் நிர்வாண சதகம் அமைந்துள்ளது.

மனம், புத்தி, அகங்காரம், சித்தம் நான் அல்ல. எனக்கு கண், காது, மூக்கு, நாக்கு என்று எதுவும் கிடையாது. நான் பஞ்சபூதங்களால் செய்யப்பட்டவன் அல்ல.

பிராணன் நான் அல்ல. எனக்கு உயிரோட்டம் கிடையாது. மூன்று உடல்கள் நான் அல்ல. பஞ்ச கோசங்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கை, கால், வாய் என்று எனக்கு எவ்வித உறுப்புகளும் கிடையாது.

எனக்கு விருப்பு வெறுப்புகள் கிடையாது. கோபம், மோகம், லோபம், போட்டி, பொறாமை ஆகிய எதுவும் எனக்கில்லை. தர்மம், அர்த்தம், காமம், முக்தி ஆகிய நோக்கங்கள் எதுவும் எனக்கு இருக்கவேண்டிய அவசியம் கிடையாது.

பாவபுண்ணியங்களுக்கு என்னை பாதிக்கும் சக்திகிடையாது. சுக துக்கங்கள் என்னை மாசுபடுத்தாது. எனக்கு மந்திரங்கள் எதுவும் தெரியாது. புனித யாத்திரைகள் செல்லவேண்டிய கட்டாயம் எனக்கில்லை. நான் வேதம் படிப்பதில்லை. யாகம், தவம், மதச்சடங்குகளை செய்தல் ஆகியவற்றால் எனக்கு எவ்வித பிரயோஜனமும் கிடையாது. நான் அனுபவிப்பவனோ அனுபவிக்கப்படும் பொருளோ அல்லது அனுபவமோ அல்ல.

எனக்கு மரணம் கிடையாது. ஜாதி, இனம், மதம் போன்ற பாகுபாடுகள் எதுவும் எனக்கில்லை. எனக்கு தாயோ தந்தையோ கிடையாது, ஏனெனில் நான் பிறக்கவேயில்லை. எனக்கு சொந்த பந்தங்கள் உறவினர்கள் என்று யாரும் கிடையாது. எனக்கு ஆசிரியர் கிடையாது. நான் யாரிடமும் பாடம் கற்கும் மாணவனாக இருந்ததில்லை.

எவ்வித எண்ணங்களும் இல்லாத எனக்கு உருவமற்ற உருவம் உள்ளது. இவ்வுலகில் உள்ள அனைவரது உயிர்த்துடிப்பதற்கும் அவர்களது ஐம்புலன்கள் வேலைசெய்வதற்கும் நான்தான் காரணம் என்றாலும் எனக்கு யார் மீதும் எவ்வித பற்றும் கிடையாது. எதனாலும் நான் கட்டுண்டவனல்ல என்பதால் எனக்கு விடுதலை என்பதும் கிடையாது. எதனுடனும் சம்பந்தப்படாமல் அனைத்தையும் உள்ளடக்கிய நான் என்றும் அமைதியுடன் இருக்கும் அறிவுருவானவன்.     

முடிவுரை :

உலகில் உள்ள மக்கள் அனைவரும் பிறக்கும்பொழுது முழுமையான ஆனந்தத்தின் வடிவாகவே இருக்கிறார்கள். வளரும்பொழுது அவர்கள் பெறும் அறிவு அவர்களை குறையுடன் கூடியவர்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அறியாத குழந்தை அறிவுடன் கூடிய மனிதனாக மாறும்பொழுது தன்னிடம் இல்லாத குறையை நிறை செய்ய உலகில் இன்பத்தை தேட ஆரம்பிக்கிறான்.

இந்ததேடல் மட்டுமே தனிமனிதனின் அனைத்து துன்பங்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் நிலவும் சண்டை, தீவிரவாதம், ஊழல், புரட்சி போன்ற அனைத்து சமூக கொடுமைகளுக்கும் அடிப்படைக்காரணமாக அமைகிறது.

நாடோடிகளாக இருந்த வரை இன்பமாகவும் அமைதியாகவும் வாழ அதிக முயற்சி தேவைப்படவில்லை. இருபது வருடங்கள் கல்வி பயின்று அதன் பின் நாளுக்கு பத்து மணிநேரம் உழைத்தால்தான் பிழைக்க முடியும் என்ற அளவுக்கு தற்பொழுது வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. நின்ற இடத்திலேயே இருப்பதற்கு கூட தொடர்ந்து ஓடவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி குழந்தை பருவத்தில் இருந்த இன்பம் முதுமையில் தொலைய காரணமாக இருப்பது போதவில்லை என்ற தேடல்தான்.  

பணம், பதவி, புகழ் போன்றவை கொடுக்கும் இன்ப உணர்வை நிலையானது என்று நம்பி இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையினால் பயம், பொறாமை போன்ற துன்பம் தரும் உணர்வுகளை அதிகபடுத்திக்கொள்கிறார்கள். மாறும் உலகில் எவ்வளவுதான் முயன்றாலும் துன்பம் கலவா நிரந்தர இன்பத்தை அடைய முடியாது என்ற அறிவு இவர்களுக்கு ஏற்படும்பொழுது வேதம் தரும் பாடங்களை குருவின் துணையுடன் படித்து மாறாத ஆனந்தமயமான பரமன் தான்தான் என்ற முழுமையான அறிவைப்பெற்று ஞானிகளாகிறார்கள்.

ஞானிகளானபின் மீண்டும் குழந்தைகளைப்போல முழுமையான இன்பத்துடன் வாழ்வின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப செயல்புரிந்து மனதில் ஏற்படும் அனைத்து உணர்வுகளையும் அனுபவிப்பார்கள். ஞானிகள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வதில்லை என்பதால் மற்றவர்களின் பார்வைக்கு அவர் ஒரு சாதாரண அறிவாளியாக மட்டும் தென்படுவார்.

பயிற்சிக்காக :

1. துன்பத்தை குறைக்க மனிதன் பயணிக்க வேண்டிய நான்கு படிகள் யாவை?

2. ஞானம் பெறுவதனால் எந்த நான்கு தீய உணர்வுகளிலிருந்து விடுதலை கிடைக்கும்?

3. குழந்தைகளின் வாழ்வுக்கும் ஞானியின் வாழ்வுக்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை?

4. இன்பத்திற்கும் இன்ப உணர்வுக்கும் என்ன வித்தியாசம்?

5. பரமனின் விளையாட்டு என்று குறிப்பிடப்பட்டது எது?

6. பரமன் ஆனந்தமயமானவன் என்பதை நிரூபிக்க கூறப்பட்ட மூன்று காரணங்கள் யாவை?

7. மனதை பற்றிய ஐந்து உண்மைகளை விளக்குக.

8. ஞானத்தின் நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஞானியின் பார்வையில் உலகம் சுவர்க்கமாக தோன்றும் என்பது உண்மையா?

2. அனுபவத்திற்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பை ஆயக

3. துன்பநிகழ்வு ஞானியை பாதிக்குமா?

4. நிகழ்காலத்தில் வாழ்வது என்றால் நாளை என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி திட்டமிடகூடாதா?

5. காரண காரியங்களை ஆராயாமல் எவ்வாறு மனித குலத்தில் முன்னேற்றம் ஏற்படும்?

6. ஞானத்தின் முடிவு என்பதற்கும் வேதாந்தம் என்பதற்கும் உள்ள உறவை ஆய்க.

7. கனவு நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் வேறுபாடு இல்லை என்பது உண்மையா?