Friday, December 7, 2012

Lesson 180: Word is God (Brahmasutram 4.3.2)


பாடம் 180: ஞானியின் பார்வை Dr. விஜய் S சங்கர் MD PhD.
பாடல்: 519 (IV.3.2)

வார்த்தையில் இருந்தே உலகம் உருவானது என்ற உண்மையை “அனைத்தும் ஆத்மாவின் பெயர்கள் மட்டுமே” என்ற மந்திரத்தின் மூலம் ஐதரேய உபநிஷதம் (3.2) கூறுகிறது. மாயையான இந்த உலகத்தை ஒரு ஒளி-ஒலி காட்சி என்று வர்ணிக்கும் டாக்டர் விஜய் சங்கரின் கருத்துக்களை இந்தப்பாடம் தருகிறது.

மனிதனின் துன்பத்துக்கு காரணம்

தான் செயல்களை செய்பவன் என்ற எண்ணம் மனிதனுக்கு இருப்பதால் மட்டுமே அவன் துன்பம் அடைகிறான். மனதில் என்ன எண்ணங்கள் எப்போது தோன்றும் என்பதும் அதில் எந்த எண்ணங்கள் செயலாக மாறும் என்பதும் அவனது கட்டுப்பாட்டில் இல்லை.  ‘செயல்’ என்பதே மனித மனத்தின் கற்பனை.


இல்லாத உலகம்

உலகம் என்ற ஒளி-ஒலி காட்சி, வெள்ளித்திரைமேல் காட்டப்படும் திரைப்படம் போல் தொடர்ந்து மாற்றம் அடைந்து கொண்டு இருக்கிறது. திரைப்படத்தில் ஒளி, ஒலி தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒளியையும் ஒலியையும் ஒன்று சேர்த்து இடம், காலம், உருவங்கள், எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவற்றை கற்பனை செய்து கொண்டு உணர்ச்சிகளை மனித மனம் உருவாக்குகிறது. வில்லன் கதாநாயகியை கொலை செய்யப் போகிறான் என்பது வெறும் கற்பனை மட்டுமே. ஏனெனில் உண்மையில் இருப்பது ஒளி-ஒலி மட்டுமே.

இந்தத் திரைப்பட உவமை வாழ்வுக்கு முற்றிலும் பொருந்தும். திரையில் தோன்றும் கதாபாத்திரங்கள் தான் செயல்களை செய்வதாக எண்ணுவதுபோல் தன் வசமின்றி இயங்கும் உடலின் (ஒளி) மாற்றங்களையும் மனதின் (ஒலி) மாற்றங்களையும் தனது செயல்களாக மனிதன் நினைக்கிறான். தோன்றுவதும் மறைவதும் தன் கையில் இல்லாத போது இடைப்பட்ட வாழ்வு மட்டும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைப்பது அறியாமை. நினைவு தெரிந்த நாள் முதல் மரணம் வரை இந்த அறியாமை தொடர்வதால் மனிதன் தன் சுயமுயற்சியால் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்ற கற்பனை, உண்மை போல் காட்சி அளிக்கிறது.

நீள அகலம் மட்டுமே உடைய திரையில் உலகம் முப்பரிமாணத்துடன் தெரிவது போல ஒருங்கிணைந்த மாற்றத்தை (singular movement) நாம் பிரபஞ்சமாக பார்க்கிறோம். ஒலிபெருக்கியிலிருந்து வரும் சப்தத்தை திரையில் தோன்றும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் பேசுவதுபோல நாம் பார்க்கிறோம். அதுபோல வெவ்வேறு அலைவரிசைகளில் நடக்கும் ஒருங்கிணைந்த மாற்றத்தை நாம் வார்த்தைகளாகவும் எண்ணங்களாகவும் அறிகிறோம்.

காட்டப்படும் திரைப்படத்தில் ஒன்றி அந்தக் கதையை உண்மையான வாழ்க்கை எண்ணுவதுபோல ஒருங்கிணைந்த மாற்றத்தை நாம் உலகமாக பார்க்கிறோம்.


கற்பனையான வாழ்வு    

வாழ்க்கை என்பது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிறது என்பது நமது கற்பனையே. நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களும் தொடர்ந்து மாறுகின்றன. இந்த மாற்றம் நாம் பிறப்பதற்கு முன்பும் இருந்தது; இறந்த பின்னும் தொடரும். ஆதி அந்தம் இல்லாத ஒரு மாற்றத்தில் தொடக்கம்-முடிவு என்பதை வரையறுக்க முடியாது.

சுழலும் சக்கரத்தில் எந்த வித நியாயமும் இன்றி ஏதோ ஒரு புள்ளியை ஆரம்பம்  என்று கற்பனை செய்து அதன் பின் சக்கரத்தின் சுழற்சியை கணக்கிடுவது போல நாம் நம் வயதை கணக்கிடுகின்றோம். அனைவரது விடையும் ஒத்து இருப்பதால் பொய் உண்மை ஆகிவிடாது. உலகம் என்ற ஒளி ஒலி காட்சியில் தனி மனிதர்கள் என்று யாரும் இல்லை.


அனைத்தும் மாயை

இருப்பது ஒருங்கிணைந்த மாற்றம் அல்லது மாயா சக்தியுடன் கூடிய பரமன் மட்டுமே. இருக்கும் அந்த ஒன்றை நாம் உலகமாகவும் வாழ்க்கையாகவும் தவறாக அறிகிறோம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் வெவ்வேறு அலைவரிசையில் (frequency) வெவ்வேறு அழுத்தத்துடன் (intensity) வெளியாகும் ஒளி-ஒலிகளின் தொகுப்பே. திடமான பொருள் என்று எதுவும் கிடையாது. போட்டான் (photon) என்ற ஒரே ஒரு ஒளித்துகளை மட்டுமே நம் கண்ணால் ஒரு கணத்தில் பார்க்க முடியும். தொடர்ந்து தென்படும் இந்த ஒளித்துகள்களை ஒன்றாக கோர்த்து வெவ்வேறு உருவங்களை மனம் கற்பனை செய்துகொள்கிறது.

இதுபோல் கற்பனை செய்வதற்கு ஒலி அவசியம். ஒலியில் இரண்டு வகை உண்டு. காதினால் கேட்கப்படகூடிய ஒலி; கேட்கமுடியாத ஒலி. எண்ணங்கள் என்பவை கேட்க முடியாத ஒலி வகையை சாரும். இவ்விரண்டு வகை ஒலிகளுக்கும் பொருள் கிடையாது. பொருளை கற்பனை செய்துகொள்வது மனித மனமே.

எவ்வளவுதான் முயன்றாலும் நம்மால் நாம் ஆறு மாத குழந்தையாய் இருந்த போது நடந்த நிகழ்வுகளை நினைவுகூற முடியாது. ஏனெனில் நிகழ்வுகள் என்று எதுவுமே இல்லை. நிகழ்வுகள் இருப்பதாக கற்பனை செய்து கொள்வது குழந்தைக்கு சாத்தியம் இல்லை. ஏனெனில் அர்த்தம் இல்லாதஅம்மாஎன்ற ஒரு ஒலியை பிரிக்கமுடியாத ஒளித்தொகுப்பில் ஒரு குறிப்பிட்ட உருவத்துடன் சம்பந்தப் படுத்தி இவள் தன் தாயார் என்ற கற்பனையை வளர்த்திக்கொள்ள எண்ணங்கள் முதிர்ச்சி (sophistication) அடைவது அவசியம்.

இதனாலேயே வார்த்தையிலிருந்து உலகம் பிறந்தது என்று கூறப்படுகிறது. அம்மா என்ற வார்த்தையின் ஒலியை ஒரு குறிப்பிட்ட உருவத்துடன் ஒன்றுபடுத்தி அம்மா என்ற எண்ணம் உருவாகும் பொழுதுதான் உலகம் உருவாக ஆரம்பிக்கிறது. இது போல எவ்வித உறவும் இல்லாத ஒளி-ஒலி தொகுப்பை ஒன்றுடன் ஒன்றை சம்பந்தப்படுத்தி, எண்ணங்களால் அதாவது வார்த்தைகளால்ஆன ஒரு உலகை மனித மனம் சிருஷ்டிக்கிறது.

கண்ணுக்குத் தெரிவதை நாம் பார்ப்பதில்லை. மனதுக்குத் தோன்றுவதைத்தான் நாம் பார்க்கிறோம். நம் கண்ணுக்குத் தெரிவது ஒரே ஒரு ஒளித்துகள் மட்டுமே. அவற்றை ஒவ்வொன்றாக கோர்த்து ஒரு பொருளை பார்ப்பதற்கு எண்ணங்கள் அவசியம். மரம், வீடு, மனிதன் என்று வெவ்வேறு பெயர்களை கற்பனை செய்து மனதில் சேர்த்து வைத்து இருப்பதால் பார்க்கும் ஒளித்துகள்களை சிரமமின்றி கோர்த்து வெவ்வேறு பொருள்களாக நாம் பார்க்கிறோம். உண்மையில் இருப்பது பிரிக்கமுடியாத இடைவெளி இல்லாத ஒரே ஒளி-ஒலி தொகுப்பு மட்டுமே.

கேட்கும் ஒலி இடைவெளி என்று ஒன்று இருப்பதாக நம்மை நம்பவைக்கிறது. வெளியில் இருந்து ஒலி உருவானதாக வேதம் கூறுவதை ஒலியில் இருந்து வெளி உருவானதாக கூட எடுத்துக்கொள்ளலாம். காரண காரியம் என்பதே நமது கற்பனை. இரு காதுகள் மூலம் பதிவாகும் ஒலி வெவ்வேறு இடங்களில் இருந்து வருவதாக நினைப்பது மனம். இவ்வாறு வெளி என்பது உருவாகும்பொழுது அதனுடன் காலம் என்பதும் உருவாகிறது.
காலம் இருப்பதற்கு வெளி அவசியம். வெளியை உணருவதற்கு காலம் அவசியம். இருப்பது இந்தக்கணத்தில் தோன்றும் ஒளி-ஒலி மட்டும்தான். இதை இடம், காலம், பொருள் என்று பிரிவினை செய்வது மனித மனம். மனித மனதில் தோன்றும் எண்ணங்களாலேயே இந்த உலகம் இருப்பது போல தென்படுகிறது. ஆனால் இதுபோல் உலகத்தை உருவாக்குவது கூட மனிதனின் செயல் அல்ல. ஏனெனில் செயல் என்று எதுவுமே இல்லை. காரண காரியங்களும் இல்லை. எண்ணங்கள் என்பவையும் ஒலியின் வடிவங்களே. எனவே இல்லாத உலகம் இருப்பதாக மனித மனம் நம்புவதும் மாயையே. எனவே, துன்பத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணமும், அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டதாக ஏற்படும் எண்ணமும் இந்த ஒளி-ஒலிகாட்சியின் ஒரு பகுதியே.

ஆக, பார்க்கப்படும் பொருள், பார்ப்பவன், பார்வை ஆகிய மூன்றும் ஒன்றே. பெயரில்லாத அந்த ஒன்றை பரமன் என்று பெயரிட்டு பரமனை அறிய முயலும் முக்திவிழைவோர்களும் தாங்கள் உருவாக்கிய மாயையின் பிடியிலேயே இருக்கிறார்கள். மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் தனக்கும் எவ்வித உறவும் இல்லை என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் துன்பம் அடைவது இல்லை.

நான் என்ற கற்பனைக்கதையின் பிடியில் செயல் படும் பற்றுடையோர்கள் தனக்கும் தான் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதை அறிவதில்லை. திரையில் தெரியும் திரைப்படத்தைப் போல, இருப்பது பிளவுபடாத ஒரே ஒளி-ஒலி காட்சி. உலகம் என்பது ஒரு கற்பனை.


காலமும் வெளியும் மனதின் கற்பனை

பிரபஞ்சத்தின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது முழுவதும் இருப்பது இந்தக்கணத்தில் மட்டும்தான். காலம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் அதன் ஓட்டம் முழுவதும் நடப்பது இந்தக்கணத்தில் மட்டும்தான்.

திரையில் தோன்றும் திரைப்படத்துடன் உலகை ஒப்பிடும்போது அனைத்தும் ஒரே ஒளி-ஒலி தொகுப்பு என்ற கருத்தை புரிந்து கொள்ளலாம். ஆனாலும் அந்தத் திரை நீள அகலங்களுடன் இருப்பதாலும் படம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி ஓரிரு மணி நேரத்தில் முடிந்துவிடும் என்பதாலும் காலம்-வெளி ஆகிய இரண்டும் கற்பனை என்ற கருத்து புரிவதில்லை. அடுத்தடுத்து தென்படும் எவ்வித அசைவும் இல்லாத நிழல் படங்களின் தொகுப்புதான் திரைப்படம். வேகமாக மாறும் நிழல் படங்களை பார்க்கும் திறன் கண்ணுக்கு இல்லாததால் அவற்றை ஒரு திரைப்படமாக நாம் பார்க்கிறோம். அது போல இருப்பது இந்தக் கணம் மட்டும் தான். கணம் என்பது நிமிடம், வினாடி என்பதுபோன்ற கற்பனையான  காலத்தின் அளவு அல்ல. ஒளி-ஒலியுடன் கூடிய ஒரு கணம், முழுமையானது. காலத்துக்கு அப்பாற்பட்ட இந்த கணத்தை,  மாயையுடன் கூடிய பரமன் என்றும் கூறலாம்.

வார்த்தைக்கும் மனதுக்கும் எட்டாதவன் பரமன் என்று கேன உபநிஷத மந்திரம் (1.3) கூறுகிறது. வார்த்தை என்பதும் எண்ணம் என்பதும் வெவ்வேறு ஒலி வடிவங்கள். பொருள் இல்லாத ஒளியுடன் அர்த்தம் இல்லாத ஒலியை சம்பந்தப்படுத்தி கற்பனையான ஒரு உலகத்தை வார்த்தைகளால் உருவாக்கி அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் என்ற கற்பனை கதையால் இந்தக்கணத்தினுள் எட்டிப் பார்க்க முடியாது.

திரைப்படம் பார்க்கும் உவமையே கால தேசத்திற்குள் அடங்கியது. படத்தில் தெரியும் காட்சி மனதில் பதிவாகி உணர்வுகளை உண்டாக்க சிறிது நேரம் ஆகும். அதுபோல் பிளவுபடாத ஒளித்தொகுப்பின் மாற்றங்களை ஒலியுடன் சேர்த்து இல்லாத பொருளை உண்டாக்க நம் மனதுக்கு சிறிது நேரம் ஆகும். அதாவது நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் நடந்து முடிந்த ஒளி மாற்றங்களின் வர்ணனை. நிகழ்காலத்தில் நடைபெறும் வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சியில் அதைபற்றி நம் மனதில் தோன்றும் வர்ணனையும் ஒரு பகுதி.

கடந்தகாலத்தை பார்க்க முடியாது. ஆனாலும் நாம் பார்க்கும் நட்சத்திரம் நான்கு வருடங்களுக்கு முந்தையது என்றும் அது இப்போது அழிந்து போனால் நான்கு வருடங்களுக்கு பிறகுதான் நமக்குத் தெரியவரும் என்றும் வானவியல் அறிஞர்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஏனெனில் இது போன்ற பொய்களை உண்மை என்று ஏற்காவிடில் நாம் நம் கற்பனையால் உருவாக்கிய மாயமான உலகம் உடைந்து போய்விடும்.


மனம் தேவையில்லை

வாழ்க்கையை வாழ மனம் தேவை இல்லை. மனதில் தோன்றும் எண்ணங்கள்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்பது மூடநம்பிக்கை. தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் தோன்றியபின் தண்ணீர் குடிக்கும் செயலை நாம் செய்கிறோம் என்பதனால் மனம் உடலை ஆட்சி செய்கிறது என்று முடிவு செய்யக்கூடாது. ஒளி மாற்றங்களுக்கு முன்போ பின்போ அதை பற்றிய எண்ணங்கள் மனதில் ஏற்படுவது மாயையின் செயல். நாம் நம் வாழ்க்கையை நமது முயற்சியால் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தது நடப்பதுபோன்ற நாடகம் நடக்கிறது.

அனைத்து மாற்றங்களும் இந்தக்கணத்தில் மட்டுமே இருக்கின்றன. மனதில் ஏற்படும் எண்ணங்கள் அனைத்தும் இந்தக்கணத்திலேயே ஏற்படுகின்றன. காலம் என்பதை உண்மை என்று நினைக்கும் பற்றுடையோர்கள் ஒளிமாற்றங்களுக்கு செயல்கள் என்று பெயரிட்டு, நான் இந்த செயலை செய்தேன் என்ற எண்ணத்துடன் வாழ்வார்கள். காலம் என்பதை கற்பனை என்று கூடிய விரைவில் புரிந்துகொள்வேன் என்ற எண்ணத்தை மனதில் தோற்றுவிற்பதன் மூலம் முக்திவிழைவோர்களை தொடர்ந்து மாயை தன் பிடியில் வைத்திருக்கும். காலத்தை வென்ற முற்றுணர்ந்தோர்கள் காலனின் பிடியில் இருந்து தப்பித்து மரணமில்லா பெருவாழ்வை வாழ்வதும் மாயையின் விளையாட்டே.


மனிதன் எதையும் செய்வதில்லை.

ஆரம்பமும் முடிவும் இல்லாத இயக்கத்தில் செயல் என்பதே கிடையாது. காலை எழுந்ததும்பல் தேய்ப்பதுஎன்பது ஒரு செயல் அல்ல. மனம் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்குபல் தேய்த்தல்என்ற பெயரை வைப்பது (labeling) மட்டும்தான் நிகழ்கிறது. பெயர் வைத்துவிட்டதால் அதற்கு தான் உரிமையாளன் என்ற நினைவு மனிதனின் துன்பத்துக்கு காரணமாகிறது. செயல் என்பது வெளி உலகில் இல்லை. நம் மனதில் மட்டுமே இருக்கிறது. நடந்து முடிந்ததைப் பற்றி நினைப்பது செயல் அல்ல. அதேபோல் ஒரு செயலை செய்யலாமா வேண்டாமா என்ற எண்ணம் மனதில் தோன்றுவதால் ‘செயல்களை செய்பவன்’ என்ற பொறுப்பு நமக்கு ஏற்பட்டுவிடாது. எவ்வித அர்த்தமும் இல்லாத ஒலி வர்ணனை நம் மனதில் ஓயாது கேட்டுக்கொண்டு இருப்பது மாயையின் விளையாட்டு. இந்த வர்ணனையின் அடிப்படையில் நாம் செயல்படுவதில்லை. உடல் என்னும் ஒளி நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்போது ‘நான் நடக்கிறேன்’ என்ற நினைவு நமது மனதில் தோன்றுகிறது. நடந்து செல்வதும். நான் நடக்கிறேன் என்று எண்ணம் ஏற்படுவதுவும் நம் வசமின்றி தானாக ஏற்படும் ஒளி-ஒலி மாற்றங்கள்.

ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழுவதும் அடங்கி இருப்பதால் நம் உடலின் இயக்கத்திற்கு அது பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. தூக்கத்தில் பேசுவதும் நடப்பதும் ஒரு அசாதரணமான நிகழ்வுகள் என்று கருதப்படுகிறது. ஆனால் விழித்திருக்கும் பொழுதுகூட மனம் நம் உடலை கட்டுப்படுத்துவதில்லை. காலையில் விழித்ததும் மனதில் ஏற்படும் எண்ணங்களில் நான் என்ற எண்ணமும் ஒன்று. அதனால் எதையும் செய்ய இயலாது. கேட்பது, பேசுவது, சுவைப்பது, நுகருவது ஆகிய அனைத்தும் மனிதனின் அகங்காரத்தின் துணை இன்றி தானே நடக்கும். ஏற்படும் அனுபவங்களுக்கு அனாவசியமாக பொறுப்பேற்றுக் கொள்வதினாலேயே மனிதன் துயரப்படுகிறான்.


அடையாளம் காண்பது புரிந்து கொள்வது அல்ல

ஒளியையும் ஒலியையும் ஒன்றுபடுத்தி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து இருப்பதால் மனிதர்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் என்ற பிரம்மையில் வாழ்கிறார்கள். இது ஒரு நாற்காலி என்பது வெறும் அடையாளம் காணும் திறன். நாற்காலியை வெறும் வார்த்தை என்றும் அங்கு உண்மையில் எந்தப்பொருளும் இல்லை என்று அறிவதும்தான் உண்மையான அறிவு.

இல்லாத உலகை இருப்பதாக அனைவரும் நம்புவதற்கு தனி மனிதனின் இந்த அடையாளம் காட்டும் திறன் மட்டுமே ஆதாரமாக இருக்கிறது. இது அம்மா, இது அப்பா என்று அர்த்தம் அற்ற வார்த்தைகளுக்கு இல்லாத மனிதர்களை அடையாளம் காட்ட குழந்தைக்கு சொல்லித்தருவது இந்த அடையாளம் காட்டும் திறனை வலுப்படுத்தும் விதம் ஆகும்.

மனம் சுற்றியுள்ள பொருள்களை அடையாளம் காட்டுவதனால் மட்டுமேஉண்மையானஒரு உலகம் இருக்கிறது. எனவே ஒருங்கிணைந்த ஒளித்தொகுப்பில் தான் ஒரு தனி மனிதன் என்ற எண்ணம் மனதில் ஏற்படுவதன் மூலம் இல்லாத உலகம் இருப்பதுபோல் தோன்றுகிறது. எண்ணங்கள் ஏதும் இல்லாவிட்டால் உலகம் இல்லை. சிறுகுழந்தை மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய இரு நிலைகளில் எண்ணங்கள் ஏதும் இல்லை என்பதால் உலகம் இருப்பதில்லை.

உலகம் இல்லை என்பதால் செயல்கள் ஏதும் இல்லை. எனவே வாழ்வில் துன்பம் என்பதுவும் இல்லை. நடக்கவேண்டியவை அனைத்தும் மிகச்சரியாக நம்முடைய முயற்சியோ அனுமதியோ இல்லாமல் நடப்பதால் நாம் இன்பமாக இருக்கலாம்.

முடிவுரை :

நட்சத்திரங்கள், கிரகங்கள், ஜடப்பொருள்கள், உயிரினங்கள் ஆகிய அனைத்தும் ஒரு கணத்தில் தோன்றும் ஒளி-ஒலி காட்சி. இந்த காட்சியின் அடிப்படையில் காலம், தேசம், பொருள், காரண-காரியம் ஆகிய நான்கையும் கற்பனை செய்து தான் சுதந்திரத்துடன் செயல்படும் ஒரு தனி மனிதன் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாழ்வது இந்த ஒளி-ஒலி காட்சியின் ஒரு பகுதி. அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு அநேகர் மனதில் எழுவதும் புதிரை விடுவிக்க ஆண்டவன் என்ற கற்பனையை உருவாக்குவதும் இந்த நாடகத்தில் ஒரு அங்கமே.

இந்த பிரபஞ்சத்தில் நாம ரூபங்களைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற அறிவு ஒரு சில மனிதர்களுக்கு ஏற்பட்டவுடன் அவர்களுக்கு மனிதனால் எதையும் செய்ய முடியாது என்பது புரியும். இந்த அறிவைப்பெற யாராலும் எந்த முயற்சியையும் செய்ய முடியாது. ஏனெனில் செயல் என்பதே மனதின் கற்பனை.

ஒரு சிலர் எப்போதும் ஆரோக்கியம் குறையாமல் வலுவான உடலுடன் இருப்பார்கள். மற்றும் சிலர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். எஞ்சியவர்கள் இந்த இரு எதிர்முனைகளுக்கு இடையே ஏதாவது  ஒரு நிலையில் இருப்பார்கள். எடை கூட வேண்டும் என்று முயற்சி செய்பவர்கள், எடை குறைய வேண்டும் என்று முயற்சி செய்பவர்களைப்போல ஏமாற்றமே அடைவார்கள். உடல் நிலை அவரவர் கட்டுப்பாட்டில் இல்லை. அது போல மனதின் நிலையும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு சிலருக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் தொடர்ந்து துன்பத்தில் ஆழ்ந்து இருப்பர். அதேபோல் வேறு சிலர் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் நிம்மதியாக இருப்பார்கள். எஞ்சியவர்கள் இந்த இரு எதிர்முனைகளுக்கு நடுவே ஏதாவது ஒரு நிலையில் இருப்பார்கள். துன்பத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்று பற்றுடையோர்கள் செய்யும் முயற்சி நீடித்த இன்பம் வேண்டும் என்று முக்திவிழைவோர்களின் முயற்சியைப்போல தோல்வியிலேயே முடியும். தன்னால் எதையும் செய்ய முடியாது என்ற எண்ணம் மனதில் நிலைபெறும்போது ‘முயற்சி செய்வது’ முடிவுக்கு வந்துவிடும். அதன் பின் உலகம் என்னும் நாடகமேடையில் தன் உடலும் மனமும் ஆடும் ஆட்டத்தை இன்பமாக அனுபவிக்கலாம்.

பயிற்சிக்காக :

1.மனிதனின் துன்பத்துக்கு காரணம் என்ன?

2. எண்ணங்கள் முதிர்ச்சி (sophistication) அடைவது என்றால் என்ன?

3.அடையாளம் காண்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

4.வாழ்க்கையை வாழ மனம் தேவையில்லை என்பதை விளக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1. சங்கர் அவர்களின் Non-Duality Life as it is குறும்படத்தை பார்க்கவும் (http://www.acadun.com/en/)?

2. நட்சத்திரங்களின் ஒளி நம்மை வந்து சேர குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் ஆகும் என்பது உண்மையா?

3. முற்றுணர்ந்தோனாக என்ன செய்ய வேண்டும்?