Thursday, July 1, 2010

Lesson 130: Atman is an entity distinct from the body ( பிரம்ம சூத்திரம் 3.3.53-54 )

பாடம் 130: ஆத்மா உடல் அல்ல
பாடல் 412 - 413 (III.3.53-54)

ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டது என்ற உண்மையை உணர மனிதன் பயணிக்கும் பாதையை நான்காக பிரித்து இந்த பாடம் விளக்கம் தருகிறது.

முதல் பகுதி : சூத்திரன்

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் பிறக்கும்பொழுது சூத்திரர்களாகத்தான் பிறக்கிறார்கள். மனம் போனபடி செயல்படுவது, வாய்க்கு வந்ததை உளறுவது, கைக்கு கிடைத்ததையெல்லாம் வாயில் போட்டு சுவைப்பது, எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் நினைத்தபடி வாழ்வது, எது சரி எது தவறு என்று ஆராயாமல் யார் எது சொன்னாலும் நம்பிவிடுவது, எதிர்காலத்தை பற்றி எவ்வித சிந்தனையுமின்றி தற்பொழுதைய சூழலை பொறுத்து சிரிப்பது அல்லது அழுவது போன்றவை சூத்திரர்களின் வாழ்க்கை முறை. அனைத்து குழந்தைகளும் சூத்திரர்களாகத்தான் வாழத்துவங்குவர். ஆனால் இது நல்லதல்ல. எனவேதான் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நல்வளர்ச்சிக்கும் தாய் பொறுப்பேற்றுக்கொள்கிறாள். குழந்தையின் அறிவற்ற செயல்பாடுகள் அதை பாதிக்காமல் பேணுகிறாள். ஆபத்து தரக்கூடிய பொருள்களை குழந்தை அணுகாமல் அதை கண்ணும் கருத்துமாக காப்பாற்றுகிறாள். 

மனிதர்கள் இதுபோல் சூத்திரர்களாக வாழ்வதை ஒரு குறிப்பிட்ட வயது வரை வேதம் அனுமதிக்கிறது. குழந்தை வளர்ந்து தாயின் சொல்லுக்கு கட்டுப்பட மறுக்கும்பொழுது இந்த முதல் கட்டம் முடிவடைகிறது. ஆயினும் சுயமாக சிந்தித்து செயல்படும் அளவுக்கு அதற்கு அறிவு வளர்ந்திருக்காது.  எனவே தொடர்ந்து சூத்திரனாக வாழாமல் குழந்தையை கட்டுபடுத்தும் பொறுப்பு  தந்தைக்கு மாற்றப்படுகிறது.

இரண்டாம் பிறவி: அடிமை

தாயின் பொறுப்பிலிருந்து தந்தையின் கட்டுப்பாட்டுக்கு மாற்றபட்டதும் ஏன், எதற்காக என்று கேள்விகள் எதுவும் கேட்காமல் சொன்னதை செய்யும் அடிமையாக இந்த இரண்டாம் கட்டத்தில் மனிதன் வாழ ஆரம்பிக்கிறான். மனம் போனபடி வாழாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வேதம் விதித்துள்ள விதிகளின் அடிப்படையில் உருவான சம்பிரதாயங்களும் சமூக பழக்க வழக்கங்களும் இதுபோல்தான் உடை அணியவேண்டும், இந்த நேரத்தில் இதைத்தான் சாப்பிடவேண்டும், விளையாடுவதற்கு இவ்வளவு நேரம், படிப்பதற்கு மற்ற நேரம் என்று மனிதனின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன.

பக்கத்துவீட்டு பையனுடன் பேசக்கூடாது என்று தந்தை இட்ட கட்டளையை ஏன் என்று எதிர்த்து கேட்க பொதுவாக பெண்ணுக்கு தைரியம் இருக்காது. அப்படியே கேட்டாலும் அது அப்படித்தான் என்பதற்கு மேல் பதில் சொல்லும் திறன் தந்தைக்கு இருக்காது. இது சரியான கட்டளை என்று அறிவுபூர்வமாகவும் தர்க்க ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டாலும் அதை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனும் புத்திகூர்மையும் பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்காது.

சுயமாக சிந்தித்து தமக்கு எது நல்லது எது கெட்டது என்று ஆய்ந்து அறியும் திறன் வரும் வரை இந்த இரண்டாம் கட்டத்தில் பெற்றோருக்கு அடிமையாகவே பிள்ளைகள் வளரவேண்டும். தங்களுக்கு இன்பமான வாழ்வை எப்படி அமைத்துக்கொள்வது என்பது தெரியாவிட்டாலும்கூட சமைய நம்பிக்கையுடன் வேத விதிகளை பின்பற்றும் கலாச்சாரத்தின்படி வாழ்பவர்கள் தங்களை அறியாமல் சரியான பாதையில் பயணம் செய்வார்கள். வேதம் படித்த ஆசிரியர்களை சரணடைந்து  முறையாக படித்தால் மட்டுமே தர்மமாகவும்  ஒழுக்கமாகவும் ஏன் வாழவேண்டும் என்ற கேள்விக்கு பதில் தெரியவரும்.

மூன்றாம் பகுதி: மாணவன்

வாலிபபருவத்தை அடைந்த பிள்ளைகளுக்கு பெற்றோருக்கு அடிமையாக வாழ்வது பிடிப்பதில்லை. சுதந்திரபறவைகளாக வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக யாரையும் சார்ந்திருக்காமல் வாழ தேவையான பணம் சம்பாதிப்பது எப்படி என்பதில் அவர்கள் கவனத்தை செலுத்துகிறார்கள். பெற்றோர்களும் ‘இப்பொழுது கஷ்டபட்டு நன்றாக படித்தால்தான் பின்னால் சந்தோஷமாக வாழமுடியும்’ என்று பிள்ளைகளின் விடுதலை முயற்சிக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள்.

பணத்திற்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் எல்லோரும் பணம் சம்பாதிப்பதற்காகவே படிக்கிறார்கள். வேதத்தை படித்தால் மட்டுமே இன்பமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள முடியும். எப்பொழுதும் இன்பமாக வாழ்வதற்கு வேறு வழியேயில்லை. ஆயினும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது தெரியாத காரணத்தால் தாங்கள் செய்த அதே தவறை தங்கள் பிள்ளைகளையும் செய்யத்தூண்டி அவர்களையும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக வாழ வழிகோலுகிறார்கள்.

மனிதவாழ்வின் இந்த மூன்றாம் பகுதியான இந்த மாணவப்பகுதி மிக முக்கியமானது. பணம், புகழ், பதவி போன்றவை வாழ்வின் மிக முக்கியமான அங்கங்கள். இவற்றை சம்பாதிக்க உதவும் கல்வியை கற்று தேறுவது அனைவருக்கும் அவசியம். வேதம் படிப்பதால் பணம் கிடைக்காது. ஆனால் இன்பமாக வாழவது எப்படி என்பதை கற்றுக்கொள்ளலாம்.

ஏழையாக என்றும் இன்பத்துடன் வாழ்வதா அல்லது பணக்காரனாக இன்ப துன்பங்கள் கலந்த வாழ்க்கை வாழ்வதா என்று ஆலோசிக்க அவசியமில்லை. தொழில் கல்வி மற்றும் வேதபாடம் ஆகிய இரண்டையும் கற்கலாம்.

செல்வசெழிப்புடன் என்றும் இன்பமாகவாழும் வழிமுறைகளையும் கற்றுத்தேறும் வாய்ப்பு இந்த மாணவப்பருவத்தில் மனிதர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலோர் பணம் கிடைத்தால் இன்பம் கிடைக்கும் என்ற தவறான அறிவுடன் தொழில் கல்வியை மட்டும் கற்று பணத்தில் மட்டும் குறியாய் இருக்கிறார்கள்.

பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தொடர்ந்து பெற்றோரின் சொல்படி நடக்க அவசியமில்லாததால் ‘விடுதலை விடுதலை’ என்று மனதுக்குள் முழங்கிகொண்டு பழையபடி சூத்திரர்களாக வாழ ஆரம்பித்துவிடுகிறார்கள்.

மக்களின் அறிவுத்திறனும் உழைப்புத்திறனும் ஒருவருக்கொருவர் வெகுவாக மாறுகிறது. எனவே அவரவர்களின் வாழ்க்கைதரமும் மாறுபடுகிறது. இன்றைய பொழுதை எப்படி இன்பமாக கழிப்பது என்பது கடைநிலை உழியனின் குறிக்கோளாக இருக்கிறது. மேற்படிப்பு படித்து உயர்ந்த உத்தியோகத்தில் நிறைய பணம் சம்பாதிப்பவர்கள் கடைசிவரை இன்பமாக இருப்பது எப்படி என்று திட்டமிடுகிறார்கள். ஆயினும் இவர்கள் அனைவரும் தங்கள் உடலும் மனமும் மட்டும்தான் ‘நான்’ என்ற நினைவில் மனம்போனபடி வாழும் சூத்திரர்களே.

நான் என்ற சொல்லுக்கு ஆத்மா என்பது பொருள் என்றும் அது தங்கள் உடல் மற்றும் மனதிலிருந்து வேறுபட்டது என்றும் உணர்ந்திருப்பவர்கள் மரணத்திற்கு பின் தனக்கு என்ன நேரும் என்பதிலும் கவனத்தை செலுத்துகிறார்கள். இவர்கள் மதகுருக்களை சரணடைந்து வேதத்தின் முற்பகுதியில் கூறப்பட்ட சடங்குகளை பயபக்தியுடன் செய்கிறார்கள். ஏன், எதற்கு என்ற கேள்விகள் கேட்காமல் மதகோட்பாடுகளை பின்பற்றும் இவர்கள் அனைவரும் அடிமைகளே.

சூத்திரர்களாக வாழ்வதைவிட இது போல் அடிமைகளாக வாழ்வது சிறந்தது. ஆயினும் சுதந்திரமில்லாமல் ஏன், எதற்காக என்று தெரியாமல் தொடர்ந்து அடிமைகளாக வாழ்வது அறிவுடையோருக்கு ஏற்புடையதல்ல.

இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு. அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு. இதுதான் அனைத்து மனிதர்களின் வாழ்க்கையின் குறிக்கோள். சூத்திரர்களாக நிறையபணம் சம்பாதித்து வாழ்பவர்களால் அவ்வப்பொழுது வாழ்வில் ஏற்படும் துன்பங்களை தவிர்க்க முடிவதில்லை. மதச்சடங்குகளை முறையாக பின்பற்றுபவர்களாக வாழ்பவர்களாலும் என்றும் இன்பமாக வாழ முடிவதில்லை.  இந்த உண்மைகளை உணர்ந்தவர்கள் தொழில்கல்வி கொடுக்கும் பணம் மட்டும் போதாது என்று முடிவெடுத்து வேதம் பயில ஆரம்பிக்கிறார்கள்.

எப்பொழுது வேதம் படித்து முடிக்கிறார்களோ அப்பொழுது இந்த மாணவப்பருவத்தை கடந்து செல்ல இவர்கள் தகுதி பெறுகிறார்கள்.

நான்காம் பகுதி: பிராமணன்

மனம் போனபடி சூத்திரனாக வாழாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று வேதம் வகுத்த சடங்குகளை அடிமையாக பின்பற்றாமல் என்றும் இன்பமாக வாழும் வழியை அறிந்து ஒழுக்கமாக வாழ்பவன் பிராமணன். நிலையில்லாத உடலும் மனதும் நான் அல்ல என்றும் நான் ஆத்மா என்றும் அறிந்து கொண்டு எவ்வித கட்டுப்பாடும் இல்லாத சுதந்திரத்துடனுடனும் ஒழுக்க நெறியுடனும் துன்பகலப்பில்லாத இன்பவாழ்வை வாழத்துவங்குபவன் பிராமணன்.

இன்பத்தின் இருப்பிடம் எது என்று இவனுக்கு தெளிவாகத்தெரிந்திருப்பதால் சுற்றி உள்ள மனிதர்கள் அனைவரும் தவறான இடத்தில் இன்பத்தை தேடுவதால் மனம் மாறி அவர்களுடன் சேர்ந்து தேடும் அவசியம் இவனுக்கில்லை. அதே சமயம் தொடர்ந்து பணம் சம்பாதித்து தர்மமாக செல்வழித்து உல்லாசமாக வாழவும் அவன் தயங்குவதில்லை.
வேதம் கூறும் சடங்குகளை செய்யவேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்காக இவன் அவற்றை செய்யலாம்.

முடிவுரை :

ஆத்மா உடலிலிருந்து வேறானது என்பதை உணராதவர்கள் மனம் போனபடி வாழ்வதுதான் இன்பம் என்று நினைத்து அவ்வாறு வாழ தேவையான பணம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள். எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் மனத்தின் தேவைகளை  இவர்களால் பூர்த்தி செய்யவே முடிவதில்லை. ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் அறிவுத்திறன் குறைந்தவர்கள் கேளிக்கை விடுதி, போதை மருந்து, ஓரினச்சேர்க்கை, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற தவறான வழிகளில் இன்பத்தை தேடத்துவங்குவர். இதனால் இவர்களின் வாழ்வே நரகமாகிவிடும். இதுபோன்றவர்களுக்கு கடவுளைத்தொழவோ வேதத்தை கேட்கவோ தகுதியில்லை. சமூக கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டு நீதி நெறிகளை பின்பற்றி ஒழுக்கமாக வாழ ஆரம்பிக்கும்வரை இவர்களுக்கு விடிவுகாலம் இல்லை.

அறிவுத்திறன் உள்ளவர்கள், ஏன் எவ்வளவோ முயற்சி செய்தும் மனம் நிறைவடைவதில்லை என்பதை ஆராயத்துவங்குவார்கள். பணம் இன்பத்தை கொடுக்கும், உலகத்தை சீர்திருத்திவிட்டால் எல்லோரும் இன்பமாக இருக்கலாம் என்பது போன்ற தவறான கருத்துக்களுடன் சூத்திரர்களாக வாழ்பவர்களின் கவனத்தை திருப்பவே பல்வேறு சடங்குகளை செய்ய வேண்டும் என்று வேதம் விதித்துள்ளது. இவற்றை பின்பற்றி உடல் ஆத்மா அல்ல என்பதையும் இன்பத்தின் இருப்பிடத்தையும் ஆசிரியரின் துணைபெற்று அறிந்து கொள்வார்கள். அதன் பின் இவர்கள் மனம் போனபடி சூத்திரர்களாக வாழாமல் தர்மத்தை தன் இயல்பாக கொண்டு பிராமணனாக வாழ்வார்கள்.

இவ்வாறு வாழ்பவர்களுக்கு மட்டுமே முக்தி கிடைக்கும்.


பயிற்சிக்காக :

1. மனித வாழ்வை நான்காக வேதம் பிரித்துள்ளதின் நோக்கம் என்ன?

2. இந்த நான்கு பிரிவுகள் யாவை?

3. மதச்சடங்குகளை பின்பற்றவேண்டிய அவசியம் என்ன?

4. மாணவனாக கற்க வேண்டிய இருவகை கல்விகள் யாவை? அவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. மேற்கத்திய நாட்டு மக்களில் பெரும்பாலோர் சூத்திரர்களாகவும் கீழ் நாட்டு மக்களில் பலர் மதச்சடங்குகளின் அடிமைகளாகவும் வாழ்வதன் காரணம் என்ன?

2. பிராமணனைத்தவிர வேறுயாருக்கும் முக்திகிடைக்காது என்பது உண்மையா?

3. வாலிபபருவத்தில் ஆண்களும் பெண்களும் எவ்விதகட்டுப்பாடும் இல்லாமல் ஒருவருடன் ஒருவர் பழகுவது ஏன் தவறு?

4. நான் ஆத்மா என்று தெரிந்துகொள்வதால் என்ன பலன்?