பாடம் 173:
ஞானியின் பிராணன் மரணத்தில் பிரிவதில்லை
பாடல்
508-510
(IV.2.12-14)
எவன் ஆசைகளின்
ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்றுவிடுகிறானோ அவனது பிராணன் பிரிவதில்லை என்ற பிரஹதாரண்ய
மந்திரத்தின் (4.4.6)
பொருளை ஞானியின் செயல்களின் அடிப்படையில் இந்தப் பாடம் ஆராய்கிறது.
ஞானியும் மரணமடைவான்
என்றாலும் ஞானம் பெற்றவுடனேயே அவனது பிராணன் தனது தனித்தன்மையை இழந்து இறைவனது இயக்கத்துடன்
ஒன்றிவிடுவதால் மரணத்தின்பொழுது அது பிரிவதில்லை. பிரஸ்ன உபநிடதத்தில் ‘எல்லாம் எங்கிருந்து வந்தன?’
என்ற கபந்தியின் கேள்விக்கு பிப்பலாத முனிவர் கூறிய பதிலிலிருந்து பிராணன்
பற்றிய பின்வரும் விளக்கங்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆகாயம் மற்றும்
பிராணன் ஆகிய இரண்டிலிருந்தே பிரபஞ்சம் முழுவதும் தோற்றுவிக்கப்பட்டது. ஆகாயத்திலிருந்து காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய பஞ்சபூதங்களும் அவற்றிலிருந்து ஜடப்பொருள்களும்
உருவாக்கப்பட்டன. அந்த கலவையில் பிராணன் சேர்ந்தவுடன் இயக்கம்
பிறந்தது. புவியீர்ப்பு சக்தி, காந்த சக்தி
போன்றவையும் உயிரினங்களின் செயல்களுக்கும் பிராணனே ஆதாரம். ஆக
பூமியின் சுழற்சி முதல் தனி மனித உடலின் இயக்கம், இரத்த ஓட்டம்
மற்றும் எண்ணங்களின் ஓட்டம் வரை அனைத்தும் பிராணனின் வெவ்வேறு நிலைகள் என்று விவேகானந்தர்
விளக்கம் அளிக்கிறார். [ஞானதீபம் (2.31-32)].
பிராணன் வெளியேறிவிட்டால்
பிரபஞ்சத்தின் இயக்கம் நின்றுவிடும் என்ற உண்மையை ஒரு கதைவடிவில் பிப்பலாத முனிவர்
பார்க்கவனின் இரண்டாவது கேள்விக்கு பதிலாக கூறினார். இத்தகைய புகழ்வாய்ந்த பிராணன் எவ்வாறு செயல்படுகிறது என்ற கௌசல்யனின் மூன்றாவது
கேள்விக்கு மனிதனும் அவனது நிழலும் போன்று ஆன்மாவின் நிழலாக பிராணன் செயல்படுகிறது
என்று பிப்பலாத முனிவர் பதிலளித்தார். எனவே தனி மனிதனின் செயல்கள்
உட்பட்ட பிரபஞ்ச இயக்கம் முழுவதற்கும் பரமனின் நிழலான பிராணனே காரணம்.
எப்படி ஒரு
மன்னன் அலுவலர்களை நியமித்து ‘இந்த இந்த கிராமங்களை
ஆளுங்கள்’ என்று கூறுகிறானோ அது போல மனம் மற்றும் ஐந்து இந்திரியங்கள்
மூலம் பிராணன் உடலை இயக்குகிறது. ஞான சக்தி, இச்சா சக்தி மற்றும் கிரியா சக்தி என்ற மூன்று சக்திகளின் வடிவில் பிராணன்
மனிதனின் அனைத்து செயல்களுக்கும் காரணமாக அமைகிறது.
ஞான சக்தி வெளியுலகப்பொருள்களை
பற்றிய அறிவை புலன்கள் மூலம் மனதில் ஏற்படுத்துகிறது.
இச்சா சக்தி அறிந்த பொருள்களில் சிலவற்றில் ஆசைவைக்க தூண்டுகிறது.
ஆசை பட்டதை அடைய கிரியா சக்தி இந்திரியங்கள் மூலம் உடலை இயக்குகிறது.
அனைத்து எண்ணங்களும் பிராணனின் வெளிப்பாடு என்ற உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோர்களின்
மனதில் ‘நான் செயல் செய்கிறேன்’ என்ற எண்ணம்
ஏற்படுவதில்லை. அனைத்து செயல்களுக்கும் ஆதாரமான பிராணன் பிரபஞ்சத்தின்
இயக்கத்தின் ஒரு சிறுபகுதியாக தனது உடலையும் இயக்குகிறது என்ற அறிவு ஏற்பட்டதும் முக்திவிழைவோனின்
இதயத்தில் இருந்த ஆசைகளின் முடிச்சு அவிழ்ந்து அவன் முக்தி பெறுகிறான்.
‘பிராணனின்
தோற்றம், வரவு, இருப்பிடம், ஐந்து விதமான தலைமை செயலகங்கள், தூல வெளிப்பாடு ஆகியவற்றை
உணர்பவன் அழிவற்ற நிலையை அடைகிறான்’ என்ற பிரஸ்ன உபநிடதத்தின்
பன்னிரண்டாம் மந்திரம் கூறும் அதே கருத்தை ‘இருளுக்கு அப்பால்
பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரமபுருஷனை அறிந்துகொள்வதை தவிர மரணத்தை வெல்ல
வேறு வழியே இல்லை’ என்று சுவேதாஸ்வதர உபநிடதத்தின் மந்திரமும்
(3.8)
கூறுகிறது.
அகிலத்தை ஆட்டுவிக்கும் பிராணனே தன் செயல்கள் அனைத்திற்கும் ஆதாரம் என்பதை
ஐயமின்றி அறிந்துகொண்ட அக்கணமே ஆசைகள் அகன்றுவிடுவதால் முற்றுணர்ந்தோர்கள் மரணமடையும்பொழுது
அவர்களிடமிருந்து பிரிவதற்கு தனிப்பட்ட பிராணன் இருப்பதில்லை. எனவேதான் ஆசைகளிலிருந்து விடுதலை பெற்றவனின் பிராணன் மரணத்தில் பிரிவதில்லை
என்ற கருத்து கூறப்பட்டது.
செயல்களின்
ஒப்பீடு
பரமனை அறிந்த
ஞானிகளை மட்டுமின்றி அனைத்து மக்களையும் அழியாத அமரத்துவத்தின் புத்திரர்கள் என்று
சுவேதாஸ்வதர மந்திரம் வர்ணிக்கின்றது (2.5). இந்த
உண்மையை உணரும் வரை வெளிப்பார்வைக்கு ஒன்றுபோல் தெரிந்தாலும் மனிதர்களின் செயல்கள்
பின்வரும் விதங்களில் வேறுபடும்.
செயல்களின்
நோக்கம்:
பணம், புகழ், பதவி என்பது
போன்ற சுயநல ஆசைகளையும் வறுமை ஒழிப்பு, ஊழலை எதிர்த்தல் என்பது
போன்ற பொதுநல ஆசைகளயும் நிறைவேற்றும் நோக்கத்துடன் பற்றுடையோர் செயல்படுவர்.
இந்த ஆசைகளுக்கு ஒரு முடிவேயில்லை என்பதை அறிந்த முக்திவிழைவோர்கள் தங்கள்
மனம் பக்குவப்பட்டு பரமனை அறியவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்களை செய்வர்.
முற்றுணர்ந்தோர்களுக்கு அடையவேண்டியது என்று எந்த ஆசையும் கிடையாது.
எனவே மற்றவர்கள் ஒரு நோக்கத்தை கற்பித்தாலும் உண்மையில் இவர்களது செயல்களுக்கு
எவ்வித நோக்கமும் கிடையாது.
திட்டமிடுதல்:
அடுத்த ஐந்து வருடங்களுக்குள் வருமானம் ஒரு கோடியை தாண்ட வேண்டும் என்பது
போன்ற குறிக்கோள்களை நிறைவேற்ற இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுபவர்கள்
பற்றுடையோர்கள். ஆன்மீக பயணத்தில் தாங்கள் அடையவேண்டிய முன்னேற்றத்திற்கு
தேவையான செயல்களை திட்டமிடுபவர்கள் முக்திவிழைவோர்கள். முற்றுணர்ந்தோர்கள்
செயல் பற்றி மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு திட்டம் என்ற பெயரை கொடுத்தாலும் நிகழும்
மாற்றங்களுக்கு திட்டங்கள் காரணம் இல்லை என்பதை அறிவர். அடுத்த
நாள் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு சரியான பதில் ‘தெரியாது’
என்பதுதான் என்றாலும் அவர்களும் மற்றவர்களைப்போல் நாட்காட்டியில் செய்ய
வேண்டிய வேலைகளின் பட்டியலை குறித்துவைத்திருப்பார்கள். கடந்தகாலம்,
எதிர்காலம் ஆகிய இரண்டும் மனித மனதின் கற்பனை என்று அறிந்து நிகழ்காலத்தில்
மட்டும் வாழ்பவர்கள் மட்டுமே ‘காலத்தை வென்றவன்’ என்ற பட்டத்திற்கு உரியவர்கள்.
விருப்பு வெறுப்புகள்:
எதிர்காலத்தில் விரும்பிய செயல்களை மட்டுமே செய்யும் வாய்ப்பு கிடைக்கும்
என்ற ஆசையுடன் நிகழ்காலத்தில் விரும்பாத செயல்களை செய்பவர்கள் பற்றுடையோர்கள்.
விருப்பு வெறுப்புகள் தங்கள் செயல்களை பாதிக்க கூடாது என்ற கவனத்துடன்
செயல்படுபவர்கள் முக்திவிழைவோர்கள். மனதில் தோன்றும் விருப்பு
வெறுப்பு ஆகியவையும் பிரபஞ்சத்தை இயக்கும் பிராணனின் வெளிப்பாடு என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களின்
செயல்கள் பெரும்பாலும் அவர்களின் விருப்பத்துடன் ஒன்றியே இருக்கும்.
ஆளுமையின் தன்மை:
ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய தனிமங்களின் கலப்புவிகிதம்
மாறுபடுவதால் அனைவரது செயல்பாடுகளும் இவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். முற்றுணர்ந்தோர்களுக்கும் இந்த விதி பொருந்தும். ஆனால்
பற்றுடையோர்கள் சக்தி தனிமத்தின் அளவு அதிகமாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் முக்திவிழைவோர்கள்
ஒளி தனிமத்தின் அளவு அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் செயல்படுவதுபோல முற்றுணர்ந்தோர்களுக்கு
எவ்வித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை.
அறிவின் தன்மை:
பலனில் பற்றுவைப்பதால் எந்தப்பயனும் இல்லை என்ற அறிவு பற்றுடையோர்களுக்கு
ஏற்பட்டதும் அவர்கள் செயலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் முக்திவிழைவோர்களாக
மாறுவார்கள். செயல்களும் தங்களால் செய்யப்படுவதில்லை என்ற அறிவு
அவர்களை முற்றுணர்ந்தோர்களாக்கும்.
இன்பதுன்பம்:
செயல் செய்யும் துன்பத்தை அதன் பலன் மூலம் கிடைக்கும் இன்பத்துடன் கலந்து
அனுபவிப்பவர்கள் பற்றுடையோர். பலனை எதிர்பாராமல் செயல் செய்யும்
முக்திவிழைவோர்கள் துன்பத்தை தவிர்த்த பின்னும் இன்பத்தை முழுமையாக பெறுவதில்லை.
எனவே உலகில் எந்த பிடிப்பும் இல்லாமல் விரக்தியுடன் இவர்கள் இருப்பார்கள்.
தான் இன்பமாக இருக்க படைக்கப்பட்ட உலகம் இது என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்கள்
செயல்கள் செய்யும்பொழுதும் பலன்களை அனுபவிக்கும்பொழுது துன்பம் கலவா இன்பத்துடன் இருப்பார்கள்.
முடிவுரை
:
மனதை
மயக்கும் ஆசைகளை மன்மதனாக உருவகப்படுத்தி அறிவுக்கண் என்ற சிவபெருமானின் மூன்றாவது
கண்ணால் அவன் எரிக்கப்பட்டதாக கூறும் புராணக் கதைகள் ஆசையை ஞானத்தால் மட்டுமே அகற்ற
முடியும் என்ற உண்மையை மறைமுகமாக தெரிவிக்கின்றன.
பூமி
தேராகவும், சூரிய சந்திரர்கள் தேர்ச்சக்கரங்களாகவும்,
நான்கு வேதங்கள் குதிரைகளாகவும் பிரம்மாவை சாரதியாகவும் இமயமலை வில்லாகவும்
ஆதிசேஷன் நாணாகவும் விஷ்ணு அம்பாகவும் உருமாறி சிவபெருமானுக்கு துணை செய்ய தயாராக இருந்தபோது
எவ்வித உதவியையும் ஏற்றுக்கொள்ளாமல் தன் நெற்றிக்கண்ணை திறந்து முப்புரத்தை எரித்த
வரலாறு ஞானத்தால் மட்டுமே ஆசைகளை அகற்ற முடியும் என்று சுட்டிக்காட்டுகிறது.
பூமி
தேர், சூரியசந்திரர்கள் சக்கரங்கள் என்பது போன்ற நடக்கமுடியாத
உதாரணங்கள் செயற்கரிய செயல் எதை செய்தாலும் ஆசை அடங்காது என்று எடுத்துரைக்கின்றன.
நான்தான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டதும் பருவுடல், நுண்ணிய உடல், காரண உடல் ஆகிய மூன்று உடல்கள்,
ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று
தனிமங்கள் சஞ்சிதம்,ஆகாமி, பிரார்ப்தம்
ஆகிய மூன்று கர்மங்கள் போன்ற அனைத்தும் மாயையாக மறைந்துவிடுவதால் முற்றுணர்ந்தோர்களின்
செயல்கள் பிராணனின் வெளிப்பாடாக மட்டுமே அமைகின்றன.
இவ்வாறு
இவர்களது செயல்கள் அமைவதால் தடைபடாத அமைதியுடனும் குறையாத இன்பத்துடனும் இவர்கள் செயல்படுவார்கள்.
தொடர்ந்து
நிகழும் அனைத்து மாற்றங்களுக்கும் காரணமான பிராணன் பரமனின் மாயா சக்தியின் வடிவம். மரணம் என்பதும் இந்த மாயையில் ஒரு காட்சி. எனவே ஞானி மரணமடையும்பொழுது பிராணன் பிரிவதில்லை என்ற கருத்து கூறப்பட்டது.
பயிற்சிக்காக
:
1. பிரஸ்ன உபநிடதத்தின்
மூன்று கேள்விகளின் பதில்கள் மூலம் நிறுவப்பட்ட கருத்து என்ன?
2. பிராணன்
எந்த மூன்று சக்திகள் மூலம் உடலை ஆள்கிறது?
3. மரணத்தை
வெல்லும் வழி யாது?
4. ஆசைகளிலிருந்து
விடுபட்டவனின் பிராணன் மரணத்தில் பிரிவதில்லை என்று கூறப்பட்டதற்கு காரணம் என்ன?
5. மக்களின்
செயல்கள் எந்த எந்த அடிப்படைகளில் ஆராயப்பட்டன?
சுயசிந்தனைக்காக
:
1. ‘காலத்தை வென்றவன் நீ’ என்ற புகழ் மொழிக்கு தகுதியானவர்கள் யார்?
2. ஞானிகள்
விரும்பிய செயல்களை மட்டுமே செய்வார்களா?