Sunday, February 27, 2011

Lesson 149: Priest and the sacrificer (Brahma Sutra 3.4.44-46)

பாடம் 149: பலவிதமான மக்கள்
பாடல் 469 – 471 (III.4.44-46)

பூஜாரி யாகங்களை நடத்திக்கொடுப்பதற்கான பணத்தை பெற்றுக்கொள்வதால் யாகத்தின் பலன்கள் யஜமானனைச்சேரும் என்ற கருத்தை கூறுவதன் மூலம் முக்தியடைய முயலும் மக்கள் தங்கள் முயற்சி சரியான பலனை தருகிறதா என்பதை ஆராயவேண்டியதன் அவசியத்தை இந்தப்பாடம் விளக்குகிறது.

முகம் பார்க்கும் கண்ணாடி

புகைப்படத்தை பார்த்தோ மற்றவர்களின் அபிப்பிராயத்தை கேட்டோ நம் முகம் எப்படியிருக்கிறது என்பதை நம்மால் தெரிந்து கொள்ளவே முடியாது. கண்ணாடி மட்டும்தான் நம் முகத்தை நமக்கு காட்டவல்லது. கண்ணாடியை சரிபார்க்க அதன் வழியாக வேறு ஒரு பொருளின் பிம்பம் சரியாகத்தெரிகிறதா என்று சோதிக்க வேண்டும்.  

சுய அறிவினால் யோசித்தோ மற்றவர்களின் அபிப்பிராயத்தை கேட்டோ நான் யார் என்பதை தெரிந்து கொள்ளவே முடியாது. வேதம் மட்டும்தான் நாம் யார் என்பதை நமக்கு காட்டிக்கொடுக்கும் கண்ணாடி. வேதம் குற்றமற்றது என்று உணர்ந்துகொள்ள உலகத்தைப்பற்றி வேதம் கூறும் கருத்துக்களை நம் அனுபவத்தோடு ஒப்பிட்டு சரிபார்க்கவேண்டும். 

வேதத்தை பிரமாணமாக ஏற்றுக்கொண்டவர்களிடையேகூட அதன் அடிப்படை கருத்து என்ன என்பது பற்றி அபிப்பிராய பேதம் உள்ளது. நான் பரமன், நான் கடவுளின் ஒரு பகுதி, நான் கடவுளின் அடிமை என்று ஒன்றுக்கொன்று முரணான முடிவுகளை வேதம் கூறுவதாக தோன்றினால் நாம் வேதத்தின் மீது சந்தேகம் கொள்ள கூடாது.

நமது பார்வை சரியாக இல்லாவிட்டால் கண்ணாடி சரியாக இருந்தும் அதில் தெரியும் நமது முகத்தை சரியாகபார்க்க முடியாது. எனவே கண்ணாடியை சந்தேகிக்காமல் நமது பார்வையை சோதிக்க வேண்டும். அதுபோல வேதம் கூறும் உண்மையை சரியாக புரிந்துகொள்ள நமது அறிவு கூர்மையாக இருக்க வேண்டும். மக்களின் அறிவுத்திறன் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபடுவதால்தான் வேதம் கூறும் ஒரே உண்மையை அடிப்படையாக கொண்டு பல்வேறு மதங்கள் நிலவி வருகின்றன. நான் யார் என்ற கேள்விக்கு வேதம் கூறும் ஒரே பதிலை சரியாக புரிந்து கொண்டேனா என்பதை தெரிந்து கொள்ள பின்வரும் ஆராய்ச்சி உதவும்.

செவ்வக ஆராய்ச்சி

காகிதத்தில் ஒரு செவ்வகத்தை வரைந்து அதன் நடுவில் குறுக்கேயும் நெடுக்கேயும் இருநேர்கோடுகள் வரைந்து அதை நான்கு பகுதிகளாக பிரித்து ‘இதில் எத்தனை செவ்வகங்கள் இருக்கின்றன’ என்ற கேள்வியை கேட்டால் பல்வேறு பதில்கள் கிடைக்கும். ஒரு சிலர் நான்கு என்றும் மற்றும் சிலர் ஐந்து என்றும் பதிலளிப்பர். எது சரியான விடை என்பதை அறிய யார் அதிக எண்ணிக்கையை சொல்கிறாரோ அவரிடம் விளக்கம் கேட்கவேண்டும். ‘ஐந்து’ என்பவர், ‘எப்படி நான்கு?’ என்பதையும் விளக்கும் அறிவு பெற்றிருப்பார். நான்குதான் முடிவான விடை என்று பிடிவாதம் பிடிப்பவர் ஐந்து என்பவரை குருவாக ஏற்றுக்கொள்ளாதவரை கேள்விக்கு சரியான பதிலை தெரிந்து கொள்ள முடியாது.

கூடியிருக்கும் அனைவரும் ஐந்து என்ற பதிலை ஏற்றுக்கொண்டால் கூட அதுதான் சரியான விடை என்பது நிரூபணமாகாது. ஏனெனில் சரியான விடை ஒன்பது. நான்கிலிருந்து ஐந்து என்று கற்றுத்தேறியவர்களில் அறிவுத்திறன் குறைந்தவர்கள் தாங்கள் கண்டுகொண்டதுதான் முடிவான உண்மை என்ற முடிவோடு எப்படி ஒன்பது சரியான விடையாக இருக்க முடியும் என்பதை ஆராயமாட்டார்கள். மற்றவர்களின் விடை வேறாக இருப்பதன் காரணத்தை ஆய்ந்து சரியான பதிலைத்தெரிந்துகொள்ளும் ஆவலும் அறிவு கூர்மையும் இருப்பவர்கள் மட்டுமே இந்த கேள்வியின் இறுதியான பதிலை தெரிந்து கொள்ளவார்கள்.

ஒன்பது செவ்வகங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டபின்னும் அதற்கு மேல் இருக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகத்துடன் இருப்பவர்கள் முடிவான பதிலை தெரிந்து கொண்டவர்கள் அல்ல. ஒன்பதுதான் சரியான விடை என்பதில் உறுதியாக இருப்பவர்கள் மற்ற அனைவரும் ஏன் தவறான பதிலை கூறுகிறார்கள் என்று அறிவார்கள். மேலும் நான்குதான் சரியான விடை என்று பிடிவாதம் பிடிப்பவர்களைப்போலன்றி ஒன்பதுதான் சரியான விடை என்பதில் அறிவுபூர்வமான உறுதியுடன் இருப்பார்கள்.

நான்கு, ஐந்து போன்ற பதில்கள் ஒன்பது என்பதில் அடங்கியிருப்பதைப்போல வேதத்தின் முடிவான பதில் மற்ற அனைத்து பதில்களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். எனவே நிலையான முக்தியடைய உலகத்தில் உள்ள அனைத்து  மதங்களின் கொள்கைகளைப்பற்றியும் மற்றவர்கள் ஏன் தவறான அறிவுடன் இருக்கிறார்கள் என்பதைப்பற்றியும் தெளிவாகத்தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிவுத்திறன்

சென்றபிறவிகளில் சேர்த்து வைத்த அறிவுத்திறனுடன்தான் குழந்தைகள் பிறக்கின்றன. உடல் மற்றும் மூளை வளர்ச்சி ஏற்கனவே உள்ளிருக்கும் அறிவை வெளிப்படுத்த உதவுமே தவிர புதிதாக அறிவை உண்டுபண்ணுவதில்லை. உண்ணும் உணவு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறமை மற்றும் சுற்றுபுற சூழலின் தாக்கம் ஆகியவற்றால் அறிவின் அளவை தீர்மானிக்க முடியாது. கற்பதனால் மட்டுமே அறிவு வளரும். எனவே மக்கள் கல்வி கற்க எடுத்துக்கொண்ட முயற்சி வேறுபடுவதனால் மட்டுமே அவர்களின் அறிவுத்திறன் வேறுபடுகிறது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அதிக அறிவுத்திறனுடன் பிறந்தவர்கள் வேகமாக கற்று தங்கள் அறிவை மற்றவர்களைவிட மேலும் அதிகபடுத்திக்கொள்ளும் சக்தியுடையவர்கள். ஆனால் யாராலும் தீடீரென்று அறிவாளியாக மாறிவிடமுடியாது. பள்ளி இறுதித்தேர்வில் மிகக்குறைவான மதிப்பெண் பெற்ற மாணவனால் கல்லூரிப்படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்க முடியாது. பலபிறவிகளில் சேர்த்த அறிவு அழியாது. அளவுக்கு அதிகமாக அதை வளர்க்கவும் முடியாது. எனவே தற்பொழுது நமக்கு இருக்கும் அறிவை ஒரளவு வளர்த்துக்கொள்ள முடியுமே தவிர ஒரேயடியாக வளர்த்து ஐன்ஸ்டீனாக மாற முடியாது. ஐந்தில் வராத கணக்கு ஐம்பதிலும் வராது.

செவ்வக ஆராய்ச்சியில் ஒன்பது என்ற சரியான விடையை உறுதியுடன் தெரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவுத்திறன் உள்ளவர்களால் மட்டுமே வேதத்தின் சாரத்தை புரிந்து கொண்டு முக்தியடைய முடியும். சொல்லிக்கொடுத்தபின்னும் ஒன்பது செவ்வகங்களை பார்க்கத்தெரியாதவர்கள் தங்கள் வாழ்வின் துன்பங்களை முற்றிலுமாக கடக்க தேவையான அறிவுத்திறன் இல்லாதவர்கள்.

அறிவுத்திறனை ஒருவர் எப்படி உபயோகப்படுத்துகிறார் என்பது அவரது விருப்பு வெறுப்புகளை பொறுத்து அமையும். கடவுள், வேதம் போன்ற ஆன்மீக விஷயங்களில் விருப்பமில்லாதவர்கள் தங்கள் அறிவை வேதம் படிக்க செலவிட மாட்டார்கள். இவர்கள் நான் யார் என்ற கேள்வியின் பதிலை அறிந்து கொள்வது அவசியம் என்றும், அந்த அறிவு வேதத்திலிருந்து மட்டுமே கிடைக்கும் என்றும் வேதத்தை படித்து புரிந்து கொள்ள ஆசிரியரின் துணை தேவை என்றும் அறியமாட்டார்கள். எனவே போதிய அறிவுத்திறன் மற்றும் வேதத்தின் மேல் நாட்டம் ஆகிய இரு தகுதிகள் இருப்பவர்களால் மட்டுமே முக்தியடைய முடியும்.

பல்வேறு மதங்கள் காட்டும் ஒரே உண்மை

தூய்மையாக துடைக்கப்பட்ட கண்ணாடிதான் முகத்தை சரியாக காட்டும். அது போல அறிவின் துணையால் வேதத்தை தீவிரமாக ஆய்ந்தால்தான் நான் யார் என்பதை உறுதியாக உணர முடியும். முகத்தைப்பார்ப்பதற்காகவே கண்ணாடியை பார்க்கிறோம். அதுபோல் வேதம் படிப்பதன் ஒரே நோக்கம் நான் யார் என்பதை தெரிந்துகொள்வதற்காக என்ற தெளிவுடன் வேதத்தை ஆசிரியரின் துணையுடன் படிப்பவர்கள் உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒரே கருத்தைத்தான் கூறுகின்றன என்ற உண்மையை முடிவில் உணர்வார்கள்.

மனிதர்களின் அறிவுத்திறன் மாறுபடுவதால்தான் மதங்களிடையே வேறுபாடுகள் இருப்பதுபோல தோன்றுகிறது. செவ்வக ஆராய்ச்சியில் நான்கு அல்லது ஐந்து என்று விடையளிப்பவர்களை தவறு என்று தள்ளிவிடமுடியாது. ஏனெனில் அவர்களது அறிவுக்கேற்ற சரியான விடையை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அதுபோல வெவ்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் முடிவான உண்மை அனைத்து மதங்களுக்கும் பொதுவானது என்பதை அறியாதவர்கள். ஆயினும் அவர்களது அறிவின் தரத்துக்கு ஏற்றவாறு அவர்கள் புரிந்து கொண்ட மதக்கொள்கைகள் தவறு அல்ல. நான்கு என்பவனுக்கு ஐந்தாவது செவ்வகத்தை அடையாளம் காட்டி அவனை முன்னேற உதவாமல் அவன் விடை தவறு என்று அவனை மட்டம் தட்டி ஏளனம் செய்வது சிறுபிள்ளைத்தனம்.

மருத்துவர்கள் அனைவரும் அனைத்து வித நோய்களை குணப்படுத்தும் அறிவைக்கொண்டிருந்தாலும் அவர்களிடம் செல்லும் நோயாளிகளின் அடிப்படையில் இவர் காசநோய் மருத்துவர், இவர் குழந்தை மருத்துவர் என்று தரம் பிரிப்பதுபோல மதங்கள் அவற்றை பின்பற்றுபவர்களின் அறிவுத்திறனின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. 

பரலோகத்திலிருந்து இரட்சிப்பவன் கடவுள் என்று நம்புபவனின் மதம் நானும் கடவுள் என்று கூறுபவனின் மதத்திலிருந்து வேறுபட்டதாக காட்சியளிக்கிறது. தேவையான அறிவுத்திறனும் கடவுள் யார் என்பதை அறியும் அடங்கா ஆவலும் கொண்டவன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்றாலும் முடிவான உண்மையை அறிந்துகொள்வான். கேட்பவர்களுக்கு புரியும் விதத்தில் ஆசிரியர் முதலில் நான்கு பின் ஐந்து என்று படிப்படியாக முன்னேறி முடிவில் ஒன்பதை காட்டிகொடுப்பது போல் அனைத்து மதங்களும் நான் பரமன் என்ற முடிவான உண்மையை மட்டும்தான் படிப்படியாக போதிக்கின்றன.

வேதம் ஒன்றே

அனைத்து மதங்களும் முழுமுதல் கடவுள் ஒருவனே என்கின்ற உண்மையை ஏற்றுக்கொள்கின்றன. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் தர்க்க அறிவிற்கு ஏற்புடையதாக இல்லை. கடவுள் ஒருவன் என்பதால் கடவுளின் உபதேசங்களான வேதம் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். கடவுள் பொய்பேச மாட்டார்.  

வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதால் ஒரே உண்மை பலதரப்பட்ட மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.

வேதத்தில் கூறும் முடிவான கருத்தை புரிந்து கொண்டுவிட்டேன் என்றுதான் அனைவரும் நம்பிக்கொண்டிருப்பார்கள். அனைத்து நம்பிக்கைகளும் சரியானவை என்பதால் யாரிடமும் அவர்களின் நம்பிக்கைத்தவறு என்று சுட்டிக்காட்டக்கூடாது. ஐந்து செவ்வகங்களை கண்டவன் நான்கு என்று கூறுபவனை ஏளனமாக பார்க்க கூடாது. மேலும் அவனது அறிவுத்திறன் அவனது  சொந்த முயற்சியால் வளரும் வரை நான்குதான் முடிவான பதில் என்ற நிலையிலிருந்து அவர்கள் முன்னேற மாட்டார்கள். எனவே தான் ஐந்து என்று நினைத்துக்கொண்டிருப்பது சரிதானா என்று ஒவ்வொருவரும் தங்கள் நம்பிக்கையை மட்டும் சோதிக்கவேண்டுமே தவிர மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

எவ்வளவுதான் முயன்றாலும் வேதத்தின் நான் பரமன் என்கிற முடிவான அறிவை அனைவரும் புரிந்து கொள்ளும்படி செய்ய முடியாது. கூரிய அறிவுத்திறன், மனப்பக்குவம், அடங்கா ஆவல், வேதத்தை முறையுடன் படிக்கும் வாய்ப்பு ஆகிய அனைத்தும் ஒருசிலருக்கே உள்ளது என்பதால் சரியான பதில் தெரிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். ஒருவேளை பெரும்பான்மை மக்களின் கருத்து நம்முடன் ஒத்துப்போனால் அது தவறான கருத்தாக இருக்க வாய்ப்பு மிக அதிகம். ஐந்து தான் சரியான விடை என்று அறிந்தவர்களின் எண்ணிக்கை நான்கு என்ற பதிலை சொல்பவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும். மிகச்சொற்பமானவர்களே ஒன்பது என்ற சரியான பதிலை அறிந்திருப்பார்கள்.

என்னுடைய மதம் மட்டும்தான் சரியானது அல்லது எனது கடவுள் மட்டும்தான் ஒரே கடவுள் என்று போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். அவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்துகொண்டபின் தங்களுடைய நம்பிக்கை சரிதானா என்று சோதனை செய்தால் மட்டுமே முடிவில் முக்தியடைவார்கள்.

சத்திய சோதனை

நாம் அறிந்ததுதான் வேதத்தின் முடிவான உண்மையா என்று நமது அறிவை நாமே சோதனை செய்துகொள்ள பின்வரும் உபாயங்கள் உதவும்.

முதல் சோதனை: உலகத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை

முற்றுணர்ந்தோனின் பார்வையில் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் மிகச்சரியாக நடப்பதாகவே தெரியும். கலிகாலம் முற்றிவிட்டது என்று இவன் புலம்பமாட்டான். ஆட்சியை மாற்றவேண்டும், சமூகத்தை முன்னேற்ற வேண்டும், இளஞர்களை திருத்த வேண்டும், வறுமையை ஒழிக்கவேண்டும் என்பது போன்ற எவ்வித குறிக்கோள்களும் இவனுக்கு இருக்காது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்பது போன்ற தினசரி செய்திகள் இவனை எவ்விதத்திலும் பாதிக்காது.

இரண்டாம் சோதனை: சரியான விளக்கம்

நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சரியான காரணங்கள் இவனுக்கு தெரிந்து இருக்கும். எதையறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை இவன் தெரிந்து கொண்டுவிட்டதால் ‘இது ஏன் இப்படி நடக்கிறது’ என்ற கேள்வி இவன் மனதில் எழவே எழாது. விபத்து, இயற்கையின் சீற்றம், தற்செயல் என்பதுபோன்ற தர்க்கத்துக்கு ஒவ்வாத காரணங்களை இவன் ஏற்றுக்கொள்வதில்லை.  கடவுள் யார், அவர் ஏன் இவ்வுலகை இவ்வாறு உருவாக்கினார் என்பது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்கள் இவனுக்கு தெரியும் என்பதால் இவற்றை மற்றவர்களுக்கு புரியவைக்கும் திறமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவனது அமைதி எப்பொழுதும் குறையாது.

மூன்றாம் சோதனை: மனிதர்கள் அனைவரும் நல்லவர்களே

ஒவ்வொருவரும் ஒரு விதம் என்று இவன் அறிந்திருப்பதால் யாரையும் தவறு என்று விமரிசிக்கமாட்டான். யாரையும் யாரும் மாற்றமுடியாது என்பது இவனுக்குத் தெரியும். எனவே தன் வாழ்வில் தன்னோடு உறவாட வாய்ப்பவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வான். தன்னைத்தானே மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கு முடிந்த உதவியை செய்வான். இராவணன் சீதையை கடத்திச்சென்றாலும் அவன் இராமாயணத்திற்கு அவசியம். அது போல கெட்டவர்கள் படைப்பின் முக்கியமான அங்கம் என்று அறிந்த முற்றுணர்ந்தோன் யாரையும் வெறுக்க மாட்டான்.  

நான்காம் சோதனை: கருத்துப்பரிமாற்றம்

வாதம், விவாதம், சொற்பழிவு, கருத்தரங்கம் போன்றவற்றில் பங்கேற்க வேண்டிய அவசியம் இவனுக்கு இல்லை. முடிவான உண்மையை இவன் அறிந்து கொண்டுவிட்டதால் மற்றவர்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு இவன் எவ்வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

உதாரணமாக மறுபிறவி என்பது உண்மையா பொய்யா என்ற விவாதம் அனாவசியம் என்று அவனுக்குத்தெரியும். அவரவர் தன்னுடைய மதகுருமார்களின் வார்த்தைகளை முதலில் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு வேதம் கூறும் முடிவான உண்மையை ஆய்ந்து அறிந்து கொள்ளவேண்டும். அதன்பின் ஏன் மறுபிறவியை பற்றி விவாதிக்க கூடாது என்பதும் எவ்வாறு வெவ்வேறு வழிகளில் போதிக்கும் மதங்கள் ஒரே இறுதிகருத்தைத்தான் கூறுகின்றன என்பதும் புரியவரும்.

இவன் தானறிந்த உண்மையை மற்றவர்களுக்கு பரப்பவேண்டும் என்ற ஆவலுடன் செயலாற்றுவதில்லை. ஏனெனில் பெரும்பாலோருக்கு அது புரியாது என்பதை இவன் அறிவான். எது முடிவான உண்மை என்பது ஜனநாயக முறையில் தெரிவு செய்ய முடியாது என்பதை அறியாதவர்கள் தங்களது கொள்கைகளை ஆதரிக்கும் கும்பலை அதிகப்படுத்த முயன்றுகொண்டிருப்பார்கள். தன்னால் அவர்களது கொள்கை முடிவான உண்மையல்ல என்று தர்க்கத்தின் அடிப்படையில் நிரூபிக்க முடியுமென்றாலும் தன்னை குருவாக ஏற்று தன்னிடம் பாடம் கேட்கும் சீடர்களுக்கு மட்டுமே இவன் தன் கருத்துக்களை எடுத்துரைப்பான்.

மறுபிறவி உண்டா இல்லையா என்று யாரேனும் இவனிடம் நேரடியாக கேட்டால் கேட்பவனின் தராதரத்தைப்பொறுத்து ஆம், இல்லை, தெரியாது என்று வெவ்வேறு பதில்களை கொடுப்பான். அறிவுத்திறன் ஆளுக்காள் மாறுபடுவதால் அவரவரின் ஜீரணசக்திக்கு ஏற்புடைய பதிலை அவன் கொடுப்பான்.

ஐந்தாம் சோதனை: கடவுளை அறிதல்

பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுளை தனக்கு அன்னியமாக பார்ப்பவர்கள் நிறைந்த இவ்வுலகில் மற்றவர்களுக்காக கோவிலுக்கு செல்வது கடவுளை உபாசித்து உலக நலனுக்காக பிரார்த்தனைகள் செய்தாலும் ‘எனக்கு இது வேண்டும்’ என்று கடவுளிடம் எதுவும் எப்பொழுதும் கேட்கமாட்டான்.

ஆறாம் சோதனை: மக்களை அறிதல்

மரணமில்லா பெருவாழ்வு, என்றும் ஆனந்தம் மற்றும் அறியும் ஆவல் ஆகிய மூன்று அடிப்படை ஆசைகளால் உந்தப்பட்டு அனைத்து மக்களும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் அறிவுத்திறன் வேறுபடுவதால் இந்த மூன்று ஆசைகளை பூர்த்திசெய்துகொண்டு முக்தியடைய அவர்களால் முடிவதில்லை.

சுற்றியுள்ள மனிதர்களையும் சூழலையும் மாற்றி அமைத்தால் இந்த மூன்று ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து உழைப்பவர்கள்  உலகத்தைச்சார்ந்து இருப்பவர்கள். இவர்கள் முதல் நிலையில் உள்ள மனிதர்கள்.

கடவுளை சரணடைந்தால் மட்டும்தான் இந்த மூன்று வரங்களையும் பெற முடியும் என்ற நம்பிக்கையில்  இறைதிருப்பணிகளில் ஈடுபட்டு இறைவனைச்சார்ந்து இருப்பவர்கள் இரண்டாம் நிலையில் உள்ள மனிதர்கள். 

உலகத்தை மாற்ற உழைத்தும் கடவுளிடம் சரணடைந்து செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்தும் மனம் பக்குவபட்டபின் இவர்கள் உலகப்பள்ளியின் இறுதித்தேர்வை எழுத தகுதி பெறுவார்கள். நான் யார் அல்லது கடவுள் யார் என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே இந்த மூன்று ஆசைகளை முழுதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற தெளிவோடு இவர்கள் செய்யும் முயற்சி வெற்றிபெற்றால் முற்றுணர்ந்தோன் என்ற பட்டம் பெற்று பிறப்பு-இறப்பு சுழலிலிருந்து விடுதலையடைந்து மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள்.

இந்த நிலையை அடையும்வரை அனைத்து மக்களுக்கும் என்னவென்று தெளிவாக சொல்லத்தெரியாத ஒரு குறை அல்லது ஒரு ஏக்கம் இருந்துகொண்டேயிருக்கும். ஏனெனில் மரணமில்லா பெருவாழ்வு என்பதற்கு என்ன அர்த்தம் என்பது அந்த குறிக்கோளை அடைந்த பின்தான் தெளிவாகத்தெரியவரும். எனவே அதுவரை வார்த்தைகளால் விளக்கமுடியாத ஏக்கம் மட்டும்தான் இருக்கும்.

மூன்று ஆசைகளின் இருப்பிடம் தான்தான் என்ற அறிவு அவர்களிடம் இல்லை என்பதை முற்றுணர்ந்தோன் மட்டுமே உணர்வான்.   பள்ளி இறுதித்தேர்வில் தேறியவன் மற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற தன்னால் ஆன உதவியை செய்வது போல முக்தியடைந்தவன் தான் பயணித்த பாதை மற்றும் அதில் இருந்த தடைகளை கடக்கும் விதம் ஆகியவற்றை தன்னை குருவாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு தெளிவாக காட்டிக்கொடுப்பான்.

ஏழாம் சோதனை: வாழ்க்கைப்பயணத்தை அறிதல்

எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கும் விளக்கமுடியாத குறையை நிறைசெய்ய முதலில் மக்கள் விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் செயல்கள் செய்வார்கள். சரி-தவறு என்ற அடிப்படையில் தர்மமான காரியங்களை செய்தும் அதர்மங்களை தவிர்த்தும் வாழ்ந்தால் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுதலைபெற்று குருவிடம் சரணடையும் மனப்பக்குவத்தை பெறுவார்கள். அதன்பின் அவர்களின் ஆன்மீகப்பயணம் வெகு வேகமாக நடந்து சரி-தவறு என்பதைவிட உண்மை-பொய் என்பதன் அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை அமையும். பரமன் மட்டுமே உண்மை என்றும் இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதும் புரிந்து விட்டால் குறைவில்லா இன்பத்தை அடைவார்கள்.

பிறவிகள்தோறும் சேர்த்து வைத்துள்ள பாவ-புண்ணியம், விருப்பு-வெறுப்பு மற்றும் அறிவுத்திறன் ஆகியவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிக்கிறது. ஒருவன் வாழ்வில் சந்திக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பாவ-புண்ணியங்கள் மட்டுமே காரணம். அந்த நிகழ்வுகளை அவன் எதிர்கொள்ளும் விதம் அவனது விருப்பு-வெறுப்புகளையும் அறிவுத்திறனையும் பொறுத்தது. தொடர்ந்து வாழ்வு எனும் செயல் வழி கல்வியை பயில்வதால் மட்டுமே அவனது அறிவுத்திறன் அதிகமாகும். அறிவுத்திறன் அதிகமானால்தான் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட்டு மனப்பக்குவத்தை பெறமுடியும். அதன் பின்தான் சரி-தவறு என்ற அடிப்படையில் வாழ்ந்து உண்மை-பொய் என்ற விவேகத்தை பெறுவது சாத்தியமாகும்.

அனைத்து மக்களின் வாழ்வும் இது போல் அவரவரின் நிலைக்கு ஏற்றாற்போல் அமைந்திருப்பதுதான் படைப்பின் இரகசியம். இந்த இரகசியத்தை அறிந்தவன் யாருடைய வாழ்க்கைப்பயணத்தையும் தவறு என்று சுட்டிக்காட்டமாட்டான். யாரேனும் தங்கள் குறையை நிறைவு செய்ய அவனது உதவியை நாடினால் அவர்களது தற்போதைய நிலைக்கேற்ற சரியான பாதையை காட்டிக்கொடுப்பான்.  

எட்டாம் சோதனை: தன்னை அறிதல்

தான் உலகத்திலிருந்து வேறுபட்டவன் என்ற நினைவில்லாமல் இயற்கையுடன் ஒன்றி வாழும் மக்கள் துன்பபடுவதில்லை. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற கவலை ஏதுமின்றி இவர்கள் என்றும் இன்பமுடன் வாழ்வார்கள்.

தான் இறைவனின் அடிமையென்று தன்னை முழுமையாக இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தவர்களும் துன்பத்திற்கு ஆளாவதில்லை. நடக்கும் நிகழ்வுகள் யாவும் ஆண்டவனின் சித்தத்தின் படிதான் நடக்கின்றன என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருப்பவர்களின் வாழ்வில் துன்பகரமான நிகழ்வுகள் எது நடந்தாலும் அவற்றை கடவுளின் அனுக்கிரகம் என்று ஏற்றுக்கொண்டு எவ்வித முணுமுணுப்போ சலிப்போ இல்லாமல் இறைவனுக்கு தொடர்ந்து செய்து வாழ்வை இனிமையாக கழிப்பார்கள்.

தான் பரமன் என்று உணர்ந்தவர்கள் தங்கள் உடலும் மனமும் கடவுளின் மாயா சக்தியின் வெளிப்பாடு என்பதை முறைப்படி கற்றுத்தேர்ந்ததால் உலகில் நடக்கும் மாற்றங்களை தொடர்ந்து இனிமையுடன் அனுபவிப்பார்கள்.

‘உன்னால் முடியும்’ என்று அறிவியல் அறிவு கொடுத்த தைரியத்தில் தான் யார் என்பதை அறியாமல் தன்னை உலகிலிருந்தும் கடவுளிலிருந்தும் வேறுபட்டவன் என்ற நினைவில் வாழ்வை ஒரு போராட்டமாக நடத்திக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே துன்பத்திற்கு ஆளாவார்கள். அறிவுத்திறன் இருந்தாலும் அதை பரமனை அறிந்துகொள்ள பயன்படுத்த வேண்டும் என்ற மனப்பக்குவம் வரும்வரை இவர்கள் தொடர்ந்து பணம், பதவி, புகழ் ஆகியவற்றை நாடி செயல் செய்வதை தவிர்க்கமுடியாது. இவர்கள் செல்லும் பாதைதவறானதல்ல. தான் யார் என்று புரிந்துகொள்ள தேவையான மனப்பக்குவத்தை தங்கள் செயல்கள் மூலம் இவர்கள் தங்களை அறியாமலேயே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தான் யார் என்று தெளிவாக அறிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள்.

முடிவுரை :

தான் யார், கடவுள் யார், இவ்வுலகத்தின் இயல்பு என்ன, படைப்புக்கு என்ன காரணம், வாழ்வின் நோக்கம் என்ன, பல்வேறு மதங்கள் போதிக்கும் வேறுபட்ட கருத்துக்களில் எது சரியானது என்பது போன்ற அனைத்துக்கேள்விகளுக்கும் தெளிவான பதில் தெரிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்கள். ஒன்பது செவ்வகங்களை தெளிவாக கண்டறிந்த இவர்கள் மற்றவர்களால் ஏன் முடிவான உண்மையை உணர முடிவதில்லை என்பதையும் அறிந்தவர்கள். எனவே இவர்களால் தங்கள் வாழ்க்கையை மட்டுமின்றி தன்னைச்சார்ந்த அனைவரது வாழ்வையும் துன்பம் கலவா இன்பமயமாக்கும் சக்தி உள்ளது.

பயிற்சிக்காக :

1. முகம் பார்க்கும் கண்ணாடியை வேதத்துடன் ஒப்பிடுக.

2. செவ்வக ஆராய்ச்சியின் மூலம் தெரிந்து கொண்ட கருத்து என்ன?

3. அறிவுத்திறனை அதிகபடுத்திக்கொள்ள மக்களுக்கு இருக்கும் ஒரே வழி என்ன?

4. மக்களிடையே அறிவுத்திறன் வேறுபடுவதற்கு காரணம் என்ன?

5. முரண்பட்ட கொள்கைகளை கொண்ட பல்வேறு மதங்கள் உலகில் இருப்பதற்கு என்ன காரணம்?

6. சத்திய சோதனை செய்யவேண்டியதன் அவசியமென்ன?

சுயசிந்தனைக்காக :

1. சரியான சுற்றுச்சூழல், திறமையான ஆசிரியர்கள், அதிநூதன கல்விச்சாதனங்கள் மற்றும் சீரமைக்கப்பட்ட கல்விமுறை போன்றவற்றின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சிறுவர்களையும் அறிஞர்களாக மாற்ற முடியுமா?

2. சச்சிதானந்தம் என்ற பெயர்காரணத்தை ஆராய்ந்து மனிதர்களின் மூன்று அடிப்படை ஆசைகளின் இருப்பிடத்தை அறிக.

3. இந்தப்பாடத்தில் உள்ள எட்டு சத்தியசோதனைகளில் ஒவ்வொன்றிலும் எவ்வளவு மதிப்பெண்கள் பெற நமக்கு தகுதியிருக்கிறது என்று சுயமதிப்பீடு செய்து கொள்க.

4. முற்றுணர்ந்தோனாக மாற அடுத்து செய்யவேண்டிய செயல்களை ஆசிரியரின் துணையுடன் ஆலோசிக்கவும்.