Thursday, June 6, 2013

Lesson 189: Knowledge of the liberated soul (Brahmasutra 4.4.10-14)

பாடம் 189: ஞானியின் ஞானம்
பாடல்: 543-547 (IV.4.10-14)

நான் பரமன்என்ற ஞானத்தின் தன்மை, பெருமை, பயன்கள் ஆகியவற்றை அஷ்டவக்ர கீதையின் மூலம் இந்தப்பாடம் விளக்குகிறது.
அஷ்டவக்ரர் கூறுகிறார்:

1.4 உனது உடலில் இருந்து நீ வேறுபட்டவன். உணர்வுதான் நீ. இந்த அறிவில் நீ நிலைபெற்று இருந்தால் எப்போதும் அமைதியாகவும் இன்பமாகவும், பந்தங்களில் இருந்து விடுபட்டவனாகவும் உன்னால் இருக்க முடியும்.

1.6 சரி-தவறு, இன்பம்-துன்பம் போன்ற இருமைகள் உனது மனதை மட்டுமே சேர்ந்தவை. உனக்கும் அவற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நீ எதையும் செய்பவனும் இல்லை; பலனை அனுபவிப்பவனும் இல்லை. நீ எப்போதும் விடுதலைப் பெற்றவன்.

1.7 அனைத்து நிகழ்வுகளுக்கும் நீ வெறும் சாட்சி மட்டுமே என்ற உண்மையை மறப்பதுதான் உன் துன்பங்களுக்கு காரணம்.

1.11 ஒருவன் தன்னை துன்பங்களில் இருந்து விடுதலை அடைந்தவன் என்று எண்ணினால் அதுவே உண்மை. அதை விடுத்து தன்னை பந்தப்பட்டவன் என்று கருதினால் அதுதான் உண்மை. ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்என்ற வாசகம் உண்மையானது.

1.15. நீ ஏற்கனவே அமைதியின் உருவானவன். ‘மனதை அமைதிப்படுத்த வேண்டும்என்று நீ நினைப்பதுதான் உன் துன்பங்களுக்குக் காரணம்.

1.19 பிரதிபலிக்கப்படும் உருவத்தை தன்னுள்ளே கொண்டிருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டிருக்கும் கண்ணாடியைப் போல உயிருடன் இருக்கும் உடலை தன்னுள்ளே கொண்டிருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டவன் பரமன்.

ஜனகர் கூறுகிறார்:

2.2 நானே இந்த உடலுக்கு உணர்வாகவும் பிரபஞ்சத்துக்கு ஆதாரமாகவும் இருக்கிறேன். எனவே, இந்த உலகம் முழுவதும் என்னுடையது. அல்லது, எதுவுமே என்னுடையது அல்ல.

2.6 கரும்புச் சாற்றின் சுவை எப்படி அதில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரைக்கும் இருக்கிறதோ அது போல ஆனந்தமயமான என்னில் இருந்து உருவான உலகம் முழுவதும் இன்ப மயமானது.

2.11 எவ்வளவு ஆச்சரியமாவன் நான்? பிரம்மன்னில் தொடங்கி கடைசிப் புல் வரை அனைத்தும் அழிந்தாலும் அழியாமல் இருக்கும் எனக்கு பெருமை உண்டாவதாக.

2.12 எவ்வளவு ஆச்சரியமாவன் நான்? உடலுடன் இருந்தாலும் நான் எங்கும் போவதும் இல்லை. வருவதும் இல்லை. எப்போதும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய எனக்கு பெருமை உண்டாவதாக.

2.13 எவ்வளவு ஆச்சரியமாவன் நான்? என்னைப்போல் புத்திசாலி யாரும் இருக்க முடியாது. என் உடலால்தொடாமலேயே இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் பெற்றெடுத்த எனக்கு பெருமை உண்டாவதாக.

2.14 எவ்வளவு ஆச்சரியமாவன் நான்? எதனுடனும் தொடர்பு உடையவனாக இல்லாவிட்டாலும் வாக்காலும் மனதாலும் எட்டக்கூடிய அனைத்தையும் படைத்த எனக்கு பெருமை உண்டாவதாக.

2.15 கறைபடியாத துணியான என்மேல் அறியாமையால் சித்தரிக்கப் பட்ட அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகிய மூன்றுமே உண்மையில் இல்லை.

2.20 இந்த உடல், சுவர்க்கம், நரகம், பந்தம், விடுதலை, பயம் போன்றவை மனதின் கற்பனைகள். உணர்வு மயமான எனக்கு செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.

2.22 நான் இந்த உடல் அல்ல. இந்த உடல் என்னுடையது அல்ல. நான் உயிரோடு இருப்பவன் அல்ல. நான் உணர்வுமயமானவன். உயிர்வாழவேண்டும் என்ற மனதின் ஆசைதான் துன்பங்களுக்கு காரணம்.

அஷ்டவக்ரர் கேட்கிறார்:

3.1 ‘நான் அழியாத பரமன்என்ற ஞானத்தை அடைந்த உன் போன்ற ஞானிகளுக்கு சொத்து சேர்ப்பதில் என்ன சுகம் இருக்க முடியும்?

3.2 முத்தின் உயர்வை அறியாதவனே வெயிலில் பளபளக்கும் கிளிஞ்சலுக்கு ஆசைப்படுவான். அதுபோல, ‘நான் யார்?’ என்ற ஞானம் இல்லாதவர்கள் மட்டுமே பொய்யாக காட்சி அளிக்கும் பொருள்களுக்காக ஆசைப்படுவர்.

3.9 விழா எடுக்கப்பட்டாலும் துன்புறுத்தப்பட்டாலும்நானே பரமன்என்ற அறிவுள்ள ஞானி காத்திருக்கவும் மாட்டான்; ஏமாற்றம் அடையவும் மாட்டான்.

3.10 தன்னுடைய உடலையே மற்றவருடையது என்ற எண்ணத்தில் பார்க்கும் ஞானி எவ்வாறு புகழாலும் இகழாலும் பாதிக்கப்படுவான்?

அஷ்டவக்ரர் கூறுகிறார்:

4.1 வாழ்க்கை என்னும் விளையாட்டை விளையாடும் தன்னை அறிந்த ஞானி, துன்பத்தில் உழலும் குழப்பமடைந்த ஜீவன்களைப் போல இருக்கமாட்டான்.

4.2 இந்திரன் முதலான தேவர்களும் அடைய ஏங்கும் ஞானத்தை அடைந்தவர்கள் தங்கள் சாதனையை நினைத்துக்கூட பரவசப்படுவதில்லை.

4.4 தானே இந்த உலகம் என்று அறிந்தவர்கள் மனம் போல வாழ்வதை யாரால் கட்டுப்படுத்த முடியும்?

6.3 எல்லா உயிரினங்களிலும் நான் இருக்கிறேன். எல்லா உயிரினங்களும் என்னுள் இருக்கின்றன. இந்த உயர்ந்த ஞானத்தை அடைந்தவனுக்கு துறவு, ஏற்றல், மறுத்தல் ஆகிய எதுவும் இல்லை.

ஜனகர் கூறுகிறார்:

7.2 அளவுகடந்த கடலான என்னில், ‘உலகம்என்னும் அலை எழட்டும், விழட்டும். அதனால் எனது அளவு கூடுவதும் இல்லை. குறைவதும் இல்லை.

7.5 உணர்வுமயமான எனக்கு மாயாஜாலத்தால் செய்யப்பட்ட இந்த உலகத்தில் வேண்டிய, வேண்டாத பொருள்கள் இருப்பதாக எப்படி என்னால் கற்பனை செய்துகொள்ள முடியும்.

அஷ்டவக்ரர் கூறுகிறார்:

8.1 மனதில் எதற்காகவாவது ஏங்குவது, எதை நினைத்தாவது வருத்தப்படுவது, எதையாவது மறுப்பது, எதையாவது பற்றிக்கொண்டு இருப்பது, எதை நினைத்தாவது திருப்தி அடைவது, எதை நினைத்தாவது அதிருப்தி அடைவது ஆகியவையே பந்தம்.

8.2 இவை இல்லாமல் இருப்பது விடுதலை.

9.2 வாழ வேண்டும் என்ற துடிப்போ, இன்பம் வேண்டும் என்ற ஏக்கமோ, அறிய வேண்டும் என்ற ஆவலோ இல்லாதவர்கள் ஞானிகள்.

10.7 எவ்வளவுதான் செல்வம், புலன் இன்பங்கள் கிடைத்தாலும் மனம் திருப்தி அடையவே அடையாது.

ஜனகர் கூறுகிறார்:

12.5 உலகத்துடன் ஒன்றி வாழ்தல் அதன் பின் துறவுபூண்டு தியானம் செய்தல் ஆகிய இரண்டு தவறுகளையும் செய்துவிட்டு இப்போது நான் சரியான ஞானத்தில் நிலைத்து நிற்கிறேன்.

12.6 எப்படி வேலைகள் செய்வது அறியாமையின் விளைவோ அதுபோலவே வேலைகளை துறப்பதும் அறியாமையின் விளைவே. இந்த உண்மையை உணர்ந்த நான் இப்போது சரியான ஞானத்தில் நிலைத்து நிற்கிறேன்.

12.7 எண்ணத்துக்கு அப்பாற்பட்ட பரமனைப் பற்றி எண்ண முயற்சி செய்வதன் தவறை உணர்ந்து இந்தப்பயிற்சியை கைவிட்டுவிட்டேன்.

12.8 இந்த ஞானத்தை அடைந்தவர்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை அடைந்தவர்கள். அவர்கள் செய்ய வேண்டிய அனைத்து செயல்களையும் செய்து முடித்தவர்கள்.

13.2 சிலவேளைகளில் உடல் உபாதை ஏற்படலாம். சில வேளைகளில் நமது பேச்சு நமக்கு துன்பத்தைத் தரலாம். சில வேளைகளில் மனம் அலைபாயலாம். இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் நான் எனது விருப்பப்படி வாழுகிறேன்.

13.3 உண்மையில் நான் எதையும் செய்வதில்லை என்பதை உணர்ந்த நான் தினசரி வாழ்வில் நிகழும் சூழல்களை தக்கபடி எதிர்கொள்கிறேன்.

13.5 நான் நின்றாலோ, நடந்தாலோ அல்லது படுத்துக்கொண்டு இருந்தாலோ எனக்கு எந்த விதமான லாபமோ நஷ்டமோ இல்லை. எனவே, நான் எனது விருப்பப்படி நின்றோ, நடந்தோ, தூங்கியோ வாழ்நாட்களைக் களிக்கிறேன்.

14.1 தூக்கத்தில் இருந்து விழித்தபின் கனவுகளை நினைவு கூறும் அவசியம் இல்லை. அதுபோல காலியான மனதை உடைய ஞானிகளுக்கு தானாக ஏற்படும் எண்ணங்களைத்தவிர எதையாவது ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அஷ்டவக்ரர் கூறுகிறார்:

15.1 அறிவுக் கூர்மை படைத்த ஒருசிலர் ஆசிரியருடன் நடத்தும் சாதாரண உரையாடல் மூலம் கூட ஞானத்தைப் பெறலாம். வேறு சிலர் வாழ்நாள் முழுவதும் ஆசிரியரிடம் முறையாகப் பாடம் கற்றாலும் திக்குத்தெரியாமல் திண்டாடலாம்.

15.2 புலன் இன்பத்தில் விருப்பப்படுவது துன்பத்தைத் தரும். புலன் இன்பத்தை வெறுப்பதும் துன்பத்தைத் தரும். புலன் இன்பத்தில் அக்கறையின்மை விடுதலை. இந்த உண்மையை அறிந்தபின் நீ விரும்பியபடி வாழலாம்.

15.3 இந்த அறிவு, அறியத்துடிக்கும் ஆவல், அடையத் துடிக்கும் சுறுசுறுப்பு ஆகியவற்றை அடக்கிவிடும். எனவே புகழையும் பொருளையும் விரும்புவர்கள் இந்த ஞானத்தை தவிர்த்துவிடுவார்கள்.

16.1 நீ கணக்கற்ற வேதங்களை படிக்கலாம், ஒப்பிக்கலாம். ஆனால் அவை அனைத்தையும் மறக்கும் வரை  உன்னால் ஞானத்தில் நிலைபெற முடியாது.

16.3 மக்கள் தாங்கள் முயற்சி செய்வதால்தான் துன்பம் ஏற்படுகிறது என்பதை அறிவதில்லை. ஒரு சிலர் இந்த வாக்கியத்தைக் கேட்டதாலேயே நிம்மதி அடைவார்கள்.

16.4 கண்களை மூடித் திறப்பது கூட ஒரு பெரிய வேலை என்று நினைக்கும் முழுச்சோம்பேறிக்கு மட்டும்தான் இன்பம் சொந்தமானது.

16.11 சிவா, விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவருமே உனது ஆசிரியர்களாக இருந்தாலும் அனைத்தையும் மறக்கும் வரை உன்னால் ஞானத்தில் நிலைபெற முடியாது.

17.4 அனுபவித்த பொருட்களின் மேல் பற்று இல்லாமலும் அனுபவிக்காத பொருள்களை அடைய ஏங்காமலும் இருப்பவனை காண்பது அரிது.

17.5 உலக இன்பத்துக்கு ஆசைப்படும் பற்றுடையோர்களும் விடுதலைப் பெற ஆசைப்படும் முக்திவிழைவோர்களும் துன்பப்படுபவர்களே.  இந்த இரண்டையும் அடைய ஆசைப்படாதவர்களை காண்பது அரிது.

17.7 தன் வாழ்வில் இருந்து உலகப் பொருட்களை அகற்றிவிட வேண்டும் என்ற ஆசையோ அவை தொடர்வதால் கோபமோ இல்லாமல் வாழ்வு தரும் நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்பவன் எப்போதும் இன்பமாக இருப்பான்.

17.8 கிடைத்த ஞானத்தில் நிலைபெற்று, அலைபாயும் மனதை காலிசெய்துவிட்டு பார்க்கக்கிடைப்பதை பார்த்து, கேட்கக்கிடைப்பதை கேட்டு, முகரக்கிடைப்பதை முகர்ந்து, சுவைகக்கிடைப்பதை சுவைத்து, ஞானி இன்பமாக வாழ்வான்.

17.16 எதையாவது தேடி அலைந்துகொண்டிருந்த நாட்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டவனுக்கு வலுச்சண்டைக்குப் போவதோ, கருணை புரிவதோ, கர்வமோ, பணிவோ, ஆச்சரியமோ, குழப்பமோ எதுவும் இருக்காது.

17.17 புலன் இன்பங்களில் தனக்கு அக்கறை இல்லை என்பதை ஞானி வெளியே காட்டிக்கொள்ள மாட்டான். எந்தச் சாதனைகளைச் செய்ய நேர்ந்தாலும் அல்லது தோல்விகளை சந்திக்க நேர்ந்தாலும் பற்றுதல் இல்லாத மனதுடன் அவன் தொடர்ந்து புலன் இன்பங்களை அனுபவிப்பான்.

17.19 ‘நான்’, ‘எனதுஎன்ற எண்ணங்களில் இருந்து விடுதலை அடைந்தவன், எந்த வித பொறுப்பு உணர்வும் இல்லாதவன், உலகே மாயை என்று உணர்ந்தவன், ஆசைகளை அகன்ற மனதை உடையவன், வேலைகள் செய்யும்பொழுதும் சும்மா இருப்பவனாவான்.

18.16 நான் இந்த உலகத்தில் இருந்து வேறுபட்டவன் என்ற எண்ணம் இல்லாதவன், ‘நான் பரமன்என்ற எண்ணமும் இல்லாதவன்.

18.18 ஞானி சாதாரண மனிதனைப் போலவே வாழ்ந்தாலும் மற்றவர்களைப் போல மன அமைதிக்கும் அலைபாயுதலுக்கும்  உள்ள வித்தியாசத்தைக் கவனிப்பதில்லை.

18.21 காற்றினால் தூக்கிச்செல்லப்படும்  காய்ந்த இலைச் சருகைப் போல் வாழ்வின் நிகழ்வுகளில் ஞானி செயல்படுவான்.

18.33 சாதாரண மக்களைப்போல் இல்லாமல், ஞானி எண்ணங்களின் ஒருங்கிணைப்பு, மனக் குவிதல், எண்ணங்கள் இல்லாமல் இருத்தல் போன்றவற்றுக்காக எந்த முயற்சியையும் செய்யாமல் உறக்கத்தில் நடப்பதுபோல செயல்படுவான்.

ஜனகர் கூறுகிறார்:

19.3 எனது பெருமையில் நிலைத்து இருக்கும் எனக்கு கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய எதுவுமே கிடையாது. முடிவற்ற காலமும் வெளியும் கூட கிடையாது.

20.8 எப்போதும் குற்றம் ற்று, நிலைத்து இருக்கும் என்னை யாராலும் பரிட்சித்துப் பார்க்க முடியாது. எந்தச் சோதனைகளும், நியமங்களும் என்னைக் கட்டுப்படுத்தாது.

20.14 இருத்தல்-சூனியம், இருமை-இரண்டற்றத் தன்மை ஆகிய எதுவுமே இல்லாதபோது வேறு என்ன சொல்வது? எனக்கு வார்த்தைகள் எதுவும் இல்லை.

முடிவுரை :

இடைவெளியால் உருவான பானை, பொருள்களால் நிரப்பப்படுகிறது. அதுபோல, உணர்வினால் உருவான மனம், எண்ணங்களால் நிரப்பப்படுகிறது. பொருள்களை சேமிப்பதற்காகத்தான் பானை. எண்ணங்கள் உலாவுவதற்குத்தான் மனம்.

எவ்வளவுதான் முயன்றாலும் பானையில் இருக்கும் வெற்றிடத்தை அதிலிருந்து வெளியேற்ற முடியாது. பானையை உடைத்துவிட்டாலும் வெற்றிடம் தொடர்ந்து இருக்கும். அதுபோல, எவ்வளவுதான் முயன்றாலும் மனதில் இருந்து உணர்வை வெளியேற்றிவிட முடியாது. மரணத்துக்குப்பின்னும் உணர்வு தொடர்ந்து இருக்கும்.

அமைதியான ஆனந்தமான அந்த உணர்வுதான் நான் என்பதை உணர்ந்தவர்கள் ஞானிகள். இதை அறியாதவர்கள், மன அமைதியைத் தேடிகொண்டு இருக்கிறார்கள்.  

பானையில் சேமிப்பது, பாலா கள்ளா என்பதை பானை தீர்மானிப்பதில்லை. இது வேண்டும் அது வேண்டாம் என்ற விருப்பு வெருப்பும் பானைக்குக் கிடையாது. அதுபோல ஞானிகளுக்கு தங்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்கள் இருக்கவேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. மனதில் ஏற்படும் அனைத்து எண்ணங்களும் வெறும் கற்பனையே என்பதை அறிந்த ஞானி அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.

அனைத்தும் நானே என்ற ஞானம், எப்போதும் இன்பமாக வாழ வழி வகுக்கிறது.    

பயிற்சிக்காக :

1. ஞானத்தின் தன்மைகள், பலன்கள் ஆகியவற்றை ஆராய்க.

சுயசிந்தனைக்காக :


1. அஷ்டவக்ர கீதையைப் படிக்கவும்.