Wednesday, June 12, 2013

Lesson 191: Fulfillment of an enlightened soul (Brahmasutra 14.4.17-22)

பாடம் 191: ஞானியின் நிறைவு
பாடல்: 550-555 (IV.4.17-22)

தன்னுடைய இராஜ்யத்துக்கு அவனே கடவுளாகி விடுகிறான்என்ற தைத்ரீய உபநிஷத்தின் வாக்கியத்தை (1.6) மேற்கோள் காட்டி, ஞானம் பெற்றவுடன் ஞானி முழு நிறைவை அடைந்து விடுகிறான் என்ற கருத்தை, ஆதி சங்கரரின் உபதேச சாஹஸ்ரீ நூலில் இருந்து சில பகுதிகளை தருவதன் மூலம் இந்தப்பாடம் நிறைவு செய்கிறது.

17.1 வேறு எதுவுமே இல்லாத காரணத்தால் அனைத்திற்கும் அப்பாற்பட்ட அந்தப் பரமனை அறியவேண்டும்.

17.4 வேதங்களின் கர்மகாண்டம், வேதாந்தம் மற்றும் வேதங்களைச் சார்ந்த அனைத்து நூல்களின் ஒரே நோக்கம் நமக்கு பரமனை அறிவிப்பதுதான். பரமனை அறிந்து கொள்வதைவிட மேலானதான சாதனை எதுவும் இல்லை.

18.1 எதிலிருந்து அனைத்தும் உருவானதோ, எதில் அனைத்தும் அடங்குமோ, எது எனது புத்தியின் அனைத்து மாற்றங்களுக்கும் காரணமானதோ அந்த உணர்வு மயமான பரமனுக்கு நான் எனது தலையை வணங்குகிறேன்.

18.2 தவறான கருத்தை போதிக்கும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து வேதத்தின் உட்பொருளை சிதைவுறாமல் காப்பாற்றி, கூர்மையான கத்தி போன்ற வார்த்தைகளாலும் பிளக்க முடியாத மின்னல் போன்ற தர்க்கங்களாலும் அதை எனக்குப் புரியும் படி உபதேசம் செய்த மிகச் சிறந்த அறிவாளியான எனது குருவுக்கும் அவரது குருப்பரம்பரைக்கும் நான் தலை வணங்குகிறேன்.

18.3 ‘இருத்தலை மட்டுமே இயல்பாக கொண்ட நான் எப்போதும் முக்தி அடைந்தவனாகத்தான் இருக்கிறேன்என்ற அறிவில் நாம் நிலைபெற முடியாது என்பது உண்மையானால், தாயின் கருணையுடன் வேதம் ஏன் இந்த அறிவை நமக்கு போதிக்க வேண்டும்?

18.4 கயிறு என்ற சரியான அறிவை அடைந்ததும் பாம்பு என்ற தவறான அறிவு மறைந்துவிடுவதைப்போல, ‘எப்போதும் இருக்கும் பரமனே நீஎன்று போதிக்கும் வேத மந்திரங்களை தர்க்கம் மூலம் சோதித்து அறிந்தவுடன் இந்தப் பிரபஞ்சம் மாயையாக மறைந்துவிடும்.

18.233 மலர்களில் இருந்து சிறந்த தேனைச் சேகரித்துத் தரும் தேனியைப்போல வேதங்களில் இருந்து அவற்றின் சாரத்தை எடுத்து எனக்கு அளித்த எனது ஆசிரியருக்கு நான் தலை வணங்குகிறேன்.

எனக்கும் மனதுக்கும் இடையே நடக்கும் உரையாடல்

8.1 உலக சுகங்களை அனுபவிப்பவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு உனது கற்பனையில் உருவானது, ஓ மனமே! குணங்கள் எதுவும் இல்லாமல் உணர்வு மயமாக இருக்கும் பரமனாகிய எனக்கு உலக சுகங்களில் மூலம் எந்தப் பயனும் கிடையாது. எனவே, உனது முயற்சிகள் அனைத்தும் வீண்.

8.2 வீணாக வேலை செய்துகொண்டு இருக்காமல், பிறப்பு-இறப்புக்கு அப்பாற்பட்டு, இரண்டற்று, பந்தங்கள் ஏதும் இல்லாமல் இருக்கும் என்னைச் சேர்ந்து அமைதியாக இரு.

8.4-5 செயலுக்கும் விளைவுக்கும் காரண-காரிய உறவு இருப்பதாக நம்பும் மனமே, நீ எதையும் செய்வதில்லை, அனுபவிப்பதும் இல்லை. நீ என்னில் இருந்து வேறு பட்டவன் அல்ல. இதை நீ அறிந்துகொண்டால் அனைத்து துன்பங்களில் இருந்தும் உனக்கு விடுதலை கிடைக்கும்.

19.1 மனம்: ஆசைகளே எனது துன்பத்துக்கு காரணம். ஆசையை அகற்ற விவேகமும் வைராக்கியமும் எனக்குத் தேவை.

19.2 ஓ மனமே!  ‘நான்’, ‘எனதுஎன்பது போன்ற பயன் இல்லாத கற்பனைகளில் நீ உழன்று கொண்டு இருக்கிறாய். நீ செயல்படுவது உனக்காக இல்லை, எனக்காக. நீ எதையும் அறியமாட்டாய். எனக்கு எந்த ஆசைகளும் கிடையாது. எனவே, நீ சும்மா இருந்தாலே நலம்.

19.3 நானே பரமன் என்பதால் நான் எப்போதும் நிறைவு டையவனுமாய் ஆசைகள் அற்றவனுமாய் இருக்கிறேன். எப்போதும் நிறைவுடைய எனது நலத்துக்காக நான் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் நீ நலமாக இருந்தால் நன்றாக இருக்கும். ஓ மனமே, அமைதியாக இரு.

19.4 பசியும் தாகமும் பிராணனுக்கு. துக்கமும் அறியாமையும் மனமாகிய உனக்கு. மூப்பும் மரணமும் உடலுக்கு. இவை எதனாலும் பாதிக்கப்படாதவன் நான். எனவே எனக்கு நிறைவைத் தர நீ செய்யும் முயற்சிகள் அனைத்தும் வீணே!

19.5 ஆழ்ந்த உறக்கத்தில் நீ எதையுமே அறியாமல் அமைதியாக இருக்கிறாய். விழித்தவுடன் அனைத்தையும் தவறாக அறிவதால் அலைபாய்கிறாய். ஐந்து புலன்களால் நீ அறிவது எதுவுமே உண்மை அல்ல என்பதை நீ அறிந்தால் உன்னால் எப்போதும் அமைதியாக இருக்க முடியும்.

19.6 உனது முயற்சிகள் என்னை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை. எந்த பந்தமும் மாற்றமும் இல்லாமல் எப்போதும் நிலைத்து இருக்கும் அறிவு உருவானவன் நான். நான் எப்போதுமே நிறைவானவன் என்பதால், நீ சரியான ஞானத்தை பெறுவதற்கு முன்பும் பெற்ற பின்பும் எனது நிலை மாறுபடுவதில்லை. எனவே, ஓ மனமே உனது முயற்சிகள் அனைத்தும் வீண்.

19.7 நான் என்றும் மாற்றம் எதுவும் இல்லாமல் நிறைவாக இருப்பவன். உன்னால் உருவாக்கப்பட்ட உலகம்தான் எப்போதும் மாறிக்கொண்டு இருப்பது. நான் இரண்டற்ற ஒன்றானவன் என்று வேதங்கள் சொல்வதால் உன்னால் உருவாக்கப்பட்ட அனைத்தும் வெறும் கற்பனையே.

19.8 தர்க்கத்தின் மூலம் ஆராய்ந்து பார்த்தால், உண்மை எப்போதும் அழிவதும் இல்லை, பொய் எப்போதும் தோன்றுவதும் இல்லை என்பது தெரியவரும். எனவே, ஓ மனமே, உனக்கு தோற்றமும் மறைவும் இருப்பதால் நீ உண்மையில் இருப்பவன் அல்ல.

19.9-10 என்னைத்தவிர வேறு எதுவும் இல்லை என்ற காரணத்தால் பார்ப்பவன், பார்வை, பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்றுமே உன்னால் என் மீது ஏற்றி வைக்கப்பட்ட பொய்கள். இது இப்படி இருக்க, நான் ஆழ்ந்த உறக்கம், கனவு, விழிப்பு ஆகிய மூன்று நிலைகளிலும் மாறாமல் நிறைவாக இருக்கிறேன். மேலும் அனைத்து மனிதர்களுக்கு உள்ளும் இருப்பது ஒன்றான நான் மட்டுமே. ஓ மனமே, நீதான் ஒன்றான என்னை வேறுபடுத்திப் பார்க்கிறாய்.

19.11 நீ நினைப்பதுபோல் அனைத்தும் வேறானால் அவை தோற்றம், மாற்றம், மறைவு என்ற விதிக்கு கட்டுப்பட்டவை. இந்த உலகமும் ஒரு நாள் அழிந்து போகும்.

19.12 யாரும் எனக்குச் சொந்தம் இல்லை. நான் யாருக்கும் சொந்தமானவன் இல்லை. ஏனெனில் நான் இரண்டற்றவன். எப்போதும் இருக்கும் என் மீது பொய்யான இந்த உலகத்தை நீ ஏற்றிவைத்துள்ளாய்.

19.28 பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த செயலுக்கு ஈடான செயலாக வேதங்களை ஆராய்ந்து இந்த உண்மையை எடுத்துக் கூறிய அனைத்து ஆசிரியர்களையும் நான் வணங்குகிறேன்.


முடிவுரை :

ஆசை என்பது அனைத்து மக்களுக்கும் இயற்கையாகவே இருக்கிறது. ஆசை பட்ட பொருளை அடைந்தபின்னும் ஆசைகள் குறைவதில்லை. அவை வாழ்வின் கடைசி நாள் வரை தொடர்ந்து அதிகரிக்கவும் செய்கிறது. எனவேதான் யாரும் தங்கள் வாழ்வில் நிறைவை காண்பதில்லை.

வேதம், மக்களின் இந்தக் குறையை தீர்த்து அவர்கள் நிறைவு அடையும் வழியைக் காண்பிக்கிறது.

முதல் படி: பட்டம், பதவி, பணம், உறவு என்பது போன்ற வெளி உலகில் உள்ள பொருள்கள் மேல் ஆசைப்பட்டு அவற்றை பெற முயற்சி செய்பவர்கள் பற்றுடையோர்கள். எதற்காக பொருள்கள் மேல் ஆசைப்படுகிறோம் என்று ஆராயாமல் இருக்கும் வரை இவர்கள் அடுத்தப்படிக்கு முன்னேறுவதில்லை.

அனைத்து மக்களுக்கும் இயற்கையாக இருக்கும் ஆசை, அவர்களை மேலும் மேலும் செயல்களில் தூண்டி ஆசையை நிறைவு செய்யத் தூண்டுகிறது. செயல் செய்வதன் மூலம் அறிவும் வளர்வதால், கூடிய விரைவில் அவர்கள் தங்கள் முயற்சி எப்போதும் நிறைவைத் தராது என்ற மனப்பக்குவத்தைப் பெறுவார்கள்.

இரண்டாம் படி: சுகம் கிடைக்கும்வரைதான் நமக்கு பொருள்கள் மேல் ஆசை இருக்கிறது என்பதை உணர்ந்து, பொருள்கள் மூலம் அல்லாது கடவுளை நாடுவதன் மூலம் சுகம் பெற வேண்டும் என்று ஆசைபடுபவர்கள் முக்திவிழைவோர்கள்.

புராணகதைகளை படிப்பது, கோவில்களில் உபன்யாசம் கேட்பது போன்ற முயற்சிகளை அவர்கள் செய்யும் போது சுகம் இருக்கும் ஒரே இடம் தான் மட்டுமே என்பதை அவர்கள் அறியும் வாய்ப்பு ஏற்படும்

மூன்றாம் படி: பொருள்களில் சுகம் இல்லை என்றும் சுகம் தரும் ஒரே பொருள் ஆத்மா என்பதையும் அறியும் முக்திவிழைவோர்கள் ஆத்மாவை அறிய முயற்சி செய்வார்கள்.

ஆத்மா உள்ளே இருப்பது. அதை அடைய வெளியே முயற்சி செய்யக் கூடாது என்ற தவறான போதனைகளை கேட்டு சிலர், தியானம் செய்வதன் மூலம் ஆத்மாவைப் பற்றிய அறிவைப் பெற முயற்சி செய்வார்கள்.

வெளியே இருக்கும் கண்ணாடியை சரியாகப் பார்த்தால் அதன் உள்ளே இருக்கும் தன் முகத்தை பார்க்க முடியும். அதுபோல வெளியே இருக்கும் வேதங்களை சரியாகப் படித்தால் தன்னை அறிய முடியும்.

முகத்தைப் பார்க்க கண்ணாடியைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. அது போல தன்னை அறிய வேதம் படிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. தியானம் செய்வதால் ஆத்மாவைப்பற்றிய அறிவு ஏற்படாது என்பதை இவர்கள் அனுபவத்தில் உணர்ந்த பின் வேதம் படிக்க ஆரம்பிப்பார்கள்.

கண்ணாடி எவ்வளவு விலை என்று அதில் எழுதி இருப்பதை கவனித்தால் அதில் முகத்தைப் பார்க்க முடியாது. அதுபோல வேதம் கூறும் பல்வேறு கருத்துக்களில் கவனம் சென்று விட்டால் ஆத்மாவை அறிய முடியாது.  

நான்காம் படி: ஆத்மா அறிய ஆசிரியர் அவசியம் என்பதை அறிந்த பின் அவரிடம் முறையாக வேதம் படிப்பவர்கள் முற்றுணர்ந்த ஞானிகளாக மாறுவார்கள்.

உலகைப் பற்றி நாம் கற்ற எந்த அறிவும் நமக்கு பலன் அளிக்க வேண்டும் என்றால் அந்த அறிவைப் பயன்படுத்தி நாம் செயல் புரியவேண்டும். ஆனால், ‘நான் பரமன்’ என்ற ஞானம் பெற்றவுடனேயே அதன் பலன் நமக்கு கிடைக்க ஆரம்பித்துவிடும்.

ஐந்தாம் படி: ஆத்மாவைப் பற்றிய அறிவு ஏற்படும் இடம் மனம். எந்தவித மாற்றமும் இல்லாமல் எப்போதும் இருக்கும் ஆத்மாவே பரமன் என்ற அறிவு மனதில் நிலைபெற்ற ஞானிகளின் மனதில் ஆசைகள் அனைத்தும் அகன்று நிறைவு பெற்றவர்களாக வாழ்கிறார்கள்.

நிறைவு பெற்ற ஞானிகள், ‘நான் ஆனந்தமயமானவன்என்பதையும் ‘நான் மட்டுமே இன்பத்தின் ஒரே ஊற்றுஎன்பதையும் அறிந்து இன்பமடைவார்கள். உலகம் முழுவதும் இன்பத்தின் பிரதிபலிப்பே என்பதை அறிவதால், கிடைக்கும் பொருள்களை அனுபவித்து ஆனந்தமாக இருப்பார்கள். மேலும், மற்றவர்களைப் போல் இன்பத்தைத் தேடி அலையும் அவசியம் தங்களுக்கு இல்லை என்பதை நினைத்து ஞானிகள் மகிழ்வடைவார்கள்.

மாற்றமடையும் உலகில் மாறாமல் இருப்பது நான் மட்டுமே என்ற அறிவான அமிர்தத்தை அருந்திய ஞானிகள் மரணத்தை வென்று நிறைவுடன் வாழ்வார்கள்.

இடம், பொருள், காலம் இவற்றால் கட்டுப்படாத நான் அனந்தமானவன் என்பதை அறிந்த ஞானிகள் நிறைவுடன் வாழ்வார்கள்.

அளவற்ற செல்வம் படைத்தவன் செலவு செய்வது பற்றி கவலைப் படுவதில்லை. அதுபோல, அகில உலகமும் தன்னை ஆதாரமாகக்கொண்டுதான் இயங்குகிறது என்பதை அறிந்த ஞானிகள் எவ்வித கவலையும் இல்லாமல் நிறைவுடன் வாழ்வார்கள்.

எந்தச் செயலையும் செய்யவேண்டிய கட்டாயமோ எந்தப் பொருளை அடைய வேண்டிய தேவையோ இல்லாமல் ஞானிகள் எப்போதும் நிறைவுடன் வாழ்வார்கள்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. ஞானியின் நிறைவை விவரித்த நான்காவது அத்தியாயத்தின் இந்த நான்காவது பகுதியுடன் பிரம்ம சூத்திரம் முற்றுப் பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. ஞானியின் நிறைவை விளக்குக?

சுயசிந்தனைக்காக :

1. சுவாமி ஜகதானந்தாவால் பொழிபெயர்க்கப்பட்டு இராமகிருஷ்ண மடத்தின் வெளிடான உபதேச சாஹஸ்ரீ என்ற புத்தகத்தைப் படிக்கவும்.