Tuesday, November 15, 2011

Lesson 160: Time and place does not matter (Brahmasutram 1.4.11)


பாடம் 160: இடமும் காலமும் அமைதிக்கு தடையல்ல
பாடல் 488 (IV.1.11)

தியானம் செய்ய எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி அமரவேண்டும் மற்றும் எந்த நேரத்தில் தியானம் செய்யவேண்டும் என்ற கேள்விக்கு இடம், திசை, நேரம் ஆகியவற்றால் நம் அமைதியை பாதிக்கமுடியாது என்றும் ஏனெனில் இவை அனைத்தும் மாயை என்றும் இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.

உலகில் இன்பம் இல்லை என்று அதை ஒதுக்கிவிட்டு வேதம் படித்து இந்த உலகம் என்னால் எனக்காக படைக்கப்பட்டு என்னை ஆதாரமாக கொண்டு இயங்குவது என்று அறிந்து கொண்டதும் உலகை தவிர்க்கவேண்டிய அவசியம் இருப்பதில்லை. மன அமைதிக்காக எதையும் நாடி ஓட வேண்டாம். எதைக்கண்டும் அஞ்சி அகல வேண்டாம்.

நண்பர்களைத்தேடி அவர்கள் வீட்டுக்கு செல்லமாட்டோம் என்றோ அங்கு நமக்கு பிடிக்காதவர்கள் இருந்தால் வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றோ இதற்கு பொருள் அல்ல. கனவில் தோன்றும் அனைத்துக்காட்சிகளும் தானாக நடப்பவை. அதுபோல இவ்வுலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தானாக நிகழ்பவை. கனவில் என் செயல்பாடுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியாதோ அதேபோல் இவ்வாழ்விலும் நான் எதையும் செய்வதில்லை. நாடி ஓடுவதோ அஞ்சி அகலுவதோ வெறும் காட்சிப்பிழைகள். இவற்றுடன் எவ்வித உறவும் இல்லாமல் என்றும் அமைதியுடனும் ஆனந்தத்துடனும் இருப்பவன் நான்.

என்னால் எவ்வித செயலையும் செய்யமுடியாது. என் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை என்னால் எப்படி தீர்மானிக்கமுடியாதோ அதே போல் அவற்றில் எந்த எண்ணம் செயலாக மாறப்போகிறது என்பதுவும் என் கையில் இல்லை.   ஒரு காரியத்தை செய்யலாமா வேண்டாமா அல்லது எப்படி செய்வது என்பது போன்ற எண்ணங்கள் எவ்வளவு காலம் என் மனதில் அலைபாயும் என்று என்னால் தீர்மானிக்க முடியாது. அதேபோல் எப்பொழுது ஒரு தீர்மானத்திற்கு வந்து என்ன செயலை எப்படி செய்வேன் என்றும் எனக்குத்தெரியாது.

உன்னால் முடியும் என்று பற்றுடையோர்களை ஊக்குவிக்கும் வேதம் நான் என்ற அகங்காரம் நம் மனதில் தோன்றும் வெறும் எண்ணம் என்பதால் நாம் எந்த செயலையும் செய்யமுடியாது என்று முக்திவிழைவோர்களுக்கு போதிக்கிறது.

நான் எதையும் செய்வதில்லை

நம் கனவில் ஒருவர் முட்டாள்தனமாக நடந்துகொண்டால் அதற்கு நாம் எப்படி பொறுப்பேற்றுக்கொள்வதில்லையோ அது போல நிஜவாழ்வில் நம் செயல்களுக்கு நாம் காரணமல்ல. ஏனெனில் நம்மால் எதையும் செய்யமுடியாது. செய்வதாக நினைத்துக்கொள்ளும் அகங்காரம் நம் மனதில் தோன்றும் ஒரு எண்ணம்.

அகங்காரம் என்ற எண்ணம் இல்லாமல் எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் இயங்கி வருகின்றன. மனிதன் மட்டும்தான் தான் இயற்கையிலிருந்து வேறுபட்டு இருப்பதாக தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறான். இல்லாத உலகத்தை இருப்பது போல் காட்டும் ஒரு ஒளி-ஒலிகாட்சியில் நமது எண்ணங்கள் வெறும் ஒலிவடிவம். எனவே அகங்காரம் தான் செயல் செய்வதாக நினைப்பது அறிவீனம்.

கனவில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஒரு நொடியில் செல்லமுடிவதற்கு காரணம் இடமும் காலமும் நமது கற்பனை என்பதுதான். இதே உண்மையை அறிவியலின் அடிப்படையில் ஐன்ஸ்டீன் நிரூபித்துள்ளார். எனவே இவ்வுலகில் நாம் காண்பதாக நினைக்கும் இடமும் காலமும் உண்மையில் இல்லை என்பதை உணர்ந்தால் நம்மால் எதையும் செய்யமுடியாது என்பது தெளிவாகும். கனவில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றது எப்படி உண்மையில்லையோ அதுபோல் இந்த உலகமும் நமது மாயாசக்தியால் உருவான கனவு என்பதால் நாம் அதில் எவ்வித செயலையும் செய்ய முடியாது.


நான் பரமன் என்ற அறிவு நிலைபெற்றபின்தான் என்னால் கவலைப்படாமல் இருக்க முடியும் என்பது தவறு. ஏனெனில் எதையுமே செய்ய இயலாத என்னால் அறிவை நிலைபெறச்செய்ய முயற்சிக்க முடியாது. இறந்துபோன ஒருவரை கனவில் சந்தித்து அவரிடம் நீங்கள் எப்படி உயிரோடு இருக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டால் அவர் நான் உன் மனதினால் உருவாக்கப்பட்ட கற்பனை உருவம் என்று பதில் சொல்வதுபோல் நான் யார் என்பதை நமக்கு அறிவிக்கும் நமது குருவும் நம்மால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வடிவமே. இதனாலேயே உலகம் உருவானபொழுதே வேதமும் உடன் தோன்றியது என்று கூறப்படுகிறது. என்னால் படைக்கப்பட்ட பல்வேறு மனிதர்களுடன் உறவாடும்பொழுது நான் அவர்களிடமிருந்து வேறுபட்டவன் என்ற எண்ணம் எப்படி தானாக நம் மனதில் தோன்றியதோ அது போல மனம் பண்பட்டபின் என் எதிரில் குரு தோன்றி நான் யார் என்று எனக்கு அறிவித்தபின் தானாக அந்த எண்ணம் மனதில் நிலைபெறும். 

முக்தி என்பதன் பொருள்

எப்பொழுதும் இன்பமாக இருக்கவேண்டும் மற்றும் சிறிது நேரம் கூட துன்பத்தை அனுபவிக்ககூடாது என்பதுதான் அனைத்து உயிரினங்களின் ஒரே ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள உலகில் உள்ள பொருள்களை நாடி ஓடுபவன் பற்றுடையோன். அது முடியாது என்பதை புரிந்துகொண்டதும் வேதம் படித்து ஆனந்த மயமான பரமன் நான் என்ற அறிவில் நிலைபெற முயற்சி செய்பவன் முக்திவிழைவோன். யாரும் எதையும் செய்வதில்லை என்று அறிந்துகொண்டதால்  அந்த ஆசையே மனதிலிருந்து அகன்று முக்தியடைந்தவன் முற்றுணர்ந்தோன்.

இயற்கையும் செயற்கையும்

கனவில் தென்படும் ஆறு இயற்கையென்றும் அதன்மேல் கட்டப்பட்டிருக்கும் பாலம் செயற்கையென்றும் தரம் பிரிக்க முடியாது. ஏனெனில் அனைத்தையும் உருவாக்கியது நமது எண்ணங்கள். அதேபோல் ஒளிகதிர்களால் உருவான பொருள்களை மட்டுமே கொண்டது இவ்வுலகம். காடு இயற்கை நாடு செயற்கை என்பது தவறு. மனிதனால் எதையும் செய்யமுடியாது என்பதால் அவனால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அனைத்தும் இயற்கையை சேர்ந்தவை.

மனிதனால் மட்டும்தான் முக்தியடையமுடியும் என்று வேதம் சொல்வதற்கு காரணம் மனிதனுக்கு மட்டுமே முக்தியடையவேண்டிய தேவை இருப்பதால்தான். மற்ற உயிரினங்களோ ஜடப்பொருள்களோ  தங்களுக்கு செயல்படும் சுதந்திரம் இருப்பதாகவோ செயல்படுவதாகவோ தவறாக எண்ணிக்கொள்வதில்லை. எனவே மாறும் உலகின் மாற்றத்தின் ஒருபகுதியாக மனதில் ஏற்படும் மாற்றங்களை வேண்டியது வேண்டாதது என்று வகைபிரிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டு   நடக்கும் ஒலி-ஒளி காட்சியை நிம்மதியாக பார்ப்பவன் முக்தியடைகிறான். அவன் மனதில் எவ்வித தேடலும் இல்லாததால் துன்பம் கலவா இன்பத்துடன் இருப்பான்.

சரியும் தவறும்

கனவில் நிகழும் நிகழ்வுகளை சரி தவறு என்று பாகுபடுத்தமுடியாது. அதுபோல இவ்வுலகத்தின் இயக்கம் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இணைந்த ஒன்றுபட்ட நடனம். இந்த ஒளி-ஒலி காட்சியில் எதுவும் தவறாக நடக்க வாய்ப்பேயில்லை என்பதால் எதையும் போற்றவோ இகழவோ தேவையில்லை. முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக்குஞ்சை பருந்து தன் அலகால் குத்தி கொல்வது தவறு அல்ல.

பள்ளி செல்லும் அப்பாவிகுழந்தையை ஒருவன் கடத்திச்சென்று கொன்றுவிட்டான் என்பதும் இயற்கையாக நிகழும் நிகழ்வு. அந்த குற்றவாளியை தூக்கில் போட்டு தண்டிப்பது அந்த காட்சியின் தொடர்ச்சி. இந்த குற்றத்திற்கு தூக்குதண்டனை சரியா தவறா என்று நம் மனதில் நிகழும் பட்டிமன்றம் அந்த காட்சியின் வர்ணனை.

செயல்களில் அகங்காரத்தின் பங்கு

நாம் செய்யும் அனைத்து செயல்களும் இயற்கையில் நிகழ்பவை. செயல்கள் செய்யாமல் நம்மால் இருக்கவே முடியாது. எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும் பொழுதும் உடலுக்கு வயதாகிக்கொண்டிருப்பது போல மனதிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. மாறும் எண்ண ஓட்டங்களில் நம் மனதில் தோன்றும் அகங்காரமும் ஒன்று. மாற்றங்களுக்கு நிகழ்வுகள் என்று பெயரிட்டு ‘நான் சும்மா இருக்கிறேன்’ என்று வர்ணனை செய்வதன் மூலம் ஏதோ செயல் செய்துவிட்டதாக அகங்காரம் கற்பனை செய்துகொள்கிறது.

கால்பந்தாட்டத்தில் பந்தின்பின் ஓடும் விளையாட்டுவீரனின் மனதில் அகங்காரம் முழுவதுமாக ஒடுங்கியிருக்கும். இயற்கையோடு முழுவதும் ஒன்றி பந்தை அடித்து அது கோலில் விழுந்தவுடன் வர்ணணையாளர் அந்த காட்சியை விவரிப்பதுபோல் அகங்காரம் தான் ஏதோ சாதித்துவிட்டது போன்று உணர்வதும் உடல் துள்ளி குதித்து அங்குமிங்கும் ஆடி கொண்டாடுவதும் இயற்கைகாட்சியின் ஒரு பகுதியே.

கோல்போடுவதற்குமுன் நான் இப்படி நினைத்தேன் என்று கடந்தகாலத்தையும் இதுபோல் விளையாடி அடுத்த கோலைப்போடப்போவதாக எதிர்காலத்தையும் கற்பனையில் உருவாக்கிகொள்ளும் அகங்காரத்திற்கு நிகழ்காலத்திற்குள் எட்டிப் பார்க்கும் சக்திகிடையாது. கோல் போடும் தருணத்தில் காணாமல் போயிருந்த அகங்காரம் தான்தான்  கோல்போட்டவன் என்று தவறாக நம்பிவிடுகிறது.

அதுபோல் நாம் செய்யும் வேலைகளில் ஒன்றி செயல்படும்பொழுது நான் இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறேன் என்று அகங்காரம் வர்ணனை செய்யாது. ஒரு செயலை செய்வதற்கு முன்னும் பின்னும் இருக்கும் ஓய்வு நேரங்களில் மனதில் எண்ணங்கள் தோன்றுவது இயற்கையானது. பொம்மையில் உள்ள விசைவில்லை சாவிகொடுத்து முறுக்கேற்றியபின்தான் அதை இயங்கவைக்க இயலுவதைப்போல் உயிரினங்கள் இயங்க அவற்றின் மனதில் எண்ணங்கள் உருவாவது அவசியம். எனவே அகங்காரத்தை அகற்ற வேண்டும் என்ற முயற்சி வெற்றிபெறாது.          

அகங்காரம் தரும் நேர்முக வர்ணனை

இடமும் காலமும் நமது மாயாசக்தியின் கற்பனையான வெளிப்பாடு. கடந்த காலம் என்பது நிகழ்காலத்தில் தொடர்ந்து நடக்கும் நாட்டியத்தை மனம் வர்ணிப்பதால் கற்பனையாக உருவாக்கப்பட்டது. கற்பனைக்கதைகளுக்கும் சரித்திரத்திற்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. ஏனெனில் இருப்பது நிகழ்காலம் மட்டும்தான்.

மாயா சக்தியின் ஒளி-ஒலி காட்சியில் ஒளியில் ஏற்படும் மாறுதல்கள் பிரபஞ்சத்தின் தோற்றமாக தெரிகிறது. தனிப்பட்ட பொருள்கள் என்று எதுவும் இல்லாமல் அதே சமயத்தில் அவை இருப்பதுபோல் காட்டும் ஒளி காட்சியை நம் மனம் ஒலி வடிவில் வர்ணனையாக பதிவுசெய்துகொள்கிறது. ஒலி ஒளியை விட மெதுவாகத்தான் பயணம் செய்யும் என்பதால் ஒலிவடிவான எண்ணங்களால் நிகழ்காலத்தில் செயல்பட முடியாது. நேற்று இரவில் நிலவைப்பார்த்தேன் என்பது நிகழ்காலத்தில் மனதினுள் ஏற்படும் ஒலி வர்ணனை. இது போன்ற ஒலிவர்ணனைகள் அனைவரது மனதிலும் ஏற்படுவதால் அதற்கு ஒரு உண்மைத்துவம் வந்துவிடுகிறது.

கனவில் நமக்கு எதிரே வரும் அழகான பெண்ணை எல்லோரும் கவனிப்பதால் அவள் உண்மையில் உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணாக மாறிவிடமாட்டாள். பிறந்த தேதி, வளர்ந்த இடம் என்பதுபோன்ற சரித்திரம் கனவில் வரும் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். ஆனாலும் அவை யாவும் கற்பனையே. அது போல வாழ்வில் நிகழும் நிகழ்வுகளையும் சந்திக்கும் மனிதர்களையும் உண்மையற்றவை என்று அறிபவன் முற்றுணர்ந்தோன்.

ஞானம் நிலைபெற்ற பின் தான் இதுபோன்ற உறுதியான எண்ணம் ஏற்படும் என்று நினைத்து ‘நான் பரமன்’ என்ற தியானத்தில் மூழ்கி உலகை தவிர்ப்பதனால் எவ்விதபயனும் ஏற்படாது. நடந்தால் பூதம் போல் தென்படும் நிழல் நம்மை துரத்தி பயமுறுத்துகிறது என்பதற்காக எங்கும் செல்லாமல் வீட்டில் படுத்துக்கொண்டு நிழலை அழிக்க வேண்டிய அவசியமில்லை. நிழல் பூதமல்ல என்ற அறிந்து கொண்டால் மட்டும்போதும். அதுபோல் துன்பம் தரும் எண்ணங்கள் மனதில் ஏற்படுவதை தவிர்க்க செயல்களை தவிர்க்கவேண்டிய அவசியமில்லை. துன்பம் தரும் நிகழ்வுகளை படம் பிடித்துக்காட்டும் எண்ணங்கள் மனதில் ஏற்பட்டாலும் காலம் என்பதே நமது கற்பனை என்பதால் நிம்மதியாக இருக்கலாம். எண்ணங்கள் என்னும் ஒலிவடிவமான சக்தி நிகழ்கால மாற்றங்களை கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் என்று இரண்டு கூறுபோடுகிறது. நிகழ்காலம் துன்பம் கலவா இன்பம்.

காலம் நமது கற்பனை

மாறும் உலகை மாயை என்று புரிந்து கொள்ளாமல் மாற்றங்களை முன் பின்  என்று வரிசைப்படுத்தி மூன்று காலங்களை கற்பனை செய்ததன் மூலம் அதற்கு ஒரு உண்மைத்துவத்தை ஏற்படுத்திகொடுத்திருப்பது நமது மனம். நாம் அறியாத ஒன்று நம் கனவில் இருக்க முடியாது. இருத்தல் என்பதற்கு அறிதல்தான் ஆதாரம் என்று வேதம் கூறும் உண்மையை அணுவை ஆராயும் அறிவியல் அறிஞர்கள் நிரூபணம் செய்துள்ளார்கள். எனவே கனவை உருவாக்குவதுபோல்தான் இந்த உலகத்தையும் நாம் பார்ப்பதனாலேயே உருவாக்கியுள்ளோம். இல்லாத இவ்வுலகத்திற்கு இடம், பொருள், காலம் என்ற பரிமாணங்களை கொடுத்து உண்மையாக இருப்பது போல் கற்பனை செய்துகொண்டு அதில் சிக்கிதவிப்பது நமது அகங்காரம்.

ஒருபொருளுக்கும் மற்றொருபொருளுக்கும் இடையே இடைவெளி இருப்பதாக நாம் நினைப்பதும் ஒரு கற்பனையே. ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் ஒரு எலக்டரான் கூட உலகில் இல்லை என்று அறிவியலின் அடிப்படையில் நாம் அறியும் உண்மை நாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒலிவர்ணனையுடன் கூடிய மாயாசக்தியின் ஒளிநடனத்திற்கு உலகம் என்று பெயரிட்டு அதன் மாற்றங்களுக்கு கற்பனையான காலத்தால் இடம் கொடுத்து கனவை நனவாக நம்பி துன்பப்படுவது நமது அகங்காரம்.

துன்பத்தை தவிர்க்க உலகத்தை மாற்றியமைக்க முயலுபவன் பற்றுடையோன். துன்பத்தை தவிர்க்க தன் மனதை மாற்ற முயற்சிப்பவன் முக்திவிழைவோன். துன்பம் வெறும் கற்பனை என்பதால் அதை தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தவன் முற்றுணர்ந்தோன். இன்பத்தை பெறுவதற்காக துன்பத்தை அனுபவிப்பவன் பற்றுடையோன். துன்பத்தை தவிர்ப்பதற்காக இன்பத்தை துறக்க தயாராய் இருப்பவன் முக்திவிழைவோன். இன்ப அனுபவமும் துன்ப அனுபவமும் தனது மாயாசக்தியால் உருவான கனவு என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோன் இது வேண்டும் அது வேண்டாம் என்ற பாகுபாடு எதையும் செய்யாமல் நடக்கும் ஒளி நடனத்தையும் ஒலி வர்ணணையையும் ஒருங்கே அனுபவிப்பான்.

இப்படி இருந்தால்தான் சரி என்ற எதிர்பார்ப்பு எதுவும் இல்லாததால் ஒளி நடனத்தின் வடிவமாற்றங்களையும் அவற்றிற்கு அகங்காரம் கற்பிக்கும் பெயர் மாற்றங்களையும் எவ்வித மறுப்போ தடங்கலோ இல்லாமல் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும் முற்றுணர்ந்தோன்  நிரந்தரமான அமைதியை அனுபவிப்பான்.   

காரண காரியம் நமது கற்பனை

அஜீரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து தரம் குறைந்த சாலையோர உணவகத்தில் உணவு உண்டது என்று கண்டுபிடித்துவிட்டோமானால் ஒரு குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்ளும். எந்த ஒரு காரணமும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் நாம் நம்மை  நிரபராதி என்று எண்ணிக்கொண்டு செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பதுபோல் உடல்நிலைக்குறைவை ஏற்றுக்கொள்வோம். அஜீரணம் என்பது எல்லோருக்கும் எப்பொழுதாவது ஏற்படத்தான் செய்யும். தொடர்ந்து மாறும் உடலில் இது போன்ற துன்பங்கள் ஏற்படுவது இயற்கை. தினம் உண்ணும் உணவை செரிப்பதற்கு நாம் காரணம் இல்லை. அதுபோல் அவ்வப்பொழுது ஏற்படும் அஜீரணத்திற்கும் நாம் காரணம் அல்ல.

உடலைப்போல் மனதும் தொடர்ந்த மாறுதலுக்கு உட்பட்டது. மனதில் ஏற்படும் எண்ணங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாற்றம் நிச்சயம். உலகில் ஏற்படும் மாறுதலுக்கு ஏட்ப மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு நாம் பொறுப்பு அல்ல. கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள் திடீரென ஏற்பட்டால் அதற்கு காரணத்தை ஆராய்ந்து தான்தான் குற்றவாளி என்று தீர்ப்பு எழுதுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. கோல் போட தவறியதை வர்ணிக்கும் வர்ணனையாளர் மீது கோபப்படுவது நியாயமல்ல. உலக ஒளி நடனத்தை ஒலியாக வர்ணனை செய்யும் மனதின் இயல்பை மாற்ற முடியாது என்பதால் அகங்காரம் தன்னைத்தானே நொந்துகொள்வதில் பயன் இல்லை.

முடிவுரை :

இங்கிருந்து அங்கே போகவேண்டுமானால் காலமும் முயற்சியும் அவசியம். இங்கு அங்கு என்பதெல்லாம் வெறும் கற்பனை என்று அறிவியல் நமக்கு அறிவிக்கிறது. எனவே இந்த மாய உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த நாம் எவ்வித முயற்சியும் செய்ய வேண்டாம். செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இப்படி இருக்கும் நான் அப்படி ஆகவேண்டும் என்பது இல்லாததை இருப்பதாக நினைக்கும் அகங்காரத்தின் ஆசை. இடம், பொருள், காலம் மற்றும் காரணகாரியம் போன்றவற்றை உண்மை என்று நம்பும் அறியாமை உள்ளவரை படிப்பறிவில்லாத ஏழைமக்களை ஏமாற்றும் அரசியல்வாதி போல் அகங்காரம் மனதை ஆட்டுவிக்கும்.  

எப்பொழுதுமே எவ்வித வேலையும் செய்யாமல் அனைத்தையும் சாதித்தது நான் என்று பறைசாற்றிக்கொண்டிருக்கும் அகங்காரத்தின் பிடியிலிருந்து விடுபட இடம், பொருள், காலம் போன்ற அனைத்தும் நம் கற்பனை என்ற உறுதியான அறிவு நமக்கு ஏற்படவேண்டும். அகங்காரத்தின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மனம் விடுதலையடைந்தபின் அதை நாடுகடத்தவேண்டிய அவசியமில்லை.

முப்பரிமாணத்தை காட்டும் கண்ணாடியை அணிந்து திரைப்படத்தை பார்த்தால் அதில் தோன்றும் புலி நம் அருகில் வந்து பயமுறுத்துகிறது என்று கண்ணாடியை கழற்றவேண்டிய அவசியமில்லை. அகங்காரம் அனைத்து வேலைகளையும் செய்வது போல் தோன்றுவது வெறும் காட்சிபிழை என்பதை புரிந்துகொண்ட பின் அதன் விருப்பத்திற்கு ஆடவிட்டு அதன் ஆட்டத்தை ரசிக்கலாம்.

பற்றுடையோர்கள் மனம் பண்படாத மனம் என்பதால் அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையும் செய்யக்கூடாத செயல்களையும் பட்டியலிட்டு கொடுக்கும் வேதம் மனம் பண்பட்டபின் அறிவை அடையும் முக்திவிழைவோர்களுக்கு உண்மை எது பொய் எது என்று விளக்குகிறது. அகங்காரம் எவ்வித செயலையும் செய்வதில்லை என்ற உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோர்கள் மனம் போனபடி வாழ்வார்கள்.

பயிற்சிக்காக :

1. முக்தி என்றால் என்ன?

2. இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

3. ஒளி எது, ஒலி எது?

4. செயல்களில் அகங்காரத்தின் பங்கு என்ன?

5. அகங்காரத்தால் ஏன் நிகழ்காலத்திற்குள் வரமுடியாது?

சுயசிந்தனைக்காக :

1. முக்திவிழைவோருக்கும் பற்றுடையோருக்கும் வேதம் கற்றுதரும் ஏன் வேறுபடுகிறது?

2. ஒளி-ஒலி யைத்தவிர உலகில் வேறு எதுவுமேயில்லையா?

Ref: The Quantum Apocalypse of The Holographic Universe at http://www.youtube.com/watch?v=4dpRPTwsKJs