Wednesday, May 12, 2010

Lesson 122: Five commandments ( பிரம்ம சூத்திரம் 3.3.35-36 )

பாடம் 122: செய்யத்தகாதவை
பாடல் 394-395 (III.3.35-36)

தியானம் செய்யத்துவங்குமுன் நம்மை நாம் தயார்படுத்திகொள்வது எப்படி என்று வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை முறைபடுத்தி யோகசூத்திரம் என்ற நூலில் பதஞ்சலி விளக்கியுள்ளார். அதில் உள்ள எட்டு அங்கங்களின் முதல் அங்கத்தில் கூறப்பட்ட தவிர்க்கபடவேண்டிய ஐந்து கருத்துக்களை இந்த பாடம் விவரிக்கிறது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

தியானம் செய்ய அமைதியான மனம் வேண்டும். அதர்மமான செயல்களை செய்துகொண்டு அதே வேளையில் மனஅமைதியை பெற தியானம் செய்வது எந்த பலனையும் தராது.

பொய்சொல்வது, திருடுவது போன்ற அதர்மமான செயல்கள் செய்யத்தகாதவை என்று அனைவருக்கும் தெரியும். எனவேதான் இது போன்ற செயல்களை செய்பவர்கள் இவற்றை யாருக்கும் தெரியாமல் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். திருடியது யாருக்கும் தெரியாவிட்டால் கூட அவர்களுடைய மனம் அவர்களை நிம்மதியாக இருக்கவிடாது. ஒரு குற்ற உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் அதர்மமாக நடப்பவர்களிடம் இருக்கும். இந்த மனநிலையுடன் தியானம் செய்வதோ ஆன்மீகப்பாதையில் முன்னேறுவதோ நடக்காது.

ஒரு சிலருக்கு தொடர்ந்து தவறான செயல்களை செய்து பழக்கப்பட்டுவிட்டதால் மனம் உறுத்தாமல் மரத்துப்போயிருக்கும். செய்த தவறுகளுக்கு தண்டனை பெற்று மனம் திருந்தியபின்தான் இவர்களுக்கு தியானம் செய்யும் தகுதி ஏற்படும்.

எனவே முதலில் வாழ்வை தர்மமான முறையில் வாழ்கிறோம் என்று நம் மனதில் உறுதி ஏற்படவேண்டும். இதற்காக நாம் தர்மமாக வாழ்வது மிக அவசியம்.

தியானம் என்பது மனதில் தோன்றும் எண்ணங்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி.  கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக முடியாது என்பது போல ஆகாரகட்டுப்பாட்டையும் வாக்கு கட்டுப்பாட்டையும் செய்யமுடியாதவனுக்கு மனதை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிசெய்யவே அருகதை கிடையாது.

ஒரு பொருள் திடம், திரவம் மற்றும் வாயு என்ற மூன்று நிலையில் இருக்கலாம். பொதுவாக திடப்பொருளை கட்டுப்படுத்துவது திரவத்தை கட்டுபடுத்துவதை விட எளிதாக இருக்கும். வாயுவை கட்டுபடுத்துவதுதான் மிகவும் கடினமான செயல். அதுபோல செயல், வாக்கு, எண்ணம் என்ற மூன்றில் எண்ணத்தை கட்டுபடுத்துவதுதான் மிக கடினம். முதலில் உடலால் செய்யும் செயல்களையும் இரண்டாவது கட்டத்தில் வாயால் பேசும் சொற்களையும் கட்டுபடுத்த கற்றுக்கொண்டு அதன் பின் எண்ணத்தை கட்டுபடுத்தும் தியானபயிற்சியில் ஈடுபட ஆரம்பிக்கவேண்டும்.

இவ்வாறு படிப்படியாக நம்மை தயார் செய்து கொள்ள வேதம் பின்வரும் ஐந்து கட்டளைகளை நமக்கு விதித்திருக்கிறது.

முதல் கட்டளை – இன்னா செய்யாமை

செயலினாலோ வாக்கினாலோ எந்த ஒரு உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படுத்தகூடாது என்பது இந்த கட்டளையின் பொருள். தன்னை தானே துன்புறுத்திக்கொள்வதையும் சுற்றுபுறசூழலை மாசுபடுத்துவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

உண்மையை கூறினால் சிலருக்கு மனவருத்தம் ஏற்படவாய்ப்பு இருந்தால் முடிந்தவரை அந்த உண்மையை கூறாமல் மௌனமாக இருக்க வேண்டும்.

சக்திதனிமத்தின் ஆதிக்கத்தை குறைப்பதற்காக அசைவ உணவை தவிர்க்கவேண்டுமே தவிர உயிர்களுக்கு துன்பம் ஏற்படுமென்பதால் சைவ உணவை மட்டும் உண்ண வேண்டும் என்பது சரியல்ல. அசைவ உணவு உண்பது தியானத்திற்கோ முக்திக்கோ தடையாகாது.

நமக்கு ஒருவர் தீங்கு இழைத்தாலும் பதிலுக்கு அவரை துன்புறுத்த துணிவது தவறு. நமக்கு ஏற்பட்ட கஷ்டத்திற்கு காரணம் நமது வினைப்பயன் மட்டுமே. எனவே நாம் வேறு யாரையும் மனதாலும் வெறுக்க கூடாது.

இரண்டாம் கட்டளை - பொய்யாமை

சுயலாபத்திற்காக மற்றவர்களை ஏமாற்றும் நோக்கில் நாம் கூறும் அனைத்து வார்த்தைகளும் பொய் ஆகும். எது பொய் என்பது அவரவர் மனதிற்கு தெளிவாக தெரியும். பொய்யை பொய்யல்ல என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதும் தவறு.

பொய் என்பது வாயினால் சொல்லும் வார்த்தைகள் மட்டுமல்ல. நம் எண்ணத்தாலும் செயலாலும் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக செய்யும் அனைத்து செயல்களும் பொய் என்பதன் விளக்கத்தில் அடங்கும்.

நம் எண்ணங்கள் அனைத்தும் சரியானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால சரியான எண்ணங்களை செயல்படுத்துவதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது நமது கடமை. நம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் எப்பொழுதும் ஒன்றுபட்டு இருக்கவேண்டும். நம் மனதில் உண்மை என்று நாமே நம்பாத விஷயங்களை பேசுவதும், பேசுவதற்கு மாறான செயல்களில் ஈடுபடுவதும் இந்த இரண்டாம் கட்டளையை மீறும் செயல்களாகும்.

நாம் உண்மையானவர்கள் என நம் மனதிற்கு தெளிவாக தெரிய வேண்டும்.

ஆனால் சுயநலகலப்பில்லாமல் மற்றவர்களின் நலன்கருதி பொய்பேச நேரிட்டால் அதில் தவறு இல்லை. நம்மையறியாமல் சில சமயங்களில் பொய்பேசிவிட்டால் அதை தவறு என்று ஒத்துக்கொண்டு கடவுளிடம் பாவமன்னிப்பு கோருதல் அவசியம். நம் மனதிற்கு சரியா தவறா என்று உறுதியாக தெரியாத சந்தர்ப்பங்களை வேதம் படித்த ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து முடிவில் அவர்கள் தரும் ஆலோசனையை பின்பற்றி நடக்க வேண்டும்.

மூன்றாம் கட்டளை - திருடாமை

மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களது பொருள்களை எடுத்துக்கொள்வது, நம்மிடம் வேலைசெய்பவர்களுக்கு குறைவாக கூலிகொடுப்பது, வாங்கிய பொருள்களின் மதிப்பை கடைக்காரர் குறைவாக கணக்கிட்டால் அதை சுட்டிக்காட்டாமல் இருப்பது போன்றவை திருட்டு ஆகும்.

அன்பளிப்பாக கிடைப்பது, பொது இடங்களைல் கண்டெடுப்பது ஆகியவை திருடுவதாகாது எனினும் இதுபோல நம் உழைப்பு இல்லாமல் கிடைத்த பொருள்களை சேர்த்து வைக்காமல்  நல்ல காரியங்களுக்காக விரைவில் செலவழித்துவிட வேண்டும்.

நான்காம் கட்டளை – பொருள் மிக படையாமை    

தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்க கூடாது. அடுத்த வேளை உணவுக்கு என்ன வழி என்று கவலைப்படுவதை தவிர்க்கும் அளவுக்கு பணம் அவசியம். ஆனால் பணத்தை எப்படி காப்பது என்று கவலைப்படும் அளவுக்கு பணத்தை சேர்க்க கூடாது. ஒரு வைரநகையை வாங்கும்பொழுது அது தொலைந்துபோய்விட்டால் ‘போனால் போகிறது’ என்று விட்டுவிடும் மனபக்குவம் இருக்கிறதா என்பதை ஆராயவேண்டும். பணத்தின் மீது பற்று இருக்கும்வரை தியானம் செய்ய முடியாது. எனவே பொருளின்மேல் பற்று இல்லாமல் இருக்க பழக வேண்டும்.

ஐந்தாம் கட்டளை – பிறன்மனை விழையாமை

தவறான ஆண்-பெண் தொடர்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மணமாவதற்கு முன் உடல் உறவில் ஆசைப்படுவதும், மணமானபின் மற்றவருடன் உறவாடுவதும் ஆன்மீகப்பாதையில் பெரிய தடைகற்கள்.

முடிவுரை :

வாழ்வின் குறிக்கோளான முக்தியை அடைய பரமனை பற்றிய அறிவை அடைய வேண்டும். இதற்கு ஆசிரியரிடமிருந்து வேதத்தை முறைப்படி பயிலவேண்டும். படிக்கும் கருத்துக்கள் அறிவாக மாற தியானம் அவசியம். தியானம் செய்ய நம்மை தயார்படுத்திக்கொள்ளும் முதல் படியாக நாம் இன்னா செய்யாமை, பொய்யாமை, திருடாமை, பொருள் மிகப்படையாமை மற்றும் பிறன்மனை விழையாமை என்ற ஐந்து கட்டளைகளை வாழ்வில் பின்பற்றவேண்டும்.

பயிற்சிக்காக :

1. செய்யகூடாத ஐந்து கட்டளைகள் யாவை?

2. இவற்றை செய்யகூடாது என்று வேதம் விதித்திருப்பதன் காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. இன்னா செய்யாமை, வாய்மை, கள்ளாமை, பிறனில் விழையாமை  என்ற அதிகாரங்களில் உள்ள குறள்களை புரிந்துகொள்க.

2. நிறைய பொருள் சேர்த்து வைத்திருக்கும் பணக்காரர்கள் தியானம் செய்ய முடியாதா?

Thursday, May 6, 2010

Lesson 121: Purpose of meditation ( பிரம்ம சூத்திரம் 3.3.34 )

பாடம் 121: தியானம் செய்வதன் நோக்கம்
பாடல் 393 (III.3.34)

பரமனை அறிந்து கொள்வதற்காக நம் மனதை தயார்படுத்திக்கொள்ள மட்டுமே தியானம் என்ற பயிற்சியை வேதம் நமக்கு உபதேசம் செய்திருக்கிறது என்ற உண்மையையும் அதைத்தவிர மற்ற நோக்கங்களுக்காக தியானம் செய்வதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்த பாடம் ஆராய்கிறது.

ஈயும் தேனியும்

தியானம் செய்வதற்கு முன் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்தை ஈ மற்றும் தேனியின் உதாரணத்தை கொடுத்து பகவான் சத்தியசாய் பாபா விளக்குகிறார். இனிப்பு கடையில் இருக்கும் பால்கோவா, ஜிலேபி போன்ற இனிப்பு வகைகளின் மேல் மொய்க்கும் ஈ அடுத்தகணம் அருகில் உள்ள சாக்கடையில் இருக்கும் கழிவுகளின் மீதும் அமரும். ஆனால் சுவையான தேனை அருந்தும் தேனி மலர்களைத்தவிர வேறு எதையும் நாடாது. எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்ற அறிவில்லாத ஈ போல உலக சுகங்களை அனுபவிப்பதற்கும் ஆன்மீக அனுபவத்தை தேடுவதற்கும் வித்தியாசம் தெரியாத மக்கள் ஆண்டவனின் பாதங்களை அடைய வேண்டும் என்று  சிறிது நேரம் தியானம் செய்து விட்டு அடுத்த நிமிடம் லாட்டரியில் லட்ச ரூபாய் கிடைக்கவேண்டும் என்று ஆசை படுவார்கள். இது போன்ற மனோநிலையுடன் தியானம் செய்வது முற்றிலும் தவறு.

உலகம் நமக்கு இன்பத்தை கொடுக்க அருகதையற்றது என்ற அறிவு ஏற்பட்டபின் தான் ஒரு மனிதர் தியானம் என்கிற பயிற்சியை ஆரம்பிக்கலாம். மனதின் அலைபாயும் தன்மைக்கு முக்கிய காரணமே உலக அனுபவங்களில் மாறி மாறி அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்தான். எனவே மனம் உலக சுகங்களை நாடும் வரை தியானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஐம்பெரும் வேள்விகள், தானம் மற்றும் தவம் ஆகிய பயிற்சிகளை முறையாக செய்தபின் உலகத்தின்மேல் உள்ள பற்று குறைய ஆரம்பிக்கும். அதற்குபின் தியானம் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளலாம்.

வடைமாலை

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சனேயர் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக சுவையான வடை கிடைக்கும் என்று நினைப்பதை விட மன அமைதியை அதிகபடுத்திகொள்ளலாம் அல்லது இரத்த அழுத்தத்தை குறைத்துக்கொள்ளலாம் என்பது போன்ற காரணங்களுக்காக தியானம் செய்ய நினைப்பது தவறு. ஏனெனில் வடைக்காக கோவிலுக்கு சென்றாலும் போனால் போகிறது என்று சாமியை கும்பிட்டு சிறிது புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் பணம், புகழ், பதவி ஆகியவற்றிற்காக தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டால் பரமனை அறிந்து கொள்ளும் வாய்ப்பு வெகுவாக குறைந்து விடும்.

கோவிலுக்கு சென்றால் பிரசாதம் கிடைக்கும். ஆனால் பிரசாதம் சாப்பிடுவதற்காக கோவிலுக்கு செல்வது தவறு. அதுபோல தியானம் செய்தால் உடலளவிலும் மனதளவிலும் பல பலன்கள் கிடைக்கும். ஆனால் இந்த பலன்களுக்காக தியானம் செய்வது தவறு. தியானம் செய்வதன் ஒரே நோக்கம் பரமனை அறிந்துகொள்ள தேவையான அறிவை ஆசிரியரிடமிருந்து பெற மனதை தயார் செய்து கொள்வது மட்டுமே.

உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் யோகாசனமும் மன ஆரோக்கியத்திற்காக செய்யும் பிராணாயாமமும் தியானம் செய்ய ஆரம்பிப்பதற்கு நம்மை தயார் செய்ய உதவும் படிக்கட்டுகள். ஆனால் இவற்றை மட்டும் செய்து கொண்டு செக்கு மாடு போல் இலக்கை நோக்கி பயணிக்காமல் பலர் வாழ்வில் தேக்கம் அடைந்துள்ளனர்.

ஓட்டை பானை

மனம் ஒரு ஓட்டை பானை. நிறைய உணவை உண்டு வயிற்று பசியை தீர்த்துவிடலாம். ஆனால் மனதின் பசியை தீர்க்கவே முடியாது. எவ்வளவுதான் பொன், பொருள், பணம், பதவி போன்றவை கிடைத்தாலும் போதும் என்ற நிறைவு மனதிற்கு வரவே வராது. எனவேதான் குறையொன்றும் இல்லை என்று வாயளவில் சொல்பவர்கள் கூட தொடர்ந்து கோவிலுக்கு சென்று கடவுளிடம் ஏதாவது கோரிக்கைகளை வைத்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். கடவுளால் கூட மனித மனதின் ஆசையை முழுதாக தீர்த்து திருப்தியை அளிக்க முடியாது.

இதற்கு காரணம் மனம் ஒரு ஓட்டை பானை. இந்த ஓட்டையை அடைக்காமல் வேதம் படிக்க ஆரம்பித்தால் அதுவும் மற்ற துறைகளின் அறிவைப்போல் அகந்தையை மட்டும் உண்டாக்குமே தவிர முக்தியை கொடுக்காது. எனவே வேதத்தை முறையாக படிக்க ஆரம்பிக்குமுன் தியானம் செய்து மனதில் உள்ள ஓட்டையை அடைக்க வேண்டும். தியானம் என்பது மனதை பண்படுத்தி பரமனை பற்றிய சரியான அறிவை ஏற்றுக்கொள்ள தகுதியான பாத்திரமாக அதை மாற்றும் சாதனம். கர்மயோகம் மூலம் உடலையும் வாக்கையும் பரமனை அடைய தயார் செய்தபின் தியானம் மூலம் மனதை சீர்திருத்திக்கொள்ள வேண்டும். இதுதான் தியானம் செய்வதன் முக்கிய நோக்கம்.

தியானத்தின் தவறான நோக்கம் – 1 : அஷ்ட மகா சித்தி

வெண்டைக்காயை வெட்டுவதற்காக கத்தியை தீட்ட ஆரம்பித்தோம் என்பதை மறந்து விட்டு ஒரே வெட்டில் தலையை துண்டிக்கும் அளவுக்கு தொடர்ந்து கத்தியை தீட்டினால் சமையல் செய்து சாப்பிடுவதற்கு பதில் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்லும் வாய்ப்புதான் அதிகம். தியானம் செய்வது ஆசிரியரிடம் சென்று பரமனை பற்றி படிக்க என்பது தெரியாமல் தொடர்ந்து தியானம் செய்து அணிமா, மகிமா போன்ற அஷ்ட மகா சித்திகளை பெற முயன்றால் உலக பந்தத்தில் கட்டுண்டு இந்த பிறவியில் முக்தி பெறும் வாய்ப்பை தவற விட்டுவிடுவோம். கத்தியை போல மனம் ஒரு ஆயுதம். அதை வேண்டிய அளவுக்கு மேல் கூர்மைப்படுத்த முயல்வது நமக்கு நன்மையை தராது.

தியானத்தின் தவறான நோக்கம் – 2 : அமானுஷ்ய அனுபவங்கள்

கார் ஓட்ட ஆரம்பிக்குமுன் எந்த இடத்தை அடைந்ததும் காரின் வேகத்தை குறைத்து மெள்ள செல்ல ஆரம்பிக்க வேண்டும் என்றும் எப்பொழுது காரை நிறுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளாமல் கார் ஓட்டும் சுகத்தில் ஆழ்ந்து விசைகாட்டும் முள் நூற்றி இருபது கிலோமீட்டருக்கு கீழ் குறையாமல் இருக்கும்படி கார் ஓட்டினால் சேர வேண்டிய இடத்தை தவறவிடுவது மட்டுமல்லாமல்  மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் செல்ல வேண்டி வரும்.

தியானம் செய்யத்துவங்குமுன் மனதை மிகவும் கூர்மைபடுத்தினால் வரக்கூடிய தீமைகளை தெரிந்துகொண்டு அதிகமான தியானபயிற்சியில் ஈடுபடகூடாது. தியானம் செய்யும் பொழுது வினோதமான அனுபவங்கள் ஏற்படலாம். அவை நம்மை வழிதடுமாறச்செய்யும். வாழ்வில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை மறக்க தியானம் ஒரு போதைபொருள் போல மாறி நம் வாழ்வை அழித்துவிடும். எனவே தியான அனுபவங்கள் தற்காலிகமானது என்பதை அறிந்து அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தியானத்தின் தவறான நோக்கம் – 3 : பரமானந்தத்தை அடைவது

தியானம் செய்வதன் மூலம் இறைவனுடன் ஒன்று கலக்க முடியும் அல்லது ஆத்ம அனுபவத்தை பெற முடியும் என்பது போன்றவை தவறான கருத்துக்கள். தியானத்தின் மூலம் நமக்கு எவ்வித புதிய அறிவும் கிடைக்காது. நிச்சயம் தியானம் நமக்கு முக்தியை தராது. வேதத்தை பயில தியானம் ஒரு படிக்கட்டு மட்டுமே.

உழைப்பும் தியானமும்

பணம், பதவி, புகழ் போன்றவற்றில் ஆசைபட்டு அவற்றை அடைய கடுமையாக உழைப்பது ஆன்மீக பயணத்தில் முதல் படிக்கட்டு. இதை செய்யாமல் இரும்பை தங்கமாக்குவது, நினைத்த இடத்துக்கு நினைத்தவுடன் செல்வது போன்ற சக்திகளை தியானம் செய்வதன் மூலம் பெற நினைப்பது தவறு.

மரம் ஏறி மாங்காய் பறிப்பதால் உடல் வலு அதிகமாகும். அப்படியின்றி மந்திரத்தால் மாங்காயை கீழே விழவைத்தால் மாங்காய் மட்டும்தான் கிடைக்கும். அது போல வாழ்வில் முன்னேற்றமடைய உண்மையாக உழைத்தால் மனபக்குவம் கிடைக்கும். தியானம் செய்து பல சக்திகளை பெற்று உலகப்புகழை அடைந்தாலும் வாழ்வில் இன்பத்தை விட துன்பம்தான் அதிகமாகும். மேலும் ஏன் மனதில் குறை இருந்துகொண்டேயிருக்கிறது என்று ஆராயும் மனப்பக்குவமும் இருக்காது.    

முடிவுரை :

முறைப்படி தியானம் செய்யும்பொழுது உடலளவிலும் மனதளவிலும் பல நன்மைகள் நமக்கு ஏற்படும். இந்த நன்மைகளை பெறுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து தியானம் செய்து அதன் உண்மையான நோக்கத்தை அடைய வேண்டும்.

தீவிரமாக தியானம் செய்ய ஆரம்பித்தால் அது நமக்கு பல வினோதமான அனுபவங்களை கொடுக்க ஆரம்பிக்கும். மேலும் தியானம் செய்வதன் மூலம் பல அமானுஷ்ய சக்திகளை பெற முடியும். ஆனால் இவற்றை நாம் தவிர்க்க வேண்டும். எனவே வேண்டிய அளவுக்குமேல் தியானம் செய்யகூடாது.

தியானம் செய்வதன் ஒரே நோக்கம் ஞானயோகம் செய்து பரமனைபற்றிய அறிவைப்பெற மனதை தகுதி படுத்திக்கொள்வதற்காக என்பதை மறக்க கூடாது.   

பயிற்சிக்காக :

1. தியானம் செய்வதன் நோக்கம் என்ன?

2. தியானம் செய்வதனால் கிடைக்கும் பலன்கள் யாவை?

3. தியானம் எந்த மூன்று தவறான நோக்கங்களுடன் செய்ய கூடாது?

4. ஈ – தேனி உதாரணத்தின் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?

5. வடை மாலை உதாரணத்தின் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?

6. தியானம் செய்து பணம், புகழ் போன்றவற்றை சம்பாதிக்க முயல்வதில் என்ன தவறு?

சுயசிந்தனைக்காக :

1. அஷ்டமா சித்திகளை அடைந்தவர்கள் யாரேனும் உலகில் இருக்கிறார்களா?

2. தியானம் சொல்லித்தருவதற்காக பணம் வசூலிக்கலாமா?

3. தியானம் செய்வதன் மூலம் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்ற அறிவும் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும் வந்துவிடுமா?

4.தியானம் செய்பவர்கள் தியானம் செய்யாதவர்களை விட எந்த விதத்தில் சிறந்தவர்கள்?

5. பதஞ்சலி எழுதிய அஷ்டாங்க யோகம் என்ற நூலில் தியானம் பற்றி கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆய்க.

Tuesday, May 4, 2010

Lesson 120: Meditation for reaching Brahman ( பிரம்ம சூத்திரம் 3.3.33 )

பாடம் 120: பரமனை அடைய தியானம்
பாடல் 392 (III.3.33)

பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று “ஓ கார்கி!, பரமனை உணர்ந்த பிராமணர்கள் இந்த நித்தியமானதை நீளமானதுமல்ல குட்டையானதுமல்ல என்று குறிப்பிடுகிறார்கள்” என்கிறது. பிடிபடமுடியாத, அறிந்துகொள்ள முடியாத அதற்கு ஜாதியும் கிடையாது, குடும்பமும் கிடையாது என்று முண்டக உபநிஷதம் கூறுகிறது. இந்த மந்திரங்களின் விளக்கமாக பரமனை அடைய தியானத்தின் பங்கு என்ன என்ற கருத்தை இந்த பாடம் விவரிக்கிறது.

பரமனுக்கு ஜாதிகிடையாது

சூத்திரனும் பரமனே. ஆகவே பரமனை அடைவது என்பதற்கு பரமன் அல்லாதவைகளை நீக்கி பரமனை அறிந்து கொள்வது என்று பொருள். அதனாலேயே பரமனை அறிந்தவர்கள் பரமனாகவே ஆகிவிடுவார்கள் என்று வேதம் கூறுகிறது. சூத்திரனாய் இருப்பவனுக்கு தான் பரமன் என்பது புரியாது. ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களின் கலவை தனிமனிதனின் அறியும் திறனை தீர்மானிக்கிறது. படிப்படியாக வேதம் கூறும் பாதையில் பயணித்து பரமனை அறிந்து கொள்ள தடையாய் இருக்கும் சக்தி மற்றும் ஜட தனிமங்களின் ஆதிக்கத்தை குறைத்து பிராமணனாய் மாறி பரமனை அடைய வேண்டும்.

பரமனுக்கு குடும்பம் கிடையாது

மாணவப்பருவத்தில் பரமனை அறிந்து கொள்ளாமல் இல்வாழ்வை துவங்கியவர்களுக்கு ‘எதனுடனும் சம்பந்தபடாமல் அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவன் நீ’ என்ற கருத்தை வேதம் கூறுகிறது. இந்த உண்மையை புரிந்து கொள்ள முதலில் கர்மயோகம் செய்து மனத்தூய்மையை பெற்று பிறகு தியானம் செய்வதன் மூலம் மனஒருமைப்பாட்டை அடைய வேண்டும்.

வேதம் வகுத்த வழி

இருப்பதை சரியாக உபயோகபடுத்தினால்தான் இல்லாததை பெறமுடியும். எனவே மூன்று தனிமங்களின் இருப்பிற்கு ஏற்றாற்போல் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் தன்மைகேற்றபடி செய்யவேண்டிய செயல்களையும் அவற்றை செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனப்பாங்கையும் (Attitude) வேதம் இங்கு தருகிறது.

சூத்திரர்கள்: இவர்கள் தாங்களாக முயன்று எந்த வேலையையும் செய்யாவிட்டாலும் மற்றவர்களின் தூண்டுதலின் பெயரில் வேலைகள் செய்வார்கள். அவ்வாறு செய்யும்பொழுது இவர்களுக்கு ‘நான் இதை செய்கிறேன்’ என்ற எண்ணமோ இதனால் எனக்கு என்ன நன்மை என்ற ஆராயும் தன்மையோ இருக்காது. இவர்களின் எதிர்பார்ப்பு குறைவாய் இருப்பதால் இறைவன் படியளந்தது இவ்வளவுதான் என்று கிடைப்பதை ஏற்றுக்கொள்வார்கள். தங்கள் வறுமையை பற்றியும் வாழ்வின் மற்ற துன்பங்கள் பற்றியும் இவர்கள் அவ்வளவாக புகார் செய்யமாட்டார்கள்.

பல்வேறு பூஜைகளையும், சடங்குகளையும் செய்யவேண்டும் என்கிற சம்பிரதாய பழக்க வழக்கங்கள்  மூலமாக வேதம் இவர்களை அதிக வேலை செய்ய தூண்டுகிறது. பணம் நிறைய பெற்று செல்வசெழிப்புடன் வாழ இவர்களுக்கு ஆசையை ஏற்படுத்தி அதை அடைய கடவுளுக்கு படைக்க வேண்டிய பொருள்கள் என ஒரு பெரிய பட்டியலை வேதம் கொடுக்கிறது.  கடவுளுக்கு படைப்பதை பிரசாதமாக பெற்று பழக பழக இன்னும் அதிகம் வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு ஏற்படுகிறது. வேதத்தின் கட்டளையை ஏற்று அதன் படி நடக்கும் சூத்திரர்கள் அதிகமாக உழைக்க ஆரம்பித்து அதன் விளைவாக அதிக அறிவையும் வேலை செய்யும் திறனையும் பெற்று கூடிய விரைவில் வைசியனாகிவிடுவார்கள்.

வைசியர்கள்: இவர்களுக்கு ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற எண்ணங்களின் தாக்கம் மிக அதிகம். எனவே இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக உழைக்கும்பொழுது ‘நான் இந்த பயனுக்காக வேலை செய்கிறேன்’ என்று செய்த வேலைக்கு ஏற்ற பலன் கிடைக்கிறதா என்று கணக்கு பார்த்து வேலை செய்வார்கள். தங்களுக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை இவர்களுக்கு ஞாபகபடுத்த செய்த வேலையிலும் கிடைக்கும் பலனிலும் எப்பொழுதும் இவர்களுக்கு திருப்தி ஏற்படாமல் வேதம் பார்த்துக்கொள்ளும். எனவே இவர்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டு தர்ம சிந்தனையுடன் சமூகநல தொண்டுகளை செய்ய ஆரம்பிப்பார்கள்.

சுயநலத்தை விட பொதுநலம் கருதி இவர்கள் உழைக்க ஆரம்பிக்கும் பொழுது இவர்கள் சத்திரியர்களாகிவிடுவார்கள்.

சத்திரியர்கள்: நாட்டின் முன்னேற்றத்திற்கும் உலக ஒற்றுமைக்கும் பாடுபடும் இவர்கள் எவ்வளவுதான் தன்னலமின்றி உழைத்தாலும் தங்கள் உழைப்பு கடலில் கரைத்த பெருங்காயத்தைப்போல் பலனின்றி போவதை பார்க்கும் அதே நேரத்தில் உலகம் தன்னைதானே சரிபடுத்திக்கொண்டு ஒவ்வொரு வீழ்ச்சியிலிருந்தும் எழுந்து முன்னேறுவதை பார்த்து ‘நான் எதையும் செய்பவன் அல்ல. அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லை’ என்ற உண்மையை உணரத்துவங்குவார்கள். அதன் பின் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வேதத்தை பயில ஆரம்பிக்கும்பொழுது இவர்கள் பிராமணர்களாக மாறுவார்கள். வேலை செய்வது மனதை தூய்மைபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் என்ற மனப்பாங்குடன் இவர்கள் பலனை எதிர்பார்க்காமல் தங்கள் முழுத்திறமையை கொடுத்து கர்மயோகமாக அனைத்து வேலைகளையும் செய்வார்கள்.

பிராமணர்கள்: மனத்தூய்மை அடைந்தபின் பரமனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிரத்துடன் தகுந்த ஆசிரியரின் துணையை நாடி தங்கள் வாழ்வின் மிகமுக்கியமான வேலையாக இவர்கள் வேதத்தை படிப்பார்கள். தன் எண்ணம், வாக்கு, செயல் ஆகிய மூன்றையும் பரமரகசியத்தை அறிந்து கொள்வதற்காகவன்றி வேறு எதற்கும் உபயோகபடுத்தமாட்டேன் என்று உறுதிபூணுவதற்காக உபநயனம் என்கிற சடங்கில் பூணூலில் மூன்று முடிச்சிட்டு உடலை கட்டிக்கொள்வார்கள. இந்த தீவிரத்துடன் வேதத்தை படிப்பவர்கள் நிச்சயம் பரமனை வெகு விரைவில் அறிந்து கொள்வார்கள்.

ஞானிகள்:  பரமனை அறிந்து கொண்டபின் வேதம் இவர்களை கட்டுப்படுத்தாது. இவர்களது உடல் தொடர்ந்து மூன்று தனிமங்களின் தாக்கத்தில் செயல்பட்டாலும் இவர்களது அறிவின் தரத்தால் தோன்றும் எண்ணங்களும் செய்யும் செயல்களும் கடவுளின் ஆணைப்படியே அமைந்திருக்கும். சிற்பியின் கையில் இருக்கும் உளியைப்போல கடவுளின் கையில் இருக்கும் கருவியாக மாறி உலகை செதுக்க இவர்கள் தொடர்ந்து உழைப்பார்கள்.

ஜெகசிற்பி

வெறும் கல்லை யாரும் மதிப்பது கிடையாது. ஆனால் கற்சிலை கடவுளாக வழிபடபடுகிறது. கல்லிலிருந்து சிலையை உருவாக்க புதிதாக எந்த பொருளையும் சேர்க்கவேண்டியதில்லை. சிலையல்லாத பகுதியாக தெரிபவைகளை கல்லிலிருந்து நீக்குவதால் கல்லில் ஒளிந்துள்ள சிலை வெளிப்படுகிறது.

சாதாரண மனிதனை பரமனாக மாற்ற புதிய பொருள் எதையும் சேர்க்க வேண்டியதில்லை.  பரமனை அடையாளம் கண்டுகொள்ள ஜெகசிற்பியான இறைவன் படிப்படியாக மனிதனை செதுக்கும் செயல் தொடர்ந்து பூமியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

முடிவுரை :

மனிதனை பரமனாக மாற்ற மூன்று கட்டங்களை வேதம் வகுத்துள்ளது.

முதல் கட்டம்: கர்ம யோகம்

இன்பத்தையும் துன்பத்தையும் உலகம் நமக்கு தருகிறது என்ற அறியாமை இருக்கும் வரை மனிதன் உலகத்தை மாற்ற முயன்றுகொண்டிருப்பான். கர்மயோகம் செய்வதன் மூலம் இந்த அறியாமை நீங்கி மனிதன் மனப்பக்குவம் பெறுவான்.

இரண்டாம் கட்டம்: தியானம்(உபாசன யோகம், ராஜயோகம், அஷ்டாங்க யோகம்)

உடலாலும் வாக்காலும் செய்யவேண்டிய செயல்களை கர்மயோகமாக செய்தபின் மனிதன் தியானம் செய்ய தயாராகிறான். தியானம் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி பரமனை பற்றிய ஞானத்தை பெற மனிதனை தயார் செய்கிறது.

மூன்றாம் கட்டம்: ஞான யோகம்

கர்மயோகம் மற்றும் தியானம் ஆகிய இரு செயல்களையும் முறையாக செய்தபின் தகுந்த ஆசிரியரிடம் சரணடைந்து வேதம் படிப்பதன் மூலம் பரமனை அறிந்து பரமனாகவே மனிதன் கடைசியில் மாறிவிடுகிறான்.

பிரம்ம சூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதியில் இதுவரை கர்மயோகம் பற்றியும் கர்மயோகத்தை சரியாக செய்யத்தேவையான அடிப்படை வசதிகளும் விளக்கபட்டன. இனி இந்த பகுதியில் எஞ்சியுள்ள பாடங்கள் தியானம் செய்வது எப்படி என்றும் தியானம் செய்வதற்கான அடிப்படை தேவைகள் பற்றிய விவரங்களையும் தருகின்றன.   

பயிற்சிக்காக :

1.  பரமனுக்கு ஜாதியில்லை என்ற கருத்தை விளக்குக.

2. பரமனுக்கு குடும்பம் இல்லை என்ற கருத்தை விளக்குக.

3. சமுதாயத்தின் நான்கு பிரிவினர் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

4. செயல்களை செய்யும்பொழுது அவர்களுக்கு இருக்கவேண்டிய மனப்பாங்கு என்ன?

5. மனிதனை பரமனாக மாற்ற வேதம் வகுத்த மூன்று கட்டங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஜெகசிற்பி, ஞானிகள், மக்கள் இந்த மூவருக்கும் உள்ள உறவு என்ன?

2. உபாசனயோகம் கர்மயோகத்தில் அடங்குமா?

3. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல எதற்காக இறைவன் மக்களை முதலில் அறியாமையுடன் படைத்து பின் படிப்படியாக அவர்களுக்கு அறிவை கொடுத்து பரமனாக மாற்ற முயல வேண்டும் ?

4. கர்மயோகத்தை செய்யத்தேவையான அடிப்படை வசதிகள் (infrastructure) என குறிப்பிடப்பட்டவை யாவை?

Sunday, May 2, 2010

Lesson 119: Perfected beings on divine mission ( பிரம்ம சூத்திரம் 3.3.32 )

பாடம் 119: இறைவனின் அவதாரம்
பாடல் 391 (III.3.32)

முக்தியடைந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை என்பது பொதுவான உண்மையென்றாலும் கடவுளின் பிரதிநிதியாக அவர்கள் இந்த பூமியில் அவ்வப்பொழுது அவதரிப்பது உண்டு என்று வேதம் கூறும் கருத்தை இந்த பாடம் விளக்குகிறது.

அவதாரம் என்பது யார்?

ஒருவர் வேறொருவராக தோன்றுவதை அவதாரம் என்றால் மறுபிறவியில் வேறு ஒரு உடலில் தோன்றும் அனைத்து உயிரினங்களையும் அவதாரம் என்று அழைக்க நேரிடும். மனித உருவில் வரும் கடவுள் என்ற பொருள் கூட நம் அனைவருக்கும் பொருந்தும். முக்தியடைந்தபின் மீண்டும் மனிதனாக பிறப்பவர்கள் மட்டுமே அவதாரம் என்ற பெயருக்கு தகுதியானவர்கள்.

பொதுவாக ‘நான் பரமன்’ என்ற அறிவுடன் யாரும் பிறப்பதில்லை. இந்த உலகில் இன்பத்தை தேடி வைசியன், சத்திரியன், பிராமணன் என்று படிப்படியாக உயர்ந்து கடைசியில் வேதம் படித்தபின்தான் ‘நான் பரமன்’ என்கிற  ஞானம் கிடைக்கிறது. இந்த ஞானத்தை பெற்றவர்களுக்கு பொதுவாக மறுபிறவி கிடையாது. ஆனால் வெகு அபூர்வமாக கடவுளின் காரியங்களை பூமியில் நடத்திகொடுக்க இவர்களில் ஒரு சிலர் மறுபிறவி எடுப்பதுண்டு. பிறக்கும்பொழுதே நான் பரமன்என்ற அறிவுடன்  இவர்கள் பிறப்பதால் இவர்களை அவதாரம் என்று அழைக்கிறோம்.

ஒரே சமயத்தில் பல அவதாரங்கள் இந்த பூமியில் நடமாடலாம். இந்த பரந்த உலகின் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு தேசங்களில் உள்ள மக்களை சரியான வழியில் நடத்த பல அவதாரங்கள் தோன்றிக்கொண்டு இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையை அதிகரித்து அனைவரையும் வேதம் கூறிய பாதைக்கு திருப்புவதுதான் இவர்கள் வாழ்வின் முக்கிய நோக்கமாகும்.

அவதாரத்தின் அவசியம்

எப்பொழுதெல்லாம் உலகில் அதர்மம் அதிகமாகிறதோ அப்பொழுது தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியுள்ளான். கடவுள் நம்பிக்கை குறைவாக இருப்பதே அதர்மம் அதிகமாவதற்கு முக்கிய காரணம். எனவே மக்களிடையே கடவுள் நம்பிக்கையை வளர்த்து உலகில் தர்மத்தை தழைத்தோங்கசெய்ய அவதாரங்கள் தேவைப்படுகிறார்கள்.

அவதாரங்களும் கடவுளின் தூதர்களும்

உலகத்தின் போக்கை மாற்றியமைக்க அவதாரங்கள் சாதாரணமாக தேவைப்படுவதில்லை. வேதத்தை தங்கள் தவவலிமையால் கேட்டு வழங்கிய முனிவர்கள், பத்து கட்டளைகளை கடவுளிடமிருந்து பெற்ற மோஸஸ், அல்லாவின் அருள்வாக்கான குரானை வழங்கிய முகம்மது போன்றவர்கள் மூலம் கடவுள் தன் உபதேசங்களை மனிதர்களுக்கு தருவது வழக்கம். மேலும் இந்த உபதேசங்களை சரியாக புரிந்து கொண்டு ஞானத்தை பெற்ற பலர் கடவுளின் தூதர்களாக செயல்பட்டு மக்களை நல்வழியில் நடத்திச்செல்லலாம். ஆனால் கடவுளின் செய்தியை புரிந்து கொள்வதற்கோ ஞானிகளின் உபதேசங்களை கேட்கும் அளவிற்கோ அனைத்து மக்களுக்கும் அறிவுத்திறன் இருப்பதில்லை.

பெரும்பான்மையான மக்களை கவர்ந்து கடவுள் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை பரவலாக ஏற்படுத்தும் சக்தி அவதாரங்களுக்கு மட்டுமே இருப்பதால் ஒரு சில ஞானிகள் அவதாரமாக பிறந்து கடவுளின் பெருமையை நிலைநாட்டுகிறார்கள்.

உதாரணமாக புத்தர், திருவள்ளுவர், விவேகானந்தர், அரவிந்தர் போன்ற ஞானிகள் வெவ்வேறு காலகட்டங்களில்  மக்களை நல்வழிபடுத்த தங்கள் வாழ்வை அர்பணித்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் ஸ்ரீ கிருஷ்ணன், ஏசுநாதர், சாய் பாபா போன்று அதிசயங்கள் செய்து காட்டும் திறமையுள்ள  அவதாரங்களின் தேவையும் அவ்வப்பொழுது ஏற்படுகிறது. கடவுள் யார் என்பதை ஞானிகளின் போதனைகள் மூலம் அறிந்து கொள்வதைவிட கடவுள் இருக்கிறார் என்பதை அவதாரங்களின் மகிமைகளை பார்த்து நம்புவதையே பலரும் விரும்புகிறார்கள்.

அவதாரங்களை அடையாளம் காண்பது எப்படி?

பார்வைக்கு சாதாரண மனிதர்களை போல் தோன்றும் அவதாரங்கள் தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள பொதுவாக செய்யும் செயல்கள்:



1. பிறப்பில் சிறப்பு: பிறப்பைபற்றிய ரகசியம் இவர்களது பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்திருத்தல், அசாதாராண முறையில் கர்ப்பம் தரித்தல், பிறந்தவுடன் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றுவது போன்ற தெய்வீக செயல்கள் நடத்தல் போன்றவை அவதாரங்களின் வருகையை நமக்கு சுட்டிகாட்டும் குறியீடுகள்.

2. விளையும் பயிர் முளையிலே தெரியும்: அவதாரங்களின் சிறுவயதில் அவர்களை அறியாமல் பல அற்புத செயல்களை நடத்தியிருப்பார்கள்.

3. பயிற்சியின்றி சாதனை புரிதல்: முறையான பயிற்சி எதுவும் செய்யாமல் மற்றவர்களால் செய்யமுடியாத பல காரியங்களை இவர்கள் சிரமமின்றி செய்து முடிப்பார்கள்.

4. குருவின்றி ஞானம்: யாரிடமும் சீடனாக சேர்ந்து வேதத்தை பயிலாமல் அதில் உள்ள உண்மைகளை தெளிவாக இவர்கள் அறிந்திருப்பார்கள். வேதத்தை முறைப்படி படித்து முக்தியடைந்த பலர் பெற்ற அதே ஞானத்தை இவர்கள் எவ்வித பிரயத்தனமும் இல்லாமல் பெற்றிருப்பது மட்டுமின்றி மற்றவர்களுக்கு உபதேசம் செய்யும் திறனும் கொண்டிருப்பார்கள்.

5. அதிசயங்கள்: மக்களின் கஷ்டங்களை அமானுஷ்ய முறையில் தீர்த்து வைப்பது, குணபடுத்தமுடியாது என்று வைத்தியர்களால் முடிவுசெய்யப்பட்ட வியாதிகளை குணபடுத்துவது, இறந்தவர்களை மீண்டும் உயிர்பிப்பது போன்ற பல அதிசயங்களை இவர்கள் நிகழ்த்தும் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.


1.     வேதத்தின் ஆழ்ந்த மெய்ப்பொருளை உணர்ந்து அதன் வழியில் மக்களை நடத்திச்செல்வது அவதாரங்களின் மிக முக்கிய கடமை.

அவதாரங்களின் மேல் நம்பிக்கை

ஒருவர் உண்மையிலேயே கடவுளின் அவதாரமா இல்லையா என்பதை பற்றிய விவாதம் அவசியமில்லாதது. உதாரணமாக ஏசுநாதரை கடவுளின் அவதாரமாக ஒரு சிலர் நினைத்தபொழுது பலர் அதை மறுத்து அவரை சிலுவையில் அறைந்தனர். இன்றுவரை ஏசுவை நம்பியவர்கள் ஒரு புறமும் நம்பாதவர்கள் மறுபுறமும் தொடர்ந்து இருந்து வருகிறார்கள்.  

அவதாரத்தின் மகிமை மக்களின் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டது. ஏசுநாதரை நம்புபவர்களுக்கு அவர் அவதாரம். இதுவும் கடவுள் நம்பிக்கையை போன்றதுதான். கடவுள் இருக்கிறார் என்பதை எப்படி யாராலும் நிரூபிக்க முடியாதோ அதேபோல் கடவுள் இல்லை என்பதையும் நிரூபிக்க முடியாது. எனவே ஒருவரை அவதாரம் என்று நம்புவதற்கு மற்றவர்களின் ஆதரவு தேவையில்லை.  அதேபோல் மற்றவர்களது நம்பிக்கையை குலைக்க முயல்வதும் தேவையற்றது.

அறியும் திறன் உள்ளவர்களும் இல்லாதவர்களும்

கடவுள் இருக்கிறாரா இல்லையா, அவர் இருந்தால் எங்கே இருக்கிறார், அவர் எப்படியிருப்பார் என்ற கேள்விகளுக்கு தெளிவான பதிலை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அறியும் திறன் உள்ளவர்களுக்கு அவதாரங்களால் எவ்வித பயனும் இல்லை. ஒருவர் அவதாரமா இல்லையா என்பதை ஆராய வேண்டிய அவசியமோ ஆர்வமோ இவர்களுக்கு கிடையாது. ஏனெனில் தேவைபட்டால் இவர்களுக்கு வழிகாட்ட முக்தியடைந்த ஞானிகள் நிறைய பேர் உலகில் இருக்கிறார்கள்.

இத்தகைய அறிவுத்திறன் இல்லாதவர்களுக்கு ‘கடவுள் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையை மேலும் வலுபடுத்திக்கொள்ள அவதாரங்களின் வருகை அவசியம். ‘கடவுள் இல்லை’ என்பவர்களின் வாழ்வில் ஒரு சில அற்புதங்கள் நிகழ்த்த பட்டால் அவர்களும் அவதாரங்களின் மூலம் கடவுளை தொழ ஆரம்பித்துவிடுவார்கள்.

அவதாரங்களின் இரு மகிமைகள்

அற்புதங்களை நிகழ்த்தும் திறன் மற்றும் பூரண ஞானம் ஆகிய இரு மகிமைகள் பொதுவாக அனைத்து அவதாரங்களுக்கும் இருக்கும். இவ்விரண்டில் பூரண ஞானம்தான்  அவதாரத்தின் அடிப்படை தகுதி. வேதம் கூறும் உண்மைகளை பூரணமாக அறியாதவர்கள் அவதாரங்கள் அல்ல. அற்புதங்களை நிகழ்த்தும் திறன் அவ்வளவு முக்கியமானதல்ல. ஆனால் பொதுமக்கள் அற்புதங்கள் நிகழ்த்தாதவர்களை அவதாரங்கள் என ஏற்றுக்கொள்வதில்லை. உதாரணமாக ஸ்ரீ ராமன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய இருவரும் அவதாரங்கள் என்றாலும் எவ்வித அதிசயங்களும் நிகழ்த்தாமல் சாதாரண மனிதன் போல் வாழ்ந்த ராமனை விட்டு விட்டு கிருஷ்ணனை மட்டுமே அவதாரம் என்று மக்கள் கொண்டாடுகிறார்கள்.

மேலும் அவதாரங்களின் பூரண ஞானம் சாதாரண மக்களின் அறிவுக்கு பிடிபடுவதில்லை என்பதால் அவர்கள் அற்புதத்தை மட்டுமே நாடுகிறார்கள். உதாரணமாக ஏசுநாதர் தினமும் உபதேசங்கள் நடத்தினார். துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னார். ஆனால் அங்கு கூடிய கூட்டம் அவர் எப்பொழுது பேசி முடிப்பார் என்று காத்திருந்து பின் அவர் அருகில் சென்று தங்கள் குறைகளை நிவர்த்திக்க ஆசீர்வாதம் வாங்குவதையே முக்கியமாக கருதினர். ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவரை நாடி அதை உடனடியாக தீர்ப்பதில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வம், வாழ்வில் பிரச்சனைகளே இல்லாமல் என்றும் இன்பமாய் வாழ அவர் கூறிய அறிவுரைகளை புரிந்துகொள்வதில் இல்லை.

ஒருவேளை ஏசுநாதர் அற்புதங்கள் மூலம் மக்களின் குறைகளை நிவர்த்திக்காமல் உபதேசங்களை மட்டும் செய்திருந்தாரேயானால் அவரை மக்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளாமல் சாக்கிரடீஸ் பிளேட்டோ என்பது போன்ற தத்துவவாதிகளின் வரிசையில் சேர்த்திருப்பார்கள்.

மனிதர்களின் வளர்ச்சி

அனைத்து உயிரினங்களும் கடவுளின் அவதாரங்கள்தான். ஆனால் மனிதனுக்கு மட்டும்தான் ‘நான் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு தனிபட்டவன்’ என்ற தன்னுணர்வு (self-awareness) உள்ளது. அனைத்து மனிதர்களுக்கும் தன்னுணர்வு இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு நான் யார் என்ற சரியான தன்னறிவு (self-knowledge) இருப்பதில்லை. மனப்பக்குவமும் அறிவுத்திறனும் உள்ளவர்கள் ஆசிரியரின் துணையுடன் வேதத்தை படித்து இந்த தன்னறிவை பெற்று முக்தியடைவார்கள். அனைத்து உயிரினங்களும் தொடர்ந்து பிறவிகளெடுத்து மனிதனாக அவதரித்து முடிவில் ஞானத்தைபெற்று முக்தியடைவார்கள். முக்தியடைந்தவர்களில் ஒரு சிலர் கடவுளின் ஆணைப்படி மீண்டும் பிறந்து மற்றவர்களின் வளர்ச்சிக்கு துணை செய்வார்கள்.

சாதாரண மனிதர்களும் அவதாரங்களும்

அவதாரங்கள் பாவ புண்ணியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்றவர்கள். எனவே பொதுமக்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிக்க பிறப்பதுபோல் அவதாரங்கள் பிறப்பதில்லை.

அனைத்து மக்களுக்கும் குறையாத இன்பத்தை அடைவதுதான் வாழ்வின் இறுதி குறிக்கோள். இந்த குறிக்கோளை அவதாரங்கள் தங்கள் சென்ற பிறவியிலேயே அடைந்து விட்டாதால் இந்த பிறப்பில் இவர்களுக்கு எவ்வித ஆசையும் கிடையாது.

ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களினால்தான் அவதாரங்களின் உடலும் செய்யபட்டிருக்கும் என்பது உண்மையானாலும் இவர்கள் இந்த மூன்று தனிமங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட மாட்டார்கள்.

முடிவுரை :

ஆண்டவனின் அருள்கட்டளையை நிறைவேற்ற முக்தியடைந்தவர்களில் ஒரு சிலர் மரணத்திற்கு பின் மீண்டும் அவதாரங்களாக பிறந்து உபதேசங்கள் மூலமும் அற்புதங்கள் மூலமும் பொதுமக்களை ஆன்மீக பாதையில் வழிநடத்துகிறார்கள்.

பகுத்தறிவாளர்கள் தங்கள் அறிவை அவதாரங்களின் அற்புதங்களை ஏமாற்று வேலை என்று நிரூபிப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்த்து அவதாரங்களின் உபதேசங்களை ஆராய பயன்படுத்த வேண்டும். அவதாரங்களின் அடியார்களை முட்டாள்கள் என்பதை நிரூபிக்க தங்கள் அறிவை செலவிடுவதால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை. மேலும் அற்புதங்களை மறுப்பதன் மூலம் கடவுளின் மேலும் வேதத்தின் மேலும் நம்பிக்கை குறைவதால் இவர்கள் முக்தியடையும் வாய்ப்பு குறைகிறது. எனவே இவர்களது அறிவு இவர்களுக்கு இன்பமான வாழ்வை பெற்றுத்தர உதவுவதில்லை.

அறிவுத்திறன் குறைவாக உள்ள மக்கள் யார் மந்திரஜாலங்கள் செய்தாலும் அவர்களை கடவுளாக ஏற்றுக்கொள்ளுகிறார்கள். இதில் தவறு ஏதுமில்லை. மேலும் இதுபோன்ற செயல்கள் கடவுள் நம்பிக்கையை அதிகரித்து அவர்களை தர்மத்தின் வழியில் செலுத்துகிறது. யார் மீது நம்பிக்கை என்பது முக்கியமல்ல. நம்பிக்கை என்பதுதான் முக்கியம். மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் மேல் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அவர்களை சரியான பாதையில் செலுத்தி கூடிய விரைவில் அவர்கள் முக்தியடைய வழிவகுக்கும்.

அறிவுடையவர்கள் அவதாரங்களின் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலமும் மற்றவர்கள் அவதாரங்களின் மேலுள்ள நம்பிக்கையினால் தர்மமாக நடப்பதன் மூலமும் இந்த பிறவியிலேயே அனைவருக்கும் முக்தியடையும் வாய்ப்பை வழங்குவதுதான் இறைவன் அவதாரங்களை அனுப்பிவைப்பதன் நோக்கம்.

பயிற்சிக்காக :

1.  அவதாரம் என்பது யார்?

2. அவதாரத்தின் அவசியமென்ன?

3. ஞானிகளால் செய்யமுடியாத செயல் என்ன?

4. அவதாரங்களை அடையாளம் காண்பது எப்படி?

5. மக்களை எந்த இருபிரிவாக பிரிக்கலாம்?

6. அவதாரங்கள் எவ்வாறு மக்களுக்கு உதவுகின்றனர்?




7. சாதாரண மக்களுக்கும் அவதாரங்களுக்கும் உள்ள மூன்று வித்தியாசங்கள் என்ன?


சுயசிந்தனைக்காக :

1. தியானம் செய்வதன் மூலம் அற்புதங்கள் செய்யும் சக்தியை பெற முடியுமா?

2. அவதாரங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களுக்கும் அதிக வட்டி தருவதாக கூறி மக்களை மோசடிசெய்யும் நிதிநிறுவனங்கள நடத்துபவர்களுக்கும் என்ன வேற்றுமை?

3. அஷ்டமஹா சித்தி என்றால் என்ன?

4. அவதாரங்களின் செயல்களுக்கு பாவ புண்ணியங்கள் உண்டா? இருந்தால் அவை யாரைச்சேரும்?