Friday, December 23, 2011

Lesson 164: Remnant of karma does not end on gaining knowledge (Brahmasutra 4.1.15)


பாடம் 164: ப்ராரப்த கர்மம் அழிவதில்லை
பாடல் 492 (IV.1.15)

பலபிறவிகளில் சேர்த்துவைத்த சஞ்சித கர்மபலன்கள் மற்றும் இந்தப்பிறவியில் சேர்க்கும் ஆகாமிகர்மபலன்கள் ஆகிய இரண்டும் ஞானம் பெற்ற மறுகணம் முழுவதும் அழிந்துவிடும் என்று கூறும் வேதம் ப்ராரப்த கர்மபலன்கள் மட்டும் ஞானத்தால் அழியாது என்று கூறுவதன் பொருளை இந்தப்பாடம் ஆராய்கிறது.

ஞானம் பெற்றதும் பாவபுண்ணியங்கள் அழிவதற்கான காரணங்கள் அனைத்தும் ப்ராரப்த கர்மங்களுக்கும் பொருந்தும் என்பதால் அவையும் அழியவேண்டும் என்று தர்க்கத்தின் அடிப்படையில் எதிர்பார்ப்பது தவறு. தர்க்கத்தை அறிவியல் அல்லது வேதம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை சாராமல் தனித்து பயன்படுத்தினால் அதற்கு வறட்டு தர்க்கம் என்று பெயர். வறட்டு தர்க்கத்தால் எதையும் தீர்மானிக்க முடியாது. கர்மபலன்கள் என்ற கருத்து வேதத்தில் மட்டுமே விளக்கப்படுவதால் ப்ராரப்த கர்மம் ஞானம் பெற்றவுடன் அழியாது என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள தர்க்கத்தை உபயோகபடுத்தவேண்டுமே தவிர மறுக்க உபயோகபடுத்தகூடாது.

வில்லிலிருந்து விடுபட்ட அம்பு இலக்கில் பாய்வதை தடுக்க முடியாது. அது போல இவ்வுலகில் மனிதனாக பிறக்க காரணமான ப்ராரப்த கர்மங்கள் பலனை கொடுக்க ஆரம்பித்துவிட்டதால் அவற்றை திடீரென்று அழித்துவிடமுடியாது. எனவே மற்ற மனிதர்களைப்போல ஞானியும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்ற வேதம் தரும் விளக்கம் வாழ்க்கை அனுபவங்களுடன் ஒத்துப்போகிறது. இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள்கூட புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதை நாம் அறிகிறோம்.

ப்ராரப்த கர்மத்தின் பலனாகத்தான் ஒரு ஞானி மனிதனாக பிறந்து வளர்ந்து முடிவில் ஞானத்தை அடைகிறான் என்பதால் ஞானம் சஞ்சித ஆகாமி கர்ம பலன்களை அழிப்பதுபோல ப்ராரப்த கர்மத்தை அழிப்பதில்லை. ஒருவேளை ப்ராரப்த கர்மமும் ஞானம் பெற்றவுடன் மறைந்துவிட்டால் ஞானிகள் தொடர்ந்து உயிரோடிருக்க முடியாது. வேதம் படிப்பது தற்கொலை செய்துகொள்வதுபோல் என்றால் யாரும் ஞானம் பெற முயற்சிக்க மாட்டார்கள். மேலும் ஞானம் பெற்றவர்கள் இல்லையென்றால் ஆசிரியர்களே இருக்கமாட்டார்கள். எனவேதான் ப்ராரப்த கர்மம் ஞானம் பெற்றவுடன் அழிவதில்லை.

ப்ராரப்த கர்மம் என்பது சஞ்சித கர்மங்களின் ஒருபகுதி என்பதால் அதுவும் ஞானம் பெற்றவுடன் அழியத்தான் வேண்டும். ஆனால்  அது ஏற்கனவே பலன்களை கொடுக்க ஆரம்பித்துவிட்ட காரணத்தால் மின்சார இணைப்பை துண்டித்தபின்னும் சிலகாலம் தொடர்ந்து சுழலும் மின்விசிறிபோல சிறிது காலம் செயல்பட்டு பின் முற்றுணர்ந்தோர்களின் மரணத்தில் முழுதும் அழியும். எனவே ஞானத்தால் கர்மம் அனைத்தும் அழியும் என்ற வேதத்தின் கருத்து பொய்ப்பதில்லை.

ஞானியும் மனிதனே

ஞானி என்பவன் தான் யார் என்று அறிந்த ஒரு சாதாரண மனிதன். தொடர்ந்து ஓடும் ஆறு நிலையாக இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். அது போல் மனிதனின் உடலும் மனமும் தொடர்ந்து மாறி ஆரோக்கியமாக இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இந்த இயற்கையான மாற்றத்தின் ஒருபகுதியாக ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று ஆகிய இரண்டும் உடலுக்குள் கலந்து அதை உயிருடன் வைத்திருக்க உதவும் அதே வேளையில் பல்வேறு நோய்கள் ஏற்படவும் அவை காரணமாயிருக்கின்றன. மேலும் செயல்கள் செய்யும்பொழுது ஏதாவது விபத்து ஏற்பட்டு உடல் காயப்படலாம். நோய்கள், விபத்து ஆகியவை தவிர வயதாகும் காரணத்தால் உடலில் இயலாமை ஆகிய துன்பங்கள் மனிதர்கள் அனைவரையும் பாதிக்கும். ஞானிகள் இதற்கு விதிவிலக்கல்ல.

ஐம்புலன்கள் மூலம் உலகைபற்றிய எண்ணங்கள் மனதில் ஏற்படும்பொழுது அவை பல்வேறு வகையான உணர்ச்சிகளாக மாறுவதை தவிர்க்க முடியாது. அன்பும் பாசமும் சிலசமயங்களில் எரிச்சல் அல்லது கோபமாக மாறலாம். இதுபோன்று மனதில் ஏற்படும் துன்பங்களையும் முழுவதுமாக யாராலும் தவிர்க்க முடியாது.

சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள முயல்வதுபோல சரியான அறிவு மற்றும் தியானம் மூலம் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயலலாம். ஆனால் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் வயதாகும் காரணத்தால் நமக்கு முழுவெற்றி கிடைக்காது. புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பழைய கருத்துக்களை உதறித்தள்ளும் சக்தி மனதிற்கு இருக்காது. புதுமையாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற இளமை துடிப்பு வயதானபின் குறைந்து மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படும்.

துன்பங்களுக்கு காரணம்

உடலின் உபாதைகளையும் மனதின் சோகங்களையும் இயற்கையின் மாற்றத்தின் ஒரு பகுதியாக பார்க்காமல் பிரச்சனைகள் என்று கருதி அவற்றை முழுவதுமாக நீக்க நினைத்தால் அந்த முயற்சி தோல்வியில் முடியும். உடல் பருமன் அதிகரித்தல் அல்லது அடிக்கடி கோபம் ஏற்படுதல் என்பது போன்ற மாற்றங்களை தவிர்க்க தேவையான செயல்களை செய்வது தவறு அல்ல. ஆனால் என்றேனும் ஒருநாள் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் வாழ முடியும் என்ற எதிர்பார்ப்பு தவறு.

உடலும் மனமும் மாற்றங்களுக்கு உட்பட்ட மாயை என்றும் மாறாத பரமன் நான் என்றும் அறியாமல் இருப்பதே துன்பங்களுக்கு ஒரே காரணம். இந்த அறிவு ஏற்பட்டதும் பிரச்சனைகளை துன்பம் என்று கருதாமல் இயற்கையின் மாற்றங்கள் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிடும். வெறும் கயிற்றை பார்த்து பாம்பு என பயந்தது குறித்து வெட்கம் ஏற்படுவதுபோல மாற்றங்களை துன்பங்கள் என நினைத்து வாழ்வில் துன்பங்களே இருக்க கூடாது என்று முயற்சி செய்த அனுபவம் நமக்கு வெட்கத்தை ஏற்படுத்தும். மாற்றங்கள்தான் படைப்பின் இயல்பு என்றும் மாற்றங்கள் என்றால் ஏற்ற இறக்கங்கள் என்றும் அறிந்தபின் வேதம் இந்த ஏற்ற இறக்கங்களுக்கு காரணம் ப்ராரப்த கர்மம் என்று கூறும் விளக்கம் நமக்கு அனாவசியம். எனவே ஞானம் பெற்றவுடன்  ப்ராரப்த கர்மபலன்கள் அழிவதில்லை என்றாலும் ப்ராரப்த கர்மம் என்று ஒன்று இருக்கிறது என்ற நினைவே மனதில் இருக்காது. ஞானம் பெறாத மற்றவர்கள் ஞானிக்கும் துன்பம் ஏற்படுவதை சுட்டிக்காட்டி ஞானமே தேவையல்லை என்று வாதாடுவதை தடுப்பதற்காகவே ப்ராரப்தம் என்ற கருத்தை அறிமுகபடுத்தி ஞானிகள் வாழ்வில் ஏற்படும் துன்பமான நிகழ்வுகளுக்கு வேதம் விளக்கம் தருகிறது.

துன்பங்களிலிருந்து விடுதலை

உடலும் மனமும் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை உணர்ந்த ஞானி அவற்றிற்கு ஏற்படும் துன்பங்களை மட்டும் உண்மை என்று கருத வாய்ப்பில்லை. எனவே பற்றுடையோர்களும் முக்திவிழைவோர்களும் மட்டும் துன்பங்களிலிருந்து விடுதலை வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். கனவில் ஏற்படும் பசியை தீர்க்க கனவுலகில் உணவை தேடுவதுபோல உலக துன்பங்களை தீர்க்க ஓடியாடி வேலை செய்வது அனைவருக்கும் பொது என்றாலும் முற்றுணர்ந்தோர் மட்டும் இவற்றை துன்பம் என்று கருதாமல் தேவையான செயல்களை செய்வார்கள்.

செயலும் துன்பமும்

மலைப்பாதையில் பயணம் செய்யும் வாகனம் தொடர்ந்து நகர்வதை பாதையின் சாய்மானத்தைப்பொறுத்து ஏறுகிறது அல்லது இறங்குகிறது என்று குறிப்பிடுவது போல பிரபஞ்சத்தின் தொடர்ந்த மாற்றத்திற்கு காரணகாரியங்களை கற்பித்து மக்கள் இன்பத்தை நாடியும் துன்பத்தை தவிர்க்கவும் செயல்கள் செய்கிறார்கள் என்ற கற்பனை அனைவரது மனதிலும் நிலவுகிறது. ஞானம் பெற்றபின் காரண காரியம் என்பது கற்பனை என்று புரிந்துவிடுவதால் தொடரும் மாற்றங்களுக்கு செயல்கள் என்ற பெயர் வைக்கவேண்டிய அவசியம் ஞானிகளுக்கு இல்லை. உடலே கற்பனை என்பதால் அதில் ஏற்படும் நோயை கற்பனையான மருத்துவம் மூலம் குணபடுத்த ஞானிகள் செய்யும் முயற்சி பொய்யான செயல்களாகும். நோய் குணமடைந்தாலும் ஆகாவிட்டாலும் செயல்கள் தொடரும் என்பதை உணர்ந்த ஞானிகள் துன்பபடுவதில்லை. ஆனால் பற்றுடையோர்களின் பார்வையில் செயல்களும் அவற்றின் பலன்களும் உண்மையாக தெரிவதால் ஞானிகளின் துன்பத்திற்கு ப்ராரப்த கர்மம் காரணம் என்ற விளக்கம் தேவைபடுகிறது.

முக்திவிழைவோர்கள் இல்லாத துன்பத்திலிருந்து முழுவதும் விடுபடுவதில்லை. ஏனெனில் ப்ராரப்த கர்மம் உண்மையென்றும் அதன் பலனை அனுபவிக்காமல் தப்பிக்கமுடியாது என்றும் பலகாலம் நம்பிசெயல்பட்ட காரணத்தால் அவை பொய் என்று தெரிந்தபின்னும் துன்பங்கள் மறைவதில்லை. பல வருடங்கள் தன்னிடம் உழைத்த ஒரு வேலைக்காரனை திருடன் என்று தவறாக குற்றம்சாற்றிவிட்டால் உண்மை தெரிந்ததும் மனதில் ஏற்படும் குற்றவுணர்வை தவிர்க்க முடியாது. உண்மை தெரிவதற்கு எவ்வளவு காலமானது என்பதை பொறுத்து குற்ற உணர்வு மனதில் குடியிருக்கும் காலமும் அதிகமாகும். அதுபோல எவ்வளவு காலம் ப்ராரப்த கர்மம் நம் துன்பங்களுக்கு காரணம் என்று தவறாக நினைத்து கொண்டிருந்தோம் என்பதை பொறுத்து நாம் செயல்கள் எதையும் செய்வதேயில்லை என்ற உண்மை மனதில் நிலைக்க காலமாகும். கயிற்றில் பாம்பை பார்த்து பயந்ததால் ஏற்பட்ட உடல் நடுக்கம் அது கயிறு என்று தெரிந்த மறுகணம் நின்றுவிடுவதில்லை. அது போல ப்ராரப்த காரணம் நமது துன்பங்களுக்கு காரணமல்ல என்று தெரிந்ததும் துன்பங்கள் மறைவதற்கு சிலகாலம் ஆகலாம். போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னும் திடீரென்று பட்டாசு வெடித்தால் துப்பாக்கியால் எதிரி சுடுகிறான் என்ற பயம் மக்களிடையே தொடர்வதுபோல் ஞானம் ஏற்பட்ட பின்னும் ஒருசிலகாலம் உலக மாற்றங்கள் முக்திவிழைவோர்களுக்கு துன்பத்தை தரலாம்.

முடிவுரை :

காண்பது கனவுதானே என்று கண்ணில் பட்ட பெண்மேல் கைவைத்து விட முடியாது. அப்படி கை வைத்தால் அதன் விளைவுகளை சந்திக்க தயாராய் இருக்க வேண்டும். கனவு போலன்றி இவ்வுலக நிகழ்வுகள் அனைத்தும் ஒரு விதிமுறையை பின்பற்றி மனிதன்தான் செயல்கள் செய்து அதன் பலனை அனுபவிக்கிறான் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த பிரபஞ்சம் என்னைச்சார்ந்து இருக்கிறது என்றாலும் எதையும் கட்டுபடுத்தும் சக்தியோ உலக நிகழ்வுகளை மாற்றி அமைக்கும் சக்தியோ எனக்கு கிடையாது. எதனுடனும் சம்பந்தபடாமல் நடக்கும் நாடகத்தை பார்க்க மட்டுமே முடியுமே தவிர என் உடலையும் மனதையும் பயன்படுத்தி நான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தின் செயல்பாடுகளைகூட என்னால் தீர்மானிக்க முடியாது. நான் உருவாக்கிய உலகில் வந்து போகும் பாத்திரங்களில் ஒன்றான என் உடல் உலகிலிருந்து வேறுபட்டு தனிசுதந்திரத்துடன் இயங்குகிறது என்ற தவறான எண்ணம் என் மனதிலிருந்து அகன்றதும் மனதில் தோன்றும் துன்ப உணர்வுகள் என்னை பாதிக்காது என்ற அறிவு ஏற்படும். இந்த அறிவு ஏற்படும் வரை துன்பத்திற்கு காரணம் என்ன என்ற தேடலும் துன்பத்தை அகற்றும் வழி என்ன என்ற தேடலும் எண்ணஓட்டங்களாக மனதை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும்.

என்றும் இருப்பது நான் மட்டும்தான். இடம், காலம், பொருள் ஆகிய மூன்றும் என்னை ஆதாரமாககொண்டு இருப்பதுபோல் தோன்றும் ஒளி-ஒலிகாட்சி. இந்த காட்சியில் தனித்தனி மனிதர்களையும், செயல்களையும் கற்பனை செய்துகொண்டு துன்பபடுபவர்களுக்கு கர்மபலன்கள் என்ற கருத்தை வேதம் உபதேசிக்கிறது. ஞானம் பெற்றபின்னும் ப்ராரப்த கர்மபலன்கள் அழியாது என்பதால் வாழ்வின் ஏற்றஇறக்கங்கள் ஞானியை பாதிக்கும் என்ற கருத்தையும் கூறுகிறது. ஆனால் காண்பவன், காணப்படும் பொருள், காட்சி ஆகிய மூன்றும் ஒன்றுதான் என்றறிந்த முற்றுணர்ந்தோர்கள் எப்பொழுதும் துன்பபடுவதில்லை.


பயிற்சிக்காக :

1. வறட்டு தர்க்கம் என்றால் என்ன?

2. ஞானம் ஏற்பட்டதும் ப்ராரப்த கர்மம் அழியாமல் இருப்பதன் காரணங்கள் யாவை?

3. உடலின் ஆரோக்கிய குறைவுக்கு என்ன காரணம் என்றும் அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்குக.

4. மனதின் ஆரோக்கிய குறைவுக்கு என்ன காரணம் என்றும் அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்குக.

5. துன்பங்களுக்கு காரணம் என்ன?

6. துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?

7. செயலுக்கும் துன்பத்திற்கும் உள்ள உறவு என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஞானிக்கு ப்ராரப்த கர்மம் உண்டா?

2. உலகம் ஒரு ஒளி-ஒலி காட்சி என்ற வேதம் கூறும் உண்மையை அறிவியல் சோதனைகள் நிரூபணம் செய்திருப்பதை ஆராய்க.

3. பாடம் 88ல் கர்மவினைகளை பற்றி கொடுக்கப்பட்ட அறிமுகத்தையும் பாடம் 146ல் உள்ள விளக்கங்களையும் மீண்டும் படிக்கவும்.