Monday, December 12, 2011

Lesson 163: Causeless Happiness (Brahma Sutra 4.1.14)


பாடம் 163: ஆனந்தமாக இருக்க புண்ணியம் அவசியமில்லை
பாடல் 491 (IV.1.14)

ஞானம் பெற்றபின் கர்மபலன்கள் அழிந்துவிடும் என்பதால் பாவங்களின் பலன்கள் மட்டுமின்றி புண்ணியங்களின் பலன்களையும் அனுபவிக்க முடியாது. ஆயினும் முற்றுணர்ந்தோன் தொடர்ந்து ஆனந்தமாக இருப்பதன் காரணத்தை இந்த பாடம் ஆராய்கிறது.

இனிப்புப்பண்டம் வடிவம், வண்ணம், தன்மை, செய்முறை போன்றவற்றின் அடிப்படையில் வேறுபட்டாலும் தித்திக்கும். அதுபோல அறிவு, குணம், செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டாலும் அனைவருக்கும் ஆதாரமான பரமன் ஆனந்தமயமானவன் என்பதால் அனைவரது இயல்பு நிலையும் இன்பமே. எனவேதான் கோபம், எரிச்சல், பயம் போன்ற துன்ப உணர்வுகள் மனதில் ஏற்படும்பொழுது அவற்றை அகற்றி கூடிய விரைவில் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அனைவரும் விரும்புவர்.

ஆழ்ந்த உறக்கத்தில் மனம் ஒடுங்கிய நிலையில் ஆனந்தமாக இருக்கும் நாம் கனவு காண ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றும் எண்ண ஓட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து துன்பப்படுகிறோம். இந்த எண்ண ஓட்டங்களின் தன்மை விழித்தபின் கூட சிறிதும் மாறுபடுவதில்லை. கனவிற்குள் காணும் மற்றொரு கனவுதான் நிஜம்.

நான் என்னும் உணர்வின் அதிர்வுகளை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்டு தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான நம் மனம்  ஆழ்ந்த உறக்கத்தின்பொழுது மட்டும் முழுவதும் அடங்கிவிடுகிறது. எனவே நாம் எண்ணங்கள் ஏதுமின்றி அமைதியாயும் இன்பமாகவும் இடம், பொருள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டு எவ்வித மாற்றமுமின்றி இருக்கிறோம். இன்பம் நமது இயல்பு என்பதால் அப்படியே இருந்துவிடாமல் ஒரு உலகத்தை கனவிலும் நனவிலும் நாம் உற்பத்தி செய்கிறோம். இவ்வாறு உலகை உருவாக்குவது நான் என்பது உருவாக்கப்பட்ட மனதிற்கு தெரியாததால் அது எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று உலகம் முழுவது தேடிதிரிந்து கொண்டு இருக்கிறது. உண்மையை அறிந்து கொள்ளும் பக்குவம் வரும் வரை புண்ணியங்கள் செய்வதனால் அமைதியையும் இன்பத்தையும் அடையலாம் என்று அறிவுறுத்தும் வேதம் ஞானம் ஏற்பட்டவுடன் புண்ணியங்களை அழித்துவிடுகிறது.

துன்பங்களிலிருந்து விடுதலை

பிறருக்கு துன்பம் தரும்வகையில் நம் செயல்கள் அமைந்தால் நம்மால் நிம்மதியாக வாழமுடியாது. யாரையாவது திட்டினால் அவர் வருத்தப்படுகிறாரோ இல்லையோ நாம் வருத்தப்படுவது நிச்சயம். நாம் வருத்தப்படாமல் இருக்க வேண்டுமானால் யார் மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ள கூடாது. அதே போல் மற்றவருக்கு ஒரு உதவியை செய்தால் அதனால் அவருக்கு நன்மை ஏற்படுகிறதோ இல்லையோ நாம் இன்பமடைவது நிச்சயம். எனவே துன்பத்தை தவிர்த்து இன்பமாயிருக்க பாவங்களை தவிர்த்து புண்ணியங்களை செய்ய   வேண்டுமென்று பற்றுடையோருக்கு வேதம் வழிகாட்டுகிறது.

இந்த வழியில் நடந்தபின் கூட முழுவதுமாக துன்பத்தை தவிர்க்க முடியவில்லை என்ற நிலையில் செய்த புண்ணியங்களின் பலனாக மரணத்திற்குப்பின் சுவர்க்கம் போன்ற உயர்லோகங்களில் பிறவியெடுக்கலாம் என்ற நம்பிக்கையை வேதம் வளர்க்கிறது. தேவையான மனப்பக்குவம் ஏற்பட்டபின் பற்றுடையோர்கள் இது போன்ற உலகங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பி வேதம் படிக்கும்பொழுது  முக்திவிழைவோர்களாக மாறுவார்கள்.

அதன்பின் தன் மனம் உடல் உட்பட்ட இந்த உலகமே உண்மையில் இல்லை என்ற அறிந்தபின் செய்த பாவபுண்ணியங்களிலிருந்து முழுவதுமாக விடுதலை பெற்று நிம்மதியாக வாழ்வார்கள்.

நம் செயல்களுக்கு காரணம்

ஒரு சிலர் புன்முறுவலுடன் மற்றவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்யும் சுபாவம் உள்ளவர்களாகவும் வேறு சிலர் இயற்கையிலேயே சிடுமூஞ்சியாக எது செய்தாலும் மற்றவர்களுக்கு துன்பம் தரும் வகையில் நடந்துகொள்வதற்கும் ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகியவற்றின் கலப்பு விகிதம்தான் காரணம் என்று வேதம் விளக்கம் தருகிறது.  கடிப்பதற்கு கடினமாக இருக்கும் மைசூர்பாக்கு ஏன் குலோப்ஜாமூனை போல மென்மையாக இல்லை என்று கேள்விகேட்பதில் பயனில்லை. சர்க்கரையை அப்படியே சாப்பிடாமல் அதனுடன் வெவ்வேறு பொருள்களை கலந்து பல்வேறு இனிப்பு பண்டங்களாக மாற்றி அதன்பின் உண்பது போல அடிப்படையில் ஆனந்த மயமான பரமன் தனிமங்களின் மாற்றத்திற்கேற்ப பாவபுண்ணியங்கள் இரண்டையும் செய்யும்படியான உயிரினங்களாக உருமாறியுள்ளது.

எவ்வித வேறுபாடும் இல்லாமல் இயந்திரம் போல் மனிதர்கள் இயங்கி அதர்மத்தை தவிர்த்து தர்மமாக வாழ வேண்டும் என்பது படைப்பின் நோக்கம் அல்ல. மனிதருக்கு மனிதர் மாறுபடுவது மட்டுமின்றி ஒவ்வொரு மனிதனும் காலையில் ஒரு மாதிரியும் மாலையில் வேறுமாதிரியும் செயல்படும் வகையில்தான் ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய தனிமங்களின் கலவைவிகிதம் மாறுபடுகிறது. இந்த மாற்றம் ஏற்படுத்தும் இன்ப துன்பங்கள் மனிதனை நான் ஏன் துன்பபடுகிறேன் என்ற சுய ஆராய்ச்சியில் ஈடுபடவைக்கிறது.

தானியிங்கி வாகனத்தில் அமர்ந்து எவ்வித வேலையும் செய்யாமல் பயணம் செல்வது வாழ்க்கையின் நோக்கமல்ல. சாலையில் செல்லும் வாகனங்களை கவனித்து தகுந்த வேகத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்லும் பொறுப்பு இருக்கும் ஓட்டுனர் போல வாழ்வில் சந்திக்கும் மற்ற மனிதர்கள் வெவ்வேறு விதத்தில் செயல்பட்டாலும் அவர்களுடன் சரியாக உறவாடும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. எல்லோரும் நல்லவராக இருந்துவிட்டால் யாராலும் தான் யார் என்ற அறிவைப்பெற முடியாது. மற்றவர்கள் முறைதவறி நடந்தாலும் தன்னை கட்டுபடுத்தி சரியாக அவர்களுடன் உறவாட வைக்கும் முயற்சி நமது மனதை பக்குவபடுத்தி உண்மையை அறிந்துகொள்ளும் நிலைக்கு உயர்த்தும்.

காரணகாரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதனுக்கு அவன் செய்யும் செயல்களின் பலன் அவன் எதிர்பார்த்ததுபோல் இருக்காது என்பதை உணர்த்தவே பாவபுண்ணியங்களின் பலன் எப்பொழுது ஒருவனை வந்துசேரும் என்பதை மனிதன் புரிந்துகொள்ளவே முடியாது என்று வேதம் கூறுகிறது. எனவே இந்தப்பலனை பெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்கள் செய்ய ஆரம்பித்தாலும் செயல்களை செய்யும்பொழுது பலனைப்பற்றிய எதிர்பார்ப்பை தியாகம் செய்யவேண்டும் என்று வேதம் வலியுறுத்துகிறது. இதன்படி நடப்பவர்கள் கூடியவிரைவில் காரணகாரியம் என்பதே தோற்றப்பிழை என்று அறிந்து கொள்வார்கள். செயலுக்கும் பலனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிந்த பின் செயல் செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் செயல் செய்யாமல் இருக்க முடிவதில்லை என்பதை உணரும்பொழுது செயல் மற்றும் பலன் ஆகிய இரண்டும் நமது கற்பனை என்று தெரியவரும். எனவே ஆனந்தமயமானவன் நான் என்று அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நாம் விழித்துக்கொண்டபிறகு நான் அனைத்து செயல்களுக்கும் பலன்களுக்கும் ஆதாரமானவன் என்ற அறிவுடன் செயல்படுவதால் துன்பங்கள் முழுவதும் அழிந்துவிடும்.

விருப்பு வெறுப்புகள்

நாம் எந்த செயலையும் செய்பவன் அல்ல என்ற அறிவு ஏற்பட்டபின் நமது விருப்பு வெறுப்புகள் மறைந்துவிடாது. ஒவ்வொரு மனிதனையும் செய்ய உபயோகித்த மூன்று தனிமங்களின் விகிதத்திற்கு ஏற்ப செயல்பாடுகளும் அதனால் ஏற்படும் விருப்பு வெறுப்புகளும் மாறுபடும். விருப்பு வெறுப்புகள் ஆசைகளாக மாறி நமது செயல்களுக்கு காரணமாய் அமைவது ஞானம் ஏற்பட்டபின்கூட தொடரும். ஏனெனில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களில் காரணகாரியம் இருப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இல்லாத உலகை இருப்பதாக மனித மனங்களை நம்பவைக்க முடியும்.

உலக இயக்கம் என்ற ஒளிகாட்சிக்கு ஒத்துபோவதுபோல் நமது மனதில் ஒலிகாட்சி நடந்தால்தான் வாழ்வு சுவையாயிருக்கும். கதைபுத்தகத்தில் உள்ள பக்கங்களை முன்பின் மாற்றிவைத்து படித்தால் ஒன்றும் புரியாது. எனவேதான் செயல்கள், விருப்புவெறுப்புகள், ஆசைகள், மீண்டும் செயல்கள் என தர்க்கத்திற்கு பொருந்தி வரும் ஒரு காரணகாரியத்தை சித்தரிப்பதன் மூலம் இல்லாத உலகத்தை இருக்கிறது என்று மாயை நம்மை நம்பவைக்கிறது.

உலகம் ஒரு மாயை என்ற அறிவு ஏற்பட்டபின் நமது விருப்புவெறுப்புகள், ஆசைகள் மற்றும் செயல்கள் வேறுமாதிரி இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு நமக்கு இருக்காது. ஆசைகள் நிறைவேறாவிட்டால் மனதில் எவ்வித துன்பமும் ஏற்படாது. எனவே முற்றுணர்ந்தோர்களின் மனதில் தோன்றும் விருப்பு வெறுப்புகள் அவர்களுக்கு துன்பத்தை கொடுப்பதில்லை.

ஆசைகள்

ஆசை நிறைவேறினால்தான் இன்பம் என்ற கட்டாயம் இருந்தால்தான் மனிதன் மற்றவர்களை துன்புறுத்தும் செயல்களை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இல்லாத காரணகாரியத்தை இருப்பதாக நம்பவைக்க மனதில் தோன்றும் எண்ண ஒலிதான் ஆசை என்றுணர்ந்தவர்களின் செயல்கள் மற்றவர்களை துன்புறுத்தாது. ஆனந்தம் மனிதனின் இயல்பு என்பதால் ஆசைகளை நிறைவேற தன் இயல்புக்கு மாறாக செயல்பட வேண்டிய அவசியம் முற்றுணர்ந்தோர்களுக்கு இருக்காது. ஆசைகளின் தோற்றம், அவை நிறைவேற செய்யும் செயல்கள் மற்றும் செயல்களின் பலன்கள் ஆகிய அனைத்தையும் அவர்கள் ஆனந்தமாக அனுபவிப்பார்கள்.

நம் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டுபார்த்தால் ஆசைகள் பற்றிய ஒரு முக்கியமான உண்மை நமக்கு தெரியவரும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு தோன்றிய பற்பல ஆசைகளில் சில நிறைவேறியிருந்தாலும் முடிவில் நாம் பூரணதிருப்தியை அடைந்ததே இல்லை. எனவே ஒரு ஆசை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் நமது மனநிலையில் எஞ்சியிருப்பது அதிருப்தி மட்டுமே. ஆசை நிறைவேறிய சிறிது காலத்திற்குள் மற்றொரு ஆசை அந்த இடத்தில் அமர்ந்து நம்மை ஆட்டிவைக்கிறது. நம் மனதில் ஆசை ஏற்படுவதையோ அதை நிறைவேற நாம் செய்யும் செயல்களையோ தவிர்க்க முடியாது. ஆனால் ஆசை நிறைவேறினால் நிலைத்து நிற்கும் அமைதிகிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறு என்பது நமது அனுபவத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். எனவே பலன் மீது கவனம் செலுத்தாமல் செயல் செய்தால் எப்பொழுதும் இன்பமாக இருக்கலாம்.

மனதில் ஏற்படும் ஆசை, அது நிறைவேற செய்யும் செயல், செயல்களின் பலன் ஆகிய அனைத்தும் நமது வசமின்றி தானே நிகழும் மாற்றங்களின் ஒரு பகுதி என்பதை அறிந்தவர்கள் எப்பொழுதும் குறையாத இன்பத்துடன் வாழ்வார்கள். இந்த சுழற்சியை புரிந்துகொள்ளாதவர்கள் தங்கள் ஆசையை நிறைவேற்ற செய்யும் செயல்கள் அந்த ஆசையை மேலும் வளர்த்து முடிவில்லா பிறப்பு இறப்பு என்ற சுழலில் மாட்டிக்கொண்டு துன்பத்திலிருந்து மீளும் வழியை அறியமாட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே ஆசைகளை நிறைவேற்ற செயல் செய்வதைவிட எதற்காக இந்த சுழலில் அகப்பட்டு திணறுகிறோம் என்ற அறிவை அடைவது மிக முக்கியம். நான் உருவாக்கிய மாயதோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களில் மனதில் ஏற்படும் ஆசைகளும் ஒரு பகுதி என்ற அறிவு இந்த சுழலிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கும்.

பிறவிச்சக்கரம்

பிறத்தல், வளர்தல் மற்றும் மடிதல் என்று வாழ்க்கை முடிவில்லாமல் சுழலும் என்ற உண்மையை விழித்தல், எண்ணங்களுடன் இருத்தல் மற்றும் தூங்குதல் என்ற தினசரி அனுபவம் நமக்கு விளக்குகிறது. விழித்திருக்கும்பொழுது இருக்கும் உலகம் ஆழ்ந்த உறக்கத்தில் மறைந்துவிட்டாலும் நான் தொடர்ந்து இருக்கிறேன் என்ற உண்மை மடிந்தபின் கூட மாறாது. எனெனில் என்றும் மாறாமல் இருக்கும் நான் வெவ்வேறு உயிரினங்களாக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருப்பேன். தனிமனிதன் இருக்கிறான் என்பதே கற்பனையென்பதால் மரணமும் கற்பனையே.

கையில் உள்ள விரல்கள் ஒவ்வொன்றும் தான் தனிப்பட்டவன் என்று தவறாக எண்ணுவது போல ஒவ்வொரு மனிதனும் தான் தனியானவன் என்று கருதுவதால் மரணபயம் அனைவருக்கும் இருக்கிறது. மனதில் தோன்றும் எண்ணங்கள் பத்து விரல்களின் இயக்கத்தை தீர்மானிக்கின்றன என்பது தவறான அறிவு. அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமான என் மாயா சக்தியின் நடனத்தில் சிறுவிரலின் அசைவும் ஒரு அங்கம்.

சிறுவயதில் இருந்த உடல் மறைந்து வயோதிக உடலை அடைந்தபின்னும் நான் மாறுவதில்லை என்ற உண்மை மரணத்திற்குபின் மனம் மறைந்துவிடுவதால் மாறிவிடாது. பல்வேறு உயிரினங்களின் இயக்கமாக நான் தொடர்ந்து இருப்பேன்.

பிறப்பும் இறப்பும்

கடலில் கலக்கவேண்டும் என்ற ஆவலுடன் பல்வேறு ஆறுகள் பயணம் செய்து முடிவில் கடலில் கலந்தபின் தங்கள் பெயர்களையும் தனியான நதிகள் என்ற வடிவங்களையும் இழந்து கடல் என்று அழைக்கப்படுவது போல முக்தியடைய வேண்டும் என்ற ஆவலுடன் பரமனை நோக்கி பயணிக்கும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் முடிவில் தங்கள் தனிப்பட்ட பெயரையும் வடிவத்தையும் இழந்து பரமன் என்ற பெயரினால் மட்டுமே அழைக்கப்படுகின்றன என்று பிரஸ்ன உபநிஷத் மந்திரம் ஒன்று (6.5) பிறப்பு இறப்பு பற்றிய உண்மையை விளக்குகிறது.

ஆறு என்பது ஒரு குறிப்பிட்ட நீள அகலங்களோடு ஓடும் நீர். மனிதன் என்பவன் ஒரு குறிப்பிட்ட வடிவமுடன் சிலகாலம் வாழும் பரமன். கடலிலிருந்து தோன்றி மழை, நீரூற்று, உபநதி, ஆறு என்று பல பெயர்களைபெற்று முடிவில் கடலில் கலப்பதால் அழிவது நீர் அல்ல. வெறும் பெயர்கள் மட்டும் மாறுகின்றனவே தவிர மறைதல் என்பது நீருக்கு கிடையாது. அதுபோல பரமனிடமிருந்து தோன்றி பாலகன், குமாரன், வாலிபன், வயோதிகன் என பெயர்களில் மாற்றமேற்படுகிறதே தவிர மரணம் என்பது பரமனுக்கு கிடையாது.

தான் நீர் என்பதை உணராமல் ஆறு என்று நினைக்கும்வரைதான் தான் சிறியவன் அற்பமானவன் என்பதுபோன்ற வருத்தங்கள் இருக்கும். அது போல தான் பரமன் என்று உணராமல் மனிதன் என்று நினைக்கும்வரைதான் மரணபயம், தாழ்வு மனப்பான்மை, கவலை, தனிமை போன்ற துயரங்கள் மனதை வருத்தும். உண்மையை உணர்ந்தபின் நான் நிரந்தரமானவன் என்ற நிம்மதி பிறக்கும்.  

ஆறு தொடர்ந்து கடலில் கலந்தாலும் அதற்கு மரணம் என்பதில்லை. அதுபோல உயிரினங்கள் தொடர்ந்து மடிந்தாலும் அவை நிரந்தரமானவை. ஆறு முழுவதும் வற்றிவிட்டாலும் மறுபடி மழையால் உருவாக்கப்படும். பிரளயத்தில் அனைத்து உயிரினங்களும் அழிந்துவிட்டாலும் மாயாசக்தியால் அவை மறுபடியும் உயிர்ப்பிக்கப்படும்.

வாழ்க்கைச்சக்கரம்

வண்டிச்சக்கரத்தின் விளிம்பு தொடர்ந்து சுழல்வதுபோல வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் சக்கரத்தின் ஆதாரமான அச்சு அசையாமல் இருப்பதுபோல எல்லா மாற்றங்களுக்கும் ஆதாரமான நான் மாற்றமடைவதில்லை. சுழற்சிக்கு ஆதாரமான சக்கரத்தின் ஆரங்கள் போல கர்மபலன், மறுபிறவி போன்ற நியதிகள் வாழ்க்கை சக்கரத்தை சுழற்ற உதவுகின்றன. மாற்றங்களை மட்டும் கவனிப்பவர்களுக்கு இந்த நியதிகள் உண்மையானவை. மாற்றங்கள் மற்றும் மாறாத பரமன் ஆகிய இரண்டையும் கவனிக்கும் முக்திவிழைவோர்கள் மாறும் உலகம் மாறாத பரமனின் வெளிப்பாடு என்பதை உணர்ந்ததும் முற்றுணர்ந்தோர்களாகிறார்கள். இவர்களது வாழ்க்கைச்சக்கரம் முன்போல சுழன்றுகொண்டிருந்தாலும் நிலையானவன் நான் என்ற அறிவு நிரந்தர அமைதியையும் குன்றாத இன்பத்தையும் தரும். எனவே இன்பத்துக்கு புண்ணியம் காரணம் என்ற விளக்கம் இவர்களுக்கு அவசியமில்லை.

காரணமில்லா இன்பம்

வாழ்வின் ஏற்ற இறக்கங்களுக்கு பாவபுண்ணியங்கள் காரணம் என்ற விளக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களின் வாழ்வில் இன்பதுன்பங்கள் மாறிமாறி ஏற்படும். காரண காரியம் என்ற விளக்கம் அனாவசியம் என்றுணர்ந்தபின் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இன்பம் மாறாது. இந்த பரந்த பிரபஞ்சத்தில் வாழும் அற்பமான மனிதன் நான் என்ற தவறான அறிவு மறைந்து இந்தப்பிரபஞ்சத்தை உருவாக்கி அதன் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பவன் நான் என்ற உண்மை தெரிந்தபின் நம் இயல்பான இன்பத்தை பாதிக்கும் சக்தி நமது மனதிற்கு இருக்காது.

மரணபயம் நீங்கிவிட்டால் மற்றபயங்கள் மறைந்துவிடும். அனைத்து மனிதர்களும் நான் என்று அறிவதால் தனிமை இருக்காது. செயல்கள் எதையும் செய்வதைல்லை என்பதால் குற்ற உணர்வு ஏற்படாது. எனவே புண்ணியங்கள் முழுவதும் அழிந்து விட்டாலும் இன்பமாக இருப்பதில் எவ்வித மாற்றமும் இருக்காது.

முடிவுரை :

இன்பம் உலகில் இருக்கிறது என்ற தவறான அறிவுடன் செயல்படும்வரைதான் புண்ணியங்கள் நமது இன்பத்திற்கு காரணம் என்ற நம்பிக்கை அவசியம். உலக இயக்கத்திலிருந்து தனிப்பட்டவன் நான் என்ற எண்ணம் மறைந்ததும் எவ்வித காரணமும் இல்லாமல் இன்பமாயிருக்கலாம். இன்பம் நமது இயல்பு என்பதால் அதை அனுபவிக்க தடைகள் எதுவும் இருக்கமுடியாது.

ஒரு விபத்தில் நம் வீடு முழுவதும் எரிந்துவிட்டால் நாம் செய்த பாவம்தான் இதற்கு காரணமென்றும் விபத்தில் உயிரழக்காமல் தப்பித்ததற்கு புண்ணியம் காரணம் என்றும் நினைப்பவன் முக்திவிழைவோன். பக்கத்துவீட்டுக்காரன்தான் தீ வைத்து விட்டான் என்று எண்ணி பழிவாங்க திட்டமிடுபவன் பற்றுடையோன். இது உண்மையாக இருந்தால் கூட தீவைத்தவனும் என் கற்பனையால் என்னை ஆதாரமாக கொண்டு உருவானவன் என்றறிந்த முற்றுணர்ந்தோன் எவ்வித கவலையுமின்றி வாழ்வின் ஏற்ற இறக்கங்களை இன்பத்துடன் அனுபவிப்பான்.

இன்பமாக இருக்க இதுவேண்டும் என்ற ஆசை எதுவுமில்லாததால் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், கவலை, கோபம், போட்டி, பொறாமை, பேராசை, பயம், கருமித்தனம், கெட்ட எண்ணம் போன்ற துன்பம் தரும் உணர்ச்சிகள் எதற்கும் ஆட்படாமல் எல்லோருடனும் அன்பாகவும் கருணையுடனும் இவர்களால் பழகமுடியும்.

ஓட்டப்பந்தயத்தின் துவக்கத்திலிருந்தே எல்லோர் கையிலும் வெற்றிக்கோப்பை இருக்கிறது என்பதையறியாமல் சகவீரர்கள் மேல் காழ்ப்புணர்ச்சியுடன் சிரமபட்டு ஓடுபவர்களை பார்த்து ஏளனமாக சிரிக்காமல் அவர்கள் மேல் பரிதாபத்துடன் அவர்கள் தேடி ஓடும் இன்பத்தின் உண்மை இருப்பிடத்தை அவர்களுக்கு கற்று கொடுக்கும் ஆவலுடன் இருப்பவர்கள் முற்றுணர்ந்தோர்கள். இலக்கை நோக்கி ஓடும் அவசியமில்லாமல் மற்றவர்களுடன் அவர்களுடைய வேகத்தில் ஓடுவது போன்ற தோற்றத்தை தரும் முற்றுணர்ந்தோர்கள் ஏற்கனவே தாங்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் என்பதை அறிந்தவர்கள் என்பதால் மற்றவர்களுக்கு உண்மையை உணர்த்த முடியவில்லை என்றாலும் வருத்தப்பட மாட்டார்கள். இல்லாத உலகை இருப்பதுபோல் இவ்வளவு தத்ரூபமாக சித்தரித்திருக்கும் தனது மாயா சக்தியின் திறனை நினைத்து வியந்து வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தமாய் கழிப்பார்கள்.

பயிற்சிக்காக :

1. இன்பம் நம் இயல்பு நிலை என்பதை நிரூபிக்கவும்.

2. துன்பங்களிலிருந்து விடுதலை பெற வேதம் காட்டும் எளிமையான வழி என்ன?

3. மனிதனின் செயல்கள் வேறுபடுவதற்கு காரணம் என்ன?

4. நமது ஆசை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் முடிவு ஒன்றுதான் என்பது உண்மையா?

5. ஆறு-கடல் உவமானத்தின் மூலம் வேதம் கூறும் கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. கனவிற்கும் நனவிற்கும் உள்ள வித்தியாசங்கள் நமது இன்பதுன்பங்களை நிர்ணயம் செய்யும் சக்தி உள்ளவையா?

2. முற்றுணர்ந்தோர்கள் செய்யும் பாவபுண்ணியங்களின் பலன் யாருக்கும் கிடைக்காதா?

3. இல்லாத உலகம் இருப்பதுபோல் தோன்றுகிறது என்பது வேதத்தின் கற்பனையா அல்லது அறிவியல் நிரூபணத்துடன் கூடிய உண்மையா?