Friday, September 23, 2011

Lesson 156: Three types of meditation (Brahmasutram 4.1.4)


பாடம் 156: மூன்று வகை தியானங்கள்
பாடல் 481 (IV.1.4)

மனம்தான் பரமன் என்று சாந்தோக்கிய உபநிஷத் மந்திரம் (3.18.1) கூறுவதால் நான் மனம் என்று தியானம் செய்யவேண்டும் என்று நினைப்பது தவறு என்ற கருத்தை விளக்கும் வகையில் மூன்று வகை தியானங்களை விவரித்து இவ்வகை தியானங்களை செய்பவன் அடையும் பலன்களையும் இந்தப்பாடம் கூறுகிறது.

உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் அனைத்து செயல்பாடுகளும் படிப்படியாக மக்களின் மனதைப்பண்படுத்தி யாரும் எவ்வித செயலையும் செய்வதில்லை என்ற உண்மையையும் இருப்பது பரமன் மட்டும்தான் என்ற உண்மையையும் மக்களுக்கு உணர்த்தி அனைவரையும் துன்பத்திலிருந்து முழுமையாக விடுவிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆரம்பகட்டத்தில் இதற்காகத்தான் செயல்களை செய்கிறோம் என்று உணராமல் மக்கள் பற்றுடையோர்களாக இருந்தாலும் நாளடைவில் மெதுவாக உண்மை புரிபட முக்திவிழைவோர்களாக மாறி வேதம் படித்து முழு அறிவையும் பெற்று முற்றுணர்ந்தோர்களாகி முக்தியடைகிறார்கள்.

தியானம் என்ற பெயரில் ஓரிடத்தில் அமர்ந்து பயிற்சி செய்யாவிடினும் மனதில் ஓடும் எண்ணங்களின் அடிப்படையில் அனைவரும் எப்பொழுதும் தியானம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறலாம். படிப்பில் நாட்டமுள்ள பள்ளி மாணவர்கள் பண்டிகைகளை கொண்டாடும் பொழுதும் பரிட்சையில் நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும் என்ற கலையாத கவனத்துடன் இருப்பதும் ஒரு தியானம்தான். அதுபோல் பதவி உயர்வு அல்லது வியாபரத்தில் அதிக லாபம் என்பது போன்ற குறிக்கோள்களில் மனதை குவித்து வேலை செய்வதும் தியானம்தான். எதில் தியானம் செய்கிறார்கள் என்பது அவரவர்களின் அறிவை பொறுத்து மாறும். நிரந்தர அமைதியும் குறையாத இன்பமும்தான் அனைவரது இறுதி குறிக்கோள் என்றாலும் பணம் அதைத்தரும் என்ற நம்பிக்கையில் வேலை செய்வதும் நல்ல வேலை கிடைக்க படிக்க வேண்டும் என்ற நினைப்பில் படிப்பதும் இதுபோன்ற தியானங்களுக்கு காரணம்.

தியானங்களை பற்றுடையோர்கள் செய்யும் இருமை தியானம், முக்தி விழைவோர்கள் செய்யும் ஒருமை தியானம் மற்றும் முற்றுணர்ந்தோர்கள் செய்யும் இரண்டற்ற தியானம் என்று மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

இருமை தியானம்

நான் வேறு நான் இன்பமாயிருக்க அடையவேண்டிய பொருள்கள் வேறு என்ற அறிவுடன் படிப்பு, நல்ல வேலை, பணம், குடும்பம் என படிப்படியாக வெவ்வேறு பொருள்களை நாடி அவை கிடைக்க தன்னிடமிறுந்து வேறுபட்ட கடவுளை பிரார்த்திக்கும் பற்றுள்ளோர்கள் செய்வது இருமை தியானம்.

இருமை தியானத்தின் ஒரே பலன் தான் வேண்டுவது உலகத்திலிருந்து தனக்கு கிடைக்காது என்ற மனப்பக்குவம். தொடர்ந்து வெவ்வேறு பொருள்களை நாடி அவை கிடைத்தபின்னும் மனம் நிம்மதியடையாமல் மேலும் இருமை தியானத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்ற உண்மை புலப்பட்டதும் பற்றுடையோர்கள் வேதம் படிக்க ஆரம்பித்து முக்திவிழைவோர்களாக மாறுகிறார்கள். எனவே ஒருமை தியானம் செய்ய தேவையான முதல் படிக்கட்டு இருமை தியானம் ஆகும். அதன் பின் இரண்டற்ற தியானம் செய்து முற்றுணர்ந்தோர்களாக மாறுவார்கள். இந்தப்பயணத்தை மக்களுக்கு இருக்கும் அறிவின் அடிப்படையில் நான்கு கட்டங்களாக பிரிக்கலாம்.

முதல் கட்டம்: மாறும் உலகில் மாறாத பரமன் இல்லை

காணும் உலகம் முழுதும் தொடர்ந்து மாறுகிறது. மாற்றமடையாத எதையும் நாம் அறிவதில்லை. அனைத்து உயிரினங்களும் பிறந்து, வளர்ந்து முடிவில் மரணம் அடைவதால்  என்றும் இருக்கும் ஒருபொருள் என்று எதுவும் இருக்க முடியாது. இது போன்ற அறிவுடன் இருக்கும் வரை என்றும் மாறாமல் நிலையாக இருக்கும் பரமன் இருக்கிறான் என்று வேதம் கூறும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மக்களுக்கு வருவதில்லை.

இரண்டாம் கட்டம்: பரமன் ஒருவன் இருக்கலாம்

உலகில் இருந்து இன்பம் கிடைக்கும் என்று தீவிரமாக இருமை தியானம் செய்த பின்னும் பலன் கிடைக்காததால் வேறு வழியின்றி வேதம் படிக்க ஆரம்பித்தவுடன் மாறாத பரமன் இருப்பது சாத்தியம் என்ற எண்ணம் மக்களுக்கு தோன்றுகிறது.

இவ்விருகட்டங்களை தாண்டும் வரை மக்களின் தியானம் இருமை தியானமாகவே அமையும். வேதம் கூறும் கருத்துக்களை கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் தேவையான மனப்பக்குவம் எற்பட்டபின் இருமைதியானம் குறையத்துவங்கும்.

மூன்றாம் கட்டம்: பரமன் நிச்சயமாக இருக்கிறான்

வேதங்களை முறைப்படி பலகாலம் தொடர்ந்து இடைவிடாமல் தகுந்த ஆசிரியரின் அருளுடன் படித்ததன் பயனாக மாறாத பரமன் ஒருவன் நிலையாக இருக்கிறான் என்ற அறிவு ஏற்பட்டபின் மக்கள் ஒருமை தியானம் செய்யத்துவங்குவர்.

நான்காம் கட்டம்: நான் பரமன்

எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் என்றும் நிலையாக இருக்கும் பரமன் நான் என்ற அறிவு நிலைபெற இரண்டற்ற தியானம் உதவும். இந்த நான்கு கட்ட அறிவையும் மூன்று வகை தியானங்களையும் கடந்தவர்கள் முக்தியடைகிறார்கள்.

இந்த நான்கு கட்டங்களில் ஏற்படும் அறிவு தியானத்தினால் நேரடியாக ஏற்படாது. தியானத்திற்கு மனதை பக்குவப்படுத்தும் சக்தி மட்டுமே உள்ளது. வேதத்தை முறையாக ஆசிரியரிடம் படிப்பதால் மட்டுமே அறிவு வரும். வேதம் படிக்காமல் அனுபவத்தின் மூலமோ புத்தகங்கள் படிப்பதனாலோ சரியான அறிவு ஏற்படாது.  

ஒருமை தியானம்

கடவுளின் நற்குணங்களின் மேல் கவனம் செலுத்தி இருமை தியானம் பலகாலம் செய்ததால் ஏற்பட்ட மனப்பக்குவத்தின் உதவியால் வேதம் கூறிய ‘நான் பரமன்’  என்ற உண்மை புரியும். அதன் பின் நானும் பரமனும் ஒன்றே, இவ்வுலகம் முழுதும் என்னை அடிப்படையாக கொண்டு படைக்கப்பட்ட மாயத்தோற்றம் என்ற அறிவுடன் செய்யப்படும் தியானம் ஒருமை தியானம்.

நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டவுடனேயே முக்தியடைய வேண்டும். ஆனால் பெரும்பாலோருக்கு இது நடப்பதில்லை. எனவேதான் ஒருமை தியானம் அவசியமாகிறது. இருப்பது பரமன் மட்டும்தான் என்றால் ‘நான் பரமன்’ என்று தியானம் செய்வது யார் அல்லது பரமன் எதற்காக ‘நான் பரமன்’ என்று தியானம் செய்யவேண்டும் என்பது போன்ற கேள்விகள் நியாயமானவை.

பள்ளியில் கணித ஆசிரியர் சொல்வது தெளிவாக புரிவது போல் இருந்தாலும் வீட்டுப்பாடத்தை செய்யும் பொழுது விடை தெரிகிறதே தவிர அந்த விடை எப்படி வரும் என்று தெரியாதபொழுது ஆசிரியர் கொடுத்த உதாரணத்தை பலமுறை எழுதி மனப்பாடம் செய்வதன்மூலம் விடை கண்டுபிடிக்கும் வழியை புரிந்துகொள்ளலாம்.

கணிதம் புரிந்து விட்டால் விடைகாணும் வழி முறைகளை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் மனப்பாடம் செய்வது புரிந்துகொள்ள உதவும் காரணத்தால் மனப்பாடம் செய்வது தவறில்லை. அதுபோல நான் பரமன் என்ற ஒருமை தியானம் தான் தியானம் செய்யத்தேவையில்லாத பரமன் என்பதை முடிவில் உணர்த்துவதால் அதை தவறான தியானம் என்று தடை செய்யக்கூடாது.

‘இது முல்லை மலர்’ என்ற அறிவு ஏற்பட்டவுடன் அதற்குமுன் இருந்த ‘இது மலர்’ என்ற அறிவை தவறான அறிவு என்று கூறமுடியாது. ‘இது மலர்’ என்ற சாதாரண அறிவு ‘இது முல்லை மலர்’ என்ற விசேஷ அறிவைப்பெற ஒரு படிக்கட்டாக உதவுவது போல ‘நான் பரமன்’ என்ற உண்மையை உணர ‘நான் பரமன்’ என்று ஒருமை தியானம் செய்வது உதவும். எனவே ஒருமை தியானம் தவறில்லை.

தன்னை ஒரு எலி என்று நினைத்துக்கொண்டிருக்கும் மனநோயாளியை குணபடுத்த அவரது மருத்துவர் அவனிடம், ‘நான் மனிதன்’ என்று தியானம் செய்யும்படி கூறலாம். அவன் மனிதன்தானே, அவன் ஏன் நான் மனிதன் என்று தியானம் செய்யவேண்டும் என்ற கேள்வி நியாயமானது என்றாலும் அவனை குணபடுத்த வைத்தியருக்கு இருக்கும் சரியான வழி அது ஒன்றுதான்.

தன்னை ஒரு மனிதன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் முக்திவிழைவோனை முற்றுணர்ந்தோனாக மாற்ற ‘நான் பரமன்’ என்ற ஒருமை தியானம் மட்டுமே உதவும். எனவே ஒருமை தியானத்தை தொடர்ந்து செய்வது அவசியம்.

பரமன் மாறாதவன், என்றும் இருப்பவன், அறிவுருவானவன், ஆனந்தமயமானவன் என்பது போன்ற வர்ணனைகளை கேட்டவுடன் ஏற்படும் ‘பரமன் இருக்கிறான்’ என்ற அறிவு ‘நான் பரமன்’ என்ற அறிவாக மாறாவிட்டால் மக்கள் கடவுளை போற்றி புகழ்ந்து பக்தி செய்வது மட்டும்தான் தங்கள் கடமை  என்ற அளவில் வேதம் படிப்பதை நிறுத்திக்கொள்வார்கள். நீதான் பரமன் என்று பல முறை கூறி அந்த அறிவை மக்கள் பெற ஒருமை தியானம் செய்வதை வேதம் வலியுறுத்துகிறது.

கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவை வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது உண்மையல்ல என்றாலும் இளைஞர்களுக்கு இவற்றை போதிப்பது முடிவில் அவர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். அதுபோல நான் பரமன் என்று ஒருமை தியானம் செய்வது தவறு என்றாலும் இறுதியில் அது முக்தியடைய உதவுவதால் வேதம் அதை மக்களுக்கு போதிக்கிறது.

கண்ணுக்கு தெரியும் ஒளிக்கதிரை வெறும் ஒளிக்கதிராக பார்க்காமல் வைரமாக பார்ப்பவன் அந்த ஒளிக்கதிரின் ஆதாரத்தை தேடி வைரத்தை கண்டுபிடிப்பான். ஒளிக்கதிரை வெறும் கண்ணாடியென்று உதாசீனபடுத்தியவன் ஏழையாகவே இருப்பான். அதுபோல் தன்னில் இருக்கும் உயிர்சக்தியை வெறும் மனிதன் என்று நினைப்பவன் என்றும் பற்றுள்ளவனாக இருந்து துன்பப்படுவான். அவ்வாறின்றி அதை பரமன் என்று தியானிப்பவன் பரமனாகவே ஆகிவிடுவான்.

கற்சிலையை கடவுள் என்று வழிபடுவன் கடவுள் வெறும் கல் என்று எப்படி நினைப்பதில்லையோ அதுபோல நான் பரமன் என்று ஒருமை தியானம் செய்பவன் பரமனாக ஆகாமல் போனாலும் பரமன் தன்னிடமிருந்து வேறுபட்டவன் என்ற தவறான முடிவுக்கு வரவேமாட்டான்.

ஒருமை தியானம் செய்யும் முறை

சில காலம் மட்டுமே இருக்கும் உடலாலும் மாறும் மனதாலும் கட்டுப்பட்டிருக்கும் நான் உண்மையில்  எல்லாவற்றிற்கும் ஆதாரமாக என்றும் இருப்பவன், அறிவுருவானவன், ஆனந்தமயமானவன் என்றோ அல்லது வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதவன், எவ்வித உருவமோ பெயரோ இல்லாதவன், எதனுடனும் தொடர்பில்லாதவன் நான் என்றோ தொடர்ந்து நினைப்பது ஒருமை தியானம்.

ஒருமை தியானம் வெற்றிபெற  தடைகள்

கல்லை கடவுளாக கும்பிட்டாலும் கடவுள் கல் அல்ல என்று அறியும் அறிவு பரவலாக  பொது மக்களிடையே இருந்தாலும் கடவுளும் நானும் ஒன்று என்பதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் அறிவுகூர்மை பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. கடவுளுக்கு ஆறு முகங்களும் பன்னிரு கைகளும் இருக்கின்றன என்பதை எளிதாக ஏற்றுக்கொள்ளும் மனதிற்கு உருவமில்லா பரமனை கற்பனை செய்து பார்க்கும் திறன் இல்லாததால் புத்தியின் முடிவுக்கு அது கட்டுப்படுவதில்லை. நீயே அது என்ற வேத வாக்கியத்திற்கு நீ பரமனைப்போன்றவன் என்று அர்த்தம் சொல்லும் ஆசிரியரிடம் படிப்பவர்களுக்கு ஒருமை தியானம் பயன் தருவதில்லை.

சரியான ஆசிரியர், தீர ஆராய்ந்து உண்மையை அறியும் புத்திகூர்மை, புத்தியின் முடிவுக்கு கட்டுபட்டு உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனம் ஆகியவை மூன்றும் இல்லாமல் ‘நான் பரமன்’ என்ற நம்பிக்கையுடன் எவ்வளவு காலம் ஒருமை தியானம் செய்தாலும் அது பலனளிக்காது.

இரண்டற்ற தியானம்

நான் பரமன் என்ற நம்பிக்கையுடனும் நான் பரமனாக மாறவேண்டும் என்ற ஆசையுடனும் முக்திவிழைவோர்களால் செய்யப்படும் தியானம் ஒருமை தியானம். நான் பரமன் என்ற உண்மையை எவ்வித சந்தேகமும் இல்லாமல் தெரிந்துகொண்ட பின் அந்த அறிவை தங்கள் ஆழ்மனதிற்குள் ஆழ்த்தவும் ஐம்புலன்கள் மூலம் நான் இருக்கிறேன் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் உலகம் மாயை என்று மனதிற்கு அவ்வப்பொழுது ஞாபகபடுத்தவும் முற்றுணர்ந்தோர்கள் செய்யும் தியானம் இரண்டற்ற தியானம் ஆகும்.

உடல் நிலையானது அல்ல என்ற அறிவு இருப்பினும் உடற்பயிற்சி செய்து அதை நலமாக வைத்துக்கொள்வது போல மனதின் சலனங்கள் என்னை பாதிக்காது என்ற அறிவு இருப்பினும் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இரண்டற்ற தியானத்தை முற்றுணர்ந்தோர்கள் செய்வார்கள். நான் பரமன் என்று கற்பனை செய்துகொண்டு அது உண்மையாக இருக்க வேண்டுமே என்ற ஏக்கத்துடன் செய்யப்படுவது ஒருமை தியானம். நான் பரமன் என்ற உண்மையை உணர்ந்தபின் அது உள்ளத்தில் உறுதிப்பட செய்யப்படுவது இரண்டற்ற தியானம்.

அயல்நாட்டிற்கு முதல் முறையாக உல்லாசப்பயணம் செய்வதற்குமுன் அந்த நாட்டைப்பற்றிய புத்தகங்களை படித்து, படங்களைப்பார்த்து, அங்கு சென்று வந்தவர்களுடன் உரையாடி தான் பெறப்போகும் அனுபவத்தை கற்பனை செய்து பார்ப்பது போன்றது ஒருமை தியானம். அந்த அயல் நாட்டில் உல்லாசப்பயணம் செய்யும்பொழுது இரவு படுப்பதற்கு முன் தான் பெற்ற அனுபவங்களை அசை போடுவதும் மறுநாள் எழுந்ததும் நான் இப்பொழுது வேறு நாட்டில் இருக்கிறேன் என்று ஞாபகபடுத்திக்கொள்வதும் இரண்டற்ற தியானம்.

அயல் நாடு செல்லும்வரைதான் அதைப்பற்றிய கற்பனைகள் இருக்கும். சென்றபின் கற்பனை செய்வது நின்றுவிடும். அதுபோல நான் பரமன் என்பதை உணரும் வரைதான் ஒருமை தியானம். உணர்ந்தபின் அது நின்றுவிடும்.

அயல் நாடு செல்வது சிலநாட்கள் நீடிக்க கூடிய உல்லாசப்பயணம் என்றால்தான் அங்கு சென்றதும் அனுபவங்களை அசைபோடுவதும் அயல் நாட்டில் இருக்கிறேன் என்று ஞாபகபடுத்திக்கொள்வதும் நடக்கும். அந்த நாட்டுக்கு குடிமாற்றம் செய்து விட்டு நிரந்தரமாக சென்றவர்கள் இவற்றை தொடர்ந்து செய்வதில்லை.     

நான் பரமன் என்பதை உணர்ந்தபின் சிலகாலம் மட்டுமே இரண்டற்ற தியானம் நடக்கும். நான் பரமன் என்ற அறிவு நிலைபெற்றபின் மாறும் உலகை தொடர்ந்து அனுபவித்தாலும் இரண்டற்ற தியானத்தை செய்யவேண்டிய அவசியம் இருக்காது.

இரண்டற்ற தியானம் செய்யும் முறை

அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை கேட்டவுடன் மனம் சலனப்படும்பொழுது தனக்கு தானே இது நான் காணும் கனவில் ஒரு காட்சி என்று ஞாபகபடுத்திக்கொள்வது இரண்டற்ற தியானம். இந்த தியானம் செய்வதற்கு என்று ஒரு குறிப்பிட்ட வழி முறைகள் கிடையாது. வீட்டுச்சாவி பையில் இருக்கிறதா என்று தொடர்ந்து தொட்டுப்பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அது போல் இரண்டற்ற தியானத்தை தொடர்ந்து செய்யவேண்டிய அவசியமில்லை.

சொத்தின் அளவு, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எண்ணிக்கை, வகிக்கும் பொறுப்புகளின் தன்மை ஆகியவற்றை பொறுத்து ஒருவர் உலகுடன் உறவாடும் அளவு தீர்மானிக்கப்படும். இவை அனைத்தும் அதிக அளவில் இருந்தால் அவர் இரண்டற்ற தியானத்தை அதிக நாட்கள் செய்யவேண்டியிருக்கும்.

இரண்டற்ற தியானம் வெற்றி பெற தடை

ஆசிரியர் சொல்லிகொடுத்தது சரியாக புரிந்திருந்தாலும் வகுப்பு முடிந்ததும் செல்லவிருக்கும் திரைப்படம் பற்றிய எண்ணங்கள் மனதை ஆக்ரமித்துகொண்டு  இருக்கும் காரணத்தால் ஆசிரியர் கேள்வி கேட்கும்பொழுது சரியான பதிலை சொல்ல முடியாமல் போகலாம். மறுநாள் மனம் தெளிவான பின் எவ்விதமான முயற்சியும் செய்யாமல் பதிலை தெளிவாக சொல்ல முடியும். அதுபோல நான் பரமன் என்ற அறிவில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் இருந்தாலும் மனம் வேறு நினைவுகளில் ஆழ்ந்திருக்கும்பொழுது நான் பரமன் என்பதை மறந்து விடலாம்.

ஏதாவது ஒரு மனிதரையோ தொழிலையோ அளவுக்கு மீறிய ஈடுபாடுடன் விரும்பி பலகாலம் செயல்பட்டிருந்தால் அதன்பின் நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டாலும் பழைய நினைவுகள் அடிக்கடி மனதை அலைகளிக்கும். உதாரணமாக உளமாற காதலித்த வாழ்க்கைத்துணைவரின் முதல் நினைவு நாளன்று நான் பரமன் என்பது மறந்து போகலாம். கிணற்றிற்கு செல்ல பலபேர் பலகாலம் தொடர்ந்து நடந்ததால் ஏற்பட்ட ஒத்தையடிப்பாதை கிணறு மூடப்பட்டவுடன் மறைந்துவிடாது. நான் பரமன் என்ற அறிவு நிலைபெற வாழ்க்கையில் உள்ள பிடிப்பு மறைய வேண்டும்.

நான் பரமன் என்ற அனுபவமும் அறிவும்

தங்கப்புதையல் இருக்கும் நிலத்தின்மேல் குடிசைபோட்டு வசிக்கும் ஏழைக்கு தன் நிலத்தின் மதிப்பு தெரியாது. புதையல் இருக்கிறது என்ற அறிவு அவனுக்கு ஏற்பட்டபின் அவன் தேவையான முயற்சிகள் செய்து அந்த தங்கத்தை தோண்டி எடுத்தால்தான் அவன் ஏழ்மை நீங்கும். அதுபோல நான் பரமன் என்ற அனுபவம் அனைத்து மனிதர்களுக்கும் இருந்தாலும் நான் பரமன் என்ற அறிவு பொதுவாக யாருக்கும் இருப்பதில்லை. அந்த அறிவு ஏற்பட்டவுடன் தொடர்ந்து முயற்சி செய்து தியானம் மூலம் நான் பரமன் என்ற அறிவை மனதிற்குள் ஆழ்த்தினால்தான் முக்தியடைந்து துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழ முடியும்.

சாதாரண மனிதன் பரமனாக மாற கடக்கவேண்டிய படிகட்டுகளை இந்த ஏழை பணக்காரனாக மாறும் உதாரணத்தின் அடிப்படையில் ஆராயலாம்.

1. துன்பப்படுவதை உணர்தல் : ஏழை தான் ஏழை என்பதை உணராதவரை பணம் சம்பாதிக்க ஆசைப்படமாட்டான். பற்றுடையோன் தன் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறிவருகிறது என்றும் ஒவ்வொரு இன்பமும் பின்வரும் துன்பத்திற்கு வித்து என்றும் உணராதவரை முக்தியடைய ஆசைப்பட மாட்டான்.

2. துன்பம் இயற்கை என்று ஏற்றுக்கொள்ளுதல்: கடவுள் தனக்கு படியளந்தது அவ்வளவுதான் என்று வாழ்க்கைத்துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் ஏழை, பணம் வேண்டும் என்று ஏங்க மாட்டான். இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை என்று நினைக்கும் பற்றுள்ளவன் துன்பத்தை அகற்ற முயலமாட்டான்.

3. துன்பத்தை முற்றிலும் அழிக்ககூடிய சாதனம்: ஏழைக்கு தன் நிலத்தின் கீழ் தங்கம் இருக்கிறது என்றும் அது தன் வறுமையை மாற்றக்கூடிய சாதனம் என்றும் தெரியும் வரை அதைப்பெற முயற்சி செய்யமாட்டான். மாறாத பரமன் ஒருவன் தன் மனதின் எண்ணங்களுக்கு அடியில் புதைந்துள்ளான் என்றும் அது தன் துன்பத்தை அழிக்ககூடிய சாதனம் என்றும் தெரியும்வரை பற்றுடையோன் அதை அடைய முயலுவதில்லை.

4. இருக்கிறது என்ற உண்மை துன்பத்தை மாற்றாது: வீட்டில் கிடைத்த கொள்ளு தாத்தாவின் உயில் நிலத்தினடியே தங்கம் இருக்கிறது என்ற உண்மையை அவனுக்கு கூறினாலும் பூமியை தோண்டி தங்கத்தை எடுக்காதவரை அவனது ஏழ்மை மாறாது.
பற்றுடையோன் முறையாக வேதத்தை படித்து நான் பரமன் என்பதை அறிந்தாலும் கூட தியானம் செய்வதன் மூலம் மனதை தூய்மைப்படுத்தினால்தான் புத்தி கூர்மையடைந்து முக்தியடையும் வாய்ப்புகிடைக்கும்.

5. தேடுதல் மட்டும்தான் துன்பத்தை மாற்றும்: மண்ணைத்தோண்டி தேடாதவரை தங்கம் கிடைக்காது. நான் பரமன் என்ற உண்மையை தீர ஆராயாத வரை துன்பம் தீராது.

6. கூரிய ஆயுதம் இல்லாமல் தேட முடியாது: கடப்பாரை போன்ற கூரிய ஆயுதம் இல்லாமல் தங்கத்தை தோண்டி எடுக்கமுடியாது. புத்திகூர்மை இல்லாதவர்களால் நான் பரமன் என்பதை புரிந்து கொள்ள முடியாது.

7. மேலாகத்தேடினால் துன்பம் மாறாது: மேல் மண்ணை நீக்கினால் தங்கம் கிடைத்துவிடாது. நான் உடல் அல்ல என்று ஆராய்ந்து அறிவதனால் மட்டும் பயன் கிடைக்காது.

8. சிறிது ஆழமாக தேடினாலும் போதாது: கட்டிப்போயிருக்கும் நிலத்தை சிறிது வெட்டியதும் தங்கம் கிடைக்காது. நான் மனம் அல்ல என்று அறிந்து கொள்வதனால் மட்டும் முக்திகிடைக்காது

9. பற்றை நீக்குவது அவசியம்: தங்கத்தை சுற்றி இருக்கமாக பற்றிக்கொண்டிருக்கும் மண்ணை நீக்கினால்தான் தங்கம் வெளிப்படும். உலகத்தின் மீது கொண்டிருக்கும் பற்றை நீக்கினால்தான் மனதினால் பரமனை அறிந்து கொள்ள முடியும்.

10. தொடர்ந்த முயற்சி அவசியம்: ஒருமுறை கடப்பாரையால் நிலத்தை குத்தினால் தங்கம் கிடைத்துவிடாது. தங்கம் கைக்கு கிடைக்கும்வரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நான் பரமன் என்று கேட்டதும் முக்தியடைய முடியாது. அது தெளிவாக புரியும் வரை தொடர்ந்து வேதத்தை படிக்க வேண்டும்.

11. முயற்சி வீண்போகாது: ஒருநாள் முழுவதும் தொடர்ந்து உழைத்துவிட்டு இரவில் ஒய்வெடுத்துக்கொண்டாலும் அடுத்த நாள் விட்ட இடத்திலிருந்து குழி தோண்ட முடிவது போல நான் பரமன் என்பதை புரிந்து கொள்ள செய்யும் முயற்சியின் பலன் பிறவிதோறும் நம்மை பின் தொடரும். எனவேதான் மனம் பக்குவமடைந்த ஒரு சிலர் சிறிதளவு முயற்சி செய்தவுடன் முக்தியடைகிறார்கள்.

12. வெற்றி துன்பத்தை போக்கும்: தங்க காசுகள் கிடைத்த மறுகணம் ஏழை பணக்காரானாக மாறிவிடுவது போல நான் பரமன் என்பது புரிந்தவுடன் வாழ்வின் துன்பங்கள் மறைந்துவிடும்.

13. அனுபவம் மாறுபடும்: தங்க காசுகள் என் தாத்தாவினுடையது. அவற்றை செலவு செய்யாமல் அவர் ஞாபகமாக பத்திரமாக வைத்துக்கொள்வேன் என்று முரண்டுபிடிப்பவன் தொடர்ந்து ஏழையாகத்தான் இருப்பான். நான் பரமன் என்பது உண்மையென்றாலும் வாழ்க்கையில் வெற்றிபெற்றால்தான் எனக்கு இன்பம் கிடைக்கும் என்று போராடுபவர்களால் துன்பத்தை தவிர்க்க முடியாது.

முக்தி அனுபவம்

அனைத்து அனுபவங்களும் உடலையும் மனதையும் சார்ந்தவை. பரமனால் எவ்வித அனுபவத்தையும் பெறமுடியாது. தான் பரமன் என்று உணர்ந்ததும் தன் உடலையும் மனதையும் எந்த அளவுக்கு உலக விவகாரங்களில் ஈடுபடுத்துவது என்பதை பொறுத்துதான் முக்தி அனுபவம் ஒருவனுக்கு அமையும். எவ்வளவு தங்க காசுகளை செலவளிக்கிறான் என்பதை பொறுத்துதான் ஏழைக்கு பணக்கார அனுபவம் கிடைக்கும்.

எவ்வித வேலையும் செய்யாமல் எந்த மனிதர்களுடனும் உறவாடமல் காட்டில் கிடைப்பதை உண்டு உயிர் வாழும் முற்றுணர்ந்தோனின் மனம் பெரும்பாலும் அமைதியாயிருக்கும். வழிப்போக்கன் பரிதாபப்பட்டு கொடுத்துவிட்டுபோன இட்டிலியை சாப்பிட ஆரம்பிக்கும்பொழுது பறவையின் எச்சம் அதில் விழுந்து விட்டால் அவன் மனம் சலனப்படத்தான் செய்யும். இந்த சலனத்தையும் தவிர்க்க வேண்டுமென்றால் தொடர்ந்து சமாதி நிலையில்தான் இருக்கவேண்டும்.

ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவராகவும் அரசியல் கட்சியின் தலைவராகவும் பொறுப்புக்களை வகிக்கும்பொழுது தொடர்ந்து மனம் அலைபாய்வதை எவ்வித கவலையும் இன்றி ஏற்றுக்கொண்டு என்னாளும் இன்பமாக வாழ தொடர்ந்து தியானம் எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை. அரண்மனையில் இது போல் வாழும் முற்றுணர்ந்தோன் மீது வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தாலும் எவ்வித அவமானமோ, குற்ற உணர்வோ இன்றி அவன் இனிதாக வாழ்வான்.

முக்தி என்பது அவரவரின் தனிப்பட்ட அனுபவம். முக்தியடைந்தவனாக தன்னை பாவித்துக்கொள்வதன் மூலம்தான் ஒருவனால் முக்தி அனுபவத்தை பெற முடியும்.

முடிவுரை :

மனதுக்கு பிடித்த சிறுகதையை எழுதிய எழுத்தாளரை சந்திக்க ஆவல் இருக்கலாம். நம் நெருங்கிய நண்பர்தான் அந்த கதையை எழுதியவர் என்று தெரிந்தவுடன் எழுத்தாளரை சந்திக்கும் ஆவல் அடங்கிவிடும். ஏனெனில் அவர் நமக்கு ஏற்கனவே பழக்கமானவர். அதுபோல நான் பரமன் என்பதை அறிந்தவுடன் பரமனாக மாற வேண்டும் என்ற ஆசை அடங்கவேண்டும். இல்லையெனில் நான் பரமன் என்ற உண்மை நமக்கு இன்னும் சரியாக புரியவில்லை என்று பொருள்.

ஆனால் நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டபின்கூட முக்தி அனுபவம் ஏற்படாமல் இருக்கலாம். முக்தி அனுபவம் என்பது ஒருவருக்கு படிப்படியாகத்தான் ஏற்படும். பட்டதாரியான அன்றே பணக்காரனாக முடியாது. வேலை செய்து சிறிது சிறிதாக பணம் சேர்ப்பதுபோல நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்டவுடன் எந்த அளவு இரண்டற்ற தியானம் செய்கிறோமோ அந்த அளவு முக்தியனுபவம் அதிகரிக்கும். எவ்வளவு பணம் போதுமானது என்பதற்கு ஒரு அளவே கிடையாது. அது போல எவ்வளவு முக்தி அனுபவம் வேண்டும் என்பதற்கும் அளவு கிடையாது. வாழ் நாள் முழுவதும் வேலை செய்து பணம் சேர்க்கலாம். அல்லது போதும் என்று ஒரு அளவில் நிறுத்திக்கொண்டு இருப்பதற்குள் வாழலாம். அதுபோல வாழ்நாள் முழுவதும் இரண்டற்ற தியானம் செய்து மனதை செம்மைபடுத்தலாம். அல்லது இருக்கும் முக்தி அனுபவம் போதும் என்று இரண்டற்ற தியானம் செய்வதை நிறுத்திக்கொள்ளலாம்.  

நான் பரமன் என்பதை அறிந்து கொள்ளவும் முக்தி அனுபவத்தை பெறுவதற்கும் நமது முயற்சி தேவை. பரமனின் அனுபவம் எவ்வித முயற்சியும் இல்லாமல் அனைவருக்கும் எப்பொழுதும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

வேதம் படிக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தை இருமை தியானம் கொடுக்கும். நான் பரமன் என்ற வேதத்தின் மையக்கருத்தை புரிந்துகொள்ள தேவையான மன ஒருமைப்பாட்டை ஒருமை தியானம் கொடுக்கும். முக்தி அனுபவத்தின் அளவையும் தரத்தையும் உயர்த்த இரண்டற்ற தியானம் உதவும்.

பயிற்சிக்காக :

1. மக்களின் செயல்பாடுகளின் நோக்கம் என்ன?

2. மக்களின் செயல்பாடுகளை தியானம் என்று எந்த அடிப்படையில் கூறப்பட்டது?

3. எதன் அடிப்படையில் தியானங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

4. இருமை தியானம் என்றால் என்ன?

5. இருமைதியானத்தின் ஒரே பலன் என்ன?

6. மக்களின் அறிவின் அடிப்படையில் அவர்கள் முக்தியடைய செய்யும் பயணம் எந்த நான்கு கட்டங்களாக பிரிக்கபட்டது?

7. ஒருமை தியானம் செய்யவேண்டிய அவசியம் என்ன?

8. ஒருமை தியானம் வெற்றி பெற தடையாய் இருக்கும் மூன்று என்னென்ன?

9. ஒருமை தியானம் மற்றும் இரண்டற்ற தியானம் இவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

10. இரண்டற்ற தியானம் வெற்றி பெற தடையாயிருப்பது எது?

11. பற்றுடையோன் முக்தியடைய கடக்க வேண்டிய பதின்மூன்று படிகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. முக்தியடைந்த மகான்களின் வாழ்க்கை சரிதங்களை படிக்கவும்.

2. நான் பரமன் என்ற அனுபவத்திற்கும் நான் பரமன் என்ற அறிவிற்கும் உள்ள தொடர்பை ஆராய்க.

3. நான் பரமன் என்ற அறிவிற்கும் முக்தி அனுபவத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்க.

4. முக்தியடைந்தவர்கள் இரண்டற்ற தியானம் என்ற முயற்சியை மேற்கொள்வதால் அவர்களை முக்தியடைந்தவர்களாக கருத முடியாது என்ற கருத்தை ஆராய்க.

5. முக்தி அனுபவம் என்றால் என்ன?

6. வாழ்வில் வரும் ஒவ்வொரு இன்பமும் பின்வரும் துன்பத்திற்கு வித்து என்று எந்த அடிப்படையில் கூறலாம்?