Wednesday, September 7, 2011

Lesson 154: Fruits of knowledge (Brahmasutram 4.1.1-2)


பாடம் 154: ஞானத்தின் பலன்
பாடல் 478 – 479 (IV.1.1-2)

பரமனின் மாயாசக்தியின் தொடர்ந்த மாற்றம்தான் உலகில் நடக்கும் வெவ்வேறு நிகழ்வுகளாகவும் மனிதர்களின் செயல்பாடுகளாகவும் தோற்றமளிக்கிறது என்ற உண்மையை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை என்றும் பரமரகசியத்தை அறியமுயலும் முக்திவிழைவோர்கள் பரமன் மேல் தொடர்ந்து தியானம் செய்யாவிடில் பற்றுடையோர்கள் போல  துன்பப்படுவதை அவர்களால் தவிர்க்க முடியாது என்றும் இந்தப்பாடம் விளக்குகிறது.

வாழ்வின் நிகழ்வுகள்

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். இருவரும் மணம் புரிந்து கொண்டு இனிதே வாழ்ந்தார்கள் என்பதுதான் கதை என்றால் இராமாயணம் எழுதப்பட்ட அன்றே மறக்கப்பட்டிருக்கும். இளவரச பட்டாபிஷேகம், கைகேயின் வரம், மரவுரியுடன் காட்டுக்குப்பயணம், பரதன், சூர்ப்பனகை, மாரீசன், ஜடாயு, இராவணன், விபீஷணன் ஆகியோரின் வருகை என்பது போன்ற ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வாழ்க்கைச்சித்திரமாக வரையப்பட்டதாலேயே அது எல்லோரும் சுவைக்கும் ஒரு காவியமாக இன்றுவரை திகழ்கிறது.

ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் இராமாயணத்தைப்போன்ற ஒரு சுவையான கதையே. இதனாலேயே இன்றளவும் பக்கத்துவீட்டுநிகழ்வுகளை அக்கறையுடன் அனைவரும் கவனிக்கிறோம். யார் யாரை காதலிக்கிறார்கள், யாருடைய பெண் வீட்டைவிட்டு ஓடினாள், எதற்காக விவாகரத்து நடந்தது என்பதுபோன்ற ஊர் கதைகள் சுவாரசியமாக இருந்தாலும் அதே நிகழ்வு நம் வீட்டில் நடப்பதை எதிர்கொள்ள பெரும்பாலோர் தயாராய் இருப்பதில்லை. பதவி உயர்வு, புதிய கார் வாங்குதல் என்பது போன்ற நிகழ்வுகள் ஒருபோதும் தனித்து நடப்பதில்லை. பகல் வந்தால் தொடர்ந்து இரவு வருவதைப்போல அனைவரது வாழ்வும் ஏற்ற இறக்கங்களுடன் கூடியதாகவே இருக்கும். இது வாழ்வின் நியதி.

மேலும் இது படைப்பின் இரகசியம். இவ்வுலகம் இராவணனையும் இராமனையும் உள்ளடக்கிய இராமாயணமாக இல்லாவிட்டால் துன்பம் கலவா இன்பமாகவும் எவ்வித மாற்றத்திற்கும் ஆளாகாமல் என்றும் இருக்கும் பரமன், ‘நான் பலவாக மாறுவேன்’ என்று சங்கல்பம் செய்ததற்கு பொருள் இல்லாமல் போய்விடும்.

மனித மனங்களில் வேறுபாடுகள்

ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுவதுதான் படைப்பு. எல்லாவிதத்திலும் ஒன்றுபோல் இருக்கும் இருபொருள்கள் இவ்வுலகில் கிடையாது. மாமர இலைகள் மற்ற மரத்தின் இலைகளிலிருந்து வேறுபடுவதுமட்டுமில்லாமல் ஒரே மரத்தின் இலைகள் கூட ஒன்றுபோல் ஒன்று அமைவதில்லை. ஒரே வீட்டில் வளரும் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டே இருப்பார்கள். பொதுவாக பார்த்தால் இருக்கும் ஒற்றுமைகளை கூர்ந்து கவனித்தால் வேற்றுமைகள் வெளிப்படும்.

உலக நிகழ்வுகளில் உள்ள ஒற்றுமை

இடம், பெயர், தேதி ஆகிய மூன்றையும் கவனிக்காவிட்டால் செய்தித்தாள்களில் புதிதாக எவ்வித செய்தியும் வருவதேயில்லை என்பது தெரியவரும். பூமியில் மனிதன் தோன்றிய நாள் முதல் இன்றுவரை ஒவ்வொருவர் வாழ்வின் நிகழ்வுகளும் எவ்வித மாற்றமுமின்றி அதே ஏற்ற இறக்கங்களுடன்தான் அமைந்து வருகிறது.

மனிதர்கள் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் விதம்

உலக நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லையென்றாலும் மனித மனங்கள் மாறுபடுவதால் நிகழ்வுகள் அவற்றில் ஏற்படுத்தும் பாதிப்புகள் வேறுபடுகின்றன. கற்பத்தில் தோன்றுதல், பிறத்தல், வளர்தல், முதிர்தல், மங்குதல், மறைதல் என்ற ஆறு நிகழ்வுகளும் மனித வாழ்வில் தொடர்ந்து நடந்தாலும் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ தனக்கு மட்டும்தான் நிகழ்வதாக மனித மனம் கற்பனை செய்து கொள்கிறது. பல காலம் கழித்து பிறந்த குழந்தைக்கு ஜுரம் ஏற்பட்டு உயிர் பிழைக்குமோ என்ற நிலையில், பிறப்பவர்கள் அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும் என்ற தத்துவத்தை கூறி அதன் பெற்றோர்களின் கவலையை போக்க முடியாது. குழந்தை எப்படியாவது பிழைக்க வேண்டும் என்று அவர்கள் மனம் தவித்துக்கொண்டுதான் இருக்கும். குழந்தை இறந்துவிட்டால் துக்கம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.

ஆனால் மனதில் ஏற்படும் தவிப்பு, துக்கம் போன்ற உணர்வுகள் அவர்களையும் அவர்களை சுற்றியுள்ளவர்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது அவரவரின் ஆளுமையை சார்ந்து மாறுபடும். இனி நான் இருக்க மாட்டேன் என்று தற்கொலை செய்து கொள்ள முயலும் தாய், குழந்தையை காப்பாற்றாத மருத்துவரை தாக்கும் தந்தை, நடந்தது நடந்துவிட்டது இனி நடக்க வேண்டியதை கவனிக்கலாம் என்று அமைதியாய் இருக்கும் பெற்றோர் என மனிதர்கள் பல வகைப்படுகிறார்கள்.

மனிதனின் ஆளுமை

நகையின் தன்மை அதில் அடங்கியுள்ள உலோககலப்பின் தன்மையை சார்ந்து இருப்பது போல ஒரு தனி மனிதனின் ஆளுமை அவன் மனம் செய்யப்பட்ட விதத்தை பொறுத்து மாறுபடும். ஒளி, சக்தி, ஜடம் ஆகிய தனிமங்கள் கலந்துள்ள விகிதம் மனிதனின் ஆளுமையை நிர்ணயிக்கிறது.

அனைவரிடமும் கலகலப்பாக பேசுபவன், அமைதியாயிருப்பவன், தீர்க்கமாக யோசித்தபின் செயல்படுபவன், உடனுக்குடன் செயல்செய்து முடிப்பவன், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், ஜாக்கிரதையாக இருப்பவன், விரும்பியதை செய்பவன்,  புலன்களை அடக்கியாளுபவன் என ஆளுமைகளில் பல வகைகள் உண்டு. இவற்றில் எது சரி எது சரியில்லை என்ற விவாதம் தவறு. ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடமிருந்து வேறுபட்டுதான் இருக்க வேண்டும் என்பது படைப்பின் நியதி என்பதால் அனைத்து வகையான ஆளுமைகளும் சரியானவையே. ஆளுமையை மாற்றியமைக்கவேண்டும் என்பது தவறான முயற்சி. இதுதான் சரியான குணம் என்று வரையறுத்து அனைவரையும் இயந்திரங்களைப்போல மாற்ற முயல்வது அறிவீனம். மேலும் மனித ஆளுமைகளை யாராலும் மாற்றவே முடியாது. பேசுபவனை மௌனமாக இருக்கச்செய்வதோ, பேசாதவனை கட்டாயபடுத்தி பேசவைப்பதோ முடியாது. ஏனெனில் ஆளுமை உடன் பிறந்தது. மாறாதது.

ஆளுமையின் வகை மாறாது என்றாலும் ஆளுமையின் தரம் தொடர்ந்து வளரும். பாவ புண்ணியங்கள் தரும் சூழ்நிலைகேற்பவாறு வாழ்வில் நிகழும் நிகழ்வுகள், அவரவரின் விருப்பு வெறுப்புகளையும் அறிவுத்திறனை தொடர்ந்து வளர்க்க உதவுகின்றன. அறிவு வளர வளர அதற்கேற்ப ஆளுமையும் வளர்ச்சியடையும்.

ஒவ்வொரு மனிதனும் செயல்களை செய்பவன், பலன்களை அனுபவிப்பவன், அறிவை வளர்த்துக்கொள்பவன் என்ற மூன்று விதங்களில் வாழ்கிறான். இவற்றில் அறிவை பெற தனியாக செய்யும் முயற்சியைத்தவிர அனைத்து செயல்களை செய்யும்பொழுதும் அவற்றின் பலனை அனுபவிக்கும்பொழுதும் தொடர்ந்து அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்பவனின் ஆளுமை வேகமாக வளரும்.

ஆளுமை வளர்வதால் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை ஏதிர்கொள்ளும் திறன் அதிகரிக்கும். இன்பத்தில் துள்ளுவதும் துன்பத்தில் துவளுவதும் படிப்படியாக குறைந்து இறுதியில் முக்தியடையும் வாய்ப்பையும் இவர்கள் பெறுவார்கள்.
பற்றுடையோன்

நான் பரமன் என்ற பரமரகசியத்தை அறியாத பாமரர்கள் அனைவரும் பற்றுடன் செயலாற்றுபவர்கள். நான் இந்த பலனுக்காக இந்த செயலைச்செய்கிறேன் என்று ஒவ்வொரு செயலைச்செய்யும்பொழுதும் இவர்கள் தெளிவாக இருப்பார்கள். எதிர் பார்த்த பலன் கிடைத்தால், நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்று பெரிமிதம் கொள்வார்கள். இந்த நிலை யார் வாழ்விலும் தொடராது. ஏமாற்றம் தடங்கல், தோல்வி, போன்றவற்றை தவிர்க்கமுடியாதபொழுது தன்னம்பிக்கை குறைந்து கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.

உண்மை உழைப்புடன் செயல்களைத்திறன்பட செய்து அதனுடன் ஆண்டவன் அருளின் அவசியத்தை அறிந்து அவனிடம் மன்றாடி பிரார்த்தித்த பின்னும் தோல்வியை சந்திக்க நேரும்பொழுது மனிதன் ஏன், எப்படி என்று யோசிக்க ஆரம்பிக்கிறான். கடமையைச்செய், பலனை எதிர்பார்க்காதே என்ற பகவானின் அறிவுரைக்கு அர்த்தம் தெரியத்தொடங்குகிறது. வாழ்வில் செயலை செய்வதற்கு மட்டுமே தனக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் பலனை பெறும் உரிமையில்லை என்றும் உணர ஆரம்பிப்பார்கள்.

பலனுக்காக அல்லாமல் செயலை செவ்வனே செய்து முடிப்பது மட்டுமே தன் குறிக்கோள் என்ற அணுகுமுறையுடன் தொடர்ந்து செயலாற்றிவருபவர்களின் மனம் பக்குவபட்டு அவர்களின் ஆளுமை மேலும் வளர்ச்சியடையும்.

தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, கர்மயோகம் எனப்படிப்படியாக உயர்ந்து முக்திவிழைவோனாக மாறாதவர்கள் தொடர்ந்து பற்றுடையோர்களாகவே இருப்பார்கள். காகித ஓடம் கடலலை மேலே ஓடுவது போல இவர்கள் வாழ்வில் நிகழும் ஏற்ற இறக்கங்களினால் அலைக்களிக்கப்பட்டு இவர்கள் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாவார்கள். எலிப்பொறியில் வைக்கப்பட்டுள்ள வடையை கண்டதும் எலிக்கு உண்டாகும் ஆனந்தம் வெகு விரைவில் துன்பமாக மாறுவது போல் வாழ்வின் இனிமையான நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் மேல் கொண்டுள்ள பற்று தொடர்ந்து இவர்களை துன்பத்தில் ஆழ்த்தும்.

இன்பத்திற்காக செயல் செய்தால் துன்பத்தை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்ற அறிவு ஏற்படும்பொழுது ஆளுமை வளர்ந்து துன்பம் கலவா இன்பம் பெற முக்திவிழைவோனாக மாறவேண்டிய அவசியத்தை இவர்கள் உணர்வார்கள்.
முக்திவிழைவோன்

துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழ உலகை மாற்றியமைத்து எப்பொழுதும் எல்லாமும் தங்கள் எதிர்பார்ப்பின்படியே நடக்க வைக்கவேண்டும் என்ற தவறான அறிவை மாற்றிக்கொண்டு வாழ்வில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்கவே முடியாது என்றும் அமைதியாக வாழ ஒரே வழி முக்தியடைவதுதான் என்றும் அறிந்தவர்கள் முக்திவிழைவோர்கள்.

மற்றவர்களைப்போல் தொடர்ந்து பல்வேறு வேலைகள் செய்து பணம் ஈட்டி குடும்பப்பொறுப்புகளை நிர்வகித்தாலும் இவர்களின் ஒரே குறிக்கோள் முக்தி என்பது மட்டுமே. முறைப்படி வேதத்தை ஆசிரியரிடம் பயின்று பரம ரகசியத்தை அறிந்துகொண்டிருந்தாலும் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்ற செய்தி இவர்களையும் உலுக்கவே செய்யும். இவர்களது ஆளுமை பற்றுடையோர்களை ஒப்பிடும்பொழுது பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கும் காரணத்தால் இதுபோன்ற சோக நிகழ்வுகளை இவர்கள் எதிர்கொள்ளும் விதம் பண்பட்டிருக்கும்.

நான் பரமன், இருப்பதுபோல் தோன்றும் இவ்வுலகம் என்னால் உண்டாக்கப்பட்ட கனவு என்று தொடர்ந்து தியானம் செய்வதால்மட்டுமே இவர்களால் தங்கள் ஞானத்தில் நிலைபெற முடியும். கணவன் மேல் தீரா காதல் கொண்டிருக்கும் மனைவி அவன் வெளியூர் சென்றால் அவன் திரும்பிவருவரை வெவ்வேறு வீட்டுவேலைகள் செய்துகொண்டிருந்தாலும் சதா சர்வகாலமும் மனதினுள் அவனையே நினைத்துக்கொண்டிருப்பதுபோல முக்திவிழைவோன் பரமன் மேல் தியானம் செய்யவேண்டும். எவ்வளவுதரம் அல்லது எவ்வளவுநேரம் அரிசியை உலக்கையால் குத்தவேண்டும் என்ற கேள்விக்கு உமி அரிசியிலிருந்து பிரியும்வரை என்பதுதான் சரியான பதில். அதுபோல எவ்வளவுதரம் அல்லது எவ்வளவு நேரம் பரமன் மேல் தியானம் செய்யவேண்டுமென்பதற்கு உடல் மற்றும் மனம்தான் தான் என்னும் எண்ணம் உதிர்ந்து நான் பரமன் என்பதை உணரும்வரை என்று பிரஹதாரண்யக உபநிடத மந்திரம் ஒன்று (2.4.5) பதில் கூறுகிறது.

நான் முக்தியடையவேண்டும் என்ற  ஆசை நான் பணக்காரானாக வேண்டும் என்ற தீவிர ஆசையைபோல இருந்தால் அது நிறைவேற வாய்ப்பில்லை. எப்பொழுது ‘நான்’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ‘பரமன்’ மேல் மட்டும் தியானம் செய்யமுடிகிறதோ அப்பொழுதுதான் அகங்காரம் தொலைந்து நான் பரமன் என்ற ஞானம் உதிக்கும். முக்தியடைவது தானாக நடக்கும்.
முற்றுணர்ந்தோன்

நான் பரமன் என்ற ஞானத்தில் நிலைபெற்ற முற்றுணர்ந்தோர்களுக்கு உலகம் இருப்பதுபோல் தெரியும் ஒரு மாயை என்பது தெளிவாகத்தெரிந்திருப்பதால் உலக நிகழ்வுகள் அவர்களை பாதிப்பதில்லை. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது என்ற செய்தி அவர்கள் மனதையும் ஆட்டுவிக்கும். ஆனால் மனம் தான் அல்ல என்ற அறிவு உறுதியாக இருப்பதால் இவர்கள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை தொடர்ந்து அனுபவிப்பார்கள். தன் குழந்தை இறந்துவிட்டது என்பதை அறிந்தபின் இவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது அவரவர்களின் ஆளுமையை பொறுத்து மாறுபடும். செயல்பாட்டின் அடிப்படையில் ஒருவரை முற்றுணர்ந்தோன் அல்லது முக்திவிழைவோன் என்று வகைபிரிக்கமுடியாது.

கயிற்றை பாம்பாக பார்த்து பயப்படுபவன் பற்றுடையோன். அது பாம்பல்ல வெறும் கயிறுதான் என்பதை அறிந்திருந்தாலும் சுற்றியிருக்கும் எல்லோரும் அதற்கு பயப்படுவதால் மனம் குழம்பியிருப்பவன் முக்திவிழைவோன். கயிற்றை மட்டும் பார்ப்பதால் தெளிவாக இருப்பவன் முற்றுணர்ந்தோன்.

உலக நிகழ்வுகளும் மற்ற மனிதர்களின் செயல்பாடுகளும்தான் தங்களது சோகத்திற்கு காரணம் என்று பற்றுடையோர்கள் துன்பமடைவர். அதே நிகழ்வுகள் முக்திவிழைவோன் வாழ்வில் ஏற்படும்பொழுது அவன் தன் துன்பத்திற்கு ஒரே காரணம் முக்தியடையாதது மட்டுமே என்று அறிவான். நிகழ்வுகளும் அவை மனதில் ஏற்படுத்தும் சலனங்களும் பிரிக்கமுடியாதவை என்றும் இவ்விரண்டிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று உணர்ந்தவன் முற்றுணர்ந்தோன்.   

தான் செயல் செய்பவன் என்றும் பலனை அனுபவிப்பவன் என்றும் நினைப்பவன் பற்றுடையோன். செயல் மட்டும் செய்பவன் நான் என்று பலனைத்தியாகம் செய்பவன் முக்திவிழைவோன். தான் எவ்வித செயலையும் செய்வது கிடையாது என்று உணர்ந்துகொண்டிருப்பவன் முற்றுணர்ந்தோன். எனவே நடந்த நிகழ்வுகள் வேறு விதமாக நடந்திருக்கலாமென்றோ அல்லது தான் வேறுமாதிரி செயல்பட்டிருந்தால் சோகநிகழ்வை தவிர்த்திருக்கலாமென்றோ அவன் நினைத்து துயரப்படமாட்டான். தன் விதி என்று தன்னை சமாதானபடுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் அவனுக்கில்லை. ஏனெனில் தான் இது வரை பாவம் எதையும் செய்யவில்லை என்று அவனுக்கு தெளிவாகத்தெரியும். தான் எதனுடனும் சம்பந்தமில்லாதவன் என்றுணர்ந்ததால் அவன் எதனாலும் பாதிக்கபடுவதில்லை.


முடிவுரை :

மனித ஆளுமைகளை பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்துபவர்கள் ஆளுமை உடன் பிறந்தது என்பதால் அதன் தனித்தன்மையை மாற்றவேமுடியாது என்று உணர்வது அவசியம். அப்பொழுதுதான் ஆளுமையின் தரத்தை  உயர்த்த தேவையான அறிவை அடைவதில் முழுமுயற்சியுடன் ஈடுபடமுடியும்.

செயல்செய்வதன் மூலமாகவும் பலனை அனுபவிக்கும்பொழுதும் தொடர்ந்து அறிவை அதிகப்படுத்திக்கொள்பவனால் மட்டுமே ஒருவர் தனது ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இன்பத்தையும் துன்பத்தையும் தரக்கூடிய நிகழ்வுகளை மாற்றி மாற்றி வழங்கும் வகையில் தான் இந்த உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்ற இறக்கங்களை சரியாக எதிர்கொள்ள ஆளுமையின் தரத்தை உயர்த்திக்கொள்ளுவது அவசியம். 

ஞானத்தின் பலன் துன்பத்திலிருந்து விடுதலை. பாவபுண்ணியங்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளுக்கு காரணமாக மட்டுமே அமைகின்றனவேயன்றி நம்மை இன்பத்திலோ துன்பத்திலோ ஆழ்த்தும் சக்தி அவற்றுக்கு கிடையாது. அறிவு அதிகமாக அதிகமாக நம்மால் துன்பபடுவதை படிப்படியாக குறைத்து இன்பமாக வாழலாம். எப்பொழுது பரமனைப்பற்றிய முழுமையான அறிவை அடைகிறோமோ அப்பொழுது துன்பத்திலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறோம்.

பற்றுடையோன் நிகழ்வுகள் எப்பொழுதும் நல்லதாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்தபடி இருப்பான். முக்திவிழைவோன் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் படைப்பு இருக்கமுடியாது என்றும், அனைவரும் பாவபுண்ணியங்கள் செய்திருப்பதால் வாழ்வின் இருமைகள் மாறிமாறிதான் வரும் என்றும் அறிந்து இருந்தாலும் முற்றுணர்ந்தோன் போல வாழ்வின் தொடர்ந்த மாற்றங்களை ஏற்ற இறக்கங்கள் என்று பாகுபாடு செய்யாமல் ஏற்றுக்கொள்ள பரமன் மேல் தியானம் செய்வது அவசியம்.

உலகம் உண்மையானது என்ற தவறான எண்ணம் முக்திவிழைவோன் மனதில் ஆழமாக பதிந்திருப்பதால் பரமன் மேல் தொடர்ந்து தியானம் செய்வது அவசியம். உலகம் நாம் காணும் கனவு என்று உறுதியாக உணரும்வரை தியானம் செய்தால்தான் உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மாற்றமடைவதுதான் மனதின் வேலை என்றும் மாறும் மனம் தான் அல்ல என்றும் அவன் உணர்வான்.


பயிற்சிக்காக :

1. வாழ்வின் நியதி மற்றும் படைப்பின் இரகசியம் என்று குறிப்பிடப்பட்ட கருத்து என்ன?

2. மனிதர்கள் வாழ்வில் பொதுவாக ஏற்படும் ஆறு நிகழ்வுகள் என்னென்ன?

3. மனிதர்கள் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் விதம் மாறுபடுவதற்கு காரணம் என்ன?

4. மனித ஆளுமையை நிர்ணயிப்பது எது?

5. மனித ஆளுமையை மாற்றியமைக்க முடியுமா?

6. ஆளுமையின் வளர்ச்சிக்கு எது அவசியம்?

7. மூன்று வாழ்க்கை விதங்கள் என்று பிரித்து ஆராய காரணம் என்ன?

8. பற்றுடையோன் முக்திவிழைவோனாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?

9. முக்திவிழைவோன் முற்றுணர்ந்தோனாக மாற செய்யவேண்டிய ஒரே செயல் என்ன?

10. ஞானத்தின் பலன் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்கான காரணங்களை ஆராய்க.

2. கடந்த இரண்டாயிரம் வருடங்களில் உலக நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்ற கூற்றின் உண்மையை ஆராய்க.

3. மனித ஆளுமைகளின் வகைகளை ஆய்க.

4. மனிதர்களை ஆளுமை வகைகளாக பிரிப்பதன் பயன் என்ன?

5. முற்றுணந்தோர்களின் மனம் சோக நிகழ்வினால் கலக்கமடையுமா?