Thursday, November 4, 2010

Lesson 140: Stories reveal the truth (Brahma Sutra 3.4.23-24)

பாடம் 140: கதைகூறும் கடமைகளும் கருத்துக்களும்
பாடல் 448 – 449 (III.4.23-24)

வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்படும் கதைகள் உண்மையாக நடந்தவையா என்று ஆராயாமல் அவற்றின் கருத்தை ஆராய்ந்து உண்மை ஞானத்தை பெறுவது மட்டுமே நமக்கு நன்மை தரும் என்று இந்தப்பாடம் எடுத்துரைக்கிறது.

சடங்குகளை முறைப்படி செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுருத்த அவை சம்பந்தமான கதைகள் கூறப்படுகின்றன. உதாரணமாக வேள்வியின் இறுதியில் கொடுக்கப்படும் தானம் மிக முக்கியமானது என்பதை நசிகேதஸின் கதை மூலம் கடோபநிஷத் கூறுகிறது. உண்மையிலேயே இது நடந்ததா, பத்து வயது பாலகனை அவன் தந்தை எமனுக்கு தானம் செய்தது சரியா என்பது போன்ற கேள்விகள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டியவை. கர்மகாண்டத்தில் கூறப்படும் சடங்குகளை எவ்வித பிழையும் இல்லாமல் செய்யவேண்டும் என்பதை இந்த கதை வாயிலாக புரிந்து கொள்வது மட்டுமே நம் கடமை.

ஞானகாண்டத்தில் இதே கதைகள் பரமனை புரிந்து கொள்ள உதவும். புராணங்கள் மற்றும் வேதங்களில் இடம் பெறும் அனைத்து கதைகளும் முடிவில் நீயே அது என்ற உண்மையை படிப்படியாக நமக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. தற்கால கதைகள் போல இவை வெறும் பொழுதுபோக்குக்காக கூறப்படவில்லை. முதலில் சடங்குகளை சரியாக செய்யவும் பின் வேதத்தின் அடிப்படை கருத்தை புரிந்து கொண்டு முக்தியடையவும் இந்த கதைகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

நீயே அது என்பது உண்மையா?

‘நீயே அது’ என்ற வேத வாக்கியத்தில் உள்ள ‘அது’ என்ற சொல்லுக்கு ஆனந்தம், கடவுள் அல்லது பரமன் என்று எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அனைத்து மனிதர்களும் குறையாத இன்பத்தை தேடியலையும்பொழுது வேதம் ஆனந்தம் உன் இயற்கை என்று கூறுகிறது. இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்பதை ஆராய்ந்தால் நானும் கடவுள் என்ற திடுக்கிடும் தகவல் நமக்கு கிடைக்கும். நான் எப்படி கடவுளாக இருக்க முடியும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால் முடிவில் நான் பரமன் என்று உணர்ந்து கொண்டு என்றும் இருக்கும் ஆனந்தமயமான பெருவாழ்வை நாம் பெறலாம்.

நானே ஆனந்தமா?

பிடித்த பொருள்கள் அனைத்தும் ஆனந்தம் கொடுக்கின்றன. உனக்கு உன்னை பிடிப்பதால் நீயே ஆனந்தம் என்று தர்க்கத்தின் துணையுடன் வேதம் கூறும் கருத்து சரியாகத்தான் தெரிகிறது. ஆயினும் நானே ஆனந்தம் என்று புரிந்து கொண்ட பின்னும் நான் ஏன் உலகில் உள்ள பொருள்கள் மேல் ஆசைபட்டு அவற்றின் பின் அலைகிறேன் என்ற கேள்வி எழுகிறது.

வகுப்பில் சகமாணவர்களுடன் சேர்ந்து பாடும் மகன் நன்றாக பாடுகிறானா இல்லையா என்று தந்தையால் கண்டுபிடிக்க முடிவதில்லை. மகன் பாடுவது காதில் விழுந்தாலும் மற்றவர்கள் உடன் பாடுவது மகனின் பாட்டுத்திறத்தை அறிய தடையாய் இருக்கிறது.

இதே போல் நானே ஆனந்தம் என்று தெரிந்தாலும் அதை உறுதியாக தெரிந்து கொள்வதில் ஒருதடை இருக்கிறது. அந்த தடையின் பெயர் அசுத்த மாயை.

பரமனின் சங்கல்பத்தால் ஒளி, சக்தி, பொருள் ஆகிய மூன்று தனிமங்களின் கலவையாக இந்த பிரபஞ்சம் படைக்கபட்டது. சக்தி தனிமம் அதிகமாகவும் ஒளித்தனிமம் குறைவாகவும் கொண்ட அசுத்தமாயையால் செய்யப்பட்டதுதான் நமது மனம். அசுத்த மாயை இரு செயல்களை செய்கிறது. ஒன்று, இருக்கும் பொருளை விளங்காமல் செய்து அதை இல்லை என நம்மை நம்பவைக்கிறது. இரண்டாவதாக இல்லாத பொருளை இருப்பதாக காண்பித்து நம்மை ஏய்க்கிறது.

உதாரணமாக மாலைப்பொழுதின் மயங்கிய ஒளி என்னும் தடை இரு செயல்களை செய்கிறது. ஒன்று, தரையில் கிடக்கும் கயிற்றை நம் கண்களுக்கு மறைத்து அதை இல்லை என்று நம்பவைக்கிறது. அதே சமயம் அங்கு இல்லாத விஷப்பாம்பை இருப்பதாக காட்டி நம்மை பயமுறுத்துகிறது.

அதுபோல நமது மனம் அசுத்தமாயையால் செய்யப்பட்டிருப்பதால் ஆனந்த மயமாக என்றும் இருக்கும் பரமனை இல்லை என்றும் அதே சமயம் இல்லாத உலகத்தை இருப்பதாக காட்டி நமது அனைத்து துன்பங்களுக்கும் அடிப்படை காரணமாய் இருந்து வருகிறது.

கர்மயோகத்தால் சக்தி தனிமத்தின் ஆதிக்கம் குறைந்து ஒளித்தனிமத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது நம் மனம் இந்த உண்மையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கும்.

நானே கடவுளா?

நீமட்டும் கடவுள் அல்ல ஆனால் நீயும் கடவுள் என்று வேதம் கூறுவதை புரிந்து கொள்வது மிகவும் கடினமாகத்தோன்றுகிறது. ஏனெனில் சர்வசக்தி படைத்த கடவுளுடன் அற்பனான என்னை ஒப்பிட்டு பார்ப்பதற்கே பயமாய் இருக்கிறது. அப்படியிருக்க இருவரும் ஒன்றே என்று ஒன்று சேர்த்து பார்ப்பது சாத்தியமே இல்லையென நமக்குத்தோன்றும்.

நீயே அது என்ற வாக்கியத்தில் உள்ள இரண்டு சொற்களையும் தனித்தனியே ஆராய்ந்து தர்க்கத்தின் துணையுடன் இவ்விரண்டும் எப்படி ஒன்றாயிருக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

10 = 10 என்று ஆசிரியர் நமக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. 8+2=1+4+5 என்று கரும்பலகையில் அவர் எழுதினால் பார்வைக்கு வெவ்வாறாகத்தெரிந்தாலும் சமக்குறியின் இருபுறம் உள்ள எண்களின் கூட்டுத்தொகை ஒன்றே என்பதை அறிய மாணவன் தன் புத்திசாலித்தனத்தை பொறுத்து சிறிது நேர முயற்சிக்கு பின் அறிந்து கொள்வான். அதே போல் வெளிப்பார்வைக்கு வேறுபட்டிருக்கும் என்னையும் கடவுளையும் எவ்வாறு ஒன்று என்று வேதம் கூறுகிறது என்று ஆசிரியரின் துணையுடன் நமது புத்தியை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

‘நீ’ என்று ஆசிரியர் கூறியதும் நம் மனதில் சரியான பொருளான ‘நான்’ என்ற எண்ணம் உதித்தாலும் அந்த நான் என்ற எண்ணத்தின் உண்மையான பொருளை நமது ஐந்து கோசங்கள் மறைத்துக்கொண்டிருப்பதால் நாம் உண்மையை உணர்வதில்லை. ஒரு துணியை பொம்மைமீது போர்த்தி அதை குழந்தையின் பார்வையிலிருந்து மறைப்பது போல் இந்த ஐந்து கோசங்கள் நம் உண்மை உருவை மறைப்பதில்லை. வெள்ளித்திரையில் ஒளிப்பிம்பங்கள் காதலர்கள் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி நம் மனதின் கவனத்தை கவர்ந்து அதை திரை என்று ஒன்று இருப்பதை அறியாதபடி மறைப்பதுபோல் இந்த ஐந்து கோசங்கள் தாம் இருப்பதற்கு ஆதாரமான உண்மையை நம்மிடமிருந்து மறைக்கின்றன.

இதனால் பாதிக்கப்படுவது ஐந்து கோசங்களில் ஒன்றான மனமே தவிர அவற்றின் ஆதாரமான நான் அல்ல. நான் என்ற எண்ணத்துக்கு ஒன்றுக்குமேற்பட்ட கோசங்களை பொருளாக கொள்ளும் வரை நம் வாழ்வில் துன்பங்கள் தொடரும்.

மேகம் தன் இருப்பிற்கு ஆதாரமான சூரியனை நம் பார்வைக்கு அகப்படாமல் செய்தாலும் ஒளியைத்தருவது மேகம் அல்ல என்று நாம் அறிகிறோம். மேலும் மேகத்தை பார்க்க முடிவதால் சூரியனின் இருப்பை அறிந்து கொள்கிறோம். ஆனால் அசுத்த மாயையின் ஆதிக்கம் அதிகமிருப்பதால் நாம் உயிருடன் இருப்பதற்கு உடலும் மனமும் அவசியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் உடலுக்கும் மனதுக்கும் ஆதரமான உணர்வை நாம் கவனிப்பதில்லை.

உண்மையான உணர்வும் பொய்யான உடலும் கலந்து இருக்கும் கலவையை நான் என்ற சொல்லுக்கு பொருளாகக்கொள்ளும் அறியாமையை அகற்றி அறிவு பூர்வமாக உண்மையில் ‘நான் யார்’ என்ற கேள்விக்கு பதில் காணவேண்டும்.

எப்பொழுதும் மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தாலும் நான் என்ற சொல்லின் பொருளுக்குள் அதை சேர்த்துக்கொள்ளாததற்கு காரணம் அது இல்லாவிட்டாலும் நான் இல்லாமல் போய்விடுவதில்லை என்று நமக்கு தெரிந்திருப்பதால்தான். அதேபோல் நம் உடல் இல்லாவிட்டாலும் கனவுகாணும்பொழுது நம்மால் எல்லா காரியங்களையும் செய்யமுடிகிறது. எனவே நான் என்ற சொலின் பொருளில் மூக்குக்கணாடியைப்போல் உடலையும் சேர்த்துக்கொள்ளக்கூடாது. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் காணாமல் போய்விடுகிறது. இருந்தும் நான் தொடர்ந்து இருக்கிறேன் என்பதால் என் மனமும் நான் அல்ல.

உணர்வு இல்லாமல் நான் எப்பொழுதும் இருப்பதில்லை. எனவே நான் என்பதன் உண்மை பொருள் உணர்வு. என் மனம் உடல் உள்ளிட்ட ஐந்து கோசங்களும் மூக்குக்கண்ணாடியைப்போல இந்த உலக அனுபவங்களை பெற உதவும் கருவிகளே தவிர அவை நான் அல்ல.

நீயே அது என்ற வேதத்தின் போதனையில் சமக்குறிக்கு இந்தப்பக்கம் இருக்கும் சொல்லான நீ என்பதன் பொருள் உணர்வு என்று புரிந்துகொண்டபின் மறுபக்கம் இருக்கும் அது என்ற சொல்லின் பொருளான கடவுளை ஆராயவேண்டும்.

யாருடைய உதவியுமில்லாமல் சுயமாகவே ‘நான்’ என்ற சொல்லுக்கு தவறான பொருளை நாம் அறிந்து வைத்திருந்தோம். கடவுள் என்ற சொல்லுக்கு கடவுளைப்பற்றி அறியாதவர்கள் செய்யும் மதப்பிரச்சாரங்களின் உதவியுடன் தவறான பொருளை கற்பித்து வைத்திருக்கிறோம்.

மாயா சக்தியுடன் கூடிய உணர்வே கடவுள் என்பது வேதம் கூறும் விளக்கம். ஐந்து கோசங்கள், நான் என்பதன் உண்மைப்பொருளை மறைத்திருந்தது போல் வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்ற ஐந்து பூதங்களாலான இந்த பிரபஞ்சம் கடவுளை நம்மிடமிருந்து மறைத்து வைத்திருக்கிறது. பிரபஞ்சத்தை பார்க்கும் பொழுது உண்மையில் நாம் கடவுளைத்தான் பார்க்கிறோம். ஏனெனில் பிரபஞ்சம் என்ற மாயையின் ஆதாரமான உணர்வுதான் உண்மையில் கடவுள்.

கல்லூரியின் இருபத்தியைந்தாம் ஆண்டுவிழாவில் நம் பக்கத்தில் பேசாமல் உம் என்று அமர்ந்துள்ள வழுக்கைத்தலையரை ‘இவனை உனக்குத்தெரியவில்லையா’ என்று ஒருவர் அறிமுகபடுத்தியவுடன் இன்முகமும் துடுக்குப்பேச்சுடனும் கூடிய இளைஞன் முகம் நம் மனதில் தோன்றுகிறது. இருவரிடையே எவ்வித ஒற்றுமையும் இல்லாவிட்டாலும் கூட அவனா இவர் என்று ஒரு நொடி ஆச்சரியப்பட்டாலும் சிறிது நேரத்திற்குள் அவருடன் அன்யோன்ய அன்புடன் பழங்கதைகளை பேசி சிரிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

நான் என்ற சொல்லுக்கு மாறும் மனதையும் மடியும் உடலையும் பொருளாக கொள்ளாமல் இவற்றின் ஆதாரமான உணர்வை நான் என்று புரிந்து கொண்டால் நான் எப்படி கடவுளாக இருக்கமுடியும் என்ற கேள்வி மறைந்து ஆஹா இது தெரியாமல் போய்விட்டதே என்ற ஆச்சரியம் தோன்றுகிறது. சமக்குறியின் இருபக்கமும் ஒரேவிடையை அளிப்பதால் கணக்கு போட்டு முடித்த சந்தோஷத்தில் வகுப்பில் கையை உயர்த்துகிறோம்.

நான் பரமன்

‘நான் உண்மையிலேயே அரசனா அல்லது அரசன் போல் கனவு கண்டுகொண்டிருக்கும் பிச்சைக்காரனா?’ என்று ஜனகர் தன் குரு அஷ்டவக்ரரிடம் கேட்டார். அதற்கு அவர் ‘நீர் இரண்டும் அல்ல’ என்று பதில் சொன்னார். கனவில் கனவு எவ்வளவு உண்மை என்று நமக்குத்தோன்றுகிறதோ அதுபோல்தான் நனவும் உண்மையாக நமக்குத்தெரிகிறது. கண்ணுக்குத்தெரிந்து கொண்டிருக்கும் இந்த உலகம் உண்மையிலேயே இல்லை என்றும் அது கனவைப்போல் ஒரு மாயை என்றும் புரிந்துகொள்வது சற்று கடினம்தான்.

கனவில் நம்மிடம் ஒருவர் நீ இப்பொழுது கனவுகண்டுகொண்டிருக்கிறாய் என்று சொன்னால் நாம் அவரை நம்பப்போவதில்லை.

ஒரு பொருளை இருக்கிறது என்று நிரூபிக்க அதன் இருப்பை நாம் உணர்வது மட்டும் போதாது. அதை விளக்கவும் வேண்டும். கனவில் பொருள்களின் இருப்பை உணர்ந்தாலும் அவற்றை விளக்க முடியாததால் நம்மால் கனவை மாயை என்று விழித்தெழுந்ததும் நிராகரிக்க முடிகிறது. நம் கனவில் பங்குபெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கனவை உண்மை என்று சத்தியபிரமாணம் செய்தாலும் நாம் கனவு உலகம் உண்மையில் இல்லை என்று முடிவு செய்கிறோம். ஆனால் விழித்தெழுந்ததும் குடிக்கும் பால் உண்மையிலேயே இருக்கிறது என்று நாம் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் ஒத்துக்கொள்வதால் பால் என்றால் என்ன என்பதை விளக்க முயல்வதில்லை. பாலை பார்ப்பதாலும் குடிக்கும்பொழுது அதன் சுவை தெரிவதாலும் அது உண்மையில் இருக்கிறது என்று நம்பிவிட்டால் கனவில் குடிக்கும் பாலையும் உண்மை என ஒத்துக்கொள்ள வேண்டிவரும்.

பால் என்றால் என்ன என்று விளக்க முடிந்தால் மட்டுமே அதை உண்மையில் இருக்கிறது என்று நிரூபணம் ஆகும். வெள்ளையாக இருப்பது பால் என்று அதன் குணங்களின் அடிப்படையிலோ, பசுவிலிருந்து கிடைப்பது பால் என்று மற்றொரு பொருளுடன் அதற்கு இருக்கும் தொடர்பின் அடிப்படையிலோ, தண்ணீர் போல இருப்பது பால் என்று அதில் உள்ளடங்கிய வெவ்வேறு பொருள்களின் அடிப்படையிலோ, உடலுக்கு சக்தி தருவது பால் என்ற அதன் செயல்களின் அடிப்படையிலோ நாம் எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும் அவை முழுமையான விளக்கமாக அமையாது. பின்வரும் மூன்று தோஷங்கள் உலகில் உள்ள எந்த ஒரு பொருளையும் விளக்கவே முடியாது என்பதை நிரூபிக்கின்றன.

தோஷம் 1: வெள்ளை என்ற குணத்திற்கும் பாலுக்கும் சம்பந்தம் இல்லை என்றால் அந்த விளக்கம் முன்னுக்குப்பின் முரணானது.

தோஷம் 2: வெள்ளை என்ற குணம் கொண்ட பால் என்றால் என்ன என்ற கேள்விக்கு மறுபடியும் வெள்ளையானது என்று பதில் சொல்லமுடியாது.

உன் வீடு எங்கே இருக்கிறது? கிருஷ்ணன் வீட்டிற்கு பக்கத்தில்.
கிருஷ்ணன் வீடு எங்கே இருக்கிறது? என் வீட்டிற்கு பக்கத்தில்!

எனவே வெள்ளை என்ற குணத்தை தவிர வேறு ஒரு குணத்தைச்சொன்னால் மட்டுமே பால் என்றால் என்ன என்பதை விளக்க முடியும்.

தோஷம் 3: அந்த இரண்டாவது குணத்துடன் கூடிய பால் என்றால் என்ன என்றால் மூன்றாவது குணத்தை சொல்லவேண்டிவரும்.

உன் வீடு எங்கே இருக்கிறது? கிருஷ்ணன் வீட்டிற்கு பக்கத்தில்.
கிருஷ்ணன் வீடு எங்கே இருக்கிறது? ராமன் வீட்டிற்கு பக்கத்தில்.
ராமன் வீடு எங்கே இருக்கிறது. பரதன் வீட்டிற்கு பக்கத்தில்!

இப்படியே தொடராக எவ்வளவு குணங்களை சொன்னாலும் பால் என்றால் என்ன என்று விளக்கவே முடியாது. இதே போல் பால், பசுவிலிருந்து வந்தது என்றால் பசு எங்கிருந்து வந்தது என்று மறுபடியும் தொடர் கேள்விகள் கேட்டால் எந்தப்பொருளையும் விளக்கவே முடியாது என்பது புரியும். விளக்கமுடியாத பொருள் கனவில் கண்ட பொருள் போல் உண்மையில் இல்லாத பொருள். எனவே இந்த உலகம் இருப்பது போல் தோன்றும் மாயை என்பது நிரூபணம் ஆகிறது.

பரமன் இருக்கின்றானா?

உலகத்துக்கு ஆதாரம் பரமன் என்று வேதம் பரமனை விளக்குகிறது. ஆனால் பரமனுக்கும் உலகத்திற்கும் தொடர்பு இல்லை என்பதால் மேற்கொண்டு உலகத்தை விளக்க வேண்டிய அவசியம் இல்லை. மாலையிருளில் தோற்றமளிக்கும் பாம்பிற்கும் கயிற்றிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கயிற்றை பாம்பாக பார்ப்பது நம் அறியாமை. அதுபோல் பரமனை உலகமாக பார்ப்பதும் நம் அறியாமை.

உலகம் மாயை  என்றால் பரமன் வெறும் கற்பனை என்று கூறமுடியாது. ஏனெனில் பரமனை பற்றிய விளக்கம் மட்டும் இல்லாமல் நம்மால் பரமனை நேரடியாக உணரவும் முடியும். கண், காது போன்ற ஐந்து புலன்கள் நம்மிடம் இல்லாவிட்டால் உலகம் உடனே மறைந்துவிடும். ஆனால் நான் இருக்கிறேன் என்பதை மிகத்தெளிவாக உணர்வோம். இருக்கும் அந்த நான்தான் பரமன்.

ஆக முழுவதும் விளக்கமுடிவதாலும் இருப்பதை நேரடியாக உணர்வதாலும் பரமன் மட்டுமே உண்மையில் இருக்கிறான். உலகம் இருக்கிறது என்பது கனவில் கனவுலகம் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை. உலகம் இருப்பதாக உணர்கிறோமே தவிர உண்மையில் இல்லை என்பதை தர்க்கபூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நிரூபித்தபின் நான் பரமன் என்ற நம் அறிவு உறுதிபடும்.

முடிவுரை :

விழித்தவுடன் கனவுலகம் எவ்வாறு பொய்யாகப்போகிறதோ அதுபோல வேதம் கூறும் நீயே அது என்ற வாக்கியம் புரிந்தவுடன் இந்த உலகம் கனவாகிவிடும். நம் கண்கள் உலகத்தில் உள்ள பொருள்களின் வண்ணத்தையும் வடிவத்தையும் மட்டும் காண்பிக்கின்றனவேயன்றி அவை உண்மையில் இருக்கின்றன என்று நம்மை நம்பச்சொல்லவில்லை. ஒரு மாயாஜாலகண்காட்சியில் அமர்ந்திருக்கும்பொழுது காணும் வினோதகாட்சிகள் எவ்வளவு உண்மையாக நம் கண்ணுக்கு காட்சி அளித்தாலும் அவற்றை நாம் உண்மை என்று நம்புவது இல்லை. ஆனால் தத்ரூபமாக தெரியும் இந்த உலக நிகழ்வுகளை மட்டும் ஆராயாமல் உண்மை என்று ஏற்றுக்கொள்வது அறியாமை. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்.

தீர விசாரித்தால் உலகம் இருப்பதுபோல் தெரியும் மாயத்தோற்றம் என்றும் இருப்பது பரமன் என்கிற நான் மட்டும்தான் என்ற உண்மை தெரியவரும்.


பயிற்சிக்காக :

1. வேதத்தில் கதைகள் கூறப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன?

2. நானே ஆனந்தம் என்பதை அறியத்தடையாய் இருப்பது எது?

3. ஒரு பொருள் இருக்கிறது என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும்?   

சுயசிந்தனைக்காக :

1. நம் ஐந்து புலன்கள் நம்மைச்சுற்றி ஒரு உலகம் இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை நம் மனதில் ஏற்படுத்திவருகின்றன என்றும் உண்மையில் உலகத்தில் திடப்பொருள் என்று எதுவுமே இல்லை என்றும் கூறும் குவாண்டம் பொறியியல் ஆராய்ச்சிகளின் நிரூபணங்களை ஆராய்க.

2. உண்மையான ஒரு ஆதாரம் இல்லாமல் பொய்யான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியுமா?