Showing posts with label Prayer. Show all posts
Showing posts with label Prayer. Show all posts

Wednesday, July 21, 2010

Lesson 131: All rituals are valid ( பிரம்ம சூத்திரம் 3.3.55-56 )

பாடம் 131: சடங்குகளின் அவசியம்
பாடல் 414 - 415 (III.3.55-56)

காலை எழுந்தவுடன் வாசல் தெளித்து கோலம் போடவேண்டும் என்று ஆரம்பித்து வாரம் ஒரு பொழுது உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்பது வரை வழக்கில் இருந்து வரும் பல்வேறு சடங்குகளின் அவசியத்தை இந்த பாடம் விளக்குக்கிறது.

சடங்குகள் (rituals) என்றால் என்ன?

ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு அர்த்தம் தெரியாமல் பெரியவர்கள் நம் நல்லதிற்காக ஏற்படுத்தியுள்ள வழக்கம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யப்படும் அனைத்துச்செயல்களும் சடங்குகள் ஆகும். சடங்குகள் நமது நல்லதிற்காக என்பது உண்மையென்றாலும் அவை எவ்வாறு நமக்கு நன்மை பயக்கும் என்பதை பெரும்பாலோர் தெரிந்து கொள்வதில்லை. செய்யாவிட்டால் கடவுள் தண்டனை கொடுப்பார் என்ற தவறான பயத்தினால் இனம், மதம், நாடு என்ற பேதங்களை கடந்து உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆதிகாலம் முதல் இன்று வரை பல்வேறு  சடங்குகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.

சடங்குகளின் அவசியம்

இது இதனால் நடக்கும் என்ற காரண காரிய அறிவை ஆதாரமாக கொண்டு மனிதன் பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறான். பல சமயங்களில் செயல்களின் பலன்கள் அவன் எதிர்பார்த்தது போல் அமைவதில்லை. மேலும் பொருளாதார அடிப்படையில் எவ்வளவு சாதித்தாலும் நிரந்தரமான அமைதி மனதுக்கு கிடைப்பதில்லை. எனவே சடங்குகள் செய்வதன் மூலம் கடவுளர்களை திருப்தி செய்து தம் சொந்த முயற்சியால் அடையமுடியாத நிம்மதியான வாழ்வை அடையலாம் என்ற எண்ணம்தான் சடங்குகள் தொடர்வதற்கு காரணம்.  

சடங்குகளிடையே வேறுபாடு

உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு சடங்குகள் இருந்து வருகின்றன. கடவுளை காரணம் காட்டித்தான் சடங்குகள் தொடங்கப்பட்டிருந்தாலும் யாரும் நேரடியாக கடவுளின் செய்தியை படித்து சடங்குகள் செய்யும் விதத்தை தெரிந்து கொள்வதில்லை. வழிவழியாக குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்களது அறிவுக்கு எட்டியபடி சடங்குகளை தங்கள் சந்ததியருக்கு கற்றுகொடுப்பதனால் காலம் மாறும்பொழுது தொடர்ந்து சடங்குகளும் மாறிக்கொண்டேவருகின்றன.

காரணம் தெரியாமல் செய்வதுதான் சடங்கு என்பதால் எல்லோரும் ஒரேமாதிரி அவற்றை செய்யவேண்டிய அவசியமில்லை. அவரவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள வழக்கங்களை (tradition) பின்பற்றுவதுதான் சரி. தாங்கள் செய்வதைபோல் அல்லாமல் வேறுமாதிரி செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக எந்த ஒரு சடங்கையும் தவறு என்று முடிவுசெய்ய முடியாது. தனக்கு சரியாக வழிகாட்ட குடும்பத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் வேதத்தை படித்து புரிந்து கொண்டவர்களை அணுகி சடங்குகளை செய்யும் விதத்தை கற்று அறியலாம்.

எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம், என்ன உணவு உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம், உறவுகளை எவ்விதம் வளர்த்துக்கொள்ளலாம் என்பதுபோன்ற உலக விஷயங்களில் கூட எவ்வித ஒற்றுமையுமில்லாதபோது காரணம் தெரியாமல் செய்யும் சடங்குகள் வேறுபடுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

சடங்குகள் செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனப்பான்மை

இயந்திரங்கள் போல ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக சடங்குகளை பின்பற்றுபவர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை. முன்னோர்களால் விதிக்கப்பட்டது என்ற பயபக்தியுடன் செய்பவர்கள் மட்டுமே காலப்போக்கில் சடங்குகள் செய்வதன் பலனை அடைவார்கள்.

சடங்குகளின் பலன்

அறிவியலின் அடிப்படையில் சடங்குகள் செய்வதன் பலனை ஆராய்வது மிகவும் தவறு. கோலம் போடுவதனால் கால்முட்டி மடங்கி நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது என்பதும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பதும் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் இந்த காரணங்களுக்காக சடங்குகளை செய்யகூடாது. காரணம் தெரிந்துவிட்டால் சடங்குகள் சடங்குகளாக இருக்காது. ஆரோக்கியமாக இருக்கவும் வாழ்வில் வளம்பெறவும் சடங்குகளைச்சார்ந்திருக்காமல் அறிவியலின் அடிப்படையில் முயற்சிசெய்வதுதான் புத்திசாலித்தனம்.

காரணம் தெரியாமல் கடவுளுக்காக செய்யப்படும் சடங்குகள் மட்டுமே முக்தி என்னும் சரியான பலனை மக்களுக்கு கொடுக்கும்.

இருவகை மனிதர்கள்

சடங்குகள் செய்வதன் இறுதியான காரணத்தை அறிந்து கொள்ளத்தேவையான புத்திகூர்மை உள்ளவர்கள் வேதத்தை முறைப்படி ஆசிரியரிடம் பயின்றால் ஏன் சடங்குகளை செய்யவேண்டும் என்பதற்கு பதில் தெரிந்துவிடும். கேள்விகேட்டு பதிலை புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் இல்லாதவர்கள் தொடர்ந்து பயபக்தியுடன் சடங்குகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் மனம் பண்பட்டு செய்த நல்ல காரியங்களின் பலனாக நல்லாசிரியரைப்பெற்று வேதத்தை படித்து புரிந்துகொள்ளும் தகுதியை அவர்களும் பெற்றுவிடுவார்கள்.

ஆக கேள்வி கேட்கும் திறன் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் ஆகிய இருவகை மனிதர்களும் சடங்குகள் செய்வதன் இறுதிப்பலனான முக்தியை பெற்றுவிடுவார்கள். அனைத்து மக்களும் வாழ்வில் சரியான பாதையில் பயணிக்க வழிவகுக்கும்வகையில்தான் வேதம் சடங்குகளை ஏற்படுத்தியுள்ளது.

சடங்குகள் சமயத்தின் அடிப்படையில் உண்டாக்கப்பட்டவை. எனவே அதற்கு உண்டான விளக்கங்களை அறிவியலின் அடிப்படையில் தேடக்கூடாது. ஒன்றா சடங்குகளை கேள்விகள் கேட்காமல் பின்பற்றவேண்டும். இல்லையெனில் வேதத்தை படித்து சடங்குகள் செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். வேதம் இரு பகுதிகள் கொண்டது. வேத பூர்வம் என்கிற முதல் பாகம் கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டிய சடங்குகளை விவரிக்கும் பகுதி. வேதத்தின் இரண்டாம் பகுதி உபநிஷதங்களை உள்ளடக்கிய வேதாந்தம். இது ‘முடிவான அறிவு’ அல்லது ‘அறிவின் முடிவு’ ஆகிய இருவேறு பொருள்களை கொண்டது. கேள்வி கேட்டு பதிலை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனுடைய மக்கள் படிக்கவேண்டிய பகுதி இந்த வேதாந்தம் மட்டும்தான்.

வேதாந்தத்தை படிக்காமல் இருப்பவர்கள் சடங்குகளை பின்பற்றுவது மிக அவசியம். முறைப்படி வேதாந்தத்தை ஆசிரியரிடம் பயிலுபவர்கள் எவ்வித சடங்குகளையும் செய்யாமல் இருப்பதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் படித்து முடித்தவுடன் சடங்குகளின் அவசியத்தை தெரிந்து கொண்டு அவர்கள் அனைத்தையும் முறையாக பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

அர்த்தமுள்ள சடங்குகள்

தர்மம் தலைகாக்கும் என்ற தொடருக்கு முடிந்தவரை யாரையும் துன்புறுத்தாமல் மற்றவர்களுக்கு நன்மை தரும் செயல்களை செய்பவர்கள், தங்கள் புண்ணியத்தின் பலனாக சரியான ஆசிரியரை பெற்று மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள் என்பது பொருள். மக்களை தர்மமான முறையில் வாழத்தூண்டுவதால் சடங்குகள் அர்த்தமுள்ளவை. குடும்ப வழக்கில் உள்ள அனைத்து சடங்குகளையும் முறையாக செய்பவர்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கடவுள் யார் என்று காட்டிகொடுத்து முக்தியடையச்செய்ய சடங்குகள் உதவுகின்றன.

சடங்குகள் என்பது உடலினால் செய்யப்படும் உபாசனயோகம். மனதில் கடவுளின் நாமத்தையோ புகழையோ ஜெபிப்பது உபாசனயோகம். அவ்வாறு மனதில் தொடர்ந்து கடவுளை உபாசனை செய்யும் திறன் இல்லாதவர்களுக்கு சடங்குகள்  கடவுளிடம் பக்திசெலுத்த துணை செய்கின்றன.

இராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு நாட்டுப்பற்று அவசியம். நாட்டிடம் பற்றை வளர்த்துக்கொள்ள அவர்களும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்துதல் என்பது போன்ற பல சடங்குகளை தொடர்ந்து செய்கிறார்கள். இப்படித்தான் நிற்க வேண்டும் அல்லது நடக்க வேண்டும் என்பது போன்ற இராணுவத்தின் சடங்குகளை அவர்கள் கடைபிடிப்பதற்கு அறிவியலின் அடிப்படையில் எவ்வித காரணமும் கிடையாது. உடல் மண்ணுக்கு உயிர் நாட்டுக்கு என்று வாயளவில் அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை இது போன்ற சடங்குகளை பின்பற்றி மனதில் ஆழமாக பதியவைத்துக்கொள்கிறார்கள்.

இதேபோல்தான் மனதில் கடவுள் பக்தியை வளர்த்துக்கொள்ள உடலளவில் சடங்குகள் செய்வது பலருக்கு மிக அவசியமாக இருக்கிறது. எனவே சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்று நினைப்பதோ அவற்றை பின்பற்றுபவர்களை ஏளனமாக பார்ப்பதோ முட்டாள்தனம். குடியரசுதினத்தை கொண்டாடுவதை விட கடவுளின் பெயரால் வழக்கத்தில் இருந்து வரும் ஆடி அமாவாசை, தைப்பூசம், இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களை கொண்டாடுவது மிக அவசியமானது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவப்பது, திருமண ஆண்டுநிறைவை நினைவுபடுத்த ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்துக்கொள்வது என்பது போன்ற சடங்குகள் மனிதர்களுக்கிடையே உள்ள உறவை பலபடுத்த உதவுவது போல பொங்கல், தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் பின்பற்றும் சடங்குகள் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை பலபடுத்த உதவுகின்றன.

முடிவுரை :

எப்பொழுதும் பணம், புகழ், பதவி என்று வெளியுலகில் உழைத்துகொண்டிருக்கும் மனிதனுக்கு கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்துவது சடங்குகள் ஆகும். சடங்குகளை செய்வதனால் வெளியுலகில் சஞ்சரிக்கும் மனது உள்நோக்கி திரும்பும். முதலில் உடலளவில் கடவுளுக்காக சடங்குகள் செய்ய ஆரம்பித்து நாளடைவில் மனதளவில் உபாசன யோகம் செய்யும் தகுதியை அடைந்து கடைசியாக வேதத்தை படித்து கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை சடங்குகளை பின்பற்றுவதன் மூலம் மனிதன் பெறுகிறான்.

எனவே முக்தியடைய முதல் படியாக சடங்குகளை பின்பற்றுவது, கேள்விகள் கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களுக்கு அவசியமாகிறது. முதல்படியை கடந்து முடிவான முக்தியை அடைந்தவர்களும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டும்பொருட்டு சடங்குகளை பின்பற்றுவார்கள். எனவேதான் எவ்வளவுதான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னும்கூட சடங்குகள் தொடர்ந்து உலகில்  பரவலாக வழக்கில் இருந்து வருகின்றன.

பயிற்சிக்காக :

1. சடங்குகள் என்றால் என்ன?

2. சடங்குகளின் அவசியம் என்ன?

3. சரியான முறையில் சடங்குகளை பின்பற்றுவது எப்படி?

4. சடங்குகள் செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனோபாவம் என்ன?

5. சடங்குகளின் இறுதிப்பயன் என்ன?

6. இருவகை மனிதர்கள் யார் யார்?

சுயசிந்தனைக்காக :

1. வேதத்தில் கூறியபடியல்லாமல் வேறுமாதிரி சடங்குகளை செய்வதால் பாவம் ஏற்படுமா?

2. சடங்குகளை பின்பற்றாதவர்களின் நிலை என்ன?

3. தர்மம் எவ்வாறு தலையைக்காக்கும்?

4. வேதாந்தம் என்ற சொல்லின் இருபொருள்களுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன?

Tuesday, May 4, 2010

Lesson 120: Meditation for reaching Brahman ( பிரம்ம சூத்திரம் 3.3.33 )

பாடம் 120: பரமனை அடைய தியானம்
பாடல் 392 (III.3.33)

பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று “ஓ கார்கி!, பரமனை உணர்ந்த பிராமணர்கள் இந்த நித்தியமானதை நீளமானதுமல்ல குட்டையானதுமல்ல என்று குறிப்பிடுகிறார்கள்” என்கிறது. பிடிபடமுடியாத, அறிந்துகொள்ள முடியாத அதற்கு ஜாதியும் கிடையாது, குடும்பமும் கிடையாது என்று முண்டக உபநிஷதம் கூறுகிறது. இந்த மந்திரங்களின் விளக்கமாக பரமனை அடைய தியானத்தின் பங்கு என்ன என்ற கருத்தை இந்த பாடம் விவரிக்கிறது.

பரமனுக்கு ஜாதிகிடையாது

சூத்திரனும் பரமனே. ஆகவே பரமனை அடைவது என்பதற்கு பரமன் அல்லாதவைகளை நீக்கி பரமனை அறிந்து கொள்வது என்று பொருள். அதனாலேயே பரமனை அறிந்தவர்கள் பரமனாகவே ஆகிவிடுவார்கள் என்று வேதம் கூறுகிறது. சூத்திரனாய் இருப்பவனுக்கு தான் பரமன் என்பது புரியாது. ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களின் கலவை தனிமனிதனின் அறியும் திறனை தீர்மானிக்கிறது. படிப்படியாக வேதம் கூறும் பாதையில் பயணித்து பரமனை அறிந்து கொள்ள தடையாய் இருக்கும் சக்தி மற்றும் ஜட தனிமங்களின் ஆதிக்கத்தை குறைத்து பிராமணனாய் மாறி பரமனை அடைய வேண்டும்.

பரமனுக்கு குடும்பம் கிடையாது

மாணவப்பருவத்தில் பரமனை அறிந்து கொள்ளாமல் இல்வாழ்வை துவங்கியவர்களுக்கு ‘எதனுடனும் சம்பந்தபடாமல் அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவன் நீ’ என்ற கருத்தை வேதம் கூறுகிறது. இந்த உண்மையை புரிந்து கொள்ள முதலில் கர்மயோகம் செய்து மனத்தூய்மையை பெற்று பிறகு தியானம் செய்வதன் மூலம் மனஒருமைப்பாட்டை அடைய வேண்டும்.

வேதம் வகுத்த வழி

இருப்பதை சரியாக உபயோகபடுத்தினால்தான் இல்லாததை பெறமுடியும். எனவே மூன்று தனிமங்களின் இருப்பிற்கு ஏற்றாற்போல் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் தன்மைகேற்றபடி செய்யவேண்டிய செயல்களையும் அவற்றை செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனப்பாங்கையும் (Attitude) வேதம் இங்கு தருகிறது.

சூத்திரர்கள்: இவர்கள் தாங்களாக முயன்று எந்த வேலையையும் செய்யாவிட்டாலும் மற்றவர்களின் தூண்டுதலின் பெயரில் வேலைகள் செய்வார்கள். அவ்வாறு செய்யும்பொழுது இவர்களுக்கு ‘நான் இதை செய்கிறேன்’ என்ற எண்ணமோ இதனால் எனக்கு என்ன நன்மை என்ற ஆராயும் தன்மையோ இருக்காது. இவர்களின் எதிர்பார்ப்பு குறைவாய் இருப்பதால் இறைவன் படியளந்தது இவ்வளவுதான் என்று கிடைப்பதை ஏற்றுக்கொள்வார்கள். தங்கள் வறுமையை பற்றியும் வாழ்வின் மற்ற துன்பங்கள் பற்றியும் இவர்கள் அவ்வளவாக புகார் செய்யமாட்டார்கள்.

பல்வேறு பூஜைகளையும், சடங்குகளையும் செய்யவேண்டும் என்கிற சம்பிரதாய பழக்க வழக்கங்கள்  மூலமாக வேதம் இவர்களை அதிக வேலை செய்ய தூண்டுகிறது. பணம் நிறைய பெற்று செல்வசெழிப்புடன் வாழ இவர்களுக்கு ஆசையை ஏற்படுத்தி அதை அடைய கடவுளுக்கு படைக்க வேண்டிய பொருள்கள் என ஒரு பெரிய பட்டியலை வேதம் கொடுக்கிறது.  கடவுளுக்கு படைப்பதை பிரசாதமாக பெற்று பழக பழக இன்னும் அதிகம் வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு ஏற்படுகிறது. வேதத்தின் கட்டளையை ஏற்று அதன் படி நடக்கும் சூத்திரர்கள் அதிகமாக உழைக்க ஆரம்பித்து அதன் விளைவாக அதிக அறிவையும் வேலை செய்யும் திறனையும் பெற்று கூடிய விரைவில் வைசியனாகிவிடுவார்கள்.

வைசியர்கள்: இவர்களுக்கு ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற எண்ணங்களின் தாக்கம் மிக அதிகம். எனவே இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக உழைக்கும்பொழுது ‘நான் இந்த பயனுக்காக வேலை செய்கிறேன்’ என்று செய்த வேலைக்கு ஏற்ற பலன் கிடைக்கிறதா என்று கணக்கு பார்த்து வேலை செய்வார்கள். தங்களுக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை இவர்களுக்கு ஞாபகபடுத்த செய்த வேலையிலும் கிடைக்கும் பலனிலும் எப்பொழுதும் இவர்களுக்கு திருப்தி ஏற்படாமல் வேதம் பார்த்துக்கொள்ளும். எனவே இவர்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டு தர்ம சிந்தனையுடன் சமூகநல தொண்டுகளை செய்ய ஆரம்பிப்பார்கள்.

சுயநலத்தை விட பொதுநலம் கருதி இவர்கள் உழைக்க ஆரம்பிக்கும் பொழுது இவர்கள் சத்திரியர்களாகிவிடுவார்கள்.

சத்திரியர்கள்: நாட்டின் முன்னேற்றத்திற்கும் உலக ஒற்றுமைக்கும் பாடுபடும் இவர்கள் எவ்வளவுதான் தன்னலமின்றி உழைத்தாலும் தங்கள் உழைப்பு கடலில் கரைத்த பெருங்காயத்தைப்போல் பலனின்றி போவதை பார்க்கும் அதே நேரத்தில் உலகம் தன்னைதானே சரிபடுத்திக்கொண்டு ஒவ்வொரு வீழ்ச்சியிலிருந்தும் எழுந்து முன்னேறுவதை பார்த்து ‘நான் எதையும் செய்பவன் அல்ல. அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லை’ என்ற உண்மையை உணரத்துவங்குவார்கள். அதன் பின் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வேதத்தை பயில ஆரம்பிக்கும்பொழுது இவர்கள் பிராமணர்களாக மாறுவார்கள். வேலை செய்வது மனதை தூய்மைபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் என்ற மனப்பாங்குடன் இவர்கள் பலனை எதிர்பார்க்காமல் தங்கள் முழுத்திறமையை கொடுத்து கர்மயோகமாக அனைத்து வேலைகளையும் செய்வார்கள்.

பிராமணர்கள்: மனத்தூய்மை அடைந்தபின் பரமனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிரத்துடன் தகுந்த ஆசிரியரின் துணையை நாடி தங்கள் வாழ்வின் மிகமுக்கியமான வேலையாக இவர்கள் வேதத்தை படிப்பார்கள். தன் எண்ணம், வாக்கு, செயல் ஆகிய மூன்றையும் பரமரகசியத்தை அறிந்து கொள்வதற்காகவன்றி வேறு எதற்கும் உபயோகபடுத்தமாட்டேன் என்று உறுதிபூணுவதற்காக உபநயனம் என்கிற சடங்கில் பூணூலில் மூன்று முடிச்சிட்டு உடலை கட்டிக்கொள்வார்கள. இந்த தீவிரத்துடன் வேதத்தை படிப்பவர்கள் நிச்சயம் பரமனை வெகு விரைவில் அறிந்து கொள்வார்கள்.

ஞானிகள்:  பரமனை அறிந்து கொண்டபின் வேதம் இவர்களை கட்டுப்படுத்தாது. இவர்களது உடல் தொடர்ந்து மூன்று தனிமங்களின் தாக்கத்தில் செயல்பட்டாலும் இவர்களது அறிவின் தரத்தால் தோன்றும் எண்ணங்களும் செய்யும் செயல்களும் கடவுளின் ஆணைப்படியே அமைந்திருக்கும். சிற்பியின் கையில் இருக்கும் உளியைப்போல கடவுளின் கையில் இருக்கும் கருவியாக மாறி உலகை செதுக்க இவர்கள் தொடர்ந்து உழைப்பார்கள்.

ஜெகசிற்பி

வெறும் கல்லை யாரும் மதிப்பது கிடையாது. ஆனால் கற்சிலை கடவுளாக வழிபடபடுகிறது. கல்லிலிருந்து சிலையை உருவாக்க புதிதாக எந்த பொருளையும் சேர்க்கவேண்டியதில்லை. சிலையல்லாத பகுதியாக தெரிபவைகளை கல்லிலிருந்து நீக்குவதால் கல்லில் ஒளிந்துள்ள சிலை வெளிப்படுகிறது.

சாதாரண மனிதனை பரமனாக மாற்ற புதிய பொருள் எதையும் சேர்க்க வேண்டியதில்லை.  பரமனை அடையாளம் கண்டுகொள்ள ஜெகசிற்பியான இறைவன் படிப்படியாக மனிதனை செதுக்கும் செயல் தொடர்ந்து பூமியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

முடிவுரை :

மனிதனை பரமனாக மாற்ற மூன்று கட்டங்களை வேதம் வகுத்துள்ளது.

முதல் கட்டம்: கர்ம யோகம்

இன்பத்தையும் துன்பத்தையும் உலகம் நமக்கு தருகிறது என்ற அறியாமை இருக்கும் வரை மனிதன் உலகத்தை மாற்ற முயன்றுகொண்டிருப்பான். கர்மயோகம் செய்வதன் மூலம் இந்த அறியாமை நீங்கி மனிதன் மனப்பக்குவம் பெறுவான்.

இரண்டாம் கட்டம்: தியானம்(உபாசன யோகம், ராஜயோகம், அஷ்டாங்க யோகம்)

உடலாலும் வாக்காலும் செய்யவேண்டிய செயல்களை கர்மயோகமாக செய்தபின் மனிதன் தியானம் செய்ய தயாராகிறான். தியானம் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி பரமனை பற்றிய ஞானத்தை பெற மனிதனை தயார் செய்கிறது.

மூன்றாம் கட்டம்: ஞான யோகம்

கர்மயோகம் மற்றும் தியானம் ஆகிய இரு செயல்களையும் முறையாக செய்தபின் தகுந்த ஆசிரியரிடம் சரணடைந்து வேதம் படிப்பதன் மூலம் பரமனை அறிந்து பரமனாகவே மனிதன் கடைசியில் மாறிவிடுகிறான்.

பிரம்ம சூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதியில் இதுவரை கர்மயோகம் பற்றியும் கர்மயோகத்தை சரியாக செய்யத்தேவையான அடிப்படை வசதிகளும் விளக்கபட்டன. இனி இந்த பகுதியில் எஞ்சியுள்ள பாடங்கள் தியானம் செய்வது எப்படி என்றும் தியானம் செய்வதற்கான அடிப்படை தேவைகள் பற்றிய விவரங்களையும் தருகின்றன.   

பயிற்சிக்காக :

1.  பரமனுக்கு ஜாதியில்லை என்ற கருத்தை விளக்குக.

2. பரமனுக்கு குடும்பம் இல்லை என்ற கருத்தை விளக்குக.

3. சமுதாயத்தின் நான்கு பிரிவினர் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

4. செயல்களை செய்யும்பொழுது அவர்களுக்கு இருக்கவேண்டிய மனப்பாங்கு என்ன?

5. மனிதனை பரமனாக மாற்ற வேதம் வகுத்த மூன்று கட்டங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஜெகசிற்பி, ஞானிகள், மக்கள் இந்த மூவருக்கும் உள்ள உறவு என்ன?

2. உபாசனயோகம் கர்மயோகத்தில் அடங்குமா?

3. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல எதற்காக இறைவன் மக்களை முதலில் அறியாமையுடன் படைத்து பின் படிப்படியாக அவர்களுக்கு அறிவை கொடுத்து பரமனாக மாற்ற முயல வேண்டும் ?

4. கர்மயோகத்தை செய்யத்தேவையான அடிப்படை வசதிகள் (infrastructure) என குறிப்பிடப்பட்டவை யாவை?

Thursday, March 25, 2010

Lesson 107: Self is higher than anything else ( பிரம்ம சூத்திரம் 3.3.14-15 )

பாடம் 107: உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு
பாடல் 373-374 (III.3.14-15)

கதோபநிஷத மந்திரம் ஒன்று தன்னை சரியாக அறிந்து கொண்டவன் மரணத்தை வெல்லுவான் என்று கூறுகிறது. நம்முடைய உடைமைகளை விவரித்து அவற்றின் தரத்திற்கு நாம் மட்டும்தான் பொறுப்பு என்ற வேதத்தின் கருத்தை விளக்குவதன் மூலம் நமது பொறுப்புணர்வின் முக்கியத்துவத்தை இந்த பாடம் அறிவுறுத்துகிறது.

நம்முடைய உடைமைகள் யாவை?

உடல், மனம், ஐந்து புலன்கள், ஐந்து கரணங்கள், சேர்த்து வைத்துள்ள பாவ புண்ணியங்கள், பல பிறவிகளில் உழைத்து அதன் மூலம் சேர்த்த அறியும் திறன், விருப்பு வெறுப்புகள், பிறந்தது முதல் செயல்களை செய்து சேர்த்அறிவு மற்றும் செயல்படும் திறன் உள்ளிட்ட நமது ஆளுமை (personality) ஆகியவை நம்முடைய நிரந்தர உடைமைகள். இவையனைத்தும் பிறவிகள்தோறும் நம்முடன் வரும். இவற்றை மூலதனமாக வைத்து இந்த பிறவியில் நாம் சம்பாதித்த பணம், பொருள், புகழ் போன்றவை நமது தற்கால உடைமைகள்.

நம் உடல் பிறந்ததிலிருந்து தொடர்ந்து வளர்ந்து மூப்படையும் தன்மையுடையது என்பதால் உடலைச்சார்ந்துள்ள வலிமை, திறமை ஆகியவை வயதானவுடன் குறையத்துவங்கும். எனவே மரணத்தில் இவ்வுடலை விட்டுவிட்டு அடுத்த பிறவிக்கு உண்டான உடலை நமது புண்ணியத்தின் அடிப்படையில் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எந்த பேற்றோருக்கு பிறப்போம் என்பதும் எவ்வளவு ஆரோக்கியத்துடனும் பிறப்போம் என்பதும் நமது பாவ புண்ணியத்தால் மட்டுமே தீர்மானிக்கபடுகிறது. விருப்பு வெறுப்புகளுடன் கூடிய மனம், அறிவுடன் கூடிய புத்தி, திறனுடன் கூடிய ஐந்து புலன்கள் மற்றும் ஆற்றலுடன் கூடிய ஐந்து கரணங்கள் ஆகியவையும் பிறவிகள் தோறும் நம்முடன் வருகின்றன.

எனவே நமது நிரந்தர உடைமைகளின் தற்போதைய நிலைமைக்கு நாம் மட்டுமே காரணம். என் சக்கரை வியாதிக்கு அப்பாவும் முன்கோபத்திற்கு அம்மாவும் காரணம் என்று நம்முடைய நிலைக்கு யாரையும் பழிசொல்ல கூடாது. எது எப்படி இருக்கிறதோ அதற்கு நாம் மட்டுமே காரணம்.

நமது தற்கால உடைமைகள் அனைத்தும் இந்த பிறவியில் நமது செயல்பாட்டால் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன. இவற்றிற்கும் வேறு யாரும் காரணமல்ல.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 1 : பெற்றோர்கள் காரணமல்ல

நம் பெற்றோரை தேர்ந்தெடுத்ததே நாம்தான் என்பதால் நம் உடலில் உள்ள நிறை குறைகளுக்கு மரபணுக்கள் (genetics) காரணம் என்று நமது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் செய்த பாவ புண்ணியங்களுக்கு பொறுப்பேற்று கொண்டு இந்த பிறவியில் முடிந்த அளவு தர்மகாரியங்கள் செய்து மற்றவர்களை சொல்லாலும் செயலாலும் துன்புறுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 2 : வளர்க்கப்பட்ட விதம் காரணமல்ல

பெற்றோர்கள் நமது ஆளுமைக்கு காரணம் என்றால் நம்முடன் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பதற்கு காரணம் என்ன? அதே பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளிடையே இருக்கும் ஏறுக்கு மாறான முரண்பாடுகள் நாம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு நமது பெற்றோர்கள் துளியளவு கூட பொறுப்பல்ல என்பதை தெள்ளத்தெளிவாக காண்பிக்கின்றன.

சிறு வயதில் என் தந்தை கூறிய இந்த வாசகம்தான் என் வெற்றிக்கு காரணம் என்று வாழ்வில் வெற்றியடைந்த ஒரு சிலர் கூறுவதை கேட்டிருக்கலாம். இது முற்றிலும் தவறான  கருத்து. ஒரு தந்தையோ தாயோ தம் மக்களின் நல்வாழ்விற்காக ஆயிரம் உபதேசங்கள் செய்திருப்பார்கள். அவற்றில் ஏதோ ஒன்றிரண்டை மனதில் பதிய வைத்து பின்பற்ற முடிவு செய்தது நாம்தான். எனவே பெற்றோர்கள் வளர்ப்பு எப்படியிருந்தாலும் அது ஒருவரது வாழ்வை எவ்விதத்திலும் பாதிப்பது இல்லை என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 3 : ஆசிரியர் காரணமல்ல

உலகத்தில் உள்ள எந்த ஆசிரியருக்கும் அறிவை வழங்கும் திறன் கிடையவே கிடையாது. ஒரு வேளை ஒரு ஆசிரியருக்கு இந்த திறமை இருக்குமேயானால் அவர் விரும்பியவர்களுக்கெல்லாம் அவரால் அறிவை கொடுக்க முடிந்திருக்கும். நாற்பது மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் பாடம் நடத்த மட்டுமே அவரால் முடியும். அவரின் வார்த்தைகளை அறிவாக மாற்றும் திறன் மாணவர்களுக்கு மட்டும்தான் உண்டு. படகிற்கு யாரையும் கரைசேர்க்கும் திறமை கிடையாது. படகை பயன் படுத்தி யார் வேண்டுமானாலும் நதியை கடக்கலாம். அது போல ஆசிரியரை பயன்படுத்தி அறிவை அடைவது நம் கையில் மட்டுமே இருக்கிறது.

இந்த ஆசிரியர் மிகத்திறமையாக சொல்லிக்கொடுக்கிறார் என்று கூட சொல்ல முடியாது. எப்படி சொல்லிக்கொடுத்தால் புரியும் என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் வேறுபடும். ஆசிரியரும் ஒரு மனிதர்தான். அவர் தனக்கு தெரிந்த வகையில் சொல்லிக்கொடுக்கிறார். அந்த முறை ஒரு குறிப்பிட்ட மாணவனுக்கு ஏற்புடைய விதத்தில் இருந்தால் அவன் புரிந்து கொள்கிறான். எனவே  நன்றாக சொல்லிக்கொடுப்பது என்றால் என்ன என்பதை தீர்மானிப்பது புரிந்து கொள்ளும் மாணவன் மட்டுமே.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 4 : நண்பர்கள் காரணமல்ல

உன் நண்பர்களை பற்றிச்சொல், நான் உன்னை பற்றி சொல்கிறேன்என்ற கூற்று மிகவும் உண்மை. ஏனெனில் நமது நண்பர்களை நாம்தான் தீர்மானிக்கிறோம். இனம் இனத்தோடுதான் சேரும் என்பது போல் நாம் இப்படியிருப்பதால் இது போன்ற நண்பர்கள் நம்மை சூழ்ந்து இருக்கிறார்களே தவிர நண்பர்கள் நம் நிலமைக்கு காரணம் அல்ல. நமது விருப்பு வெறுப்புகள் நம்முடன் பிறந்தவை. எனவே நமக்கு பிடித்தவர்களை நண்பர்களாக நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். நண்பர்களுடன் சேர்ந்து வளர்த்து கொண்ட பழக்கவழக்கங்கள் நண்பர்களை சார்ந்து இருப்பதில்லை.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 5 : பெரியவர்கள் காரணமல்ல

அலுவலகத்தில் உடன் உழைப்பவர்களோ அல்லது நமது முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களோ நமது நிலைக்கு காரணம் அல்ல. நமது திறமை மற்றும் நமது பாவ புண்ணியங்கள் மட்டுமே நமது பொருளாதார வளர்ச்சிக்கு காரணம்.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 6 : கிரகங்கள் காரணமல்ல

நான் இப்பொழுது கஷ்டபடுவதற்கு சனி கிரகம் காரணம் என்றோ பண வரவுக்கு குரு பெயர்ச்சி காரணம் என்றோ கூறுவது முட்டாள்தனம். ஆறு மணிக்கு சூரியன் அஸ்தமனமாகும் என்றால் சூரியன் எப்பொழுது மறையும் என்பதை கடிகாரம் முடிவுசெய்வதாக அர்த்தம் செய்து கொள்ள கூடாது. ஜாதகம், ஜோசியம், எண் சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம் இவை அனைத்தும் கடிகாரத்தைப்போல நமக்கு நன்மை தீமைகள் ஏற்படுவதை சுட்டிக்காட்டும் கருவிகளே தவிர நமது நிலையை தீர்மானிப்பவை அல்ல. நமக்கு நல்ல காலமா அல்லது கெட்டகாலமா என்பதை முடிவு செய்வது நமது செயல்களால் விளைந்த பாவ புண்ணியங்கள் மட்டுமே.

ஜோதிடர் நமக்கு கஷ்டகாலம் என்பதை ஜாதகத்தை பார்த்து சொல்லவேண்டிய அவசியம் இல்லை. கஷ்டகாலம் என்பதால்தான் நாம் அவரிடம் செல்கிறோம். அவர் நமது கஷ்டகாலத்தை நீக்குவதற்காக மூன்று சினிமா பார், ஊட்டிக்கு உல்லாச பயணம் சென்று வா என்பது போன்ற இன்பகரமான பரிகாரங்களை சொல்வதில்லை. ஏற்கனவே படும் கஷ்டம் போதாதென்று அவர் கூறும் பரிகாரங்களை வேறு செய்யவேண்டும். மூன்று நாட்களில் ஜலதோஷம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது மருத்துவர் கொடுத்த மருந்தினாலா அல்லது அதை சாப்பிடாமல் விட்டிருந்தாலும் சரியாகியிருக்குமா என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்க முடியாதோ அது போல நம் கஷ்டகாலம் முடிந்ததற்கு பரிகாரம் செய்ததுதான் காரணம் என்று  சொல்லவே முடியாது. பரிகாரம் செய்ததே நமது கஷ்டகாலத்தின் ஒரு பகுதிதான்.  எனவே நமது கஷ்டகாலத்துக்கு கிரகங்களை குறை சொல்வது பொறுப்பற்ற தன்மை.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 7 : கடவுள் காரணமல்ல

கடவுளுக்கு நமது கஷ்டத்தை போக்கும் சக்தி கிடையாது. சம்பளத்தை பட்டுவாடா செய்யும் கணக்கருக்கு ஊதிய உயர்வு வழங்கும் அதிகாரம் கிடையாது. அது போல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றிக்கு சேரவேண்டிய பாவ புண்ணியங்களின் விளைவுகளை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும் வேலையை செய்யும் கடவுளுக்கு பாரபட்சத்துடன் செயல்படும் அதிகாரம் கிடையாது.

இதனால் கடவுளை பிரார்த்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூற முடியாது. நாம் அனுபவிக்க வேண்டிய துன்பம் எவ்விதத்திலும் குறையாவிட்டாலும் கோவிலுக்கு சென்று தெய்வத்திடம் முறையிடுவதால் நமது மனதின் பாரம் குறைந்து சிறிது அமைதி ஏற்பட்டு துன்பத்தை எதிர்நோக்கும் சக்தி அதிகரிக்கும்.

எனவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் மற்றவர்களை ஒப்பிடும்பொழுது துன்பங்களை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும். இப்பொழுது நமக்கு நடப்பது நல்ல காலமா அல்லது கெட்ட காலமா என்பதை தீர்மானிப்பது நமது முந்தய செயல்கள். அவற்றை எப்படி எதிர்கொண்டு வாழ்வில் முன்னேறுகிறோம் என்பது நமது மனத்திண்மையையும் திறமையையும் பொறுத்து உள்ளது. எனவே நமது தற்போதைய நிலைக்கு நாம் மட்டுமே காரணமே தவிர கடவுள் காரணமல்ல.

மற்றவர்கள் என் நிலைக்கு காரணமல்ல 8 : சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமல்ல

தற்செயலாக நடந்தது என்றோ விபத்து என்றோ நம் வாழ்வில் எதுவும் எப்பொழுதும் நடப்பதில்லை. அறியாமை காரணமாக நாம் இது போன்று நமது பொறுப்பை தட்டிக்கழிக்கிறோம். நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் காரணம் நாம்தான். அதன் மூலம் அதிக அறிவை பெற்று வாழ்வில் முன்னேறுவதும் நாம்தான்.

நம் வாழ்வுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.

முடிவுரை :

நம் வாழ்வுக்கு நாம் முழுப்பொறுப்பேற்று கொள்வது அவசியம்.  அதாவது நாம் இன்று இந்த நிலையில் இருக்க நூறு சதவிகிதம் நாம் மட்டுமே காரணம் என்றும் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், கடவுள் போன்றோரின் பங்கு பூஜ்யம் என்றும் உணர்ந்து கொண்டால்தான் இனி நம் வாழ்வு இன்பமாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை நாம் முறையாக செய்வோம். இல்லையெனில் கிரகங்களின் போக்கு சரியாக இருக்கிறதா என்று பார்த்து காலத்தை விரயம் செய்து கொண்டு இருப்போம்.

தம் வாழ்வுக்கு முழுப்பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் தொடர்ந்து உழைத்து தங்கள் அறிவுத்திறனை வளர்த்துகொண்டு தகுந்த ஆசிரியரின் துணையுடன் நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை அறிந்து கொண்டு மரணத்தை வெல்லுவார்கள்.

பயிற்சிக்காக :

1. நம் உடைமைகள் எந்த அடிப்படையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

2.மற்றவர்கள் என் வாழ்வுக்கு பொறுப்பல்ல என்பதை விவரித்த எட்டு தலைப்புகள் யாவை?

3. நம் உடைமைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1.மரணத்தை எப்படி வெல்ல முடியும்?

2.என்றும் இன்பமாக இருக்க நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இந்த பகுதியில் கொடுக்கபட்ட பாடங்களில் இருந்து ஒரு பட்டியல் தயாரிக்கவும்.

Thursday, February 25, 2010

Lesson 96: The nature of Swoon ( பிரம்ம சூத்திரம் 3.2.10 )

பாடம் 96: மயக்கமா கலக்கமா?
பாடல் 328 (III.2.10)

மனதில் உள்ள குழப்பங்களுக்கு காரணம் நம்மை சுற்றியுள்ள நிகழ்வுகள் என்று நாம் நினைப்பது தவறு என்றும் நமது எண்ணங்களை சரியாக புரிந்துகொண்டால் நிம்மதியாக வாழலாம் என்றும் இந்த பாடம் விளக்கம் தருகிறது.

மறைந்திருக்கும் மர்மம்

வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையை நாம் எதிர்கொண்டாலும் அந்த பிரச்சனையை திறம்பட சமாளிக்க நமது மனதினுள் மறைந்திருக்கும் ஒரு எதிரியை நாம் அடையாளம் கண்டு அழிப்பது அவசியம். எல்லாமும் எப்பொழுதும் நம் விருப்பபடிதான் நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் இந்த எதிரி.

பத்து வருடங்களாக குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு பெரிய வீட்டிற்கு குடிபெயர்ந்தால் முதல் சில நாட்களுக்கு நிறைய சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆறுமாதம் ஆனபின் கூட பழைய வீட்டில் இருந்த ஏதோ ஒரு வசதி இங்கு குறைவாய் இருப்பது போல தோன்றிக்கொண்டே இருக்கும். இதற்கு காரணம் மனதின் பழகிப்போகும் தன்மைதான். சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி முதலில் மிகவும் கஷ்டப்பட்டாலும் நாளடைவில் சிறை வாழ்க்கைக்கு  பழகிவிடுவான். பல வருடங்கள் சிறையில் இருந்தபின் விடுதலை பெற்று வீடு திரும்பினால் சிறையிலேயே இருந்திருக்கலாமா என்ற எண்ணம் அவனுக்கு வராமல் இருக்காது.

நாம் எல்லோரும் அவரவரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பழக்கங்களை வளர்த்து கொள்கிறோம். அதனுடன் நில்லாமல் நம்மை சுற்றியுள்ள பழக்கமான உலகம் மாறாமல் நமக்கு சாதகமாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்  எல்லோரிடமும் உள்ளது. இந்த எதிர்பார்ப்புதான் நம் மனதில் ஏற்படும் மயக்கங்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமே தவிர வெளியுலகில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அல்ல.

எதிர்பார்ப்பினால் ஏற்படும் பிரச்சனைகள்

வெளியுலகில் நடக்கும் நிகழ்வுகளையும், ஏற்படும் சூழ்நிலைகளையும், மற்ற மனிதர்களின் செயல்பாடுகளையும் பிரச்சனைகளாக மாற்றுவதே நம் தவறான எதிர்பார்ப்புகள்தான்.

விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும்பொழுது ஒலிபெருக்கியில் இரண்டு மணிநேரம் தாமதம்என்ற அறிவுப்பை கேட்கிறோம். இது ஒரு நிகழ்வா அல்லது பிரச்சனையா? நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விமானத்தை பற்றிய அறிவுப்பு என்றால் அது தினமும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் அதுவே நாம் பயணம் செய்ய வேண்டிய விமானம் என்றால் மிகப்பெரிய பிரச்சனை. அது எப்படி எப்பொழுதும் சரியான நேரத்தில் பயணிக்கும் விமானம் இன்று தாமதாமாக கூடும், இருக்காது. நம்ப முடியவில்லை. இது உண்மையாக இருக்க கூடாது. இவ்வாறு ஒரு நிகழ்வை பிரச்சனையாக உருமாற்றும் வேலையை செய்வது நமது எதிர்பார்ப்பு மட்டுமே.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 1- பூதக்கண்ணாடி

விமான நிலையத்திற்கு வந்தபின் முடிக்கவேண்டிய பாதுகாப்பு சோதனை போன்ற கடமைகளை செய்துவிட்டு விமானத்திற்குள் ஏறும் அழைப்பை எதிர்பார்த்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் பொழுது அது இன்னும் இரண்டு மணிநேரம் தாமதமாக கிளம்பும் என்றால் அந்த இரண்டு மணிநேரத்தை எப்படி உபயோகமாக செலவிடலாம் என்று சாவகாசமாக ஒரு இடத்தில் அமர்ந்து யோசிக்க துவங்கலாம். அதை விடுத்து ஏன் இவ்வாறு நடக்கிறது, இரண்டு மணிநேரம் என்பது நான்கு மணிநேரமாக மாறினால் என்ன செய்வது, இன்று நிச்சயம் விமானம் இங்கிருந்து கிளம்புமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது போன்ற எண்ணங்கள் இரண்டு மணி நேரம் தாமதம் என்ற உண்மை நிகழ்வை பெரிதாக்கி இல்லாத பிரச்சனையை இருப்பது போல் காட்டும். விமானம் தாமதமாக கிளம்புவதால் நமது வாழ்நாழில் இரண்டு மணிநேரம் குறைந்து விடாது.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 2- தடை

நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் நம் விருப்பப்படிதான் எப்பொழுதும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரச்சனையை சரியான முறையில் எதிர்கொள்ளும் நமது திறமையை பெரிதளவும் குறைத்து விடும். உதாரணமாக விமானம் தாமதமாக கிளம்ப வாய்ப்புக்கள் உள்ளன என்ற உண்மையை மறுக்காமல் இருந்தோமானால் அது தாமதமாக கிளம்பும் என்ற அறிவுப்பு நம் நிதானத்தை குறைக்காது. அமைதியாக இப்பொழுது இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்க்கமாக யோசித்து அவற்றை பதட்டமில்லாமல் செயல்படுத்தலாம். அப்படியில்லாமல் ஏன் விமானம் தாமதமாகிறது என்பது போன்ற தேவையற்ற எண்ணங்கள் நம் இரத்த கொதிப்பை அதிகபடுத்தி  கவலையையும் எரிச்சலையும் உண்டாக்கி நமது சிந்திக்கும் திறனை பெருமளவு குறைத்து செய்ய வேண்டிய செயல்களை முறையாக செய்யவிடாமல் தடுக்கும்.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 3- துன்பம்

தானே வரவழைத்து கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே இல்லை. எல்லாம் திட்டமிட்டபடிதான் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதேனும் விரும்பத்தகாத மாற்றங்களை எதிர்கொள்ளும்பொழுது நம்மை மிகவும் துன்புறுத்தும். ஏற்கனவே நாம் செய்த செயல்கள் அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து இந்த விமானத்தில் டிக்கெட் வாங்கியிருக்க கூடாது, நேற்றிரவே ரயிலில் பயணித்திருந்திருக்க வேண்டும் என்பது போன்ற அனாவசியமான குற்றச்சாட்டுக்களை நம்மீது சாற்றி நாம் ஒரு கடைந்தெடுத்த முட்டாள் என்ற எண்ணத்தை நமக்குத்தரும். மேலும் நம்மை சுற்றியுள்ள அனைவரையும் நாம்செய்ததவறுக்கு காரணகர்த்தாக்களாக குற்றவாளி கூண்டில் ஏற்றிஎல்லாம் உன்னால்தான் இப்படி நடந்ததுஎன்று சண்டை போட வைத்து இருக்கும் உறவை கெடுத்து  மேலும் பல பிரச்சனைகளை நாம் உருவாக்கும்.

இரண்டு மணிநேர தாமதத்தினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை கற்பனை செய்துகொண்டு எதுவும் நடக்காதபோதே அவை நடந்துவிட்டது போன்ற அனுபவங்களை நமக்கு கொடுத்து நம்மை வாட்டி எடுக்கும். மேலும் இல்லாத பிரச்சனைகள் பலவற்றை உருவாக்கி புதை மணலில் மாட்டிக்கொண்டவன் போல் பிரச்சனையிலிருந்து வெளிவர நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் இன்னும் அழமாக துன்பத்திற்குள் நம்மை ஆழ்த்தும்.

இதுபோன்ற தவறான எதிர்பார்ப்பு ஏதுமில்லாதவர்கள் நடப்பது நல்லதாகவே நடக்கிறது என்று வெகு நாட்களாக ஒத்திப்போட்டுக்கொண்டிருந்த ஒரு காரியத்தை செய்யத்துவங்குவார்கள். உதாரணமாக  படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை படிக்க கிடைத்த அவகாசத்தை பயன்படுத்தி இன்பமாக இருப்பார்கள்.

அறியும் ஆவல்

விமானம் தாமதம் என்றால் ஏன் தாமதம் என்று அறிந்து கொள்ள பெரும்பாலானவர்கள் ஆவலாய் இருப்பார்கள். தாமத அறிவிப்பு தாமதத்திற்கான காரணத்தை சொல்லாவிடில் அலுவலகத்திற்கு சென்று விசாரித்து காரணத்தை அறிந்து கொள்ள துடிப்பார்கள். இன்ஜினில் கோளாறு என்றோ பைலட் இன்னும் வரவில்லை என்றோ ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். விமானத்தை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்பது விமான நிறுவனத்தின் பொறுப்பு. காரணத்தை நாம் தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன லாபம். அதிகமான விஷயங்களை தெரிந்து கொள்வதால் நமது கவலை அதிகரிக்குமே தவிர குறையாது.

எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எதையும் அறிந்து கொள்வது அவசியமில்லை என்பது இதன் கருத்தல்ல. நாம் நம் கடமைகளை சரிவர செய்ய தேவையானவற்றை மட்டும் தெரிந்துகொண்டு அதிகப்படியான தகவல்களை தவிர்க்க வேண்டும்.

ஏன், எதற்காக, எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு இறுதியான பதிலை யாராலும் சொல்ல முடியாது. நம் வாழ்வில் நடந்த எந்த ஒரு நிகழ்வையும் எடுத்துக்கொண்டு அது ஏன் அவ்விதம் நடந்தது என்று தொடர் கேள்விகள் கேட்டுக்கொண்டே சென்றோமானால் முடிவில்அது அப்படி நடக்க வேண்டும் என்பது விதிஎன்ற பதில்தான் கிடைக்கும். எனவே அந்த பதிலை முதலிலேயே ஏற்றுக்கொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிகழ்வுகளை எதிர்கொள்வது புத்திசாலித்தனம்.

கடவுள் பக்தி

மனதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க கடவுள் பக்தி மிக அவசியம். இவ்வுலகை படைத்த கடவுள் முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை. அதே போல் உலகை படைத்துவிட்டு ஏதோ ஒரு லோகத்தில் கடவுள் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கவில்லை. நமது அனைத்து செயல்களையும் சூழ்நிலைகளையும் கட்டுபடுத்தி நம்மை வழிநடத்தி செல்பவன் இறைவன். எனவே பின்வரும் இரண்டு உண்மைகளை ஞாபகப்படுத்திக்கொள்வது அவசியம்.

1. கடவுள்தான் அனைத்துக்கும் காரணம் : நம் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் கடவுள்தான் காரணம். எனவே பிரச்சனை என்று நாம் நினைக்கும் நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது அவன் சித்தம். எனவே ஏன், எதற்கு என்று கேளாமல் அந்த சூழலில் நாம் என்ன செய்யமுடியுமோ அதை மட்டும் செய்துவிட்டு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும்.

2. உலகத்தை மாற்ற முயல்வதை விட மனதை திருத்திக்கொள்வது அவசியம்: கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற மனபக்குவம் நமக்கு தேவை. இல்லையெனில் காலுக்கு செருப்பு போட்டுகொள்ளலாம். அதை விடுத்து பாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரிக்க முயற்சிப்பது அறியாமை.

வெட்ட வெட்ட மீண்டும் எழும் ஜராசந்தன் போல் வாழ்வில் பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும். இதுபோல் தொடர்ந்து பிரச்சனைகளை கடவுள் நமக்கு அளிப்பதன் ஒரே நோக்கம் நாம் நம் மனதை பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. மனதிற்கு சரியான அறிவையும் பயிற்சியையும் கொடுப்பதை ஒத்திப்போட்டுவிட்டு வெளி உலகை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பது அலைகள் ஓய்ந்த பின் குளிப்பதற்கு காத்திருப்பது போலாகும்.

முடிவுரை :

குழப்பம் நம் இயற்கையான சுபாவம் அல்ல. என்றும் நிம்மதியாக இருப்பதுதான் நமது இயற்கைத்தன்மை. எனவேதான் நம் மனதில் கலக்கமோ குழப்பமோ ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட துடிக்கிறோம்.
 
நிறைய பணம் சம்பாதித்து சமூகத்தில் ஒரு பெரிய மனிதர் என்ற பெயர் பெற்றுவிட்டால் நமக்கு வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளித்துவிடலாம் என்பது பகல் கனவு. ஏழைக்கு ஏற்படும் பிரச்சனைகளை விட பணக்காரனுக்கு ஏற்படும் பிரச்சனைகளே அதிகம். எனவே பொருளாதார ரீதியில் வளர வளர நமக்கு ஏற்படும் பிரச்சனைகளும் வளர்ந்து கொண்டே வரும்.

பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்கு வெளி உலகில் எவ்வளவு முயற்சி செய்கிறோமோ அதே அளவு நமது மனதை தீட்டிக்கொள்ளவும் நாம் முயற்சி செய்யவேண்டும். எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நிம்மதியாக இருக்கும் வரத்தை தா என்று கடவுளிடம் பிரார்த்திப்பதை தவிர்த்து எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் மன உறுதியை தருமாறு கேட்டுகொள்ள வேண்டும். வேதத்தை முறையாக ஆசிரியரின் கீழ் படித்து மனதை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும்.

மனம் செம்மையானால் வாழ்வில் பிரச்சனைகளே ஏற்படாது. ஏனெனில் எதுவும் பிரச்சனைகளாகவே தெரியாது. விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் என்பது நல்ல செய்தியாக மாறிவிடும்.  

பயிற்சிக்காக :

1. மனதில் ஏற்படும் குழப்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன?

2.எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு காரணம் என்ன?

3.எதிர்பார்த்தலின் மூன்று விளைவுகள் என்னென்ன?

4.மன குழப்பத்தை தவிர்க்க கடவுள் பக்தி எவ்விதத்தில் உதவுகிறது?

5.எப்பொழுதும் நிம்மதியாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. அனைத்தையும் அறிந்து கொண்டால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் அதிகரிக்காதா?

2. எல்லா மனிதர்களும் அவரவர் கடமைகளை ஒழுங்காக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

3.உலகத்தை திருத்தவே முடியாதா?