Showing posts with label Meditation. Show all posts
Showing posts with label Meditation. Show all posts

Sunday, December 12, 2010

Lesson 143: No food restrictions when life is in danger (Brahma Sutra 3.4.28-31)

பாடம் 143: உயிர் வாழ உணவு
பாடல் 453- 456 (III.4.28-31)

சாந்தோக்ய மந்திரம் (5.2.1) ஒன்று ‘இதை அறிந்தவனுக்கு எது வேண்டுமானாலும் உணவாகலாம்’ என்று கூறுகிறது. நான் பரமன் என்பதை அறிந்தவன் மரணத்தை வென்றுவிடுவதால் உயிர் வாழ அவனுக்கு எவ்வித உணவுக்கட்டுப்பாடும் கிடையாது என்பதை புரிந்துகொள்ள உதவும் விதத்தில் ‘உணவை உண்பவன் என்று யாருமே கிடையாது’ என்ற உண்மையை இந்தப்பாடம் விவரிக்கிறது.

உண்பவன் இல்லை

எது இருக்கிறதோ அதை இல்லை என்று சொல்ல முடியாது. எது இல்லையோ அதை இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. உண்பவன் இல்லை என்று வேதம் கூறுவதிலிருந்து எதை நாம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அது உண்மையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அனுபவத்திலும் அனுபவிப்பவர் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் என்ற ஆகிய இரண்டும் இருக்கும். அனுபவிக்கும் பொருள்கள் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தாலும் அனுபவிப்பவர் மாறுவதேயில்லை. நம் கவனம் எப்பொழுதும் அனுபவிக்கப்படும் பொருள்களின் மேல் மட்டுமே இருப்பதால்தான் அனுபவங்கள் நிறைவை  தருவதில்லை. எனவே அனுபவிப்பவரை ஆராய்ந்து அப்படியொருவர் இல்லை என்ற தெளிவை அடைவது அவசியம்.

அனுபவிப்பவர் உணர்வுடன் கூடியவர்

‘கண்ணன் வெண்ணை உண்டான்’ என்பது ஒரு அனுபவம். ‘வெண்ணைப்பானை உரியில் தொங்குகிறது’ என்பது ஒரு அனுபவம் அல்ல. ஏனெனில் இதில் சம்பந்தப்பட்ட இரண்டும் ஜடப்பொருள்கள். ‘கண்ணன் ராதையை முத்தமிட்டான்’. இதில் இரு அனுபவங்களும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஒரு அனுபவிப்பவர் மற்றும் ஒரு அனுபவிக்கப்படும் பொருளும் இருக்கிறது. அனுபவத்தின் தன்மையை தீர்மானிப்பது அனுபவிப்பவரே தவிர அனுபவிக்கப்படும் பொருள் அல்ல. மேலும் ஒருவருடைய அனுபவம் மற்றவரது அனுபவத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. எனவே அனுபவிக்கப்படும் பொருள் உயிருள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சி அனாவசியம். அனுபவிப்பவர் மட்டும் உயிருள்ளவராய் இருக்கவேண்டும்.

அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர் முக்கியமானவர்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனுபவிக்கப்படும் பொருள்கள். ஒவ்வொரு பொருளிலிருந்தும் நாம் பெறும் அனுபவங்கள் வேறுபடுவதால் சிலவற்றை விரும்பி அடையவும் வேறு சிலவற்றை வெறுத்து ஒதுக்கியும் பொருள்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து அனுபவங்களை அனுபவிக்கும் அனுபவிப்பவர்தான் அனுபவிக்கும் அனைத்து பொருள்களை விட முக்கியமானவர். ஏனெனில் அனுபவம் ஏற்பட இந்த குறிப்பிட்ட பொருள்தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் பொருள்களுக்கு அனுபவத்தை கொடுக்கும் சக்தியும் கிடையாது. 

உதாரணமாக எவ்வளவு அழகாக வரையப்பட்ட ஓவியம் என்றாலும் அதை பார்ப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் சக்தியும் அது அழகானதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சுதந்திரமும் அனுபவிப்பவருக்கு மட்டும்தான் இருக்கிறது. உயிருள்ள பொருள்களுக்கும் இதே நிலைதான். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்பதை அவரைப்பார்ப்பவர்தான் தீர்மானிக்கிறாரே தவிர அவளுக்கு தான் மற்றவருக்கு கொடுக்கும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி கிடையாது.

திருமணம் செய்துகொள்வதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவேண்டும் என்று பெரும்பாலோர் நினைப்பதற்கு முக்கிய காரணம் திருமணத்திற்குபின் தான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற சுயநலம்தான். யாராலும் நமக்கு இன்பத்தை கொடுக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட பின்தான்  அடுத்தவரை அறிந்துகொள்ளுவதைவிட தன்னையறிந்து கொள்வது முக்கியம் என்பது புரியும். 

அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர்தான் முக்கியமானவர் என்பதை உணரும்பொழுது அனுபவிப்பவர் யார் என்பதை அறியவும் ஆராயவும் ஆவல் பிறக்கும்.

அனுபவிப்பவர் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்க முடியாது

அனுபவிப்பவர் யார் என்பதை அறியுமுன் அனுபவிக்கப்படும் பொருள் அனுபவிப்பவராக இருக்க முடியாது என்ற தெளிவு அவசியம். முற்றிலும் இருட்டான அறையில் இருக்கும் பொருள்களைப்பார்க்க நமக்கு ஒரு விளக்கின் துணை தேவை. நாற்காலி, புத்தகம் போன்ற அறையில் இருக்கும் பொருள்களின் இருப்பை நமக்கு காட்டித்தருவது விளக்கு. அந்த விளக்கின் இருப்பை காட்டுவது எது? நாற்காலி என்பது தவறான விடை என்பதில் நமக்கு ஒரு தெளிவு அவசியம்.

அது போல நம்முடைய உடல் மற்றும் மனம் போன்றவற்றின் இருப்பை நாம் உணர்வதால் அவை அனுபவிப்பவராக இருக்க முடியாது. எனவே அனுபவிப்பவர் யார் என்ற கேள்விக்கு நம் உடலையும் மனதையும் தவிர்த்த வேறு ஒரு பதிலைத்தான் நம் ஆராய்ச்சியின் முடிவு காட்டவேண்டும்.

அனுபவிப்பவர் ஆத்மாவா அகம்பாவமா?

மனதில் தோன்றும் நான் அல்லது எனது என்ற எண்ணங்களின் தொகுப்பான அகங்காரம் ஜடம் என்பதால் அது அனுபவிப்பவராக இருக்க முடியாது. எனவே உணர்வுமயமான பரமன் அல்லது பரமனின் நிழலுருவான அகம்பாவம் ஆகிய இரண்டையும் ஆராய்வதன் மூலம் அனுபவிப்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள முயலலாம்.

எவ்வித மாற்றத்திற்கும் உட்படாத பரமன் இவ்வுலகுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் அதே சமயத்தில் அதன் இருப்புக்கு ஆதாரமாக இருப்பவன். என் உடலுக்கும் மனதிற்கும் ஆதாரமான பரமனை ஆத்மா என்று அழைக்கலாம்.

அகம்பாவம் என்பது நம் மனதில் தோன்றும் ஆத்மாவின் பிரதிபிம்பம். ஆத்மா மட்டுமே உணர்வுமயமானது. இவ்வுணர்வை நம் மனம் பிரதிபலிக்கும்பொழுது தோன்றும் அகம்பாவம் நம் உடலுக்கு உயிர்கொடுக்கிறது. நம் உடலும் மனமும் ஜடப்பொருள்களாய் இருந்தாலும் அகம்பாவம் என்ற உணர்வின் பிரதிபிம்பம் இவற்றிற்கு இவ்வுலகப்பொருள்களை அனுபவிக்கும் திறனை கொடுக்கிறது.

பௌர்ணமி இரவில் தோன்றும் நிலவு தானே ஒளியை கொடுக்கும் சக்தியற்றது என்றாலும் சூரியனின் ஒளியை பிரதிபலித்து அதன் மூலம் உலகத்தை பிரகாசிக்க வைப்பதைப்போல உணர்வற்ற மனம் என்ற ஜடப்பொருள் உணர்வுமயமான ஆத்மாவின் பிரதிபிம்பமான அகம்பாவத்தின் துணையுடன் உலகப்பொருள்களை அனுபவிக்கிறது. நிலவு என்ற ஜடப்பொருளை மனம் என்ற ஜடப்பொருளுக்கும், சூரியனின் ஒளியை ஆத்மாவுக்கும் நிலவின் ஒளியை அகம்பாவத்துடனும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் உண்மையில் இரவை பகலாக்குவது சூரிய ஒளி என்று தீர்மானிப்பது போல உண்மையில் உலகப்பொருள்களை அனுபவிப்பவன் ஆத்மா என்று முடிவுசெய்யவேண்டிவரும். ஆனால் அனுபவிக்கும் பொருளுக்கும் ஆத்மாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் அனுபவம் ஆத்மாவில் மாற்றம் எதையும் ஏற்படுத்துவதில்லை. எனவே நம் ஆராய்ச்சி தொடர்கிறது.

ஆத்மாவும் அகம்பாவமும்

ஆத்மாவையும் அகம்பாவத்தையும் ஒப்பிட்டு அவற்றின் தன்மையை தனித்தனியாக புரிந்து கொள்வது அவசியம். இதை வித்யாரண்ய சுவாமிகள் பின்வரும் உதாரணம் மூலம் விளக்குகிறார்.

உதாரணம்: சிறுவர்கள் தங்கள் கைகளில் உள்ள ஒரு சிறு கண்ணாடித்துண்டின் மூலம் சூரிய ஒளியை பிரதிபலித்து எதிரில் இருக்கும் சுவரில் சிறு சிறு வட்ட ஒளியை ஏற்படுத்தி அதை இங்குமங்கும் நகர்த்தி விளையாடுகிறார்கள்.

சுவர் – உலகம்
கண்ணாடி – மனம்
சூரிய ஒளி – ஆத்மா அல்லது பரமன்
பிரதிபலிக்கப்பட்ட ஒளி – அகம்பாவம்
சுவற்றில் தோன்றும் ஒளிவட்டங்கள் – பருவுடல்

1. சுவரின் மீது இரு வேறு ஒளி படுகிறது. சூரிய ஒளி முழு சுவரையும் வெளிச்சப்படுத்துகிறது. பிரதிபலிக்கப்பட்ட ஒளி சுவரின்மீது தோன்றும் சிறு சிறு வட்டங்களை ஒளிர்விக்கின்றன.

உலகத்தையும் இருவேறு பொருள்கள் இயக்குகின்றன. உலகம் முழுவதையும் வியாபித்து அதன் இருப்பிற்கு ஆதாரமாய் இருப்பது பரமன். ஒவ்வொரு உயிரையும் உயிரினமாய் காண்பித்து செயல்படுத்துவது அகம்பாவம்.

2. ஒளியூட்டப்பட்ட சுவற்றில் இங்குமங்கும் ஓடும் ஒளிவட்டங்களை இயக்கும் சிறுவர்கள் இது நான், என்னைப்பிடி பார்க்கலாம் என்று கூறி தங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துடன் ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள்.

நம் பருவுடல் ஜடமான உலகின் ஒருபகுதி. அகம்பாவம் இருப்பதால் அது உயிருடன் இருப்பதுபோல தோற்றமளிக்கிறது. நான்தான் இந்த அகம்பாவத்துடன் கூடிய உடல் என்றும் நான் உலகிலிருந்து வேறுபட்டவன் என்றும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ‘இது நான்’ என்று ஒரு ஒளிவட்டத்தை காட்டும் சிறுவனுக்காவது அது வெறும் விளையாட்டுதான் என்ற அறிவு இருக்கிறது. ஆனால் நான் என்ற சொல் இந்த உடலை குறிப்பதாக உண்மையிலேயே நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

3. உண்மையில் இருப்பது சூரிய ஒளி மட்டுமே. ஆனல் சுவற்றில் இருவேறு வகை ஒளிகள் தென்படுவதால் நாம் அவற்றை தனிப்படுத்தி பேசவேண்டிய அவசியம் நேருகிறது. ஆயினும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்படுவதும் சூரிய ஒளிதான் என்பதால் அனைத்தும் ஒன்றே என்பதை மறந்து விடக்கூடாது.

உணர்வு மயமாக இருப்பது பரமன் ஒருவனே. அகம்பாவம் என்பது பரமனின் பிரதிபலிப்பு என்பதால் அதற்கு ஒரு தனிப்பட்ட உண்மைத்துவம் கிடையாது. எனவே நான் என்ற சொல்லுக்கு உணர்வு மயமான ஆத்மா என்று மட்டும்தான் பொருள். உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களின் ஆதாரமாக இருப்பது நான் என்னும் ஒரே ஆத்மா என்றாலும் விளையாட்டுக்காக ஒவ்வொருவரையும் வெவ்வேறாக கருதி உறவாடுவதில் தவறில்லை. விளையாட்டு என்பதை மறந்து பக்கத்துவீட்டுக்காரர் உண்மையிலேயே நம்மிடமிருந்து வேறான ஒருவர் என்று நினைத்துவிடுவதால்தான் விளையாட்டு வினையாகிறது.

4. முழுசுவரும் சூரியனின் நேரடி ஒளியால் பிரகாசப்படுத்தப்பட்டு இருந்தாலும் கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட சூரியஒளி ஏற்படுத்தும் சிறு வட்டங்கள்தான் அனைவரது கவனத்தையும் கவருகின்றன. இந்த வட்ட ஒளி எஞ்சிய சுவற்றை விட அதிகபிரகாசமாயும் குறிப்பிட்ட வடிவத்துடனும் இருப்பதே இதற்கு காரணம்.

வட்டமான ஒளி சுவற்றை நேரடியாக ஒளிர்விக்கும் சூரிய ஒளியை மறைப்பது போல நம் இருப்புக்கு ஆதாரமான ஆத்மாவை நம் மனதில் பிரதிபலிக்கப்பட்ட அகம்பாவம் மறைத்துவிடுகிறது.  எனவேதான் நான் ஆத்மா என்ற உண்மைக்கு பதில் நான் உயிருடனிருக்கும் உடல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

5. சூரிய ஒளி இல்லாவிட்டால் சிறுவர்கள் விளையாடவே முடியாது என்றாலும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கும் ஒளிக்கு முக்கியத்துவம் கொடுத்து சூரிய ஒளியை அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை. சூரிய ஒளியின் அவசியத்தையும் அது தங்கள் விளையாட்டுக்கு உதவும் விதத்தையும் அவர்கள் அறிவதில்லை.

பரமன்தான் உலகின் ஆதாரம் என்றாலும் அகம்பாவத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து ஆத்மாவை பொருட்படுத்துவதேயில்லை. அகம்பாவம் நம் உடலுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருப்பதால் உலகில் இயங்க ஆத்மாவின் அவசியத்தை நாம் உணர்வதில்லை. உண்மையில் ஆத்மாதான் நம் உடல் உட்பட்ட உலகில் உள்ள அனைத்து பொருள்களுமாக தோன்றிக்கொண்டிருக்கிறது.

6. சூரிய ஒளி அவசியம். கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஆடம்பரம். அவசியத்தை விட ஆடம்பரம் முக்கியமானது என்று நினைப்பது அறியாமை.

மனிதர்கள் ஆத்மாவை விட்டு விலகி இருக்கமுடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் அகம்பாவம் இருப்பதில்லை. தன்னை மறந்து ஒரு காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் பொழுதும் அகம்பாவம் ஆத்மாவுடன் ஒன்றிவிடுகிறது. எனவே நம்மிடம் இருக்கும் நம் உடல், மனம், அதில் பிரதிபலிக்கும் அகம்பாவம் ஆகியவை ஆடம்பரப்பொருள்கள் என்பதை உணர்ந்தால் உலகில் உள்ள வேறு எந்த பொருள்களும் அவசியமானவை என்று தோன்றாது.

7. சூரிய ஒளி நிரந்தரமானது. பிரதிபலிக்கபட்ட ஒளி தற்காலிகமானது.

ஆத்மா நிரந்தரமானது. அகம்பாவம் பிறப்பு-இறப்பு என்ற சுழலுக்கு உட்பட்டது.

8. சூரிய ஒளி எல்லா இடத்திலும் பரவியிருப்பது. கண்ணாடியின் ஒளி ஒரு சிறு வட்டத்திற்குள் அடங்கியது.

ஆத்மா அளவற்றது. அகம்பாவம் ஒரு உடல், மனம் என்ற சிறிய அளவுக்குள் கட்டுப்பட்டது.

9. சிறுவர்கள் விளையாடாதபொழுதும் சுவற்றை ஒளிர்விப்பது சூரிய ஒளி. மேலும் அவர்கள் விளையாடும்பொழுது சுவரில் தோன்றும் ஒளிவட்டங்களிடையே இருக்கும் சுவரை ஒளிப்படுத்துவதும் சூரிய ஒளியே. கண்ணாடியிலிருந்து பிரதிபலிப்பதும் சூரிய ஒளியே. எனவே அனைத்திற்கும் அடிப்படை சூரிய ஒளி மட்டுமே.

பிரபஞ்சம் அழிந்தபின்னும் இருப்பவன் பரமன். பிரபஞ்சம் இருக்கும்பொழுது ஜடப்பொருள்களின் ஆதாரமான பரமன்தான் அகம்பாவம் என்ற பிரதிபிம்பத்தை ஏற்படுத்தி உயிரினங்களுக்கும் ஆதாரமாயிருக்கிறான்.

10. ஒளி என்ற சொல்லுக்கு ஒரே பொருள் சூரிய ஒளி மட்டுமே.

உணர்வு என்ற சொல்லுக்கு ஒரே பொருள் ஆத்மா மட்டுமே.

ஆத்மாவிற்கும் அகம்பாவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்த பின் அனுபவிப்பவர் ஒவ்வொரு அனுபவத்தையும் அனுபவிக்க இவ்விரண்டின் பங்கு என்ன என்பதை அறிய நம் எண்ணங்களை ஆராய வேண்டும்.

இரு வகை எண்ணங்கள்

எண்ணப்படும் பொருள்களின் அடிப்படையில் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்புற எண்ணங்கள் மற்றும் உட்புற எண்ணங்கள் என இருவகையாக பிரிக்கலாம். உலகில் உள்ள பொருள்களைப்பற்றிய எண்ணம் வெளிப்புற எண்ணங்கள். வெளிப்புற எண்ணங்களைப்பற்றிய எண்ணம் உட்புற எண்ணம்.

மல்லிகையின் மணத்தை நுகரும்பொழுது மனதில் ஏற்படும் எண்ணம் வெளியுலகில் இருக்கும் பூவைப்பற்றியது என்பதால் அது வெளிப்புற எண்ணம். எனக்கு மல்லிகையின் மணம் மிகவும் பிடிக்கும் என்ற எண்ணம் இந்த வெளிப்புற எண்ணத்தைப்பற்றியது என்பதால் அது உட்புற எண்ணம்.

கோபம், சலிப்பு, அன்பு, ஆவல் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் (emotions) உட்புற எண்ணங்களே. கண் காது போன்ற ஐந்து புலன்களையும் செயல்படுத்தாமல் தியானம் செய்ய அமர்ந்திருக்கும்பொழுது மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் உட்புற எண்ணங்கள்தாம். 

நேரடியாக அனுபவிக்காத பொருளைப்பற்றிய எண்ணம் படிப்பது அல்லது கேட்பதன் மூலம் ஏற்பட்டாலும் அது வெளிப்புற எண்ணமே. எனவே தெரியாத பொருளைப்பற்றிய வெளிப்புற எண்ணம் ஏற்படலாம். ஆனால் உட்புற எண்ணம் இதுபோல தெரியாதபடி இருக்கமுடியாது.  வெளிப்புற எண்ணங்களைப்பற்றிய எண்ணங்கள்தான் உட்புற எண்ணங்கள். எனவே ஒரு வெளிப்புற எண்ணம் இல்லாமல் அதைப்பற்றிய உட்புற எண்ணம் ஏற்பட வாய்ப்பில்லை.

நேரடியாக பார்க்காவிட்டாலும் கடிதம் மூலம் காதலிக்கும் மனிதரைப்பற்றிய எண்ணம் வெளிப்புற எண்ணம். அந்த மனிதரை காதலராக மாற்றியது உட்புற எண்ணம். காதல் ஒரு அனுபவம். இதுபோல் எந்த அனுபவத்தை பெற வேண்டும் என்றாலும் அதற்கு அடிப்படையாக சில எண்ணங்கள் ஏற்படவேண்டும். ஒருவரைப்பற்றிய எவ்வித எண்ணமும் இல்லாமல் அவரைக்காதலிக்க முடியாது. எனவே முதலில் வெளிப்புற எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்றும் அதன் பின் அவை எவ்வாறு உட்புற எண்ணங்களான அனுபவங்களுக்கு ஆதாரமாய் இருக்கின்றன என்பதையும் ஆராய வேண்டும். அனுபவங்கள் ஏற்பட ஐந்து புலன்கள் மூலம் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு ஒரு பொருளைப்பற்றிய அறிவு அல்லது எண்ணத்தை பெறவேண்டும்.

வெளிப்புற எண்ணங்கள் ஏற்படும் விதம்

நான் (அறிபவன்) என் எண்ணங்களை கண்கள் (புலன்) மூலம் அறியப்படும் பொருளிடம் அனுப்பி அதைப் போன்ற ஒரு வடிவத்தை எண்ணமாக என் மனதில் திரும்பப்பெற்று அந்தப்பொருள் பானை என்பதை அறிகிறேன்.

அந்தப்பொருளைப்பார்ப்பதற்கு முன் அது என்ன என்பதை நான் அறியாதவன். அதை பார்த்தபின் அதை அறிந்தவன். என் கண்கள், மனம், எண்ணங்கள் ஆகியவை பானையைப்போல் ஜடப்பொருள்கள். ஜடப்பொருள்கள் ஒன்றுடன் ஒன்று உறவாடுவதால் எவ்வித அனுபவமோ அறிவோ ஏற்படாது. எனவே நான்  அறியாதவன் என்ற நிலையில் இருந்து அறிந்தவன் என்ற நிலைக்கு மாற எனக்கு அகம்பாவத்தின் துணை தேவை.

என் எண்ணங்கள் பானையை நோக்கிப்பயணிக்கும்பொழுது அதனை முன்னடத்தி செல்வது அகம்பாவம். ஈட்டியின் முனையில் கூரான இரும்பு இல்லாவிட்டால் அது இலக்கைத்துளைக்காது. அது போல நான் என்ற உணர்வுடன் செல்லாவிட்டால் நம் எண்ணங்களால் எவ்வித பொருளையும் அறியமுடியாது. உதாரணமாக அருகில் உள்ள ‘கடிகாரத்தில் எவ்வளவு எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன’ என்ற கேள்விக்கு பதில் தெரியவேண்டுமானால் நான் என்ற உணர்வுடன் நம் எண்ணங்கள் செயல்பட்டு கடிகாரத்தை கவனமாகப்பார்க்க வேண்டும். அதன்பின்  ‘நேரம் என்ன’ என்ற கேள்வியை கேட்டால் நாம் மறுபடியும் கடிகாரத்தை பார்க்க வேண்டியிருக்கும். ஏற்கனவே பார்த்தபோது அது காட்டும் நேரம் கண்ணில் தெரிந்திருந்தாலும் அது மனதில் பதியாததற்குக்காரணம் ஈட்டிமுனையில் கூரான இரும்பு இல்லாததுபோல் நம் எண்ணங்களின் முன் அகம்பாவம் இல்லாததுதான். எனவே அறியாதவனை அறிந்தவனாக மாற்ற அகம்பாவத்தின் உதவி அவசியம். நம் கண், மனம், பானை போன்ற ஜடப்பொருள்கள் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பது ஆத்மா.

ஒரு பொருளை அறிகிறோம் அல்லது அறியவில்லை என்பதை அறிவது ஆத்மா. அறியாத பொருளை அறிந்த பொருளாக மாற்றுவது அகம்பாவம். எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் எதனுடனும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஆத்மா அறியாதவனை அறிந்தவனாக மாற்றும் செயலை செய்யும் சக்தியற்றது. எனவே பானையை நாம் அறிந்து கொள்ள அகம்பாவத்தின் துணை அவசியம்.

கம்புயூட்டர் இயங்க ஆதாரமாக இருக்கும் மின்சாரம் கணக்கு போடும் திறன் இல்லாதது. அதுபோல அனைத்து வேலைகளையும் அகம்பாவம் செய்வதற்கு ஆதாரமாக மட்டும் இருப்பது ஆத்மா.

ஒரு பொருளைப்பற்றிய அறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை அகம்பாவத்தால் தீர்மானிக்கமுடியாது. ஏனெனில் அகம்பாவம் தொடர்ந்து மாற்றமடையும் தன்மையுள்ளது. பானையை அறியாத அகம்பாவம் பானையை அறிந்த அகம்பாவமாக மாறிவிடுவதால் இந்த மாற்றத்தை அறிய மாறாத ஆத்மா அவசியம். மேலும் அகம்பாவம் வந்து போகும் தன்மையுடையது. ஆழ்ந்த உறக்கம், சமாதி நிலை மற்றும் தன்னை மறந்து நாம் ஒரு வேலையை செய்யும்நேரம் ஆகிய சமயங்களில் அகம்பாவம் இருப்பதில்லை. ஆத்மா நிலையானது.

ஜடப்பொருள்களான நம் மனம் மற்றும் உடல் ஆகியவை இடைவிடாமல் ஏதேனும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் உயிருள்ளவைகளாக இருப்பதற்கு அகம்பாவம் அவசியம். எவ்வித செயலிலும் ஈடுபடாமல் எதனுடனும் தொடர்பு கொள்ளாமல் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பது ஆத்மா.

இது பானை என்று அறிந்து கொள்ள மாற்றமடையும், நிலையில்லாமல் தொடர்ந்து செயல்புரியும் அகம்பாவம் அவசியம். நான் பானையை அறியவில்லை அல்லது அறிகிறேன் என்பதை அறிந்து கொள்ள மாறாத, நிலையான, எவ்வித செயலிலும் ஈடுபடாத ஆத்மா அவசியம்.

உட்புற எண்ணங்கள் ஏற்படும் விதம்

விலங்குகளுக்கு உட்புற எண்ணங்கள் ஏற்படுவதில்லை. பசிக்கும்பொழுது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது வெளிப்புற எண்ணம். எந்த உணவை சாப்பிடலாம் என்று யோசிப்பது உட்புற எண்ணம். நிகழ்காலத்தில் ஏற்படும் வெளிப்புற எண்ணங்களை அடிப்படையாகக்கொண்டு இது இப்படி நடந்திருக்க கூடாது என்று கடந்தகால நிகழ்வுகளைப்பற்றியும் நாளை என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்காலத்தைப்பற்றியும் நமது மனதில் உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன. மனிதனின் மனம் மட்டுமே பரமனின் மூன்று தன்மைகளையும் முழுமையாக பிரதிபலிப்பதால் அறிந்து கொள்ளவும், அறிந்ததை அடையவும், அடைந்ததை அனுபவிக்கவும் தேவையான உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன. இவ்வெண்ணங்களை அடையாளம் காட்டுவது அகம்பாவம்.

பானையை ஒரு அட்டை பெட்டியினுள் வைத்து மூடி இதனுள் என்ன இருக்கிறது என்று கேட்டால் அதனுள் ஒரு பொருள் இருக்கிறது என்று மட்டும் தெரியவருமே தவிர அது என்ன பொருள் என்று தெரியாது. வெளிப்புற எண்ணத்திற்குண்டான பொருள் தெரியாத ஒன்றாக இருக்கலாம். இதுபோல் பொருள் தெரியாத உட்புற எண்ணங்கள் இருக்கமுடியாது. ஏனெனில் நம் எண்ணங்களை அடிப்படையாக கொண்டு தோன்றுவதுதான் உட்புற எண்ணங்கள் என்பதால் இவற்றின் தோற்றம், மறைவு ஆகியவற்றை தெளிவாக நாம் அறிவோம். உதாரணமாக மனதில் கோபம் ஏற்பட்டால் அது நமக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

வெளிப்புற எண்ணத்தை ஒளிர்விப்பது ஆத்மா மட்டுமே. உட்புற எண்ணத்தை அகம்பாவமும் சேர்ந்து ஒளிர்விக்கிறது. சுவரில் தோன்றும் ஒளிவட்டங்கள் எஞ்சிய சுவற்றைவிட பிரகாசம் கூடியதாக இருப்பதற்கு அந்த இடங்களில் சூரிய ஒளி மற்றும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஆகிய இரு ஒளிகள் இருப்பதுதான் காரணம். அதுபோல உட்புற எண்ணங்கள் ஆத்மா மற்றும் அகம்பாவம் ஆகிய இரண்டின் மூலமும் பிரகாசப்படுவதால் நமக்கு நம் கோபம், கருணை போன்ற உணர்வுகள் ஏற்படுவது தெளிவாகத்தெரிகிறது.

நெருப்பு ஒரு இரும்புத்துண்டு முழுதும் பரவி அதை ஒளிர்விக்கும். ஒளிர்விக்கப்பட்ட இரும்புத்துண்டு மற்ற பொருள்களை விளக்கும் அளவுக்கு ஒளிராது. அதுபோல அகம்பாவம் நம் மனதில் தோன்றும் உணர்வுகளை மிகத்தெளிவாக காட்டுவதுபோல் உலகத்தில் உள்ள மற்ற பொருள்களை ஒளிர்விக்க முடியாது. அகம்பாவம் ஒரே ஒரு உடலை மட்டும் உயிருடன் காட்டும்.

ஆத்மா நம் மனம் முழுவதும் பரவி அதை அகம்பாவமாக ஒளிர்விக்கும். அதுமட்டுமல்லாமல் ஆத்மா உலகத்தில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பதுடன் அவற்றில் சிலவற்றை அகம்பாவமாக மாற்றி அவை உயிரினங்களாக செயல்படச்செய்யும் சக்தியும் கொண்டது.

எனவேதான் ஆத்மாவை விட்டுவிட்டு அகம்பாவத்தை நான் என்பதற்கு பொருளாக கொண்டால் ஒரு குறிப்பிட்ட உடல் மற்றும் மனதின் கட்டுப்பாட்டுக்குள் நாம் அடைபட வேண்டும். அகம்பாவம் வெறும் நிழலுருவம் என்பதால் நம் உண்மை உருவான ஆத்மாவை நான் என்று அறிந்து கொண்டால் இவ்வுலகின் ஆதாரம் நான் என்றும் அனைத்து உயிரினங்களும் உயிருடன் இருப்பது என்னால்தான் என்றும் தெரியவரும்.

ஆழ்ந்த உறக்கத்தில் அகம்பாவம் மறைந்துவிடும். ஆனாலும் விழித்தெழிந்தவுடன் உறங்கும்பொழுது எதையும் அறியவில்லை என்பதை அறிந்திருக்கிறோம். இதற்கு காரணம் எவ்வித எண்ணங்களும் மனதில் இல்லை என்பதை அறியும் ஆத்மா.

அனுபவிப்பவர் யார்?

உடலும் மனமும் ஜடப்பொருள்கள் என்பதால் அவை அனுபவிப்பவன் அல்ல. ஆத்மா எவ்வித செயலும் செய்ய இயலாதது என்பதால் அனுபவிப்பவன் ஆத்மாவும் அல்ல. எஞ்சியிருப்பது அகம்பாவம் மட்டுமே. அகம்பாவம் நிழலுருவம் என்பதால் அனுபவிப்பவன் என்பது ஒரு கற்பனை. காந்தி நம்மை நேருக்கு நேர் பார்த்து புன்னகைப்பதுபோல் ஒரு புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தால் ‘என்னைப்பார்ப்பது யார்’ என்ற கேள்விக்கு காந்தி என்று பதில் சொல்ல முடியாது. அது போல் அனுபவிப்பவன் என்பது ஒரு பொய்யான தோற்றம். நான் யார் என்ற அறிவு இல்லாத அஞ்ஞான நேரத்தில் நான்தான் அனுபவிப்பவன் என்று உரிமைபாராட்டி அதனால் துன்பத்துக்கு ஆளாவதை தவிர்க்க நான் யார் என்ற ஆராய்ச்சி மூலம் அறியாமையை அகற்றி முக்தி பெறவேண்டும்.

அனுபவிப்பவன் யார் என்ற ஆராய்ச்சி முக்திபெறுவதற்காகவேதவிர உண்மையில் அனுபவிப்பவன் யார் என்று கண்டுபிடிப்பதற்காக அல்ல. கயிற்றை பாம்பு என்று தவறாக நினைத்துவிட்டோம் என்பது புரிந்தபின் அந்தப்பாம்பு எப்பொழுது உருவானது, அது விஷமுள்ளதா என்பது போன்ற ஆராய்ச்சி அனாவசியம்.

முக்தி பெறுவது எப்படி?

அகம்பாவத்தால் உயிரூட்டப்பட்ட உட்புறஎண்ணங்கள் மனதை ஆக்ரமிக்கின்றன என்பதை புரிந்துகொண்டு அவற்றை பொருட்படுத்தாமல் நான் ஆத்மா என்பதை உணர்வது முக்தி. எனவே முக்தி நமக்கு அன்னியமானது அல்ல. ‘நீ இப்பொழுது என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்’ என்று யாரைப்பார்த்துக் கேட்டாலும் கிடைக்கும் பதில் ‘ஒன்றுமில்லை’ என்பதுதான். எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் நம் மனதில் தோன்றுகின்றன. எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நாம் பொதுவாக கவனிப்பதே இல்லை. இதுபோல் திடீரென ஒரு கேள்வியை எதிர்கொள்ளும்பொழுது இந்த இடைவெளியை நாம் கவனிக்கிறோம். எனவேதான் ‘ஒன்றுமில்லை’ என்று பதில் சொல்கிறோம். ஒன்றுமில்லாமல் என்றுமிருப்பதுதான் ஆத்மா என்கிற நான் என்று அறிவதுதான் முக்தி.

அதேபோல் ‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு நன்றாக இருக்கிறேன் என்பதுதான் உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் பதிலும். இதற்கும் காரணம் அது உண்மை என்பதுதான். நான் என்பதன் பொருள் ஆனந்தமயமாக என்றும் இருக்கும் ஆத்மா. இரு எண்ணங்களுக்கு இடையே ஏற்படும் இடைவெளியில் தன்னை காட்டிக்கொள்வது ஆத்மா. அகம்பாவத்தால் எண்ணங்களை மட்டுமே அறிய முடியும். எண்ணங்கள் இல்லாத ஜடமான மனதினிடம் நான் இந்த உடல் அல்லது மனம் என்ற அறிவு இருப்பதில்லை. எனவே நம் உண்மை உருவான ஆத்மாவின் நிலையை ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்ற பதிலாக கொடுத்துவிட்ட அடுத்த நிமிடம் கால் முட்டிவலி பற்றிய எண்ணத்தை அகம்பாவம் காட்டிக்கொடுக்க ‘ஆனால் முட்டிவலிதான் தாங்கமுடியவில்லை’ என்பதை பதிலுடன் சேர்த்துக்கொள்கிறோம். கேள்விகேட்டவர் அங்கிருந்து இன்னும் நகராவிட்டால் அகம்பாவம் தொடர்ந்து வேலை செய்து எப்படி மகன் சரியாகபடிப்பதில்லை, வேலையில் பதவிஉயர்வு கிடைக்கவில்லை என்பது போன்ற பல பிரச்சனைகளுடன் நான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று முதலில் கூறிய பதிலுக்கு முற்றிலும் எதிர்மாறான பதிலை சொல்லிக்கொண்டிருப்போம்.

மகனின் மதிப்பெண்களை பார்க்கும்பொழுது ஏற்பட்ட எண்ணம் வெளிப்புற எண்ணம். அதை அடிப்படையாக கொண்டு அவன் சரியாகப்படிப்பதேயில்லை என்று முடிவு செய்து சோகத்தில் ஆழ்வதற்கு காரணம் நாமே உருவாக்கிய உட்புற எண்ணம்.

எவ்விதமான உணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன என்பதைப்பொறுத்துதான் வாழ்க்கையின் தரம் நிர்ணயிக்கிப்படுகிறது. எவ்வித உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை உலகம் தீர்மானிப்பதில்லை. வெளிப்புற எண்ணங்களை மட்டுமே உலகம் தீர்மானிக்கிறது. அவற்றை அடிப்படையாக கொண்டு எவ்வித உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன என்பது நம் அறிவை மட்டும் பொருத்தது.

எனவே முக்தியை பெறுவதற்கு நாம் எவ்வித செயலையும் செய்ய வேண்டாம். அனுபவிப்பர் நான் அல்ல என்றும் உலகில் உள்ள ஜடப்பொருள்களின் தொடர்ந்த இயக்கத்தில் அகம்பாவத்தால் ஒளிர்விக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட உடலை என்னுடையது என்று நினைப்பது அறியாமை என்றும் அறிந்தால் நாம் முக்தியடைந்துவிடுவோம்.

வாழ்வின் பிரச்சனைகளுக்கு காரணம்

தானே உருவாக்கிக்கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே இல்லை. சும்மா இருப்பது சொர்க்கம். சும்மா இருந்தால் போர் அடிக்கிறது என்று நினைப்பதற்கு காரணம் ஆனந்தம் உலகில் இருக்கிறது என்று நினைக்கும் அறியாமையே.  தொலைக்காட்சியில் தொடர்களைப்பார்ப்பது, கிரிகட் கால்பந்து போன்ற விளையாட்டுக்களை பின்பற்றுவது, விலையுயர்ந்த வாகனம் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குதல்  போன்ற செயல்களால் மனதில் கற்பனையான ஒரு ஆவலை ஏற்படுத்திக்கொண்டு அது நிறைவேறியதும் தற்காலிகமாக ஏற்படும் நிம்மதி மற்றும் மகிழ்ச்சிதான் உண்மையானது என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.

அமைதியாக இருக்கும் மனதை அலைபாயவிட்டு அதன் பின் அமைதிபடுத்தும் செயல் கை சுத்தமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க சாக்கடையில் கைவிட்டு கையை  அசிங்கப்படுத்திவிட்டு அதன்பின் சுத்தமான நீரில் கழுவுவது போன்றது.

வாழ்வில் பிரச்சனைகள் மேலோங்கியிருக்கும்பொழுது பணம் இருந்தாலும் யாரும் ஆடம்பரச்செலவு செய்வதோ உல்லாசப்பயணம் செல்வதோ இல்லை. ஏனெனில் மனதில் அலைபாயும் எண்ணங்கள் ஏற்கனவே இருப்பதால் பிரச்சனைகளை ஒரு தீர்வுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு மனதில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியை அவர்கள் ஏற்கனவே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனம் ஏற்கனவே அழுக்காக இருக்கிறது என்றும் அதை சுத்தம் செய்தால்தான் அமைதி கிடைக்கும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மனதில் எண்ணங்கள் இருப்பது முக்திக்கு தடையல்ல. எண்ணங்கள் மாயையான உலகைச்சுட்டிக்காட்டும் வெறும் பெயர்பலகைகள் என்பதை உணர்ந்தால் அவற்றின் நடனத்தை என்றும் அமைதியுடன் இரசிக்கமுடியும். ஏனெனில் தொடர்ந்து மாறுவதுதான் உலகின் இயல்பு. அந்த மாற்றத்தை பிரதிபலிப்பதுதான் மனதின் வேலை. பிரச்சனைகள் வெளியுலகில் இல்லை. தொடர்ந்து மாறும் உலகில் ஒருசில மாற்றங்களுக்கு பிரச்சனை என்று பெயரிடுவது நமது அறியாமை. பிரச்சனைகள் ஏற்பட்டு அவை தீர்ந்தால்தான் அமைதி வரும் என்ற தவறான அறிவால் அவற்றை நாமே உருவாக்குகிறோம். மாற்றங்களின் இடையே மட்டும் இருப்பதல்ல அமைதியும் ஆனந்தமும். அவை என்றும் நம்முடன் இருக்கும் நமது சுபாவம் என்பதை அறியாததுதான் நம் பிரச்சனைகளுக்கு காரணம்.

பிரச்சனைகளை தீர்த்து அமைதியுடன் இருப்பது எப்படி?

நம் உடல் ஜடம் என்பதை மயக்கமருந்தின் (local anesthesia) மூலம் கைகால்கள் மரத்துப்போன நிலையில் அறியலாம். நம் மனமும் ஜடம் என்பதை சமாதி நிலையில் மட்டுமே உணரமுடியும். ஏனெனில் நாம் விழித்திருக்கும் நேரங்களில் அது எண்ணங்களுடன் இருப்பதால் அதை ஜடம் என்று புரிந்து கொள்வது கடினம். முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்கும்பொழுதெல்லாம் அதில் நம் முகம் தெரிகிறது என்பதால் அதற்கு உயிர் இருக்கிறது என்று நினைப்பதில்லை. ஆனால் ஆத்மாவை பிரதிபலிக்கும் மனம் நாம் விழித்திருக்கும் பொழுதெல்லாம் செயல் செய்து கொண்டிருப்பதால் அதை ஜடம் என்று அறிய வேதத்தின் துணை தேவை படுகிறது. ‘நீதான் அது’ என்ற வேதத்தின் உபதேசத்தை புரிந்துகொண்டால் மாறும் மனம் நான் அல்ல என்று தெரியும். அதன் பின் உலகின் நிகழ்வுகளுக்கு பிரச்சனைகள் என்று பெயரிடாமல் அவற்றை அமைதியுடன் இரசிக்கலாம்.

தியானம் செய்வதன் மூலம் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தையும் அகற்றி அகம்பாவத்தை ஆத்மாவுடன் ஐக்கியமாக்கினால் சமாதி நிலையை அடையலாம். மிகுந்த சாதனை இதற்கு வேண்டுமென்றாலும் இதை செய்யகூடியவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்களது சமாதி அனுபவத்தில் ஆழ்ந்த உறக்க நிலையைப்போல மனம் முற்றிலும் மறைந்திருக்கும். எவ்வித எண்ணங்களும் இல்லாவிட்டாலும் சமாதி நிலை முடிந்தவுடன் இவ்வளவு நேரம் சமாதியில் இருந்தேன் என்று அறியமுடிவதற்கு காரணம் அகம்பாவம்தான். தூக்கத்தில் இல்லாத அகம்பாவம் சமாதி நிலையில் தொடர்ந்து ஆத்மாவுடன் ஒன்றி இருக்கிறது.

விழித்திருக்கும்பொழுது மனதில் உணர்வுகளை உருவாக்கும் அகம்பாவம் ஆழ்ந்த உறக்கத்தில் அழிந்து விடுவதால் நம்மால் நிம்மதியாக தூங்கமுடிகிறது. காலையில் விழிக்கும்பொழுது எண்ணங்கள் ஒவ்வொன்றாக மனதில் தோன்ற ஆரம்பிக்கின்றன. வாழ்வில் நாம் எவ்வளவு செயல்களைச்செய்கிறோம் எவ்வளவு மனிதர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதைப்பொறுத்து வெகு சீக்கிரம் மனதில் எண்ணங்கள் நிறைய ஆரம்பித்துவிடுகின்றன. மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகள் வெறும் எண்ணக்குவியல்களே.

எனவே மனம் அமைதியாயிருக்க தியானம் செய்து சமாதியை அடையவேண்டும் என்றோ ஊரைவிட்டு ஓடிப்போய் காட்டில் வசிக்கவேண்டும் என்றோ அர்த்தமல்ல.

முக்தியை அனுபவிக்க மனம் அவசியம்

ஆழ்ந்த உறக்கத்தில் மறந்திருந்த எல்லா எண்ணங்களும் மறுபடியும் நம் மனதை ஆக்ரமித்து இரு எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இல்லாதது போல் செய்துவிடுகின்றன. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று நிம்மதியை அது இல்லாத இடத்தில் தேட ஆரம்பிக்கிறோம். இரு எண்ணங்களுக்கு இடையே இருப்பதுதான் நிம்மதி.

சப்தம் செய்யப்படவேண்டும். நிசப்தம் என்றுமிருப்பது. அதை செய்யமுடியாது. வேண்டுவதை பெற ஏதாவது செய்யவேண்டும் என்று பழகிப்போயிருப்பதால்தான் அமைதியாய் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது. அமைதியாய் இருக்க எதுவும் செய்யவேண்டாம். அமைதியில்லாமல் எதையும் செய்யவும் முடியாது.

வெள்ளைக்காகிதத்தில் பேனாவை உபயோகித்து எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுதும்பொழுது எழுத்துக்களின் இடையே இடைவெளியை நாம் எழுதுவதில்லை. அந்த இடைவெளி இல்லாமல் எழுத்துக்கள் இருக்கமுடியாது. அதுபோல நம் மனதில் ஏற்படும் எண்ணங்களின் இடையே இருப்பதுதான் அமைதி. அந்த அமைதிதான் ஆத்மா. அது இல்லாமல் எண்ணங்களே இல்லை. சுவரில் தோன்றும் ஒளிவட்டங்களுக்கு இடைப்பட்ட இடம் இல்லாமல் ஒளிவட்டங்கள் இருக்க முடியாது. மேலும் ஒளிவட்டங்கள் இருக்கும் இடமும் சூரியனால் ஒளிர்விக்கப்பட்ட சுவர்தான். காகிதத்தில் உள்ள வெற்றிடத்தில்தான் எழுத்துக்கள் தோன்றுகின்றன. மனதில் உள்ள அமைதியின் மீதுதான் எண்ணங்கள் தோன்றுகின்றன. நிர்மலமான திரையின் மீதுதான் திரைப்படம் தெரிகிறது. திரையை பார்க்க திரைப்படத்தை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் திரைப்படத்தை பார்க்கும்பொழுது திரையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதுபோல அமைதியாய் இருக்க எண்ண ஓட்டத்தை நிறுத்தவேண்டிய அவசியமில்லை. அமைதியின் மீதுதான் எண்ணங்கள் ஏற்படுகின்றன என்றும் எண்ணங்களின் இடைவெளியில் தொடர்ந்து அமைதி இருந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிந்து கொண்டால் போதும். திரைப்படத்தையாவது எளிதில் நிறுத்தி வெண்திரையை பார்த்துவிடலாம். ஆனால் எண்ணங்களை நிறுத்தி அமைதியாய் இருக்க அஷ்டாங்க யோகத்தை முழுமையாக செய்து சமாதி நிலையை அடையவேண்டும். இது அனாவசியம். ஏனெனில் திரைப்படம் ஓடாமல் திரைமட்டும் இருப்பதால் எவ்வித பயனும் இல்லை. கடிதங்கள் எழுதாமல் காகிதத்தை வெள்ளையாகவே வைத்திருப்பதற்கு காகிதமே தேவையில்லை. உலகை அனுபவிக்க எண்ணங்கள் அவசியம். நான் அமைதியாய் இருக்கிறேன் என்பதை அறியக்கூட எண்ணங்கள் வேண்டும்.

எதனுடனும் சம்பந்தப்படாமல், எவ்வித மாற்றமும் அடையாமல், தோற்றம்-மறைவு என்ற விதிக்கு கட்டுப்படாமல், துன்பம் கலவா ஆனந்தமயமாக அறிவுருவாக என்றும் இருக்கும் ஆத்மா எவ்வித சுவாரசியமுமற்றது. அதனால் எதையும் செய்ய முடியாது. அதனாலேயே அது பற்பல அகம்பாவங்களாக காட்சியளிக்கிறது.

அகம்பாவம் மாற்றத்திற்குரியது. வந்து போகும் தன்மையுடையது. தொடர்ந்து செயல் செய்து கொண்டிருப்பது. அகம்பாவமில்லாமல் நாம் உயிருடன் இந்த உலகை அனுபவிக்க முடியாது. நான் ஆத்மா என்றாலும் அகம்பாவம் இல்லாமல் வாழ்வு என்னும் உல்லாசப்பயணத்தை மகிழ்வுடன் அனுபவிக்க முடியாது.

முடிவுரை :

உயிர் வாழவதற்காக எவ்வித உணவையும் உண்ணலாம் என்ற வேதவாக்கியத்தின் பொருளைப்புரிந்துகொள்ள உயிர்வாழ வேண்டியதன் அவசியத்தைத்தெரிந்து கொள்ளவேண்டும். ஆனந்த மயமான பரமன் நான் என்பது உண்மையென்றாலும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க உயிர்வாழ்வது அவசியம்.

பரமனால் எவ்வித செயலையும் செய்ய முடியாது. உடல் இருக்கும் வரைதான் அறிவது, ஆசைப்படுவது, அடைவது போன்ற பரமனால் செய்யமுடியாத காரியங்களை செய்து இவ்வுலகை அனுபவிக்க  முடியும். இதற்காகத்தான் நமக்கு இவ்வுடல் கிடைத்திருக்கிறது. எனவே உயிரைப்பாதுகாக்கும்பொருட்டு வேதம் விதித்துள்ள உணவுக்கட்டுப்பாடுகளை மதிக்கவேண்டியதில்லை என்று வேதமே அனுமதி கொடுக்கிறது.  

எவ்வித உணவு உட்கொள்ளவேண்டும், என்ன வேலைகள் செய்யவேண்டும் என்று வாழ்வில் செய்யவேண்டிய செயல்கள் அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்று வேதம் வகுத்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளின்படி நடந்தால் வேதத்தின் மையக்கருத்தான நான் பரமன் என்பதை அறிந்து கொள்ளலாம். அதன்பின் வேதத்தின் கட்டுப்பாடுகள் எவையும் தேவையில்லை.

நான் பரமன் என்பதை அறிய தியானம் ஒரு படியாக அமைகிறது. ஓம் ஓம் என்ற மந்திர ஜபம்  இரண்டு மந்திரங்களுக்கிடையே உள்ள அமைதியை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. தொடர்ந்த அமைதியின் நடுவே பிரணவ மந்திரம் தோன்றி மறைவதுபோல் நிரந்தர அமைதியின் நடுவே பிரபஞ்சம் தோன்றி மறைகிறது. இந்த இடைவிடாத இயக்கம் நம் மனமெனும் கண்ணாடியிலும் பிரதிபலிக்கிறது. வந்துபோகும் எண்ணங்கள் நமது கவனத்தை கவர்ந்து எண்ணங்கள் எழும் அடித்தளமான அமைதியை மறைத்துவிடுகிறது.

வேதாந்தத்தின் ஒரே நோக்கம் இந்த அமைதியை நமக்கு அறிமுகப்படுத்தி ‘நீயே அது’ என்று சுட்டிக்காட்டுவதுதான். இதை அறிந்துகொண்டால் தனியாக தியானம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் வாழ்க்கையே தியானமாக நிரந்தர அமைதியை அனுபவிக்கலாம்.


பயிற்சிக்காக :

1. உண்பவன் இல்லை என்று வேதம் கூறுவதன் நோக்கம் என்ன?

2. அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர்தான் முக்கியமானவர் என்பதை நிரூபிக்கவும்.

3. அனுபவிக்கப்படும் பொருள் ஏன் அனுபவிப்பவராக இருக்க முடியாது?

4. அனுபவிப்பவர் ஆத்மா அல்ல என்பதை நிரூபிக்கவும்.

5. ஆத்மாவுக்கும் அகம்பாவத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கும் சுவர் – ஒளிவட்டங்கள் உதாரணத்தில் கூறப்பட்ட பத்து கருத்துக்களை ஆராய்க.

6. இருவகை எண்ணங்களுக்கிடையே உள்ள முக்கியமான ஒற்றுமை என்ன? வேற்றுமை என்ன?

7. அனுபவிப்பவர் யார் என்ற கேள்வியின் முடிவான பதில் என்ன?

8. முக்தி அடைவது எப்படி?

9. வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

10. பிரச்சனைகளை தீர்த்து அமைதியுடன் இருப்பது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. இருவருக்கிடையே ஏற்படும் ஒரு அனுபவத்தில் இரு அறிபவர்கள் இருக்கிறார்களே?

2. ஆத்மாவுக்கும் அகம்பாவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

3. வெளிப்புற எண்ணங்கள் ஏற்பட அகம்பாவம் மற்றும் ஆத்மாவின் பங்கு என்ன?

4. உட்புற எண்ணங்கள் ஏற்பட அகம்பாவம் மற்றும் ஆத்மாவின் பங்கு என்ன?

5. காதலித்து கல்யாணம் செய்து கொள்வது, டேட்டிங்க் (dating) செய்து வாழ்க்கைத்துணைவரை தேர்ந்தெடுப்பது, பெற்றோர் தேர்ந்தெடுத்தவரை திருமணம் செய்துகொள்வது – இவற்றில் எது சிறந்தது? மற்றவற்றில் என்ன குறை? முக்தியடைந்தவர்கள் எந்த வகையில் திருமணம் செய்துகொள்வார்கள்?

6. மற்றவருக்கு நாம் கொடுக்கும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நமக்கு கிடையாது என்று கூறப்பட்டிருப்பது உண்மையா?

7. அனுபவிப்பவர் என்று ஒருவர் இல்லாவிட்டால் முக்தியடைவது யார்?

Thursday, November 25, 2010

Lesson 141: Rituals are not required for the enlightened (Brahma Sutra 3.4.25)

பாடம் 141: மதங்களின் அவசியம்
பாடல் 450 (III.4.25)

உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் ஏதாவது ஒரு மதத்தை முழுமையாக பின்பற்றவேண்டியதன் அவசியத்தை விளக்கும் அதேவேளையில் பரமனை அறிந்தவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தையும் இந்த பாடம் நம் முன்வைக்கிறது.

ஒட்டகச்சிவிங்கி பிறந்த சிலநிமிடங்களுக்குள் எழுந்து நின்று நடக்காவிட்டால் காத்துக்கொண்டிருக்கும் கழுதைப்புலிக்கு இரையாகவேண்டும் என்பது அதற்கு தெரியும். எனவேதான் அது ‘இப்பொழுதுதான் நான் பிறந்தேன், சிறிது நேரம் ஓய்வெடுத்தப்பின் உன் பின் நடந்து வருகிறேன்’ என்று அதன் தாயுடன் வாதாடுவதில்லை. இதுபோல் அனைத்து உயிரினங்களுக்கும் தனக்கு நல்லது எது தீமை தருவது எது என்ற அறிவு இயல்பாகவே இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு இந்த அறிவு வளர்ந்தபின் கூட தானாக ஏற்படுவதில்லை.

உதாரணமாக உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவை தேவையான அளவு மட்டும் உட்கொள்ள வேண்டும் என்று மற்ற உயிரினங்களுக்கு யாரும் போதனை செய்யத்தேவையில்லை. மனிதன் மட்டும்தான் நாக்கின் சுவைக்காக உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுகிறான். தனக்கு நல்லது எது என்று தானாகத்தெரிந்துகொள்ளும் திறமை மனிதனுக்கு இல்லையென்ற காரணத்தால் மட்டுமே மதம் மனிதனுக்கு அவசியமாகிறது.

புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்கு கேடு என்றும் குடி குடியைகெடுக்கும் என்றும் எவ்வளவோ பிரச்சாரம் செய்தாலும் ஏன் இவற்றை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதை வேதம் தெளிவாக விளக்குக்கிறது. இந்த விளக்கத்தை படித்து புரிந்துகொள்ளும் தகுதியுள்ளவர்கள் தீயவற்றை தவிர்த்து இன்பமாக வாழ்வார்கள். வேதத்தை ஆசிரியரின் துணையுடன் படித்து புரிந்துகொள்ளும் சக்தியற்றவர்களுக்கு இதைச்செய் அதைச்செய்யாதே என்று மதம் போதிக்கிறது. மனிதன் செய்யவேண்டிய கடமைகளையும் தவிர்க்கவேண்டிய பழக்கங்களையும் உலக மதங்கள் பட்டியலிட்டு கூறுகின்றன. வேதத்தை படிக்கும் அளவுக்கு மனம் பக்குவபடும்வரை மனிதன் மதகுருமார்கள் போதிக்கும் நீதி நெறிகளையும் நன்னடத்தைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும்.

விலங்குகளும் மனித இனமும்

தான் என்ற தன்னுணர்வு (self-awareness) விலங்குகளிடம் இல்லாததால் அவை இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றன. பிறந்தது முதல் இறக்கும் வரை அவற்றின் சுபாவம் (instinct)  அனைத்துச்செயல்களுக்கும் காரணமாய் அமைவதால் இதை செய்யலாமா வேண்டாமா என்ற விவாதம் அவற்றின் மனதில் ஏற்படுவதில்லை. துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ செய்யவேண்டிய செயல்கள் அவற்றின் சுபாவமாக அமைந்துள்ளன. இந்த பாக்கியம் மனிதனுக்கு கிடையாது. துன்பத்தில் வீழாமல் தன்னை காத்துக்கொள்ள அவனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அவனது புத்தி (intelligence) மட்டுமே.

அசுத்தமாயையால் செய்யப்பட்ட காரணத்தால் மனிதனுக்கு தன்னுணர்வு இருந்தாலும் தான் யார் என்ற அறிவு இருப்பதில்லை. எனவே எந்த மனிதனுக்கும் நல்லவை கெட்டவை என்று பகுத்தறியும் புத்தி சரியாக வேலை செய்வது இல்லை. இன்பமாக இருக்க நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற தவறான எண்ணம் பொதுவாக எல்லோரிடமும் உள்ளது. துன்பத்தை தவிர்க்க மனிதனுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான புத்தியும் இவ்வாறு தவறாக செயல்படுவதால் மனிதன் தொடர்ந்து மதங்களைச்சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மதம் சார்ந்து தோன்றிய பண்பாடு, கலாச்சாரம், குடும்ப ஆச்சார கட்டுப்பாடு, சமூக நியமங்கள் ஆகியவற்றை பின்பற்றி இப்படித்தான் வாழவேண்டும் என்று பெரியவர்கள் சொல்படி நடப்பது மட்டுமே மனிதனுக்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட நாளில் கோவிலுக்கு செல்வது, தினமும் ஐந்து முறை ஆண்டவனைத்தொழுவது என்பது போன்று அவரவர் குடும்பத்தில் வழிவழியாக வரும் சட்டதிட்டங்களை ஏன் என்று கேள்விகேட்காமல் பின்பற்ற வேண்டும். மேலும் சூதாடுதல், மது அருந்துதல் மற்றும் ஆண்-பெண் ஒருவரை ஒருவர் கவரும் வகையில் உடை அணிதல், சேர்ந்து பழகுதல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வேதத்தை படித்து தான் யார் என்பதை உணர்ந்து கொள்ளும் வரை இதுபோல் மதக்கோட்பாடுகளின் துணை மனித நல்வாழ்வுக்கு மிக அவசியம்.

கைத்தடியின் உதவியில்லாமல் நடக்கும் குருடன் கிழேவிழுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதுபோல் மதங்கள் கூறும் நற்பண்புகள், நன்னடத்தைகள் மற்றும் நீதி நெறிகளை பின்பற்றாத மனிதன், வாழ்வில் துன்பத்தை அடைவது நிச்சயம்.

உலகமும் மனிதனும்

மனிதன் தன்னைச்சுற்றியுள்ள உலகை உணர ஐந்து புலன்களையும் மனதையும் சார்ந்து இருக்கிறான். ஒவ்வொருமனிதனும் தன் விருப்பு-வெறுப்பு என்ற வண்ணக்கண்ணாடி மூலம் உலகைப்பார்ப்பதால்  உள்ளவற்றை உள்ளபடி யாரும் உணர்வதில்லை. எனவேதான் உண்மை எது என்பதில் பல கருத்துவேறுபாடுகள் உள்ளன. இரண்டாயிரம் வருடங்களாக அறிவியலின் துணையுடன் மனிதன் எவ்வளவோ முயற்சிசெய்தும் கூட துன்பத்தை முழுவதும் தவிர்க்க அவனால் முடியவில்லை. தான் தேடுவது ஏற்கனவே தன்னிடம் இருக்கிறது என்ற அறிவை வேதத்திலிருந்து பெறும்வரை இன்பமாக இருப்பதற்காக மட்டுமே படைக்கப்பட்ட உலகில் அவன் துன்பம் கலந்த இன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகிறான்.

நாம் இன்பமாக இருக்க உலகை நம் விருப்பப்படி மாற்றும் முயற்சிகளை சற்று ஒத்திப்போட்டுவிட்டு நம் மனம் செயல்படும் விதத்தை முழுதாக அறிந்து கொண்டால் உலகம் எப்படியிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நிலையான நிம்மதியுடன் வாழலாம். அதன் பின் மதக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லாமல் உலக இன்பங்களை துன்பம் கலவாமல் அனுபவிக்கலாம்.

இந்த நிலையை மனிதன் அடைவதற்கு உலக மதங்கள் அவன் வாழ்வின் அனைத்துக்கட்டங்களிலும் அவனை வழிநடத்துகின்றன.  

மதம் காட்டும் வழி 1: புலன்களை கட்டுப்படுத்துதல்.

புலன்கள் மூலமாக மட்டுமே அனைத்து அனுபவங்களும் நமக்கு ஏற்படுகின்றன. பிறவிகள் தோறும் ஏற்பட்ட அனுபவங்களால் நம் புலன்கள் இயற்கையாகவே பிடித்ததை நாடவும் பிடிக்காததை தவிர்க்கவும் பழகியுள்ளன. ஆனால் பிடித்தவை நன்மை தருபவையாக இருப்பதில்லை. நம் வாழ்வின் நலன் கருதி பிடிக்காத செயல்களைச்செய்வது அவசியமாகலாம். விருப்பு-வெறுப்பு என்ற அடிப்படையில் அமைந்த பதிவுகளை நன்மை-தீமை என்ற அடிப்படையில் மாற்றியமைக்க மதகட்டுப்பாடுகள் உதவுகின்றன.

உதாரணமாக சபரிமலைக்கு செல்ல மாலைபோட்டு விரதம் ஏற்பவர்கள் நாற்பது நாட்களுக்கு மது, மாது, மாமிசம் ஆகியவற்றை தவிர்த்து தினசரி பூஜை செய்து புலன்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

மதம் காட்டும் வழி 2: மனக்கட்டுப்பாடு

புலன்கள் உலகப்பொருள்களின் பின் அலைவதை கட்டுபடுத்த முடியாமல் அவற்றின்பின் சென்றுகொண்டிருக்கும் மனதிற்கு தியானம், மந்திரம் ஜெபித்தல், பூஜைசெய்தல் போன்ற பயிற்சிகள் மூலம் சக்தியளிப்பது மதம்.  

மதம் காட்டும் வழி 3: பணம் சம்பாதித்தல்

உழைத்து சம்பாதிப்பதை ஒரு முக்கியமான படிக்கட்டாக மதம் மனிதனுக்கு பரிந்துரை செய்கிறது. பரம்பரை சொத்திலிருந்து கிடைக்கும் வட்டி, வாடகை போன்ற வருமானத்தில் வாழ்வதை மதம் கண்டிக்கிறது. மனதை செம்மைபடுத்த உழைப்பு அவசியம். மனம் செம்மைபடுத்தப்படாவிட்டால் வாழ்வில் துன்பத்தை தவிர்க்க முடியாது.

மதம் காட்டும் வழி 4: பணம் செலவழித்து விருப்பம்போல் வாழ்வது

விதவிதமான ஆடை அணிகலன்களை வாங்கவேண்டும், உலகத்தை சுற்றி உல்லாசப்பயணம் செல்ல வேண்டும் என்பது போன்ற பல ஆசைகள் மனிதனுக்கு ஏற்படலாம். இதுபோன்ற நியாயமான ஆசைகளை கடவுளின் பிரசாதமாக கருதித்தான் அனுபவிக்க வேண்டும் என்று வேதம் விதித்துள்ளது.

மதம் காட்டும் வழி 5: பாவபுண்ணியங்கள்

பணம் சம்பாதிப்பதும் அதை செலவழித்து ஆசைகளை நிறைவற்றிக்கொள்வதும் தர்மமான முறையில் செய்யப்படவேண்டும் என்றும் அதர்மமான செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்றும் வேதம் வலியுறுத்துகிறது.

வேதத்தின் முதல் பகுதியில் விவரிக்கப்பட்ட இந்த ஐந்து வழிகளை பின்பற்றி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தால் கூடிய விரைவில் வேதத்தின் இறுதிப்பகுதியை படித்து புரிந்து கொள்ளும் தகுதியை பெறுவோம். விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் செயல் புரிந்து பாவபுண்ணியங்களின் அடிப்படையில் செயல்களின் பலன்களை பெறுவதால் எவ்வளவுதான் முயன்றாலும் நிலையான இன்பமும் நிம்மதியும் கிடைக்காது என்பதை உணர்வோம். எனவே உலகத்தில் உள்ள பொருள்களின் மீதும் மனிதர்கள் மீதும் நமக்கு இருந்து வந்த மோகம் நீங்கும். வேதாந்தத்தை முறையாக படித்து பரமனை அறிந்து முக்தியடைய தீவிர ஆசை பிறக்கும்.

முக்தியடைய மூன்று படிகள்

நான் யார், படைப்பின் இரகசியம் என்ன, படைத்தவன் யார், வாழ்வில் துன்பங்கள் ஏற்படுவதன் அடிப்படைக்காரணம் என்ன, முக்தி என்றால் என்ன மற்றும் முக்தியடையும் வழி எது என்ற ஆறுகருத்துக்களை தெளிவாகவும் தர்க்க அறிவிற்கு ஏற்புடையதாகவும் கூறுவது மதம். முக்தியடையும் வழியை பின்பற்றினால் மற்ற ஐந்து கருத்துக்களையும் புரிந்து கொள்ள தேவையான புத்திக்கூர்மையையும் மனப்பக்குவமும் நமக்கு கிடைக்கும். 

அதன் பின் முக்தியடைய பின்வரும் மூன்று படிகளைத்தாண்ட வேண்டும். 

முதல் படி: கற்றல்

முறையாக வேதம் பயிற்றுவிக்கும் ஆசிரியரின் மேற்பார்வையில் தொடர்ந்து வெகுகாலம் சிரத்தையுடன் பயின்றால் வேதாந்தத்தின் மையக்கருத்தான நீயே அது என்பதன் பொருள் புரியும்.  மாணவனுக்கு புரியும்படி சொல்லித்தரும் பொறுப்பு ஆசிரியரைச்சேர்ந்தது. புரியும் வரை கேள்விகள் கேட்பது மாணவனின் கடமை.

இரண்டாம்படி: கசடறக்கற்றல்

நீயே அது என்பது எவ்வாறு உண்மையாயிருக்க முடியும் என்பதை இந்த படியில் மாணவன் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்லிகொடுத்த கருத்துக்களை மனதில் அசைபோட்டு தர்க்கம் மற்றும் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில் அவற்றை சோதித்து நீயே அது என்ற கருத்து வெறும் செய்தியாக இல்லாமல் அறிவாக மாற்றிக்கொள்ளும் பொறுப்பு மாணவனைச்சேர்ந்தது. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது மட்டுமே ஆசிரியரின் கடமை.

மூன்றாம்படி: பெற்ற அறிவில் நிலை பெறுதல்

முதல் இருபடிகளை முறையாக கடந்தவுடன் முக்திகிடைக்க வேண்டும். ஆனால் பலர் இவ்வுலகின் நிகழ்வுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு துன்பம் கலவா இன்பத்தை அடைவதில்லை. இதற்கு காரணம் வேதம் கூறும் கருத்துக்கள் புரியவில்லை என்பதாக இருந்தால் மறுபடியும் முதல் படிக்கு சென்று கற்றலை தொடர வேண்டும். அல்லது நீயே அது என்பதில் சந்தேகம் இருந்தால் இரண்டாம் படிக்குச்சென்று குற்றமற்ற அறிவைப்பெறவேண்டும். அதன்பின்னும் முக்தியடையவில்லை என்றால் இந்த மூன்றாம் படியை கடப்பது அவசியம்.

இந்தப்படியில் ஆசிரியரின் பங்கு ஏறக்குறைய ஒன்றுமேயில்லை. மாணவன் தன் சொந்தமுயற்சியால் மட்டுமே இந்த படியை கடக்க வேண்டும். நீயே அது என்பது அறிவாக மாறியபின்னும் முக்தியடையாமல் இருப்பதற்கு ஒரே காரணம் நம் மனம் சரியாக பயிற்றுவிக்கப்படவில்லை என்பதுதான்.

முக்தி என்பது எவ்வித அசாதாரணமான அனுபவம் என்றோ ஒருசில நிமிடங்கள் இருந்து மறையும் கற்பனைத்தோற்றங்களோ அல்ல என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். வேதாந்தத்தை முறையாக பயின்று தெளிவான அறிவைபெற்ற அனைவராலும் முக்தியடைய முடியும்.

வெகுகாலம் யாரும் குடியிருக்காமல் பாழடைந்த பங்களாவில் குழாயைத்திறந்தால் தண்ணீர் வராது. மேல்தொட்டியில் தண்ணீர் இருந்தாலும் குழாயில் அடைப்பு இருப்பதுதான் அதன் காரணம். அதேபோல் பிறந்தது முதல் சாதாரண மனிதன் என்று நம்மைப்பற்றி நாம் வைத்திருந்த கருத்து நான் பரமன் என்று உணர்ந்த பின்னும் நம்மை உடனே முக்தியடையவிடுவதில்லை. குழாயின் அடைப்பை நீக்குவது போல மனதில் உள்ள தவறான கருத்துக்களை தியானம் மூலம் நாம் அகற்ற வேண்டும். சதாரண தியானம் மற்றும் சிறப்பு தியானம் ஆகிய இரு தியானங்களைச்செய்வதன் மூலம் விரைவில் நாம் முக்தியடையலாம்.

சாதாரண தியானம் செய்ய வேண்டிய அவசியம்

நாம் உலகை எந்த பார்வையில் பார்க்கிறோம் என்பது நம் அறிவைப்பொறுத்தது. உலகம் உண்மை என்ற தவறான அறிவு இருக்கும்வரை அதில் நாம் இன்பத்தை தேடிக்கொண்டிருப்போம். நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகள் நம்மை தொடர்ந்து பாதித்து வரும். உலகம் மாயை என்று உணர்ந்த பின்னும் இதுபோன்ற பாதிப்புகள் உடனே நின்றுவிடுவதில்லை. நான் என்றுமிருக்கும் ஆனந்தமயமான பரமன் என்ற உண்மையை தியானம் மூலம் ஆழ்மனதில் அழுத்தியபின்தான் உலகத்தை ஒரு பொழுதுபோக்கு சாதனமாக பார்க்கத்துவங்குவோம்.

உலக நிகழ்வுகள் என்னும் காற்று நம்முடைய மனம் என்னும் நெருப்புச்சுடரை அலைக்கழிக்கும்பொழுது உலகம் மாயை என்ற அறிவு கண்ணாடி கூடாக சுடரை பாதுகாக்கும். கற்றல் மூலம் பெற்ற ஞானம் என்ற கண்ணாடி கூடு கசடறகற்றல் மூலம் உறுதிபடுத்தப்பட்டு நிலைபெறுதல் என்ற இந்தப்படியில் உறுதியாக பொருத்தப்படும். இதனால் மனதின் அலைபாயும் தன்மை குறையும்.

உலகம் மாயை என்ற அறிவு உலகை எவ்விதத்திலும் மாற்றாது. ஆனால் உலக நிகழ்வுகள் மனதின் நிலையான அமைதியை குலைக்கும் சக்தியை படிப்படியாக இழக்க ஆரம்பிக்கும். பெரிய பிரச்சனைகள் அல்லது நெருக்கடிகள் என்று உலகத்தின் மாறும் நிகழ்வுகளுக்கு நாம் பெயர்கள் கொடுக்கமாட்டோம்.

மகள் பக்கத்துவீட்டுப்பையனுடன் ஓடிப்போய்விட்டாள் என்ற செய்தி நம்மை நிலை குலைய வைக்கலாம். உடல் தளர்ந்து மனம் மயங்கி கீழே விழலாம். வாய் சொல்லக்கூடாத வார்த்தைகளை பிதற்றலாம். முக்தியடையும் முதல் இருபடிகளை முறையாக கடந்திருந்தால் இந்த செய்தி நம் உடலையும் வாக்கையும் அவ்வளவாக பாதிக்காது. மனம் சிறிது அலைபாய்ந்தாலும் வெகுசீக்கிரம் ஆகவேண்டிய காரியத்தில் கவனத்தை செலுத்த தயாராகிவிடும்.

‘மாறும் மனம் நானல்ல. மாறாத பரமனே நான்’ என்று மந்திரஜபம் செய்தவர்கள் மனதின் அலைபாயும் தன்மையை பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. வேதம் படிக்காதவனுக்கு கோபம் ஏற்பட்டால் மனம் அமைதியடைந்ததும் தான் கோபபட்டது பற்றி வருத்தம் அடைவான். வேதம் படித்து முடித்தவனுக்கு இந்த வருத்தம் அதிகமாக கூடாது. இவ்வளவு தூரம் நான் வேதம் படித்து என்ன பிரயோஜனம், எனக்கு எப்படி கோபம் வரலாம் என்று மேற்படி துயரம் ஏற்பட்டால் வேதம் படித்தது வீண். மனம் வெளிவுலக நிகழ்வுகளுக்கேற்ப அலைபாயும் தன்மை உள்ளது என்பது புரிந்தால் அதன் நிலை பற்றிய கவலை நம்மிடமிருந்து நீங்கும்.

அதன் பின் மனம் மேலும் அமைதியடையும்.

அகராதியை வழக்கமாக வைக்கும் புத்தக அலமாரியிலிருந்து எடுத்து நாம் அமர்ந்து வேலை செய்யும் மேஜைக்கு இடமாற்றம் செய்திருந்தாலும் அதை மறந்து விட்டு பழையபடி அலமாரியில் தேடுவோம். எழுந்து நடக்கும் சிரமம் இல்லாமல் கையை நீட்டி எடுக்கும் தூரத்தில் இருக்கும் அகராதி அங்குதான் இருக்கிறது என்பதை திரும்ப திரும்ப தியானம் செய்து, வேண்டிய பொழுது உடனே அதன் நினைவு வரச்செய்த பின்தான் பழைய இடத்தில் தேடுவதை நிறுத்துவோம்.

அதுபோல வெளியுலகில் இன்பத்தைத்தேடி பழகிவிட்டிருப்பதால் அதை இனிமேல் எங்கும் தேடவேண்டாம், அது என்னுடன் எப்பொழுதும் இருக்கும் என் சுயரூபம் என்று தேவையான சமயத்தில் தோன்ற இந்த கருத்தை சாதாரண தியானமாக சில காலம் செய்து வரவேண்டும்.

உலகம் உண்மை என்றும் தான் ஒரு அற்பமான மனிதன் என்றும் பலகாலம் மனதில் பதிந்திருந்த அறிவு மகள் எங்கே போயிருப்பாள், அவளுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற கவலையை தரும். இந்த பிரபஞ்சத்திற்கே ஆதாரமான பரமன் நான் என்று தியானம் செய்திருந்தால் இதுபோல் பதறும் நேரம் மிகக்குறையும். கவலை தரும் நிகழ்வுகள் படிப்படியாக குறையும். கவலை ஏற்பட்டாலும் அதன் துன்பம் தரும் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். கவலையிலிருந்து விடுபட்டு சாதாரண நிலைக்குத்திரும்ப நாம் எடுத்துக்கொள்ளும் நேரமும் குறையும்.

சாதாரண தியானம் செய்யும் விதம்

சாதாரண தியானத்தை ஓரிடத்தில் அமர்ந்து முறையாக செய்யவேண்டிய அவசியமில்லை. எங்கேயும் எப்பொழுதும் நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் நான் பரமன் மனிதனல்ல என்பதை நமக்கு நாமே ஞாபகப்படுத்திக்கொள்வதுதான் சாதாரண தியானம்.

மாங்காய் ஊறுகாய் செய்தவுடன் அதை எடுத்து சாப்பிடமுடியாது. மாங்காய் சிறிதுகாலம் எண்ணையில் ஊறியபின்தான் உறுகாயாக மாறும். அதுபோல நான் பரமன் என்ற எண்ணம் மனதில் ஊறியபின்தான் நாம் பரமனாக மாறமுடியும்.

மறுபடியும் வேதத்தை படிப்பது, நண்பர்களுடன் அதைப்பற்றி உரையாடுவது, எழுதுவது மற்றும் மற்றவர்களுக்கு போதிப்பது போன்ற செயல்களால் நான் பரமன் என்ற எண்ணத்தை நம் ஆழ்மனதிற்குள் அழுத்தி நான் சாதாரண மனிதன் என்ற தவறான அறிவை அழிக்கவேண்டும்.

ஒரு நல்ல சினிமா படத்தை திரும்ப திரும்ப பார்ப்பது போல வேதாந்தத்தை பல முறை கற்க வேண்டும். முதல் முறை அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆசையால் அதை படித்திருப்போம். பல்வேறு உபநிடந்தங்கள், எண்ணிலடங்கா கீதைகள் மற்றும் வேதாந்தத்தை அடிப்படையாக கொண்ட நூல்கள் ஆகியவற்றை திரும்ப படிக்கும்பொழுது இவ்வுலகம் வெகு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ள திரைப்படம் என்ற உண்மை மனதில் பதியும்.

சிறப்பு தியானம் செய்ய வேண்டிய அவசியம்

புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய மனம் ஒரு சில குறிப்பிட்ட பழக்க வழக்கங்களால் உலகின் பின் செல்வதை தவிர்க்க சிறப்பு தியானம் அவசியம்.

சாலையின் இடது புறம் கார் ஓட்டி பழகிவிட்டு வெளி நாடு சென்று வலது புறம் ஓட்டவேண்டிய கட்டாயமேற்படும்பொழுது தொடர்ந்து நமக்கு நாமே அதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அது போல நம்  தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மனதில் ஆழமாக பதிந்திருந்து தடைபடா நிம்மதிக்கு தடையாய் இருக்கலாம். இந்த பாதிப்பை அகற்ற சிறப்பு தியானம் செய்ய வேண்டும்.

சிறப்பு தியானம் செய்யும் விதம்

அஷ்டாங்க யோகத்தில் விளக்கப்பட்ட விதத்தில் சிறப்பு தியானம் செய்ய வேண்டும். எந்த நிகழ்வுகள் நம் மனதை பாதிக்கின்றனவோ அதன் தொடர்பான ஒரு மந்திரத்தை தியானத்திற்கு உண்டான பொருளாக கொள்ளவேண்டும். உதாரணமாக பிடிக்காத மனிதர்களுடன் தொடர்புகொள்வதை தவிர்க்க முடியாவிட்டால் அவர்களும் பரமன் என்பதை தியானத்தின் மந்திரமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து தியானிக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தின் தலைவர் தெளிவான உத்திரவு ஒன்றை போட்டிருந்தாலும் அவருக்கு கீழே வேலை செய்பவர்கள் அனைவரும் உடனே அதற்கு பணிந்து வேலை செய்வதில்லை. பழைய வழக்கப்படி தொடர்ந்து செயல்கள் செய்யப்படுவதை தணிக்கையாளர்கள் கண்டுபிடுத்து தக்க தண்டனை கொடுப்பதன் மூலமாக சிலகாலம் கழித்து அந்த உத்திரவு முழுமையாக அமலுக்கு வரும்.

அது போல இந்த உலகே மாயை என்ற உண்மையை மறந்து நாம் செயலாற்றி அதனால் நாம் துன்பபட நேர்ந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் சிறப்பு தியானம் செய்து நம் மனதிற்கு அதன் தவறை தொடர்ந்து சுட்டிக்காட்டி புத்தியின் அறிவுப்படி நடக்க அதற்கு கட்டளையிடவேண்டும். இது போன்ற பயிற்சிக்குப்பின் மனம் புத்தியின் கட்டுக்குள் செயல்பட ஆரம்பிக்கும். அதன் பின் இந்த உலகம் நமக்கு துன்பம் ஏற்படுத்தும் சக்தியை முற்றிலும் இழந்து விடும்.

தடையில்லாத பாதுகாப்புடன் குறையாத இன்பத்தையும் நிலையான நிம்மதியையும் அனுபவிக்கத்துவங்கிவிடுவோம். இவ்வாறு மதம் தரும் உதவியை முழுமையாகப்பெற்றபின் அதற்கு நன்றி செலுத்துவதை தவிர அது கூறும் கட்டுப்பாடுகள் எதையும் பின்பற்றி நடக்க வேண்டிய அவசியமில்லை.

முடிவுரை :

நடைபயில உதவும் மூன்று சக்கர நடவண்டியைப்போன்றது மதம். தானாக நடக்க இயலாத குழந்தை நடவண்டியை பிடித்துக்கொண்டு அங்குமிங்கும் நடக்கும்பொழுது எங்கு செல்கிறது என்பது முக்கியமல்ல. எங்கு சென்றாலும் நடக்க கற்றுக்கொள்கிறது என்பதுதான் முக்கியம். நன்றாக நடக்கத்தெரிந்த பின் அந்த வண்டிக்கு எவ்விதப்பயனும் இல்லை. அது போல புத்தி பக்குவப்பட்டு உண்மையை உணரும் வரை மதம் கூறும் வழியில் பயணிப்பது மட்டுமே மனிதனுக்கு உகந்தது. வேதத்தின் உட்கருத்து புரிந்தபின் மதம் தேவையில்லை.

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று சக்கரங்களை கொண்ட மதம் மனிதர்களின் வாழ்க்கையை வழிநடத்துகின்றன. மனிதன் என்ன செய்கிறான் என்பதைவிட மதம் கூறும் வழியை பின்பற்றுகின்றானா என்பதுதான் முக்கியம். மதம் கூறும் கடமைகள், நன்னடத்தை, நன்னெறி ஆகியவற்றை பின்பற்றி பொருள் ஈட்டுவதும் மனதில் தோன்றும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதும் மனப்பக்குவத்தை கொடுக்கும். அதன் பின் வேதாந்தத்தை படித்து சரியான அறிவைப்பெற்றவுடன் புத்திக்கு குறையில்லா வாழ்வைபெற்றுத்தரும் சக்தி வந்து விடும். அதன்பின் மதத்தின் துணை மனிதனுக்கு தேவையில்லை. நான் பரமன் என்று அறிந்துகொண்ட மனிதன் பரமனாகவே மாறிவிடுவதால் அவன் செய்யவேண்டிய செயல் என்று எதுவுக் கிடையாது. செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடும் அவனுக்கு கிடையாது. அவனது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் மட்டுமே அவன் வாழ்க்கை அமையும்.


அவன் மதகோட்பாடுகளை பின்பற்றுவது போல் தோற்றமளிப்பது மற்றவர்களுக்கு வழிகாட்டும்பொருட்டே. மக்கள் மத்தியில் வாழாமல் தனித்து வாழ்ந்தால் அவனுக்கு அந்த அவசியம் கூட இருக்காது. ஏனெனில் விலங்குகள் எவ்வித மதங்களின் துணையில்லாமல் தங்கள் சுபாவப்படி வாழ்வதுபோல் அவனால் துன்பங்களை முழுவதும் தவிர்த்து என்நாளும் இன்பமாக வாழ முடியும்.


பயிற்சிக்காக :

1. மனிதனுக்கு இல்லாத எந்த அறிவு விலங்குகளுக்கு இயல்பாகவே இருக்கிறது?

2. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்று இந்த பாடம் குறிப்பிடும் கருத்துக்கள் யாவை?

3. மதங்களின் அவசியம் என்ன?

4. புலன்களை ஏன் கட்டுப்படுத்தவேண்டும்?

5. மனதை கட்டுப்படுத்த மதம் எவ்வாறு உதவுகிறது?

6. உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்ன?

7. ஆசைகளை எவ்வாறு அனுபவிக்க வேண்டும்?

8. மதம் என்ற தகுதியை பெற அதில் அடங்கியிருக்க வேண்டிய ஆறு கருத்துக்கள் யாவை?

9. முக்தியடைய கடக்கவேண்டிய மூன்றுபடிகள் யாவை? அவற்றில் ஆசிரியரின் பங்கு என்ன? மூன்றாவது படியின் அவசியம் என்ன?

10. சாதாரண தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

11. சாதாரண தியானம் செய்யும் விதம் யாது?

12. சிறப்பு தியானம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

13. சிறப்பு தியானம் செய்யும் விதம் யாது?   

சுயசிந்தனைக்காக :

1. மனதை கட்டுப்படுத்துவதன் அவசியம் என்ன?

2. ஆதி சங்கரர் தத்துவபோதம் என்ற நூலில் விவரித்த நான்கு தகுதிகளை இந்த பாடத்தில் குறிப்பிடப்பட்ட மூன்று தகுதிகளுடன் ஒப்பிடுக.

3. மதக்கோட்பாடுகளின் படி வாழாமல் நேரடியாக வேதாந்தத்தை படித்து முக்தியடைய முடியாதா?