Showing posts with label Mind. Show all posts
Showing posts with label Mind. Show all posts

Wednesday, February 8, 2012

Lesson 167: The Knower becomes one with Brahman (Brahmasutra 4.1.19)


பாடம் 167: பரமனை அறிந்தவன் பரமனாகிவிடுவான்
பாடல் 496 (IV.1.19)

வாழும்பொழுது பரமனை அறிந்தவன் இறந்தவுடன் மீண்டும் பிறப்பதில்லை. அவன் பரமனுடன் ஒன்றாகிவிடுகிறான் என்று பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் (4.4.6) குறிப்பிடுவதை சுட்டிக்காட்டி ஞானம் எவ்வாறு துன்பங்களிலிருந்து முழு விடுதலையளிக்க உதவுகிறது என்பதை இந்த பாடம் தெளிவுபடுத்துகிறது.

உயிரினங்களுக்கும் ஜடப்பொருள்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெளிவாக அறியாதவர்கள் பற்றுடையோர்கள். அறிவியலால் இந்த அறிவைத்தர முடியாது என்று புரிந்ததும் வேதம் படித்து உயிருடன் உலவ நுண்ணிய உடல் தேவை என்ற அறிவைப்பெற்றவர்கள் முக்திவிழைவோர்கள். உலகில் இருப்பவை அனைத்தும் ஜடப்பொருள்கள் மட்டுமே என்று அறிந்தவர்கள் முற்றுணர்ந்தோர்.

தான் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கும் தனக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்ற உண்மையை உணராதவரை துன்பங்களை முழுதாக தவிர்க்க முடியாது.

கனவில் காணும் கனவு

கனவில் தென்படும் நாற்காலியும் அதில் அமர்ந்துள்ளவரும் மனதில் தோன்றும் எண்ணங்களால் உருவாக்கப்பட்டவை. அதேபோல் ஜடமான மாயாசக்தியால் உருவான பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஜடப்பொருள்களாகத்தான் இருக்க முடியும். ஒளியை பிரதிபலிக்கும் தன்மை இருந்தாலும் கண்ணாடி கல்லைப்போல் ஒரு ஜடப்பொருளே. அதேபோல் பரமனின் உணர்வை பிரதிபலிக்கும் தன்மை உள்ள மனமும் மின்சாரத்தைப்போல் ஒரு ஜடம்தான். கனவு கலைந்தவுடன் கண்ணில் தெரியும் உலகம் நிஜம் என்ற எண்ணம் இருக்கும்வரை அதில் உயிரினங்களும் ஜடப்பொருள்களும் இருப்பதாக தோன்றும். காண்பது நிஜமல்ல என்ற ஞானம் ஏற்பட்டவுடன் ஒளி, ஒலி ஆகிய ஜடப்பொருள்களால் மட்டுமே உருவான உலகிலிருந்து துன்பம் முழுதாக மறைந்துவிடும்.

கனவிலிருந்து விடுதலை

இரவில் காணும் கனவு தானாக முடிந்துவிடும். விழித்ததும் தொடரும் கனவை கனவு என்று புரிந்து கொள்ள வேதம் பயின்ற ஆசிரியரின் துணைதேவை. கனவை கனவு என்று புரிந்துகொண்டாலும் அது மரணம் வரைதொடரும். எனினும் உலகம் நமக்கு துன்பத்தை தரும் சக்தியை இழந்துவிடும். முற்றுணர்ந்தோர்கள் வாழ்வை கனவு என்று அறிந்தவர்கள் என்பதால் அதிலிருந்து விடுதலை பெற்றவர்கள்.

வாழ்க்கையின் உண்மைத்தன்மையை ஆராயாத பற்றுடையோர்கள் கனவு மற்றும் நனவு ஆகிய இரண்டிலும் துன்பபடுவார்கள். இவர்களது துன்பம்  மரணத்தில் கூட முடிவதில்லையென்றும் பிறப்பு இறப்பு என்ற மீளாச்சுழலில் அகப்பட்டு ஞானம் பெறும்வரை அலைக்களிக்கப்படுவார்கள் என்றும் வேதம் கூறுகிறது. ஏன் என்ற கேள்வியை கேட்டு வேதம் படித்த ஆசிரியர்களின் உதவியுடன் பதிலை ஆராயும் முக்திவிழைவோர்கள் காரண உடல், நுண்ணிய உடல், பருவுடல் என்ற மூன்று பிரிவுகளையும் அவற்றின் விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் தெரிந்துகொள்கிறார்கள். தீவிர ஆய்வுக்குப்பின் இவையனைத்தும் மாயை என்ற உண்மையை புரிந்துகொள்ளும்பொழுது முற்றுணர்ந்தோர்களாக மாறி இவர்கள் கனவிலிருந்து விடுதலைபெறுகிறார்கள். காண்பது கனவு என்று அறிந்தபின் இந்த வாழ்வை துன்பம் கலக்காத இன்பத்துடன் மரணம் வரை தொடர்ந்து அனுபவிக்கும் இவர்கள் மரணத்திற்குப்பின் மீண்டும் பிறப்பதில்லை.

துன்பத்திலிருந்து விடுதலை பெற கூரிய பகுத்தறிவு அவசியம். எதற்கு செயல்களை செய்கிறோம் என்ற கேள்வியை கேட்காமல் உழைக்கும் பற்றுடையோர்களும் வேதம் தரும் செய்தியை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளும் முக்திவிழைவோர்களும்  உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்தறிவதில்லை. உலகம் உண்டானபொழுது உடன் உருவாகிய வேதம் என்ற அடுக்குப்பெட்டியை குருவின் உதவியுடன் பகுத்தறிவு என்ற சாவிகொத்தில் இருக்கும் சரியான சாவிகளை உபயோகித்து திறந்த ஞானிகள்  துன்பத்திலிருந்து முழுவிடுதலையடைவார்கள்.  

கனவுக்கோட்டையின் திறவுகோல்

இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை உணர்ந்து அதிலிருந்து விடுதலைபெறத்தேவையான பகுத்தறிவு என்ற திறவுகோல்கள் ஒவ்வொரு மனிதனிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாயச்சிறையிலிருந்து முழுவதுமாக வெளியேற நான்கு கதவுகளை திறக்கவேண்டும். வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வருவதை தவிர்க்க முடியாது என்று பகுத்தறிவை பயன்படுத்தாமல் வாழ்பவர்கள் என்றும் விடுதலை அடைவதில்லை. துன்பத்தை முழுவதுமாக தவிர்க்க முடியும் என்ற உண்மையை சுட்டிக்காட்டவே வாழ்வு துன்பகரமானது என்று புத்தர் போதனை செய்தார் என்று உணர்பவர்கள் தங்கள் பகுத்தறிவை சரியாக  உபயோகித்து அனைத்து கதவுகளையும் திறந்து முக்தியடைவர்.

முதல் கதவு: செய்தல்

ஐந்து புலன்களின் மூலம் உலகின் இருப்பை அறியும் மனிதன் அவற்றின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் விரும்புவதை நாடியும் வெறுப்பதை தவிர்க்கவும் பகுத்தறிவை பயன்படுத்தி செயல்களை செய்கிறான். அவன் செய்யும் செயல்கள் அவனது விருப்பு வெறுப்புகளை மேலும் அதிகபடுத்துகின்றன.

இலை தழைகளை உடையாய் உடுத்தியிருந்த காலத்திலிருந்து பருத்தி, பட்டு என படிப்படியாக முன்னேறியபின்னும் கடைகளில் இருக்கும் எண்ணிலடங்கா வண்ண உடைகளில் எதுவும் பிடிக்கவில்லை என்ற நிலை தொடர்ந்து நீடிக்கும் அளவுக்கு மனிதனின் விருப்பு வெறுப்புகளின் நுட்பமும் தாக்கமும் அதிகரித்துள்ளன.

எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வரவேண்டும் என்று வரம் பெற்ற வாலியை போல் உழைப்பில் பாதி புலன்களின் விருப்பு வெறுப்புகளை அதிகரிக்க செலவாகிவிடுகிறது என்பதை உணர்ந்தவுடன் வெளியுலகில் எவ்வளவு செயல்கள் செய்தாலும் துன்பத்திலிருந்து விடுதலை அடைய முடியாது என்ற அறிவு மனிதனுக்கு ஏற்படும். செயல்களை ஏன் செய்கிறேன் என்ற கேள்விக்கு அனுபவத்தின் மூலம் பதிலை அறிந்து கொள்ள முடியாது என்பதை அறிந்தவுடன் வேதத்தை  கற்றல் என்ற அடுத்த கதவை திறக்க மனிதன் முயற்சி செய்வான்.

இரண்டாம் கதவு: கற்றல்

தனக்கும் உலகத்திற்கும் உள்ள உறவு மற்றும் செயலுக்கும் அதனால் விளையும் பலனுக்கும் உள்ள உறவு போன்றவற்றை புரிந்து கொள்ளவே முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்தபின் மனிதன் வேதம் தரும் உண்மைகளை அறிந்து கொள்ள தன் பகுத்தறிவை உபயோகப்படுத்துகிறான்.

பாவ புண்ணியங்கள் பதிவாகியிருக்கும் காரண உடல், புத்தி, மனம், புலன்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நுண்ணிய உடல், மறுபிறவி, பிறவிகள்தோறும் அதிகரிக்கும் அறிவாற்றல் மற்றும் செயல் திறன் ஆகியவற்றை அவனுக்கு வேதம் அறிமுகபடுத்துகிறது. புரியாத புதிராக இருந்த வாழ்க்கை புரிய ஆரம்பிக்கிறது. ஏன் வேலை செய்தாலும் பலன் கிடைப்பதில்லை, ஏன் சில சமயம் முயற்சி எதுவும் செய்யாமலேயே தேடிவது கிடைத்துவிடுகிறது, ஏன் இந்த சோக நிகழ்வு ஏற்பட்டது என்பது போன்ற கேள்விகள் அவனை வாட்டுவதில்லை. இதுதான் உலகம், இதில் இப்படித்தான் வாழ வேண்டும் என்று எவ்வித முரண்பாடுகளும் இல்லாத தெளிவான பாதையை வேதம் காண்பிப்பதால் அதில் முறையுடன் பயணம் செய்தில் ஒரு சிலர் திருப்தியடைந்து விடுகிறார்கள்.

செயல் செய்வதற்கு மட்டும்தான் தனக்கு அதிகாரமிருக்கிறது என்றும் பலனை கொடுப்பது இறைவன் கையில் இருக்கிறது என்றும் வேதம் கூறும் கருத்தை ஏற்றுக்கொண்டு அதர்மங்களை தவிர்த்து புண்ணிய காரியங்களை செய்வதன் மூலம் அடுத்துவரும் பிறவிகளில் நிச்சயம் முக்தி அடையலாம் என்ற நம்பிக்கையுடன் இவர்கள் தொடர்ந்து செயல்களை செய்து இன்பதுன்பங்களை அனுபவித்துக்கொண்டு வாழ்வார்கள்.

ஏன் துன்பம் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு சரியான பதிலை கொடுத்தால் மட்டும் போதாது என்றும் துன்பத்தை முழுவதும் தவிர்ப்பது எப்படி என்ற கேள்விக்கும் வேதம் பதில் சொல்லியாகவேண்டும் என்றும் தொடர்ந்து வேதத்தை ஆராயும் மனிதர்கள் மட்டுமே இந்தப்பிறவியிலேயே முக்தியடையவேண்டும் என்ற தீவிர ஆசை உடையவர்கள். இவர்களால் மட்டுமே அடுத்த கதவை திறக்க முடியும்.

மூன்றாம் கதவு: கசடற கற்றல்

எவ்வித முரண்பாடும் இல்லை என்பதற்காக உலக நிகழ்வுகளுக்கு வேதம் தரும் விளக்கங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றின் உட்கருத்தை தங்கள் பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய முட்படுபவர்கள் இந்த மூன்றாம் நிலையை கடக்க தேவையான திறவுகோலை தேடி எடுப்பார்கள்.

பாவபுண்ணியங்கள் எங்கனம் காரணஉடலில் பதிவாகிறது, அவை எப்பொழுது எவ்வளவு பலனை கொடுக்கும் என்பது எப்படி தீர்மானிக்கப்படுகிறது, இறந்த பின் நுண்ணிய உடல் எந்த பாதையில் பயணம் செய்து எவ்வாறு மறுபிறவி எடுக்கிறது என்பது போன்ற ஆராய்ச்சியில் இறங்குபவர்கள் தவறான திறவுகோலால் இந்த கதவை திறக்க முனைபவர்கள். இதுபோன்ற கேள்விகளுக்கு வேதம் சரியான பதில் கொடுக்க தயாராய் இருந்தாலும் இவற்றை அறிந்து கொள்வதால் துன்பங்களை தவிர்க்க முடியாது என்று உணர்பவர்களுக்கு சரியான திறவுகோல் தென்படும்.

செயல்கள் செய்வதால் விருப்பு வெறுப்புகள் வளர்கின்றன என்பது உண்மை. ஆனால் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதும் அவற்றில் எது செயலாக மாறுகிறது என்பதும் என் கட்டுப்பாட்டில் இல்லாதபொழுது என் விருப்பு வெறுப்புகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்கமுடியும் என்று இவர்கள் ஆராய்ந்து செயல் என்பதே ஒரு காட்சிபிழை என்ற முடிவுக்கு வருவார்கள். செயலின் பலன் தானாக கிடைக்கும் என்று முதலில் கூறும் வேதம் அடுத்து செயலை செய்வதும் தானாகத்தான் நடக்கிறது என்று கூறுவதை இவர்கள் புரிந்துகொள்வார்கள்.

வேதம் கூறும் கருத்துக்கள் அனுபவத்திற்கு பொறுத்தமாயும் தர்க்க அறிவுக்கு ஏற்புடையதாகவும் இருந்தாலும் அறிவியல் அறிவால் அவற்றை நிரூபிக்க முடியாது. அதற்கு அவசியமுமில்லை. வேதத்தின் ஒரே குறிக்கோள் மனிதனின் துன்பத்தை முழுவதும் அகற்றுவது என்பது மட்டுமே. எனவே நீதான் பரமன் மற்றும் இவ்வுலகம் மாயை என்ற வேதங்களின் மையக்கருத்தை மட்டும் பகுத்தறிவால் ஆராய்ந்து மாயை என்பதை புரிந்துகொள்ள முடியாது என்று புரிந்துகொள்பவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு முன்னேற தகுதி பெற்றவர்கள்.

நான்காம் கதவு: நிற்றல்

என்ன செயல்கள் செய்கிறோம் என்பது தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்தவுடன் காரண உடலில் பதிவாகியிருந்த அனைத்து கர்மபலன்களும் அழிக்கப்பட்டு மீண்டும் பிறவா வரத்தை முற்றுணர்ந்தோர்கள் பெறுவார்கள்.

கூரிய பகுத்தறிவு என்ற திறவுகோலால் மட்டுமே இந்த கதவை திறக்க முடியும். வேதம் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை ஆய்ந்து அதன் மையக்கருத்தை தனதாக்கி கொண்டபின் வேதம் இவர்களுக்கு தேவையில்லை. ஆனால் கனவில் தோன்றிய  புலி பொய் என்றாலும் அது நம்மை பயமுறுத்தி துன்பம் தரும் கனவிலிருந்து விழிப்படைய உதவி செய்ததால் அது நன்றிக்குரியது என்பது போல் துன்பம் தரும் வாழ்வு என்னும் கனவிலிருந்து விழித்தெழ உதவிய வேதமும் போற்றுதலுக்குரியது. காண்பது கனவு என்று கூறும் வேதமும் கனவின் ஒரு பகுதியென்பதால்தான் உலகம் தோன்றியபோது அது உடன் தோன்றியது என்ற கருத்து ஆசிரியர்களால் போதிக்கப்படுகிறது.

அறிவுணர்வாயும் ஆனந்தமயமாயும் என்றும் இருக்கும் பரமன் நான் என்ற அறிவு வேதம் மூலமாக மட்டுமே நமக்கு கிடைக்கப்பேறும். உலகம் மாயை என்பதை எடுத்த எடுப்பிலேயே வேதம் நமக்கு எடுத்துரைத்தாலும் அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நமது பகுத்தறிவு கூர்மையில்லாதால் படிப்படியாக நமக்கு அந்த உண்மையை புரியவைத்தது. செயல்கள் செய்து பலனை அனுபவிப்பவன் என்ற நிலையிலிருப்பவனை ஒன்றும் செய்யாமல் இருக்கும் பரமன் நீ என்று சொன்னால் புரியாது என்ற காரணத்தால் செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும் உள்ள தொடர்பை மூன்று உடல்கள், மறுபிறவி, பிறவிகள்தோறும் தொடரும் கர்மபலன் போன்ற கருத்துக்களால் விளக்கி முடிவில் அனைத்தும் மாயை என்ற உண்மையை வேதம் தருகிறது. உண்மையில் இருப்பது நான் மட்டுமே என்றும் இருப்பதுபோல் தோன்றும் இந்த ஜடமான உலகம் மாயை என்றும் புரிந்துகொள்பவர்கள் இந்த பிறவியிலேயே முக்தியடைந்து துன்பம் கலக்காத இன்பவாழ்வு வாழ்வார்கள். பரமனாகவே இருப்பவர்களுக்கு மறுபிறவி என்பது கிடையாது.

முடிவுரை :

ஏற்றிவிட உதவுவது ஏணி. ஏணியிலேயே நின்றுகொண்டு மேலே ஏறாதவர்களுக்கு ஏணியினால் எந்த பயனும் இல்லை. காண்பது கனவு என்ற உண்மையை நமக்கு உணர்த்த பல்வேறு படிகளை கொடுத்து உதவும் வேதம் அந்த படிகளை நாம் கடந்தவுடன் அவை அனைத்தும் பொய்யான கனவைச்சேர்ந்தவை என்று நாம் உணர்வோமென எதிர்பார்க்கிறது. இல்லாத உலகத்தை இருப்பதாக நாம் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே இல்லாததை இருப்பதாக வேதம் சொல்கிறது. கண்ணுக்குத்தெரியும் உலகத்தை இல்லை என்று நிரூபிக்க கண்ணுக்குத்தெரியாத கடவுளை நமக்கு அறிமுகப்படுத்தி படிப்படியாக நமது பகுத்தறிவை கூர்மைப்படுத்தி வேதம் நமக்கு உண்மையை புரியவைக்கிறது.

அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடங்காத வேட்கை மனிதனை தொடர்ந்து தேடலில் ஈடுபடுத்தும். அறிவு ஏற்படும் மனம் என்பதே ஒரு ஜடப்பொருள் என்றும் அது இருப்பதுபோல் தோன்றும் மாய உலகத்தின் ஒரு பகுதி என்பதும் புரிந்து விட்டால் மனதின் தேடல் ஒரு முடிவுக்கு வந்துவிடும். இது ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வி மறைந்துவிடுவதால் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

இந்த விளக்கங்களை புரிந்துகொண்டு அந்த அறிவில் நிலையாய் நிற்கும் முற்றுணர்ந்தோர்கள் வாழ்வின் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறார்கள். இவர்கள் மரணமடைந்தவுடன் இவர்களது பருவுடல் உலகின் பஞ்சபூதங்களுடனும் நுண்ணியவுடல் கடவுளின் நுண்ணியவுடலுடனும் கலந்து விடுவதால் மறுபடியும் பிறக்காமல் இவர்கள் பரமனாகவே மாறிவிடுகிறார்கள்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. நான் பரமன் என்ற வேதத்தின் மையக்கருத்தை தனது கூரிய பகுத்தறிவால் ஆய்ந்து அறிந்துகொண்டவன் துன்பத்திலிருந்து முழுவதும் விடுதலையடைவதால் மீண்டும் பிறப்பதில்லை என்ற கருத்துடன் நான்காவது அத்தியாயத்தின் முதல் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. மனிதனும் அவன் அமர்ந்திருக்கும் நாற்காலியும் எப்படி ஒன்றாக முடியும்?

2. கனவுக்கோட்டையை கடக்க நாம் திறக்க வேண்டிய நான்கு கதவுகள் யாவை?

3. கதவுகளின் திறவுகோல் என்பது யாது?

4. எந்த திறவுகோலை உபயோகிப்பது என்பதை தீர்மானிப்பது யார்?

5. வேதங்களின் ஒரே குறிக்கோள் எது?

6. வேதங்களின் மையக்கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. வேதம் உண்மையை விளக்க கொடுத்த படிக்கட்டுக்கள் யாவை?

2.இந்த படிக்கட்டுக்களின் மூலம் வேதம் தரும் உண்மை என்ன?

3. வேதம் தரும் விளக்கங்களை அறிவதால் ஏற்படும் பயன் என்ன?

4. உலகம் தோன்றியபொழுது உடன் தோன்றியது வேதம் என்பதிலிருந்து நாம் அறிந்துகொள்ளும் தகவல் என்ன?

5. ஆதிசங்கரர் எழுதிய நிர்வாண சதகம் என்ற பாடலைப்படிக்கவும்.

Wednesday, March 16, 2011

Lesson 151: Child-like does not mean childish (Brahmasutra 3.4.50)

பாடம் 151: குழந்தையை போல என்றால் குழந்தைத்தனம் அல்ல
பாடல் 475 (III.4.50)

ஞானி குழந்தையைப்போல எப்பொழுதும் இன்பமாக வாழ்வான் என்பதற்கு அவன் சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் குழந்தைத்தனமாய் நடந்துகொள்வான் என்பது பொருள் அல்ல என்ற கருத்தை விளக்கி ஞானியின் பார்வையில் உலகம், ஏற்றத்தாழ்வுகளை இருந்தாலும் அவன் துன்பம் கலவா இன்பத்துடன் வாழும் விதம் என்பது போன்ற விளக்கங்களை இந்த பாடம் தருகிறது.

ஞானியின் பார்வையில் உலகம்

வானத்தில் உயரே பறந்துகொண்டிருக்கும் விமானம் அளவில் மிகப்பெரியது என்று அறிந்துகொண்டபின்னும் அது மிகச்சிறியதாகத்தான் கண்ணுக்குத்தெரியும். அணுக்கூட்டங்களின் தொடர்ந்த அதிர்வே திடப்பொருள்ளாக காட்சியளிக்கிறது என்ற அறிவியல் அறிவு ஏற்பட்டபின்கூட வாசல் வழியாகத்தான் வீட்டை விட்டு போகமுடியுமேதவிர சுவர்வழியே வெளியே போக முடியாது. சுவர் உண்மையில் ஒரு திடப்பொருள் இல்லை என்ற அறிவு நமது அனுபவத்தை மாற்றிவிடாது.

அதுபோல உலகே மாயை என்று தெரிந்தவுடன் இந்த உலகம் நம் கண்ணில் இருந்து மறைந்துவிடாது.  உலகம் உண்மை என்று எண்ணிக்கொண்டிருக்கும் மற்றவர்களைப்போலவே ஞானியும் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து எதிர்கொள்வான். முக்தியடைந்தபின் உலகம் சுவர்க்கமாக மாறிவிடாது.

திரைப்படத்தில் காட்டப்படும் நிகழ்வுகள் உண்மையல்ல என்று தெரிந்திருந்தாலும் பார்வையாளர்கள் சோககாட்சிகளில் கண்ணீர்சிந்துவதைப்போல நடப்பது நாடகம் என்று அறிந்திருந்தாலும் ஞானிகள் தங்கள் வாழ்வில் நடக்கும் சோக நிகழ்வுகளின் பொழுது அழுவதில் தவறில்லை. சாவுவீட்டில் அறியாபாலகன் சிரிப்பது போல ஞானி குழந்தைத்தனமாக ஆத்மாவுக்கு அழிவில்லை என்ற தத்துவத்தை பேசிக்கொண்டிருக்க மாட்டான். மற்றவர்களுடன் சேர்ந்து அவர்களது துன்பத்தில் பங்கேற்பான். ஞானி குழந்தைப்போல எப்பொழுதும் இன்பமாக இருப்பான் என்பதற்கு சாவு வீட்டில் சிரிப்பான் என்று பொருள்ளல்ல. சோகமான படத்தில் அழுதாலும் அது நல்ல படம் என்று இரசிப்பதுபோல சிரிப்பு அழுகை என மாறிமாறி வருவதுதான் வாழ்க்கையென அறிந்த ஞானி தான் எதிர்கொள்ளும் நிகழ்வுகளுக்கேற்ப செயலாற்றி என்றும் இன்பமாக வாழ்வான்.

மற்றவர்கள் உண்மை என்று நினைக்கும் வாழ்வை மாயை என்று அறிந்த ஞானி முறையாக வேதம் படித்தால் மட்டுமே இந்த அறிவை பெற முடியும் என்றும் அறிந்திருப்பதால் தான் அறிந்த உண்மைகளை தன்னை குருவாக ஏற்று கேட்பவர்களைத்தவிர மற்றவர்களுக்கு எடுத்துகூறமாட்டான். அவர்கள் நிலைக்கு இறங்கிவந்து அவர்களில் ஒருவனாகவே வாழ்வான்.

அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிபவர் ஒரு பள்ளிச்சிறுவனுடன் அளவளாவ நேரிட்டால் தனது வேலையை பற்றி பேசாமல் பள்ளிப்பாடங்களைப்பற்றி பேசுவார். இதற்கு காரணம் சிறுவனுக்கு அலுவலக வேலை நுட்பங்கள் புரியாது என்று அவருக்கு தெரியும். அதேபோல் இரண்டு வயது சிறுமியுடன் விளையாடும் பெரியவர்கள் அவளது நிலைக்கு இறங்கிவந்து அவளின் பொம்மையை தனக்கு வேண்டுமென்று கேட்டு அவள் தராவிட்டால் சோகமாக முகத்தை வைத்துக் கொள்வார்கள். அதைபார்க்கும் சிறுமி அவர்கள் உண்மையிலேயே அழுகிறார்கள் என்று நினைத்தாலும் பெரியவர்களை பொறுத்தவரை அது வெறும் விளையாட்டு. ஆனால் பெரியவர்கள் சிறுமியிடம் நடித்து அவளை ஏமாற்றுகிறார்கள் என்று கூறமுடியாது. ஏனெனில் அதிக அறிவு உடையவர்கள் மற்றவர்களின் நிலைக்கு இறங்கி வந்தால் மட்டுமே அவர்களுடன் உறவாடமுடியும். வேலைக்காரனை திட்டுபவர் ஆசிரியரிடம் பணிவாக நடந்துகொள்வது நடிப்பல்ல. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்நிலைக்கேற்றவாறு செயலாற்றுவதுதான் வாழ்க்கை. ஞானி இந்த வழக்கத்திற்கு விதிவிலக்கல்ல. நான் பரமன் என்பதை உணர்ந்த ஞானி மற்றவர்களின் நிலைக்கு இறங்கிவந்து ஒரு சராசரி மனிதனாகவே வாழ்வான். எனவே சாவு வீட்டில் அவன் அழுவது நடிப்பல்ல.

மற்றவர்களைப்போல் ஞானியும் துக்க நிகழ்வுகளில் உண்மையான சோகத்துடன் இருப்பான் என்றால் ஞானத்தால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். கனவில் ஏற்படும் நிகழ்வுகளுக்கேற்றாற்போல் இன்பதுன்பங்களுக்கிடையே அலை பாயும் மனம் கனவிலிருந்து விழித்தவுடன் நிம்மதியடையும். கனவு காணும்பொழுதே காண்பது கனவு என்ற அறிவு இருந்தால் சோகநிகழ்வுகளின்பொழுது அழுதாலும் ஆழ்மனதில் இது வெறும் கனவுதான் என்ற நிம்மதியிருப்பதுபோல ஞானியின் வாழ்வில் அவன் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும்பொழுது அவனது மனம் அலைபாய்ந்தாலும் ஆழ்மனதில் இது மாயை என்ற அறிவு இருப்பதால் அவனால் தொடர்ந்து தடைபடாத இன்பத்துடன் இருக்கமுடியும். எனவே வாழ்வின் நிகழ்வுகள் எப்படி அமைந்தாலும் ஞானி தொடர்ந்து அமைதியாகவே இருப்பான்.

துன்பம் கலவா இன்பம்

நான் பரமன் என்ற அறிவை அடைந்தால் துன்பம் கலவா இன்ப வாழ்வை என்றும் வாழலாம் என்று வேதம் கூறுவது பொய்யல்ல. பரமன் ஆனந்தமயமாக என்றும் இருப்பவன். மனம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் மாயையின் ஒரு சிறு பகுதி. நான் மனம் என்ற அறியாமையுடன் இருக்கும்வரை துன்பத்தை தவிர்க்கமுடியாது. நான் பரமன் என்பதை உணர்ந்த ஞானி தன் மனதின் நிலையை தன் நிலையாக கருத மாட்டான் என்பதால் அவனால் துன்பம் கலவா இன்பத்துடன் வாழமுடியும்.

ஞானி மட்டும்தான் துன்பம் கலவா இன்பவாழ்வை பெறமுடியுமென்றாலும் ஞானம் அடைந்தால் மட்டும்தான் துன்பத்தை தவிர்க்க முடியும் என்று வேதம் கூறவில்லை. அவரவர்களின் அறிவுத்திறனுக்கும் முயற்சிக்கும் ஏற்ற விகிதத்தில் வாழ்வில் துன்பங்களை குறைத்து இன்பங்களை அதிகரித்துக்கொள்ளலாம்.

முதல் படி: தர்மமான வாழ்க்கை

துன்பம் தரும் சூழ்நிலைகள் தாம் செய்த பாவங்களின் விளைவு என்பதை உணர்ந்தவர்கள் தங்கள் துன்பங்களுக்கு மற்றவர்கள் காரணம் என்று நினைக்க மாட்டார்கள். எனவே இவர்கள் மனதில் சந்தேகம், சஞ்சலம், கவலை, கலக்கம், பகைமை, பழிவாங்கும் உணர்வு, விரோதம், வெறுப்பு போன்ற உணர்வுகள் ஏற்படாது.  

இரண்டாம்படி: ஆசைகளை குறைத்துக்கொண்டவர்கள்

ஆசைதான் பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம் என்பதை உணர்ந்தவர்கள் அதிருப்தி, எரிச்சல், ஏக்கம், ஏமாற்றம், தவிப்பு, பொறாமை, பேராசை, விரக்தி போன்ற உணர்வுகளால் துன்பபடுவதில்லை.   

மூன்றாம் படி: இறைவனிடம் சரணடைந்தவர்கள்

அனைத்தும் ஆண்டவனின் ஆணைப்படிதான் நடக்கிறது என்று நம்புபவர்கள் அசூயை, அகந்தை, ஆணவம், ஆத்திரம், இறுமாப்பு, கர்வம்,  தற்பெருமை, குரோதம், வெட்கம், விரக்தி போன்றவற்றால் வருந்துவதில்லை.

ஞானிகள் இந்த மூன்றுபடிகளையும் கடந்தவர்கள் என்பதால் ஞானம் பெறுவதற்கு முன்பேயே இதுபோன்ற தீய உணர்வுகளிலிருந்து விடுதலையடைந்திருப்பார்கள்.

நான்காம் படி: குழந்தைகள் மற்றும் ஞானம் பெற்றவர்கள்

குழந்தை எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருப்பதில்லை. பசித்தால் அழும். எனவே குழந்தையைப்போல ஞானியும் துன்பம் கலவா இன்ப வாழ்வை வாழ்வான் என்றால் அவன் எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருப்பான் என்று பொருள் அல்ல. அது முடியவும் முடியாது. நகைச்சுவைகாட்சி ஒன்றை பார்த்து வாய்விட்டு சிரிப்பவர்கள் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு மேல் சிரித்துக்கொண்டேயிருக்க முடியாது. போதும், இனிமேல் சிரிக்க முடியாது என்று வேறு வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதுபோல் எந்த ஒரு உணர்ச்சியாலும் தொடர்ந்து நமது மனதை ஆக்ரமிக்க முடியாது. சாவுவீட்டில் கூட விட்டுவிட்டுத்தான் அழுவார்கள். இதற்கு காரணம் மனதில் தோன்றும் எண்ணங்கள் மாறிக்கொண்டேயிருக்கும் என்பதுதான். இதுபோல் மனம் மாறுவதை யாராலும் தடுக்கமுடியாது. மேலும் ஒரே மாதிரி எண்ணங்கள் ஒன்றுமாற்றி ஒன்று வந்தால்கூட போர் அடித்துவிடும். எனவேதான் மக்கள் ஏதாவது ஒரு பொருள்மேல் ஆசைப்பட்டு அது நிறைவேறும் வரை ஏக்கம் என்ற உணர்ச்சியுடன் இருந்து அது நிறைவேறியபின் ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். இதில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால் எவ்வளவு இன்பம் அனுபவிக்கிறோம் என்பது எவ்வளவு துன்பத்தை அனுபவித்தோம் என்பதை பொறுத்து மாறும். அதிககாலம் ஏக்கத்தோடு காத்திருந்த பொருள் கிடைத்தால் அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனவே கூட்டி கழித்தால் இன்பமும் துன்பமும் வாழ்வில் சமமாகவேயிருக்கிறது என்று தெரியவரும்.

இன்பமும் இன்பஉணர்வும்

நான் பரமன் என்பதால் என் இயற்கையான நிலை ஆனந்தம். நான் ஆனந்தமாய் இருக்கிறேன் என்பது ஒரு எண்ணம். நான் ஒரு மனிதன் என்ற எண்ணம்  மனதில் தோன்ற சாதாரண மக்களுக்கு எவ்வித அவசியமும் இல்லை. அதுபோல நான் ஆனந்தமயமானவன் என்ற எண்ணம் ஞானிக்கு தோன்ற அவசியமேயில்லை. மற்றவர்கள் தான் மரணத்திற்குட்பட்ட மனிதன் என்பதில் உறுதியாய் இருப்பது போல் ஞானி தான் பரமன் என்பதில் தெளிவாய் இருப்பதால் நான் ஆனந்தமாய் இருக்கிறேன் என்று தனக்குத்தானே நினைவுபடுத்திகொள்ள தேவையில்லை. தன்னை மறந்த நிலையில் மட்டும்தான் மற்றவர்கள் தங்களது இயல்பு நிலையான ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். தன்னை மறக்கச்செய்த நகைச்சுவைபடம் கொடுத்தது இன்ப உணர்வு. இன்ப உணர்வு வந்து போகும் தன்மையுடையது.

இன்பம் என்றுமிருப்பது. இதையறிந்த ஞானிகள் வந்து போகும் உணர்வுகளை தரம் பிரிக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இன்ப உணர்வை தேடி  துன்பப்படுவதில்லை. சூழலுக்கு ஏற்ப வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து உணர்வுகளையும் அனுபவித்து தன்னை மறந்து இருப்பதால் குழந்தையைப்போல ஞானிகளும் துன்பம் கலவா இன்பத்துடன் எப்பொழுதும் இருப்பார்கள்.

நான் யார் என்று தெரியாத அறியாமையுடன் இருக்கும்வரை கிடைத்ததில் திருப்தியடைந்து வாழ்ந்த குழந்தை வளர வளர விரும்பும் பொருள் வேண்டுமென்று ஆசைபட ஆரம்பிக்கும். இதற்கு காரணம் தன்னை பற்றிய அரைகுறை அறிவு. தான் யார் என்ற முழுமையான அறிவை பெறாதவர்கள் வாழ்வு முழுவதும் குழந்தைத்தனமாக புலன்கள் தரும் இன்ப உணர்வுகளின் பின் அலைவார்கள். தான் பரமன் என்பதை உணர்ந்தபின் மறுபடியும் குழந்தைபோல கிடைத்ததில் திருப்தியடைந்து வாழமுடியும்.

நிகழ்காலத்தில் வாழ்தல்

நாளை என்ன நடக்குமோ என்ற பயம், எனக்கு ஏன் இதுபோல் நடந்தது என்ற வருத்தம், நான் ஏன் இப்படி செய்தேன் என்ற குற்றவுணர்வு, எனக்கு வேண்டியது கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற கவலை ஆகிய உணர்வுகள் இல்லாமல் குழந்தைகளும் ஞானிகளும் நிகழ்காலத்தில் வாழ்வார்கள். அவ்வப்பொழுது நிகழும் ஏற்றஇறக்கங்களுடன் கூடிய மாறுதல்களை அப்படியே ஏற்றுக்கொள்வதால் பயம், வருத்தம், குற்றவுணர்வு, கவலை ஆகிய நான்கு தீயவுணர்வுகள் ஏற்படுவதில்லை. குழந்தை முழு அறியாமையுடன் இருப்பதால் இவ்வாறு கவலையில்லாமல் இருக்கிறது. ஞானி படைப்பு என்றால் மாறும் ஏற்ற இறக்கங்கள் என்பதை புரிந்து கொண்டதால் நிகழ்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறான்.
காரண காரியங்களை ஆராய்தல்

ஏதோ உள்நோக்கம் இருப்பதால்தான் இவர் என்னை புகழ்கிறார் என்று எந்த குழந்தையும் நினைப்பதில்லை. மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையும் குழந்தைக்கு இருப்பதில்லை. எது நடந்தாலும் இதற்கு காரணம் என்னவாயிருக்கும் ஆராய்வதில் தவறில்லை. ஆனால் அந்த ஆராய்ச்சியை முழுவதும் செய்யாமல் கிடைத்த நொண்டிச்சமாதனத்தை ஏற்றுக்கொள்வதுதான் தவறு. நிகழ்வுகளுக்கு எவ்வித காரணமும் கிடையாது என்பதை ஞானி உணர்வார்.

பரமன் பற்றிய உண்மைகள்

பரமன் ஆனந்தமயமானவன் என்று வேதம் கூறினாலும் நான் பரமன் என்று தெரிந்தவுடன் ஆனந்தத்தில் திளைப்பது போன்ற அனுபவம் ஏற்படுவதில்லை. எனவே தியானம் செய்து மனதை நிர்மலமாக்கி சமாதி அடைதல் அல்லது கண்களை மூடி வண்ணகலவைகளை பார்த்தல் என்பது போன்ற அசாதாரணமான முயற்சிகள் மூலம் கிடைப்பதுதான் முக்தியா என்ற சந்தேகம் தவறு. பரமன் ஆனந்தமானவன் என்ற வேதம் கூறும் உண்மையை அறிவுபூர்வமாக அறிந்துகொள்வதை தவிர அனுபவத்தின் மூலமாகவும் நாம் அறிந்திருக்கிறோம்.

பரமன் ஆனந்த மயமானவன் என்பதை ஆழ்ந்த உறக்க அனுபவத்தை ஆராய்வதன் மூலம் அறியலாம். உடல் மற்றும் மனம் துன்பத்தில் ஆழ்ந்திருந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் அவையனைத்தையும் மறந்து இன்பமாக தூங்க முடிகிறது. துன்பபடுபவர்கள் மட்டுமின்றி இன்பமாக இருப்பவர்கள் கூட நிம்மதியாக உறங்க ஆசைப்படுகிறார்கள். மேலும் உறக்கம் ஆனந்தமாக அமைய வேண்டுமானால் தூங்கப்போகுமுன் இனிமையான அனுபவங்களை நினைவுகூரவேண்டும் என்று எவ்வித கட்டாயமுமில்லை. இந்த மூன்று காரணங்களால் ஆனந்தம் நம் இயல்பான அனுபவம் என்பது தெளிவாகிறது.

நம் இயல்பான  ஆனந்தத்தை ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவிப்பதை உணர மனம் இருப்பதில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் அடங்கியிருக்கும் மனதில் எண்ணங்கள் தோன்றும்பொழுது முதலில் அதை கனவு என்றும் பின் நனவு என்றும் குறிப்பிடுகிறோம். எரிச்சல், ஏக்கம் போன்ற எண்ணங்கள் தோன்றினால் அதை கெட்ட கனவு அல்லது நிகழ்வு என்று வகைபடுத்தும் நாம் நமக்கு பிடித்தமான எண்ணங்கள் தோன்றினால்தான் இன்பம் என்று நினைக்கிறோம். இதுபோன்ற உணர்வுகளை அனுபவிக்க மனம், அது இருந்து செயல்பட ஐம்புலன்களோடு கூடிய உடல் மற்றும் புலன்களால் அறியப்படும் உலகம் ஆகிய மூன்றும் தேவை. இம்மூன்றும் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்துதான் ஆகவேண்டும். இதுதான் ஆனந்தமான பரமனின் விளையாட்டு.

படைப்பின் இந்த இரகசியத்தை அறிந்த ஞானிகள் இன்ப உணர்வு மட்டும்தான் எப்பொழுதும் மாறாமல் இருக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதில்லை. இசைக்கு ஏற்றபடி ஏறிஇறங்கியாடும் நீரூற்றைப்போல் (musical fountain) உலகநிகழ்வுகளுக்கேற்ப மாறும் உணர்வுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.  

மனம் பற்றிய உண்மைகள்

ஞானம் பெற்றபின் அதன் பலனான முக்தியை முழுமையாக அனுபவிக்க மனதின் தன்மைகள் பற்றிய தெளிவான அறிவு அவசியம். 

முதலாம் உண்மை – மனம் ஒரு கண்ணாடி

சுற்றியிருக்கும் பொருள்களை பிரதிபலிக்கும் கண்ணாடி போல சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுவதுதான் மனதின் இயல்பு. போற்றலையும் தூற்றலையும் ஞானி ஒரேமாதிரி ஏற்றுக்கொள்வான் என்பதற்கு இவ்விரண்டும் வேறுபட்டது என்பதை அவன் அறியமாட்டான் என்று பொருளல்ல. நல்ல வார்த்தைகளை கேட்டால் மகிழ்வதும் தீய வார்த்தைகள் காதில் விழுந்தால் கலங்குவதும் மனம் என்கிற கண்ணாடியின் இயல்பு. தன்னை ஒருவர்  திட்டினால் அதைகேட்டு சந்தோஷபட வேண்டும் என்ற கட்டாயம் ஞானிக்கு கிடையாது. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று உணர்ந்த ஞானி தான் திட்டு வாங்குவதும் இறைவனின் விளையாட்டு என்று அறிந்திருப்பதால் சூழ்நிலைக்குத்தக்கவாறு செயல்படுவான்.

வாழ்க்கை எப்பொழுதும் வெற்றி-தோல்வி, உயர்வு-தாழ்வு என்பது போன்ற இருமைகளிடையே ஊசலாடிக்கொண்டுதான் இருக்கும் என்பதால் மனம் அதற்கேற்றாற்போல் சலனப்பட்டுக்கொண்டு இருப்பதை தவிர்க்கவே முடியாது.  

இரண்டாம் உண்மை – மனம் தண்ணீர் போன்றது

பாத்திரத்தை ஆட்டிவிட்டுவிட்டு அதனுள் இருக்கும் தண்ணீர் ஆடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம். உலக நிகழ்வுகள் ஐந்து புலன்கள் மூலம் மனதை சென்றடைந்தபின் நிகழ்வுகளுக்கேற்ற மாற்றம் மனதில் ஏற்படத்தான் செய்யும். பாத்திரத்தின் ஆட்டம் நின்றபின்னும் தண்ணீர் ஆடாமல் அமைதியடைய சிறிதுகாலமாகும். அதுபோல விரும்பத்தகாத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட ஞானியின் மனம் அமைதியடைய சிறிதுகாலம் ஆகும். சிறிது காலம் என்பது ஓரிரு மணித்துளிகளா அல்லது ஒரு சில நாட்களா என்பது ஞானத்தின் உறுதியைப்பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும்.

நாவினால் சுட்ட வடு மறையாது என்பது ஞானிகளுக்கு பொருந்தாது. மற்றவர்கள் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை நினைத்து வாழ்நாழ் முழுவதும் துன்பபடுவதுபோல் ஞானி துன்பபடமாட்டான்.

மூன்றாம் உண்மை – மனம் ஒரு உபயோகிக்கப்பட்ட குடுவை

வெகுகாலம் ஊறுகாய் வைத்திருந்த குடுவையை காலிசெய்தாலும் அதன் வாசனை அகல பல காலமாகும். பல்வேறு பிறவிகள்தோறும் சேர்த்துவைத்த விருப்பு வெறுப்புகள் ஞானம் ஏற்பட்டவுடன் மறைந்துவிடுவதில்லை. முன்கோபம், எதிர்காலத்தைப்பற்றிய பயம் போன்றவை பலகாலம் மனதை ஆட்டுவித்த காரணத்தால் ஞானம் பெற்றபின் கூட இவை அவ்வப்பொழுது வெளிப்படலாம். படிப்படியாகத்தான் இவற்றிலிருந்து ஞானிக்கு முழு விடுதலை கிடைக்கும். 

நான்காம் உண்மை – மனம் ஒரு ஊசிப்பட்டாசு

படபடவென்று தொடர்ந்து வெடிக்கும் ஊசிப்பட்டாசு வெடித்து முடித்தபின்னும் திடீரென்று ஓரிரு வெடிகள் வெடிப்பதுபோல ஞானியின் மனதில் கோபம், பயம் போன்ற உணர்வுகள் படிப்படியாக குறைந்து முழுவதும் தீர்ந்துவிட்டது என்று தோன்றினாலும் திடீரென்று ஒரு நாள் முன்போல கோபம் வெடித்து சிதறலாம்.  

ஐந்தாம் உண்மை – மனம் வெய்யிலுடன் சேர்ந்த மழை

பொதுவாக மழை பெய்யும்பொழுது வெய்யில் இருக்காது. ஆனால் ஒரு சில நாட்களில் இவை இரண்டும் சேர்ந்து வருவதுபோல ஞானியின் மனதில் அமைதி மற்றும் கலக்கம் ஆகிய இரண்டும் சேர்ந்து வரலாம். நான் பரமன் என்ற அறிவு ஒருபக்கம் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் எனக்கு இம்மாதிரி நேர்ந்துவிட்டதே என்ற கலக்கமும் மனதை வாட்டலாம்.

ஞானத்தின் நோக்கம்

ஞானம் பெற முயலும் மாணவர்களின் மனம் படிப்படியாக அமைதியை அடைந்து துன்பம் தரும் உணர்வுகளால் பாதிக்கப்படாது என்பது உண்மையென்றாலும் மனதை அமைதிபடுத்துவது ஞானத்தின் நோக்கமல்ல. உண்மையில் நான் யார் என்ற சரியான அறிவை நமக்கு கொடுப்பதுதான் வேதத்தின் நோக்கம். நான் பரமன் என்று தெரிந்து கொண்டால் நான் மனம் அல்ல என்பதும் புரிந்துவிடும். எனவே மனதின் மாறுதல்களை ஞானி அப்படியே ஏற்றுக்கொள்வான். நாடகத்தின் சூத்திரதாரி தன்னை உள்ளேயிருந்து இயக்குகிறான் என்று அறிந்த ஞானி ‘நான் ஏன் கோபப்பட்டேன்’ என்று அவன் தன்னைத்தானே நொந்துகொள்ள மாட்டான். கோபப்பட்டதால் தான் உண்மையிலேயே ஞானியா என்று சந்தேகப்படமாட்டான்.

ஞானத்தின் முடிவு

முழுமையான ஞானம் பெற்றவன் தன் மனதில் நிலைபெற்றிருக்கும் உண்மைகளை பின்வருமாறு வெளியிடுவதாக ஆதி சங்கரரின் நிர்வாண சதகம் அமைந்துள்ளது.

மனம், புத்தி, அகங்காரம், சித்தம் நான் அல்ல. எனக்கு கண், காது, மூக்கு, நாக்கு என்று எதுவும் கிடையாது. நான் பஞ்சபூதங்களால் செய்யப்பட்டவன் அல்ல.

பிராணன் நான் அல்ல. எனக்கு உயிரோட்டம் கிடையாது. மூன்று உடல்கள் நான் அல்ல. பஞ்ச கோசங்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கை, கால், வாய் என்று எனக்கு எவ்வித உறுப்புகளும் கிடையாது.

எனக்கு விருப்பு வெறுப்புகள் கிடையாது. கோபம், மோகம், லோபம், போட்டி, பொறாமை ஆகிய எதுவும் எனக்கில்லை. தர்மம், அர்த்தம், காமம், முக்தி ஆகிய நோக்கங்கள் எதுவும் எனக்கு இருக்கவேண்டிய அவசியம் கிடையாது.

பாவபுண்ணியங்களுக்கு என்னை பாதிக்கும் சக்திகிடையாது. சுக துக்கங்கள் என்னை மாசுபடுத்தாது. எனக்கு மந்திரங்கள் எதுவும் தெரியாது. புனித யாத்திரைகள் செல்லவேண்டிய கட்டாயம் எனக்கில்லை. நான் வேதம் படிப்பதில்லை. யாகம், தவம், மதச்சடங்குகளை செய்தல் ஆகியவற்றால் எனக்கு எவ்வித பிரயோஜனமும் கிடையாது. நான் அனுபவிப்பவனோ அனுபவிக்கப்படும் பொருளோ அல்லது அனுபவமோ அல்ல.

எனக்கு மரணம் கிடையாது. ஜாதி, இனம், மதம் போன்ற பாகுபாடுகள் எதுவும் எனக்கில்லை. எனக்கு தாயோ தந்தையோ கிடையாது, ஏனெனில் நான் பிறக்கவேயில்லை. எனக்கு சொந்த பந்தங்கள் உறவினர்கள் என்று யாரும் கிடையாது. எனக்கு ஆசிரியர் கிடையாது. நான் யாரிடமும் பாடம் கற்கும் மாணவனாக இருந்ததில்லை.

எவ்வித எண்ணங்களும் இல்லாத எனக்கு உருவமற்ற உருவம் உள்ளது. இவ்வுலகில் உள்ள அனைவரது உயிர்த்துடிப்பதற்கும் அவர்களது ஐம்புலன்கள் வேலைசெய்வதற்கும் நான்தான் காரணம் என்றாலும் எனக்கு யார் மீதும் எவ்வித பற்றும் கிடையாது. எதனாலும் நான் கட்டுண்டவனல்ல என்பதால் எனக்கு விடுதலை என்பதும் கிடையாது. எதனுடனும் சம்பந்தப்படாமல் அனைத்தையும் உள்ளடக்கிய நான் என்றும் அமைதியுடன் இருக்கும் அறிவுருவானவன்.     

முடிவுரை :

உலகில் உள்ள மக்கள் அனைவரும் பிறக்கும்பொழுது முழுமையான ஆனந்தத்தின் வடிவாகவே இருக்கிறார்கள். வளரும்பொழுது அவர்கள் பெறும் அறிவு அவர்களை குறையுடன் கூடியவர்கள் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அறியாத குழந்தை அறிவுடன் கூடிய மனிதனாக மாறும்பொழுது தன்னிடம் இல்லாத குறையை நிறை செய்ய உலகில் இன்பத்தை தேட ஆரம்பிக்கிறான்.

இந்ததேடல் மட்டுமே தனிமனிதனின் அனைத்து துன்பங்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் நிலவும் சண்டை, தீவிரவாதம், ஊழல், புரட்சி போன்ற அனைத்து சமூக கொடுமைகளுக்கும் அடிப்படைக்காரணமாக அமைகிறது.

நாடோடிகளாக இருந்த வரை இன்பமாகவும் அமைதியாகவும் வாழ அதிக முயற்சி தேவைப்படவில்லை. இருபது வருடங்கள் கல்வி பயின்று அதன் பின் நாளுக்கு பத்து மணிநேரம் உழைத்தால்தான் பிழைக்க முடியும் என்ற அளவுக்கு தற்பொழுது வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. நின்ற இடத்திலேயே இருப்பதற்கு கூட தொடர்ந்து ஓடவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி குழந்தை பருவத்தில் இருந்த இன்பம் முதுமையில் தொலைய காரணமாக இருப்பது போதவில்லை என்ற தேடல்தான்.  

பணம், பதவி, புகழ் போன்றவை கொடுக்கும் இன்ப உணர்வை நிலையானது என்று நம்பி இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையினால் பயம், பொறாமை போன்ற துன்பம் தரும் உணர்வுகளை அதிகபடுத்திக்கொள்கிறார்கள். மாறும் உலகில் எவ்வளவுதான் முயன்றாலும் துன்பம் கலவா நிரந்தர இன்பத்தை அடைய முடியாது என்ற அறிவு இவர்களுக்கு ஏற்படும்பொழுது வேதம் தரும் பாடங்களை குருவின் துணையுடன் படித்து மாறாத ஆனந்தமயமான பரமன் தான்தான் என்ற முழுமையான அறிவைப்பெற்று ஞானிகளாகிறார்கள்.

ஞானிகளானபின் மீண்டும் குழந்தைகளைப்போல முழுமையான இன்பத்துடன் வாழ்வின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப செயல்புரிந்து மனதில் ஏற்படும் அனைத்து உணர்வுகளையும் அனுபவிப்பார்கள். ஞானிகள் குழந்தைத்தனமாக நடந்து கொள்வதில்லை என்பதால் மற்றவர்களின் பார்வைக்கு அவர் ஒரு சாதாரண அறிவாளியாக மட்டும் தென்படுவார்.

பயிற்சிக்காக :

1. துன்பத்தை குறைக்க மனிதன் பயணிக்க வேண்டிய நான்கு படிகள் யாவை?

2. ஞானம் பெறுவதனால் எந்த நான்கு தீய உணர்வுகளிலிருந்து விடுதலை கிடைக்கும்?

3. குழந்தைகளின் வாழ்வுக்கும் ஞானியின் வாழ்வுக்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை?

4. இன்பத்திற்கும் இன்ப உணர்வுக்கும் என்ன வித்தியாசம்?

5. பரமனின் விளையாட்டு என்று குறிப்பிடப்பட்டது எது?

6. பரமன் ஆனந்தமயமானவன் என்பதை நிரூபிக்க கூறப்பட்ட மூன்று காரணங்கள் யாவை?

7. மனதை பற்றிய ஐந்து உண்மைகளை விளக்குக.

8. ஞானத்தின் நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஞானியின் பார்வையில் உலகம் சுவர்க்கமாக தோன்றும் என்பது உண்மையா?

2. அனுபவத்திற்கும் அறிவிற்கும் உள்ள தொடர்பை ஆயக

3. துன்பநிகழ்வு ஞானியை பாதிக்குமா?

4. நிகழ்காலத்தில் வாழ்வது என்றால் நாளை என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி திட்டமிடகூடாதா?

5. காரண காரியங்களை ஆராயாமல் எவ்வாறு மனித குலத்தில் முன்னேற்றம் ஏற்படும்?

6. ஞானத்தின் முடிவு என்பதற்கும் வேதாந்தம் என்பதற்கும் உள்ள உறவை ஆய்க.

7. கனவு நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் வேறுபாடு இல்லை என்பது உண்மையா?

Tuesday, March 8, 2011

Lesson 150: Child-like state and Scholarship (Brahmasutra 3.4.47-49)

பாடம் 150: ஞானி குழந்தையை போன்றவன்
பாடல் 472 – 474 (III.4.47-49)

போட்டி பொறாமை போன்ற உணர்வுகளை நீக்கி கள்ளங்கபடமற்ற குழந்தையாய் மாறவேண்டுமென்ற ஆசை நிறைவேற முடியாத ஒன்று அல்ல. நிர்மலமான மனதுடன் வாழ்வை இன்பமாக கழிக்கும் குழந்தையின் மனதை போல் நம் மனதை மாற்ற நாம் அறிந்துகொள்ளவேண்டிய கருத்துக்களை இந்த பாடம் விளக்குகிறது.

அறிந்தும் அறியாமலும்

பிறந்தது முதல் தொடர்ந்து ஐம்புலன்கள் வழியே தகவல்களை சேகரித்து அவற்றை அறிவாக மனதில் பதியவைத்துக்கொள்கிறோம். தற்போதைய கல்வித்திட்டம் மற்றும் சமூக சூழ்நிலைகள் இதுபோன்ற அறிவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கின்றனவே தவிர ஐம்புலன்களை உபயோகித்து அறிவை பெறுபவன் யார் என்ற அறிவை பெற நமக்கு உதவுவதில்லை.

குழந்தையின் மகிழ்வுக்கும் அமைதிக்கும் அறியாமைதான் அடிப்படை. அறியாமை முழுமையான அறிவாக மாறினால் நம்மால் வளர்ந்தபின்னும் குழந்தையைப்போல் எவ்விதபிரச்சனைகளும் இல்லாமல் வாழ்வை இனிமையாக கழிக்க முடியும். நான் யார், கடவுள் யார், எனக்கும் கடவுளுக்கும் என்ன உறவு என்பது போன்ற கேள்விகளின் சரியான பதில்களை தெளிவாக அறிந்து கொண்டால் நம் அரைகுறை அறிவை முழுமையான அறிவாக மாற்றிக்கொள்ளலாம். உலகத்தை ஒரு சித்திரத்திற்கு ஒப்பிட்டு வித்யாரண்ய சுவாமிகள் இந்த அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை கொடுக்கிறார்.

உலகம் ஒரு வரைபடம்

கஞ்சி போட்டு நேர்செய்யப்பட்ட வெள்ளை துணியில் வண்ணக்கலவைகள் மூலம் மலை, ஆறு, மரம், செடி,கொடிகள் மற்றும் ஒரு சில மனிதர்கள் சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை உலகத்துடன் ஒப்பிடலாம். வெள்ளைத்துணியாகிய பரமனை மாயா சக்தியாகிய கஞ்சி படைப்புக்கு ஆதாரமாக மாற்றுகிறது. பஞ்சபூதங்கள் என்னும் வண்ணக்கலவைகளைக்கொண்டு சித்திரத்தை உருவாக்க முதலில் மெல்லிய கறுப்புக்கோட்டினால் மலை ஆறு போன்றவற்றின் எல்லைகளை வரைவது போல நுண்ணிய உடல்களை உருவாக்கி பின் இந்த உலகம் உருவாக்கப்பட்டது.    

வாழ்க்கையின் நோக்கம் என்ன?

எப்படி வாழவேண்டும் என்ற கேள்விக்கு சரியான பதிலை அறிய முதலில் எதற்காக வாழ்கிறோம் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும்.

துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வது மட்டுமே மனிதன் உட்பட்ட அனைத்து உயிரினங்களின் ஒரே நோக்கம். உலகம் யாரால் எப்படி உருவாக்கப்பட்டது என்ற முழுமையான அறிவைப்பெறாமல் வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளிடையே வெள்ளத்தில் சிக்கிய ஓடம்போல் அலைகளிக்கப்பட்டு இளைஞர்களைப்பார்த்து ஏக்கப்பெருமூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் முதியவர்களாகத்தான் அனைவரும் மாறிக்கொண்டிருக்கிறோம். உலகச்சூழல் எப்படியிருந்தாலும் எப்பொழுதும் துன்பம் கலவாமல் வாழ தேவையான அறிவை பெற்றுவிட்டால் அதன்பின் எப்படி வாழவேண்டும் என்ற கேள்வியே மறைந்துவிடும். இப்படித்தான் வாழவேண்டும் என்ற சட்டதிட்டங்கள் எதற்கும் கட்டுப்படாமல் ஒரு குழந்தையைப்போல் மகிழ்வான வாழ்வை மரணம்வரை அனுபவிக்கலாம்.

படைப்பின் காரணம் என்ன?

வெள்ளைத்துணியை யாரும் வீட்டில் அலங்காரமாக சுவற்றில் மாட்டுவதில்லை. அந்த வெள்ளைத்துணிமேல் நேர்த்தியான படம் வரைந்தபின்தான் அதன் மதிப்பு கூடுகிறது. அதுபோல பரமன் சுவாரசியமற்ற ஒன்று. ஒன்றான பரமன் மலை, ஆறு மற்றும் பல்வேறுபட்ட உயிரினங்களாக காட்சியளிக்கும் இவ்வுலகமாக உருவான காரணத்தால்தான் என்றும் இன்பமாக வாழ உடல், இடம், காலம் ஆகிய மூன்றும் நமக்கு கிடைத்துள்ளது.

எதையும் அறியாமல் ஆனந்தமாக உறங்கும் உறக்கத்தில் சுவாரசியமில்லாததால் ஒரு கனவுலகத்தை உருவாக்கி அதில் ஒரு உடலுக்குள் புகுந்து சிலநேரம் வாழ்வது போல பரமனாகிய நான் எனது சுயஉருவான ஆனந்தத்தை அனுபவிக்க ஒரு வரையருக்கப்பட்ட உடல், இடம் மற்றும் காலகட்டத்தை என் மாயா சக்தியால் உண்டாக்கிக்கொண்டதன் விளைவுதான் இவ்வுலகம். எனவே நாம் இன்பமாக வாழத்தேவையான ஒரு இடத்தை கொடுப்பதுதான் படைப்பின் காரணம். பரமனால் எவ்வித அனுபவங்களையும் தரவோ பெறவோ முடியாது. அனைத்துவித அனுபவங்களையும் பெற்று துன்பம் கலவா இன்பத்துடன் வாழ்வதற்காகவே  காட்சிப்பிழையான இந்தப்பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் யார்?

வெள்ளை துணியைக்காட்டி என்ன தெரிகின்றது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்ற பதில்தான் கிடைக்கும். அந்தத்துணியில் சித்திரம் வரையப்பட்டவுடன் அதே கேள்விக்கு மலை, நதி, மனிதர்கள் என பலவிடைகள் கிடைக்கும். சித்திரத்திற்கு ஆதாரமான வெள்ளைத்துணியை யாரும் கவனிப்பது கிடையாது. அதுபோல் இவ்வுலகத்தின் இருப்புக்கு ஆதாரமான பரமனை யாரும் அறிவதில்லை. பரமனின் மாயா சக்தியால் அது உலகமாக மாறும்பொழுது அனைவரின் கவனத்தையும் அது கவருகிறது.  மாயையுடன் கூடிய பரமன்தான் கடவுள். கடவுள் இந்த பிரபஞ்சமாக நம் கண்முன்னே எப்பொழுதும் தெரிந்துகொண்டிருக்கிறான்.

பிரபஞ்சம் உருவானது எப்படி?

துணிச்சித்திரம் நான்கு கட்டங்களில் உருவாகும் விதத்தை ஆராய்வதன் மூலம் உலகத்தின் உண்மையான தன்மையினை அறிந்து கொள்ளலாம்.

முதல் கட்டம்: சித்திரத்தின் ஆதாரமான வெள்ளைத்துணி. எவ்வித குணங்களோ உருவமோ இல்லாததால் நம் புலன்களுக்குத்தென்படாத பரமன்தான் படைப்புக்கு ஆதாரம். சித்திரத்தில் காட்டப்பட்ட கற்பனை பொருள்கள் பார்வையாளர்களின் கவனத்தை கவர்வதால் அவற்றின் ஆதாரமான வெள்ளைத்துணியை யாரும் கவனிக்க மாட்டார்கள். அதுபோல தொடர்ந்து மாறும் உலகின் ஆதாரமான மாறாத பரமனின் இருப்பை யாரும் அறிவதில்லை. வெள்ளைத்துணி மட்டும்தான் உண்மையான பொருள். அதில் வண்ணங்களால் சித்தரிக்கப்பட்ட மலை, மரம், செடி போன்றவை இருப்பது போல தோற்றமளிக்கும் கற்பனை பொருள்கள். பரமன் மட்டும்தான் உண்மை. இந்த பிரபஞ்சம் இருப்பதுபோல் தோன்றும் மாயை.  

இரண்டாம் கட்டம்:  வெள்ளைத்துணியுடன் கஞ்சி சேர்த்து அதை நேர்படுத்தி சித்திரம் வரைய தயார் செய்தல். பரமனால் எவ்வித செயலையும் செய்ய முடியாது. மாயா சக்தியுடன் கலந்த பரமன்தான் இறைவன். இறைவன் சர்வசக்திமான். ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்றுசெயல்களை செய்யவல்லவன். வானத்தை மேலேயும் பூமியை கீழேயும் வரையவேண்டும் என்றறிந்த ஓவியன் போல அனைத்தையும் அறிபவன் அவன். ஓவியன், கஞ்சி, வண்ணக்கலவைகள் போன்றவை  ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. ஆனால் பிரபஞ்சத்தின் உபாதான காரணம், நிமித்த காரணம் ஆகிய அனைத்தும் இறைவன் ஒருவனே.

மூன்றாம் கட்டம்: வண்ணங்களை பூச ஆரம்பிக்குமுன் வரைபடத்தில் வரையப்பட வேண்டிய பொருள்களின் எல்லைக்கோடுகளை வரைதல். வெள்ளைத்துணியில் தெளிவாகத்தெரியும் இந்த கறுப்புகோடுகள் சித்திரம் வரைந்து முடித்தவுடன் பார்வையிலிருந்து மறைந்துவிடும். எவ்வளவு தூரம் என்ன வண்ணங்களை வரைய வேண்டுமென்று வரையருக்கும் இந்தகோடுகளைப்போல உலகில் வெவ்வேறு பொருள்களை வடிவமைக்க உதவியாக இவ்வுலகம் முதலில் நுண்ணிய வடிவில் தோன்றும். இந்த நுண்ணிய உலகம் பரிணாம வளர்ச்சி பெற்று பருவுலகமாகும்.

நான்காம் கட்டம்: சரியான வண்ணக்கலவைகளை எல்லைக்கோட்டிற்குள் பூசுதல். வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றின் கலவையால் நிரப்பி நுண்ணிய பொருளுக்கேற்ற பருவுடலாக நாம் பார்த்து அனுபவிக்கும் இவ்வுலகம் தோற்றுவிக்கப்பட்டது. ஓவியனின் கையில் உள்ள தூரிகையில் உள்ள நிறத்தை நீலம் என்று கண்டுகொள்பவர்கள் அதே நிறத்தை சித்திரத்தில் பார்க்கும்பொழுது வானம் அல்லது ஆறு என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஆடு, மாடு, கல், மரம் என்று பொருள்களின் வடிவத்தை மட்டும் பார்த்து அவற்றை அடையாளம் காட்டுபவர்கள் அவற்றின் மூலப்பொருள்களான பஞ்சபூதங்களை காண்பதில்லை.

ஆறு மற்றும் சாக்கடை ஆகிய இரண்டும் ஒரே நிற வண்ணக்கலவையால் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஆறு அழகாக இருக்கிறதென்றும் சாக்கடை அருவருப்பைத்தருவதாகவும் பார்ப்பவர்கள் முடிவுசெய்வதிலிருந்து இல்லாத பொருள்களுக்கு அவர்கள் உண்மைத்துவம் கொடுப்பது தெளிவாகிறது. அதே போல் ஒரே பஞ்சபூதக்கலவையால் உண்டாக்கப்பட்டவர்களென்றாலும் ஒருவரை நல்லவரென்றும் மற்றவரை கெட்டவரென்றும் பிரிப்பதற்கு அறியாமைதான் காரணம். வண்ணக்கலவைகளைத்தவிர வெள்ளைத்துணியின் மேல் வேறொன்றும் இல்லை. அதுபோல பஞ்சபூதங்களின் கலவைகளைத்தவிர இப்பிரபஞ்சத்தில் வேறொன்றுமில்லை. மேலோட்டமாக ஆறு, மலை என்று சித்திரத்தில் உள்ள பொருள்களை குறிப்பிட்டாலும் அவையனைத்தும் வண்ணக்கலவைகளால் வரையப்பட்டவைகளே தவிர உண்மையான ஆறோ, மலையோ அல்ல என்ற அறிவு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் உலகத்தில் உள்ள பொருள்களை பஞ்சபூதங்களின் கலவையாலான மாயை என்று உணராமல் அவையனைத்தையும் உண்மையான பொருட்கள் என்று பெரும்பாலோர் நம்பிக்கொண்டிருப்பதற்கு அவர்களின் அறியாமையே காரணம். உலகம் என்பது நமது கற்பனையே தவிர உண்மையான இருக்கும் பொருளல்ல. உண்மையில் உள்ளது பரமன் மட்டுமே.

கற்சிலைக்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு?

இந்தக்கேள்விக்கு சரியான விடை ஒன்றுமில்லை என்பதுதான். சித்திரத்தில் இருக்கும் மனிதனும் கற்சிலையும் துணிமேல் வரையப்பட்ட வண்ணக்கலவைகள் என்ற அடிப்படையில் எவ்விதவேறுபாடுமற்றவை. அதுபோல இந்த பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்து பொருட்களும் பஞ்சபூதங்களின் கலவையால் மட்டுமே உருவாக்கப்பட்டன என்ற நோக்கில் பார்க்கும்பொழுது அவற்றை உயிருள்ளவை மற்றும் ஜடப்பொருள்கள் எனப்பிரிக்கமுடியாது. எனவே கற்சிலைக்கும் மனிதனுக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை.

சித்திரத்தில் வரையப்பட்ட மனிதன் உடுத்தியிருக்கும் வேட்டி சட்டை எவ்வித வண்ணங்களும் பூசப்படாத வெள்ளைத்துணிதான் என்றாலும் அவற்றை வேட்டி, சட்டை என்று சித்திரத்திற்கு ஆதாரமான வெள்ளைத்துணியிலிருந்து வேறுபடுத்தி பார்க்கிறார்கள். படைப்பிற்கு ஆதாரமான பரமன்தான் பஞ்சபூதக்கலவையான மனிதனின் உடலை உயிற்பிக்கிறான். வெள்ளைத்துணியை பார்ப்பதற்குபதில் வேட்டியை பார்ப்பதுபோல் பரமனை பார்ப்பதற்குபதில் மனிதனை பார்க்கிறோம்.

துணியை தொடும் போட்டியில் வெல்ல சித்திரத்தின் எந்தப்பகுதியை தொட்டாலும்  போதும் என்பதை அறியாமல் மலை ஆறு ஆகியவற்றை கடந்து மனிதனைத்தேடி அவன் அணிந்துள்ள வேட்டியை தொடுவது போல எங்கும் நிறைந்திருக்கும் பரமனை அடையாளம் கண்டுகொள்ளாமல் உயிருடன் கூடியவற்றின் உணர்வு மட்டும்தான் பரமன் என்று நினைப்பதும் அறியாமை.

சித்திரத்தின் ஆதாரமான வெள்ளைத்துணி மட்டும்தான் உண்மையான பொருள். அதை எடுத்து நாம் உடுத்திக்கொள்ளலாம். அதில் வரையப்பட்ட வேட்டி சட்டைகள் எதற்கும் பயன்படாத கற்பனைத்தோற்றங்கள். இருக்கும் ஒரே துணியை கவனிக்காமல் இல்லாத பல துணிகளை கற்பனைசெய்துகொண்டு அவை வெள்ளைத்துணியிலிருந்து வேறுபட்டவை என்றும் சட்டை வேட்டியிலிருந்து வேறுபட்டது என்றும் மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பது பரமன் மட்டும்தான். அனைத்து உயிரினங்ளுக்குமட்டுமில்லாமல் ஜடப்பொருள்களுக்கும் ஆதாரமானவன் பரமன் மட்டுமே. பரமனைத்தொடும் போட்டியில் இவ்வுண்மைகளை அறியாதவன் ஒன்றும் செய்யாமல் பரமன் எங்கே என்று யோசித்துக்கொண்டிருப்பான். அனைத்தையும் அறிந்தவனும் ஒன்றும் செய்யாமல் பரமனாகவேயிருப்பான்.

எனக்கும் பரமனுக்கும் என்ன உறவு?

நான் பரமன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் முக்தியடைந்துவிட மாட்டோம். தண்ணீரில் பிரதிபலிக்கும் ஆகாயத்தை உதாரணமாக கொண்டு மனிதனுக்கும் பரமனுக்கும் உள்ள உறவை வித்யாரண்ய சுவாமிகள் விளக்குகிறார்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருள்களுக்கும் இடமளிக்கும் வெளி என்கிற ஆகாயத்தைப்போல் அனைத்துக்கும் ஆதாரமாயிருப்பவன் பரமன். இரண்டும் அளவுக்கு உட்படாதவை. புதியபொருளொன்றுக்கு இடம் கொடுப்பதால் ஆகாயத்தின் அளவு குறைந்துவிடாது. பிரபஞ்சம் இருந்தாலும் அழிந்தாலும் பரமன் எவ்விதமாற்றமும் அடைவதில்லை. அனைத்தையும் தன்னுள் அடக்கிய  ஆகாயம் எதனாலும் கட்டுப்படுத்தபடுவதில்லை. பிரபஞ்சத்தின் மாற்றம் பரமனை பாதிப்பதில்லை. எல்லா இடத்திலும் வியாபித்திருப்பது ஆகாயம். ஆகாயம் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் இருப்பும் பரமனைச்சார்ந்தது. ஆகாயம் போல் பரமன் எவ்வித பகுதிகள் அல்லது பாகங்கள் இல்லாதவன்.

இவ்விரண்டினிடையே மூன்று வேற்றுமைகள் உள்ளன. ஆகாயம் சப்தம் என்ற ஓரு குணத்துடன் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பொருள். ஆனால் பரமன் தோற்றம்-மறைவு என்ற சுழற்சிக்கு உட்படாமல் என்றும் இருப்பவன். ஆகாயம் உணர்வற்ற ஜடப்பொருள். பரமன் என்றும் இருக்கும் ஆனந்தமயமான உணர்வு. ஆகாயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் பலபொருள்கள் உள்ளன. பரமன் இரண்டற்ற ஒருவன்.

நமது பருவுடலை ஒரு பானைக்கு ஒப்பிடலாம். இரண்டும் பஞ்சபூதங்களால் செய்யப்பட்ட ஜடப்பொருள்கள். தோற்றம், மாற்றம், மறைவு என்ற சுழற்சிக்கும் காலம், இடம், பொருள் ஆகிய மூன்று கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டவை. நாம் இவ்விரண்டிலிருந்தும் வேறுபட்டவர்கள். பானை தண்ணீர் சேமிக்க உபயோகப்படுவதுபோல் அனுபவங்களைப்பெற உடல் பயன்படுகிறது.

பானையில் உள்ள தண்ணீரை நம் மனம் என்னும் நுண்ணிய உடலுக்கு ஒப்பிடலாம். தண்ணீர் ஆகாயத்தை பிரதிபலிப்பதுபோல மனம் பரமனை பிரதிபலிக்கிறது. ஜடப்பொருள்களான இவ்விரண்டும் அளவுக்கு உட்பட்டவை. அளவுகடந்த ஆகாயத்தை பிரதிபலிப்பதால் தண்ணீர் அதிக ஆழம் உள்ளதாக தோற்றமளிக்கிறது. பரமனை பிரதிபலிப்பதால் மனம் உணர்வுடன் கூடியதாக காட்சியளிக்கிறது. நான் பரமன். பிரதிபிம்பம் அல்ல.

நான் யார்?

தண்ணீர் ஆகாயத்தை பிரதிபலித்து  அளவுக்குட்பட்ட பானையிடமிருந்து நமது கவனத்தை திசைதிருப்புகிறது. உணர்வுள்ள பரமனை பிரதிபலித்து மனம் நம் உடலுக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுப்பதால் நாம் பரமனை அறிவதில்லை.

நான் என்பதன் உண்மைப்பொருள் பானைக்குள் இருக்கும் இடைவெளி. பானைக்குள் இருக்கும் வெளி பானைக்கு வெளியே இருக்கும் வெளியிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல. பானையே ஆகாயத்திற்குள் இருப்பதால் பானை உடைந்தபின் அதனுள் இருந்த ஆகாயம் வெளியே இருக்கும் ஆகாயத்துடன் கலந்து ஆகாயத்தின் அளவு அதிகமாகிவிடாது. பானையை இங்கும் அங்கும் எடுத்துச்செல்லும்பொழுது அதனுள் இருக்கும் இடைவெளி அசைவதில்லை. உண்மையில் ஆகாயத்தினுள் இருக்கும் பானை இங்குமங்கும் நகர்த்தப்படுவதால் ஆகாயம் எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட உடலுக்குள் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக தோற்றமளிக்கும் நான் உண்மையில் எவ்வித மாற்றமுமில்லாத பரமன். பானைக்கு வெளியே இருக்கும் ஆகாயத்தை நாம் எவ்விதத்திலும் பயன்படுத்தமுடியாது. ஆனால் பானைக்குள் இருக்கும் வெளியை தண்ணீர் வைக்கபயன்படுத்தலாம். அதுபோல பரமன் எவ்வித செயலையும் செய்ய இயலாதவன். ஆனால் பரமனாகிய நான் இவ்வுடலுக்குள் இருக்கும்வரை என் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி ஆகியவற்றை பயன்படுத்தி ஐம்புலன்கள் மூலம் உலகை உணர்ந்து என் இயல்பான ஆனந்தத்தை என் மனம் மூலம் அனுபவிக்கலாம். பானை மற்றும் அதிலுள்ள தண்ணீர் ஆகிய இரண்டிற்கும் ஆதாரமானது ஆகாயம். அதுபோல என் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டிற்கும் ஆதாரமானவன் நான் என்கிற பரமன்.

எங்குமிருக்கும் ஆகாயம் பானைக்கு இடம் கொடுத்து அதற்குள்ளும் வெளியேயும் வியாபித்திருக்கிறது. பிரபஞ்சம் முழுவதையும் வியாபித்து அதன் தொடக்கத்திற்கும் மறைவிற்கும் சாட்சியாக இருக்கும் பரமன்தான் என் உடலுக்குள்ளும் இருப்பவன்.

பானை ஆகாயத்தின் ஒரு சிறிய பகுதியை ஆக்ரமித்து அளவுக்குட்பட்ட கொள்ளளவை உபயோகபடுத்த உதவுகிறது. என் உடல் பரமனை அரவணைத்து ஒரு குறிப்பிட்ட வடிவத்துடனும் பெயருடனும் இவ்வுலகில் இயங்க எனக்கு உதவுகிறது. தண்ணீர் வைக்க பானை பயன்படுவதுபோல நம் நுண்ணிய உடல் இயங்க பருவுடல் ஒரு வாகனமாக பயன்படுகிறது.

நான் யார் அல்ல?

பானையால் ஆகாயத்தை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தமுடியாது. ஆனால் ஒரு சிறு இடைவெளியை வளைத்துப்போட்டு ஆகாயத்தை கட்டுபடுத்துவதுபோன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. அதுபோல என் உடல் என்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. நான் என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன். ஆனாலும் என் உடல் என்னை ஒரு உருவத்திற்குள் அடைத்து தோற்றம், மாற்றம் மற்றும் மறைவுக்கு உட்பட்டவனாக என்னை காட்டுகிறது. கனவு முடிந்தாலும் நான் தொடர்ந்து இருப்பதுபோல மரணமடைந்தாலும் நான் தொடர்ந்து இருப்பேன் என்ற உண்மையை நம்மிடமிருந்து மறைக்கிறது. பானைக்குள் இருக்கும் இடைவெளிதான் நான் என்பதை உணராமல் தண்ணீரில் தோன்றும் ஆகாயத்தின் பிரதிபிம்பத்தை நான் என்று நினைத்துக்கொண்டிருப்பதுதான் இதற்கு காரணம்.

பானையின் குறைந்த கொள்ளளவை நம் கண்களுக்கு மறைத்து மேலேயுள்ள மேகம், சந்திரன், நட்சத்திரங்கள் உள்ளடங்கிய பரந்த ஆகாயத்ததை பானைக்குள் இருப்பதுபோல் காட்டுவது தண்ணீரின் செயல். இதனால் பானைக்குள் உள்ள வெற்றிடத்தை கவனிப்பதில்லை. அதுபோல் நம் மனமானது பரமனைபிரதிபலித்து நான்தான் பரமன் என்ற உண்மையை நம்மிடமிருந்து மறைக்கிறது. உணர்வு மயமான பரமனை பிரதிபலிப்பதால் மனம் தன்னை ஒரு உயிருள்ள பொருளாக காட்டிக்கொள்கிறது. பானையினுள் சந்திரனும் சூரியனும் இருக்கமுடியாது. அது போல ஜடப்பொருளான மனம்  உணர்வுக்கு சொந்தம் கொண்டாட முடியாது.

இதையறியாமல் பரமனின் பிரதிபலிப்பாக மனதில் தோன்றும் அகம்பாவத்தை நான் என்ற சொல்லுக்கு பொருளாக நினைத்து உடலின் பொருள், இடம், காலம் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டவர்களாக நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறோம். பானையின் உள்ளே இருக்கும் ஆகாயம் வெளியேயிருக்கும் ஆகாயத்திலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. பானை ஆகாயத்தைகட்டுப்படுத்தும் சக்தியற்றது. அதுபோல நம் உடலுக்கு ஆதாரமாயிருக்கும் பரமனை உடலின் இருப்பும் இல்லாமையும் எவ்விதத்திலும் பாதிக்காது. மனதில் தெரியும் பரமனின் பிரதிபலிப்பு நான் அல்ல. எல்லாப்பொருள்களுக்கும் ஆதாரமான பரமன் நான்.

மாறாத ஆகாயம் சூரியன், சந்திரன், பானை, தண்ணீர் மற்றும் அதில் தெரியும் பிம்பங்கள் ஆகிய அனைத்துக்கும் ஆதாரம். அதுபோல உடல் மனம் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதாரமான நான் மனதில் தெரியும் பரமனின் பிம்பம் நான் அல்ல.

நான் யார் என்று புரியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

பொதுவாக குழந்தைகள் செய்யும் தவறுகளை பெரியவர்கள் திருத்திவிடுவதால் பிறக்கும்பொழுது இருந்த அறியாமை வளர்ந்தவுடன் பெரும்பாலும் நீங்கிவிடும். ஆனால் எப்பொழுதும் உடலும் மனமும் நம்முடன் இருப்பதால் அவைதான் நாம் என்ற நமது தவறான அறிவை திருத்தும் தகுதியுள்ளவர்கள் அதிகமில்லாத காரணத்தால் பலருக்கு இந்த அறியாமை மட்டும் மரணம் வரை தொடர்கிறது. எப்பொழுதாவது உடலும் மனமும் நாம் அல்ல என்றும் அவை நம்முடையவை என்று யாரேனும் சுட்டிக்காட்டினால் சிறுது ஆலோசனைக்குப்பிறகு மனதில் தெரியும் பரமனின் பிரதிபலிப்பை நான் என்று நினைத்துக்கொள்கிறோம். நீரில் தெரியும் நிலவின் பிரதிபலிப்பும் நிலவும் ஒன்றுபோல் இருப்பதால் பானைக்குள் நிலவைப்பார்க்கிறேன் என்று ஒருவன் கூறினால் சிறிய பானைக்குள் எப்படி பெரிய நிலவு நுழையும் என்று யாரும் அவனுக்கு மறுப்பு சொல்வதில்லை. உண்மையில் அவன் பார்ப்பது நிலவின் பிரதிபிம்பத்தை என்றும் நிலவைப்பார்க்க நிமிர்ந்து வானத்தைப்பார்க்க வேண்டும் என்றும் யாரும் சொல்லித்தருவதில்லை.  அதுபோல எனக்கு உணர்வு இருப்பதால் நான் உயிரோடு இருக்கும் மனிதன் என்ற நினைப்பு தவறு என்றும் என் உணர்வு என்று நாம் எண்ணிக்கொண்டிருப்பது பரமனின் பிரதிபிம்பம் என்றும் யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. பிரதிபிம்பத்தை ஒதுக்கிவிட்டு அதற்கு சொந்தக்காரனான பரமன் நான் என்ற அறிவைப்பெற  தகுந்த ஆசிரியரின் உதவி வேண்டும். நிலவு பானைக்குள்தான் இருக்கிறது என்று பிடிவாதம் பிடிப்பதைப்போல என் மனம் உணர்வுடன் கூடியது என்ற தவறான அறிவில் உறுதியாக இருப்பதால் நாம் ஆசிரியரின் துணையை நாடுவதில்லை. எனவே நான் யார் என்ற சரியான அறிவு ஏற்படுவதில்லை.

மேலும் உண்மையான ஆகாயமும் பிரதிபலிக்கும் ஆகாயமும் பானைக்குள் ஒரே இடத்தில் இருப்பதால் உண்மையை விட்டுவிட்டு பிரதிபலிக்கும் ஆகாயத்தில் மட்டும் கவனம் செல்லும். அது போல மனம் என்னும் ஒரே இடத்தில் இருந்து பரமனும் அதன் பிரதிபிம்பமும் செயல்படுவதால் நான் பரமன் என்று உணர்வதில்லை. சித்திரமும் அது வரையப்பட்ட வெள்ளைத்துணியும் ஒரே இடத்தில் இருப்பதால் அனைவரும் வண்ண வண்ண பொருள்களால் கவரப்பட்டு வெள்ளைத்துணியை கவனிப்பதில்லை. அனைத்துக்கும் ஆதாரமான பரமனின் இருப்பை உலகத்தில் உள்ள பொருள்களை பார்த்து நம்மை அறியவிடாமல் அவை நம் கவனத்தை கவருவதால் நம் அறியாமை தொடர்கிறது.

துன்பங்களுக்கு அடிப்படைக்காரணம் என்ன?

நான் யார் என்பதில் ஒரு தெளிவு ஏற்படாததுதான் நம் அனைத்து துன்பங்களுக்கும் காரணம். ‘நான் பரமன் என்று தெளிவாக புரிந்துவிட்டது. ஆனால் பணகஷ்டம் குறையவில்லையே..’ என்றால் தான் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கிறது என்று அர்த்தம். சித்திரத்தில் வரையப்பட்ட மனிதனின் கசங்கிய அழுக்கு வேட்டியும் வெள்ளைத்துணியும் ஒரே இடத்தில் இருப்பதால் ஒன்றின் தன்மையை மற்றதன்மேல் ஏற்றிவைத்து சலவை செய்த வெள்ளை துணியை கவனிக்காமல் கசங்கிய அழுக்கு வேட்டியை பார்ப்பது போல உலகத்தின் மாறுதல்களை பரமன் மேல் ஏற்றிவைத்து எனக்கு பணகஷ்டம் என்று தவறாக முடிவு செய்கிறோம்.

பொய் எப்பொழுதும் உண்மையை விட கவர்ச்சியானது. பானைக்குள் இருக்கும் வெற்றிடத்தை விட நிலவு, நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தின் பிரதிபிம்பம் அழகாகத்தெரிவது போல பரமனின் பிரதிபிம்பம் பரமனை நம்மிடமிருந்து மறைத்துவிடுகிறது. புதியதாக தோன்றும் எந்த பொருளும் பழையதாக மாறும். மாறாமல் இருக்கும் பரமன் என்றும் புதியதாக இருப்பதை நாம் கவனிப்பதில்லை.

நீரில் தெரியும் ஆகாயத்தின் அளவைப்பார்த்து பானையின் கொள்ளளவை தீர்மானித்தால் ஏமாற்றமடைவோம். அதுபோல ஜடமான மனதை உணர்வுடன் கூடியதாக நினைத்து பல சாதனைகளை செய்ய முயல்கிறோம். உண்மையில் நான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரமாக இருப்பவன் என்பதை மறந்து அற்பமான உடலையும் மனதையும் சக்தியுடன் கூடியதாக நினைத்து ஏமாறுகிறோம்.

பானையை நகர்த்தினால் உள்ளிருக்கும் ஆகாயம் நகருகிறது என்று தவறாக நினைப்பதுபோல ஆகாய விமானத்திலேறி அமெரிக்கா சென்றால் நான் வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாக நம்புகிறோம். நான் எங்குமிருப்பவன். ஒரு சமயத்தில் ஒரு இடத்தில்தான் பானை இருக்கும். ஆகாயம் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் இருக்கும். நான் அதுபோல இடம், காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன் என்பதை மறந்து கண்ணை திறந்து மூடுவதற்குள் நினைத்த இடத்திற்கு போகவேண்டும் என்று முயற்சி செய்து தோல்வியடைந்து கொண்டிருக்கிறோம்.  

பானை உடைந்தால் ஆகாயம் மறைந்துவிடாது. அதுதெரியாமல் மரணமடைந்தால் நான் மறைந்துவிடுவேன் என்று பயப்படுவதுதான் நம் துன்பத்திற்கு காரணம்.

கடவுள் எப்படிப்பட்டவன்?

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் பருவுடல்கள் உட்பட்ட அனைத்து ஜடப்பொருள்களின் தொகுப்பு கடவுளின் பருவுடல். உயிரினங்களின் நுண்ணிய உடல்கள் மற்றும் காரண உடல்களின் சேர்க்கை கடவுளின் நுண்ணிய மற்றும் காரண உடலாகும். எனவே நான் வேறு கடவுள் வேறு அல்ல. நான் மட்டும் கடவுள் அல்ல. நானும் கடவுள். அவனும் கடவுள். அதுவும் கடவுள். எல்லாம் கடவுள். கடவுளைத்தவிர இந்த பிரபஞ்சத்தில் எதுவுமில்லை.

பல்வேறு செல்கள் ஒன்றாக செயல்படுவதால் நம் உடல் இயங்குவது போல பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அணுக்கூட்டங்களின் மொத்த செயல்பாடுதான் இறைவனின் இயக்கம். செல்களின் வாழ்நாள் மிகவும் குறைவு. தற்பொழுது நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் ஒருசிலவருடங்களுக்குள் மடிந்துவிடும் என்றாலும் நாம் மடிவதில்லை. அதுபோல அனைத்து உயிரினங்களும் மடிந்தாலும் கடவுள் மறைவதில்லை. செல்களுக்கு அப்பாற்பட்டு என் உடல் இல்லை. மேலும் எந்த செல்லும் என் உடலுக்கு வெளியே இல்லை. அதுபோல பிரபஞ்சத்திற்கு வெளியே கடவுள் இல்லை. கடவுள் இல்லாமல் எதுவும் இல்லை.

கடவுளின் தன்மைகள் யாவை?

கடந்துஉள்ளிருப்பவன் (Omniprevelant): சித்திரத்தில் உள்ள அனைத்தையும் கடந்து அதே சமயத்தில் அனைத்துக்குள்ளும் இருப்பவன் கடவுள்.

அனைத்தையும் அறிபவன் (Omniscient): எந்த பொருளை எப்படி வரையலாம் என்பதை போன்ற அனைத்து அறிவையும் உடைய சித்திரக்காரன் இறைவன்.

சர்வசக்தியுடையவன் (Omnipotent): பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் ஆளவும் சக்தி கொண்டவன் ஆண்டவன்.

எங்கும் நிறைந்திருப்பவன் (Omnipresent): பிரபஞ்சத்தின் எல்லா இடங்களிலும் எல்லாக்காலங்களிலும் எல்லாப்பொருள்களிலும் நிறைந்து இருப்பது தெய்வம்.

வயது, உயரம், அறிவு போன்ற தன்மைகள் நமது உடலையும் மனதையும் சேர்ந்தவை. அதுபோல மேலே விளக்கப்பட்ட நான்கு தன்மைகளும் கடவுளின் உடலான பிரபஞ்சத்தை சேர்ந்தவை. பிரபஞ்சம் அழிக்கப்பட்டபின் கடவுள் காரண உருவில் ஒடுங்கிய நிலையில் பரமனின் மாயாசக்தியாக தொடர்ந்து இருப்பான்.

எனக்கும் கடவுளுக்கும் என்ன உறவு?

கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு நமக்கும் நம் உடலின் பாகங்களுக்கும் உள்ள உறவைப்போன்றது. கால்கள் நடப்பதால் நாம் நகருகிறோமா அல்லது நாம் நகர கால்களை நடக்கவைக்கிறோமா என்று கேட்டால் கால்கள் தானாக நடப்பதில்லை என்றும் அவற்றை நாம்தான் செயல்படுத்துகிறோம் என்றும் பதில் அளிப்போம். அதுபோல நாம் தானாக எதையும் செய்வதில்லை. கடவுள்தான் நம் அனைத்து இயக்கத்திற்கும் காரணம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அசையும் மற்றும் அசையாப்பொருள்கள் அனைத்தையும் ஆட்டுவிப்பது ஆண்டவன் மட்டுமே. சூரியன், சந்திரன் போன்ற ஜடப்பொருள்களை மட்டுமில்லாமல் அனைத்து உயிரினங்களையும் ஆளுபவன் ஆண்டவன்தான். நமது மனதும் உடலும் ஒருங்கிணைந்து செயல்படுவதுபோல இந்த பிரபஞ்சம் முழுவதையும் செயல்படுத்துபவன்  இறைவன்.

கடவுளுக்கும் எனக்கும் உள்ள உறவை சரியாக புரிந்துகொண்டால் எனக்கு சுயமாக செயல்படும் திறன் உள்ளதா அல்லது அனைத்தும் கடவுள் செயலா என்ற கேள்வி மனதில் எழாது. ஒரு வணிக நிறுவனத்தின் அலுவல்களை செய்ய பல கணிணிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒன்று வரவு செலவு கணக்கையும் மற்றது சரக்குகளின் போக்குவரத்தையும் பதிவுசெய்யும். ஒவ்வொரு கணிணியிலும் அதற்கு தேவையான தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அது போல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரனங்களின் மனதிலும் அவற்றின் செயல்பாட்டிற்கு தேவையான விருப்பு வெறுப்புகள் மற்றும் அறிவு சேமித்து வைக்கப்பட்டிருப்பதால் அவை செயல்படுகின்றன. இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தில் ஒவ்வொரு உயிரனத்தின் செயல்பாடுகளும் அடங்கும்.

என் மனதில் தோன்றியதை நான் செய்தேன் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் மனதில் ஏன் அந்த எண்ணம் தோன்றியது என்பதை ஆராய்ந்தால் நாம் நம் சுய புத்தியை உபயோகித்து செய்யும் செயல் கூட கடவுளின் செயல்பாடுதான் என்பது தெரியவரும். உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் அவரவர் மனதில் உள்ள விருப்பு, வெறுப்பு, அறிவு ஆகியவற்றிற்கேற்ப செயல்படும் சிறைக்கைதிகள்தான்.

ஜனநாயக அமைப்பில் அனைத்து அதிகாரங்களுடன் ஆட்சி செய்வது பிரதம மந்திரி. உலக அரங்கில் அவர் தன் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் பிரதிநிதி. அதுபோல உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் ஆள்வது ஆண்டவன். 

பிரதம மந்திரியால் அரசாங்கத்தின் மற்ற அலுவலர்களின் துணையில்லாமல் செயல்பட முடியாது. அதுபோல கடவுளால் மக்களின் துணையின்றி செயல்பட முடியாது. பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்ட மற்ற மந்திரிகள் நிதி, வெளியுறவு, உள்ளாட்சி என பல துறைகளில் செயல்பட்டாலும் அனைவரது செயல்களுக்கும் பிரதமமந்திரி மட்டுமே பொறுப்பு. அதுபோல அனைத்து மக்களது செயல்களுக்கும் கடவுள் மட்டுமே பொறுப்பு. கடவுளின் சக்தி என்பது அனைத்து உயிரினங்களின் சக்தியின் கூட்டுத்தொகையாகும். ஒவ்வொரு உயிரினத்தின் உள்ளேயிருந்து செயல்களை செய்வது கடவுள்தான் என்பதால் நான் வேறு கடவுள் வேறு அல்ல.

கடவுள் என்பவர் பிரபஞ்சமாகத்தோன்றும் மாயா சக்தியுடன் சேர்ந்த பரமன். நான் என் உடலாகத்தோன்றும் மாயா சக்தியுடன் சேர்ந்த பரமன். உண்மையில் இருப்பது பரமன் மட்டும்தான். பரமனின் மாயாசக்தி பிரபஞ்சமாக காட்சியளிப்பது நம் இன்பத்திற்காக.

ஊசிபட்டாசுசரம் வெடிப்பதைப்பார்த்து ஆனந்தமடையும் சிறுவர்கள் வெடிப்பது ஒரே வெடியா அல்லது சரமாக கோர்க்கப்பட்ட தனிப்பட்ட வெடிகளா என்று ஆராய்வதில்லை. தனிப்பட்ட வெடிகளை நீக்கிவிட்டால் ஊசிபட்டாசு மறைந்து விடும். அனைத்து உயிரனங்கள் உள்ளிட்ட பிரபஞ்சத்தை நீக்கிவிட்டால் இறைவன் ஒடுங்கிவிடுவான். எனவே என் செயலா இறைவன் செயலா என்று கேள்வி அனாவசியம். இரண்டும் ஒன்றுதான்.

வீட்டில் வெண்ணைமட்டுமிருக்கும்பொழுது யாரேனும் நெய்யிருக்கிறதா என்று கேட்டால் நம் பதில் சந்தர்ப்பத்தை பொறுத்து மாறும். நெய் வெண்ணைக்கு அப்பாற்பட்ட பொருள் இல்லை. இருந்தாலும் நெய் மற்றும் வெண்ணை என்று இரு பெயர்கள் இருப்பது போல என் செயல்கள் கடவுளின் செயல்களில் அடக்கம் என்றாலும் செயல்கள் செய்வது நான் என்றும் பலன்களை கொடுப்பது கடவுள் என்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் பாகுபாடு செய்வது வழக்கில் உள்ளது.

அனைத்துசெயல்களையும் இறைவனின் ஆணைப்படி நான் செய்கிறேன் என்றும் செயல்களின் பலன்களை கொடுப்பது இறைவனின் கருணையென்றும் கூறுவது வேதத்தின் ஆரம்பப்பாடம். வேதம் படித்து நான் எந்த செயலையும் செய்ய இயலாத பரமன் என்பது புரிந்தவுடன் செயல் செய்வது இறைவனா அல்லது நானா என்ற கேள்வி மறைந்துவிடும்.

நீர் அலைகளாகவும் கடலாகவும் காட்சியளிப்பது போல பரமன் பல்வேறு உயிரினங்களாகவும் கடவுளாகவும் காட்சியளிக்கிறான்.  

முடிவுரை :

நான் பரமன் என்பது புரிந்து விட்டால் நம் உடல் மற்றும் மனதின் செயல்களை என் செயல்கள் என்று சொந்தம் கொண்டாட மாட்டோம். நடப்பது நடராஜனின் நடனம். உடலும் மனமும் என்வசம் இருக்கும்வரை அந்த நாட்டியத்தில் பங்கு பெற வாய்ப்புகிடைத்தது குறித்த மகிழ்வுடன் மற்றவர்களுக்கு அந்த மகிழ்வை பங்கிடும் நோக்குடன் நமது அனைத்து செயல்களும் அமையும். நம்மை நாடிவரும் வேலைகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு நம்மால் முடிந்தவரை அதை சிறப்பாக செய்வது என்கிற குழந்தையின் மனப்பக்குவும் நமக்கு வந்துவிடும்.

கடவுள் உள்ளிருந்து செயல்படும் சர்வசக்திமான் என்ற கருத்து நமது அனைத்து செயல்களுக்கும் கடவுள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான் என்பதை குறிக்கிறது. குழந்தை தன் செயல்களின் விளைவைப்பற்றி கவலைப்படாமல் எப்பொழுதும் மகிழ்வுடன் இருப்பது போல நம் செயல்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் ஆண்டவனை அறிந்தவுடன் நாமும் எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்கலாம்.

குழந்தை தன் செயல்கள் எதையும் தவறு என்று கருதுவது கிடையாது. யாரேனும் தன்னை திட்டினாலும் அடித்தாலும் அதை விரைவில் மறந்துவிட்டு அவர்களுடன் எப்பொழுதும் போல் சாதாரணமாக பழகும். எதிர்காலத்தை பற்றிய கவலை அதற்கு சிறிதும் கிடையாது. இதை செய்ய வேண்டும், அதை செய்யக்கூடாது என்ற சட்டதிட்டங்கள் குழந்தையை கட்டுப்படுத்தாது. எதையும் சாதிக்க வேண்டிய கட்டாயம் குழந்தைக்கு கிடையாது. எனவே திட்டங்கள் தீட்டி தனக்குத்தானே சட்டங்கள் வகுத்து அடிமையாக வாழ அதற்கு அவசியம் கிடையாது.

வேதம் விதிக்கும் விதிகளும் முற்றுணர்ந்தோர்களை கட்டுப்படுத்தாது. எனவே அவர்கள் தங்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை குழந்தையின் மனப்பாங்குடன் எதிர்கொண்டு இனிதே வாழ்வார்கள்.

பயிற்சிக்காக :

1. தற்போதைய மாணவர்கள் பள்ளியில் பயிலும் கல்வியின் தன்மை என்ன? அவர்களுக்கு அங்கு எதைப்பற்றி கற்றுக்கொடுக்கப்படுவதில்லை?
2. குழந்தைகள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு காரணம் என்ன? வளர்ந்தவர்கள் அதே போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருக்க என்ன செய்ய வேண்டும்?
3. வாழ்க்கையின் நோக்கம் என்ன? வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்?
4. பிரபஞ்சத்தின் படைப்புக்கு காரணம் என்ன?
5. நான்கு கட்டங்களாக பிரபஞ்சம் உருவான வகையை விளக்குக.
6. கடவுள் யார்?
7. கற்சிலைக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
8. சித்திரத்தில் துணியைத்தொடும் போட்டி என்ற விளக்கம் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?
9. பரமனுக்கும் ஆகாயத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க.
10. நான் யார் என்பதில் தெளிவு ஏற்படாமல் அறியாமையுடன் இருப்பதற்கு காரணம் என்ன?
11. நமது துன்பங்களுக்கு காரணம் என்ன?
12. கடவுள் எப்படிப்பட்டவன்?
13. கடவுளின் நான்கு தன்மைகள் யாவை?
14. கடவுளுக்கும் மனிதனுக்கும் என்ன உறவு?

சுயசிந்தனைக்காக :

1. பரமனால் எவ்வித அனுபவங்களையும் பெற முடியாது என்றால் ஏன் உலகம் படைக்கப்பட்டுள்ளது?
2. நான் யார்?
3. கடவுள், இறைவன், ஆண்டவன் மற்றும் தெய்வம் என்ற நான்கு வார்த்தைகளின் பொருட்காரணத்தை ஆராய்க.