Showing posts with label Upanishad. Show all posts
Showing posts with label Upanishad. Show all posts

Sunday, September 18, 2011

Lesson 155: Fruits of meditation (Brahmasutram 4.1.3)


பாடம் 155: பரமன் நான் என்று தியானிப்பதன் பலன்
பாடல் 480 (IV.1.3)

ப்ரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் (1.4.10) கூறும் ‘நான் பரமனாக இருக்கிறேன்’ என்ற உண்மையை ஆழ்மனதுக்குள் ஆழ்த்த ‘நான் பரமன்’ என்று தியானம் செய்வது அவசியமென்று கூறுகிறது. இவ்வாறு தியானம் செய்வதால் நிலைபெறும் ஞானத்தின் பலனை இந்தப்பாடம் விளக்குகிறது.

இயற்கையின் சீற்றம், நோய், வயோதிகம் மற்றும் விபத்து போன்ற உடலை பாதிக்கும் நிகழ்வுகளும் நெருங்கியவரின் மரணம், பணநஷ்டம், குடும்பத்தில் குழப்பம் போன்ற மனதை பாதிக்கும் நிகழ்வுகளும் அனைவரது வாழ்விலும் ஏற்படும். ஒருவர் அறிவாளி என்பதால் அவருக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்காது. ஆனால் இவற்றால் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறோம் என்பது அவரவரின் அறிவின் ஆழத்தையும் தரத்தையும் பொறுத்தது.

அறிவு என்று இங்கு குறிப்பிடப்படுவது புத்தக அறிவோ தொழில் கல்வி அறிவோ அல்ல. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு, படைப்பின் நோக்கம் என்பது போன்ற என்ற வேதம் கூறும் அறிவைப்பெறாமல் வெறும் பல்கலைகழகத்தில் பெற்ற அறிவு வாழ்வின் சோக நிகழ்வுகளை எதிர்கொள்ள துணை புரிவதில்லை. மேலும் வாழ்க்கை அனுபவங்கள் மனப்பக்குவத்தை மட்டும்தான் கொடுக்குமே தவிர சரியான அறிவை கொடுக்காது. எனவேதான் வயதானவர்களால் தாங்கள் கூறும் அறிவுரைகளுக்கு காரணம் கூற முடிவதில்லை. பெரியவர்கள் சொல்வதை ஏன் கேட்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில் வேதத்தில் மட்டும்தான் இருக்கிறது.

கல்லூரிகளில் பெறும் அறிவும் வயதாகும்பொழுது கிடைக்கும் அனுபவ அறிவும் பொருளாதார அடிப்படையில் முன்னேற பெரிதும் உதவும். ஆனால் எவ்வளவு அறிவை அடைந்தாலும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் பிரச்சனைகளை சமாளிக்க கடவுளை சார்ந்திருப்பது அவசியமாகிறது. நான் வேறு கடவுள் வேறு என்ற அறிவுடன் செயல்படும் பற்றுடையோன், நானும் கடவுளும் ஒன்று என்று அறிந்துகொண்டபின்னும் நிகழ்வுகளால் பாதிக்கப்படும் முக்திவிழைவோன், இருப்பது நான் மட்டும்தான் என்றறிந்த முற்றுணர்ந்தோன் ஆகியோரின் செயல்பாட்டை ஆராய்வதன் மூலம் நாம் நமது தற்போதைய நிலையை அறிந்துகொண்டு விரைவில் முன்னேறி முக்தியடைய முயலலாம்.

பற்றுள்ளோர்கள்

நான், உலகம் மற்றும் கடவுள் ஆகிய மூன்றும் வேறுபட்டவை என்ற தவறான அறிவுடன் உலகம் நமக்கு துன்பத்தை தருவதாகவும் அதிலிருந்து விடுபட கடவுள் அவசியம் என்று எண்ணும் பற்றுள்ளோர்களால் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவிப்பதை தவிர்க்க முடியாது.

தவறான பக்தி: தன்னுடைய துன்பத்தை நீக்க முயலாமல் தனக்கு துன்பம் ஏற்படுத்தியவர்களை தண்டிப்பதற்காக மாச்சரியம், எரிச்சல், கோபம், பொறாமை, அதிருப்தி ஆகிய உணர்வுகளுடன் கடவுளை பிரார்த்திப்பவர்கள் முக்தியடைய வாய்ப்பேயில்லை. இவர்களுக்கு இன்பத்தைவிட துன்பம்தான் அதிகமிருக்கும்.

பக்தியின்மை: தர்மசிந்தனையுடன் சுயமுயற்சியால் உலகை மாற்றிவிடலாம் என்று முயலுபவர்களுக்கு ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கையில்லாவிட்டாலும் வெகு விரைவில் வேதம் தரும் வாழ்க்கையறிவை பெறும் மனப்பக்குவம் ஏற்பட்டுவிடும்.  

சுயநல பக்தி (முதல் நிலை): மற்றவர்களின் மனதை மாற்றி தன் விருப்பப்படி அவர்களை செயல்படவைக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்பவர்கள் யாரையும் திருத்தவோ மாற்றவோ முடியாது என்பதை அறியாதவர்கள். நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தனது வினைகளுக்கேற்பதான் நடக்கின்றன என்று இவர்கள் அறிந்துகொள்ளும்பொழுது அடுத்த நிலைக்கு முன்னேறுவார்கள்.

சுயநல பக்தி (முதிர்ந்த நிலை): துன்பம் தரும் நிகழ்வுகளை சரியான வகையில் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் என்று கடவுளை பிரார்த்திப்பவர்கள் முக்தியடையும் தகுதியை மிகவிரைவில் பெறுவார்கள். தன் ஆளுமையின் தரத்தை உயர்த்துக்கொள்வது தன்னால் மட்டும்தான் முடியும் என்பதை இவர்கள் உணரும் பொழுது படிப்படியாக உயர்ந்து சோக நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்கும் சக்தியை பெறுவார்கள்.

பொதுநல பக்தி: செய்த வினைக்கேற்ற அனுபவங்களை பெற்றுத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து கடவுள் கூட தன்னை காப்பாற்ற முடியாது என்பதை அறிந்தவுடன் சர்வ உயிரினங்களின் நலத்திற்காக மட்டுமே கடவுளை பிரார்த்திப்பவர்கள் விரைவில் சுகதுக்கம் கலந்த அனுபவங்களை அனைவருக்கும் அளிப்பது கடவுள்தான் என்பதை உணர்ந்து கடவுள் யார் என்பதை அறிய வேதம் படிக்க ஆரம்பிப்பார்கள். உலகப்பற்றை துறந்து முக்தியை விரும்புவார்கள்.

முக்திவிழைவோர்கள்

வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை இது வேண்டியது அது வேண்டாதது என்று பிரித்து பார்க்காததால் கடவுளிடம் எதையும் பிரார்த்தித்து கேட்கும் அவசியம் இவர்களுக்கு கிடையாது. மேலும் தானும் கடவுளும் உண்மையில் ஒருவரே என்பதை அறிந்திருக்கும் காரணத்தால் இவர்களால் பிரார்த்திக்கவும் முடியாது.

உலக விவகாரங்களில் ஈடுபடும்பொழுது ஏற்படும் சோக நிகழ்வுகளுக்கு காரணத்தை ஆராய்வதில் எவ்வித பயனும் இல்லை என்பதை இவர்கள் அறிந்தவர்கள். சாலைவிபத்தில் அடிபட்டால் உடலளவில் ஏற்பட்ட துன்பங்களை நிவர்த்திசெய்வதில் இவர்கள் முனைவார்களே தவிர விபத்திற்கு யார் காரணம் என்ற சச்சரவில் ஈடுபட்டு மனதளவில் யாருக்கும் துன்பம் ஏற்படுத்த மாட்டார்கள்.

தான் செய்த தீவினை காரணமாகத்தான் தனக்கு இந்த விபத்து ஏற்பட்டது என்று மனதை தேற்றிக்கொள்ளும் கட்டத்தையும் இவர்கள் தாண்டிவிட்டிருப்பார்கள். எனவே நடந்தது யாவையும் நல்லதாகவே நடந்தது என்றும் நடக்கவேண்டியது நல்லதாகவே நடக்கும் என்றும் இவர்கள் உறுதியாக இருப்பார்கள்.

இருப்பது பரமனாகிய நான் மட்டும்தான் என்ற அறிவு ஏற்பட்டபின்னும் உலக நிகழ்வுகள் தன்னை பாதிப்பதாக ஒருவர் நினைத்தால் அவர் தொடர்ந்து வேதத்தின் மையக்கருத்து புரியும்வரை படிக்கவேண்டும். நான் பாதிக்கபடவில்லை என்றாலும் என் மனம் பொய்யான நிகழ்வுகளால் அலைபாய்கிறது என்றால் அவர் தொடர்ந்து நான் பரமன் என்ற தியானம் செய்யவேண்டும்.

பரமன் மட்டும்தான் இருக்கிறான் என்பதை உணர்வதுபோல் உலகம் இருப்பது போல் தோன்றும் மாயை என்பதை மனம் தெளிவாக புரிபடாமல் இருப்பதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. உலகம் உண்மையாக இருந்தால்தான் அதை  தெளிவாக விளக்கமுடியும். மாயை என்பதற்கு மனதால் புரிந்துகொள்ள முடியாதது என்று பொருள். மேலும் மனமே மாயை. ஆகவே அதனால் தான் உண்மையில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடிவது சிரமம்தான். எனவேதான் திரும்ப திரும்ப நான் பரமன் என்று தியானம் செய்து நான் மனம் அல்ல என்ற உண்மையை அறிவில் ஆழ்த்தி மனதை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். எப்பொழுது ‘நான் பரமன்’ என்ற தியானம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் போகிறதோ அப்பொழுது முக்திவிழைவோன் முற்றுணர்ந்தோனாகிறான்.  

முற்றுணர்ந்தோர்கள்

வாழ்வில் துயரமான சம்பவங்கள் நிகழும் பொழுது கோபம், பயம், வெட்கம், குற்ற உணர்வு, கவலை, வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் முற்றுணர்ந்தோர்களின் மனதை தாக்குவதில்லை. விபத்து ஏற்பட்டால் உடலில் ஏற்படும் வலியை ஏற்றுக்கொள்வது போல் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் மனதில் ஏற்படும் துயரத்தை இவர்கள் சகித்துக்கொள்வார்கள். இது ஏன் நடந்தது, என்ன காரணம் என்பது போன்றவை அர்த்தமற்ற கேள்விகள் என்பதை இவர்கள் அறிவர்.

செய்யவேண்டிய செயல்கள் அனைத்தையும் செவ்வனே செய்து முடித்த திருப்தி இவர்களிடம் எப்பொழுதும் இருப்பதால் இவர்களது மனம் பொதுவாக அமைதியாகவேயிருக்கும். தனது இயல்பான அமைதியை அனுபவிக்க இவர்கள் அயல்நாடுகளுக்கு பயணம் செய்யவேண்டிய அவசியமோ செயற்கையாக ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி அதை தீர்க்கவேண்டிய கட்டாயமோ இருப்பதில்லை. பிரபஞ்சம் முழுவதற்கும் நான்தான் ஆதாரம் என்ற அறிவு இவர்களிடம் நிலைபெற்று இருப்பதால் யாரையும் இவர்கள் அந்நியர்களாக கருதுவதில்லை. பிரச்சனைகள் தோன்றும் பொழுதும் தீரும்பொழுதும் இவர்களது மனம் ஒரே சீராக செயல்படும்.

நான் பரமன் என்பதை உணர்ந்தபின் கூட நீ முட்டாள் என்று யாரேனும் கூறினால் அவருக்கு சரியான பதில் கொடுக்கவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படலாம். நம் ஆளுமையை பொறுத்து நமது பதில் வெவ்வேறு விதத்தில் அமைந்தாலும் இந்த நிகழ்வு நமது மனதை சலனபடுத்தாமல் இருக்காது. ஆனால் நடப்பது நாடகம் என்ற உண்மை நம் மனதில் திடமாக இருப்பதால் அவருடன் எப்படி உரையாடலை தொடர்வது அல்லது தவிர்ப்பது என்ற அளவில் மட்டும் தான் நம் மனம் சலனப்படும். அவரும் பரமன் என்பதால் அவர் மீது கோபம் அல்லது காழ்ப்புணர்ச்சி ஏற்படாது. திரும்ப திரும்ப இதுபோல் உலக நிகழ்வுகளில் நான் பரமன் என்ற அறிவுடன் பங்கேற்கும்பொழுது நமது ஆளுமையின் தரம் தொடர்ந்து அதிகரித்து மனதில் ஏற்படும் சலனம் வெகுவாக குறையும்.

உலகம் உண்மை என்ற தவறான அறிவுடன் பலகாலம் இவ்வுலக நிகழ்வுகளில் பங்கேற்று சேர்த்துவைத்த மனப்பதிவுகளை அழிக்க நான் பரமன் என்ற சரியான அறிவுடன் பல காலம் செயலாற்ற வேண்டியது அவசியமாகலாம். மனதை அமைதி படுத்தவேண்டும் என்ற முயற்சியை முற்றுணர்ந்தோர்கள் மேற்கொள்வதில்லை.  

முடிவுரை :

பூமி சூரியனை சுற்றும் ஒரு கிரகம் என்ற உண்மை அறிவு நமது மனதில் பதிந்திருப்பதால் அது கிழக்கில் தோன்றி மேற்கே மறைவதாக கண் காட்டுவதை நாம் நம்புவதில்லை. அதுபோல நான் பரமன் என்ற உண்மையை தியானத்தின் மூலம் நம் ஆழ்மனதில் அழுத்தியபின் இந்த உலகம் உண்மையில் இருப்பதாக காட்டும் ஐம்புலன்களை நம்பி நாம் ஏமாற மாட்டோம்.

பட்டாம்பூச்சியின் முட்டையிலிருந்து வெளிவரும் புழுவை பார்த்தால் அது ஒரு காலத்தில் பட்டாம்பூச்சியாக மாறும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படாது. அது போல எப்பொழுதும் அங்கும் இங்கும் அலைமோதி என்ன தேடுகிறோம் என்பதை கூட யோசிக்க நேரம் இல்லாமல் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டிருக்கும் சாதாரண மனிதனை பார்க்கும்பொழுது அவன், மெள்ள மெள்ள மனப்பக்குவம் பெற்று தான் தேடுவது மன நிறைவை என்று உணர்ந்து அதன் பின் வேதம் படித்து நான் பரமன் என்பதை உணர்ந்து முற்றுணர்வோனாக மாறுவான் என்பதை நம்புவதும் கடினம்.

இந்த மாற்றம் ஏற்பட எவ்வளவு காலமாகும் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருசிலருக்கு முற்றுணர்ந்தோனாக மாறுவதற்கு முன்பேயே எவ்வித தேடலிலும் ஈடுபடாமல் என்றும் அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழும் மனப்பக்குவம் ஏற்பட்டிருக்கலாம். வேறு சிலருக்கு நான் பரமன் என்ற அறிவு ஏற்பட்ட பின்னும் பழக்க தோஷத்தால் தொடர்ந்து உலகத்தில் பரபரவென்று செயல்படும் மனப்பதிவு மாறாமல் இருக்கலாம். எது எப்படியிருப்பினும் ஒருவரின் நடவடிக்கையை வைத்து அவரின் முக்திநிலையை தீர்மானம் செய்யமுடியாது. உலக நிகழ்வுகள் மனதில் கோபம், பயம், எரிச்சல், ஏமாற்றம், பொறாமை என்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதை தவிர்ப்பதுதான் நான் பரமன் என்ற ஞானத்தின் இறுதி நோக்கம். இந்த நோக்கம் ஞானம் ஏற்பட்டவுடன் நிறைவேறவில்லையென்றால் அது நிறைவேறும் வரை ‘நான் பரமன்’ என்ற தியானத்தை செய்யவேண்டும்.   

நான் பரமன். உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நானே ஆதாரம் என்ற அறிவு மனதில் ஆழமாக பதிந்துவிட்டால் குன்றாத அமைதியுடன் நிலையான ஆனந்தத்துடன் உடலும் மனதும் ஒத்துழைக்கும்வரை தொடர்ந்து வாழ்க்கையை அனுபவிக்கலாம். மரணம் என்பது இந்த அனுபவத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியே தவிர நான் என்றும் இருப்பவன் என்ற ஞானம் மரணபயத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும்.

பயிற்சிக்காக :

1. இருவகை அறிவுகளை விவரிக்கவும்.

2. உலக அறிவை எந்த இரு விதங்களில் பெறலாம்?

3. பற்றுள்ளோர்களின் பக்திநிலைகள் யாவை?

4. உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்பதை புரிந்து கொள்வதில் இருக்கும் சிரமத்திற்கு கூறப்பட்ட இரு காரணங்கள் யாவை?

5. நான் பரமன் என்ற ஞானத்தின் நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. பெரியவர்கள் கூறும் அறிவுரைகளை ஏன் பின்பற்றவேண்டும் என்று ஆராய்க.

2. பொருளாதார அடிப்படையில் வெற்றி பெற வேதம் வழி சொல்கிறதா?

3. வாழ்க்கை அறிவை பெற என்ன செய்ய வேண்டும்?

4. பற்றுள்ளோர்கள் படும் துன்பத்தின் அளவு அவர்களின் கர்மவினைகளை பொறுத்ததா அல்லது அவர்களின் பக்திநிலையை பொறுத்ததா?

5. பற்றுள்ளோர்களைத்தவிர மற்றவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?

6. முற்றுணர்ந்தோர்களின் மனம் சலனப்படுமா?

7. முற்றுணர்ந்தோர்களுக்கும் முக்திவிழைவோர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

Wednesday, September 7, 2011

Lesson 154: Fruits of knowledge (Brahmasutram 4.1.1-2)


பாடம் 154: ஞானத்தின் பலன்
பாடல் 478 – 479 (IV.1.1-2)

பரமனின் மாயாசக்தியின் தொடர்ந்த மாற்றம்தான் உலகில் நடக்கும் வெவ்வேறு நிகழ்வுகளாகவும் மனிதர்களின் செயல்பாடுகளாகவும் தோற்றமளிக்கிறது என்ற உண்மையை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை என்றும் பரமரகசியத்தை அறியமுயலும் முக்திவிழைவோர்கள் பரமன் மேல் தொடர்ந்து தியானம் செய்யாவிடில் பற்றுடையோர்கள் போல  துன்பப்படுவதை அவர்களால் தவிர்க்க முடியாது என்றும் இந்தப்பாடம் விளக்குகிறது.

வாழ்வின் நிகழ்வுகள்

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். இருவரும் மணம் புரிந்து கொண்டு இனிதே வாழ்ந்தார்கள் என்பதுதான் கதை என்றால் இராமாயணம் எழுதப்பட்ட அன்றே மறக்கப்பட்டிருக்கும். இளவரச பட்டாபிஷேகம், கைகேயின் வரம், மரவுரியுடன் காட்டுக்குப்பயணம், பரதன், சூர்ப்பனகை, மாரீசன், ஜடாயு, இராவணன், விபீஷணன் ஆகியோரின் வருகை என்பது போன்ற ஏற்ற இறக்கங்களுடன் கூடிய வாழ்க்கைச்சித்திரமாக வரையப்பட்டதாலேயே அது எல்லோரும் சுவைக்கும் ஒரு காவியமாக இன்றுவரை திகழ்கிறது.

ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்வும் இராமாயணத்தைப்போன்ற ஒரு சுவையான கதையே. இதனாலேயே இன்றளவும் பக்கத்துவீட்டுநிகழ்வுகளை அக்கறையுடன் அனைவரும் கவனிக்கிறோம். யார் யாரை காதலிக்கிறார்கள், யாருடைய பெண் வீட்டைவிட்டு ஓடினாள், எதற்காக விவாகரத்து நடந்தது என்பதுபோன்ற ஊர் கதைகள் சுவாரசியமாக இருந்தாலும் அதே நிகழ்வு நம் வீட்டில் நடப்பதை எதிர்கொள்ள பெரும்பாலோர் தயாராய் இருப்பதில்லை. பதவி உயர்வு, புதிய கார் வாங்குதல் என்பது போன்ற நிகழ்வுகள் ஒருபோதும் தனித்து நடப்பதில்லை. பகல் வந்தால் தொடர்ந்து இரவு வருவதைப்போல அனைவரது வாழ்வும் ஏற்ற இறக்கங்களுடன் கூடியதாகவே இருக்கும். இது வாழ்வின் நியதி.

மேலும் இது படைப்பின் இரகசியம். இவ்வுலகம் இராவணனையும் இராமனையும் உள்ளடக்கிய இராமாயணமாக இல்லாவிட்டால் துன்பம் கலவா இன்பமாகவும் எவ்வித மாற்றத்திற்கும் ஆளாகாமல் என்றும் இருக்கும் பரமன், ‘நான் பலவாக மாறுவேன்’ என்று சங்கல்பம் செய்ததற்கு பொருள் இல்லாமல் போய்விடும்.

மனித மனங்களில் வேறுபாடுகள்

ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுவதுதான் படைப்பு. எல்லாவிதத்திலும் ஒன்றுபோல் இருக்கும் இருபொருள்கள் இவ்வுலகில் கிடையாது. மாமர இலைகள் மற்ற மரத்தின் இலைகளிலிருந்து வேறுபடுவதுமட்டுமில்லாமல் ஒரே மரத்தின் இலைகள் கூட ஒன்றுபோல் ஒன்று அமைவதில்லை. ஒரே வீட்டில் வளரும் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டே இருப்பார்கள். பொதுவாக பார்த்தால் இருக்கும் ஒற்றுமைகளை கூர்ந்து கவனித்தால் வேற்றுமைகள் வெளிப்படும்.

உலக நிகழ்வுகளில் உள்ள ஒற்றுமை

இடம், பெயர், தேதி ஆகிய மூன்றையும் கவனிக்காவிட்டால் செய்தித்தாள்களில் புதிதாக எவ்வித செய்தியும் வருவதேயில்லை என்பது தெரியவரும். பூமியில் மனிதன் தோன்றிய நாள் முதல் இன்றுவரை ஒவ்வொருவர் வாழ்வின் நிகழ்வுகளும் எவ்வித மாற்றமுமின்றி அதே ஏற்ற இறக்கங்களுடன்தான் அமைந்து வருகிறது.

மனிதர்கள் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் விதம்

உலக நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் இல்லையென்றாலும் மனித மனங்கள் மாறுபடுவதால் நிகழ்வுகள் அவற்றில் ஏற்படுத்தும் பாதிப்புகள் வேறுபடுகின்றன. கற்பத்தில் தோன்றுதல், பிறத்தல், வளர்தல், முதிர்தல், மங்குதல், மறைதல் என்ற ஆறு நிகழ்வுகளும் மனித வாழ்வில் தொடர்ந்து நடந்தாலும் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ தனக்கு மட்டும்தான் நிகழ்வதாக மனித மனம் கற்பனை செய்து கொள்கிறது. பல காலம் கழித்து பிறந்த குழந்தைக்கு ஜுரம் ஏற்பட்டு உயிர் பிழைக்குமோ என்ற நிலையில், பிறப்பவர்கள் அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும் என்ற தத்துவத்தை கூறி அதன் பெற்றோர்களின் கவலையை போக்க முடியாது. குழந்தை எப்படியாவது பிழைக்க வேண்டும் என்று அவர்கள் மனம் தவித்துக்கொண்டுதான் இருக்கும். குழந்தை இறந்துவிட்டால் துக்கம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.

ஆனால் மனதில் ஏற்படும் தவிப்பு, துக்கம் போன்ற உணர்வுகள் அவர்களையும் அவர்களை சுற்றியுள்ளவர்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது அவரவரின் ஆளுமையை சார்ந்து மாறுபடும். இனி நான் இருக்க மாட்டேன் என்று தற்கொலை செய்து கொள்ள முயலும் தாய், குழந்தையை காப்பாற்றாத மருத்துவரை தாக்கும் தந்தை, நடந்தது நடந்துவிட்டது இனி நடக்க வேண்டியதை கவனிக்கலாம் என்று அமைதியாய் இருக்கும் பெற்றோர் என மனிதர்கள் பல வகைப்படுகிறார்கள்.

மனிதனின் ஆளுமை

நகையின் தன்மை அதில் அடங்கியுள்ள உலோககலப்பின் தன்மையை சார்ந்து இருப்பது போல ஒரு தனி மனிதனின் ஆளுமை அவன் மனம் செய்யப்பட்ட விதத்தை பொறுத்து மாறுபடும். ஒளி, சக்தி, ஜடம் ஆகிய தனிமங்கள் கலந்துள்ள விகிதம் மனிதனின் ஆளுமையை நிர்ணயிக்கிறது.

அனைவரிடமும் கலகலப்பாக பேசுபவன், அமைதியாயிருப்பவன், தீர்க்கமாக யோசித்தபின் செயல்படுபவன், உடனுக்குடன் செயல்செய்து முடிப்பவன், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், ஜாக்கிரதையாக இருப்பவன், விரும்பியதை செய்பவன்,  புலன்களை அடக்கியாளுபவன் என ஆளுமைகளில் பல வகைகள் உண்டு. இவற்றில் எது சரி எது சரியில்லை என்ற விவாதம் தவறு. ஒவ்வொரு மனிதரும் மற்றவரிடமிருந்து வேறுபட்டுதான் இருக்க வேண்டும் என்பது படைப்பின் நியதி என்பதால் அனைத்து வகையான ஆளுமைகளும் சரியானவையே. ஆளுமையை மாற்றியமைக்கவேண்டும் என்பது தவறான முயற்சி. இதுதான் சரியான குணம் என்று வரையறுத்து அனைவரையும் இயந்திரங்களைப்போல மாற்ற முயல்வது அறிவீனம். மேலும் மனித ஆளுமைகளை யாராலும் மாற்றவே முடியாது. பேசுபவனை மௌனமாக இருக்கச்செய்வதோ, பேசாதவனை கட்டாயபடுத்தி பேசவைப்பதோ முடியாது. ஏனெனில் ஆளுமை உடன் பிறந்தது. மாறாதது.

ஆளுமையின் வகை மாறாது என்றாலும் ஆளுமையின் தரம் தொடர்ந்து வளரும். பாவ புண்ணியங்கள் தரும் சூழ்நிலைகேற்பவாறு வாழ்வில் நிகழும் நிகழ்வுகள், அவரவரின் விருப்பு வெறுப்புகளையும் அறிவுத்திறனை தொடர்ந்து வளர்க்க உதவுகின்றன. அறிவு வளர வளர அதற்கேற்ப ஆளுமையும் வளர்ச்சியடையும்.

ஒவ்வொரு மனிதனும் செயல்களை செய்பவன், பலன்களை அனுபவிப்பவன், அறிவை வளர்த்துக்கொள்பவன் என்ற மூன்று விதங்களில் வாழ்கிறான். இவற்றில் அறிவை பெற தனியாக செய்யும் முயற்சியைத்தவிர அனைத்து செயல்களை செய்யும்பொழுதும் அவற்றின் பலனை அனுபவிக்கும்பொழுதும் தொடர்ந்து அறிவை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்பவனின் ஆளுமை வேகமாக வளரும்.

ஆளுமை வளர்வதால் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை ஏதிர்கொள்ளும் திறன் அதிகரிக்கும். இன்பத்தில் துள்ளுவதும் துன்பத்தில் துவளுவதும் படிப்படியாக குறைந்து இறுதியில் முக்தியடையும் வாய்ப்பையும் இவர்கள் பெறுவார்கள்.
பற்றுடையோன்

நான் பரமன் என்ற பரமரகசியத்தை அறியாத பாமரர்கள் அனைவரும் பற்றுடன் செயலாற்றுபவர்கள். நான் இந்த பலனுக்காக இந்த செயலைச்செய்கிறேன் என்று ஒவ்வொரு செயலைச்செய்யும்பொழுதும் இவர்கள் தெளிவாக இருப்பார்கள். எதிர் பார்த்த பலன் கிடைத்தால், நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்று பெரிமிதம் கொள்வார்கள். இந்த நிலை யார் வாழ்விலும் தொடராது. ஏமாற்றம் தடங்கல், தோல்வி, போன்றவற்றை தவிர்க்கமுடியாதபொழுது தன்னம்பிக்கை குறைந்து கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.

உண்மை உழைப்புடன் செயல்களைத்திறன்பட செய்து அதனுடன் ஆண்டவன் அருளின் அவசியத்தை அறிந்து அவனிடம் மன்றாடி பிரார்த்தித்த பின்னும் தோல்வியை சந்திக்க நேரும்பொழுது மனிதன் ஏன், எப்படி என்று யோசிக்க ஆரம்பிக்கிறான். கடமையைச்செய், பலனை எதிர்பார்க்காதே என்ற பகவானின் அறிவுரைக்கு அர்த்தம் தெரியத்தொடங்குகிறது. வாழ்வில் செயலை செய்வதற்கு மட்டுமே தனக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் பலனை பெறும் உரிமையில்லை என்றும் உணர ஆரம்பிப்பார்கள்.

பலனுக்காக அல்லாமல் செயலை செவ்வனே செய்து முடிப்பது மட்டுமே தன் குறிக்கோள் என்ற அணுகுமுறையுடன் தொடர்ந்து செயலாற்றிவருபவர்களின் மனம் பக்குவபட்டு அவர்களின் ஆளுமை மேலும் வளர்ச்சியடையும்.

தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, கர்மயோகம் எனப்படிப்படியாக உயர்ந்து முக்திவிழைவோனாக மாறாதவர்கள் தொடர்ந்து பற்றுடையோர்களாகவே இருப்பார்கள். காகித ஓடம் கடலலை மேலே ஓடுவது போல இவர்கள் வாழ்வில் நிகழும் ஏற்ற இறக்கங்களினால் அலைக்களிக்கப்பட்டு இவர்கள் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாவார்கள். எலிப்பொறியில் வைக்கப்பட்டுள்ள வடையை கண்டதும் எலிக்கு உண்டாகும் ஆனந்தம் வெகு விரைவில் துன்பமாக மாறுவது போல் வாழ்வின் இனிமையான நிகழ்வுகள் மற்றும் மனிதர்கள் மேல் கொண்டுள்ள பற்று தொடர்ந்து இவர்களை துன்பத்தில் ஆழ்த்தும்.

இன்பத்திற்காக செயல் செய்தால் துன்பத்தை அனுபவித்துதான் ஆகவேண்டும் என்ற அறிவு ஏற்படும்பொழுது ஆளுமை வளர்ந்து துன்பம் கலவா இன்பம் பெற முக்திவிழைவோனாக மாறவேண்டிய அவசியத்தை இவர்கள் உணர்வார்கள்.
முக்திவிழைவோன்

துன்பம் கலக்காத இன்பத்துடன் வாழ உலகை மாற்றியமைத்து எப்பொழுதும் எல்லாமும் தங்கள் எதிர்பார்ப்பின்படியே நடக்க வைக்கவேண்டும் என்ற தவறான அறிவை மாற்றிக்கொண்டு வாழ்வில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்கவே முடியாது என்றும் அமைதியாக வாழ ஒரே வழி முக்தியடைவதுதான் என்றும் அறிந்தவர்கள் முக்திவிழைவோர்கள்.

மற்றவர்களைப்போல் தொடர்ந்து பல்வேறு வேலைகள் செய்து பணம் ஈட்டி குடும்பப்பொறுப்புகளை நிர்வகித்தாலும் இவர்களின் ஒரே குறிக்கோள் முக்தி என்பது மட்டுமே. முறைப்படி வேதத்தை ஆசிரியரிடம் பயின்று பரம ரகசியத்தை அறிந்துகொண்டிருந்தாலும் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்ற செய்தி இவர்களையும் உலுக்கவே செய்யும். இவர்களது ஆளுமை பற்றுடையோர்களை ஒப்பிடும்பொழுது பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கும் காரணத்தால் இதுபோன்ற சோக நிகழ்வுகளை இவர்கள் எதிர்கொள்ளும் விதம் பண்பட்டிருக்கும்.

நான் பரமன், இருப்பதுபோல் தோன்றும் இவ்வுலகம் என்னால் உண்டாக்கப்பட்ட கனவு என்று தொடர்ந்து தியானம் செய்வதால்மட்டுமே இவர்களால் தங்கள் ஞானத்தில் நிலைபெற முடியும். கணவன் மேல் தீரா காதல் கொண்டிருக்கும் மனைவி அவன் வெளியூர் சென்றால் அவன் திரும்பிவருவரை வெவ்வேறு வீட்டுவேலைகள் செய்துகொண்டிருந்தாலும் சதா சர்வகாலமும் மனதினுள் அவனையே நினைத்துக்கொண்டிருப்பதுபோல முக்திவிழைவோன் பரமன் மேல் தியானம் செய்யவேண்டும். எவ்வளவுதரம் அல்லது எவ்வளவுநேரம் அரிசியை உலக்கையால் குத்தவேண்டும் என்ற கேள்விக்கு உமி அரிசியிலிருந்து பிரியும்வரை என்பதுதான் சரியான பதில். அதுபோல எவ்வளவுதரம் அல்லது எவ்வளவு நேரம் பரமன் மேல் தியானம் செய்யவேண்டுமென்பதற்கு உடல் மற்றும் மனம்தான் தான் என்னும் எண்ணம் உதிர்ந்து நான் பரமன் என்பதை உணரும்வரை என்று பிரஹதாரண்யக உபநிடத மந்திரம் ஒன்று (2.4.5) பதில் கூறுகிறது.

நான் முக்தியடையவேண்டும் என்ற  ஆசை நான் பணக்காரானாக வேண்டும் என்ற தீவிர ஆசையைபோல இருந்தால் அது நிறைவேற வாய்ப்பில்லை. எப்பொழுது ‘நான்’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ‘பரமன்’ மேல் மட்டும் தியானம் செய்யமுடிகிறதோ அப்பொழுதுதான் அகங்காரம் தொலைந்து நான் பரமன் என்ற ஞானம் உதிக்கும். முக்தியடைவது தானாக நடக்கும்.
முற்றுணர்ந்தோன்

நான் பரமன் என்ற ஞானத்தில் நிலைபெற்ற முற்றுணர்ந்தோர்களுக்கு உலகம் இருப்பதுபோல் தெரியும் ஒரு மாயை என்பது தெளிவாகத்தெரிந்திருப்பதால் உலக நிகழ்வுகள் அவர்களை பாதிப்பதில்லை. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டது என்ற செய்தி அவர்கள் மனதையும் ஆட்டுவிக்கும். ஆனால் மனம் தான் அல்ல என்ற அறிவு உறுதியாக இருப்பதால் இவர்கள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை தொடர்ந்து அனுபவிப்பார்கள். தன் குழந்தை இறந்துவிட்டது என்பதை அறிந்தபின் இவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது அவரவர்களின் ஆளுமையை பொறுத்து மாறுபடும். செயல்பாட்டின் அடிப்படையில் ஒருவரை முற்றுணர்ந்தோன் அல்லது முக்திவிழைவோன் என்று வகைபிரிக்கமுடியாது.

கயிற்றை பாம்பாக பார்த்து பயப்படுபவன் பற்றுடையோன். அது பாம்பல்ல வெறும் கயிறுதான் என்பதை அறிந்திருந்தாலும் சுற்றியிருக்கும் எல்லோரும் அதற்கு பயப்படுவதால் மனம் குழம்பியிருப்பவன் முக்திவிழைவோன். கயிற்றை மட்டும் பார்ப்பதால் தெளிவாக இருப்பவன் முற்றுணர்ந்தோன்.

உலக நிகழ்வுகளும் மற்ற மனிதர்களின் செயல்பாடுகளும்தான் தங்களது சோகத்திற்கு காரணம் என்று பற்றுடையோர்கள் துன்பமடைவர். அதே நிகழ்வுகள் முக்திவிழைவோன் வாழ்வில் ஏற்படும்பொழுது அவன் தன் துன்பத்திற்கு ஒரே காரணம் முக்தியடையாதது மட்டுமே என்று அறிவான். நிகழ்வுகளும் அவை மனதில் ஏற்படுத்தும் சலனங்களும் பிரிக்கமுடியாதவை என்றும் இவ்விரண்டிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று உணர்ந்தவன் முற்றுணர்ந்தோன்.   

தான் செயல் செய்பவன் என்றும் பலனை அனுபவிப்பவன் என்றும் நினைப்பவன் பற்றுடையோன். செயல் மட்டும் செய்பவன் நான் என்று பலனைத்தியாகம் செய்பவன் முக்திவிழைவோன். தான் எவ்வித செயலையும் செய்வது கிடையாது என்று உணர்ந்துகொண்டிருப்பவன் முற்றுணர்ந்தோன். எனவே நடந்த நிகழ்வுகள் வேறு விதமாக நடந்திருக்கலாமென்றோ அல்லது தான் வேறுமாதிரி செயல்பட்டிருந்தால் சோகநிகழ்வை தவிர்த்திருக்கலாமென்றோ அவன் நினைத்து துயரப்படமாட்டான். தன் விதி என்று தன்னை சமாதானபடுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் அவனுக்கில்லை. ஏனெனில் தான் இது வரை பாவம் எதையும் செய்யவில்லை என்று அவனுக்கு தெளிவாகத்தெரியும். தான் எதனுடனும் சம்பந்தமில்லாதவன் என்றுணர்ந்ததால் அவன் எதனாலும் பாதிக்கபடுவதில்லை.


முடிவுரை :

மனித ஆளுமைகளை பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்துபவர்கள் ஆளுமை உடன் பிறந்தது என்பதால் அதன் தனித்தன்மையை மாற்றவேமுடியாது என்று உணர்வது அவசியம். அப்பொழுதுதான் ஆளுமையின் தரத்தை  உயர்த்த தேவையான அறிவை அடைவதில் முழுமுயற்சியுடன் ஈடுபடமுடியும்.

செயல்செய்வதன் மூலமாகவும் பலனை அனுபவிக்கும்பொழுதும் தொடர்ந்து அறிவை அதிகப்படுத்திக்கொள்பவனால் மட்டுமே ஒருவர் தனது ஆளுமையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இன்பத்தையும் துன்பத்தையும் தரக்கூடிய நிகழ்வுகளை மாற்றி மாற்றி வழங்கும் வகையில் தான் இந்த உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்ற இறக்கங்களை சரியாக எதிர்கொள்ள ஆளுமையின் தரத்தை உயர்த்திக்கொள்ளுவது அவசியம். 

ஞானத்தின் பலன் துன்பத்திலிருந்து விடுதலை. பாவபுண்ணியங்கள் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளுக்கு காரணமாக மட்டுமே அமைகின்றனவேயன்றி நம்மை இன்பத்திலோ துன்பத்திலோ ஆழ்த்தும் சக்தி அவற்றுக்கு கிடையாது. அறிவு அதிகமாக அதிகமாக நம்மால் துன்பபடுவதை படிப்படியாக குறைத்து இன்பமாக வாழலாம். எப்பொழுது பரமனைப்பற்றிய முழுமையான அறிவை அடைகிறோமோ அப்பொழுது துன்பத்திலிருந்து முழுமையாக விடுதலை அடைகிறோம்.

பற்றுடையோன் நிகழ்வுகள் எப்பொழுதும் நல்லதாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்தபடி இருப்பான். முக்திவிழைவோன் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் படைப்பு இருக்கமுடியாது என்றும், அனைவரும் பாவபுண்ணியங்கள் செய்திருப்பதால் வாழ்வின் இருமைகள் மாறிமாறிதான் வரும் என்றும் அறிந்து இருந்தாலும் முற்றுணர்ந்தோன் போல வாழ்வின் தொடர்ந்த மாற்றங்களை ஏற்ற இறக்கங்கள் என்று பாகுபாடு செய்யாமல் ஏற்றுக்கொள்ள பரமன் மேல் தியானம் செய்வது அவசியம்.

உலகம் உண்மையானது என்ற தவறான எண்ணம் முக்திவிழைவோன் மனதில் ஆழமாக பதிந்திருப்பதால் பரமன் மேல் தொடர்ந்து தியானம் செய்வது அவசியம். உலகம் நாம் காணும் கனவு என்று உறுதியாக உணரும்வரை தியானம் செய்தால்தான் உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மாற்றமடைவதுதான் மனதின் வேலை என்றும் மாறும் மனம் தான் அல்ல என்றும் அவன் உணர்வான்.


பயிற்சிக்காக :

1. வாழ்வின் நியதி மற்றும் படைப்பின் இரகசியம் என்று குறிப்பிடப்பட்ட கருத்து என்ன?

2. மனிதர்கள் வாழ்வில் பொதுவாக ஏற்படும் ஆறு நிகழ்வுகள் என்னென்ன?

3. மனிதர்கள் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் விதம் மாறுபடுவதற்கு காரணம் என்ன?

4. மனித ஆளுமையை நிர்ணயிப்பது எது?

5. மனித ஆளுமையை மாற்றியமைக்க முடியுமா?

6. ஆளுமையின் வளர்ச்சிக்கு எது அவசியம்?

7. மூன்று வாழ்க்கை விதங்கள் என்று பிரித்து ஆராய காரணம் என்ன?

8. பற்றுடையோன் முக்திவிழைவோனாக மாற செய்யவேண்டிய செயல்கள் யாவை?

9. முக்திவிழைவோன் முற்றுணர்ந்தோனாக மாற செய்யவேண்டிய ஒரே செயல் என்ன?

10. ஞானத்தின் பலன் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதற்கான காரணங்களை ஆராய்க.

2. கடந்த இரண்டாயிரம் வருடங்களில் உலக நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்ற கூற்றின் உண்மையை ஆராய்க.

3. மனித ஆளுமைகளின் வகைகளை ஆய்க.

4. மனிதர்களை ஆளுமை வகைகளாக பிரிப்பதன் பயன் என்ன?

5. முற்றுணந்தோர்களின் மனம் சோக நிகழ்வினால் கலக்கமடையுமா?

Thursday, March 31, 2011

Lesson 153: Enlightenment is only one (Brahma Sutra 3.4.52)

பாடம் 153: ஞானம் ஒன்றுதான்
பாடல் 477 (III.4.52)

மனித மனங்கள் மாறுபடுவதால் தீவிர முயற்சி செய்தால்கூட ஞானம் பெற ஆகும் காலத்தை அறுதியிட்டு கூறமுடியாது என்பதை விளக்கியபின் ஞானம் ஏற்பட்டால் உடனே முக்தியடைவோம் என்ற முக்கியமான கருத்தை இந்தப்பாடம் தருகிறது.

காரண காரியம்

விதை விதைத்தவுடன் பழம் கிடைக்காது. வேதம் படித்து முடித்தபின் அதன் பலனான ஞானத்தைப்பெற சிறிது காலமாகலாம். ஆனால் ஞானம் பெறுவதற்கும் முக்தியடைவதற்கும் இடையே எவ்வித காலதாமதமும் கிடையாது. மின்சாரம் தடைபட்டதால் முழு இருளில் மூழ்கியிருக்கும்பொழுது தீக்குச்சியை உரசி தீயை பற்றவைக்க நேரமாகலாம். ஆனால் குச்சியில் நெருப்பு தோன்றிய அதே நொடியில் இருள் அகன்று அறையில் ஒளியேற்படும். அதுபோல அறியாமை என்ற இருளை நீக்கி ஞானத்தைப்பெற செய்யும் முயற்சிகள் பலன் தர சில காலமாகலாம். ஆனால் ஞானம் ஏற்பட்டவுடனேயே அனைத்து துன்பங்களும் அகன்று முக்தியடைவோம்.

ஞானமும் முக்தியும்

ஞானத்தால் மட்டுமே முக்தியடைய முடியும் என்பது வேதாந்தத்தின் ஆரம்ப பாடம். ஞானமே முக்தியென்பதுதான் உண்மை. நான் மனிதன் என்ற அறியாமைதான் நம் துன்பங்கள் அனைத்திற்கும் அடிப்படைக்காரணம். நான் பரமன் என்னும் ஞானம் ஏற்பட்ட அதே நொடியில் துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். ஏனெனில் ஆனந்தமயமான பரமன் துன்பப்படுவதற்கு வாய்ப்பேயில்லை.

இப்பொழுது மனிதனாக இருக்கும் நான் முயற்சி செய்தால் பரமனாக மாறலாம் என்பது வேதத்தின் மையக்கருத்தாக இருக்குமானால் இந்த அறிவு ஏற்பட்டவுடன் அதை செயல்படுத்தி பரமனாக மாற வெகுகாலம் ஆகலாம். என்றுமிருக்கும் பரமன் நீதான் என்ற அறிவு ஏற்படுவதற்கும் முக்தியடைவதற்கும் காலதாமதம் இருக்க முடியாது. ஏனெனில் முக்தியடைவது ஒரு நிகழ்வு அல்ல. உண்மை நிலையை உணர்தலே முக்தியடைவது. எனவேதான் நான் பரமன் என்ற பரமரகசியத்தை கேட்டபின் அதை புரிந்துகொள்ள பல காலம் முயற்சி செய்ததன் பலனாக ஞானம் ஏற்படும். ஞானம் ஏற்பட்ட அதேகணத்தில் முக்தியடைவோம்.  

ஞானம் ஒன்றே

பரமன் ஒருவனே. எனவே நான் பரமன் என்கிற ஞானமும் ஒன்றுதான். மனங்கள் வேறுபடுவதால் ஞானம் பெற செய்யவேண்டிய முயற்சி மற்றும் ஆக வேண்டிய காலம் ஆகியவை வேறுபடலாமேதவிர ஞானத்தில் வேறுபாடு ஏதுவும் இருக்க முடியாது. கணிதம், அறிவியல் போன்ற துறைகளில் ஒருவரின் அறிவு மற்றவரின் அறிவை விட உயர்ந்தோ தாழ்ந்தோ இருக்கலாம். அது போல் வேதம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை போன்ற ஆன்மீக நூல்களை பற்றிய அறிவு கூட வேறுபடும். ஆனால் சொல்லுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்ட பரமன் நான் என்பது சாதாரண புத்தகஅறிவு அல்ல. வேதம் முழுவதையும் அர்த்தம் புரிந்து மனப்பாடம் செய்தால் கூட ஞானம் ஏற்படாமல் இருக்கலாம். ஞானம் என்பது திடீரென உதிப்பது. அது பலருக்கு முறையாக வேதத்தை படிக்கும்பொழுது ஏற்படும். ஒரு சிலருக்கு எவ்வித முயற்சியுமின்றி தானாக ஞானம் ஏற்படலாம். பரமன் எவ்வித குணங்களும் அற்றவன் என்பதால் நான் பரமன் என்று உணர்ந்து கொண்ட இருவரின் ஞானத்தில் எவ்வித வித்தியாசமும் இருக்க முடியாது. இடம், காலம், காரணம், பொருள், கர்மம், கர்மபலன், பிறவிச்சுழல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட பரமன் ஒருவனே. எனவே நான் பரமன் என்ற ஞானம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

முக்தி ஒன்றே

இவ்வுலகம் மாயை என்ற ஞானம் அனைத்து துன்பங்களையும் ஒரே கணத்தில் பொய்யாக்கிவிடுவதால் முக்தியும் ஒன்றே. நான் பரமன் என்பதை அறிந்தாலும் எனது வைரமோதிரம் தொலைந்தால் துக்கப்படாமல் இருக்க முடியாது என்பவர் ஞானம் பெற இன்னும் பல காலம் ஆகலாம். இந்த உலகம் இயங்குவதற்கே நான்தான் ஆதாரம் என்று உணர்ந்த ஞானி ஒரு மனதின் மாறுதல்களை குறித்து வருத்தப்படுவதில்லை. நான் பரமன் என்பது ஏதோ ஒரு மாதிரி புரிந்திருப்பதால் துக்கம் சிறிது குறைவாக இருக்கிறது என்றோ போகப்போக நான் பரமன் என்பதை முழுமையாக புரிந்துகொண்டவுடன் துக்கம் முழுவதும் மறைந்துவிடும் என்றோ கூறுவது தவறு. நான் பரமன் என்பது புரிந்தவர்கள் ஞானிகள். புரியாதவர்கள் அஞ்ஞானிகள். அரைகுறை ஞானிகள் என்று யாரும் கிடையாது. ஞானிகள் அனைவரும் முழுமையாக துன்பத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள்.

படிப்படியாக அதிகமாகும் அறிவு ஞானமாக மலரும் அதே கணத்தில் முழுமையான முக்தி ஏற்படும். எனவே ஞானத்திலும் முக்தியிலும் எவ்வித பாகுபாடும் கிடையாது.

ஞானிகளில் வேறுபாடு

ஞானம் ஒன்று என்பதால் ஞானத்தின் அடிப்படையில் ஞானிகளுக்கிடையே எந்த வேறுபாடும் கிடையாது. மனித மனங்கள் வேறுபடும் என்பதால் அறிவுத்திறன் மற்றும் செயல்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஞானிகளிடையே வேறுபாடு இருக்கலாம். ஏசு கிருஸ்து, சத்யசாய்பாபா, இரமண மஹரிஷி, ஓஷோ, நிசார்கதத்த மஹராஜ், இராமகிருஷ்ணர், கிருஷணமூர்த்தி ஆகிய அனைவரும் ஞானிகளே. புகழ், பணம், அறிவுத்திறன் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவர் மற்றவரைவிட சிறந்தவரா என்ற ஆராய்ச்சியில் எவ்வித அர்த்தமும் இல்லை.

பொதுவாக நம்மிடையே வாழ்ந்துவரும் மனிதர்களை ஞானிகளாக அடையாளம் கண்டுகொள்வதில்லை. மரணமடைந்த பின்தான் ஒருசில ஞானிகள் சரித்திரபாட புத்தகத்தில் இடம்பிடிக்கிறார்கள். புத்தர், விவேகானந்தர், இரமணமஹரிஷி போன்றவர்களுக்கு இணையான ஞானிகள் இன்றுபலர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள். ஞானத்தில் வேறுபாடு ஏதும் இல்லை என்பதால் வேதம் படிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களில் தினமும் ஒருசிலராவது ஞானம் பெற வாய்ப்பு இருக்கிறது என்ற உண்மையை பொதுமக்கள் புரிந்து கொள்வதில்லை.

அதிசய சம்பவங்கள் நிகழ்வது அல்லது நிகழ்த்துவது, அசாதாரணமான முறையில் பிறப்பது, மந்திரத்தால் நோய்களை குணப்படுத்துவது ஆகியவற்றிற்கும் ஞானம் பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஞானி என்ற பட்டத்தை பெற குறைந்தது தியானம் செய்ய தெரிந்தவராய் இருக்கவேண்டும் என்ற அவசியம் கூடகிடையாது. மந்திர தந்திரங்கள் செய்பவர்கள் எல்லோரும் ஞானிகள் அல்ல. ஞானிகள் எல்லோரும் அசாதாரண மனிதர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. நான் பரமன் என்ற ஞானத்தை பெற்று வாழ்வின் அனைத்து துன்பத்திலிருந்தும் விடுதலை பெற்ற அனைவரும் ஞானிகளே.

ஒருவர் உண்மையில் ஞானியா என்று மற்றவர்களை பற்றி ஆராய்பவர் ஞானியாக வாய்ப்பு மிகவும் குறைவு. தவறாகவே இருந்தாலும் உயிருடன் இருப்பவர்களை ஞானிகள் என்று சுட்டிக்காட்டினால் நாமும் ஞானம் பெறலாம் என்று நம்பிக்கை வளரும். புத்தருக்கு சமமான பத்து ஞானிகள் ஒவ்வொரு ஊரிலும்  தற்பொழுது வாழ்ந்துகொண்டிருப்பது சாத்தியம் என்ற உண்மையை உணர்பவர்கள் மட்டுமே ஞானம் பெறுவார்கள். உல்லாசப்பயணம் செல்பவர், திரைப்படம் பார்ப்பவர் போன்றவர்கள் ஞானிகளாக இருக்க முடியாது என்பது தவறான கருத்து.

ஞானியும் மற்ற அறிஞர்களும்

கணிதம், அறிவியல் போன்ற மற்ற துறையினைச்சேர்ந்த அறிஞர்களைப்போல வேதத்தின் சாரத்தை அறிந்து தெளிந்த ஞானியும் ஒரு சாதாரண மனிதனே. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கறுப்பு உடையும் சதுரதொப்பியும் அணிந்து கொண்டதால் மனிதர்கள் மாறிவிடமாட்டார்கள். அது போல நான் பரமன் என்பது புரிந்தவுடன் ஞானியின் தலையின் பின் ஒரு ஒளிவட்டம் தோன்றிவிடாது. தீவிர சிந்தனையால் அவர் மனம் பண்பட்டிருந்த காரணத்தாலேயே குளியலறையில் திடீரென்று ஆர்க்கிமிடீஸ் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். பலகாலம் தொடர்ந்து முயற்சிசெய்ததாலேயே திடீரென்று புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் உதித்தது. நான் பரமன் என்பதன் பொருளை தீவிரமாக ஆய்ந்தால் யார் வேண்டுமானாலும் ஞானிகளாகி முக்தியடையலாம்.

எவனொருவன் பரமனை அறிகிறானோ அவன் பரமனாகவே மாறிவிடுகிறான் என்றும் பந்தப்படுத்தும் இருதையமுடிச்சுக்கள் அவனுக்கு கழன்றுவிடுவதால் அவனுக்கு சாகாவரம் கிடைக்கிறது என்றும் முண்டக உபநிஷத் மந்திரம் (3.2.9) கூறுகிறது.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உணர்வு இருக்கிறது என்பது தவறான அறிவு. உணர்வு என்னும் ஒரே பரமன் பல உடல்களுடன் இருக்கிறான் என்பதே சரியான ஞானம். உடல் அமைப்பின் அடிப்படையில் உயிரினங்களை பறவை, மிருகம் என்று பிரிக்கலாம். மனிதன் என்ற உயிரினம் ஒன்றுக்குத்தான் தான் பரமன் என்பதை அறிந்துகொள்ளும் திறன் உள்ளது. அனைத்து மக்களுக்கும் இந்த திறன் இருப்பினும் ஒருசிலர் மட்டுமே அந்த ஞானத்தை அடைகிறார்கள். நான் பரமன் என்னும் இந்த பரமரகசியம் புதிதாக எதையும் உண்டாக்குவதோ அல்லது எதையும் மாற்றுவதோ கிடையாது. அனைத்து உயிரினங்களும் பரமனே என்பதால் எவன் இந்த உண்மையை அறிந்துகொள்கிறானோ அவன் ஞானி.

இராமன், கிருஷ்ணன், புத்தர், ஏசு, இரமணர் ஆகியோர் சாதாரண மனிதர்களே. மிருகம் போல் இருக்கும் மனிதன் கடவுளாக மாறவேண்டும் என்பது வேதத்தின் ஆரம்பபாடம். மிருகம் உட்பட அனைத்தும் கடவுளே. ஒன்றாக இருக்கும் பரமன் பலவாக தோன்றும் இந்த உண்மையை அறிந்து கொண்டால் யாரும் யாராகவும் மாற வேண்டிய அவசியமில்லை என்று புரியும். என் உடலும் மனதும் மாயையின் ஒரு பகுதி என்றும் நான் பரமன் என்றும் உணர்ந்த ஞானிகள் முக்தியடைந்தவர்கள்.


ஜடமான உடல் நான் அல்ல என்பது வேதாந்தத்தின் ஆரம்ப பாடம். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களும் நான்தான் என்று அறிந்துகொள்வது இறுதிப்பாடம். பார்ப்பவனும் பார்க்கப்படுபவையும் ஒன்றே. நான் பரமன் என்பது உண்மையில் புரியும் பொழுது என்னைத்தவிர வேறு எதுவுமில்லை என்பதும் புரிந்துவிடும். நான் அனந்தமானவன், ஆனந்தமானவன், உணர்வு மயமானவன், இவ்வுலகம் என்னும் மாயா நாடகம் நடைபெற ஆதாரமாக இருப்பவன் என்ற ஞானம் பெற்றவர்கள் முக்தியடைந்தவர்கள். 

முடிவுரை :

ஆனந்தம் உலகில் இருக்கிறது என்ற அஞ்ஞானத்துடன் பணம், பதவி, பொருள், புகழ் போன்றவற்றை அடையும் ஆசைகளினால் உந்தப்பட்டு செயல்படும் மனிதன் புதை மணலில் சிக்கியவன் போல தொடர்ந்து வாழ்வில் போராடுகிறான். அவனை திசைத்திருப்பி துன்பகரமான வாழ்விலிருந்து விடுதலைபெற்று இன்பமுடன் வாழ இறைவனை சரணடைய வேண்டும் என்று வேதம்  முதலில் உபதேசிக்கிறது. முக்தி வேண்டும் என்று கடவுளின் துணையை நாடும் மனிதனுக்கு படிப்படியாக வேதம் உண்மையை போதிக்கிறது. கடைசியில் நாம் என்றும் இருக்கும் ஆனந்த மயமான பரமன் என்றும் நம்மை மனிதன் என்று நினைத்துக்கொண்டிருப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டி பிறவிச்சுழலிலிருந்து நம்மை விடுதலை செய்கிறது. கயிற்றால் கை கட்டப்பட்டிருப்பது போல கனவுகண்டு அழும் குழந்தையின் துன்பத்தை தீர்க்க கயிறை அவிழ்ப்பதுபோல பாவனை செய்யும் தாய் போல உலக பந்தங்களில் கட்டுப்பட்டு துன்பமடைவதாக நினைக்கும் மனிதனுக்கு பிரார்த்தனை செய்வதன் மூலம் துன்பத்தை முழுவதுமாக அகற்றலாம் என்று வேதம் வழிகாட்டுகிறது. வேதம் காட்டிய வழியில் பயணம் செய்ய ஆரம்பித்தவர்களுக்கு படிப்படியாக மனம் செம்மையடைகிறது. அதன் பின் ஆனந்தமயமான பரமனை உடலின் மரணம் பாதிக்காது என்ற அறிவை கொடுத்து வேதம் துன்பங்களிலிருந்து நமக்கு முக்தி கொடுக்கிறது.

உலகில் வாழும் அனைத்து மக்களும் முக்தியடைந்தவர்களே என்றாலும் அவர்களில் ஒரு சிலருக்குத்தான் இந்த இரகசியம் தெரியும். நான் பரமன் என்ற பரமரகசியத்தை அறிந்தவர்கள் ஞானிகள். உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் எவ்வித பந்தத்திலும் கட்டுப்படாது முக்தியடைந்தவர்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் அறிவார்கள். மற்றவர்கள் இந்த உண்மையை அறிந்துகொள்ளாமல் இந்த உலகம் துன்பத்தைத்தருவது என்ற தவறான எண்ணத்துடன் எனக்கு பிறவா வரம் வேண்டும் என்று ஆண்டவனிடம் மன்றாடி கொண்டிருக்கிறார்கள். இந்த அறியாமை ஞானம் பெற்றால்தான் நீங்கும். பலகாலம் முயன்றாலும் இந்த ஞானத்தை அடைய முடியாமல் போகலாம். ஆனால் நான் பரமன் என்ற ஞானம் இல்லாவிட்டாலும் அனைத்து மக்களும் என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன் என்ற உண்மை மாறிவிடாது. எனவே இந்த உண்மையை உணர்ந்த அனைவரும் உடனே முக்தியடைகிறார்கள்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. அறிவின் முடிவான வேதாந்தம் தரும் ஞானம் பற்றிய இறுதிக்கருத்துக்களை விளக்கிய இந்தப்பாடத்துடன் மூன்றாம் அத்தியாயம் முற்றுப்பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. ஞானம் பெறுவதற்கும் முக்தியடைவதற்கும் என்ன வித்தியாசம்?

2. ஞானத்திற்கும் முக்திக்கும் என்ன வித்தியாசம்?

3. ஞானம் ஒன்றே என்பதை நிரூபிக்கவும்.

4. முக்தி ஒன்றே என்பதை நிரூபிக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1. முக்தியடைந்த மக்கள் எல்லோரும் ஞானம் பெற்றவர்களா?

2. நான் ஞானம் பெற்றால் விவேகானந்தருக்கு சமமானவன் ஆகிவிடுவேனா?

3. எனக்கு பரமரகசியம் தெரியும். ஆனாலும் அடிக்கடி துன்பத்திற்கு ஆளாவதற்கு காரணம் என்ன?

4. வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத பரமனை மனதின் துணையின்றி எப்படி அறிந்து கொள்ள முடியும்?

5. நான் மாணவன் என்று சொல்வதற்கும் நான் பரமன் என்பதற்கும் என்ன வேறுபாடு?

Saturday, March 26, 2011

Lesson 152: Time taken for enlightenment (Brahma Sutra 3.4.51)

பாடம் 152: ஞானம் பெற தேவையான காலம்
பாடல் 476 (III.4.51)

ஞானம் பெற இருக்க வேண்டிய தகுதி, செய்ய வேண்டிய முயற்சிகள், நீக்க வேண்டிய தடைகள் ஆகியவற்றை விளக்கி ஞானம் பெற எவ்வளவு காலம் ஆகும் என்ற தகவலை இந்தப்பாடம் கொடுக்கிறது.

ஞானம் பெறுவது என்றால் என்ன?

வரைபடத்தில் தென்படும் மூதாட்டியின் முகத்தை வேறு ஒரு கோணத்தில் இளம் பெண்ணாக பார்க்கலாம் என்று கூறிய நண்பனின் வார்த்தையை நம்பி முயற்சி செய்தபின்கூட மூதாட்டி மறைந்து இளம்பெண் தென்படவில்லை என்பவரின் நிலைதான் நீ உன்னை பரமனாக அறியவேண்டும் என்ற குருவின் உபதேசத்தை ஏற்று ஞானம் பெற முயல்பவரின் நிலையும். மூதாட்டியின் கண்ணை இளம் பெண்ணின் காதாக நினைத்து படத்தைப்பார் என்ற நண்பனின் யோசனையை ஏற்று படத்தை ஆராய்வது போல் ஆசிரியரின் அறிவுரைகளின் படி நான் யார் என்று ஆராய்ந்தால் எந்த தருணத்திலும் பரமனாக மாறிவிடலாம்.

மூதாட்டி ஒரு இளம்பெண் என்ற தகவலை அறிந்த பின் படத்தில் இளம்பெண்ணை பார்க்க முடிவதுபோல் நீ பரமன் என்ற ஆசிரியரின் உபதேசத்தை ஆராய்ந்து நம்மை நாம் பரமன் என்று உணர்வதுதான் ஞானம் பெறுவதாகும்.

இளம்பெண்ணை பார்த்தபின் கூட மறுபடியும் அவள் மறைந்து மூதாட்டி மட்டுமே நம் கண்களுக்கு தென்படலாம். அதுபோல நான் பரமன் என்ற ஞானத்தைப்பெற்ற பின் கூட நம்மை நாம் ஒரு அற்பமனிதனாக பார்க்க நேரலாம். அதில் தவறில்லை. பெற்ற ஞானம் மறைந்துவிடாது. ஒருமுறை இளம்பெண்ணை பார்த்தபின் மூதாட்டியின் முகத்தை இளம்பெண்ணாக மாற்றிப்பார்க்க வெகுநேரம் ஆகாது. அது போல மனிதன் என்ற நிலையிலிருந்து பரமனாக மாற வெகுநேரம் ஆகாது. ஆனால் ஒருமுறையாவது இவ்வுலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்றும் உண்மையில் இருப்பது உணர்வாகிய நான்மட்டும்தான் என்றும் உணர்வதுதான் ஞானம் பெறுவது. ஞானம் பெற்றபின் அனைத்து கேள்விகளும் மறைந்துவிடும். இளம்பெண்ணின் கழுத்து எங்கேயிருக்கிறது என்று கேட்டால் நண்பனைத்தேடி ஓடாமல் நம்மாலேயே காட்டிக்கொடுக்க முடிவது போல் கடவுளை காட்ட முடியுமா என்று யாரேனும் கேட்டால் குருவை தேட வேண்டிய அவசியம் இருக்காது.

ஞானம் பெறுவது எளிது

வேண்டிய தகுதிகளுடன் முறையாக வேதத்தைப்படித்தால் ஞானம் பெறாமல் இருக்க முடியாது. ஞானம் பெற்றபின் இதைப்புரிந்துகொள்வதற்கு இவ்வளவு நாள் எடுத்துக்கொண்டோமே என்ற வெட்கம் ஏற்படும். இவ்வளவுதானா இல்லை இதற்குமேல் ஏதாவது செய்யவேண்டுமோ என்ற சந்தேகம்கூட ஏற்படலாம். ஞானம் பெறுவது மிகவும் எளிதான காரியம் என்பது ஞானத்தைப்பெற்ற பின்தான் தெரியவரும். ஆகவே ஞானத்தை பெற முயல்பவர்களின் பார்வையில் அது பல பிறவிகளில் முயற்சி செய்யவேண்டிய கடினமான காரியம் என்றுதான் தோன்றும்.

பரமனைப்பற்றி கேள்விப்படவே பலருக்கு வாய்ப்பதில்லை. கேள்விப்பட்டாலும் புரிந்துகொள்ள மிகப்பலரால் முடிவதில்லை. தானும் புரிந்துகொண்டு மற்றவர்களும் புரிந்துகொள்ளும்படி திறமையுடன்  சொல்லிக்கொடுக்ககூடிய ஆசிரியன் வெகு அபூர்வம். சொல்வதை கேட்டு பரமனாகவே மாறிவிடும் மாணவனும் அபூர்வம் என்று கதாஉபநிஷத் மந்திரம் ஒன்று (1.2.7) கூறுகிறது.

எனவே ஞானம் பெறுவது எளிதா அல்லது கடினமா என்பது மாணவன் மற்றும் அவனது ஆசிரியர் ஆகிய இருவரது திறமையை பொறுத்து தீர்மானிக்கப்படும். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பட்டபடிப்பை முடிப்பது கடினம். மழலையர் பள்ளியில் வேலைசெய்யும் தகுதி மட்டும் இருக்கும் ஆசிரியர் அவனுக்கு அமைந்தால் அவனால் பத்தாம் வகுப்பையே தாண்ட முடியாமல் போகலாம்.

கணிதம், பௌதீகம் போன்ற உலகவியல் தொடர்பான அறிவைப்பெறுவதில் கூட மாணவன் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவரின் தகுதிகள் முக்கியம் என்றாலும் வேதம் கூறும் ஞானம் இவற்றிலிருந்து வேறுபட்டது. உலகில் உள்ள அனைத்து புத்தகங்களும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் கருத்தை மாணவர்களுக்கு அறிவிக்க உதவும் கருவிகள் மட்டுமே. அறிவை ஆசிரியர்களோ புத்தகங்களோ புதிதாக உற்பத்தி செய்வதில்லை. புவியீர்ப்பு சக்தியை பற்றிய அனைத்து அறிவும் அழிந்து விட்டாலும் கூட நாளை மீண்டும் ஒரு மாம்பழம் கீழே விழ ஒரு மாதவன் அதைப்பார்த்து அதே அறிவை மீண்டும் உலகுக்கு அளிக்கலாம். மனித அறிவுக்கு அப்பாற்பட்ட உண்மைகளை தரும் வேதமும் அதை சொல்லித்தரக்கூடிய ஆசிரியர்களும் இல்லையென்றால் யாராலும் ஞானத்தை அடைந்து முக்தியடைய முடியாது. எனவே வேதம் பயின்ற ஆசிரியரின் உதவி ஞானம் பெற மிக அவசியம்.

உலகில் உள்ள பொருள்களை ஆய்ந்து அறிவதை அறிவு என்றும் அறிபவனை அறிந்துகொள்வதை ஞானம் என்றும் வகைப்படுத்தியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அறிவு முடிவில்லாதது. எந்த ஒரு துறையிலும் அறியவேண்டிய அனைத்தையும் அறிந்து இனி அறியவேண்டியது எதுவுமில்லை என்ற நிலைக்கு யாராலும் வரமுடியாது. ஆனால் ஞானம் என்பது இறுதியானது. பரமனை முழுவதும் அறிந்தவர்கள் இனி அறியவேண்டியது எதுவும் இல்லை. எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அதை அறியவேண்டும் என்று சாந்தோகிய மந்திரம் 6.1 கூறுகிறது.  அப்படிப்பட்ட முடிவான அறிவை ஞானம் என்று குறிப்பிடுகிறோம். இந்த ஒரு சிறப்பைத்தவிர ஞானத்திற்கும் அறிவிற்கும் வேறு எந்த வேற்றுமையும் கிடையாது. ஞானம் என்றால் தியானம் செய்வதன் மூலம் வரும் அல்லது குருவின் அருள்பார்வை நம் மீது விழுந்தால் வரும் என்பது போன்ற தவறான கருத்துக்கள் மாணவனை திசைதிருப்பக்கூடும். வார்த்தைகளால் விளக்கப்படமுடியாத பரமனை அறிந்துகொள்வது ஆசிரியர் விளக்கிய எளிதான கணக்கின் அடிப்படையில் கடினமான வீட்டுப்பாடத்தை செய்வதுபோல்தான். வகுப்பில் நடத்தும் பாடம் புரியவில்லையென்றால் தனியாக ஆசிரியரின் வீட்டிற்கு சென்று சிறப்பு பயிற்சியின் மூலம் புரிந்து கொள்ள முயலலாமே தவிர பூஜை அறையில் அமர்ந்து தியானம் செய்வதால் அறிவு ஏற்பட்டுவிடாது. பரமன் யார் என்கிற ஞானமும் மற்ற அறிவைப்போல நமது ஐம்புலன்கள் மூலம் தகவல்களை திரட்டி மனதுக்குள் அவற்றை ஆராய்வதன் மூலம் மட்டுமே ஏற்படும்.

மற்றபாடங்களையாவது ஆசிரியரின் துணையில்லாமல் தானே படித்து அறிந்து கொள்ளலாம். ஆனால் நான் யார் என்ற ஞானத்தை சுயமுயற்சியால் மட்டும் அடையவே முடியாது. காட்டுப்பாதையில் பறவைகளின் இனிமையான கானத்தை கேட்டபடி பயணம் செய்யும்பொழுது யாரேனும் நைட்டிங்கேல் பறவையின் குரலை கேட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் அது எப்படி கத்தும் என்பது நமக்குத்தெரியாத காரணத்தால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். அந்தப்பறவை கத்தும்பொழுது இதுதான் நைட்டிங்கேலின் ஒலி என்று சொல்லி கொடுத்தால்மட்டுமே அதை நாம் ஏற்கனவே கேட்டிருக்கிறோம் என்பதை உணர்வோம். அதுபோல நான் பரமன் என்ற அனுபவம் எப்பொழுதும் நம்முடன் இருந்தாலும் அதுதான் பரமன் என்று காட்டிக்கொடுக்க ஒரு ஆசிரியரின் துணை நிச்சயம் தேவை. எனவே ஆசிரியரின் துணையுடன் ஞானம் ஏற்படும் விதம் பற்றி அறிந்தவர்கள் தீவிர முயற்சி செய்தால் ஞானம் எளிதில் ஏற்படும்.

மூன்று வகை ஆசிரியர்கள்

தன் ஆசிரியர்களிடமிருந்து முறையாக வேதத்தை பயின்றதன் மூலம் ஞானத்தை பெற்றவர்களால் மட்டுமே மற்றவர்களுக்கு சரியான வழியை காட்டமுடியும். இந்த உயர்வகை ஆசிரியரை அடைந்தவர்கள் விரைவில் ஞானம் பெற்றுவிடுவார்கள்.

வேதத்தை சரியாக கற்றபின்னும் ஞானம் அடையாமல் தான் கற்றதை சரியாக மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத்தெரிந்த ஆசிரியர்கள் இரண்டாவது வகை. இவர்களிடம் பயிலும் மாணவர்கள் ஞானத்தை அடைவது சிறிது கடினம் என்றாலும் முடியாத காரியமல்ல.

ஒரு மன்னன் காட்டுக்கு வேட்டையாட சென்றபொழுது சுவையான உணவை உண்டு இனிமையாக அரண்மனையில் வாழும் தன் கூண்டுக்கிளியை பற்றி அவன் அங்கிருந்த கிளிகளுக்கு பெருமையுடன் விளக்கினான். அதைக்கேட்டவுடன் மரத்தில் அமர்ந்திருந்த கிளிகளில் ஒன்று இறந்து கீழே விழுந்தது. ஒன்றும் புரியாமல் அரண்மணைக்குத்திரும்பிய அரசன் தன் கூண்டுக்கிளியிடம் நடந்ததை நடந்தபடி கூறினான். அதைக்கேட்டவுடன் அந்தக்கிளியும் செத்து கீழே விழுந்தது. மன்னன் மிகுந்த சோகத்துடன் கூண்டைத்திறந்து கிளியை வெளியே எடுத்தவுடன் அது பறந்து விட்டது. மன்னனுக்கு புரியாவிட்டாலும் துன்பத்திலிருந்து விடுதலை பெறும் வழியை தெளிவாக அவன் வாயால் கேட்ட புத்திசாலியான கிளி விடுதலை அடைந்தது போல வாழ்க்கைத்துன்பத்திலிருந்து விடுதலைபெறும் விதம் வேதத்தில் கூறப்பட்டபடி ஆசிரியரிடம் கேட்கும் புத்திசாலி மாணவனால் முக்திபெறமுடியும். ஆனால் ஏதேனும் சந்தேகம் கேட்டால் தப்பிப்பது கடினம்தான். எனவே இந்த வகை ஆசிரியர்கள் தன்னால் வெல்ல முடியாத பரிசுகோப்பையை தன் மகனை பயிற்றுவித்து அவனை வெற்றிபெற வைக்க முயலும் தந்தையைப்போன்றவர்கள்.

முன்பிறவியில் செய்த முயற்சியால் ஆசிரியரிடம் வேதத்தைப்படிக்காமலேயே முக்திபெற்ற ஞானிகள் வழிதெரியாமல் பாதைகளில் தடுமாறும் அனுபவமில்லாமல் விமானம் மூலம் வீடுபோய் சேர்ந்தவர்கள். இவர்களை நாடுபவர்களுக்கு இவர் ஆசீர்வாதம் செய்யலாமேதவிர அறிவை வழங்கமுடியாது. அவர் வாயிலிருந்து வரும் அத்தனை வாக்கியங்களும் முழுமையான ஞானத்துடன் முக்தியடைந்தவர் என்பதை காட்டிக்கொடுத்தாலும் அவற்றைக்கேட்டு யாராலும் ஞானம் பெற முடியாது. எனவே இந்த மூன்றாவது வகை ஆசிரியரின் உபதேசங்கள் பெற்ற ஞானத்தில் நிலைபெற உதவுமேதவிர ஞானம் பெற உதவாது.

ஆசிரியர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும்  மரணமடைந்தபின் அவரால் யாருக்கும் ஞானம் வழங்கமுடியாது. மேலும் மற்ற பாடங்களில் வகுப்பில் இருக்கும் முப்பது மாணவர்களும் ஒரே சமயத்தில் ஆசிரியரிடமிருந்து அறிவைப்பெறுவது போல் ஞானத்தைப்பெற முடியாது. தனியாக ஆசிரியரிடம் தன் சந்தேகங்களை கேட்டு அவர் தனக்குமட்டும் கேட்கும்படி சொல்லும் பதில் மூலம்தான் ஞானம் பெற முடியும். ஏனெனில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்கள் ஒரே மாதிரி இருக்காது. ஒருவருக்கு தரும் பதில் மற்றவரின் முயற்சிக்கு தடையாய் இருக்கும் என்பதால் ஆசிரியரை தனிமையில் அணுகினால்தான் சரியான பதில் கிடைக்கும்.

திறமையான ஆசிரியரால் கூட தன் சொந்த புத்தியை மட்டும் உபயோகித்து யாருக்கும் முக்தியளிக்க முடியாது. வேதத்தை முறையாக படிப்பது மிக அவசியம். விளம்பரத்தில் நடிக்கும் நடிகை பார்வையாளர்களின் கவனத்தை விற்கவேண்டிய பொருளின் பக்கம் திருப்பாமல் தன்னிடம் ஈர்ப்பது போல் தவறான குரு சீடர்களின் கவனத்தை வேதத்தின் பக்கம் திருப்பாமல் அவர்களை தன்னை பின்பற்றும்படி செய்வார். சரியான ஆசிரியர்கள் இந்த தவறை செய்யாவிட்டாலும் அவர்களின் சீடர்கள் வேதத்தை படிக்காமல் குருவின் புகழை பரப்புவதில் நேரத்தை வீணடித்தால் அவர்கள் முக்தியடையும் வாய்ப்பு மிகவும் குறையும்.

இறுதித்தேர்வில் தோல்வியடைந்து மறுபடியும் அதே வகுப்பில் படிக்க வரும் மாணவர்களின் கூட்டம் அதிகமானால் ஆசிரியரின் திறமையை சந்தேகிக்க நேரும். அதுபோல் பல வருடங்கள் தொடர்ந்து சீடர்களாய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் குருவின் போதனை பயனளிக்கவில்லை என்று பொருள். அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் தங்கள் பள்ளி ஆசிரியரிடம் நன்றியுணர்வுடன் இருந்தாலும் தங்கள் வேலையை விட்டுவிட்டு தினமும் ஆசிரியரிடம் போய் ஆசீர்வாதம் பெறுவதில்லை. ஞானம் பெற்றவுடன் குருவை சந்திக்கவேண்டிய அவசியமேயில்லை.

அறிவை கொடுத்து அறியாமை இருளை நீக்காமல் ஆசிர்வாதம் மட்டும் அளிப்பவர் குரு அல்ல. வாழ்வில் துன்பத்தை முழுவதுமாக அகற்றுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வாழ்நாள் முழுவதையும் செலவு செய்வதில் பயனில்லை. எனவே ஞானம் கிடைக்க தான் செய்யும் முயற்சிகள் சரியானவையா என்பதை குருவிடம் கலந்தாலோசனை செய்தும் தன் குருவின் சகமாணவர்களின் உபதேசங்களை கேட்டும் விரைவில் ஞானம் பெறும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.  

ஞானம் பெற தேவையான தகுதிகள்

விதையின் தரம் நன்றாக இருந்தாலும் அது தரிசு நிலத்தில் விளையாது. அதுபோல வேதத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் தகுதியில்லாத மாணவனுக்கு அறிவை கொடுக்க முடியாது.

ஆசிரியர் முழுதுமாக ஒரு கருத்தை சொல்லித்தரும் வரை அவரிடம் கேள்விகள் எதையும் கேட்ககூடாது. கேட்ட கருத்தை மனதில் ஆய்ந்து அது புரியவில்லை என்றால் அதற்கு காரணம் தன் அறிவின் குறைபாடே தவிர ஆசிரியர் அல்ல என்ற பாவத்துடன் அவரை அணுகி கேள்வி கேட்கவேண்டும். ஆசிரியர் கூறுவது தவறு என்று நிரூபிக்கும் நோக்குடன் கேள்விகேட்பவர்கள் ஞானம் பெறமாட்டார்கள். பொழுதுபோக்கிற்காகவோ புகழுக்காகவோ வேதம் பயின்றால் பயனிருக்காது. துன்பத்தை அகற்றி முக்தியடைய வேண்டும் என்ற தாகத்துடன் ஆசிரியரை அணுகி தனக்கு சொல்லித்தருமாறு கேட்டு அவரிடம் முறையாக பயில்பவர்கள் மட்டுமே ஞானம் பெறுவார்கள்.

அரசன் காட்டுக்குசென்ற தன் நெருங்கிய நண்பரான மந்திரி திரும்பவில்லை என்று சோகத்தில் ஆழ்ந்திருந்தான். அவருக்கு வேண்டாதவர்கள் மந்திரி காட்டில் இறந்து விட்டதாகவும் பேயாக அங்கு உலாவுவதாகவும் கதைக்கட்டி விட்டார்கள். இதை முழுவதுமாக நம்பிவிட்ட அரசனின் முன் மந்திரி எதிர்பட்டால் பேயை கண்ட பயம் ஏற்படுமே தவிர நண்பரை சந்தித்த மகிழ்ச்சி ஏற்படாது. அது போல தனக்கு ஞானம் கிடைக்காது என்று உறுதியாக நம்புபவர்களுக்கு ஞானம் ஏற்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

ஞானம் படிப்படியாக ஏற்படாது. அறிவு படிப்படியாக வளந்து ஞானமாக மலரும். நான் பரமன் மற்றும் உலகே மாயை என்ற தொடர்களை வேதம் படிக்கத்துவங்கிய காலத்திலிருந்து கேட்டுகொண்டிருந்தாலும் அதன் உண்மையான பொருள் ஒரு நொடியில் தெரியவரும். மூதாட்டியின் முகத்தில் இளம்பெண்ணின் உருவத்தை தேடும்பொழுது அது கண், காது, கழுத்து என படிப்படியாக நம் கண்களில் தென்படுவதில்லை. பல நேரம் முயற்சிசெய்தவுடன் திடீரென்று அது தெரிவது போல ஞானம் திடீரென்றுதான் உதயமாகும். அந்த ஞானப்பார்வையுடன் உலகை பார்க்கும்பொழுது வேதம் கூறிய அனைத்து கருத்துக்களின் உண்மைத்துவத்தை நேரடியாக அறிவோம். உதாரணமாக ஞானம் பெற்றபின் மறுபிறவியில்லை என்று நமக்கே உறுதியாக தெரிந்து விடும். அதன்பின் வேதம் நமக்கு அவசியமில்லை.

ஞானம் பெற தடைகளாய் இருப்பவை

இவ்வுலகில் இன்பமாக வாழ்வது எப்படி என்பதன் வழிமுறைகளை கடவுள் நமக்கு வேதத்தின் மூலம் தந்திருக்கிறார் என்பதை நம்பாமல் மற்ற புத்தகங்களைப்போல் அதுவும் ஒரு கருத்தை நமக்குத்தருகிறது என்று நினைப்பது ஞானம் பெறுவதற்கு தடை. வேதம் உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் அன்று. ஃபிலாசபி என்ற ஆங்கில வார்த்தையை தத்துவம் என்று மொழிபெயர்ப்பது தவறு. ஏனெனில் தத்துவம் என்ற வார்த்தைக்கு உண்மை என்று பொருள். எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஒரு தனிமனிதன் தனக்கு தோன்றிய எண்ணங்களை கோர்வையாக வெளியிடும் கருத்துதான் ஃபிலாசபி. கருத்துக்கள் வேறுபடும் தன்மை உடையன என்பதால் காலம் என்றால் என்ன, அன்பு என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு முடிவான பதில் இதுதான் என்று அறுதியிட்டு தத்துவஞானிகளால் கூறவே முடியாது. வேதம் இதுபோல கருத்துக்களை கொண்டது அல்ல. அதில் கூறப்பட்ட அனைத்தும் உண்மைகள் என்பதை உணராமல் நான் பரமன் என்பது வேதத்தின் கருத்து என்ற நோக்கில் படிப்பவர்கள் ஞானம் பெற மாட்டார்கள்.

நான் யார் என்பதை அறிய உள்நோக்கி பயணம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் தியானம், உள்ளுணர்வு ஆகியவற்றின் மூலம் ஞானம் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். கண்களால் நம் முகத்தை நேரடியாக பார்க்க கண்ணாடி அவசியம். கண்ணாடியை பார்க்கும்பொழுது  கண்கள் நம்முடைய முகத்தைத்தான் பார்க்கின்றனவே தவிர கண்ணாடியை பார்ப்பதில்லை. அதுபோல் வேதம் நான் யார் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும் கண்ணாடி. அதை படிக்கும்பொழுது நாம் யார் என்பதைத்தான் ஆராய்ந்து அறிய முயல்கிறோம் என்பதை அறியாமல் வேதம் படிப்பவர்கள் ஞானம் பெறுவதில்லை.

வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்பதால் ஒரு தனி மனிதனுக்கு தேவையான பகுதிகளை சுட்டிக்காட்ட ஆசிரியரின் உதவி தேவை. வேதத்தை முறையாக பயின்ற ஆசிரியரால் கூட  மாணவனின் நிலையை அறிந்து கொள்ளாமல் அவனுக்கு உதவி செய்ய முடியாது. மாணவன் கேட்கும் கேள்விகள் மூலமாகத்தான் ஆசிரியர் அவனைப்பற்றி அறிந்துகொள்ள முடியும். எனவே ஏகலைவன் போல ஆசிரியரிடம் நேரடியாக கேள்விகேட்காமல் படித்தால் ஞானம் பெறமுடியாது. தேவைப்படும்பொழுதெல்லாம் ஆசிரியரிடம் தன் சந்தேகங்களை தெளிவு செய்துகொள்ளும் வாய்ப்பு இல்லாதவர்களால் முக்தியடைய முடியாது.

நமது ஐந்து புலன்கள் நம்மைச்சுற்றி ஒரு உலகம் உண்மையில் இருப்பதாக நமக்கு தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருப்பதால் அது மாயை என்ற ஞானம் ஏற்படுவது தடைபடுகிறது. உலகம் இருப்பதுபோல் காட்சியளிக்கும் மாயை என்ற வேதம் கூறும் உண்மையை அறிவியல் அறிஞர்கள் நிரூபித்தபின்னும் அனைவரும் உலகம் உண்மை என்ற அடிப்படையில்தான் அனுபவங்களைப்பெறுகிறார்கள்.

தடைகளை நீக்கும் விதம்

உலகம் மாயை என்றும் ஆனந்தமயமான நான் மட்டுமே உண்மை என்றும் வேதம் கூறும் கருத்தின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். புலன்கள் அறிவிக்கும் செய்திகளை வேதம் கூறும் உண்மையுடன் ஒப்பிட்டு இது பொய் என்று நமக்கு நாமே கூறிக்கொள்வது அவசியம். முடிந்தவரை நம்முடைய செயல்கள், உறவுகள், உடைமைகள் மற்றும் கடமைகள் ஆகியவற்றை குறைத்துக்கொண்டால் உலகம் உண்மை என்ற தவறான அறிவு மறைந்து ஞானம் தோன்ற வாய்ப்பு அதிகமாகும்.

முடிவுரை :

பசியை தீர்க்க உணவு உண்ண ஆரம்பித்தபின் எப்பொழுது பசி தீரும் என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. உண்பது ஒரு இனிமையான அனுபவமாய் இருப்பதுதான் இதற்கு காரணம். அதுபோல் ஞானத்தைப்பெற வேதம் படிக்க ஆரம்பித்தவர்கள் எப்பொழுது ஞானம் வரும் என்ற கேள்வியை பொதுவாக கேட்க மாட்டார்கள். வேதம் படிப்பது ஒரு இனிமையான அனுபவமாய் இருப்பதுதான் இதற்கு காரணம்.

உணவு சுவையாக இருக்கிறது என்று பசி தீர்ந்தபின்னும் தொடர்ந்து சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும். அதுபோல இனிமையான அனுபவம் என்று வேதத்தை படித்துக்கொண்டே இருக்ககூடாது. ஆனந்தமயமான பரமன் மட்டுமே உண்மை, மற்றதெல்லாம் மாயை என்ற வேதத்தில் கூறப்பட்ட ஒரே கருத்தை திரும்பத்திரும்ப படிப்பதில் பயனில்லை. வெவ்வேறு ஆசிரியர்கள் வேதத்தின் அடிப்படையில் உபதேசிக்கும் உண்மைகளை வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து ஆசிரியரிடம் கேள்விகள் கேட்டு கூடிய விரைவில் ஞானம் பெற முயல வேண்டும்.

நூற்றியெட்டு உபநிடதங்களை உள்ளடக்கிய நான்கு வேதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை மற்றும் இவற்றை ஆதாராமாக கொண்டு எழுதப்பட்ட நூல்கள் என ஆன்மீக நூல்கள் ஏராளமாக உள்ளன. இவையனைத்தையும் படித்து முடிப்பது நமது குறிக்கோள் அல்ல. ஞானம் பெறுவது மட்டும்தான் நம் நோக்கம்.

வித்யாரண்ய சுவாமிகள் ஞானம் பெற ஐந்து கோசங்களை ஆராயச்சொல்கிறார். தேங்காயின் மட்டை, ஒடு ஆகியவற்றை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுப்பது போல் உடல், மனம், பிராணன் என்று ஒவ்வொரு கோசத்தையும் ஆராய்ந்து இது நான் அல்ல என்று ஒதுக்கித்தள்ளி நான் பரமன் என்ற ஞானத்தைப்பெறவேண்டும். இதை செய்துமுடித்த பின்கூட என்னைக்கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுபவன் எனக்கு நாக்கு இல்லை என்று உரக்க கத்துபவனை போன்று பரிதாபத்துக்குரியவன் என்கிறார் வித்யாரண்யர்.

வேதத்தை படித்து தேற ஓரிரு வருடங்கள் ஓயாமல் உழைத்தபின்னும் ஞானம் ஏற்படவில்லையென்றால் தொடர்ந்து தர்ம காரியங்கள் செய்வது, கடவுளை பிரார்த்திப்பது, வேதம் படித்து படித்ததை ஆராய்வது என்பது போன்ற ஆன்மீக செயல்களுக்காக அதிக நேரம் செலவழிக்ககூடாது. மாணவப்பருவத்தில் இருப்பவர்கள் தங்கள் முயற்சியை பகுதிநேர வேலையாக மாற்றிக்கொண்டு இல்வாழ்வை துவங்க வேண்டும். இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்ய அதிக நேரம் செலவிட்டு ஞானம் பெற செய்யும் செயல்களை குறைத்துக்கொள்ள வேண்டும். மனம் பக்குவப்பட்டபின் ஏற்கனவே செய்த முயற்சிகளின் பலனாக விரைவில் ஞானம் ஏற்படும்.

மனித மனங்கள் வேறுபடுவதால் ஞானம் கிடைக்க எவ்வளவு காலமாகும் என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. உயர்வகை ஆசிரியரின் துணையுடன் வேதம் படிக்க வாய்த்தவர்கள் ஆசிரியரிடம் முழுமையாக சரணடைந்து அவர் காட்டும் வழியில் பயணித்தால் மனம் தகுதி பெற்றபின் தானாக ஞானம் ஏற்படும்.


பயிற்சிக்காக :

1. ஞானம் பெறுவது என்றால் என்ன?

2. ஞானம் பெறுவது எளிதா அல்லது கடினமா?

3. மற்ற புத்தகங்களுக்கும் வேதத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

4. ஞானத்திற்கும் அறிவிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன?

5. ஞானம் பெற ஆசிரியரின் உதவி தேவை என்பதை விளக்குக.

6. மூன்று வகை ஆசிரியர்கள் யார்?

7. ஞானம் பெற ஆசிரியரை தனியாக அணுக வேண்டிய காரணம் என்ன?

8. விரைவில் ஞானம் பெறுன் வாய்ப்பை அதிகரிக்க செய்ய வேண்டிய இரு செயல்கள் என்ன?

9. ஞானம் பெற தேவையான தகுதிகள் யாவை?

10. ஞானம் பெற தடைகளாக இருப்பவை எவை?

11. தடைகளை நீக்க என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. ஆசிரியர் மற்றும் வேதம், இவ்விரண்டில் எது மிகவும் முக்கியம்?

2. ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இருக்க வேண்டிய உறவை ஆராய்க.

3. மாணவன் ஆசிரியரிடம் கேள்வி கேட்க வேண்டிய அவசியத்தையும் கேள்வி கேட்கவேண்டிய விதத்தையும் ஆராய்க.

4. ஞானம் பெற்றுவிட்டோம் என்று நமக்கு எப்படித்தெரியும்?

5. அத்வைதம், துவைதம் போன்றவை ஃபிலாசபிகளா?

6. மற்ற துறையில் உள்ள ஆசிரியர்களுக்கும் வேதம் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.