Showing posts with label Karma. Show all posts
Showing posts with label Karma. Show all posts

Thursday, February 10, 2011

Lesson 147: Renounced will not revert back to desires (Brahma Sutra 3.4.41-42)

பாடம் 147: துறந்தவர்கள் மீண்டும் ஆசைப்படமாட்டார்கள்
பாடல் 466-467 (III.4.41-42)

ஆசையே துன்பத்திற்கு காரணம். எனவே ஆசைகளை தவிர்க்க ஆசைபட வேண்டும். பற்றை துறந்தவர்கள் மனதில் ஏன் ஆசைகள் ஏற்படாது என்றும் ஆசைகள் இல்லாமல் அவர்கள் எவ்வாறு செயலாற்றுகிறார்கள் என்றும் விளக்கம் தருவதுடன் உலகே மாயை என்ற கருத்தையும் இந்த பாடம் விவரிக்கிறது.

ஒளி-ஒலி காட்சி

நான் பரமன் என்பதை சரியாக புரிந்து கொண்ட ஞானிகள் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஒளி-ஒலி காட்சி என்பதை உணர்வார்கள். இந்த தொடர்ந்த இயக்கத்தில் செயல்கள் என்று எதுவும் கிடையாது. எனக்கு தாகம் எடுத்ததால் எழுந்து சமையலறைக்கு நடந்து போய் பானையிலிருந்து தண்ணீர் எடுத்து குடித்தேன் என்பது நமது கற்பனையே தவிர உண்மையல்ல. ஒளிக்கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை மனதில் ‘நான் செய்தேன்’ என்ற ஒலியாக பதிவு செய்யும் மாயையின் பிடியில் இருக்கும்வரை நமக்கு உண்மை விளங்காது.

வாழ்க்கையை வாழ மனம் தேவையில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டவர்கள்தான் ஞானிகள். மனதில் ஏற்படும் எண்ணங்கள் ஒலிக்கதிர்களால் ஆனவை. ஒலி ஒளியைவிட மெதுவாக பயணிப்பது என்பதால் வாழ்வு என்னும் ஒளிக்காட்சியின் தாமதமான வர்ணணையை கொடுத்துக்கொண்டிருப்பதுதான் மனதின் வேலை. நான் நேற்று இதை செய்தேன், நாளை அதை செய்வேன் என்று மனதில் தோன்றும் எண்ணங்கள் நாம்தான் வாழ்வை வாழ்வதாக ஒரு கற்பனையை உருவாக்கியுள்ளன. ஒரு காரியத்தை செய்வதற்குமுன் அதை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுகூட இந்த கற்பனையின் ஒரு பகுதிதான் என்பதை ஞானிகள் அறிவார்கள். உடல் என்னும் ஒளிவடிவம் தண்ணீர் குடிப்பதுபோல் தோன்றும் காட்சி மனதில் ஒலியாக பதிவாவதை உணராதவர்கள் ‘நான் தண்ணீர் குடித்தேன்’ என்ற அறியாமையுடன் வாழ்கிறார்கள்.

இந்த அறியாமை மற்றும் ஞானம் ஆகிய இரண்டும் மனதில் உள்ள எண்ணங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் இரண்டுமே மாயை. முதலில் புரியாமல் இருந்தது இப்பொழுது புரிந்து விட்டது என்பதும் மாயை. எவ்வித மாற்றமும் இல்லாமல் ஆனந்தமயமாக உணர்வு உருவாக என்றும் இருக்கும் நான் மட்டும்தான் உண்மை.

பரமனை உண்மையில் அறிந்தவர்கள் ‘நான் பரமன்’ என்பது மனதில் தோன்றும் எண்ணம் என்றும் மனம், உடல் உள்ளிட்ட இந்த பிரபஞ்சம் முழுவதும் மாயை என்றும் அறிந்திருப்பார்கள். எனவே வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சியில் தாங்கள் எவ்வித செயல்களை செய்வதாகவோ செய்ய ஆசைப்படுவதாகவோ ஞானிகள் எண்ணிக்கொள்வதில்லை. எனவே ஞானிகளின் ஆசை என்பதும் அவர்களின் செயல்கள் என்பதும் அஞ்ஞானிகளின் விவாதத்திற்கு மட்டுமே உரியவை.

எண்ணங்கள் ஆசைகளாக மாறி மனிதனை செயல் செய்யத்தூண்டுகிறது என்று வேதாந்தத்தின் ஆரம்பபாடங்களில் படித்த அறிவை உதறித்தள்ளி நாம் ஆசை கொள்வதுமில்லை, செயல்கள் செய்வதுமில்லை என்ற உண்மையை உணர வேண்டும். ஏற்கனவே குடித்த தண்ணீர் வயிற்றுக்குள் அடையும் மாற்றங்களுக்கும் அது வியர்வையாக வெளியேறுவதற்கும் நாம் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. தாகம் ஏற்பட்டதால் கால்கள் பானையிடம் சென்று கைகள் தண்ணீரை வாய்க்குள் செலுத்தும் காட்சியை மட்டும் நான் செய்தேன் என்று எண்ணுவது தவறு. இந்த உண்மையை உணரும்வரை மக்கள் தன்னைப்பற்றிய அறியாமையுடனும் உலகப்பொருள்களின் தன்மையை பற்றிய தவறான அறிவுடனும் இருப்பதால் பொருள்கள் மீது ஆசை கொண்டு தொடர்ந்து துன்பமடைவார்கள்.

அனைவரும் பிறக்கும்பொழுது அறியாமையுடன்தான் பிறக்கிறார்கள். பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கும் கல்வி, பொதுஜனத்தில் முகம் தெரியாமல் இருந்தவனுக்கு மருத்துவன், பொறியாளன், வக்கீல் என்பது போன்ற தனியான அடையாளத்தை ஏற்படுத்தி தான் இவ்வுலகிலிருந்து வேறுபட்டவன் என்ற அகங்காரத்தை ஏற்படுத்துகிறது. தான் யார் என்ற அறிவைத்தரும் வேதபாடங்களை பயிலாமல் வாழ்க்கையின் அனுபவங்களை எதிர்கொள்வதால் ‘நான் செயல்களை செய்பவன் மற்றும் செயல்களின் பலன்களை அனுபவிப்பவன்’ என்ற அறியாமை தொடர்கிறது.

தோற்றம், மாற்றம் மற்றும் மறைவு என்ற கட்டுக்குட்பட்ட உடலையும் தொடர்ந்து மாறும் மனதையும் நான் என்ற சொல்லுக்கு பொருளாக கொள்வதால் நிரந்தரமான அமைதியும், குறையாத இன்பமும் உலகத்தில் செயலாற்றுவதன் மூலம் கிடைக்கும் என்று தான் செயல்களை செய்வதாக நினைப்பதற்கு மனிதன் ஒரு காரணத்தை கற்பித்துகொள்கிறான். குறைகள், அவற்றை நிறை செய்ய ஆசைகள், ஆசைகளை பூர்த்தி செய்ய செயல்கள் என்று அறியாமை மக்கள் மனதில் உறுதியாகிறது.

வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சி பின்வரும் படிக்கட்டுக்கள் வழியே வழிநடத்தி இறுதியில் செயல்கள் என்று எதுவுமில்லை என்று அவர்களுக்கு உணரவைக்கும்.

முதல் படி: உலகில் ஆனந்தம் இருக்கிறது

இரண்டு வயதில் பலூன் வேண்டும் என்று அடம்பிடித்து அது கிடைத்ததும் ஏற்பட்ட ஆனந்தம் அடுத்து அடுத்து அது வேண்டும் இது வேண்டும் என்று மக்களை கேட்க தூண்டுகிறது. ஒவ்வொருமுறையும் கேட்டது கிடைத்ததும் இன்பம் கிடைத்ததால் உலகத்தில் உள்ள பொருள்களில் ஆனந்தம் இருக்கிறது என்கிற தவறான அறிவு உறுதியாகிறது. எனவே இருபது வயதானதும் இவர் கிடைத்தால் வாழ்வு இன்பமயமாக இருக்கும் என்ற ஆசை உண்டாகிறது. அந்த ஆசை நிறைவேறிய சில வருடங்களுக்குள் அவரை விவாகரத்து செய்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்று தோன்றும்பொழுது உலகப்பொருள்களில் உண்மையில் இன்பம் இருக்கிறதா என்று ஆராய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அனுபவங்களை ஆய்ந்தறியும் அறிவாற்றல் ஒரு சிலருக்கே வாய்க்கிறது. இவர்கள் மட்டுமே அடுத்த படிக்கு முன்னேறுகிறார்கள். மற்றவர்கள் மனதில் உலகில் ஆனந்தம் இருக்கிறது என்ற தவறான எண்ணம் மரணம் வரை தொடர்கிறது.  

இரண்டாம் படி: உலகில் ஆனந்தம் இல்லை

தேடிய பொருள்களை பெறுவதனால் கிடைக்கும் இன்பம் நிலைப்பதில்லை. தன் கையில் இருப்பதைவிட அடுத்தவருக்கு கிடைத்தது சிறப்பானதாக தோன்றுகிறது. எனவே போதுமென்ற நிறைவு ஏற்படுவதேயில்லை. கிடைத்த பொருளை பேணிபோற்ற எவ்வளவு முயற்சித்தாலும் அது மாறி மறைந்து போகிறது. இது போன்ற துன்பம் கலந்த இன்பம்தான் பொருள்களிலிருந்து கிடைக்கிறது என்ற அறிவு ஏற்பட்டவுடன் அவற்றின் மீது ஆசை ஏற்படுவது குறையும்.

பணம், பதவி, புகழ், நண்பர்கள், குடும்பம் உள்ளிட்ட உலகத்தைச்சேர்ந்த எந்த பொருளிலும் இன்பம் சிறுதுகூட இல்லை. ஆனால் இவற்றில் இன்பம் இருக்கிறது என்று நினைத்து மக்கள் இவற்றை அடைய தொடர்ந்து உழைக்கிறார்கள். இந்த உழைப்பு நாளடைவில் அவர்களுக்கு இவற்றில் உண்மையில் இன்பம் இல்லை என்ற மனப்பக்குவத்தை ஏற்படுத்தும். இந்த மனப்பக்குவம் வந்தவுடன் உலகால் தர முடியாத நிறைவையும் இன்பத்தையும் கடவுளிடமிருந்து பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இவர்கள் அடுத்த படிக்கு முன்னேறுவார்கள்.

மூன்றாம் படி: நான்தான் ஆனந்தத்தின் ஒரே இருப்பிடம்

பணம் இன்பத்தை கொடுப்பதில்லை என்ற அறிவு கிடைக்க வெகுகாலம் ஆனது போல மதங்கள் கூறும் சடங்குகளைப்பின்பற்றி கடவுளின் கருணையால் முக்தி கிடைக்கும் என்று பலகாலம் முயன்றபின் ஒருசிலருக்கு வேதாந்தத்தை முறையாக படிக்க வாய்ப்பு கிடைத்து ஆனந்தத்தின் இருப்பிடம் தெரியவரும்.

எலும்புத்துண்டு வாயில் குத்தி வெளிவந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக நினைத்து மேலும் அதை கடிக்கும் நாய் சிறிது நேரத்தில் உண்மையை உணர்ந்து அதை துப்பிவிட்டு செல்வது போல தன் இயல்பான ஆனந்தத்தை உலகத்திலிருந்து பெறுவதாக நினைத்து அதன் பின் ஓடுவது சிறிது காலத்தில் குறைந்து பரமனைப்பற்றிய முழு அறிவை வேதம் படிப்பதன்மூலம் பெறுவார்கள்.

ஆனந்தமயமாகவும் அறிவுறுவாகவும் என்றும் இருப்பவன் பரமன்.

நெருப்பு தான் ஒளிர்வதுடன் மற்ற பொருள்களையும் ஒளிர்வித்து அவற்றை உஷ்ணப்படுத்தும் தன்மையை உடையது.  நீர் நெருப்பின் வெப்பத்தை மட்டும் எடுத்துகொள்ளுமே தவிர ஒளியை ஏற்றுக்கொள்ளாது. இரும்புத்துண்டு வெப்பத்துடன் தன்னை ஒளிர்வித்துக்கொள்ளும் தன்மையையும் நெருப்பிலிருந்து பெற்றுக்கொள்ளும். மரத்துண்டு நெருப்புடன் சேர்ந்து நெருப்பாகவே மாறி அதன் மூன்று குணங்களையும் முழுமையாக பெற்றுக்கொள்ளும். அது போல பரமனிடம் இருக்கும் இருத்தல்-உணர்தல்-ஆனந்தம் ஆகிய மூன்று தன்மைகளையும் முழுவதுமாக ஏற்றுக்கொண்டு பரமனாகவே மாறும் சக்தி மனிதனுக்கு மட்டுமே உள்ளது.

ஜடப்பொருள்கள் இருத்தலையும் மற்ற உயிரினங்கள் இருத்தல் உணர்தல் ஆகிய இரு தன்மைகளையும் பெற்று இவ்வுலகமாக நமக்கு காட்சியளிக்கின்றன. எனவே ஆனந்தம் உலகில் இல்லை என்றும் அதன் இருப்பிடமான பரமன் நான் என்றும் வேதாந்தத்தை முறையாக படித்தால் தெரியவரும்.

ஆனந்தம் நான் என்றாலும் அதை அனுபவிக்க ஒரு உடலும் மனமும் வேண்டும். அந்த உடலும் மனமும் இருக்க ஒரு உலகம் வேண்டும். எனவே பிரபஞ்சம் என்ற ஒளி-ஒலி காட்சி நம் அனுபவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதன் ஒரு பகுதிதான் நம் உடலும் மனமும் என்ற அறிவும் இந்தப்படியில் கிடைக்கப் பெற்றவர்கள் அடுத்தப்படிக்கு முன்னேறுகிறார்கள்.

நான்காம் படி: உலகம் மாயை

எவ்வித அனுபவமும் இல்லாமல் உறங்கும் ஆழ்ந்த உறக்கத்தின் நடுவே கனவு உலகம் ஒன்றை உருவாக்கி அதில் பற்பல அனுபவங்களை நாம் பெறுவதுபோல் ஒன்றான பரமன் பலவாக ஆகுவேனாக என்று சங்கல்பம் செய்ததால் ஏற்பட்ட உலகம்தான் நாம் கண்விழித்து காணும் சொப்பனம்.

எதிலிருந்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாதவண்ணம் சுவையான தின்பண்டத்தை சமைத்த கைதேர்ந்த சமையற்காரரை போல பரமனிடமிருந்து உருவாக்கப்பட்டது என்பதை யாரும் அறிந்து கொள்ள முடியாமல் இனிமையான இவ்வுலகை இறைவன் சமைத்துள்ளான். கேசரியை உப்புமா என்று நினைத்து அதனுடன் தயிரையும் ஊறுகாயையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டு நன்றாகவில்லை என்று சமையற்காரரை குறைகூறுவது தவறு. பரமன்தான் உலகமாக தென்படுகிறான் என்ற அறிவு ஏற்பட்டவுடன் அனைத்தையும் சரியான பார்வையில் பார்க்க முடியும். இன்பமாயிருக்க இந்த குறிப்பிட்ட பொருள்தான் வேண்டும் என்று ஆசைப்பட அவசியமில்லாமல் எது கிடைத்தோ அதில் ஆனந்தத்தை அனுபவிக்கமுடியும்.

இந்த அறிவை அடைந்தவர்கள் உலகம் ஒரு மாயை என்பதை புரிந்து கொண்டு தன் இயல்பான ஆனந்தத்தை அனுபவிப்பதற்காக தன்னால் தோற்றுவிக்கப்பட்ட உலகம் ஆனந்தமயமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை அடுத்த படியில் அறிந்து கொள்ள தயாராகிறார்கள்.

ஐந்தாம் படி: உலகம் ஆனந்தமயமானது

படைப்பு என்பது வேறுபாடு. அனைத்தும் ஒன்றுபோல இருந்தால் அதில் ஒரு சுவாரசியம் இருக்காது. ஒன்றான பரமன் வேறுபட்ட பல உருவங்களாக காட்சியளிப்பதுதான் உலகம். உடலின் உறுப்புகளில் காணப்படும் ஒருசில வேறுபாடுகள்தான் ஆண்-பெண் என்ற இருபாலரை உருவாக்குகின்றன. மேடு-பள்ளம், உயர்வு-தாழ்வு என்று இதுபோல் வேறுபட்டு இருப்பதுதான் உலகம் என்று இந்த கடைசிபடியில் உணர்ந்தபின் துன்பக்கலப்பில்லாத இன்பத்தை அனுபவிக்கலாம். மாற்றங்கள் இல்லாமல் இருப்பது பரமன் மட்டுமே. எனவே கோடையோ குளிரோ ஏற்படும் மாற்றங்களை ஆனந்தத்துடன் ஏற்றுக்கொண்டு எப்பொழுதும் இன்பமாக வாழ்பவர்கள் முற்றுணர்ந்தோர்.

பொய்யை உண்மையாக்க கூறப்படும் கதை

உண்மை பரமன் மட்டும்தான். இந்த பிரபஞ்சம் இருப்பதுபோல் தோன்றும் மாயை. பிரபஞ்சம் உருவான பொழுது அதனுடன் உருவாக்கப்பட்ட வேதம் அது இயங்கும் விதத்தை எவ்வித முரண்பாடும் இல்லாத தத்துவங்ளை கொடுத்து விளக்குகிறது.

முதலாம் விளக்கம்: பதிவுகள்

நாம் தொடர்ந்து செய்யும் செயல்கள் நம் மனதில் விருப்பு வெறுப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த விருப்பு வெறுப்புகள் மட்டுமே ஆசைகள் தோன்ற காரணமாகும். நமக்கு எந்த பொருளின் மேல் ஆசை ஏற்படுகிறது என்பதை பொருள்கள் தீர்மானிப்பதில்லை. நமது புலன்கள் எந்தெந்த பொருள்களை அனுபவித்து பழகியிருக்கின்றனவோ அவற்றின் மீது ஆசைகள் ஏற்படுகின்றன.

பொருள்களில் ஆனந்தம் இல்லையென்று அறிந்தவுடன் மனதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பட்டியல் அழிக்கப்பட்டுவிடாது. விரும்பி சாப்பிடுவது சப்பாத்தியா சாதமா என்பது வடஇந்தியரா தென்னிந்தியரா என்பதை பொறுத்து தொடர்ந்து மாறுபடும். நான் பரமன் என்ற ஞானம் உறுதியான பின் கூட தயிர் சாதம் வேண்டும் என்று ஆசைபடுவது இயற்கை.

இரண்டாம் விளக்கம்: மறுபிறப்பு

விருப்பு வெறுப்புகள் பிறவிகள்தோறும் நம்முடன் தொடர்ந்து வருபவை. மேலும் நம் நிறைவேறாத தீவிர ஆசைகள் மறுபிறவியில் நாம் செய்யும் செயல்களை தீர்மானிக்கின்றன. அவற்றில் சில ஞானிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு  வலிவு பெற்றிருக்கலாம்.

கடற்கரையில் மணல் வீடு கட்டும் சிறுவர்களிடம் ‘போதும், வீடு திரும்ப நேரமாகிவிட்டது’ என்று கூறினால் அவர்கள் நம் பேச்சை கேட்பார்களா மாட்டார்களா என்பது எவ்வளவு தூரம் மணல்வீடு கட்டப்பட்டுள்ளது என்பதை பொறுத்தது. அப்பொழுதுதான் கட்ட ஆரம்பித்திருந்தால் அதை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் வந்து விடுவார்கள். ஆனால் அது கட்டிமுடிக்கப்படும் தருவாயில் இருந்தால் இன்னும் ஒரு நிமிடத்தில் வருகிறோம் என்று பதிலளித்துவிட்டு அரைமணிநேரம் செலவளித்து தொடங்கிய வேலையை முடித்துவிட்டுத்தான் அவர்கள் வீடுதிரும்புவார்கள்.

இந்த அனுபவம் நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் பொருந்தும். ஆரம்ப கட்டத்தில் வேலையில் இருக்கும் பிடிப்பு தொடர்ந்து அதிகமாகி இறுதியில் அதை செய்து முடிக்க வேண்டுமென்ற தீவிர ஆசை உண்டாகும். இந்த ஆசைகள் பிறவிகள்தோறும் தொடரும். சாதாரணமாக நமக்கு தெரியாத பொருள்களின் மீது ஆசை ஏற்படாது. ஆனால் சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசைகளும் செய்து முடிக்காத வேலைகள் மீதுள்ள பற்றும் இந்தப்பிறவியில் நம் ஆசைகளை தீர்மானிக்கும். நம்மையறியாமலேயே ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிக்க ஆரம்பிப்போம். ஆதி சங்கரருக்கு சிறுவயதில் சன்யாசம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதற்கும் புத்தர் தன் குடும்பத்தை துறந்து காட்டுக்கு சென்றதற்கும் இது போல் பிறவிகள்தோறும் தொடரும் ஆசைகளே காரணம். ஞானம் ஏற்பட்டபின்னும் ஞானிகளின் செயல்பாடுகள் இதுபோன்ற ஆசைகளின் அடிப்படையிலேயே அமையும். பகவான் ரமண மஹரிஷி திருவண்ணாமலையின் எல்லைக்குளேயே தன் வாழ்நாழ் முழுவதையும் கழித்தார். ஆனால் விவேகானந்தர் உலகை வலம் வந்து மக்களின் அறிவுக்கண்களை திறந்தார். இதுபோல் ஞானிகளின் செயல்களும் அவர்களது ஆசைகளின் அடிப்படையிலேயே அமையும்.

மூன்றாம் விளக்கம்: ஒளி-சக்தி-ஜடத்தனிமங்கள்

அறிவு என்பது மனதில் தோன்றும் எண்ணங்கள். மனம் என்பது ஒளி, சக்தி மற்றும் ஜடம் என்ற கலவையினால் செய்யப்பட்டு அதன் தன்மை தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதால் மாலையில் அழகாகத்தோன்றும் புகைப்படம் காலையில் அசிங்கமாகத்தெரிய வாய்ப்புள்ளது. மனதின் இந்த மாற்றத்தை புரிந்து கொண்டால் மனதால் அறியப்படும் பொருளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவேண்டியதில்லை. சாக்கடையில் உள்ள அழுக்கு சூரியனை கறைபடுத்தாது. மனதின் மாற்றங்கள் பரமனின் இன்பத்தை மாசுபடுத்தாது. எனவே மாறாத இன்பம்தான் தன் இயல்பு என்று அறிந்துகொண்டபின் உலகின் மாற்றங்களும் மனதின் மாற்றங்களும் ஆனந்தத்திற்கு எவ்வித தடையையும் ஏற்படுத்துவதில்லை. இதை அறியாதவர்கள் தண்ணீரில் தெரியும் தன்னுடைய பிம்பத்தை வேறொரு மிருகம் என்று நினைத்து கிணத்துக்குள் குதித்த சிங்கம் போல உலகப்பொருள்களில் தென்படுவது தன்னுடைய இயல்பான ஆனந்தம் என்று அறியாமல் அவற்றின் மீது ஆசைபட்டு அவற்றை நாடி ஓடுவர். கண்ணாடியில் தோன்றும் அழகான முகம் தன் கழுத்தில் மேல் உள்ளது என்று உணர்ந்தவர்கள் கண்ணாடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  

நான்காம் விளக்கம்: கர்மவினைகள்

வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் ப்ராரப்தத்தின் அடிப்படையிலேயே நடக்கும். இந்த விதி ஞானிகளுக்கும் பொருந்தும். ஞானி மற்றவர்களைப்போல் துன்பம் வரும்போது துவளாமலும் இன்பம் வரும்போது துள்ளாமலும் இருப்பார்.

அரசனின் பல்லக்கு தூக்குபவர்களில் ஒருவன் சோர்ந்து விழுந்துவிட்டால் வழியில் போகும் குடிமகன் ஒருவன் அந்த வேலைக்கு அமர்த்தப்படுவான். அவனுக்கு கூலி கிடைக்காது என்று தெரிந்தாலும் போனால் போகிறது என்று அந்த வேலையை செய்வது போல ஞானி தன் உடல் உழைப்பினால் எவ்வித பலனும் கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட தன் வழியே வந்த வேலைகளை செய்து முடிப்பான். செய்த வேலைக்கு பலன் கிடைத்தால் அதை அனுபவிப்பான். கிடைக்காவிட்டால் அதை ஒரு குறையாக நினைக்க மாட்டான்.

‘என் தலைவிதி’, என்று நொந்துகொள்வதற்காக வேதம் விதியைப்பற்றி விளக்க முற்படவில்லை. விதி என்பதை புரிந்துகொண்டால் ஏன் இப்படி நிகழ்கிறது என்று எவ்வித கேள்விகளும் கேட்காமல் அனைத்து நிகழ்வுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு ஏற்படும்.


ஐந்தாம் விளக்கம்: சம்சாரமும் முக்தியும்

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் பரமனின் வெளிப்பாடுகள். ஆனால் இதை அறியாமல் உலகில் இன்பத்தை தேடி அதனால் பொருள்கள் மேல் பற்றுகொண்டு பந்தப்பட்டிருப்பார்கள். இந்த பந்தம்தான் அவர்களது துன்பத்திற்கு காரணம் என்ற அறிவு ஏற்படும்பொழுதுதான் இவர்களுக்கு முக்தியடையும் வாய்ப்பு கிடைக்கும்.

மக்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் இந்தியா அடிமைபட்டுள்ளது என்ற உண்மையை உணரவேண்டியிருந்தது. பிரிட்டீஷ் ஆட்சி நல்லது என்று நினைப்பது தவறு என்று புரிந்தபின்தான் விடுதலை போராட்டம் தொடங்கியது. அது போல பொருள்களினால் ஏற்படும் பந்தத்திலிருந்து விடுபட முதல் படியாக பொருள்களில் இன்பம் இல்லை என்றும் அவை நம்மை பந்தப்படுத்துகின்றன என்றும் உணர வேண்டும். அதன் பின் தான் ஆனந்தத்தின் இருப்பிடம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி முக்தியடையும் வாய்ப்பு ஏற்படும்.

ஆறாம் விளக்கம்: கடவுள்

கண்ணுக்குத்தெரியும் உலகை இல்லை என்று மறுப்பதற்கு கண்ணுக்குத்தெரியாத கடவுளை வேதம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. உலகில் இன்பத்தைத்தேடி அலுத்துபோனபின் கடவுளின் சாம்ராஜ்யத்தில் வாழும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் மனிதன் மதங்கள் கூறும் சடங்குகளை பின்பற்றி கடவுளை திருப்தி செய்ய முயற்சிக்கிறான்.

அதர்மத்தை முழுவதும் தவிர்த்து தர்மமான முறையில் வாழ்ந்தால்தான் கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும் என்ற போதனையை பின்பற்றி வாழத்தொடங்கும் மனிதன் படிப்படியாக முன்னேறி கடவுள் யார் என்பதை அறிந்து கொண்டு ஞானியாகிறான்.

அதன் பின் உலக நன்மையை கருதி இறைவனின் எழுதுகோலாக செயல்பட ஆரம்பித்து விடுவதால் செயல்களை செய்ய அவனை தூண்டும் எண்ணங்களை ஆசை என்ற பெயரில் அழைக்க முடியாது. என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன அவை எப்படி செயலாக மாறுகின்றன என்ற அனைத்தும் ஆண்டவனின் திருவிளையாடல் என்பது ஞானிக்குத்தெரிந்திருப்பதால் செயல்களின் விளைவு எப்படியிருக்கும் என்ற கவலையின்றி தொடந்து இன்பமாக செயலாற்றுவான்.

முடிவுரை :

பக்கத்து ஊருக்கு நடந்து செல்ல கால்கள் மட்டும் போதும். சாலையின் ஓரத்தில் ஊன்றப்பட்டிருக்கும் மைல் கற்கள் நம் பயணத்திற்கு நேரடியாக உதவுவதில்லை. அவை இல்லாவிட்டாலும் ஊர் போய் சேர்ந்துவிடலாம். ஆயினும் ஆறு மைல்கள் நடந்து விட்டோம், இன்னும் இரண்டு மைல்கள் நடந்தால் ஊர் போய் சேர்ந்து விடலாம் என்று மனதிற்கு ஒரு ஊக்கம் கொடுக்க மைல் கற்கள் உதவுகின்றன.

கடவுள், மறுபிறவி, பாவபுண்ணியங்கள், பதிவுகள் போன்ற விளக்கங்கள் இல்லாவிட்டாலும் பிறப்பிலிருந்து இறப்புவரையான வாழ்க்கைப்பயணம் எவ்வித தடையுமில்லாமல் தொடர்ந்து நடந்துவிடும். ஆனால் துன்பம் கலந்த இன்பத்துடன் வாழாமல் குறையாத இன்பத்துடனும், நிரந்தர அமைதியுடனும், தடையில்லாத பாதுகாப்புடனும் வாழும் வாய்ப்பு வேதம் கூறும் இந்த விளக்கங்களை சரியாக படித்து புரிந்துகொண்டு முக்தியடைந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

பயிற்சிக்காக :

1. கல்வியின் விளைவு என்ன?

2. வாழ்வு என்னும் ஒளி-ஒலி காட்சியின் ஐந்து படிகள் யாவை?

3. வாழ்வின் நிகழ்வுகளுக்கு வேதம் கூறும் ஆறு விளக்கங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. கடவுள் இருக்கின்றானா?

2. மறுபிறவி உண்மையா?

3. வேதம் பொய் சொல்லாது என்பதை விளக்கவும்.

Friday, October 8, 2010

Lesson 137: Self-knowledge alone leads to liberation (Brahma Sutra 3.4.1-17)

பாடம் 137: ஞானத்தினால் மட்டுமே முக்தி
பாடல் 426 – 442 (III.4.1-17)

கர்மகாண்டத்தை கடந்து ஞானகாண்டத்தினுள் அடியெடுத்து வைத்தவுடன் ஞானத்தினால் மட்டுமே முக்தியடைய முடியும் என்ற முக்கியமான கருத்தை வேதம் நம் முன்வைக்கிறது.

வேதாந்தத்தில் விளக்கப்பட்ட நான் பரமன் என்ற கருத்தை புரிந்துகொள்ளாமல் வேறு எவ்விதத்திலும் முக்தியடைய முடியாது என்பதை பிரம்மசூத்திரத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் மற்ற அனைத்து மதங்களையும் ஒவ்வொன்றாக மறுத்து விளக்கியபின் இந்த மூன்றாவது அத்தியாயத்தின் இறுதிபகுதி ஞானத்தினால் மட்டுமே முக்தி என்று உறுதியாக கூறுவதன் காரணங்களை வரிசைப்படுத்தும் இந்த பாடத்துடன் தொடங்குகிறது.

முதல் காரணம்: வேதவாக்கியங்கள்

ஆத்மாவை அறிந்தவன் அவலத்திற்கு ஆட்படுவதில்லை (சாந்தோக்கியம் 3.4.1), பரமனை அறிந்தவன் பரமனாகவே ஆகிறான் (முண்டகம் 3.2.9), பரமனை அறிபவன் அனைத்தையும் அடைந்தவனாகிறான் (தைத்திரியம் 2.1) போன்ற வேத வாக்கியங்கள் ஆத்மா அல்லது பரமனை பற்றிய ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பதை தெளிவாக்குகின்றன.

இரண்டாம் காரணம்: மரணத்திற்கு பின் முக்தி கிடைக்கும் விதம்

விதேஹ முக்தி என்றும் ஜீவன் முக்தி என்றும் வேதத்தில் இரு விதங்களில் முக்தியடைய முடியும் என்று குறிப்பிட்டிருந்தாலும் ஞானத்தினால் மட்டுமே முக்தி என்ற முடிவில் மாற்றமில்லை. ஏனெனில் மரணத்திற்குபின் பிரம்மதேவனிடம் நேரடையாக வேதாந்தத்தை படித்து நான் பரமன் என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே விதேஹ முக்தி கிடைக்கும் என்பதை வேதம் தெளிவாக கூறுகிறது.

மூன்றாம் காரணம்: மறுபிறவியின் தன்மை

நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணம் நாம் முன் ஜென்மங்களில் செய்த தீவினை என்று வேதம் சமாதானம் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்வது கடினமாய் இருக்கிறது. ஏனெனில் முன் பிறவிகளில் பாவம் செய்தது நான் என்பது நம் நினைவில் இல்லை. அதேபோல் இந்த பிறவியில் கர்ம காண்டத்தை பின்பற்றி நற்செயல்கள் செய்ததன் பலன் இப்பொழுதே கிடைத்தால்தான் அதை நாம் அனுபவிக்கமுடியும். இல்லையெனில் நம் உழைப்பின் பலன் நாம் அறியாத ஒருவருக்கு வரும் பிறவிகளில் கிடைக்கும். எனவே நம்மை பொறுத்தவரை ஜீவன்முக்தி ஒன்றுதான் உண்மையான முக்தி.

நான்காம் காரணம்:  கர்மகாண்டத்தின் தன்மை

செயல்களுக்கு ஒரு முடிவில்லை. எனவே எவ்வளவு செயல்கள் செய்தாலும் பூரணத்துவம் கிடைக்காது. தொடர்ந்து செயல்கள் செய்து அதன் மூலம் குறையாத இன்பத்தை அடையவே முடியாது. வேதம் கர்மம் மற்றும் ஞானம் ஆகிய இரண்டை மட்டும்தான் போதிக்கிறது. எனவே கர்மத்தால் முக்தி கிடைக்காது என்று உறுதியாக தெரிந்தால் ஞானத்தால் மட்டும்தான் முக்தி என்பது தெளிவாகும்.

ஐந்தாம் காரணம்: கர்மபலன்களின் முடிவு

செய்த வினைகளுக்கு ஏற்ற பலன்களை அனுபவிக்காமல் நம் பிறவிச்சுழல் ஒரு முடிவுக்கு வராது என்றும் பலன்களை அனுபவித்து தீர்க்க முடியாத அளவுக்கு நாம் ஒவ்வொருவரும் சஞ்சித கர்மாவை சேர்த்து வைத்துள்ளோம் என்றும் வேதம் கூறுகிறது. அதேபோல் மேற்கொண்டு கர்மங்கள் செய்யாமல் இருந்து ஆகாமி கர்மத்தை சேர்க்காமல் இருக்கவும் முடியாது என்றும் வேதம் கூறுகிறது.

சஞ்சித கர்மத்தையும் ஆகாமி கர்மத்தையும் முற்றிலும் அழிக்கும் சக்தி ஞானத்திற்கு மட்டும்தான் உண்டு என்று வேதம் கூறுவதால் ஞானத்தினால் மட்டுமே முக்தி என்பது தெளிவாகிறது.

ஆறாம் காரணம்: அறியும் ஆவல்

மனிதனின் அறிவுப்பசிக்கு ஒரு முடிவேயில்லை. இவ்வுலகம் எதற்காக படைக்கப்பட்டது, கடவுள் இருக்கின்றானா, சுவர்க்கம் இருப்பது உண்மையா என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் முக்தியடைய முடியாது. வேதாந்தத்தின் சாரத்தை முறையாக படித்து புரிந்துகொண்டால் மட்டுமே இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரியவரும்.


ஏழாம் காரணம்: மரணமில்லா பெருவாழ்வு

முக்தி என்பதற்கு மரணமில்லா பெருவாழ்வு என்று ஒரு பொருள். மரணத்திற்கு பிறகு நாம் வாழமுடியாது என்பதால் மரணமடைவதற்கு முன் கிடைப்பதே முக்தியாகும். நாம் நிரந்தரமான இறை அனுபவத்திற்காக ஏங்கும் மனிதபிறவிகள் என்று நினைப்பது தவறு. மனித அனுபவத்தை சிறிதுகாலம் பெற்றுக்கொண்டிருக்கும் நிரந்தரமான தெய்வப்பிறவிகள் நாம் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை தெரிந்துகொள்வதுதான் முக்தி.

எட்டாம் காரணம்: நிலையான ஆனந்தம்

எது வருமோ அது போய்விடும். எனவே நிலையான இன்பம் என்பது அடையப்படவேண்டிய ஒன்று அல்ல. அது  அறியப்படவேண்டியது. நான் ஆனந்தசொரூபமான பரமன் என்று தெரிந்து கொள்வதால் மட்டுமே நிலையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்.  

ஒன்பதாம் காரணம்: கடவுள் நம்பிக்கை ஒரு படிகட்டு

மரணத்திற்கு பின் கடவுளின் இராஜ்யத்தில் அவனுக்கு நேரடியாக தொண்டு செய்து என்னாளும் சுகித்து இருப்பது என்ற நம்பிக்கை கர்மகாண்டத்தை கடப்பதற்கு பயன்படும் ஒரு படிக்கட்டு. இடமும் காலமும் பிரிக்கமுடியாத ஒரே தத்துவம். இங்கே இல்லாத கடவுளின் இராஜ்யம் என்றும் சாசுவதமாக இருக்க வாய்ப்பேயில்லை. கடவுள் நம்பிக்கையுடன் வேதத்தைபின்பற்றி கடவுள் வேறு நான் வேறு அல்ல என்ற ஞானத்தை பெறுவதுதான் முக்தி. 

பத்தாம் காரணம்: முக்தியடைந்தோர்களின் அனுபவம்

அறியாமை இருளிலிருந்து ஞானவெளிச்சத்திற்கு வந்ததன் மூலம் மரணத்திலிருந்து விடுதலை பெற்ற முக்தியடைந்த முற்றுணர்ந்தோர் பலர் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பதுதான் இவர்களின் ஒருமித்த கருத்து.

ஞானத்தை பெறாமல் முக்தியடையலாம் என்று சொல்வற்கு  எவ்வித ஆதரமோ சாட்சியோ எள்ளளவும் இல்லை.   


முடிவுரை :

பரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடான நிலையற்ற இவ்வுலகத்தில் தற்காலிக மனித அனுபவத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் நான் நிரந்தமாக என்றும் இருக்கும் ஆனந்தமயமான பரமன் என்ற ஞானம் மட்டுமே முக்தியை கொடுக்கும்.

 பயிற்சிக்காக :

1. ஞானத்தினால் மட்டும்தான் முக்தி என்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. கணக்கில் புலி என்றும் நீ ஒரு மகாராஜா என்றும் தாய் தன் மகனை ஒரு புகழ்ச்சிக்காக உரைப்பதை எப்படி அப்படியே உண்மை என எடுத்துக்கொள்ள கூடாதோ அதுபோல் நீ பரமன் என்று கூறும் வேதவாக்கியங்களை ஒரு புகழ்ச்சியுரையாக எடுத்துகொள்ள வேண்டுமே தவிர உண்மை என எடுத்துக்கொள்ள கூடாது என்பது சரியா?

2. நான் நிலையான பரமன் மற்றும் இந்த உலகம் நிலையற்ற மாயை என்று புரிந்துகொண்ட பின்னும் முக்தி கிடைத்தமாதிரி தெரியவில்லையே?

3. இராமகிருஷ்ண பரமஹம்சர் தொட்டவுடன் விவேகானந்தருக்கு அருள் கிடைத்ததாக சொல்லப்படுவதன் அர்த்தம் என்ன?

4. ஞானம் பெறாமல் வேறு எவ்வழியில் முக்தி கிடைக்கமுடியும்?

5. ஞானத்தை பெற்றபின்னும் கூட ஜனகர், அஸ்வபதி போன்றவர்கள் தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றியதன் காரணம் என்ன?

Wednesday, September 22, 2010

Lesson 135: Dividing Vedas into two ( பிரம்ம சூத்திரம் 3.3.60)

பாடம் 135: கர்மகாண்டமும் ஞானகாண்டமும்
பாடல் 419 (III.3.60)

வேதத்தை கர்மகாண்டம் என்றும் ஞானகாண்டம் என்றும் இரு பகுதிகளாக பிரிப்பதன் அடிப்படையை விளக்கி இவ்விரண்டில் எந்த ஒன்றை பின்பற்றுவது என்பது அவரவரின் தகுதியையும் விருப்பத்தையும் பொறுத்தது என்று இந்த பாடம் எடுத்துரைக்கிறது.

இருபிரிவுகள்

என்ன செயல்களை செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும் என்று செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேதத்தின் முதல்பகுதி கர்மகாண்டம் என்றும் எதை அறிந்து கொள்ளவேண்டும் என்று கற்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பின் பகுதி வேதாந்தம் என்னும் ஞானகாண்டம் என்றும் வழக்கில் இருந்து வருகிறது. இவ்வாறு வேதத்தை இரண்டாக பிரிப்பதற்கு நான்கு அடிப்படை காரணங்கள் உள்ளன.

முதல் அடிப்படை: என்ன உள்ளது?

பழங்கால மன்னர்களின் ஆட்சியை விவரிக்கும் புத்தகத்தை சரித்திரம் என்றும் பொருள்களின் தன்மையை விளக்கும் புத்தகத்தை பௌதீகம் என்றும் பிரிப்பதுபோல இதைச்செய், அதைச்செய்யாதே என்று அறிவுறுத்தும் வேதத்தின் முதல் பகுதியை கர்மகாண்டம் என்றும் உலகம், கடவுள், வாழ்க்கை ஆகியவற்றை ஆராயும் இரண்டாம் பகுதியை ஞானகாண்டம் என்றும் பொருளடக்கத்தின் அடிப்படையில் வேதத்தை இரண்டாக பிரிக்கலாம்.

இரண்டாம் அடிப்படை: யாருக்காக?

மாணவர்கள் படிக்கவேண்டியதை பாடபுத்தகங்கள் என்றும் பாமரமக்கள் தினமும் படிப்பதை செய்திதாள்கள் என்றும் பிரிப்பதுபோல யார் படிக்கவேண்டும் என்ற அடிப்படையில் வேதம் இரண்டாக பிரிக்கபடுகிறது. ஏன், எதற்காக என்று கேள்விகள் கேட்டு கிடைக்கும் பதில் சரிதானா என்று ஆய்ந்தறியும் திறன் இல்லாதவர்களுக்கு முதல் பகுதியும் தர்க்கம், அறிவியல் மற்றும் பகுத்தறிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேதத்தின் இரண்டாம் பகுதியும் ஏற்புடையதாகும்.

மூன்றாம் அடிப்படை: எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்?

சமைத்துப்பார் என்ற புத்தகத்தை படிப்பவரின் நோக்கம் அகராதியை படிப்பவரின் நோக்கத்திலிருந்து வேறுபட்டது. அதுபோல் வாழ்வின் அடுத்த குறிக்கோளை அடைய ஆசைப்படுபவர்கள் படிக்கவேண்டியது கர்மகாண்டம். வாழ்வின் இறுதியான குறிக்கோள் என்னவென்றும் அதை அடைவது எப்படி என்றும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கற்கவேண்டியது வேதாந்தம்.

நான்காம் அடிப்படை: எப்படி பலன் கிடைக்கும்?

கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை அறிந்து கொள்வதால் மட்டும் எவ்விதபயனும் கிடைக்காது. அவற்றை வாழ்வில் கடைபிடித்தால் மட்டுமே வேண்டிய பலன்கள் கிடைக்கும். ஆனால் ஞானகாண்டத்தை படித்து அதில் உள்ள அறிவை அடைந்தால் மட்டும் போதும். எவ்வித செயல்களையும் அதற்குபின் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே வேதாந்தம் நேரடியாக பலனை கொடுக்ககூடியது.

கர்மகாண்டம் சொல்லும் செயல்களை யாரையேனும் செய்விப்பதன் மூலம் நாம் பலனை அடையலாம். சமைத்துப்பார் என்கிற புத்தகத்தை படித்து வேறு ஒருவரை அதன்படி செயல் செய்யவைத்தால்கூட நமக்கு சாப்பாடு கிடைக்கும். ஆனால் ஞானகாண்டத்தில் உள்ள பாடங்களை நாம்தான் கற்கவேண்டும். ஆள்மாறாட்டம் செய்து கல்லூரித்தேர்வுகளில் வெற்றிபெறுவது போல் ஆசிரியருக்கு பணம் கொடுத்து அறிவை வாங்கிவிடமுடியாது.

நான்கு குறிக்கோள்கள்

உலக வாழ்வில் மனிதர்கள் அடைய ஆசைப்படும் அனைத்து தேவைகளையும் நான்கு வகைகளாக பிரித்து அவற்றை நிறைவேற்ற உதவுவது வேதம்.

முதல் குறிக்கோள்: பொருள்

உயிர்வாழ்வதற்கு அவசியமான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை அடைய தேவையான பொருளை ஈட்டுவது எப்படி என்று வேதம் சொல்லித்தருகிறது. மனிதர்களை அவர்களின் குணங்களின் அடிப்படையில் பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்று பிரித்து ஒவ்வொருவர் செய்யவேண்டிய தொழில்களை வேதம் பரிந்துரை செய்கிறது.

இரண்டாம் குறிக்கோள்: இன்பம்

அடிப்படைத்தேவைகள் நிறைவேறியபின் ஐம்புலன்களின் ஆசைகளை அனுபவித்து உலகவாழ்வில் வசதியுடன் வாழ வேதம் மனித வாழ்வை பால்யம், குமாரம், வாலிபம், வயோதிகம் என்று நான்காக பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை போதித்துள்ளது.

மூன்றாம் குறிக்கோள்: தர்மம்

இவ்வுலக இன்பம் மட்டுமின்றி இறந்ததற்குபின் சொர்க்க சுகத்தை அனுபவிப்பதற்கும் பூமியில் மறுபடி மனிதனாக பிறந்து முக்தியடைவதற்கும் புண்ணியம் அவசியம். மேலும் வாழ்வின் முதல் இரண்டு குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள அதர்மத்தை தவிர்ப்பது மிகவும் முக்கியம். புண்ணியத்தை பெற செய்யவேண்டிய செயல்களையும் பாவத்தை தவிர்க்க செய்யக்கூடாத செயல்களையும் வேதம் பட்டியலிட்டு தந்துள்ளது.

நான்காம் குறிக்கோள்: முக்தி (வீடுபேறு)

மீண்டும் மீண்டும் பிறந்து இன்பமும் துன்பமும் கலந்த இவ்வாழ்வில் இருந்து விடுபட்டு இறைவனடி சேரவேண்டும் என்பது மரணகாலத்தில் மக்களுக்கு ஏற்படும் ஆசை. எவ்வளவுதான் முயன்று பாடுபட்டாலும் துன்பத்தை முற்றாக தவிர்க்கமுடியாது என்பதை உணர்ந்தபின் என்றும் குறையாத இன்பமும், தடையில்லாத அமைதியும், நிரந்தரமான பாதுகாப்பும் உள்ள வாழ்வு வேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு ஏற்படும். இந்த இறுதி ஆசையையும் நிறைவேற்ற வேதம் மனிதனுக்கு உறுதுணையாய் இருக்கிறது.

அறம், பொருள், இன்பம் என்ற முதல் மூன்று குறிக்கோள்களை அடைய கர்மகாண்டமும் முக்தி என்ற வீடுபேற்றை அடைய ஞானகாண்டமும் மக்களுக்கு வழிகாட்டுகின்றன.

யாருக்கு எது?

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. அவரவரின் தகுதிக்கு ஏற்பதான் ஆசைகள் உருவாகும். உருவான ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள வேதம் துணைசெய்யும்.

முடிவுரை :

வாழ்வை செம்மையாக வாழ மனிதனுக்கு முழுமையாக வழிகாட்டுவது வேதம் மட்டுமே. முதலில் புலன்களின் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் இன்பத்தை உலகத்திலிருந்து பெறலாம் என்று நினைக்கும் மனிதனுக்கு கர்மகாண்டம் வழிகாட்டுகிறது. உலகத்தை மாற்றியமைக்க முடியாது, அப்படியே மாற்றினாலும் அது நிலையான இன்பத்தை தர சக்தியற்றது என்று உணர்ந்து மாறாத பரமனை நாடி முக்தியடைய ஆசைப்படும் மனிதனுக்கு வேதாந்தம் உதவி செய்கிறது.

கர்மகாண்டத்தில் சொல்லும் செயல்களை பின்பற்றாமல் ஞானகாண்டத்திற்கு தேவையான அறிவாற்றலையும் மனப்பக்குவத்தையும் பெறமுடியாது. வேதாந்தத்தில் சொல்லும் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் முக்தியடைய முடியாது. எனவே ஞானகாண்டத்திற்கு கர்மகாண்டம் அவசியம். ஞானகாண்டத்திற்கு தொடராவிட்டால் வெறும் கர்மகாண்டம் அனாவசியம்.

கர்மகாண்டத்தை முடித்துவிட்டுத்தான் ஞானகாண்டத்திற்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் தவறு. ஏனெனில் கர்மகாண்டத்தில் சொல்லப்பட்ட செயல்களுக்கு ஒரு முடிவேயில்லை. யாராலும் முழுமையாக இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற குறையில்லாமல் எதையும் செய்து முடிக்கமுடியாது. மேலும் விமானநிலைத்தை அடையும் வரைதான் நிலத்தில் ஊறும் வாகனங்கள் தேவை. அதன் பின் அவற்றை விட்டுவிட்டு வானத்தில் பறப்பதுதான் புத்திசாலித்தனம்.

எனவே ஞானகாண்டத்தின் துணையுடன் குறைவில்லா இன்பவாழ்க்கையை விரைவில் அடைய வேண்டும். அதன்பின் தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றுவது அவசியமா இல்லையா என்ற கேள்விக்கு பொருள் இல்லையென்பது நான் பரமன் என்ற வேதத்தின் முடிவை அடைந்தபின் புரியும்.


பயிற்சிக்காக :

1. வேதத்தின் இரு பிரிவுகளின் பெயர்கள் என்னென்ன?

2.வேதம் எந்த நான்கு அடிப்படையில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது?

3. மனிதர்களுக்கு வாழ்வில் இருக்கும் நான்கு குறிக்கோள்கள் யாவை?

4. வேதத்தின் எந்த பிரிவு யாருக்கு பயன்படும்?

சுயசிந்தனைக்காக :

1.வாழ்வின் இரண்டாம் குறிக்கோளான இன்பத்திற்கும் நான்காவது குறிக்கோளான முக்தியில் பெறும் இன்பத்திற்கும் என்ன வித்தியாசம்?

2. கர்மகாண்டத்தை பின்பற்றாமலேயே முக்தியடைய முடியாதா?

3. சமவெளியில் காற்று வீசும் எனத்தெரிந்துகொண்டவன் பிள்ளைகளை குறித்து வருந்துவதில்லை என்ற சாந்தோக்கிய வாக்கியத்தின் (III.15.2) பொருள் என்ன?

Wednesday, September 15, 2010

Lesson 132: Vaisvanara Upasana ( பிரம்ம சூத்திரம் 3.3.57)

பாடம் 132: விஸ்வரூப உபாசனை
பாடல் 416 (III.3.57)

சடங்குகள் செய்வது அவசியம் என்று கூறியபின் மதங்களின் பெயரால் மனிதன் செய்யும் அனைத்து சடங்குகளையும் உள்ளடக்கிய விஸ்வரூப உபாசனை பற்றிய விளக்கத்தை இந்த பாடம் தருகிறது.

கடவுள் ஆயிரம் தலைகளை உடையவன் என்று கூறியபின் இரண்டாயிரம் கண்களை உடையவன் என்று கூறாமல் ஆயிரம் கண்களை உடையவன் என்று குறிப்பிடுவதால் அனைத்து ஜீவராசிகளை உள்ளிட்ட இந்த பிரபஞ்சத்தைத்தான் கடவுளின் வடிவமாக வேதம் சித்தரிக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே ‘என் தலை, கைகள், கால்கள் உள்ளிட்ட நான், கடவுளின் ஒரு பகுதியாகத்தான் இருக்க வேண்டும்’ என்ற உண்மையை நம் மனது முற்றிலும் உணர விஸ்வரூப உபாசனை ஒரு படிக்கட்டாக பயன்படும்.

நம்முடைய அனைத்து செயல்களும் கடவுளின் செயல்கள் என்றும் கடவுளின் அனுமதியில்லாமல் சுண்டுவிரலை அசைக்ககூட நம்மால் முடியாது என்பதையும் உண்மையில் புரிந்து கொண்டுவிட்டால் நாம் முக்தியடைந்து விட்டோம் என்று பொருள். இவ்வளவு எளிதாக முக்தியடைவது எல்லோருக்கும் சாத்தியமல்ல என்ற காரணத்தால் வேதம் பல்வேறு சடங்குகளை செய்யவேண்டும் என்று மக்களுக்கு விதித்திருக்கிறது. மனம்போன போக்கில் செயல்படாமல் வேதம் விதித்துள்ளது என்ற கட்டாயத்தினால் செய்யப்படும் சடங்குகள் விஸ்வரூப உபாசனை ஆகும்.

தியானம் செய்து மனதை செம்மை படுத்தி ஆசிரியரின் துணையுடன் வேதத்தை முறையாக பயின்று ‘நான் பரமன்’ என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே முக்தியடையலாம். இந்த பயணத்தை அனைத்து விதமான மக்களும் மேற்கொள்ள உதவும் முதல் படிக்கட்டுதான் விஸ்வரூபஉபாசனை.

செயலும் சிந்தனையும்

பசிக்கும்பொழுது பாலுக்காக அழுவதில் ஆரம்பித்து அனைத்து மனிதர்களும் சிந்திக்க கற்றுக்கொள்வதற்கு முன் செயல் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். எதற்கு செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்யவேண்டும் என்று கேள்வி கேட்டு முறையான பதில்களை தெரிந்து கொள்வதற்கு முன், செய்யும் செயல்கள் நமக்கு பழகிப்போய்விடுகின்றன. பழகிய செயலை தவறு என்று புரிந்துகொண்டாலும் பழக்கங்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. அதேபோல் நன்மை கொடுக்க கூடிய செயல்களை செய்யப்பழகிக்கொள்வதும் மிகவும் கடினம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி நம் உடலை குறித்து மட்டும் கூறப்பட்டதல்ல. நல்ல பழக்கவழக்கங்களை ஏன் என்று கேட்காமல் சிறுவயதிலிருந்து பின்பற்ற வேண்டும்.

கடைபிடிக்கவேண்டிய நல்ல செயல்களையும் தவிர்க்க வேண்டிய தீய செயல்களையும் வேதம் தெளிவாக பட்டியலிட்டு கூறியுள்ளது. வேதத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய கட்டுப்பாடுகளும் பாரம்பரிய சம்பிரதாயங்களும் இந்த பாரத நாட்டு மக்களின் வாழ்வை தொன்று தொட்டு இன்றுவரை வழிநடத்திக்கொண்டு இருக்கின்றன.  எனவே கேள்வி கேட்காமல் இவற்றை பின்பற்றுவதே முக்திக்கு வழிகோலும் முதல் படி.

கேள்வி கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தபின் வேதம் விதித்துள்ள செயல்களின் காரணம் தெரியவரும். ஏற்கனவே அவை பழக்கத்தில் இருக்கும் காரணத்தால் காரணம் தெரிந்தபின் அவற்றை தொடர்ந்து பின்பற்றுவதில் எவ்வித கஷ்டமும் இருக்காது.

எனவே வேதம் கூறும் நல்ல செயல்களை செய்வதன் மூலம் சரியான சிந்தனையை நாம் அடைவோம். நல்ல செயலும் சிந்தனையும் நம்மை முக்தியடைய வழிகோலும்.

உதாரணமாக சூரியன் உதிக்குமுன் எழுந்து வேதம் விதித்த சடங்குகளை செய்து பழகிவிட்டால் அவற்றை செய்யவேண்டிய காரணம் தெரிவதற்குமுன் காலையில் எழுவது பழக்கமாகியிருக்கும். இல்லாவிட்டால் காலையில் எழுவது நல்லது என்ற அறிவு மட்டும் இருக்கும். அதை பின்பற்றுவது மிக சிரமமான காரியமாக இருக்கும்.

எனவே முதலில் சரியான செயல் பின் சரியான சிந்தனை என்பதே சரியான பாதை. சரியான செயல்கள் யாவை என்றும் அவற்றை எப்படி செய்யவேண்டும் என்றும் நாம் யாரிடமும் கற்றுக்கொள்ள தேவையில்லை. தொன்றுதொட்டு வழிவழியாக இருந்துவரும் பழக்கவழக்கங்களை பின்பற்றினால் மட்டும் போதும். அதாவது குடும்பத்தில் உள்ள பெரியோர் பரம்பரை பரம்பரையாக செய்துவரும் அனைத்து சடங்குகளையும் இது பிடிக்கும், வசதியானது என்றோ அது பிடிக்காது, சிரமமானது என்றோ பாகுபாடு இல்லாமல் கடைபிடிக்க வேண்டும்.

ஒரு பெண் மணமானதும் பெற்றோர் வீட்டு பழக்கங்களை விட்டுவிட்டு கணவன் வீட்டில் நடைமுறையில் இருக்கும் சடங்குகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். எது உயர்ந்தது என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஆண்வழியாக வரும் சடங்குகளை பின்பற்ற வேண்டும் என்பதும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளபட வேண்டிய ஒரு விதி. ஏன் சடங்குகள் செய்யவேண்டும் என்ற கேள்வியே தவறு என்னும்பொழுது  எந்த சடங்குகள் என்ற கேள்வி அனாவசியம்.

விஸ்வரூப உபாசனையின் உதாரணங்கள்

காணும் உலகம் முழுவதும் இறைவனின் உருவம் என்பதால் செய்யப்படும் அனைத்து சடங்குகளும் விஸ்வரூப உபாசனையாகும். அனைத்து சடங்குகளும் வேதத்தின் ஆதாரத்தில்தான் ஏற்பட்டுள்ளன என்றாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் வெவ்வேறு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே பரவலான ஒரு சில சடங்குகள் இங்கு உதாரணத்திற்காக விளக்கப்பட்டிருக்கின்றன.

நல்ல காலம்

இராகு காலம், எமகண்டம், குளிகை என்று ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களுக்கு பெயரிட்டு நல்ல நேரத்தில்தான் எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் தொடங்க வேண்டும் என்ற வழக்கம் பெரும்பாலான வீட்டில் இருந்து வருகிறது.

பௌர்ணமியன்றும் அமாவாசையன்றும் சிறப்பு பூஜைகள் செய்து இஷ்டதெய்வத்தை பிரார்த்திப்பதும் ஏழைகளுக்கு உணவழிப்பதும் பலரால் பின்பற்றப்படும் ஒரு பழக்கம்.

மார்கழிமாதம்தோறும் விடியற்காலையில் எழுந்து வாசலில் பெரிய கோலம்போட்டு பூக்கள் வைத்து அலங்காரம் செய்வதும் ஆடி மாதங்களில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்யாமல் இருப்பதும் ஒரு வழக்கம்.

நோன்பு

ஏகாதசி, பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை போன்ற குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பதும் வரலக்ஷ்மி நோன்பு, காரடையான் நோன்பு என குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதித்து நோன்புகள் மேற்கொள்வதும் பரவலாக மக்களால் பின்பற்றபடும் நோன்புகளாகும்.

பண்டிகைகள்

தீபாவளி, பொங்கல், கார்த்திகை போன்ற பண்டிகைகளும் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி, மாரியம்மன் திருவிழா  என்று தெய்வங்களுக்காக கொண்டாடப்படும் சிறப்பு நாட்களும் பல குடும்பங்களில் வழக்கில் இருக்கிறது.

இவையனைத்தும் விஸ்வரூப உபாசனையின் அங்கங்கள்.

விஸ்வரூப உபாசனை மேற்கொள்ளும் விதம்

தொன்று தொட்டு எந்த விதத்தில் சடங்குகள் ஒருகுடும்பத்தில் பின்பற்றபடுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். உதாரணமாக தீபாவளியன்று காலை நாலரை மணிக்கு எழுந்து பெரியவர்கள் கையால் தலைக்கு எண்ணை வைத்து நீராடி புது துணிகளை அணிந்து கொண்டு பூஜை செய்வது ஒரு குடும்ப பழக்கம் என்றால் ஏன் காலை ஏழுமணிக்கு எழுந்து பூஜை செய்யக்கூடாது என்ற கேள்விகள் எதுவும் கேட்காமல் பெரியவர்களின் வழக்கத்தை பின்பற்றவேண்டும்.

விரும்பி ஏற்கும் விஸ்வரூப உபாசனை

குடும்ப வழக்கில் இருக்கும் சடங்குகளை கட்டாயமாக ஏற்று கடைபிடிக்க வேண்டும். அதைத்தவிர பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் செவ்வியல் கலைகளை விரும்பி ஏற்று கற்றுக்கொள்வதும் விஸ்வரூப உபாசனையாகும். மனம்போனபடி கைகால்களை ஆடுவதுதான் நடனம் என்றில்லாமல் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள முறைப்படி கற்று பயிற்சி செய்வது மிகுந்த நன்மை கொடுக்கும்.

விஸ்வரூப உபாசனையில் அடங்காதவை

வேதங்களையும் புராணங்களையும் ஆதாரமாக கொண்டு மதகோட்பாடுகளின்படி இப்படித்தான் செய்யவேண்டும் என்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் சடங்குகள் மட்டுமே விஸ்வரூப உபாசனையாக கருதப்படும். புராணம் என்பதற்கு மிகவும் பழையதானாலும் இன்றும் புதுமையானதாக இருப்பது என்று பொருள். எனவே குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் வருடங்களாக வழக்கில் தொடர்ந்து இல்லாதவை விஸ்வரூப உபாசனையாகாது. மேலும் பயம், பக்தி, சுயகட்டுப்பாடு ஆகியவை உபாசனையின் முக்கியமான அங்கங்கள்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம், பிறந்த நாள் விழா கொண்டாடுவது ஆகியவை விஸ்வரூப உபாசனை ஆகாது. தமிழ் புத்தாண்டு, சதாபிஷேகம் போன்றவை புராணங்களை அடிப்படையாக கொண்டும் இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்ற முறை விதிமுறைகளை பின்பற்றி அமைந்திருப்பதாலும் விஸ்வரூப உபாசனைகளாக கருதப்படும்.      

முடிவுரை :

அகில உலகையும் கடவுளின் உருவமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட புராணங்களின் அடிப்படையில் பல்வேறு சடங்குகளை பின்பற்றும் வழக்கம் இந்த பரத கண்டத்தில் பரவலாக இருப்பது இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட சமூகத்துடன் ஒன்றி வாழவேண்டிய கட்டாயத்தின்பேரில் பண்டிகைகளை கொண்டாடவைத்து அதன்மூலம் மதங்கள் கூறும் தத்துவங்கள் இன்றும் வாழையடி வாழையாக வளர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

‘என்ன தவம் செய்தனை யசோதா, எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க’ என்ற பாடலின் உண்மையான பொருள் முற்றிலும் புரியாவிட்டாலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் சடங்கை தொடர்ந்து செய்தால், என்றேனும் ஒருநாள் ‘நான் பரமன்’ என்பதை உணர்ந்து கொள்ள அது வழிவகுக்கும்.   

பயிற்சிக்காக :

1. விஸ்வரூப உபாசனை என்றால் என்ன?

2. எவை விஸ்வரூப உபாசனைகள் அல்ல?

3. விரும்பி ஏற்கும் விஸ்வரூப உபாசனைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. சிந்தித்து செயல் புரிவது நல்லதா அல்லது செயல் செய்துவிட்டு சிந்திப்பது சிறந்ததா?

2. கேள்விகள் கேட்காமல் செயல்கள் செய்தால் அவை மூடநம்பிக்கைகள் ஆகாதா?

3. விஸ்வரூப உபாசனை எவ்விதத்தில் முக்தியடைய உதவும்?

4. பழகிய செயல்களை விட்டு விட்டு மணமானதும் கணவன் வீட்டு சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்வது மனைவிக்கு சிரமமாக இருக்காதா?

5. பாடத்தில் குறிப்பிடப்பட்ட பாடல் யாசோதை என்ற பெண்ணுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் பொருந்துமா என்று ஆராய்க.