Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

Tuesday, February 15, 2011

Lesson 148: Status of those with desires (Brahma Sutra 3.4.43)

பாடம் 148: ஆசைப்படுபவர்களின் கதி
பாடல் 468 (III.4.43)

அனைத்து செயல்களும் ஆசைகளின் அடிப்படையில்தான் பிறக்கின்றன. மேலும் செயல் செய்யாமல் யாராலும் இருக்க முடியாது. எனவே உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆசைகள் இருந்தேதீரும். ஞானிகளுக்கு ஆசைகள் இருப்பினும் அவர்கள் துன்பப்படுவதில்லை. மற்றவர்களின் ஆசைகளுடன் ஒப்பிடும்பொழுது ஞானிகளின் ஆசைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்ற விளக்கங்களை கொடுப்பதன் மூலம் துன்பத்தை தவிர்க்கும் வழியை இந்த பாடம் தருகிறது.

முதல் வேறுபாடு: ஆசைகளின் ஆரம்பம்

நான் ஆசைப்படுகிறேன் என்பதற்கும் என் மனதில் ஆசை தோன்றுகிறது என்று சொல்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஞானிக்கு தான் ஆத்மா என்றும் தன் மனம் மாயை என்றும் தெரிந்திருப்பதால் மனதின் ஆசைகளை தனதாக ஏற்றுக்கொள்ள மாட்டார். பக்கத்து வீட்டுக்காரனின் ஆசை நிறைவேறாவிட்டால் நாம் எப்படி வருத்தப்பட மாட்டோமோ அது போல தன் மனதின் ஏமாற்றங்களை ஞானி பொருட்படுத்துவதில்லை.

இரண்டாம் வேறுபாடு: ஆசைகளின் தன்மை

ஞானிகளின் ஆசைகள் பந்தப்படுத்தாத ஆசைகள். தேடியது கிடைக்காவிட்டால் மற்றவர்கள் துன்பப்படுவதுபோல் ஞானி துன்பப்பட மாட்டான்.

பார்ப்பதற்கு விதை போலிருந்தாலும் வறுக்கப்பட்ட வேர்கடலையை விதைத்தால் அது முளைவிடாது. அதுபோல் ஞானிகளுக்கு ஏற்படும் ஆசை துன்பத்தை தராது. வறுக்கப்பட்டதால் சுவையாக இருக்கும் வேர்க்கடலையைப்போல ஆனந்தத்தின் விளைவான ஞானிகளின் ஆசை அனைவருக்கும் நன்மை தரும்.

மாலையில் பூங்காவில் உலாவரலாம் என்ற ஆசை மழை பெய்ய ஆரம்பித்ததால் நிறைவேறாமல் போனாலும் அது குறித்து நாம் துன்பபடுவதில்லை. அது போல  முற்றும் துறந்து இமயமலையடிவாரத்திற்கு சென்று சமஸ்க்ருத மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தக்கொண்டிருந்த வேதஞானத்தை நகரத்தில் வாழ்பவர்களுக்கு கொண்டுதரவேண்டும் என்ற சுவாமி சின்மயானந்தாவின் ஆசை நிறைவேறியிருக்காவிட்டாலும் அவர் துன்பபட்டிருக்க மாட்டார்.

மூன்றாம் வேறுபாடு: ஆசைகளின் நோக்கம்

தம்மிடம் இருக்கும் நிரம்பிவழியும் அமுதசுரபியை கொண்டு மற்றவர்களுக்கு உதவ  நினைப்பவனின் ஆசை, காலிப்பாத்திரத்தை காட்டி பிச்சையெடுப்பவனின் ஆசையிலிருந்து வேறுபட்டது. அதுபோல ஞானிகள் தங்களிடம் ஆனந்தம் பொங்கி வழிவதால் அதை மற்றவர்களுக்கு தந்து உதவ வேண்டும் என்று ஆசை படுவதற்கும் தேடியது கிடைத்தால் ஆனந்தம் அடையலாம் என்று மற்றவர்கள் உலகப்பொருள்கள் மேல் ஆசைகொள்வதற்கும் வேற்றுமை அதிகம்.  

நான்காம் வேறுபாடு: செயல்களின் நோக்கம்

தினமும் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடும் ஞானி விருந்தினர்களுக்காக அறுசுவை உணவை சமைத்து அவர்களுடன் அமர்ந்து தானும் சாப்பிடலாம். விதவிதமாக ருசிக்கவேண்டும் என்ற நாக்கின் தூண்டுதலுக்காக இல்லாமல் மற்றவர்களின் திருப்திக்காகவே அவர் விருந்து சமைக்கும் செயலில் ஈடுபடுவார். அதுபோல மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற காரணத்திற்காக மட்டுமே அவர் பணம் சம்பாதிக்க கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வார். தனக்கென அவருக்கு இருக்கும் தேவைகள் மிகவும் குறைந்தவை. இன்பத்தை தேடியலைய வேண்டிய அவசியம் அவருக்கில்லை.

ஐந்தாம் வேறுபாடு: பந்தப்பட்டிருந்த அனுபவம்

சக்கரவர்த்தியுடன் போர் புரிந்து தோல்வியடைந்த அரசன் பலகாலம் சிறைவாசம் அனுபவித்து விடுதலை செய்யப்பட்டபின் ஒரு சிறிய கிராமத்துக்கு அரசனாக வாய்ப்புகிடைத்தாலும் மிகவும் மகிழ்வான். வெற்றி பெற்று தன் சாம்ராஜயத்தை விரிவடையசெய்த சக்ரவர்த்திக்கு கூட இவனைப்போன்ற திருப்தி ஏற்படாது. ஏனெனில் பந்தப்பட்டு சிறையில் வாடிய அனுபவம் சுதந்திரமாக வெளியே இருப்பதே போதும் என்ற மனநிலையை கொடுத்திருக்கும். அதற்குமேல் ஒரு குக்கிராமத்துக்கு அரசனாகும் வாய்ப்பு ஒரு மிகப்பெரியவரப்பிரசாதமாக அவனால் கருதப்படும். சக்ரவர்த்திக்கு நாட்டையிழந்து சிறையில் வாடிய அனுபவம் இல்லாததால் அவருக்கு சுதந்திரத்தின் அருமை தெரிய வாய்ப்பில்லை.

ஆசை நிறைவேறியதால் மற்றவர்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தைவிட ஆசைகளிடமிருந்து முழுவதுமாக விடுதலை பெற்ற ஞானி இனிமேல் துன்பப்பட வேண்டிய அவசியமில்லை என்று அதிக சந்தோஷம் அடைவான்.

ஆறாம் வேறுபாடு: பொருள்கள் பற்றிய அறிவு

மனதின் நிறைவின்மையால் தோன்றிய ஆசை தள்ளுபடியில் விற்பனை என்ற அறிவிப்பை கேட்டதும் அது என்ன பொருள் என்று கூட விசாரிக்காமல் முட்டிமோதி கடைக்குள் நுழையவைக்கும். ஆனால் ஞானிகளின் மனம் தான் ஆனந்தத்தின் இருப்பிடம் என்ற அறிவால் நிறைந்திருப்பதால் யாராவது ஏதாவது தருவார்களா என்ற ஏக்கம் எப்பொழுதும் அதில் ஏற்படாது.

சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கிறது என்று தெரியவந்தால் பசியோடு இருக்கும் ஒருவனே அதைத்தொடமாட்டான். அப்படியிருக்க அப்பொழுதுதான் விருந்து சாப்பாட்டை வயிறு நிரம்ப சாப்பிட்டு முடித்தவனுக்கு விஷம் கலந்த சாப்பாட்டில் ஆசை ஏற்பட வாய்ப்பேயில்லை. அது போல உலகப்பொருள்களில் துன்பம் கலந்திருக்கிறது என்று அறிந்தவர்களுக்கு அவற்றின்மேல்ஆசை ஏற்படாது.

ஞானி பொருள்களை தள்ளுபடிவிலையில் வாங்கமாட்டான் என்பது இங்கு பொருள்ளல்ல. தேவைகளை பூர்த்திசெய்ய அவசியமான பொருள்களை குறைந்த விலையில் வாங்கவேண்டுமென்ற ஆசை ஞானிக்கும் ஏற்படலாம். ஆனால் பணத்திற்கும் இன்பத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஞானி உணர்ந்திருப்பதால் ஆசைகள் நிறைவேறாவிட்டால் மற்றவர்களைப்போல் கோபம், எரிச்சல், ஏமாற்றம் போன்ற உணர்வுகளால் அவர் பாதிக்கப்படமாட்டார்.

இன்னும் வேண்டும் என்று ஆசைகொள்பவர்களைப்போலல்லாமல் இருப்பதும் வேண்டாம் என்று ஞானி துறந்து விடுவான். மூட்டை நிறைய கிடைத்த ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்று அறிந்ததும் அதை கூடியவிரைவில் தொலைத்துவிட முயற்சிப்பதுபோல் ஞானிகள் பொருள்களின் குறைகளை அறிந்திருப்பதால் தினமும் உபயோகிக்கும் அவசியத்தேவைகளைத்தவிர பிற்பாடு தேவைப்படும் என்று எந்தப்பொருளையும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

என்னுடையது என்று எவ்வளவு பொருள்களை வைத்திருக்கிறோம் என்பது மனதில் தோன்றும் சலனங்களின் அளவை தீர்மானிக்கும். தேவைக்கு அதிகமான பொருள்களை வைத்திருப்பதால் எவ்வித பயனும் இருக்காது. அதேநேரத்தில் அவற்றால் ஏற்படும் மன சலனங்கள் அதிகமாகும்.

கடைகளில் உள்ள பொருள்களை பார்வையிட நேர்ந்தால் தனக்கு தேவையில்லாத பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன என்பதை நினைத்து ஞானி மகிழ்வான்.

திருடும்பொழுது கையும் களவுமாக பிடிபட்ட வேலைக்காரனை வேலையிலிருந்து நிறுத்தாமல் தொடர்ந்து வேலை செய்ய அனுமதித்தால் அவன் நன்றியுடனும் மறுபடியும் திருடாமலும் இருப்பான். அதுபோல பொருள்களுக்கு துன்பம் தரும் சக்தியில்லை என்பதை ஞானி தெளிவாகத்தெரிந்து கொண்டு அதன் பின் எவ்வளவு சுகபோகங்களை அனுபவித்தாலும் அவனுக்கு துன்பம் ஏற்படாது. ஞானி தான் உயிருக்கு உயிராக காதலித்தவர் தன்னை கைவிட்டுவிட்டு மற்றொருவரை மணந்து கொண்டாலோ அல்லது மரணமடைந்து விட்டலோ வருத்தப்படமாட்டார். ஏனெனில் எள்ளளவு ஆனந்தத்தைகூட தனக்கு யாராலும் தரமுடியாது என்பதை ஞானி அறிந்திருப்பதால் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு வாழ்வில் எதிர்படும் மற்றொருவரை மணந்துகொள்ள தயங்கமாட்டார்.

தசரதன் தனக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்ததை கேட்ட இராமனின் மனநிலை காட்டுக்கு போ என்ற கட்டளையை கேட்டபொழுது மாறவில்லை. நாட்டை ஆளுவதும் காட்டில் வாழ்வதும் சுற்றுப்புற சூழலில் மாற்றங்கள் ஏற்படுத்துமே தவிர ஆனந்தத்தை மாற்றாது என்பதை இராமன் அறிந்திருந்ததே இதற்கு காரணம்.

ஏழாம் வேறுபாடு: ஆசைகள் பற்றிய அறிவு

நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க முடியாது. அது போல அனுபவிப்பதன் மூலம் ஆசைகளை தீர்த்துக்கொள்ள முடியாது. யயாதி தன் மகனின் இளமையை கடன் வாங்கிய கதையை படித்து இந்த உண்மையை தெரிந்து கொள்ளா விட்டாலும் நம் அனுபவங்களை ஆராய்வதன் மூலம் இதை தெரிந்து கொண்டால் உலகத்தில் உள்ள பொருள்கள் மீது வைராக்கியம் ஏற்பட்டு அவற்றின் மீது ஆசை ஏற்படாது.

எண்ணையிருக்கும் வரை விளக்கில் நெருப்பு எரியும். அதுபோல மனதில் நான் மற்றும் எனது என்ற எண்ணங்கள் இருக்கும்வரை உலகப்பொருள்களின் மீது ஏற்படும் பற்றுதலை தவிர்க்கமுடியாது. எனக்கு இது வேண்டும் என்ற ஆசை ஏற்பட இந்த அகங்காரமே காரணம். ஆசை நிறைவேறினாலும் பசுத்தோல் போத்திய புலி போல இன்பம் என்ற பெயரில் துன்பம்தான் நம்மை வந்து சேரும். நான்தான் ஆனந்தத்தின் உண்மையான இருப்பிடம் என்பதை ஞானிகள் அறிந்து இருப்பதால் ஆசைகள் இல்லாமல் எது கிடைத்தாலும் ஆனந்தமாயிருப்பார்கள்.

எட்டாம் வேறுபாடு: உலகைப்பற்றிய அறிவு

மாற்றம் என்பது மாற்றமுடியாத ஒன்று. தோன்றும் அனைத்தும் மறைவுக்கு உட்பட்டவை. இந்த உலக நியதிகளை ஞானி சரியாக அறிந்திருப்பதால் உலகில் உள்ள பொருள்களில் மாற்றமேற்படாது என்று அவன் எதிர்பார்ப்பதில்லை. வயது ஆக ஆக உடலின் அழகும் ஆரோக்கியமும் குறைகிறதே என்று அவன் வருத்தப்படுவதில்லை.  

மாயாவி ஒருவன் இந்திரஜாலகாட்சியில் இருப்பது போல் காண்பிக்கும் பொருள் மீது ஆசைப்படமாட்டோம். அதுபோல உலகே மாயை என்று ஞானி உணர்ந்திருப்பதால் அதிலுள்ள பொருள்களின் மேல் ஆசைபடமாட்டான்.

ஒன்பதாம் வேறுபாடு: வாழ்வைப்பற்றிய அறிவு

கனவில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை நாம் பொருட்படுத்துவதுகிடையாது. இன்றைக்கு தூங்கும்பொழுது நேற்று வந்த இனிமையான கனவு தொடரவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டாலும் அது நிறைவேறாவிட்டால் தரையில் விழுந்து அழுது புரள மாட்டோம். ஏனெனில் கனவு நிலையாதது என்று தெளிவாக நமக்கு தெரியும். ஞானிகள் வாழ்வே ஒரு கனவு என்பதை உணர்ந்தவர்கள். எனவே இன்றிருப்போர் நாளை இல்லாமல் போய்விட்டால் அவர்கள் ஏமாற்றமடைவதில்லை. கனவில் நடக்கும் நிகழ்வுகள் நம்முடைய ஆணைக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. அதே நிலை விழித்தபின்னும் தொடர்கிறது என்பதை ஞானி அறிவான்.

முள் காலில் குத்திவிட்டது என்று நாம் செய்த தவறுக்கு அப்பாவியான முள்ளின் மீது பழிபோடுவது போல வாழ்வு என்பது என்ன என்று நாம் சரியாக புரிந்துகொள்ளாமல் அதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைசொல்வது நம் தவறு.

ஒளி பொருள்களின் இருப்பையும் இல்லாமையையும் நமக்கு அறிவிக்கும். அதற்கு புதிதாக பொருள்களை உற்பத்தி செய்யவோ இருக்கும் பொருளை அழிக்கவோ சக்தி கிடையாது. அதுபோல வாழ்வைப்பற்றிய சரியான அறிவு அதன் இயல்பை நமக்கு அறிவிக்குமே தவிர நடக்கும் நிகழ்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது. உதாரணமாக தொழிலில் லாப நஷ்டங்கள் மாறி மாறி வரும் என்ற அறிவு நஷ்டத்தை தவிர்க்க உதவாது.  மாறும் தன்மையை அறிந்து கொண்டதால் மாற்றம் ஏற்படும்பொழுது துன்பம் ஏற்படாது.

பத்தாம் வேறுபாடு: மனம் பற்றிய அறிவு

பிறவிகள்தோறும் செய்யும் செயல்களால் உருவாகிய விருப்பு-வெறுப்புகளை மனதிலிருந்து நீக்க முடியாது. மேலும் உலகின் நிகழ்வுகள் வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்பது போன்ற இருமைகளுக்கிடையே தொடர்ந்து ஊசலாடும் தன்மையுடையது. எனவே உலகின் நிகழ்வுகளை பிடித்தது-பிடிக்காதது என்று வகைப்படுத்தி பிடித்தவற்றை பெறவும் பிடிக்காதவற்றை தவிர்க்கவும் மனம் ஆசைப்படுவதை தவிர்க்க முடியாது. வைத்திருக்கும் பாத்திரத்தின் ஆட்டத்திற்கு ஏற்றாற்போல் ஆடுவது தண்ணீரின் இயல்பு. அது போல் உலகில் இயக்கதிற்கு ஏற்றாற்போல் ஆசைப்படுவது மனதின் இயல்பு. இவற்றைத்தெளிவாக உணர்ந்த ஞானிகள் மனதில் தோன்றும் ஆசைகளால் பாதிக்கப்படுவதில்லை.

முடிவுரை :

தோசை கருகி சாம்பலாகிவிட்டது என்றால் அது சமையல்காரரின் குற்றமே தவிர நெருப்பின் தவறல்ல. கையை சுட்டுவிட்டது என்று இனி நெருப்பின் பக்கமே போகக்கூடாது என்று தீர்மானிப்பது தவறு. அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை. நெருப்பு உண்டாகும் விதம், அதன் தன்மைகள் மற்றும் அதை கையாளும் விதம் ஆகியவற்றை சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே சுவையான சமையல் செய்ய முடியும். அது போல ஆசை உண்டாகும் விதம், அதன் தன்மை, பொருள்கள் பற்றிய அறிவு போன்றவற்றை சரிவர கற்றுத்தேர்ந்தபின் எவ்வித துன்பமும் இல்லாமல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள செயல்கள் செய்யலாம்.

வேதம் தரும் இந்த அறிவை பெறாமல் ஆசைகளுடன் செயல்படுபவர்கள் படுக்கையறைக்குள் பட்டாசுகளை கொளுத்தி விளையாடுபவர்களின் கதிக்கு ஆளாவார்கள்.


பயிற்சிக்காக :

1. வறுபட்ட விதை உதாரணம் மூலம் சொல்லப்பட்ட கருத்து என்ன?

2. ஆசை, பொருள்கள், உலகம், வாழ்வு, மனம் ஆகியவை பற்றி பெறவேண்டிய அறிவு என்னென்ன?

3. ஞானிகளின் ஆசைகளுக்கும் செயல்களுக்கும் நோக்கங்கள் என்னென்ன?

சுயசிந்தனைக்காக :

1. ஆசை பட்டது கிடைக்காவிட்டால் ஞானியின் மனம் அலைபாயும் என்றால் ஞானத்தின் பலன் என்ன?.

2. ஞானிகளுக்கு அளவு கடந்த ஆசைகள் இருக்கலாமா?

3. ஞானம் பெற்றவுடன் பணம் சம்பாதிக்கும் ஆசை குறைந்துவிடுமா?

Monday, January 10, 2011

Lesson 146: Wise will not revert back to suffering (Brahma Sutra 3.4.40)

பாடம் 146: முக்தியடைந்தவர்கள் துயரவாழ்வுக்கு திரும்புவதில்லை
பாடல் 465 (III.4.40)

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியை தொலைக்க மாட்டோம் என்பதுபோல் அறியாமையில் மூழ்கி அநேக காலம் துயரப்பட்டு பின் படிப்படியாக முன்னேறி முக்தியடைந்த ஞானிகள் பழையபடி துயரமான வாழ்வுக்கு திரும்ப மாட்டார்கள் என்பதை இந்த பாடம் விளக்குகிறது.

பருவுடல், நுண்ணிய உடல் மற்றும் காரண உடல் ஆகிய மூன்று உடல்களிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும் ஞானி தன்னை எந்த ஒரு உடலோடும் இணைத்துக்கொள்வதில்லை என்பதால் உடல்களின் துயரங்களை அவன் தன் துயரமாக ஏற்றுக்கொள்வதில்லை.

வாழ்வின் இறுதிக்குறிக்கோளான முக்தியை அடைந்துவிட்டதால் ஞானிகள் இனி அடையவேண்டியது அல்லது அறிந்துகொள்ள வேண்டியது என்று எதுவுமில்லை என்ற காரணத்தால் அவர்களின் செயல்களுக்கு ஒரு இறுதி நோக்கமிருப்பதில்லை. எனவே செய்த செயல்களும் அவற்றின் பலன்களும் போதவில்லை என்று அவர்கள் மற்றவர்களைப்போல் வருத்தமடைய மாட்டார்கள்.

தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டு பேசினால் வலிக்கும் என்ற நிலையிலும் பக்தர்களை நலம் விசாரித்த இராமகிருஷ்ண பரமஹம்சர், ஞானிகள் உடல்களின் வியாதிகளை தங்களுடையதாக கருதி வருந்துவதில்லை என்று நிரூபித்தார். கோவில்களை ஆக்ரமித்துக்கொண்டிருந்த வியாபாரிகளை சவுக்கால் அடித்து அப்புறப்படுத்த முயன்ற ஏசு கிருஸ்து, மனதில் கோபம் ஏற்பட்டாலும் ஞானிகள் அது குறித்து வருந்துவதில்லை என்று எடுத்துக்காட்டினார்.

மற்றவர்களின் வன்முறை செயல்களுக்கு தான் பொறுப்பேற்றுக்கொண்டு மனம் வருந்திய அஹிம்சாவாதியான மகாத்மா காந்தியைப்போல் ஞானிகள் பிறர்களின் செயலுக்காகவும் வருத்தப்படுவதில்லை. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் நிலைக்காக உள்ளம் உருகி உழைத்த அன்னை தெரசாவைப் போல் ஞானிகள் யாருடைய நிலைக்காகவும் கவலைப்படுவதில்லை.

ஞானிகள் நிரந்தர இன்பத்துடன் வாழ்வது மற்றவர்கள் துன்பபடுகிறார்கள் என்ற காரணத்தால் தடைபடுவதில்லை.   

துயரம் உடல்களைச்சேர்ந்தது

சாதாரண இருமல், தலைவலி முதல் உயிரைப்பறிக்கும் புற்றுநோய்வரை உடலை பாதிக்கும் வியாதிகள் எண்ணிலடங்கா. சிலர் எவ்வளவுதான் பிரயத்தனப்பட்டு உடலை போற்றிப்பாதுகாத்தாலும் நோய்வாய்ப்படுவதை தடுக்கமுடிவதில்லை. வேறு சிலர் உடல் ஆரோக்கியத்தைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து புகைபிடித்து வயிறு முட்ட உணவு உண்டு எவ்வித உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தாலும் முதுமை வரை உடல் நலக்குறைவு இல்லாமல் இருப்பார்கள். இதிலிருந்து உடல் நலமாய் இருப்பதற்கும் நோயால் பாதிக்கப்படுவதற்கும் ப்ராரப்த கர்மம் மட்டுமே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே உடலின் துன்பங்கள் குறித்து ஞானிகள் வருத்தமடைவதில்லை.

மனதில் ஏற்படும் எண்ணங்கள் வெளிஉலகால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆபாசமான காட்சியை பார்க்க நேரிட்டால் ஆபாசமான எண்ணம் தோன்றுவதை யாராலும் தவிர்க்க முடியாது. முகம் அழகாயில்லை என்பதற்காக கண்ணாடியை குறை சொல்ல கூடாது. மனம் உலகத்தின் இருப்பை உள்ளபடி பிரதிபலிப்பதால் அதில் ஏற்படும் எண்ணங்கள் தவறானவை என்று ஞானி வருத்தப்படுவதில்லை.

நம் பாவ புண்ணியங்களின் பட்டியலை பதிவு செய்து பிறவிகள்தோறும் துயரம் நம்மை தொடர காரண உடல் வழி செய்கிறது. வேதம் படித்து ஞானம் பெற்ற பின் இந்த பட்டியல் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிடுவதால் ஞானிகள் இதுவரை எண்ணிலடங்கா பிறவிகளில் தாங்கள் செய்த பாவ புண்ணியங்கள் குறித்து வருந்துவதில்லை. வில்லிலிருந்து விடுபட்ட அம்பு செல்லும் திசையையோ வேகத்தையோ மாற்றமுடியாது என்பதை ஞானி அறிந்திருப்பதால் அவர் தன் வாழ்வில் தற்பொழுது ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்துவதில்லை.

இராட்டினத்தில் சுழலும்பொழுது அதன் ஏற்ற இறக்கங்களை இன்பத்துடன் அனுபவிக்காமல் பயத்துடன் புகார் செய்துகொண்டிருப்பது புத்திசாலித்தனம் அல்ல என்றும் ஞானி உணர்ந்திருப்பதால் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அவர் மாறா இன்பத்துடன் அனுபவிக்க ஆரம்பித்துவிடுவார்.

நான் பரமன் என்ற அறிவை அடைந்ததும் அந்த அறிவை தவறு என்று மாற்றி எழுத அதை விட உயர்ந்த அறிவு ஏதுமில்லை என்பதால் மூன்று உடல்களைச் சேர்ந்த துயரங்கள் ஞானியை அவர் வாழ்நாழ் முழுவதும் பாதிப்பதில்லை.

துயரம் திரும்பாது

பாம்பை பார்த்து பயந்து உடல் வேர்த்து நடுங்கிக்கொண்டிருக்கும்பொழுது அது  கயிறு என்று தெரிந்தால் தன் அறியாமையை நினைத்து வெட்கம் ஏற்படும். அந்த அனுபவத்திற்கு பிறகு நிஜமான பாம்பைப்பார்த்தாலும் அது விஷமுடையதா என்ற யோசனை ஏற்படுமே தவிர பயம் ஏற்படாது. அதுபோல் மூன்று உடல்களின் துன்பங்களை குறித்து வருந்திய தன் அறியாமை அகன்றதும் அது குறித்து வெட்கப் பட்ட ஞானி அதன்பின் மீண்டும் அந்த முட்டாள்தனத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை.

உயிருடன் இருக்கும் எலியைப்பார்த்தே பயப்படாத பூனை செத்த எலிக்கு பயப்படுவது நடக்காத காரியம். உலகம் உண்மையாக இருக்கிறது என்று எண்ணிய காலத்திலேயே அதில் இன்பம் இல்லை என்பதை அனுபவம் மூலம் அறிந்தவன் ஞானி. எனவே வேதம் படித்து அது இருப்பது போல் தோற்றமளிக்கும் மாயை என்று தெரிந்து கொண்டபின் அவன் துன்பப்படுவது சாத்தியமே இல்லை.

ஒருவரின் வெளித்தோற்றத்தையோ செயலையோ வைத்து அவர் முக்தியடைந்த ஞானி என்பதை தீர்மானமாக சொல்லமுடியாது. அதே போல் சாவுவீட்டில் அழுதுகொண்டிருப்பவர் ஞானி அல்ல என்றும் முடிவு செய்துவிடமுடியாது. அழுவதால் அவர் துன்பப்படுகிறார் என்று அர்த்தமல்ல. மிக நன்றாக இருக்கிறது என்று அனுபவித்து பார்த்த படம் திரையரங்கில் நம்மை அழவைத்திருக்கலாம். உலகம் ஒரு நாடகமேடை என்பதை ஞானி உணர்ந்திருப்பதால் தன்னுடைய நிரந்தர இன்பத்தில் எவ்வித மாற்றமுமில்லாமலேயே சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து மற்றவர்களின் துன்பத்தை குறைக்க, வேண்டிய உதவியை அவர் செய்வார்.

பரமனால் உடலும் மனமும் இல்லாமல் எந்த செயலும் செய்ய இயலாது. மேலும் செய்யப்படும் செயல்கள் யாவும் அவற்றைச்செய்யும் மனிதரின் சுபாவப்படி அமையும். எனவே தன்னை எவ்வித குறையுமில்லாத பூர்ணமான பரமன் என்று உணர்ந்த ஞானிகளின் செயல்கள் கூட ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு மனிதனையும் அவனது பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்கச்செய்ய கடவுள் தன்னை ஒரு கருவியாக கையாளுகிறார் என்பது ஞானிக்குத் தெரியுமென்பதால் தன் கவனத்திற்கு வரும் நிகழ்வுகளுக்கேற்ற செயல்களை தன் சுபாவப்படி செய்வார். எது சரி எது தவறு என்ற கட்டுப்பாடுகள் அவருக்கு இல்லையென்றாலும் தன்னை பின்பற்றுபவர்களுக்கு தான் சரியான உதாரணமாக இருக்கவேண்டும் என்ற கவனம் அவர் மனதில் இருக்கும்.

இளவரசன் என்ற பட்டம் கிடைத்ததும் அதுவரை ஆடிய ஆட்டங்களை அடக்கி வைத்து ஒரு மன்னனைப்போல அரசாங்க நிர்வாகத்தில் அவன் பங்கேற்பதுபோல ஒரு சாதாரண தனிமனிதனாக செயல்பட்ட ஞானி ஞானம் பெற்றதும் தான் கடவுளின் அங்கம் என்ற பொறுப்புடன் காரியங்களை மேற்கொள்வார். ஆயினும் ஒவ்வொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகள் வேறுபடுவதால் ஞானிகளின் செயல்கள் ஒன்றுபோல இருக்காது. எனவேதான் சில சமயங்களில்  ஞானிகளின் செயல்கள் பொதுமக்கள் பார்வையில் தவறாக தெரியலாம். எது எப்படியாயினும் ஞானி துன்பப்படுவதில்லை என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

ஞானம் தவமல்ல

ஒருநாள் மவுன விரதம் இருக்கிறேன் என்று முடிவு செய்தபின் தவறுதலாக ஒரு வார்த்தை பேசிவிட்டாலும் மனதில் ஒரு குற்ற உணர்வு ஏற்படும். நான் பரமன் என்ற ஞானத்தில் நிலைபெறுவது இதுபோன்ற ஒரு தவம் அல்ல. பல வருடங்கள் தன்னை ஒரு சாதாரண மனிதனாக கருதி செயல்பட்டதன் பழக்க தோஷத்தால் ஒரு ஞானி தான் பரமன் என்பதை மறந்து சொல்லத்தகாத வார்த்தைகளால் மற்றவரை திட்டினாலும் ஞானத்துக்கு எவ்வித பங்கமும் ஏற்படாது. அவர் தன் செயலுக்கு வாயளவில் மன்னிப்புக்கேட்டுக்கொண்டாலும் மனதளவில் வருத்தப்படுவதில்லை.

‘சாதாரண மனிதன் கோபப்பட்டாலும் பராவாயில்லை, ஞானியான நான் எப்படி கோபப்படலாம்’ என்று தன்னைத்தான் வருத்திக்கொள்பவன் ஞானி அல்ல. எவ்வித மன இறுக்கமோ கட்டுப்பாடோ இல்லாமல் குழந்தையைப்போல சுதந்திரமாக செயல்படுபவன்தான் உண்மையில் ஞானி.

நிரந்தர ஆனந்தத்துடன் இருப்பது நமது இயல்பு. இயல்புக்கு மாறாக மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி ஒரு குறிப்பிட்ட காலம் அசாதாரண நிலையில் இருப்பது தவம். தவம் செய்வது ஞானத்தை பெறுவதற்காக செய்யப்படும் ஒரு பயிற்சி. ஞானம் பெற்றபின் தவம் செய்வது அவசியமல்ல.

விரதம் இருப்பவர்கள் தங்கள் விரதத்திற்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவனத்துடன் செயல்படுவதைப்போல ஞானிகளுக்கு இந்த உலகம் மாயை என்பதை மறந்துவிடக்கூடாது என்ற கட்டாயமில்லை. ஒருவேளை அவர்கள் அதை மறந்து செயலாற்றினால் கூட அவர்களின் ஞானம் மறைந்துவிடாது. ஆகவே அவர்களின் துன்பம் கலவா இன்ப வாழ்வு எப்பொழுதும் பாதிக்கப்படுவதில்லை.

புதிதாக திருமணம் ஆனவன் வீட்டில் மனைவி காத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை மறந்துபோய் ஒரு நாள் வழக்கம்போல் ஊர் சுற்றிவிட்டு தாமதமாக வீடு திரும்பினாலும் அவன் மணமானவன் என்ற உண்மை மாறாது. ஆனால் அது போல எல்லா நாட்களும் செய்வானானால் விவாகம் ரத்தாகிவிடும். தான் பரமன் என்பதை ஞானி ஏதோ ஓரிருமுறை மறந்து மற்ற மனிதர்களைப்போல் செயல்பட்டால் பரவாயில்லை. அடிக்கடி அவ்வாறு நடந்தால் அவர் ஞானி அல்ல.

வாழ்வின் ஏற்ற இறக்கங்கள்

ஞானம் பெற்றுவிட்ட காரணத்தால் உலகத்தின் இயக்கம் மாறிவிடாது. மற்றவர்களின் வாழ்வில் நடப்பதுபோல் ஞானியும் தன் வாழ்வில் கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் மற்றவர்களைப்போலன்றி ஞானி துன்பத்தில் துவண்டுவிடுவதில்லை. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டால் உலகே மாயை என்பதை தான் ஏற்கனவே அறிந்துகொள்ள வாய்த்தது குறித்து ஞானி சந்தோஷப்படுவானே தவிர வருத்தப்படமாட்டான். தொலைந்து போன நகை கிடைத்தவுடன் நகை வைத்திருந்த பெட்டி கிடைக்கவில்லையே என்று யாரும் வருந்துவது கிடையாது. அதுபோல உலகே மாயை என்று தெரிந்து கொண்ட பின் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஞானிக்கு வருத்தத்தை தருவதில்லை.

நீச்சல் தெரிந்தவன் ஆற்றின் ஆழம் எவ்வளவு என்று விசாரிப்பதில்லை. தரையில் வெறுங்காலில் நடப்பவனுக்குத்தான் பாதையில் முட்கள் இருக்கின்றனவா என்ற கவலை இருக்கும். ஞானம் என்ற செருப்பு அணிந்தவனுக்கு வாழ்க்கைப்பாதையின் ஏற்ற இறக்கங்களைப்பற்றி கவலைகிடையாது.

குத்துச்சண்டையில் வெற்றிபெற்றவன் வலியை பொருட்படுத்துவது கிடையாது. கண்ணாடியில் பார்க்கும்பொழுது கன்னத்தில் தென்படும் காயம் எதிரியை அவன் எப்படி திருப்பியடித்து வீழ்த்தினான் என்பதை ஞாபகப்படுத்துவதால் இன்ப நினைவுகள் ஏற்படுத்துமே தவிர அடிபட்டுவிட்டதே என்று அவன் அழ ஆரம்பித்து விடமாட்டான். வாழ்க்கை என்னும் போராட்டத்தில் அடிபடுவது அனைவரது வாழ்விலும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான். பொதுவாக யாருக்கும் வாழ்வில் நிகழ்ந்த சோக நினைவுகளை நினைவுகூர்ந்தால் துன்பம்தான் ஏற்படும். ஆனால் ஒரு ஞானி எவ்வாறு அந்த துன்பங்கள் தம் வாழ்வை திசைதிருப்பி வேதத்தை படித்து தான் பரமன் என்ற உண்மையை உணர வாய்ப்பையளித்தன என்பதை நினைத்து இன்பமடைவான்.

முழுச்சுதந்திரம்

ஞானிக்கு வேதம் விதித்த எவ்வித சடங்குகளையும் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை. மேலும் தான் சாதிக்கவேண்டியது என்று வாழ்வில் ஒன்றுமில்லை என்பதால் ஞானி முழுசுதந்திரத்துடன் செயல்படுவான். காட்டுராஜாவான சிங்கம் யானை தன்னைவிட பெரிதாய் இருக்கிறதே என்று பொறாமைபடுவதோ குயில் தன்னைவிட நன்றாகப்பாடுகிறதே என்று ஏங்குவதோ கிடையாது. உணவுக்காக வேட்டையாட வேண்டிய அவசியம் கூட இல்லாமல் வேண்டும்பொழுது உணவைப்பெற்று வாழும் ஆண்சிங்கத்தைப்போல் ஞானிகள் தங்கள் வாழ்வில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த முயற்சிக்காமல் கிடைப்பதை ஏற்றுக்கொண்டு இன்பமாக வாழ்வார்கள்.

பணம், புகழ் போன்ற இலக்குகளை அடையவேண்டும் என்று உலகின் பெரும்பாலான மக்கள் முயன்று கொண்டிருப்பார்கள். ஞானி இரு காரணங்களால் இவ்வாறு முயன்று தன்னை வருத்திக்கொள்வதில்லை. முதலாவதாக இவற்றால் இன்பம் கிடைக்கும் என்ற மற்றவர்களின் அறியாமை ஞானிக்கு கிடையாது. இரண்டாவதாக தன்னைச்சேரவேண்டிய பணமோ புகழோ தான் முயற்சி எதுவும் செய்யாமலேயே தன்னைத்தேடிவரும் என்றும் எது தமக்கு கிடைக்காது என்று விதிக்கப்பட்டுள்ளதோ அதை எவ்வளவு முயன்றாலும் அடைய முடியாது என்றும் ஞானிக்கு தெரியும். ஆனால் ஞானி செயல் எதுவும் செய்யாமல் சும்மாயிருப்பார் என்று பொருள்ளல்ல. செய்யும் செயல்கள் தன் செயல்கள் அல்ல என்றும் அவை கடவுளின் ஆணையால் இயங்கும் நிரந்தர இயக்கத்தின் ஒரு பகுதி என்றும் அவர் அறிந்திருப்பதால் அவருக்கு எதிர்பார்ப்புகளும் மனஅழுத்தமும் இருக்காதே தவிர அவர் மற்றவர்களைவிட அதிகமாகவும் சுறுசுறுப்புடனும் செயலாற்றலாம்.

கோவிலுக்கு செல்வது, பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்வது, விரதம் இருப்பது போன்ற தவங்களை மேற்கொள்வது, தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து உடல் உழைப்பை தானமாக தருவது போன்ற புண்ணியம் தரும் செயல்களை பலர் செய்துவருகிறார்கள். இவற்றால் கிடைக்கும் நல்ல பலன்கள் எதுவும் ஞானிக்கு அவசியமில்லை என்பதால் இவை எதையும் அவர் செய்யவேண்டியதில்லை. வேதத்தில் விளக்கப்பட்ட சுவர்க்கம் பற்றிய அனைத்து உண்மைகளும் ஞானிக்குத்தெரியும் என்பதால் அவர் அங்கு செல்லவேண்டிய ஆசை கொள்வதில்லை. அதற்காக செய்யவேண்டிய செயல்களையும் செய்வதில்லை.  

பொருளுக்காகவும் புண்ணியத்திற்காகவும் செய்யும் செயல்கள் குறைவில்லாத நிரந்தர இன்பத்தை தராது என்று உணர்ந்துகொண்ட ஒரு சிலர் வேதத்தை முறையாக படிக்கத்துவங்குவார்கள். சரியான ஆசிரியர் யார் என்று தெரியாமல் சிலகாலம் திண்டாடி பின் கிடைத்த ஆசிரியருக்கு பணிவிடைபுரிந்து அவரின் அருளால் வேதத்தின் உட்கருத்தை புரிந்து கொள்ள முயல்வார்கள். தவறான அறிவை தள்ளிவிட்டு சரியான அறிவைப்பெற இவர்கள் நிறய முயற்சி செய்ய வேண்டும். இந்தப்படிகளை கடந்து விட்ட ஞானிக்கு இதுபோல் எவ்வித கடமைகளும் கிடையாது. மனதளவில் ஆசிரியருக்கு நன்றி செலுத்துவதைத்தவிர ஞானி உடலளவில் எவ்வித செயலும் செய்யவேண்டிய அவசியமில்லை. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுபவன் மற்றவர்களைப்போல் இனி தேர்வுக்கு படிக்கவேண்டிய அவசியமில்லை என்று நினைத்து சந்தோஷப்படுவதுபோல் ஞானி தான் ஞான யோகத்தின் படிகளை கடந்து சுதந்திரம் அடைந்துவிட்டது குறித்து இன்பமடைவான்.

பூர்ணத்துவம்

எப்பொழுதும் ஏதாவது ஒரு குறை மக்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அந்த குறை நீங்கியதும் ஏற்படும் பூர்ணத்துவம் நிலைப்பதில்லை. தனியாக இருப்பதால் நிறைவு ஏற்படவில்லை என்று திருமணம் செய்துகொண்டால் சிறிது காலத்தில் ஒரு குழந்தை இருந்தால்தான் பூரணமடைவோம் என்ற எண்ணம் ஏற்படும். இது மாதிரி அனைத்து மக்களும் பூரணத்துவத்தை அவ்வப்பொழுது அனுபவித்திருந்தாலும் அது நிலையாமல் மறுபடியும் குறை தோன்றுவதற்கு உலகின் நிலையின்மை காரணம். சுற்றியுள்ள மக்கள், நிகழ்வுகள், பொருள்கள் ஆகியவை மற்றுமல்லாமல் தன்னுடைய மனமும் மாறிக்கொண்டே இருப்பதால் எது நிறை என்று ஒரு காலத்தில் தோன்றியதோ அதுவே குறையாக மாறிவிடும். ஞானிகள் மாறாத பரமன் யார் என்ற அறிவை பெற்றதால் அவர்களது பூரணத்துவம் நிலையானது. எனவே மற்றவர்கள் அவ்வப்பொழுது அனுபவிக்கும் குறையாத நிம்மதியை ஞானிகள் எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து அனுபவிப்பார்கள்.

மற்றவர்கள் பூரணம் அடைவதற்காக முயன்று செயல்கள் செய்து அதன் பலனாக கிடைக்கும் நிறைவு நிலைப்பதில்லை என்பதால் தொடர்ந்து வேலை செய்வார்கள். ஆனால் ஞானிகள் என்றும் நிறைவுடன் இருப்பதால் செய்யும் வேலையிலும் கிடைக்கும் பலனிலும் முழு திருப்தியுடன் இருப்பார்கள்.

உலக அனுபவம்

ஞானிகள் உலகை அனுபவிப்பதற்கும் மற்றவர்கள் அனுபவிப்பதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. ஒரு உயர்தர உணவகத்தில் நண்பர்களுடன் அமர்ந்து அங்கு நடக்கும் நாட்டியத்தை பார்த்துக்கொண்டே சுவையான உணவை உண்பது எல்லோருக்கும் இனிமையான அனுபவமாக தோன்றலாம். ஆனால் அனைவரும் அனுபவிக்கும் ஆனந்தம் அந்த உணவகத்தையோ, நண்பர்களையோ, நடனகலைஞரையோ அல்லது உணவையோ சேர்ந்தது அல்ல என்பது ஞானிக்கு மட்டும்தான் தெரியும். நிலவிலிருந்து வருவதாகத்தோன்றும் ஒளி உண்மையில் சூரிய ஒளி என்று தெரியாதவர்கள்தான் இருட்டாயிருக்கும்பொழுது வெளிச்சம் தரும் சந்திரன் சூரியனைவிட முக்கியமானது என்று கொண்டாடுவார்கள். வேதம் படித்து பரமன் நான் என்று அறிந்து கொள்ளும் வரை உலகில் இன்பம் இருக்கிறது என்று அதன் பின் அலைந்து தொடர்ந்து ஏமாற்றமடைவார்கள்.

இரவு பூமியை வெளிச்சமாக்கும் நிலவொளி உண்மையில் சூரிய ஒளிதான். அது போல் உலகப்பொருள்களிலிருந்து கிடைப்பதாகத்தோன்றும் இன்பம் உண்மையில் தன்னிடமிருந்துதான் வருகிறது என்பது ஞானிக்குத்தெரியுமாதலால் அவர் குறையில்லாத பூரண இன்பத்தை என்றும் அனுபவிப்பார்.

ஞானி உணவகம் செல்ல மாட்டார் என்றோ நாட்டியம் பார்க்க மாட்டார் என்றோ இதற்கு பொருளல்ல. மற்றவர்களைப்போல் உலக இன்பங்களை அனுபவித்தாலும் அவர் எதற்கும் அடிமையாக மாட்டார். இன்பமாக இருக்க நண்பர்கள் வேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை.  நண்பர்களுடன் உரையாட வாய்த்தால் அதை இன்பமாகச்செய்வார். இல்லையெனில் தனிமையில் இனிமை காண்பார்.

பூமியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செல்லவேண்டுமென்றால் பணம், நேரம் மற்றும் முயற்சி ஆகியவை அவசியம். எங்குவேண்டுமானாலும் செல்லலாம் என்றால் எதுவும் செய்யவேண்டிய அவசியமில்லை. சும்மா இருந்தாலும் பூமியில் தான் நாம் இருக்கிறோம். அதுபோல் ஞானிக்கு இன்பமாயிருக்க இதுதான் வேண்டும் என்ற கட்டாயமில்லை. தான்தான் இன்பத்தின் இருப்பிடம் என்பதால் கிடைத்ததை அனுபவிக்க ஞானியால் முடியும். மற்றவர்கள் இன்பம் ஒரு குறிப்பிட்ட பொருளில் இருக்கிறது என்று நினைப்பதால் அது கிடைக்காவிட்டால் துன்பம் அடைகிறார்கள். தேடியது கிடைத்தாலும் அவர்களது மனம் மாறுவதால் திருப்தியை தேடியலைவது நிற்பதில்லை.

யாரையும் மாற்ற முடியாது

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்று ஒருவர் தன் இன்பத்திற்கு மற்றவரைச்சார்ந்து இருப்பதுவும் துன்பத்திற்கு காரணம். அவரவர் தன் அறிவுத்திறனுக்கு ஏற்றாற்போல் தம்மைத்தாமே மாற்றிக்கொள்ள முடியுமே தவிர ஒருவர் மற்றவரை தம் விருப்பபடி மாற்றமுடியாது. ஞானி இதை அறிந்திருப்பதால் அவர் யாரையும் மாற்ற முயற்சிக்க மாட்டார்.

ஆப்ரிக்க பழங்குடியினரின் வினோதமான பழக்கவழக்கங்களை எவ்விதமான ஆட்சேபணையுமின்றி ஏற்றுக்கொள்ளும் மக்கள் தங்கள் பக்கத்துவீட்டுக்காரன் தான் சிந்துவது போலன்றி வேறுவிதமாக மூக்கைச்சிந்தினால் அவனை திருத்த முயன்று ஏற்கனவே இருக்கும் விரோதத்தை அதிகப்படுத்திக்கொள்வார்கள். ஞானி அனைவரையும் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொள்வார். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாததால் யார் எப்படியிருந்தாலும் அவருக்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை.

உலகில் இன்பம் இல்லை என்று அவருக்கு தெளிவாகத்தெரிந்தாலும் மற்றவர்கள் இன்பத்தை நாடி செயல்படுவதை அவர் தடுப்பதில்லை. மேஜைமேல் இருக்கும் காலி தட்டில் இனிப்பு இருக்கிறது என்று நினைத்து எட்டி எடுக்க முயற்சி செய்யும் குழந்தையை அதற்கு இனிப்பு கிடைக்காவிட்டாலும் எழுந்து நடக்கும் திறன் அதிகமாகும் என்பதால் அதை நாம் தடுப்பதில்லை. அதுபோல உலகில் இன்பம் இல்லை என்பது அவருக்குத்தெரிந்தாலும் மற்றவர்களின் முயற்சியை தடுக்க மாட்டார். ஏனெனில் ஒவ்வொருவரும் தம் சொந்த அனுபவத்தில் உலகில் இன்பம் இல்லை என்பதை அறிந்து கொண்டால்தான் இன்பத்தின் உண்மையான இருப்பிடம் எது என்று அறிந்து கொள்ளும் ஆவல் அவர்களுக்கு ஏற்படும். எனவே ஞானி அவர்களது முயற்சிக்கு முடிந்தால் உதவுவாரே தவிர அவர்களிடம் உண்மை உலகில் இல்லை என்று கூறி அவர்களை மாற்ற முயலமாட்டார்.

படைப்பின் ரகசியமே வேறுபாடுகள்தான். தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதனைப்போல் எல்லா மனிதர்களும் ஒன்றுபோல் இருந்தால் ஒன்றான பரமன் பலவாக ஆவேன் என்று சங்கல்பம் செய்ததற்கு அர்த்தம் இல்லை. நல்லவர்கள் இருக்கும் வரை தீயவர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அனைவரும் ஆன்மீகப்பயணத்தின் வெவ்வேறு படியில் இருப்பவர்கள் என்பதால் ஞானி யாரையும் மாற்ற முயற்சிப்பதில்லை.

முடிவுரை :

ஆசைகளை நிறைவேறினால் ஆனந்தம் கிடைக்கும் என்ற அறியாமையால் மக்கள் தொடர்ந்து முயற்சி செய்வார்கள். ஆசை நிறைவேறியபின் அது அழியாமல் தொடர்ந்து வளர்ந்து மென்மேலும் செயல்களில் மக்களை தள்ளிவிடும். அலை ஓய்ந்து ஸ்னானம் செய்யகாத்திருப்பதுபோல் ஆசைகள் அனைத்தும் நிறைவேறியபின் ஆனந்தம் அடையலாம் என்று அலைந்துகொண்டிருக்கிறோம் என்பதை மக்கள் தங்கள் அனுபவத்தால் உணரும்பொழுது ஆசைகள் இல்லாமல் வாழ்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள ஆசைபடுவார்கள். பரமனை அறிந்தவுடன் இந்த ஆசை நிறைவேறி அதன்பின் எவ்வித பந்தப்படுத்தும் ஆசைகளும் இல்லாமல் ஞானியாக இன்பவாழ்வை வாழத்துவங்குவர்.

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உலகை உள்ளபடி ஏற்றுக்கொள்வதனால் யாரையும் தன் எதிரி என்று ஒரு ஞானி கருதுவதில்லை. சண்டை-சமாதானம், புகழ்ச்சி-இகழ்ச்சி, வெற்றி-தோல்வி போன்ற அனைத்தும் மாயை என்று ஞானி உணர்ந்திருப்பதால் இன்பம்-துன்பம் ஆகியவற்றுக்கிடையே என்று அவர் மனம் அலைபாய்வதில்லை. அவர் விரும்பியவகையில் நிகழ்வுகள் ஏற்பட்டால் இன்பமும் விரும்பாத வகையில் ஏதேனும் நடந்தால் அது வெறும் கனவு என்ற நிம்மதியும் அவருக்கு ஏற்படும். எனவே வெளிஉலகில் என்ன நிகழ்ந்தாலும் தடையில்லாத நிரந்தர அமைதியுடனும் துன்பம் கலக்காத இன்பத்துடனும் அவர் வாழ்க்கை அமையும்.


பயிற்சிக்காக :

1. இராமகிருஷ்ண பரமஹம்சர், ஏசு கிருஸ்து, மகாத்மா காந்தி மற்றும் அன்னை தெரஸா ஆகியோரின் உதாரணங்கள் மூலம் விளக்கப்பட்ட கருத்து என்ன?

2. உடலின் துன்பங்களை ஞானி ஏன் பெரிதுபடுத்துவதில்லை?

3. எலி-பூனை உதாரணம் மூலம் கூறப்பட்ட கருத்து என்ன?

4. முக்தியடைந்தவர்கள் அழலாமா?

5. நான் பரமன் என்ற ஞானத்தில் நிலைத்து இருப்பதற்கும் தவம் செய்வதற்கும் உள்ள வேற்றுமைகள் என்னென்ன?

6. சோக நினைவுகள் எவ்வாறு ஞானிக்கு இன்பத்தை அளிக்க முடியும்?

7. எந்த மூன்று வேலைகளிலிருந்து ஞானம் அடைந்தவுடன் முழுச்சுதந்திரம் கிடைக்கும்?

8. பூர்ணத்துவத்தை அனுபவிப்பதில் ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

9. சூரிய ஒளி – சந்திர ஒளி உதாரணம் மூலம் விளக்கப்பட்ட கருத்து என்ன?

10. செய்த செயல்களும் அவற்றின் பலன்களும் போதவில்லை என்று ஞானிகள் ஏன் வருந்துவதில்லை?

சுயசிந்தனைக்காக :

1. விவேகானந்தர் சென்னை பிராமணர்களை பறையர்கள் என்று திட்டியது சரியா? (“If I am a sudra, ye the brahmins of Madras are the pariah of pariahs”)

2. உலகில் பலர் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும்பொழுது தான் மட்டும் நிம்மதியாகவும் இன்பமாகவும் இருக்க ஆசைப்படலாமா?

3. மகாத்மா காந்தியும் அன்னை தெரஸாவும் முக்தியடையவில்லையா?

4. மனதில் தவறான எண்ணங்கள் தோன்றக்கூடாது என்று எவறாலும் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மையா?

5. ஞானிகள் உல்லாசப்பயணம் செல்வார்களா?

6. பிரபஞ்சத்தின் ஏதாவது ஒரு பகுதியை தொட என்ன செய்யவேண்டும்?

7. ஆனந்தமாயிருக்க உலகம் அவசியமில்லையா?

8. இன்பத்திற்காக பணம் சம்பாதிக்கும் மக்களுக்கு அவர்கள் செல்லும் பாதை தவறு என்று ஞானி சுட்டிக்காட்டலாமா?

Thursday, December 2, 2010

Lesson 142: Rituals are means to enlightenment (Brahma Sutra 3.4.26-27)

பாடம் 142: முக்தியடைய வேலை செய்வது அவசியம்
பாடல் 451- 452 (III.4.26-27)

பயணம் முடிந்தவுடன் குதிரை அவசியமில்லை என்பதால் குதிரையே தேவை இல்லை என்று முடிவுசெய்துவிடக்கூடாது.  முக்தியடைய ஞானம் மட்டும் போதும் என்பதால் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்ற தவறான முடிவுக்கு வரக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி முழுமையான முக்தியை அனுபவிக்க வேலை செய்வதன் மூலம் மனதை செம்மைபடுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த பாடம் விளக்குகிறது.

உலகத்தை மாற்றியமைப்பதன் மூலம் இன்பமான வாழ்வைப்பெறலாம் என்று நினைத்து அதற்காக பாடுபடுவது ஒருவிதத்தில் சரிதான். ஏனெனில் உழைப்பது மனதை சுத்தம் செய்து முக்தியை பெற மக்களை தகுதி படுத்துகிறது.

நான் பரமன் என்ற ஞானத்தை பெறுவதற்கும் பெற்ற ஞானத்தில் நிலைத்து நிற்கவும் வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகிய இரு முக்கிய தகுதிகள் வேண்டும். விரும்பியபடி உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக தர்மமான முறையில் முடிந்த அளவு பணம் சம்பாதிக்க மக்கள் தொடர்ந்து உழைக்கிறார்கள். இந்த உழைப்புதான் அவர்களுக்கு இவ்விரு தகுதிகளையும் பெற்றுத்தருகிறது.

எனவே தெரிந்தோ தெரியாமலோ அனைத்து மக்களும் முக்தியடையவே முயன்று கொண்டிருக்கிறார்கள். கல்வி கற்பது, வேலை செய்வது, பணம் சேர்ப்பது, திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெறுவது போன்ற செயல்களை செய்வது முக்திக்கு அழைத்துச்செல்லும் படிக்கட்டுக்கள். அவரவர்களின் அறிவுத்திறன் மற்றும் புத்திகூர்மைகேற்ப இந்த படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் இவ்விரு தகுதிகளை பெற்றபின் முக்தி என்றால் என்ன என்பதை விரைவில் அறிந்துகொண்டு அதை அடைய வேதம் படிக்க ஆரம்பிப்பார்கள்.

முக்தியடைவது ஆரம்பத்தில் ஒரு எட்டாக்கனிபோல்தான் தோன்றும். சொந்த வீடு வேண்டும் என்ற ஆசையும் வேண்டிய பணமும் இருந்தால் வீடுகட்டுவது என்பது மிக எளிதான செயல். அது போல தேவையான வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகிய இரண்டை பெற்றபின் தீவிர ஆசையுடன் கடுமையாக உழைப்பவர்கள் அனைவருக்கும் முக்தி நிச்சயம் கிடைக்கும். எனவே நாம் இந்தப்பிறவியில் முக்தியடைய முடியாது என்ற அவநம்பிக்கை அனாவசியம்.

பிறப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து முக்தி பெறுவதால் சுற்றியுள்ள உலகம் மாறிவிடாது. வெற்றி-தோல்வி, வளமை-வறுமை என்ற வாழ்வின் ஊசலாட்டத்தை தொடர்ந்து எதிர்கொள்வதை முக்தியடந்தபின்னும் தவிர்க்க முடியாது. எனவே ஒருவரது மனம் எவ்வளவுதூரம் வைராக்கியம், சாந்தம் ஆகியவற்றின் மூலம் செம்மையடைந்துள்ளது என்பதை பொறுத்தே அவர்களால் குறையாத இன்பத்தையும் நீடித்த நிம்மதியையும் அனுபவிக்க முடியும்.

நூற்றுக்கு நூறுவாங்கி தேர்ச்சி பெற்ற மாணவன் தேர்வில் வெற்றிபெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்களை மட்டுமே பெற்றுத்தேறியவனைவிட சிறந்தவன். அதுபோல முழுமையான அளவு வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகிய தகுதிகளை பெற்றவர்களால் மட்டுமே ஞானத்தின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியும். எனவே தேர்வில் தேர்ச்சியடைந்தபின்னும் பெற்றமதிப்பெண்களை அதிகப்படுத்திக்கொள்ள மறுபடியும் படித்து குறிப்பிட்ட பாடங்களில் மட்டும் மறுதேர்வு எழுதும் மாணவன் போல் முக்தியடைந்தவர்கள் கூட முழுமையான வைராக்கியத்தையும் சாந்தத்தையும் பெற தொடர்ந்து உழைக்க நேரிடலாம்.

வைராக்கியம் (Dispassion)

மற்ற மனிதர்கள், உயிரினங்கள் உள்ளிட்ட உலகப்பொருள்கள், நிகழ்வுகள் ஆகிய எதன் மீதும் பற்றுதல் இல்லாமல் இருத்தல் வைராக்கியம் ஆகும். என்னுடையது என்று கடவுளின் பொருள்களை சொந்தம் கொண்டாடுவதை துறப்பது அவ்வளவு எளிதல்ல. கடவுளை துதித்து ‘என் உடைமைகள் அனைத்தும் ஏற்கனவே உன்னுடையதுதான், அவற்றை உனக்கே அர்ப்பணம் செய்கிறேன்’ என்று ஆரத்தி பாடல்களை தினமும் பாடுவதிலிருந்து கடவுளுக்கு அர்ப்பணம் செய்வது வெறும் உதட்டளவில் என்று தெரிகிறது. உண்மையில் அர்ப்பணம் செய்திருந்தால் அதன் பின் எவ்வித கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

உலகத்தில் உள்ள பொருள்களுக்கு நீடித்த இன்பத்தை தரும் சக்தியில்லை என்பதையும், நாம் அவற்றிலிருந்து பெறுவதாக நினைக்கும் இன்பம், துன்பமுடன் கலந்தே கிடைக்கிறது என்பதையும் உணர்ந்தால் வைராக்கியம் தானாக ஏற்படும். இலையில் உள்ள உணவில் விஷம் கலந்து இருக்கிறது என்பதை கேள்விபட்டால் எவ்வளவு பசியிருந்தாலும் ஒரு வாய் கூட உண்ண மாட்டோம். அது போல நம் துன்பத்துக்கு ஒரே காரணம் நமது ஆசை என்ற புத்தரின் போதனையின் அர்த்தம் புரிந்தால் உலகப்பொருள்களின் மீதுள்ள பற்று மறைந்து வைராக்கியம் பிறக்கும்.

வைராக்கியம் இருப்பவர்கள் நீடித்த இன்பத்திற்கும் நிலையான நிம்மதிக்கும் உலகைச்சார்ந்து இருக்க மாட்டார்கள். நீ இல்லாவிட்டால் நான் இல்லை என்ற அடிமைத்தனம் வைராக்கியம் ஏற்பட்டுவிட்டபின் முற்றிலும் மறைந்து விடும். எந்த ஒரு குறிப்பிட்ட மனிதரோ பொருளோ நம் இன்பத்திற்கு காரணமாய் இருக்க முடியாது என்ற வைராக்கியம் நம் துன்பத்தை முற்றிலும் நீக்கும் சக்தி வாய்ந்தது.

பற்றில்லாமல் இருப்பதே வைராக்கியம். வைராக்கியத்துடன் இருப்பதற்கு எதையும் துறக்க வேண்டிய அவசியமில்லை. நம் குடும்பத்தாரின் நலனுக்கு உழைத்து அவர்களை காப்பது மற்றும் நிறைய பணம் சம்பாதிப்பது போன்ற செயல்களை செய்பவருக்கு வைராக்கியம் இல்லை என்று முடிவு செய்ய முடியாது. மனதில் பற்றில்லாமல் இருப்பதற்கு ஊரை விட்டு காட்டிற்கு சென்று எந்த மனிதர்களுடனும் உறவில்லாமல் வாழவேண்டும் என்று பொருளல்ல.

அன்புடன் பெற்ற பிள்ளைகளை போற்றி வளர்ப்பதை பற்றை துறந்த பின் கூட செய்யலாம். பற்றை மனதளவில் துறப்பதுதான் வைராக்கியம். வங்கியில் வேலை செய்யும் காசாளர் பல லட்சக்கணக்கான ரூபாய்களை நாள்தோறும் புழங்குகிறார். அவருக்கு அவற்றின் மீது பற்றுதல் கிடையாது. பணத்தை கொடுக்கும்பொழுது வருத்தப்படுவதோ வாங்கும்பொழுது சந்தோஷப்படுவதோ இல்லை. ஆயினும் ஒரு ரூபாயைகூட கூடுதலாக யாருக்கும் கொடுக்க மாட்டார். கவனத்துடன் அதே சமயம் எவ்வித பற்றும் இல்லாமல் அவர் எப்படி வங்கியின் பணத்தை புழங்குகிறாரோ அதுபோல் நாம் நம் குடும்பம், உறவினர், சொத்து ஆகிய அனைத்து உடைமைகளையும் கையாண்டால் நமக்கு வைராக்கியம் இருக்கிறது என்று அர்த்தம். பதவி உயர்வு, பண வரவு போன்ற நிகழ்வுகளுக்கு இன்பம் கொடுக்கும் சக்தி சிறிது கூட கிடையாது. அவ்வாறு இருப்பதாக நாம் செய்து கொண்டிருக்கும் கற்பனையை துறப்பதுதான் வைராக்கியம்.

நிலையில்லாத பொருள்கள் நிலையான இன்பத்தை கொடுக்க வல்லவை என்ற தவறான கருத்தை மனதிலிருந்து அப்புறப்படுத்தினால்தான் உண்மையான மன நிறைவை கொடுக்கவல்ல வேதத்தை படிக்க ஆசை வரும். இந்த உண்மையை உணரும்வரை தொடர்ந்து உலகில் உழைப்பதைத்தவிர வேறு வழியில்லை. பதவி உயர்வால் ஏற்பட்ட சந்தோஷத்தைவிட அதிகப்பொறுப்புகளால் வரும் துன்பம் அதிகமாயிருப்பதை உணர்ந்தவுடன் இனி பதவி உயர்வே வேண்டாம் என்று தீர்மானம் செய்தாலும் அடுத்த வருடத்திற்குள் அந்த தீர்மானம் மறந்து விடும்.

இதைத்தான் மயான வைராக்கியம் என்பார்கள். வாழ்வின் நிலையாமையைப்பற்றி உண்மையை உணர்ந்த மகான்களைப்போல் சுடுகாட்டிலிருந்து திரும்பும் வழியில் பேசிக்கொண்டிருந்தாலும் வீட்டில் விட்டுச்சென்ற செருப்பு காணவில்லை என்றால் போகிறது என்று விட்டுவிட அதன்மேல் உள்ள பற்று நம்மை அனுமதிப்பதில்லை.

உண்மையான வைராக்கியத்தைப்பெற உலகின் நிலையாமையை பற்றிய அறிவு மட்டும் போதாது. நமக்கு நாமே அடிக்கடி இதை நினைவுபடுத்தி ஆழ் மனதில் இந்த உண்மையை அழுத்தமாக எழுதிக்கொள்ளவேண்டும். மேலும் பணம், நகை, சொத்து போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களுடன் நெருங்கிப்பழகுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். யார் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்கள், யாருடைய கல்யாண புடவை எத்தனை லட்சம் ரூபாய் என்றெல்லாம் புள்ளி விவரங்கள் வழங்கும் செய்தித்தாள்களை படிக்கவே கூடாது.

புகைபிடிப்பது உடலுக்கு கேடு என்று தெரிந்துகொள்வது அந்தப்பழக்கத்திலிருந்து ஒருவரை விடுவிக்காது. புகைபிடிக்கும் நண்பர்களின் சகவாசத்தை முற்றிலும் தவிர்த்து புகைபிடிப்பது தடை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே பெரும்பாலும் இருப்பது போன்ற செயல்கள் மூலம்தான் ஒருவரால் புகைபிடிப்பதை நிறுத்த முடியும். அது போல உலகில் இன்பத்தை தேடாத சான்றோர்களின் சகவாசம் மற்றும் ஆன்றோர்கள் எழுதிய புத்தகங்களை வாசிப்பது போன்ற நற்செயல்களை செய்வதனால் மட்டுமே முழுமையான வைராக்கியத்தை பெறமுடியும்.  

வெற்றிக்கோட்டை தாண்டியபின்னும் ஓட்டப்பந்தய வீரர் தொடர்ந்து சிறிது தூரம் ஓடுவதைப்போல உலகில் இன்பம் இல்லை என்பது புரிந்த பின்னும் அவற்றின் பின் பலகாலம் ஓடிய வேகம் குறைந்து முழுமையாக நிற்க சிறிது காலம் பிடிக்கும். எனவே வேதம் படித்து உலகை புரிந்து கொண்ட பின் கூட முழுமையான வைராக்கியம் ஏற்படவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தமில்லை.

லிட்மஸ் தாளை அமிலத்தில் ஆழ்த்தினால் நீல நிறமாக மாறும் என்று புத்தகத்தில் படிப்பதுடன் நிறுத்திவிடாமல் ஆராய்ச்சி கூடத்தில் நேரடியாக அதைச் செய்துபார்ப்பதன் மூலம்  உறுதியான அறிவைப்பெறுவதுபோல உலகப் பொருள்களுக்கு நமக்கு இன்பத்தை தரும் சக்தி யில்லை என்று வேதம் கூறுவதை நம் சொந்த அனுபவத்தில் சோதித்து தெரிந்து கொண்டபின்தான் முழுமையான வைராக்கியம் ஏற்படும். வாழ்வில் அடிபட்டு உண்மை புரிய ஆரம்பித்த பின் வேதம் படிக்க தொடங்கியவர்களுக்கு வைராக்கியம் எளிதில் வந்துவிடும்.

ஆக வேதம் படிப்பதால் வரும் அறிவு மற்றும் வாழ்வில் அனுபவம் மூலம் பெற்ற அறிவு ஆகிய இரண்டைபொறுத்து வைராக்கியம் படிப்படியாகத்தான் வளரும்.

வைராக்கியம் - முதல் படி

தொடர்ந்து பொருளை தேடி ஓடும் மக்களுக்கு அதில் உள்ள குறையை பார்க்க நேரம் இருக்காது. எனவே வைராக்கியத்தின் முதல் படியை கடப்பது மிகவும் கடினம். ஏதேனும் சோக நிகழ்வு வாழ்வில் ஏற்படும்பொழுது ஓடும் ஓட்டம் நின்று சோகத்திற்கான உண்மை காரணத்தை ஆராய வாய்ப்பு கிடைக்கும்பொழுது இன்பம் நிலையானது அல்ல என்ற இந்த முதல் படி வைராக்கியம் ஏற்படலாம். அதுவும் மயான வைராக்கியமாய் மறந்து போகாமல் இருக்க வாழ்வில் இன்னும் சில ஏமாற்றங்களை எதிர்கொள்வது இவர்களுக்கு அவசியமாய் இருக்கலாம். புத்திகூர்மை, தர்க்க அறிவு, மற்றவர்களின் அனுபவத்திலிருந்து அறிவு பெறும் சாதுர்யம் ஆகியவை ஒருவரிடம் இருந்தால் அவர் வைராக்கியத்தின் முதல் படியை எவ்வித சோகத்தையும் எதிர்கொள்ளாமலேயே கடக்க முடியும்.

ஆனால் பலருக்கு இது இளமைப்பருவத்தில் வாய்ப்பதில்லை. ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று ஆராயாமல் சுகதுக்கங்களில் தொடர்ந்து உழன்று வயதானபின் இயலாமை காரணமாக உலகப்பொருள்களின் மேல் பற்றுதல் இல்லாததுபோல் இவர்கள் நடந்து கொள்வார்கள். பொருள் கிடைத்தாலும் அனுபவிக்கும் திறன் இல்லாததால் அது எனக்கு வேண்டாம் என்று மறுப்பது  வைராக்கியம் அல்ல. பொருள் கிடைக்கவில்லையே என்று இருந்த ஏக்கம் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கமாக மனதில் தொடர்ந்து இருப்பதால் இவர்களுக்கு வாழ்வில் சலிப்பு ஏற்படுமே தவிர உண்மையை உணர்ந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படாது. இது போன்ற நிலமைக்கு நாம் வரும் முன்னர் பொருள்களின் நிலையாமையை உணர்ந்து முதல் படி வைராக்கியத்தை பெற்றால் முக்தி கிடைப்பது சாத்தியப்படும்.

வைராக்கியம் - இரண்டாம் படி

புலன் இன்பங்களை அளிக்கும் பொருள்கள் கண்முன் இருந்தால் அவற்றை அனுபவிப்பது, இல்லாவிட்டால் அவற்றை தேடி ஓடுவதில்லை என்பது வைராக்கியத்தின் இரண்டாம் படி. வாழ்வின் குறிக்கோள் என்று தீர்மானித்த பிடித்த வேலை, வசதியான வாழ்க்கை, இனிமையான குடும்பம் போன்றவை கிடைத்தபின் இவர்கள் தங்கள் குறிக்கோளை உயர்த்திக்கொள்வதில்லை.   

சிலர் இன்னும் இன்னும் என்று வாழ்நாழ் முழுவதும் பணம் சம்பாதிப்பதிலும் பெற்ற இன்பங்களில் நிறைவு ஏற்படாததால் தொடர்ந்து வெவ்வேறு வகையான இன்பசாதனங்களை நாடி ஓடுவதையும் நிறுத்துவதில்லை. அவ்வாறில்லாமல், கிடைத்தவரை போதும் என்ற நிறைவுடன் வேகமான ஓடுவதை சற்று குறைத்துக்கொண்டவர்கள் வேதம் படிக்க தேவையான குறைந்தபட்ச தகுதியான வைராக்கியத்தின் இந்த இரண்டாம் படியை கடந்தவர்கள்.

புத்திசாலித்தனம் போதாத காரணத்தாலோ மற்றவர்களுடன் போட்டிப்போட்டு முன்னேற முடியாத காரணத்தாலோ ஓட்டத்தை நிறுத்திக்கொள்வது வைராக்கியம் அல்ல. எவ்வளவுதான் உழைத்து பணம், பதவி ஆகியவற்றை பெற்றாலும் அவை நிலையான இன்பத்தை பெற்றுத்தராது என்ற அறிவினால், போதும் என்ற மனம் ஏற்படுவதுதான் வைராக்கியம். முக்தியை நோக்கிய பயணம் இப்பொழுதுதான் ஆரம்பிக்கிறது என்பதால் சோம்பல் காரணமாக முயற்சியை கைவிட்டவர்களால் கடுமையான உழைப்பு தேவைப்படும் ஆன்மிக பயணத்தை தொடர முடியாது.

இந்த நிலையில் இருப்பவர்கள் வேதம் பயில ஆரம்பித்தாலும் உல்லாசப்பயணம், தள்ளுபடியில் விற்பனை, வெளிநாட்டில் பெரிய வேலை என்பது போன்ற செய்திகளை கேட்க நேரிட்டால் முதல் காரியமாக வேதத்தை படிப்பதை ஒத்திப்போட்டு விடுவார்கள். ஏனெனில் உலகில் இன்பம் இல்லை என்பதை இவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளவில்லை. முக்தி அடைவது எப்படி என்று கற்றுக்கொள்வதை ஒரு பொழுது போக்காக நினைத்துக்கொண்டு இருப்பதால் அதில் அவர்களுக்கு ஒரு பிடிப்பு இருப்பதில்லை.

ஆயினும் இவர்களில் ஒரு சிலர் வேதத்தை முறையாக பயின்று நான் பரமன் என்ற உண்மையை உணர்ந்து முக்தியடைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஏற்படுமாயின் இவர்களது மனம் உலகினால் கவரப்பட்டுக்கொண்டேயிருக்கும். முக்தியில் நிலைக்க இவர்கள் தங்கள் வைராக்கியத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.   

வைராக்கியம் - முன்றாம் படி

எவ்வளவுதான் உலகை அனுபவிக்க வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அவற்றை ஒதுக்கித்தள்ளிவிட்டு முக்தி வேண்டும் என்ற தீவிர ஆசையுடன் தேவையான நேரத்தையும் உழைப்பையும் கொடுத்து வேதத்தை பயிலத்தயாராய் இருப்பவர்கள் இந்தப்படியை சேர்ந்தவர்கள்.

முழுமையான வைராக்கியம்

முக்தியடையாமல் முழுவைராக்கியத்தை பெறுவது அறிது. ஏனெனில் உலகில் இன்பம் இல்லை என்பதை உறுதியாகத்தெரிந்து கொள்ள, இன்பம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதில் தெளிவு வேண்டும். ஆனந்தமயமானவன் பரமன் என்கிற ஒருவன் மட்டும்தான் என்று புரிந்து கொண்டால் உலகப்பொருள்கள் தருவதாகத்தோன்றும் இன்பம் பொய்யான தோற்றம் என்பது உறுதியாகத்தெரிந்து விடும். அதன் பின்தான் முழுமையான வைராக்கியம் ஏற்படும்.

இந்த நிலையில் ஒருவர் நிறைய பணம் சம்பாதித்து மிகவசதியான வாழ்வை வாழலாம். வசதி வேறு இன்பம் வேறு என்பதை இவர் புரிந்து கொண்டிருப்பதால் தம்மைச்சேர்ந்த பொருள்களுக்கு அடிமையாகிவிடமாட்டார். இருந்தால் அவற்றை இன்பமாக அனுபவிப்பார். இல்லாவிட்டாலும் அவர் சிறிதும் வருத்தப்படாமல் எப்பொழுதும் போல் இன்பமாக இருப்பார். சிறையில் அடைபட்டாலும் இவர்கள் மனநிம்மதி குலைவதில்லை. விடுதலை கிடைத்தால்தான் இன்பம் என்று இவர்கள் நினைக்காததற்கு காரணம் இன்பத்தின் ஊற்று சிறை கதவுகளுக்கு வெளியே இல்லை என்ற மனத்தெளிவுதான்.

உலகம் மாயை என்ற தெளிவான அறிவு இவர்களுக்கு இருப்பதால் புலன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேதத்தின் கட்டளை இவர்களை கட்டுப்படுத்தாது. ஏனெனில் பரமனின் இயல்பான ஆனந்தத்தை இவர்கள் அனுபவிக்க உலகம் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகிறது. நம் முகத்தை நாமே பார்த்துக்கொள்ள ஒரு கண்ணாடித்தேவைபடுவது போல நம் இயல்பான ஆனந்தத்தை நம் மனம் அனுபவிக்க ஏதேனும் பொருள் தேவை. இரண்டு மாத குழந்தை எனக்கு இந்த பொம்மைதான் வேண்டும் என்று இரண்டு வயது குழந்தையைப்போல் பிடிவாதம் பிடிப்பதில்லை. ஏனெனில் அது நான், எனது என்ற அகங்காரம் இல்லாமல் எது கிடைத்தாலும் அதில் தன் இயல்பான ஆனந்தத்தை அடையாளம் கண்டு கொள்கிறது. அதுபோல வேதம் படித்த முற்றுணந்தோர்கள் முழுமையான வைராக்கியம் பெற்றிருந்தால் இன்பமாக இருப்பதற்கு இந்த பொருள்தான் வேண்டும் என்ற கட்டுப்பாடில்லாமல் எது கிடைத்தாலும் அதில் நிறைவான இன்பத்தை அனுபவிப்பார்கள். தங்களின் உடல் உட்பட்ட பொருள்களின் மாற்றமோ மறைவோ இவர்களை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

வைராக்கியம் இருப்பவர்களுக்கு பொருள்களின் மீது பற்று இருக்காது என்பதால் ஆசை இருக்காது என்று முடிவு செய்யகூடாது. ஆசை இருவகைப்படும். ஆசை நிறைவேறினால்தான் இன்பம் என்ற நிபந்தனையுடன் கூடியது பந்தப்படுத்தும் ஆசை. முழுமையான வைராக்கியம் உள்ளவர்களின் ஆசை பந்தப்படுத்தாத ஆசை. தங்களின் விருப்பு-வெறுப்புக்களின் அடிப்படையிலும் உலக நன்மைக்காகவும் இவர்கள் மற்றவர்களைப்போல் பொருள்கள் மீது ஆசைகொண்டு அதைப்பெற பிரயத்தனம் செய்யலாம். அந்த முயற்சி வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் இவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

துன்பத்திற்கு காரணம் பற்று மட்டும்தான். பொதுவாக மக்களின் ஆசை பற்றோடு கூடிய ஆசை என்பதால் மக்களுக்கு புரியும் வகையில் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார். முழுவைராக்கியம் இருப்பவர்களுக்கு எதன் மீதும் பற்று இருக்காது. எனவே இவர்கள் எவ்வித கவலையும் இல்லாமல் பொருள்களின் மேல் ஆசை கொள்வது, புலன் இன்பங்களை அனுபவிப்பது, மற்றவர்களின் அன்பு செலுத்தி அவர்களின் உயர்வுக்கு உழைப்பது போன்ற சாதாரண செயல்களை மற்றவர்களைப்போல் செய்வார்கள். உணர்ச்சி வயப்படாமல் அறிவு பூர்வமாக ஆலோசித்து செவ்வனே செயல் படும் திறமை வைராக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருக்கும். தன் மகன் என்ற பற்று கைகளில் நடுக்கத்தை ஏற்படுத்துவதால் திறமை மிக்க அறுவை சிகிச்சை நிபுணர் தன் மகனின் அறுவைசிகிச்சைக்கு வேறு ஒரு மருத்துவரின் உதவியை நாடுகிறார். வைராக்கியம் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் நலனில் அக்கறை இருக்குமே தவிர பற்று இருக்காது. செய்யவேண்டியதை செய்வது அக்கறை. செய்யமுடியாததை நினைத்து கவலை கொள்வது பற்று. உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக செயலாற்றுவது மற்றும் பற்றில்லாத அக்கறை கொள்வது ஆகியவை முழுமையான வைராக்கியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

சாந்தம் (Equanimity)

வெற்றியில் துள்ளாமலும் தோல்வியில் துவளாமலும் இருக்க கூடிய மனநிலை சாந்தம் ஆகும். மனக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை, எந்த தடை ஏற்பட்டாலும் கடமைகளை சரியாக செய்தல் மற்றும் கடவுள், வேதம், குரு ஆகியவற்றில் நம்பிக்கை ஆகிய குணங்கள் இதனுடன்பிறந்தவை.

எப்பொழுதும் நம் விருப்பப்படி எல்லாம் நடக்காது. ஏதாவது ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். இந்த செய்திகளை அறிந்ததும் அதற்கேற்றபடி மனம் அலைபாயும் தன்மையுடையது. இந்த அலைபாயும் தன்மை, உலகம் மாயை என்ற அறிவு வந்ததும் வெகுவாக குறைய வேண்டும்.

சாந்தம் இருந்தால்தான் மனம் புத்தியின் கட்டளைபடி செயல்படும். இல்லையென்றால் புலன்களின் இழுப்புக்கு கட்டுப்பட்டு விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் வேலைசெய்யும்.

பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் விவரிக்கப்பட்ட எட்டு அங்கங்களை முறைப்படி பயிலுவதன் மூலம் மனதை அமைதியாக வைத்திருக்க பழக்கிவிட்டால் உலகம் எப்படி மாறினாலும் மனம் சாந்தமாக இருக்கும்.

சாந்தம் - முதல் படி

தெருவில் செல்லும் நபர் நம்மை பார்த்து முறைத்துவிட்டால் மனம் வருத்தப்பட ஆரம்பித்துவிடும். எதிரில் இருக்கும் பொருள்களை கண்ணாடி அப்படியே பிரதிபலிப்பது போல உலக நிகழ்வுகளுக்கேற்ற உணர்ச்சிகளை அவ்வப்பொழுது மனம் அனுபவித்தால் அது இந்த முதல் படியை தாண்டவில்லை என்று பொருள். ஒருவர் நம்மை முட்டாள் என்று திட்டினால் உடனடியாக அழ ஆரம்பித்துவிடாமல், அவர் யார், எதற்காக அவ்வாறு கூறினார் என்றெல்லாம் ஆராய்ந்து அதன்பின் தேவைப்பட்டால் வருத்தப்படுவது என்ற நிலை ஏற்பட்டால் இந்த முதல் படியை கடக்கும் தகுதி வந்துவிட்டது என்று அர்த்தம்.

சாந்தம் - இரண்டாம் படி

வெளியுலக நிகழ்வுகளை அப்படியே உணர்ச்சிகளாக பிரதிபலிக்காமல் அவற்றை அறிவின் அடிப்படையில் ஆராய்ந்து அதற்கேற்ற செயல்களை உணர்ச்சி வசப்படாமல் செய்யத்தொடங்குவது சாந்தத்தின் அடுத்தபடி. புத்தியினால் தணிக்கைசெய்யபடாத உலக நிகழ்வுகள் நேரடியாக மனதை பாதிக்காது. செய்த தவறுகளுக்காக தன்னைத்தானே வருத்திக்கொள்வது, நமது சக்திக்கு மீறிய செயல்களை செய்யமுடியவில்லையே என்று குற்ற உணர்வு ஆகியவை இந்த படிக்கட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படாது.  முதல் படியை கடந்து இந்தப்படியில் நுழைந்தவர்களால் மட்டுமே வேதத்தை படிக்கும் அளவுக்கு மன அமைதி இருக்கும்.

முழுமையான சாந்தம்

நான் பரமன், உலகம் மாயை என்ற உண்மைகளை புரிந்துகொள்ளாமல் இந்த நிலையை அடைய முடியாது. உலகம் உண்மை என்று நினைத்தால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையை முழுதாக அகற்ற முடியாது.

ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழுச்சாந்தமாக இருப்பதுபோல நான் பரமன் என்ற அறிவு நிலைபெற்றுவிட்டால் விழித்திருக்கும் நேரத்திலும் மனம் முழுமையான சாந்தத்துடன் இருக்கும்.

சாந்தமும் வைராக்கியமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளவை. ஒன்று வளரும்பொழுது மற்றதும் வளரும். ஆரம்ப நிலைகளில் இவை வேதம் படிக்கத்தேவையான தகுதியை கொடுக்கும்.

ஞானம்

முறையாக வேதத்தை ஆசிரியரின் துணையுடன் படித்தால் நான், உலகம், கடவுள் ஆகியவற்றைப்பற்றிய ஞானம் கிடைக்கும். உண்மையான ஞானத்தை பெற்றபின் முக்தி கிடைக்கும்.

உண்மை ஒன்றுதான். கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை, பல கடவுளர்கள் இருக்கிறார்கள் என்று முரண்பட்ட கருத்துக்கள் பல இருக்கலாம். ஆனால் முடிவான உண்மை ஒன்றாகத்தான் இருக்கமுடியும்.

மனிதர்கள் பலவிதம். அறியும் திறன், புத்திகூர்மை, மனப்பக்குவம், விவேகம், வைராக்கியம், சாந்தம், புலனடக்கம், மனக்கட்டுப்பாடு, கடமையுணர்வு, சகிப்புத்தன்மை, வேதத்தில் நம்பிக்கை மற்றும் உண்மையை அறிந்துகொள்ளும் தீவிர ஆசை ஆகியவற்றை உள்ளடக்கிய மனப்பாங்கு மனிதருக்கு மனிதர் பெரிதும் வேறுபடுகிறது.

எனவே இருக்கும் ஒரே உண்மையை மனிதர்கள் தங்கள் மனப்பாங்கிற்கேற்ப வெவ்வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள். மதத்தலைவர்கள் அனைவரும் தங்களை பின்பற்றும் பக்தர்களின் மனப்பாங்கை மனதில் கொண்டு அவர்களுக்கு புரியும்வகையில் இருக்கும் ஒரே உண்மையை விளக்குவதை மேலெழுந்தவாரியாக பார்த்தால் உலகில் பல்வேறு மதங்கள் இருப்பது போல தோன்றும்.

இருப்பது ஒரே ஒரு யானை. ஆறு குருடர்கள் அதை தடவிப்பார்த்து அதன் உண்மை சொருபத்தை அறிய முயலுகிறார்கள். எவனொருவன் யானையை ஏற்கனவே அறிந்த ஒருவரின் அறிவுரைப்படி அதன் ஒவ்வொரு அங்கங்களையும் தொட்டுப்பார்த்து பின் மனதில் அவற்றை ஒன்றாக இணைத்து முழு உருவத்தையும் காண்கிறானோ அவனே சரியாக பார்க்கத்தெரிந்தவன். அவனே உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோன். அவ்வாறில்லாமல் யானையின் காலை மட்டும் தடவி அது தூண்போன்ற உருவமுடையது என்றும் அல்லது வயிற்றை மட்டும் அரைகுறையாக தொட்டு அது சுவர் போன்றது என்றும் முடிவு செய்து மற்றவர்கள் ஒருவருக்கொருவர் வாதிட்டுகொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் தனிப்பட்ட அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மையை முழுவதும் உணர்ந்தவர்கள் என்று தனக்குத்தானே முடிவு செய்து கொண்டிருக்கலாம். ஆனால் எவனொருவன் யானை முறம் போன்றது அல்லது கயிறு போன்றது என்ற மற்றவர்களின் முரணான கருத்துக்களை அவர்கள் பார்த்தது காது அல்லது வால் என்று சரியாகப்புரிந்துகொண்டு அவர்களின் கருத்து தவறு என்று கருதாமல் இருக்கிறானோ அவன் மட்டுமே முற்றுணர்ந்தோன். அவன் யாருடனும் எவ்வித விவாதத்திலும் ஈடுபடமாட்டான். யானையின் வயிற்றை முழுவதும் தடவிவிட்டு இது சுவர் போல் இல்லையே என்று ஒருவன் சந்தேகம் கேட்கும்பொழுது மட்டும் அவனுக்கு உண்மையை விளக்குவான்.

அதுபோல் கடவுள் பற்றிய உண்மையை முழுவதும் அறிந்து கொள்ள பின்வரும் படிக்கட்டுகளில் மக்கள் முன்னேறுவார்கள். முன்னேற்றம் அவர்களின் மனப்பாங்கை பொறுத்தது. ஒவ்வொரு படிக்கட்டில் இருப்பவர்களும் தாங்கள்தான் முற்றுணர்ந்தோர்கள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களின் கருத்தை காதுகொடுத்தும் கேட்காமல் இருந்தால் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை.

யார் முடிவான உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோன் என்பதை அறிவது மிக எளிது. எவனொருவன், வாழ்வு துன்பம் கலவாத இன்பமானது என்றும், உலகம் முழுவதும் மிகச்சரியாக இயங்கிக்கொண்டிருப்பதால் எவ்வித மாற்றமும் அவசியம் இல்லை என்றும், தான் செய்யவேண்டிய கடமைகள் என்று எதுவும் இல்லை என்றும் உணர்ந்திருக்கிறானோ அவன் மட்டுமே முற்றுணர்ந்தோன்.

அதிருப்தி, கவலை, வருத்தம், கோபம், துவேஷம், பொறாமை போன்ற மன அழுக்குகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருப்பவனே முக்தியடைந்தவன்.

ஞானம் – முதல்படி

கடவுள் இல்லை என்ற நிலையிலிருந்து கடவுள் இருக்கிறான் என்ற அறிவைப்பெறுவது முதல் படி. தன் கடவுள் மட்டும்தான் உண்மையானவன் என்றும் மற்றவர்களது கடவுளர்கள் பொய்யானவர்கள் என்றும் இவர்கள் நினைப்பார்கள். வேதம் கடவுளால் அருளப்பட்டது என்ற உண்மையை இவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அதை படிக்கவேண்டும் என்ற ஆவல் துளிகூட இருக்காது.

ஞானம் – இரண்டாம் படி

தன்னுடைய கடவுள்தான் மற்றவர்களது கடவுளர்களாக காட்சியளிக்கிறான் என்று நம்புபவர்கள் எல்லாக்கடவுளர்களையும் ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் முதல் படியில் இருப்பவர்களைப்போல் இந்த கடவுள் உயர்ந்தவர் அவர் தாழ்ந்தவர் என்று வாதிட மாட்டார்கள். வேதம், புராணம் ஆகியவற்றை கேட்பது இவர்களுக்கு பிடிக்கும். ஆயினும் அவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு இவர்களுக்கு அறிவுத்திறன் இல்லாமலிருந்தால் அடுத்தபடிக்கு இவர்கள் செல்ல மாட்டார்கள்.

ஞானம் – மூன்றாம் படி

தீவிர ஆசையுடன் இவர்கள் வேதத்தை ஆசிரியரிடம் படித்தாலும் இவர்களுக்கு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உண்மையை மனதில் கிரகித்துகொள்ளும் சக்தி இருப்பதில்லை. ஆனாலும் வேதத்தை தொடர்ந்து படித்து கடவுள் வேறு அவர் படைத்த உலகம் வேறு என்ற அரைகுறை அறிவிலிருந்து முன்னேறி கடவுளின் பருவுடல்தான் உலகம் என்ற உண்மையை புரிந்து கொள்வார்கள்.

முழுமையான ஞானம்

வேதம் படிக்கவும், படித்ததை புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டதை மனதில் அசைபோட்டு அறிவாக மாற்றி அதில் நிலைத்து நிற்பவர்கள் முழுமையான ஞானம் பெற்றவர்கள். வேதவாக்கின் உண்மைப்பொருளை புரிந்துகொண்ட இவர்கள் மற்ற படியில் உள்ளவர்கள் அவர்களின் மனநிலைக்கேற்ப ஒரே உண்மையின் வெவ்வேறு பகுதியைமட்டும் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவர். எனவே உலகில் உள்ள எந்த மதத்தையும் இவர்கள் தவறு என்று சொல்வது கிடையாது. மேலும் யாருடனும் விவாதம் செய்து தங்கள் கருத்துதான் சரியானது என்பதை நிலைநாட்ட இவர்களுக்கு அவசியமில்லை.

தாங்கள் உண்மை என்று நினைத்துக்கொண்டிருப்பதை எவ்வளவு பேர் உண்மை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலை மற்றவர்களுக்கு இருக்கும். எனவே இவர்கள் தங்கள் கொள்கையை பரப்பவும், மதமாற்றம் செய்யவும் முயற்சி செய்வார்கள். இதனால் மனிதனுக்காக மதம் என்ற நிலை மாறி மதத்திற்காக மனிதன் என்ற நிலை இருந்துவருகிறது. தனிப்பட்ட மனிதன் தான் இன்பமாக வாழ முழுமையான ஞானம், வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகியவற்றை பெற வேதத்தின் உதவியை நாடினால் நன்மை அவனுக்கு கிடைக்கும். உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் வேதத்தை ஒதுக்கித்தள்ளினாலும் அதனால் ஏற்படும் நஷ்டம் வேதத்திற்கு இல்லை.

வேதம் படித்து முழுமையான ஞானம் பெற்றபின் வேதம், அனுபவம், தர்க்கம் ஆகியவற்றின்  அடிப்படையில் இதுதான் மேலான அறிவு என்பதை இவர்களால் நிரூபிக்க முடியும். உதாரணமாக தங்களுக்கு மறுபிறவி கிடையாது என்பதை இவர்கள் வேதம் சொல்கிறது என்ற நம்பிக்கையின் பெயரில் ஏற்றுக்கொள்ளாமல் அறிவுபூர்வமாக இவர்கள் தெரிந்துவைத்துக்கொண்டிருப்பார்கள்.

மற்ற படியில் இருப்பவர்கள் தங்கள் கொள்கைகளை விவாதம் செய்யவோ கேள்வி கேட்கவோ பொதுவாக அனுமதிப்பதில்லை. அப்படியே கேட்டாலும் வேதத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது என்றோ அல்லது அது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்றோ சமாதானம் சொல்வார்களே தவிர தர்க்கபூர்வமான பதில்களை கொடுக்க இயலாதவர்களாக இருப்பார்கள்.

முடிவுரை :

பெற்ற ஞானத்தை அழிக்கமுடியாது. ஞானத்தை மாற்ற அதைவிட உயர்ந்த ஞானத்தால் மட்டுமே முடியும். வேதத்திலிருந்து கிடைக்கும் நான் பரமன் என்பதுதான் அனைத்து ஞானங்களை விட மேலானது என்பதால் அந்த ஞானம் மாறவோ அழியவோ வாய்ப்பேயில்லை. எனவே இந்த உண்மையை புரிந்துகொண்டவர்கள்  முக்தியடைவதை தவிர்க்க முடியாது. முக்தியடைந்தபின் மீண்டும் அவர்களால் அஞ்ஞானத்தில் வீழமாட்டார்கள். ஆனால் வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகியவற்றில் முழுமைபெறாவிட்டால் அவர்களது மனம் தொடர்ந்து உலகை நாடி வெற்றி-தோல்விகளில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். மேலும் ஞானத்தை போலன்றி வைராக்கியம் மற்றும் சாந்தம் நிலையானவை அல்ல. அவரவர்களின் நண்பர்கள், அலுவல் மற்றும் பழக்க வழக்கங்களை பொறுத்து இவை குறையலாம். எனவே இவை முழுமை அடையும்வரை முக்தியடைந்தவர்கள் தொடர்ந்து வேதம் கூறும் வழியில் வாழ்ந்தால்தான் முக்தியடைந்ததன் பலனை முழுமையாக அனுபவிக்கமுடியும்.

போதிய வைராக்கியம் இல்லாமல் முக்தியடைந்தவர்களை மாயையான உலகம் தொடர்ந்து கவரும். உலகின் பின் ஓட ஆரம்பித்த மனதிற்கு புத்தி அது மாயை என்பதை ஞாபகபடுத்தி அதன் ஓட்டத்தை நிறுத்த முயற்சிக்கும். எவ்வளவு சீக்கிரம் மனம் புத்தியின் பேச்சை கேட்டு தன் ஓட்டத்தை நிறுத்துகிறது என்பது அவரவர்களின் வைராக்கியத்தின் அளவை பொறுத்தது.

போதிய சாந்தம் இல்லாமல் முக்தியடைந்தவர்களை உலக நிகழ்வுகள் பாதிக்கும். மனதின் அமைதியை குலைத்து அதை அலைபாயச்செய்யும். அதன்பின் புத்தியின் கட்டுப்பாடின் மூலம் மனம் அமைதிபெறும். எவ்வளவுகாலம் மனம் அலை பாயும் என்பது அவரவரின் சாந்தத்தின் அளவை பொறுத்தது.

வைராக்கியமும் சாந்தமும் முழுமை பெற்றுவிட்டால் அதன்பின் குறையாது. எனவே முக்தியடைந்ததற்கு பிறகு, வேண்டிய பயிற்சிகளை மேற்கொண்டு இவ்விரண்டையும் நாம் முழுமைபடுத்திக்கொள்ளவேண்டும்.


பயிற்சிக்காக :

1. வேலை செய்வதன் அவசியமென்ன?

2. வைராக்கியம் என்றால் என்ன?

3. வைராக்கியம் படிப்படியாக எவ்வாறு அதிகரிக்கிறது?

4. வைராக்கியம் உள்ளவர்களின் ஆசைக்கும் மற்றவர்களின் ஆசைக்கும் என்ன வித்தியாசம்?

5. சமாதானம் என்றால் என்ன?

6. சமாதானம் படிப்படியாக எவ்வாறு அதிகரிக்கிறது?

7. ஞானத்தில் உள்ள படிகள் யாவை?

8. நம்முடைய ஞானம் தான் உயர்ந்த ஞானம் என்பதற்கு என்ன அத்தாட்சி?

9. ஞானத்திற்கும் மற்ற இரு தகுதிகளுக்கும் உள்ள முக்கியமான வேற்றுமை என்ன?

10. முதியவர்களுக்கு வாழ்வில் சலிப்பு ஏற்படக்காரணம் என்ன? 

சுயசிந்தனைக்காக :

1. ஓம் ஜெயஜகதீச ஹரே என்ற ஆரத்தி பாடலின் பொருளை ஆராய்க.

2. பணம் சம்பாதிப்பதற்கும் முக்தியடைவதற்கும் உள்ள உறவு என்ன?

3. சிரித்துக்கொண்டே மனிதவெடிகுண்டாக வெடித்துச்சிதற தயாராகும் தீவிரவாதி முக்தியடைந்தவனா?

4. முக்தியடைந்தபின்னும் கர்மகாண்டம் அவசியமா?