Showing posts with label Marriage. Show all posts
Showing posts with label Marriage. Show all posts

Thursday, September 16, 2010

Lesson 133: Role of Vaisvanara Upasana ( பிரம்ம சூத்திரம் 3.3.58)

பாடம் 133: விஸ்வரூப உபாசனையின் பலன்
பாடல் 417 (III.3.58)

மதங்களின் பெயரால் நாம் பின்பற்றும் அனைத்து சடங்குகளையும் உள்ளிட்ட விஸ்வரூப உபாசனை எவ்வாறு படிப்படியாக நம்மை முக்தி அடைய வழிவகுக்கிறது என்பதை  இந்த பாடம் விளக்குகிறது.  

உலக அனுபவங்கள்

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல், முகர்தல் ஆகிய ஐந்து செயல்கள் மூலமாக இவ்வுலகை மனம் அனுபவிக்கிறது. கிடைக்கும் அனுபவங்களை அப்படியே ஏற்றுக்கொண்டால் வாழ்வு என்றும் இனிமையாக இருக்கும். அவ்வாறில்லாமல் அனுபவங்களை பிடித்தவை அல்லது பிடிக்காதவை என்று பிரித்து பிடித்த அனுபவங்களை தேடுவதாலும் பிடிக்காதவற்றை தவிர்க்க முயலுவதாலும்தான் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறுகிறது.

பிடித்தவை என்றும் பிடிக்காதவை என்றும் பாகுபாடு செய்வது மனது. மனதை இவ்விதம் செய்யத்தூண்டுவது நமது ஐந்து புலன்கள். உலகில் உள்ள எந்த ஒரு பொருளுக்கோ அல்லது மனிதருக்கோ நம்மை ஈர்க்கும் சக்தி சிறிதும் கிடையாது. இருப்பதாக தோன்றும் அந்த சக்தியை அளிப்பது நமது புலன்கள்தான். உதாரணமாக தினமும் காலையில் செய்தித்தாளை வாசித்து பழகியகாரணத்தால் நாளின் ஒரு முக்கியமான அங்கம் என்ற முக்கியத்துவத்தை செய்தித்தாள்களுக்கு கொடுப்பது நம் மனம்தான்.

வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் நமது அறிவை அதிகபடுத்தி எது நல்லது எது கெட்டது என்ற பாகுபாடு செய்யும் திறனை வளர்க்கிறது. இந்த பகுத்தறிவு நமது புத்தியை சேர்ந்தது.

மனம்    

நமது ஐந்து புலன்களும் கைகள், கால்கள் மற்றும் பேசும் நாக்கு இந்த மூன்று கரணங்களும் மனதின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவை. ஆனால் பழகிய அனுபவங்கள்தான் வேண்டும் என்ற புலன்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து கண்போன போக்கிலே கால் போக மனம் அனுமதி தந்துவிடுகிறது. எனவே புலன்களின் தேவைகளை நிறைவேற்றும் செயல்களிலேயே நமது கரணங்கள் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றன. புலன்களின் ஆசை நாளுக்கு நாள் வளருமே தவிர குறையாது. மேலும் அவற்றின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் உலக அனுபவங்கள் அமையாது.

இவ்விரு காரணங்களால் வாழ்வை நிம்மதியுடனும் பூர்ணத்துவத்துடனும் ஆனந்தமாக அனுபவிக்காமல் ஒரு குறிப்பிட்ட அனுபவத்திற்காக அனைவரும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.

புத்தி

மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. ஆனால் புலன்களின் ஆசைகளை நிறைவேற்ற தொடர்ந்து உலகில் உள்ள பொருட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனது புத்தியின் அறிவுரையை கேட்க அவகாசத்தை ஒதுக்குவதில்லை. ஓடும் மனதை பிடித்து நிறுத்த புத்திக்கு சக்திவேண்டும். இந்த சக்தி நல்ல புத்தகங்கள் படிப்பது, சான்றோர்களின் தொடர்பு, கர்மயோகமாக வேலைகளை செய்வது ஆகியவை மூலம் பெறலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கும் புத்திக்கு மனதின் துணை அவசியம். கவர்ச்சி நடிகைகளின் படம் இருக்கும் புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லாதபொழுது அறிவை வளர்க்கும் புத்தகங்களை படிக்க மனதிற்கு பொறுமை இருப்பதில்லை.

இந்த போராட்டத்தில் புத்தி வெற்றி அடைய உதவுவது விஸ்வரூப உபாசனை.

மனமும் புத்தியும்

பிடித்தது பிடிக்காதது என்று அனுபவங்களை பாகுபாடு செய்யாமல் நல்லது கெட்டது என்ற அடிப்படையில் நாம் செயல்படவேண்டும். புலன்களின் தாளத்திற்கு ஆட்டம்போட்டுகொண்டிருக்கும் மனதை அவற்றின் பிடியிலிருந்து விடுவித்து புத்தியின் கட்டுப்பாடிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில் உலகம் இன்பத்தை கொடுப்பதுபோல் ஆசைகாட்டி நம்மை மீளா துன்பத்தில் தள்ளிவிடும்.

வாழ்வின் ஒவ்வொரு குறிக்கோள் நிறைவேறியவுடன் அடுத்தது என்ன என்ற கேள்வி எழக்காரணம் நம்மிடம் ஒரு நிறைவு ஏற்படாததுதான். திரும்ப திரும்ப குறிக்கோள்களை அடைந்தபின்னும் தேடியலையும் நிம்மதியும் நிலையான திருப்தியும் எற்படாததற்கு என்ன காரணம் என்று யோசிக்க புத்திக்கு நேரம் கிடைப்பதற்குள் வயதாகி மேலும் ஓடமுடியாமல் வாழ்வில் சலிப்பு ஏற்பட்டுவிடும்.

உடலும் மனமும்

வயிற்றுப்பசி தீர்ந்தாலும் நாக்கு போதும் என்று திருப்தியடைவதில்லை. தீபாவளியை சிறப்பாக கொண்டாடினாலும் இது போதும் என்ற நிறைவு மனதிற்கு ஏற்படுவதில்லை. அடுத்த தீபாவளிக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்த தீபாவளி முடியும் முன்பே மனம் கனவு காண ஆரம்பித்துவிடும். கனவுகளை நனவாக்க மேலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

உடலுக்கு வயதாவது போல் மனதிற்கு வயதாவதில்லை. இன்னும் வேண்டும் என்ற மனதின் ஆசையை தொடர்ந்து வளர்கிறது. ஆனால் ஆசையை நிறைவேற்றும் சக்தி தொடர்ந்து குறைகிறது. புத்திகூர்மையும் உடலின் சக்தியும் முதுமையில் குறைந்து விடும். எனவேதான் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இளமை ஏமாற்றமான முதுமையில் முடிகிறது.

எனக்கு இது பிடித்திருக்கிறது என்று உலகத்தின் பின்னே ஓடும் மனதை நிறுத்தி இவ்வாறு ஓடிக்கொண்டே இருப்பது நமக்கு நல்லதா என்ற கேள்வியை புத்தி கேட்கவேண்டும். இவ்வாறு கேட்பதற்கு சடங்குகள் பெரிதும் உதவுகின்றன.

விஸ்வரூப உபாசனையின் பயன்

கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்குகள் மனதை புத்தியின் கட்டுக்குள் கொண்டுவரும் வேலையை திறம்பட செய்கின்றன. உதாரணமாக புதிய ஆடைகளை உடுத்தி விதவிதமான அலங்காரங்கள் செய்து வாணவேடிக்கை மற்றும் பட்டாசுகளை கொளுத்தி அறுசுவை உணவை உண்டு சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ கொண்டாடும் வாய்ப்பை தரும் தீபாவளி பண்டிகை மனதிற்கு பிடித்தமான ஒரு சடங்கு. பகவத்கீதை படிக்கலாமா தீபாவளியை கொண்டாடலாமா என்ற கேள்விக்கு மனம் சந்தேகமில்லாமல் தீபாவளிக்கு ஓட்டுப்போடும். இதற்கு காரணம் கண், காது, சுவைக்கும் நாக்கு போன்ற ஐந்து புலன்களும் தங்களது பசியை தீர்த்துக்கொள்ள தீபாவளியை ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருப்பதுதான்.

ஆனால் இவற்றின் விருப்பத்தை நிறைவேற்ற விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும், தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும், பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறவேண்டும் என்பது போன்ற பல பிடிக்காத செயல்களை செய்ய மனம் உடன்பட்டே ஆகவேண்டும். எடுத்த நோன்பிற்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடகூடாது என்ற பயபக்தியுடன் சடங்குகள் பின்பற்றபடுகின்றன.

எவ்வளவுதான் நாக்கு தா தா என்று மனதை வற்புறுத்தினாலும் இறைவனுக்கு படைத்து பூஜை செய்யும் வரை ஜீரா சொட்டும் ஜிலேபியை தொட கைகளுக்கு மனம் அனுமதி கொடுப்பதில்லை.  

இவ்வாறு புலன்களை மனதின் கட்டுப்பாட்டிற்கும் மனதை புத்தியின் கட்டுப்பாட்டிற்கும் கொண்டுவர சடங்குகள் உபயோகப்படுகின்றன. எவ்வளவு அதிகமான சடங்குகள் ஒரு குடும்பத்தில் பின்பற்றபடுகின்றனவோ அவ்வளவு விரைவில் மனம் புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.

நாள்தோரும் பூஜை, வாரம்தோரும் உபவாசம், மாதமிருமுறை நோன்பு, வருடத்தில் பத்து பன்னிரண்டு பண்டிகைகள் என்று பல்வேறு சடங்குகளை விஸ்வரூப உபாசனையாக செய்தோமானால் புத்தியின் சக்தி அதிகரித்து ஏன் இந்த சடங்குகளை செய்யவேண்டும் என்று ஆராய தொடங்கி முக்தியை நோக்கிய பயணம் தொடங்கிவிடும்.   

திருமண சடங்குகள்

பெண்வீட்டுகாரர்களுக்கும் பிள்ளைவீட்டுக்காரர்களுக்கும் எவ்வித மனஸ்தாபமும் வராமல் இருக்க எவ்வளவுதான் முயன்றாலும் முடிவதில்லை. இதை இப்படிச்செய்ய வேண்டும், அதை அப்படிச்செய்ய வேண்டும் என்ற சடங்குகள்தான் இதற்கு காரணம். மேலும் திருமணம் முடிந்ததும் இதை இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற ஏக்கம் எல்லோருக்கும் வரும்.

மனிதன் யாருமில்லாத காட்டில் எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் வாழசம்மதிக்கமாட்டான். சுற்றிலும் மனிதர்கள் இருப்பது மிக அவசியம். கிட்ட உறவு முட்ட பகை என்பதும் உண்மை. எவ்வாறு இவ்வுலகில் இன்பமாக வாழ்வது என்பதை வேதத்தை முறையாக படித்தால் மட்டுமே தெரியவரும். இல்லையெனில் தனித்து இருக்க பிடிக்காமல் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து இருக்க பிடிக்காமல் விவாகரத்து செய்துவிட்டு மறுபடியும் வேறு யாரிடம் ஏமாறலாம் என்று தொடர்ந்து இன்பத்தை தேடி  அலைவதை தவிர்க்க முடியாது.

வேதத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாயங்களில் திருமணம் என்பது ஆண் பெண் என்ற இருவர் சம்பந்தபட்டது மட்டும் அல்ல. இரு குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு கொள்வதை உறுதிப்படுத்துவதுதான் திருமணம்.

சடங்குகள் திருமணத்துடன் நிற்பதில்லை. தலை தீபாவளி, குழந்தைக்கு ஆண்டு நிறைவு, மொட்டையடித்து காது குத்துவது என்று தொடர்ந்து வெவ்வேறு சடங்குகளை செய்யவேண்டியிருக்கும். சமுதாயத்துடன் சேர்ந்து வாழும் கட்டாயம் மனிதனுக்கு இருப்பதால் விவாகரத்து என்பதோ இந்த சடங்கை செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதோ பெரும்பாலும் முடிவதில்லை.

எனவே பிடிக்காவிட்டாலும் செய்ய மனம் உடன்பட்டுவிடும். புத்தி வெற்றிபெற்று விடும். எவ்வளவுதான் முயன்றாலும் எல்லாம் நம் விருப்படி எப்பொழுதும் நடக்காது என்ற உண்மை புரிந்தவுடன் நிலையற்ற உலகை மாற்றும் முயற்சியை விட்டுவிட்டு புலன்களின் பின் ஓடும் மனதை மாற்றும் முயற்சி தொடங்கும். இந்த முக்கியமான மாற்றத்திற்கு சடங்குகள் அடிகோலுகின்றன.

முடிவுரை :

உலகம் நிலையற்றது. வெற்றி தோல்வி, வளமை வறுமை, லாபம் நஷ்டம், வாழ்வு தாழ்வு, புகழ்ச்சி இகழ்ச்சி, நட்பு பகை, சண்டை சமாதானம், ஊடல் கூடல் என்ற இருமைகளுக்கிடையே தொடர்ந்து ஊசலாடுவதுதான் வாழ்க்கை.

இன்பம் கிடைக்கும் என்று மனதுக்கு பிடித்ததை நாடி ஓடினால் நிச்சயம் துன்பத்திற்கு ஆளாவோம். இது போன்ற அனுபவங்கள் செய்யும் செயல்களை ஏன் செய்கிறோம் என்று நம் புத்தியை யோசிக்கவைத்து அறிவை அதிகரிக்க வாய்ப்புகளை கொடுக்கின்றன.

விஸ்வரூப உபாசனையாக வழிவழியாக சமுதாயத்தில் பின்பற்றப்படும் சடங்குகள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி அதன்மூலம் புலன்களின் பின் ஓடிக்கொண்டிருக்கும் மனதை கட்டுக்குள் கொண்டு வர உதவுகின்றன.

இந்த உலகம் நாம் துன்பபடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. என்றும் இன்பமாக வாழ்வதற்காகவே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ளது. என்றும் இன்பமாயிருப்பது எப்படி என்பதை புத்தி கற்றுக்கொள்ள அதுவரை தடையாயிருந்த மனதை சடங்குகள் மூலம் திருத்தி வேதம் காட்டும் பாதையில் முன்னேற விஸ்வரூப உபாசனை உறுதுணையாய் இருக்கிறது.

பயிற்சிக்காக :

1. உலக அனுபவங்களில் இருந்து நமக்கு என்ன கிடைக்கிறது?

2. மனதின் நேரடிகட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்ட எட்டு அங்கங்கள் எவை?

3. நிம்மதியாக வாழமுடியாததற்கு இரு காரணங்கள் என்னென்ன?

4. புத்தியின் சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

5. உடல், மனம், புத்தி இவைகளிடையே உள்ள சம்பந்தத்தை விளக்குக.

6. விஸ்வரூப உபாசனை எவ்விதத்தில் முக்தியை நோக்கி பயணிக்க உதவுகிறது?

சுயசிந்தனைக்காக :

1. மனதிற்கு பிடிக்காத செயல்களை செய்துகொண்டு இருந்தால் எப்படி இன்பமாக இருக்க முடியும்?

2. ஆசைகளே தவறு என்றால் இன்பத்தை அடைவது எப்படி?

Wednesday, September 15, 2010

Lesson 132: Vaisvanara Upasana ( பிரம்ம சூத்திரம் 3.3.57)

பாடம் 132: விஸ்வரூப உபாசனை
பாடல் 416 (III.3.57)

சடங்குகள் செய்வது அவசியம் என்று கூறியபின் மதங்களின் பெயரால் மனிதன் செய்யும் அனைத்து சடங்குகளையும் உள்ளடக்கிய விஸ்வரூப உபாசனை பற்றிய விளக்கத்தை இந்த பாடம் தருகிறது.

கடவுள் ஆயிரம் தலைகளை உடையவன் என்று கூறியபின் இரண்டாயிரம் கண்களை உடையவன் என்று கூறாமல் ஆயிரம் கண்களை உடையவன் என்று குறிப்பிடுவதால் அனைத்து ஜீவராசிகளை உள்ளிட்ட இந்த பிரபஞ்சத்தைத்தான் கடவுளின் வடிவமாக வேதம் சித்தரிக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே ‘என் தலை, கைகள், கால்கள் உள்ளிட்ட நான், கடவுளின் ஒரு பகுதியாகத்தான் இருக்க வேண்டும்’ என்ற உண்மையை நம் மனது முற்றிலும் உணர விஸ்வரூப உபாசனை ஒரு படிக்கட்டாக பயன்படும்.

நம்முடைய அனைத்து செயல்களும் கடவுளின் செயல்கள் என்றும் கடவுளின் அனுமதியில்லாமல் சுண்டுவிரலை அசைக்ககூட நம்மால் முடியாது என்பதையும் உண்மையில் புரிந்து கொண்டுவிட்டால் நாம் முக்தியடைந்து விட்டோம் என்று பொருள். இவ்வளவு எளிதாக முக்தியடைவது எல்லோருக்கும் சாத்தியமல்ல என்ற காரணத்தால் வேதம் பல்வேறு சடங்குகளை செய்யவேண்டும் என்று மக்களுக்கு விதித்திருக்கிறது. மனம்போன போக்கில் செயல்படாமல் வேதம் விதித்துள்ளது என்ற கட்டாயத்தினால் செய்யப்படும் சடங்குகள் விஸ்வரூப உபாசனை ஆகும்.

தியானம் செய்து மனதை செம்மை படுத்தி ஆசிரியரின் துணையுடன் வேதத்தை முறையாக பயின்று ‘நான் பரமன்’ என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே முக்தியடையலாம். இந்த பயணத்தை அனைத்து விதமான மக்களும் மேற்கொள்ள உதவும் முதல் படிக்கட்டுதான் விஸ்வரூபஉபாசனை.

செயலும் சிந்தனையும்

பசிக்கும்பொழுது பாலுக்காக அழுவதில் ஆரம்பித்து அனைத்து மனிதர்களும் சிந்திக்க கற்றுக்கொள்வதற்கு முன் செயல் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். எதற்கு செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்யவேண்டும் என்று கேள்வி கேட்டு முறையான பதில்களை தெரிந்து கொள்வதற்கு முன், செய்யும் செயல்கள் நமக்கு பழகிப்போய்விடுகின்றன. பழகிய செயலை தவறு என்று புரிந்துகொண்டாலும் பழக்கங்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. அதேபோல் நன்மை கொடுக்க கூடிய செயல்களை செய்யப்பழகிக்கொள்வதும் மிகவும் கடினம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி நம் உடலை குறித்து மட்டும் கூறப்பட்டதல்ல. நல்ல பழக்கவழக்கங்களை ஏன் என்று கேட்காமல் சிறுவயதிலிருந்து பின்பற்ற வேண்டும்.

கடைபிடிக்கவேண்டிய நல்ல செயல்களையும் தவிர்க்க வேண்டிய தீய செயல்களையும் வேதம் தெளிவாக பட்டியலிட்டு கூறியுள்ளது. வேதத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய கட்டுப்பாடுகளும் பாரம்பரிய சம்பிரதாயங்களும் இந்த பாரத நாட்டு மக்களின் வாழ்வை தொன்று தொட்டு இன்றுவரை வழிநடத்திக்கொண்டு இருக்கின்றன.  எனவே கேள்வி கேட்காமல் இவற்றை பின்பற்றுவதே முக்திக்கு வழிகோலும் முதல் படி.

கேள்வி கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தபின் வேதம் விதித்துள்ள செயல்களின் காரணம் தெரியவரும். ஏற்கனவே அவை பழக்கத்தில் இருக்கும் காரணத்தால் காரணம் தெரிந்தபின் அவற்றை தொடர்ந்து பின்பற்றுவதில் எவ்வித கஷ்டமும் இருக்காது.

எனவே வேதம் கூறும் நல்ல செயல்களை செய்வதன் மூலம் சரியான சிந்தனையை நாம் அடைவோம். நல்ல செயலும் சிந்தனையும் நம்மை முக்தியடைய வழிகோலும்.

உதாரணமாக சூரியன் உதிக்குமுன் எழுந்து வேதம் விதித்த சடங்குகளை செய்து பழகிவிட்டால் அவற்றை செய்யவேண்டிய காரணம் தெரிவதற்குமுன் காலையில் எழுவது பழக்கமாகியிருக்கும். இல்லாவிட்டால் காலையில் எழுவது நல்லது என்ற அறிவு மட்டும் இருக்கும். அதை பின்பற்றுவது மிக சிரமமான காரியமாக இருக்கும்.

எனவே முதலில் சரியான செயல் பின் சரியான சிந்தனை என்பதே சரியான பாதை. சரியான செயல்கள் யாவை என்றும் அவற்றை எப்படி செய்யவேண்டும் என்றும் நாம் யாரிடமும் கற்றுக்கொள்ள தேவையில்லை. தொன்றுதொட்டு வழிவழியாக இருந்துவரும் பழக்கவழக்கங்களை பின்பற்றினால் மட்டும் போதும். அதாவது குடும்பத்தில் உள்ள பெரியோர் பரம்பரை பரம்பரையாக செய்துவரும் அனைத்து சடங்குகளையும் இது பிடிக்கும், வசதியானது என்றோ அது பிடிக்காது, சிரமமானது என்றோ பாகுபாடு இல்லாமல் கடைபிடிக்க வேண்டும்.

ஒரு பெண் மணமானதும் பெற்றோர் வீட்டு பழக்கங்களை விட்டுவிட்டு கணவன் வீட்டில் நடைமுறையில் இருக்கும் சடங்குகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். எது உயர்ந்தது என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஆண்வழியாக வரும் சடங்குகளை பின்பற்ற வேண்டும் என்பதும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளபட வேண்டிய ஒரு விதி. ஏன் சடங்குகள் செய்யவேண்டும் என்ற கேள்வியே தவறு என்னும்பொழுது  எந்த சடங்குகள் என்ற கேள்வி அனாவசியம்.

விஸ்வரூப உபாசனையின் உதாரணங்கள்

காணும் உலகம் முழுவதும் இறைவனின் உருவம் என்பதால் செய்யப்படும் அனைத்து சடங்குகளும் விஸ்வரூப உபாசனையாகும். அனைத்து சடங்குகளும் வேதத்தின் ஆதாரத்தில்தான் ஏற்பட்டுள்ளன என்றாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் வெவ்வேறு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே பரவலான ஒரு சில சடங்குகள் இங்கு உதாரணத்திற்காக விளக்கப்பட்டிருக்கின்றன.

நல்ல காலம்

இராகு காலம், எமகண்டம், குளிகை என்று ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களுக்கு பெயரிட்டு நல்ல நேரத்தில்தான் எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் தொடங்க வேண்டும் என்ற வழக்கம் பெரும்பாலான வீட்டில் இருந்து வருகிறது.

பௌர்ணமியன்றும் அமாவாசையன்றும் சிறப்பு பூஜைகள் செய்து இஷ்டதெய்வத்தை பிரார்த்திப்பதும் ஏழைகளுக்கு உணவழிப்பதும் பலரால் பின்பற்றப்படும் ஒரு பழக்கம்.

மார்கழிமாதம்தோறும் விடியற்காலையில் எழுந்து வாசலில் பெரிய கோலம்போட்டு பூக்கள் வைத்து அலங்காரம் செய்வதும் ஆடி மாதங்களில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்யாமல் இருப்பதும் ஒரு வழக்கம்.

நோன்பு

ஏகாதசி, பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை போன்ற குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பதும் வரலக்ஷ்மி நோன்பு, காரடையான் நோன்பு என குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதித்து நோன்புகள் மேற்கொள்வதும் பரவலாக மக்களால் பின்பற்றபடும் நோன்புகளாகும்.

பண்டிகைகள்

தீபாவளி, பொங்கல், கார்த்திகை போன்ற பண்டிகைகளும் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி, மாரியம்மன் திருவிழா  என்று தெய்வங்களுக்காக கொண்டாடப்படும் சிறப்பு நாட்களும் பல குடும்பங்களில் வழக்கில் இருக்கிறது.

இவையனைத்தும் விஸ்வரூப உபாசனையின் அங்கங்கள்.

விஸ்வரூப உபாசனை மேற்கொள்ளும் விதம்

தொன்று தொட்டு எந்த விதத்தில் சடங்குகள் ஒருகுடும்பத்தில் பின்பற்றபடுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். உதாரணமாக தீபாவளியன்று காலை நாலரை மணிக்கு எழுந்து பெரியவர்கள் கையால் தலைக்கு எண்ணை வைத்து நீராடி புது துணிகளை அணிந்து கொண்டு பூஜை செய்வது ஒரு குடும்ப பழக்கம் என்றால் ஏன் காலை ஏழுமணிக்கு எழுந்து பூஜை செய்யக்கூடாது என்ற கேள்விகள் எதுவும் கேட்காமல் பெரியவர்களின் வழக்கத்தை பின்பற்றவேண்டும்.

விரும்பி ஏற்கும் விஸ்வரூப உபாசனை

குடும்ப வழக்கில் இருக்கும் சடங்குகளை கட்டாயமாக ஏற்று கடைபிடிக்க வேண்டும். அதைத்தவிர பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் செவ்வியல் கலைகளை விரும்பி ஏற்று கற்றுக்கொள்வதும் விஸ்வரூப உபாசனையாகும். மனம்போனபடி கைகால்களை ஆடுவதுதான் நடனம் என்றில்லாமல் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள முறைப்படி கற்று பயிற்சி செய்வது மிகுந்த நன்மை கொடுக்கும்.

விஸ்வரூப உபாசனையில் அடங்காதவை

வேதங்களையும் புராணங்களையும் ஆதாரமாக கொண்டு மதகோட்பாடுகளின்படி இப்படித்தான் செய்யவேண்டும் என்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் சடங்குகள் மட்டுமே விஸ்வரூப உபாசனையாக கருதப்படும். புராணம் என்பதற்கு மிகவும் பழையதானாலும் இன்றும் புதுமையானதாக இருப்பது என்று பொருள். எனவே குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் வருடங்களாக வழக்கில் தொடர்ந்து இல்லாதவை விஸ்வரூப உபாசனையாகாது. மேலும் பயம், பக்தி, சுயகட்டுப்பாடு ஆகியவை உபாசனையின் முக்கியமான அங்கங்கள்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம், பிறந்த நாள் விழா கொண்டாடுவது ஆகியவை விஸ்வரூப உபாசனை ஆகாது. தமிழ் புத்தாண்டு, சதாபிஷேகம் போன்றவை புராணங்களை அடிப்படையாக கொண்டும் இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்ற முறை விதிமுறைகளை பின்பற்றி அமைந்திருப்பதாலும் விஸ்வரூப உபாசனைகளாக கருதப்படும்.      

முடிவுரை :

அகில உலகையும் கடவுளின் உருவமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட புராணங்களின் அடிப்படையில் பல்வேறு சடங்குகளை பின்பற்றும் வழக்கம் இந்த பரத கண்டத்தில் பரவலாக இருப்பது இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட சமூகத்துடன் ஒன்றி வாழவேண்டிய கட்டாயத்தின்பேரில் பண்டிகைகளை கொண்டாடவைத்து அதன்மூலம் மதங்கள் கூறும் தத்துவங்கள் இன்றும் வாழையடி வாழையாக வளர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

‘என்ன தவம் செய்தனை யசோதா, எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க’ என்ற பாடலின் உண்மையான பொருள் முற்றிலும் புரியாவிட்டாலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் சடங்கை தொடர்ந்து செய்தால், என்றேனும் ஒருநாள் ‘நான் பரமன்’ என்பதை உணர்ந்து கொள்ள அது வழிவகுக்கும்.   

பயிற்சிக்காக :

1. விஸ்வரூப உபாசனை என்றால் என்ன?

2. எவை விஸ்வரூப உபாசனைகள் அல்ல?

3. விரும்பி ஏற்கும் விஸ்வரூப உபாசனைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. சிந்தித்து செயல் புரிவது நல்லதா அல்லது செயல் செய்துவிட்டு சிந்திப்பது சிறந்ததா?

2. கேள்விகள் கேட்காமல் செயல்கள் செய்தால் அவை மூடநம்பிக்கைகள் ஆகாதா?

3. விஸ்வரூப உபாசனை எவ்விதத்தில் முக்தியடைய உதவும்?

4. பழகிய செயல்களை விட்டு விட்டு மணமானதும் கணவன் வீட்டு சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்வது மனைவிக்கு சிரமமாக இருக்காதா?

5. பாடத்தில் குறிப்பிடப்பட்ட பாடல் யாசோதை என்ற பெண்ணுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் பொருந்துமா என்று ஆராய்க.

Sunday, April 11, 2010

Lesson 113: On the job training ( பிரம்ம சூத்திரம் 3.3.24 )

பாடம் 113: இல்லறமே நல்லறம்
பாடல் 383 (III.3.24)

மாணவப்பருவத்தை கடந்ததும் இல்வாழ் பருவத்தில் நுழைய வேண்டிய அவசியத்தையும் அதில் கடைபிடிக்கவேண்டிய தர்மங்களையும் இந்த பாடம் எடுத்துரைக்கிறது.

இல்வாழ் பருவம் என்றால் என்ன?

மனிதன் தனித்து வாழத்தகுதியற்றவன். உடலின் அடிப்படையிலும் மனதின் அடிப்படையிலும் சமூகசூழலில் மற்றவர்களுடன் சேர்ந்து வாழும் வண்ணமே அவன் படைக்கப்பட்டிருக்கிறான். அவனது இன்பங்களுக்கு எப்படி மற்ற மனிதர்கள் காரணமாயிருக்கிறார்களோ அது போல அவன் துன்பத்திற்கும் மற்றவர்களே காரணாமாயிருக்கிறார்கள். கிட்ட உறவு முட்டப்பகை என்றாலும் கூட யாரும் தனித்திருக்க விரும்புவதில்லை. பிறந்தது முதல் இறக்கும் வரை மனிதன் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்களை சார்ந்தே வாழ்கிறான்.

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தாய், தந்தை, உடன்பிறப்புகளை உள்ளடக்கிய குடும்பம் என்பதுதான் ஆதாரம். இந்த குடும்ப பொறுப்பை யார் யார் தாங்குகிறார்களோ அவர்கள் இல்வாழ் பருவத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். பணம் சம்பாதிப்பதும் குடும்பத்தை நிர்வகிப்பதும் இல்வாழ் பருவத்தில் இருப்பவர்களின் முக்கிய கடமை. வீட்டில் இருக்கும் வயதானவர்களும் மாணவப்பருவத்தில் இருப்பவர்களும் சமையல் செய்வது, பொருள்களை கடையிலிருந்து வாங்கி வருவது போன்று எவ்வளவு வேலைகள் செய்தாலும் இல்வாழ்வில் இருப்பதாக ஆகாது. மணமான தம்பதிகள் மற்றும் வாழ்க்கைத்துணையை பிரிந்த பின்னும் குடும்ப பொறுப்பை தொடர்ந்து ஏற்று நடத்துபவர்களும் இல்வாழ் பருவத்தில் இருப்பதாக கருதப்படுவார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது இல்வாழ்வு அல்ல.  

மாணவப்பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற வாழ்வு அட்டவணையின் மூன்று கட்டத்தில் இருப்பவர்களுக்கு பணம் சம்பாதிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. இவர்களின் வாழ்வுக்கு வேண்டிய அனைத்து பொருள்களையும் கொடுத்து இவர்களை காப்பாற்ற வேண்டியது இல்வாழ் பருவத்தில் இருப்பவர்களின் கடமை. இவர்கள் யாரேனும் பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை குடும்பத்தலைவரிடம் கொடுத்துவிட வேண்டும். பிள்ளைகள் பெயரில் பணத்தை வங்கியில் போடுவதோ வயதானவர்கள் தங்களுக்கென தனியாக பணம் சேர்த்து வைத்திருப்பதோ இயன்றவரை தவிர்க்கப்படவேண்டிய செயல்கள்.

குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் ஏதாவது ஒருவிதத்தில் சார்ந்திருக்கும் விதத்தில்தான் அமைந்திருக்க வேண்டும். கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு போய் பணம் சம்பாதித்தாலும் அவர்கள் இருவரில் ஒருவர்தான் மொத்த வரவு செலவுகளுக்கு பொறுப்பேற்று குடும்பத்தின் நிதிமந்திரியாக செயல்பட வேண்டும். கணவனும் மனைவியும் குடும்பத்தின் அனைத்து பொறுப்பகளையும் தங்களுக்குள் பிரித்து கொண்டு ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கவேண்டும்.

மனிதன் சமூகத்தில் மற்றவர்களை சார்ந்திருக்கும் அதே நேரத்தில் எப்படி எப்பொழுதும் இன்பமாக இருப்பது என்பதை கற்றுக்கொள்ளும் பயிற்சிபள்ளிதான் இல்லறம். எனவே குடும்பத்தில் உள்ள எந்த ஒரு அங்கத்தினரும் சுதந்திரமாக ஒரு விடுதியில் இருப்பதுபோல் மற்றவர்களுடன் சம்பந்தபடாமல் வாழக்கூடாது.     

இல்வாழ் பருவத்தின் ஆரம்பமும் முடிவும்

திருமணம் இல்வாழ் பருவத்தின் துவக்கம். குடும்பபொறுப்புகளை ஏற்றுக்கொள்ள அடுத்த தலைமுறை தயாரானதும் இல்வாழ் பருவம் முடிவடைந்து வாழ்வு அட்டவணையின் மூன்றாவது கட்டமான ஓய்வு நிலை துவங்க ஆரம்பித்துவிடும். தசரதன் முகக்கண்ணாடியில் நரை முடியை பார்த்ததும் இராமனுக்கு இளவரசனாக பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்ததை போல பொறுப்புகளை மெதுவாக அடுத்த தலைமுறைக்கு மாற்றி தங்கள் கடமைகளை முறையாக செய்து முடித்துவிட்டு தாங்களாகவே ஓய்வெடுத்துக்கொள்ள வயதானவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

இல்வாழ்வின் அவசியம்

இல்வாழ்வை துவங்குவதிலும் பொறுப்புகளிலிருந்து விலகி ஓய்வெடுத்துக்கொள்ள முடிவெடுப்பதிலும் தனிமனிதனுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. வேதம் கூறும் உண்மைகளை மாணவப்பருவத்திலேயே புரிந்துகொண்டு முக்தியடைந்தவர்கள் இல்வாழ்வில் ஈடுபடவேண்டிய கட்டாயமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இது மிக அவசியம். உடலுறவில் ஈடுபாடு சிறிதும் இல்லை என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் திருமணத்தை தவிர்க்க கூடாது.

மாணவப்பருவம் முடிந்ததும் நிறைய பொருள் ஈட்டி சமூக வளர்ச்சியில் பங்கேற்பது மிக அவசியமான பொறுப்பு. வாழ்வின் முக்கால் பாகத்தில் மற்றவர்களை சார்ந்திருப்பதால் இரண்டாவது கால் பாகத்தில் இல்வாழ்வில் ஈடுபட்டு பொறுப்புகளை ஏற்று நடத்துவது அனைவரின் கடமை ஆகும்.

திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே எப்பொழுதும் இன்பமாக இருக்கலாம் என்பது நிச்சயம் நடக்க முடியாத பகல் கனவு. எனவே மாணவப்பருவம் முடிந்ததும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் செய்யும் வரை வேலை செய்பவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் அனைத்தையும் குடும்பத்தலைவரிடம் கொடுத்துவிட வேண்டும். தனக்கென்று சேர்த்து வைக்க திருமணம் ஆகும்வரை யாருக்கும் அதிகாரமில்லை.

திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்தாலும் பெற்றோர்களுடனோ அல்லது உடன் பிறந்தவர்களுடனோ சேர்ந்து குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டுதான் வாழவேண்டும்.


திருமணம் செய்துகொள்வது வசதியாக வாழ்வதற்காகவோ இன்பமாக வாழ்வதற்காகவோ அல்ல. எப்படி எப்பொழுதும் இன்பமாக வாழ்வது என்பதை கற்றுக்கொள்வதற்காகத்தான் வேதம் தனியாக வாழாமல் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நம்மை நிர்பந்திக்கிறது. இல்வாழ் பருவம் நம்மை நாம் மேலும் சுத்தீகரித்துக்கொள்ள நமக்கு கொடுக்கபட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுகின்றன. எனவே மரணம்வரை மணம் செய்தவருடன் வாழ்வது அவசியம். யாரொருவர் விவாகரத்து கோருகிறாரோ அவர் வாழ்க்கைத்தேர்வில் தோற்றுவிட்டார் என்று அர்த்தம். பரஸ்பர நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தன்மை போன்ற குணங்கள் திருமண வாழ்வுக்கு மட்டுமின்றி பொதுவாகவே எல்லோருக்கும் அவசியம். இந்த நல்ல குணங்களை நம்மிடம் வளர்த்துக்கொள்ள  இல்லறம் ஒரு நல்ல பயிற்சி சாலையாகும்.

இல்வாழ் பருவத்தில் இருப்பவர்களின் கூடுதல் கடமைகள்

ஐம்பெரும்வேள்வி, தானம் மற்றும் தவம் ஆகியவை இல்லறத்தில் இருப்பவர்களுக்கு வேதம் விதித்திருக்கும் மேலதிக கடமைகள் ஆகும்.

ஐம்பெரும்வேள்வி 1: தினமும் ஒரு பத்து நிமிடமாவது பிரார்த்தனை செய்ய வேண்டும். எந்த கடவுள், எப்படி பிரார்த்தனை செய்வது போன்றவை அவரவரின் சம்பிரதாயப்படி அமையலாம். காலையில் நம் கடமைகளை துவங்குமுன் பிரார்த்திப்பது நலம். பிரார்த்தனைக்கென்று வீட்டில் குறிப்பிட்ட ஒரு இடத்தை ஒதுக்கி அதில் தனியாக இருந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்வது அவசியம்.

வாரம் ஒருமுறை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று கடவுளை பிரார்த்திக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்திகொடுப்பதும் இல்வாழ்வில் உள்ளவர்களின் கடமையாகும்.

ஐம்பெரும்வேள்வி 2: ஆன்மிக புத்தகங்களையும், வாழ்வில் முன்னேறுவது எப்படி என்பது போன்ற சுயவளர்ச்சி புத்தகங்களையும் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும். நல்லவர்கள், பெரியவர்கள், சான்றோர்கள் ஆகியோருடன் கூடி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை அவர்களுடன் சேர்ந்து கலந்தாய்வு செய்தல் வேண்டும். குடும்பம் என்னும் போராட்டத்தில் அவ்வப்பொழுது ஓய்வெடுத்து சான்றோர்களின் வார்த்தைகள் மூலம் புத்தியை தீட்டிக்கொள்ளுவது அவசியம்.

ஐம்பெரும்வேள்வி 3: பெரியவர்களுக்கு பணி செய்தல் மூன்றாம் வேள்வியாகும். ஓய்வு நிலையை அடைந்த பெற்றோரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இல்வாழ்வில் இருப்பவர்களின் தவிர்க்க முடியாத கடமையாகும். பெற்றோர்களை தவிர மற்ற வயதானவர்களுக்கும் மரியாதையுடன் தொண்டு புரிய வேண்டும்.

ஐம்பெரும்வேள்வி 4: உறவினர்கள், நண்பர்கள், நம் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள், செருப்பு தைத்தல், முடிவெட்டுதல் போன்ற சேவைகளை செய்பவர்கள் ஆகிய அனைவரிடமும் அன்புடனும் தயையுடனும் நடந்து கொள்ளவேண்டும். வீட்டுக்கு வரும் அனைவருக்கும் உணவளித்து உபசரிக்கவேண்டும். முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

ஐம்பெரும்வேள்வி 5:  மரம், செடி, கொடி போன்ற தாவரங்களை வளர்ப்பதும் ஆடு, மாடு, நாய், பூனை போன்ற மிருகங்களை கனிவுடன் பாதுகாப்பதும் பறவைகளுக்கு நீரும் ஆகாரமும் அளிப்பதும் இல்வாழ்வில் இருப்பவர்களின் கடமையாகும். அரிசி மாவினால் வீட்டுக்கு முன் கோலம் இடுவது போன்ற பாரம்பரிய பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

தானம்: எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் உறவினர்கள், நண்பர்கள், முன்பின் தெரியாத ஏழைகள் ஆகியோர்க்கு பண உதவி செய்வது தானம் ஆகும். பொருள் உதவியை தவிர நேரத்தையும் உழைப்பையும் கூட தானமாக தரலாம்.

இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அதை செலவிடுவதும் அவசியமாகும். தானம் என்பது தன்னிடமிருந்து துவங்க வேண்டும். கணவனும் மனைவியும் தங்களது தகுதிக்கு ஏற்ற செலவுகளை செய்ய வேண்டும். இருசக்கர வாகனம் வாங்கும் அளவுக்கு வசதியிருந்தால் கடன் வாங்கி கார் வாங்ககூடாது. அதே சமயத்தில் வாகனம் எதுவும் வாங்காமல் கஞ்சத்தனமாக பேருந்தில் செல்வதும் தவறு.

பிள்ளைகளின் படிப்புக்கும் மற்ற அவசிய  தேவைகளுக்கும் வேண்டிய பணத்தை செலவு செய்யவேண்டும். அதே நேரத்தில் ஆடம்பர செலவுகள் செய்து குழந்தைகள் விரும்பியதை எல்லாம் வாங்கி கொடுக்க கூடாது. மனிதனுக்கு இயல்பாக இருக்கும் லோபம் என்னும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத குணத்தை தவிர்க்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அவசியம். ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்என்றோ நாமே குழந்தை நமக்கேன் குழந்தைஎன்றோ குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்வது தவறு. வாழ்வின் வசதிகளை அதிகமாக அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலத்திற்காகவோ  குழந்தைகள் பணக்கார சூழ்நிலையில் வாழவேண்டும் என்ற எண்ணத்தாலோ குழந்தைகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள கூடாது. மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளும் வகையில் கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளை வளர்ப்பது நன்று.   

தனக்கு மிஞ்சியதை தானம் செய்ய வேண்டும் என்பதை விட தானம் செய்யத் தேவையான அளவு சம்பாதிக்க வேண்டும் என்பது முக்கியம். குடும்பத்தின் மொத்த வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை தானம் செய்ய ஒதுக்க வேண்டும்.

தினமும் வீட்டில் நாம் மட்டும் தனியாக சமைத்து சாப்பிடாமல் வேலைக்காரர்கள் போன்ற மற்றவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதற்காகத்தான் இனிப்புகளை அனைவருடனும் பகிர்ந்து உண்ணும் தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இல்லறத்தில் இருப்பவர்கள் பொங்கல், கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி என்று எவ்வளவு பண்டிகைகள் இருக்கிறதோ அனைத்தையும் முறைப்படி கொண்டாட வேண்டும்.

தவம்: தன்னைத்தானே வருத்திக்கொள்வது தவம். வெயில் காலத்தில் சிறிது நேரம் மின்விசிறி இல்லாமல் இருப்பது, ஒரு வேளை உணவு உண்ணாமல் விரதம் இருப்பது, ஒரு நாள் பேசாமல் மௌனவிரதம் இருப்பது போன்றவை தவம் ஆகும்.

இல்வாழ்வை துவங்கும் காலத்தில் தவம் என்பதை ஒரு கடமையாக செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் திருமணம் செய்துகொள்வதே ஒரு வகையில் தவம்தான். திருமணத்திற்கு முன் சுதந்திரப்பறவையாக நினைத்தபடி வாழ்வை அனுபவித்துக்கொண்டிருப்பதை திருமணம் செய்ததற்கு பிறகு தியாகம் செய்து நம் வாழ்வுத்துணையாக வருபவருடன் சேர்ந்து இல்வாழ்க்கையில் ஈடுபடுவதே ஒரு பெரிய தவமாகும். பின் பிள்ளைகளை பெற்றவுடன் அவர்களை பேணி வளர்க்க நம்முடைய தூக்கம், உணவு உட்கொள்ளும் நேரம் ஆகியவற்றை பெருமளவு தியாகம் செய்து நம்மையறியாமல் நாம் தவம் செய்து கொண்டிருப்போம். எனவே வேதம் தவம் என்பதை இல்லற வாழ்வின் கடைசி கட்டத்தில் செய்ய வேண்டும் என்று விதித்துள்ளது. குழந்தைகள் வயதுக்கு வந்த பின் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் நிலையில் பெற்றோர்கள் தவம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

கடமைகளின் நோக்கம்

இல்வாழ்வில் இருப்பவர்கள் சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகள் ஐம்பெரும் வேள்விகள் ஆகும். தானம் மற்றும் தவம் ஆகியவை இல்வாழ்வில் இருப்பவர்கள் வாழ்வின் அடுத்த கட்டமான ஓய்வு நிலைக்கு தங்களை தயார் படுத்திக்கொள்வதற்காக செய்ய வேண்டிய கடமைகள்.

முடிவுரை :

நாம் நம் வாழ்வின் குறிக்கோளை அடைய இல்வாழ்வு மிக அவசியம். தனியாக செய்ய முடியாத காரியத்தை துணையுடன் செய்வது எளிது என்பதால் வேதம் நம்மை இல்வாழ்வில் ஈடுபட்டு வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக செய்து அதன் மூலம் நம் வாழ்க்கையின் குறிக்கோளை அடையலாம் என்ற வழியை காட்டுகிறது.

இன்பமாக இருப்பதற்காக திருமணம் செய்து கொள்ளகூடாது. இன்பம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்று தெரிந்து கொண்டவரால் மட்டுமே தானும் இன்பமாக இருந்து மற்றவருக்கும் இன்பத்தை கொடுக்க முடியும். திருமணம் என்ற பந்தத்தில் இணையும் இருவரும் மற்றவரிடமிர்ந்து இன்பம் கிடைக்கும் என்ற எதிர்பார்த்தால் ஏமாற்றம் அடைவார்கள். விவாகரத்துக்கள் நடப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். இன்பம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதை தேடிகண்டுபிடிக்க நமக்கு உதவுபவர்தான் நம் வாழ்க்கைத்துணைவர் என்ற உண்மையை புரிந்து கொண்டால் நாம் நம் இல்வாழ்வின் கடமைகளை சரியாக நிறைவேற்றி வேதம் காட்டும் சரியான பாதையில் பயணித்து வாழ்வின் குறிக்கோளை அடையலாம்.

பயிற்சிக்காக :

1.இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் யார் யார்?

2.இல்வாழ் பருவத்தின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவது எப்படி?

3.ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

4. இல்வாழ்வில் நுழைய வேண்டிய அவசியம் என்ன?

5. இல்வாழ்வில் இருப்பவர்களின் முக்கிய கடமைகளாக குறிப்பிடப்பட்ட இரண்டு யாவை?

6. வேதம் இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு விதித்த ஏழு கடமைகள் யாவை?

7.இல்வாழ் பருவத்தில் செய்யவேண்டிய கடமைகளின் அடிப்படை நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1.திருமண சடங்குகளில் கூறப்படும் மந்திரங்களின் பொருள்களை ஆராய்க.

2.மாணவப்பருவம் முடிந்ததும் இல்வாழ்வில் ஈடுபடாமல் துறவு மேற்கொள்ளலாமா?

3.கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலை செய்து தனித்தனியே பணம் சேர்க்கலாமா?

4.தனக்கு பின்னால் மனைவிக்காக பொருள் சேர்த்து வைப்பது கணவனின் கடமையா?

5. வீட்டு வேலைகள் செய்வதையும் பணம் சம்பாதிப்பதையும் கணவனும் மனைவியும் தங்களிடையே எதன் அடிப்படையில் பிரித்துக்கொள்ள வேண்டும்?