Sunday, December 12, 2010

Lesson 143: No food restrictions when life is in danger (Brahma Sutra 3.4.28-31)

பாடம் 143: உயிர் வாழ உணவு
பாடல் 453- 456 (III.4.28-31)

சாந்தோக்ய மந்திரம் (5.2.1) ஒன்று ‘இதை அறிந்தவனுக்கு எது வேண்டுமானாலும் உணவாகலாம்’ என்று கூறுகிறது. நான் பரமன் என்பதை அறிந்தவன் மரணத்தை வென்றுவிடுவதால் உயிர் வாழ அவனுக்கு எவ்வித உணவுக்கட்டுப்பாடும் கிடையாது என்பதை புரிந்துகொள்ள உதவும் விதத்தில் ‘உணவை உண்பவன் என்று யாருமே கிடையாது’ என்ற உண்மையை இந்தப்பாடம் விவரிக்கிறது.

உண்பவன் இல்லை

எது இருக்கிறதோ அதை இல்லை என்று சொல்ல முடியாது. எது இல்லையோ அதை இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. உண்பவன் இல்லை என்று வேதம் கூறுவதிலிருந்து எதை நாம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமோ அது உண்மையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அனுபவத்திலும் அனுபவிப்பவர் மற்றும் அனுபவிக்கப்படும் பொருள் என்ற ஆகிய இரண்டும் இருக்கும். அனுபவிக்கும் பொருள்கள் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தாலும் அனுபவிப்பவர் மாறுவதேயில்லை. நம் கவனம் எப்பொழுதும் அனுபவிக்கப்படும் பொருள்களின் மேல் மட்டுமே இருப்பதால்தான் அனுபவங்கள் நிறைவை  தருவதில்லை. எனவே அனுபவிப்பவரை ஆராய்ந்து அப்படியொருவர் இல்லை என்ற தெளிவை அடைவது அவசியம்.

அனுபவிப்பவர் உணர்வுடன் கூடியவர்

‘கண்ணன் வெண்ணை உண்டான்’ என்பது ஒரு அனுபவம். ‘வெண்ணைப்பானை உரியில் தொங்குகிறது’ என்பது ஒரு அனுபவம் அல்ல. ஏனெனில் இதில் சம்பந்தப்பட்ட இரண்டும் ஜடப்பொருள்கள். ‘கண்ணன் ராதையை முத்தமிட்டான்’. இதில் இரு அனுபவங்களும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஒரு அனுபவிப்பவர் மற்றும் ஒரு அனுபவிக்கப்படும் பொருளும் இருக்கிறது. அனுபவத்தின் தன்மையை தீர்மானிப்பது அனுபவிப்பவரே தவிர அனுபவிக்கப்படும் பொருள் அல்ல. மேலும் ஒருவருடைய அனுபவம் மற்றவரது அனுபவத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. எனவே அனுபவிக்கப்படும் பொருள் உயிருள்ளதா இல்லையா என்ற ஆராய்ச்சி அனாவசியம். அனுபவிப்பவர் மட்டும் உயிருள்ளவராய் இருக்கவேண்டும்.

அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர் முக்கியமானவர்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனுபவிக்கப்படும் பொருள்கள். ஒவ்வொரு பொருளிலிருந்தும் நாம் பெறும் அனுபவங்கள் வேறுபடுவதால் சிலவற்றை விரும்பி அடையவும் வேறு சிலவற்றை வெறுத்து ஒதுக்கியும் பொருள்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து அனுபவங்களை அனுபவிக்கும் அனுபவிப்பவர்தான் அனுபவிக்கும் அனைத்து பொருள்களை விட முக்கியமானவர். ஏனெனில் அனுபவம் ஏற்பட இந்த குறிப்பிட்ட பொருள்தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் பொருள்களுக்கு அனுபவத்தை கொடுக்கும் சக்தியும் கிடையாது. 

உதாரணமாக எவ்வளவு அழகாக வரையப்பட்ட ஓவியம் என்றாலும் அதை பார்ப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் சக்தியும் அது அழகானதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சுதந்திரமும் அனுபவிப்பவருக்கு மட்டும்தான் இருக்கிறது. உயிருள்ள பொருள்களுக்கும் இதே நிலைதான். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்பதை அவரைப்பார்ப்பவர்தான் தீர்மானிக்கிறாரே தவிர அவளுக்கு தான் மற்றவருக்கு கொடுக்கும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி கிடையாது.

திருமணம் செய்துகொள்வதற்கு முன்னால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவேண்டும் என்று பெரும்பாலோர் நினைப்பதற்கு முக்கிய காரணம் திருமணத்திற்குபின் தான் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற சுயநலம்தான். யாராலும் நமக்கு இன்பத்தை கொடுக்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட பின்தான்  அடுத்தவரை அறிந்துகொள்ளுவதைவிட தன்னையறிந்து கொள்வது முக்கியம் என்பது புரியும். 

அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர்தான் முக்கியமானவர் என்பதை உணரும்பொழுது அனுபவிப்பவர் யார் என்பதை அறியவும் ஆராயவும் ஆவல் பிறக்கும்.

அனுபவிப்பவர் அனுபவிக்கப்படும் பொருளாய் இருக்க முடியாது

அனுபவிப்பவர் யார் என்பதை அறியுமுன் அனுபவிக்கப்படும் பொருள் அனுபவிப்பவராக இருக்க முடியாது என்ற தெளிவு அவசியம். முற்றிலும் இருட்டான அறையில் இருக்கும் பொருள்களைப்பார்க்க நமக்கு ஒரு விளக்கின் துணை தேவை. நாற்காலி, புத்தகம் போன்ற அறையில் இருக்கும் பொருள்களின் இருப்பை நமக்கு காட்டித்தருவது விளக்கு. அந்த விளக்கின் இருப்பை காட்டுவது எது? நாற்காலி என்பது தவறான விடை என்பதில் நமக்கு ஒரு தெளிவு அவசியம்.

அது போல நம்முடைய உடல் மற்றும் மனம் போன்றவற்றின் இருப்பை நாம் உணர்வதால் அவை அனுபவிப்பவராக இருக்க முடியாது. எனவே அனுபவிப்பவர் யார் என்ற கேள்விக்கு நம் உடலையும் மனதையும் தவிர்த்த வேறு ஒரு பதிலைத்தான் நம் ஆராய்ச்சியின் முடிவு காட்டவேண்டும்.

அனுபவிப்பவர் ஆத்மாவா அகம்பாவமா?

மனதில் தோன்றும் நான் அல்லது எனது என்ற எண்ணங்களின் தொகுப்பான அகங்காரம் ஜடம் என்பதால் அது அனுபவிப்பவராக இருக்க முடியாது. எனவே உணர்வுமயமான பரமன் அல்லது பரமனின் நிழலுருவான அகம்பாவம் ஆகிய இரண்டையும் ஆராய்வதன் மூலம் அனுபவிப்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள முயலலாம்.

எவ்வித மாற்றத்திற்கும் உட்படாத பரமன் இவ்வுலகுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் அதே சமயத்தில் அதன் இருப்புக்கு ஆதாரமாக இருப்பவன். என் உடலுக்கும் மனதிற்கும் ஆதாரமான பரமனை ஆத்மா என்று அழைக்கலாம்.

அகம்பாவம் என்பது நம் மனதில் தோன்றும் ஆத்மாவின் பிரதிபிம்பம். ஆத்மா மட்டுமே உணர்வுமயமானது. இவ்வுணர்வை நம் மனம் பிரதிபலிக்கும்பொழுது தோன்றும் அகம்பாவம் நம் உடலுக்கு உயிர்கொடுக்கிறது. நம் உடலும் மனமும் ஜடப்பொருள்களாய் இருந்தாலும் அகம்பாவம் என்ற உணர்வின் பிரதிபிம்பம் இவற்றிற்கு இவ்வுலகப்பொருள்களை அனுபவிக்கும் திறனை கொடுக்கிறது.

பௌர்ணமி இரவில் தோன்றும் நிலவு தானே ஒளியை கொடுக்கும் சக்தியற்றது என்றாலும் சூரியனின் ஒளியை பிரதிபலித்து அதன் மூலம் உலகத்தை பிரகாசிக்க வைப்பதைப்போல உணர்வற்ற மனம் என்ற ஜடப்பொருள் உணர்வுமயமான ஆத்மாவின் பிரதிபிம்பமான அகம்பாவத்தின் துணையுடன் உலகப்பொருள்களை அனுபவிக்கிறது. நிலவு என்ற ஜடப்பொருளை மனம் என்ற ஜடப்பொருளுக்கும், சூரியனின் ஒளியை ஆத்மாவுக்கும் நிலவின் ஒளியை அகம்பாவத்துடனும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் உண்மையில் இரவை பகலாக்குவது சூரிய ஒளி என்று தீர்மானிப்பது போல உண்மையில் உலகப்பொருள்களை அனுபவிப்பவன் ஆத்மா என்று முடிவுசெய்யவேண்டிவரும். ஆனால் அனுபவிக்கும் பொருளுக்கும் ஆத்மாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேலும் அனுபவம் ஆத்மாவில் மாற்றம் எதையும் ஏற்படுத்துவதில்லை. எனவே நம் ஆராய்ச்சி தொடர்கிறது.

ஆத்மாவும் அகம்பாவமும்

ஆத்மாவையும் அகம்பாவத்தையும் ஒப்பிட்டு அவற்றின் தன்மையை தனித்தனியாக புரிந்து கொள்வது அவசியம். இதை வித்யாரண்ய சுவாமிகள் பின்வரும் உதாரணம் மூலம் விளக்குகிறார்.

உதாரணம்: சிறுவர்கள் தங்கள் கைகளில் உள்ள ஒரு சிறு கண்ணாடித்துண்டின் மூலம் சூரிய ஒளியை பிரதிபலித்து எதிரில் இருக்கும் சுவரில் சிறு சிறு வட்ட ஒளியை ஏற்படுத்தி அதை இங்குமங்கும் நகர்த்தி விளையாடுகிறார்கள்.

சுவர் – உலகம்
கண்ணாடி – மனம்
சூரிய ஒளி – ஆத்மா அல்லது பரமன்
பிரதிபலிக்கப்பட்ட ஒளி – அகம்பாவம்
சுவற்றில் தோன்றும் ஒளிவட்டங்கள் – பருவுடல்

1. சுவரின் மீது இரு வேறு ஒளி படுகிறது. சூரிய ஒளி முழு சுவரையும் வெளிச்சப்படுத்துகிறது. பிரதிபலிக்கப்பட்ட ஒளி சுவரின்மீது தோன்றும் சிறு சிறு வட்டங்களை ஒளிர்விக்கின்றன.

உலகத்தையும் இருவேறு பொருள்கள் இயக்குகின்றன. உலகம் முழுவதையும் வியாபித்து அதன் இருப்பிற்கு ஆதாரமாய் இருப்பது பரமன். ஒவ்வொரு உயிரையும் உயிரினமாய் காண்பித்து செயல்படுத்துவது அகம்பாவம்.

2. ஒளியூட்டப்பட்ட சுவற்றில் இங்குமங்கும் ஓடும் ஒளிவட்டங்களை இயக்கும் சிறுவர்கள் இது நான், என்னைப்பிடி பார்க்கலாம் என்று கூறி தங்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துடன் ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்கள்.

நம் பருவுடல் ஜடமான உலகின் ஒருபகுதி. அகம்பாவம் இருப்பதால் அது உயிருடன் இருப்பதுபோல தோற்றமளிக்கிறது. நான்தான் இந்த அகம்பாவத்துடன் கூடிய உடல் என்றும் நான் உலகிலிருந்து வேறுபட்டவன் என்றும் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ‘இது நான்’ என்று ஒரு ஒளிவட்டத்தை காட்டும் சிறுவனுக்காவது அது வெறும் விளையாட்டுதான் என்ற அறிவு இருக்கிறது. ஆனால் நான் என்ற சொல் இந்த உடலை குறிப்பதாக உண்மையிலேயே நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

3. உண்மையில் இருப்பது சூரிய ஒளி மட்டுமே. ஆனல் சுவற்றில் இருவேறு வகை ஒளிகள் தென்படுவதால் நாம் அவற்றை தனிப்படுத்தி பேசவேண்டிய அவசியம் நேருகிறது. ஆயினும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்படுவதும் சூரிய ஒளிதான் என்பதால் அனைத்தும் ஒன்றே என்பதை மறந்து விடக்கூடாது.

உணர்வு மயமாக இருப்பது பரமன் ஒருவனே. அகம்பாவம் என்பது பரமனின் பிரதிபலிப்பு என்பதால் அதற்கு ஒரு தனிப்பட்ட உண்மைத்துவம் கிடையாது. எனவே நான் என்ற சொல்லுக்கு உணர்வு மயமான ஆத்மா என்று மட்டும்தான் பொருள். உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களின் ஆதாரமாக இருப்பது நான் என்னும் ஒரே ஆத்மா என்றாலும் விளையாட்டுக்காக ஒவ்வொருவரையும் வெவ்வேறாக கருதி உறவாடுவதில் தவறில்லை. விளையாட்டு என்பதை மறந்து பக்கத்துவீட்டுக்காரர் உண்மையிலேயே நம்மிடமிருந்து வேறான ஒருவர் என்று நினைத்துவிடுவதால்தான் விளையாட்டு வினையாகிறது.

4. முழுசுவரும் சூரியனின் நேரடி ஒளியால் பிரகாசப்படுத்தப்பட்டு இருந்தாலும் கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட சூரியஒளி ஏற்படுத்தும் சிறு வட்டங்கள்தான் அனைவரது கவனத்தையும் கவருகின்றன. இந்த வட்ட ஒளி எஞ்சிய சுவற்றை விட அதிகபிரகாசமாயும் குறிப்பிட்ட வடிவத்துடனும் இருப்பதே இதற்கு காரணம்.

வட்டமான ஒளி சுவற்றை நேரடியாக ஒளிர்விக்கும் சூரிய ஒளியை மறைப்பது போல நம் இருப்புக்கு ஆதாரமான ஆத்மாவை நம் மனதில் பிரதிபலிக்கப்பட்ட அகம்பாவம் மறைத்துவிடுகிறது.  எனவேதான் நான் ஆத்மா என்ற உண்மைக்கு பதில் நான் உயிருடனிருக்கும் உடல் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

5. சூரிய ஒளி இல்லாவிட்டால் சிறுவர்கள் விளையாடவே முடியாது என்றாலும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கும் ஒளிக்கு முக்கியத்துவம் கொடுத்து சூரிய ஒளியை அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை. சூரிய ஒளியின் அவசியத்தையும் அது தங்கள் விளையாட்டுக்கு உதவும் விதத்தையும் அவர்கள் அறிவதில்லை.

பரமன்தான் உலகின் ஆதாரம் என்றாலும் அகம்பாவத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து ஆத்மாவை பொருட்படுத்துவதேயில்லை. அகம்பாவம் நம் உடலுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருப்பதால் உலகில் இயங்க ஆத்மாவின் அவசியத்தை நாம் உணர்வதில்லை. உண்மையில் ஆத்மாதான் நம் உடல் உட்பட்ட உலகில் உள்ள அனைத்து பொருள்களுமாக தோன்றிக்கொண்டிருக்கிறது.

6. சூரிய ஒளி அவசியம். கண்ணாடியில் பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஆடம்பரம். அவசியத்தை விட ஆடம்பரம் முக்கியமானது என்று நினைப்பது அறியாமை.

மனிதர்கள் ஆத்மாவை விட்டு விலகி இருக்கமுடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் அகம்பாவம் இருப்பதில்லை. தன்னை மறந்து ஒரு காரியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் பொழுதும் அகம்பாவம் ஆத்மாவுடன் ஒன்றிவிடுகிறது. எனவே நம்மிடம் இருக்கும் நம் உடல், மனம், அதில் பிரதிபலிக்கும் அகம்பாவம் ஆகியவை ஆடம்பரப்பொருள்கள் என்பதை உணர்ந்தால் உலகில் உள்ள வேறு எந்த பொருள்களும் அவசியமானவை என்று தோன்றாது.

7. சூரிய ஒளி நிரந்தரமானது. பிரதிபலிக்கபட்ட ஒளி தற்காலிகமானது.

ஆத்மா நிரந்தரமானது. அகம்பாவம் பிறப்பு-இறப்பு என்ற சுழலுக்கு உட்பட்டது.

8. சூரிய ஒளி எல்லா இடத்திலும் பரவியிருப்பது. கண்ணாடியின் ஒளி ஒரு சிறு வட்டத்திற்குள் அடங்கியது.

ஆத்மா அளவற்றது. அகம்பாவம் ஒரு உடல், மனம் என்ற சிறிய அளவுக்குள் கட்டுப்பட்டது.

9. சிறுவர்கள் விளையாடாதபொழுதும் சுவற்றை ஒளிர்விப்பது சூரிய ஒளி. மேலும் அவர்கள் விளையாடும்பொழுது சுவரில் தோன்றும் ஒளிவட்டங்களிடையே இருக்கும் சுவரை ஒளிப்படுத்துவதும் சூரிய ஒளியே. கண்ணாடியிலிருந்து பிரதிபலிப்பதும் சூரிய ஒளியே. எனவே அனைத்திற்கும் அடிப்படை சூரிய ஒளி மட்டுமே.

பிரபஞ்சம் அழிந்தபின்னும் இருப்பவன் பரமன். பிரபஞ்சம் இருக்கும்பொழுது ஜடப்பொருள்களின் ஆதாரமான பரமன்தான் அகம்பாவம் என்ற பிரதிபிம்பத்தை ஏற்படுத்தி உயிரினங்களுக்கும் ஆதாரமாயிருக்கிறான்.

10. ஒளி என்ற சொல்லுக்கு ஒரே பொருள் சூரிய ஒளி மட்டுமே.

உணர்வு என்ற சொல்லுக்கு ஒரே பொருள் ஆத்மா மட்டுமே.

ஆத்மாவிற்கும் அகம்பாவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்த பின் அனுபவிப்பவர் ஒவ்வொரு அனுபவத்தையும் அனுபவிக்க இவ்விரண்டின் பங்கு என்ன என்பதை அறிய நம் எண்ணங்களை ஆராய வேண்டும்.

இரு வகை எண்ணங்கள்

எண்ணப்படும் பொருள்களின் அடிப்படையில் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்புற எண்ணங்கள் மற்றும் உட்புற எண்ணங்கள் என இருவகையாக பிரிக்கலாம். உலகில் உள்ள பொருள்களைப்பற்றிய எண்ணம் வெளிப்புற எண்ணங்கள். வெளிப்புற எண்ணங்களைப்பற்றிய எண்ணம் உட்புற எண்ணம்.

மல்லிகையின் மணத்தை நுகரும்பொழுது மனதில் ஏற்படும் எண்ணம் வெளியுலகில் இருக்கும் பூவைப்பற்றியது என்பதால் அது வெளிப்புற எண்ணம். எனக்கு மல்லிகையின் மணம் மிகவும் பிடிக்கும் என்ற எண்ணம் இந்த வெளிப்புற எண்ணத்தைப்பற்றியது என்பதால் அது உட்புற எண்ணம்.

கோபம், சலிப்பு, அன்பு, ஆவல் போன்ற அனைத்து உணர்ச்சிகளும் (emotions) உட்புற எண்ணங்களே. கண் காது போன்ற ஐந்து புலன்களையும் செயல்படுத்தாமல் தியானம் செய்ய அமர்ந்திருக்கும்பொழுது மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் உட்புற எண்ணங்கள்தாம். 

நேரடியாக அனுபவிக்காத பொருளைப்பற்றிய எண்ணம் படிப்பது அல்லது கேட்பதன் மூலம் ஏற்பட்டாலும் அது வெளிப்புற எண்ணமே. எனவே தெரியாத பொருளைப்பற்றிய வெளிப்புற எண்ணம் ஏற்படலாம். ஆனால் உட்புற எண்ணம் இதுபோல தெரியாதபடி இருக்கமுடியாது.  வெளிப்புற எண்ணங்களைப்பற்றிய எண்ணங்கள்தான் உட்புற எண்ணங்கள். எனவே ஒரு வெளிப்புற எண்ணம் இல்லாமல் அதைப்பற்றிய உட்புற எண்ணம் ஏற்பட வாய்ப்பில்லை.

நேரடியாக பார்க்காவிட்டாலும் கடிதம் மூலம் காதலிக்கும் மனிதரைப்பற்றிய எண்ணம் வெளிப்புற எண்ணம். அந்த மனிதரை காதலராக மாற்றியது உட்புற எண்ணம். காதல் ஒரு அனுபவம். இதுபோல் எந்த அனுபவத்தை பெற வேண்டும் என்றாலும் அதற்கு அடிப்படையாக சில எண்ணங்கள் ஏற்படவேண்டும். ஒருவரைப்பற்றிய எவ்வித எண்ணமும் இல்லாமல் அவரைக்காதலிக்க முடியாது. எனவே முதலில் வெளிப்புற எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்றும் அதன் பின் அவை எவ்வாறு உட்புற எண்ணங்களான அனுபவங்களுக்கு ஆதாரமாய் இருக்கின்றன என்பதையும் ஆராய வேண்டும். அனுபவங்கள் ஏற்பட ஐந்து புலன்கள் மூலம் வெளியுலகத்துடன் தொடர்புகொண்டு ஒரு பொருளைப்பற்றிய அறிவு அல்லது எண்ணத்தை பெறவேண்டும்.

வெளிப்புற எண்ணங்கள் ஏற்படும் விதம்

நான் (அறிபவன்) என் எண்ணங்களை கண்கள் (புலன்) மூலம் அறியப்படும் பொருளிடம் அனுப்பி அதைப் போன்ற ஒரு வடிவத்தை எண்ணமாக என் மனதில் திரும்பப்பெற்று அந்தப்பொருள் பானை என்பதை அறிகிறேன்.

அந்தப்பொருளைப்பார்ப்பதற்கு முன் அது என்ன என்பதை நான் அறியாதவன். அதை பார்த்தபின் அதை அறிந்தவன். என் கண்கள், மனம், எண்ணங்கள் ஆகியவை பானையைப்போல் ஜடப்பொருள்கள். ஜடப்பொருள்கள் ஒன்றுடன் ஒன்று உறவாடுவதால் எவ்வித அனுபவமோ அறிவோ ஏற்படாது. எனவே நான்  அறியாதவன் என்ற நிலையில் இருந்து அறிந்தவன் என்ற நிலைக்கு மாற எனக்கு அகம்பாவத்தின் துணை தேவை.

என் எண்ணங்கள் பானையை நோக்கிப்பயணிக்கும்பொழுது அதனை முன்னடத்தி செல்வது அகம்பாவம். ஈட்டியின் முனையில் கூரான இரும்பு இல்லாவிட்டால் அது இலக்கைத்துளைக்காது. அது போல நான் என்ற உணர்வுடன் செல்லாவிட்டால் நம் எண்ணங்களால் எவ்வித பொருளையும் அறியமுடியாது. உதாரணமாக அருகில் உள்ள ‘கடிகாரத்தில் எவ்வளவு எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன’ என்ற கேள்விக்கு பதில் தெரியவேண்டுமானால் நான் என்ற உணர்வுடன் நம் எண்ணங்கள் செயல்பட்டு கடிகாரத்தை கவனமாகப்பார்க்க வேண்டும். அதன்பின்  ‘நேரம் என்ன’ என்ற கேள்வியை கேட்டால் நாம் மறுபடியும் கடிகாரத்தை பார்க்க வேண்டியிருக்கும். ஏற்கனவே பார்த்தபோது அது காட்டும் நேரம் கண்ணில் தெரிந்திருந்தாலும் அது மனதில் பதியாததற்குக்காரணம் ஈட்டிமுனையில் கூரான இரும்பு இல்லாததுபோல் நம் எண்ணங்களின் முன் அகம்பாவம் இல்லாததுதான். எனவே அறியாதவனை அறிந்தவனாக மாற்ற அகம்பாவத்தின் உதவி அவசியம். நம் கண், மனம், பானை போன்ற ஜடப்பொருள்கள் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பது ஆத்மா.

ஒரு பொருளை அறிகிறோம் அல்லது அறியவில்லை என்பதை அறிவது ஆத்மா. அறியாத பொருளை அறிந்த பொருளாக மாற்றுவது அகம்பாவம். எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் எதனுடனும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஆத்மா அறியாதவனை அறிந்தவனாக மாற்றும் செயலை செய்யும் சக்தியற்றது. எனவே பானையை நாம் அறிந்து கொள்ள அகம்பாவத்தின் துணை அவசியம்.

கம்புயூட்டர் இயங்க ஆதாரமாக இருக்கும் மின்சாரம் கணக்கு போடும் திறன் இல்லாதது. அதுபோல அனைத்து வேலைகளையும் அகம்பாவம் செய்வதற்கு ஆதாரமாக மட்டும் இருப்பது ஆத்மா.

ஒரு பொருளைப்பற்றிய அறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை அகம்பாவத்தால் தீர்மானிக்கமுடியாது. ஏனெனில் அகம்பாவம் தொடர்ந்து மாற்றமடையும் தன்மையுள்ளது. பானையை அறியாத அகம்பாவம் பானையை அறிந்த அகம்பாவமாக மாறிவிடுவதால் இந்த மாற்றத்தை அறிய மாறாத ஆத்மா அவசியம். மேலும் அகம்பாவம் வந்து போகும் தன்மையுடையது. ஆழ்ந்த உறக்கம், சமாதி நிலை மற்றும் தன்னை மறந்து நாம் ஒரு வேலையை செய்யும்நேரம் ஆகிய சமயங்களில் அகம்பாவம் இருப்பதில்லை. ஆத்மா நிலையானது.

ஜடப்பொருள்களான நம் மனம் மற்றும் உடல் ஆகியவை இடைவிடாமல் ஏதேனும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் உயிருள்ளவைகளாக இருப்பதற்கு அகம்பாவம் அவசியம். எவ்வித செயலிலும் ஈடுபடாமல் எதனுடனும் தொடர்பு கொள்ளாமல் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பது ஆத்மா.

இது பானை என்று அறிந்து கொள்ள மாற்றமடையும், நிலையில்லாமல் தொடர்ந்து செயல்புரியும் அகம்பாவம் அவசியம். நான் பானையை அறியவில்லை அல்லது அறிகிறேன் என்பதை அறிந்து கொள்ள மாறாத, நிலையான, எவ்வித செயலிலும் ஈடுபடாத ஆத்மா அவசியம்.

உட்புற எண்ணங்கள் ஏற்படும் விதம்

விலங்குகளுக்கு உட்புற எண்ணங்கள் ஏற்படுவதில்லை. பசிக்கும்பொழுது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது வெளிப்புற எண்ணம். எந்த உணவை சாப்பிடலாம் என்று யோசிப்பது உட்புற எண்ணம். நிகழ்காலத்தில் ஏற்படும் வெளிப்புற எண்ணங்களை அடிப்படையாகக்கொண்டு இது இப்படி நடந்திருக்க கூடாது என்று கடந்தகால நிகழ்வுகளைப்பற்றியும் நாளை என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்காலத்தைப்பற்றியும் நமது மனதில் உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன. மனிதனின் மனம் மட்டுமே பரமனின் மூன்று தன்மைகளையும் முழுமையாக பிரதிபலிப்பதால் அறிந்து கொள்ளவும், அறிந்ததை அடையவும், அடைந்ததை அனுபவிக்கவும் தேவையான உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன. இவ்வெண்ணங்களை அடையாளம் காட்டுவது அகம்பாவம்.

பானையை ஒரு அட்டை பெட்டியினுள் வைத்து மூடி இதனுள் என்ன இருக்கிறது என்று கேட்டால் அதனுள் ஒரு பொருள் இருக்கிறது என்று மட்டும் தெரியவருமே தவிர அது என்ன பொருள் என்று தெரியாது. வெளிப்புற எண்ணத்திற்குண்டான பொருள் தெரியாத ஒன்றாக இருக்கலாம். இதுபோல் பொருள் தெரியாத உட்புற எண்ணங்கள் இருக்கமுடியாது. ஏனெனில் நம் எண்ணங்களை அடிப்படையாக கொண்டு தோன்றுவதுதான் உட்புற எண்ணங்கள் என்பதால் இவற்றின் தோற்றம், மறைவு ஆகியவற்றை தெளிவாக நாம் அறிவோம். உதாரணமாக மனதில் கோபம் ஏற்பட்டால் அது நமக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

வெளிப்புற எண்ணத்தை ஒளிர்விப்பது ஆத்மா மட்டுமே. உட்புற எண்ணத்தை அகம்பாவமும் சேர்ந்து ஒளிர்விக்கிறது. சுவரில் தோன்றும் ஒளிவட்டங்கள் எஞ்சிய சுவற்றைவிட பிரகாசம் கூடியதாக இருப்பதற்கு அந்த இடங்களில் சூரிய ஒளி மற்றும் கண்ணாடியிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட ஒளி ஆகிய இரு ஒளிகள் இருப்பதுதான் காரணம். அதுபோல உட்புற எண்ணங்கள் ஆத்மா மற்றும் அகம்பாவம் ஆகிய இரண்டின் மூலமும் பிரகாசப்படுவதால் நமக்கு நம் கோபம், கருணை போன்ற உணர்வுகள் ஏற்படுவது தெளிவாகத்தெரிகிறது.

நெருப்பு ஒரு இரும்புத்துண்டு முழுதும் பரவி அதை ஒளிர்விக்கும். ஒளிர்விக்கப்பட்ட இரும்புத்துண்டு மற்ற பொருள்களை விளக்கும் அளவுக்கு ஒளிராது. அதுபோல அகம்பாவம் நம் மனதில் தோன்றும் உணர்வுகளை மிகத்தெளிவாக காட்டுவதுபோல் உலகத்தில் உள்ள மற்ற பொருள்களை ஒளிர்விக்க முடியாது. அகம்பாவம் ஒரே ஒரு உடலை மட்டும் உயிருடன் காட்டும்.

ஆத்மா நம் மனம் முழுவதும் பரவி அதை அகம்பாவமாக ஒளிர்விக்கும். அதுமட்டுமல்லாமல் ஆத்மா உலகத்தில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களின் இருப்புக்கு ஆதாரமாக இருப்பதுடன் அவற்றில் சிலவற்றை அகம்பாவமாக மாற்றி அவை உயிரினங்களாக செயல்படச்செய்யும் சக்தியும் கொண்டது.

எனவேதான் ஆத்மாவை விட்டுவிட்டு அகம்பாவத்தை நான் என்பதற்கு பொருளாக கொண்டால் ஒரு குறிப்பிட்ட உடல் மற்றும் மனதின் கட்டுப்பாட்டுக்குள் நாம் அடைபட வேண்டும். அகம்பாவம் வெறும் நிழலுருவம் என்பதால் நம் உண்மை உருவான ஆத்மாவை நான் என்று அறிந்து கொண்டால் இவ்வுலகின் ஆதாரம் நான் என்றும் அனைத்து உயிரினங்களும் உயிருடன் இருப்பது என்னால்தான் என்றும் தெரியவரும்.

ஆழ்ந்த உறக்கத்தில் அகம்பாவம் மறைந்துவிடும். ஆனாலும் விழித்தெழிந்தவுடன் உறங்கும்பொழுது எதையும் அறியவில்லை என்பதை அறிந்திருக்கிறோம். இதற்கு காரணம் எவ்வித எண்ணங்களும் மனதில் இல்லை என்பதை அறியும் ஆத்மா.

அனுபவிப்பவர் யார்?

உடலும் மனமும் ஜடப்பொருள்கள் என்பதால் அவை அனுபவிப்பவன் அல்ல. ஆத்மா எவ்வித செயலும் செய்ய இயலாதது என்பதால் அனுபவிப்பவன் ஆத்மாவும் அல்ல. எஞ்சியிருப்பது அகம்பாவம் மட்டுமே. அகம்பாவம் நிழலுருவம் என்பதால் அனுபவிப்பவன் என்பது ஒரு கற்பனை. காந்தி நம்மை நேருக்கு நேர் பார்த்து புன்னகைப்பதுபோல் ஒரு புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தால் ‘என்னைப்பார்ப்பது யார்’ என்ற கேள்விக்கு காந்தி என்று பதில் சொல்ல முடியாது. அது போல் அனுபவிப்பவன் என்பது ஒரு பொய்யான தோற்றம். நான் யார் என்ற அறிவு இல்லாத அஞ்ஞான நேரத்தில் நான்தான் அனுபவிப்பவன் என்று உரிமைபாராட்டி அதனால் துன்பத்துக்கு ஆளாவதை தவிர்க்க நான் யார் என்ற ஆராய்ச்சி மூலம் அறியாமையை அகற்றி முக்தி பெறவேண்டும்.

அனுபவிப்பவன் யார் என்ற ஆராய்ச்சி முக்திபெறுவதற்காகவேதவிர உண்மையில் அனுபவிப்பவன் யார் என்று கண்டுபிடிப்பதற்காக அல்ல. கயிற்றை பாம்பு என்று தவறாக நினைத்துவிட்டோம் என்பது புரிந்தபின் அந்தப்பாம்பு எப்பொழுது உருவானது, அது விஷமுள்ளதா என்பது போன்ற ஆராய்ச்சி அனாவசியம்.

முக்தி பெறுவது எப்படி?

அகம்பாவத்தால் உயிரூட்டப்பட்ட உட்புறஎண்ணங்கள் மனதை ஆக்ரமிக்கின்றன என்பதை புரிந்துகொண்டு அவற்றை பொருட்படுத்தாமல் நான் ஆத்மா என்பதை உணர்வது முக்தி. எனவே முக்தி நமக்கு அன்னியமானது அல்ல. ‘நீ இப்பொழுது என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்’ என்று யாரைப்பார்த்துக் கேட்டாலும் கிடைக்கும் பதில் ‘ஒன்றுமில்லை’ என்பதுதான். எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் நம் மனதில் தோன்றுகின்றன. எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நாம் பொதுவாக கவனிப்பதே இல்லை. இதுபோல் திடீரென ஒரு கேள்வியை எதிர்கொள்ளும்பொழுது இந்த இடைவெளியை நாம் கவனிக்கிறோம். எனவேதான் ‘ஒன்றுமில்லை’ என்று பதில் சொல்கிறோம். ஒன்றுமில்லாமல் என்றுமிருப்பதுதான் ஆத்மா என்கிற நான் என்று அறிவதுதான் முக்தி.

அதேபோல் ‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு நன்றாக இருக்கிறேன் என்பதுதான் உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் பதிலும். இதற்கும் காரணம் அது உண்மை என்பதுதான். நான் என்பதன் பொருள் ஆனந்தமயமாக என்றும் இருக்கும் ஆத்மா. இரு எண்ணங்களுக்கு இடையே ஏற்படும் இடைவெளியில் தன்னை காட்டிக்கொள்வது ஆத்மா. அகம்பாவத்தால் எண்ணங்களை மட்டுமே அறிய முடியும். எண்ணங்கள் இல்லாத ஜடமான மனதினிடம் நான் இந்த உடல் அல்லது மனம் என்ற அறிவு இருப்பதில்லை. எனவே நம் உண்மை உருவான ஆத்மாவின் நிலையை ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என்ற பதிலாக கொடுத்துவிட்ட அடுத்த நிமிடம் கால் முட்டிவலி பற்றிய எண்ணத்தை அகம்பாவம் காட்டிக்கொடுக்க ‘ஆனால் முட்டிவலிதான் தாங்கமுடியவில்லை’ என்பதை பதிலுடன் சேர்த்துக்கொள்கிறோம். கேள்விகேட்டவர் அங்கிருந்து இன்னும் நகராவிட்டால் அகம்பாவம் தொடர்ந்து வேலை செய்து எப்படி மகன் சரியாகபடிப்பதில்லை, வேலையில் பதவிஉயர்வு கிடைக்கவில்லை என்பது போன்ற பல பிரச்சனைகளுடன் நான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் என்று முதலில் கூறிய பதிலுக்கு முற்றிலும் எதிர்மாறான பதிலை சொல்லிக்கொண்டிருப்போம்.

மகனின் மதிப்பெண்களை பார்க்கும்பொழுது ஏற்பட்ட எண்ணம் வெளிப்புற எண்ணம். அதை அடிப்படையாக கொண்டு அவன் சரியாகப்படிப்பதேயில்லை என்று முடிவு செய்து சோகத்தில் ஆழ்வதற்கு காரணம் நாமே உருவாக்கிய உட்புற எண்ணம்.

எவ்விதமான உணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன என்பதைப்பொறுத்துதான் வாழ்க்கையின் தரம் நிர்ணயிக்கிப்படுகிறது. எவ்வித உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை உலகம் தீர்மானிப்பதில்லை. வெளிப்புற எண்ணங்களை மட்டுமே உலகம் தீர்மானிக்கிறது. அவற்றை அடிப்படையாக கொண்டு எவ்வித உட்புற எண்ணங்கள் தோன்றுகின்றன என்பது நம் அறிவை மட்டும் பொருத்தது.

எனவே முக்தியை பெறுவதற்கு நாம் எவ்வித செயலையும் செய்ய வேண்டாம். அனுபவிப்பர் நான் அல்ல என்றும் உலகில் உள்ள ஜடப்பொருள்களின் தொடர்ந்த இயக்கத்தில் அகம்பாவத்தால் ஒளிர்விக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட உடலை என்னுடையது என்று நினைப்பது அறியாமை என்றும் அறிந்தால் நாம் முக்தியடைந்துவிடுவோம்.

வாழ்வின் பிரச்சனைகளுக்கு காரணம்

தானே உருவாக்கிக்கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே இல்லை. சும்மா இருப்பது சொர்க்கம். சும்மா இருந்தால் போர் அடிக்கிறது என்று நினைப்பதற்கு காரணம் ஆனந்தம் உலகில் இருக்கிறது என்று நினைக்கும் அறியாமையே.  தொலைக்காட்சியில் தொடர்களைப்பார்ப்பது, கிரிகட் கால்பந்து போன்ற விளையாட்டுக்களை பின்பற்றுவது, விலையுயர்ந்த வாகனம் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குதல்  போன்ற செயல்களால் மனதில் கற்பனையான ஒரு ஆவலை ஏற்படுத்திக்கொண்டு அது நிறைவேறியதும் தற்காலிகமாக ஏற்படும் நிம்மதி மற்றும் மகிழ்ச்சிதான் உண்மையானது என்று எல்லோரும் நினைக்கிறார்கள்.

அமைதியாக இருக்கும் மனதை அலைபாயவிட்டு அதன் பின் அமைதிபடுத்தும் செயல் கை சுத்தமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க சாக்கடையில் கைவிட்டு கையை  அசிங்கப்படுத்திவிட்டு அதன்பின் சுத்தமான நீரில் கழுவுவது போன்றது.

வாழ்வில் பிரச்சனைகள் மேலோங்கியிருக்கும்பொழுது பணம் இருந்தாலும் யாரும் ஆடம்பரச்செலவு செய்வதோ உல்லாசப்பயணம் செல்வதோ இல்லை. ஏனெனில் மனதில் அலைபாயும் எண்ணங்கள் ஏற்கனவே இருப்பதால் பிரச்சனைகளை ஒரு தீர்வுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு மனதில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியை அவர்கள் ஏற்கனவே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனம் ஏற்கனவே அழுக்காக இருக்கிறது என்றும் அதை சுத்தம் செய்தால்தான் அமைதி கிடைக்கும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மனதில் எண்ணங்கள் இருப்பது முக்திக்கு தடையல்ல. எண்ணங்கள் மாயையான உலகைச்சுட்டிக்காட்டும் வெறும் பெயர்பலகைகள் என்பதை உணர்ந்தால் அவற்றின் நடனத்தை என்றும் அமைதியுடன் இரசிக்கமுடியும். ஏனெனில் தொடர்ந்து மாறுவதுதான் உலகின் இயல்பு. அந்த மாற்றத்தை பிரதிபலிப்பதுதான் மனதின் வேலை. பிரச்சனைகள் வெளியுலகில் இல்லை. தொடர்ந்து மாறும் உலகில் ஒருசில மாற்றங்களுக்கு பிரச்சனை என்று பெயரிடுவது நமது அறியாமை. பிரச்சனைகள் ஏற்பட்டு அவை தீர்ந்தால்தான் அமைதி வரும் என்ற தவறான அறிவால் அவற்றை நாமே உருவாக்குகிறோம். மாற்றங்களின் இடையே மட்டும் இருப்பதல்ல அமைதியும் ஆனந்தமும். அவை என்றும் நம்முடன் இருக்கும் நமது சுபாவம் என்பதை அறியாததுதான் நம் பிரச்சனைகளுக்கு காரணம்.

பிரச்சனைகளை தீர்த்து அமைதியுடன் இருப்பது எப்படி?

நம் உடல் ஜடம் என்பதை மயக்கமருந்தின் (local anesthesia) மூலம் கைகால்கள் மரத்துப்போன நிலையில் அறியலாம். நம் மனமும் ஜடம் என்பதை சமாதி நிலையில் மட்டுமே உணரமுடியும். ஏனெனில் நாம் விழித்திருக்கும் நேரங்களில் அது எண்ணங்களுடன் இருப்பதால் அதை ஜடம் என்று புரிந்து கொள்வது கடினம். முகம் பார்க்கும் கண்ணாடியை பார்க்கும்பொழுதெல்லாம் அதில் நம் முகம் தெரிகிறது என்பதால் அதற்கு உயிர் இருக்கிறது என்று நினைப்பதில்லை. ஆனால் ஆத்மாவை பிரதிபலிக்கும் மனம் நாம் விழித்திருக்கும் பொழுதெல்லாம் செயல் செய்து கொண்டிருப்பதால் அதை ஜடம் என்று அறிய வேதத்தின் துணை தேவை படுகிறது. ‘நீதான் அது’ என்ற வேதத்தின் உபதேசத்தை புரிந்துகொண்டால் மாறும் மனம் நான் அல்ல என்று தெரியும். அதன் பின் உலகின் நிகழ்வுகளுக்கு பிரச்சனைகள் என்று பெயரிடாமல் அவற்றை அமைதியுடன் இரசிக்கலாம்.

தியானம் செய்வதன் மூலம் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தையும் அகற்றி அகம்பாவத்தை ஆத்மாவுடன் ஐக்கியமாக்கினால் சமாதி நிலையை அடையலாம். மிகுந்த சாதனை இதற்கு வேண்டுமென்றாலும் இதை செய்யகூடியவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்களது சமாதி அனுபவத்தில் ஆழ்ந்த உறக்க நிலையைப்போல மனம் முற்றிலும் மறைந்திருக்கும். எவ்வித எண்ணங்களும் இல்லாவிட்டாலும் சமாதி நிலை முடிந்தவுடன் இவ்வளவு நேரம் சமாதியில் இருந்தேன் என்று அறியமுடிவதற்கு காரணம் அகம்பாவம்தான். தூக்கத்தில் இல்லாத அகம்பாவம் சமாதி நிலையில் தொடர்ந்து ஆத்மாவுடன் ஒன்றி இருக்கிறது.

விழித்திருக்கும்பொழுது மனதில் உணர்வுகளை உருவாக்கும் அகம்பாவம் ஆழ்ந்த உறக்கத்தில் அழிந்து விடுவதால் நம்மால் நிம்மதியாக தூங்கமுடிகிறது. காலையில் விழிக்கும்பொழுது எண்ணங்கள் ஒவ்வொன்றாக மனதில் தோன்ற ஆரம்பிக்கின்றன. வாழ்வில் நாம் எவ்வளவு செயல்களைச்செய்கிறோம் எவ்வளவு மனிதர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதைப்பொறுத்து வெகு சீக்கிரம் மனதில் எண்ணங்கள் நிறைய ஆரம்பித்துவிடுகின்றன. மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகள் வெறும் எண்ணக்குவியல்களே.

எனவே மனம் அமைதியாயிருக்க தியானம் செய்து சமாதியை அடையவேண்டும் என்றோ ஊரைவிட்டு ஓடிப்போய் காட்டில் வசிக்கவேண்டும் என்றோ அர்த்தமல்ல.

முக்தியை அனுபவிக்க மனம் அவசியம்

ஆழ்ந்த உறக்கத்தில் மறந்திருந்த எல்லா எண்ணங்களும் மறுபடியும் நம் மனதை ஆக்ரமித்து இரு எண்ணங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை இல்லாதது போல் செய்துவிடுகின்றன. எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று நிம்மதியை அது இல்லாத இடத்தில் தேட ஆரம்பிக்கிறோம். இரு எண்ணங்களுக்கு இடையே இருப்பதுதான் நிம்மதி.

சப்தம் செய்யப்படவேண்டும். நிசப்தம் என்றுமிருப்பது. அதை செய்யமுடியாது. வேண்டுவதை பெற ஏதாவது செய்யவேண்டும் என்று பழகிப்போயிருப்பதால்தான் அமைதியாய் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேட்கத்தோன்றுகிறது. அமைதியாய் இருக்க எதுவும் செய்யவேண்டாம். அமைதியில்லாமல் எதையும் செய்யவும் முடியாது.

வெள்ளைக்காகிதத்தில் பேனாவை உபயோகித்து எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுதும்பொழுது எழுத்துக்களின் இடையே இடைவெளியை நாம் எழுதுவதில்லை. அந்த இடைவெளி இல்லாமல் எழுத்துக்கள் இருக்கமுடியாது. அதுபோல நம் மனதில் ஏற்படும் எண்ணங்களின் இடையே இருப்பதுதான் அமைதி. அந்த அமைதிதான் ஆத்மா. அது இல்லாமல் எண்ணங்களே இல்லை. சுவரில் தோன்றும் ஒளிவட்டங்களுக்கு இடைப்பட்ட இடம் இல்லாமல் ஒளிவட்டங்கள் இருக்க முடியாது. மேலும் ஒளிவட்டங்கள் இருக்கும் இடமும் சூரியனால் ஒளிர்விக்கப்பட்ட சுவர்தான். காகிதத்தில் உள்ள வெற்றிடத்தில்தான் எழுத்துக்கள் தோன்றுகின்றன. மனதில் உள்ள அமைதியின் மீதுதான் எண்ணங்கள் தோன்றுகின்றன. நிர்மலமான திரையின் மீதுதான் திரைப்படம் தெரிகிறது. திரையை பார்க்க திரைப்படத்தை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் திரைப்படத்தை பார்க்கும்பொழுது திரையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதுபோல அமைதியாய் இருக்க எண்ண ஓட்டத்தை நிறுத்தவேண்டிய அவசியமில்லை. அமைதியின் மீதுதான் எண்ணங்கள் ஏற்படுகின்றன என்றும் எண்ணங்களின் இடைவெளியில் தொடர்ந்து அமைதி இருந்துகொண்டிருக்கிறது என்றும் தெரிந்து கொண்டால் போதும். திரைப்படத்தையாவது எளிதில் நிறுத்தி வெண்திரையை பார்த்துவிடலாம். ஆனால் எண்ணங்களை நிறுத்தி அமைதியாய் இருக்க அஷ்டாங்க யோகத்தை முழுமையாக செய்து சமாதி நிலையை அடையவேண்டும். இது அனாவசியம். ஏனெனில் திரைப்படம் ஓடாமல் திரைமட்டும் இருப்பதால் எவ்வித பயனும் இல்லை. கடிதங்கள் எழுதாமல் காகிதத்தை வெள்ளையாகவே வைத்திருப்பதற்கு காகிதமே தேவையில்லை. உலகை அனுபவிக்க எண்ணங்கள் அவசியம். நான் அமைதியாய் இருக்கிறேன் என்பதை அறியக்கூட எண்ணங்கள் வேண்டும்.

எதனுடனும் சம்பந்தப்படாமல், எவ்வித மாற்றமும் அடையாமல், தோற்றம்-மறைவு என்ற விதிக்கு கட்டுப்படாமல், துன்பம் கலவா ஆனந்தமயமாக அறிவுருவாக என்றும் இருக்கும் ஆத்மா எவ்வித சுவாரசியமுமற்றது. அதனால் எதையும் செய்ய முடியாது. அதனாலேயே அது பற்பல அகம்பாவங்களாக காட்சியளிக்கிறது.

அகம்பாவம் மாற்றத்திற்குரியது. வந்து போகும் தன்மையுடையது. தொடர்ந்து செயல் செய்து கொண்டிருப்பது. அகம்பாவமில்லாமல் நாம் உயிருடன் இந்த உலகை அனுபவிக்க முடியாது. நான் ஆத்மா என்றாலும் அகம்பாவம் இல்லாமல் வாழ்வு என்னும் உல்லாசப்பயணத்தை மகிழ்வுடன் அனுபவிக்க முடியாது.

முடிவுரை :

உயிர் வாழவதற்காக எவ்வித உணவையும் உண்ணலாம் என்ற வேதவாக்கியத்தின் பொருளைப்புரிந்துகொள்ள உயிர்வாழ வேண்டியதன் அவசியத்தைத்தெரிந்து கொள்ளவேண்டும். ஆனந்த மயமான பரமன் நான் என்பது உண்மையென்றாலும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்க உயிர்வாழ்வது அவசியம்.

பரமனால் எவ்வித செயலையும் செய்ய முடியாது. உடல் இருக்கும் வரைதான் அறிவது, ஆசைப்படுவது, அடைவது போன்ற பரமனால் செய்யமுடியாத காரியங்களை செய்து இவ்வுலகை அனுபவிக்க  முடியும். இதற்காகத்தான் நமக்கு இவ்வுடல் கிடைத்திருக்கிறது. எனவே உயிரைப்பாதுகாக்கும்பொருட்டு வேதம் விதித்துள்ள உணவுக்கட்டுப்பாடுகளை மதிக்கவேண்டியதில்லை என்று வேதமே அனுமதி கொடுக்கிறது.  

எவ்வித உணவு உட்கொள்ளவேண்டும், என்ன வேலைகள் செய்யவேண்டும் என்று வாழ்வில் செய்யவேண்டிய செயல்கள் அனைத்தையும் எப்படி செய்ய வேண்டும் என்று வேதம் வகுத்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளின்படி நடந்தால் வேதத்தின் மையக்கருத்தான நான் பரமன் என்பதை அறிந்து கொள்ளலாம். அதன்பின் வேதத்தின் கட்டுப்பாடுகள் எவையும் தேவையில்லை.

நான் பரமன் என்பதை அறிய தியானம் ஒரு படியாக அமைகிறது. ஓம் ஓம் என்ற மந்திர ஜபம்  இரண்டு மந்திரங்களுக்கிடையே உள்ள அமைதியை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. தொடர்ந்த அமைதியின் நடுவே பிரணவ மந்திரம் தோன்றி மறைவதுபோல் நிரந்தர அமைதியின் நடுவே பிரபஞ்சம் தோன்றி மறைகிறது. இந்த இடைவிடாத இயக்கம் நம் மனமெனும் கண்ணாடியிலும் பிரதிபலிக்கிறது. வந்துபோகும் எண்ணங்கள் நமது கவனத்தை கவர்ந்து எண்ணங்கள் எழும் அடித்தளமான அமைதியை மறைத்துவிடுகிறது.

வேதாந்தத்தின் ஒரே நோக்கம் இந்த அமைதியை நமக்கு அறிமுகப்படுத்தி ‘நீயே அது’ என்று சுட்டிக்காட்டுவதுதான். இதை அறிந்துகொண்டால் தனியாக தியானம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் வாழ்க்கையே தியானமாக நிரந்தர அமைதியை அனுபவிக்கலாம்.


பயிற்சிக்காக :

1. உண்பவன் இல்லை என்று வேதம் கூறுவதன் நோக்கம் என்ன?

2. அனுபவிக்கப்படும் பொருளைவிட அனுபவிப்பவர்தான் முக்கியமானவர் என்பதை நிரூபிக்கவும்.

3. அனுபவிக்கப்படும் பொருள் ஏன் அனுபவிப்பவராக இருக்க முடியாது?

4. அனுபவிப்பவர் ஆத்மா அல்ல என்பதை நிரூபிக்கவும்.

5. ஆத்மாவுக்கும் அகம்பாவத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கும் சுவர் – ஒளிவட்டங்கள் உதாரணத்தில் கூறப்பட்ட பத்து கருத்துக்களை ஆராய்க.

6. இருவகை எண்ணங்களுக்கிடையே உள்ள முக்கியமான ஒற்றுமை என்ன? வேற்றுமை என்ன?

7. அனுபவிப்பவர் யார் என்ற கேள்வியின் முடிவான பதில் என்ன?

8. முக்தி அடைவது எப்படி?

9. வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

10. பிரச்சனைகளை தீர்த்து அமைதியுடன் இருப்பது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. இருவருக்கிடையே ஏற்படும் ஒரு அனுபவத்தில் இரு அறிபவர்கள் இருக்கிறார்களே?

2. ஆத்மாவுக்கும் அகம்பாவத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

3. வெளிப்புற எண்ணங்கள் ஏற்பட அகம்பாவம் மற்றும் ஆத்மாவின் பங்கு என்ன?

4. உட்புற எண்ணங்கள் ஏற்பட அகம்பாவம் மற்றும் ஆத்மாவின் பங்கு என்ன?

5. காதலித்து கல்யாணம் செய்து கொள்வது, டேட்டிங்க் (dating) செய்து வாழ்க்கைத்துணைவரை தேர்ந்தெடுப்பது, பெற்றோர் தேர்ந்தெடுத்தவரை திருமணம் செய்துகொள்வது – இவற்றில் எது சிறந்தது? மற்றவற்றில் என்ன குறை? முக்தியடைந்தவர்கள் எந்த வகையில் திருமணம் செய்துகொள்வார்கள்?

6. மற்றவருக்கு நாம் கொடுக்கும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நமக்கு கிடையாது என்று கூறப்பட்டிருப்பது உண்மையா?

7. அனுபவிப்பவர் என்று ஒருவர் இல்லாவிட்டால் முக்தியடைவது யார்?

Thursday, December 2, 2010

Lesson 142: Rituals are means to enlightenment (Brahma Sutra 3.4.26-27)

பாடம் 142: முக்தியடைய வேலை செய்வது அவசியம்
பாடல் 451- 452 (III.4.26-27)

பயணம் முடிந்தவுடன் குதிரை அவசியமில்லை என்பதால் குதிரையே தேவை இல்லை என்று முடிவுசெய்துவிடக்கூடாது.  முக்தியடைய ஞானம் மட்டும் போதும் என்பதால் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்ற தவறான முடிவுக்கு வரக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி முழுமையான முக்தியை அனுபவிக்க வேலை செய்வதன் மூலம் மனதை செம்மைபடுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த பாடம் விளக்குகிறது.

உலகத்தை மாற்றியமைப்பதன் மூலம் இன்பமான வாழ்வைப்பெறலாம் என்று நினைத்து அதற்காக பாடுபடுவது ஒருவிதத்தில் சரிதான். ஏனெனில் உழைப்பது மனதை சுத்தம் செய்து முக்தியை பெற மக்களை தகுதி படுத்துகிறது.

நான் பரமன் என்ற ஞானத்தை பெறுவதற்கும் பெற்ற ஞானத்தில் நிலைத்து நிற்கவும் வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகிய இரு முக்கிய தகுதிகள் வேண்டும். விரும்பியபடி உலக இன்பங்களை அனுபவிப்பதற்காக தர்மமான முறையில் முடிந்த அளவு பணம் சம்பாதிக்க மக்கள் தொடர்ந்து உழைக்கிறார்கள். இந்த உழைப்புதான் அவர்களுக்கு இவ்விரு தகுதிகளையும் பெற்றுத்தருகிறது.

எனவே தெரிந்தோ தெரியாமலோ அனைத்து மக்களும் முக்தியடையவே முயன்று கொண்டிருக்கிறார்கள். கல்வி கற்பது, வேலை செய்வது, பணம் சேர்ப்பது, திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெறுவது போன்ற செயல்களை செய்வது முக்திக்கு அழைத்துச்செல்லும் படிக்கட்டுக்கள். அவரவர்களின் அறிவுத்திறன் மற்றும் புத்திகூர்மைகேற்ப இந்த படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் இவ்விரு தகுதிகளை பெற்றபின் முக்தி என்றால் என்ன என்பதை விரைவில் அறிந்துகொண்டு அதை அடைய வேதம் படிக்க ஆரம்பிப்பார்கள்.

முக்தியடைவது ஆரம்பத்தில் ஒரு எட்டாக்கனிபோல்தான் தோன்றும். சொந்த வீடு வேண்டும் என்ற ஆசையும் வேண்டிய பணமும் இருந்தால் வீடுகட்டுவது என்பது மிக எளிதான செயல். அது போல தேவையான வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகிய இரண்டை பெற்றபின் தீவிர ஆசையுடன் கடுமையாக உழைப்பவர்கள் அனைவருக்கும் முக்தி நிச்சயம் கிடைக்கும். எனவே நாம் இந்தப்பிறவியில் முக்தியடைய முடியாது என்ற அவநம்பிக்கை அனாவசியம்.

பிறப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து முக்தி பெறுவதால் சுற்றியுள்ள உலகம் மாறிவிடாது. வெற்றி-தோல்வி, வளமை-வறுமை என்ற வாழ்வின் ஊசலாட்டத்தை தொடர்ந்து எதிர்கொள்வதை முக்தியடந்தபின்னும் தவிர்க்க முடியாது. எனவே ஒருவரது மனம் எவ்வளவுதூரம் வைராக்கியம், சாந்தம் ஆகியவற்றின் மூலம் செம்மையடைந்துள்ளது என்பதை பொறுத்தே அவர்களால் குறையாத இன்பத்தையும் நீடித்த நிம்மதியையும் அனுபவிக்க முடியும்.

நூற்றுக்கு நூறுவாங்கி தேர்ச்சி பெற்ற மாணவன் தேர்வில் வெற்றிபெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்களை மட்டுமே பெற்றுத்தேறியவனைவிட சிறந்தவன். அதுபோல முழுமையான அளவு வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகிய தகுதிகளை பெற்றவர்களால் மட்டுமே ஞானத்தின் பயனை முழுமையாக அனுபவிக்க முடியும். எனவே தேர்வில் தேர்ச்சியடைந்தபின்னும் பெற்றமதிப்பெண்களை அதிகப்படுத்திக்கொள்ள மறுபடியும் படித்து குறிப்பிட்ட பாடங்களில் மட்டும் மறுதேர்வு எழுதும் மாணவன் போல் முக்தியடைந்தவர்கள் கூட முழுமையான வைராக்கியத்தையும் சாந்தத்தையும் பெற தொடர்ந்து உழைக்க நேரிடலாம்.

வைராக்கியம் (Dispassion)

மற்ற மனிதர்கள், உயிரினங்கள் உள்ளிட்ட உலகப்பொருள்கள், நிகழ்வுகள் ஆகிய எதன் மீதும் பற்றுதல் இல்லாமல் இருத்தல் வைராக்கியம் ஆகும். என்னுடையது என்று கடவுளின் பொருள்களை சொந்தம் கொண்டாடுவதை துறப்பது அவ்வளவு எளிதல்ல. கடவுளை துதித்து ‘என் உடைமைகள் அனைத்தும் ஏற்கனவே உன்னுடையதுதான், அவற்றை உனக்கே அர்ப்பணம் செய்கிறேன்’ என்று ஆரத்தி பாடல்களை தினமும் பாடுவதிலிருந்து கடவுளுக்கு அர்ப்பணம் செய்வது வெறும் உதட்டளவில் என்று தெரிகிறது. உண்மையில் அர்ப்பணம் செய்திருந்தால் அதன் பின் எவ்வித கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

உலகத்தில் உள்ள பொருள்களுக்கு நீடித்த இன்பத்தை தரும் சக்தியில்லை என்பதையும், நாம் அவற்றிலிருந்து பெறுவதாக நினைக்கும் இன்பம், துன்பமுடன் கலந்தே கிடைக்கிறது என்பதையும் உணர்ந்தால் வைராக்கியம் தானாக ஏற்படும். இலையில் உள்ள உணவில் விஷம் கலந்து இருக்கிறது என்பதை கேள்விபட்டால் எவ்வளவு பசியிருந்தாலும் ஒரு வாய் கூட உண்ண மாட்டோம். அது போல நம் துன்பத்துக்கு ஒரே காரணம் நமது ஆசை என்ற புத்தரின் போதனையின் அர்த்தம் புரிந்தால் உலகப்பொருள்களின் மீதுள்ள பற்று மறைந்து வைராக்கியம் பிறக்கும்.

வைராக்கியம் இருப்பவர்கள் நீடித்த இன்பத்திற்கும் நிலையான நிம்மதிக்கும் உலகைச்சார்ந்து இருக்க மாட்டார்கள். நீ இல்லாவிட்டால் நான் இல்லை என்ற அடிமைத்தனம் வைராக்கியம் ஏற்பட்டுவிட்டபின் முற்றிலும் மறைந்து விடும். எந்த ஒரு குறிப்பிட்ட மனிதரோ பொருளோ நம் இன்பத்திற்கு காரணமாய் இருக்க முடியாது என்ற வைராக்கியம் நம் துன்பத்தை முற்றிலும் நீக்கும் சக்தி வாய்ந்தது.

பற்றில்லாமல் இருப்பதே வைராக்கியம். வைராக்கியத்துடன் இருப்பதற்கு எதையும் துறக்க வேண்டிய அவசியமில்லை. நம் குடும்பத்தாரின் நலனுக்கு உழைத்து அவர்களை காப்பது மற்றும் நிறைய பணம் சம்பாதிப்பது போன்ற செயல்களை செய்பவருக்கு வைராக்கியம் இல்லை என்று முடிவு செய்ய முடியாது. மனதில் பற்றில்லாமல் இருப்பதற்கு ஊரை விட்டு காட்டிற்கு சென்று எந்த மனிதர்களுடனும் உறவில்லாமல் வாழவேண்டும் என்று பொருளல்ல.

அன்புடன் பெற்ற பிள்ளைகளை போற்றி வளர்ப்பதை பற்றை துறந்த பின் கூட செய்யலாம். பற்றை மனதளவில் துறப்பதுதான் வைராக்கியம். வங்கியில் வேலை செய்யும் காசாளர் பல லட்சக்கணக்கான ரூபாய்களை நாள்தோறும் புழங்குகிறார். அவருக்கு அவற்றின் மீது பற்றுதல் கிடையாது. பணத்தை கொடுக்கும்பொழுது வருத்தப்படுவதோ வாங்கும்பொழுது சந்தோஷப்படுவதோ இல்லை. ஆயினும் ஒரு ரூபாயைகூட கூடுதலாக யாருக்கும் கொடுக்க மாட்டார். கவனத்துடன் அதே சமயம் எவ்வித பற்றும் இல்லாமல் அவர் எப்படி வங்கியின் பணத்தை புழங்குகிறாரோ அதுபோல் நாம் நம் குடும்பம், உறவினர், சொத்து ஆகிய அனைத்து உடைமைகளையும் கையாண்டால் நமக்கு வைராக்கியம் இருக்கிறது என்று அர்த்தம். பதவி உயர்வு, பண வரவு போன்ற நிகழ்வுகளுக்கு இன்பம் கொடுக்கும் சக்தி சிறிது கூட கிடையாது. அவ்வாறு இருப்பதாக நாம் செய்து கொண்டிருக்கும் கற்பனையை துறப்பதுதான் வைராக்கியம்.

நிலையில்லாத பொருள்கள் நிலையான இன்பத்தை கொடுக்க வல்லவை என்ற தவறான கருத்தை மனதிலிருந்து அப்புறப்படுத்தினால்தான் உண்மையான மன நிறைவை கொடுக்கவல்ல வேதத்தை படிக்க ஆசை வரும். இந்த உண்மையை உணரும்வரை தொடர்ந்து உலகில் உழைப்பதைத்தவிர வேறு வழியில்லை. பதவி உயர்வால் ஏற்பட்ட சந்தோஷத்தைவிட அதிகப்பொறுப்புகளால் வரும் துன்பம் அதிகமாயிருப்பதை உணர்ந்தவுடன் இனி பதவி உயர்வே வேண்டாம் என்று தீர்மானம் செய்தாலும் அடுத்த வருடத்திற்குள் அந்த தீர்மானம் மறந்து விடும்.

இதைத்தான் மயான வைராக்கியம் என்பார்கள். வாழ்வின் நிலையாமையைப்பற்றி உண்மையை உணர்ந்த மகான்களைப்போல் சுடுகாட்டிலிருந்து திரும்பும் வழியில் பேசிக்கொண்டிருந்தாலும் வீட்டில் விட்டுச்சென்ற செருப்பு காணவில்லை என்றால் போகிறது என்று விட்டுவிட அதன்மேல் உள்ள பற்று நம்மை அனுமதிப்பதில்லை.

உண்மையான வைராக்கியத்தைப்பெற உலகின் நிலையாமையை பற்றிய அறிவு மட்டும் போதாது. நமக்கு நாமே அடிக்கடி இதை நினைவுபடுத்தி ஆழ் மனதில் இந்த உண்மையை அழுத்தமாக எழுதிக்கொள்ளவேண்டும். மேலும் பணம், நகை, சொத்து போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களுடன் நெருங்கிப்பழகுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். யார் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்கள், யாருடைய கல்யாண புடவை எத்தனை லட்சம் ரூபாய் என்றெல்லாம் புள்ளி விவரங்கள் வழங்கும் செய்தித்தாள்களை படிக்கவே கூடாது.

புகைபிடிப்பது உடலுக்கு கேடு என்று தெரிந்துகொள்வது அந்தப்பழக்கத்திலிருந்து ஒருவரை விடுவிக்காது. புகைபிடிக்கும் நண்பர்களின் சகவாசத்தை முற்றிலும் தவிர்த்து புகைபிடிப்பது தடை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே பெரும்பாலும் இருப்பது போன்ற செயல்கள் மூலம்தான் ஒருவரால் புகைபிடிப்பதை நிறுத்த முடியும். அது போல உலகில் இன்பத்தை தேடாத சான்றோர்களின் சகவாசம் மற்றும் ஆன்றோர்கள் எழுதிய புத்தகங்களை வாசிப்பது போன்ற நற்செயல்களை செய்வதனால் மட்டுமே முழுமையான வைராக்கியத்தை பெறமுடியும்.  

வெற்றிக்கோட்டை தாண்டியபின்னும் ஓட்டப்பந்தய வீரர் தொடர்ந்து சிறிது தூரம் ஓடுவதைப்போல உலகில் இன்பம் இல்லை என்பது புரிந்த பின்னும் அவற்றின் பின் பலகாலம் ஓடிய வேகம் குறைந்து முழுமையாக நிற்க சிறிது காலம் பிடிக்கும். எனவே வேதம் படித்து உலகை புரிந்து கொண்ட பின் கூட முழுமையான வைராக்கியம் ஏற்படவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தமில்லை.

லிட்மஸ் தாளை அமிலத்தில் ஆழ்த்தினால் நீல நிறமாக மாறும் என்று புத்தகத்தில் படிப்பதுடன் நிறுத்திவிடாமல் ஆராய்ச்சி கூடத்தில் நேரடியாக அதைச் செய்துபார்ப்பதன் மூலம்  உறுதியான அறிவைப்பெறுவதுபோல உலகப் பொருள்களுக்கு நமக்கு இன்பத்தை தரும் சக்தி யில்லை என்று வேதம் கூறுவதை நம் சொந்த அனுபவத்தில் சோதித்து தெரிந்து கொண்டபின்தான் முழுமையான வைராக்கியம் ஏற்படும். வாழ்வில் அடிபட்டு உண்மை புரிய ஆரம்பித்த பின் வேதம் படிக்க தொடங்கியவர்களுக்கு வைராக்கியம் எளிதில் வந்துவிடும்.

ஆக வேதம் படிப்பதால் வரும் அறிவு மற்றும் வாழ்வில் அனுபவம் மூலம் பெற்ற அறிவு ஆகிய இரண்டைபொறுத்து வைராக்கியம் படிப்படியாகத்தான் வளரும்.

வைராக்கியம் - முதல் படி

தொடர்ந்து பொருளை தேடி ஓடும் மக்களுக்கு அதில் உள்ள குறையை பார்க்க நேரம் இருக்காது. எனவே வைராக்கியத்தின் முதல் படியை கடப்பது மிகவும் கடினம். ஏதேனும் சோக நிகழ்வு வாழ்வில் ஏற்படும்பொழுது ஓடும் ஓட்டம் நின்று சோகத்திற்கான உண்மை காரணத்தை ஆராய வாய்ப்பு கிடைக்கும்பொழுது இன்பம் நிலையானது அல்ல என்ற இந்த முதல் படி வைராக்கியம் ஏற்படலாம். அதுவும் மயான வைராக்கியமாய் மறந்து போகாமல் இருக்க வாழ்வில் இன்னும் சில ஏமாற்றங்களை எதிர்கொள்வது இவர்களுக்கு அவசியமாய் இருக்கலாம். புத்திகூர்மை, தர்க்க அறிவு, மற்றவர்களின் அனுபவத்திலிருந்து அறிவு பெறும் சாதுர்யம் ஆகியவை ஒருவரிடம் இருந்தால் அவர் வைராக்கியத்தின் முதல் படியை எவ்வித சோகத்தையும் எதிர்கொள்ளாமலேயே கடக்க முடியும்.

ஆனால் பலருக்கு இது இளமைப்பருவத்தில் வாய்ப்பதில்லை. ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று ஆராயாமல் சுகதுக்கங்களில் தொடர்ந்து உழன்று வயதானபின் இயலாமை காரணமாக உலகப்பொருள்களின் மேல் பற்றுதல் இல்லாததுபோல் இவர்கள் நடந்து கொள்வார்கள். பொருள் கிடைத்தாலும் அனுபவிக்கும் திறன் இல்லாததால் அது எனக்கு வேண்டாம் என்று மறுப்பது  வைராக்கியம் அல்ல. பொருள் கிடைக்கவில்லையே என்று இருந்த ஏக்கம் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கமாக மனதில் தொடர்ந்து இருப்பதால் இவர்களுக்கு வாழ்வில் சலிப்பு ஏற்படுமே தவிர உண்மையை உணர்ந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படாது. இது போன்ற நிலமைக்கு நாம் வரும் முன்னர் பொருள்களின் நிலையாமையை உணர்ந்து முதல் படி வைராக்கியத்தை பெற்றால் முக்தி கிடைப்பது சாத்தியப்படும்.

வைராக்கியம் - இரண்டாம் படி

புலன் இன்பங்களை அளிக்கும் பொருள்கள் கண்முன் இருந்தால் அவற்றை அனுபவிப்பது, இல்லாவிட்டால் அவற்றை தேடி ஓடுவதில்லை என்பது வைராக்கியத்தின் இரண்டாம் படி. வாழ்வின் குறிக்கோள் என்று தீர்மானித்த பிடித்த வேலை, வசதியான வாழ்க்கை, இனிமையான குடும்பம் போன்றவை கிடைத்தபின் இவர்கள் தங்கள் குறிக்கோளை உயர்த்திக்கொள்வதில்லை.   

சிலர் இன்னும் இன்னும் என்று வாழ்நாழ் முழுவதும் பணம் சம்பாதிப்பதிலும் பெற்ற இன்பங்களில் நிறைவு ஏற்படாததால் தொடர்ந்து வெவ்வேறு வகையான இன்பசாதனங்களை நாடி ஓடுவதையும் நிறுத்துவதில்லை. அவ்வாறில்லாமல், கிடைத்தவரை போதும் என்ற நிறைவுடன் வேகமான ஓடுவதை சற்று குறைத்துக்கொண்டவர்கள் வேதம் படிக்க தேவையான குறைந்தபட்ச தகுதியான வைராக்கியத்தின் இந்த இரண்டாம் படியை கடந்தவர்கள்.

புத்திசாலித்தனம் போதாத காரணத்தாலோ மற்றவர்களுடன் போட்டிப்போட்டு முன்னேற முடியாத காரணத்தாலோ ஓட்டத்தை நிறுத்திக்கொள்வது வைராக்கியம் அல்ல. எவ்வளவுதான் உழைத்து பணம், பதவி ஆகியவற்றை பெற்றாலும் அவை நிலையான இன்பத்தை பெற்றுத்தராது என்ற அறிவினால், போதும் என்ற மனம் ஏற்படுவதுதான் வைராக்கியம். முக்தியை நோக்கிய பயணம் இப்பொழுதுதான் ஆரம்பிக்கிறது என்பதால் சோம்பல் காரணமாக முயற்சியை கைவிட்டவர்களால் கடுமையான உழைப்பு தேவைப்படும் ஆன்மிக பயணத்தை தொடர முடியாது.

இந்த நிலையில் இருப்பவர்கள் வேதம் பயில ஆரம்பித்தாலும் உல்லாசப்பயணம், தள்ளுபடியில் விற்பனை, வெளிநாட்டில் பெரிய வேலை என்பது போன்ற செய்திகளை கேட்க நேரிட்டால் முதல் காரியமாக வேதத்தை படிப்பதை ஒத்திப்போட்டு விடுவார்கள். ஏனெனில் உலகில் இன்பம் இல்லை என்பதை இவர்கள் முழுவதுமாக புரிந்து கொள்ளவில்லை. முக்தி அடைவது எப்படி என்று கற்றுக்கொள்வதை ஒரு பொழுது போக்காக நினைத்துக்கொண்டு இருப்பதால் அதில் அவர்களுக்கு ஒரு பிடிப்பு இருப்பதில்லை.

ஆயினும் இவர்களில் ஒரு சிலர் வேதத்தை முறையாக பயின்று நான் பரமன் என்ற உண்மையை உணர்ந்து முக்தியடைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஏற்படுமாயின் இவர்களது மனம் உலகினால் கவரப்பட்டுக்கொண்டேயிருக்கும். முக்தியில் நிலைக்க இவர்கள் தங்கள் வைராக்கியத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.   

வைராக்கியம் - முன்றாம் படி

எவ்வளவுதான் உலகை அனுபவிக்க வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அவற்றை ஒதுக்கித்தள்ளிவிட்டு முக்தி வேண்டும் என்ற தீவிர ஆசையுடன் தேவையான நேரத்தையும் உழைப்பையும் கொடுத்து வேதத்தை பயிலத்தயாராய் இருப்பவர்கள் இந்தப்படியை சேர்ந்தவர்கள்.

முழுமையான வைராக்கியம்

முக்தியடையாமல் முழுவைராக்கியத்தை பெறுவது அறிது. ஏனெனில் உலகில் இன்பம் இல்லை என்பதை உறுதியாகத்தெரிந்து கொள்ள, இன்பம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதில் தெளிவு வேண்டும். ஆனந்தமயமானவன் பரமன் என்கிற ஒருவன் மட்டும்தான் என்று புரிந்து கொண்டால் உலகப்பொருள்கள் தருவதாகத்தோன்றும் இன்பம் பொய்யான தோற்றம் என்பது உறுதியாகத்தெரிந்து விடும். அதன் பின்தான் முழுமையான வைராக்கியம் ஏற்படும்.

இந்த நிலையில் ஒருவர் நிறைய பணம் சம்பாதித்து மிகவசதியான வாழ்வை வாழலாம். வசதி வேறு இன்பம் வேறு என்பதை இவர் புரிந்து கொண்டிருப்பதால் தம்மைச்சேர்ந்த பொருள்களுக்கு அடிமையாகிவிடமாட்டார். இருந்தால் அவற்றை இன்பமாக அனுபவிப்பார். இல்லாவிட்டாலும் அவர் சிறிதும் வருத்தப்படாமல் எப்பொழுதும் போல் இன்பமாக இருப்பார். சிறையில் அடைபட்டாலும் இவர்கள் மனநிம்மதி குலைவதில்லை. விடுதலை கிடைத்தால்தான் இன்பம் என்று இவர்கள் நினைக்காததற்கு காரணம் இன்பத்தின் ஊற்று சிறை கதவுகளுக்கு வெளியே இல்லை என்ற மனத்தெளிவுதான்.

உலகம் மாயை என்ற தெளிவான அறிவு இவர்களுக்கு இருப்பதால் புலன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேதத்தின் கட்டளை இவர்களை கட்டுப்படுத்தாது. ஏனெனில் பரமனின் இயல்பான ஆனந்தத்தை இவர்கள் அனுபவிக்க உலகம் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகிறது. நம் முகத்தை நாமே பார்த்துக்கொள்ள ஒரு கண்ணாடித்தேவைபடுவது போல நம் இயல்பான ஆனந்தத்தை நம் மனம் அனுபவிக்க ஏதேனும் பொருள் தேவை. இரண்டு மாத குழந்தை எனக்கு இந்த பொம்மைதான் வேண்டும் என்று இரண்டு வயது குழந்தையைப்போல் பிடிவாதம் பிடிப்பதில்லை. ஏனெனில் அது நான், எனது என்ற அகங்காரம் இல்லாமல் எது கிடைத்தாலும் அதில் தன் இயல்பான ஆனந்தத்தை அடையாளம் கண்டு கொள்கிறது. அதுபோல வேதம் படித்த முற்றுணந்தோர்கள் முழுமையான வைராக்கியம் பெற்றிருந்தால் இன்பமாக இருப்பதற்கு இந்த பொருள்தான் வேண்டும் என்ற கட்டுப்பாடில்லாமல் எது கிடைத்தாலும் அதில் நிறைவான இன்பத்தை அனுபவிப்பார்கள். தங்களின் உடல் உட்பட்ட பொருள்களின் மாற்றமோ மறைவோ இவர்களை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.

வைராக்கியம் இருப்பவர்களுக்கு பொருள்களின் மீது பற்று இருக்காது என்பதால் ஆசை இருக்காது என்று முடிவு செய்யகூடாது. ஆசை இருவகைப்படும். ஆசை நிறைவேறினால்தான் இன்பம் என்ற நிபந்தனையுடன் கூடியது பந்தப்படுத்தும் ஆசை. முழுமையான வைராக்கியம் உள்ளவர்களின் ஆசை பந்தப்படுத்தாத ஆசை. தங்களின் விருப்பு-வெறுப்புக்களின் அடிப்படையிலும் உலக நன்மைக்காகவும் இவர்கள் மற்றவர்களைப்போல் பொருள்கள் மீது ஆசைகொண்டு அதைப்பெற பிரயத்தனம் செய்யலாம். அந்த முயற்சி வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் இவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

துன்பத்திற்கு காரணம் பற்று மட்டும்தான். பொதுவாக மக்களின் ஆசை பற்றோடு கூடிய ஆசை என்பதால் மக்களுக்கு புரியும் வகையில் புத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார். முழுவைராக்கியம் இருப்பவர்களுக்கு எதன் மீதும் பற்று இருக்காது. எனவே இவர்கள் எவ்வித கவலையும் இல்லாமல் பொருள்களின் மேல் ஆசை கொள்வது, புலன் இன்பங்களை அனுபவிப்பது, மற்றவர்களின் அன்பு செலுத்தி அவர்களின் உயர்வுக்கு உழைப்பது போன்ற சாதாரண செயல்களை மற்றவர்களைப்போல் செய்வார்கள். உணர்ச்சி வயப்படாமல் அறிவு பூர்வமாக ஆலோசித்து செவ்வனே செயல் படும் திறமை வைராக்கியம் உள்ளவர்களுக்கு மட்டுமே இருக்கும். தன் மகன் என்ற பற்று கைகளில் நடுக்கத்தை ஏற்படுத்துவதால் திறமை மிக்க அறுவை சிகிச்சை நிபுணர் தன் மகனின் அறுவைசிகிச்சைக்கு வேறு ஒரு மருத்துவரின் உதவியை நாடுகிறார். வைராக்கியம் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் நலனில் அக்கறை இருக்குமே தவிர பற்று இருக்காது. செய்யவேண்டியதை செய்வது அக்கறை. செய்யமுடியாததை நினைத்து கவலை கொள்வது பற்று. உணர்ச்சி வசப்படாமல் அறிவு பூர்வமாக செயலாற்றுவது மற்றும் பற்றில்லாத அக்கறை கொள்வது ஆகியவை முழுமையான வைராக்கியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.

சாந்தம் (Equanimity)

வெற்றியில் துள்ளாமலும் தோல்வியில் துவளாமலும் இருக்க கூடிய மனநிலை சாந்தம் ஆகும். மனக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை, எந்த தடை ஏற்பட்டாலும் கடமைகளை சரியாக செய்தல் மற்றும் கடவுள், வேதம், குரு ஆகியவற்றில் நம்பிக்கை ஆகிய குணங்கள் இதனுடன்பிறந்தவை.

எப்பொழுதும் நம் விருப்பப்படி எல்லாம் நடக்காது. ஏதாவது ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும். இந்த செய்திகளை அறிந்ததும் அதற்கேற்றபடி மனம் அலைபாயும் தன்மையுடையது. இந்த அலைபாயும் தன்மை, உலகம் மாயை என்ற அறிவு வந்ததும் வெகுவாக குறைய வேண்டும்.

சாந்தம் இருந்தால்தான் மனம் புத்தியின் கட்டளைபடி செயல்படும். இல்லையென்றால் புலன்களின் இழுப்புக்கு கட்டுப்பட்டு விருப்பு-வெறுப்புகளின் அடிப்படையில் வேலைசெய்யும்.

பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் விவரிக்கப்பட்ட எட்டு அங்கங்களை முறைப்படி பயிலுவதன் மூலம் மனதை அமைதியாக வைத்திருக்க பழக்கிவிட்டால் உலகம் எப்படி மாறினாலும் மனம் சாந்தமாக இருக்கும்.

சாந்தம் - முதல் படி

தெருவில் செல்லும் நபர் நம்மை பார்த்து முறைத்துவிட்டால் மனம் வருத்தப்பட ஆரம்பித்துவிடும். எதிரில் இருக்கும் பொருள்களை கண்ணாடி அப்படியே பிரதிபலிப்பது போல உலக நிகழ்வுகளுக்கேற்ற உணர்ச்சிகளை அவ்வப்பொழுது மனம் அனுபவித்தால் அது இந்த முதல் படியை தாண்டவில்லை என்று பொருள். ஒருவர் நம்மை முட்டாள் என்று திட்டினால் உடனடியாக அழ ஆரம்பித்துவிடாமல், அவர் யார், எதற்காக அவ்வாறு கூறினார் என்றெல்லாம் ஆராய்ந்து அதன்பின் தேவைப்பட்டால் வருத்தப்படுவது என்ற நிலை ஏற்பட்டால் இந்த முதல் படியை கடக்கும் தகுதி வந்துவிட்டது என்று அர்த்தம்.

சாந்தம் - இரண்டாம் படி

வெளியுலக நிகழ்வுகளை அப்படியே உணர்ச்சிகளாக பிரதிபலிக்காமல் அவற்றை அறிவின் அடிப்படையில் ஆராய்ந்து அதற்கேற்ற செயல்களை உணர்ச்சி வசப்படாமல் செய்யத்தொடங்குவது சாந்தத்தின் அடுத்தபடி. புத்தியினால் தணிக்கைசெய்யபடாத உலக நிகழ்வுகள் நேரடியாக மனதை பாதிக்காது. செய்த தவறுகளுக்காக தன்னைத்தானே வருத்திக்கொள்வது, நமது சக்திக்கு மீறிய செயல்களை செய்யமுடியவில்லையே என்று குற்ற உணர்வு ஆகியவை இந்த படிக்கட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படாது.  முதல் படியை கடந்து இந்தப்படியில் நுழைந்தவர்களால் மட்டுமே வேதத்தை படிக்கும் அளவுக்கு மன அமைதி இருக்கும்.

முழுமையான சாந்தம்

நான் பரமன், உலகம் மாயை என்ற உண்மைகளை புரிந்துகொள்ளாமல் இந்த நிலையை அடைய முடியாது. உலகம் உண்மை என்று நினைத்தால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையை முழுதாக அகற்ற முடியாது.

ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழுச்சாந்தமாக இருப்பதுபோல நான் பரமன் என்ற அறிவு நிலைபெற்றுவிட்டால் விழித்திருக்கும் நேரத்திலும் மனம் முழுமையான சாந்தத்துடன் இருக்கும்.

சாந்தமும் வைராக்கியமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளவை. ஒன்று வளரும்பொழுது மற்றதும் வளரும். ஆரம்ப நிலைகளில் இவை வேதம் படிக்கத்தேவையான தகுதியை கொடுக்கும்.

ஞானம்

முறையாக வேதத்தை ஆசிரியரின் துணையுடன் படித்தால் நான், உலகம், கடவுள் ஆகியவற்றைப்பற்றிய ஞானம் கிடைக்கும். உண்மையான ஞானத்தை பெற்றபின் முக்தி கிடைக்கும்.

உண்மை ஒன்றுதான். கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை, பல கடவுளர்கள் இருக்கிறார்கள் என்று முரண்பட்ட கருத்துக்கள் பல இருக்கலாம். ஆனால் முடிவான உண்மை ஒன்றாகத்தான் இருக்கமுடியும்.

மனிதர்கள் பலவிதம். அறியும் திறன், புத்திகூர்மை, மனப்பக்குவம், விவேகம், வைராக்கியம், சாந்தம், புலனடக்கம், மனக்கட்டுப்பாடு, கடமையுணர்வு, சகிப்புத்தன்மை, வேதத்தில் நம்பிக்கை மற்றும் உண்மையை அறிந்துகொள்ளும் தீவிர ஆசை ஆகியவற்றை உள்ளடக்கிய மனப்பாங்கு மனிதருக்கு மனிதர் பெரிதும் வேறுபடுகிறது.

எனவே இருக்கும் ஒரே உண்மையை மனிதர்கள் தங்கள் மனப்பாங்கிற்கேற்ப வெவ்வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள். மதத்தலைவர்கள் அனைவரும் தங்களை பின்பற்றும் பக்தர்களின் மனப்பாங்கை மனதில் கொண்டு அவர்களுக்கு புரியும்வகையில் இருக்கும் ஒரே உண்மையை விளக்குவதை மேலெழுந்தவாரியாக பார்த்தால் உலகில் பல்வேறு மதங்கள் இருப்பது போல தோன்றும்.

இருப்பது ஒரே ஒரு யானை. ஆறு குருடர்கள் அதை தடவிப்பார்த்து அதன் உண்மை சொருபத்தை அறிய முயலுகிறார்கள். எவனொருவன் யானையை ஏற்கனவே அறிந்த ஒருவரின் அறிவுரைப்படி அதன் ஒவ்வொரு அங்கங்களையும் தொட்டுப்பார்த்து பின் மனதில் அவற்றை ஒன்றாக இணைத்து முழு உருவத்தையும் காண்கிறானோ அவனே சரியாக பார்க்கத்தெரிந்தவன். அவனே உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோன். அவ்வாறில்லாமல் யானையின் காலை மட்டும் தடவி அது தூண்போன்ற உருவமுடையது என்றும் அல்லது வயிற்றை மட்டும் அரைகுறையாக தொட்டு அது சுவர் போன்றது என்றும் முடிவு செய்து மற்றவர்கள் ஒருவருக்கொருவர் வாதிட்டுகொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் தனிப்பட்ட அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் உண்மையை முழுவதும் உணர்ந்தவர்கள் என்று தனக்குத்தானே முடிவு செய்து கொண்டிருக்கலாம். ஆனால் எவனொருவன் யானை முறம் போன்றது அல்லது கயிறு போன்றது என்ற மற்றவர்களின் முரணான கருத்துக்களை அவர்கள் பார்த்தது காது அல்லது வால் என்று சரியாகப்புரிந்துகொண்டு அவர்களின் கருத்து தவறு என்று கருதாமல் இருக்கிறானோ அவன் மட்டுமே முற்றுணர்ந்தோன். அவன் யாருடனும் எவ்வித விவாதத்திலும் ஈடுபடமாட்டான். யானையின் வயிற்றை முழுவதும் தடவிவிட்டு இது சுவர் போல் இல்லையே என்று ஒருவன் சந்தேகம் கேட்கும்பொழுது மட்டும் அவனுக்கு உண்மையை விளக்குவான்.

அதுபோல் கடவுள் பற்றிய உண்மையை முழுவதும் அறிந்து கொள்ள பின்வரும் படிக்கட்டுகளில் மக்கள் முன்னேறுவார்கள். முன்னேற்றம் அவர்களின் மனப்பாங்கை பொறுத்தது. ஒவ்வொரு படிக்கட்டில் இருப்பவர்களும் தாங்கள்தான் முற்றுணர்ந்தோர்கள் என்று நினைத்துக்கொண்டு மற்றவர்களின் கருத்தை காதுகொடுத்தும் கேட்காமல் இருந்தால் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை.

யார் முடிவான உண்மையை உணர்ந்த முற்றுணர்ந்தோன் என்பதை அறிவது மிக எளிது. எவனொருவன், வாழ்வு துன்பம் கலவாத இன்பமானது என்றும், உலகம் முழுவதும் மிகச்சரியாக இயங்கிக்கொண்டிருப்பதால் எவ்வித மாற்றமும் அவசியம் இல்லை என்றும், தான் செய்யவேண்டிய கடமைகள் என்று எதுவும் இல்லை என்றும் உணர்ந்திருக்கிறானோ அவன் மட்டுமே முற்றுணர்ந்தோன்.

அதிருப்தி, கவலை, வருத்தம், கோபம், துவேஷம், பொறாமை போன்ற மன அழுக்குகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருப்பவனே முக்தியடைந்தவன்.

ஞானம் – முதல்படி

கடவுள் இல்லை என்ற நிலையிலிருந்து கடவுள் இருக்கிறான் என்ற அறிவைப்பெறுவது முதல் படி. தன் கடவுள் மட்டும்தான் உண்மையானவன் என்றும் மற்றவர்களது கடவுளர்கள் பொய்யானவர்கள் என்றும் இவர்கள் நினைப்பார்கள். வேதம் கடவுளால் அருளப்பட்டது என்ற உண்மையை இவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அதை படிக்கவேண்டும் என்ற ஆவல் துளிகூட இருக்காது.

ஞானம் – இரண்டாம் படி

தன்னுடைய கடவுள்தான் மற்றவர்களது கடவுளர்களாக காட்சியளிக்கிறான் என்று நம்புபவர்கள் எல்லாக்கடவுளர்களையும் ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் முதல் படியில் இருப்பவர்களைப்போல் இந்த கடவுள் உயர்ந்தவர் அவர் தாழ்ந்தவர் என்று வாதிட மாட்டார்கள். வேதம், புராணம் ஆகியவற்றை கேட்பது இவர்களுக்கு பிடிக்கும். ஆயினும் அவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு இவர்களுக்கு அறிவுத்திறன் இல்லாமலிருந்தால் அடுத்தபடிக்கு இவர்கள் செல்ல மாட்டார்கள்.

ஞானம் – மூன்றாம் படி

தீவிர ஆசையுடன் இவர்கள் வேதத்தை ஆசிரியரிடம் படித்தாலும் இவர்களுக்கு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உண்மையை மனதில் கிரகித்துகொள்ளும் சக்தி இருப்பதில்லை. ஆனாலும் வேதத்தை தொடர்ந்து படித்து கடவுள் வேறு அவர் படைத்த உலகம் வேறு என்ற அரைகுறை அறிவிலிருந்து முன்னேறி கடவுளின் பருவுடல்தான் உலகம் என்ற உண்மையை புரிந்து கொள்வார்கள்.

முழுமையான ஞானம்

வேதம் படிக்கவும், படித்ததை புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டதை மனதில் அசைபோட்டு அறிவாக மாற்றி அதில் நிலைத்து நிற்பவர்கள் முழுமையான ஞானம் பெற்றவர்கள். வேதவாக்கின் உண்மைப்பொருளை புரிந்துகொண்ட இவர்கள் மற்ற படியில் உள்ளவர்கள் அவர்களின் மனநிலைக்கேற்ப ஒரே உண்மையின் வெவ்வேறு பகுதியைமட்டும் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவர். எனவே உலகில் உள்ள எந்த மதத்தையும் இவர்கள் தவறு என்று சொல்வது கிடையாது. மேலும் யாருடனும் விவாதம் செய்து தங்கள் கருத்துதான் சரியானது என்பதை நிலைநாட்ட இவர்களுக்கு அவசியமில்லை.

தாங்கள் உண்மை என்று நினைத்துக்கொண்டிருப்பதை எவ்வளவு பேர் உண்மை என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலை மற்றவர்களுக்கு இருக்கும். எனவே இவர்கள் தங்கள் கொள்கையை பரப்பவும், மதமாற்றம் செய்யவும் முயற்சி செய்வார்கள். இதனால் மனிதனுக்காக மதம் என்ற நிலை மாறி மதத்திற்காக மனிதன் என்ற நிலை இருந்துவருகிறது. தனிப்பட்ட மனிதன் தான் இன்பமாக வாழ முழுமையான ஞானம், வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகியவற்றை பெற வேதத்தின் உதவியை நாடினால் நன்மை அவனுக்கு கிடைக்கும். உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் வேதத்தை ஒதுக்கித்தள்ளினாலும் அதனால் ஏற்படும் நஷ்டம் வேதத்திற்கு இல்லை.

வேதம் படித்து முழுமையான ஞானம் பெற்றபின் வேதம், அனுபவம், தர்க்கம் ஆகியவற்றின்  அடிப்படையில் இதுதான் மேலான அறிவு என்பதை இவர்களால் நிரூபிக்க முடியும். உதாரணமாக தங்களுக்கு மறுபிறவி கிடையாது என்பதை இவர்கள் வேதம் சொல்கிறது என்ற நம்பிக்கையின் பெயரில் ஏற்றுக்கொள்ளாமல் அறிவுபூர்வமாக இவர்கள் தெரிந்துவைத்துக்கொண்டிருப்பார்கள்.

மற்ற படியில் இருப்பவர்கள் தங்கள் கொள்கைகளை விவாதம் செய்யவோ கேள்வி கேட்கவோ பொதுவாக அனுமதிப்பதில்லை. அப்படியே கேட்டாலும் வேதத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது என்றோ அல்லது அது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்றோ சமாதானம் சொல்வார்களே தவிர தர்க்கபூர்வமான பதில்களை கொடுக்க இயலாதவர்களாக இருப்பார்கள்.

முடிவுரை :

பெற்ற ஞானத்தை அழிக்கமுடியாது. ஞானத்தை மாற்ற அதைவிட உயர்ந்த ஞானத்தால் மட்டுமே முடியும். வேதத்திலிருந்து கிடைக்கும் நான் பரமன் என்பதுதான் அனைத்து ஞானங்களை விட மேலானது என்பதால் அந்த ஞானம் மாறவோ அழியவோ வாய்ப்பேயில்லை. எனவே இந்த உண்மையை புரிந்துகொண்டவர்கள்  முக்தியடைவதை தவிர்க்க முடியாது. முக்தியடைந்தபின் மீண்டும் அவர்களால் அஞ்ஞானத்தில் வீழமாட்டார்கள். ஆனால் வைராக்கியம் மற்றும் சாந்தம் ஆகியவற்றில் முழுமைபெறாவிட்டால் அவர்களது மனம் தொடர்ந்து உலகை நாடி வெற்றி-தோல்விகளில் அலைபாய்ந்து கொண்டிருக்கும். மேலும் ஞானத்தை போலன்றி வைராக்கியம் மற்றும் சாந்தம் நிலையானவை அல்ல. அவரவர்களின் நண்பர்கள், அலுவல் மற்றும் பழக்க வழக்கங்களை பொறுத்து இவை குறையலாம். எனவே இவை முழுமை அடையும்வரை முக்தியடைந்தவர்கள் தொடர்ந்து வேதம் கூறும் வழியில் வாழ்ந்தால்தான் முக்தியடைந்ததன் பலனை முழுமையாக அனுபவிக்கமுடியும்.

போதிய வைராக்கியம் இல்லாமல் முக்தியடைந்தவர்களை மாயையான உலகம் தொடர்ந்து கவரும். உலகின் பின் ஓட ஆரம்பித்த மனதிற்கு புத்தி அது மாயை என்பதை ஞாபகபடுத்தி அதன் ஓட்டத்தை நிறுத்த முயற்சிக்கும். எவ்வளவு சீக்கிரம் மனம் புத்தியின் பேச்சை கேட்டு தன் ஓட்டத்தை நிறுத்துகிறது என்பது அவரவர்களின் வைராக்கியத்தின் அளவை பொறுத்தது.

போதிய சாந்தம் இல்லாமல் முக்தியடைந்தவர்களை உலக நிகழ்வுகள் பாதிக்கும். மனதின் அமைதியை குலைத்து அதை அலைபாயச்செய்யும். அதன்பின் புத்தியின் கட்டுப்பாடின் மூலம் மனம் அமைதிபெறும். எவ்வளவுகாலம் மனம் அலை பாயும் என்பது அவரவரின் சாந்தத்தின் அளவை பொறுத்தது.

வைராக்கியமும் சாந்தமும் முழுமை பெற்றுவிட்டால் அதன்பின் குறையாது. எனவே முக்தியடைந்ததற்கு பிறகு, வேண்டிய பயிற்சிகளை மேற்கொண்டு இவ்விரண்டையும் நாம் முழுமைபடுத்திக்கொள்ளவேண்டும்.


பயிற்சிக்காக :

1. வேலை செய்வதன் அவசியமென்ன?

2. வைராக்கியம் என்றால் என்ன?

3. வைராக்கியம் படிப்படியாக எவ்வாறு அதிகரிக்கிறது?

4. வைராக்கியம் உள்ளவர்களின் ஆசைக்கும் மற்றவர்களின் ஆசைக்கும் என்ன வித்தியாசம்?

5. சமாதானம் என்றால் என்ன?

6. சமாதானம் படிப்படியாக எவ்வாறு அதிகரிக்கிறது?

7. ஞானத்தில் உள்ள படிகள் யாவை?

8. நம்முடைய ஞானம் தான் உயர்ந்த ஞானம் என்பதற்கு என்ன அத்தாட்சி?

9. ஞானத்திற்கும் மற்ற இரு தகுதிகளுக்கும் உள்ள முக்கியமான வேற்றுமை என்ன?

10. முதியவர்களுக்கு வாழ்வில் சலிப்பு ஏற்படக்காரணம் என்ன? 

சுயசிந்தனைக்காக :

1. ஓம் ஜெயஜகதீச ஹரே என்ற ஆரத்தி பாடலின் பொருளை ஆராய்க.

2. பணம் சம்பாதிப்பதற்கும் முக்தியடைவதற்கும் உள்ள உறவு என்ன?

3. சிரித்துக்கொண்டே மனிதவெடிகுண்டாக வெடித்துச்சிதற தயாராகும் தீவிரவாதி முக்தியடைந்தவனா?

4. முக்தியடைந்தபின்னும் கர்மகாண்டம் அவசியமா?