Friday, March 5, 2010

Lesson 99: One without the second ( பிரம்ம சூத்திரம் 3.2.31-37 )

பாடம் 99: இரண்டற்ற ஒன்று
பாடல் 349-355 (III.2.31-37)

நாம் அனுபவிக்கும் உலகத்தை இல்லையென்றும் நம் கண்ணுக்கு தெரியாத பரமன் மட்டும்தான் இரண்டற்ற ஒன்றாக இருக்கிறான் என்ற உண்மையையும் அறிந்து கொண்டால்தான் மனிதர்களின் இயற்கை சுபாவமான அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் அடங்கும் என்ற கருத்தை இந்த பாடம் தருகிறது.

அறியும் ஆவல்

குழந்தைப்பருவத்திலிருந்து சுற்றியுள்ள உலகத்தை முழுதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எப்பொழுது தோன்றியது, அதன் எல்லைக்கு பின் என்ன இருக்கிறது, இது தோன்ற காரணம் என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கின்றன.

இந்த அறியும் ஆவலுக்கு அடிப்படைகாரணம் நாம் அறிவுருவமாக இருப்பதுதான். எப்படி எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அது போலவே நிரந்தரமான அமைதியுடன் இருக்க அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் நம் அனைவரிடமும் இயற்கையாகவே இருக்கிறது.

அறிவின்மையும் ஆனந்தமும்

அனைத்தையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் நம் ஆனந்தத்திற்கு ஒருவகையில் தடையாய் இருப்பதுபோல் தெரிகிறது. ஒன்றும் அறியாதவர்களிடம் ஆசை அதிகமிருக்காது. அறிவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆசைகளும் அதிகரிக்கின்றன. இருப்பது போதாது, இன்னும் வேண்டும் என்ற எண்ணங்கள் நம்மை வெகு வேகமாக செயல்படவைக்கின்றன. அப்பாவிகளாக திரியும் ஒன்றும் அறியா நாடோடிகளிடம் இருக்கும் நிம்மதியும் ஆனந்தமும் அதிகம் படித்தவர்களிடம் இருப்பதாக தெரிவதில்லை.  

அறிவின் அவசியம்

அறியாமை மேலானது என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டால் கூட நம்மால் அறியாமையில் தொடர்ந்து இருக்க முடியாது. அறிவு என்பது நமது இயற்கையான தன்மை என்பதால் நம்மையறியாமல் தொடர்ந்து நமது அறிவு வளர்ந்து கொண்டேயிருக்கும். இதனால் நமது ஆசைகள் அதிகரித்து ஆனந்தத்தை அடைவதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தினாலும் படிப்படியாக வளரும் அறிவு விரைவில் குறையாத ஆனந்தத்தையும் நிலையான அமைதியையும் நமக்கு பெற்றுதரும்.  அறிவில் குறைவானவர்களின் தேவைகளும் குறைவாக இருப்பதால் அவர்கள் நிம்மதியாக இருப்பதாக தோன்றினாலும் அவர்கள் வாழ்வு இன்பமும் துன்பமும் கொண்ட கலவையாக இருக்குமே தவிர என்றும் குறையாத ஆனந்தத்தை அவர்கள் அடையவே மாட்டார்கள். எனவே ஆரம்பத்தில் அவர்களைவிட அதிக கஷ்டப்படுவது போல் தோன்றினாலும் முடிவில் வெற்றி பெற அறிவு மிக அவசியம்.

அறிவு என்றால் என்ன?

அறியும் அறிவு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்றாலும் அறிகிறோம் என்று அறியும் அறிவு மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது. எனவேதான் அறிவை அடைவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அறிவு என்றால் என்ன என்ற ஆராய்ச்சியையும் நம்மால் செய்ய முடிகிறது.

சுற்றியுள்ள உலகத்தின் நிகழ்வுகள் ஐந்து புலன்கள் மூலம் எண்ணங்களாக மனதில் நுழைகின்றன. இந்த எண்ணங்களை நமக்கு உபயோகமாக இருக்கும் வகையில் முறைபடுத்தி நினைவு வைத்துக்கொள்ளும் திறன்தான் அறிவு. அதிகமாக செயல்பட்டு பல்வேறு உலக அனுபவங்களை பெறுவதன் மூலமும் மற்றவர்களின் அனுபவங்களை படிப்பதன் மூலமும் யார் அதிகமான எண்ணங்களை  மனதில் சேர்த்து வாழ்வை இன்பமாக மாற்ற முயல்கிறார்களோ அவர்கள் அறிவாளிகள். அறிவு எப்பொழுதும் அறிபவனைச்சார்ந்து மட்டுமே இருக்கும். எண்ணங்கள்தான் அறிவு என்பதால் அறியாத அறிவு என்று ஒன்றும் கிடையாது.

எண்ணங்கள் என்றால் என்ன?

எண்ணங்கள் என்பவை நாம் வசிக்கும் உலகின் புகைப்படம். ஒவ்வொரு மனிதனும் தனது அனுபவங்களின் அடிப்படையில் எண்ணங்களை வெவ்வேறு முறையில் சேகரித்து முறைபடுத்தி அறிவாக மாற்றிவைத்துள்ளான். எனவே அறிவு என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். பெரும்பான்மை மக்களுடைய அறிவு சரியான அறிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எது சரியான அறிவு என்பது அதன் பயன்பாட்டை பொறுத்து மட்டுமே தீர்மானிக்கபட வேண்டும். வாழ்வை ஆனந்தமயமாகவும் சுகமானதாகவும் மாற்றிக்கொள்வது மட்டுமே அறிவின் பயன்.    

இன்டர்நெட் போன்ற ஊடங்கங்கள் அனைத்து மனிதர்களின் எண்ணங்களை பதிவு செய்து எப்பொழுது வேண்டுமானாலும் யார்வேண்டுமானாலும் அவற்றை அறிந்து கொள்ள வசதி செய்து கொடுத்திருப்பதால் தனிமனிதன் தனக்கு வேண்டிய அறிவை பெறுவது எப்படி என்ற அளவுக்கு அறிவை அடைந்தால் மட்டும் போதுமானது. எல்லாவற்றையும் எண்ணங்களாக மாற்றி மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இப்பொழுது இல்லை.

அறிவும் ஆனந்தமும்

அறிவு அதிகமாக அதிகமாக ஆனந்தத்தின் அளவு அதிகமாகிறது. ஆனால் அது போதவில்லை மேலும் வேண்டும் என்ற வேட்கையும் அதிகமாகிறது. இந்த வேட்கை சாதாரண மக்களிடம் குறைவாக இருப்பதனால் அவர்கள் அதிக நிம்மதியுடன் இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

அறிவை உபயோகபடுத்தி பணம் சம்பாதித்து சுற்றியிருக்கும் உலகை தன் ஆசைக்கேற்றவாறு அறிவாளி மாற்றிக்கொள்கிறான். போதும் என்ற மனம் இல்லாத ஒரே காரணத்தால்தான் மென்மேலும் அறிவை பெருக்கி பணம் சம்பாதிக்கிறான். எனவே போதும் என்ற மனம்தான் நிம்மதியை தரும் என்று கூறுவது வறட்டு உபதேசம். எது போதுமான அளவு? ஒருவேளை சாப்பிடுவதே ஆரோக்கியமாக வாழ போதுமெனினும் நாம் அதனுடன் நிறுத்திக்கொள்வதில்லை.

சிறிதளவுகூட துன்பபடாமல் எப்பொழுதும் இன்பமாக இருப்பதுதான் போதிய அளவு. இந்த போதிய அளவை அடையும் வரை அனைவரும் தொடர்ந்து முயன்று அறிவைபெற்று அதனால் பொருளை ஈட்டி உலகத்தில் இன்பத்தை தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். இதை மாற்றவே முடியாது. போதும் என்ற மனது முக்தியடைந்த பின்தான் ஏற்படும்.

அறிவும் ஆசையும்

ஒரு பொருளை பற்றிய அறிவு வரும் வரை அதன் மேல் ஆசை ஏற்பட வாய்ப்பில்லை. ஆசை ஏற்பட்டபின் அதை நிறைவேற்ற பல நாட்கள் முயற்சி செய்து அது நிறைவேறியதும் சில மணி நேரம் இன்பமடைகிறோம். பட்டம் பெறவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற நான்கு வருடம் கஷ்டபட்டால் அதனால் கிடைக்கும் இன்பம் ஓரிரு மாதம் கூட நீடிப்பதில்லை.  எனவே வாழ்வில் இன்பத்தை விட துன்பம்தான் அதிகம் என்று தோன்றுகிறது.

பசியோடு இருக்கும் நேரம் பசியில்லாமல் இருக்கும் நேரத்தைவிட மிகவும் குறைவு என்றாலும் அந்த நேரம்தான் மனதில் மேலோங்கி இருக்கிறது.  இதற்கு காரணம் நமது எண்ணங்கள்.

நம்மிடம் இல்லாத பொருள்களை பற்றிய எண்ணம்தான் நம் மனதில் மேலோங்கி இருக்கும். இருக்கும் பொருள்களை பற்றி எண்ணுவதில்லை. உடன் இருக்கும் மனைவியை பற்றிய எண்ணத்தைவிட அடுத்தவீட்டுப்பெண் எப்பொழுது கண்ணில் தென்படுவாள் என்ற எண்ணம்தான் அடிக்கடி மனதை ஆக்ரமிக்கும். இல்லாத பொருள் மேல் ஆசைபட்டு அதை இருக்கும் பொருளாக மாற்றியவுடன் அதை பற்றிய எண்ணங்கள் மறைந்து விடும். காதலிக்கும்பொழுது எப்பொழுதும் இருக்கும் காதலரை பற்றிய எண்ணம் கல்யாணம் ஆனவுடன் எப்பொழுதாவது கூட வருவதில்லை. கணவர்அலுவலக வேலையாக வெளியூர் சென்றால் மட்டும் அவரை பற்றிய எண்ணங்கள் மனதில் அவ்வப்பொழுது தோன்றும். இது இயற்கை. எனவே எண்ணங்கள் நமது நிம்மதியை குலைக்கின்றன என்பது தவறான அறிவு.

இல்லாத பொருள்களை பற்றிய எண்ணங்கள்தான் மனதில் பிரபலமாக இருக்கும். இந்த எண்ணங்கள் அந்த பொருளை அடைய நம்மை செயல் செய்ய தூண்டும். செயல்களில் ஈடுபடும்பொழுது அந்த பொருள்களை பற்றிய எண்ணங்கள் அதிகமாகி அடங்காத ஆவலாக மாறும். நாம் ஆசை பட்ட பொருள்களை அடைய ஏதேனும் தடை ஏற்பட்டால் இந்த எண்ணங்கள் கோபமாகவோ வருத்தமாகவோ மாறும். நமது இயல்பான ஆனந்தத்திலிருந்து நாம் வெகு தூரம் சென்றுவிடுவோம்.

வெளியூர் சென்ற கணவர் திரும்பி வருவேன் என்று சொன்ன  நாளில் அவரை வரவேற்க கொஞ்சம் ஆவல் இருக்கும். அன்று வராமல் ஏமாற்றம் ஏற்பட்டால் அந்த ஏக்கம் ஆவலை அதிகபடுத்தும். அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் வரவில்லை என்று கேட்கும்பொழுது அவர் சுவாரஸ்யமில்லாமல் பதில் சொன்னால் கோபம் ஏற்படும். அவருக்கு ஏதாவது விபத்து என்று கேள்விபட்டால் அவர் உயிருடன் திரும்பினால் போதும் என கடவுளை பிரார்த்திப்போம். அவர் திரும்பி வந்தவுடன் ஏற்படும் இன்பம் ஒரு சில மணிநேரங்களில் மறைந்து விட்டு பழயபடி நம்மிடம் இல்லாத நகையை பற்றிய ஏக்கம் மீண்டும் நமது மனதில் குடியேறிவிடும். இதுபோல் தொடர்ந்து அறிவு ஆசையாகி பெரும்பான்மையான நேரம் மனதை பசியுடன் வைத்திருப்பதனால் நம் இயற்கை சொரூபமான ஆனந்தத்தை அனுபவிக்கும் நேரம் மிக குறைவாக தோன்றுகிறது. எண்ணங்களின் இந்த தன்மையை மாற்ற முடியாது.

அறிவும் ஆனந்தமும் முரண்பாடற்றவை

அறிவுஆசைதுன்பத்துடன் வெகு காலம் செயல்ஆசை நிறைவேறியதால் சிறிது நேரம் ஆனந்தம்செயல் செய்ததால் அதிக அறிவுஅதிக ஆசை.  இப்படி அறிவு, ஆசை, செயல்கள்,ஆனந்தம் இவை நான்கும் தொடர் வண்டி போல் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டிருப்பதே தனி மனிதனின் வளர்ச்சிக்கும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை காரணம். எனவே அறிவும் ஆனந்தமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அதிக ஆனந்தத்தை தேடும் இந்த முயற்சி நாம் முக்தியடைந்த பின்னரே நிற்கும்.

முக்தி என்றால் என்ன?

என்றும் குறையாத ஆனந்தத்துடன் இருப்பதே முக்தி. ஆனால் இந்த நிலையை அடைய இனி அறிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையை அடைய வேண்டும். எல்லாவற்றையும் அறிந்து கொள்வது என்றால் இந்த பிரபஞ்சத்தை பற்றிய முழு அறிவு ஆகும். வேதம் இந்த அறிவை நமக்கு வழங்குகிறது. 

மூன்று கேள்விகள்

பிரபஞ்சம் எப்பொழுது தோன்றியது? காலம் என்பது தோற்றத்தின் ஒரு பகுதி. எனவே இது தவறான கேள்வி. மலடியின் மகனுடைய பெயர் என்ன என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.

பிரபஞ்சத்தின் எல்லை எவ்வளவு தூரம்? அதன் அளவு என்ன? தூரம், அளவு ஆகியவை வெளி(space)ஐ குறிக்கின்றன. காலமும் வெளியும் (time and space) ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கமுடியாத ஒரே தத்துவம். இதுவும் தோற்றத்தின் ஒரு பகுதி என்பதால் இது தவறான கேள்வி.  வானத்தில் பூத்த மலரின் வண்ணம் என்ன என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.

பிரபஞ்சம் எப்படி தோன்றியது? தோற்றம் மற்றும் மறைவு ஆகிய இரண்டும் மாற்றத்தின் ஒரு பகுதி. வட்டமான பாதை எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.   

தீர்க்கமான அறிவு இருந்தால் இந்த கேள்விகளுக்கு பதிலை அறிய முடியாது என்ற அறிவு நமக்கு கிடைக்கும். ஜென் மதகுரு ஒருவர் ஒரு கையை தட்டினால் ஏற்படும் ஓசை எப்படி இருக்கும் என்று கண்டுபிடுத்து வருமாறு சீடர்களிடம் கூறினார். பதில் கூற முயன்ற அத்தனை சீடர்களையும் அவர்கள் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே பளார் என்று கன்னத்தில் அடித்தார். பதில் சொல்ல முடியாது என்பதை அறிந்தவன் மட்டும் எந்த பதிலும் சொல்ல முயலவில்லை.

முடிவுரை :

மாறும் உலகத்தில் உள்ள பொருள்கள் மீதும் மனிதர்கள் மீதும் ஆசைகொள்வது முதல் படி. இது போன்ற உலக ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள செயல்களில் ஈடுபடுவது இரண்டாவது படி. செயல்கள் மூலம் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டு பரமனை அறிந்து கொள்ள ஆசை படுவது மூன்றாவது படி.

பரமன் நீதான் எனும் வேதத்தின் கருத்தை முறையாக ஆசிரியரிடம் பயின்றால் இவ்வுலகம் மாயை என்று புரியும். ஆகவே இருப்பதுபோல் தோற்றமளிக்கும் உலகம் எப்பொழுது தோன்றியது அல்லது ஏன் தோன்றியது போன்ற கேள்விகள் அனாவசியம் என்று புரியும். மாயையை புரிந்து கொள்ள முடியாது என்பதை முறையாக பயின்று புரிந்து கொண்டால் பின் நம் அறியும் ஆவல் முற்றிலும் அகன்று விடும்.

கனவில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை ஒரு காகிதத்தில் எழுதிவைத்துக்கொண்டு இது ஏன் இப்படி நடந்தது என்று யாரும் ஆராய்ச்சி நடத்துவதில்லை. ஏதோ கனவில் அது மாதிரி நடந்தது, அவ்வளவுதான். ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளால் ஒரு பயனும் இல்லை. அது போலவே நாம் வாழும் உலகும் மாயை என்று அறிந்து கொண்ட பின் வேறு எதையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எனவே இருப்பது இரண்டற்ற ஒன்றான நான் மட்டுமே. என் உடல் மனம் உள்ளிட்ட உலகம் மாறிக்கொண்டிருக்கும் மாயை. நான் மாறா பரமன். இந்த உண்மையை புரிந்து கொள்வதே நமது முடிவான ஆசையாக இருக்கவேண்டும்.

பயிற்சிக்காக :

1. அறியும் ஆவல் மனிதர்களிடம் இருப்பதற்கு காரணம் என்ன?

2. அறிவின்மையும் ஆனந்தமும் என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?

3. அறிவு என்றால் என்ன?

4. எண்ணங்கள் என்றால் என்ன?

5. அறிவின் அவசியம் யாது?

6. முக்தி என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. பிரபஞ்சத்தை பற்றிய கேள்விகளுக்கு பதிலை அறிந்து கொள்ள முடியாது என்றால் வேதத்தை படித்து என்ன பயன்?

2.நான் மட்டும்தான் இருக்கிறேன் என்றால் உலகம் என் கற்பனையா?

3. முக்தியடைய அறிவு மட்டும் இருந்தால் போதுமா, கடவுள் அவசியமில்லையா?


Wednesday, March 3, 2010

Lesson 98: Not this...Not this... ( பிரம்ம சூத்திரம் 3.2.22-30 )

பாடம் 98: நான் அவனில்லை
பாடல் 340-348 (III.2.22-30)

பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று பரமன் ஒன்றாகவும் பலவாகவும், அருவமாகவும் உருவமாகவும், உண்மையாகவும் பொய்யாகவும், வரையரைக்கு உட்பட்டவனாகவும் அப்பாற்பட்டவனாகவும் ஒரே சமயத்தில் இருப்பதாக கூறுவதன் காரணத்தை விளக்கி நான் யார்என்ற கேள்விக்கு நாம் சாதாரணமாக கொடுக்கும் தவறான பதிலகளை இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.

அசலும் நகலும்

திரைப்படத்தில் ஒரு நடிகன் பல வேடங்களில் நடிப்பது போல் வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறோம். தான் ஏற்கும் வேடங்கள் வெறும் கற்பனை உருவங்கள் என்றும் பணம், புகழ் ஆகியவற்றை சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வெவ்வேறு வேடங்களில் நடிக்கும் நான், வேடங்களிலிருந்து வேறு பட்டவன் என்றும் அந்த நடிகனுக்கு தெளிவாக தெரியும். ஆனால் வாழ்வில் நாம் ஏற்கும் மகன், கணவன், தந்தை, குடிமகன், மாணவன், பட்டதாரி, தொழிலாளி, மேலாளர் போன்ற பல்வேறு பாத்திரங்களிலிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று நமக்கு தெரிவதேயில்லை. ஆகவேதான்நான் யார்?’ என்ற கேள்விக்கு நடிகன் பாத்திரத்தின் பெயரைச்சொல்வதுபோல் தவறான பதிலை கொடுத்து வருகிறோம்.

ஒரு நகரத்தில் உள்ள உயிர்காட்சியகம், அருங்காட்சியகம் பொன்ற இடங்களை பார்க்க விரும்பும் வெளிநாட்டு பயணி ஒருவர் சுற்றுலா அலுவலகத்தின் உதவியை நாடினால் அவருக்கு ஒரு வரைபடம் கொடுக்கப்படும். அதில் பார்க்க வேண்டிய அனைத்து இடங்களும் அவற்றை சென்றடைய சரியான பாதையும் காண்பிக்கபட்டிருக்கும். அந்த வரைபடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்: ‘நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்என்று சுட்டிக்காட்டும் ஒரு அம்புக்குறி.

நாம் தற்பொழுது எங்கு இருக்கிறோம் என்று தெரிந்தால்தான் அந்த வரைபடத்தை உபயோகித்து எல்லா இடங்களுக்கும் பயணிக்க முடியும். அது போல நான் யார் என்பதை அறிந்தால் மட்டுமே நாம் ஏற்கும் அனைத்து பாத்திரங்களிலும் திறம்பட செயலாற்ற முடியும்.

தாய் பிறந்தாள்

ஒரு குழந்தை பிறக்கும்பொழுதுதான் தாயும் பிறக்கிறாள். குழந்தைக்கு மட்டும்தான் அவள் தாய். அதே பெண் அவளுடைய தாய்க்கு மகள். தாய், மகள் ஆகியவை ஒரு குறிப்பிட கால கட்டதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரை பொறுத்து மாறும் பொது உண்மை (Relative reality). மாணவர்களே இல்லாத குரு யாரும் இருக்க முடியாது. ஒரே ஒரு மாணவன் இருந்தாலும் அவனை பொறுத்தவரை அவர் குருதான். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் மனித சமுதாயம் பல குழப்பங்களில் ஆழ்ந்து உள்ளது.

ஒரு நடிகன் வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்க வெவ்வேறு ஒப்பனைகள் செய்துகொள்வான். ஒரு வேடத்தை கலைத்துவிட்டுத்தான் மற்றொரு வேடத்தை போட்டுக்கொள்ள முடியும். ஆனால் வாழ்வில் நாம் பிறந்தது முதல் ஒன்றன் பின் ஒன்றாக பல வேடங்களை ஒன்றன் மேல் ஒன்றாக போட்டுக்கொண்டு நமது சொந்த முகத்தையே அறியாதவர்களாக குழம்பியிருக்கிறோம்.

இதனாலேயேசாமியார் நடிகையுடன் உல்லாசம்’, ‘போலீஸ்காரர் திருடினார்என்பது போன்ற நடக்கமுடியாத நிகழ்வுகளை நிஜம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஒரு திருடனால் மட்டுமே திருட முடியும். வேறு யாராலும் திருட முடியாது. போலீஸ்காரன் என்பது அவனது உத்தியோகம். அதே போல்சாமியார்’, ‘நடிகைஎன்பவைகள் வகிக்கும் பாத்திரங்கள். ஒரு ஆணும் பெண்ணும் உல்லாசமாக இருக்கலாம். வேறு யாராலும் அது முடியாது. பல பாத்திரங்களை ஏற்று நடிப்பவர் பாத்திரங்களிலிருந்து வேறுபட்டவர் என்பது தெரிந்தால் ஒரு பாத்திரத்தின் செயலை மற்றதன் மேல் ஏற்றி தவறாக புரிந்து கொள்ள மாட்டோம்.

ஒரே நடிகர் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதால் கெட்டவன் செய்த கொலைக்கு நல்லவனை பொறுப்பாளியாக்க முடியாது. நிஜ வாழ்வுக்கும் இது பொருந்தும். போலீஸ், தந்தை, மகன், கணவன் ஆகிய பாத்திரங்களை ஏற்று வாழும் ஒருவன் ஒரு பொருளை திருடினால் அவன் திருடன். திருடனுக்கு ஏற்ற தண்டனையை தரலாமே தவிர திருடியது போலீஸா கணவனா என்ற ஆராய்ச்சி நேரத்தை வீணாக்கும் செயல்.

உபயோகிக்கும் கருவி

கத்தியை உபயோகபடுத்துவன் கொலைகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஒரு மருத்துவனாகவோ, சமையற்காரனாகவோ அல்லது முடிதிருத்துபவனாகவோ இருக்கலாம். அது போல் ஒருவன் தன் உடலை காவல் காக்கவோ அல்லது திருடவோ பயன்படுத்தலாம்.

உடலும் மனமும் நாம் உபயோகிக்கும் கருவிகள். அவற்றை உபயோகித்து நாம் பல பாத்திரங்களின் கடமைகளை செய்கிறோம். நாம் வகிக்கும் பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. காவல் காப்பவன் போலீஸ். திருடுபவன் திருடன். ‘போலீஸ்காரன் திருடினான்’, ‘நல்லவன் கொலை செய்தான்என்பது போன்ற தவறான எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.    
கடமையில் முரண்பாடு (Role conflict)

நான் யார், எதற்காக இந்த பாத்திரத்தை ஏற்றுள்ளேன் என்ற கேள்விகளுக்கு சரியான பதில் தெரியாத காரணத்தால் நாம் நம் வேலைகளை சரிவர செய்ய முடிவதில்லை. உதாரணமாக வங்கியில் மேலாளர் ஒருவர் தன் மகனின்  படிப்புக்காக வங்கியின் பணத்தை கையாடலாமா என்ற கேள்வியே தவறு என்று பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. ஏனெனில் வங்கி மேலாளர், நடிகர், போலீஸ்காரர், சாமியார், ஜனாதிபதி, ஆசிரியர் ஆகியோருக்கு மகன் இருக்கவே முடியாது.

பெற்றோருக்கு மட்டும் தான் மகன் இருக்க முடியும். மேலாளர் என்பது வங்கியுடன் உள்ள உறவுமுறை. மேலாளர் பதவியை வகித்து தனது கடமையாக பணத்தை எண்ணும் பொழுது அந்த வேடத்தை கலைக்காமலேயே தந்தை என்ற மற்றொரு வேடத்தை போட்டுக்கொள்வதால் இந்த பணத்தை மகனின் கல்விக்காக எடுத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது.

தந்தை என்பதும் மேலாளர் என்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இருவேறு பாத்திரங்கள் என்றும், நாம் நமது உடல் மற்றும் மனம் ஆகிய கருவிகளை பயன்படுத்தி இவ்விரு பாத்திரங்களின் கடமைகளையும் செய்கிறோம் என்ற தெளிவும் இருந்தால் எவ்வித குழப்பமும் வராது. இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் நல்லவனாக நடிக்கும்பொழுது கெட்டவனுடைய வசனங்களை குழப்பிக்கொள்வதில்லை. தெளிவாக அந்தந்த பாத்திரத்தினுடைய வசனங்களை பேசி செயல்பாடுகளை சரியாக செய்வதற்கு ஒரே காரணம், மனதில் உள்ள தெளிவுதான். ஆனால் நமக்கு அந்த தெளிவு இருப்பதில்லை. வங்கி மேலாளருக்கு மகன் இருக்கிறானா அல்லது தந்தை மேலாளராக பணிபுரிகிறாரா என்ற இரு தவறான பதில்களிக்கிடையே அலை பாய்ந்து கொண்டிருக்கிறோம். பணத்தை எடுத்தால் வங்கி மேலாளர் என்ற பொறுப்பிலிருந்து தவறியவராகவும் பணத்தை எடுக்காவிட்டால் தந்தையின் கடமையிலிருந்து தவறியவராகவும் நினைக்கிறோம்.

எப்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரங்களிலிருந்து நான் வேறானவன் என்ற தெளிவு நமக்கு ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் நமக்கு நிம்மதி கிடைக்கும். மேலும் நம் எல்லா பொறுப்புகளையும் எவ்வித முரண்பாடோ மனகஷ்டமோ இல்லாமல் செவ்வனே செய்யமுடியும்.   

நல்லவனா கெட்டவனா?

இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் எந்த வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செய்யவேண்டும்? இயக்குனர் என்ன சொல்கிறாறோ அதன் படி நடக்கவேண்டுமா அல்லது சத்தியமே வெல்லும் என்பதால் நல்லவன் வேடத்தை சிறப்பாக செய்யவேண்டுமா?

மனதில் குழப்பமில்லாத நடிகர் தம் முழுதிறமையையும் உழைப்பையும் கொடுத்து எது மிகவும் நன்றாக இருக்கிறது என்று யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு  இரு வேடங்களையும் சிறப்பாக செய்வார்.

நான் வங்கியில் வேலை செய்யும் காரணமே என் குடும்பத்தலைவர் என்ற பொறுப்பை ஒழுங்காக செய்வதற்காகத்தான். எனவே மேலாளர் என்ற பாத்திரத்தை விட குடும்பத்தலைவர் என்ற பாத்திரம்தான் முக்கியமானது என்று ஒரு சிலர் எண்ணுவார்கள்.
மேலாளர் என்ற பதவியில் இருப்பதால்தான் பணம் கிடைக்கிறது. எனவே அதுதான் மற்ற அனைத்து பாத்திரங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வேலையை சரியாக செய்யவதற்காக வீட்டுக்கே வராமல் அலுவலகத்தில் குடியிருந்தாலும் தவறில்லை என்று மற்றும் பலர் எண்ணுவார்கள்.

இரண்டும் தவறான எண்ணம். நடிகனை நடித்துத்தான் ஆகவேண்டும் என்று யாரும் கட்டாயபடுத்துவதில்லை. ஆனால் நடிகன் என்ற வேலையை ஏற்றுக்கொண்ட பின் முழுஉழைப்பை கொடுத்து நடித்துத்தான் ஆகவேண்டும். அதுபோல நம்மையும் யாரும் உத்தியோகம் செய்துதான் ஆகவேண்டும் என்றோ குடும்பத்தலைவராக பொறுபேற்றுகொள்ள வேண்டும் என்றோ கட்டாயப் படுத்துவதில்லை. வேண்டாமென்றால் எந்த பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ஏற்று கொண்ட பாத்திரங்கள் அனைத்தையும் எவ்வித பாகுபாடுமில்லாமல் மிகச்சிறப்பாக செய்யவேண்டியது நமது கடமை.

அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்ததால் வீட்டில் இருப்பவர்கள் மீது எரிந்து விழக்கூடாது. இப்படி நடப்பதற்கு காரணம் வீடு திரும்பியவுடன் மேலாளர் என்ற வேடத்தை கலைக்காமல் அதன் மேலேயே கணவன், தந்தை போன்ற வேடங்களை போட்டுக்கொள்வதுதான். நமது அனைத்து எண்ணங்களும் ஏதாவது ஒரு பாத்திரத்தை சார்ந்தே இருக்கும். எந்த வேடம் அணிந்திருக்கிறோம் என்ற தெளிவு இருந்தால் எண்ணங்களும் தெளிவாகவே இருக்கும்.  

நாம் ஏற்கும் பாத்திரங்கள் அனைத்தும் நமது நன்மைக்காக மட்டும்தான் என்ற தெளிவு நமக்கு ஏற்பட வேண்டும். ந்த தெளிவு ஏற்படும் வரை ஒன்றன்மேல் ஒன்றாக போட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேடங்களையும் கழட்டிவிட்டு நம்முடைய சொந்த முகத்துடன் ஒருசிலநேரமாவது இருக்க வேண்டும். ஒரு நாளில் காலை எழுந்தவுடன், உறங்குவதற்கு முன், அலுவலகத்துக்கு செல்லும் முன், திரும்பிய பின் மற்றும் மதிய உணவு இடைவெளிக்கு பின் ஆகிய ஐந்து தடவைகள் நாம் நம் சொந்த முகத்துடன் ஒரு சில நிமிடங்களாவது இருந்து பழகவேண்டும்.

நமது சொந்த முகம்: என்றும் ஆனந்தமாக இருக்கும் அறிவுருவம்.

முடிவுரை :

நான் பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக்கொண்டிருப்பதால் ஒன்றாகவும் பலவாகவும் ஒரே சமயத்தில் இருக்கிறேன். கண்ணுக்கு தெரியும் உடலைக்கொண்டு ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும்  நான் எந்த உருவமில்லாத அருவமானவன். நான் மட்டும்தான் உண்மை. நான் ஏற்றுக்கொண்டிருக்கும் அனைத்து பாத்திரங்களும் இன்றிருந்து நாளை இல்லை என்று மாறிக்கொண்டிருக்கும் நிலையற்ற பொய்கள்.

இந்த உண்மைகளை நமக்கு உணர்த்ததான் வாழ்வில் முதுமை வருகிறது. பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் மேலாளர் என்ற பாத்திரம் மறைந்து விடுகிறது. பெற்றோர்களின் மறைவுக்கு பிறகு மகன் என்ற பாத்திரம் முடிந்து விடுகிறது. இதுபோல் ஒவ்வொரு பாத்திரமும் முடிவடையும் பொழுது நான் உண்மையில் யார் என்ற கேள்வி நம் மனதில் எழலாம். இதை தவிர்க்கவே நாம் தொடர்ந்து ஏதாவது வேடம் போட்டுக்கொண்டு இடைவிடாமல் ஏதாவது வேலை செய்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை தொடரும்வரை நமக்கு நிம்மதி இருக்காது.

நான் பரமன். நான் ஏற்று நடித்து உயிர்கொடுக்கும் பல்வேறு பாத்திரங்கள் என்னுடைய மாயா சக்தியின் வெளிப்பாடு. ஒவ்வொரு பாத்திரத்தின் கடமைகளை திறம்பட செய்வதன் மூலம் என்னுடைய மனம் என்னும் கருவியை கூர்மையுள்ளதாக ஆக்கி அதன் பின் வேதம் படித்து நான் யார் என்பதை தெரிந்து கொண்டு வாழ்வு முழுவதும் குறையில்லா ஆனந்தத்துடன் இருப்பேன் என்று நாம் அனைவரும் பரமனை அறிய ஆசைகொள்ள வேண்டும்.

பயிற்சிக்காக :

1. ஒரு நடிகன் பல வேடங்களில் நடிப்பதற்கும் நாம் பல பாத்திரங்களை ஏற்றுகொள்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

2.’போலீஸ்காரர் திருடினார்என்று சொல்வதில் என்ன தவறு?

3.நாம் பயன்படுத்தும் இரு கருவிகள் யாவை?

4.நாம் ஏற்கும் எல்லா பாத்திரங்களையும் திறம்பட செய்யவேண்டியதன் அவசியமென்ன?

5.நமது சொந்த முகம் என்பது யாது?

சுயசிந்தனைக்காக :

1.நடிப்பது உண்மையாக நடப்பதை விட மேலானது  என்று எப்படி கூறமுடியும்?

2.போலீஸ்காரன் திருடினால் தண்டனை அதிகமா?

3.நாம் வகிக்கும் வெவ்வேறு பாத்திரங்களின் தன்மைகளை ஆய்க.

Tuesday, March 2, 2010

Lesson 97: The nature of Brahman ( பிரம்ம சூத்திரம் 3.2.11-21 )

பாடம் 97: பரமன் மேல் ஆசை
பாடல் 329-339 (III.2.11-21)

உண்மையில் மக்களுக்கு பல்வேறு பொருள்கள் மேல் ஆசை இல்லை என்றும் அனைவரும் எப்பொழுதும் பரமன் மேல் மட்டும்தான் ஆசை கொண்டிருக்கிறார்கள் என்றும் வேதம் கூறும் கருத்தை தர்க்கத்தின் மூலம் இந்த பாடம் நிரூபிக்கிறது.

ஆசையின் அடிப்படை

உனக்கு யாரை நிறைய பிடிக்கும்? அம்மாவையா அல்லது அப்பாவையா?’ என்று கேட்டு சிறுவயது குழந்தையை பெற்றோர்கள் விளையாட்டுக்காக குழப்பத்தில் ஆழ்த்துவர். இதே கேள்வியை இப்பொழுது நமது பெற்றோர் நம்மிடம் கேட்டால் நாம் என்ன பதில் சொல்லுவோம் என்று அறிவு பூர்வமாக யோசித்தால்  ஆசை பற்றிய ஒரு பெரிய குழப்பம் நம் மனதிலிருந்து நீங்கும்.

எல்லோரையும் நேசி, விரோதியையும் நண்பன் போல் கருதி அனைவர் மீதும் சமமான ஆசை கொள் என்று நடைமுறை வாழ்வில் சிறிதும் சாத்தியமில்லாத காரியங்களை செய்யச்சொல்லும் முட்டாள்தனமான அறிவுரைகளை ஒதுக்கி தள்ளிவிட்டால் நமக்கு சிலரை மிகவும் பிடிக்கும், வேறு சிலரை பிடிக்கவே பிடிக்காது என்ற உண்மையை ஒத்துக்கொள்வோம்.  எல்லோரையும் சமமாக நேசிக்க வேண்டும் என்பது ஒரு தவறான குறிக்கோள்.

நமக்கு மிகவும் பிடித்த பத்து பொருள்களை அல்லது மனிதர்களை வரிசையாக பட்டியலிட்டு ஒவ்வொன்றையும் ஏன் பிடித்திருக்கிறது என்று ஆராய்ந்தோமானால் எது எனக்கு அதிகம் இன்பம் தருகிறதோ அதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்ற உண்மை தெரியவரும். ஆசை வெறுப்பாக மாறுவதற்கு வெகு நேரம் ஆகாது. ஒருவர் நமக்கு இன்பம் தரும் ஒரே காரணத்தால்தான் அவரை நமக்கு பிடித்திருக்கிறது. எப்பொழுது அவர் நமக்கு இன்பம் தராமல் துன்பம் கொடுக்க ஆரம்பிக்கிறாரோ அப்பொழுதே அவர் நமக்கு பிடிக்காதவராக மாறிவிடுவார்.

நாம் எழுதிய பட்டியலில்என் கணவன் அல்லது மனைவிஎன்பது முதல் இடத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் நமக்கு தெரியாமல் வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தெரிய வந்த அதே நொடியில் பிடித்தவர்கள் பட்டியலிலிருந்து அவரது பெயரை நீக்கிவிடுவோம்.

எனவே நாம் ஒரு பொருள் மேல் ஆசை கொள்வது அது நமக்கு இன்பம் தருகிறது என்ற காரணத்தால் மட்டுமே. எனவே இன்பம்தான் ஆசையின் அடிப்படை. நமக்கு இன்பம் தராமல் துன்பம் தரும் ஒரு பொருளை நம்மால் நேசிக்கவே முடியாது.

என்னை பிடிக்கும்

தன்னை பற்றி உயர்வாக மற்றவர்கள் பேசுவதை கேட்க எல்லோரும் விரும்புவார்கள் என்ற உண்மையிலிருந்து எல்லோருக்கும் தன்னை பிடிக்கும் என்ற உண்மை தெளிவாகிறது.

எனக்கு பிடித்த பொருள்கள் அனைத்திலிருந்தும் எனக்கு இன்பம் கிடைக்கிறது. எனக்கு என்னை பிடிக்கும். ஆகவே என்னிலிருந்தும் எனக்கு இன்பம் கிடைக்கவேண்டும் என்ற தர்க்கத்தின் மூலம் வேதம் என் உண்மை சொரூபம் ஆனந்தம் என்று என்னை பற்றி கூறும் உண்மையை அறிந்து கொள்ள முயலலாம்.

நிபந்தனைகுட்படாத ஆசை

பொதுவாக பிடித்தவை யாவை என்று பட்டியல் எழுதும்பொழுது எனக்கு என்னை பிடிக்கும் என்பதை விட்டுவிட்டு நம்மைசுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் பொருள்களை மட்டும்தான் பலர் எழுதுவார்கள். எனக்கு என்னைப்பிடிக்கும் என்பது மட்டும்தான் நிபந்தனைக்குட்படாத ஆசை. மற்றதனைத்தும் எனக்கு இன்பத்தை தருகின்றன என்ற காரணத்தால் மட்டும்தான் அவற்றின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. அவை துன்பம் தந்தால் பட்டியலிலிருந்து நீக்கப்படும். எனவே உண்மையில் எந்த நிபந்தனையும் இல்லாமல் எனக்கு பிடித்த ஒரே நபர் நான் மட்டும்தான்.

அனைவரும் சுயநலவாதிகள்

அதே போல் நம்மையும் யாராலும் நிபந்தனையின்றி நேசிக்க முடியாது. எல்லோரும் அவரவரின் சுயநலத்திற்காக மட்டுமே மற்றவரை நேசிக்கிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை. நான் என்னுடைய இன்பத்திற்காகத்தான் மற்றவரை நேசிக்கிறேன் என்ற உண்மையை மறுத்து கபட நாடகம் ஆடுவதுதான் தவறு.

நம்மிடம் இருக்கும் ஒன்றைத்தான் இன்னொருவருக்கு தரமுடியும். இரு பிச்சைக்காரர்கள் ஒருவரை ஒருவர் செல்வந்தர் என்று எண்ணி நட்புகொண்டால் சிறிது நாளில் உண்மை வெளியாகி ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வர். ‘நான் உன்னை காதலிக்கிறேன்என்று சொல்லிக்கொள்ளும் இரு காதலர்களின் நிலைமையும் இது போல் தான். தன்னிடம் இல்லாத இன்பம் மற்றவரிடமிருந்து கிடைக்குமென்ற எதிர்பார்ப்பு மிக விரைவில் ஏமாற்றமாக மாறி காதலை அழித்துவிடும். இன்பமாக இருக்கும் ஒருவரால்தான் மற்றவருக்கு இன்பத்தை கொடுக்க முடியும். குறையுடன் கூடிய இருவர் ஒன்றானால் குறை அதிகரிக்குமே தவிர நிறையாகாது.  மற்றவர்கள் நமக்கு இன்பம் தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு பிடித்த வகையில் நடந்து கொண்டு தானும் ஏமாறி மற்றவர்களையும் ஏமாற்றும் வழக்கம் அறியாமையால் தொடர்கிறது.  

உலகின் மிகப்பெரிய பொய்

நான் உன்னை நேசிக்கிறேன்என்பது ஒரு மிகப்பெரிய பொய். இது உண்மையாய் இருக்க வாய்ப்பே இல்லை என்பதை மிக எளிதான சோதனை மூலம் நிரூபிக்கலாம். ஏன் ஒருவரை நாம் நேசிக்கிறோம் என்ற காரணத்தை ஆராய்ந்தால் அவரை அவருக்காக நாம் நேசிப்பதில்லை என்றும் அவரிடம் உள்ள செல்வம், உடல் அழகு, திறமை, பேச்சுத்திறன், நாணயமான செயல்பாடு, இங்கிதம் போன்றவற்றிக்காக மட்டுமே என்று தெரியவரும்.

ஏனெனில் அவர் உண்மையில் யார் என்றே நமக்கு தெரியாது. அவரிடம் உள்ள பொருள்கள், குடும்ப பின்னணி, வெளிப்புறத்தோற்றம், குணம், பண்புகள், உடல் மற்றும் மனம் ஆகியவற்றின் ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் அவரைச்சார்ந்தவை. இவை அனைத்தும் மாறக்கூடியவை. மேலும் நம் எதிர்பார்ப்புகளும் தொடர்ந்து மாறிக்கொண்டு இருக்கின்றன. எனவே யாராலும் எவருக்கும் தொடர்ந்து இன்பம் தர முடியாது என்ற காரணத்தால் இன்று உண்மை போல் தோற்றமளிக்கும்நான் உன்னை நேசிக்கிறேன்என்ற வசனம் கூடியவிரைவில் பொய்யாகிவிடும். இதற்கு விதிவிலக்கே கிடையாது.

நான் யார்?

தன்னை யார் என்று அறிந்தவர்களால் மட்டுமே மற்றவர்களை சரியாக அறிந்து கொள்ள முடியும். ஒரு ஆசிரியரின் துணையில்லாமல் நான் யார்என்ற கேள்விக்கு யாராலும் பதில் கண்டுபிடிக்க முடியாது. தன்னிடம் ஒரு நாய் இருக்கிறது என்பதால் நான் ஒரு நாய்என்று சொல்வது போல் அனைவரும் நான் பணக்காரன், ஏழை, மருத்துவன், பொறியாளன், ஆண், பெண், மனிதன் என்று பல தவறான பதில்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சரியான பதிலை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு ஆசிரியரிடம் சரணடைந்து முறையாக வேதத்தை படிக்க வேண்டும்.

ஆசிரியரின் தேவை

காதில் மாட்டியிருக்கும் மூக்குக்கண்ணாடியை தலைமேல் தள்ளிவிட்டு விட்டு அரைகுறை பார்வையுடன் அறை முழுவதும் என் கண்ணாடி எங்கேஎன்று தடவி தடவி தேடிக்கொண்டிருப்பது போல்தான் யாரேனும் நமக்கு இன்பம் தருவார்களா என்று அனைவரும் பிச்சையெடுத்து கொண்டிருக்கிறார்கள். தலை மேல் இருக்கும் மூக்கு கண்ணாடியை நம்மேல் அக்கறை கொண்ட ஒருவரின் உதவியில்லாமல் சுயமுயற்சியால் கண்டு பிடிக்கவே முடியாது.  அது போல ஆனந்த மயமான பரமன் நான்தான் என்ற உண்மையை ஆசிரியர் மூலம்தான் அறிந்து கொள்ள முடியும்.

முடிவுரை :

சிறுவயது முதல் இன்று வரை நிறைய ஆசைகள் நமக்கு இருக்கின்றன. எதன் மீது ஆசை என்று கேட்டால் ஒரு பொருளின் பெயரையோ அல்லது ஒரு நபரின் பெயரையோ நாம் குறிப்பிடுவோம். ஆனால் உண்மையில் நாம் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற ஒரே ஆசைதான் நம்மிடம் இருக்கிறது.

குலோப் ஜாமூனின் மீது இருக்கும் ஆசை சக்கரை வியாதி இருக்கிறது என்று தெரிந்தால் துக்கமாக மாறிவிடும். அலுவலகத்தில் வேலை செய்யும் நமக்கு பிடித்த நண்பர் ஒருவர், கூட இருந்தே நமக்கு குழி பறிக்கிறார் என்று தெரிந்தால் அவரை எதிரியாக கருத ஆரம்பித்துவிடுவோம்.

ஆக நாம் உண்மையில் ஆசை படுவது குறைவில்லா இன்பம்.

நமக்கு நம் மீது இருக்கும் ஆசை எந்த நிபந்தனைக்கும் உட்பட்டதல்ல. ஒரு திருமண விழாவில் அழகாகவும் சூட்டிகையாகவும் ஒருவரை பார்த்தால் அவர் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்படும். அது போல் நமக்கு நம்மை எப்பொழுதும் பிடித்திருக்கிறது என்பதை அறிந்தவுடன் நான் யார் என்று தெரிந்து கொள்ள ஆவல் எழும். திருமண விழாவில் நமக்கு தெரிந்தவர்களிடம் நமது கவனத்தை கவர்ந்த அந்த நபர் யார் என்று கேட்டு தெரிந்து கொள்வது போல் வேதங்களை படித்து தேர்ந்த ஒரு ஆசிரியரிடம் நான் யார் என்று முறையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் என்றும் ஆனந்தமயமான பரமன் என்று வேதம் சொல்வதால் நாம் எல்லோரும் எப்பொழுதும் பரமன் மீது மட்டும்தான் ஆசை கொண்டிருக்கிறோம் என்பது இப்பொழுது தெளிவாகிறது.


பயிற்சிக்காக :

1. உங்களுக்கு யாரை நிறைய பிடிக்கும்? ஏன்?

2.ஏன் எல்லோரையும் சமமாக நேசிக்க முடியாது?

3.ஆசையின் அடிப்படை என்ன?

4.எந்த நிபந்தனைக்கும் உட்படாமல் நாம் நேசிக்கும் ஒரே நபர் யார்?

5. உலகின் மிகப்பெரிய பொய் எது?

சுயசிந்தனைக்காக :

1. பரமனை அறிந்தோர்களால் கூட எல்லோரையும் சமமாக நேசிக்க முடியாதா?

2.தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹான் மும்தாஜை காதலிக்கவில்லையா?

3.என்னிடம் இருப்பதை என் வாழ்க்கைதுணைவருக்கு கொடுத்து எனக்கு தேவையானதை அவரிடமிருந்து பெற்று ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்புடன் வாழ்வது உண்மையான காதல் இல்லையா?

Thursday, February 25, 2010

Lesson 96: The nature of Swoon ( பிரம்ம சூத்திரம் 3.2.10 )

பாடம் 96: மயக்கமா கலக்கமா?
பாடல் 328 (III.2.10)

மனதில் உள்ள குழப்பங்களுக்கு காரணம் நம்மை சுற்றியுள்ள நிகழ்வுகள் என்று நாம் நினைப்பது தவறு என்றும் நமது எண்ணங்களை சரியாக புரிந்துகொண்டால் நிம்மதியாக வாழலாம் என்றும் இந்த பாடம் விளக்கம் தருகிறது.

மறைந்திருக்கும் மர்மம்

வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையை நாம் எதிர்கொண்டாலும் அந்த பிரச்சனையை திறம்பட சமாளிக்க நமது மனதினுள் மறைந்திருக்கும் ஒரு எதிரியை நாம் அடையாளம் கண்டு அழிப்பது அவசியம். எல்லாமும் எப்பொழுதும் நம் விருப்பபடிதான் நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் இந்த எதிரி.

பத்து வருடங்களாக குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஒரு பெரிய வீட்டிற்கு குடிபெயர்ந்தால் முதல் சில நாட்களுக்கு நிறைய சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். ஆறுமாதம் ஆனபின் கூட பழைய வீட்டில் இருந்த ஏதோ ஒரு வசதி இங்கு குறைவாய் இருப்பது போல தோன்றிக்கொண்டே இருக்கும். இதற்கு காரணம் மனதின் பழகிப்போகும் தன்மைதான். சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி முதலில் மிகவும் கஷ்டப்பட்டாலும் நாளடைவில் சிறை வாழ்க்கைக்கு  பழகிவிடுவான். பல வருடங்கள் சிறையில் இருந்தபின் விடுதலை பெற்று வீடு திரும்பினால் சிறையிலேயே இருந்திருக்கலாமா என்ற எண்ணம் அவனுக்கு வராமல் இருக்காது.

நாம் எல்லோரும் அவரவரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பழக்கங்களை வளர்த்து கொள்கிறோம். அதனுடன் நில்லாமல் நம்மை சுற்றியுள்ள பழக்கமான உலகம் மாறாமல் நமக்கு சாதகமாகவே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்  எல்லோரிடமும் உள்ளது. இந்த எதிர்பார்ப்புதான் நம் மனதில் ஏற்படும் மயக்கங்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமே தவிர வெளியுலகில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அல்ல.

எதிர்பார்ப்பினால் ஏற்படும் பிரச்சனைகள்

வெளியுலகில் நடக்கும் நிகழ்வுகளையும், ஏற்படும் சூழ்நிலைகளையும், மற்ற மனிதர்களின் செயல்பாடுகளையும் பிரச்சனைகளாக மாற்றுவதே நம் தவறான எதிர்பார்ப்புகள்தான்.

விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும்பொழுது ஒலிபெருக்கியில் இரண்டு மணிநேரம் தாமதம்என்ற அறிவுப்பை கேட்கிறோம். இது ஒரு நிகழ்வா அல்லது பிரச்சனையா? நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விமானத்தை பற்றிய அறிவுப்பு என்றால் அது தினமும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் அதுவே நாம் பயணம் செய்ய வேண்டிய விமானம் என்றால் மிகப்பெரிய பிரச்சனை. அது எப்படி எப்பொழுதும் சரியான நேரத்தில் பயணிக்கும் விமானம் இன்று தாமதாமாக கூடும், இருக்காது. நம்ப முடியவில்லை. இது உண்மையாக இருக்க கூடாது. இவ்வாறு ஒரு நிகழ்வை பிரச்சனையாக உருமாற்றும் வேலையை செய்வது நமது எதிர்பார்ப்பு மட்டுமே.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 1- பூதக்கண்ணாடி

விமான நிலையத்திற்கு வந்தபின் முடிக்கவேண்டிய பாதுகாப்பு சோதனை போன்ற கடமைகளை செய்துவிட்டு விமானத்திற்குள் ஏறும் அழைப்பை எதிர்பார்த்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்கும் பொழுது அது இன்னும் இரண்டு மணிநேரம் தாமதமாக கிளம்பும் என்றால் அந்த இரண்டு மணிநேரத்தை எப்படி உபயோகமாக செலவிடலாம் என்று சாவகாசமாக ஒரு இடத்தில் அமர்ந்து யோசிக்க துவங்கலாம். அதை விடுத்து ஏன் இவ்வாறு நடக்கிறது, இரண்டு மணிநேரம் என்பது நான்கு மணிநேரமாக மாறினால் என்ன செய்வது, இன்று நிச்சயம் விமானம் இங்கிருந்து கிளம்புமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது போன்ற எண்ணங்கள் இரண்டு மணி நேரம் தாமதம் என்ற உண்மை நிகழ்வை பெரிதாக்கி இல்லாத பிரச்சனையை இருப்பது போல் காட்டும். விமானம் தாமதமாக கிளம்புவதால் நமது வாழ்நாழில் இரண்டு மணிநேரம் குறைந்து விடாது.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 2- தடை

நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் நம் விருப்பப்படிதான் எப்பொழுதும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிரச்சனையை சரியான முறையில் எதிர்கொள்ளும் நமது திறமையை பெரிதளவும் குறைத்து விடும். உதாரணமாக விமானம் தாமதமாக கிளம்ப வாய்ப்புக்கள் உள்ளன என்ற உண்மையை மறுக்காமல் இருந்தோமானால் அது தாமதமாக கிளம்பும் என்ற அறிவுப்பு நம் நிதானத்தை குறைக்காது. அமைதியாக இப்பொழுது இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்க்கமாக யோசித்து அவற்றை பதட்டமில்லாமல் செயல்படுத்தலாம். அப்படியில்லாமல் ஏன் விமானம் தாமதமாகிறது என்பது போன்ற தேவையற்ற எண்ணங்கள் நம் இரத்த கொதிப்பை அதிகபடுத்தி  கவலையையும் எரிச்சலையும் உண்டாக்கி நமது சிந்திக்கும் திறனை பெருமளவு குறைத்து செய்ய வேண்டிய செயல்களை முறையாக செய்யவிடாமல் தடுக்கும்.

எதிர்பார்ப்பின் விளைவுகள் 3- துன்பம்

தானே வரவழைத்து கொள்வதல்லாமல் மனிதனுக்கு வேறு பிரச்சனைகளே இல்லை. எல்லாம் திட்டமிட்டபடிதான் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதேனும் விரும்பத்தகாத மாற்றங்களை எதிர்கொள்ளும்பொழுது நம்மை மிகவும் துன்புறுத்தும். ஏற்கனவே நாம் செய்த செயல்கள் அனைத்தையும் சீர்தூக்கி பார்த்து இந்த விமானத்தில் டிக்கெட் வாங்கியிருக்க கூடாது, நேற்றிரவே ரயிலில் பயணித்திருந்திருக்க வேண்டும் என்பது போன்ற அனாவசியமான குற்றச்சாட்டுக்களை நம்மீது சாற்றி நாம் ஒரு கடைந்தெடுத்த முட்டாள் என்ற எண்ணத்தை நமக்குத்தரும். மேலும் நம்மை சுற்றியுள்ள அனைவரையும் நாம்செய்ததவறுக்கு காரணகர்த்தாக்களாக குற்றவாளி கூண்டில் ஏற்றிஎல்லாம் உன்னால்தான் இப்படி நடந்ததுஎன்று சண்டை போட வைத்து இருக்கும் உறவை கெடுத்து  மேலும் பல பிரச்சனைகளை நாம் உருவாக்கும்.

இரண்டு மணிநேர தாமதத்தினால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளை கற்பனை செய்துகொண்டு எதுவும் நடக்காதபோதே அவை நடந்துவிட்டது போன்ற அனுபவங்களை நமக்கு கொடுத்து நம்மை வாட்டி எடுக்கும். மேலும் இல்லாத பிரச்சனைகள் பலவற்றை உருவாக்கி புதை மணலில் மாட்டிக்கொண்டவன் போல் பிரச்சனையிலிருந்து வெளிவர நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் இன்னும் அழமாக துன்பத்திற்குள் நம்மை ஆழ்த்தும்.

இதுபோன்ற தவறான எதிர்பார்ப்பு ஏதுமில்லாதவர்கள் நடப்பது நல்லதாகவே நடக்கிறது என்று வெகு நாட்களாக ஒத்திப்போட்டுக்கொண்டிருந்த ஒரு காரியத்தை செய்யத்துவங்குவார்கள். உதாரணமாக  படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை படிக்க கிடைத்த அவகாசத்தை பயன்படுத்தி இன்பமாக இருப்பார்கள்.

அறியும் ஆவல்

விமானம் தாமதம் என்றால் ஏன் தாமதம் என்று அறிந்து கொள்ள பெரும்பாலானவர்கள் ஆவலாய் இருப்பார்கள். தாமத அறிவிப்பு தாமதத்திற்கான காரணத்தை சொல்லாவிடில் அலுவலகத்திற்கு சென்று விசாரித்து காரணத்தை அறிந்து கொள்ள துடிப்பார்கள். இன்ஜினில் கோளாறு என்றோ பைலட் இன்னும் வரவில்லை என்றோ ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். விமானத்தை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்பது விமான நிறுவனத்தின் பொறுப்பு. காரணத்தை நாம் தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன லாபம். அதிகமான விஷயங்களை தெரிந்து கொள்வதால் நமது கவலை அதிகரிக்குமே தவிர குறையாது.

எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எதையும் அறிந்து கொள்வது அவசியமில்லை என்பது இதன் கருத்தல்ல. நாம் நம் கடமைகளை சரிவர செய்ய தேவையானவற்றை மட்டும் தெரிந்துகொண்டு அதிகப்படியான தகவல்களை தவிர்க்க வேண்டும்.

ஏன், எதற்காக, எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு இறுதியான பதிலை யாராலும் சொல்ல முடியாது. நம் வாழ்வில் நடந்த எந்த ஒரு நிகழ்வையும் எடுத்துக்கொண்டு அது ஏன் அவ்விதம் நடந்தது என்று தொடர் கேள்விகள் கேட்டுக்கொண்டே சென்றோமானால் முடிவில்அது அப்படி நடக்க வேண்டும் என்பது விதிஎன்ற பதில்தான் கிடைக்கும். எனவே அந்த பதிலை முதலிலேயே ஏற்றுக்கொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிகழ்வுகளை எதிர்கொள்வது புத்திசாலித்தனம்.

கடவுள் பக்தி

மனதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க கடவுள் பக்தி மிக அவசியம். இவ்வுலகை படைத்த கடவுள் முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை. அதே போல் உலகை படைத்துவிட்டு ஏதோ ஒரு லோகத்தில் கடவுள் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கவில்லை. நமது அனைத்து செயல்களையும் சூழ்நிலைகளையும் கட்டுபடுத்தி நம்மை வழிநடத்தி செல்பவன் இறைவன். எனவே பின்வரும் இரண்டு உண்மைகளை ஞாபகப்படுத்திக்கொள்வது அவசியம்.

1. கடவுள்தான் அனைத்துக்கும் காரணம் : நம் வாழ்வில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் கடவுள்தான் காரணம். எனவே பிரச்சனை என்று நாம் நினைக்கும் நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது அவன் சித்தம். எனவே ஏன், எதற்கு என்று கேளாமல் அந்த சூழலில் நாம் என்ன செய்யமுடியுமோ அதை மட்டும் செய்துவிட்டு இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு நிம்மதியாக இருக்க வேண்டும்.

2. உலகத்தை மாற்ற முயல்வதை விட மனதை திருத்திக்கொள்வது அவசியம்: கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற மனபக்குவம் நமக்கு தேவை. இல்லையெனில் காலுக்கு செருப்பு போட்டுகொள்ளலாம். அதை விடுத்து பாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரிக்க முயற்சிப்பது அறியாமை.

வெட்ட வெட்ட மீண்டும் எழும் ஜராசந்தன் போல் வாழ்வில் பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வண்ணம் இருக்கும். இதுபோல் தொடர்ந்து பிரச்சனைகளை கடவுள் நமக்கு அளிப்பதன் ஒரே நோக்கம் நாம் நம் மனதை பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. மனதிற்கு சரியான அறிவையும் பயிற்சியையும் கொடுப்பதை ஒத்திப்போட்டுவிட்டு வெளி உலகை மட்டும் கவனித்துக் கொண்டிருப்பது அலைகள் ஓய்ந்த பின் குளிப்பதற்கு காத்திருப்பது போலாகும்.

முடிவுரை :

குழப்பம் நம் இயற்கையான சுபாவம் அல்ல. என்றும் நிம்மதியாக இருப்பதுதான் நமது இயற்கைத்தன்மை. எனவேதான் நம் மனதில் கலக்கமோ குழப்பமோ ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட துடிக்கிறோம்.
 
நிறைய பணம் சம்பாதித்து சமூகத்தில் ஒரு பெரிய மனிதர் என்ற பெயர் பெற்றுவிட்டால் நமக்கு வரும் பிரச்சனைகளை எளிதில் சமாளித்துவிடலாம் என்பது பகல் கனவு. ஏழைக்கு ஏற்படும் பிரச்சனைகளை விட பணக்காரனுக்கு ஏற்படும் பிரச்சனைகளே அதிகம். எனவே பொருளாதார ரீதியில் வளர வளர நமக்கு ஏற்படும் பிரச்சனைகளும் வளர்ந்து கொண்டே வரும்.

பிரச்சனைகள் ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்கு வெளி உலகில் எவ்வளவு முயற்சி செய்கிறோமோ அதே அளவு நமது மனதை தீட்டிக்கொள்ளவும் நாம் முயற்சி செய்யவேண்டும். எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நிம்மதியாக இருக்கும் வரத்தை தா என்று கடவுளிடம் பிரார்த்திப்பதை தவிர்த்து எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் மன உறுதியை தருமாறு கேட்டுகொள்ள வேண்டும். வேதத்தை முறையாக ஆசிரியரின் கீழ் படித்து மனதை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும்.

மனம் செம்மையானால் வாழ்வில் பிரச்சனைகளே ஏற்படாது. ஏனெனில் எதுவும் பிரச்சனைகளாகவே தெரியாது. விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் என்பது நல்ல செய்தியாக மாறிவிடும்.  

பயிற்சிக்காக :

1. மனதில் ஏற்படும் குழப்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன?

2.எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு காரணம் என்ன?

3.எதிர்பார்த்தலின் மூன்று விளைவுகள் என்னென்ன?

4.மன குழப்பத்தை தவிர்க்க கடவுள் பக்தி எவ்விதத்தில் உதவுகிறது?

5.எப்பொழுதும் நிம்மதியாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. அனைத்தையும் அறிந்து கொண்டால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் அதிகரிக்காதா?

2. எல்லா மனிதர்களும் அவரவர் கடமைகளை ஒழுங்காக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

3.உலகத்தை திருத்தவே முடியாதா?