Sunday, March 21, 2010

Lesson 105: Unity with the world ( பிரம்ம சூத்திரம் 3.3.10 )

பாடம் 105: ஊரோடு ஒத்துவாழ்
பாடல் 369 (III.3.10)

யாராலும் தனித்திருக்க முடியாது. ஏதாவது ஒருவகையில் உலகத்தை சார்ந்தே அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனினும் ஊரோடு ஒத்துவாழ் என்று அறிவுருத்த வேண்டியதன் அவசியத்தையும் எப்படி ஊருடன் ஒத்துவாழ்வது என்ற வழிமுறைகளையும் இந்த பாடம் விளக்குகிறது.

ஊருடன் கூடிவாழ்என்ற ஔவையாரின் ஆத்திசூடி, நாளடைவில் ஊரோடு ஒத்துவாழ்என்ற முதுமொழியாக மாறியதுடன் வேதத்தின் கருத்திலிருந்து வேறுபட்டு தவறான பொருளில் மக்களிடையே வழக்கில் இருந்து வருகிறது.

ஊரோடு ஒத்து வாழ் என்றால் என்ன அர்த்தம்?

தவறான அர்த்தம் 1: மந்தையில் ஆடாக வாழ்.

எல்லோரின் வாழ்க்கையும் படிப்பது, வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது, திருமணம் செய்துகொள்வது, பிள்ளைகள் பெற்றுக்கொள்வது என்பது போல் அமைந்திருப்பதால் நாமும் அதுபோல மூன்று வயதானால் பள்ளிக்கு செல்லவேண்டும் முப்பது வயதானால் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது முதல் தவறான அர்த்தம். எல்லோரும் ஒரு வேலையை செய்து கொண்டிருப்பதால் நாமும் அதை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ஏன், எதற்கு என்று நமது புத்தியை பயன்படுத்தி கேள்விகள் கேட்கவேண்டும்.

தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்று வாழத்துவங்கிய நாம் பின் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வளர்ந்து பிறகு குருவின் கருணையால் அறிவைபெறுகிறோம். அதன் பின் மந்தையில் ஆடாக வாழக்கூடாது.

நமது அறிவின் திறத்தை பயன்படுத்தி நமக்கென ஒரு தனிப்பாதை வகுத்து அதில்தான் நாம் நம் வாழ்க்கைப்பயணத்தை நடத்த வேண்டும்.

தவறான அர்த்தம் 2: மக்களின் பேச்சுக்கு மதிப்பு கொடு.

நாம் இந்த செயலை செய்தால் ஊர் என்ன நினைக்கும் என்று கவலைப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம் ஒரு செயலை செய்தால் அதைபற்றி ஊரில் ஒன்பது கருத்துக்கள் நிலவும். புத்தர் தன் இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு காட்டுக்கு சென்றது சரியா என்று கேட்டால் ஒவ்வொருவரும் தங்கள் சிற்றறிவை பயன்படுத்தி வெவ்வேறு பதிலை சொல்வார்கள். யார் பேச்சை கேட்பது? மேலும் நாம் எது செய்தாலும் அதை நமக்கு வேண்டியவர்கள் சரியென்றும் வேண்டாதவர்கள் தவறு என்றும் சொல்வார்கள். எனவே நம்மை சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கருத்துப்படி நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கூடாது. கருத்துக்களை கேட்பதில் தவறில்லை. கருத்துக்களை கேட்டபின் நமது அறிவுக்கு எது சரியென்று படுகிறதோ அது ஊரின் கருத்துக்கு மாறாக இருந்தாலும் அதைத்தான் நாம் செய்யவேண்டும்.

நமது அறிவுக்கு சரியான வழி புலப்படாவிட்டால் சான்றோரை அணுகி அவரது கருத்தை கேட்கவேண்டும். வயதானவர்கள் எல்லோரும் சான்றோர்கள் அல்ல.  வேதத்தை தங்கள் குருவிடமிருந்து படித்து தேர்ந்தவர்களே சான்றோர்கள்.

எனவே ஊருடன் ஒத்துவாழ் என்பதற்கு (சான்றோர்களின் அறிவுரையைத்தவிர) மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்பது பொருள் அல்ல.

தவறான அர்த்தம் 3: காலத்துக்கு ஏற்றாற்போல் மாறவேண்டும்

எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள், பொய் சொல்கிறார்கள் என்பதற்காக நாமும் அதுபோல் அதர்மமாக வாழக்கூடாது. தர்மம் என்றும் மாறாது. தர்மப்படிதான் நாம் வாழவேண்டும். ஊர் முழுவதும் அதர்மமாக நடந்தால் கூட ஊரோடு ஒத்துவாழக்கூடாது. பிழைக்க தெரியாதவன் என்ற பட்டத்தை ஊர் நமக்கு கொடுத்தாலும் பணம் சம்பாதிப்பதற்காக எவ்வித குறுக்கு வழியிலும் ஈடுபடாமல் நாணயமாகவும் நேர்மையாகவும் வாழ வேண்டும்.

சரியான அர்த்தம் 1: ஊர் எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்

எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது. எனவே ஊர் எப்படியிருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொண்டு அதில் எந்த குறையையும் கண்டுபிடிக்க கூடாது. காலம் கெட்டு விட்டது என்றும், கலி முற்றிவிட்டது என்றும் உலகம் போகிற போக்கை கண்டிப்பதோ சலித்து கொள்வதோ கூடாது.

அதே சமயத்தில் உலகத்தில் நிலவும் வறுமை, கல்வியின்மை, அறியாமை, ஆரோக்கியமின்மை ஆகியவற்றை அகற்ற நாம் முயற்சி எடுக்க வேண்டாமென்று அர்த்தம் செய்து கொள்ள கூடாது. உலகத்தை பாலும் தேனும் ஓடும் சுவர்க்கபுரியாக மாற்ற நம்மால் என்னென்ன வழிகளில் வேலை செய்யமுடியுமோ அவற்றை செய்வது மிக அவசியம்.

சாணை பிடிக்கும் கல்லை உபயோகபடுத்தி கத்தியை தீட்டி அதை கூர்மை படுத்துவது போல உலகத்தை சீர்திருத்த முயன்று நமது புத்தியை தீட்டி அதை கூர்மை படுத்திக்கொள்ள வேண்டும். உலகம் மாறுகிறதா என்பது முக்கியமல்ல. நமது திறமைகளையும், அறிவின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு வருகிறோமா என்பது தான் முக்கியம். நம்மை நாம் உயர்த்திக்கொள்ள உலகத்தை மாற்றியமைக்க முயல்வதை தவிர வேறு வழியில்லை.

ஊரோடு ஒத்து வாழ் என்றால் ஊரை திருத்த தொடர்ந்து உழைத்து நமது மனதை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும் என்பது சரியான பொருள்.

சரியான அர்த்தம் 2: ஊருக்கு உதவி செய்

நாடென செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது தவறு. நீ என்ன செய்தாய் அதற்கு என்பதே சரியான சிந்தனை. நம் வளர்ச்சிக்கு தாய், தந்தை, ஆசிரியர்கள், நண்பர்கள், சுற்றத்தார்கள் மற்றும் வெவ்வேறு துறையில் உழைக்கும் பொதுமக்கள் என அனைவரும் காரணம். இந்த நன்றிக்கடனை தீர்ப்பது நமது கடமை.

அமெரிக்க செல்வந்தர் ஒருவர் ஒரு பெரிய தொகையை அன்பளிப்பாக சுவாமி விவேகானந்தர் முன்னிருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு விவேகானந்தரின் மறுமொழிக்காக காத்திருந்தபோது தலையை நிமிர்த்தாமலேயே இந்த தொகையை நான் ஏற்றுக்கொண்டால் நீங்கள் எனக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளீர்கள் என்றார் சுவாமிஜி. ஒரு எறும்பு கூட நமது உதவியை எதிர்பார்த்து வாழ்வதில்லை.

மற்றவர்களுக்கு உதவ நமக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் நம்மால் முடிந்தவரை உதவி செய்துவிட்டு அந்த வாய்ப்பை நமக்கு கொடுத்ததற்கு அவருக்கு மனதார நன்றி சொல்ல வேண்டும்.

ஊரோடு ஒத்துவாழ் என்றால் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு நம்மால் முடிந்த பண உதவியையும் உடல் உழைப்பயும் தானமாக தர வேண்டும் என்று பொருள்.  

சரியான அர்த்தம் 3: ஊருடன் உறவு நம் கர்ம வினைப்படிதான் அமையும்

நமது பாவபுண்ணியங்களின் விளைவாக நமக்கு கிடைக்கவேண்டிய அனுபவங்களை பெற்றுத்தரும் விதமாகவே உலகத்துடன் நமக்கு ஏற்படும் தொடர்புகள் அமைகின்றன. காய்கறி நறுக்கும்பொழுது இடது கைவிரல் மேல் கத்தி பட்டு ரத்தம் வந்தால் நாம் கத்தியையோ வலது கரத்தையோ கண்டிப்பதில்லை. நமக்கு யாரேனும் துன்பம் கொடுத்தால் கத்தியைப்போல அவரும் ஒரு உபகரணமாக கடவுளின் கையில் இயங்குகிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு கன்னத்தில் அறைந்தால் திருப்பி அடிக்காமல் மறு கன்னத்தை காண்பிக்க வேண்டும் என்பதன் பொருள் இதுவே. நம் கன்னத்தில் அடி விழுந்தால் அது நமது பாவத்தின் விளைவு. அதற்கு அடித்தவன் ஒரு நிமித்தமாக பயன்பட்டிருக்கிறான். எனவே அவன் மேல் கோபப்படுவதிலோ திருப்பி அடிப்பதன் மூலம் நமது பாவத்தை அதிகரித்துக்கொள்வதோ தவறு.

ஊரோடு ஒத்து வாழ் என்றால் நமக்கேற்படும் நன்மை தீமைகளுக்கு மற்றவர்கள்தான் பொறுப்பு என்று தவறாக எண்ணாமல் எப்பொழுதும் நன்றி உணர்வுடன் எல்லோருடனும் சேர்ந்து வாழ வேண்டும்.

ஊரோடு ஒத்து வாழ்வது எப்படி?

சரியான வழி 1: சுயநலத்துடன் செயல்படவேண்டும்

பொதுநலத்திற்காக சுயநலத்தை தியாகம் செய்யவேண்டும் என்பது மிகவும் தவறான பிரச்சாரம். வாழ்வில் எப்பொழுதும் நாம் சுயநலத்துடனேயே எல்லா காரியங்களையும் செய்து வருகிறோம். செய்ய வேண்டும்.

சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும். முதலில் நாம் நன்றாக இருக்க வேண்டும். பின் நம் குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஊர், நாடு என்று இதே வரிசையில்தான் நமது பொருளையும் உழைப்பையும் செலவிடவேண்டும். தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்.

தர்மம் தலை காக்கும். எவ்வளவுதான் பொருள் சேர்த்து வைத்தாலும் கடைசி காலத்தில் நமக்கு துணைவரப்போவது நாம் செய்யும் தர்ம காரியங்கள்தான். ஆகவே நமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட பின் முடிந்தவரை மற்ற ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவேண்டும். இதுவும் தன்னலம்தான். நாம் செய்யும் அனைத்து நல்ல காரியங்களாலும் நமக்கு புண்ணியம் சேரும். எனவே முடிந்தவரை நிறைய புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சோமாலியாவில் பட்டினியால் பலபேர் மரணமடைகிறார்கள் என்ற செய்தியை கேட்டு வருத்தபட்டு பிரயோஜனம் எதுவும் இல்லை. நாம் வருத்தப்படுவதால் அவர்களுக்கு சாப்பாடு கிடைத்துவிடப்போவதில்லை. நம்மால் முடிந்தால் அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையளித்து கொஞ்சம் புண்ணியம் சேர்த்துக்கொள்ளலாம்.

மற்றவர்களை ஏமாற்றியோ துன்புறுத்தியோ நாம் நமது காரியங்களை சாதித்துக்கொள்ள முயல்வது தவறு. ஏனெனில் இது போன்ற பாவங்களுக்கு நமக்கு சரியான தண்டனை கிடைக்கும்.  

சரியான வழி 2: சுயகட்டுப்பாட்டுடன் இருக்க பழக வேண்டும்

நமது விருப்பு வெறுப்புகளை நாம் ஜெயிக்க வேண்டும். எனக்கு என்ன பிடிக்குமோ அது கிடைத்தால்தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும், இல்லாவிட்டால் நான் துன்பத்தில் மூழ்கிவிடுவேன் என்ற கட்டாயத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். ஊர் எப்படியிருந்தாலும் நான் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிப்பேன் என்ற நிலையை அடைய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கிடைத்ததை விரும்பும் சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு நுழைவுத்தேர்வு எழுதும் பொழுது வாழ்வில் முதல் முறையாக விரும்புவது கிடைக்குமா அல்லது கிடைத்ததை விரும்பவேண்டிய கட்டாயம் ஏற்படுமா என்ற கேள்வி எழும். அதை தொடர்ந்து பிடித்த வேலை கிடைக்குமா என்பது போல் வாழ்வு முழுவதும் எதிர்பார்ப்பில் கழிக்க கூடாது. நமது இன்ப துன்பங்களை ஊர் தீர்மானிக்கும்படி விடாமல் சுய கட்டுப்பாட்டின் மூலம் எது கிடைத்தாலும் இன்பமாக இருக்க கற்றுக்கொள்ள பெற்றோர் தேர்ந்தெடுப்பவரை வாழ்க்கைத்துணைவராக ஏற்றுக்கொள்வது மிக அவசியம்.

மனதுக்கு பிடித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை மணம் செய்து கொள்ள கூடாது என்பது வேதம் கூறும் தெளிவான முடிவு. மனதுக்கு பிடித்த காரணத்தால் திருமணம் செய்து கொண்டால் பிறகு பிடிக்காமல் போனால் விவாகரத்து செய்யவேண்டி வரும். நமக்கு இன்று பிடிப்பது என்றும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பத்து வருடங்களுக்கு முன் ரசித்து பார்த்த திரைபடத்தை இப்பொழுது பத்து நிமிடம்கூட பார்க்கமுடிவதில்லை. நாளுக்கு நாள் நாம் வளர்கிறோம். எனவே நமக்கு பிடித்தது பிடிக்காதது ஆகியவை நிச்சயம் மாறும். அதேபோல் நம் வாழ்க்கைதுணையாய் வருபவரும் தொடர்ந்து மாறுவார். எனவே இன்று மிகவும் பிடித்தவராயிருப்பவரை பத்து வருடங்களுக்கு பிறகும் அதே அளவு பிடிக்கும் என்று சொல்லமுடியாது.

எனவே பெற்றோர் பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுத்தவரை மணந்து கொண்டு மரணம் வரை அவருடன் இன்பமாக வாழ முடிவு செய்வது ஊரோடு ஒத்துவாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். நம்முடன் உறவாடுபவர்கள் எப்படியிருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. எனது வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்து விதமான மக்களிடமும் என்னால் மகிழ்ச்சியாக தொடர்பு கொள்ள முடியும் என்ற திறமையை வெகு விரைவில் நாம் அடைய வேண்டும்.

சாலையில் பயணம் செய்யும் பொழுது நம்முடைய வாகனத்தை மட்டும்தான் நம்மால் கட்டுபடுத்த முடியும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையில் மற்ற எந்த வாகன ஓட்டியின் போக்கையும் நாம் தீர்மானிக்க முடியாது. யார் எப்படி அவர்கள் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தாலும் நாம் செல்லவேண்டிய இடத்துக்கு எவ்வித விபத்திலும் சிக்கிகொள்ளாமல் பத்திரமாக சென்றடைவது நம் கையில் மட்டும்தான் இருக்கிறது. எவ்வித சாலைவிதிகளையும் கடைபிடிக்காமல் முரட்டுத்தனமாக வண்டியோட்டுபவர்களை திட்ட துவங்கினால் நமது ரத்த அழுத்ததை அதிகபடுத்திக்கொள்வதை தவிர வேறு ஒரு லாபமுமில்ல.

நாம் யாரையும் திறுத்தவோ மாற்றவோ முடியாது. நமது கட்டுப்பாட்டுக்குட்பட்டு செயல்படும் ஒரே நபர் நாம் மட்டும்தான். நம் மனதை கட்டுபடுத்துவதை விட்டு ஊர் முழுவதையும் மாற்றி அமைப்பேன் என்று முயல்வது அறிவீனம். மற்றவர்கள் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு சிறிது காலத்துக்கு பின் மாறிவிடுவார்கள் என்று அனாவசியமாக நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் அனைவரையும் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொண்டு வாழக்கற்றுக்கொண்டால் ஊரோடு ஒத்து வாழலாம்.

சரியான வழி 3: பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கற்றுக்கொள்ளல்

எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்குத்தேவையான நேரத்தை கொடுத்து முழுமனதுடன் செய்யவேண்டும். விதை விதைத்ததும் பழம் வந்து விட்டதா என்று நிமிர்ந்து தேடகூடாது. செய்த காரியத்தின் பலன் வரும்பொழுது வரட்டும் என்று பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். பலன் நாம் எதிர்பார்த்த படி அமையாவிட்டால் ஏமாற்றமோ கோபமோ அடையாமல் அதை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

அவன் என்னை திட்டினான். நான் பொறுமையாகத்தான் இருந்தேன். அவன் மேலும் மேலும் கடுமையான வார்த்தைகளை பேசியதும் வேறு வழியில்லாமல் அவனை அடித்துவிட்டேன்.’ இதுபோல் நாம் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் வரை நமக்கு தொடர்ந்து துன்பங்களும் கஷ்டகாலமும் வந்த வண்ணம்தான் இருக்கும். பிடிக்காதவர்களிடமிருந்து முடிந்தவரை விலகியே இருக்கவேண்டும். ஆனால் நம் அன்றாட வாழ்வில் வேறு வழியில்லாமல் பிடிக்காத ஒரு சிலரிடம் பழக வேண்டிய கட்டாயம் ஏற்படுவது நமக்கு பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கற்றுத்தருவதற்காகத்தான்.

ஊருடன் ஒத்து வாழ ஊர் எப்படியிருந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு நமது மனதை செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும்.

முடிவுரை :

இந்த உலகம் படைக்கபட்டது நமது இன்பத்திற்காக மட்டுமே. பச்சைக்கிளிகள் தோளோடு, பாட்டுக்குயிலோ மனதோடு, பூலோகம் ஆனந்தத்தின் எல்லை, இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை என்பது உண்மையான வார்த்தைகள். ஆனால் இதுபோல் காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆனந்தத்தை அடையாளம் கண்டுகொள்ள முதலில் நமது மனதை திருத்திக்கொள்ள வேண்டும்.

மனம் விரும்புகிறது என்று ஒரு காரியத்தை செய்யாமல் கிடைப்பதை ஏற்றுக்கொண்டு சிறிதுகாலம் வாழ்ந்தால் மனம் செம்மையடைந்து வேதம் கூறும் உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்புகிடைக்கும். அதன் பின் மனம் எதை விரும்புகிறதோ அதை மட்டும் செய்யலாம். வாழ்வு முழுவதும் பிடிக்காததை ஏற்றுக்கொண்டு சகிப்புத்தன்மையுடன் இருப்பது அவசியமில்லை. பயிற்சிக்காலத்தில் ஊருடன் ஒத்து வாழ்வதை ஒழுங்காக கற்றுக்கொண்டால் அதன் பின் நமக்கு துன்பம் தரும் நிகழ்வுகள் என்று எதுவும் வாழ்வில் நிகழாது. நமது உலகம் சொர்க்கலோகமாக மாறிவிடும். நாம் எப்பொழுதும் நமக்கு பிடித்த காரியங்களை மட்டும் தடையில்லாமல் செய்துகொண்டு இன்பமாக வாழலாம்.

நாம் ஒருவர் இன்பமாக இருந்தால் அந்த இன்பம் நமது குடும்பம், சுற்றம், நண்பர்கள் சமூகம் என்று அனைவருக்கும் படிப்படியாக பரவும். எனவே நமக்கும் ஊருக்கும் நன்மை செய்ய நாம் ஊருடன் ஒத்து வாழ வேண்டும்.

பயிற்சிக்காக :

1.ஊரோடு ஒத்து வாழ் என்பதன் மூன்று தவறான அர்த்தங்கள் என்னென்ன?

2 ஊரோடு ஒத்து வாழ் என்பதன் மூன்று சரியான அர்த்தங்கள் என்னென்ன?

3. ஊரோடு ஒத்து வாழ கொடுக்கப்பட்ட மூன்று வழிமுறைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1.சான்றோர் என்பவர் யார் என்று அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்து சால் ஊன்றிய தூண் என்ற திருக்குறளின் பொருளை ஆராய்க.

2.தர்மம் எப்படி தலை காக்கும்?

Thursday, March 18, 2010

Lesson 104: It is appropriate to specialize ( பிரம்ம சூத்திரம் 3.3.9 )

பாடம் 104: செய்வன திருந்தச்செய்
பாடல் 368 (III.3.9)

என்ன வேலை செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டிய அவசியத்தை விளக்குவதுடன் ஒரு வேலையை எப்படி சரியாக செய்வது என்ற செய்முறை விளக்கத்தையும் இந்த பாடம் அளிக்கிறது.

சரியாக செய்வது என்றால் என்ன?

பலனை வைத்து செயல்முறையின் தரத்தை முடிவு செய்ய கூடாது. எல்லா வேலைகளும் ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்துத்தான் செய்யப்படுகின்றன என்றாலும் அந்த வேலை எப்படி செய்யப்பட்டது என்பதை பொறுத்துத்தான் அது சரியாக செய்யப்பட்டதா இல்லையா என்று தீர்மானிக்கவேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளி உடல்நலம் பெற்று தேர்ந்தால் மருத்துவர் சிறப்பாக வேலை செய்தார் என்றும் அவ்வாறில்லாமல் நோயாளி இறந்துவிட்டால் மருத்துவர் சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூற முடியாது.

செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்யவேண்டும் என சொல்வது எளிது ஆனால் செய்வது கடினம் என்பது தவறான கருத்து. செய்வனவற்றை சிறப்பாக செய்வது எப்படி என்பதை புரிந்து கொள்வது வேண்டுமானால் கடினமாக இருக்கலாமே தவிர புரிந்துகொண்ட பின் நடைமுறையில் அதை கடைபிடிப்பது மிகவும் எளிது.

சரியாக செய்வது என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் உலகின் தன்மை பற்றிய ஐந்து உண்மைகளை உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.

முதல் உண்மை: குற்றமில்லாத பூர்ணத்துவம் (flawless perfection) அடையவே முடியாத ஒன்று.   எந்த வேலையையும் இன்னும் நன்றாக செய்வதற்கு வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இந்த வாய்ப்பை வழங்குவதற்காகவே யாராலும் எப்பொழுதும் எல்லா வேலைகளையும் மிகச்சரியாக செய்யமுடியாதபடி கடவுள் இவ்வுலகை படைத்திருக்கிறார்.

இரண்டாம் உண்மை: உலகில் சாதிக்கவேண்டியது என்று ஒன்றுமேயில்லை. நாம் எந்த ஒரு வேலையை செய்தாலும் அதனால் உலகத்திற்கு எவ்வித நன்மையோ தீமையோ ஏற்படுவதில்லை. சாப்பாட்டு இலைமீது ஒரு எறும்பு வந்து வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் அல்லது கொஞ்சம்கூட சாப்பிடாமல் சென்றுவிட்டாலோ நமக்கு எவ்வித வித்தியாசமும் தெரியாது. அது போல இந்த உலகத்தின் தொடர்ந்த இயக்கத்தில் தனிமனிதனின் செயல்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.

மூன்றாம் உண்மை: வேலை செய்வது மற்றவர்களின் அங்கீகாரத்தையோ பாராட்டையோ பெறுவதற்காக அன்று. சமூகத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டுவிட்டால் நாம் செய்வதையெல்லாம் எல்லோரும் கொண்டாடுவார்கள். எழுத்தாளர் சுஜாதா தான் வண்ணான் கணக்கை எழுதினால் அதை பிரசூரிக்ககூட பத்திரிக்கைகள் தயாராக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதுபோல் நாம் எவ்வளவுதான் நன்றாக வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கவும் நிறைய பேர் இருப்பார்கள்.

நான்காம் உண்மை: வேலையை செய்யத்துவங்குவதற்கு முன் குற்றமில்லா பூர்ணத்துவத்தை அடைய வேண்டுமென்றும், தனது உழைப்பால் வேலை வழங்குனர், வாடிக்கையாளர்கள், சக ஊழியர்கள் போன்ற அனைவருக்கும் நன்மை ஏற்படவேண்டும் என்றும் எல்லோரும் மிக நன்றாக செய்தாய் என்று பாராட்டும்படி வேலை செய்யவேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்பது அவசியம்.  எப்படியும் நல்ல பெயர் வாங்கமுடியாது, எனவே எப்படி செய்தால் என்ன என்பது போன்ற அலட்சியத்தோடு செய்யப்படும் எந்த வேலையும் சிறப்பாக செய்த வேலையாகாது. முடியாது என்பதால் முயற்சி செய்யகூடாது என்று அர்த்தமில்லை. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்ற காரணத்தாலேயே எவ்வளவு முயன்றாலும் புதியதோர் உலகத்தை செய்யவே முடியாதபடி கடவுள் அனைத்தையும் படைத்திருக்கிறார்.

ஐந்தாம் உண்மை: வேலை சிறப்பாக செய்யப்பட்டதா இல்லையா என்பதை அவரவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

செய்வதை சிறப்பாக செய்யும் விதம்

முதல் படி : வேலையின் நோக்கம்

நாம் செய்யும் வேலையின் மூலம் நாம் சாதிக்க நினைப்பது என்ன என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு தெளிவுக்கு வர வேண்டும். மேலே சொல்லப்பட்ட நான்காம் உண்மையில் பொதுவாக விவரிக்கபட்ட எதிர்பார்ப்பை ஒவ்வொருவரும் தங்களது வேலைக்கேற்ற குறிப்பிட்ட நோக்கங்களாக ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளை மிகவும் குறைந்த செலவில் விரைவில் முழுவதும் குணப்படுத்துவது அல்லது நல்ல இனிமையான மருத்துவர் என்று எல்லோரும் புகழும்படி சிகிச்சையளிப்பது என்பது போன்று தான் வேலை செய்வதன் நோக்கம் என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாம் படி: செயல் பட்டியல் (To Do List)

நமது வேலையின் நோக்கத்தை நிறைவேற்ற இன்று செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன என்பதை ஒரு பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் இந்த பட்டியலை சரிபார்த்து இன்று இந்த அத்தனை செயல்களையும் செய்து முடிப்பேன் என்று மனதுக்குள் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும். இரவு படுக்க போகுமுன் எவ்வளவு செயல்களை செய்து முடித்தோம் என்பதை சரிபார்த்து மறுநாளுக்கு உண்டான பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

செயல் பட்டியல் எழுதும் விதம்

1. செயலினால் எதிர்பார்க்கும் பலனை எழுதக்கூடாது. செய்ய வேண்டிய செயலை மட்டுமே எழுதவேண்டும். உதாரணமாக வீடுவீடாக போய் ஒரு பொருளை விற்பவர் எவ்வளவு பொருள்களை விற்பேன் என்று எழுதக்கூடாது. எவ்வளவு வீடுகளுக்கு போய் பொருள்களை பற்றி பேசுவேன் என்பதை மட்டுமே எழுத வேண்டும். எவ்வளவு வீடுகளுக்கு செல்ல வேண்டுமென்பது முதல் படியில் கூறப்பட்ட வேலையின் நோக்கத்தை பொறுத்தது.

ஒரு வேலை செய்வதன் மூலம் என்ன பலனை எதிர்பார்க்கிறோமோ அந்த பலனை அடைய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை மட்டும்தான் இங்கு பட்டியலிடவேண்டும்.

2. அளவிடகூடிய செயல்களை மட்டுமே பட்டியலில் எழுதவேண்டும். உதாரணமாக விற்க வேண்டிய பொருள்களை பற்றி திறமையாகவும் நன்றாகவும் பேசுவேன் என்று எழுதாமல் பத்து வீடுகளுக்கு சென்று பொருள் பற்றி பேசுவேன் என்று மட்டும் எழுதவேண்டும். ஏனெனில் நாள் முடிந்ததும் பத்து வீடுகளுக்கு சென்றோமா இல்லையா என்பதை அளவிடுவது போல் நன்றாக பேசினேனா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாது.

3. செயல்களின் எண்ணிக்கை நமது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற அளவில் இருக்க வேண்டும். செய்ய முடியாத அளவு அதிகமாகவோ எளிதாக செய்து முடித்துவிடக்கூடியதாகவோ இருக்க கூடாது.

4. சுதந்திரமாக செய்யக்கூடிய செயல்களை மட்டுமே எழுத வேண்டும். எழுதப்பட்ட வேலைகளை செய்ய நமக்கு எவ்வித கட்டுப்பாடும் இருக்க கூடாது.  நமக்கு கீழே வேலை செய்பவர்களைத்தவிர வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாத செயல்களை மட்டுமே செயல் பட்டியலில் எழுத வேண்டும்.  

5. தினசரி கடமைகளை பட்டியலில் எழுதக்கூடாது. அன்றாடம் செய்ய வேண்டிய செயல்களை நாம் சரியாக செய்யாமல் இருந்தால் மட்டும் அவற்றை பட்டியலில் எழுதவேண்டும். முடிந்தவரை பட்டியலில் உள்ள செயல்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.

6. யாருக்கு கீழ் வேலை பார்க்கிறோமோ அவரின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். முடிந்தவரை பட்டியலில் இடம்பெறாத செயல்களை செய்யக்கூடாது. ஒரு நாளில் எவ்வளவு செயல்களை செய்தோம் என்பதை விட எவ்வளவு செயல்களை செய்வேன் என்று காலையில் உறுதியெடுத்தோமோ அவற்றை செய்து முடித்தோமா என்பதுதான் முக்கியம். இரண்டு செயல்களை செய்வதாக தீர்மானித்து அதை செய்வது பட்டியலில் இல்லாத நான்கு செயல்களை செய்வதை விட சிறந்தது.

மூன்றாம் படி: சுய ஆய்வு

தினமும் வேலையை முடித்து வீட்டுக்கு திரும்புமுன் பட்டியலில் உள்ள செயல்களை செய்து விட்டோமா என்றும் செய்யா விட்டால் அதற்கான காரணங்களையும் ஆராய வேண்டும். நம்மிடம் தவறு ஏதேனும் இருந்தால் அதை திருத்திக்கொள்ள தேவையான செயல்களை அடுத்த நாள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

உதாரணமாக ஒரு மாணவன் தேர்வில் எவ்வளவு சதவிகிதம் மதிப்பெண் பெறவேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பின் அந்த குறிக்கோளை அடைய எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதை ஆசிரியரின் துணையுடன் முடிவு செய்யவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் படிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் அந்த ஒரு மணிநேரத்தை படிப்பதில் செலவிட்டோமா இல்லையா என்பது மட்டும்தான் முக்கியமே தவிர தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் வந்தது என்பதை பற்றி கவலைபடக்கூடாது. ஒருவேளை எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால் படிக்கும் விதத்தை எப்படி மாற்றி அமைப்பது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற சீர்திருத்தங்களை செய்வது மட்டும்தான் அவன் பொறுப்பு.

நான்காம் படி: சுய திருப்தி

நாம் நினைத்தபடி வேலை செய்தால் மட்டும் போதும். ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான், நான்என்று தினமும் மனதுக்குள் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்வது அவசியம். நாம் வேலை செய்வது நமது மனம் செம்மையாக வேண்டும் என்ற ஒரேகாரணத்துக்காக மட்டும்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

முடிவுரை :

செய்வனவற்றை சிறப்பாக செய்வதன் மூலமாக மட்டும்தான் வேலை பார்ப்பதன் பயனை அடைய முடியும். வேலையில் முழு ஈடுபாட்டுடன் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்வது நமக்கு சேரவேண்டிய அனைத்து நன்மைகளையும் நம்மிடம் கொண்டு சேர்க்கும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதும், அவற்றை செய்வதும், சரியாக செய்தோமா என்று சோதித்து சான்றிதழ் வழங்குவது ஆகிய அனைத்து பொறுப்புகளும் நம்மையே சார்ந்தது. நமக்கு கொடுக்கபட்ட எந்த வேலையையும் இது என் வேலை என்று மனதார ஏற்றுக்கொள்ளாமல் செய்ய ஆரம்பிக்க கூடாது.

சில சமயங்களில் நமது முழுதிருப்தியுடன் வேலை செய்திருந்தாலும் அதன் பலன் எதிர்பார்த்த விதமாக அமையாது. நமது மேலாளர் மற்றவர்கள் செய்த தவறுக்கு நம்மை காரணமாக கருதி கண்டிக்கலாம். எது எப்படியானாலும் கடைசி தீர்ப்பு சொல்ல வேண்டியது நமது மனசாட்சிமட்டுமே. நம் மனசாட்சிப்படி நாம் சரியாக செய்தால் மட்டும் போதும். உலகமே அதை தவறு என்று சொன்னாலும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை

ஆனால் யார் நம் வேலையில் தவறு கண்டுபிடித்தாலும் அல்லது இன்னும் சரியாக செய்ய ஆலோசனை சொன்னாலும் அதை ஆர்வத்துடன் கேட்க வேண்டும். சென்றதை பற்றிய குற்ற உணர்வு மட்டும்தான் தவிர்க்கபட வேண்டியதே தவிர வருவதை சரியாக செய்ய நமது தகுதியை உயர்த்திகொள்வது மிக அவசியம். எனவே எப்பொழுதும் இப்பொழுது செய்வதை விட இன்னும் சிறப்பாக செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்க வேண்டும்

நமது வாழ்வின் தரத்துக்கு நாம் மட்டுமே பொறுப்பு என்ற பொறுப்புணர்வுடன், செய்யும் செயல்களை செவ்வனே செய்வது முக்தியை நோக்கி நாம் எடுக்கும் முதல் படி.


பயிற்சிக்காக :

1.வேலையை சரியாக செய்வது என்றால் என்ன?

2.உலகின் தன்மை பற்றி கூறப்பட்ட ஐந்து உண்மைகள் யாவை?

3.செய்வதை சிறப்பாக செய்யும் விதம் பற்றி கூறப்பட்ட நான்கு படிகள் யாவை?

4.செயல் பட்டியல் எழுதும் விதம் குறித்து கூறபட்ட ஆறு கருத்துகள் யாவை?

5.வேலையை தவறாக செய்தால் குற்ற உணர்வு அவசியமா?

சுயசிந்தனைக்காக :

1. யார் எப்படிபோனால் நமக்கென்ன என்று செயல் பட்டியலில் உள்ள வேலைகளை மட்டும் செய்வதுதான் வேலையை சிறப்பாக செய்வதா?

2.நோயாளி மரணமடைந்து விட்டால் அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தது என்று தானே அர்த்தம்?

Wednesday, March 17, 2010

Lesson 103: Jobs are different ( பிரம்ம சூத்திரம் 3.3.6-8 )

பாடம் 103: வேலைகள் வேறுபட்டவை
பாடல் 365-367 (III.3.6-8)

அடிப்படையில் அனைத்து வேலைகளும் ஒன்றே என்றாலும் பலவிதமான மனிதர்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற வேலையை தேர்ந்தெடுக்க உதவி செய்யும் நோக்கில் வேலைகளிடையே உள்ள வேறுபாடுகளை இந்த பாடம் ஆராய்கிறது.

அனைத்து விமானங்களும் பறப்பதற்கு உதவுகின்றன  என்ற அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் விமான நிலையத்தில் உள்ள புறப்பாடு மற்றும் வருகை என்ற அட்டவணையை பார்க்கும்பொழுது எண்ணிக்கையிலடங்கா வெவ்வேறு விமான சேவைகள் இருப்பது தெரியும். ஒவ்வொரு பயணியும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல விரும்புகிறார் என்ற நோக்கில் விமானங்கள் வேறு பட்டவை. அதேபோல் அனைத்து வேலைகளும் அனைத்து மக்களின் ஒரே குறிக்கோளான முக்தியை அடைய உதவும் படிகட்டுகளாய் உதவுகின்றன என்றாலும் மக்களின் தரத்திற்கேற்ப வேலைகள் வேறுபடுகின்றன.

தனித்திறமை

சுற்றியிருக்கும் மற்றவர்களை ஒப்பிடும்பொழுது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். மனிதர்கள் தொழிற்சாலையில் செய்யப்படும் பொருட்களைப்போல்  எல்லாவிதத்திலும் ஒரே மாதிரியிருப்பதில்லை. எவ்வளவுதான் முயன்றாலும் நமது கல்வி நிறுவனங்களால் மாணவர்களை எல்லா விதத்திலும் ஒத்த மருத்துவர்களாகவோ பொறியாளர்களாகவோ மாற்ற முடியாது.

ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமையை மேலும் வளர்த்துகொள்ள வாய்ப்புகளை கொடுக்கும் வேலையை செய்யவேண்டும்.

தனித்திறமையை அடையாளம் கண்டுகொள்வது மிக எளிது. எந்த வேலையை விரும்பிச்செய்கிறோமோ, எந்த வேலையை நன்றாக செய்வதற்கு மற்றவர்களை விட நமக்கு எளிதாக இருக்கிறதோ அதில் நம் தனித்திறமையை காணலாம்.

எந்த வேலை அதிகம் பணம் சம்பாதிக்க உதவும் என்ற பார்வையில் வேலையை தேர்ந்தெடுக்காமல் எந்த வேலையில் நமது தனிதிறமையை மேலும் வளர்க்க முடியும் என்ற அடிப்படையில் சரியான வேலையை தெரிந்தெடுக்க வேண்டும்.

ஆரம்பத்தில் அதிக சம்பளம் கிடைத்தாலும் பிடிக்காத வேலையில் வளர்ச்சியிருக்காது. பிடித்த வேலையை தேர்ந்தெடுத்தால் நம் தனித்திறமை மூலம் மற்றவர்களை விட அந்த வேலையை சிறப்பாக செய்பவோம். எனவே விரைவில் பதவி உயர்வு பெற்று நாளடைவில் வேறு எந்த வேலையிலும் கிடைக்க முடியாத அளவு பணமும் புகழும் நம்மை வந்து சேர வாய்ப்பு உள்ளது.

எனவே ஒவ்வொருவரது தனிபட்ட மனப்பாங்கு (attitude) மற்றும் தனித்திறமைக்கு (core competence) ஏற்ற வேலை என்ற நோக்கில் வேலைகள் வேறுபடுகின்றன.

தகுதி

அறிவுத்திறன் (intelligence) மற்றும் செயல்பாட்டுதிறன் (capability) ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபடும். எல்லோரும் தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும். செய்யும் வேலை மிகவும் சுலபமாகவோ அல்லது மிகவும் கஷ்டமாகவோ இருக்க கூடாது. இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சித்தால் செய்துவிடலாம் என்ற நிலை தொடர்ந்து இருக்க வேண்டும். வேலை செய்ய செய்ய நமது தகுதி அதிகமாகும். தகுதி அதிகமானவுடன் அதற்கேற்ற வேலையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடலை கட்டுகோப்புடனும் ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சிக்கூடத்தில் சேர்ந்து எடை தூக்கும் பயிற்சி செய்யும்பொழுது நமது சக்திக்கேற்றவாறு எடையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். இரண்டு கிலோ எடையை எளிதாக தூக்க முடிகிறது என்று அதற்குமேல் எடை தூக்கிபயிலாவிட்டால் பயிற்சிக்கூடத்தில் சேர்ந்ததில் பயன் இல்லை.

வேலை செய்யும் இடம் மனதை செம்மையாக்கும் மனப்பயிற்சிக்கூடம். வேலை செய்யாமல் சோம்பித்திருந்தால் மனம் தன் ஆரோக்கியத்தை இழந்து விடும். எனவே வேலை செய்வது அவசியம். இரண்டு கிலோ எடையை தினமும் தூக்குவது போல் எவ்வித முன்னேற்றத்தையும் அடையாமல் செய்தவேலையையே செய்வதில் எவ்வித பயனும் இல்லை. முடிந்தவரை அதிகபொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வேலையை திறம்பட செய்ய முயல வேண்டும்.

தரம்

பணக்காரர்கள் எல்லாம் இன்பமாக இருப்பதில்லை. ஏழைகள் கூட இன்பமாக இருக்கிறார்கள். இதிலிருந்து பணத்துக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நிரூபணம் ஆகிறது. பணம் இருந்தால் இன்பமாக இருக்க முடியாது அல்லது பணம் இருந்தால்தான் இன்பமாக இருக்க முடியும் என்பது போன்ற கருத்துக்கள் தவறு என்றும் தெளிவாக தெரிகிறது.

பணம் வாழ்வின் பொருளாதார தரத்தை அதிகபடுத்தும். நல்ல வேலை செய்தால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம். கார், பங்களா என்று சொத்து சேர்த்து வசதியாக வாழலாம். அவ்வப்பொழுது இன்பமாகவும் நினைத்தது நடக்காதபோது வருத்தப்பட்டுக்கொண்டும் வாழலாம். எப்பொழுதும் இன்பமாக வாழவேண்டுமென்றால் ஒரு குருவிடம் சரணடைந்து வேதத்தை முறையாக படிப்பதை தவிர வேறு வழியில்லை.

வாழ்வில் வசதி வேண்டுமா அல்லது என்றும் தொடரும் இன்பம் வேண்டுமா என்று இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் கட்டாயம் புத்திசாலிகளுக்கு கிடையாது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று அவர்கள் பணம் சம்பாதித்துகொண்டே கர்மயோகம் செய்து தங்களை வேதம் படிக்க தயார் செய்து கொள்வார்கள். முதலில் போதுமான பணம் சம்பாதித்துவிட்டு பிறகு ஆன்மீக வாழ்வில் இறங்குவோம் என்றோ வேதத்தை படித்து முடித்துவிட்டு பின் பொருள் சம்பாதிக்க தொடங்குவோம் என்றோ முடிவுசெய்வது தவறு.
வேதம் படிப்பது ஒரு முழுநேர வேலையல்ல. உலக சுகங்களை உல்லாசமாக அனுபவித்துக்கொண்டு சொந்த வீட்டின் வசதிகளுடன் வேதம் படிப்பதற்காக ஒரு சில மணிநேரம் ஒதுக்கினால் போதும். எனவே வசதி மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் நமது புத்தி கூர்மையால் ஒரேநேரத்தில் அடையலாம்.

பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு வேதம் படிக்க நேரம் ஒதுக்காதவர்கள் தங்களது குறிக்கோளான முக்தியை அடைய மாட்டார்கள். வேதம் படிப்பதற்காக வேலை எதுவும் செய்யாதவர்கள் வறுமையில் வாடுவார்கள்.

உணவு, உடை, உறையுள் போன்ற வாழ்வின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்காக கிடைத்த வேலையை செய்யும் கட்டாயம் பலருக்கு இருக்கலாம். அவர்கள் தங்கள் தனித்திறமையை வளர்த்து கொள்வதற்காகவும் தகுதிக்கு ஏற்ற வேலை செய்வதற்காகவும் தகுந்த பொழுதுபோக்கையோ அல்லது பகுதிநேர அடிப்படையில் பிடித்த வேலையையோ  செய்ய முயல வேண்டும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் நிச்சயம் தங்கள் சுயமுன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மேற்படிப்பு படிப்பதோ பகுதி நேர வேலை செய்வதோ அவசியம். சித்திரம் வரைதல், கைவேலை செய்தல், அக்கம்பக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தருதல், கர்னாடக சங்கீதம் கற்றுக்கொள்ளுதல், சொல்லிக்கொடுத்தல் போன்ற உபயோகமான வேலைகள் மூலம் மனதை பண்படுத்த வேண்டும்.

உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சமசீராக அமைவது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே போல் செய்யும் வேலைகளிலிருந்து பணம் சம்பாதிப்பதைதவிர ஆத்ம திருப்தியும் கிடைக்க வேண்டும். ஆத்ம திருப்தி என்றால் தனித்திறமையை வளர்த்துக்கொள்தல் மற்றும் தகுதிக்கு ஏற்ற வேலை செய்தல் என்பது பொருள்.

எனவே தனித்திறமை, தகுதி மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் வேலைகள் ஒன்றிலிருந்து மற்றொன்று வெகுவாக வேறுபடுகின்றன. நாம் ஒவ்வொருவரும் நமக்கேற்ற வேலையை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.

முடிவுரை :

தொழில் நுட்ப வசதிகளும் பொருளாதார வளர்ச்சிகளும் பற்பல வேலைகளை செய்யும் வாய்ப்பை மக்களுக்கு தருகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.

வாழ்வில் முன்னேற்றம் என்பது எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதின் அடிப்படையில் கணக்கிடப்படுவதல்ல. மனம் எவ்வளவு செம்மையடைகிறது என்பதை பொறுத்தே வாழ்வில் உண்மையான முன்னேற்றம் அமையும். குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்துவிடலாம். ஆனால் உழைப்பின் மூலம் மட்டுமே மனதை செம்மையாக்க முடியும். மனது செம்மையானால் பணம் சம்பாதிப்பது எளிது. இல்லையென்றால் பணத்தை சரியாக செலவு செய்யக்கூட தெரியாது.

அனைத்து வேலைகளின் குறிக்கோள் மனதை செம்மைபடுத்தி அதன் மூலம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திகொள்வதுடன் நிலையான அமைதியை பெறுவதுதான். வெறும் பணம் மாத்திரம் இந்த அமைதியையும் நிம்மதியையும் நமக்கு தராது. எனவே முடிந்த வரை வெவ்வேறு வேலைகள் செய்து நமது மனதை தொடர்ந்து செம்மை படுத்திக்கொள்ள வேண்டும்.

செய்யும் வேலையை ஆர்வத்துடன் செய்தல், தனது முழுத்திறமையையும் உபயோகித்து சிறப்பாக செய்தல், வேலையில் மனம் ஒன்றியிருத்தல், புத்தியின் கூர்மையை அதிகபடுத்தும் வகையில் அதிகபொறுப்புகளை ஏற்று கொள்ளுதல் ஆகியவை மனதை செம்மை படுத்தும் வழிகளாகும். அதே சமயத்தில் இது போன்ற முயற்சிகள் அதிக பணமும் புகழும் பெற்றுத்தரும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.

மனம் செம்மையானால் பணம் சம்பாதிக்க செய்யும் வேலையை கர்மயோகமாக மாற்றி மனப்பக்குவத்தை பெற முடியும்.  மனப்பக்குவமும் புத்திக்கூர்மையும் நம்மை ஆன்மீக பாதையில் வேகமாக அழைத்துச்செல்ல வல்லவை. எனவே விரைவில் பரமனை அறிந்து குறையில்லாத இன்பத்தை நாம் அடைவோம்.

அதிக பணம் சம்பாதிப்பதுடன் எப்பொழுதும் நிம்மதியாக இருக்கவும் நாம் கற்றுக்கோண்டால் வாழ்வு இனிமையாக அமையும்.

பயிற்சிக்காக :

1.வேலைகள் ஒன்றுபட்டவையா வேறுபட்டவையா?

2.நம்முடைய தனித்திறமையை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?

3.தனித்திறமையை வளர்த்துக்கொள்வதால் என்ன லாபம்?

4.தகுதிக்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுப்பதன் அவசியமென்ன?

5.வாழ்வின் தரத்தை உயர்த்திக்கொள்வது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. முனிவர்கள் முற்றும் துறக்கவேண்டிய காரணம் என்ன?

2.வேதம் படிப்பது மிக எளிதான காரியமா?

3.எந்த வேலையும் செய்யாமல் முழுநேரத்தையும் வேதம் பயில்வதன் மூலம் குறைவில்லாத ஆனந்தத்தை அடையமுடியாதா?

4.நிறைய பணம் சம்பாதித்து கோவிலில் நடக்கும் நற்பணிகளுக்கு நன்கொடை கொடுத்து புண்ணியம் சம்பாதிப்பதன் மூலம் முக்தியடைய முடியாதா?

5.முக்தியடைய வேலை செய்வது முக்கியமா கடவுள் பக்தி முக்கியமா?