Tuesday, February 23, 2010

Lesson 95: Same happiness returns ( பிரம்ம சூத்திரம் 3.2.9 )

பாடம் 95: விழித்த பின்னும் அதே ஆனந்தம்
பாடல் 327 (III.2.9)

ஆழ்ந்த உறக்கத்தில் அனுபவித்த அதே ஆனந்தம்தான் விழித்த பின்னும் தொடருகிறது என்றும் அந்த ஆனந்தம் எப்பொழுதும் குறையாத வண்ணம் வாழ்வை அனுபவிக்க நாம் அகங்காரத்தின் செயல்பாட்டையும் ஆசையின் தன்மையையும் அறிந்து கொண்டு பந்தபடுத்தாத ஆசைகளை மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த பாடம் நமக்கு சொல்லித்தருகிறது.

உறங்கும் பொழுதுநான்

விழித்திருக்கும் சமயங்களில் மனதில் தோன்றும் நான், எனது மற்றும் என்னுடையது என்னும் எண்ணங்களின் தொகுப்பு அகங்காரம் எனப்படும். விஞ்ஞான மயகோசம் அதன் பொதுவான இருப்பிடம். நாம் படுக்கைக்கு சென்ற சிறிது நேரத்தில் விஞ்ஞானமயகோசம் அகலும்பொழுது அது மனோன்மய கோசத்திற்கு குடிபோய் அங்கிருந்து கனவுகளை அனுபவிக்கிறது. மனமும் ஓய்வெடுக்க ஆரம்பித்தவுடன் அகங்காரம் இருக்க இடம் இல்லாமல் மறைந்து போகிறது. எனவேதான் நாம் தூங்க ஆரம்பிக்கும் நேரங்களில் யாரேனும் நம் பெயர் சொல்லி கூப்பிடுவது தெரிந்தாலும் ஏன் என்று பதில் குரல் கொடுக்க முடிவதில்லை. அதேபோல் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து நம்மை யாரேனும் திடீரென்று விழிக்க வைத்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம் அல்லது என்ன பேசுகிறோம் என்பது நமக்கே தெரியாது. ஏனெனில் அந்த சமயங்களில் நான் எனும் அகங்காரம் முழுதாக உருவாவதில்லை.

என் இன்பத்திற்கு நான்தான் தடை

ஆழ்ந்த உறக்கத்தில் எப்பொழுதும் இருக்கும் ஆனந்தம் அகங்காரம் உருவானதும் எப்பொழுதோ ஒருமுறைதான் வருகைதருகிறது.

அகங்காரம் இல்லாத ஒரு வயது குழந்தை எப்பொழுதும் ஆனந்தமாய் இருக்கிறது. மேலும் எப்பொழுதெல்லாம் தன்னை மறந்து நாம் இருக்கிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் இன்பமாயிருக்கிறோம்.

எனவே குறையாத இன்பம் நம்மிடம் எந்நாளும் நிலையாக இருக்க தடையாய் இருப்பது அகங்காரம்தான் என்ற உண்மை தெளிவாகிறது.

அகங்காரத்தை ஒழிப்பது எப்படி?

நெருப்பு நல்லதா கெட்டதா? ஊரை கொளுத்தினால் அது கெட்டது. உணவை சமைக்க உதவினால் அது நல்லது. அதுபோல அகங்காரம் நம் ஆனந்தத்திற்கு தடை என்று அதை முழுதும் அழித்துவிட்டால் அன்றாட வாழ்வின் அத்தியாவசிய செயல்களை கூட நம்மால் செய்ய முடியாது. எனவே அகங்காரத்தின் எந்த செயல் ஆனந்தத்திற்கு தடையாக இருக்கிறது என்பதை ஆய்ந்து அறிந்து அதை மட்டும் மாற்ற வேண்டும்.

இது என் அலுவலகம்’. ‘இது நான் வீடு திரும்பும் வழி’. இது போன்று அகங்காரத்தின் அடிப்படையில் அமைந்த எண்ணங்கள் தினசரி வாழ்விற்கு மிக அவசியம். மேலும் இவற்றால் நம் ஆனந்தத்திற்கு எவ்வித தடையும் இல்லை.

இது நன்றாக இருக்கிறதுஎன்ற எண்ணத்தை இது எனக்கு வேண்டும்என்ற ஆசையாக மாற்றுவதும் அகங்காரத்தின் செயல். ஆசைகளை உருவாக்கும் அகங்காரத்தின் இந்த ஒரு செயல்தான் நம் இன்பத்திற்கு தடையாய் இருப்பது. எனவே அழிக்க வேண்டியது அகங்காரத்தை அல்ல. அது ஆசையை உருவாக்கும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை செய்வதன் மூலம் நாம் நம் இயல்பான ஆனந்தத்தை எப்பொழுதும் அனுபவிக்கலாம். அகங்காரத்தை அழிக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே அடுத்த கட்டமாக ஆசைகளை ஆராயவேண்டும்.

ஆசைகள் உருவாக காரணம் என்ன?

ஆனந்தம் நம்முடைய இயல்பான சொரூபம் என்பதை அறியாமல் உலகத்தில் உள்ள பொருள்கள்தான் நமக்கு இன்பத்தை தருகின்றன என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதால்தான் ஆசைகள் ஏற்படுகின்றன.

நம்முடைய தற்போதைய நிறைவேறாத ஆசை ஒன்றை எடுத்து ஆராய்ந்தால் உலகம் எவ்வித இன்பத்தையும் தருவதில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்தை முதல் காட்சியில் நாம் பார்க்கவிரும்புவதாக வைத்துக்கொள்வோம். திரைப்படத்தை முதல் காட்சியில் பார்ப்பது இன்பம் அளிக்கும் அனுபவம் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பதுதான் இந்த ஆசைக்கு காரணம்எவ்வளவோ முயன்றும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் இருக்கும்பொழுது நம் நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு டிக்கெட் அதிகமாக இருக்கிறது, நீ என்னுடன் வருகிறாயாஎன்று கேட்டால் நமக்கு ஏற்படும் இன்பத்திற்கு அளவே இல்லை. திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. அதற்குள் எப்படி நமக்கு இன்பம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தோமானால்  ‘டிக்கெட் கிடைக்கவில்லை, கிடைத்தால் நன்றாக இருக்கும், ப்ளாக்கில் டிக்கெட் வாங்குவது எப்படிஎன்பது போன்ற எண்ணங்கள் நமது மனதை ஆக்ரமித்திருந்ததால் மனம் நம் இயற்கையான ஆனந்தத்தை பிரதிபலிக்காமல் நம்மை சோகத்தினுள் ஆழ்த்தியிருந்தது என்றும் டிக்கெட் தருகிறேன்என்று நண்பர் சொன்னதும் கவலை தந்துகொண்டிருந்த அனைத்து எண்ணங்களும் ஒரு நொடியில் நம் மனதிலிருந்து மறைந்து விட இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க துவங்கிவிட்டோம் என்றும் நமக்கு தெரியவரும்.

இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் திரைப்படத்தை பார்ப்பதுதான் நமக்கு இன்பத்தை தரும் என்று நாம் தவறாக நினைத்துகொண்டிருந்தோம். எனவே ஆசைகள் உருவாவதற்கு காரணம் அறியாமை மட்டுமே.

சரியான மாற்றம்

உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. இதில் நிலையானவை என்று எதுவுமில்லை. இந்த நிலையில்லாத உலகை நிலையானது என்று ஒருநாளும் நம் புலன்கள் நம்மிடம் சொல்வதில்லை. ‘இது ஒரு மலர்என்று பொருளின் தற்போதைய நிலையை மட்டும்தான் கண் நமக்கு தெரிவிக்கும். சற்று முன் வரை அது ஒரு மொட்டாக இருந்தது என்பதையோ இன்னும் சில நொடிகளில் அது கசக்கப்பட்டு குப்பையாக மாறிவிடும் என்பதையோ புரிந்து கொள்ளவேண்டிய வேலை நமது புத்தியை சேர்ந்தது.

இந்த இடத்தில்தான் பெரும்பான்மையான மக்கள் தவறு செய்து தங்கள் வாழ்க்கையை தாங்களே நரகமாக்கிகொண்டிருக்கிறார்கள். ஒன்று, மாறுவதை புரிந்து கொள்வதில்லை. அல்லது, மாறுவது தங்களின் விருப்பபடிதான் மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு எப்பொழுதும் நிறைவேறுவதில்லை. ஒவ்வொரு நாள் முடிவடையும் பொழுதும் நம் வயது ஒரு நாள் அதிகரிக்கிறது என்று தெரிந்தாலும் என்றும் இளமையுடன் இருக்கும் ஆசை நம்மை விட்டுபோவதில்லை. இது இவ்வாறு இல்லாமல் வேறு மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பந்தபடுத்தும் ஆசையாக மாறி நம்மை நம் இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க தடையாய் உள்ளது.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். எதுவும் வேறுமாதிரி இருக்க வேண்டிய அவசியமேயில்லை. நமக்கு பிடித்தபடி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாம் முயற்சி எடுக்கலாமே தவிர முடிவு செய்யும் அதிகாரம் கடவுளிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் துன்பபடாமல் என்றும் இன்பமாக இருக்கலாம்.


முடிவுரை :

ஆழ்ந்த உறக்கத்தில் இந்த உலகத்துடன் எவ்வகையிலும் உறவு கொள்ளாமலேயே நாம் இன்பமாக இருக்க முடிவதால் விழித்தெழுந்த பின்னும் உலகத்துடன் பல விவகாரங்களில் ஈடுபடும் காலங்களில் கூட நம்மால் அதே இன்பத்தை தொடர்ந்து வாழ முடியவேண்டும். ஆனால் வாழ்வு இன்பமும் துன்பமும் கலந்தது என்று நம் அனுபவம் சொல்கிறது. இதற்கு காரணம் நம்மை பந்தபடுத்தும் ஆசைகள்தான்.

பின்வரும் செயல்களை செய்வதன் மூலம் நாம் என்றும் குறைவில்லாத இன்பத்துடன் வாழலாம்.

1. ஆனந்தம் நமது இயல்பான நிலை, வந்து போகும் உணர்ச்சி அல்ல என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

2. மனிதர்கள், மற்ற உயிரினங்கள், பொருள்கள், நிகழ்வுகள் ஆகிய எவற்றிற்கும் நமக்கு இன்பம் தரும் சக்தியில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

3. மேற்கூறப்பட்ட இரு தகவல்களை நமது அறிவாக மாற்றிக்கொள்ள வேதாந்தத்தை முறையாக படித்த ஆசிரியர் ஒருவரிடம் சரணடைந்து உபநிஷதங்களையும் கீதையையும் முறையாக படிக்கவேண்டும்.

4. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை படுவதில் தவறில்லை. ஆனால் பணத்துக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து கொண்ட பின் பணம் சம்பாதிக்க தேவையான செயல்களில் ஈடுபடவேண்டும்.

5. உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும். வாழ்வின் நிகழ்வுகளை நம் விருப்பபடி மாற்ற நம்மாலான அனைத்து முயற்சிகளையும் தர்மமான முறையில் செய்வதில் தவறில்லை.       

6. முயற்சி செய்வது மட்டும்தான் நம் கையில் இருக்கிறதே தவிர பலன் கொடுப்பது இறைவனின் வேலை என்பதை உணர்ந்து நாம் செய்யும் அனைத்து செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து பலன் கிடைக்கும்பொழுது அதை கடவுளின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

7. ஒரு செயலை செய்யும் பொழுது முழுமனதின் ஈடுபாட்டுடன் தன்னை மறந்து ஆனந்தமாக வேலை செய்ய வேண்டும். நான் விரும்பிய வகையில் பலன் கிடைத்த பின்தான் மகிழ்ச்சி, அதுவரை உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் கஷ்டப்பட்டு உழைக்கிறேன் என்பது தவறு. இன்பமாக வேலை செய்ய முடிந்தால் செய்யவேண்டும். இல்லையென்றால் அந்த வேலையை செய்வதால் எவ்வித பலனும் இருக்காது.

8. ஆசை நம் செயல்களுக்கு ஆதாரம். ஆசையில்லாமல் எவ்வித வேலையையும் நாம்மால் செய்ய முடியாது. ஆனால் ஆசைக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்து கொள்வது அவசியம். பொருளாதார அடிப்படையில் முன்னேற்றம், குடும்ப வாழ்வில் செழிப்பு, உறுதியான உறவுமுறைகள் ஆகியவை வேண்டும் என்ற ஆசையுடன் நாம் செயலில் ஈடுபடலாம். இது போன்ற ஆசைகள் நிறைவேறுவதால் சுகமான வாழ்வும் நல்ல நண்பர்களும் கிடைக்குமே தவிர ஆனந்தம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தவறு.    

9. ஆசை நிறைவேறினால்தான் மகிழ்ச்சி என்ற அறியாமைதான் ஆசை துன்பத்திற்கு காரணம் என்ற தவறான செய்திக்கு அடிப்படை காரணம். ஆசை நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் என்னுடைய இயல்பான ஆனந்தம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என்ற அறிவு ஏற்பட்டுவிட்டால் நம் அனைத்து ஆசைகளும் பந்தபடுத்தாத ஆசைகளாக மாறும். இது போன்ற ஆசைகளால் நமக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மாறாக இவை நமக்கும் நம்மை சுற்றியிருப்போருக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.

பயிற்சிக்காக :

1. அகங்காரத்தின் இருப்பிடம் எவை?

2. அகங்காரத்திற்கும் ஆசைக்கும் என்ன உறவு?

3. ஆசை எப்படி ஆனந்தத்திற்கு தடையாய் உள்ளது?

4. உலகப்பொருள்களில் இன்பம் இல்லை என்பதை உதாரணம் கொடுத்து விளக்கவும்?

5. ஆசைகள் உருவாவதற்கு காரணம் என்ன?

6. எப்பொழுதும் ஆனந்தமாயிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. நல்லவிதமான எதிர்பார்த்தல் (positive thinking) நல்ல விளைவுகளை ஏற்படுத்தாதா ?

2. ஆனந்தம் உலகில் இல்லை என்றால் இந்த படைப்பின் அவசியமென்ன?

3. எல்லோரும் எப்பொழுதும் ஆனந்தமாக இருந்தால் இவ்வுலகில் சண்டை, சச்சரவு, பொறாமை, போட்டி ஆகிய எதுவும் இருக்காதா?

Friday, February 19, 2010

Lesson 94: Deep sleep experience ( பிரம்ம சூத்திரம் 3.2.7-8 )

பாடம் 94: ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தம்
பாடல் 325-326 (III.2.7-8)

ஆசைகளுக்கும் ஆனந்தத்திற்கும் உள்ள உறவை விளக்க ஆழ்ந்த உறக்க அனுபவத்தின் தனித்தன்மையை உதாரணமாக கொடுத்து உலகத்தில் உள்ள உறவுகளில் நமக்கு இருக்கும் ஆசையை படிப்படியாக குறைத்து நிலையான ஆனந்தத்தை தரும் பரமனை அறியும் ஆசையை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வேதம் இந்த பாடத்தில் கூறுகிறது.

ஆழ்ந்த உறக்கம் என்றால் என்ன?

தினசரி வாழ்வில் எப்பொழுதெல்லாம் இந்த உடலையும் மனதையும் நம்மிடமிருந்து அகற்றி வைக்கிறோமோ அந்த சமயங்களில் நாம் ஆழ்ந்த உறக்கம் என்ற நிலையில் இருக்கிறோம்.  ஆழ்ந்த உறக்கத்திற்கும் இறத்தலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் மறுபடி விழிக்கும்பொழுது வயதான உடலில் இருக்கிறோமா அல்லது மீண்டும் பிறந்திருக்கிறோமா என்பது மட்டும்தான்.

அலுவலகம் சென்று திரும்பியவுடன் ஒவ்வொன்றாக உடைகளை களைவது போல படுக்க சென்றதும் ஒவ்வொரு கோசமாக களைய ஆரம்பிக்கிறோம். முதலில் அன்னமய கோசமான பருவுடலுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை துறக்கிறோம். கனவு உலகத்தை உருவாக்கியபின் நுண்ணிய உடலை நேரடையாக உபயோகித்து நிஜ உலகத்தில் செயலாற்றியது போலவே கனவிலும் வாழ்ந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சமயங்களில் நமது பிராண மயகோசமும் விஞ்ஞானமய கோசமும் ஒன்றன் பின் ஒன்றாக கழன்று விடுகின்றன. புத்திக்கு மனதின் மீதுள்ள கட்டுப்பாடு படிப்படியாக குறைந்து முடிவில் இல்லாமல் போய்விடுகிறது. அதே போல் கனவு நிலை முடியும் நேரத்தில் மனோன்மய கோசமும் கழன்று விடுகிறது. இந்த நான்கு கோசங்களையும் அகற்றி ஆனந்தமயக்கோசத்தில் மட்டும் இருக்கும் காலத்தை ஆழ்ந்த உறக்கம் என்கிறோம்.

ஆழ்ந்த உறக்கத்தில் இயற்கை எய்துகிறோம்

பருவுடல் மற்றும் நுண்ணிய உடல் ஆகிய இரண்டையும் அகற்றிவிட்டு காரண உடலில் மட்டும் ஒன்றியிருக்கும் மரண அனுபவம் நமக்கு தினம் தினம் இரவில் தூங்கும்பொழுது கிடைக்கிறது.

இருத்தல், ஆனந்தம் மற்றும் உணர்வு ஆகிய மூன்று மட்டும்தான் நம் இயற்கை தன்மைகள். காரண உடலில் மட்டும் குடியிருக்கும் பொழுது நாம் ஆனந்தமாக அறிவுருவாக காலத்தை கடந்து நித்தியமாய் இருக்கிறோம் என்பதை நம் அனுபவத்தில் நிரூபிப்பதன் மூலம் வேதம் நமது இயல்பை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. மேலும் நமது உண்மை நிலையை தினந்தோறும் நமக்கு நினைவுபடுத்துவதன் மூலம் எப்பொழுதும் இன்பமாக இருப்பது என்ற வாழ்வின் முடிவான நோக்கத்தை அடைய நம்மை தூண்டுகிறது. இதை அடையும் வரை எல்லோருக்கும் எப்பொழுதும் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். 

மூன்று நிரூபணங்கள்

உடலளவிலும் மனதளவிலும் நமக்கு ஏற்படும் அனைத்து துன்பங்களும் ஆழ்ந்த உறக்கத்தில் முழுதும் மறைந்து நாம் இன்பமாக தூங்குவது என்பது ஆனந்தம் நமது இயற்கை நிலையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

ஆழ்ந்த உறக்கத்தில் நம் மனம் முற்றிலும் செயல்படுவதில்லை. அப்படியிருக்கும் பொழுது விழித்தபின்நான் நன்றாக தூங்கினேன்என்று எவ்வாறு கூறமுடிகிறது? அறிவு (awareness) என்பது நமது இயற்கை நிலையாய் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

உறங்கி எழுந்தவுடன் எவ்வளவு நேரம் உறங்கினோம் என்பது கடிகாரத்தை பார்த்து கூட்டி கழித்தால் மட்டுமே நமக்கு தெரியவரும். ஏனெனில் ஆழ்ந்த உறக்க நிலையில் நாம் நேரம், காலம், இடம் என்ற வரைமுறைகளுக்கு கட்டுப்படாமல் அனந்தமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

மூன்று ஆசைகள்

எப்பொழுதும் இருக்க வேண்டும். எப்பொழுதும் ஆனந்தமாக இருக்க வேண்டும். அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். இவை மூன்றும் மனிதனின் அடிப்படை ஆசைகள். ஆனால் இம்மூன்றும் இயற்கையிலேயே நமது உண்மை சொரூபம் என்பதை யாரும் அறிவதில்லை. அனைத்து மனிதர்களுக்கும் எல்லா காலங்களிலும் தோன்றும் அனைத்து ஆசைகளையும் ஆராய்ந்தால் அவற்றின் அடிப்படை இந்த மூன்று ஆசைகள் மட்டுமே என்பது தெரியவரும். இந்த மூன்று ஆசைகளைத்தவிர வேறு ஒரு ஆசையும் மனிதனுக்கு இருக்கவே முடியாது.

ஆசைகளும் ஆனந்தமும்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆனந்தம் விழித்தவுடன் நம்மை விட்டு சென்றுவிடுவதற்கு நமது ஆசைகளே காரணம். ஆசை என்பது நம் மனதில் தோன்றும் எண்ணம். எனவே மனம் இல்லாதபொழுது இருந்த ஆனந்தம் மனம் வந்தவுடன் இல்லாமல் போய்விட்டது. இதிலிருந்து நம் மனம்தான் நமது துன்பங்களுக்கு காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தலைவலி போகவேண்டுமென்பதற்காக தலையை வெட்டிக்கொள்ள கூடாது. அதுபோல மனதை ஒடுக்கி இன்பம் அடையலாம் என்று பின்வரும் முயற்சிகளில் இறங்க கூடாது.

1.தூங்குவது:  விழித்திருந்தால்தானே நமது இயற்கை நிலையான ஆனந்தத்தை இழக்க நேரிடுகிறது என்று கும்பகர்ணன் போல் தூங்கிகொண்டே இருக்க கூடாது. எவ்வளவு நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் செலவிடுகிறோம் என்பது நம் கர்ம வினைகளின் பலன்களால் தீர்மானிக்கபடுகின்றன என்பதால் நம்மால் தூங்கிகொண்டே இருக்க முடியாது. மேலும் இன்பமாய் இருந்தேன் என்பது தூங்கி விழித்தபின்தான் நமக்கு தெரிகிறதே தவிர தூங்கும்பொழுது தெரிவதில்லை.

2.குழந்தையாய் இருப்பது: பிறந்த குழந்தைக்கு பசி தீரவேண்டும் என்ற ஆசையை தவிர வேறு ஆசைகள் கிடையாது. எனவே அந்த ஆசை நிறைவேறியவுடன் ஆனந்த மயமாக இருக்கிறது என்பதை குழந்தையின் முகத்தை பார்த்தே நாம் அறிந்து கொள்ளலாம். அதற்காக வளராமல் குழந்தையாகவே இருப்பதும் முடியாது. உடலளவில் வளர்ந்து மனதளவில் வளராமல் இருப்பதும் முடியாது. ஏனெனில்அறிந்து கொள்ள வேண்டும்என்ற அடிப்படை ஆசை ஐந்து புலன்களையும் செயல்படுத்தி குழந்தை பருவத்திலிருந்து தொடர்ந்து நம் அறிவை அதிகப்படுத்துகிறது. முதுமை வந்தவுடன் இந்த அறிய வேண்டும் என்ற ஆசை குறைந்துவிடும். இதற்கு காரணம் அறிந்தவற்றையே அடைய முடியவில்லை என்ற இயலாமை. மேலும் அறிந்துகொண்டால் அனாவசியமாக ஆசை மட்டும் அதிகரித்து அனுபவிக்கும் திறன் இல்லாமல் துன்பபட வேண்டாம் என்ற எண்ணத்தில் ஒரு சிலர் தெரிந்து கொள்ளும் ஆசையை துறக்கிறார்கள்.

3.சன்யாசம் பெறுவது: உலக வாழ்வில் உழன்றால் மட்டுமே ஆசைகள் அதிகமாகி பரமானந்தத்தை அனுபவிக்க முடியாது என்று நினைத்து சன்யாசம் பெறுவது தவறு. உயிர்வாழ நிச்சயம் நாம் உலகை சார்ந்திருக்க வேண்டும். எனவே ஆசைகளை தவிர்க்க முடியாது. காட்டுக்குள் தனியாக வாழ்ந்தாலும் உணவு கிடைக்க வேண்டுமே என்ற ஆவலும் பாம்பு கடித்துவிட்டால் என்ன ஆகும் என்ற பயமும் நம்மை நிம்மதியாக இருக்க விடாது.

4.போதை பொருள்களை உபயோகிப்பது: மதுபானங்களை அருந்தியோ, போதை பொருள்களை உட்கொண்டோ மனதை உலகத்தின் பிடியிலிருந்து மீட்டு ஆசைகள் ஏற்படாமல் ஆனந்தமாய் இருக்கலாம் என்பது தவறான முடிவு. இது போன்ற செயல்களின் பக்க விளைவுகள் நம் உடலையும் மனதையும் அழித்துவிடும் என்பதால் இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

5.தற்காலிக ஓய்வெடுப்பது: ஆசைகள் தொடர்ந்து மனதை ஆக்ரமித்து நம்மை ஆனந்தமாக இருக்க அனுமதிப்பதில்லை என்ற காரணத்தால் அவ்வப்பொழுது ஆசைகளை மறந்து இன்பத்தை அனுபவிப்பது முற்றிலும் தவறல்ல என்றாலும் இது போன்ற செயல்கள் குறையாத ஆனந்தம் என்ற இலக்கை நாம் அடைய எடுத்துக்கொள்ளும் காலத்தை அதிகப்படுத்தும்.

உதாரணமாக வாரம் முழுவதும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உழைத்துவிட்டு வார இறுதியில் சினிமா, நாடகம், நாட்டியம், உபன்யாசம், பஜன் போன்றவற்றில் தன்னை மறந்து ஈடுபடுவதால் இதுதான் ஆனந்தமான வாழ்க்கை என்ற ஒரு பிரமையை நம்மிடம் ஏற்படுத்திவிடும். ஐந்து நாட்கள் கஷ்டபட்டுவிட்டு உழைப்பதன் பலனாக ஒரு நாள் ஓய்வெடுக்கமுடிகிறது, மற்றும் ஒரு நாள் உல்லாசமாக ஆசைகளை மறந்துவிட்டு ஆனந்தமாக இருக்கமுடிகிறது, இது போதும் என்ற மனப்பான்மையை நம்மிடம் ஏற்படுத்திவிடும். எப்பொழுதும் ஆனந்தமாயிருக்க வேண்டும் என்ற நம் அடிப்படை ஆசையை நிறைவேற்றிக்கொள்ள செய்ய வேண்டிய முயற்சிகளை செய்யவிடாமல் இது போன்ற பொழுதுபோக்குகள் நம் கவனத்தை திசைதிருப்பிவிடுகின்றன.

இருப்பது எடுக்க எடுக்க குறையாத அட்சய பாத்திரம். அதிலிருந்து பிச்சையெடுத்து சாப்பிடுவது போல் 24/7 அலுவலகங்களில் உழைக்கும் பலர் தம் இயல்பான ஆனந்தத்தை மறுத்துவிட்டு அதே ஆனந்தத்தின் ஒரு பகுதியை பணம் கொடுத்து வாரக்கடைசியில் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆசைகள் நிறைவேற பணம் வேண்டும் என்று அறியாமை காரணமாக நினைப்பது தவறில்லை. ஆனால் அந்த பணத்தை பெற நமக்கு பிடிக்காத வேலைகளை செய்வதுதான் தவறு. எந்த வேலை நம் இயல்புக்கு பொருந்தி அதை செய்யும் பொழுது சிறிதளவும் மனதளர்ச்சியோ சோர்வோ ஏற்படாமல் இருக்கிறதோ அது போன்ற வேலைகளை மட்டுமே செய்து பணம் சம்பாதிக்க வேண்டும். அதை விடுத்து பணம் கிடைக்கிறதே என்ற நினைப்பில் கூலிக்கு மாரடித்தால் அனாவசியமாக நம் உடல் நலத்தையும் மன நலத்தையும் துறந்து கண்களை விற்று சித்திரம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்போம்.

முடிவுரை :

எல்லோரும் எல்லா சமயங்களிலும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆனந்தமாக இருப்பதால் ஆனந்தம் என்பது நம் இயற்கையான தன்மை. ஆனால் இந்த அறிவு யாருக்கும் இயற்கையாக இருப்பதில்லை. எனவே ஆனந்தமாக இருப்பதற்கு பணம் வேண்டும் புகழ் வேண்டும் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் அனைவரும் வெவ்வேறு குறிக்கோள்களை அடைய செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் இந்த ஆசைகளே நம் இயற்கையான ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு தடையாக இருக்கிறது.

உடலும் மனமும் ஜடப்பொருள்கள். உடலைப்போலன்றி மனம் பரமனின் அறிவு, ஆனந்தம் மற்றும் தூய இருத்தல் ஆகிய மூன்று இயல்புகளையும் பிரதிபலிக்கும் சக்தி கொண்டது. மனம் ஆசைகள் ஏதுமின்றி நிர்மலமாக இருக்கும்பொழுது இந்த பிரதிபலிப்பு நம் இயற்கையான ஆனந்தத்தை முழுமையாக பிரதிபலிப்பதால் நாம் எந்த ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாலும் நிறைந்த மனதுடன் ஆனந்தமாக இருப்போம். ஆனால் வாழ்வின் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்ற ஆசை மனதை ஆக்ரமித்துக்கொண்டு ஆனந்தத்தின்  பிரதிபலிப்பை தடை செய்வதால் ஆசைகள் நிறைவேறும்பொழுதோ அல்லது தற்காலிகமாக அவை மறக்கப்பட்ட சமயங்களிலோ மட்டும் மனம் நிர்மலம் அடைந்து நமது இயல்பான ஆனந்தத்தை நமக்கு தருகிறது. இதனால் ஆசைகள்தான் ஆனந்தத்தை தருகின்றன என்ற அஞ்ஞானம் அதிகமாகி அதன் விளைவாக ஆசைகளின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றை நிறைவேற்ற மற்றும் மறக்க வைக்கும் முயற்சிகளும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன.

இயற்கையான இன்பத்துடன் செய்யும் செயல்களை அனுபவிப்பதை விடுத்து துன்பத்துடன் செயல்களை செய்து நிலையில்லாத ஆனந்தத்தை அவ்வப்பொழுது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

மனதை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ மயங்கவைக்கும் முயற்சி அது பக்குவபடும் காலத்தை அதிகரிக்கிறது. நான் பரமன் என்ற உண்மையை அறிந்து கொண்டு நம் இயல்பான குறையில்லா ஆனந்தத்தை அனுபவிக்க நமக்கு புத்திக்கூர்மையும் மனமுதிர்ச்சியும் அவசியம். எனவே நாம் ஆசைகளை மறக்க முயலாமல் மனதுக்கு பிடித்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். உதாரணமாக அலுவலகத்திலிருந்து வந்தவுடன் ஓவியம் வரைவது இசைக்கருவிகளை வாசிப்பது புத்தியை தீட்டும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டுமே தவிர தொலைகாட்சியை பார்ப்பது போன்றவற்றின் மூலம் மனதை அமைதிபடுத்த முயலக்கூடாது.  

பயிற்சிக்காக :

1. ஆழ்ந்த உறக்கம் என்றால் என்ன?

2. ஆழ்ந்த உறக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

3. ஆழ்ந்த உறக்கத்தின் மூலம் எந்த மூன்று உண்மைகள் நிரூபிக்கப்படுகின்றன?

4. மனிதனின் ஆசைகளுக்கு அடிப்படை காரணம் என்ன?

5.மனதை அமைதிப்படுத்த உதவாத ஐந்து செயல்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஆசைகள் துன்பத்திற்கு காரணமா?

2. வாழ்க்கையில் குறிக்கோள்களுக்கு அவசியமென்ன?

3.ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்யவேண்டுமா?

Tuesday, February 16, 2010

Lesson 93: Lessons from dreams ( பிரம்ம சூத்திரம் 3.2.1-6 )

பாடம் 93: கனவு உலக ஆசைகள்
பாடல் 319-324 (III.2.1-6)

உணர்ச்சிகள் உண்மையாக இருந்தாலும் அவற்றிற்கு அடிப்படையான உறவுகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தை கனவு உலகில் நாம் சிருஷ்டிக்கும் பொருள்கள் மற்றும் நபர்கள் மூலம் நாம் பெறும் அனுபவங்களை ஆதாரமாக காட்டி நிலையாதவை மீது ஆசையை தவிர்க்க வேண்டும் என்று இந்த பாடம் வலியுறுத்துகிறது.

ஆசைகளும் அனுபவங்களும்

நாம் நமது ஐந்து புலன்களின் மூலம் இவ்வுலகில் உள்ள பொருள்களுடனும் மனிதர்களுடனும் தொடர்பு கொள்வதனால் பல்வேறுபட்ட அனுபவங்களை பெறுகிறோம். அனுபவங்களிலிருந்துதான் இன்பத்தை பெறுவதாக நாம் நினைத்துக்கொண்டிருப்பதால் சுகமான அனுபவங்களை நாடி செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். தேடியது கிடைத்துவிட்டால் இனிமையான அனுபவமும் கிடைக்காவிட்டால் ஏமாற்றம், சோகம், வருத்தம் போன்ற கசப்பான அனுபவங்களும் ஏற்படுகின்றன.

அனுபவங்கள் மேலும் ஆசையை வளர்க்கின்றன. எனவே ஆசை பட்ட பொருள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாம் தொடர்ந்து செயல்களில் ஈடுபட்டு அனுபவங்களை பெற்றுக்கொண்டிருக்கிறோம்.

கனவுகள் ஏற்படுவதன் காரணம்

அன்றாடம் காலையிலிருந்து இரவுவரை ஆசைபடுதல், செயல்படுதல், அனுபவங்களை பெறுதல் என்று தொடர்ந்து வேலை செய்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக மனம் உறக்கத்தில் ஆழ்கிறது. விழிப்பு நிலையிலிருந்து ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வதற்கு முன்னும் பிறகு மறுபடியும் விழிப்பதற்கு முன்னும் கனவுகள் ஏற்படுகின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் மனம் முழுவதுமாக செயல்படுவதில்லை.

மின்னோட்டத்தை நிறுத்திய பின் வேகமாக சுழன்றுகொண்டிருந்த மின்விசிறி, படிப்படியாக வேகம் குறைந்து முழுவதும் நிற்பது போல வேகமாக செயல்பட்டுக்கொண்டிருந்த மனது முழுவதும் நிற்பதற்கு முன்னால் ஏற்படுவது கனவு. அதேபோல் விழித்து முழு வேகத்தில் செயல் படுவதற்கு முன் கனவில் மெதுவாக மனம் செயல் பட ஆரம்பிக்கிறது. இதுதான் கனவு ஏற்படும் காரணம் பற்றிய அறிவியல் உலகத்தின் கணிப்பு. கனவுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதற்குத்தான் இது பதில். கனவுகள் ஏன் ஏற்படுகின்றன என்ற கேள்விக்கு அறிவியலால் எப்பொழுதும் பதில் சொல்லமுடியாது.

மின்னோட்டத்தை நிறுத்தியவுடன் மின்விளக்கு அணைந்து போவது போல் ஏன் தூங்க சென்றவுடன் மனம் கனவுகள் ஏதுமில்லாமல் நேரடியாக ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல கூடாது? கனவுகளின் அவசியமென்ன?

வாழ்வின் உண்மை தன்மையை பற்றி மக்கள் சரியான அறிவை பெற கனவு அனுபவம் மிக அவசியம். இதுவே கனவுகள் ஏற்படுவதற்கான ஒரே காரணம். கனவுகள் மூலம் நாம் பின்வரும் மூன்று உண்மைகளை உணர்ந்து கொள்ளலாம்.

கனவு தரும் உண்மை1: அனுபவங்களின் தன்மை

பெரும்பாலும் நமது வாழ்வில் நிகழ்வது போன்ற நிகழ்வுகளே கனவிலும் ஏற்படுகின்றன. நமது விருப்பு-வெறுப்புகள் கனவுலகிலும் நம்மை ஆட்டுவிக்கின்றன. அதே போல் கனவு எப்பொழுதும் இனிமையான அனுபவங்களை மட்டும் தருவதில்லை. நிஜ வாழ்வில் நிகழ்வது போல பல கசப்பான அனுபவங்களும் கனவுகளில் ஏற்படுகின்றன.

நிஜ வாழ்வில் ஏற்படும் அனுபவங்களுக்கும் கனவில் நமக்கு ஏற்படும் அனுபவங்களுக்கும் இடையே அனுபவம் என்ற அடிப்படையில் எவ்வித வேற்றுமையும் இல்லை.

உதாரணமாக பதவி உயர்வு வேண்டும் என்று நிஜ வாழ்வில் ஆசை பட்டுகொண்டிருந்தால் மேலாளர் நமது வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது போலவும் அதனால் பதவி உயர்வுக்கு பதில் வேலையிலிருந்து நீக்கப்படுவது போலவும் கனவு வரலாம். உண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டால் எப்படி வருத்தம் ஏற்படுமோ அதில் இம்மியளவும் குறையாத அளவு நாம் கனவில் துன்பப்படுவோம். ஆனால் கனவிலிருந்து விழித்தபின், அப்பாடி கனவுதான், நிஜமாக ஒன்றும் நடக்கவில்லை என்று நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொண்டு நிம்மதியடைவோம். மேலும் பதவி உயர்வு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு குறைந்து வேலை போகாமல் இருந்தால் போதும் என்ற எண்ணம் கூட ஏற்படலாம்.

இதிலிருந்து கனவில் ஏற்படும் அனுபவம் கூட எவ்வளவு தூரம் நம்மை பாதிக்கிறது என்றும் அனுபவங்களை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் தருணங்களில் நம்முடைய உணர்ச்சிகளும் எண்ண ஓட்டங்களும் கனவு என்பதால் வேறு விதமாக இருப்பதில்லை என்றும் நாம் தெரிந்து கொள்ளலாம். மேலும் அனுபவங்கள் ஏற்பட நிகழ்வுகள் உண்மையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.

நிஜமான அனுபவங்களுக்கு அனாவசியமாக ஒரு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை கனவுலக அனுபவங்களிலிருந்து வேறுபடுத்துவது நாம்தான். இது தவறு.
 
கனவு தரும் உண்மை2: செயல்களின் தன்மை

கனவில் இது போன்ற வேண்டாத நிகழ்வுகள் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடிவதில்லை. கனவு காண்பது நாம்தானே. அப்படியிருக்க சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி நிறய லாபத்துடன் வாழ்க்கையை அனுபவிப்பது போல் ஏன் கனவு காணக்கூடாது? ஏனெனில் நாம் நிஜவாழ்வில் செய்யும் செயல்களின் பலன்தான் நமது நிஜமான அனுபவங்களை மட்டுமின்றி கனவுலக அனுபவங்களையும் தீர்மானிக்கின்றன. எனவேதான் கத்தியுடன் துரத்தும் கொலைகாரனிடமிருந்து தப்பிக்க எவ்வளவு வேகமாக ஓடினாலும் இருக்கும் இடத்தைவிட்டு நகர முடிவதில்லை.

கனவில் மட்டும்தான் இதுபோன்ற கையாலாகாத்தானம் நமக்கு ஏற்படும் என்பது தவறான எண்ணம். நிஜவாழ்வில் நமக்கு ஏற்படும் நிகழ்வுகளைக்கூட நம்மால் மாற்றமுடியாது. நமது கடந்த கால செயல்களின் விளைவாக ஏற்படும் பலனை நாம் அனுபவிக்காமல் தவிர்க்க முடியாது.
    
கனவு தரும் உண்மை3: அனுபவிப்பவனின் தன்மை

நம் அனுபவங்களை அனுபவிப்பது யார் என்ற கேள்விக்குநான்என்ற தவறான பதிலை தயங்காமல் சொல்வோம். நம் கனவு உலகை சிறிது ஆராய்ந்தால் இந்த பதில் ஏன் தவறு என்பதை அறிந்து கொள்ளலாம்.

சுவையான பச்சைபருப்பு பாயசத்தைஆஹா, தேவாமிர்தமாக இருக்கிறதுஎன்று ரசித்து சாப்பிட்டது கனவில் இருந்த என்னைப்போல் ஒருவன். அவனை நான் என்று கனவு காணும்பொழுது தவறாக நினைத்துக்கொண்டிருந்தேன். விழித்தவுடன்தான் இந்த தவறு எனக்கு புரிந்தது. இதே தவறை நாம் வாழ்விலும் செய்து கொண்டிருக்கிறோம். தட்டில் வைக்கப்பட்டிருக்கும் தோசையும் என் உடலும் ஒரே ஜடப்பொருளால் ஆனவை. தோசை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் சென்று மறைந்து விட்டது. இப்பொழுது நான் சாப்பிட்டேன்என்ற எண்ணம் நம் மனதில் தோன்றுகிறது. இது கனவில் பாயசம் சாப்பிட்ட அனுபவத்திலிருந்து வேறுபட்டதல்ல.

தோசை சாப்பிட்டதால் பசி நீங்கியது, எனவே இது கனவில் பாயசம் சாப்பிட்டதை விட நிஜமானது என்பதும் தவறான எண்ணம். கனவில் சாப்பிட்டது கனவு பசியை நீக்கியது. இப்பொழுது சாப்பிட்டாலும் இன்னும் சில நேரத்தில் மீண்டும் பசிக்கும். எனவே அனுபவங்கள் தொடரும். எனவே இது நிஜம் என்று நாம் எதை எண்ணிக்கொண்டிருக்கிறோமோ அதுவும் கனவுதான். நிரந்தரமான நான் அனுபவிப்பவன் அல்ல என்ற உண்மையை வேதம் நமக்கு சொல்லித்தருகிறது.

முடிவுரை :

ஆசைகள், செயல்கள் மற்றும் அவற்றின் விளைவான அனுபவங்கள் ஆகிய மூன்றின் மொத்த தொகுப்புதான் வாழ்க்கை. இவற்றிற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்தே நம் வாழ்வின் தரம் அமைகிறது.

பொருளாதார தேக்கத்தினால் ஏற்றுமதி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிற வீட்டை விற்று வாடகை வீட்டுக்கு குடிபோன விஷயத்தை ஒரு கதை சொல்வது போல சொல்வதோ இல்லை குடிமுழுகி போய்விட்டது என்று தூக்கில் தொங்குவதோ உலக அனுபவங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்தது.

அனுபவங்களை கனவு போல எண்ணி அவ்வப்பொழுது மறந்துபோய் இன்று புதிதாய் பிறந்தோம் என்று வாழத்துவங்கினால் என்றும் இன்பம் நம் வாழ்வில் நிறைந்திருக்கும்.

நாம் படைத்த கனவு உலகம் தொடர்ந்து மாறுவதைப்போல கடவுள் அமைத்த உலகிலும் நிரந்தரமின்மை மட்டும்தான் உண்மை. கனவிலும் நினைவிலும் மாறாமல் நிரந்தரமாக இருக்கும் ஒரே உண்மை நான் மட்டும்தான்.

உலக சம்பந்தமான ஆசை நம்மை தொடர்ந்து செயலில் ஈடுபடுத்தும். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை எப்பொழுது புரிந்து கொள்கிறோமோ அப்பொழுது கடவுள் யார், அவன் ஏன் இது போன்ற மாறும் உலகை படைத்தான், மாறாமல் இருக்கும் நான் யார் போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள ஆசை வரும்.

நிலையாதவற்றின் மீது ஆசை வைக்காமல் நிலையானவை மீது ஆசைவைத்தால் மட்டுமே நாம் முக்தியடைவோம். நிலையானவன் பரமன். பரமன் யார் என்று அறிந்து கொண்டால் நம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.


பயிற்சிக்காக :

1. ஆசைகளுக்கும் அனுபவங்களுக்கும் உள்ள உறவு என்ன?

2. கனவுகள் எப்படி ஏற்படுகின்றன?

3. கனவுகள் ஏன் ஏற்படுகின்றன?

4. கனவுகள் நமக்கு காட்டும் மூன்று உண்மைகள் யாவை?

5. இந்த பாடத்தின் மைய கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா?

2. கெட்ட அனுபவங்களை மட்டும்தானே மறக்கவேண்டும். நல்ல அனுபவங்களை மீண்டும் மீண்டும் நினைத்து பார்ப்பதுதானே மகிழ்ச்சி?

3. அன்றாட அனுபவங்களை கனவுபோல மறந்துவிட்டால் மன வளர்ச்சி அடையாமல் பின்தங்கி விடமாட்டோமா?

Friday, February 12, 2010

Lesson 92: Not to cling on to the world ( பிரம்ம சூத்திரம் 3.1.24-27 )

பாடம் 92: தாமரை இலை மேல் தண்ணீர் போல
பாடல் 315-318 (III.1.24-27)

நான் ஆனந்தமயமானவன் என்ற உண்மையை அறியாமல் உலகத்தில் இன்பத்தை தேடியலையும் மனிதன் எப்பொழுது தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீர் போல பட்டும் படாமலும் இவ்வுலகில் வாழத்தொடங்குகிறானோ அப்பொழுதுதான் அவனுக்கு வேதம் கூறும் உண்மையை அறியும் ஆர்வம் ஏற்படும் என்ற கருத்தை இந்த பாடம் வலியுருத்துகிறது.

ஆசையின் தன்மை

ஆசை தொடர்ந்து வளரும் தன்மை உள்ளது. நெய் உற்றி நெருப்பை அணைக்க முடியாது. அது போல ஆசை பட்ட பொருளை அடைவதால் ஆசை அதிகமாகுமே தவிர குறையாது.
எட்டா கனிதான் இனிக்கும். எது நமக்கு சுலபமாக கிடைக்கிறதோ அதில் அவ்வளவு இன்பம் இருப்பதில்லை என்பதை நாம் அனுபவத்தில் உணர்வோம். உண்மை என்னவெனில் எது மிகவும் பிரயத்தனபட்டபின் கிடைக்கிறதோ அதிலும் இன்பம் இருக்காது. ஆனால் அது கிடைத்தால் இன்பம் அடைவோம் என்ற நினைப்பு நம்மை விட்டு அகலுவதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று தொடர்ந்து நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு பொருளை  விரும்புவதை எல்லா மனிதர்களும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இது ஒரு அவசியமான பயிற்சி. பிறந்த குழந்தை தொடர்ந்து கையையும் காலையும் அசைக்கத்துவங்குவது மிக அவசியமான உடற்பயிற்சி என்று அதற்கு தெரியாவிட்டாலும் அது அவ்வாறு தொடர்ந்து செய்கிறது. அதே போல் ஆசை பட்டதை அடைந்த பின் இன்பம் கிடைக்காதபோதும் தொடர்ந்து மென்மேலும் ஆசையை வளர்த்திக்கொள்வது நமது இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்திகளை வலுபடுத்திக்கொள்ள தேவையான ஒரு பயிற்சி.

வேதத்தை முறையாக பயின்று குறைவில்லாத இன்பத்தை அடைய நமக்கு இம்மூன்று சக்திகளும் மிக அதிக அளவில் தேவை. எனவே உலக வாழ்வில் வெற்றிபெறும் திறன் இல்லாதவர்கள் காவியுடை உடுத்திக்கொண்டால் கோவில் முன் அமர்ந்து பிச்சை எடுத்து சாப்பிடலாமே தவிர முக்தி கிடைக்காது.

உலகம் பற்றிய உண்மை

பெற்றோர்களும் ஆசிரியர்களும்நன்றாக படி. அப்பொழுதுதான் நன்றாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ முடியும்என்று அறிவுரை வழங்கும்பொழுது நாம் கற்கும் கல்விக்கும் இன்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நமக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த அறிவுரைகளை உண்மை என்று நம்பி கல்லூரிப்படிப்பை முடித்து நல்ல வேலை கிடைத்தபின் தொடர்ந்து இன்பத்தை தேடி எல்லோரும் ஓட ஆரம்பிக்கிறோம். இந்த ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடுபவன் வெற்றிபெறுவான் என்கிற உத்தரவாதம் கிடையாது. யார் ஓடும்பொழுது தனக்கு முன்னால் ஓடுபவர்களை கவனித்து பின் வரும் உண்மைகளை முதலில் அறிந்து கொள்கிறானோ அவனுக்குத்தான் வெற்றி வாய்ப்பு மிகவும் அதிகம்.

முதல் உண்மை : துன்பம் கலந்த இன்பம்

வாழ்க்கையில் நாம் பெறும் எந்த இன்பமும் துன்பத்துடன் கலந்தே நமக்கு கிடைக்கிறது. அயராது உழைத்ததால் பதவி உயர்வு கிடைக்க, அது மேலும் உழைப்பை அதிகரிக்கும் அவசியத்தை ஏற்படுத்திவிடும்.

இரண்டாம் உண்மை: குறையும் இன்பம்

வாழ்வில் நாம் அடையும் எந்த இன்பமும் படிப்படியாக குறையும் தன்மை உடையது. (Law of diminishing returns).  வேண்டிய பொருளை அடைந்தவுடன் ஏற்படும் அளவுகடந்த ஆனந்தம் ஒரு சிலநாட்களுக்கு பிறகு வெகுவாக குறைந்து விடுகிறது.  

மூன்றாம் உண்மை: நிலையா இன்பம்

ஒரு நல்ல ஆடையை அதிக விலை கொடுத்து வாங்கி முதல் முறையாக அணியும்பொழுது நண்பர் ஒருவர் இது உனக்கு கொஞ்சம்கூட பொருத்தமாயில்லை என்று கூறிவிட்டால் அதுவரை இருந்த இன்பம் சுவடு தெரியாமல் உடனே மறைந்து விடும்.

நான்காம் உண்மை: ஆடம்பரமான தேவைகள்

நம்மிடம் இருக்கும் பொருள்கள் அனைத்தும் நம் அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்ய அவசியமானவை. இல்லாத பொருள்கள் அனைத்தும்இருந்தால் நன்றாக இருக்கும்என்ற வகையை சேர்ந்தவை. இது அனைத்து தர மக்களுக்கும் பொருத்தமான உண்மை. மேலும் எப்பொழுது இல்லாத பொருள்மேல் ஆசை பட்டு அதை இருக்கும் பொருளாக மாற்றிக்கொள்வோமோ அப்பொழுதிலிருந்து அந்த பொருள் நமது அடிப்படைத்தேவை என்ற பட்டியலில் சேர்ந்து விடும்.

எனவே அடிப்படைத்தேவைகள் என்ற பட்டியலை மிக நீளமாய் வைத்திருப்பவர்களுக்கு இன்பத்தை விட துன்பம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஐந்தாம் உண்மை: நிறைவு தரா இன்பம்

எவ்வளவுதான் பணம் சம்பாதித்திருந்தாலும், நல்ல குடும்பம் அமைந்திருந்தாலும், ஆரோக்கியமான உடல் இருந்தாலும் ஏதோ ஒரு இனம் தெரியாத குறை நம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கும். (இந்த குறையை வேதத்தை படித்து புரிந்து கொள்ளாமல் நிறைவு செய்ய முடியாது.)  எதையாவது தேடி, இனிமேல் தேட உடலில் வலு இல்லை என்ற காரணத்தால் மட்டும் தேடலை நிறுத்தி இளைஞர்களை பொறாமையுடன் பார்க்கும் முதியோர்கள் நிறயபேர் உண்டு.

இன்பத்தை பற்றிய இந்த ஐந்து உண்மைகளை யார் முதலில் அறிந்து கொள்கிறார்களோ அவர்களே இல்லாத இடம் தேடி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் இருந்து விலகி இன்பத்தை சரியான இடத்தில் தேட தகுதியானவர்கள்.

பொருளாதார ஓட்டப்பந்தயத்தில் இன்பம் எனும் வெற்றி கிடைக்காது என்பதால் அந்த பந்தயத்தில் கலந்து கொள்ளவே கூடாது என்பது தவறான முடிவு. அதில் கலந்து கொண்டு சில காலம் ஓடினால் மட்டுமே மேற்கூறிய ஐந்து உண்மைகளை அனுபவபூர்வமாக அறிந்து கொள்ள முடியும்.

மேலும் வேதத்தை படிக்க தேவையான மனப்பக்குவமும் இந்த பந்தயத்தில் முழுமுயற்சியுடன் ஈடுபட்டால் மட்டுமே நமக்கு கிடைக்கும்.

சுகமும் இன்பமும்

வாழ்க்கை தரம் (standard of living) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு மக்களின் இடைவிடாத உழைப்பு மட்டுமே காரணம். நன்றாக படித்து நல்ல வேலை செய்தால் நிறய பணம் கிடைக்கும். நல்ல கார், வீடு ஆகியவற்றை வாங்கலாம். குழந்தைகளுக்கு நல்ல படிப்பை கொடுத்து அவர்களுக்கும் நிறய பணம் சம்பாதிக்கும் தகுதியை ஏற்படுத்தி கொடுக்கலாம். இந்த எண்ணப்போக்கில் எந்த தவறும் இல்லை. இதை அனைத்தையும் நாம் அனைவரும் செய்தால் மட்டுமே உலகம் தொடர்ந்து முன்னேறி எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்என்ற கனவு நினைவாவது சாத்தியம்.

ஆனால் இதற்கும் இன்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை மட்டும்தான் நாம் உணர வேண்டும். ஏழையாக குடிசையில் குறைவில்லா இன்பத்துடன் வாழ வேண்டுமா அல்லது அனைத்து வசதிகளுடன் கூடிய அரண்மனையில் இன்னும் வேண்டுமென்கிற குறைவுடன் கூடிய இன்பத்துடன் வாழ வேண்டுமா என்று கேட்டால், நாம் புத்திசாலியாக இருந்தால் அரண்மணையில் குறைவில்லா இன்பத்துடன் வாழ வேண்டும் என்று பதில் சொல்வோம்.

பணமும் இன்பமும்

பணமும் இன்பமும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை என்பது உண்மையென்றாலும் இரண்டும் நமக்கு மிகவும் அவசியமானவை. இன்பமாயிருப்பதால் மட்டும் நமக்கு வாழ்வில் சுகம் கிடைத்துவிடாது.  சுகமாயிருக்க நிச்சயம் பணம் வேண்டும்.

நமக்கு மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு தேவையான பணத்தை கொடுக்க முடிந்த அளவுக்கு நாம் பணக்காரர்களாய் இருப்பது நன்று. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிப்பது நமது கடமை. பணத்தை உபயோகபடுத்தி இன்பத்தை பெற முடியாது என்பது மட்டும் நமக்கு புரிந்தால் போதும். பொருள் ஈட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.

ஆசையே இன்பத்திற்கு காரணம்

உலகத்தில் இன்பம் இருக்கிறது என்ற அறியாமையின் அடிப்படையில் தோன்றும் ஆசை நம்மை செயலில் ஈடுபடுத்துகிறது. தொடர்ந்து உழைப்பதால் நாம் நம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்கிறோம். அதே சமயத்தில் உலகில் இன்பம் இல்லை என்ற மனப்பக்குவமும் நமக்கு ஏற்படுகிறது. எனவே வேதம் படிக்க ஆரம்பிக்கிறோம். நானே ஆனந்த மயமான பரமன் என்பதை அறிந்து கொள்கிறோம். இன்பத்திற்காகவன்றி இன்பமாக இருப்பதால் தொடர்ந்து உழைக்கிறோம். மேலும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திகொண்டு குறைவற்ற இன்பத்துடன் சிறப்பாக வாழ்கிறோம். எனவே ஆசையே இன்பத்திற்கு மட்டுமில்லாமல் சுகத்திற்கும் காரணம்.

முடிவுரை :

வைராக்யம் உள்ளவர்கள் உலக சுகங்களை அனுபவிக்க மாட்டார்கள் என்பது தவறான கருத்து. உலகத்தில் உள்ள அனைத்தையும் உள்ளதை உள்ளவாறு பார்க்கும் திறமை படைத்தவர்களே வைராக்யம் உள்ளவர்கள். இவர்கள் பொருள்களில் இல்லாத இன்பத்தை இருப்பதாக நினைத்து அவற்றிற்கு ஏங்க மாட்டார்கள்.

உலகம் படைக்கப்பட்டது நமது அனுபவத்திற்காக. இதில் வைராக்யம் உள்ளவர்களால் மட்டுமே அனைத்து பொருள்களையும் துன்பம் கலக்காத இன்பத்துடன் தொடர்ந்து அனுபவிக முடியும். உலக சுகங்களின் மேல் ஆசைபட்டு அவற்றை அடையும் முயற்சியில் என்று நாம் வைராக்கியத்தை அடைகிறோமோ அன்றிலிருந்து நமக்கு கிடைக்கும் அனைத்து பொருள்களையும் அளவுகட்டுப்பாடு ஏதுமின்றி அனுபவிக்கலாம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வைராக்யம் வருவதற்குள் முதுமை வந்துவிடுகிறது. எனவே வைராக்யம் வந்தபின்கூட இயலாமை காரணமாக அனுபவங்களை இழக்க நேரிடுகிறது.

பொருளாதார வாழ்வில் முன்னேறி வாழ்வில் சுகங்களை பெற அவசியமான கல்வியை இளம் வயதில் கற்பது போல குறைவில்லா இன்பத்தை அடைய தேவையான வேதத்தையும் முதுமை அடைவதற்குள் பயின்று தேர்ந்தால் வாழ்வில் சுகமாகவும் இன்பமாகவும் இருக்கலாம்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. உலகத்தில் உள்ள பொருள்களை தடையின்றி அனுபவிக்க  அவற்றின் மீது வைராக்யம் அவசியம் என்ற கருத்துடன் மூன்றாவது அத்தியாயத்தின் முதல் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. ஆசையின் தன்மை என்ன?

2. பொருள்களில் உள்ள இன்பத்தை பற்றி கூறப்பட்ட ஐந்து உண்மைகள் யாவை?

3. ஆசை எப்படி இன்பத்திற்கு காரணமாயிருக்க முடியும்?

சுயசிந்தனைக்காக :

1. ஞானிகள் சுகபோகிகளாக வாழலாமா?

2. உலகத்தில் உள்ள பொருள்கள் எவற்றையும் அனுபவிக்காமல் இன்பமாக இருக்க முடியுமா?