Wednesday, March 14, 2012

Lesson 170: The function of the Prana is merged with Atman (Brahmasutra 4.2.4-6)


பாடம் 170: ஞானியின் பிராணன் ஜீவாத்மாவில் அடங்கிவிடும்
பாடல் 500-502 (IV.2.4-6)

நான் ஒரு தனி மனிதன் என்ற எண்ணம் மறைந்துவிடுவதால் ஞானியின் பிராணன் ஆத்மாவில் அடங்கிவிடும் என்ற கருத்தை விளக்கி பிராணன் அடங்கிவிடுவதால் ஏற்படும் பலனை இந்த பாடம் விவரிக்கிறது.

பிராணன் நின்றுவிட்டால் உயிர் பிரிந்துவிடும் என்ற கருத்து உடலை உணர்வின் ஆதாரமாக நினைக்கும் பற்றுடையோர்களின் மரணபயத்திற்கு காரணம். உணர்வுதான் உடலின் ஆதாரம் என்ற உண்மையை அறிந்த முக்திவிழைவோர்கள் கூட உடல் உணர்விலிருந்து வேறானது என்று நினைப்பதால் மரணபயத்திலிருந்து விடுதலை பெறுவதில்லை. இருப்பது உணர்வு மட்டும்தான் என்ற அறிவு ஏற்பட்டவுடன்தான் அவர்கள் முற்றுணர்ந்தோர்களாகி சாகாவரம் பெறுகிறார்கள்.

கனவில் உலவும் மனிதர்கள் உயிருடன் இருப்பதாக தோற்றமளிப்பதற்கு காரணம் அவர்களுக்குள் துடிக்கும் பிராணன் என்ற விளக்கம் உண்மையாக இருக்க முடியாது. உலகில் உலவும் மனிதர்கள் உயிருடன் இருக்க பரமனிடமிருந்து தோன்றிய பிராணன்தான் காரணம் என்ற விளக்கம் முக்திவிழைவோர்களுக்கு சரியாக புரிந்துவிட்டால் அவர்களது பிராணன் பரமனுடன் ஐக்கியமாகிவிடும்.

உயிருக்கு உடல் காவல் என்ற முதல் படியை தாண்டி மரணத்திற்கு பின் மறுபிறவி எடுப்பதால் உடல் வெறும் உடையைப்போல என்ற இரண்டாம் படியையும் கடந்து உடல் இருப்பதுபோல் தோன்றும் காட்சிப்பிழை என்ற உண்மையை அறிந்ததும் பிராணன் ஆத்மாவில் அடங்கிவிடும். எனவே ஞானிக்கு மரணபயம் இருக்காது.

பிராணன் அடங்கியபின் உடல், மனம் மற்றும் புத்தி ஆகிய மூன்று கருவிகள் மூலம் ஆத்மாவின் இன்பத்தை முழுமையாக ஞானிகள் அனுபவிப்பர். பற்றுடையோர்கள் இவற்றின் மூலம் அனுபவிக்கும் இன்பம் துன்பத்துடன் கலந்தே இருக்கும். முக்திவிழைவோர்கள் இந்த மூன்று கருவிகளின் மூலமாக இல்லாமல் நேரடியாக ஆத்மாவின் இன்பத்தை பெறலாம் என்ற தவறான எதிர்பார்ப்புடன் வாழ்வார்கள்.

இன்பத்தின் மூன்று நிலைகள்

அனைவரும் அனுபவிப்பது ஒரே இன்பம்தான் என்றாலும் மக்களின் தரத்திற்கேற்ப இந்த இன்பத்தை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். உடல் அளவில் அனுபவிக்கும் இன்பம் தாழ்ந்த நிலை. மனதளவில் அனுபவிக்கும் இன்பம் அதைவிட உயர்ந்த நிலை. அறிவுபூர்வமாக புத்தியை பயன்படுத்தி அனுபவிக்கும் இன்பம் மிக உயர்ந்த நிலை. சினிமா பாடல்கள் உடலுக்கும், கர்நாடக இசை உடல் மற்றும் மனதிற்கும், இலக்கிய சொற்பழிவு உடல், மனம், புத்தி ஆகிய மூன்றிற்கும் இன்ப அனுபவத்தை தருகின்றன. இலக்கிய சொற்பழிவை அனுபவிப்பவர் சினிமா பாடலையும் இரசிக்கலாம். ஆனால் சினிமா பாடல்களை இரசிக்கும் எல்லோருக்கும் இலக்கிய சொற்பழிவு புரியாது. எனவே மக்களின் தரம் அதிகமாக அதிகமாக அவர்கள் அனுபவிக்கும் இன்பத்தின் நிலைகள் உயர்வதுடன் இன்பத்தின் அளவும் அதிகரிக்கும். உடலின் இன்பம் ஒரு சில நிமிடங்களுக்கும் மனதின் இன்பம் ஒரு சில மணிநேரங்களுக்கும் புத்தியினால் அனுபவிக்கும் இன்பம் பல நாட்களுக்கும் இருக்கும். ஞானத்தினால் ஏற்படும் இன்பம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

மனிதர்களில் மூன்று தரங்கள்

உடல்தான் முக்கியம் என்று விலங்குகளைப்போல் வாழ்பவர்கள் தரத்தில் மிகவும் தாழ்ந்தவர்கள். இவர்கள் தங்களது அறிவை உடலின் இன்பத்திற்காக மட்டுமே செலவிடுவார்கள். உடலைவிட மனம்தான் முக்கியம் என்ற அறிவுடன் உடலை வருத்தி மனதின் இன்பத்திற்காக உழைப்பவர்கள் இரண்டாம் தரம். மனதையும் கட்டுப்படுத்தி அறிவுபூர்வமாக வாழ்பவர்கள் முதல் தரமானவர்கள்.

உடலை பிரதானமாக கொண்டு வாழ்பவர்கள் பற்றுடையோர்களாகவே இருப்பர். மனதை பிரதானமாக நினைப்பவர்கள் முக்திவிழைவோர்களாக மாறினாலும் இவர்களுக்கு முக்தி கிடைப்பது அரிது. முதல் தர மனிதர்களில் ஒருசிலர் மட்டுமே பற்றுடையோன், முக்திவிழைவோன் என முன்னேறி இறுதியில் ஞானியாவார்கள்.

முதல் நிலை இன்பம்உடல்

புலன்கள் பொருள்களுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவிப்பது மட்டுமே மிருகங்களால் முடியும். அதிக குளிரும் அதிக வெப்பமும் இல்லாமல் உடலுக்கு இதமான சூழல், சுகமாக இருக்க தேவையான சாதனங்கள் கொண்ட வீடு, சத்தம் அதிகமில்லாமல் இனிமையான பாடல், பார்க்க அழகாக இருக்கும் வண்ண ஓவியங்கள், நருமணம் தரும் மலர், உடலின்பம் தரும் துணைவர் என்பது போன்ற உடலளவில் அனுபவிக்கும் இன்பங்கள்தான் வாழ்வின் ஒரே குறிக்கோளாக கொண்டு ஒரு சில மனிதர்கள் கூட இதே நிலையில் வாழ்வார்கள்.

உடலளவில் இன்ப அனுபவம் தரும் பொருள்கள்களை பெறுவது எளிது. பண்பட்ட மனிதர்கள் அடுத்த நிலைக்கு முன்னேற இந்த இன்பங்களை தியாகம் செய்ய தயங்குவதில்லை. முக்தி விழைவோர்கள் உடல் அளவில் பெறும் இன்பங்களை முழுவதுமாக துறக்க தயாராக இருப்பார்கள். ஆனால் முற்றுணந்தோர்கள் ஒன்றை துறந்து மற்றதை பெற முயலாமல் அனைத்து அனுபவங்களையும் ஏற்றுக்கொண்டு என்றும் இன்பமாக வாழ்வார்கள். இருப்பவற்றை அனுபவிக்க தயங்கமாட்டார்கள். இல்லாததற்கு ஏங்க மாட்டார்கள்.

உடலளவில் ஏற்படும் இன்பம் சில நிமிடங்களே தொடர்வதால் மேலும் இன்பத்தை பெற முயற்சி செய்வது அவசியமாகிறது. எவ்வளவுதான் முயன்றாலும் துன்பத்தை முழுவதும் தவிர்த்து உடலை இன்பமாக வைத்துக்கொள்ள முடியாமல் போவதற்கு முப்பத்தைந்து வயதில் துவங்கும் வயோதிகம் காரணமாகிறது. புலன்களின் திறன், உடல் ஆரோக்கியம், பொருள்களை ஈட்டும் திறன் ஆகியவை யௌவனத்திற்கு பின் குறைய ஆரம்பிப்பதால் தொடர்ந்து இன்ப அனுபவங்களைப்பெற அடுத்த நிலைக்கு முன்னேறவேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்படுகிறது. உடலின் ஆதிக்கம் குறைந்து இளமை வேகம் முதுமையின் முதிர்ச்சியாக மாறியபின் அடுத்த நிலைக்கு செல்பவர்களுக்கு மூன்றாவது நிலைக்கு செல்லும் தகுதி ஏற்படாது. எனவே இவர்களுக்கு இந்தப்பிறவியில் முக்தியடைய வாய்ப்பில்லை.

இரண்டாம் நிலை இன்பம்மனம்

பெரும்பாலான மனிதர்கள் உடலால் பெறும் இன்பத்தின் குறைபாடுகளை வெகு விரைவில் புரிந்துகொண்டு மனதினால் பெறும் இன்பம் என்றும் நிலைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தங்கள் உடல் உழைப்பையும் புத்திகூர்மையையும் மனதிற்கு பிடித்த பொருள்களை பெறுவதற்காக செலவிட ஆரம்பிப்பார்கள். மனம் போன போக்கில் வாழ்வதுதான் இன்பம் என்ற தவறான முடிவுடன் ஓய்வில்லாமல் உழைப்பார்கள். உழைப்பு துன்பமாக இருந்தாலும் அது என்றாவது ஒரு நாள் நிம்மதியாக வாழ வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் வாரத்தில் ஐந்து நாட்களில் துன்பத்தை சகித்துக்கொண்டு எஞ்சிய இரண்டு நாட்கள் மட்டும் மனம்போனபடி வாழ்வார்கள். திங்கள் கிழமை காலை அலுவலகம் செல்லும்பொழுது மரத்தடி நிழலில் நிம்மதியாக தூங்குபவனை பார்த்து ஏக்கப்பெருமூச்சுவிடுவார்கள்.

இடத்துக்கு இடம், நேரத்திற்கு நேரம், மனிதருக்கு மனிதர் உடலின் தேவைகள் மாறுபடுவதில்லை. மனம் மாறிக்கொண்டே இருப்பதால் அதன் தேவைகள் என்ன என்று தெளிவாக தெரிந்து கொள்வதே கடினம். தேடியபொருள் கிடைத்தபின்கூட மனம் திருப்தியடைவதில்லை. தேவைக்குமேல் எதையும் அனுபவிக்கும் திறன் உடலுக்கு கிடையாது. ஆனால் மனதின் தேவைகளை உலகப்பொருள்களால் நிறைக்கவே முடியாது. மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சி இன்பத்தை விட துன்பத்தையே அதிக அளவில் தரும்.

இந்த உண்மையை அறிந்துகொள்ளும் அளவுக்கு புத்திகூர்மையுள்ளவர்கள் மனம் விரும்புகிறது என்ற ஒரே காரணத்திற்காக பொருள்களை தேடுவதை நிறுத்திவிட்டு அறிவுபூர்வமாக ஆராய்ந்தபின்னரே எவ்வித வேலையையும் செய்வார்கள். இவர்கள் மட்டுமே அடுத்த நிலை இன்பத்தை அனுபவிக்க தகுதியானவர்கள். இந்த தகுதியை பெற்றபின்னும் இவர்கள் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் மூலமாகவும் தொடர்ந்து இன்பத்தை அனுபவிப்பார்கள். ஆனால் இவ்விரண்டும் தாழ்ந்த நிலை என்பதை அறிந்து மூன்றாம் நிலைக்கு இவர்கள் முன்னேறுவார்கள்.

மூன்றாம் நிலை இன்பம்புத்தி

உடலின் இன்பதுன்பங்களை வெளியுலகப்பொருள்கள் தீர்மானிக்கின்றன. அடித்தால் வலிக்கும். அணைத்தால் இனிக்கும். மனதின்  இன்பதுன்பங்களை தீர்மானிப்பது மனம்தான். பிடித்தவர் அடித்தால் இனிக்கிறது. பிடிக்காதவர் அணைத்தால் கசக்கிறது. சரி தவறு என்ற அறிவின் அடிப்படையில் ஏற்படும் இன்பம் மூன்றாம் நிலையைச்சேர்ந்தது. முக்கியமான தேர்வில் வெற்றி பெறுவது பிடித்த நண்பருடன் சிரித்து மகிழ்வதைவிட உயர்ந்த நிலை இன்பம்.

தன் சாதனைகளை உலகம் மெச்ச வேண்டுமென்றும் சரித்திரத்தில் தன் பெயர் இடம்பெற வேண்டுமென்றும் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை கற்பித்துக்கொண்டு படிப்படியாக முன்னேறுபவர்கள் முதல் தர மனிதர்கள். மனம் மூலம் பெறும் இன்பம் நிலைப்பதில்லை என்ற அறிவு ஏற்பட்டவுடன் இவர்கள் தங்கள் புத்தியை கூர்மைபடுத்தி நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் என்ற தகுதியை தனக்கு ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் பெறும் இன்பம் நிலைக்கும் என நம்புவார்கள்.

தனது மரணத்திற்குபின் கல்லறையில் கூடுபவர்கள் தன்னை பற்றி உயர்வாக பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அதற்கேற்றவாறு வாழ முயலுவார்கள். மற்றவர்கள் தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பதால் தனக்கு ஏற்படும் இன்பம் மற்ற இரண்டு நிலை இன்பங்களைவிட அதிகமென்றாலும் அந்த இன்பத்தை காப்பாற்ற துன்பபட வேண்டும் என்ற அறிவு ஏற்பட சிலகாலமாகும். வெற்றி தோல்வி மாறிமாறி ஏற்படுவதால் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் தங்கள்  வாழ்வு அலைபாய்கிறது என்றும் இந்த அலைபாய்தலுக்கு முடிவே இல்லை என்றும் அறிந்தபின்தான் நிலையான இன்பத்தை பெற தேவையான அறிவை அடைய இவர்கள் முயற்சி செய்வார்கள்.

மாறுதலுக்குட்பட்ட உலக அறிவு துன்பத்தை குறைக்க மட்டுமே உதவும். துன்பத்தை முழுமையாக அகற்றவும் நிலையான இன்பத்தை பெறவும் வேதம் தரும் மாறாத அறிவு அவசியம். அறிவின் கூர்மையை முழுமையாக பயன்படுத்தி வேதம் படிப்பவர்களால் மட்டுமே இந்த நிலையின் உச்சகட்டத்தை அடைய முடியும்.

ஒருமித்த செயல்பாடு

இன்பம் நமது உண்மை உருவம் என்பதால் இன்ப அனுபவத்தை பெறாதவர்கள் யாரும் கிடையாது. இன்பம் உருவாக்கப்படுவதல்ல. அது  என்றும் இருப்பது. ஆனால் இன்ப அனுபவம் வந்து போககூடியது. ஆழ்ந்த உறக்கத்தின்பொழுது உடல், மனம், புத்தி ஆகிய மூன்று கருவிகளும் ஒடுங்கியிருப்பதால் எல்லோருக்கும் கிடைக்கும் இன்ப அனுபவம் விழித்த பின் தொடர இந்த கருவிகள் மூன்றும் ஒருமித்து செயல்பட வேண்டியது அவசியம்.

புலன்கள் மனதின் துணையில்லாமல் செயல்படுவதில்லை. மனம் கவலையில் ஆழ்ந்திருக்கும்பொழுது திரைப்படபாடல் காதுக்கு கேட்காது. கேட்டாலும் இனிமையாக இருக்காது. அதே போல் மனதாலும் ஐந்து புலன்களின் மூலமாக அல்லாமல் வேறு வழியில் எவ்வித அனுபவத்தையும் பெற முடியாது. மனதை வழிநடத்தும் அறிவால் மனதின் துணையின்றி தனித்து இயங்க முடியாது.

புலன்களின் துணையில்லாமல் எவ்வித இன்பத்தையும் பெறமுடியாது. ஏனெனில் புலன்கள் செயல்படவில்லையென்றால் உலகம் மறைந்துவிடும். மனம் மட்டும் செயல்பட்டாலும் உடலை பயன்படுத்தமுடியவில்லையே என்ற வருத்தம் இன்ப அனுபவங்களை தடை செய்துவிடும். உடலும் மனமும் சேர்ந்து செயல்பட்டாலும் இன்ப அனுபவங்களை நாம் பெறுகிறோம் என்ற அறிவு இல்லையென்றால் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வித்தியாசம் தெரியாது. பைத்தியக்காரன் எதற்கு சிரிக்கிறான் அல்லது எதற்கு அழுவான் என்று தெளிவாக சொல்ல முடியாது.

எனவே அறிவு, மனம், புலன்கள் ஆகியவை ஒருமித்து செயல்பட்டால் மட்டுமே என்றும் இருக்கும் இன்பத்தை அனுபவிக்கமுடியும். அறிவின் ஆழமும் கூர்மையும் இன்ப அனுபவத்தின் அளவை தீர்மானிக்கின்றன. அறிவின் முழுகட்டுப்பாட்டில் மனமும் மனதிற்கு கீழ்படிந்து உடலும் செயல்பட்டால் மட்டுமே துன்பம் கலவா இன்பத்தை இடைவிடாமல் அனுபவிக்க தேவையான ஞானத்தை பெறமுடியும்.

இன்ப அனுபவத்தில் புத்தியின் பங்கு

பிறந்தவுடன் எழுந்து நிற்காவிட்டால் கழுதைப்புலிக்கு உணவாகிவிடுவோம் என்ற அறிவு ஒட்டகச்சிவிங்கியின் குட்டிக்கு இயற்கையாகவே இருக்கிறது. ஆனால் தனக்கு எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறியும் திறனை மனிதன் தன் சுய முயற்சியால் வளர்த்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது. வாழ்வில் அடிபட்டு அல்லது பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு மனிதன் தன் பகுத்தறிவை வளர்த்துக்கொண்டால் மட்டுமே அவனால் இன்பமாக வாழ முடியும். மனிதன் அனுபவிக்கும் இன்பத்தின் அளவும் நிலையும் அவனது அறிவின் தரத்தை பொறுத்தே அமையும். புத்தியுள்ளவர்கள் மற்றவர்களை விட இன்பமாக வாழ்வர்.

இயற்கை சூழல் தரும் இன்பதுன்பங்களை வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்ளும் விலங்குகளைப்போல் வாழாமல் சூழ்நிலைகளை தன் வசதிக்கேற்ப மாற்றும் சக்தி மனிதனின் அறிவை பொறுத்து அதிகரிக்கும். அறிவுத்திறன் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருளாதார நிலையை உயர்த்தி தான் வாழும் உலகை தனக்கேற்ற வகையில் அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் வாழ்வின் நிகழ்வுகளை சரியாக எதிர்கொள்ளும் திறனையும் மனிதனின் அறிவு தீர்மானிக்கிறது. எவ்வளவுதான் முயன்றாலும் மற்றவர்கள் தங்களிடம் நடந்துகொள்ளும் விதத்தை முழுவதும் கட்டுப்படுத்தமுடியாது. தனக்கு பிடிக்காத வகையில் ஏதேனும் நிகழ்ந்தாலும் அதனால் துன்பபடாமல் அதன் மூலம் ஏற்படும் நன்மைகளை கண்டுபிடித்து தோல்வியை வெற்றியின் படிக்கட்டாய் மாற்றி துன்பத்தை இன்பமாக மாற்றும் சக்தியும் அறிவுள்ளவர்களுக்கே இருக்கும். நாட்டு நலனுக்காக சிறைபட்டசுதந்திரபோராட்டவீர்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் ஆங்கிலேயேர்கள் தந்த துன்பம் துன்பமாக தெரியவில்லை. எனவே ஒரு நிகழ்வு இன்பமா அல்லது துன்பமா என்பதை அறிவுதான் தீர்மானிக்கிறது.

கவர்ச்சியுடையணிந்த இளம்பெண்ணின் புகைப்படம் ஏற்படுத்தும் உணர்வு அந்த பெண் தனது தங்கை என்ற அறிவு ஏற்பட்டதும் வேறுமாதிரி மாறிவிடும். எனவே இன்ப அனுபவங்கள் அறிவின் தரத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றன.   

தெரியாமல் ஒருவர் நமக்கு துன்பம் தருகிறார் என்றால் அவரை மன்னிக்க தயாராக இருக்கும் மனம் அவர் வேண்டுமென்றே அப்படிச்செய்கிறார் என்று அறிந்தால் பழிவாங்கும் உணர்வால் பாதிக்கப்படும். மற்றவர் எந்த நோக்கத்துடன் எப்படி நடந்துகொண்டாலும் என்னால் இன்பமாக இருக்க முடியும் என்ற அறிவு உள்ளவர்களால் மட்டுமே துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ முடியும்.

போதிய அறிவு இல்லாதவர்களும், அறிவினால் மனதை கட்டுப்படுத்தாதவர்களும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எந்த வயதிலும் மரணமேற்பட வாய்ப்பு உள்ளது என்ற அறிவு உள்ளவர்கள் அது தங்கள் வீட்டில் ஏற்பட்டால் ஒடிந்து போய்விட மாட்டார்கள். மற்றவர்கள் மரணமடையும்பொழுது வாழ்வே மாயம் என்று வாயளவில் சொல்லி துக்கம் விசாரித்துவிட்டு மரணம் என்றால் என்ன என்ற அறிவைப்பெற முயற்சி செய்யாதவர்களின் வாழ்வில் துன்பம் நிச்சயம் ஏற்படும்.

வருமுன் காப்பவர்கள் அறிவுடையோர். மனம்போனபோக்கில் வாழ்வதுதான் இன்பம் என்ற கொள்கையுடன் வாழ்பவர்களால் துன்பத்தை தவிர்க்கமுடியாது. ஒவ்வொரு துன்ப அனுபவத்திலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு மறுபடியும் அதே துன்பத்திற்கு ஆளாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று ஆராய்பவர்கள் மட்டுமே துன்பங்களை முழுமையாக தவிர்க்க தேவையான அறிவைப்பெறுவர்.

பலூன் வைத்து விளையாடுவது இரண்டுவயது சிறுமியாக இல்லாமல் இருபது வயது வாலிபன் என்றால் அவன் இன்னும் வளரவில்லை என்று அர்த்தம். அது போல வாழ்க்கைத்துணைவர் விபத்தில் காலமாகிவிட்டார் என்பதற்காக வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுபவர்கூட அறிவில் குறைபாடுள்ளவரே.

துன்பத்தை அகற்றி இன்பமாக வாழ அறிவை அனைவரும் பயன்படுத்தினாலும் உலகை மாற்றுவதனால் தங்கள் நோக்கத்தை அடைய முடியாது என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே வேதம் தரும் முடிவான அறிவை பெற்று துன்பம் கலவா இன்பத்தை அனுபவிக்கும் வாய்ப்பைப்பெறுவார்கள்.

முடிந்த அளவு போராடியபின்னும் துன்பத்தை தவிர்க்க முடியவில்லை என்ற நிலையில் அதை ஏற்றுக்கொள்ள இதுவும் மாறும்என்ற அறிவு உதவும். மனம் அறிவின் கட்டுப்பாட்டில் இருந்தால் சோகம் அதிக அளவில் பாதிக்காது.

கடந்த கால குறைகளை மறந்துவிட்டு எதிர்கால இன்பத்தை நோக்கி பயணிக்க அறிவாளிகளால் மட்டுமே முடியும். பத்து வருடத்திற்கு முன் அவன் தன்னை முட்டாள் என்று திட்டிவிட்டான் என்று மனதில் நினைத்து இன்று புலம்புபவர்கள் முட்டாள்கள் மட்டுமே. எதிர்கால நிகழ்வுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் நடந்து முடிந்த பழைய நிகழ்வுகளை மாற்றமுடியாது என்றும் அறிவாளிகள் அறிவார்கள்.இன்று தாங்கமுடியாத துன்பமாக தோன்றும் நிகழ்வு பின் ஒருகாலத்தில் மறக்கப்பட்டுவிடும் என்பதையும் இவர்கள் அறிவார்கள்.

எந்த ஒரு நிகழ்வும் நடப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிபவர்கள் அதனால் பாதிக்கப்படுவதில்லை. நியாயமான காரணத்தால்தான் தனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதை அறிந்துகொண்ட பின் துன்பம் குறைந்துவிடுகிறது. வேதம் தரும் அறிவைப்பெற்றவர்கள் உலகம் என்றால் என்ன, அது எப்படி உருவாக்கப்பட்டது, அது உருவாகியதன் காரணம் என்ன, மனிதன் என்பவன் யார், அவன் வாழ்வின் நோக்கம் என்ன, அவன் எப்படி செயல்படுகிறான், அவன் செயல்பாடுகளுக்கு காரணம் என்ன என்பது போன்ற அனைத்துக்கேள்விகளுக்கும் தெளிவான பதிலை அறிந்திருக்கும் காரணத்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் துன்பம் கலவா இன்பத்தை அனுபவிப்பார்கள்.

பற்றுடையோர்கள் மிகப்பெரிய அறிவாளிகளாக இருந்தாலும் அவர்கள் தங்கள் அறிவை உலகம் என்பது யாது என்ற உண்மையை அறிய பயன்படுத்தாமல் அதை தங்கள் விருப்பத்திற்கு மாற்ற பயன்படுத்துவதால் அவர்களால் துன்பத்தை தவிர்க்க முடிவதில்லை. கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று எண்ணும்வரை முக்திவிழைவோர்களால் நீடித்த இன்பத்தை பெற முடிவதில்லை. உலகம் மாயை என்ற கைமண்ணளவு அறிவால் கல்லாத உலகை கைக்குள் கொண்டுவந்த முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே வாழ்வின் குறிக்கோளை அடைந்தவர்கள்.

முற்றுணர்ந்தோரின் இன்பம்

அறிவுதான் ஆனந்தத்தின் ஆதாரம். பருகும் பானத்தின் சுவை எப்படியிருக்கும் என்பது அது என்ன பானம் என்ற அறிவை பொருத்தே அமையும். உயர்ந்த வகை மதுபானம் என்று நினைத்து சாதாரண மதுவை குடிப்பவர்களின் மூளைக்குள் நிகழும் மாற்றங்கள் உண்மையிலேயே உயர்ந்தபானத்தை குடிக்கும்பொழுது ஏற்படும் மாற்றங்களை பெரிதும் ஒத்திருக்கும் என்று கண்டுபிடித்து இந்த கருத்தை மருத்துவ ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது.

தன்னை தேரோட்டியின் மகன் என்று நினைத்து வருந்திய கர்ணனின் துன்பம் அவன் அங்கதேசத்தின் அதிபதியானபின் கூட மறையவில்லை. தான் குந்தியின் புத்திரன் என்ற உண்மையை உணர்ந்த பின் அவன் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையென்றாலும் கூட அவன் மனதில் ஏற்பட்ட அறிவு மரணத்தையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் அவுக்கு அவனை தயார் செய்துவிட்டது.

உலகம் கொடுமையானது என்றும் அதில் தனக்கு இன்பம் தரும் பொருள்களை போராடி பெற வேண்டும் என்ற அறிவுடன் செயல்படுபவர்கள் பற்றுடையோர்கள். நீதான் அது என்று வேதம் கூறுவதால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நம்பும் முக்திவிழைவோர்கள் தான் தர்மத்தின் அடிப்படையில் செயல்பட்டு புண்ணியத்தை சேர்த்தால் இன்பமாக இருக்கலாம் என்று எதிர்பார்ப்பார்கள். அறிவுருவாகவும் ஆனந்த மயமாகவும் என்றும் இருக்கும் பரமன் நான் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் மட்டுமே தங்கள் அனுபவங்கள் அனைத்தையும் இன்பமாக மாற்றி ஏற்றுக்கொள்ளும் அறிவை அடைந்தவர்கள்.

காணுமெடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது தனது இயல்பான ஆனந்தமே என்பதை உணர்ந்தவர்கள் இன்ப அனுபவத்தை பெற ஒரு குறிப்பிட்ட பொருளை தேடுவதில்லை. மேலும் இனிப்பை மட்டுமே உண்டால் திகட்டிவிடும் என்பதால் நடுவில் காரத்தையும் சுவைப்பதுபோல் இன்ப அனுபவத்தை மட்டுமே பெற்றால் மனம் மரத்துப்போய்விடும் என்பதால் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய அனைத்து அனுபவங்களையும் இன்பமாக ஏற்க வேதம் தரும் ஞானம் வழிவகுக்கும்

முடிவுரை :

பிராணமயகோசம் தான் செயல்பட மற்ற கோசங்களை சார்ந்து இருப்பதில்லை. மேலும் பிராணன் இருப்பதாலேயே அன்னமயகோசம், மனோன்மயகோசம், விஞ்ஞானமயகோசம் ஆகிய மூன்றும் செயல்படுகின்றன. பிராணனின் செயல்பாடு ஆனந்தமயகோசத்தை பாதிப்பதில்லை என்பதால் ஆழ்ந்த உறக்கத்தில் நம்மால் ஆனந்தமாக இருக்கமுடிகிறது. விழித்தபின் மற்ற மூன்றுகோசங்களும் ஒருமித்து செயல்பட்டால் மட்டுமே நம்மால் ஆனந்தத்தை அனுபவிக்கமுடியும். பிராணன் செயல்படும்வரை நான் என்ற அகம்பாவம் தன்னை செயல் செய்பவனாகவும் பலனை அனுபவிப்பவனாகவும் கருதிக்கொள்வதால் நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பம் கலந்தே இருக்கிறது. வேதம் படித்து பிராணன் உள்ளிட்ட அனைத்து கோசங்களும் மாயை என்ற அறிவை பெற்றவுடன் உலக அனுபவங்கள் அனைத்தையும் இன்பமாக ஏற்றுக்கொள்ளும் தன்மை மனதிற்கு ஏற்படும். இந்த நிலையை அடைந்த முற்றுணர்ந்தோர்கள் தங்களை ஒரு மனிதன் என்று தனிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள் என்பதினால் அவர்களின் பிராணன் ஆத்மாவில் அடங்கிவிடும் என்ற கருத்தை வேதம் கூறுகிறது.

ஆழ்ந்த உறக்கத்தில் கிடைத்த அதே இன்பம் விழித்தபின்னும் மாறாமல் இருப்பதை முற்றுணர்ந்தோர்கள் மட்டுமே அறிவார்கள். ஏதேனும் ஒரு காரியத்தை செய்தால்தான் இன்ப அனுபவம் கிடைக்கும் என்ற அறிவுடன் தொடர்ந்து செயல்களை செய்பவர்கள் பற்றுடையோர். செயல்கள் எதையும் செய்யாமல் மனதிலிருந்து எண்ணங்களை அகற்றி தான் என்றும் இருக்கும் இன்பவடிவானவன் என்ற உண்மையை உணர்வதால் ஏற்படும் இன்ப அனுபவத்தை நாடுபவன் முக்திவிழைவோன்.

அறிவுக்கூர்மையை அதிகப்படுத்திக்கொள்வதுடன் அதை பயன்படுத்தி இறுதியான உண்மையை அறிந்துகொள்பவர்களின் பிராணன் ஆத்மாவில் அடங்கிவிடுவதால் அவர்களது வாழ்வில் துன்பம் கலவா இன்பம் நிலைக்கும்.


பயிற்சிக்காக :

1. பிராணன் ஆத்மாவில் அடங்கும் என்பதன் பொருள் என்ன?

2. எந்த மூன்று படிகளை கடந்தபின் பிராணன் ஆத்மாவில் அடங்கும்?

3. இன்பத்தை அனுபவிக்க நமக்கு இருக்கும் மூன்று கருவிகள் யாவை?

4. மூன்று நிலை இன்பங்கள் யாவை?

5. மனிதர்கள் எதன் அடிப்படையில் மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்?

6. மூன்று நிலை இன்பங்களுக்குள் உள்ள வித்தியாசங்களை பட்டியலிடவும்

7. ஒருமித்த செயல்பாடு என்ற தலைப்பின் கீழ் விவரிக்கப்பட்ட கருத்து யாது?

8. இன்ப அனுபவத்தில் புத்தியின் முக்கியத்துவத்தை விளக்கவும்.

9. முற்றுணர்ந்தோர் பெறும் இன்பத்தை விளக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1. மனதை கட்டுப்படுத்தி அறிவுபூர்வமாக வாழும் முதல் தரமான மனிதர்களில் பலர் வாழ்வின் இறுதிவரை பற்றுடையோர்களாகவே வாழ்வதன் காரணம் என்ன?

2. அரபு நாடுகளின் வெப்பத்தை பொருட்படுத்தாது அங்கு உழைத்து பணம் சேர்க்கும் மனிதர்கள் எந்த நிலையில் இன்பத்தை தேடுபவர்கள்?

3. மனித வெடிகுண்டாக சிதற தயாராக இருக்கும் தீவிரவாதியின் மன நிலைக்கு என்ன காரணம்?

4. மாறும் உலக அறிவை ஒப்பிடும்பொழுது மாறாத வேதம் தரும் அறிவு உயர்ந்தது மற்றும் இறுதியானது என்றும் கூறப்படுவதன் காரணத்தை ஆராய்க.

Thursday, February 23, 2012

Lesson 169: The function of mind is merged in Prana (Brahmasutram 4.2.3)


பாடம் 169: ஞானியின் மனம் அடங்கிவிடும்
பாடல் 499 (IV.2.3)

நான் பூரணமானவன் என்ற அறிவு மனதின் நிறைவின்மையை மாற்றிவிடுவதால் ஞானியின் மனம் தேடல்களில் ஈடுபடாமல் நமது அடிப்படை தன்மையான ஆனந்தத்தில் திளைத்து அடங்கியிருக்கும் என்ற கருத்தை இந்த பாடம் தருகிறது.

உணர்வுடன் கூடிய மனதை அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்திருப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்ற தவறான அறிவுடன் வெளியுலகில் உழைக்கும் பற்றுடையோர்களின் முயற்சி தோல்வியில்தான் முடியும். சரிபாதியாக பிரித்து தருகிறேன் என்று இதில் ஒரு கடி அதில் ஒரு கடி என்று அப்பம் முழுவதையும் குரங்கு சாப்பிட்டுவிட்டதால் ஏமாந்த பூனைகளைப்போல ஆனந்தமாக இருக்க அமைதியை தொலைப்பதும் அமைதியாக இருந்தால் ஆனந்தத்தை தேட முயல்வதுமாக தொடர்ந்து போராடி இவர்கள் வாழ்வில் ஏமாற்றமடைவார்கள்.

மனது உணர்வுடன் கூடியதல்ல என்றும் அது வெறும் ஜடப்பொருள் என்றும் அறிபவர் முக்திவிழைவோர்கள். ஆனந்தத்தையும் அமைதியையும் வெளிஉலகில் தேடுவதை நிறுத்திவிட்டு தான் உணர்வு மயமான பரமன் என்பதை அறிந்தால் மனதில் இன்பவெள்ளம் கரைபுரண்டோடும் என்ற எதிர்பார்ப்புடன் வேதத்தை இவர்கள் தொடர்ந்து படிப்பார்கள். ஒரு சிலர் நான் பரமன் என்ற அறிவை மனதில் நிலை நிறுத்துவதால் குறையாத மகிழ்ச்சியும் தடையில்லாத நிம்மதியும் ஏற்படும் என்று தியானம் செய்வார்கள். உணர்வுமயமான நான் வேறு ஜடமான மனம் வேறு என்ற அறிவு மனதில் நிலைபெறும்வரை இவர்களது தேடல் தொடரும்.

புறவுலகில் அமைதியை தேடும் பற்றுடையோர்களும் அகவுலகில் ஆனந்தத்தை தேடும் முக்திவிழைவோர்களும் மனதின் தன்மையை அறிவதில்லை. மாறும் உலகின் மாற்றங்களை பிரதிபலிக்கும் மனம் மாறித்தான் ஆகவேண்டுமென்றும் மனதின் மாற்றம் மாறாத தன்னை பாதிப்பதில்லையென்றும் முற்றுணர்ந்தோர்கள் அறிவதால் தங்கள் மனதின் நிலையைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. எனவே இவர்களது மனம் தனது மாற்றங்களை இயல்பாக ஏற்று அமைதியடையும்.

வேற்றுமையில் ஒற்றுமை

பத்து வருடங்களுக்கு முன் தன்னிடம் பயின்று பட்டம் பெற்ற பழைய மாணவர்கள் சிலரை பேராசிரியர் ஒருவர் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். வந்த மாணவர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு பெரிய குவளையில் தேனீரும் வெள்ளி, பீங்கான், கண்ணாடி என்று பலவகைப்பட்ட கோப்பைகளையும் கொண்டுவந்து தங்களுக்கு தேவையான தேனீரை அவரவர் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

விலையுயர்ந்த கோப்பைகளும் பார்வைக்கு அழகான கோப்பைகளும் முதலில் எடுக்கப்பட்டுவிட்டதால் கைப்பிடி உடைந்தும் பழையதாகவும் காணப்பட்ட சில கோப்பைகள் கடைசிவரை எஞ்சியிருந்தன. ஒவ்வொருவரின் கவனமும் மற்றவர் கையில் இருக்கும் கோப்பைகள் மீது இருந்தனவே தவிர தான் பருகும் தேனீரில் இல்லை. கோப்பைகள்தான் வேறுபட்டவையே தவிர பருகும் தேனீரில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதை உணராதவர்கள் தன்னுடைய கோப்பையை விட மற்றவரது கோப்பை நன்றாக இருப்பதை கண்டு பொறாமைகொண்டார்கள். ஒரு சிலர் சிறந்த கோப்பையை தேர்ந்தெடுத்த பெருமையுடன் மற்றவர்களை ஏளனத்துடன் பார்த்து தேனீரை சுவைக்கத்தவறினார்கள்.

கோப்பையின் உதவியில்லாமல் தேனீரை பருக முடியாது. ஆனால் தேனீரைவிட கோப்பைதான் முக்கியமானது என்ற மனப்பக்குவமின்மை மாணவர்களிடம் பரவலாக காணப்படுவதை அவர்களின் உரையாடல் சுட்டிக்காட்டியது.  படித்த படிப்பு ஒன்றாக இருந்தாலும் தங்களது பதவி, வருமானம், குடும்பம், செல்வாக்கு போன்றவற்றை ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டு தான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வளர்ந்திருக்கலாம் என்ற ஏக்கம் அனைவரையும் பாதித்தது. தேனீரை உற்பத்தி செய்யும் திறன் கோப்பைக்கு கிடையாது. அது போல இன்பத்தை தரும் தகுதி வாழ்வின் வசதிகளுக்கு கிடையாது என்பதை யாரும் உணரவில்லை.   

நெய்தான் தொன்னைக்கு ஆதாரம். வேறுபட்ட மனங்களுக்கு ஒன்றான உணர்வே ஆதாரம் என்பதை அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் அமைதியாயிருக்கும்.

ஒற்றுமையில் வேற்றுமை

பேராசிரியர் மாணவர்களுக்கு வழங்கியது தேனீர் மட்டுமே. குடித்துமுடித்தவுடன் கீழேவைத்துவிட்டுதான் வீட்டுக்கு போகப்போகிறோம் என்பதை மறந்து கோப்பை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடும் அறியாமைதான் மாணவர்களின் துன்பத்திற்கு காரணம்.

அனைவரது தேனீரும் ஒரே தன்மை வாய்ந்தது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது ஒரே தன்மைவாய்ந்த இன்பம் மட்டுமே. கோப்பையின் தன்மையை பொறுத்து தேனீரின் தரம் மாறாது. வாழ்க்கையின் தரம் இன்பத்தின் அளவை நிர்ணயிக்காது.

அனைவருக்கும் பொதுவான தேனீரை பருக அவரவருக்கு தனித்தனியே கோப்பை தேவை. அதுபோல அனைவருக்கும் பொதுவான இன்பத்தை அனுபவிக்க மனமும் உடலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தற்காலிகமாக கிடைக்கப்பட்டவை. கோப்பையின் மீது கவனம் செலுத்தி பருகும் தேனீரின் சுவையை அனுபவிக்க தவறும் மாணவர்கள் போல பணம், பதவி, சுற்றம், நட்பு போன்றவற்றை நாடி இன்பத்தை அனுபவிக்க பற்றுடையோர்கள் தவறிவிடுகிறார்கள். ஆளுக்கு ஆள் வேறுபடுவது மட்டுமின்றி ஒருவரின் மனமே காலையில் இருப்பதுபோல் மாலையில் இல்லாமல் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும். மாறுவது மனம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் அது நிலையான அமைதியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாறுபவர்கள் முக்திவிழைவோர்கள்.

தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளாமல் இன்பமாக இருக்கும்பொழுது இருந்த அதே மனநிலை எப்பொழுதும் இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்காமல் வாழும் முற்றுணர்ந்தோன் கோப்பையின் மீது கவனம் செலுத்தாமல் தேனீரை அனுபவிப்பவனைப்போல தனது இயல்பான இன்பத்தில் திளைத்து மனதின் மாற்றங்களை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அமைதியாக வாழ்வான். ஒன்றான உணர்வு வேறான பொருள்களாகவும் மாறும் மனமாகவும் தோன்றுவதால்தான் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகிறது என்பதை இவன் அறிவான்.

படைப்பின் இரகசியம்

உலகிலிருந்து வேறுபட்ட தனிமனிதன் நான் என்று எண்ணும் பற்றுடையோர்கள் வாழ்வை ஒரு போராட்டமாகவும் மற்றவர்களை சகபோட்டியாளர்களுமாகவும்  கருதுவதால்தான் அவர்களால் நிம்மதியாக வாழ முடிவதில்லை.

ஒன்றான பரமனே பலவாக காட்சியளிக்கிறான் என்று அறிந்த முக்திவிழைவோன் படைப்பின் ஒருபகுதியான தனது மனம் மட்டும் மாறாமல் இன்பமாக இருக்க வேண்டும் என்று போராடுவதால் அமைதியை அடைய முடிவதில்லை.

உலகில் படைக்கப்பட்ட அனைத்து பொருள்களும் ஒன்றிலிருந்து ஒன்று வெகுவாக வேறுபட்டவை. நமக்கு கிடைத்தது போன்ற ஒரு மனமும் உடலும் வேறு யாருக்கும் எப்பொழுதும் கிடைக்காது. கிடைத்தற்கரிய இவ்விருபொருள்களை தற்காலிகமாக பெற்ற நாம் அவற்றை வேறு மாதிரி மாற்றியமைக்க முயற்சி செய்து நேரத்தை வீணடிக்காமல் அவற்றில் ஏற்படும் மாற்றங்களை அனுபவிப்பது புத்திசாலித்தனம்.

வெள்ளிகோப்பை பார்க்க நன்றாக இருக்கிறது என்று மண்கோப்பையை வைத்திருப்பவனும் மண்கோப்பையில் தேனீர் அதிக சுவையாய் இருக்கும் என்று தன் கையை சுடும் வெள்ளிக்கோப்பையை வைத்திருப்பவனும் நினைப்பது போல மற்றவர்களிடம் இருப்பது தன்னிடம் இல்லாததுதான் தன் நிறைவின்மைக்கு காரணம் என்று எண்ணி வருந்துபவர்கள், அனைவரிடமும் இருப்பது ஒரே தேனீர் என்பதை அறிவதில்லை.  அனைவரும் அனுபவிப்பது அவரவர்களின் உண்மை இயல்பான இன்பத்தைமட்டுமே என்பதை உணர்ந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் வெளியுலக தோற்றங்களையும் மாற்றங்களையும் கண்டு மயங்காது.

மாறாத பரமன் மாற்றங்களுடனும் ஏற்ற இறக்கங்களுடனும் காட்சியளிப்பது படைப்பின் இரகசியம். இந்த இரகசியத்தை அறிந்த முற்றுணர்ந்தோர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் அதை அனுபவிக்கும் மனதின் தொடர்ந்த மாற்றங்களையும் மாற்ற முயலாமல் ஏற்றுக்கொண்டு வாழ்வை தொடர்ந்து அனுபவிப்பார்கள். உலகில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்கி எல்லோரும் எல்லாமும் பெற்று என்றும் இன்பமுடன் வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தவறு.

நிலையானதும் நிலையற்றதும்

மரணத்தில் உணர்வுடன் கூடிய மனம் உடலைவிட்டுபிரிவதால் உடல் நான் அல்ல என்றும் மனம் தான் நான் என்றும் நினைப்பவர்கள் பற்றுடையோர்கள். ஜடமான மனம் பரமனை பிரதிபலிப்பதால் உணர்வுடன் கூடியதாக தெரிகிறது என்று அறியும் முக்திவிழைவோர்கள் நிலையற்ற மனம் பரமனின் நிலையான தன்மையை அடைய முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள். நிலையான உணர்வு மட்டுமே உண்மையில் இருக்கிறது என்றும் மனம் இருப்பதுபோல் தோன்றும் உலகின் ஒரு பகுதி என்றும் அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் இன்பத்தில் ஆழ்ந்திருக்கும்.

கோப்பைக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவருக்கும் பொதுவான தேனீர் ஒன்றுதான் என்பதை உணராததைப்போல வேறுபட்ட தோற்றங்களை கவனித்து ஒன்றான உணர்வுதான் பலவாக காணப்படுகிறது என்பதை கவனிக்க தவறுவதால் மாற்றங்களை மற்றவர்களால் அனுபவிக்கமுடிவதில்லை.

ஒளிபரப்பு எதுவும் இல்லாதபொழுது தொலைக்காட்சியில் தெரியும் கருப்பு வெள்ளை கலந்த புள்ளிகளின் நடனத்தில் ஒரு உருவத்தை கற்பனை செய்து கொள்வதைப்போல் அணுத்துகள்களின் ஆட்டத்தில் உலகத்தின் இயக்கத்தை பார்ப்பவர்கள் அறியாத மனிதர்கள். தினமும் அரை மணிநேரம் பார்க்கும் தொலைக்காட்சி நாடகத்தின் பாத்திரங்கள் நாள்முழுவதும் வாழ்வதாக நம்பும் இவர்களுக்கு நிஜவாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் கற்பனை வடிவங்கள் என்பதை நம்புவது கடினம்.

மனப்பக்குவம் ஏற்பட்டபின் ஆசிரியரின் துணையுடன் தன் அறிவுகூர்மையால் வேதத்தை ஆய்ந்து அறியும் முக்திவிழைவோர்கள் கூட நான் பரமன் என்பதை வெறும் புத்தக அறிவாக ஏற்றுக்கொண்டிருப்பதால் தங்கள் மனம் கலக்கமடையும் தருணங்களில் நிலையான நிம்மதி எப்பொழுது ஏற்படும் என்ற ஏக்கத்துடன் வாழ்நாளை கழிப்பார்கள்.

வார்த்தைக்கும் மனதுக்கும் எட்டாத உண்மையை அறிந்த முற்றுணர்ந்தோர்களின் மனம் தான் மாறும் மாயை என்பதை உணர்ந்து அடங்கிவிடும்.

முடிவுரை :

தான் உடலும் மனதும் கொண்ட மனிதன் என்ற அறிவுடன் செயல்படும் வரை நிறைவின்மையை தவிர்க்க முடியாது. பரந்த உலகில் ஒரு சிலகாலம் வாழும் அற்பனாக தன்னை கருதும் மக்கள் தங்களின் குறையை நிறைவு செய்ய எவ்வளவு முயன்றாலும் வெற்றிபெறமாட்டார்கள். இவர்களின் உடலும் மனமும் இருப்பதாக தோன்றும் மாயையின் ஒருபகுதி என்பதால் வெளியுலக மாற்றங்கள் மற்றும் மனதின் மாற்றங்கள் இவர்களுக்கு நிறைவைத்தராது. நிறைவைபெற செய்யும் முயற்சி இவர்களின் அறியாமையை அகற்றாது. ஆசிரியரின் அடிபணிந்து வேதம் படிப்பதன் மூலம் அறியாமையை முழுவதும் அகற்றிய முற்றுணர்ந்தோர்கள் மற்ற மனிதர்களைப்போல பின்வரும் ஐந்து தவறுகளை செய்வதில்லை.

முதல் தவறு: மனதிற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்க தவறுவது.

இரண்டாம் தவறு: மனதை மாற்றி அதை என்றும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள முயற்சி செய்வது.

மூன்றாம் தவறு: மனம் எவ்வளவுதான் மாறினாலும் போதும் என்ற நிறைவு மனதிற்கு ஏற்படாது என்பதை உணராதிருத்தல்.

நான்காம் தவறு: மாறுதல்தான் படைப்பின் இரகசியம் என்பதை அறியாமல் மாறாத இன்பத்தை மாறும் மனதில் எதிர்பார்ப்பது.

ஐந்தாம் தவறு: மனது நம் விருப்பபடி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உலகையோ மனதையோ மாற்ற முயற்சி செய்வது

அறிவுருவாகவும் ஆனந்தமயமாகவும் மாறாமல் என்றும் இருப்பவன் நான் என்ற ஞானத்தில் நிலைத்து நிற்பதால் ஞானியின் மனம் நிலத்தை சந்திக்கும் இடத்தில் அலைகளாக ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலைப்போல் அமைதியுடன் அடங்கியிருக்கும்.

பயிற்சிக்காக :

1. குரங்கு அப்பத்தை பிரித்த கதையின் மூலம் ஆனந்தத்திற்கும் அமைதிக்கும் உள்ள உறவு எப்படி விளக்கப்பட்டது?

2. பற்றுடையோனின் தேடலுக்கும் முற்றுணர்ந்தோனின் தேடலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

3. ஒற்றுமையில் வேற்றுமை என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?

4. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?

5. படைப்பின் இரகசியம் என்ன?

6. ஞானியைத்தவிர மற்றவர்கள் செய்யும் ஐந்து தவறுகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஞானியின் மனம் அடங்கிவிடுவதால் அவனை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியுமா?

2.தேடல்கள் நின்றுவிடுவதால் ஞானியின் வாழ்வின் குறிக்கோள் எதுவாக இருக்கும்?

3.அலைகளின் ஆரவாரத்துடன் கூடிய கடலை அமைதியானது என்று எப்படி வர்ணிக்க முடியும்?

Wednesday, February 15, 2012

Lesson 168: The function of speech will merge into mind (Brahmasutra 4.2.1-2)


பாடம் 168: ஞானி பேச மாட்டான்
பாடல் 497-498 (IV.2.1-2)

ஞானம் ஏற்பட்டவுடன் முக்திவிழைவோன் மனதளவில் மரணமடைந்து ஞானியாக மாறும்பொழுது முன்போல் அவன் பேசுவதில்லை என்ற கருத்து இந்த பாடத்தில் விளக்கப்பட்டு இதுபோல் அன்றாட வாழ்வில் ஞானம் தரும் பயன்களை இந்த நான்காம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி ஆராயத்தொடங்குகிறது.

கூட்டுக்குள் தவமிருந்த கம்பளிபுளு பட்டுப்பூச்சியாக வெளிவந்து பறப்பதுபோல முக்திவிழைபவன் வேதத்தின் மையக்கருத்தை கருவாக ஏற்று அதன்மேல் தியானம் செய்தபின் முற்றுணர்ந்தோனாக மலர்ந்து உலகில் மணம் பரப்புவான். முன்போல் இல்லாமல் அவனது வாழ்க்கையில் ஏற்படும் பல மாறுதல்களில் முதலாவதாக தோன்றும் மாறுதல் அவனது பேசும் பழக்கம். செயல்களை செய்வதற்காகவும் செய்விப்பதற்காகவும் தேவைபடும் பேச்சில் எவ்வித மாறுதலும் ஞானத்தினால் ஏற்படாது. ஆனால் தனது அறிவை அதிகப்படுத்திக்கொள்ளவும் மற்றவர்களின் அபிப்பிராயத்தை மாற்றவும் செய்யப்படும் கருத்துப்பரிமாற்றத்தில் முக்தியடைந்த பின் குறிப்பிடத்தக்க மாறுதல் இருக்கும்.

கருத்துபரிமாற்றம்

ஐம்புலன்கள் மூலம் பெறும் தகவல்களை அவரவர் அறிவுத்திறன் மற்றும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஆராய்ந்து கருத்துக்களாக மனதில் பதியவைத்து அதன் அடிப்படையில் செயல்படுவதால் மனிதர்களின் செயல்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை. தேனீக்கள் அல்லது எறும்புகள் போல மக்கள் ஒற்றுமையாக செயல்பட இந்த அபிப்பிராய பேதங்கள் தடையாய் இருப்பதால் கருத்துபரிமாற்றம் அவசியமாகிறது. இருவரிடையே நடக்கும் கருத்துபரிமாற்றம் பேசுபவரின் நோக்கத்தைபொறுத்து ஜல்பம், வாதம், விதண்டாவாதம் மற்றும் சம்வாதம் என்று நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது. முழு அறிவை அடைந்த முற்றுணர்ந்தோர் முதல் மூன்றுவகை கருத்துப்பரிமாற்றங்களில் பங்கேற்க மாட்டார்கள்.   

முதல் வகை: ஜல்பம்

எதிர் எதிரான கருத்துக்கள் கொண்டுள்ள இருவர் தனது கருத்தை மற்றவர் மீது திணிக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் கருத்துபரிமாற்றம் செய்துகொள்வது ஜல்பம். பட்டிமன்றங்கள் இதற்கு உதாரணம். கடைசிவரை தான் சொல்வதையே சொல்லிக்கொண்டு சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் மற்றவர்களின் பேச்சை இவர்கள் கவனிப்பார்கள். இருவரிடையே உள்ள உறவின் அடிப்படையில் ஜல்பம் மூன்றுவிதங்களாக பிரிக்கப்படும்.

முதல்விதம்: அடிமையிடம் ஆணையிடுவது போல
இரண்டாம்விதம்: நண்பனிடம் ஆலோசனை சொல்வது போல
மூன்றாம் விதம்: காதலனிடம் தேனொழுகும் வார்த்தைகளால் பேசுவது போல

பற்றுடையோர்கள் தங்களின் இன்பத்திற்கு உலகை நாடியிருப்பதால் தன்னுடன் உறவாடும் மனிதர்களை தங்கள் விருப்பபடி இயங்கவைக்க தங்களின் பேசும் திறனை உபயோகிப்பது அவசியமாகிறது. இவர்களின் வாழ்க்கையின் வெற்றி தோல்வி பெரும்பாலும் இந்த பேச்சுத்திறனின் அடிப்படையிலேயே அமைவதாக இவர்கள் நினைப்பார்கள். முடிவில் வேறு வழியின்றி ஒருவர் மற்றவர் கருத்தை ஏற்றுகொண்டு செயல்பட துவங்கினாலும் மனதின் முழுச்சம்மதம் இல்லாததால் இந்த ஒத்துழைப்பு வெகுகாலம் தொடர்வதில்லை.

முக்திவிழைவோர்கள் வேதம் படிக்க ஆரம்பித்ததும் இவ்வளவு நாட்கள் இந்த அறிவை பெறாமல் தாங்கள் வாழ்ந்தது குறித்து வருந்தி தங்கள் நண்பர்களும் உறவினர்களும் கூட முக்திவிழைவோர்களாக மாறவேண்டும் என்ற ஆதங்கத்தில் அவர்களுக்கு வேதாந்தத்தின் பெருமையை கூற முட்படுவர்.

முற்றுணர்ந்தோர்கள் தங்களின் விருப்பப்படி யாரையும் மாற்றவேண்டிய அவசியம் இல்லாதவர்கள். மேலும் மனப்பக்குவம் ஏற்பட்டால் மக்கள் தானாக வேதம் சொல்லும் கருத்தை கேட்க முற்படுவார்கள் என்பதை இவர்கள் அறிவதால் யாருக்கும் அவர்கள் கேட்காமல் தங்கள் கருத்தை சொல்ல மாட்டார்கள்.

இரண்டாம் வகை: வாதம்

உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் அல்லது நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உண்மையை முழுதும் அறியாத இருவரிடையே நடக்கும் கருத்து பரிமாற்றம் வாதம். ஒரு குருடன் மற்றொரு குருடனின் உதவியை நாடினால் இருவரும் கீழேவிழும் வாய்ப்பு இரட்டிப்பாவதுபோல வாதம் செய்பவர்களின் அறிவு அதிகரிப்பதற்கு பதில் மனக்கலக்கமும் குழப்பமும்தான் அதிகமாகும்.

உலக நிகழ்வுகளை சரி அல்லது தவறு என்று பிரிப்பது அவரவர் பார்வையை பொறுத்தது என்பதை உணராதவர்கள் பற்றுடையோர். தான் சிந்துவதுபோலன்றி வேறுவிதமாக மூக்கை சிந்துபவர்கள் தவறாக செய்கிறார்கள் என்பது இவர்களது அபிப்பிராயம். உலக அழகி அழகானவள் என்பது தவறு. அவள் அழகாக இருப்பதாக பலர் நினைக்கிறார்கள் என்பதுதான் சரி. அழகு என்பது பார்க்கப்படும் பொருளின் குணம் அல்ல. பார்ப்பவர்களின் மனதில் பதிவாகியுள்ள விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே ஒரு பொருள் அல்லது மனிதரின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. எனவே உண்மையை முழுதும் அறிந்து கொள்ளாமல் ஒருவருக்கொருவர் வாதம் செய்வதனால் பயன் அதிகமிருக்காது.

செயலை நோக்கமாக கொண்டு செய்யப்படும் கருத்துபரிமாற்றம் ஜல்பம். அறிவை நோக்கமாக கொண்டு செய்யப்படுவது வாதம். எனவே பற்றுடையோர்களைவிட முக்திவிழைவோர்கள் வாதத்தில் அதிகம் ஈடுபடுவர். உண்மை எது என்பதை வாதத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்ற மனப்பக்குவம் ஏற்பட்டபின் முக்திவிழைவோர்கள் வாதம் செய்வதை நிறுத்திக்கொள்வார்கள்.

தொடர்ந்து மாறும் உலகம் மாயை என்பதால் எந்த துறையிலும் முடிவான அறிவை யாராலும் அடைய முடியாது. வேதம் கூறும் முடிவான அறிவை அடைந்தவர்கள் தாங்கள் செய்யும் தொழிலுடன் தொடர்புடைய அறிவை அதிகப்படுத்திக்கொள்ள மற்றவரை குருவாக ஏற்றுக்கொண்டு சம்வாதம் செய்வார்களே தவிர வாதம் செய்ய மாட்டார்கள்.  

மூன்றாம் வகை: விதண்டாவாதம்.

மற்றவர் என்ன சொன்னாலும் அதை மறுத்து அவர் சொல்வது தவறு என்று நிருபிக்கவேண்டும் என்ற பிடிவாதத்துடன் பேசுவது விதண்டாவாதம். சொல்பவர் அடுத்த கட்சியை சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக அவர் என்ன சொன்னாலும் அதை மறுத்து பேசவேண்டும் என்பதை மரபாககொண்ட சட்ட சபை மற்றும் பாராளுமன்றங்களில் இவ்வகை கருத்துபரிமாற்றங்கள் நடக்கும். உண்மை என்ன என்பதைபற்றியோ எது நல்லது என்பதைபற்றியோ எவ்வித அக்கறையும் இல்லாமல் மற்றவரை மட்டம் தட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் நடக்கும் விதண்டாவாதங்களின் ஒரே பயன் நேரத்தை வீணடிப்பது மட்டும்தான்.

ஒருவர் வாதம் செய்கிறாரா அல்லது விதண்டாவாதம் செய்கிறாரா என்பதை கண்டுபிடிக்க அறிவுக்கூர்மை அவசியம். முக்திவிழைவோர்களில் சிலர் தங்கள் அறிவுக்கூர்மையை அதிகபடுத்திக்கொள்ள வேண்டுமென்றே விதண்டா வாதத்தில் ஈடுபடலாம். எதையும் மறுப்பது என்பது அவ்வளவு கடினமான காரியமல்ல. அது ஒரு பழக்கமாகிவிட்டால் சம்வாதம் செய்வது கடினமாகிவிடும். எனவே விதண்டா வாதம் செய்வதை முழுவதும் நிறுத்தினால்தான் உண்மையை அறியும் வாய்ப்பு உண்டாகும்.
விதண்டாவதத்திற்கு சரியான மறுமொழி மௌனம் மட்டுமே.

நான்காம் வகை: சம்வாதம்

யாரும் யாரையும் மாற்ற முடியாது. தன்னால் மாற்றக்கூடிய ஒரே ஆள் தான் மட்டுமே என்பதை உணர்ந்து தனது அறியாமையை அகற்ற மற்றவருடன் உரையாடுவது சம்வாதம். தான் முன்னேற தேவையான அறிவை பெறவேண்டும் என்ற தாகத்துடன் ஒருவரும் எவ்வித சுயநலத்தையும் கருதாமல் அவருக்கு உதவவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மற்றவரும் கருத்துபரிமாற்றம் செய்துகொள்வது சம்வாதம் என்ற உயர்ந்த வகையைச்சேரும்.

சம்வாதத்தில் ஒருவர் தன்னை மாணவனாகவும் மற்றவர் தன்னை ஆசிரியனாகவும் கருதுவது மிக அவசியம். எனக்குத்தெரிந்ததை நான் சொல்கிறேன், உனக்கு தெரிந்ததை நான் உன்னிடமிருந்து கற்றுக்கொள்கிறேன் என்ற அடிப்படையில் நடப்பது வாதம், சம்வாதம் அல்ல. தன்னைவிட மற்றவருக்கு அதிகம் தெரியும் என்ற நம்பிக்கையுடன் அவரை ஆசிரியராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அறிவை பெறமுடியும். உலக அறிவு அனைத்துக்கும் இந்த உண்மை பொருந்தும்.    

உண்மையிலேயே ஆசிரியருக்கு அறிவு இருக்கிறதா என்பது முக்கியமல்ல. அவர் சொல்வது தவறாகவே இருந்தாலும் அதை தவறு என்று அறிந்துகொள்ளும் அளவுக்கு மாணவனின் அறிவு வளரவேண்டும். எனவே அதுவரை அவரை ஆசிரியராக கருதுவதைத்தவிர வேறு வழியில்லை. ஆசிரியர் சொல்வதை முழுவதுமாக கேட்டு கேட்ட தகவல்களை முறையாக ஆராயவேண்டும். அதன் பின் முரணான கருத்துக்களுக்கு ஆசிரியரிடம் விளக்கங்கள் கேட்டு அறிவை பெற வேண்டும். இந்த நிலையை அடையும்பொழுதுதான் ஆசிரியர் சொல்வது தவறு என்ற முடிவை மாணவனால் எடுக்கமுடியும். அதன்பின் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ஆசிரியருக்கு நன்றி கூறிவிட்டு சரியான அறிவை அடைய வேறு ஆசிரியரை தேடவேண்டும்.

மாணவனுக்கு அறிவைகொடுக்கும் சக்தி எந்த ஆசிரியருக்கும் கிடையாது. கிருஷ்ண பரமாத்மாவாலேயே தன்னிடம் மாணவனாக சரணடைந்த அர்ஜுனனை முற்றுணர்ந்தோனாக மாற்ற முடியவில்லை என்பதிலிருந்து அறிவை பெறுவது மாணவனின் திறனை மட்டுமே பொறுத்துள்ளது என்பதை அறியலாம். திறமையான மாணவன் யாரிடமிருந்துவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஏணியை உபயோகித்து நாம் தான் ஏற வேண்டுமே தவிர ஏணி நம்மை ஏற்றிவிடாது. அதுபோல் ஆசிரியரின் அறிவை மாணவன்தான் முயன்று பெற வேண்டும். ஆசிரியர் கேட்டால் மட்டுமே தனது கருத்தை மாணவன் கூறலாம். சம்வாதங்களில் அறிவு ஒருவழிப்பாதையில் செல்வதால் ஆசிரியரிடமிருந்து அறிவை பெறுவது மாணவனுக்கு எளிதாகிறது.

ஞானி பேசுவான்

தொழில் கல்வி கற்பது, தொழில் செய்வது, குடும்பத்தை நடத்துவது போன்ற கடமைகளை ஞானம் பெற்றபின்னும் ஞானி தொடர்ந்து செய்வான். இந்த கடமைகளை நிறைவேற்ற மற்றவர்களைப்போல் அவன் தொடர்ந்து பேசுவான். ஞானி பேசமாட்டான் என்பதற்கு ஒருவரின் கருத்தை மாற்றவேண்டும் என்ற எண்ணத்துடன் ஆசிரியனாக சம்வாதம் செய்வதைத்தவிர மற்ற வகை கருத்துபரிமாற்றங்களில் அவன் ஈடுபடுவதில்லை என்பது மட்டும்தான் பொருள்.

புலன்களும் கரணங்களும்

ஞானம் பெற்றபின் ஞானி பேசமாட்டான் என்ற கருத்தை கூறுவது பேச்சுக்கு மட்டுமின்றி மற்ற புலன்களுக்கும் கரணங்களுக்கும் பொருந்தும் என வேதம் கூறுகிறது. தான் மட்டும்தான் உண்மையில் இருப்பவன் என்றும் இந்த உலகம் இருப்பதுபோல் தோன்றும் மாயை என்றும் அறிந்தபின் வாழ்வில் செய்யவேண்டிய செயல்களோ அடையவேண்டிய பொருள்களோ ஏதுமில்லை என்பதால் ஞானி தன் புலன்களையும் கரணங்களையும் உபயோகப்படுத்தவேண்டிய அவசியமில்லை.

கண்ணால் காண்பதனைத்தும் பொய் என்ற அறிவு ஏற்பட்டதும் ஒரு குறிப்பிட்ட காட்சியை காணவேண்டும் என்று ஆசை ஏற்படாது. மாறும் உலகின் மாறுதல்கள் தொடர்ந்து நடைபெறும் என்ற உண்மையை அறிந்தபின் மாற்றங்களைப்பற்றிய செய்தி அனாவசியம். சுற்றி நடக்கும் வாழ்க்கையே நாடகம் என்பதால் தனியாக சினிமா அல்லது தொலைக்காட்சியை பார்க்கவேண்டிய அவசியம் இருக்காது. தங்கள் சுற்றத்தார்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை அவர்கள் சந்திக்கும் விதம் அறியாசிறுவர்களின் விளையாட்டு போல் இருப்பதால் அவர்களுடன் சேர்ந்து விளையாடும் ஆசை ஏற்படாது. அவர்களின் திருப்திக்காக ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் அல்லது பத்தாம் நாள் படையல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அவர்களது நிலைக்கு இறங்கி அவர்களுடன் ஒருவனாக நடந்து கொள்வதை ஞானி முடிந்தவரை தவிர்த்துவிடுவான்.

சிறுவர்கள் ஒரு கை குறைகிறது என்ற காரணத்திற்காக பெரியவர் ஒருவரை தங்கள் ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டால் ஆட்டத்தின் விதிகளை பின்பற்றி ஆடுவதை அவர் தன் கடமையாக செய்வாரேயன்றி மற்ற சிறுவர்களைப்போல் அவர் கேலிபேச்சிலும் சச்சரவுகளிலும் பங்கேற்கமாட்டார். அது அவரால் முடியவும் முடியாது. அதேபோல் ஞானி காட்சிக்கு மற்றவர்களைப்போல் வாழ முயன்றாலும் அவர்களுக்கு ஈடாக அரசியல் பேசுவது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நவீன பொருள்களைப்பற்றி அளவளாவுவது அல்லது சமூகநிகழ்வுகளை விமரிசிப்பது போன்ற செயல்களை செய்யமாட்டான்.

உடலையும் மனதையும் ஆரோக்கியமாய் வைத்திருக்க தேவையான செயல்களை மட்டுமே ஞானி செய்வான். வாழ்வில் நேரும் அனைத்து அனுபவங்களையும் இது நல்லது அது கெட்டது என்று பாகுபாடு செய்யாமல் அனுபவிப்பான். வாழ்க்கையே ஒரு சுற்றுலா என்றும் தான் உலவும் உலகே ஒரு கேளிக்கை மைதானம் என்றும் ஞானி உணர்ந்திருப்பதால் அனுபவங்களைத்தேடி அலையவேண்டிய அவசியம் அவனுக்கு கிடையாது

கிடைத்த உணவை சுவைத்து உண்ணுவான். காதில்விழும் செய்திகளையும் பாடல்களையும் அனுபவிப்பான். கையில் கிடைத்த புத்தகங்களை படிப்பான். கடற்கரையில் உலாவரும்பொழுது பார்க்கும் மனிதர்களின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்களின் காரணங்களை கற்பனை செய்து மகிழ்வான். குறையாத இன்பமுடனும் தடைபெறாத அமைதியுடனும் வாழ இதுதான் வேண்டும் என்று எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாததால் கிடைப்பதை அனுபவிப்பதைத்தவிர ஞானியின் புலன்களுக்கும் கரணங்களுக்கும் வேறு வேலையில்லை.

சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளில் மற்றவர்களை தன் வழிக்கு கொண்டுவரும் முயற்சியை ஞானி தன் சுயநலத்திற்காக செய்யமாட்டான். ஆனால் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை சரிவர செய்ய இந்த முறைகளை அவன் தர்மபடி கையாளுவதில் தயக்கம் காட்ட மாட்டான். எனவே ஒருவர் ஞானியா என்பதை அவரது செயல்களின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது.

முடிவுரை :

வாழ்வில் துன்பத்தை அகற்றி என்றும் இன்பமாக வாழும் வழி எது என்ற தேடல் ஞானம் பெற்றதும் ஒரு முடிவுக்கு வந்துவிடுவதால் ஞானியின் ஐம்புலன்கள் மற்றும் மூன்று கரணங்களின் செயல்பாடுகள் அடங்கிவிடும். நீண்ட பயணத்திற்கு பின் வீடுபேற்றை அடைந்துவிட்டதால் இனி நிம்மதியாக வாழும் வாய்ப்பு ஞானிக்கு கிடைக்கிறது.

கை சுத்தமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க அதை சாக்கடையில் வைத்து அழுக்காக்கி அதன் பின் கழுவவேண்டும் என்ற அவசியமில்லை. இதை அறியாமல் நிம்மதியாக இருக்க கடுமையாக உழைத்து அதன்பின் விடுமுறையில் ஓய்வெடுக்க பலர் முயல்கிறார்கள். இதுபோல் எவ்வித நோக்கமும் இல்லாததால் ஞானியின் புலன்களும் கரணங்களும் எதையும் தேடி அலைவதில்லை.

பரந்த உலகத்தில் இன்பத்தை தேடியலையும்பொழுது புலன்களும் கரணங்களும்  மனிதனுக்கு தேவைப்படும். இன்பத்தின் உண்மையிருப்படத்தை அறிந்தபின் அவற்றின் தேவை மறைந்துவிடும்.

நிறுவனத்தின் தலைவருடன் உரையாட அவருக்கு நிகராக இருப்பவர்கள் குறைவு என்பதால் அவரால் கீழ்மட்டத்தில் வேலைசெய்பவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதுபோல் யாருடனும் பேச முடியாது. அதுபோல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றுபடிகளையும் கடந்து வாழ்வின் உயர்ந்த குறிக்கோளான வீடுபேற்றை அடைந்த ஞானிகளுடன் உரையாட அவருக்கு நிகராக இருப்பவர்கள் குறைவு. பரமரகசியத்தை உணர்ந்தபின் வாழ்வை ஒரு புதிராக நினைத்து அதில் எந்தப்பாதையில் எப்படி பயணிக்கவேண்டும் என்பதை அறியாமல் தவிக்கும் மற்றவர்களுடன் அவர்களுக்கு இணையாக ஞானியால் பேசமுடியாது.

எனவே ஞானி பேசமாட்டான். அவனது புலன்கள் மற்றும் கரணங்களின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிடும்.

பயிற்சிக்காக :

1. கருத்துபரிமாற்றம் என்றால் என்ன?

2. அது எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

3. ஞானி பேச மாட்டான் என்பதற்கு காரணங்கள் யாவை?

4. ஞானி பேசுவான் என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. தேனீக்கள் அல்லது எறும்புகளைப்போல் மக்கள் ஏன் ஒன்றுபட்டு செயல்படுவதில்லை?

2. அனைவரிடமும் கலகலப்பாக பேசுபவன் ஞானம் பெற்றதும் அமைதியானவனாக மாறிவிடுவானா?

3. எந்த துறையிலும் முழுவதுமான அறிவைப்பெறமுடியாது என்பதை உணரும் காரணத்தால் மட்டுமே PhD என்ற பட்டம் வழங்கப்படுகிறது என்பதை அதன் பெயர் காரணத்தை ஆராய்ந்து அறிக.