பாடம் 183:
விஞ்ஞானியின் பார்வை –
Dr. காகு.
பாடல்:
524-531 (IV.3.7-14)
மனிதன் கடவுளாகவும்
உலகம் சுவர்க்கமாகவும் மாறும் நாள் விரைவில் வரும் என்று சரக்கோட்பாடின் (string
theory) உடன் கண்டுபிடிப்பாளரான மிஷையோ காகு (Dr. Michio
Kaku) கூறுகிறார். அறிவியலின் அடிப்படையில் அமைந்த அவரது இந்த கணிப்புக்களின்படி வியக்கத்தக்க
மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கின்றன. எனினும்,
வேதம் தரும் ஞானத்தால் மட்டுமே மனிதனின் தேடல் முடிவடையும் என்ற உண்மையை
இந்தப்பாடம் எடுத்துக்காட்டுகிறது.
அணு என்றால்
என்ன என்ற கேள்விக்கு முழுமையான பதிலைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் அணுக்களை
திறமையாக கையாளுவதற்கு காகு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
எலக்ட்ரான் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருப்பது எப்படி என்று இவர்
ஆராய்ந்து இருந்தால் உலகே மாயை என்ற உண்மையை இவர் அறிந்துகொண்டு இருப்பார்.
இந்த உண்மையை அறியாத காரணத்தால் மாயையான உலகில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களை
விஞ்ஞானிகளின் உழைப்பின் பயனாக இவர் கருதுகிறார்.
அறிவியலின்
முன்னேற்றம்
எதற்காக முன்னேற்றம்
என்ற கேள்வியைக் கேட்காமல், ‘முன்னேற்றம் அவசியம்’
என்ற குருட்டு நம்பிக்கையுடன் அனைத்து துறையைச் சேர்ந்த வல்லுனர்களும்
அயராது உழைத்து வருகிறார்கள். இதனால் மருத்துவம், ஆரோக்கியம், போக்குவரத்து, தொழில்,
பொழுதுபோக்கு முதலிய அனைத்து துறைகளிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு
வருகின்றன. ஆயினும்,
மனிதனின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் நாள் வரவே வராது என்பதை இவர்கள்
உணர்வதில்லை.
பல ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனை ஒப்பிட்டால் நமது வாழ்க்கையின் தரம் மிகவும் முன்னேறி
உள்ளது.
ஆயினும், வாழ்வின் துன்பங்களின் அளவு குறையவேயில்லை.
அவமானம், அதிருப்தி, எரிச்சல்,
ஏக்கம், ஏமாற்றம், கவலை,
காழ்ப்புணர்ச்சி, கோபம், குரோதம், குற்ற உணர்வு, குழப்பம், சலிப்பு,
சந்தேகம், தவிப்பு, திருப்தியின்மை,
பழிவாங்கும் உணர்ச்சி, பயம், போட்டி, பொறாமை, வருத்தம்,
விரக்தி, வெறுப்பு முதலிய துயரங்கள் மனிதனை தொடர்ந்து
துன்புறுத்தி வருகின்றன. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும்
இது போன்ற துன்பங்களிலிருந்து விடுதலைபெற மனிதகுலத்துக்கு இருக்கும் ஒரே வழி வேதம்
தரும் ஞானம் ஒன்றுதான்.
கூடியவிரைவில்
சாதாரண மனிதர்கள்கூட விண்வெளிப்பயணம் செய்யக்கூடிய நிலை வரும் என்கிறார் காகு.
மேலும், பூமியைச் சார்ந்து இருக்காமல் சூரியனின்
சக்தியை நேரடியாகப் பெற்று விண்வெளியிலேயே குடியிருக்கவும் முடியும். பிரபஞ்சம் அழிந்தாலும் மனிதன் ‘வர்ம் ஹோல்’
(worm hole) மூலமாக அழிவிலிருந்து தப்பிக்க முடியும் என்று காகு கூறுகிறார்.
திரிசங்குவின் சுவர்க்கம் போல அவரவர்கள் தங்களது விண்வெளி வீட்டை கட்டிக்கொண்டு
பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்தால் கூட வாழ்வின் துயரங்களும் அவர்களுடன் சேர்ந்து
பயணம் செய்யும். எனவே, துன்பங்களில் இருந்து
விடுதலை பெற மனிதனுக்கு வேதம் தொடர்ந்து தேவைப்படும். அவனது தேடல்
‘நான் பரமன்’ என்ற ஞானம் பெற்றவுடன்தான் முடிவடையும்.
மனிதனின்
தேடல்
மாஸ்லோ
(Abrham Maslow) என்ற உளவியல் அறிஞர், மனிதனின்
தேவைகளை ஐந்து அடுக்குகளாக பிரிக்கிறார். இவற்றில் உடலின் தேவைகளான
உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை மட்டுமே அறிவியலால்
பூர்த்தி செய்ய முடியும். நட்பு, குடும்பம்,
சுயமரியாதை, சாதனைகளில் திருப்தி, தன்னை வெளிப்படுத்தல் (self-actualisation) போன்ற மனதின்
தேவைகளை பூர்த்திசெய்ய, அறிவியல் வளர்ச்சியால் உதவி செய்ய முடியாது.
எனவேதான்,
அனைத்து துறைகளிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் மனிதனின்
தேடல் ஒரு முடிவுக்கு வருவதில்லை. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும்
பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக புதிய பிரச்சனைகளை உருவாக்குகின்றன. அணுவை பிளக்க அறிந்து கொண்டதால் ஏற்பட்ட நன்மைகளுக்கு சமமான அளவில் தீமைகளும்
ஏற்பட்டுவருகின்றன. புதிய பிரச்சனைகளை தீர்க்க மேலும் அதிக தீவிரத்துடன்
உழைக்க வேண்டியது அவசியமாகிறது. இது நாய் தன் வாலைப் பிடிக்க
முயன்ற கதை போல முடிவற்ற முயற்சியாக என்றும் தொடரும்.
அறிவியல் முன்னேற்றங்களுக்கு
கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட வேதம் காட்டும் பாதையில் செல்வது மிக அவசியம்
என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே உலகம் உண்மையிலேயே சுவர்க்கமாக மாறும்.
அப்போதுதான் அறிவியல் முன்னேற்றங்களை முழுமையாக அனுபவிக்க முடியும்.
முன்னேற்றங்களும்
அனுபவங்களும்
வெளி உலகத்தில்
ஏற்படும் மாற்றங்களால் நமது ஐந்து புலன்கள் மூலம் பெறும் அனுபவங்களில் எந்த மாற்றமும்
ஏற்படுவது கிடையாது. ஏனெனில் அனுபவம் என்பது
ஒப்பிடுவதால் ஏற்படுவது. இடது கையை சூடான வென்னீரிலும் வலது கையை
குளிர்படுத்தப்பட்ட நீரிலும் சில நிமிடங்கள் வைத்திருந்து விட்டு இரண்டு கையையும் சாதாரணமான
தண்ணீரில் வைத்தால் இரண்டு கைகள் பெறும் அனுபவம் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கும்.
எவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் இன்றைய அனுபவம் நேற்றைய அனுபவத்தை
பொறுத்தே அமையும். எனவே, அறிவியல் முன்னேற்றங்கள்
மக்களின் அனுபவங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஏற்படப்போகும் முன்னேற்றங்களின் பட்டியல்,
இப்போது படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும் அவை அனுபவத்துக்கு வரும்போது
பெரிய மாற்றமாகத் தெரியாது. ஏமாற்றம் மட்டுமே எஞ்சும்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் படிப்படியாக ஏற்படுகின்றன. அவை மிகவும் மெதுவாக பொதுமக்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்பட ஆரம்பிக்கின்றன.
உதாரணமாக மின்சாரத்தை எடிசன் கண்டுபிடித்த மறுநாள் உலகம் முழுவதும் ஒளியூட்டப்பட்டுவிடவில்லை.
இன்னும் கூட மின்சாரத் தொடர்பு இல்லாத பல கிராமங்கள் இருக்கின்றன.
எனவே, மக்களது அனுபவங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம்
திடீரென்று ஏற்படுவதில்லை.
மனிதர்களின்
வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் பல அறிவியல் முன்னேற்றங்களைப்பற்றி காகு
விவரிக்கிறார். அவற்றில் சிலவற்றை ஆய்ந்து அவற்றால்
மக்களின் தேடலை நிறைவு செய்ய முடியாது என்பது இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது
1.மரணத்தை
வெல்தல்
எல்லோரும் நூறு
வயது வரை வாழ விஞ்ஞானம் வழிவகுக்கலாம். எத்தனை
வருடங்கள் வாழ்ந்தாலும் என்றாவது ஒரு நாள் மரணம் அடைவதை தவிர்க்க முடியாது. நான் பரமன் என்று உணர்ந்தவர்கள் மட்டுமே
மரணத்தை வென்று பெருவாழ்வு வாழ்வர்.
2.நோயற்ற
வாழ்க்கை
அனைத்து நோய்களையும்
ஆரம்பகாலத்திலேயே கண்டறிந்து அதை முழுமையாக தடுக்கும் சக்தியும் எல்லோருக்கும் கிடைத்துவிடும்.
மேலும் வயதாவதை தடுக்கும் முயற்சியிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.
யயாதி என்ற மன்னன் ஆயிரம் வருடங்கள் இளமையுடன் உலக இன்பங்களை அனுபவித்த
பின்னரும் திருப்தி அடையாத கதை மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. எனவே, இளமையுடன் பலகாலம் வாழ்ந்தால் சலிப்புத்தான் ஏற்படுமே
தவிர இன்பம் ஏற்படாது.
3. பொருள்
உருவாக்கி (Personal Fabricator)
அணுக்களை மாற்றி
அமைப்பதன் மூலம் எந்தப்பொருளை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளும் திறன் சாதாரண மக்களுக்கும்
எதிர்காலத்தில் கிடைத்து விடும் என்று காகு கூறுகிறார்.
அரிசி, பருப்பு போன்றவற்றை வாங்க கடைக்கு செல்லவேண்டிய
அவசியம் இல்லை. அவரவர்கள் வீட்டிலேயே அனைத்துப் பொருள்களையும்
எந்தச் செலவும் செய்யாமல் உருவாக்கிக் கொள்ளலாம்.
உணவுப் பொருள்கள்
மட்டும் அல்லாமல் தங்கம், வைரம் போன்ற பொருள்களைக்கூட
வேண்டிய அளவு யார்வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம். எனவே,
இந்தப்பொருள்களுக்கு இப்போது இருக்கும் முக்கியத்துவம் வருங்காலத்தில்
இருக்காது.
எந்த செலவும்
செய்யாமல் வேண்டிய பொருள்கள் அனைவருக்கும் உடனடியாக கிடைக்கும் காலம் வந்தாலும் மனிதன்
திருப்தி அடையமாட்டான். யாருக்கும் கிடைக்காத
பொருள் ஏதாவது இருக்கிறதா என்று தொடர்ந்து அவன் தேடுவான். இல்லயெனில்,
தற்காலத்தில் கம்ப்யூட்டர் வைரஸை உருவாக்குபவர்களைப்போல் மற்றவர்களுக்கு
பொருள்கள் கிடைக்காமல் இருக்க ஏதேனும் தடைகளை ஏற்படுத்தி அதன் மூலம் இன்பமாய் இருக்க
முயற்சி செய்வான். தான்தான் இன்பத்தின் ஒரே ஊற்று என்பதும் உலகத்துக்கு
இன்பத்தைத்தரும் சக்தி இல்லை என்பதும் வேதம் படிப்பவர்களுக்கு மட்டுமே தெரியவரும் இரகசியம்.
எனவே, ‘நான் பரமன்’ என்று
அறிந்தவர்கள் மட்டுமே எப்போதும் இன்பமாக வாழ்வார்கள்.
4. நினைத்ததை
நடத்துதல்
மனதால் நினைப்பதன்
மூலமே பொருள்களை நகர்த்தும் சக்தி மனிதனுக்கு ஏற்கனவே வந்து விட்டது.
EEG என்ற கண்டுபிடிப்பின் முலம் எண்ணங்களின் ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப
செயல்படும் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுவிட்டன. எதிர்காலத்தில்
நம் எண்ணங்களை செயலாக்க வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே அவை நடந்துவிடும்.
ஆயினும் மனதில்
என்ன எண்ணங்கள் எப்போது தோன்றும் என்பதே நம் கையில் இல்லை என்று அறிந்தவர்கள் மட்டுமே
இந்த கண்டுபிடிப்புகளின் மூலம் நன்மை அடைவார்கள். மற்றவர்களுக்கு நினைத்தது நடந்தாலும் திருப்தி ஏற்படாது.
‘ஏதோ ஒன்று என்னிடம் இல்லை’ என்ற எண்ணம் இவர்களை
தொடர்ந்து தேடலில் ஈடுபடுத்தும்.
5. மூட்
எலிவேட்டர்
மூளைக்குள்
வேண்டிய அளவு மின்சாரத்தை செலுத்தி, மனதில்
இருக்கும் சோகத்தை அகற்றி, இன்பமாக இருக்கும் வழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது,
எனவே தங்கள் மன நிலை எப்படி
இருக்க வேண்டும் என்பதை இயந்திரங்கள் மூலம் மனிதன் தீர்மானித்துக்கொள்ளலாம்.
ஆயினும் மனிதனுக்கு நிம்மதி கிடைக்காது.
சப்தம் ஏற்படுத்த
நாம் ஏதாவது செய்யவேண்டும். அமைதியாக இருக்க நாம்
ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. ‘மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு
ஆதாரமாக இருக்கும் உணர்வுதான் நான்’ என்று அறிந்தவர்கள்,
அலைபாயும் மனதின் ஆட்டங்களை அமைதியாக அனுபவிப்பார்கள்.
6. தொலைநகர்த்தல்
(teleportation)
ஓரிடத்தில்
இருந்து மற்றொரு இடத்துக்கு உடனடியாகச் செல்ல முடியும் என்பது சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
மனிதனின் பரு உடலை முழுவதுமாக அழித்து அதே அச்சில் வேறு ஒரு இடத்தில்
ஒரு உடலை உருவாக்கலாம் என்பது உண்மை. ஆனால் உயிர் என்ன ஆகும்,
நான் யார் என்பது போன்ற கேள்விகளுக்கு காகு பதில் சொல்வதில்லை.
பரு உடல் அழிந்தாலும் நுண்ணிய உடல் அழியாது. எனவே,
தொலைநகர்தல் மூலம் நிலவுக்கு ஒரு நொடியில் பயணம் செய்யக்கூடிய நாள் விரைவில்
வரும் என்பது உண்மையே.
ஆனால்,
எதற்காக மனிதன் பயணம் செய்ய வேண்டும் என்ற மிக முக்கியமான கேள்வியை யாரும்
கேட்பதில்லை. மனதின் தேவைகள் பயணம் செய்வதால் நிறைவேறாது என்பதை அறியாமல் எல்லோரும்
வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.
7. இயந்திர
மனிதன் (robots)
மனிதனால் உருவாக்கப்படும்
தானியங்கி இயந்திரங்கள் மனிதனைப்போல் அறிவுடன் செயல்பட ஆரம்பிக்கும் காலம் விரைவில்
வரும்.
ஆனால் அதற்குள் இயந்திரங்களை மனிதனுக்குள் பொறுத்துவதன் மூலம் மனிதன்
இயந்திரமாக மாறும் நாள் வந்து விடும் என்பது காகுவின் கணிப்பு.
மூக்குக்கண்ணாடியின்
உதவியால் பார்க்கும் திறனை நீடிக்க வைப்பதுபோல் அறுவை சிகிச்சை மூலம்
மைக்ரோசிப்களை மூளைக்குள் பொறுத்தி ஞாபகசக்தியையும், முடிவெடுக்கும்
திறனையும் மனிதனால் அதிகப் படுத்திக்கொள்ள முடியும். உடல் உறுப்புகள்
அனைத்தையும் செயற்கையாக வளர்த்து உடலுக்குள் பொருத்திக்கொள்வதன் மூலம் உடல் ஆற்றலையும்
தொடர்ந்து வளர்த்திக் கொள்ளலாம். சோதனைக்குழாயில் உருவாக்கி,
தொழிற்சாலைகளில் செய்யப்பட்ட பாகங்களை பொறுத்தி உருவாக்கப்பட்டது மனிதனா
இயந்திரமா என்பதை தீர்மானிப்பது கடினம் என்பது காகுவின் கருத்து.
நான் என்ற தன்னுணர்வு
உள்ளவர்கள் மனிதர்கள் என்பது வேதம் தரும் விளக்கம். ஒருவேளை, செயற்கையாக உருவாக்கப்பட்ட ரோபோவுக்குள் நுண்ணிய
உடல் உட்புகுந்து செயல்பட ஆரம்பித்துவிட்டால் ரோபோவுக்கும் நான் என்ற தன்னுணர்வு ஏற்படலாம்.
அப்படி ஏற்பட்டால் ரோபோக்களும் வேதம் படித்து ‘நான் பரமன்’ என்ற அறிவைப் பெற்றால்தான் நிறைவை அடையும்.
நான் என்ற தன்னுணர்வு
இந்த உலகத்தில் இருந்து தான் வேறுபட்டவன் என்ற தவறான அறிவுடன் கூடியது.
எனவே ரோபோக்களோ, மனிதர்களோ இந்த தவறான அறிவுடன்
செயல்படும்வரை துன்பத்தை அகற்ற முடியாது.
முடிவுரை
:
மனிதன் கடவுளாக
மாறவோ பூமி சுவர்க்கமாக மாறவோ எதிர்காலத்தில் ஏற்படும் முன்னேற்றங்களுக்காக காத்திருக்க
வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் எப்போதுமே மனிதன்
கடவுள்தான், பூமி சுவர்க்கம்தான். இந்த
அறிவு எப்போது ஏற்படுகிறதோ அப்போதுதான் துன்பக் கலப்பில்லாத இன்பமாக வாழ்வது சாத்தியமாகும்.
அறிவியல் முன்னேற்றங்கள்
என்பது இயற்கையான மாற்றம்தான். மனிதன்
‘நான் செய்கிறேன்’ என்று எண்ணுவது அறியாமை.
கடவுளின் பருவுடல்தான் பிரபஞ்சம். எனவே,
பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் கடவுள் மட்டுமே பொறுப்பு.
நான் என்ற தன்னுணர்வுடன்
செயல்படுபவர்களுக்கு உலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் நிம்மதியையோ ஆனந்தத்தையோ கொடுக்காது.
‘நான் பரமன்’ என்ற சரியான அறிவு பெற்றவர்களால்
மட்டுமே உலகில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் இன்பமாக அனுபவிக்க முடியும்.
இந்த பிரபஞ்சம்
முழுவதற்கும் ஆதாரமாக இருப்பது நான் என்ற அறிவு ஏற்பட்டபின் எந்த ஒரு குறிப்பிட்ட மாற்றத்திற்காகவும்
காத்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும்
விஞ்ஞான கண்டுபிடுப்புகள் மனிதனின் அழிவுக்கு வழிகோலுமா என்ற அச்சமும் ஏற்படாது.
உண்மையில் எப்போதும் இருக்கும் எனக்கு, பொய் தோற்றமான
பிரபஞ்சம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது.
எனவே,
இப்போது இருப்பது போல எப்போதும் ஆனந்தமாக இருப்பது வேதம் படித்த ஞானிகளுக்கு
மட்டுமே சாத்தியம். காகு போன்ற விஞ்ஞானிகள் தற்போது இருக்கும்
பிரச்சனைகள் எதிர்காலத்தில் மறைந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன் தங்களை அறியாமல் புதிய
பிரச்சனைகளை உருவாக்கிக்கொண்டு இருப்பார்கள்.
பயிற்சிக்காக
:
1. அறிவியல்
முன்னேற்றத்தின் அவசியம் என்ன?
2. முன்னேற்றங்களும்
அனுபவங்களும் என்ற தலைப்பில் கூறப்பட்ட கருத்து என்ன?
3. எதிர்காலத்தில்
ஏற்படப்போவதாக காகு குறிப்பிட்ட மாற்றங்கள் யாவை?
சுயசிந்தனைக்காக
:
1. Physics
of the future என்ற தலைப்பில்
Dr. Michio Kaku அவர்களின் சொற்பழிவுகளை youtubeல் பார்க்கவும்.
2. விஞ்ஞானிகள்
வேதம் படிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?
3. அறிவியல்
முன்னேற்றங்கள் அவசியம் இல்லையா?
4. வேதம்
படித்து சரியான ஞானத்தைப் பெற்றால் அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடமாட்டார்களா?